Friday, November 27, 2009

ஈஷா வித்யாவும் சில எண்ணங்களும் - படங்களுடன் : Isha Vidhya

இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று கூறி, கூறி தோழி ராஜியை முதல் ஒரு வாரமும் அதனையொட்டி கோயமுத்தூரிலிருந்து கொண்டே என்னுடைய பைத்தியக்காரத்தனமான எந்தவொரு திட்டமுமில்லாமல் சுற்றித் திரியும் பழக்கமும், மேலும் மேலும் அவரைக் கூப்பிட்டு இன்று மாலை, நாளைக் காலை என்று கூறிக்கொண்டே கோவையிலிருந்தவன் சிறுவாணி சாடிவயல் வரைக்குமான பயணம் என்று கிளம்பி, அது சிறுவாணி பாதுகாக்கப்பட்ட வனத்தின் வழியாக, சிறுவாணி மேல் அணை வரைக்குமென நீண்டு, காட்டுக்குள்ளாகவே பாலக்காடு செல்லுவோம் என்று கிளம்பி அது மழம்புலா அணைக்கட்டு வரையிலும் நீண்டு அன்று இரவுதான் கோவை மீண்டும் வந்தடைய முடிந்தது. ஒரு புறம் ராஜீயை காக்க வைக்கிறோமே என்ற குற்றவுணர்வு இடித்துக் கொண்டே இருந்தாலும், அந்தப் பயணம் எல்லா வற்றையும் மறக்கடித்துக் நீண்டு கொண்டே சென்றது இனிமையிலும் இனிமையாக அமைந்து போனது.

ஒரு வழியாக ஆலந்துரையருகே அமைந்திருக்கும் ஈஷா வித்யாவை தருசிக்கும் வாய்ப்பை அந்த சிறுவாணி பயணத்திற்கு மறுநாள் காலையில் நிகழ்த்திக் கொள்ள முடிந்தது. இந்த முறை என்னுடைய கோவை பயணிப்பு முழுதுமாக வெளியிலும், உள்ளுமாக மிகவும் ஈரம் நிரம்பியதாகவே அமைந்திருந்தது. எங்கு திரும்பினும் மேகம் படுத்து உருளும் மலை முகடுகளாகவே காட்சியளித்தன. தென் மேற்கு பருவ மழை அப்பொழுதுதான் உள்ளே காலடி எடுத்து வைத்திருந்தததால் மரங்களும், செடிகளும், ரோடுகளும் ஒரே மகிழ்வுடன் தொப்பலாக நனைந்திருந்தது மென் மேலும் பயணத்தை பொருளுள்ளதாக அமைத்துக் காட்டியது.

ஈஷா வித்யாவிற்கு இருட்டுப் பள்ளம் பாலத்தின் மீதான பயணிப்பின் போது ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு ஒற்றைக் கல்லறை ஒன்றும் இடது புறமாக நின்று இயற்கையின் ஜாலங்களில் நானும் அடக்கம் என்று சான்று கூறி நின்றது. ஈஷா அறக்கட்டளை, வழியெங்கும் மரக் கன்றுகளை நட்டு அதற்கு கூண்டும் கட்டி அதன் மீதாக "நமது மரம்" என்று எழுதியிருந்தது, என்னுடன் வந்திருந்த ஒருவருக்கு மிக்க மகிழ்சியை அளித்தது. எப்படி அந்த கிராமத்து மக்களின் ஆதரவை பெறுவதற்கென "நாம்" என்ற வார்த்தை பயனளிக்கும் என்று சொல்லிச் சொல்லி அதிசயித்துப் போனார்.


ம்ம்ம் வழியெங்கும் அவ்வளவு அழகு தென்னைத் தோப்புகளும், வாழையும் பச்சை பசேலென ஏனைய தாவரங்களும் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டே வந்தது. திடும்மென அவ்வெளியில் காவி நிறத்தில் மிகவும் எளிமையான முறையில் இரண்டே கட்டடங்கள் ஆரவாரமில்லாமல் அந்த மலைகளின் பின்னணியில் உறுத்தலே இல்லாமல் கரைந்து போய் நின்றது.

கட்டடத்தின் ஒரு பகுதியில் நுழையும் பொழுதே என்னால் நமது வலைப்பதிவு தோழி ராஜியை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தார். என்னுடன் மேலும் மூன்று நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தேன். அது பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறதோ என்ற கவலையுடனேயே எல்லாரையும் அறிமுகப் படுத்தி வைத்தேன். ராஜீயும் உடனே அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களை அழைத்து எங்களை அறிமுகப் படுத்தியதோடு, பள்ளியை சுற்றிப் பார்க்க சிறப்பு அனுமதியும் வாங்கிக் கொண்டார்.

பள்ளியின் பல விசயங்கள் என்னுடைய மனத்தினுள் ஓடும் எதிர்பார்ப்புகளை மிக நேர்த்தியாக எதிர் கொண்டதாகவே முதல் அவதானிப்பு வழங்கியது. பள்ளிக் குழந்தைகளின் மிதியடிகளை ஒழுங்கு படுத்தி வைத்திருந்த பாங்கு, டிசிப்ளின் வீட்டிலும் எவ்வளவு அவசியம் என்பதனை தினப்படி பழக்கமாக கத்துக் கொடுப்பதற்கான ஒரு வழி முறையாக புரிந்து கொள்ள முடிந்தது. பிறகு வகுப்பு அறைகளின் ஆராவாரமற்ற, இறுக்கமற்ற, நல்ல விஸ்தாலமான உயர்ந்த கூரைகளுடன், செயற்கை வெளிச்சமே தேவையற்ற முறையில் நல்ல வெளிச்சம் படறக் கூடிய வகையில் நிறைய ஜன்னல்களுடன் [குழந்தைகள் நண்பக முறையில் - Children-friendly] அறைகளாக இருந்தது. அந்தக் குழந்தைகளின் மனநிலையில் என்னை வைத்துப் பார்க்கும் பொழுது எனக்கு அந்த அமைப்பு மிகவும் பிடித்துப் போனது. வகுப்பு அறைகளின் அமைப்பின் நேர்த்தி மிரட்டலே அற்ற முதல் படியாக அமைந்து போனது.

