Tuesday, April 20, 2010

சுவடுகள் with photos...

முன்னைய காலங்களை விடவும் இன்றைய கால கட்டத்தில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே உலகமயமாக்கப்பட்ட சூழலில் நாம் கண்டு வருகிறோம். இது போன்ற பயணங்கள் பெரும்பாலும் பொருளாதாரத் தேவைகளை முன்னிறுத்தியே அமைந்து விடுகிறது. சில நேரங்களில் மட்டுமே அந்தப் பாதையிலிருந்து விலகி சிலரால் அந்தப் பயணங்கள் முறைப்படி தன்னுடைய சுயதேடல் வளர்ச்சிக்கும், தன்னுடைய பரந்து பட்ட பார்வை விரிப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது எனலாம்.

இதன் அடிப்படையில் அமைந்து விடும் பயணங்கள் ஒருவர் மனத்தினுள் ஒரு பசி போலவே ஆழ் மனதின் ஓர் ஓரத்தில் அரித்துக் கொண்டிருக்குமோ என்ற அளவிற்கு என்னை எண்ணச் செய்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு வாசிக்க நேர்ந்த ஒரு மின் புத்தகம். இந்தத் தருணத்தில் அது போன்ற ஒரு வாசிப்பை எனக்கு கொடுத்து மகிழ்ந்த நண்பருக்கு எனது நன்றிகளும், நேசிப்பும்.

அந்தப் புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்களைப் படித்து முடித்தவுடனேயே இதனையொட்டிய ஒரு கட்டுரையை எழுத வேண்டுமென்ற எனது விரல்களின் நமநமப்பை என்னுள் உணர முடிந்தது. அப்படி ஏன் தோன்றியது என்பதற்கும் காரணங்கள் எனக்கிருக்கிறது. முன்பொரு கால கட்டத்தில் தன்னந்தனியாக முதுகுப் பையுடன், ஒற்றை வார்த்தை பயணம் செய்யும் இடங்களின் மொழி கூட தெரியாமல் சுற்றியலைந்தவன் என்ற முறையிலும் அதிலிருந்து கிடைத்த அனுபவங்களைக் கொண்டும் அவ்வாறாக தோன்றியிருக்கக் காரணமாக அமைந்தது.

வாசிக்க நேர்ந்த புத்தகத்தில், அப்பொழுதே கல்லூரி பட்டப் படிப்பை முடித்த ஓர் இளைஞன் அத்தனை கால இருப்பும், அந்த பட்டய சேகரிப்பும் தன்னை நேசித்தவர்களுக்காக செய்த கடமையாக நினைத்து முடித்து கொடுத்துவிட்டு நாடோடியாக சில வருடங்களை தனிமையில் நடத்தி, இறுதியாக அவனது பயணத்தின் உச்ச இலக்கான அலாஸ்கா வனத்திற்குச் சென்று அங்கு பட்டினிச் சாவும் நிகழ்த்த நேரும். இதற்கு இடைப்பட்ட காலப் பயணிப்பில் அவன் சந்திக்கும் இடங்களும், மக்களும் அவனுள் ஏற்படுத்தும் எண்ணங்களை அவன் வெளிப்படுத்தும் பாங்கு, அன்றாடம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து எவ்வாறாக முற்றிலுமாக மாறுபட்டு, நாமும் சற்றே பின் அமர்ந்து யோசிக்கும் பொழுது, எது போன்ற மகத்தான விசயங்களை இழந்தே நாமும் வாழ்ந்து முடிப்போம் என்ற எண்ணத்தை என்னுள் எழுப்பியதால், அந்தப் புத்தகத்தின் விமர்சனப் பதிவாக இதனை அமைத்துக் கொள்ளாமல் - ஒரு பயணத்தின் பால் எது போன்ற தனிமனித மன விஸ்திகரிப்பிற்கு அடித்தலமாக அமைந்து அதனை நம்முள் கரைத்து வாழும் கணம் தோறும் மனத்தினுள் எது போன்ற உலகத்தினை தரிசித்து வாழக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதனை உட்நோக்குவதகாக அமையட்டும்.

