Sunday, April 15, 2018

நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்?

நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்? இதற்கான பதிலில் இது போன்ற அவலங்களுக்கான தீர்வு இருக்கிறது.
விருதுநகர் கல்லூரியின் விரிவுரையாளர் நிர்மலா தேவி என்பவர் இன்றைய இந்தியாவின் நவீன சுரண்டல் அமைப்பின் ஒரு குறியீடு என்றளவிலேயே இதனை அணுக வேண்டியதாக இருக்கிறது. இந்த செய்திகளின் அடிப்படை அணுகுமுறையிலேயே ஒரு தவறு இருக்கிறது.
நாம் யாரும் அதனை நோக்கி கேள்வி எழுப்பவோ, கவனிக்கவோ நம்மை தயார்படுத்தவில்லை. அந்த ஒலிக்கோப்பு முழுதுமாக கேட்டால், நிர்மலா, தான் ஓர் அம்பு மட்டுமே எய்தவர்கள் நம்மை விட பெரிய இடத்தில் உள்ளவர்கள், நம்முடைய வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் அதிகாரத்தைக் கொண்டவர்கள் என்று கை சுட்டும் இடம் மிகப் பெரிய அதிகார மையமாக இருக்கிறது.
எந்த ஊடகமாவது, யார் அந்த பெரிய தலை? எது போன்ற அதிகார மையமது? இதற்கு பதில் தேடி அதனை நோக்கி தங்களுடைய துப்பு துலக்கும் ஊடகப் பணியை மேற்கொள்ளும் நிழல் கேள்விகளை எழுப்பியதா? இல்லைதானே? அப்படியெனில் டிஸ்கவரி சானலில் நாம் ஒரு வித அச்சத்தினூடும், வெறுப்போடும் அதே நேரத்தில் விரும்பிப் பார்க்கும் புலி ஒரு புள்ளி மானின் குட்டியை துரத்தி குரல்வளையை கடித்து சாகடிக்கும் ஒரு நிகழ்வை பார்க்கும் அதே வக்கிரத்தோடுதானே இதனையும் ரசித்து ஒரு சாஃப்ட் போர்ன் ஒலி அளவில் கேட்டு அதிர்ச்சியுறுவது போல மகிழ்ந்து கேட்டு நகர்கிறோம்?
இந்த ஊழலை, மாசுபாட்டை நிர்மலா என்ற ஒற்றை நபருடன் சுருக்கிவிட முடியுமா? இதற்கு பின்னான காரணிகளை நாம் அரசியல், சமூக, மக்கட்பெருக்க நிலை, அதிகார முறைகேடு இத்தியாதிகளுடன் தொடர்பு படுத்தி எப்படி இதனை நேர்கொள்ள வேண்டுமென்று எண்ண வேண்டாமா?
ஒலிக்கோப்பிில் அந்த நிர்மலா மிகத் தெளிவாக கூற வருவதில் இவை அனைத்தும் அடங்கி இருக்கிறது. அவர் வார்த்தைகளிலே ஓரிரு இடங்களை மேற்கோள் காட்டுகிறேன் - இது ஒன்றும் புதிதல்ல, எங்கும் நடக்காததும்அல்ல. உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்களுடைய எதிர்காலம் நீங்கள் ஆசைப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல அந்த ‘பெரியவர்கள், அதிகார மையம்’ அனைத்தையும் கடந்து உதவி செய்யும்.
அதற்குள் இருக்கும் பொருள் பொதிந்த, கையாலாகாத , மிரட்டல் தொனியும் நாள்பட்ட வியாதித்தன்மையின் அயற்சியுமாகத்தான் எனக்கு நிர்மலாவின் உரையாடல் புரியத் தந்தது.
நான் கல்லூரிகளில் படிக்கும் பொழுதே சக மாணவிகளுக்கு இது போன்ற நூல் விட்டுப் பார்த்தல் நடந்து கொண்டு வருவதாகத்தான் அறிகிறேன். இத்தனை மக்கட் தொகை கொண்ட தேசத்தில் இது போன்ற நிகழ்வுகள், அழைப்புகள், முறைகேடுகள் நடக்காமல் இருந்தால்தான் விந்தை. படி, படி, படி நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் வாழ்க்கை என்று நான்கு வயதில் ஆரம்பித்து 26 வயது வரைக்குமே அந்த மதிப்பெண்கள் என்ற குத்தூசி வைத்து விரட்டும் பொழுது அங்கே மாசுபாடு ஏற்படாமல் போகுமா?
இதற்கிடையில் அப்பாடு பட்டு நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி விட்டால் கூட உடனடியாக அந்த போட்டிக்கிடையே வேலைதான் கிடைத்து விடுகிறதா? ஒரு அரசாங்க காலி இடத்திற்கு ஒரு லட்சம் விண்ணப்பம் வருகின்ற சூழலில் எப்படித்தான் பின்னே தங்களை முன்னிறுத்திக் கொள்வது என்ற அயர்ச்சி வரத்தானே செய்யும். அதனைத்தான் நிர்மலாக்களின் மூலமாக ’அதிகார மையங்கள்’ ஆசை வார்த்தைகளைக் கூற வைத்து ஆள் பிடிக்கும் அவலத்திற்கு தள்ளி விடுகிறது.
நிர்மலாக்களுக்கு குறுக்கு வழியில் தாங்கள் இனிமேல் இழக்க ஒன்றுமேயில்லை எனவும், போட்டியில் தனது சக துறைசார் தோழமைகளிலிருந்து துருத்தி நிற்க அவர்களும் இந்த மாசுநிலைக்குள் தள்ளிவிடப்பட்டு பிரிதொரு நாள் அனுபவ பின்புலத்தில் ஆள் சேர்ப்பு பணிக்கும் எத்தனிக்கும் நிலைக்கு சென்று விடுகிறார்கள்.
இங்கே இந்த மாசுபாட்டின் ஆணி வேர், தோற்றுவாய் எங்கே இருக்கிறது என்று யாருமே பேசவில்லையே! நம்முடைய விரல் சுட்டு அது வரையிலும் நீளாத வரை இவைகளை நாம் அடைக்க முடியாது. கசிந்து கொண்டே தான் இருக்கும். ஏனெனில் இன்றைய போட்டி நிலை அப்படி. ஏதோ ஒன்றை தொற்றிக் கொண்டு தான் தங்களை அந்த இடங்களுக்கு நகர்த்திக் கொள்ள வேண்டிய அபத்த நிலை. அது பணமாக, அதிகார சேகரிப்பாக, வலைபின்னும் நோக்கமாகவென பல அவதாரங்களாக பரிணமிக்கிறது.
இது நமது சமூகச் சூழலில் எந்த துறைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

Monday, April 09, 2018

தம்பிகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

Related Posts with Thumbnails