Tuesday, December 28, 2010

மன் மதன் அம்பு ஒரு மீள்பார்வை - A Re-View

என்னுடைய முந்தைய இடுகையில் ஒரு மூன்று படங்களுடன் சேர்த்து கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்திற்கும் ஒரு பத்தி விமர்சனம் ஒன்று வைத்திருந்தேன். பெரிய அளவிளான பதிவு இதற்கு தேவையில்லை என்றே கருதி அவ்வாறாக சுருக்கியிருந்தேன்.

ஆனால், அண்மையில் சிலரின் விமர்சனப் பதிவுகளை படிக்கும் பொழுது கண்டிப்பாக ஒரு தனி பதிவிடுவதின் அவசியம் விளங்கியது. களத்தில் இறங்கி விட்டேன். இந்தப் படத்திற்கு எங்க பக்கமிருந்து நான்கு பேர் சென்றிருந்தோம். தசவதாரம் பார்த்துவிட்டு திரும்ப வரும் பொழுது எனக்கு என்னவோ மனது நெருடலாகவே இருப்பதாக உணர முடிந்தது. அந்த மனநிலையை என்னுடைய அந்தப் பதிவினை வாசித்தவர்களுக்கே புரிந்திருக்கும்.

மாறாக மன்மதன் அம்பு படத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது அப்படியான ஓர் இறுக்கமில்லை. மனது குதூகலமாக, காருக்குள் நிறைய மகிழ்ச்சி இருந்ததாக உணர முடிந்தது. ஏன் பதிவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காமல் போனது என்று பெரிய அளவில் ஒன்றும் ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. படம் வருவதற்கு முன்பே மெஜாரிடிகளின் மனதில் பேரிடியை இறக்குவது போன்ற அந்த கமல் கவிதை அமைந்து போனது, அதனைத் தொடர்ந்து இந்து சபை அமைப்பு நடத்திய சீன் பொது ஜனம் மத்தியிலும் என்னவோ ஏதோ என்ற பிரம்மையை ஏற்படுத்தி படம் பார்க்கும் மூளைப் பகுதியை தற்காலிகமாக மற்றுமொரு ’ஆட்டுக்கார அலமேலு’ வரும் வரைக்கும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கலாம். ;-)

சரி இந்தப் படம் எந்த விதத்தில் என்னுடைய மூன்று மணி நேரத்தை சுணக்கமில்லாமல் கொலை செய்தது என்று பார்ப்போம். எதிர்பார்த்த மாதிரியே கமலின் வசனங்கள் நிறைய பஞ்ச்களை சுமந்தே வலம் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக மாதவன் கதாபாத்திரத்தின் மூலமாக நமது சமூக ஆண்களின் டிஃபெண்டென்சி அம்மாவை மையமாக வைத்து வளர்க்கப்பட்டதின் கூறுகளை செம கிண்டலாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். உச்சமாக ஒரு சீனில் கழிவறைக்குள் இருக்கும் பொழுது மாதவனின் அம்மா உள்ளே வரலாமா என்று கதவைத் தட்டி கேட்கும் பொழுது அப்பொழுதே டயபர் ஸ்டேஜ்லிருந்து வெளி வந்தவனாக, "அம்மா இப்பொழுதெல்லாம் நான் பெரிய பையனாகிவிட்டேன்" என்ற வாக்கில் அடிக்கும் வசனம் இருப்பதிலேயே அல்டிமேட் கிண்டல் எனக் கொள்ளலாம்.

பல சீன்களில் மாதவனே அம்மாவை இழுத்து, இழுத்து முன் நிறுத்தும் வசனங்களின் மூலமாக எந்த அளவிற்கு நம் இளைஞர்களின் மன முதிர்வின்மை இருப்பதாக காட்டுவதற்கெனவே அது போன்ற காட்சியமைவுகள் என்று விளங்கிக் கொள்ள முடிந்தது. அதன் அடிப்படையிலேயே விவகாரத்தாகி, இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் சங்கீதாவை மாதவன் போன்ற இன்னும் அம்மாவை துணைக்கு அழைக்கும் ஆடவனுக்கு அம்மாவையே வாழ்க்கை துணையாக பெறுவதே பொருத்தமாக இருக்கும் என்கிற அந்த முடிவுக் காட்சி பஞ்ச் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது.

