Tuesday, April 16, 2013

கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - II

இது டந்த நேர்காணல் பதிவின் தொடர்ச்சி. நிறைவுப்பகுதி!


கவிதா:- நீங்கள் நிறைய படிக்கிறீர்கள் என்று தெரிகிறது..எனது தூசி தட்டப்பட்ட நூலகம்.... இதை தவிர உங்களின் பொழுதுபோக்கு...

தெகா: நிறைய மேய்ஞ்சேன்னு ஒத்துக்க மாட்டேன். ஆனா, அதன் பாதையில் செல்வதற்கு இன்னமும் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்னு வேணா சொல்லலாம், அந்தப் பாதையில் இருப்பதுனாலோ என்னவோ குறைவாகவே இங்க எழுத முடியுது :). மற்றபடி ஏனைய பொழுது போக்குன்னா, பிடிச்சவங்களோட நீண்ட நேரம் கடலை வறுத்து புகையை கக்க வைப்பது; அப்பாம்மா, துணைவி, பிடித்த நண்ப/பிகள் கூடன்னு. நான் ஆர்வமூட்டக் கூடியது என்று நினைக்கிற விதத்தில் அமைந்த சில பதிவுகளையும், என்னோட சொந்த கிறுக்கல்களையும் அவங்கள வம்படியா பிடிச்சு உட்கார வைச்சி, அவங்க நான் வாசிக்கிறதை கேக்கும் பொழுது கஷ்டப்படுவதை பார்த்து ரசிப்பது.

மேலும் பிடியளவே உள்ள நண்பர்கள் கூட அப்பப்ப அரட்டைக் கச்சேரி நடத்துவது. பிறகு என் குழந்தைகள், அதிலும் குறிப்பா இப்பொழுது என்னய ஹை டிமாண்டில் வைத்திருக்கும் 1 வயது பெண் புதுசு, புதுசா நானே வடிவமைத்து வாய் தாலத்தில் மெட்டிசைச்சு போடும் குத்தாட்டாம் அவளிடத்தே ஹிட்டாகி சூடு பிடித்திருப்பதால் # 6ல் கூறியபடியே ரீ-சார்ஜ் போட்டுக் கொள்வதில் இதுவும் கொஞ்சம் கூடவே எனக்கு உதவுகிறது. ட்டி.வியில் பொழுது போக்குன்னா டாகுமெண்டரிகள் பார்ப்பது.

கவிதா:- உங்கள் சொந்த ஊர், அதன் சிறப்பு, வெறுப்பு ஏதாவது.

தெகா: என்னோட சொந்த ஊர் கரம்பக்குடிங்க. புதுக்கோட்டையிலருந்து பேருந்தில் புழுதி பறக்க ஒரு 40 கிலோமீட்டர் பயணம் செய்தால் பட்டுக்கோட்டைக்கு போகிற வழியில் உள்ள ஊர். அந்த ஊருக்கே இன்னமும் தன்னை எந்தப் பக்கம் சேர்த்துகிறதுன்னு தெரியாம முழிக்கிற ஒரு கிராமமுமல்லாத சிறு டவுனுமல்லாத ஊர் 12,500 மக்களோட. என் சொந்த ஊரைப் பற்றி சொல்லிக்கணுமின்னா என்னோட டீனேஜியத்துப் பருவம்தான் நான் அங்கே வயசுக்கு வந்தது ;), நண்பர்களோட பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு மீன் பிடிச்சு விளையாண்டது.

நாவற்பழம் பறிக்க ஐந்து கிலோமீட்டர் மிதிவண்டி அழுத்தி மரத்திலயே குரங்குக் கணக்கா நாள் முழுக்க தொங்கிறது இப்படி எத்தனையோ மனசில பசுமையா இருக்கிற ஞாபகங்கள். இப்போ எனக்கு அங்கே ஒண்ணுமே இல்ல. என்னோட அப்பாம்மாவை தவிர்த்து சொல்லிக்கிற மாதிரின்னு இருந்தாலும், இன்னமும் ஊர் மேல ஒரு இனம் புரியா காதலுண்டு.

