Friday, February 19, 2010

பதின்ம கால மன டைரிப் பதிவுகள்...

பதின்ம வயது டைரிக் குறிப்பில இருந்து சில பக்கங்கள் அப்படிங்கிற தலைப்பின் கீழே ஒரு வீட்டுப் பாடம் கொடுத்தாக இங்கே சிறுமுயற்சி முத்துலெட்சுமி. சில தொடரழைப்புகளின் தலைப்பை பார்த்தாவே ஹ்ம்ம் நாமும் கலந்துகிடலாமேன்னு ஒரு ஆர்வம் தொத்திக்கும் அதில இதுவும் ஒண்ணு. எழுத கூப்பிட்டாளுக்கு இங்க வைச்சு ஒரு நன்றி சொல்லிக்கிறேன்.

இந்த தலைப்பில ஒரு முரண் இருக்கு என்னயப் பொருத்த மட்டிலும். நான் பதின்மத்தில இருக்கும் போதெல்லாம் ஏற்கெனவே பிரிண்ட் பண்ணி இருக்கிற சொந்தப் புத்தகப் பக்கங்களிலிருந்து மீண்டும் கை ஒடிய ஒடிய வண்டி வண்டியா நோட்டுப் புத்தகங்கள் வாங்கி எழுதித் தள்ளவே அம்மாவை சுரண்டணும். அம்மா, அப்பாகிட்ட போய் நின்னு ஏதாவது கொடுக்கிறத வாங்கிக் கட்டிகிட்டு உபரியா இந்த நோட்டுக்கள் வாங்கித் தர ஒத்துக்க வைக்கிற ஒரு சூழல்.

அப்படி இருக்கும் பொழுது, பள்ளி ஆறோ ஒரு அரசாங்கப் பள்ளி. அங்கே நீந்தி பேர் பட்டு வெளிக் கிளம்பும் காலம் வரையில் எவரும் 'டேய்! டைரின்னா என்னான்னு தெரியுமாடா, அத எப்படியெல்லாம் பயன்படுத்திக் கணுமின்னாவது தெரியுமாடான்னு' கேக்கிற அளவில இருந்த மாதிரி ஆசிரிய/சியைகளும் என் ஞாபக ரேடாருக்கு முன்னாடி துளாவிப் பார்த்தாலும் தெரியவில்லை. இது போன்ற ஒரு வளர்ப்புச் சூழலில், டைரிங்கிற ஒரு விசயமே 17 வயசு வரைக்கும் எட்டிப் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கவில்லைன்னு நான் சொல்லி இனிமே நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலையில் இருக்க மாட்டீங்கன்னு தெரியும்.

இருந்தாலும் மண்டைக்குள்ளர இருக்கிற அந்த அளவற்ற நோட்டுப் புத்தகங்களில் பொதிஞ்சு போன பச்சை தாள்களிலிருந்து சிலதை அப்படி விசிறிக் காமிப்பது சிலருக்கும் எனக்கும் தேவைப்படலாங்கிறதாலே... நாலு நாளா இப்படி ஒரு விசயத்தை ஏத்துக்கிட்டமே என்ன எழுதலாம்னு எண்ணியபடியே உள்ளரே தூக்கிப் போட்டுட்டு அப்படியே அப்பப்போ மிதந்து வார விசயங்களின் மீது கொஞ்சம் பார்வையை பட்டுப் படாமல் தடவ விட்டு திரும்பவும் காணாம அடிச்ச படியே நாட்கள் நகர்ந்துச்சு.

இதெல்லாம் எப்படின்னா மறு அசை போடுவது மாதிரிதானே! கிடைக்கும் போது வேக வேகமாக இந்த கால்நடைகள் எல்லாத்தையும் உள்ளே வைச்சு அடைச்சிட்டு பின்பு ஓய்வில் இருக்கும் பொழுது எடுத்து மறு அசை போடுவது போல. என்னுடைய பதின்மத்தின் வழியாக கிடைத்த அனுபவ சேகரிப்புகளை எடுத்து அசை போடுவதில் அப்படி ஒரு கடினம் இருந்து விட முடியாது. ஏனெனில் ஆழமாக உராய்ந்து போன விசயங்கள் அது எதன் பொருட்டு ஆனாலும் பசுமையாக ஓர் ஓரத்தில் படிந்தே கிடக்கும் என்ற நம்பிக்கையில் அமர்ந்தே விட்டேன் இன்று முங்கி எடுக்க.