ரமேஷ் அரவிந்த் ஒரு கேன்சர் நோயாளியாக வருகிறார். அடையாளமே தெரியவில்லை! அந்த கதாபாத்திரத்தின் மூலமாக புற்று நோயின் ஆளுமையும், வதையும் நன்றாகவே புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். புற்று நோயாளியின் மனைவியாக ஊர்வசி. பணம் கேட்டு நொய்யென்று அழுது கொண்டே இருக்கிறார். கணவர் பிழைத்துக் கொள்வார் என்றவுடன், தமிழ் சினிமாவின் தாலி செண்டிமெண்டிற்கு அடி கொடுக்கும் விதமாக கைபேசியில் மாங்கல்யத்தை தட்டி, கமலிடம் ”அண்ணா சத்தம் கேக்கிறதா, என் தாலி கெட்டி” என்கிற வாக்கில் வசனம் பரவலாக படம் பார்த்தவர்களால் எதிர்த்த சீட்டின் முனையில் இடித்துக் கொள்ளும் அளவிற்கு தாவிக் குதித்து சிரிப்பலையை உண்டு பண்ணியது.

அடுத்து த்ரிஷா ஒரு நடிகையாகவே வந்து போகிறார். அவர் பாரிசில் இருக்கும் பொழுது கார் ஓட்டியாக ஓர் ஈழத்து தமிழர் அமைந்து போகிறார். அவரும் த்ரிஷாவுடைய பரம விசிரியாகிப் போகிறார். சொல்லவும் வேணுமோ! நம்முடைய மக்களின் தனிமனித துதி பாடல், கடல்கள், மலைகள், தேச எல்லைகளை தாண்டியதில்லையா? நாக்கை வெட்டிக் கொள்ளுபவர்களும், சாலையில் சோறு போட்டு வேண்டுதெலுக்கென மண் சோறு தின்பவர்களும், முட்டிக்காலலேயே மலைப் படிகள் ஏறிச் செல்பவர்களையும், தீ மிதிப்பவர்களையும் உள்ளடக்கியதல்லவா இந்த ரசிக அர்ப்பணிப்பு. அதனை சாடும் வாக்கில், சரியான தேர்ந்தெடுப்பாக இந்த கால கட்டத்தில் ஈழத் தமிழரை வைத்து சொன்ன விதமும் மிகவும் நன்றே!

இவர்களில் பெரும்பாலோனோர் மிக்க உடல் உழைப்பால், பொருளீட்டி சம்பந்தமே இல்லாத சீதோஷ்ண நிலைகளுக்கு முகம் கொடுத்து சொந்த நாட்டிலிருந்து விருப்பமில்லாமலேயே விலகி வாழக் கூடிய நிலையிலிருப்பவர்கள். இருப்பினும், இது போன்ற ஒன்றுக்கும் உருப்பிடாத நடிகை/நடிகர்களுக்கென செலவழிக்கும் தொகையும், அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும் சற்றே யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இவர்களாலேயே வெளி நாடுகளில் குப்பை படங்களும் வசுலில் கொடி கட்டிப் பறக்கிறது. நேர் மாறாக அந்தப் பணத்தில் திளைப்பவர்களோ பணத்தை வாரி வழங்கிய மனிதர்களுக்கு ஒன்றென்றால் எதிர் திசைகளில் இயங்குகிறார்கள். நம் போன்ற அப்பாவிகளுக்கு எது போன்ற கருத்தைச் சொல்லி விளங்க வைக்க முடியும், அதே நடிகை செருப்பெடுத்து காமித்தாலாவது அறிவு வருமா என்று கொஞ்சம் சுருக், நறுக்கென்றே சுடச் சுட ஒரு காட்சியையும் அமைத்துக் கொடுத்து விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கமல் (இங்கே நடிகை அசின் ஞாபகத்துக்கு வரணுமே!).

