Monday, December 03, 2012

புலியுடனான பயணம் : Life of Pi


இந்தப் படத்திற்கும் எனக்குமான தொடர்பு என்று கூற வேண்டுமானால், இது எனக்கு ஓர் ஆன்மீக அனுபவம். படம் கூற வந்த விசயங்கள். அதனை வழங்கிய விதம். 3டி முறையின் பிரமாண்டம் அனைத்திற்கும் மேலாக படம் என்னால் பார்க்கப்பட்ட முறை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக எழுதிக் கொண்டு செல்லும் அளவிற்கு உள்வாங்கப்பட்டிறுக்கிறது.

இதனை முப்பரிமாண முறையில் பார்ப்பேன் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. எனக்கு காணக்கிடைத்த காட்சிக்கான நேரத்தில் அம்முறையிலேயே இந்தப் படம் திரையிடப்பட்டது. அது ஒரு முதல் பரிசு! இல்லையெனில் இத்தனை வசீகரத்தை இந்தப் படம் வழங்கியிருக்காது. தத்ரூபம், மலைப்பு மற்றும் காட்சிப்படுத்தப்பட்டதின் பிரமாண்டம் அப்படியே ஒவ்வொரு சட்டத்திற்குள்ளும் என்னை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

இரண்டாவது அத்தனை பெரிய திரையரங்கில் என்னைத் தவிர்த்து வேறு யாருமே இல்லாதது. படம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, நிறையவே லயித்து ஓரு மோன நிலையில் இருக்கும் பொழுது சுய நினைவிற்கு வந்தவனாக இத்தனை பிரமாண்டமாக எடுத்த ஒரு படத்தை எனக்காகவே இத்தனை பேர் உழைப்பைச் சிந்தி, படத்தின் இயக்குனர் சொந்த அழைப்பின் பேரில் திரையிட்டு காண்பிக்கபடுவதான பூரிப்பு, பெருமை அந்த திரையரங்கத்தின் காலி இருக்கைகளை காணும் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டது. பாக்கியசாலியாக உணர்ந்து கொண்டு ஓர் ஏகாந்தத்தின் உச்சத்திற்கே இட்டுச் சென்றது; கொஞ்சம் குறுகுறுப்பு ஓர் ஓரமாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தாலும்.

படமும் ஒரு பதினைந்து நிமிட ஏனைய முப்பரிமாண திரைப்படங்களுக்கான அறிமுக திரையிடலுக்குப் பிறகாக, படத்தின் முதல் காட்சியே ஒரு முறை நான் எந்த ஊரில் படம் பார்க்கிறேன் என்று தரையிறங்க வைக்கும் கேள்வியுடனே அமைந்திருந்தது. தமிழ்! ஒரு தாலாட்டு போன்ற பாடலுடனும், அதிர்ந்து கொட்டும் நம்மூர் மழையுடனும் உள்ளே அழைத்துச் சென்றது.

படம் பாண்டிச்சேரியின் தெருக்களில் ஆரம்பித்து பள்ளி, வீடுகள் அப்படியே முண்ணார் என்று நகர்ந்து பசிபிக் பெருங்கடலின் மையப்பகுதியில் சூல் கொண்டு விடுகிறது. பாண்டிச்சேரியை இந்தப்படத்தின் கேமராவின் பார்வையில் பார்க்கும் பொழுது ரொம்பவே வித்தியாசமாக காட்டியிருக்கிறார்கள். முண்ணார் - இவங்க லென்ஸ்களில்தான் எத்தனை அழகு! எப்படி நாம் பார்த்து பழகிய இடங்களையே இவர்களால் இத்தன நயமாக, பூமியிலிருந்து தனித்து தொங்கும் ஒரு இந்திரபுரியாக மாற்றிக் காமிக்க முடிகிறது. இங்குதான் கலாச்சாரத்திற்கென ஒரு சிறப்பு அகக்கண் திறந்து கொள்கிறதோ என்பதாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

படத்தின் வசனங்களுக்கு ஊடே அம்மா, அப்பா என்று இயக்குனர் தைரியமாக உலகத்திற்கு நம் மொழியில் பெற்றோர்களை விளிக்கும் சொற்களை அறிமுகப்படுத்திய பாங்கு வெகு அழகான துணிச்சல்! தபூ வெகு இயல்பான மத்திய வயது தோழிமார்களுக்கான அழகுடன் ஜொலித்திருக்கிறார். அவர் பேசும் ஈழத்தமிழ் தேனாக இனிக்கிறது.

வெளியூர்க்காரன் வந்து நமக்கான அழகியலை அதன் உச்சரிக்கும் மேட்டிமைத்தனத்திற்கு எடுத்துச் சென்று உச்சரிக்க விட்டு நம்மை அறியாமை என்ற புதைகுழியிலிருந்து மீட்டு எடுக்கச் செய்ய வேண்டி இருக்கிறது. Loved it!

சின்னதாக ஒரு மீசை அரும்பா காதலையையும் எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். அதற்கான காட்சிகளில் வரும் ஒவ்வொரு பெண்ணும் பொருட்களும் அத்தனை அழகாக இருக்கிறார்கள். பையன் கட்டி வைக்கப்பட்ட செவ்வந்தி மாலைகளுக்கிடையே நாட்டியம் கற்றுக் கொள்ளும் ஆனந்தியை பார்ப்பது, அப்படியே என்னுடைய சந்தை நாட்களை நினைவூட்டி அலேக்காக தூக்கி அருகே வைத்துக் கொண்டது. மேலும், பாண்டிச்சேரி கடற்கரை காட்சி. அந்த சிதில பாலத்திற்கு கீழே மெல்லிய மாலை நேர ஒளிக்கீற்றுகளுக்கிடையே அமர்ந்து ஆனந்தி அவனது மணிக்கட்டில் ஞாபகத்திற்கென கட்டிவிடும் கயிறு, கவிதை! ஆங்கிலப்படத்திற்கென இந்திய அதுவும் தமிழ்ப்பெயர்களை சிதைக்காமல் முழுமையாக உச்சரிக்க விட்டது புதுமை. இயல்பாக இருந்தது!

படத்தில் நாயகச் சிறுவனின் குடும்பம் தங்கள் பாண்டியில் வைத்து நடத்திய மிருக காட்சி சாலை மூட நேர்ந்ததின் விளைவாக அத்தனை மிருகங்களையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு கனடா நாட்டிற்கு புலம்பெயர நேர்கிறது. அப்பொழுது இரவு நேர குடும்ப உணவு அருந்தலின் போது அப்பா அதனை முன் மொழிகிறார். நாயகச் சிறுவனுக்கு அது ஓர் அதிர்ச்சி. பிஞ்சிக் காதல் உடைபடுவதை உணர முடிகிறது. அதற்கான முஸ்தீபாக அப்பா கொலம்பஸ் எப்படி பயணம் மேற்கொள்வதின் அவசியத்தை உணர்த்தினார் என்று கூற வரும் பொழுது, சிறுவன் கூறுகிறான் “ஆனா, அப்பா கொலம்பஸ் இந்தியாவை தேடி வந்தார்.” என்ற ஒற்றை வசனத்தில் பல வரலாற்று மற்றும் இன்றைய சமகால இந்திய சூழ்நிலையையின் சவால்களை, அவலத்தை முன் வைத்தாகப் படுகிறது.

இந்த பின்னணியில் கப்பல், குடும்பத்தையும் விலங்குகளையும் ஏற்றிக் கொண்டு, குடும்ப நபர்களில் இருவர் சைவம் உண்பவர்களாகவும் மற்ற இருவர் அசைவத்தையும் உள்ளடக்கியவர்களாக நம் கலாச்சார சங்கிலியை கட்டுடைக்கிறார்.

கப்பலின் உணவகத்தில் ஒரு புத்தமத துறவியைக் கொண்டு எது போன்ற உணவு எந்த மாதிரியான வாழ்வுச் சூழலில் சைவமாகிறது என்று விளக்கும் இடமும், நாயகச் சிறுவனைக் கொண்டு ‘இப்படியாக நடந்துவிட்டால் (what if)' சைவனாக இருந்தவனை அப்படியே சமைக்கப்படாத மீனை உண்ண வைத்து, இவ்வளவுதான் நமது வாழ்வு என்று இந்திய மேட்டிமை மனங்களை அடிப்படையான - தப்பிப்பிழைத்தலுக்கானதும், ஆரம்பக் கல்வியூட்டு விழிப்புணர்வு கேள்விக்குள்ளும் தள்ளி விட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர்.

இப்பொழுது அவர்களின் பயணம் ஒரு பெரும் புயலில் சிக்கிக் கொண்டு கப்பல் மூழ்க நேரிடும் பொழுது, நாயகனுடன் சேர்ந்து, ஒரு கழுதைப் புலி, வரிக்குதிரை, ஒரு புலியும் கொஞ்சம் தாமதமாக ஓர் ஒரங்குட்டனும் இணைந்து கொள்கிறார்கள் ஒரு சிறிய படகில். இங்கிருந்துதான் படத்திற்கும் எனக்குமான ஆன்மீக அதாவது அகமன பயணம் தொடங்குகிறது. நாம் ஒவ்வொருவரும் கூடவே பயணித்து பல கேள்விகளை கேட்டுக் கொள்ளும் ஒரு சூழ்நிலைக்கு மிக இயல்பாக நம்மை அந்த படத்தின் குணாதிசியத்தில் பொருத்தி பின்பு தனிமை படுத்தி விடுகிறார் திறமையாக இயக்குனர்.

அந்தப் படத்தின் நாயகனைப் போலவே அத்தனை இடர்பாடுகளுக்கிடையேயும் இயற்கை நடாத்தும் ஆனந்த தாண்டவத்தை அவன் ரசிக்க தவறியாதாகவே எந்த ஓர் அபாயகரமான இடத்திலும் காட்சியப் படுத்தப்படவேயில்லை.

அது அவன் பெற்றோர்களுடன் கப்பலில் வரும் பொழுது சந்திக்கும் முதல் புயலாகட்டும், பிரிதொரு சமயம் கடல் முழுக்கவுமே ஜெல்லி மீன்களால் ஒளியூட்டப்பட்டு அதனைக் கண்டு அவன் ஆர்ப்பரித்து நீருடன் விளையாண்டு கொண்டிருக்கும் இடத்தில் அந்த அமைதியை, பேரானந்தத்தை சிதைக்கும் படியாக ஒரு திமிங்கிலாம் அவனுடைய கடைசி உயிர் காக்கும் உணவு சேமிப்பையும் அத்தோட்டு போகும் படியாக செய்யும் பொழுதும் அதனைக் கண்டு வியந்து நிற்பதாக காட்சிப்படுத்தப் பட்டிறுப்பதும், மீண்டும் ஒரு புயல் அதன் பிரமாண்டா வானம், இடி, மின்னல் பார்த்து அவனுடன் பயணிக்கும் முதல் பாதி எதிரி புலியை வெளியே அழைத்து ”தவற விடாதே, வந்து பார்” என்று கொக்கரிக்கும் இடம் அனைத்தும் பல விசயங்களை என்னுள் விதைத்துச் சென்றது என்றால் மிகையாக இருக்க முடியாது.