இந்த பதின்ம வயதினூடாகத்தானே வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும், முரண்களையும், சமூக கட்டமைப்புகளையும் ஓரளவிற்கேனும் வயதிற்கு ஒன்றாக அறிந்திருக்கக் கூடும். வாழ்வின் எதிர்மறை செயல்களான சுயநலமும், பொறாமைக் குணமும் வார்த்தெடுக்க பயன்படுத்தப் போகும் பட்டறையெனவும், ஒரே குடும்பமாக ஒற்றை மின் விசிறிக்கி கீழே காலம் சுழற்றி அடித்து திசைக் கொருவராக பல்லாங்குழி ஆடப்படப் போகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் உண்டு களித்து ஓட்டுக் கூரையைப் பார்த்தபடி ஏதேதோ பேசிக்கொண்டு உறங்கிப் போன ஒரு அன்பால் பிணைந்த கூட்டம். ஒரே சிந்தனை, மன ஓட்டம் என அன்பைத் தவிர அங்கே பகிர்ந்து கொள்ள வேறு ஒன்றுமில்லை என்றமைந்த குடும்பமைப்பு. வாழ்வின் அருமை உணர்த்தவென அமைந்த பதின்ம படி நிலைகளவை. இவைகளை இன்னதென்று அறிந்து, அதனை முழுமையாக புரிந்து இது போல ஒரு நாள் தலைகீழாக நின்றாலும் அது போன்ற ஒரு காட்சி இன்று கிடைக்காதென நினைந்து வாழ்ந்திருக்கக் கூடிய அறியாப் பருவமும் அந்த பதின்மம் தானே.


ஊசித் தட்டானாக சிறகடித்து காணாங் கோழியாக நாள் முழுக்கவும் இங்குதான் செல்கிறோம், இதுதான் எங்களுடைய இன்றைய மிஷன் என்று சொல்லி தீர்மானித்துவிட முடியாதபடிக்கு அமைந்த தினப்படி நண்பர்களுடனான கேளிக்கை விளையாட்டுக்கள் தான் எத்தனை. பரிணாமத்தில் வேட்டையாடி பிழைத்து இன்று மனிதர்களாக காட்டிக் கொள்ள எத்தனிக்கும் மனிதர்களுக்கிடையே இருந்து அப்பவே விட்டு விலகி மணிக் கணக்காக வேலி ஓணான்களையும், சிறு வகை வேலிப் பறவைகளையும் தேடி திரிந்த காலமது. மண்டை உடைதல்களும், சிறு சிறு வீரத் தழும்புகளுமென உடலெங்கும் காயங்களால் எழுதிக் கொண்டதும் அதுவே சுவடுகளாக தன் பதின்மம் சுட்டும் கையேடு என்றறியாமல் எழுதி தீர்த்ததும் அதே பதின்மத்தில்தானே.

காதலுக்கென பள்ளி நண்பி ஒருத்தியின் வீட்டுப் பாட நோட்டை கெஞ்சி அடித்து வீட்டுக்கு வாங்கி வந்து அச்சு பிறழாமல், அவள் எழுத்துகளில் போடும் சுழிப்புகளின் அழகில் மயங்கிய நேரம் போக அந்த நோட்டு/புத்தகங்களுக்கு, எதிர்த்த வீட்டில் சினிமா கொட்டகையில் வேலை பார்க்கும் ஒருவரிடம் அழகான சினிமா போஸ்டர் வாங்கி அதில் எனது பதின்ம வயதுக் காதலை குறியீடாக காட்ட அட்டை போட்டு கொடுத்தனுப்பி எனது வேதிய உடற் செயற்பாடுகளை அறிந்து கொள்ள உதவியதும் இந்தப் பதின்மம்தான்.

பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பள்ளிகளின் மீதான வெறுப்பு அப்படியே இங்கும் தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது. பள்ளி சென்ற நேரத்தில் சக நண்பர்களுடன் புழங்கிய நேரம் போக பள்ளி கட்டடத்தின் வேலிகளுக்குள் ஒரு வேற்றுக் கிரக வாசியாக தடித்த தோல்களுடனும், வெம்பிய மனதுடனும் சிறைப் பறவையாக திரிந்திருக்கக் கூடுமென்று இப்பொழுதும் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. மாலை வேலையில் எனக்குப் பிடித்த நண்பர்களுடன் வரும் வழியில் செய்யும் அட்டகாசங்கள் அந்த எட்டு மணி நேர வாசனையை துடைந்தெறிந்து நாளைய நோக்கிய எதிர்பார்ப்பை விதைத்து அந்த மன நிலையை கடக்க வைத்திருக்கிறது. இப்பொழுது நிதானமாக நின்று யோசித்தால் அது யார் மீதான தவறு என்பது கொஞ்சமே விளங்குகிறது.

இதுவரையிலுமே கவனித்திருக்கக் கூடும் பள்ளிப் புத்தகங்களை தவிர்த்து பிற விசயங்களை படிப்பதற்கான ஒரு புறச் சூழல் அமையா வாழ்வமைப்பு என்பதனை. இருப்பினும் அப்பாம்மாவின் உறுத்தலற்ற வாழ்வியல் சூத்திரங்களான, தனித்துவம் பேணல், தனி மனித மனச் சுதந்திரத்தின் அவசியம், விரும்பிய அளவில் சுதந்திரமாக விட்டுத் திருப்புவது, எனக்கும் அப்பாவிற்குமான இயல்பான நட்பு முறை - கடைசியாக பள்ளி இறுதியாண்டில் "தம்பீ, தோலுக்கு மேலே வளர்ந்திட்டே, நண்பன் மாதிரிதான் இனிமே பாவிக்க முடியுமென்ற அந்த பண்பான வார்த்தைகளும்," யார் ஏதாவது என்னைப் பற்றி அப்படி இப்படிக் கூறினாலும் "அவன் அப்படி செய்திருக்க மாட்டானே"ங்கிற இன்றளவும் உள்ள அம்மாவின் அசாத்தியமான நம்பிக்கையும் கூடுதல் பொறுப்பை என்னிடமே வழங்கிவிட்டது. அன்று தொடங்கிய வாழ்வியல் பாடம் அந்தப் பட்டறையில் பயின்ற எனக்கு இன்றளவும் தோல்விக்கும்/வெற்றிக்குமான முழு பொறுப்புகளை நானே முகம் கொடுத்து யார் மீதும் விரல் நீட்டும் கெட்ட பழக்கத்தை பழகிக் கொள்ளாதவாறு பார்த்துப் பழகிக் கொண்டதும் அந்தப் பதின்மத்தில்தானே.

அப்பாவின் அந்தப் பண்பு நிலையும் அம்மாவின் பொறுப்புணர்வும் ஒரு கலவையாக என்னுள் இறங்க 15 வயதிற்குப் பிறகு பள்ளியில் கொஞ்சம் ஈடுபாடு கூடிக்கொண்டது. அதற்கு என்னைச் சுற்றி அமைந்த சமூக மக்களின் அழுத்தமும் ஒரு காரணமாக அமைந்து போனது. இருப்பினும் அங்கும் என் விருப்பப்படியே கணக்குப் பாடங்களுக்கு ஒளிந்து உயிரியல் பிரிவை தேர்ந்தெடுத்ததும் அதற்குத் துணையாக வீட்டில் உள்ளவர்களின் "கணக்குப் போட்டுப் பாடங்களை" தேர்ந்தெடுக்க வைக்கும் குறுக்கீடுகளும் இல்லாமல் போக படிப்பு விசயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த உதவியாக இருந்தது.