சரி, க்ரூய்ஸ் கப்பலில் ஒரு நடிகை விடுப்பில் ஊர் சுற்ற செல்லும் பொழுது அவள் கூடவே மேக் அப் மேனையும் பெட்டி பெட்டியாக துணிமணிகளையும், இழுத்துக் கொண்டுச் செல்வாளா, இல்லை வெறும் காப்ரீஸ் பாண்ட்ஸும், ப்ளைன் டி-ஷர்ட்டிலும், தனக்கு மிகவும் பிடித்த சாண்டலிலும் இருக்க பிரியப்படுவாளா? ஒலகப் படம் பார்த்து ரசிக்கும் ஆராய்ச்சியாளர்களே இதில் எது பொருத்தமான உடை, சிகை அலங்காரங்கள் இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு படத்திற்கு பொருத்தமாக அமையும். வருஷ வருஷம் க்ரூய்ஸ் சுத்துவரய்ங்க கணக்கா அட அட முகத்தில பரு, போட்ட அழுக்குச் சட்டை, முகத்தில சவர வித்தியாசம்னு மைனூட்டா கவனிக்கிறாங்கப்பா. இனிமே தமிழ் சினிமா பொழச்சிக்கும்டோய், ரேஞ்சுதான்.

இந்த படத்தில் எனக்கு பிடிச்ச விசயங்கள் நிறைய. எத்தனை பேர் க்ரூய்ஸ் கப்பலில் பிரயாணம் செய்திருக்கோம். செய்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். வித்தியாசமான முயற்சியாக படத்தின் பெரும் பகுதியை அப்படியாக அமைத்து பழைய ரோமானிய நகரங்களை அவரகளுனூடேயே மிக்க பொறுமையாக நடந்து திரியும் அளவிற்கு கூட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஒளிப்பதிவு சான்சே இல்லை என்ற ரேஞ்சிற்கு பளிச், பச்சை, வெண்மை எது எப்படி இருக்கணுமோ அதற்கும் ஒரு படி மேலே சென்று கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவிலான கேமரா - ஒளிப்பதிவு.

படத்தின் ஒரே தொய்வு கொடுக்கும் விசயமென்றால் கடைசி ஒரு 20 நிமிடங்களைச் சொல்லலாம். நீன்ன்ன்ண்டு கொண்டே சென்றதனைப் போன்ற பிரமையைக் கொடுத்தது எனக்கு. அந்த கமல் கவிதையை அட்லாண்டாவிலும் கழட்டி விட்டார்கள். இங்கும் சாமியைக் காப்பாற்றும் பிரகஸ்தபதிகள் அதிகமாக இருப்பார்களோ என்று எண்ணச் செய்கிறது. காட்டுமிராண்டித் தனத்தின் உச்சம். ஒரு கலைஞன், தான் அமைக்கும் காட்சிக்கு எது உகந்தது என்று நினைக்கிறானோ அதனை வைப்பதற்கான உரிமை கூட இல்லையென்றால் என்ன பெரிய ஊடக உரிமை, படைப்பாளிச் சுதந்திரம் என்று விளங்கவில்லை. தலீபானியம் தலை தூக்குகிறதோ என்று எண்ணச் செய்கிறது.

அந்தக் கவிதையில் நல்ல பழக்க வழக்கம் வர வேண்டுவதனைப் போன்றுதானே பாடல் வரிகள் இருக்கிறது. கலவி முடிந்தவுடன் சுத்தம் பண்ணிக் கொள்ள கூட மாட நின்று உதவு, தொப்பையை, தூக்கத்தை குறை என்ற வாக்கிலும் கூடுதலாக பல நல்ல கருத்துக்களை சொல்லி நிற்பதாகவே அந்தக் கவிதை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அதனில் எங்கிருந்து வந்தது இத்தனை கடவுள் காப்பாற்றும் மனவோட்டம். என்னமோ நடத்துங்கப்பா!

Sunday, December 26, 2010

இந்த வாரம் சினிமா வரம்!

இந்த வாரம் எனக்கு சினிமா வரமாகிப் போனது. மூன்று நாட்கள் இடைவெளியில் நான்கு தமிழ் சினிமாக்கள். இது வரையிலும் செய்யவே துணியாத ஒரு தன் கொலை முயற்சி என்றுதான் சொல்லுவேன். அதிலும் துரதிருஷ்ட வசமாக ஈரம், ஈசன் மற்றும் மைனா இணையத்திலும் (வேற வழியே இல்ல பார்க்க நான் இருக்கிற இடத்தில), கமல்ஹாசனின் மன்மத அம்பு இங்கு ஓடிக் கொண்டிருப்பதால் திரையரங்களிலும் சென்று பார்த்தேன்.