அந்த நூலில் நாயகனாக வரும் அலெக்ஸ் தன்னுடன் ஒன்பது புத்தகங்களை கூடவே கடத்திச் செல்கிறான்.அந்தப் புத்தங்களின் பல பக்கங்களில் முக்கியமான வாசகங்கள் அடிக்கோடிடப் பட்டிருக்கிறது. இங்கும் எது போன்ற புத்தகங்கள் ஒரு மனிதனை சிந்தனை ரீதியாக செதுக்கி வாழ்வின் நகர்த்தலையே முழுமைக்கும் மாற்றி விடுகிறது என்பதாக அலெக்ஸின் பயணத்தில்/தேடலின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவன் வைத்திருந்த Family Happiness by Leo Tolstoy என்ற புத்தகத்தில் கீழ்க் கண்ட வாசகத்தை அடிக்கோடிட்டு பயணத்தின் முக்கியத்துவம் அறியத் தருகிறான்...

...I wanted movement and not a calm course of existence. I wanted excitement and danger and the chance of sacrifice myself for my love. I felt in myself a superabundance of energy which found no outlet in our quiet life...

இன்று பயணம் அதுவும் தூரத்து கண்டங்களுக்கும், தேசத்திற்கு நிகழ்த்துவது என்பது ஒன்றுமே இல்லை என்ற ஒரு நிலைக்குச் சென்றுவிட்டது; குறைந்த பட்சம் வெளிப்பார்வையில். அது போன்ற பயணங்கள் ஒரு இலக்குகளற்ற, அதிலிருந்து பெறுவதற்கு பொருளாதாரமும், பெருமை பட்டுக்கொள்வதற்கான ஒரு வாழ்நாள் சாதனையாகவும் மட்டுமே அணுகும் பட்சத்தில் அதுவே ஒரு வெற்றிடத்தை உருவாக்கி நம்மை பதர்களாகவே வெளியே அனுப்பியும் வைத்து விடக்கூடிய அபாயமாகவும் அமைந்துவிடக் கூடும். எதிர்பாராத விதமாக, அது போன்ற மேம்போக்கான பயணங்களே பலருக்கும் இன்று கிடைத்துக் கொண்டிருக்கிறது!

பயணங்களின் போது நம்முடைய வளர்ச்சி சார்ந்த நிறைகளை மட்டுமே தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அந்தச் சாளரத்தின் வழியாக, நம் தோளோடு உரசிச் செல்லும் மக்களையும், கலாச்சாரங்களையும், இயற்கையையும் கூட அணுகி ஓப்பீட்டளவில் கண்ணுற்று, அதனின்று கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற திறந்த மனப்போக்கு இல்லாமல் பல வருடங்கள் பிரிதொரு சூழலில் வாழக் கிடைத்திருந்தாலும், அதே செக்குமாட்டுத்தனத்துடன் வாழ்ந்து தொடங்கிய இடத்திலேயே வந்தும் அமர்ந்து நம் பார்வையில்கிட்டும் மற்ற மக்களை நம் வெற்றிடத்தைக் கொண்டு அவர்களை நிறைத்துக் கொண்டிருப்போம்.



பயணங்கள் - நமக்கு நம்முள் தேங்கிக் குட்டையாகிப் போன நாற்றமடித்துக் கொண்டிருக்கும் பார்வைகளை வெளிக்கொணர்ந்து, ஒரு பரந்து பட்ட பார்வையை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். அதுவே நாட்பட நாட்பட உலகியல் பார்வையில் பரந்த ஒரு படத்தினை பார்த்துக் கொண்டிருப்பதனைப் போன்ற ஒரு பிரக்ஞையை நம்முள் அழுத்தமாக விட்டுச் செல்வதற்கான படி நிலையாக அமைய வேண்டும். அது போன்ற உணர்வு நம்முள் புகுந்து வெளிக்கிளம்ப நம்முடைய மனத்தை திறந்து வைத்திருந்தாலே ஒழிய அதற்கான சாத்தியங்களே இல்லை - முன் முடிவுகளோடு நாம் யாவற்றையும் அணுகும் பட்சத்தில்.