வெறுப்புன்னா - மக்கள் ஆசையை மட்டுமே நிறைய சுமந்துட்டு ஆனா உழைக்காம சாப்பிட நிறைய பேர் ரெடியா இருக்கிறதுனாலே நிறைய பொறாமையை மட்டுமே ஊர் சுவாசிக்க காற்றாக உற்பத்திதிட்டு இருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. மேலும் இயற்கையின் பொருட்டு கடந்த கால பசுமை மறைந்து எங்கும் ஒரே கள்ளிக்காடா மாறிட்டு இருக்கிறது. அதனைப் பற்றி கவலைப் படாமல் மென் மேலும் எல்லா நிலங்களிலும் யூகாலிப்டஸ் மரக் கன்றுகள் நடுவதும், வீடுகள் பெருகி நியுயார்க் மான்ஹட்டன் ரேஞ்சிக்கு நிலத்தின் விலை எகிறிவருவதும் எரிச்சல்.


கவிதா : பதிவர் சந்தோஷ் எப்போது உங்கள் பெயரை எழுதினாலும் "தோசை தெகா" என்று எழுதிகிறார். அதனால் நீங்கள் சமையல் செய்வீர்கள் என்று அறிவேன். சமையல் என்பது இந்தியாவை பொறுத்தவரை பெண் என்று தான் இன்றளவும் இருக்கிறது. பற்றாக்குறைக்கு நம் மீடியாக்கள் சமையல் என்பது பெண்ணுக்கு மட்டுமே சொந்தம் போல் குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்து மனதில் பதியவைத்து விடுகின்றன. இதைப்பற்றி உங்களின் கருத்து.

தெகா: "தோசை தெகா" அட இது வரைக்கும் எனக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறதை சொல்லவே இல்லை. சந்தோஷ், கொஞ்சம் எட்டாம தூரத்திலதான் இருந்து போனாரு இல்லன்னா பாவம் அந்தாளை வைச்சே என்னோட எக்ஸ்பெரிமெண்ட் சாப்பாட்டு வகைகளை அவர் மேல வைச்சு ஒரு ஆராய்ச்சியே நடத்தி முடிச்சிருக்கலாம். அவருக்கு ஒரு சட்னி பண்ணினேன் பாருங்க, அப்படி ஒரு சட்டினியை எங்குமே சாப்பிட்டுருக்க வாய்ப்பே இல்லை. சமையலறையில் இருந்த அந்தனை முந்திரிப் பருப்பிலுருந்து, நிலக் கடலை, பொட்டுக்கடலை வரைக்கும் போட்டு ஒரு பஞ்ச் பண்ணி சட்டினியென படைத்தேன், தோசை கடைசியில எனக்கே கிடைக்கலங்க :)).

இந்த சமையல் விசயமாங்க, அது எல்லாம் தானாகவே செய்ய வந்துடும் ஏன்னா பசின்னு ஒண்ணு இருக்கில்ல, அப்படி அதுபாட்டுக்கு வரும் பொழுது யாரும் செஞ்சுப்போடன்னு ஆள் பக்கத்தில இல்லைன்னா தானாகவே தடபிபார்க்கிற மனசு வந்துடும். ஆனா, நம்மூர் சூழ்நிலையில் அதுக்கான அவசியங்களை பெரும்பாலானவர்கள் உருவாக்கிக் கொள்வதில்லை. நம் சமூகத்தில் அதற்கான அவசியமும் ஒரு நாள் வருமென்பதனை உணர்த்துவதுமில்லை. ஆனால், சமையல் என்பது என்னயப் பொறுத்த மட்டில் ஒரு அல்டிமேட் அன்பைக் காட்டும் ஒரு போர் கொல்லை. அங்கே வைத்து எல்லாவற்றையும் சரிசெய்து விடலாம் என்பதேயது! என்னோட மேற்கு மலைக்காடுகளின் தங்கலின் போது, எனக்கு இந்த சமையல் விசயம் ஒரு சர்வைவல் விசயமாத்தான் என்னிடம் ஒட்டிக்கிச்சு . அங்கிருந்து கற்றுக் கொண்டது ரொம்பவே கை கொடுத்தது இங்கு வந்து என் சமையல் கைவரிசையை பல இனமக்களிடம் காமிச்சு ஆஹா, ஒஹோ பட்டம் வாங்க. இருந்தாலும், நம்ம ஆட்கள் இந்த அனுபவத்தையும் ரொம்பவே மிஸ் பண்றாங்க, கமல் மட்டும் படங்களில் அப்பப்போ செஞ்சு காமிப்பார், வாஞ்சையோட...

