Saturday, July 27, 2019

Dragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்

1870கள் அமெரிக்காவிற்கு ரொம்ப முக்கியமானதொரு பத்தாண்டு. ஒரே நேரத்தில் இரு வேறு கரைகளிலிருந்து இரு வேறு இனங்களுக்கு இடையேயான
போராட்டத்தை வாசிப்பனுபவத்தின் மூலமாகப் பெற முடியுமா? முடியும் என்கிறது இரு வேறு வித்தியாசமான தளங்களைக் கொண்ட புத்தகங்கள்.
இதில என்ன முக்கியமானதொரு விசயம்னா- ஒரு புத்தகம் முழுக்க முழுக்க வரலாற்று உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் சிவப்பிந்தியர்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது (Bury My Heart At Wounded Knee by Dee Brown).
மற்றுமொன்று நம்ம ஜுராசிக் பார்க், ப்ரே, நெக்ஸ்ட், மைக்ரோ போன்ற பிரபலமான நாவல்களை கொடுத்த மைக்கேல் க்ரிக்டன் எழுதிய Dragon Teeth என்ற புனைவு நூல்.
சிவப்பிந்தியர்களை பற்றிய புத்தகத்தில் நாம் அவர்களுடன் திறந்த வெளியில், பனியில், மலைகளின் குடைவிடங்களில், பள்ளத்தாக்குகளில் அவர்களுடன் அவர்களது எருது தோலில் கட்டப்பட்ட குடிசையில் உண்டு, படுத்துறங்கி, குதிரையில் பயணித்து நட்ட நடு இரவில் காலனி காலத்தைய அரசு அதிகாரிகளுக்காக காத்திருந்து, நீட்டும் இடத்தில் கையெழுத்திட்டதை சாட்சியாக இருந்து பார்ப்பதாகட்டும்...
அவ்வாறு பெற்றுக் கொண்ட நிலத்திற்கு இணையாக அவர்களுக்கு ரேஷன் முறையில் கொடுக்கப்படும் காபி, சீனி, கம்பளி மற்றும் துப்பாக்கி வெடி பொருள் கொடுப்பதை தாமதப் படுத்தி அதன் மூலமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஒருவனாக நின்று பார்ப்பதுதாகட்டும்...
தங்களுக்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட நிலத்திற்குள் உள்ள மலைகளில் தங்கம் கிடைப்பதாக செய்தி பரவி, ஒப்பந்தத்தையும் மீறி அப்பொழுதே புதிதாக கட்டப்பட்ட புகை வண்டி பயணத்தின் மூலமாக மேற்கத்திய பயணம் எளிமை பட, திபுதிபுவென் கூட்டம் சிவப்பிந்தியர்களின் நிலத்திற்குள் படையெடுக்க ஆரம்பித்ததும் அவர்களுக்குள் நடைபெற்ற மன சஞ்சலங்களை கேட்டவாறு, புகை வண்டியை மறித்து பொருட்களை கொள்ளையடிக்க குதிரைச் சவாரி செய்வதில் ஒருவனாக ட்ரைனை விரட்டிச் செல்வதுமாக சென்று...
அவ்வாறு அடிக்கடி நிகழும் பொழுது அவர்களைத் தேடி அழிக்க வரும் காலனி படை வீரர்களை தந்திரமாக சுற்றி வளைத்து கொன்று போடுவதாகட்டும்...
பின்பொரு நாள் அவர்களது கிராமங்களுக்குள் காலனி படை வீரர்கள் வந்து குடும்பம் குடும்பமாக கொன்று தலைத் தோலோடு வெட்டிப் போடுவதை நடுங்கிய உடலோடு கண்ணுருவதாக இருக்கட்டும்... சிவப்பிந்தியர் வாசிப்பு நம்மை அவர்களில் ஒருவனாக இருந்து அந்த போராட்டத்திற்கான நீதிகளை பார்க்க வைக்கும்.
அதே நேரத்தில் மைக்கேல் க்ரிக்டனோட புனைவில் அந்த வெள்ளையர்களின் பூட்டிய இரயில் பெட்டியின் அறைக்குள் இருந்து நம்மை எது போன்ற உரையாடல் நடைபெறுகிறது சிவபிந்தியர்களை பற்றி என கேட்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது.
அந்த புகை வண்டி உரையாடல்கள் டைனோசார்களின் புதை படிமங்களை தேடிச் செல்லும் அறிவியலாளர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுக்களுக்கிடையே சிவப்பிந்தியர்கள் பற்றியான அச்சம், அன்றைய போரில் எந்த ஜெனரல் கொல்லப்பட்டார் என்றும், மணிக்கு 10 கி.மீ வேகத்திலே நாள் கணக்கில் நம்மை அந்த புகை வண்டியில் கூட்டிச் செல்கிறார்கள்.
இதில் வரும் ஆண்டுகளும், சம்பந்த்தப்பட்ட இடங்களும், இரண்டு இனங்களில் முக்கியமான மனிதர்களின் பெயர்களுகும் சிறிதும் மாற்றமில்லாமல் கொடுப்பதை வாசிக்கும் போது, மாறி மாறி நாம் குதிரையின் மீதேறி அமர்ந்தவாறு அந்த புகை வண்டியை தடுத்து நிறுத்த திட்டமிடுவதாகவும், புகை வண்டிக்குள்ளிருந்து உணவின் விலையைப் பற்றிய குறைகூறலும், கடந்து போகும் ஸ்டேசன்களிலிருந்து எங்கே சிவப்பிந்தியர்கள் தாக்கி விடுவார்களோ என்ற பயத்துடன் பயணம் செய்வதாகவும் எடுத்துச் செல்வது ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவம்.
இரண்டு புத்தகத்திற்கும் பேக் ரெஃபரன்ஸ்ல் கடுமையான உழைப்பு தெரிகிறது. புனைவுதானே என்று க்ரிக்டனும் விட்டுவிடவில்லை...

Wednesday, April 24, 2019

பொதுபுத்திக் கனவுகள்: Sapiens - 4


கட்டுக்கதைகளே நம்மை உலகினோடு ஒட்டி ஒழுக கட்டியெழுப்பப் பட்டுள்ள சிறைகளின் மதில்களை ஒத்தது என்கிறார் சேப்பியன்ஸ் புத்தகத்தின் ஆசிரியர். இதனை நிறுவ இவர் மதங்கள், அரசுகள், அரசியல் கொள்கைகள், ஒரு பெரிய கார்ப்பரேட்டின் வியாபார முழக்கங்கள் என்ற விசயங்களை கையில் எடுக்கிறார்.
நம்முடைய அன்றாட சொந்த அக விருப்பத்தின் பால் நாடுகின்ற தன்னியல்பில் வாழ்வது (live your life), கனவுப் பயணம் (dream trip) போன்ற விசயங்களில் கூட எந்த அளவுக்கு வெளியிலிருந்து கட்டமைக்கப்படுகிற கற்பனை வாதம் நம்மை அகத்திலும் வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்று அலசி அதிர வைக்கிறார்.
இதனை சற்றே விரித்துப் பார்த்தால் குழந்தைகளை நாம் தற்சார்பு (independent) முறையில் வளர்த்தெடுக்கிறோம் என்ற அணுகுமுறையில், தேனிலவிற்கு சென்றே ஆக வேண்டுமென்ற இடத் தேர்வில், நம்முடைய பெற்றோர்களை எப்படி நலம் பேணுவது என்று எடுக்கப்படும் முடிவுகளில் என்று அனைத்திலும் இன்று கார்ப்பரேட் விளம்பரங்கள் நமக்கான தேவைகளை பொதுமைப் படுத்தி அதன் வழியில் நம்மை வழி நடத்தி வருவதை தெரிந்து கொள்ள முடியும்.
எண்ணிப்பார்க்கும் பொழுது அதில் பெரிய உண்மைகள் இருப்பதாகவே படுகிறதெனக்கு. இன்றைய அளவில் பயணங்கள் மேற்கொள்வது என்பது ஊருக்கு சொல்லிக் கொள்ளத்தக்க மெச்சும் செயலாகிப்போனதுதானே. அது போன்ற பயணங்கள் தன்னியல்பில் உந்தப்படாமல், பயண ஏற்பாட்டு மையங்களும், விமான போக்குவரத்துக் கழகங்களும், ஏனைய சுற்றுலாத் துறை மேம்பாட்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றி புனையப்பட்ட கருத்துக்கள் நம்மை அந்த இடத்திற்கு செல்லத் தூண்டுவதில் முதன்மைப் பங்கு வகிக்கிறதுதானே.
மிகுந்த பொருட்செலவில் மேற்கெள்ளப்பட்டும் அது போன்ற பியர்ப்ரஷ்சர் (அடுத்தவர்களுக்கான) பயணங்கள் ஏதாவது நமக்கு படிப்பினைகளை ஆழ் மனதில் விட்டுச் செல்கிறதா என்றால் மிகவும் சொற்பமானவர்களே அதனை பெற்றதாக ஒப்புக்கொள்வோம்.
இப்படியான பொது கற்பனைவாத விதைப்புகளே பொதுவான விசயங்களான மதம் பொருட்டோ, ஒரு கார்ப்பரேட்டின் விற்பனை சார்ந்த மூளை மழுங்கடிக்கும் வியாபார யுக்தி பொருட்டோ கூட ஒற்றிணைந்து நம்மை இயக்கிச் செல்கிறது என்கிறார் ஆசிரியர். இதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டுமாயின் தனிப்பட்ட முறையில் இவைகளை கேள்வி எழுப்பி அதன் பொருட்டே நம்மை வெளிக் கொண்டு வர முடியும் என்கிறாரவர்.
பெரும்பாண்மையானவர்களால் ஒரு கதை நம்பப்பட்டு அதுவே சிறந்தது என்று எனும் பொழுது வெகு சிலர் தன்னிச்சையாக அதிலிருந்து வெளிக்கிட்டு, மற்றவர்களுக்கு தான் அறிந்ததை உணர்த்தி அதிலிருந்து மீட்டெடுக்க, ஏற்கெனவே நம்பிக்கொண்டிருக்கும் கதையை விட இன்னும் வலிமையான ஒரு கதையை கட்டமைப்பது அவசியமாகிறது (உ.தா: இன்றைய இந்திய அரசியலை எடுத்துக்கொள்ளலாம் - செக்கியுலர் வெர்சஸ் அடிப்படைவாதம்).
பெரிய அளவில் இன்றும் அடையாளப் பேணல் கருதி கண்டங்களை தழுவி நிற்பது மதங்கள். இது பல தரப்பட்ட மனிதர்களையும் ஒரு சில குறிப்பிட்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒன்றிணைத்து கட்டி இழுத்துக் கொண்டு போக ஒரு கால கட்டத்தில்உருவாக்கப்பட்டது. இதன் தேவை மனித ஓட்டத்தில் அவனுடைய சிந்தனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த கதையின் ஆணி வேர் சற்றே நெகிழ்ச்சியுறும் பொழுது, அந்த சித்தாந்தின் மீதான நம்பிக்கை பெருமளவில் மக்களிடத்தில் குறைந்து அது காற்றோடு கரைந்து காணாமல் போய்விடும் வாய்ப்புண்டு.
இந்த கால கட்டத்தில் நமக்கு இன்னொரு புனைவு தேவை. அது இந்த ஒட்டுமொத்த மனித குலத்தையும் அடுத்தக்கட்ட பரிணாம நவீனப்படுதலுக்கு தயார் படுத்துவதாக அமைய வேண்டும். எந்த கதை சொல்லி எதிலிருந்து ஆரம்பிப்பார்?