அதுவே பின்னாளில் காடுகண்டிக் கழுதையாக மேற்கு மலைத் தொடர்களில் சறுக்கித் திரியும் வாய்ப்பையும் பெற்று, இன்றும் பொருளாதார ரீதியில் பெரிய அளவில் சாதித்துக் காட்ட முடியாதெனினும் மனசிற்கு நெருக்கமாக எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை திருப்பிக் கொள்ளும் அந்த திசை திருப்பும் துடுப்பை என் கையிலேயே அமைத்துப் பார்க்கும் அளவிற்கு அந்தப் பதின்ம வாழ்வுப் பட்டறை சுதந்திரத்தை கொடுத்துப் பார்த்தது.

அதுவே பள்ளிகளில் இருந்த போதும் சரி, கல்லூரிகளின் தொடக்கத்தில் ஆரம்பித்த பதின்மத்தின் இறுதி நிலையிலும் சரி உடை அலங்காரங்களில் கொஞ்சம் வித்தியாசமாக தலைக்கு எண்ணெய் வைக்காமல் நீண்ட கேசத்துடன் போவதற்கும், குத்தூசி போன்ற ஒடிந்த தேகம் உடையவனாகினும் கை வைக்காத செய்தித் தாள்களை ஒத்த டி-ஷர்ட்கள் அணிந்து செல்வது என நீண்டது. அப்பொழுதெல்லாம் வகுப்பு ஆசிரியர்கள் மீண்டும் வீட்டுக்கு அனுப்பியோ அல்லது வார்னிங் கொடுத்து மீண்டும் மற்றவர்களுடன் சேர்த்து கொள்வது வரைக்குமான தனித்துவம் பேணலாக தொக்கி நிற்கிது ;-).

இன்றளவிலும் 'தெக்கிக்காட்டான்' பெயர் வைத்துக் கொள்வது வரைக்குமாக தொடர்கிறது. அதற்கும் இதற்குமான வயது வித்தியாசம் 21 வருடங்கள். எனினும், இன்னும் சில பேருக்கு நம்பிக்கை இருக்கிறது நான் ஒரு தண்ணியில் வெந்துவிடுவேன் என்று. பார்ப்போம். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்று;-) .

கூட்டிக் கழித்து எனது பதின்மத்தை திரும்பிப் பார்த்தால் வாழ்க்கை எனக்கு குறைவில்லாமல் அந்த கூர்மைத் தீட்டல்களுக்கான ஆயத்தங்களை வாழ்வுச் சாலையின் இரு மருங்கிலும் வஞ்சகமில்லாமல் காட்சியகப் படுத்தியே வந்திருப்பதாய் இன்று மெல்ல மறு அசை போடும் பொழுது என்னால் உணர முடிகிறது.


இத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது...

தருமி

காட்டாறு

மீன்துள்ளியான்

செல்வநாயகி

Wednesday, February 17, 2010

அன்னியமுணர்ந்த ஒரு பொழுதினில்...





மகளின் உச்சி முகர்ந்து
வழிந்தோடிய கண்ணீர் மறந்து
முடிக் கற்றைகளினூடாக
கன்னத் திட்டுக்களில்
உதடு பதிக்க
முயன்ற பொழுதினில்...
கண்ணீரின் உப்புச்சுவை நாவறிய
மகளென்றும் பாரா துதறி
அனிச்சையாக எனை மறந்த
ஒரு பொழுதினில்
நானும் புத்தனானேன்
மனைவி மக்கள் துறவாமல்...

நொடிநேர சுயகொப்பளிப்புகள்
உறவின் முண்டுகளில்
வலிமுட்களேற்றும் ரணங்களறிவதில்லை!