ஆனா, இப்போ என்னயும் உட்கார வைச்சி சமைச்சுப் போட ஒரு ஆள் வந்தாச்சு. ரொம்ப சுகமாத்தான் இருக்கு. அப்படியே பழகிட்டா நானும் அதே குட்டைதான் :). இன்னொன்ன நல்ல கவனிச்சுப் பார்த்திங்கன்னா, சமையற் கலை வகுப்பிற்கும் சரி, எந்த மாதிரி உணவு விடுதிகளா இருந்தாலும் சரி பெருமளவில் சமையலில் ஈடுபட்டுருப்பது ஆண்கள்தானே? அது என்னாமாதிரியான முரணுங்க, அது.


கவிதா: பெண்' மாதவிடாய் இருக்கும் போது வீட்டில் தனியாக உட்கார வைப்பது, கோயிலுக்கு அனுமதிக்கப்படாததற்கு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கின்றன். அதற்கு நீங்கள் உடன்படுகீறீர்களா?

தெகா: அது என்னங்க "பெரிய மருத்துவ சம்பந்தமான" காரணங்கள் எனக்குத் தெரியலையே. எனக்கு தெரியறது இதுதாங்க அந்த நாட்களில் - உடம்பும் மனசும் சோர்வா இருக்கிறது அம்புட்டுத்தேன். மற்றபடி அந்தப் பதிவில பின்னூட்டங்களில் அடிச்சு விளையாண்டு இருப்பாங்க பாருங்க, மத்த விசயங்களை.

கவிதா: "ஒரு பெண்ணை உடம்பபை தாண்டி அவளின் மனதை தொட்டு அன்பை செலுத்த வேண்டும் - " - உங்களின் ஊரணிப்பார்வையில்...

தெகா: உண்மைதானே அது. அந்த மனசில மட்டுமே தானே நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் பின்னால் வரும் காலங்களிலும், சூழ்நிலை எப்படியாக மாறினாலும். இல்ல, உடம்பை வளர்த்து காமித்தோ, நல்ல ட்ரெஸ் பண்ணி, தலைக் கேசத்தை கோவிக் காமித்தோ மனதை வெல்ல முடியுமா? அப்படியே வென்றாலும் அது அப்படியே நிற்குமா இவையெல்லாமே உதிரும் காலம்தோரும்?

கவிதா:- குழந்தைகள் பெற்ற தம்பதிகளின் விவாகரத்து அவர்களின் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது (எந்த வயது குழந்தையாக இருந்தாலும.)

தெகா: மறுப்பதற்கில்லை. கண்டிப்பாக பாதிப்புறும், ஆனால் அவ்வாறு பாதிப்புறும் விகிதாச்சாரத்தை கூட்டுவதும், குறைப்பதும் அடல்டாகிய நமது கைகளிலேயே உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரிய நேரிட்டால் அப் பிரச்சினையை இரு அடல்டுகளுக்கிடையேனா பிரச்சினை என்ற விகிதத்தில் மட்டுமே அணுகி குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அத்துனை விசயங்களையும் கவனித்துகொள்வது, இன்றியமையாததது. அவ்வாறு அக் குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவரை பிரிந்து வளரும் சந்தர்ப்பத்தில் மற்றொரு பெற்றோரின் பொறுப்பில் வளரும் பொழுது, தனக்கு எதிரியான முன்னால் கணவனையோ/மனைவியைப் பற்றியோ இல்லாத அவதூருகளை பிஞ்சுகளின் மனதில் விதைப்பதை, தாம் அந்த குழந்தைகளின் வாழ்வையும், மனதையும் பாதிக்கிறோமென்றும், பின்னாளில் அதுவே பேக் ஃபயர் ஆகக் கூடிய வாய்ப்பாக இருக்குமென்பதனையும் அறிந்து நடந்து கொள்வது ரொம்ப நலம் பயக்கும், அக் குழந்தைகளுக்கு பிற்காலத்தில்.

