Tuesday, February 16, 2016

பெருமரத்து ஒற்றை இறகு!






பூப்பதும் காய்ப்பதும் உதிர்வதும்

முப்பருவமெனினும்

உதிர்வதை

கனமற்றதாக்கலாம்
பெரு மரத்து
பறவையொன்றின்
ஒற்றை இறகு
சப்தமற்று
தரையிறங்குவதைப் போல!









***************************




பெரும் மழைக்காடொன்றில்
அடர் மழை

தொடர் நுணல்கறங்கல்

மலை முகடுகளையும் பரப்பியபடியே

மறுமுனை 
ஆறு ஒன்றின்
கரையை கடந்து கொண்டிருக்கும்
தலைபிரட்டைகள்.

Monday, February 15, 2016

இதயம் பூட்டிய சிறுமி!




விண்மீனுக்கேயான
கதகதப்புடனான
சிறுமியொருத்தி
கதவுகளற்றப் பெருவெளியில்
பாட்டியொருத்தியின்
பாசவெண்பஞ்சின்
நேர்ப்பார்வையுடன்
பேரனைச் சிநேகம்
கொள்கிறாள்...
கனம்பொறுக்காத
வெண்பஞ்சு
அருகே நெருங்கி
நெக்குருகியதில்
அகம் கண்ட சிறுமியின்
உடலெல்லாம் இதயம்!

**************************************






துளிர்த்து பச்சையம் அதீதம் ஊட்டி

விருட்சமாகி
வானைநோக்கி  பரந்து விரிந்து
மொட்டாகி, பூவுமாகி,
காயாகி, கனியுமாக்கி
யாவும் கடந்து
எல்லாம் அறிந்தோமென
நினைவெட்டிய நாளில்
ஒரு மாலையுடைத்த
திடீர் மழையில்
சிலிர்த்தெழுந்தால் மேனியெல்லாம்
மின்மினி பூத்தவாக்கில்
மீண்டும் துளிர்ப்பு!

Friday, February 12, 2016

வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு: மரங்களடர்வு -2



மலையணில்களின் நீண்ட தூரிகையையொத்த அந்த மழைக்காடுகளினூடாக நின்றுநிதானித்துக் காட்டு பூனைகளின் பாதச் சுவடுகள், விட்டைகள், காட்டெருமைகளின் சாணம் மற்றும் அவைகளின் இருப்பு என்று அவதானித்தவாறே
வேலைகளை முடித்த கையோடு, கிடைக்கும் சிற்றோடைக்கு அருகில் பாறையென்றின்மீதாக சப்பணமிட்டவாரு பல மதியங்கள் கழிந்திருக்கிறது.

கண்ணாடிப்  படிகமென சன்னமாக உருண்டோடும் நீராக அத்தனை சுத்தமான தண்ணீர்.
அதன் மீதாக உந்தித் திரியும் ஸ்கிட்டர்ஸ். காய்ந்த சருகொன்றின் மீதாக தொத்தி டைட்டானிக் ஜாக்காக மிதந்து திரியும் எறும்பு. நீர் படிகத்தின் கீழாக என்னையும் கொஞ்சம் பார் என்றபடி ஊர்ந்து நடக்கும் நண்டு. தண்ணீரின் வண்ணத்துடன் இயைந்து போகும் மீன் குஞ்சுகள். ஒன்று மற்றொன்றை விஞ்சும் பேரழகுடன் அணி வகுத்து எனை சுவாசிக்க மறக்கடிக்கும் ஒருரம்மியமான சூழலில் கட்டி போட்டு வைத்திருந்தது அந்த மேற்கு மலை மழைக் காடுகள்.