பல மொழிகள் பேசத் தெரிந்தவர்களாக, எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாகவும், பல தேசங்களில் கால் பதித்திருந்தவர்களாகவும் அமைந்தும் இது போன்ற ஒரு திறந்த மனநிலையையற்றவர்கள் அது போன்ற பயணங்களின் மூலமாக எதனையுமே தன்னுள் கடத்திக் கொண்டிருக்க முடியாது, தேக்கமட்டுமே அங்கும் சாத்தியப்பட்டு மேலும் வாசனை கொண்டவர்களாக பரிணமித்து நிற்பதனை நம்முன்னால் இன்றும் கூட காண முடியும். எப்படி அங்கே உண்மையான வளர்ச்சியும், முழுமையும் கிட்டியிருக்க முடியும்?

உதாரணத்திற்கு ஒருவர் சக மனிதனை அடிமையாக குளிர்சாதன பெட்டியின் குமிழை முடிக்கி விடுவதற்கும், தனக்கு வந்த கடிதங்களின் உரையைக் கிழித்து கொடுப்பதற்குமான மனித வளத்தை ஓர் ஆளூமையின் திறன் என்று பறைசாற்றிக் கொண்டால், அதற்குப் பின்னான தன் நாட்டின் வறுமையும், மக்களின் சிறுமையும், சக மக்களின் இயலாத்தனத்தையும் கருத்தில் கொள்ளாமால் அவைகளைக் கூறி பிரிதொரு கலாச்சாரத்தில் திளைத்துக் கொள்ளும் மேட்டிமைத்தன எண்ணம் எங்கிருந்து புறப்பட்டிருக்க முடியும். அதனையொட்டியே உணவு, உடை பழக்க வழக்கங்களை வைத்து பிரிதொரு கலாச்சாரத்தை கீழே போடுவது, சாதீயக் கூறுகளை மண்டைக்குள் தூக்கித் திரிந்து கொண்டே க்ராண்ட் கன்யானின் அழகினை கண்டு வியந்து, ரசித்துக் கொண்டிருக்கும் கணத்தில் பிரபஞ்சத்தின் சூத்திரம் அறிய முடியாமல் போக நிற்பதும், இது போன்ற விழிப்பு நிலையற்ற, தேக்கமுற்ற மனநிலையேயன்றி வேறு எது போன்ற காரணிகள் முன் நிற்க முடியும்?

இது போன்ற மனிதர்கள் எது போன்ற சுவடுகளை ஏனையவர்களின் மனத்தினுள் விதைத்துச் சென்றிருப்பார்கள்? அங்கே நான் காண்பது வெற்றீடமான நடந்து திரியும் ஒரு கண்ணாடிக் குடுவை உள்ளே அடைத்து வைத்திருக்கும் தன் கழிவுகளை சமூகப் பார்வைக்கு முன் வைத்தவாரே நகர்ந்து கொண்டிருப்பதாக...




பி.கு: அந்த மின் புத்தகம் எல்லாருக்கும் பிடிக்குமின்னு சொல்ல முடியாட்டியும் அங்கே இங்கேன்னு சில கேசுகள் இருக்கத்தான் செய்யுமின்னும் தெரியறதுனாலே வேணுங்கிறவங்க, மின்னஞ்சல் செய்யுங்க புத்தக டெலிவரிக்கு...

Thursday, April 08, 2010

காலச்சுழற்சி




ராட்டினச் சக்கரமென சுழன்று
எதிர் எதிருமாய்
மேலும் கீழுமாய்
புரட்டும்

ஏதோவொரு புள்ளியில் இடைச்செருகலாக
நானைத் திணித்தபடி

நிறங்களை கூட்டி மெருகூட்டி
குறைத்து குமைந்து
ஹீலிய பலூனாய்
மேலெழும்பி
கீழிறங்கும்
நிதர்சனம் தவிர்த்து

பொலிவோடும் அற்றதுமாய்
வட்டத்தின் தொடக்கம் உணர
சக்கரத்தின் பற்களில் வாழ்க்கை!

Related Posts with Thumbnails