Sunday, February 14, 2010

எங்க ஊரிலும் வெள்ளை மழை: Snow Photography

கடைசியாக சொல்லிக்கிற மாதிரி வெள்ளை மழை பெய்தது அட்லாண்டாவில் 2001ல் தான். அப்பொழுது கிட்டத்தட்ட ஒரு அடிக்கும் அதிகமாக பொழிந்தது. அதுக்குப் பிறகு இப்போதாங்க ஓர் ஒண்ணரை நாள் கிடப்பது போல 6 இஞ்சிற்கும் மேலாக வெள்ளி மதியம் தொடங்கி நள்ளிரவு வரையிலும் பெய்தது.

சனிக்கிழமை காலையில எழுந்தவுடன் முதல் வேலை எனக்கு வேணுங்கிற மட்டும் புகைப்படங்கள் தட்டிக்கிறதுதான். அவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கும். கோடை காலம் வரப் போகுது பாருங்க, கொஞ்சம் குளு குளுன்னு இருக்கட்டுமேன்னுதான் ;-).


கிடைச்ச இரவு ஒளியை பயன்படுத்தி...


என் கூடு இருக்கும் வீதி - நிறத்தை வைத்து தெக்கி வீட்டை கண்டுபிடிச்சிக்கோங்க :) : ஒளியின் விளையாட்டை கவனிக்க ஆரம்பிங்க...


உடையணிந்து அழகு பார்க்கும் நேரத்தில் பிழம்பு கொண்டு உருக்கிப் பார்க்க ஆசைப்படும் சூரியன்...



நீல நிற வானத்திற்கு வெள்ளை வண்ணம் அப்பிப்பார்க்க எத்தனிக்கும் மரத்தூரிகை...



ஒளியின் விளையாட்டு...



மேலும் ஒளியின் வர்ணஜாலம்...



மோதிரம் அணிந்து கொண்ட நிலையில்...



எங்களுக்கும் கை உறை பூட்டிப்பார்க்க ஆசை அதான்...




பி.கு: வெள்ளை மழை பொழிகிறது என்று கூறியவுடன் எனக்கு நிறைய புகைப்படங்கள் வேணும்னு கேட்டு என்னய உற்சாக கோதாவில இறக்கி விட்ட என் தம்பீ மீன்துள்ளியானுக்கு ஜில்லுன்னு இந்தப் புகைப்படங்களை கொடுக்கிறேன்... :)

Monday, February 08, 2010

மதுரை "குழந்தைகள் மன நலப் பேணல்" நிகழ்ச்சி சார்ந்து...

சமீபத்தில் என் பக்கத்து ஊரான மதுரையில் நமது வலைப்பதிவு நண்பர்கள் ஒரு முக்கிய கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்று நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இது போன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மென்மேலும் பல நிலைகளை எட்டி வளரட்டும் என்ற வாழ்த்துக்களுடன் இந்தக் கட்டுரையை அவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர். ஷாலினி அழைக்கப்பட்டு 'குழந்தைகளின் மனநலம் பேணும்' பொருட்டு ஒரு விழிப்புணர்ச்சியூட்டும் வகையில் அமைந்த பேச்சும், கேள்வி - பதில் நேரமுமாக ஆக்கப் பூர்வமாக அந்த நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டதாக பல பதிவுகளை படிக்கும் பொழுது உணர முடிகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மேலும், மேலும் பல இடங்களில் எடுத்துச் செல்லப்படுவதின் அவசியமும் அதன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே பல மாவட்டங்களில் வாழும் வலைப்பதிவர்கள் ஒன்று கூடி அவரவர்களின் மாவட்டங்களில் நடத்தினால் இன்னும் சிறப்பாக பரவலாக விசயம் சென்றடையக்கூடும்.

இந்தக் கட்டுரையின் மூலம் நான் முன் வைக்க விரும்புவது ஒரு பார்வையாளனின் நோக்கிலிருந்தும், ஒரு தகப்பனுக்கே உரிய சில அடிப்படை சந்தேகங்களாகவும் அதன் பொருட்டு எழுந்த சில ஐயப்பாடுகள் என கலந்து கட்டியாக முன் வைக்கிறேன். அது போலவே படிப்பவர்களும் புரிந்து கொண்டு, முடிந்தால் அதற்கான ஆலோசனைகளை இங்கு கலந்துரையாடலாம்.