Monday, April 22, 2019

பொன்பரப்பி கலவரமும் சேப்பியன்ஸ் நூலும்: Sapiens - 5

நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5
ஹோமோ சேப்பியன்ஸ் நூல் எனக்கு என்னவோ மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டு பள்ளி மேற்படிப்பு படித்த அனைவரும் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாகப்படுகிறது.
இப்பொழுது நான் அந்த புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாகரீகங்களுக்குள்ளும் எப்படி சமூக அடுக்கதிகார முறை கட்டமைக்கப்படுகிறது, அது எதன் பொருட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது, அதன் பயன்பாடு என்ன என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
அந்த பக்கங்கங்களை வாசிக்கும் பொழுது எதற்காக இந்த சமூகம் இப்படி ஏற்றத் தாழ்வுகளுடன் இயங்குகிறது என்ற எளிய கேள்விக்கு பதிலுரைக்கிறது. முதல் கட்ட அறிதலின் பொருட்டு வாசிப்பை நாடுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அத்தியாயம்.
வரலாறு தோறும் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஓரளவிற்கேனும் சமப்படுத்த பல அவதார புருஷர்கள் வர வேண்டியத் தேவைதான் என்ன, எதன் பொருட்டு அவர்கள் தொடர்ந்து பேசி, சண்டை செய்ய வேண்டியுள்ளது என்பது அனைத்தும் நமக்கு விளங்கிவிடும் இந்தப் பக்கங்களை நாம் கடந்துவிடுவதற்குள்.
சமூக அடுக்கு "ஆண்டான் அடிமை" என்ற எளிய கட்டமைப்பில் அதற்குள் பல அடுக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பயன் உயர் அடுக்கில் இருப்பவர்கள் கீழ் அடுக்கில் உள்ளவர்களை சுரண்டி கொழுத்து வாழ்வதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை நிறுவி அதன் பயன்பாட்டினை அறுவடை செய்ய பல கட்டுக்கதைகள் தேவைப்படுகிறது. அதனயொட்டிய புனைக் கதைகள் மனிதர்களின் ஆழ் மனதில் நம்பிக்கை நச்சுக்களாக விதைக்கப்பட்டோ (வர்ணாஷ்ரம), சட்டங்களாக இயற்றியோ (வெள்ளையர்களும், கருப்பினத்தவர்களும் சமமல்ல, ஏழை, பணக்காரர்களின் வாழ்வமைவு ஆசீர்வதிக்கப்பட்டது) காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
இந்த கட்டமைப்பை விளக்க முற்படும் போது இந்த நூல் மிக தாராளமாக இந்து மதத்தின் பால் பிறந்த சாதிய சமூக அடுக்கு யாரால், எதற்கு உருவாக்கிக் கொள்ளப்பட்டது, அது எவருக்கு பயனளிக்கும் விதத்தில் இன்றும் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சமகால இந்திய அரசியலமைப்பைக் கொண்டு மிகத் தெளிவாக விளக்க எடுத்து கையாண்டுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.
இந்த புத்தகம் உலகம் முழுதிலும் மில்லியன் கணக்கில் விற்பனையாகி இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் சமூக அடுக்கு உருவாக்கத்திற்கு பின்னான அயோக்கியத்தனங்களை, சூழ்ச்சிகளை அப்பட்டமாக அடிக்கோடிட்டு இந்த உலகத்திற்கே புரிய வைக்க இந்துக்களின் சாதியக் கட்டமைப்பை பயன் படுத்திக் கொண்டுள்ளார்.
தீட்டு, தீண்டாமை, தூய்மை, மோலோன், கீழோன் அனைத்தும் ஒருவனை தரம் பிரித்து எவனை எந்தளவிற்கு வளர்ந்து வர இடம் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்கும், ஒவ்வொரு முறையும் பின்புலத்தை தோண்டித் துருவி அறிந்து கொள்வதற்கு பதிலாக கூட்டு அடுக்குகளைக் கொண்டு பிரித்து வைத்து விட்டால் பொதுப் புத்தியில் அதற்குண்டான புத்திகளை இவன் உள்ளடக்கியவன் என்ற கற்பிதங்களையும் நம்ப வைத்து அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயங்க வைக்க முடியும் என்பதே இதன் ஏற்பாடு.
இப்பொழுது உதாரணமாக ஒன்று பார்ப்போம். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான். நல்ல திறமையானவன் ஏதோ ஒன்று அவனுடைய இரத்தத்திலோ அல்லது மரபணுவிலோ இருக்கிறது அதனால் தான் கருப்பர்களை விட அதி புத்திசாலிகளாக, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறியும் அறிஞர்களாக இருக்கிறார்கள் என்ற வாதம்.
இரண்டு, நம்ம ஊரில் ஒரு குறிப்பிட்ட சாதி இனங்களில் பிறந்த குழந்தைகள் இசையிலும், நாட்டியத்திலும் மிக்க திறமை உள்ளவர்களாக இருக்கக் காரணம் இறைவனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அந்த குலத்தில் பிறப்பதால் தான் என்றொரு வாதம்.
ஆனால், இந்த இரண்டு கதைகளுக்குப் பின்னாலும் மாபெரும் உழைப்புச் சுரண்டலும், சூழ்ச்சியும் புதைந்து கிடக்கிறது என்கிறார் இந்த நூலாசிரியர். பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் மெருகேற்ற மெருகேற்ற அவைகளை நம்மால் வார்த்தெடுத்துக் கொள்ளும் திறமைகளை உள்ளடக்கியே பிறக்கிறது, ஆனால் அதற்குரிய வசதி, வாய்ப்பு அதற்குண்டான நேரத்தை எப்படி வழங்குவது?
இங்குதான் அந்த சமூக அடுக்கமைவு ஒரு சாரருக்கு எளிய வழியையும், அங்கீகரிப்பையும் கொடுத்து மெருகேற்றிக் கொள்ள, மேல் நிலைக்கு செல்லும் படியாக கட்டமைக்கப்பட்டு பயனளிக்கிறது. பயனளிக்காமல் போகக் கூடிய அந்த போர்வை சாதி'யம் கொண்டு மற்றவர்களிடத்தே கண்டறியப் படுகிறது.
இந்த சாதிய கட்டமைப்பு உடையாமல் கட்டிக் காக்கப்படுவதின் சூட்சுமம் இதுதான். இப்போ சாதி மறுப்பு மணங்கள் பெருகும் போது இந்த அடித்தளம் சுக்கு நூறாக தகர்ந்து விடுமல்லவா? தகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் தான் ஏனைய சமூக அநீதிகள் அடங்கி இருக்கிறது.
இப்போ புரிகிறதா இந்த நவீன தீண்டாமை உலகில் நீட், கேட் என்ற வடிகட்டல்கள் எதற்கு என்று? அவதாரப் புருஷர்கள் இத்தனை வரலாற்று ரீதியாக சக்தி படைத்த ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தை வெற்றியடைய வேண்டுமாயின் எத்தனை பெரிய பரந்து பட்ட பொது நோக்கும், கட்டற்ற பரிவும், விசாலமான பார்வையும் கொண்டிருக்க வேண்டும்.
நமக்கு அந்த முழுப் பயன்பாடும் வந்து கிட்டுவதற்கு முன்னதாகவே பல கட்டுக்கதைகளின் மூலமாக அவர்களுடைய பங்களிப்பு முடக்கப்படுகிறது. அந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது போராட்டம் மீண்டும் ஒன்றாவது படிக்கி சறுக்கி வந்து நின்றிருக்கும்.
வரலாற்று புத்தகங்களை எந்த கரையிலிருந்து நின்று கொண்டு மீள் வாசிப்பு செய்கிறோமென்பதும், இது போன்ற மானுடவியல் சார்ந்த புத்தகங்களை வயதோடு வாசித்து அவரவர்கள் நிலையில் தெளிவடைதும் முக்கியமாகிறது.
ஏனெனில் வரலாற்றில் எப்படி விளையாண்டோம் என்பது ஒரு பொருட்டே அல்ல! பிழைத்து அடுத்த கட்டத்திற்கு நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்வுச் சூழலைக் கொடுத்துச் செல்கிறோமா என்பதே படிமலர்ச்சியில் நம்மை படியெடுக்க இந்த இயற்கை வைத்திருக்கும் ஒரே ரூல்ஸ்!

Friday, April 12, 2019

புத்திசாலி – டைனோசாரா, மனிதனா?: ஒரு படிமலர்ச்சிப் பார்வை

படிமலர்ச்சியில இந்த பூமியோட 4.5 பில்லியன் ஆண்டு கால‌ இருப்பிற்கும்,  நம்மோட ஒன்றரை லட்ச ஆண்டுகளோட இருப்பை ஒப்பிட்டா நம்மோட இருப்பு ஒன்றுமே இல்லை இந்த கால ஓட்டத்தில் என்று புரிந்து கொள்ளலாம்.

இரண்டு பில்லியன் ஆண்டுகள் வரைக்குமே அது வரையிலும் இந்த பூமி வாயுக்களாலும், நெருப்பாலும், பொங்கி வழியும் எரிமலைகளின் தீ குழம்புகளாலும் பக்குவப்படுத்தப்படாமல் இருந்தே வந்துள்ளது. இடையில் முதல் உயிரினமான பாக்டீரியாக்கள் எட்டிப்பார்த்து 1.5 பில்லியன் ஆண்டுகள் வரை அடுத்தக் கட்ட உயிரினங்கள் வர வழி கோணி வாழ்ந்து வந்திருக்கிறது.