இடர்பாடுகள் என்பது நாம் எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கிலேயே நம் மனதில் காட்சியாகி விரிகிறது. அதன் சுமை, சுமையற்றத் தன்மை எப்படியாக வந்தடைகிறது என்பதற்கு நடுக்கடலில் மிதக்கும் ஒரு சிறு படகும் அதனில் நம்மையே உணவாக உட்கொள்ளக் கூடிய ஒரு மாமிச பட்சினியுடன் பயணித்துக் கொண்டே ஆன்மத் தேடல் செய்யவிடுவது exotic experience!

சில நேரங்களில் ஏதோ ஒரு ஃபேரிடேல் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்றளவில் அந்த இரவு வானமும், மாலை நேர சூரிய அஸ்தமனத்திற்கான ஒளியும் மதிமயங்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக நான் பல அற்புதமான இரவு நேர வானங்களை மேற்கு மலைத் தொடர்களின் பல பாகங்களிலிருந்தும் பார்த்திருக்கிறேன். இத்தனை பெரிய திரையரங்கிற்குள் முப்பரிமாண முறையில் அதே இரவு வானத்தை காட்டும் பொழுது அந்த படகின் இருப்பை போலவே பால்வீதியில் என் இருப்பும் எத்தனை சிறியது, பொருளடையது, எனக்கே எனக்குமட்டுமானது என்று ஒட்டி பார்த்துக் கொள்ளவும் முடிந்தது.

அவனுக்கும் புலிக்குமிடையிலே நடக்கும் எல்லைச் சண்டையில் ஒரு முறை, நாயகன் அந்த சிறிய படகில் சிறுநீர் கழித்து இது என்னுடைய எல்லை அது உன்னுடைய எல்லை என்று பிரித்து அலறி நிற்கும் பொழுது, புலி அவன் முகத்தில் எல்லையிட்டு சிறுநீர் கழிப்பது மெல்லிய புன்னகையுனூடே யாருக்கு யார் எல்லை வகுத்து கொடுப்பது என்பதனை நகைச்சுவையாக கூறி புரிய வைத்திருக்கிறார்கள்.

இடையில் வந்து போகும் அந்த மாமிசவுண்ணும் தாவரத் தீவு. லாங்க் ஷாட்டில் ஏதோ ஒரு பெண் வானம் பார்க்க படுத்திருப்பதனைப் போன்று காட்டுகிறார்கள். அங்கு ஆயிரக்கணக்கில் வாழ்வதாக காட்டப்படும் நீர்நாய்கள், எத்தனை துல்லியமான க்ராஃபிக்ஸ். சுத்தமாக நம்பமுடியவில்லை உண்மைக்கும், பொய்மைக்கும் நவீன காலங்களில் வரும் படங்களில் கையாளப்படும் விஞ்ஞான வசதிகளை உற்று நோக்கினால். அத்தனை தத்ரூபம்!

படத்தின் இறுதியில் எப்படியாக இந்தக் கதை மற்றுமொரு கிளைக்கதையாக துளிர்க்கிறது என்பதனின் மூலமாக, நம்மையே இரண்டு கதைகளில் எந்தக் கதையை எடுத்துக் கொள்வீர்கள் என்பதனைக் கொண்டு எது போன்ற நபர்கள் நாம் ஒவ்வொருவரும் என்பதனை அறிந்து கொள்ள விடுவது - நல்ல அணுகுமுறை!

எனக்கு புலியுடன் தனித்து விடப்பட்ட பகுதியிலேயே அதிகமான வாழ்க்கைக்கு தேவையான சுவையான உரையாடலுக்கான சாத்தியங்களையும், மனத் திறப்புகளையும் உருவாக்கித் தருவதால் அந்தப் பகுதியுடன் இணைத்துக் கொள்ள முடிந்தது. படத்தின் நாயகன் அப்படியானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கரை சேர்ந்தானா, இல்லை, புலியுடனான வாழ்க்கை என்பது மனப்பிறழ்சியால் அவனுக்கு, வழங்கப்பட்டதா என்பது subjective!

இருப்பினும் எனக்கு இந்த படம் வழங்கியது என்னுடைய பனிரெண்டு டாலருக்கும் உயர்வான அனுபவத்தை, திளைப்பை! Simply had a mixer of astounding, mesmerizing and exotic experience; never wanting to finish the movie to end.

Saturday, November 17, 2012

முழிச்சிக்கோங்க : சினிமா டுப்பாக்கி...

இந்தப் படத்தை இயக்குனவர் நிறைய கூகுள்ல ஆராய்ச்சி செய்றவர் போல. எப்படியோ இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் தீவிர தீவிரவாத கண்காணிப்பிற்கு விதையைத் தூவி ஏதோ அவரால் ஆன நாட்டுச் சேவையை ஆத்தி இருக்கார்.

உண்மையான மரணம் வாழும் பொழுதே பயந்து சக மனிதனைக் கண்டு அஞ்சி வாழ்வதுதான். இந்தியாவின் மக்கள் கலப்பு என்பது ரொம்ப சிக்கலானது. அது பல நூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாற்றை உள்ளடக்கியது.

அதனால் இன்றைய நவீன அமெரிக்கப் பார்வையில் நம் தெருவிற்குள் இந்த உலகளாவிய அரசியலை தெரிந்தோ தெரியாமயோ பரப்புரை செய்வது நன்மை விளைவிப்பதைக் காட்டிலும் அதீத தீமையையே விதைத்துச் செல்லும்.

கீழே இணைத்திருக்கிற புகைப்படம் நான் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அதிகம் பேச வேண்டியதில்லை... நீங்களே பார்த்துக்கோங்க.

...ஏன் விஜயகாந்த், அர்ஜூன் வகையறா சினிமா தீவிரவாத ஒழிப்புகளைக் காட்டிலும் முருகதாஸ் வகையறா சினிமா  டுப்பாக்கி சமூக உளவியலுக்கு நச்சு என்பதற்கு கீழ்கண்ட இந்த புகைப்பட ஒருங்கிணைப்பு உதவக் கூடும்.

ரசினி சார் இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தாராமா! தீவிரவாத விழிப்புணர்வு கொடுத்துக்கிட்டார் போல...

இன்னும் கரம்பக்குடிக்கு வரலங்கிற அளவில எங்கூர்ல தீவிர தீவிரவாத விழிப்புணர்வு பரவலன்னு நம்புறேன்...


தொடர்புடைய மற்றுமொரு பதிவு - 


ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பு - பாபர் மசூதி இடிப்பு!

http://thekkikattan.blogspot.com/2010/10/blog-post.html

Monday, November 05, 2012

Bloggers' Voice : I-T ACT SECTION 66 A

ஏதோ ஒரு காரணத்திற்காக 2006 ஆம் ஆண்டு வாக்கில் இப்படியாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு இட்டு வைத்திருக்கின்றேன். அதன் தேவையைக் கருதி அந்தப் பதிவின் சுட்டி இங்கே Indian Bloggers, Its a High Time... http://orani-sittingby.blogspot.com/2006/07/indian-bloggers-its-high-time.html

அண்மையக் காலத்தில் வாயைத் திறந்தால் கூண்டுக் கிளி ஆகும் ஹைடியன், மூன்றாம் தர சர்வதிகார போக்கை நோக்கி நகரும் உலகில் கீழே முன் வைத்திருக்கும் சில கோரிக்கைகளை ஒவ்வொரு சமூக வலைத்தளங்களிலும் இயங்கி வரும் வலைஞர்கள் தங்களுடைய எதிர்கால சுதந்திர கருத்து முன்னெடுப்பினை கருதி இதனை விழிப்பு நிலைக்கு கொண்டு வருவது அவசியமாகிறது.

இது தருமியின் தளத்திலிருந்து அனைத்து விதமான சமூக வலை மக்களுக்கும் கொண்டு செல்லும் போக்கில் தொடரப்பட்டு, இறுதியாக உரிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கென இந்த முயற்சி. எல்லாரும் கலந்துங்க! இப்பொழுது விடயம்...


I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.



 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


பி.கு: ஏனைய வலைஞர்களின் தொடர் பதிவுகளையும் காண அழுத்துங்க இங்கே... http://dharumi.blogspot.com/2012/11/601-i-t-act-section-66.html

Sunday, October 28, 2012

விழித்துக்கொள்ளும் நேரம்:பொது சந்தை...


வலைப்பதிவர்களின் கூட்டமைப்பு பல புயல்களையும், ஆழிப்பேரலைகளையும் களம் கண்டு மேலெழும்பி வரும் ஒரு சமூகம். இப்பொழுதும் அது போன்றதொரு ஒரு முக்கியமான சுழற்சியில் இந்த அமைப்பு நின்று கொண்டிருக்கிறது. இது ஒரு பரந்த வெளி அண்டத்தில் மிதந்து வரும் பால்வீதிகளைப் போன்றே விட்டு விலகியியும், மறுமுனையில் ஒன்றித்து சுருங்கும் மாபெரும் இயக்கம்.

எழுதப்படிக்க தெரிந்தவர்களும், ஆக்க உந்து சக்தியினை உள்ளடக்கியவர்களும் காலம் தோறும் இணைந்து கொள்ளும் ஒரு மாநதி. ஆனால், அது போன்று புதிது புதிதாக இணைந்து கொள்பவர்களுக்கு சில அடிப்படையான புரிதல்கள், இந்த வெளி எப்படியாக இயங்குகிறது, எங்கு சென்று தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்வது, பரிமாறிக்கொண்டதிற்கு பிறகான எதிர்வினை எப்படியாக அமைய வேண்டும் என்பதனை அந்த கருத்தினை முன் வைத்தவர்களே முகம் கொடுத்து முடிக்க வேண்டிய பொறுப்பினையும் கொண்டவர்களாகி விடுகிறார்கள்.

இந்த பின்னணியில் தற்பொழுது நடந்து வரும் சர்ச்சை பல பரிமாணங்களைக் கொண்டது. தட்டையாக இதனைச் சுருக்கி ஒரு ஆண்/பெண் சம்பந்தப்பட்டதாக மட்டுமே பார்த்து விட முடியாது. எப்பொழுது விளைந்த ஒரு பயிர் சந்தைக்கு வருகிறதோ, அப்பொழுது நுகர்வோர்களின் விமர்சனத்திற்கும் அந்த விளைச்சலின் தரம் பரிசீலிக்கப்படுகிறது. சமூகம் சார்ந்த கருத்துக்களை முன் வைக்கும் பொழுது, நாம் பலதரப்பட்ட பின்னணியின் ஊடாக நடந்து வரும் மனிதர்களின் சொல்லாடல்களையும்/கருத்துக்களையும் முகம் கொடுக்கும் நிலைக்கு நம்மை நகர்த்திக் கொள்கிறோம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரிதொரு சமயம் நாம் இதனை கொஞ்சம் விரிவாக அலசலாம்.
அதற்கு முன்னால், கீழே உள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்கள். இது 2010ல் தமிழ்மணத்தில் நடந்த ஒரு சர்ச்சையின் விளைவாக எனக்குள் எழுந்த எண்ணங்கள். இருப்பினும் இப்பொழுதும் இதற்கான தேவை இருக்கிறது...