இந்த மதுரை கருத்தரங்கில் டாக்டர்.ஷாலினி வழங்கிய பேச்சின் படி, நமது சமூகத்தின் இறுக்கத்தினை கருத்தில் கொண்டு அவரும் குழந்தை வளர்ப்பின் எல்லா அத்தியாவசிய விடயங்களையும் அம்மாவிடமே கொடுத்ததினைப் போன்று நான் படித்த கட்டுரைகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. இது எந்தளவிற்கு என்றால் பெண் குழந்தைகளின் அப்பாவும் ஒரு சராசரி ஆண்தான் அவரிடம் அவர் பெற்ற பெண் குழந்தைகள் கூட கவனமாக இருக்க வேண்டும் என்பதனைப் போல எனக்கு விளங்கிக் கொள்ள முடிந்ததாகப்பட்டது. இது நான் கேட்டு வளர்ந்த ஒரு சொல்லாடல் "பஞ்சையும், நெருப்பையும் தள்ளி தள்ளித்தான்" வைச்சுப் பார்க்கணுங்கிற அதே மனவோட்டத்தில் பொருந்திப் போனது.

இந்த அணுகுமுறையேதான் ஒரு தகப்பனும் ஒரு சராசரி ஆணாக நடந்து கொள்வான் என்கிற ஒரு தவறான கண்ணோட்டத்தை தன் பெற்ற பெண் குழந்தைகளிடத்தே கூட விதைத்து, ஒரு சந்தேகப் பார்வையுடனே ஆண்களை அணுகக் கூடுமென்ற கருத்தோட்டத்தில் என்னுடைய சிந்தனைகளாக வந்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அப்படியே அந்தப் பெண் குழந்தையும் அதே மனவோட்டத்தில் வளர்ந்து வந்தால் அது ஓர் ஆரோக்கியமற்ற வளர்ச்சியாக அமைந்து விடக் கூடும்தானே! அப்படியாக ஆண்களை விதி விலக்காக விலக்கியே வைத்து ஒரு சமூகம் இயங்குமாயின், ஆண்கள் அங்கே 'முரடர்களாகவே' சித்தரிக்கப்படும் அபாயமிருப்பதால், தினசரி வாழ்க்கையிலும் இரு பாலரும் அவ்வாறே ஏற்றுக் கொண்டவர்களாகிவிடுகிறோம். ஆண் என்பவன் சபலத்தினூடாகவே வாழக் கூடியவன், பெண்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டுமென்றும், ஆண்கள் அப்படியே தவறாக புரிந்து கொண்டதை, சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தும் காலம் தோறும், அவர்கள் அப்படித்தான் என்ற நியதி இருப்பதால் மென்மேலும் 'நல்ல' பக்குவத்தை வளர்த்துக் கொள்வதனைத் தவிர்த்து மனம் போன போக்கில் வாழ்வதற்கான ஒரு சமூக வாய்க்காலை வகுத்து கொடுத்ததாக ஆகிவிடாதா?

எனக்கு மேற்குலகில் வாழ்ந்து பார்க்கும் ஒரு வாய்ப்பு கிட்டியதால் பல விசயங்களில் எனக்கு சமமாக பங்கு எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமைந்திருந்தின. மகப்பேறுவிற்கு முன், கர்ப்பா கால நலம் பேணல், எப்படி மகப்பேற்றில் ஆணும் பங்கெடுப்பது போன்ற வகுப்பில் கலந்து கொண்டது, அதனைத் தொடர்ந்து மகப்பேறுவின் போது மருத்துவருடன் உள்ளேயே இருந்து டெலிவரி பார்க்கும் வாய்ப்பும், பெண் குழந்தையாக இருந்தும் இன்றும் டயபர் மாற்றுவது, அவளை குளிப்பாட்டும் வாய்ப்பு என பட்டியல் நீண்டு கொண்டு இருக்கிறது...