கவிதா: இந்திய குடும்ப வாழ்க்கை முறைக்கும் அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் இருக்கும் அதிகபட்ச நன்மை தீமைகள்? அமெரிக்கவாழ் இந்தியர்கள் படும் கஷ்டங்கள்.

தெகா: இங்க குழந்தைகளுக்கு தீர்வு எடுக்கும் முடிவை ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் அவங்க கையிலயே கொடுத்திடுறாங்க, அது ரொம்பவே நல்ல விளைவுகளை ஏற்படுத்துறதா தெரியுதுங்க. அது ஆண்/பெண் என்றாலும் தான் முயன்று பார்க்கும் முயற்சி தோல்வியுற்றாலும் அதன் மூலமாக கிடைத்த அனுபவங்கள் அந்த தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வழங்குகிறது, அதுவே ஒரு பொறுப்புள்ள அடல்டாக வாழ்வதற்கும், நிறைய விசயங்களை சாதிப்பதற்கும் உறுதுணையாக இருக்க உதவுகிறது. இதில சில தீமைகளும் உண்டுதான் மறுப்பதற்கில்லை, ஆனால் தவறுகள் நிகழ்ந்து விடுமோன்னு பயந்திட்டே இருந்தா எப்படி அடுத்தடுத்து வரப் போகின்ற அனுபவங்களை தீர்க்கமாக அணுகி அதனில் வெற்றி பெறவும் முடியும். இப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்கவிடும் சமூகத்தால், சும்மா நடித்துக் கொண்டே தன்னோட முழு வாழ்க்கையையும் யாருக்காகவும் வாழ்ந்து தீர்த்துவிட முடிவதில்லை, கொஞ்சமே உண்மையாக வாழ்கிறார்களோன்னு தோணச் செய்கிறது. ஆனா, இதனையே அப்யூஸ் பண்ணுவதனையும் மறுப்பதற்கில்லை.

நம்மூர்ல இதுக்கு அப்படியே எதிர்மறையாக நடை பெறுகிறது. இதுனாலேதான், குடும்பமென்ற ஒன்று அமைத்துக் கொள்ளக் கூட பணம் கொடுத்து மணம் செய்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, யாரோ பார்த்து வைத்த பெண்ணை மண முடித்துக் கொள்ள முடிகிறது, அதனில் ஏதாவது பிரச்சினையென்றாலும், யாரையாவது விரல் சுட்டி காட்டி விட்டு எனக்கென்ன என்று இருந்து விட முடிகிறது... கடைசி வரைக்கும் திருமணமான தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமலேயே சமூகத்திற்காக வாழ்ந்து முடித்திடும் நிலையும் அதிகமாக நடைபெறுகிறது. இப்படி எத்தனையோ, தவறே தான் செய்பவன் கிடையாது என்ற மன நிலையிலையே லயித்து உயித்து வாழ்ந்து அடுத்தவர்களின் உயிரை வாங்கிவிட்டும் சென்று விடுகிறோம்.

அமெரிக்காவில் இந்தியர்கள் படும் கஷ்டமின்னா, சில பேர் இங்க ஒரு கால் அங்கே ஒரு கால்னு வைச்சிட்டு முழுமையா இரண்டு பக்கமுமே வாழமே, குழப்பத்திலயே குழந்தைகளிலிருந்து தன்னோட சுற்றி வாழும் அணைவரையும் படுத்தி எடுத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு மன நிலை இல்லாத பட்சத்தில், ஏதோ அங்கே கிடைக்காத ஒரு வாழ்க்கைத் தேடித்தானே இங்கு வந்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பாக மகிழ்ச்சியாத்தான் இருந்தாகணும், அப்படியில்லென்னா வேஸ்ட் எல்லாமே :)).


கவிதா: காதல் - எந்த வயது காதல் முதிர்ச்சி அடைந்ததாக இருக்கும், வெற்றி பெரும். ? மொழி,இனம், நாடு இவை கடந்த காதல் கல்யாணம் வெற்றி பெருமா?