உடல் + உடை = அரசியல்!


தமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளையும் வாசிக்க முடிந்துவிடுவதில்லை. இப்பொழுதெல்லாம் நண்பர் வட்டம் படித்துவிட்டு இதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் செலவு செய்தால் வீண் விரயமில்லை என்ற வடிகட்டலுக்குப் பிறகே சில நாட்கள், வாரங்களுக்குப் பிறகு நல்ல பதிவுகள் வந்தடைகிறது. இருப்பினும், தான் தோன்றியாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆர்வத்தை கிளப்பும் பதிவுகளை நானாகவே கிடைக்கும் நேரங்களில் அங்கு சென்று தழுவிச் செல்லாமலும் விட்டதில்லை.

எழுத்து என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒரு தானியங்கி முறையில் உள் உந்துதலாக நிகழ வேண்டியதொரு விசயம். அவ்வாறாக நிகழும் பொழுது அங்கே பசப்புத் தனங்களுக்கு இடமிருக்காது என்றே எண்ணுகிறேன். அதனை ஒரு கட்டாயமாக, நிர்பந்தமாக ஆக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பயிற்சி தோள் கொடுத்தாலும், எழுத்தில் ஒரு போலித்தனமும், ஆழமின்மையும் மிளிரக் காணமுடியலாம்.

அண்மைய காலங்களில் அதாவது வலைப்பூக்கள் அநாமதேயமாக எங்கிருந்து வேண்டுமானாலும், குறைந்த பட்ச நேரம் மட்டுமே மூலதனமாக செலவு செய்து தன்னிடம் சரக்கு இருக்கிறது, அது இந்த உலகிற்கு சென்றடைய வேண்டுமென்ற ஆவல் உள்ள எவரும் செயற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிற ஒரு சூழலில், நான் இன்று சந்திக்கின்ற வளரத் துடித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களிடம் கேட்டுக் கொள்வதனைத்தும் "ஏன், நீங்கள் ஒரு ப்ளாக்கர்" கணக்குத் தொடங்கி உங்களின் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதுதான் ;).

அப்படியாக அவரும் தொடங்கும் பொழுது அது அவருக்கு ஒரு ஆரோக்கியமான சுய வளர்ச்சிச் சூழலை உருவாக்கிக் கொடுக்கக் கூடும் என்ற நம்பிக்கையிலேயே, அவ்வாறாக பரிந்துரைக்கிறேன். ஏனெனில், மனித மனமென்பது எப்பொழுதும் தனக்கு பழக்கமான, ஆபத்தற்றதாக கருதிக் கொள்ளும் எல்லைகளிலேயே பயணிக்க பிரியப்படும். அவ்வாறான ஒரு சூழலும் அமைந்து போனால், அதனைத் தாண்டிய ஒரு உலகமும், மனிதர்களும் பல் வேறு பட்ட கருத்து, சமூக, கலாச்சாரங்களின் ஊடான பார்வைகளைக் கொண்டும் இதே தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்ற எண்ணத்தையே மறந்து தன்னுடைய எல்லைக்குள்ளாகவே லயித்து இருக்கும். அதன் நேர் பாதையில் ஏதாவது இடர்பாடுகள் இடரும் வரையிலும்...

மனமும் அதன் வளர்ச்சியுமென்பது ஒரு நீரோடையைப் போன்று ஓடிக் கொண்டே இருப்பதும், தேவையான மாற்றங்களை, பிரபஞ்ச விரிதலைப் போன்று எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்வதற்கு எப்பொழுதும் தயாராக்கிக் கொள்வதுமாக அமைந்து போனால் எங்கிருந்து வருகிறது மனச் சோர்வும், இத்தனை முரண்பாடுகளும்? இந்த தயார்படுத்தலுக்கு எழுத்தும், எண்ணமும் மேலும் வழிவகை செய்து கொடுக்கலாம். மனம் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே என்றுமிருந்தால்.

எனது எழுத்து என்பது என்னை நானே மேலும், மேலும் உட் நோக்கி பார்த்துக் கொள்வதற்கான காலச் சுவடு போன்றதாகக் கருதுகிறேன். அதற்கெனவே, மனதில் ஆழமாக உதித்ததை இங்கு பொதித்து வைத்து விடுகிறேன். பின்பொரு நாளில் கடந்து வந்த வளர்ச்சிப் பாதையின் நீளம், அகலம் அறிந்து கொள்வதற்காக.

அது போன்ற எழுத்தை எல்லார் முன்னிலையிலும் வைக்கக் காரணுமும் எத்தனை பேருக்கு அந்தத் தளத்தின் வீச்சம் பிடிபடுகிறது அல்லது எரடுகிறது என்பதனையும் அறிந்து கொண்டு எனது மேம்பட்ட வளர்ச்சிக்கெனவும் மேலும் பரந்து பட்ட பார்வையை உருவாக்கிக் கொள்ளவும் பயன் படுத்திக் கொண்டுள்ளேன். நமது உலகம், கற்றுக் கொள்ள மனதும் திறந்தே இருக்கும் நிலையில் விரிந்து கொண்டே செல்கிறது என்பதனை இது வரையிலும் எனக்கு ஊறக்கிடைத்த கிணறுகளின் நீள, அகலங்களை அளந்ததின் மூலமாக அறிந்து கொண்டேன். அதன் பொருட்டு இப்பொழுதெல்லாம் சில "கம்பளத் தனமான" வார்த்தைகளை (sweeping statement) விடுவதிலிருந்து முழித்துக் கொள்ள முடிகிறது.

இது அண்மையில் தமிழ்மணத்தில் நடந்து வரும் முரண்பாடுகளுக்கு ஊடான பதிவுகளும் , அதற்குண்டான எதிர் வினைகளுக்கும் சிறிது தொடர்பு இருக்கலாம். புதுப் புது பதிவர்களும், வாசகர்களும் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், அது போன்ற முரண்பாடுகள் ஊடான பதிவுகளும், எதிர் வினைகளும் முடிவற்று நடந்து கொண்டேதான் இருக்கும். அடிப்படையான எண்ணங்களையே அவர்களும் தான் ஊறிக் கிடந்த கிணற்று சாளரத்தின் வழியாக பரந்து பட்ட வானத்தின் ஒரு வட்டத்தைப் பார்த்து அவர்கள் கண்ட வானம் எப்பேர்பட்டது என்பதனை 'பீத்தி' முன் வைக்கலாம், மற்றொருவர் அதற்கு பக்கத்தில் கிடக்கும் கிணற்றிலிருந்து அவர் தரப்பில் கூவிக் கொண்டிருக்கும் அதே வேலையில்.

இப்பொழுது, எனது கிணற்றின் ஊடான அனுபவம் சில வற்றையும், அது எப்படி என் அகக் கண்களை அந்த வேலையில் திறக்க உதவியது, அது போன்று உங்களுக்கும் திறக்க உதவக் கூடுமென்ற நப்பாசையில் இங்கே இறக்கி வைத்து விடுகிறேன் ...

அனுபவம் எண் 1: அப்பொழுது கார்கில் பகுதியில் பாகியுடன் நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தோமென்று நினைக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு முன்னமே இந்தியாவிலிருந்து அமெரிக்கா குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழர் எனக்குப் பழக்கமானார். அவர் இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்தும், படிப்பிற்கும் பொது அறிவிற்கும், பண்பாட்டிற்கும் ஒருவனுடைய அடிப்படை இயல்பிற்கும் எந்த தொடர்புமில்லை என்பதற்கிணங்க, ஒரு அறிவு கெட்ட "கம்பள வார்த்தை" ஒன்றை அவரிடத்தில் மிக்க தேச பக்தியில்(??) உளறி வைத்தேன்.

அந்தக் கம்பள வார்த்தை என்னவெனில், "பாகியை துடைத்தெறிந்திட்டா எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்துவிடும்" என்பதுதான் அது. அவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு, நண்பா! அந்த நாட்டில் இன்னமும் எங்களுக்கு தொடர்புடைய பெரியப்பா, பெரியம்மா வகை சொந்தங்கள் வசிக்கிறார்கள் இன்னமும் வந்து போயிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாக கூறினார். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே புரியவில்லை. அப்படியே நிலை குலைந்தவனாக அமர்ந்திருந்தேன். ஒரு நிமிடம் என்னை அவர் நிலையில் வைத்துப் பார்த்தேன். என்னுடைய வார்த்தையின் தீவிரம் புரிந்தது. அன்றிலிருந்து, பல சில நேரங்களில் இது போன்ற குருட்டுத் தனமான கம்பள வார்த்தைகளை தவிர்ப்பதின் அவசியத்தை உணர்ந்தேன்.

அனுபவம் எண் 2: இங்கு அமெரிக்கா வந்த பொழுதினில், எங்களைப் போல உண்டா என்று நாளும் ஏதாவது ஒரு வெட்டி வம்பு பேசுவதுண்டு. ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையைக் காண்பதிலிருந்து ஆரம்பித்து, அரை ட்ராயர் போட்டு நடந்து திரியும் பெண்களைக் கண்டால், பார்க்கில் அமர்ந்து அன்நியோன்யமாக வருடிக் கொள்ளும் ஜோடிகளைக் கண்டால், வாயை விட்டு 'ஐ லவ் யு, ஹனி, மகளே, மகனே' எனச் சொல்லிக் கொள்ளும் மக்களைக் கண்டால்னு சகட்டு மேனிக்கு குருட்டுக் கம்பளம் விரித்தேன். எல்லாமே போலி, வேஷமென்று. அதாவது அந்நாளில் என்னுடைய கிணற்று சாளரத்தின் வழியாக எனக்குக் காணக் கிடைத்த வான வெளியுடன் அவர்களின் கலாச்சாரத்தை தேவையில்லாமல் ஒப்பீடு செய்து கொண்டிருந்திருக்கிறேன். என்ன ஏதென்று எனக்குப் புரிய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே!

அது போன்ற ஒரு நாளில் எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குடும்பத்தாரை அருகிலிருக்கும் 'ஜோன்ஸ் பீச்சாங்கரைக்கு' அழைத்துச் சென்றேன். அதில் உள்ள கணவன், மனைவி ஐம்பதுகளின் மத்தியிலிருந்தார்கள். பத்தாவது படிக்கும் ஒரு மகன். பீச்சாங்கரையில் ஒரே ஜனத் திரள். எங்கு திரும்பினும் கூட்டம். யூனி ஃபார்மாக அந்த சூழலுக்கேயான உடை. பெண்கள் ட்டூ பீஸ், ஆண்கள் அரை ட்ரவுசர் என ஜோடித்திருந்தார்கள்.

என்னுடன் வந்திருந்த அம்மா வட இந்தியர். சுடிதாருக்கு மேலாக போட்டிருந்த துணியையும் வெயில் காய்கிறதென்று தலையில் போட்டு சுத்தியிருந்தார்கள். கால் முதல், தலை வரை துணியாக பீச்சாங்கரையை வலம் வந்து கொண்டிருந்தார். நாங்களும் ஒரு இடத்தை தேர்வு செய்து, துணிக் கம்பளம் விரித்து, கொண்டு வந்த திண் பட்டங்களை வைத்து கடை விரித்தோம். அருகினில் அமர்ந்திருந்த ஏனைய கூட்டம் எங்களைப் பார்ப்பதும், ஏதோ கிசு கிசுப்பதுமாக இருந்தார்கள். ஒரு அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் எங்களைச் சுற்றி ஒரு 15 மீட்டர் சுற்று வட்டத்தில் யாரையுமே காணோம்!