திரும்பிய பக்கமெல்லாம் மழையில் நனைந்து அடர் கருப்பில் பருத்த அடிப்பகுதியை கொண்ட மரங்களின் அடர்த்தி. பெரும்பகுதியான நேரங்களில் என்னைச் சுற்றிலும் அது என்ன விதமான நேரம் என்று கூட அறிந்து கொள்ள முடியாத வாக்கில் சூரியக் கதிர்களும் கூட காட்டின் தரை தொட அஞ்சி நிற்கும் அடர்வு கொண்ட உச்சிகளையும், உயரங்களையும் கொண்ட மரங்கள். அந்த

மரங்களில் பலவும் என்னை விட பல மடங்கு அதிக வயது கொண்டவை.சற்றே உற்றுக்கேட்டால் நிறைந்த நிசப்தத்தில் பேரமைதியை கற்றுத் தந்தன.


சில் வண்டுகள் மட்டுமே அவ்வப்பொழுது யாரோ ஒருவர் சன்னமான சப்தத்தில் தொடங்க அங்கே இங்கேயென பேரிரைச்சலாக நூற்றுக்கணக்கில் ஒன்று சேர்ந்து ரீங்காரமிட்டு யாரோ ஒரு சிம்ஃபெனி இசைத் தொகுப்பாளர் கையசைத்து திடும்மென ஒரே நேரத்தில் நிறுத்துவதையொத்து நிறுத்திக் கொள்ளும். எங்கோ தூரத்து எதிரொலியாக ஒரு மலபார் விஸ்ஸிங் த்ரஸோ, காட்டுக் கோழியோ அல்லது மரகதப் புறாவோ சப்தமெழுப்பி அந்த அடர் வனமே அதிரச் செய்யும். மதிய உறக்கத்திலிருந்து அப்பொழுதே நெட்டி முறித்து, வாய் பிளந்து கொட்டாவி உதிர்த்து, உயரக் கிளைகளில் ராஜ மிடுக்குடன் ஒரு சிங்கத்தின் கம்பீரத்துடன் மரக் கிளைகளின் தண்டுகளில் நடந்து திரியும் சிங்கவால் குரங்குகள்.

திடும்மென எங்கிருந்தோ அடித்து விரட்டிக் கொண்டு வந்த ஒரு பெரும் கரு 
மேகத் திரள் சூரியக் கதிர்களை மறைத்த படி ஜமுக்காளம் விரிக்க, காடு மேலும் கரிய இருளுக்குள் விழுந்து, அத்தச் சூழலையும் மாற்றிக் காண்பித்து இருக்கிறாயா, அல்லது உன்னையும் சேர்த்து எங்களுடன் இணைத்து கொள்ளவா என்று உருமிக் கடந்து செல்லும்.

பல பொழுதுகள் அதன் மிரட்டலுக்கு அஞ்சாமல் உள்ளிருக்க, இடியுடன் தன் மடி அவிழ்த்து கொட்டிய மழையாக பொழிந்து கொட்டும். குளிர் மழையில் விசிறியாக பரந்து விரிந்த மரத் தண்டுகளின் ஓரமாக அந்தச் சூழலில் ஒதுங்கி கொள்வதும் உண்டு. இல்லையென்றால் தொப்பலாக நனைந்து மேடேறி, நாகரீகமடைந்தால் கடந்து போகும் பேருந்து ஓட்டுநர் பாதி தூரம் போயும் பக்கக் கண்ணாடியில் பார்த்து நிறுத்தி ஏற்றிக் கொள்ளும் பொழுது “சார், அட்டை பார்த்தீங்களா,” உள்ளே ஏத்திறப் போறீங்கன்னு கேட்டபடி வாகனம் நகர்த்துவார். 

இங்கு எங்குமே உணவு பற்றி பேசாததிற்கு காரணமிருக்கிறது. காலையில் கெட்டிச் சட்னி வைத்து வாங்கிய இரண்டு இட்லிகள் மதியம் மூன்று மணிக்கு பிரித்தால் என்ன வாசனையுடன் கிடைத்து விடக் கூடும். அத்தனை நடைக்குப் பிறகு பொட்டலத்தைப் பிரித்து கிள்ளிக் கிள்ளி சாப்பிடும் பொழுது அதன் சுவையே எந்த காண்டினெண்டல் உணவிலும் கிடைக்காத அளவில் உளத்தையும், வயிற்றையும் ஒரு சேர நிரைக்கும். 