தெகா: என்னோட "ஏன் நடிக்கணும்" பதிவு படிச்சீங்களா, அதில ரொம்பத் தெளிவா நம்மூர்க் காதல் திருமணங்கள் வெற்றிப் பெறணுமின்னா என்னன்ன அதுக்கு அடிப்படைத் தேவைகள்னு பேசியிருப்பேன். காதலுக்கு முதன்மைத் தேவை... எதனையும் திறந்த மனதுடன் அணுகும் பண்பு, மன முதிர்ச்சி, பொருளாதார தன்னிரைவு, ஒருவரின் மீது ஒருவர் வைக்கும் அசைக்க முடியா நம்பிக்கை இது போல பல பண்புகளை வளர்த்துக்ககணும் அந்தக் காதலை, மணத்தை கடைசி வரை கொண்டு போய் சேர்க்க வேண்டுமாயின்.

மனப் பொறுத்தம் அமைந்துவிட்டால் அது எல்லா தடைகளையும் தாண்டி வந்துவிடும் மேற்கூறிய ஏனைய "தேவைகளுடன்." இது இனம், மொழி, நாடு கடந்து நடை முறை படுத்தக் கூடியதுதான் என்றாலும் அசாத்திய மனத் துணிவும், வாழ்க்கை சார்ந்த தெளிவுமில்லையானால் அதுவே பின்னாளில் பெரும் இடைஞ்சலாக இருக்கக் கூடும், வரும் வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் பொருட்டு.

கவிதா: உங்களிடமிருந்து அடுத்தவர்கள் (குறிப்பாக நான்) கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்/குணம்/பண்பு ?

தெகா: வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே வாழ்ந்து பார்க்கணுமின்னு எல்லாச் சூழ்நிலையிலும் நினைக்கிற மனசு. எத்தனை முறை வீழ்ந்தாலும் வாழ்க்கையை ஒரு கடமையா வாழ நினைக்காம, திரும்பவும் ஆசை ஆசையாக வாழ நினைத்து எழுந்து நிற்கிற குணம். மற்றவங்களுக்கு எடுத்துக்காட்டா இருக்கணுமின்னுட்டு வாழ்க்கை பூராத்தையும் முகமூடி போட்டு வாழ்ந்திட்டு, எனக்கின்னு வரும்பொழுது உள்ளே வெறுமையா உணர்ரதில எனக்கு உடன்பாடு கிடையாதுங்க. அதுனாலே, எனக்கு எது சரின்னு படுதோ, அதனை எடுத்து நடத்துறேன், அதனையே என்னை சுற்றி இருப்பவர்கள் சரின்னு பார்க்கும்படியும் பக்குவப்படுத்துறது, அதுவே தவறாக என்னய பார்க்கும் பொருட்டு அது அவர்களின் பார்வைன்னு ஏற்றுக்கிற பக்குவத்தை எனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் பாதையிலன்னு சில கோடுகளில் பயணித்திட்டு இருக்கேன். இது போன்ற வரையறை செய்யப்பட்ட பாதையிலிருந்து விலகி, முடிவற்ற கோடுகளில் பயனிப்பதால் காலத்திற்கேற்ப வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலையோட இருக்க முடியுது. இது போன்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள எல்லோரும் தங்களை தயார்படுத்திகொண்டால் எத்தனை பிரச்சினைகள் காணமலே போய்விடுமென்று நினைக்கும் பொழுது சற்றே அயர்சியாக இருந்ததுண்டு.


ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :

1. உங்களுக்கு பிடித்த சிறந்த 3 புத்தங்கங்கள்

1) த அல்கெமிஸ்ட் 2) கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் 3) ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த தேர்ட் சிம்பன்சி.

2. ஜார்ஜ் புஷ் ஷிடம்- பிடித்த ஒரு குணம்

அவரின் அசட்டுத் துணிச்சல், அதனை சொல்லிட்டு ஹக் பிக்னு சிரிச்சு வைக்கிறது.

3. உங்களின் மனைவியின் சமையலில் உங்களுக்கு பிடித்தது.

கலவைச் சாதங்களில் சிலதுகள்(மாங்காய், தேங்காய் இப்படி...).

4. இயற்கை நேசிக்கு பிடித்த கலர், பிடித்த இடம் (இந்தியாவில்), பிடித்த உடை

இப்படியெல்லாம் யோச்சித்ததே இல்லை - ட்ராபிகல் கலர்ஸ்னு. பிடித்த இடம் நிறைய இருக்கே , மலையும் மலையும் சார்ந்த இடங்களும். அமைதியா யாருமே இல்லாத இடங்கள். பிடித்த உடையன்னா "லூஸ் குலோத்திங்" கவ்வி பிடிக்காத எல்லா உடைகளும்.