இருப்பினும் 540 மில்லியன் ஆண்டு வாக்கில்தான் உயிரின பன்முகத் தன்மை விரிவடைந்து எலும்புகளை கட்டமைப்பாக கொண்ட முதுகெலும்புடைய‌ உயிரினங்களும் கடல் சார்ந்த சுற்றுப்புறச் சூழலில் பல்கிப் பெருகி இருக்கிறது (நம்முடைய மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள பாறைகள் இந்த‌ ப்ரிகாம்ப்ரியன் கால கட்டத்தில் உருவானவைகளே). பிரிதொரு நாள் அந்த உயிரினங்கள் நீரிலிருந்து வெளியேறும் தகவமைகளைப் பெற்று சுமாராக 390 மில்லியன் ஆண்டுவாக்கில் தரை ஏறுகிறது. இவைகளே மனிதனாகிய நாம் தோன்றுவது வரைக்குமான முன்னோடி; அவைகளுக்கு உதாரணமாக தவளைகள், சாலமண்டர்கள், முதலைகள், பாம்புகள் மற்றும் டைனோசார்கள் வந்து வாழ்ந்திருக்கின்றன.

இந்த உயிரினங்கள் தோன்றிய வரைக்குமே பூமி பல மாற்றங்களை மிகவும் கொடூரமான முறைகளில் எதிர் கொண்டே நகர்ந்து வந்திருக்கிறது எனலாம். நாம் நின்று கொண்டிருக்கும் பூமி மேலோட்டிலிருந்து  100 மைல் தொலைவு கீழே சென்றால் மேன்டில் பகுதியை சென்றடையலாம். அந்த மேன்டில் பாறைக் குழம்பாக இருக்கிறது. அது ஓர் ஆற்றின் இயல்புடன் ஓடிக் கொண்டிருப்பதின் விளைவாகவே இங்கு கண்டங்களும் உருவாகி, அதில் மலைகளும், கடலும், நிலப்பரப்பும் கொண்ட ஒரு வனப்பான வாழத் தகுதியான இடமாக இந்த பூமி நமக்கு இடம் கொடுத்து அழகு பார்த்து வருகிறது.

அப்படியான பாறை குழம்பு சுமார் 252 மில்லியன் ஆண்டு வாக்கில் சைபீரியப் பகுதியில் உடைத்துக் கொண்டு மேலே எழும்பி எரிமலைகளின் வழியாக வெடித்து ஆறாக பல நூறு ஆண்டுகள் ஓடி பல கண்டங்களை நிரப்புகிறது. அது போன்றதொரு நிகழ்வுகள் நடை பெறும் கனம் தோறும் சுற்றுப்புறச் சூழலில் பல விதமான மாற்றங்களை உடனடியாகவும், பின் வரும் காலங்களுக்கும் நிரந்தமாக மாற்றி அமைக்கிறது. தவிர்க்க முடியாத பூமிய படிமலர்ச்சியின் இது போன்ற பெரும் நிகழ்வுகள் நடைபெறும் போது 80 சதவிகித உயிரினங்கள் மாண்டழிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறதாம்.

அந்த பேரழிவிற்கு பிறகு மீண்டும் மெதுவாக பூமியில் உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரு சூழல் உருவாகி அது மள மளவென முன்னெப்பொழுதும் இல்லாத வேகத்தில் புது விதமான பல்லுயிர்கள் பெருகக் காரணமாக இருந்தது. சுமாருக்கு 240-230 மில்லியன் ஆண்டுகளின் போது டைனோசார்கள் எட்டிப்பார்க்கிறது. பின்பு அது ஆயிரக்கணக்கான‌ இனங்களாக பல்கிப் பெருகி உலகின் அனைத்து பகுதிகளிலும் அதி சிறந்த தகவமைவுகளுடன் கோலோச்சுகிறது.

மீண்டும் ஒரு பேரழிவு. இந்த முறை அவைகள் சார்ந்து வாழும் சூழல்களான தட்பவெப்பம், உண்ணும் உணவின் போதாமை அல்லது விண்வெளிக் கல் ஒன்று பூமி மீது விழுந்தது என்ற கலவையான காரணிகளால், டைனோசார்களின் இருப்பு ஒரு முடிவிற்கு 65 மில்லியன் ஆண்டுகளின் போது வந்தது.

அந்த முடிவின் ஒரு தொடக்கமாக டைனோசார்கள் விட்டுச் சென்றது படிமலர்ச்சியின் அடுத்த நகர்வான பறவையையொத்த டைனோசார் இனமொன்று. ஆனால், அந்த படிமலர்ச்சியில் பூமி வெகு உக்கிரமாக இடம் கொடுத்து பார்த்தது, மாமிச உண்ணிகளான டி ரெக்ஸ் மற்றும் வெலாசிராப்டர் (ஜீராசிக் பார்க் படங்களில் நாம் அதிகமாக காணும் இனங்கள்). இவைகளே பறவைகளின் முன்னோடியான ஆர்க்யோப்ட்ரெக்ஸின் மூதாதை.

இந்த கால கட்டத்தில நாம எங்கய்யா இருந்தோம்னு கேட்டிங்கன்னா, பூமிக்கடியில குழி பறித்து வாழும் ஒரு சுண்டெலி அளவிற்கே பாலுட்டிகளாக இருந்திக்கக் கூடும். டைனோசார்களின் பேரழிவிற்குப் பிறகான கொழிப்பில் பூமி மீண்டும் தன் இருப்பை சமப்படுத்தி பல்லுயிர் பெருக்கத்தை முடுக்கி விட்டிருக்கிறது.

அந்த தவழ்தலில் இருந்து இப்பொழுது நம்முடைய இருப்பு ஒரு மனித இனமாக வந்தடைய வெறும் ஒரு லட்சம் ஆண்டுகளே! கடந்த 500 மில்லியன் ஆண்டுகளில் இது வரையிலும் ஐந்து பேரழிவு நடந்தேறி இருக்கிறதாம். அதில் ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் 90 சதவீத பேரழிவு ஏற்பட்டே மீண்டும் உயிரினங்கள் தழைத்திருக்கிறது.
இந்த நிலையில் அழிந்து போன டைனோசார்கள் நம்மை விட அதி பலசாலிகளாகவும், உணவு சேகரிக்கும் முறையில் புத்திசாலிகளாகவும் 275 மில்லியன் ஆண்டுகள் இந்த பூமியில நடந்து திரிஞ்சிருக்கு. ஆனா, நாம இந்த அளவுகோள்ல எங்க இருக்கோம்; வெறும் ஒரு லட்சம் ஆண்டுகள் இருப்புதான். ஆனா, அதுக்குள்ளும் எத்தனை பெரிய நாகரீகங்கள் எழுந்து வீழ்ந்திருக்கிறது? உதாரணமாக மத்திய கிழக்காசியாவில் மீசோபொடோமியா, தென்னமெரிக்க மாயன், தெற்காசியாவின் க்மோர், ரோமன் எம்பயர், க்ரீன்லாந்த் வைக்கிங் வாசிகள் போன்ற நாகரீங்கங்களுக்கெல்லாம் என்னாகின?

இவைகள் அனைத்தும் வெறும் 4000ம் ஆண்டுகளுக்குள் தான் நடந்தேறி இருக்கிறது. நன்றாக செழித்து வாழ்ந்து வளர்ந்து பின்பொரு நாள் பூமிய மாற்றங்களால் வியாதியும், இட நெருக்கடியும், நாம் மேற்கொண்ட இயற்கைசார் வளங்களின் மீது அளப்பெரிய அழுத்தமும் ஒன்று கூடி உணவு உற்பத்தி குறைந்து அடித்துக் கொண்டு மாண்டழிந்தது போக ஏனையவர்கள், நல்லதொரு வாழ்விடம் தேடி இடம் பெயர்ந்திருப்பார்கள்.

இப்பொழுது அப்படியே காமெராவை நாம் வாழும் காலக் கட்டத்திற்கு நகர்த்துங்கள். என்ன பார்க்கிறோம். கிட்டத்தட்ட நாம் கடந்த கால வரலாற்றை செயற்கையாக மிக விரைவாக தருவித்துக் கொண்டிருப்பதாகப் படவில்லை. 2030களுக்குள் நமது பூமியின் வெப்ப நிலை ஒரு டிகிரி சென்டிக்ரேட் அதிகரிக்கப் போவதாக தெரிகிறது. அது எது போன்ற விளைவுகளை உயிரினங்களின் மீதும் நம் மீதும் செலுத்தப் போகிறது என்று தெரியாது. அதற்கான தயாரிப்புகளாக மழையளவு குறைந்து வருவது, விரைவு பாலைவனமாகும் நிலை, குடிநீர் பற்றாக் குறை, காற்று மாசு, போதாக் குறைக்கு நாம் எடுக்கும் தவறான அரசியல் முடிவுகள் இந்தக் காரணிகளை ஊக்குவிக்க‌ பெரும் பங்காற்றி வருகிறதுதானே!

எனக்கு எழும்புவது ஒரே ஒரு கேள்விதான் டைனோசார்கள் வாழ்ந்ததின் ஒரு 10 சதவீத இருப்பு ஆண்டுகளாவது நாம் இந்த பூமியில் வாழ்ந்து பார்த்துவிடுவோமா? அப்படி இல்லையெனில் நாம் இந்த பூமியிலேயே தோன்றிய உயிரினங்களில் அதி புத்திசாலியும் அதே நேரத்தில் முட்டாள் உயிரினமும் நாமாகத்தான் இருப்போம்.

P.S: இந்த கட்டுரையை வாசகசாலை இணைய தளத்தில் பிரசுரித்த க. விக்னேஷ்வரன் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.



*படிமலர்ச்சி = பரிணாமம்

Tuesday, April 09, 2019

ரஜினிக்கு ஒரு கடிதம்: நதிநீர் இணைப்பு

பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே நதிகளை இணைக்க வேண்டும் - ரஜினி காந்த்.

அளவிற்கு மீறிய புகழ், பணம், அதிகாரம் இது எல்லாமே ஒரு நிலையில் காலம் ஒருவருக்கு வைத்த செக்மேட் அல்லது சாபம் எனக் கொள்ளலாம்.

இவைகள் அனைத்தும் கிடைத்தும் ஒருவருக்கு தன்னுடைய லிமிட், டிலிமிட் அறிந்து கொள்ளத் தேவையான தனக்கென நேரம் செலவழிப்பு, நல்ல புத்தகங்கள் வாசிக்கத் தேவையான மன நிலை, தன்னுடைய நிலைக்கென தன்னிடம் பழகும் மனிதர்களைத் தாண்டிய நட்பு பேணும் மனநிலை அமைவது என்பது சிம்ம சொப்பனமே!