வெளியில் வந்தால் மலைவாழ் தேயிலைத் தொழிலாளிகளின் தேநீர்க் கடையில் சில சமயம் ஈக்கள் முதல் போணி செய்யாத போண்டாவோ, வடையோ நல்ல சிவப்பேறிய தேநீருடன் உணவுக்குழாயை வருடியபடி இரைப்பையை நிரப்பும். அரவமற்ற வனப்பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் பசியால் கண்களில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகசைக்க சிவப்பேறிய கண்களுடன் கூடடைவோம்

Wednesday, February 10, 2016

வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு - 1: Memory Lane

கிடைக்கும் இந்த சின்னஞ் சிறிய வாழ்க்கைக்குள் எத்தனை பயணங்கள், இடங்கள், புது மாதிரியான வேலைகள், புதிய மனிதர்கள் என்று விரித்து கொண்டே சென்றால் நம்முடைய வாழ்வின் கடைசி கோப்பையில் மிஞ்சி இருப்பது பிடித்த ரொட்டியை, பிடித்த கட்டன் காஃப்பியில் நனைத்து எடுத்து சாப்பிட எத்தனித்து சிறிதே தாமதித்து வெளியில் இழுக்க உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்து வைத்ததை கடைசி உறிஞ்சலில் ரசித்து அப்படியே விழுங்க ஊத்திக் கொள்வது போல நம்முடைய அனைத்து கடந்து வந்த நினைவு பொதிகளும் தித்திக்கும் வண்ணம் அமைந்திருக்க கூடும்.

என்னுடைய வால்பாறை மற்றும் டாப்சிலிப் நாட்களை இப்பொழுது நினைத்து பார்த்தால் ஏதோ கனவில் வாழ்ந்தது போல இருக்கிறது. ஆனால், நான் அன்றே இதே கோழித் தனமாக அதே கிறுக்குத் தனங்களுடன் வாழ எத்தனித்திருந்ததால், என்னால் முழுமையாக மழையையிலும், வெயிலிலும், அட்டை கடியிலும், யானை விரட்டலிலும், தேவாங்கு பார்க்க சென்ற இரவுகளிலும், யானை, காட்டெருமை சாணங்களை பொரட்டி போட்டும், காட்டு பூனைகளின் விட்டைகளை உடைத்து  போட்டும் அவைகளின் உணவு பழக்க வழக்கங்களை கண்டறியவெனவும் செய்யும் அத்தனை விசயங்களையும் ரசனையுடனும் செய்யும் ஒரு பெரும் வரம் பெற்றிருந்தேன்.

பனி படர்ந்திருக்கும் விடியற் காலப் பொழுதில் கிடைக்கும் ஏதோ உணவை எடுத்துக் கொண்டு காட்டினுள் நடையைக் கட்டினால் மீண்டும் உலகம் இருளினுள் சுருளச் சுருள ஓட்டமும் நடையுமாக மலை உருட்ட வீடு வந்து சேர்க்கும் சரிவான மலைகளில் உருண்டு பொரண்ட நட்களென சென்றவை அவை. எல்லாவற்றிலுமே ரசனை இருந்தது! மைன்ட் ஃபுல் நாட்களவை!!

வண்டுகள், வண்ணத்து பூச்சிகள், தவளைகள், ஊர்வன,  பறவைகள் என எது கிடைத்தாலும் அதனை அடையாளம் காணவென குறிப்பெடுத்து பட்டியலில் இணைத்தாக வேண்டுமென வெறி பிடித்து நகர்ந்த நாட்களவை.