இது அனைத்தும் எனக்கு சாத்தியமாகிப் போனதற்குக் காரணம் மூன்று நாட்களும் எனது உடம்பு கெஞ்சி அடித்து தேவையான உடல் ஓய்வை பெற எண்ணி தலை, மூக்கு மற்றும் உடல் வலி எனவும், காய்ச்சல் எனவும் வீட்டில் அதிக நேரம் இருப்பதாக செய்து விட்டதாலேயே எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈரம் படத்தை சரியாக வெளியான ஒரு வருட இடைவெளியில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். படத்தை வித்தியாசமான முறையில் நகர்த்தியிருந்தார்கள். இரண்டாவது பகுதியில் கொலையுற்ற கதாநாயகியின் ஆவி சுத்தி சுத்தி வந்து தனது கொலைக்கு காரணமானவர்களை கொலை செய்வது சப்பென்று ஆக்கிவிட்டது எனது எதிர்பார்ப்பை. சொல்லப் போனால் நான் இது போன்ற ஒரு கதையையே எதிர்பார்க்கவில்லை; கதையை நகர்த்த ஆரம்பித்த விதமும், படமாக்கப்பட்ட நேர்த்தியும் நான்றாக இருந்ததால். இரண்டாவதாக, செகண்ட் ஹாண்ட் காருக்கும், வாழ்க்கைத் துணைக்குமாக ஒப்பீடு செய்து கொண்டு படத்தின் பாதிக்கும் மேல் கதையை நகர்த்தியிருப்பது ஒரு சமூக சிக்னெஸின் உச்சத்தை காட்டியது.

*********************************

ஈசன் - இயக்குனர் சசிகுமார் சுப்ரமணியபுரத்தை போன்றே மீண்டும் மென்மையான ஒரு கதைத் தேர்வுடன் நம்மையும் ஒட்டவைத்து, நமக்கும் சினமேற்றி கடைசியில் கதாநாயகன் எதிரிகளை கரகரவென்று கழுத்தறுபட்டு கொல்லப்படும் பொழுது நம்மையும் சேர்த்து கலந்து கொள்ள வைப்பதில் ஜெயித்து காட்டுவாரே அது போன்றே ஈசனிலும் ஜெயித்திருக்கிறார். ஈசனில் ஓர் உண்மையான போலீஸ் அதிகாரி எது போன்ற சூழ்நிலைகளில் நிதர்சனத்தை எதிர் கொண்டு கையறு நிலையில் தனது சீனியர் அலுவலர்களால் கூர் மழுங்கடிக்கப்படலாம் என்பதனை அழகாக காட்சியகப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும், இந்தப் படத்தில கொலை செய்யும் கதாபாத்திரமாக வரும் டீனேஜித்திய பருவம் கொஞ்சம் உருத்தலாக இருந்தது.
**********************************

மைனா - ரொம்ப பிடித்திருந்தது! லாஜிக்கலாக நிறைய துளைகள் இருந்தாலும், கதையுடனும் படமாக்கப்பட்ட மலையும் மலை சார்ந்த இடங்களும் கதாபாத்திரங்களின் பங்களிப்பும் அப்படியே நம்மை கட்டிப் போட்டுவிட்டு இதர விசயங்களை எக்ஸ்க்யூஸ் செய்ய வைத்து அத்துடனே நம்மையும் காட்சிகள் நகர்த்திச் செல்கிறது. போலீஸ் அதிகாரியின் மனைவி பக்கம் வரும் உறவுகளும், அவரின் மனைவியும் பல உண்மைகளைச் சொல்லி நிற்கிறது. அந்த உறவில் அந்த அதிகாரி மனிதனுக்கு அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலையை இயக்குனர் அழகாக செதுக்கி தனித்து நிற்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் பொழுது தமிழில் சமீபமாக நல்ல படங்களை கொடுக்க நிறைய புதிய இயக்குனர்கள் வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கை பிறக்கிறது. அதில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அப்படியே அவர் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முடிவு மக்கள் எதனையும் எடுத்துக் கொள்ளும் பக்குவ நிலைக்கு வந்துவிட்டதாக சொல்லி நிற்கிறது.
*******************************

மன்மதன் அம்பு:

என்ன சொல்ல, நல்லா சிரி சிரின்னு வேற எதையும் யோசிக்காம சிரிச்சு படத்தை உள்வாங்கி பார்த்தேன். என் மூணு வயது பொண்ணுக்கு மொதப் படம் இது. கொஞ்சம் டான்ஸ் ஆடினோம். என்னதான் இருந்தாலும் மாதவன் கதாபாத்திரம் மூலமாக சிரிப்பு, சிரிப்பா பல ஆழமான விசயங்களை போற போக்கில எடுத்து கடாசிவிட்டார் நம்ம கோடம்பாக்கத்து ஒலக நாயகன்.