உண்மையான "டவுன் டு எர்த் பர்சன்" என்பது அதுவாகத்தான் இருக்க முடியும். எளிமை, பணிவு, பக்குவம் என்பதும் அந்த உலகத்தின் கூரையில் தான் இருக்கிறோம் என்றாலும், இடம், பொருள் தன்னுடைய அறிவிற்கு இதைச் சொல்வது பொருத்தமானதா என்று அறிந்து பேசுவதில் இருக்கிறது.

இந்த நதிநீர் இணைப்பை பற்றி இந்த சூப்பர் ஸ்டார் தொடர்ந்து தன்னுடைய மட்டித் தனமான வாதத்தை வைக்கிறாரே, இவர் இந்த பூமியுனுடைய இரண்டு பில்லியன் ஆண்டுகளின் படிமலர்ச்சிப் பற்றி ஏதாவது வாசித்திருப்பாரா?

கடந்த 600 மில்லியன் ஆண்டுகளுக்குள் எது போன்ற கரடு முரடான வளர்ச்சிகளை இந்த பூமி முகம் கொடுத்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தி இருப்பாரா? ஏன் அவ்வளவு தூரம் போகிறோம் பெர்மியன், ட்ரையாசிக், ஜுராசிக், க்ரேட்டேசியஸ் என்ற பூகோள கால க்ரமத்தில் என்னவெல்லாம் இந்த பூமி மேலோடு மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று அவருக்கு யாராது சொல்லி இருப்பார்களா?

300 மில்லியன் ஆண்டுகள் வரைக்குமே கண்டங்களே இல்லாமல் ஒன்றாக பாஞ்சியா (Pangea) என்ற முழுப் தரைப்பகுதியாகத்தான் இந்த பூமி இருந்திருக்கிறது. ஒரே கடல்தான்.

டைனோசார்கள் கோலுச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான் நிலப்பரப்பு பிய்த்துக் கொண்டு தனித்தனியாக கண்டங்களாக நகர்ந்திருக்கிறது. அப்பொழுது ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த நதிகள், ஆறுகளுக்கெல்லாம் என்ன வாகி இருக்கும்?

இருந்த பெரிய ஆறுகள் காணாமல் போயிருக்கும் அத்துடன் அதனையொட்டி வாழ்ந்த உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துப் பட்டிருக்கும். பூமியின் மோலோடு மாற்றி அமைக்கப்பட்டதால் புதிய ஆறுகள் அதனதன் வழியை கண்டுபிடித்து உருவாகி இருக்கும். அதனையொட்டிய நிலப்பரப்பில் அதனையொட்டிய சுற்றுச்சுழலுக்கு தகுந்த தகவமைவுகளுடன் உயிரினங்கள் உருவாகி படிமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கும்.

இவை எதுவுமே ஒரே இரவில் அடைந்த மாற்றங்கள் கிடையாது.
கோடிக்கனக்கான ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த பின்னணியில் வைத்து நம்மை பார்த்தால், நாம் யார் இந்த பூகோளத்தின் வரைபடத்தை திருத்தி எழுதிக் கொள்ள? அப்படி நதிகளின் வழியை திருத்தி அமைக்கும் பொழுது எது போன்ற நீண்ட கால மாற்றங்களை இந்த சுற்றுப் புறச் சூழல் முகம் கொள்ளும் என்று சிந்தித்தது உண்டா, மிஸ்டர். சூப்பர் ஸ்டார்?

அன்று தழைத்து, கொழித்து வாழ்ந்து வந்த டைனோசார்கள் இன்று எங்கே? எதனால் அவைகள் அழிந்து பட்டிருக்கக் கூடும்? நீரும், உணவும் தானே அடிப்படை ஆதாரம் அனைத்து உயிரினத்திற்கும் ஆறுகள் தன்னியல்பில் தனது பாதை கண்டு கடலில் கலப்பது தானே காலச் சக்கரம் அதற்கு வழங்கிய இயல்பு. இதில் உங்க ஒரு கோடி ரூபாய் கொண்டு வேண்டுமானால் இருக்கும் குளம், குட்டை, ஆறுகளை தூர் வார கொடை அளியுங்கள்.

போகாத ஊருக்கு வழி காட்டாதிங்க. செலவு மிச்சம்னு.

யாரோ சொல்கிறார்கள் என்பதால் லாஜிக் இல்லாத தன்னுடைய அறிவிற்கு எட்டாத விசயத்தை எல்லாம் உளரி வைக்கக் கூடாது. தானே தேடிப் படித்து, சிந்தித்து பெரும் பெரும் பிரச்சினைகள் பொருத்து வாயை விட வேண்டும்.

உங்களுக்கு ஒரு புத்தகம் சிபாரிசு செய்கிறேன். ஆராய்ச்சிக்கான புத்தகமே ஆனாலும் ஒரு சினிமாவிற்கு உண்டான பிரமாண்டம் இருக்கிறது. உங்களது வாழ் நாளுக்குள் வாசியுங்கள். பிறகு நதிநீர் இணைப்பு பற்றி பேச கொஞ்சம் யோசிப்பீர்கள்.

The Rise and Fall of the Dinosaurs: A New History of a Lost World by Stephen L. Brusatte

Friday, March 15, 2019

வெறுப்பின் எச்சமே அழிவு: Hatred Is Self-destruction


நியூசிலண்ட்ல இரு வேறு துப்பாக்கிசூடுகள். ஆனா, இரண்டிற்கும் அடிப்படை காரணம் ஒன்றே. அது வெறுப்பு! மனித மனம் எப்போதும் எதிர்மறை எண்ணங்களின் மீது அதீதமான பிடிப்பு உள்ளதைப் போல நடிக்கும். இருப்பினும் ஓர் ஓரத்தில் நம்முடைய எதிர் முனையில் இருக்கும் நேர்மறை நாட்டாமையின் மீது கண் வைத்தவாரே, முதலில் அது ஒரு சிறு உவப்பு இல்லாத விசயத்தை செய்து பார்க்கும்.
நாம் உடனே விழித்துக் கொண்டு அதட்டி அது இருக்க வேண்டிய இடத்தில் சுருட்டி அமர வைத்து விட்டால் விளைச்சல் நிலத்தில் ஊடுருவும் களைகள் பெருகி பயிரின் விளைவு குறைவாகிவிடுவதைப் போல குறைந்து விடும்.
தவிர்த்து, எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து கேட்டும், பார்த்தும் தவறான வாசிப்புகளும் செய்து வந்தால் அது காட்டுத்தீ போல மட்டுக்குள் கொண்டு வர முடியாத வாக்கில் வளர்ந்து காடு, மேடு, பள்ளம், குழந்தை, முதியோர், நான், நீங்கன்னு பார்க்காம எல்லாரையும் அழித்து விடும்.
இந்த ஐந்து வருட ஆட்சியில் இந்தியா முழுமைக்கும் வெறுப்பு விதைக்கப்பட்டு மெதுவா அது அனைவர் புத்தியிலும் ஊடுருவச் செய்யப்பட்டிருக்கிறது. அது கொளுந்து விட்டு எரிந்து வாழும் வீட்டையே எரித்து சாம்பாலாக்கிக் கொள்வதற்கு முன்னால் விழித்துக் கொண்டால் அனைவருக்கும் நலம்.
இந்த வெறுப்பு, தூய்மை வாதம் பேச வைக்கிறது. குறுகிய சாளரங்களை திறந்து விடுகிறது. அவன் வடுகன், முஸ்லீம், க்ரிஸ்டியன், தாழ்த்தப்பட்ட சாதி என்று இல்லாத ஒன்றை வைத்து அடையாளப் படுத்தி குறுக்கிக்கொள்ளச் செய்கிறது. இன்று ஒரு குழுவை, ஓர் அடையாளப்படுத்தி அவனை அதற்குள் குறுக்கும் அதே மனது நாளை வேறொரு குழுவை இன்னொரு பாட்டிலிலுக்குள் அடைத்துப் பார்க்காது என்று என்ன நிச்சயம்.
நான் தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டே இரவோடு இரவாக தங்களை தற்காப்பு செய்து கொள்வதற்குக் கூட ஆற்றல் இல்லாத ஒரு தாயையும், இரண்டு குழந்தைகளையும் இரத்தச் சகதியில் வெட்டிப் போட்டு விட்டு தலை மறைவாகி விடுபவர்களும் அதே தமிழர்கள் தான். காரணம் உயர் சாதியாம், அவர்கள் தாழ்ந்த சாதியாம். இந்த லட்சணக் கட்டையில் அரசாட்சியை அவர்கள் கையில் கொடுத்து விட்டால் அனைவரும் ஒரே இரவில் ஒரு தாய் பிள்ளைகளாக ஆகி விடுவார்களாம். இதெல்லாம் என்ன மாதிரியான கதை?
பெரியாரும் வந்தேறி, கலைஞரும் வந்தேறி, சு. வெங்கடேசனும் வந்தேறி என்றால் நீ மட்டும் அப்போ யாரு? நீ உன்னுடய நிலப்பரப்பையும் அடையாளத்தையும் குறுக்கக் குறுக்க உன்னுடய இருப்பையே கேள்வி குறியாக்கி விடும் இயற்கையே அது தெரியுமா உனக்கு. வனத்தில் பரந்து விரிந்த காடுகளில் மட்டுமே ஆரோக்கியமான வழியில் பல்லுயிர் பேணல் நடந்தேறுகிறது.
இலங்கையில் நடந்த இனப்போரை காரணம் காட்டுகிறார்கள். அதற்கு பின்னான வரலாற்று சூழ்ச்சி அறிவாயா? அதே பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் நீ சாதிப் பெருமை பேசி வடுகன், வந்தேறி என்று உன்னுடைய இனத்தின் அடையாளத்தையே குறுக்கி அதே பாதையில் செல்லத் துணிகிறாயா? நீ யாருக்கு இரையாகிக் கொண்டிருக்கிறாய் என்று சற்று நிதானித்துப் பார் உண்மை விளங்கும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுதான் நம்முடைய மந்தை கூட்டத்திற்கு நடந்தேறுவது. கூட்டத்தை சிதறடித்தால் வேட்டையாடும் ஊண் உண்ணிக்கு வேட்டையாடல் எளிது. எளிய மூளை உடனடி பயன்பாட்டினை எண்ணித் திளைக்கிறது. திறனுடைய மூளை நீண்ட கால அறுவடையின் மீது கண் வைக்கிறது. நீ யாராக இருக்க வேண்டும்?
ஒரு ஜனநாயகத்திற்கு சீமான், வேல்முருகன் போன்றவர்கள் பேசும் அரசியலும் தேவைதான். அது சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் ஊறுகாய் அளவோட நிப்பாட்டிக் கொள்வது நல்லது. மிஞ்சினால் நஞ்சாகி, ஓர் இலங்கைப் போரைப் போன்று வீட்டிற்கே வரவழைத்து கொள்ளும் அனைத்து சாத்தியங்களையும் கொண்டது என்பதை உணருங்கள்.
பெரிய எண்ணங்களை, வெறுப்பை விதைவிக்காத, நிதானமாக நின்று முடிவெடுக்கும் மனித மாண்பு போற்றுபவர்களை தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றிற்கும் தெருவில் நின்று போராட்டம் நடத்தும் நிலையிலிருந்து மாறி, பதட்டமான சூழலிலிருந்து வெளிவந்து அனைவரும் மென்மேலும் ஒரு மகிழ்வான சமூதாயத்தை பெற்று வாழ்க்கை அமைதியாக நகர அது வழி நடத்தும்.