எங்கடா மக்கள் எல்லாம் என்று பார்த்தால், இந்தக் காட்டுமிராண்டிகளுடன் நமக்கெந்த தொடர்மில்லை என்று தொப்புள் கொடி அறுக்கும் விதமாக விலகிச் சென்றிருக்கிறார்கள். இங்கும் எனக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியாகவே அந்த நிகழ்வும், சூழலும் அமைந்திருந்தது. நம் ஊரில் வாரப் பத்திரிக்கைகளும், தினசரிகளிலும் வெள்ளைக்காரிகள் என்றாலே என்னமோ எப்பொழுதும் ட்டூ பீஸில் அழைந்து கொண்டு, சாலையோரங்களில் கண் அடித்து கவிழ்த்து விடும் பெண்கள் என்ற வித பொதுப் புத்தியை விதைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அன்று அந்த மெஜாரிடி சமூகத்தின் முன்னால்... எங்களுக்கு நிகழ்ந்ததின் பொருள் என்ன?

ஒவ்வொரு பூமியிலும் அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல அந்தந்த சமுதாயமும் வசதிக்கேற்ப உடலரசியலை நகர்த்திக் கொள்கிறது. அந்த எல்லைக்குள் வாழும், சமூகக் கண்களுக்கு எது வரையிலும் தோலைக் காமித்தால் முகம் சுழிக்காமல் எடுத்துச் சொல்லக் கூடுமோ அதுவரையிலும் அவர்களுக்கு அது நாகரீகம். அவர்களின் எல்லைக்குள். அதனைக் கொண்டு பிரிதொரு எல்லைக்குள் பிரவேசித்து அதனைப் போல உடலரசியல் செய்யவில்லை என்று கூவுவது எந்த விதத்திலும் நாகரீகமில்லை, அப்படி நிகழ்த்தும் பொழுது அங்கே வீண் பிரச்சினையும், கிணறுகளின் நீள, அகலங்கள் ஒன்றிலிருந்து பிரிதொன்றின் பார்வையில் வித்தியாசப் பட்டுக் கொண்டே போகும். எது வரையிலுமென்றால், அவைகளை விட்டு விலகி மொத்தமாக அந்த வித்தியாசங்களின் கூறுகளை காணும், மனக் கண் திறக்கும் நாள் வரையிலும் என் கிணறு உன் கிணறை விட சிறந்தது/தாழ்ந்தது என்ற முறையிலேயே அமையும்.

பர்தா போட்டிருப்பவர்களின் கண்களுக்கு அதனைப் போடாமல் வெளியே போயி வருபவர்கள் ஆபாசமாகவும், சேலை கட்டிக் கொள்ளாமல் ஜீன்ஸ், ட்டி-ஷர்ட் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும், அவர்களின் கண்களுக்கு மினி ஸ்கர்ட்டும், அரை ட்ரவுசரும் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும் தெரிவது (இந்த வரிசைக்கிரமத்தை பின்னோக்கியாக ஓட்டி ஒருவர் மற்றொருவரை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொண்டுமென...) எல்லாமே இந்த கிணற்று சாளரத்தின் வழியாக பார்க்கும் பார்வையில் தான் கோளாறே ஒழிய அந்தந்த தனிப்பட்ட மனிதரின் நிலையில் அது சரியே. பிடித்திருந்தால்/செல்லும் நிகழ்விற்கு ஒத்து வந்தால் எப்படி வேணா யாரும் இருந்துவிட்டுப் போகட்டுமே!





பி.கு: நான் இங்கு லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து ஓட்டும் வாகனத்தை மட்டுப்படுத்தி குடுபத்தோட, குழந்தை குட்டிகளோட பார்த்தா அதுக்கு நான் என்ன பண்றது :))) ...

Friday, October 19, 2012

மலர்களுக்குள் ஆண்களுக்கான விடை: Flower Structure!

பரிணாமம் எப்பொழுதும் எனக்கு ஒரு வியப்பூட்டும் நந்தவனம். அது விசயங்களை குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டவென மறைத்து வைத்திருக்கும் சாக்லேட் பார்களை போலவே பல வாழ்க்கை சூத்திரங்களை மறைத்து வைத்திருக்கிறது. அவதானிக்கும் தருணம் தோறும் என்னுடைய அனுபவ எல்லைக்களுக்கு ஏற்ப பெரிய சிறகுகளைப் சிறுகச் சிறுக கொடுத்து விரிவடைய வைத்துக் கொண்டு வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு மலர்களின் அமைப்பை பற்றி படித்துக் கொண்டிருந்தேன். மலர்களின் இதழ்களை கடந்து சென்ற எனக்கு பெரும் ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது அப்பொழுது விளங்கவில்லை. சற்று மென்மேலும் தவழ்ந்து அறிந்து கொண்டிருக்கும் பொழுது, மலர்களின் உள்ளே நடு நயமாக பெரிய வயிற்றுடன் அமைந்துப்பட்டிருந்த பெண் இனப்பெருக்க உறுப்பான சூல்வித்தினைச் (carpel) சுற்றிலும் அரண்களாக எழுந்து அழகூட்டிக் கொண்டிருந்த ஆண் இனப்பெருக்க உறுப்பான பல ஸ்டெமென்களை (stamen) பார்க்கும் பொழுது என்னுடைய சிந்தனை சிறகு நின்று நிதானித்து விரியத் தொடங்கியது.

இந்த அமைப்பிற்கும் மனித ஆண்/பெண் தேடல் சார்ந்த ஈர்ப்பிற்கும், மரபணு கொண்டு சேர்ப்பிற்கான பரிணாம விளையாட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக் கூடுமா என்று சிந்திக்க தோன்றியது. அதன் விளைவு இந்த பதிவு. என்னுடைய கோணங்கி சிந்தனை எப்படியாக இந்த மலரின் இனப்பெருக்க தேர்ந்தாய்வை நம்முடன் தொடர்பு படுத்திக் கொண்டது என்பதற்கு முன்பாக முதலில் ஒரு மலரின் அமைப்பிற்குள் சென்று வந்துவிடுவோம்.

நம்மால் மலர்களே இல்லாத ஒரு உலகையோ அல்லது சினிமாப் பாடல்களையோ நினைத்தும் பார்க்க முடியுமா? அந்த உலகுதான் எத்தனை நிறமிழந்து, வாழ்க்கையற்று சாம்பல் நிறமாக இருக்கும். மலர்கள் அழகிற்கெல்லாம் அழகு சேர்க்கும் ஒரு ரோஜா வனம். கண்களுக்கு முன்னால் அலைகள் வடிவில் விரிந்து கிடக்கும் மலைகளின் சரிவிலும், எழுச்சியிலும் வண்ண வண்ண மலர்களால் நிறைந்திருந்தால் மனம் ஒரு செளந்தர்யத்தின் ஒரு வண்டாக எழுந்து அத்தனை மலர்களையும் ஒரு பறவை பார்வையில் பார்க்க சிடுசிடுத்துக் கொண்டிருக்கும். அத்தனை அழகூட்டு சிரிப்பினை உள்ளடக்கியது அந்தப் பூக்கூட்டம்.

பூக்கும் தாவரங்களில் (angiosperms) உள்ள ஒரு பூவின் பரிணாம வடிவமைப்பை பார்த்துவிடலாமா இப்பொழுது. ஒரு பூக்காம்பு ஒரு மொட்டை யாருக்கோ தான் பரிசளிக்கவிருக்கும் பெட்டியினை சுமந்து நிற்பதாக தன்னுடைய புல்லிவட்ட புற இதழ்களைக் (sepal) கொண்டு உள்ளே இருக்கும் பரிசினை பாதுக்காக்கிறது. இது சற்று தடிமனான இலைகளைப் போல் தோன்றும், அதன் முக்கிய பயன் மலர்வதற்கு முன்னாக அந்த மலரை பொத்தி பாதுகாப்பளிப்பது.

இப்பொழுது அந்த மொட்டு மெல்ல அவிழ்கிறது. வண்ணம் வெடிக்கிறது. புறவயமாக இந்த பூமிக்கு அழகூட்டும் அல்லிவட்டம் (petal) மலர்களின் இனங்களுக்கு தகுந்தாற் போல பல நிறங்களைக் கொண்டு விரிவடைகிறது. ஒவ்வொரு மலரும் தனக்குள்ளேயே ஒரு உலகத்தை உள்ளடக்கியே எழுந்து நிற்கிறது.

ஒரு மலருக்குள் ஆண்/பெண் இனப்பெருக்க உறுப்புகளை உள்ளடக்கியிருந்தால் அதனை ஒரு முழு பூவாகவும், அப்படி அன்றி பெண் இனப்பெருக்க விசயங்கள் ஒரு பூவிலும், ஆண் விசயங்கள் மற்றொரு பூவிலும் அமைந்திருந்தால் அது முழுமையற்ற பூவாகவும் கருதிக் கொள்வோம்.

எப்படியாகினும் இவைகளை இணைத்து வைப்பது என்னவோ புறக்காரணிதான் என்பதனை ஞாபகத்தில் நிறுத்திக் கொள்வோம் (அது காற்றாகவோ, நீராகவோ, பூச்சி/பறவை இத்தியாதி விசயங்களாகத் தானிருக்கும்).


பெண் இனப்பெருக்க பாகங்கள்:

இப்பொழுது அல்லிவட்டத்தை (petal) தொடாமல் உள்ளே பார்வையை செலுத்தினால் நடுநயமாக பூக்களுக்கான ராணியைப் போல ஒரு தண்டு நின்று கொண்டிருக்கும். சற்றே ஒரு பேரிளம் பெண்ணை ஒற்ற தசைப் பிடிப்புடன். அந்த ராணியின் பெயர் சூல்வித்திலை (carpel). இந்த ராணி மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த அமைப்பை ஒரு வீணையாக மனதில் நிறுத்திக் கொள்வோம். அந்த வீணையை தூக்கி நிறுத்தினால் அதன் குடுவை அமைப்பு கீழ் நோக்கி இருக்கும், அல்லவா?

அந்த வீணை அமைப்பின் முகப்பில் சூலகமுடி (stigma) இருக்கிறது. அதன் கீழாக நீண்டு ஓடும் வீணையின் கழுத்துப்பகுதிக்கு பெயர் சூலகத்தண்டு (style). இவைகள் இரண்டையும் உள்வாங்கியபடி இருக்கும் வீணையின் குடுவைப்பகுதியினை சூலகம் (ovary) எனக் கொள்க. அதனை ஊடுருவி பார்த்தால் அதனுள் பொதிக்கப்பற்றிருக்கிறது, பெண் சூல் முட்டை (ovule).