அவர் சந்தேகப் புத்திக்காரர் என்பதால் த்ரிஷா போன்ற இளமையான பெண் சரிபட்டு வரதென்றும், தொட்டத்திற்கெல்லாம் மாதவன், தான், அம்மாவின் பிள்ளை என்பதனை எடுத்து இயம்புவதாலும் கமல், மாதவனுக்கு தனது காதலியான த்ரிஷாவின் விவாகரத்தான நண்பியை இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒருவரை, மாதவனுக்கு தேவை அது போன்ற ஓர் அம்மாதான் என்று க்ரேசி மோகன் ஸ்டைல் ஸ்கிரிப்புடன் பலத்த சிரிப்புகளுக்குகிடையே அவருடன் கோத்து விடுவது யோசிக்க வேண்டிய விசயம். ஏனெனில் மாதவன் அங்கு சந்தேகப் பட வேலையே இல்லை! நம்ம பசங்களும் என் அம்மா மாதிரியேதான் தனக்கும் ஒரு பொண்ணு வேணும்னு தேடுறாய்ங்க, அதுனாலே ஒரு அம்மாவையே கமல் தள்ளிவிட்டுட்டார் :)). படமாக்கப்பட்ட விதம் ரிச்! ஹே! எங்க ஊர்லயும் அந்த கமல் கவிதையை கட் பண்ணிப்போட்டங்கப்பா... கடைசியா சில வரிகளே ஒலிக்கிறது. படு அநியாயம் இதெல்லாம்... அப்படி என்னதான் அந்தப் பாட்டில இருந்திச்சு!!

Friday, December 03, 2010

பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1

இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது.

நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன.

அந்த கிரகங்களில் நமக்கு கிடைத்த தட்பவெப்ப சூழல்களைக் கொண்டு உயிரினங்கள் உருவாகி பல்கி பெருகியிருக்கக் கூடுமே என்ற கருதுகோளின் படி நாம பல பத்தாண்டுகளாக வானத்தை அளந்து வருகிறோம். வேற்று கிரக வாசிகளிடமிருந்து ஏதாவது சமிக்கைகள் மிதந்து வந்து அடைகிறதாவென (SETI).

இப்படியான சூழ்நிலையில் நேத்து அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நடத்தி வந்த ஓர் ஆராய்ச்சியில் அது போன்ற வேற்று கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான நிகழ்தகவுகள் ரொம்பவே சாத்தியம் என்று கட்டியம் கூறும் வாக்கில் ஒரு சான்று கிடைத்துள்ளது.

கேட்ட நேரத்தில இருந்து அண்டவெளி உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு (Astrobiologist) சந்தோஷம் நிலைகொள்ள வில்லையென அமெரிக்கா தொலைகாட்சிகளின் செய்திகள் அலறி அடித்துக் கொண்டு அந்தத் துறை சார்ந்தவர்களை அழைத்து நேர்முகம் காண்பதிலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது.

பொதுவாக இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஆறு விதமான அடிப்படை உயிரின வேதியப் பொருட்களின் மூலக்கூறுகளைக் கொண்டே கட்டமைக்கப்பெற்றிருக்கிறது (கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்.பரஸ் மற்றும் சல்.பர்).

இதனில் முக்கியமாக பாஸ்.பரஸ் நமது மரபணு சமிக்கைகளை கடத்திச் செல்லும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏக்களின் உயிர்ச் செல் கட்டமைப்பில் முக்கியமான பங்காற்றுகிறது.

இந்த பின்னணியில் நமக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற வேதிய அட்டவணையில் இந்த பாஸ்.பரஸின் பண்புகளையொத்த அளவில் ஆர்சினிக் என்ற வேதிய தனிமம் மட்டுமே இருக்கிறது. ஆனால், இது பூமிய உயிர் அனைத்திற்கும் உடலில் சாரும் பொழுது நச்சுத்தன்மையை வழங்கி, வளர்சிதை மாற்றம் அளவில் பாதிப்பை வழங்கும் தன்மையைக் கொண்டது. எனவே, ஆர்சினிக் வந்து பூமியில் வாழும் உயிர் அனைத்திற்கும் a big no no வேதியற் கூறு.