Saturday, March 02, 2019

நரி மனிதர்கள் ஒரு சிறுகதையின் ஊடாக நிகழ்கால அரசியல்!

சில கதைகள் படிக்கும் போதே தெரியும் இவை நம்மை நிலை குலைய வைத்து உலுக்கப் போகிறது என்று. அந்த வகையில் சற்றுமுன் ஒரு சிறு கதை ஒன்று வாசித்தேன். சாகித்திய அகாதெமி பிரசுரத்தில் வெளியான “ஆச்சரியம் என்னும் கிரகம்” என்ற தமிழ் தொகுப்பிலிருந்து ‘கோன் இச்சி வீடுமலை’ எனும் சிறுகதை.
தொடக்கத்தில் சிறுவர் கதை போன்று ஆரம்பித்து நமது இருமையின் ஓலத்தை உள்ளே செல்லச் செல்ல அதிகரிக்கச் செய்தது அச்சிறுகதை. கதை, கோன் இச்சி என்ற நரியைச் சுற்றி சுழல்கிறது. அந்த நரி தனது குடும்பத்துடன் மகிழ்வோட வாழ்ந்ததுதான். ஆனால், இடையில் தனது தினசரி நரி வாழ்வு மனச்சோர்வு ஊட்டி நகர வாழ்வு வாழ ஆசைப்படுகிறது. தனது காட்டின் அருகே அமைந்து போன காஃல்ப் தளத்திற்கு விளையாட வரும் பெரிய மனிதர்களைப் பார்த்து தானும் மனிதனாக வேண்டுமென்று உந்தப்படுவதே அதற்குக் காரணம்.
அங்கு வாழும் நரிகளுக்கு ஒரு சிறப்பு வரம் இருக்கிறது. ஓக் இலை ஒன்றை உச்சஞ்தலையில் வைத்தவாறு ஒரு மந்திரத்தை உச்சரித்தால் அது எதுவாக ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறதோ அப்படியே ஆகிக்கொள்ள முடியும். ஆனால், மாறியது மாறியதுதான் மீண்டும் பழைய படியாக நரியாக திரும்ப வரவே முடியாது.
அம்மாவிடம் தனது விருப்பத்தை கோன் இச்சி தெரிவிக்கிறது. அம்மா அதனைக் கேட்ட உடனேயே மிகுந்த வருத்தம் கொண்டு,முன்னால் நம்மில் சில பேர் இப்படி மாறிச் சென்றிருக்கிறார்கள், ஆனால் அவர்களால் திரும்ப வரவே முடியவில்லை. மேலும் நீ நினைப்பது போல மனித பிழைப்பு ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேக்காமல் மனிதனாகிவிட்டது.
தான் ஆசைபட்டவாரே கோட், சூட், டை அணிந்து, நகர வீதியில் இறங்கி நடந்து அங்கே முதலில் பார்த்த ஒரு வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்து உள்ளே செல்கிறான் கோன் இச்சி. விண்ணப்ப மனு என்றால் என்ன என்று கூடத் தெரியாமல், அப்பாவியாக நிறுவனரிடமே திரும்பக் கேக்கிறான். அவர் வித்தியாசமான ஆளாக இருக்கிறானே என்று மேலும் விசாரித்து தான் ஒரு வனமகனென்றும், முகவரியே கூட வனத்தையொட்டி புனைந்து கொடுத்த பெயர்களை கொடுப்பதையும் கண்டு ஆர்வ மூட்ட தனது கம்பெனியும் “மயிர்த்தோல் ஆடை” நிறுவனம் தானே என்றும் இவன் மலைப்பிரதேச ஆளாக இருப்பதால் பொருத்தமாக இருக்கும் என்று வேலை கொடுக்கிறார்.
ஆனால், கோன் இச்சிக்கு நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்றளவிலேயே ஞானம் இருந்ததே ஒழிய உண்மையாக அது எது போன்ற வேலை என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரிய வீடு, கை நிறையச் சம்பளம், ஆசைப்பட்ட படி ஒரு கம்பெனிக்கு அதிகாரி என்று பெருமிதம் கொள்கிறான். தானும் நிச்சயமாக ஒரு நாள் காஃல்ப் நமது பழைய வீட்டிற்கு அருகில் இருக்கும் புல் தளத்தில் விளையாடுவோம் என்ற கனவோடு உறங்கிப் போகிறான்.
மறுநாளிலிருந்து தனது உழைப்பை தீவிரப்படுத்தி அனைத்தையும் மிக வேகமாக கற்று, முதலாளியே இவனை ஒரு முன் உதாரணமாக காட்டி மற்றவர்களை வேலை வாங்கும் அளவிற்கு நல்ல பெயர் எடுத்து மென்மேலும் பதவி உயர்வு, சம்பளமென்று உயர்ந்தபடியே அவனது வாழ்க்கை நகர்கிறது. மாத மாதம் தனது நரியாக இருக்கும் அம்மாவிற்கு முயல், பன்றி இறைச்சி என்று நிறைய வாங்கிக் கொண்டுச் சென்று சந்தித்து விட்டு வருவான்.
அப்படியான ஒரு சந்திப்பில் அம்மா, கோன் இச்சியை தனது கடந்த கால வாழ்வு நரி என்பதை மறந்து விடுமாறு கூறுகிறாள்; அப்பொழுதுதான் மேலும் நீ மகிழ்வாக இருக்க முடியுமென்றும் எடுத்துச் சொல்கிறாள். ஆனால், கோன் இச்சிக்கு அப்பொழுது ஏன் சொல்கிறாள் அம்மா என்று விளங்கவில்லை.
வேலை இடத்தில் முன் பனி பருவகாலத்தில் நன்றாக விலை போகக் கூடிய தோல் ஆடைகளின் கையிருப்பு குறைவாக இருப்பதும், நிறுவனத்திற்கு அதன் மூலம் கிடைக்கும் உபரி வருமானம் குறையக் கூடுமென்றும் எண்ணுகிறான். அது வரையிலும் தொழிற்சாலை பக்கம் எட்டிப்பார்க்காதவன் உள்ளே நுழைகிறான். அங்கே கரடி, முயல், மான், அணில், நரி என்று அனைத்து வித விலங்குகளும் கொல்லப்பட்டு, தோல் குழு குழுவாக தொங்கவிடப்பட்டிருப்பதை முதன் முதலாக கண்ணுருகிறான்.
தலை ஒரு நிமிடம் சுற்றி நிற்கிறது. கதறி அழுகிறான் அவைகள் நம்மையே உற்றுப் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. குற்ற உணர்வு பீரிட தள்ளாடிபடியே வெளியே வந்து வீடு சேர்கிறான். இரவெல்லாம் உறக்கம் கொள்ள முடியாத படிக்கு அவனுக்கு நினைவு அதனைச் சுற்றியே வட்டமிடுகிறது.
மறுநாள் முதலாளி இவனை அழைத்து விடுகிறார். பாராட்டு பத்திரம் வாசித்து விட்டு, வரும் பருவ காலத்தில் நிறுவனத்திடம் தோலின் கையிருப்பு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு அவரே ஒரு தீர்வையும் கொடுக்கிறார். கோன் இச்சியை மலைக்குச் சென்று வேட்டையாடி நிறைய தோல்களை சேகரித்து வருமாறு பணிக்கிறார். கோன் இச்சி ஒரு நிமிடம் ஆடிப்போகிறான். முதலாளி தொடர்ந்து அப்படியாக செய்தால் பணி உயர்வும், மேலும் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதாகவும் கூறுவதை கேட்டதும் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியில் திளைத்து ஒத்துக் கொள்கிறான்.
தனது வேட்டைக் குழுவுடன் இவனும் கையில் ஒரு துப்பாக்கியுடன் மலைக்குச் செல்கிறான். காடு அதிர அதிர வேட்டை நாய்களை அனுப்பி மிருகங்களை இவர்கள் பக்கம் அனுப்பி சுட்டு தோல்களை சேகரிக்கிறார்கள். இச்சி கோனும் தன் பங்கிற்கு மிக அழகான பளபளப்பான ஒரு நரியை தூரத்தில் மற்றுமொரு விலங்கை துரத்திச் செல்வதைக் கண்டு, அந்த நரியை சுட்டு எடுத்து வருகிறான்.
வேட்டையின் போக்கை காண வந்த முதலாளி கோன் இச்சி வேட்டையாடிய நரியின் அழகை மிகவும் பாராட்டி இது போன்றதொரு அழகான, பளபளப்பான தோலை நான் கண்டதே இல்லை என்று புகழ்கிறார். அப்பொழுதே அவன் அந்த நரியை பக்கமாக கொண்டு வந்து மிக அருகில் வைத்து முகத்தை பார்க்கிறான்.
முகம் வெளிரி, கால்கள் கிடுகிடுக்கிறது கையில் பிடித்திருந்த துப்பாக்கியும், நரியும் நழுவி பூமியில் விழுகிறது. கதறி அம்மா என்றழைத்தாவாறு, காட்டிற்குள் ஓட்டம் பிடிக்கிறான். எதிர்படும் மரங்களின் மீது மோதியவாறும், வேர்களில் இரடி கீழே விழுந்து எழுந்தும் ஓடுகிறான்.
அவன் வேட்டையாடியது வேறு யாருமல்ல. அவனது அம்மாவைத்தான். அதற்கு பிறகு நடப்பது நம் அனைவருக்கும் தெரியும். மனிதர்களை வெறுக்கிறான். யாரையும் பார்க்க பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டது அதற்குப் பிறகு என்ன ஆனதென்றே தெரியவில்லை என்பதாக கதை முடிகிறது.
நீதி: இது கதையா? இது பாடம். வாசிக்கும் போது எனக்கு சமநோக்கில் இப்பொழுது உள்ள அதிமுக மந்திரி சபைதான் தொடர்ந்து மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. வரலாறும் தெரியாமல், தங்களின் கையில் இருக்கும் அதிகாரத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு, வியர்வை அதன் மகிமையும் உணராமல் ஏதோ தனக்கு இன்று இதமாக இருக்கிறது என்று கடும் உழைப்பின் பெயரில் ஈட்டிய உரிமைகளை எல்லாம் தாரை வார்த்து கொடுப்பதை பார்த்தால் அந்த கோன் இச்சிதானோ இவர்கள் என்று நினைக்க தோன்றவில்லை.
அதிலும் குறிப்பாக மாஃபா பாண்டியராஜனும், செங்கோட்டையனும் செய்து வருவது இச்சி கோன் செய்யத் துணிந்த அதே ”அம்மா நரியை” வேட்டையாடலை ஒத்த குழந்தைகளின் கல்வி உரிமையை பறிப்பது என்றால் மிகையாகுமா?
ஜப்பானிய மூலம்: ஷிஞ்ஜி தாஜிமா
தமிழில் : வெங்கட் சாமிநாதன்.