ஆண் பகுதி:

இப்பொழுது அந்த ராணியைச் சுற்றியும் நிறைய கலங்கரை விளக்கங்களைப் போல எழுந்து நிற்கும் ஆண் இனப்பெருக்க உறுப்பு. அந்த ராணியை சுற்றிலும் அண்ணார்ந்து பார்த்தபடியோ, அல்லது குனிந்து பார்த்த படியோ மிக அருகாமையில் நின்று கவரக் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மொத்த கலங்கரை விளக்கத்தினை Stamen என்று கொள்வோம்.

இது இரண்டு பகுதிகளாக உள்ளது. நீண்ட தண்டு (மகரந்த கம்பி-filament) அதன் நுனியில் பல மகரந்ததூள்களை கொண்ட மகரந்த பை (anther). இங்கிருந்தே மகரந்த தூள்கள் புறக்காரணிகளைக் கொண்டு பெண்ணின் பிசுபிசுப்புடன் அமைந்துப்பட்டிருக்கிற சூலகமுடிகளுக்கு ஆணின் மகரந்த தூள்களை கொண்டு சேர்க்கின்றன.

மெதுவாக அந்த மகரந்தத் தூள், சூலகத்தண்டின் வழியாக சில வேதிய மாற்றங்களைப் பெற்றபடியே சூலகத்திற்கு சென்றடைகிறது. அங்கே தனக்காக காத்திருக்கும் சூல் முட்டையுடன் பற்றிப்படறி, இரண்டற கலந்து அடுத்த தலைமுறையை மரபணு பரிவர்த்தனை மூலமாக சாதித்துக் கொள்கிறது. சூல்கொண்டவுடன், அந்த வீணையின் புற அமைப்பு அதாவது சூலகம் நாம் உண்ணும் பழப்பகுதியாகவும், உள்ளமைப்பு விதையாகவும் ஆகிவிடுகிறது.

இப்பொழுது நாம் முழுமையாக ஒரு மலரின் அமைப்பினையும் அது எப்படி சூல் கொள்கிறது என்றும் பார்த்தாகிவிட்டது.

இதில் புதிதாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதனை இங்கு வைத்து தைத்து விடுகிறேன். இயற்கையமைவில் பார்த்தால் ஆண்/பெண் பாலின விகிதாச்சாரம் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே போல அமைந்து விடுவது கிடையாது. இயற்கையின் தேர்ந்தெடுப்பதில் எப்பொழுதும் ஆண் போராடியே தனது மரபணு சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் கட்டாயத்தில் வைக்கப்படுவதாக அறிய முடிகிறது.

அதற்கு உதாரணமாக அனைத்து உயிரினங்களின் ஆண்/பெண் புறத் தோற்றத்திற்கென அமைந்த வண்ண வண்ண ஜிகர்தண்டா வேலைகளை வைத்துப் பார்த்தாலே தெரியும். இதனில் குறிப்பாக பறவைகளில் ஆண் சற்றே தூக்கலான நிறங்களையும், குரல் வளத்தையும் பெற்று தனக்கு போட்டியான மற்றொரு ஆண் பறவையிலிருந்து பெண்ணின் பார்வையை தன்னிடத்தே கவர்ந்து வெற்றி கொள்ளும் கட்டாயத்திலிருக்கிறது.

போலவே, விலங்குகளில் எது அதிகமான போராட்டத் திறனையும், உடல் வலிமையையும் பெற்றிருக்கிறதோ அது அதிகப்படியான பெண்களை பெற்றுக் கொள்கிறது. இதனில் கூர்ந்து கவனித்தால் அது மலர்களிளாகட்டும், விலங்குகளிளாகட்டும் பெண் நடுநயமாக நின்று தன்னுடைய சுட்டு விரல் அசைப்பில் தனக்கு எது போன்ற திறனைக் கொண்ட, வலிமை மிக்க வாரிசை அடைந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கும் பீடத்தில் அமர்ந்திருப்பதாக இருக்கும்.

என்னுடைய சிந்தனை இந்த அடிப்படையின் புரிதலோடு இந்த மலர்களின் இனப்பெருக்க அமைப்பை காண தலைப்பட்டது. எப்படியெனில், ஒரே ஒரு சூல்வித்திலை சுற்றிலும் ஏன் அத்தனை ஆண் இனப்பெருக்க ஸ்டேமெனை நிறுத்தி வைத்திருக்கிறது? இது இனவிருத்தி செய்யும் வாய்ப்பை அதிகரிக்கவே அப்படியான ஓர் இயற்கையமைவு என்றாலும், எப்படி ஆஃப்ரிகா சமவெளிகளில் இன்றளவும் விலங்குகளிடத்தில் போட்டியின் அடிப்படையில் இயற்கை தேர்ந்தெடுப்பு நடைபெறுகிறதோ அதனே இந்த ஒரு மலர் உலகத்திலும் நடைபெறுகிறது.

இங்கே ஒரு திருகல், ஒரு சூல்வித்திலையை சுற்றிலும் நிற்கும் அந்த ஸ்டெமென்களை பார்க்கும் பொழுது, நம் உலகில் ஆண்களின் இயல்பான பெண்களைக் கண்டதும் நடைபெறும் தலை திரும்பல்களுக்கான பரிணாமப் புரிதலை உள்ளடக்கியிருக்கிறதாகப் படுகிறது :) ... இது ஒரு மனித ஆணின் தவறல்ல பரிணாம உயிரிய நிரலிப் பரப்பல். முயன்று சிறந்த மரபணுக்களை அடுத்த பரிணாமச் சக்கரத்தில் ஏற்றி வைக்க இயற்கை அமைத்து வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு.

அதனால் பூக்களே எங்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள் :)


Tuesday, October 09, 2012

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்: செல் அமைப்பும் இயக்கமும்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதாக சொல்கிறார்களே அது எப்படின்னு திரும்பவும் புரிந்து கொள்ள கொஞ்சம் உள்ளர போயி பார்த்திடலாம்னு உட்கார்ந்தேன். பார்க்கப் பார்க்க இந்த இயற்கைதான் என்னமா கபடி விளையாண்டிருக்கிறது ஒவ்வொரு வாழும் உயிரினங்களின் உள்ளும் என்பதனை புரிந்து கொள்ளும் பொழுது ஆச்சர்யத்தில் பிளந்த தாடையை மீண்டும் தட்டிகிட்டி அதன் இடத்தில் வைப்பதற்குள் இதனை பதிவாக உங்களுக்கு வழங்குகிறேன்.

இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் இதனில் உள்ளடக்கம். கண்ணுக்கு தெரியா பாக்டீரியாக்களிலிருந்து அன்னார்ந்து பார்க்க வைக்கும் ஒட்டக சிவிங்கி வரையிலும் அதன் உடலமைவு செல்களால் (cells) கட்டமைக்கப்பட்டது. இந்த செல் வெற்றுக் கண்களுக்கு புலப்படுவதற்கு அப்பாற்பட்டது. இருப்பினும் அத்தனை உயிரினங்களுக்கும் அடிப்படையான ஒரு விசயம்.

இந்த செல்களே ஒன்றாக இணைந்து திசுக்களாகின்றன (tissue) இந்த திசுக்களே உயிரினங்களின் உறுப்புகளை (organs) கட்டமைக்கிறது. எனக்கு பெரும் மயக்கத்தையே கொடுக்குமளவிற்கு அமைந்த விசயம் என்னவெனில் இந்த ஒற்றை செல்லுக்குள் நடக்கும் விந்தையான, முறைப்படுத்தப்பட்ட இயக்கம்தான்.

இப்போ இந்த காணொளியை காணுங்கள். இதனைக் கொண்டு நான் புரிந்து கொண்ட வரையில் எத்தனை எளிமையாக விசயங்களை கொடுக்க முடியுமோ அத்தனை தொலைவு உள்ளே ஒரு பயணம் போவோம்.





மேலே உள்ள காணொளி வேலை செய்ய வில்லையெனில் இங்கே போங்க- http://www.youtube.com/watch?v=o1GQyciJaTA

செல்களில் இரண்டு விதமான செல்கள் இருக்கின்றன. புரொகரியோடிக் (Prokaryotic) - பாக்டீரியாக்களும் சில ஆல்கைகளும் இந்த வகையான செல்லால் ஆனது. மற்றொன்று யூகரியோடிக் (Eukaryotic) இந்த வகை செல்களே உலகின் அனைத்து விதமான சிக்கலான உடல் அமைவுகளை கொண்ட உயிரினங்களையும் கட்டமைக்கிறது; இதனில் தாவரங்களும் அடக்கம்.இப்பொழுது நாம் ஒரு நகரத்திற்குள் நுழைவதாக ஒரு செல்லிற்குள் நுழைவதனை கற்பனை செய்து கொள்ளுவோம். முதலில் அந்த நகரத்திற்கென நுழைவு வாயிலாக அமைந்துபட்டிருப்பது-

1) ப்ளாஸ்மா செல் மெம்ப்ரேன் (Plasma Cell Membrane) - இந்த மெம்ப்ரேனே அந்த நகரத்திற்குள் (செல்லுக்குள்) யார் நுழையலாம், வெளியே வரலாம் என்பதனை செய்கிறது. மேலும் நரம்பு மண்டலத்திலிருந்து கிடைக்கும் செய்திகளை ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லிற்கும் நகர்த்துகிறது.

2) நுயுக்ளீயஸ் (Nucleus) - இது அந்த நகரத்தின் தலைமையகம் என்று கொள்வோம். அங்கயே அந்த நகரத்தை இயக்குவதற்கான அத்தனை ஆணைகளையும் உள்ளடக்கிய மரபணு (DNA)இருக்கிறது. இந்த மரபணுவை சுற்றிலும் அதற்கென அமைந்த நுயுக்ளீயஸ் மெம்ப்ரேன் உள்ளது.

3) மைட்டோகாண்ட்ரியா (Mitochondria) - அந்த நகரம் இயங்குவதற்கான சக்தி பெட்டகம் (power house) எனக் கொள்ளலாம். இங்கிருந்தே அந்த செல் இயங்குவதற்கான சக்தி சேமிக்கப்பட்டு, பகிரப்படுகிறது இங்கேதான் சாதாரண குளுகோஸ் பின்பு அடினோசின் ட்ரைபாஸ்பாஸ்பேட்டாக (ATP) மாற்றப்பட்டு வழங்கப்படுகிறது.

4) ரைபோசோம் (Ribosome) - நகரத்திற்கென இயங்கும் ஒரு தொழிற்சாலை எனலாம். இங்கு மரபணுவின் குறீயிடுகள் மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கென இயங்கும் புரதக் கூறுகளாக மாற்றப்படுகின்றது.

5) கால்ஜி (Golgi) - ரைபோசோம்களால் உருவாக்கப்பட்ட புரதம் இங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அமைப்பு அந்த நகரத்திற்கான தபால் நிலையமாக செயல்பட்டு வரும் புரத மூலக்கூறுகளை வகை பிரித்து, மாற்றி, பொட்டலம் போட்டு அடுத்த அமைப்பிற்கு அனுப்பி வைக்கிறது...