அது போன்று இங்கு வருவதற்கு முன்பாகவே நம்மூரிலும் நன்கு கற்றறிந்த பல அறிஞர்களின் வீடுகளுக்குள் புழங்கும் /செல்லும் வாய்ப்பையும் பெற்றிருந்ததால் அவர்களும் எப்படி குழந்தை வளர்ப்பில் வாஞ்சையோடு மேற் சொன்ன விசயங்களில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள் என்று காணும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றேன். முழு மூச்சாக அவர்கள் ஏன் அப்படி வாழ்ந்தார்கள் என்றால், அதன் ஊடாக ஒரு முழுமை கிடைத்திருக்கக் கூடுமென்று இன்று என்னால் உணர முடிகிறது.

அவ்வாறாக குழந்தை வளர்ப்பில் பங்காற்றி அதன் வளர்ச்சியுனூடாக வளர்ந்து வரும் பொழுது எப்படி ஒரு நாள் திடீரென்று அன்னியப் பட்டு விடுகிறேன்; அதே பெண் உடலுக்கு உபாதையென்று நிகழும் கணத்தில்? ஆண் குழந்தையாயினும், பெண் குழந்தையாயினும் நல்லதொரு நண்பகச் சூழலில், ஆரோக்கியமானதொரு வளர்த்தெடுப்பின் பொருட்டு எதையும் பேசும் ஒரு நிலையை முழுமையாக இரு பெற்றோர்களும் அமர்ந்து பங்கெடுத்துக் கொள்ளும் சூழலில் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களை நல்ல நண்பர்களாக எடுத்துச் செலுத்தும் ஒரு நிலைக்கு உயர்த்தாதா?

யாரையும் அங்கே விலக்கி வைத்து மர்ம வகுப்புகள் எடுத்து இது பெண்கள் விசயம், ஆண்களுக்கு அவசியமில்லையென்று ஒரு மாதாந்திர உபத்திரவத்தை பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு கூட கூனிக் குறுகும் போது பார்வைகள் கடலளவு விலகிப் போய்விடக் கூடிய அபாயமிருக்கிறதே. அதே போன்ற ஒரு "விலக்கி" வைக்கப்படும் நிலையே பின்னாளில் பல தர்ம சங்கடமான நெளிவுகளுக்கு வழிவகை செய்து கொடுத்துவிடாதா? உதாரணமாக இன்னமும் கடைகளுக்குச் சென்று பெண்கள் ஏன் 'சானிடரி நாப்கின்' என்று கேட்டு வாங்குவதற்கு கூட கூச்சப் படும் நிலை? இந்தக் கல்வி எங்கிருந்து தொடங்கப் பட வேண்டியதாக இருக்கிறது?

பெற்ற பிள்ளையையே எப்படி வக்கிரத்துடன் பார்க்கும் நிலைக்கு ஒரு மனிதன் தள்ளப்படுகிறான்? அப்படியாகின் அவனுடைய மன உலகம் எதனை ஒத்தது? அப்படியாக காணும் பட்சத்தில் அந்த மன ஓட்டத்திற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? ஒரு சமூகமாக நிறைய மக்கள் அது போன்று வெளிப்படுவாராயின் எந்த நிலையிலிருந்து அது போன்ற மன வோட்டத்திற்கான காரண காரியத்தை அணுகுவது? சபலம் என்பது மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும் என்ற அளவுகோல் சமம் என்றால், அதீதமாக பாரபட்சமின்றி ஒரு சமூகத்தில் வெளிப்படுமாயின், அந்தக் குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கையில் முழுமையே கிட்டாமல் இன்னும் ஏதோ மிச்சமிருப்பதாகவும், எதனையும் முழுமையாக அனுபவிக்காததும் ஒரு காரணியாக அமைந்திருக்கக் கூடலாமல்லவா? அது குழந்தை வளர்ப்பில், கணவன்/மனைவி பரஸ்பர இல்லற வாழ்க்கையில், அல்லது கல்வியூட்டும் முறையிலென எதுவுமே சரிவர, முழுமையாக உட்கிரகிக்கப் படவில்லையென்பதால் இது போன்ற சம்பவங்கள் பரவலாக நடந்தேறவும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கக் கூடலாமல்லவா?