Tuesday, February 26, 2019

போர் ஒரு வியாபாரம்! War Business

அமெரிக்காவிற்கு போர் என்பது ஒரு வர்த்தகம். அவர்களுக்கு அது பொருளாதாரத்தை வளர்தெடுக்கும் ஓர் அங்கம். அப்படி பார்க்கும் அவர்களுக்கே சில நேரத்தில் தங்களுடைய பொருளாதாரத்தின் அடிமடியிலேயே கை வைத்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுவதுண்டு. உதாரணம் அண்மைய கால ஆஃப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா போர்கள்.

அங்கிருந்தெல்லாம் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவிற்கு போட்ட பணம் திரும்ப வரவில்லை. நாட்டின் படை வீரர்களின் இழப்பும் அதிகம். அமெரிக்க பொது மக்களுக்கு பொருளாதார இடர் பாடுகளைத் தாண்டி உயிருக்கு அச்சுறுத்தல் பயம் கூட இல்லை. ஏன்னா, பூகோள ரீதியா ரொம்ப பாதுகாப்பான தொலைவில இருக்குற ஒரு நாடு.

இந்த நிலையில் நம்முடைய நிலப்பரப்பிற்கு வருவோம். இத்தனை பெரிய நெருக்கடியான மக்கள் தொகையை ஒரு குறுகிய இடத்திற்குள் வைத்துக் கொண்டு, சும்மா போர் போர் என்று இரண்டு பக்கமும் மார்தட்டினால் இழப்பு என்னவோ அனைத்து விதத்திலும் இரண்டு பக்கத்திற்கும்தான்; இரண்டு விதத்திலும், பெரும் பொருளாதார மற்றும் உயிர் சேதத்தை சந்திப்போம்.

உண்மையான போர் என்று வரும் போது இரண்டு நாட்டு நிலப்பரப்பிற்குள் வான்வழி தாக்குதல் நிகழ்த்தினால், எந்த எடை கொண்ட குண்டுகள் போட்டுக் கொண்டாலும் எதுவும் பயனற்று போகப் போவதில்லை. எங்கு விழுந்தாலும் பாரிய சேதத்தை உண்டு பண்ணும். அதனை யார் அனுபவிப்பது?

போருக்கு பின்னால் நம்முடைய திறமையைப் பார்த்து, நம்மை விட குட்டி நாடுகள் உங்களுடைய போர் தளவாடங்களில் நாலு அதில், பத்து இதிலன்னு ஆர்டர் கொடுத்து பிசினெஸ் செய்து கொள்ள உதவப் போகிறதா?

இப்படி நடக்கவே வாய்ப்பற்ற, தேவையற்ற ஒன்றை வைச்சு அரசியல் லாபத்திற்காக ஹாலிவுட் படக் கதை ரேஞ்சிற்கு செஞ்சா நம்முடைய நம்பிக்கையை, மானத்தை நாமே பன்னாட்டு மேடையில இழந்துடுவோம்.

ஆல்ரெடி, இந்தியாவில படிச்சு வாங்கின பட்டங்களை ஒரு பயலும் வெளியில மதிக்கிறதே இல்லை. அதிலே இந்த மாதிரியெல்லாம் சுய சொரிதல் செஞ்சா ...ஹ்ம்ஹும்.

ஆனா ஒன்னு மட்டும் தெரியுது...

நம்மை ஆள்பவர்களுக்கு பன்னாட்டு மேடையில் இந்தியாவை ஓர் உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்கும் எந்தவிதமான உண்மையான அக்கறையும் கிடையாது. இருந்திருந்தால் இந்தியா என்றோ அனைத்து துறைகளிலும் தன்னிறைவை எட்டியிருக்க முடியும்.

அவர்கள் யாருக்கும் இந்திய கான்ஸ்டிடியூஷன் மீது எந்த விதமான நம்பிக்கையுமில்லை, மரியாதையுமில்லை. 🙄

பார்த்து பொழச்சிக்கிடக்கிற வழியப் பார்ப்போம்!

Monday, February 25, 2019

முதல் கோணல் முற்றும் கோணல்: Sinking Ship PMK

நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன் 🤓. என்ன சொல்லுறதுன்னே
தெரியல! இப்படி ஒரு (சாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க சாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம்.
யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.
உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.
சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...
திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க 🙄.
அண்ணா எந்த காரணங்களுக்காக அதை சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.
நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.
எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?
திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது?
அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!

Thursday, February 21, 2019

5, 8th STD பொதுத்தேர்வு குலக்கல்விக்கான நுழைவுவாசல்!

நியூஸ் 18ல குணசேகரன் 5 மற்றும் 8 வகுப்பிற்கு பொதுத் தேர்வு தேவையான்னு தலைப்பு வைச்சு அழகான கேள்விகளோட நகர்த்தும் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு பதினைந்து நிமிடம் தான் அதுவும் அந்த உலகமகா மேதாவி பத்ரி வாய திறக்கிற வரைக்கும்தான் முடிஞ்சது.
தெரியாமத்தான் கேக்குறேன் அதெப்படிடா ஊருக்கே ஒத்து வராத ஒரு விசயம் உங்களுக்கு மட்டும் சரின்னு படுது? எங்கிருந்து உங்க மாதிரி ஆளுங்களுக்கு மட்டும் இத்தனை அறிவு பொத்துகிட்டு மண்டைக்குள்ளற இறங்குது.
ஒரு பத்து வயது பிள்ளைக்கு ஐந்தாவதுல இருக்குடி உன்னோட வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தன்னு மிரட்டி மிரட்டியே பள்ளிக்கு அனுப்பினா அந்தப் பிள்ளை விளங்குமா? நீயெல்லாம் அமெரிக்காவில வந்து என்னாத்தை நொட்டிட்டு போயி அங்க சமூக காராச்சேவை ஆற்றப் போயிருக்க? பிள்ளைகளின் குழந்தமையை முளையிலேயே கிள்ளி போட்டுட்டு அப்படி என்ன மாதிரி வாழ்க்கையை வாழ கத்துக் கொடுக்கிறீங்க?
ஃபெயில் செஞ்சு மீண்டும் அதே வகுப்பிற்கு அனுப்பினா ஒவ்வொரு நாளும் எவ்வளவு அசிங்கமாக ஃபீல் செய்யும் அந்த பிஞ்சு மனசு. படுக்கையை விட்டு எழ ஆர்வம் வருமா? ஏன் பத்தாவது, பணிரெண்டாவது பிள்ளைங்க மதிப்பெண் அழுத்தத்தில தங்களை தற்கொலைக்கு தள்ளிக்கிறது போதாதா? அதையும் இன்னும் குறைத்து 10 வயசிலயே யோசிக்க சொல்லுறீங்களா?
இப்படி மிரட்டி பள்ளிக்கு அனுப்பினா அந்த மனசு எப்படியான பயங்களோட தன்னை வளர்த்தெடுத்து அடுத்த நிலைக்கு எடுத்துட்டுப் போகும்? பத்ரி கேக்குறார், ஏன் அப்போ பத்தாவது, பணிரெண்டாவது பிள்ளைங்களுக்கு பொதுத் தேர்வு வைக்கணும், ஏன் கல்லூரியிலயே வைக்கணும் அதுங்களும் பிள்ளைங்க தானே, அதுங்க என்ன பாவம் பண்ணுச்சின்னு கிண்டல் மசிறு வேற ...மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற கணக்கா. இதெல்லாம் இன்னும் எத்தனை வக்கிரத்தை உள்ளர போட்டு பூட்டி வைச்சிக்கிட்டு சாந்த சொரூபியா குரலை தனிச்சு, முடியல!
மிடில் ஸ்கூல் வரைக்குமே வகுப்பறையில் குழந்தைகளை கவனிச்சு அவுங்களுக்கு என்ன தேவைன்னு கவனிச்சு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையே இருக்கக் கூடிய பரஸ்பர நம்பிக்கையை எப்படி வளர்க்கிறது, அதன் மூலம் எட்டக் கூடிய தன்னம்பிக்கையை எப்படி அதீதப்படித்தி தாங்கள் கற்றுக்கொள்ளும் விசயங்களை தன்னெழுச்சியா உள்வாங்கி பிற்காலத்தில் அவனவனும் சொந்தமா சிந்திச்சு அவனவன் துறையில சிறக்கும் படியா facilitate செய்ய முடியுங்கிற வழியப் பாருங்க.
அதை விட்டுட்டு அந்த குழந்தைகளோட சிரிப்பையும் வாழ்க்கையையும் திருட நிக்காம. எனக்கு புரியுது அவிங்களுக்கு கை நிறைய வேலைய கொடுக்கிற மாதிரி குழந்தைகளோட பெற்றோர்களுக்கும் அள்ளி வைச்சிட்டா நீங்க பிற்காலத்தில் செய்யப்போற அயோக்கியத்தனம் ஒன்னுக்கும் ஒருத்தனும் தெருவிற்கு வர மாட்டான்... அதுக்கும் சேர்த்து ஓர் ஆப்பு அடிச்ச மாதிரி இருக்கு 5, 8, 10, 11 அண்ட் 12. சரியா போச்சா மக்களே!
சில மூஞ்சிகளை நினைச்சாவே குமட்டிக் கொண்டு வருகிறது. உங்களோடெல்லாம் இன்றைய என்னுடைய இருப்பை பகிர்ந்துக்க நேர்ந்ததை நினைச்சாவே கேவலமாக இருக்கிறது. இதெல்லாம் ஒரு பிழைப்பா!?