6) எண்டோப்ளாஸ்மிக் ரெட்டிகுலம் (Endoplasmic Reticulam-ER) - நகரத்திற்கென அமைந்த புராதான சாலைகளும் அங்கு நிறுத்தப் பட்டிருக்கும் லாரிகளும் என்று கொள்வோம். இந்த அமைப்பு புரதத்தை மற்ற பாகங்களின் செல்களுக்கு  எடுத்துக் கொண்டு சேர்க்கும் தலையாய பணியை செய்கிறது. இந்த அமைப்பின் வெளிபுறத்தில் புரத தயாரிப்பாளரான ரைபோசோம்கள் இருக்கின்றன.

7) லைசோசோம்கள் (Lysosome) - இவைகள் அந்த நகரத்தின் அசுத்தம் நீக்குவான். பழுதடைந்த செல்களின் இதர மூலக்கூறுகளை உண்டு செரித்தும், பழுது நீக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

8) ஸ்மூத் எண்டோப்ளாஸ்மிக் ரெட்டிகுலம் (Smooth Endoplasmic Reticulam) - செல்களில் புகும் நச்சுகளை அகற்றவும், தேவையான பொழுது உபரி மெம்ப்ரேன்களை உருவாக்குவதிலும் பங்கு கொள்கிறது.

9) சைட்டோஸ்கிலிடல் ஃபைபர் (Cytoskeletal Fiber) - இந்த மொத்த நகரத்திற்கான வெளிப்புற கட்டமைப்பை வழங்கி, அதற்கென ஸ்ரத்தன்மையை வழங்கி அதன் இயக்கத்திலும், செல் பிரிதலின் போது இரண்டாக பிரிவதற்கும் உதவுகிறது.

நாம் மேலே பேசிக்கொண்டிருந்தது நம் உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும், சதை அமைப்பிலும் கட்டமைப்பிற்கென அமைந்திருக்கும் கோடான கோடி செல்களில் ஒரு செல்லுக்குள் நடைபெறும் இயக்கமே.

தாவர செல்லிற்கும் விலங்கு செல்லிற்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால், இந்த உலகத்தில் நாம் ஜீவிதம் நடத்த அடிப்படையான சக்தியை ஒளியிலிருந்து பெற்று அதனை ஒளிச்சேர்க்கையின் மூலமாக வேதிய சக்தியாக மாற்றுவதால் அதன் செல்களில் குளோரோப்ளாஸ்ட் (Chloroplast) என்ற அமைப்பு உபரியாக உள்ளது.

பிரிதொரு சமயம் எப்படி மரபணுவிலிருந்து செய்தி பிரித்தெடுக்கப் பெறுகிறது என்பதனை மீண்டும் ஒரு ஆர்வமூட்டு காணொளி உடன் காண்போம்.

Sunday, September 30, 2012

அவள் அப்படித்தான்/மூணு(3) - அரைகுறை பட விமர்சனம்!

இன்று இரண்டு படங்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைச்சிச்சு. 

*அவள் அப்படித்தான்*

இது வரைக்கும் அந்த படத்தினுடைய ஒரு பாடலை மட்டுமே பார்த்துட்டு இருந்த எனக்கு, அந்தப் படத்தினுடைய சில பாகங்கள் யூட்யூப்ல பார்க்க கிடைச்சதிலே என்னதான் இந்தப் படம் பேச வருதுன்னு முழு படத்தையும் பார்க்கணுங்கிற ஆவல் வந்துச்சு. பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது அந்த கால கட்டத்திலேயே இப்படி ஒரு படம் எடுக்க ரொம்பவே துணிச்சல் இருக்கணும்னு தோணச் செஞ்ச படம்.

ஸ்ரீப்ரியா, ரொம்ப இயல்பா அழுத்தமா தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்துக்குள்ளர வாழ்ந்திருக்கு. ஒரு பெண்ணின் மன உலகம் எப்படியா இயங்கிட்டு இருக்கலாம்னு செய்ற ஓர் அக உலாத்தல்தான் இந்தப் படம். இயக்குனர் ரொம்ப நுட்பமான காட்சிகளின் மூலமாகவும், ஆணித்தரமாக, சிந்தனையை கீறிவிடும் வசனங்களை அதில வர்ற குணாதிசியங்களைக் கொண்டு கட்சிதமாக செஞ்சிருக்கார். நிறைய பேசலாம்.

*மூணு*

வரவர தமிழ் படங்களின் மீதாக இருக்கும் மயக்கம் கூடிட்டே வருது. ரொம்ப இயல்பா திரைக்கதை அமைத்து அதனை படமாக்கவும் ஒரு பெரிய கூட்டமே நம்ம கையில கிடைச்ச மாதிரி நிறைவு கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு.

இந்தப் படத்தில தனுஷ், ஸ்ருதி ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு கலங்கடிச்சிருக்காங்க.  படம் ரொம்ப மெதுவா நகர்ந்து இரண்டாவது பகுதியில தனுஷ்வோட நடிப்பை மட்டுமே கேட்டு நிக்கிற ஒரு கதை. ரொம்ப நல்லா செஞ்சிருக்காப்ல. தனுஷ்க்கு மன பிறழ்வு சம்பந்தமா எந்த கதை கிடைச்சாலும் தைரியமா நடிக்கலாம். நிறைய இடங்களில் கொஞ்சம் மனசை தொடுகிற படியாக பின்னணி இசையும் அமைந்து போனதால் கட்டிப்போட்டுட்டாங்க. படம் நல்லா ஓடலன்னு நினைக்கிறேன். அதுக்கான காரணம் கதை நம்ம பெரும்பாலான சத்தமான வாழ்க்கையில் வாழும் கூட்டத்துடன் ஓட்டியிருக்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.

இரண்டாம் பாதியில் வரும் தனுஷ்விற்கான கதை அமைத்த விதம், மிக அருகாமையில் இருந்து கவனித்து யாருக்கோ நடந்ததை தானே எழுத்தில் வெளிக் கொண்டு வந்தததிற்கான அழுத்தமிருக்கிறது as though nothing is cinematic exaggeration in itங்கிற அளவிற்கு!

மற்றுமொரு மாற்றுப் பார்வை.

3 / Moonu - movie review : Perfectly bipolar


ஆனா, அந்த விமர்சனத்தில் இரண்டாம் பாதியில் ஏன் அப்படியான பைபோலார் மன வியாதி வந்திச்சின்னு அன்னியன், நடுநிசி நாய்கள் படங்களில் சொல்லப்பட்ட மாதிரி அழுத்தமா சொல்லல இதிலங்கிறதை ஒத்துக்க முடியாது. சத்தமா சொன்னாத்தான் உண்மைங்கிற மாதிரி இருக்கு இதுவும். பாதிப்பை கொடுக்கும் மிக மென்மையான விசயங்கள் கூட கவனமா ஒருவனுக்கு மேலாண்மை செஞ்சிக்க பக்குவமில்லாம இருந்தா நிச்சயமா அது போய் முட்டிக்கிட்டு நிக்கிற இடம் மன அழுத்தமாத்தான் இருக்கும்.

அது போன்ற சூழ்நிலையில் கவனிக்கப்படாம விட்டா மேலும் அது இழுத்துக் கொண்டு நிறுத்துகிற இடம்தான் இது போன்ற ஏதோ ஒரு டிஸ்ஆர்டர்.

இந்த கதையில் ரொம்ப subtleஆ அதற்கான காரணத்தை கொடுத்திருக்காங்க. அது மாதிரி சினிமாத்தனமா சொல்லாததால் தான் இந்தப் படம் ஊத்திக்கிச்சின்னு இப்ப விளங்குது. அதில ஆச்சர்யமும் இல்ல. ஆளவந்தான் படத்தில கமல் சொல்ல வந்த விசயம் எத்தனை பேருக்கு புரிஞ்சு ஏத்துக்கிட்டோம் அது போலவேத்தான் இதுவும்.

I enjoyed both the movies, a touchy ones!!

Saturday, September 22, 2012

கூடங்குளம் - ஒரு சிலந்தியின் செய்தி: With Photos!

நம்மைச் சுற்றியும் எப்பொழுதும் எங்கேயும் விந்தையான விசயங்கள் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது. அது போன்ற நிகழ்வுகள் யாவும் பெரிய இயக்கங்களாக நம் முன்னால் விரிந்து காட்சி தர வேண்டுமென்று எதிர்பார்ப்பது நுட்பங்களை அவதானிக்க தவறிய சிறு மூளை செயல்பாட்டில் மரத்தன்மை ஊறிப் போனதே காரணம் என்பதனை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள இன்று எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது.

அது ஒரு சிறு நடை. வீட்டின் முன் புறமாக நடந்து இடது பக்கமுள்ள சுவற்றினையொட்டி நின்று மரத்தின் வேர்களை பார்த்து கொண்டிருப்பதெனக்கு பிடிக்கும். அப்படியான ஒரு பயணத்தில் என் கண் முன்னால் கையொப்பம் சிலந்தி (Signature Spider) ஒன்று நெடுக்காக ஓடிய கேபிளுக்கும் அருகாமையே இருந்த புதருக்குமாக ஒரு வலையை தனக்கேயுரிய சிறப்பானதொரு வடிவமைப்பில் பின்னிப் பரப்பி இருந்தது.



கவனிக்காது அதனைப் பிளந்து கொண்டு நடக்க இருந்தவன் சற்றே தமாதித்து கண்களின் குவியத்தை நெருக்கி கொண்டுவர மரத்துப் போன புலன் விலகி, அதன் பிரமாண்டம் கண்ணில் சிக்கிக்கொண்டது. அங்கயே நின்று கவனித்து கொண்டிருக்கையில் அதனைப் பற்றிய விரிவான கட்டுரையொன்று என் மன 70mmல் விரிய ஆரம்பித்தது. திரும்ப நகர்ந்தவன், அதிர்ந்து கையொப்ப சிலந்தின் தவத்தை எனது மனச் சிந்தனை சப்தம் கலைத்து விடாமலிருக்க மிக மெதுவாக எனது எண்ணத்தை உள்ளே வைத்து வெடித்துக் கொண்டுடே நகர்ந்து மீண்டும் புகைப்படக் கருவியுடன் சிலந்தி வீட்டின் முன் வந்து நின்று கொண்டேன்.

இப்பொழுது காற்றின் விசை எங்கள் இருவரின் நோக்கத்தையுமே கேள்விக்குறியாக்கியிருந்தது. கையொப்பச் சிலந்தி ஊஞ்சலில் இறுகப்பற்றிக் கொண்டு அலறி அனுபவித்துக் கொண்டே முன்னும் பின்னுமாக சென்று வரும் ஒரு சிறுமியைப் போல, தன் வலையின் வலிமையை கவனித்துக் கொண்டே ஆடிக்கொண்டிருந்தது. நானோ எனது புகைப்படக் கருவியின் அத்தனை குப்பிகளையும் திருகி கிடைக்கும் வெளிச்சத்திற்கேற்ப சிலந்தியி்ன் தெளிவான படத்தை கொண்டு வந்திருக்கும் பொழுது முன்னும் பின்னுமாக நகர்ந்து சோதனை செய்து கொண்டிருந்தது, காற்று.