அதே நாட்களில் தான் இக்பால் ம்யூசிகல் கடையுமெனக்கு அறிமுகமாயிருந்தது. வரும் வழியில் வாரத்திற்கு ஒரு டிடிகே90 புது கெசட் வாங்கி அங்கயே இளையராஜவின் 70பது மற்றும் 90களின் பாடல்களை மிக்க சிரத்தையாக கேசட் பை கேசட்டாக பதிவிற்கு கொடுத்து, இரவின் இடுப்பை தாண்டியும் மிக மென்மையாக, சிறுத்தையின் நடமாட்டத்திற்கு அஞ்சிய ஒரு புள்ளிமானின் அச்ச குரலுக்கும், விட்டு விட்டு சிம்ஃபொனி நடத்தும் சில் வண்டுகளின் ரீங்காரத்திக்கிடையிலே விடிய விடிய பாடல்களை ரசித்து கொண்டு கிடந்த நாட்களவையும் கூட.

இத்தனைக்கும் அன்று எனக்கு எந்த காதலியும் கிடையாது. இப்படி ஒரு ரசனையுடன் லயித்துக் கிடக்க. வரும் போகும் வழியில் நான்  உடுத்தி இருக்கும் உடையையும், கழுத்தில் தொங்கும் பைனாகுலரையும் கண்டு விடலைப் பெண்கள் கண் வைத்து போவது மட்டுமே நடந்து வந்தது.

ஆனால், இரவின் மடியில் மேகம் நடைபாதை இறங்கி தேயிலை தோட்டத்தின் ஊடாக தூவலாக அள்ளி கன்னம் வருட வருட எதனைப் பற்றியும் லட்சியமற்று ஓஷோவுடனும், கிட்டுவுடனும் கேள்வி பதில் செஷன் நடத்தியபடியோ, போடா கடவுளுமில்லை, பிசாசுமில்லை என்று அந்த கும்மிருட்டிருக்கு சவால் விட்டபடியோ காட்டெருமையின் நடமாட்டம் கவனித்தபடி காட்டு வாசியாகி திரிந்த நாட்களவை.

ஆனால், அந்த பச்சைய மொசைக் காடு வரும் காலங்களில் எனக்கென வேறு விதமான திட்டத்தை வைத்திருந்திருக்கிறது. என்னுடைய அகந்தயை, மனிதனின் புறவயமான வண்ண தோலுரிப்புகளின் ஊடாக எது போன்ற மனிதனாக பரிணமித்து நிற்கிறேன் என்று டெஸ்ட் வைக்க காத்திருக்கிறது என்று அறியாமலயே!

இது போன்ற மற்றுமொரு இரவில் தொடர்ந்து பயணம் செய்யலாம். நிறைய இருக்கிறது... பேச... 

Tuesday, February 09, 2016

தேர்ந்த மனதும் அஞ்சலியும் by Prabhakar

.. *நிலமே அற்றவன் போலத்தெரியும் இந்தப்பையனைக் கவர்ந்தது எது? அந்த நிலத்தில் வேரூன்றி எழுந்த புனைவுலகின் மலர்ந்த மலர்களை மட்டுமே இவன் பார்க்கிறான். கலை அப்படியும் சென்றடையக்கூடும் போலும்* ...

இந்த முடிவு பத்தியிலிருந்து என்னுடைய உரையாடல் தொடங்குகிறது. அந்த *நிலமற்றவன்* என்ற ஒற்றை சொல்லாடல் எத்தனை எள்ளலையும், அலட்சியத்தையும் கொண்டதாக உள்ளது. ஹ்ம்ம்.