https://www.youtube.com/watch?v=eYBWJxMDHnI&fbclid=IwAR3WgI4e65bbzpSUJt6-V0KHFlynvJeyUFQA5nux-5UYw6jOJIz_x7-xOZ8

Thursday, February 14, 2019

ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens 3

சேப்பியன்ஸ் புத்தகத்தின் முதலாம் பகுதியை முடித்த நிலையில் இதனை பகிர்ந்து கொள்ளாமல் நகர்வதற்கு மனம் ஒப்பவில்லை.
எப்பொழுது சேப்பியன்ஸின் மூளையளவு பெருத்து, நிமிர்ந்த நடை கொண்டு, இரண்டு கைகளை வீசி நடந்து திரியும் நிலைக்கு இந்த பரிணாமம் அவர்களை எடுத்துச் சென்றதோ அன்றே அவர்களின் அறிவுப் பசியும், குடற்பசியும் பல்கிப்பெருகி மிக்க அழிவுகளையும், கட்டுக்கடங்கா வளர்ச்சியையும் விதைத்து அவர்களின் வழித்தடம் தோறும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறது எனலாம்.
ஆஃப்ரிகாவின் கிழக்கு கடற்கரையோரம் மெதுவாக நடந்து ஆசியாவின் மத்தியப் பகுதியை அடைந்தவர்கள் அப்படியே கொஞ்சம் பேர் இந்திய துணைக்கண்டப் பகுதியிலும், மேற்படி நகர்ந்து தெற்காசியப் பகுதிகளிலும் குடியேறினர்.
இடையில் தங்களுடைய உப மனித இனங்களை சந்திக்கும் கணம் தோறும் அறிவின்பால் சார்ந்தவர்களை புணர்ந்து உள்கிரகித்தோ, அல்லது பகையுணர்ச்சியின்பால் போரிட்டு அழித்தோ சேப்பியன்ஸ் இனம் தங்களை அந்த சூழலியலுக்கு தகுந்தாற் போல் தகவமைத்துக் கொண்டு தழைத்து வாழ்கிறார்கள்.
வேட்டையாடிகளாக இருந்த காலத்தில், நம்முடன் புழக்கத்தில் இல்லாத விலங்கினங்களை சந்திக்கும் கணம் தோறும், அதி புத்திசாலித்தனமான மண்டையறிவுடன் உருவாக்கப்பட்ட நாம் பல்வேறு பட்ட வேட்டை உக்திகளைக் கொண்டு ஏனைய விலங்கினங்களை கொன்று குவிக்கும் ஒரு பேரழிவின் கருவியாக்கி இருந்தது நம்மை இந்த இயற்கை என்பதை நாம் இங்கு மறந்து விடக் கூடாது.
பல கோடி ஆண்டுகளாக பல கண்டங்களில் செழித்து வாழ்ந்து வந்த பல பெரும் பாலூட்டிகள் எங்கெல்லாம் இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் காலூன்றினானோ அங்கெல்லாம் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே அழித்தொழிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில் நாம் வேட்டையாடிகளாக இருந்த காலத்தில் இயக்கமே அற்ற நாடோடிகள் என்றளவில் மட்டுமே நம்மை குறுக்கி பார்த்துக் கொள்ள முடியாது. நாம் பேரழிவுகளையும், போராட்டங்களின் ஊடாகவும் இந்த பரந்து விரிந்து கிடந்த கிரகத்தில் நம்முடைய ஆளுமையை மென்மேலும் வளர்தெடுத்துக் கொள்ள இரத்தம் சிந்தி ஆதி சேப்பியன்ஸ் செப்பணிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றளவில் புரிந்து கொள்ள வேண்டும்.
தெற்காசியாவின் தீவுகளிலிருந்து மெல்லப் பரவி என்று அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலண்ட் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கும் பெருமளவிலான விலங்கு உணவுச் சங்கிலிகளையும், அதனைத் தொடர்ந்த சூழலியல் மாற்றங்களையும் உருவாக்கத் தொடங்கினார்களோ அன்றே நமது அடுத்தக்கட்ட நகர்வும் தொடங்கிவிட்டது.
அதற்கு சில பத்தாயிரம் வருடங்களுக்குப் பின்னால் சைபீரியாவின் மேற்கு நிலப்பரப்பில் பனி உறைவினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த இணைப்பு, மேம்பட்ட சூழலியல் தகவமையும், விலங்கு புரதத்தின் பால் ஈர்க்கப்பெற்றிருந்த அந்த பகுதியில் வாழ்ந்த சேப்பியன்ஸ்களை மெல்ல வலசை போகும் பாலூட்டிகளின் பின்னால் நகர வைத்து வட அமெரிக்கா கண்டத்திற்குள் காலூன்ற வைத்தது.
அங்கும் ஒரு மாபெரும் பேரழிவிற்கு இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் வழி கோணி, சுற்றுச் சூழலில் ஒரு பெரும் மாற்றத்தினை உருவாக்குகின்றனர்.
இதிலிருந்து என்ன புரிய வருகிறது என்றால் எங்கெல்லாம் சேப்பியன்ஸ் காலடி பட்டதோ அங்கெல்லாம் அதி பயங்கரமான உருவத்தினை கொண்ட பாலூட்டிகளையும், எடையுடைய பறவைகளையும், பல்லூயிர்களையும் பெருமளவில் கொன்று குவித்திருக்கிறான். தங்களுடைய உடை, உணவு, பாதுகாப்பு என பல காரணங்களுக்காக.
அது மிக இயல்பாகவே நடந்திருக்கிறது. கற்கால கருவிகளை கையாண்ட காலத்திலேயே கிட்டத்தட்ட 50 விழுக்காடு அத்தனை பெரிய பேரழிவுகளையும் நிகழ்த்தியிருக்கிறது இந்த இருகால் கொண்ட அப்பாவிகளைப் போல் உள்ள சேப்பியன்ஸ் இனம்மென்று இந்த புத்தகம் பல சான்றுகளுடன் சுட்டிச் செல்கிறது.
பின் வந்த காலங்களில் அந்த பல்லூயிர்களின் நடமாட்டம் குறைந்த காலத்தில், வேளாண் இனம் அடுத்தக் கட்ட அலையாக இந்த நிலப்பரப்பெங்கும் ஆளுமை கொள்கிறது. முதல் ஆழிப்பேரலையையொத்த வேட்டையாடி சேப்பியன்ஸ் பரவலில் பெரும் விலங்கினங்கள் அழித்தொழிக்கப்பட்டன. இரண்டாவது அலையான வேளாண் குடிகள் நிலத்தினை திருத்தியும், அழித்தும் அடுத்த மாற்றத்தினை நிகழ்த்துகிறார்கள்.
மூன்றாவது அலையாக தொழிற்புரச்சி ஓங்கிய காலத்தில் நாம் இருக்கிறோம்... அவர்கள் அளவிற்கு அழிக்க ஒன்றுமில்லை என்றாலும் மிச்சமிருப்பது நம்முடைய இருப்பிற்கான இந்த பிராணவாயு அதுவும் மிச்சமிருக்கும் இந்த வனங்களில் மட்டுமே. அதனையும் கண் மூடித்தனமாக பழைய நினைப்புதான் பேராண்டி கணக்காக கையாண்டால், நாம் இந்த பூமிப்பந்தின் மேலடுக்கில் முகவரியில்லாமல் துடைத்தெரியப்படுவோம்.