5. உங்கள் குழந்தைகளுக்கு இந்திய கலாசாரத்தை சொல்லிகொடுத்து வளர்க்கறீர்களா?

குறிப்பாக இப்படித்தான்னு இருக்கிற மாதிரி எந்தவொரு அடையாளமும் காமிச்சு வாழ்றதில்லை, அப்படியே எப்படியாக நானிருக்கேனோ அதனையே பார்த்து வேணுங்கிறதை எடுத்துட்டு வேணாததை விட்டுட்டுப் போனாலும் அப்படியே எடுத்துக்கிற மனசோட நான் இருக்கேன். திணிப்பது இல்லை.

6. எல்லா பொருளிலும் ஏதோ ஒரு பதிவு நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இன்னும் எழுத வேண்டும் என்று நினைக்கும் ஏதாவது?

நிகழ்வுகள் நடைபெற நடைபெற நமது எண்ணத்தையும் அதனைச் சார்ந்து பதிந்து வைத்து விடுவோம், அவ்வளவுதான். அதுவும், இது என்னோட வளர் நிலையில் நான் எங்கிருந்துருக்கிறேன் என்பதனை பிரிதொரு நாளில் திரும்ப புரட்டிப் பார்க்க உதவும் என்ற எண்ணத்தில்தான்.

7. அமெரிக்காவை விட்டு துரத்திவிட்டால் என்ன செய்வீர்கள்?

அடச் ச்சே ஏண்டா இவ்வளவு கால தாமதம், அப்படின்னு நினைச்சிக்கிட்டு சந்தோஷமா மூட்டை, முடிச்ச கட்டிக்கிட்டு அடுத்த டெண்ட் அடிக்க கிளம்பிட வேண்டியதுதான்.

8. உங்களுடைய வலைபதிவில் தருமி' என்ற பெயரை நிறைய பார்த்தேன்.ஏன் ன்னு சொல்ல முடியுமா?

அத அவர்கிட்ட இல்லே கேக்கணும் :). இருந்தாலும், அவரு தன்னோட எண்ணத்தை என் பதிவில் விட்டுச் செல்ல காரணமா நான் நினைக்கிறது என்னன்னா "பயகிட்ட சொன்னா எடுத்துக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறான்"னு நினைச்சு அப்பப்போ வந்து அவரோட தடத்தை விட்டுட்டு போறார் போல. இன்னொன்னு, அடுத்த கேப்பங்கஞ்சி நீங்க கொடுக்கப் போறது அவருக்காகத்தான் இருக்கணும், ஆனா, நிறைய தோண்டணும் அங்கே, செய்வீங்களா??

தெகாவின் இன்றைய தத்துவம் :- காகா, காகாவா இருந்தாத்தான் அதுக்கு அழகே... அதுவே தான் மயிலுக்கும்!




Thursday, April 04, 2013

மழை திருடும் குழந்தமை: w/photos...


இது ஓர் அழகிய மழைக்காலம். எப்பொழுதும் மழையென்றாலே எனக்கு அலாதிப் பிரியம். அது எனது குழந்தமையை விடாது உசிப்பு எழுப்பி மீண்டும் துளிர்க்க வைத்து விடும் ஒரு கார்காலச் சங்கிலி. இங்கு நேற்றும் இன்றும் விடாது மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்த மழை ரசிப்புத் தன்மையை உளத்திலிருந்து பிரித்தெடுக்க ஒரு வயதிற்கு ஒரு சூழல் என காலம் தவாறது பல வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கொடுத்து, வயதானவர்களின் அனுபவத்தில் ஒரு கிலியையையும் சேர்த்தே செருகி வைத்து விடச் செய்யும். அது சாலையோரத்து வியாபாரியில் தொடங்கி, லாரி ஓட்டும் ஓட்டுநரைத் தொட்டு, பேருந்திற்கு பரபரப்புடன் காத்திருக்கும் அத்துனை பேரையும் வஞ்சகமில்லாமல் நனைத்தெடுத்து அவர்களின் முகத்தில் ஒரு சேர இறந்த போன குழந்தமையை கன நேரம் மறக்கடித்து துள்ளலானா முக மலர்ச்சியையும், அழுத்தி நமத்துப்போன வயோதிக முக வாட்டங்களையும் ஒரு சேர வெளிக் கொணர எத்தனிக்கும் இந்த மழை.