மனித வாழ்வின் எதார்த்தமான வாழ்வை ஒரு படைப்பாளி படைக்கும் பொழுது அதனை தரிசிக்க வாய்ப்பு கிட்டியவர்கள் அவரவர்களின் வாழ்வுப் பின்னணியில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டோ, அல்லது தன்னுடைய முன்னோர்களின் வாழ்விட அமைப்பு, வாழ்க்கை முறை, கடந்த வந்த ஏற்ற இறங்கங்கள், மொழி போன்றவைகள் தாக்கமூற்றி ஆழமாக மனதினில் தடயங்களை விட்டு சென்று பார்வையாளனை, அல்லது வாசகரின் ஆன்மாவை நெஞ்சிலிருந்து உருவி ஆணி அடித்து கட்டிப் போட்டு விட்டதாக உணரச் செய்ய வல்லது. இதனை இன்னொரு கூடு விட்டு கூடு பாயும் கதை சொல்லிக்கு சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமன்பதல்ல.
சில சூழ்நிலைகளில் வாழ்வியலின் எதார்த்ததை அப்படியே பருக நினைப்பவர்களுக்கு மொழியோ அல்லது உணவு, உடை சார்ந்த பழக்க வழக்கமோ தடையாக இருந்து விட முடியாது. கண்களின் வழியாக ஊடுருவி ஒரு ஆன்மாவை தரிசிக்கும் அந்த குழந்தைமைக்கே ஆனா சூழ்ச்சியற்ற தூய மனமிருந்தாலே அந்த கதையின் மையத்திற்குள் தங்களை உள்ளே நகர்த்தி கதா மாந்தர்களுடன் அழுவும் பொழுது அழுதும், சிரிக்கும் பொழுது சிரித்தும், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்தும் மீண்டும் வரக் கூடிய ஆன்ம சிதைப்பு, மறு கட்டெடுப்பு நடத்தி மயான வைராக்கியத்துடன் வெளி வரக் கூடிய அளவிற்கு ஒரு கிராமத்தின் பாலக்கட்டையை வைத்தே கூட நாடுகளின் எல்லைகளை கடந்து மனதுகளின் மையத்துக்குள் அந்த மண் சார்ந்த மக்களை, அவர்களின் வாழ்வியலைக் கொண்டு சேர்க்க முடியும்.
இந்த பின்னணியில் வைத்து பார்க்கும் பொழுது அந்த ஒற்றை பாலத்தை பின்புலமாக கொண்டு கதை சொல்லிய இயக்குனர், எழுத்தாளர் ஒரு மலையாளியாக இருந்து போகும் பச்சத்தில், இரண்டு தலைமுறைக்கு முன்பே புலம் பெயர்ந்த தாய் தந்தைகளை பின்புலத்தில் கொண்டிருந்தாலும், மலையாள வாசிப்பு, நல்ல சினிமா ரசனையுள்ள மக்கள் தங்களுடைய சந்ததிகளுக்கு நல்ல படைப்புகளை கண்டெடுக்கவும், அடையாள படுத்திக் கொடுக்கவும் தவறி இருப்பார்களா என்ன?
எல்லாவற்றுக்கும் மேலாக தனி மனித மனது ஏதோ ஒரு வகையில் தனக்கு தேவையான வற்றை அடைந்து கொண்டதாக எண்ணும் பச்சத்தில், இந்த பொருள் சார் உலகிலிருந்து தப்பி அதனையும் தாண்டி வேறு எதனையோ தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கும். அது போன்ற உள்ளங்கள் நாடு, எல்லை, மதங்கள் தாண்டி வெளியுலகில் பயணித்து கொண்டே இருக்கிறது. சில பேருக்கு அது இந்த வாழ்விலேயே, குறிப்பிட்ட வயதுகுள்ளேயே அமைய பெற்றவர்களாக இருக்கும் பச்சத்தில் இது போன்ற ட்ரைப்யூட் கிடைப்பதில் ஒன்றும் எனக்கு ஆச்சர்யமில்லை.