Sunday, January 27, 2019

உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

இதுவே முதல் முறை கட்டாரின் வழியாக இந்திய பயணம் மேற்கொண்டது. ஒன்று எனக்கு வயசாகி இருக்கணும் இல்லன்னா எனக்கு தோன்றுவது போலவே தோகாவிலிருந்து அட்லாண்டாவை அடைவது மிக... நீண்ட அயற்சியைக் கொடுக்கக் கூடியதாக உள்ளதுன்னு மற்றவங்களுக்கும் தோன்றக் கூடியதாக இருக்கணும்.
அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நீண்ட பயணத்தை எப்படி பயனுள்ளதாக ஆக்கிக்க முடியும் என்பதின் பேரில் வாசிப்பிலுள்ள சேப்பியன்ஸ் புத்தகம் துணைக்கு வந்தது. இன்னொரு பத்து பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்த உடனேயே எனக்கான தனிப்பட்ட எண்ண வெடிப்புகள் நிகழத் துவங்கியது.
வாசித்துக் கொண்டிருக்கும் பக்கங்கள் எது சேப்பியன்ஸை ஏனைய மனித இனங்களிலிருந்து பிரித்து உலகம் தழுவிய முறையில் ஒரே அடிப்படை கருத்துருவாக்கத்தின் மீது நம்மை நிற்க வைத்து, பிற ஆதி மனித இனங்களை பின்னுக்குத் தள்ளி நம்மை முன்னேறச் செய்தது என்று பேசுகிறது.
அதற்கு அடிப்படையே மொழி என்கிறது இந்த புத்தகம். அதனை நிரூபிக்கும் வாக்கில் அருமையான உரையாடலோடு முன் நகர்த்துகிறார் புத்தக ஆசிரியர்.
ஏனைய உயிரினங்களும் அவையவைகளுக்கேயான சங்கேத ஒலி குறிப்புகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்து தங்களின் பாதுகாப்பை, உணவு தேடும் யுக்தியை பரிமாற்றம் செய்து தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. இருப்பினும் சேப்பியன்ஸ் அடுத்தக் கட்டத்திற்கு எப்படியாக தங்களை நகர்த்திக் கொண்டது? என்பதே அடிப்படைக் கேள்வி.
நெருப்பின் பயன்பாட்டை தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தது ஒரு வகையில் பெரிய தாண்டல் என்றால், நம்முடைய சிக்கலான மொழியறிவு இரண்டாவதாகும்.
இந்த மொழியறிவே கூட சிக்கலான கட்டமைப்பை பெறக் காரணம் நம்முடைய பொரணி பேசத் தக்க கற்பனா வாதமே முதன்மைக் காரணம் என்பதாக சொல்லி விரிகிறது இந்த புத்தகம்.
உதாரணமாக, நம்மை விட குறைந்த பட்ச உரையாடலைக் கொண்ட குரங்கினங்கள் ஆபத்து/உணவு அங்கே இங்கே என்று சுட்டிக்காட்டுக் கொள்ள ஒரு சில ஒலிக்குறியீடுகளின் வழியாக மட்டுமே தங்களது குழுவினருடன் கடத்திக் கொள்கிறது. ஆனால், சேப்பியன்ஸ் எங்கே உணவு இருக்கிறது, அதனை நெருங்கும் போது உள்ள ஆபத்து, அதன் பரப்பிடம், அருகில் என்ன இருக்கிறது, எப்படியாக சென்றால் அந்த இடத்தை விரைவில் அடையலாம், ஆபத்தை தவிர்த்து மீண்டு வருதல் என்பதாக உரையாடத் தலைப்படும் பொழுது எத்தனை மொழியறிவு தேவைப்படுவதாக உள்ளது.
இங்கிருந்துதான் சேப்பியன்ஸ்க்கு இரண்டாவது பெரிய தாண்டல் கிடைத்தது. இந்த உரையாடல், எதார்த்த, கற்பனை, புனைவு என்று பல நிலைகளில் விரிந்து விரிந்து சிறு குழுக்களை இணைக்கத் தக்க பெரிய பொய்களை உருவாக்கி கற்பனை கடவுளர்களை, நிறுவனங்களை எழும்பச் செய்து பரந்த நிலப்பரப்பில் வாழும் ஏனைய குழுக்களையும் இணைத்து ஒரு ஐடியாவிற்கு கீழ் வாழும் எதிரிகளற்ற வாழ்விடங்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
இதுவே நமக்கு முன்னால் வாழ்ந்த பிற மனித இனங்களுக்கு சாத்தியப்படாமல் போனது அவர்களின் இருப்பை ஆழ நிர்மாணித்துக் கொள்வதிலிருந்து தவறச் செய்தது.
புனைவுக் கதைகளே, உடல் இல்லாத ஒரு நிறுவனத்திற்கோ (நல்ல கதை சொல்லிகளே முதுகெலும்பு), கடவுளுக்கோ (சடங்குகள், சம்பிரதாய கட்டுப்பாட்டு புனைவுகளே முதுகெலும்பு) அல்லது நாட்டிற்கோ எல்லைகளை வகுத்து (வாழ்வு சார்ந்த விழுமியங்களை கடைபிடிப்பதாக சொல்லப்படும் புனைவுகளே முதுகெலும்பு) அதற்கென ஓர் உடலைக் கொடுத்து அது இருக்கிறது என்று நம் அனைவரையும் அதன் பின்னால் நிற்கச் செய்து ஒரு பெரும் இனக்குழுவாக கட்டி வைத்திருக்கிறது.
இந்த புனைவுக் கதைகள் சிக்கலான மொழிகளின் ஊடாக சேப்பியன்ஸ்களின் மனங்களில் விதைக்கப்படுவதின் பொருட்டே நம்முடைய இனம் தனித்துவம் பெற்றதாகிறது.
இப்பொழுது நான் நடு வானில் பறந்து கொண்டே இந்த சிந்தனை சிக்கல்களில் என்னை அமிழ்த்தி மீட்டெடுக்கும் வகையில் பறத்தலின் அபாயக் கவலைகளை மறக்கடித்தது கூட அதே கற்பனைப் புனைவுதான்.
பறத்தல் ஆபத்தற்றது என்ற எதார்த்த கற்பனைக் கதைகள் நன்றாகவே ஆழ விதைக்கப்பட்டதும் அது அனைத்து சேப்பியன்ஸ்களின் நம்பிக்கை பெற்றதுமேயாகும்.
இதன் ஒழுங்கிலேயே சென்று யோசித்தால் திருமணம், விழாக்கள், நல்ல பெயரைக் கொண்ட நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு கம்பெனி அனைத்துமே புனைவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பதாகிறதுதானே?
எனில் எது உண்மை? எல்லைகளற்ற நிலமும், இந்த மரங்களும், ஆறுகளும் மலைகளும்தான். மற்ற அனைத்தும் ஓர் ஐடியாதான். அதுவே நம்முடைய இருப்பை முழுமையாக எத்தினிக் (இனப்) போரில் விழுந்து அழிந்து விடாமல் இருக்க தப்பி பிழைத்துக்கிடக்க வைத்திருக்கிறது.
இந்த கதைகளே பெருமளவில் கேள்விகளற்று விதைக்கப்படும் போது பிற்காலத்தில் நமக்கு ஆப்பு வைக்கக் கூடியதாகவும் அமையக் கூடும். அது எப்படி என்று மேல் வாசிப்பில் பிரிதொரு நாள் என்னுடைய எண்ணங்களையும் இணைத்துத் தருகிறேன்.

Link for Part 3: ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens-3

Saturday, January 26, 2019

மகப்பேறு மரணங்கள் ஒரு பரிணாமப் பார்வை: Sapiens வாசிப்பு - 1

இந்த முறை சென்னை புத்தகத் திருவிழாவில பல முக்கியமான புத்தகங்கள் வாங்கினேன். அதில் யுவால் நோவா ஹராரி எழுதிய "சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு" ம் ஒன்று.

இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் மொழி பெயர்ப்புகள் மிகத் தேவையான ஒன்று என்று பல இடங்களில் உணர்கிறேன்; அதுவும் 25 பக்க வாசிப்புக்குள்ளாகவே இந்தப் புத்தகம் அதனை உறுதி செய்கிறது!

ஏனெனில் பரிணாம உயிரியலின் (evolutionary biology) அடிப்படை இயங்குதளம் பற்றிய அறிவு போதுமானதாக இருக்கும் எனக்கே இந்த நூல் பல இடங்களில் அட என்று நிமிர்ந்து உட்காரச் செய்வதாக உள்ளது.

இதன் பின்னணியில் அந்த வாசிப்பே அற்ற மற்ற துறை சார்ந்த வாசகர்களுக்கு எது போன்றதொரு வாசிப்பனுவத்தை வழங்கக் கூடும் என்று எண்ணும் பொழுது அறிவியல், வரலாறு சார்ந்த தமிழ் மொழி பெயர்ப்புகள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அறிவுசார் நிலையில் நகர்த்தக் கூடிய முக்கிய கருவியாகும் என்று தோன்றச் செய்கிறது.

இந்த புத்தகம் இன்றும் நாம் எதிர் கொள்ளும் பல நிகழ்கால உடலியல், உளவியல் சார்ந்து நம் கைகளுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளுக்கு எதுவெல்லாம் காரணிகளாக இருந்து செயல்படுகிறது என்பதை ஆழமாக அலசிச் செல்கிறது.

உதாரணமாக மகப்பேறு சமயத்தில் ஏன் தாய் சேய் மரணம் நிகழ்கிறது என்பதை நம்முடைய எழுந்து நின்று இரண்டு கால்களில் (bipedal) நடக்கும் காலத்திலிருந்து தொடங்கி, நம்முடைய மூளையின் அளவு, எடை என பிணைத்து பிறப்புறுப்பின் குறுகலே அதற்கான மூலம் என்று நம்மை புரிந்து கொள்ள கோரி நிற்கிறது. இங்கே உடனே ஏன் மகப்பேறு நேரத்தில் மருத்துவர் பேறு வழியை பெரிதாக்க கத்தி வைத்து சிறிது கிழித்து விடுகிறார் என்பதற்கான பரிணாம வழி விடைகிடைக்கக்கூடும்😲

மூளையின் எடையே ஒரு சுமை அதனை இந்த பரிணாமம் நம் தலையில் தூக்கி வைத்து உடலின் 25% சக்தியை உட்கொள்ளும் பேர்பசி கொண்ட வஸ்துவை, நாம் வேலை வாங்க சிந்தனையின் வீச்சம் அதிகரிக்கச் செய்தோமெனவும் அதுவே ஏனைய விலங்குகளைக் காட்டிலும் அதி வேகமாக முன்னேறி பரிணாம உச்சாணிக் கொம்பில் அமர வழி வகுத்தது எனவும் புரிந்து கொள்ளச் செய்தது.

இல்லையென்றால் வேட்டையாட உடல் திராணியற்ற நிலையில் ஊனுண்ணி சாப்பிட்டு மிச்சம் வைத்த மாமிசத்தை கழுதைப் புலிகள் வரண்டியது போக, நாம் இன்னமும் எலும்பை உடைத்து மஜ்ஜை உண்ணும் நிலையிலேயே இருந்திருப்போம்தானே.

அதே மூளையின் எடையே நம் தோள்களுக்கு மேல் வைக்கப்பட அதன் இன்னலாக கழுத்துப் பிடிப்பும், முதுகு வலியும் வரக்காரணம் என்று சொல்லும் போது, நிறைய உடல் சார்ந்த உபாதைகளுக்கு காரணம் கிடைக்கிறது.

அப்படியே தொடர்ந்து ஏன் பிற பாலூட்டிகளில் முழுமையாக வளர்ச்சியுற்ற குட்டி பிறந்து விழுந்த சில மணிதுளிகளுக்குள்ளாகவே எழுந்து நின்று நடக்கவும், சில வாரங்களுக்குள்ளாகவே இரைதேடிச் செல்லத் தக்கதாகவும் அமைந்து விடுகிறது எனக் கேள்வி எழுப்பி பதிலாக மனித மூளையின் வளர்ச்சி அளவும், கருப்பையில் சிசு இருக்கும் காலளவும், பிறக்கும் பொழுது பிறப்புருப்பின் குறுகல் கூறுகளுமே பரிணாமத்தில் இன்றளவும் ப்ரீமெச்சூர்டுத் தனமாக மனிதக் குழந்தைகள் ஈன்றெடுப்பிற்கான காராணமென சுட்டிக்காட்டுகிறார்.

இதுவே மனிதன் ஒரு நாகரீமாக பிற்காலத்தில் பரிணமிப்பதற்கான முதன்மைக் காரணி என்றும் அடையாளப்படுத்துகிறார். ஏனெனில் மனிதக் குழந்தைகளின் சார்ந்து வாழும் ஆண்டுகள் நீண்டிருப்பதால் அதற்கு குழுவாக சார்ந்து வாழும் ஒரு சூழல் தேவைப்படுகிறது, பின்னே அது ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டு, பிற்சேர்க்கைகளான மதம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ற கற்பிதங்களை அளவிற்கு அதீதமாக ஏற்றிக் கொண்டு எப்படி நம்முடைய இருப்பையே இன்று கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டது சேப்பியன்ஸ் என்பதாக இந்தப் புத்தகம் பின் வரும் பக்கங்களில் பேசுமென்று நினைக்கிறேன்...

அப்பப்போ எழுதுவேன் as I further continue reading this book, I suppose! 😏 Part 2 Link : உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

Related Posts with Thumbnails