எனவே, இது போன்ற அடிப்படை மனத் தடங்கள்களிலிருந்து ஒரு சமூகமாக மேலெழும்ப வேண்டுமாயின் குடும்பப் பொறுப்புகளில் யாரையும் விலக்கி வைக்காமல், டயபர் லெவலுக்கு மாற்ற விடுவதே சிறந்த வழியாக இருக்க முடியும். அந்த நிலையிலிருந்து குழந்தைகளும் வளர்ந்து வரும் பொழுது எந்த ஒரு மனத் தடையுமில்லாமல் அப்பா/அம்மா இரு பாலருக்கும் நல்ல நண்பர்களாகிப் போனால், அங்கே உரையாடலுக்கு எந்த ஒரு தடையும் இருக்க முடியாதுதானே! ஆண் குழந்தைகளுக்கு அம்மா ஒரு முதல் சிறந்த பெண் நண்பியாகவும், பெண் குழந்தைகளுக்கு அப்பா ஒரு முதல் சிறந்த ஆண் நண்பனாகவும் அமைந்து போகும் பட்சத்தில் வெளிப்புற உலகத்தை அந்தக் குழந்தைகள் மிக நேர்த்தியாக எதிர் கொள்ளுமென்றே நம்புகிறேன்.




பி.கு: இது எங்குமே சேற மறுக்கிறது என்பதால் தனியாக இணைக்கிறேன்..... >>டாக்டர் பேசிய இடம் வேறு மாதிரியான கூட்டம் என்பதால் அங்கு சொல்லப்படும் கருத்து மிகச் சரியாக சென்றடையும். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தகப்பனை ஒரு புதன் கிரகவாசியாக பார்ப்பதற்கு ஒரு சாதா மக்கள் பேசிக் கொள்ளும் பாங்கிலேயே இங்கும் அந்தக் கருத்தோட்டத்தை முன் வைக்க முடியும். அப்படியாக, "பஞ்சையும், நெருப்பையும் தள்ளி தள்ளித்தான்" என்று எடுத்துக் கொள்ளும் தருணத்தில் பெண்களும் அதனையே எதிர்காலத்தில் நடை முறை படுத்தப் போய், அது தவறான புரிதலாக கணவனுக்கும் மனைவிக்குமிடையே அமைந்து போகாதா?

உ.தா: கணவன் தன் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார், அந்தச் சொல்லாடல் புரிதலின் பொருட்டு அந்த வீட்டின் தாய், முறைக்கு ஒரு முறை வந்து எல்லாம் சரியாகவே போகிறது என்று கண்காணிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடாதா? தவறாக புரிந்து கொண்ட சூழ்நிலையில்...

Tuesday, February 02, 2010

சாய்நோக்கு



கறுகறுவென்ற புடைத்து வீங்கிய
மழை மேகங்கள்
தன் அடிமடியை திறந்து தன்பாரம்
இறக்கிகொண்ட சாயங்காலத்தின்
பின்பகுதியில்
கதிரவன் பொன்நிறத்தை
அப்பியபடி
சேறுகள் நிரம்பிய சந்தைக்கடையின்
உரங்களேதும் ஏற்றப்படாத
சாலை ஆப்பிள்களை
அழகற்றதாக படைத்துக்காட்ட
விலகியபடியே நடந்து
நியான்விளக்கு சுண்டியிழுக்க
விட்டில் பூச்சிகளாக
நிறமேற்றப்பட்ட ஆப்பிள்களை
விரும்பிக்கொய்யும்
ஆழ்மனம் படிக்கத்
தெரியா மனிதம்!

Related Posts with Thumbnails