அதற்கும் சற்றே சளைத்தவன் நானில்லை என்று மேகமும் அவ்வப்பொழுது சூரியானரை மறைத்தும், வெளிக்காட்டியுமென அடுத்த ரோதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தது. எனக்கும் அந்த சிலந்திக்குமான இடைவெளி ஒன்றரை அடிதான் இருந்திருக்க முடியும். இடையில் கொசுக்கள் வேறு என்னிடம் அளவற்ற சாப்பாடு கேட்டுக் கொண்டிருந்தது. பகிர்ந்து கொள்வது கருணை மிக்கது என்று கேள்விப்பட்டிந்ததால் சரி சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று அரை டவுசர் போட்டு விட்டுவிட்டேன்.

இத்தனைக்குமிடையே அந்த சிலந்தி ஒரு அற்புதமான விளையாட்டை நிகழ்த்தி காண்பித்தது. இத்தனை போராட்டத்தையும் ”நீ சந்திப்பது ஒன்றுமல்ல” என்று கட்டியம் கூறி நின்றதாக அமைந்ததால்தான் இந்த கட்டுரையே உங்களுக்கு.

அப்படியாக காற்று வீசியதால் ஒரு இலையொன்று அதன் வலையின் மீது சிக்கி தொங்க ஆரம்பித்தது. அதனைக் கவனித்த சிலந்தி உடனே இரண்டே ஸ்விங்கில் அதனிடம் சென்று ஒவ்வொரு இழையாக அறுக்க ஆரம்பித்தது; மேலும் கீழுமாக நகர்ந்து. தொடர்ந்து நானும் எனது புகைப்பட செட்டப்பை மாற்றி மாற்றி முடிந்தளவிற்கு பதிந்து கொண்டேன். முற்றுமாக அதனை எடுத்து பொடீர் என்று கீழே போட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்தது.


அதன் உடனடி நடவடிக்கையை கவனித்தவன் மனதில் ஓடியது வீட்டில் சிறு சிறு ஓட்டை உடைசல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் அலட்சியம் காட்டி மொத்தமாக செலவு செய்து சரி செய்து கொள்ளும் மனப் போக்கில் இருக்கும் எனக்கு இந்த சிலந்தியின் உடனடி இயக்கம் எதனையோ சொல்லிக் கொண்டிருப்பதாகப்பட்டது. உடனே மனம் திருந்திய மணவாடு ஆகிவிட்டேன் என்று புரிந்து கொண்டிருக்க மாட்டீர்கள். படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எனக்கொள்க!





இலையை தனது தேவையான இழைகளை அகற்றி அதன் கனம் மொத்தமும் தனது வீட்டை சிதைத்து விடாமலிருக்க நடத்திய அதிரடி நடவடிக்கையில் வெற்றியடைந்த சிலந்தி - புகைப்படத்தின் வாயிலாக...







இந்த அவதானிப்பின் நீதி- வரும் முன் காப்போம். கூடங்குளம் மக்களுக்கு வந்திருக்கிற இந்த விழிப்புணர்வு ஃபுக்கிஷிமா அணு உலை விபத்திற்கு பின்புதானே என்றும், ஒப்பந்தம் போட்டு அடிக்கல்லும் நட்டு இந்தனை கோடிகளை அரசியல் சாணக்கியர்கள் பிரித்துக் கொண்டது போக மிச்சத்தை அங்கே கட்டடம் எழுப்பி 24/7 கரண்ட் வாங்க, நாளை அந்த உணு உலைக்கு ஏதோ நிகழ்ந்தாலோ அல்லது எப்படி அந்த அணு உலை பயன்பாடு நாற்பது வருடங்களுக்குள் முடிந்து அதற்கு பின்னான அணுக் கழிவுகளை 10 ஆயிரம் வருடங்கள் வைத்து பாதுக்காப்பதைப் பற்றியோ கவலை இல்லை என்று கூறுபவர்களுக்கும், ஒப்பந்தம் போட்டு பணம் செலவு செய்தாகிவிட்டது வரும் காலத்தில் மூன்று மாவட்டங்களை பலி கொடுத்தாலும் தகும் என்று சகித்துக் கொள்ள தயாராக உள்ளவர்களுக்கும் இந்த சிலந்தி ஏதோ சொல்ல வருகிறது என்றே தோன்றவும் செய்கிறது.

மேலும் அணு உலை சார்ந்த பழைய கஞ்சி குடிக்க-


1) ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!!

2) கூடன்குளமும் அணுக்களின் நண்பர் அப்துல் கலாமும்...

Tuesday, July 31, 2012

ஒலிம்பிக்ஸ் = Where Is India?

நேற்று மாலை 4X100 நீச்சல் போட்டியில் ஃப்ரான்ஸை அமெரிக்கா தோற்கடிக்கும் பொழுது மைக்கேல் ஃபெல்ப்ஸின் உற்சாக கூச்சல் ஒரு கொரில்லாவின் கொக்கரிப்பைக் காட்டிலும் அதீதமாகவே கொப்பளித்தது, உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதே சமயத்தில், பார்த்துக் கொண்டிருந்த சானலில் விளம்பர இடைவெளியில் நம்மூர் ட்டி.வி சானல் பக்கம் திருப்பினால் அய்யகோ சூப்பர் டான்சர்-2 என்ன எழவோ ஓடிக் கொண்டிருந்தது.


... To Read further please Click here ...



ஒலிம்பிக்ஸ், சைனா, இந்தியா = Where Is India?

Wednesday, June 06, 2012

உள்ளொளி

Candle light - Reflection



நான் உனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன்
முதலில் யார் கண் சிமிட்டுவதென
தூரத்தில் நின்றபடியே நீ வியர்த்து அடிபெருக்கும்
பொழுதெல்லாம்
நான் உயரத்தில் குறைந்திருந்தேன்

கருமையை நீ உண்டு கொண்டிருக்கும் வேளையில்
உனதிருப்பை நான் அழகாக்கிக் கொண்டிருந்தேன்

உனையுருக்கி உன் வாதையின் உக்கிரக் குழி பறிக்கையில்
அப்பொழுதும் அசையாமல் உன் அகம் காட்டியிருந்தேன்

தரை துடைத்து ஊண் திரட்டி பலமாக பெருமூச்செறிந்தாய்
கரும்புகை நாசிதொட புறவுலகம் முகம்சுழிக்க
போதுமென
புன்னகைத்தே இருள்துழாவி எனதுடலாக்கினேன்!


P.S: Discussion in Buzz ...ULLoLi...

Sunday, April 08, 2012

வசந்த கால ஒளிச் சிதறல்கள்: Lake Photography - 1

ஓர் ஐந்து நிமிட நடை என் வீட்டருகே எனக்கு இத்தனை புதிதான கண்ணாடி படிகங்களலான ஒளிச் சித்திரங்களை நிரந்தரமாக சுருட்டிக் கொள்ள உதவிச் சென்றது.

கற்றதை, பெற்றதை அதன் மூலமாக அறிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ளவே இந்த மொழியும், அதற்கான எழுத்து குறியீடுகளும் தோன்றி இருக்கக் கூடுமென்ற அடிப்படையிலேயே இங்கே நான் கண்ட ஒளிக் காட்சிகளை பதிந்து வருகிறேன்.

இப்பொழுது இங்கே வசந்த காலம். சூரியனாரின் காத்திரமான ஒளியும் கூட புதுப் பெண்ணாக பளிச்சிட்டு நிற்கும் மரங்களின் பசுமையின் மீது படும்பொழுது அந்த வெளிச்சம் வெட்கி மேலும் அழகூட்டி நிற்கிறது.


மரங்களுக்கும் கண்ணாடி காமிக்கும் முயற்சியில்...


பெரியவன் ஒருவன் அப்படியே நெடுக விழுந்து அழகிற்கு அழகு சேர்த்து, நீந்திச் செல்லும் பறவைகளுக்கு ஒய்வெடுக்கும் சுமைதாங்கியாகிப்போனான் ...



தூரத்தில் தெரியும் மரங்களுக்கு டார்ச் அடிச்சுப் பார்க்கும் சூரியனார். அப்படியே ஆயில் பெயிண்டிங்காக தூரிகை இல்லாமல் வரைந்து காட்டும் வேளையில்...

#1


#2


மேகத்திற்கு பட்டுடுத்தி, தரையிறக்கி கண்ணாடியிலும் பொதித்து...

a)


b)


பளிங்கித் தரையில் சிறிதே தண்ணீர் தெளித்து வெளிச்சத்தின் ஊடாக காணும் பொழுதாக...

c)


d)


e)


இந்த காட்சிகளை மிக அருகிலேயே ஏகாந்தத்தின் உச்சத்தில் அமர்ந்து பருக காத்திருக்கும் ஓர் அமைதிக் குடில்...


Saturday, January 28, 2012

வியாபிப்பவன்



இரவும் குளிரும்
பனிக்குட திரவ மிதவையில்
பாதுக்காப்பாய் இருந்தயெனை
மஞ்சளொளியான்
ஆற்றின் சலசலப்பினூடே
வெள்ளிக்காசுகளை அள்ளிப்பரப்பி
இனமறியா பல
பறவை ஒலிக்குறிப்புகளுமாக
சங்கீத நாண்பூட்டியபடியே
முற்றத்திற்கு 
அனிச்சையாய் ஈர்த்து
பூனைப் பாதங்களையொட்டி
என்னுள்
அரவமற்று மெதுமெதுவாய்
உள்ளிறங்கி
தன்னையே கரைத்துக் கொண்டிருக்கிறான்.

Sunday, January 08, 2012

எல்லாம் தெரிஞ்ச அம்புஜம் - நடிகை சுஹாசினி!!

அண்மைய காலங்களில் பார்த்து ரசித்த சுப்பிரமணியபுரம், பசங்க, மைனா, அங்காடித் தெரு, வாகை சூடவா போன்ற படங்களுக்குப் பிறகே தமிழ் சினிமா சரியான திசையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது என்ற நம்பிக்கையை என்னைப் போன்றவர்களுக்கு அளித்திருக்கிறது.

அதற்கு முற்றும் முழுக் காரணம் எந்த ஒரு படைப்பும் மக்களின் தன் மண் மணம் மாறாமல் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அழுந்த பதிந்து கொடுக்கும் பொழுது அது பல நிலைகளில் மக்களின் மனதில் ஆழ்ந்த ஒரு தாக்கத்தை விட்டுச் செல்கிறது. தினப்படி வாழ்வில் எத்தனையோ விசயங்கள் தன்னியல்பிலேயே பல அற்புதங்களை உள்ளடக்கி எழுவதும் வீழ்வதுமாக நகர்ந்து வருகிறது. நாம் அதனை கவனிக்கத் தவறி எந்த ஒரு முயற்சியுமற்ற நிலையிலேயே மீண்டும் மீண்டும் மரத்துப் போன ஒரு மனநிலையில் செக்குமாட்டுத் தனத்துடன் அந்த நிகழ்வின் முழு வீச்சத்தினையும் காணத் தவறி வாழ்ந்தும் முடித்திருப்போம்.