நான் கோவையில் இருக்கும் பொழுது சுத்தமாக ஒரு வார்த்தை கூட மலையாளம் தெரியாமல் மிகககக மெதுவாக ஊர்ந்து நகரும் படங்களை கூட பார்த்ததுண்டு. என்னுடைய முனைவர் வழிகாட்டி ஒரு மலையாளி. ஒரு முறை அப்படியான ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் மிக குதுகலமாக அந்த படத்தைப் பற்றிச் சொல்லி, நீங்கள் பார்த்தே ஆக வேண்டுமென்று கூறி அவரும் திரையரங்கு சென்று படத்தை பார்த்துவிட்டு என்னை பார்த்து புன் முறுவலுடன் 'இனிமே, சாமீ ஆளைவிடு' என்ற ரேஞ்சிற்கு நடந்த நிகழ்வு அது.
அது ஏன் இங்கே என்றால், மொழி ஆங்கில உப தலைப்பு இல்லையென்றாலும் கதா பாத்திரங்களுடன் தங்களை இணைத்துக் கொண்ட ஒரு சிறந்த கதை சொல்லி மையத்துடன், கதாபாத்திரங்களுடன் வைத்து தைத்து விட முடியும். தேவை அதற்கான ரசனையாளன் அல்லது முற்றிய மனது!
இந்த ஒரு சிறு ரசனைக்கான/தான் வாசிக்கும், படங்களின் ரகங்களை தேர்ந்தெடுக்கும் பின்னணியில் எது போன்ற ரசிகன் இருக்க முடியும் என்று புரிந்து கொள்வதில் என்ன குழப்பம் அல்லது ஆச்சர்யம். எதற்காக அந்த கதை சொல்லி இப்படியான ஒரு ரசிகனை தான் சம்பாதித்து இருக்கிறோமா என்று தெரிய வரும் பச்சத்தில், அவரே துணுக்குற வேண்டும்?
இதிலிருந்து எனக்கு தெரிய வருவது என்னவென்றால் அந்த கதை சொல்லியின் ஜெனியூன் ஈடுபாடு, கலப்படமற்ற எழுத்து, இயக்கம் மற்றும் வழங்கிய விதம்- தன்னுடைய மண்ணைப் பற்றியும், அந்த மண் சார் மக்களைப் பற்றியும் அதன் விழுமியங்களைப் பற்றியும் எந்த விதமான சாய்வுகளுக்கும் உட்படுத்தாமல் காலங்களை தாண்டி எதார்த்தம் சொல்லி நிற்பவையாக வழங்கியிருக்க வேண்டும்.
இன்னும் நான்கு தலைமுறைகளைக் கடந்து ஈழத்திலிருந்தோ/தமிழகத்திலிருந்தோ புலம் பெயர்ந்த ஒரு தமிழன் இதே போன்றதொரு ட்ரைப்யூட் ஏதாவது தன் மண் சார்ந்த விழுமியங்களை, விளிம்பு நிலை வாழ்க்கையை சொல்லும் ஓர் உண்மையான கதை சொல்லிக்கு எடுப்பான். அப்பொழுதும் இது போன்றே இத்தனை மொழியறிவோடு இருக்கும் ஒருவன் எப்படி பத்து மிதி/மாட்டு வண்டிகளோடு வாழ்ந்த ஒரு கதை சொல்லியைப் பற்றி அறிந்து இத்தனை உருக்கத்தோடு வயொலின் பின்னணியில் ஒலிக்க நம்மை விசும்பச் செய்யும் வகையில் ஓர் அஞ்சலி செலுத்த முடியுமென்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருப்போம்.
தொடர்ந்து ஆழ் மனதின் எல்லைகளற்ற பெரும் விசும்பல்களும், பொறாமையும், அகங்காரமும் மட்டுமே வேப்ப மரத்தின் உச்சியில் நின்று அசைந்தாடுவதை ஒத்து காட்டிக் கொடுப்பதாக உள்ளது இந்த அண்டமகா பேரொளியின் பெருமூச்சுகளை செவி மடுக்கும் பொழுது.
பி.கு: இந்த தொடர்புடைய சுட்டிகள் சம்பந்தபட்டவர்களைபற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது அதற்கு ஒரு சிறப்பு நன்றி! தெறிஞ்சிக்காமயே செத்தாலும் நெஞ்சு வேகும்தேய்ன்... இருந்தாலும்...

Related Links:




Related Posts with Thumbnails