ஆனா, இயற்கையின் விளையாட்டப் பாருங்க. அறிவியல் புனைவுகளில் கன்னாபின்னான்னு கற்பனைக்கு எட்டிய மாதிரியெல்லாம் வேற்று கிரகங்களில் கிடைக்கிற வேதியற் கூறுகளையும், சுற்றுச் சூழலையும் கொண்டு உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக அள்ளிக் கட்டி எழுதுவாங்க. படிக்க படிக்க நாமும் கற்பனை உலகில் அந்த ஜீவராசி கூட்டத்தோட கூட்டமா ஒரு மனுச ஜீவராசியாவே திரிவோம்.

அந்த இட்டுக்கட்டு கதைமாதிரிக்கு, நாசாவின் புதிய பாக்டீரியம் கண்டுபிடிப்பு அது போன்ற கதைகள் எவ்வாறு உண்மையாகலாம்னு சான்று சொல்லி நிக்கிது. கலி.போர்னியா மகாணத்தில உள்ள ஓர் ஏரியில ஆராய்ச்சி செஞ்சிகிட்டு இருந்திருக்காங்க. அந்த ஏரிக்கு பேரு மோனோ ஏரி (Mono Lake). அந்த ஏரியை தேர்ந்தெடுத்ததற்கு காரணமே 50 வருஷத்திற்கு மேல மற்ற புதுத் தண்ணியோட கலக்காம கெடக்கிறதுனாலே அதில எக்கச்சக்கமான உப்பும், அமிலத் தன்மையும் மற்றும் இந்த ஆர்சினிக் நச்சுத் தன்மையும் இருக்குங்கிறதுனாலே தொழவி பார்த்துருக்காங்க ஏதாவது சிக்குதான்னு. அப்போதான் இந்த புதுவிதமான பாக்டீரியம் நம்ம பூமி உயிரி கட்டமைப்பு வேதிய மூலக்கூறுகளுக்கு எதிராக அமைந்த ஆர்சினிக்கைக் கொண்டு உயிர்வாழும் புது வகையான நுண்ணுயிரி வாழ்வது தெரிய வந்திருக்கு. அதுக்கு பேரும் வைச்சாச்சு GFAJ-1 அப்படின்னு.

சரி எப்படி நிரூபிச்சாங்க? ஆய்வுக் கூடத்தில வைச்சு இந்த பாக்டீரியத்தை வளர்த்திருக்காங்க. பாஸ்.பரஸை கொஞ்சமும், ஆர்சினிக்கை தாராளமாகவும் வழங்கி அதில இந்த பாக்டீரியம் ஆர்சினிக்கை ஊட்டமாக கொண்டு செழித்து வளர்ந்திருக்கு.

இந்த ஒத்த புது வகையான நுண்ணுயிரியை கண்டுபிடிச்சதின் மூலமா மொத்த உயிரியல் பாடப் புத்தகங்களையும் திரும்ப எழுதுற மாதிரி ஆகிப்போச்சு. அதுக்கெல்லாம் மேல இந்த அண்டவெளியில் இருக்கிற கோடான கோடி, கோடி, கோடி கிரகங்களில் எது போன்ற வேதிய மூலக்கூறுகளைக் கொண்டும் உயிர்கள் கட்டமைக்கப்படுமென்றால் கண்டிப்பாக வேற்று கிரக உயிர்கள் திளைச்சு வாழணும்மப்போய்னு உறுதியாகிப் போச்சல்ல.

இயற்கையின் விந்தையில் எதுவும் சாத்தியமேன்னு சொல்லி நிக்கிது இந்த ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம். எந்த வெளி கிரகத்திலே எந்த பத்து தலை டைனோசரோ, இல்ல நாலு கால் மனுசன் பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு நடந்து திரியுறானோ, I cant wait to get that news! :-)



பி.கு: நம்ம நண்பர் கையேடு கூட இது பொருத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கார் - வேறொரு உயிர்

- Photo Courtesy: Net

Related Posts with Thumbnails