எனக்கும் அது போன்ற ஒரு கிலியை என் மனதினுள் விதைத்து என் குழந்தமையை திருடிச் செல்ல தலைப்பட்டது. சிறு வயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் நான் கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் விதமாக கூரையை பொத்துக் கொண்டு ஒரு சில இடங்களில் ஒழுகி காமித்தது. வீட்டில் பின்புறமாக அடுக்களையை ஒட்டி ஒரு கதவு. நெட்டித் திறந்தால் வெட்ட வெளிக்கு எடுத்துச் செல்ல அத்தனை அம்சக் காட்சிகளையும் உள்ளடக்கியவாறு அமைந்திருக்கும் ஒரு மந்திரக் கதவது.

தாழ்வாரத்தை உடைத்துக் கொண்டு அத்தனை மழை நீரும் உன் அடுக்களைக்குள் கொண்டு வந்து கொட்டுகிறேன் பார் என்று விடாது கொட்டித் தீர்க்கும். பாட்டி அந்த மழையை நைய்ய புடைத்து திட்டியவாரே கிடைக்கும் பாத்திரங்களைக் கொண்டு இரைத்து கொட்டுவாள். பின்பு அப்பா சிறுதொழில் செய்து வந்ததால் வாடிக்கையாளர்களின் வந்து போதலும் பாதிக்கப்பட்டது. இவைகளைப் போன்றே பல சில முகங்களை காட்டி குழந்தமை திருடல் தொடர்ந்து கொண்டே வந்தது. இருந்தாலும் நான் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. இது ஓர் இயற்கையின் திட்டமிடல். நம்மை அதன் முன்னால் மண்டியிடச் செய்யும் அணுகூலம். அந்த சூத்திரத்தை வென்றெடுப்பவனுக்கே இந்த மொத்த பூமியின் அத்துனை அழகையும் ஒரு சேர கையளித்து அவனை தன்னுடன் ஆரத் தழுவி தன்னுள் கரைத்துக் கொள்கிறது.

அதான் நீட்சியாக இன்று பல நாட்களாக எண்ணத்தில் வைந்திருந்த நீர்க்குமிழ் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. இருப்பினும் குழந்தமைத் திருடல் விடுவதாய் இல்லை. எனது குடையைத் தாண்டி மழை சில் சில்லென்று என் முதுகையும், புகைப்படக் கருவியின் லென்ஸை தொட்டு என் வயோதிக வாடலை படரச் செய்ய எத்தனித்தது. புறம் தள்ளி கிடைத்ததை சுருட்டிக் கொண்டு வந்து விட்டேன். இதோ உங்களுடன் ஒரு சில மழைக்காட்சிகள்.

மழையும் நானும் என்று எழுத வேண்டுமானால் என்னால் குறைந்தது இருநூறு பக்கங்கள் எழுத முடியும் என்றே எண்ணுகிறேன். எப்பத்தானோ! :)

பி.கு: மேலும் ஓய்ந்து போன ஒரு மழை பற்றிய நினைவோடை வாசிக்க - பூவன் கடவுளாகிப் போனான்:காட்டாறு
****************************
********************

1) ஒரு தென்மேற்கு பருவ மழை காலத்தின் போது தொப்பலாக நனைந்து போன கரம்பக்குடி வீதியும், மரங்களும் அந்த ஓட்டு வீடும்.


2) மஞ்சள் வெயிலுனூடாக ஒரு அம்ம்மெரிக்கா மாலை மழை நேரம்.

 

3) இலைகளுக்கு வலிக்காமல் மெல்ல பட்டுப்பரவி உருண்டு திரண்டு...


 


4) இன்றைய மழையில் துளித் துளியாய் முகிழ்ந்து, வெடித்து குடைக்குள் எனையும் காட்டியவாறே...

Related Posts with Thumbnails