உதாரணமாக நாம் தினசரி வாழ்க்கையில் கண்ணுற்று, புழங்கி வரும் காட்சிகளான மாட்டு வண்டியில் - ஆடுகளும், கோழிகளும் மனிதர்களுமாக பகிர்ந்து கொண்டு சந்தைக்கு சென்று வரும் ஒரு வண்டியை அனிச்சையாக பார்த்தவாரே கடந்து போயிருப்போம். ஆனால், அந்த பிராந்தியத்தில் வாழ நேர்ந்திருக்காத ஒரு அயலருக்கு அந்தக் காட்சி முதன் முதலாக காணக் கிடைக்கும் பொழுது மலைத்துப் போய் நின்று, பல கோணங்களில் அதே காட்சியினை அழகு, அழகான லாங்/குலோசப் புகைப்படங்களாக சுட்டுத் தள்ளியிருப்பார். அது போன்ற புகைப்படங்களும் உலக காட்சியகங்களில் காட்சிக்கு பரப்பப் பெற்று பல பரிசுகளையும் அள்ளி இருக்கும்.

மாறாக நியூ யார்க்கிலிருந்து வந்திருக்கும் ஒருவருக்கு, தன் ஊரில் நிற்கும் ஒரு வானுயர்ந்த கட்டிடத்தை போன்றே தான் வந்திருக்கிற இடத்திலும் அதே போன்ற வானுயர்ந்த கட்டிடத்தை வளைத்து வளைத்து புகைப்படமாக எடுத்து போவதிலோ, அல்லது அங்கயே தேக்கமுற்று போயி நின்று விடவோ விரும்ப மாட்டார். அவர் பார்க்க நினைக்கும், அவரை கவரும் விசயங்களே வேறாக இருக்கும்.

அப்படியே அவர் பார்க்கும் அத்தனை விடயங்களும் புதிய கதைகளையும், கோணங்களையும் வழங்கி நிற்கும். அது போலவே, நாம் இங்கிருந்து அங்கு போனால் நமக்கு நிகழ்வதாக இருக்கும். அது நமக்குள் மறைந்திருக்கும் ரசனைத் தன்மையையும், படைப்புத் திறனையும் பொறுத்து பார்க்கும் விடயங்கள் ஆர்வத்தை ஊட்டுவதாக அமையப் பெறலாம்.

இயல்பிலேயே, படைப்பாளிகள் நமக்கும் எட்டாத பல நுண்ணிய இழையில் இழைந்தோடும் அந்த அற்புதங்களை உணர்வு பூர்வமாக வெளிக் கொணர்ந்து அதனை பெரிய திரையில் ஒரு காவியச் சித்திரமாக வரைந்து காண்பிக்கும் பொழுதே அதற்கு பின்னான அதன் அழகியலை, கோரத்தை, சமூக அநீதிகளை, அரசியலை புரிந்து கொள்ளும் நிலைக்கு நம்மை நகர்த்தி வைக்கிறார்கள்.

இது போன்ற காரியங்களை அதனூடாகவே வாழ்ந்து தோய்ந்து போனவர்கள் சொல்ல முற்படும் பொழுது அதனில் ஒரு ஜீவனூட்டம் இருப்பதாகி நம்மை யாவரையும் கட்டிப் போட்டு விடும். உதாரணமாக, அங்காடித் தெருவில் வரும் ஒவ்வொரு பசங்களும் நம் பக்கத்திலேயே வாழ்ந்து, நம்முடனே பயணித்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பின்னான வலிச் சமுத்திரம் நம் பார்வையிலிருந்து பல அக/புற காரணிகளால் மரத்து போகச் செய்யப்பட்டிருக்கிறது. அதனை மிக நுட்பமாக, உணர்வு பூர்வமாக உள்வாங்கிய ஒருவரால் மீண்டும் அதே பசங்களின் வாழ்வு அடிக் கோடிட்டு காட்டப் பெறும் பொழுது அவர்களுக்கான வசந்த காலமும், பூட்டப்பட்டிருக்கிற கதவுகளும் திறக்கப் பெறுவதாக அமைகிறது.

அந்த திறப்பினை நிகழ்த்த கமல்ஹாசன்களையும், அரவிந்த சாமிகளையும், அஜித்களையும் குணாதிசியங்களாக கொண்டு செய்ய முடியுமா? தன் மண்ணில் ஒரே மாதிரியான வாழ்வுச் சூழலையும், கிடைக்கும் புறச் சூழலையும் கொண்டு ஒருவன் வயக்காட்டிலும், புழுதிச் சாலையிலும் வறுபட்டு கன்னம் வற்றி, உள்ளிழுக்கப் பெற்று, தோல் கறுத்து, முடி சுருண்டு இருந்த நிலையில் வறுமையின் கோரப் பிடியிலிருக்கும் அந்தக் கூட்டத்தினை முன் நிறுத்தும் உடல் மொழியையும், இயல்பிலேயே அப்படியாக உருவ ஒற்றுமையும் கொண்டவரே நிகழ்வின் விபரீதத்தை/அபத்தத்தை நம்முள் இன்னும் ஆழமாக இறக்க முடியும். மாறாக, வயதிற்கு சிறிதும் பொருத்தமற்ற அஜித்திற்கோ, கமலுக்கோ உடலை வருத்தி, கன்னம் டொக் விழ ஆறு மாதம் சாப்பிடாமல் போட்டு, நிறத்திற்கு கருமையேற்றி தன் நடிப்பிற்கு பொலிவூட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

அந்த நிலத்திலிருந்தே ஒரு கதாநாயகனை நல்ல ஒரு படைப்பாளி வெளிக் கொணர முடியும். இப்பொழுது, எந்த திசையில் இந்த கட்டுரை நகர்கிறது என்று உங்களால் விளங்கிக் கொள்ள முடியுமே! கதாநாயகியாகவே நடிப்பிலிருந்து விடைப் பெற்றுக் கொண்டு பணி ஓய்வு பெற்ற திருமதி. சுஹாசினி மணிரத்னம் இரண்டு முறை பொது இடங்களில் ஓர் அபத்தமான வேண்டுகோளை படங்களை இயக்கவிருக்கும் இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கையாக முன் வைத்திருக்கிறார்.

ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும், இப்பொழுது உலக திரைப்பட விழாவிலும் இதே கோரிக்கையை எழுப்பி இருக்கிறார். கோரிக்கை இதுதான்: எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!. இவரின் கோரிக்கையை நாம் வேறு யாரோ ஒரு குடும்பத் தலைவியாக இருந்து சொல்லியிருந்தால் எளிதாக அவரின் அறியாமையை கவனத்தில் நிறுத்தி கடந்து வந்து விடலாம். ஆனால், இவர் உலகச் சினிமாக்களையும், நமது படங்களை பல உலக சினிமா விழக்காளுக்கு அறிமுகப் படுத்தும் பணியிலிருப்பதாக தன்னை முன் நிறுத்தி கொள்பவர்.
இவரிடமிருந்து இப்படி ஓர் அபத்தமான, மேட்டிமைத் தன மேலோட்ட எண்ணப்பாடு கொண்ட இந்த கருத்தாக்கத்தை எப்படியாக எடுத்துக் கொள்வது. இந்த எண்ணம் எத்தனை பெரிய இழப்பை நமது படைப்பாளிகளுக்கும், போராடி வர விருக்கிற மண்ணின் மைந்தர்களான இளம் நடிக, நடிகைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்று அறியாமலேயே இன்னமும் சிவப்புத் தோலு கதாநாயர்களை சிவப்பூத் தோலு கதாநாயகிகளுக்கு அறிமுகப் படுத்தச் சொல்லுகிறார்.

எனக்கு என்ன ஆச்சர்யமென்றால் இது போன்ற ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் எது போன்ற பட ரசனையை கொண்டவராக இருப்பார்? அதுவும் நம் ஊரிலிருந்து வெளி வரும் நல்ல படங்களை அறிமுகப் படுத்த எண்ணும் பொழுது, இது போன்ற சிந்தனை சில நல்ல படங்களையும் வடிகட்டி விட பாதகமாக அமைந்து விடாதா?

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போதே இவரின் அபத்த நகைச்சுவையுணர்வு தாங்கும் படியாக இல்லை. ஒரு கட்டத்தில் சொல்லியிருந்தார் ”இப்பொழுது வரும் கதாநாயகர்கள் எண்ணை வழிந்து கொண்டும், திரையில் எங்கு நிற்கிறார்கள் என்று தடவி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும்,” சொல்லி நகைத்தார். அந்த மண்ணுக்கே உரியவர்கள் வேறு எப்படியாக இருப்பார்கள்? இவர் எந்த காலத்தில் இருக்கிறார்? இன்னமும் எம்.ஜி.ஆரைக் கொண்டு அங்காடித் தெரு கதாநாயகனை ரசிக்க, தரிசிக்க வைக்க. நகைமுரணாக இல்லை! உலகப் படங்களில் இவர் எதனை சிறப்பாக இருப்பதாக எண்ணி, பார்த்து சிலாகிக்கிறார்?

இந்த சிந்தனை எப்படியாக இருக்கிறது என்றால் ராகுல் காந்தி அவர் அப்பனைப் போலவே நல்ல அழகாக சிரிக்கிறார், சிவப்புத் தோலை போர்த்தியிருக்கிறார். ஆதலால், இந்தியாவின் சார்பில் உலக மனமகிழ் மன்றமாகிய ஐ.நா போன்ற இடங்களில் அமர வைத்தால் இந்தியாவிற்கு கெளரதை என்ற கிரமாத்து தவக்களை சிந்தனையாக இருக்கிறது. :))

சுஹாசினி பேசாமல் குழந்தை வளர்ப்பிலும், வாசிப்பிலும் தன் சொச்ச மிச்ச காலத்தை கடத்தலாம். எனக்கு கவலையாக இருக்கிறது. இவர் போன்றவர்கள் தனது இருக்கையை முக்கியமான இடங்களிலெல்லாம் எப்படியோ கிடைப்பதாக ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு இது போன்ற அபத்தமான விஷமத்தனமான சிந்தனைகளை அதுவும் எந்தத் துறைக்காக தான் பாடுபடுவதாக நினைத்துக் கொண்டு தனது உழைப்பை போடுகிறாரோ அதுவே நலிந்து எப்பொழுதும் போல அர்விந்த சாமிகளுக்குள்ளும், கமலஹாசனுக்களுக்குள்ளும் முடங்கிக் கிடக்க வழி கோலுகிறார்கள். எப்படி இவர்களாகவே இதனை புரிந்து கொண்டு தகுந்தவர்களை அங்கே அமர விட விலகி நின்று வழி விடுவார்கள்?

இந்த கணினி யுகத்தில் இவர்கள் போன்றவர்கள் ஒரு முக்கியமான விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். காலம் மிக வேகமாக மாறி வருகிறது. ஒரு தனி நபரின் சிந்தனை கண்டங்களுக்கிடையே கை சொடுக்கும் நேரத்திற்கும் குறைவான நொடிகளிலிலேயே பகிர்ந்து கொள்ளப்பட்டு அந்த சிந்தனை யுனிவெர்சல் நேர்த்தியை அடைகிறது. உங்களின் பழமைவாத, குலக் கல்வி சிந்தனை is an utter flop in the world stage where learnt people are laughing at your blabbering!!

Related Posts with Thumbnails