எனக்கு அந்தப் பள்ளியின் நோக்கமும், அங்கு படிக்க வரும் குழந்தைகளின் பின்புலம் ஆகியவற்றை கேட்கும் பொழுது, பல ஆச்சர்யங்களுடன் என்னை சற்றே பேச்சற்ற நிலைக்கு இட்டுச் சென்றது. அதனால், ராஜீயைப் பார்த்து அதிசயத்துக் கொண்டே வந்ததில் சரியாகக் கூட பேச முடியாத ஒரு நிலையை உணர்ந்தேன். என்னுடைய மலைப்பு அந்தளவிற்கு ஆழமாக நங்கூரமிட்டிருந்தது. அவர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக, ஒரு தனி மனித சிந்தனை இத்தனை ஆக்கப் பூர்வமான செயலாக எழுந்து நின்றதனைக் காணும் பொழுது எனக்கு அவ்வாறாக நேர்ந்து போனதில் வியப்பொன்றும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

ஈஷா வித்யாவில் படிக்கும் குழந்தைகள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள பொருளாதார வசதியற்ற, பின் தங்கிய மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் என கூறினார்கள். ஆனால், அந்தக் குழுந்தைகளுடன் பேசும் பொழுது அவைகளின் உடல், மன ஆரோக்கியம் மிகவும் பிரமிக்கத் தக்கதாக அமைந்தது. கண்களில் தான் என்னவொரு அறிவின் ஒளி மற்றும் தன்னம்பிக்கை, அந்த கண்களின் ஊடாகவே அந்தக் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமும் காண முடிந்தது.

நாங்கள் அங்கிருந்த நேரம் மதியத்தையும் கடந்து சென்றதால் எங்களுக்கு அந்தக் குழந்தைகளின் மதிய உணவு இடைவேளையையும் காணும் வாய்ப்பு கிட்டியது. ஈஷா வித்யா தங்கிப் படிக்கும் வசதியற்றதாலும், சுற்று கிராமத்தவர்களின் பயன்பாட்டிற்கென அமைந்ததாலும் தினமும் குழந்தைகள் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள் (அதுவே எனக்கும் பிடித்ததாகப் படுகிறது). எனவே விரும்பிய பெற்றோர்கள் மதிய உணவையும் கையோடு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் போலும், ஒரு ஆழ்ந்த மதிய உணவு குழு ப்ரேயர் பாடலுக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்கள். அதே கட்டடத்தின் மறு முனையில் மதிய உணவு கொண்டு வராத குழந்தைகளுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த உணவினை காணும் பொழுது அது ஒரு சரி விகித உணவாகப் பட்டது, சப்பாத்தி, கொண்டக் கடலை, ஏதோ ஒரு கீரை வகையென அமைந்திருந்தது.

அதனை காணும் பொழுது எனக்கு மீண்டும் பிரமிப்புத் தட்டியது. எப்படி அத்தனைக்கும் நிதி திரட்டி இதனை தினமும் செய்து வர முடியுமென்று. இதற்கு எத்தனை பேரின் பெரிய உழைப்பு தேவைப் படும் என்று நினைக்கும் பொழுதே, மீண்டும் பூமியில் எனது பாரம் அதிகரித்துப் போனது. இந்த நோக்கத்தினை செயலாக்க, எல்லாவற்றையும் பின் தள்ளி இந்த நோக்கத்திற்காக தன்னை முன் நிறுத்திக் கொண்ட ராஜீயை நினைக்கும் பொழுது மிக்க பெருமையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பள்ளி உருவாவதற்கு காரண கர்த்தாவான சுவாமி ஜக்கி வாசுதேவிற்கும் எனது வந்தனங்கள்.

இப்பொழுது புரிகிறது ஏன் அவர் கடுமையாக பறந்து கொண்டே இருக்கிறார் என :-) . ஈஷா வித்யாவை முடித்துக் கொண்டு, தியானலிங்க கோவிலுக்கும் சென்று விட்டு மீண்டும் ராஜீயின் பங்களிப்பால் அதே வளாகத்திற்குள் அமைந்திருக்கும் சர்வதேச ஹோம் ஸ்கூலையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும்கிட்டியது. இருப்பினும் எனக்கு என்னவோ ஈஷா வித்யாவே மனதை விட்டு நீக்கமற நிறைந்திருந்தது.

அந்தப் பள்ளிக்கு இன்னும் நிறைய பொருளுதவியும், பள்ளிக்கும், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களுமாக வழங்குவதற்கு உண்டான அத்தனை வாய்ப்புகளையும் கண்ணுற முடிந்தது. பள்ளி நூலகம் ரொம்பப் பெரிதாக நிறைய அடுக்குகளுடன் உள்ளது இன்னும் புத்தகங்கள்தான் வந்து குமிய வேண்டியுள்ளது. ராஜீ அறுபதாயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக காண்பித்த புத்தகங்களின் தொகுப்பு ஒன்னரை அடுக்குகளை அடைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தது...


Thursday, November 26, 2009

விபத்தாக சந்தித்த பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary

எங்களுடைய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியது. கரம்பக்குடிக்கும், தஞ்சாவூருக்குமான வித்தியாசம் (40கிமீ களுக்குள்) இயற்கையின் அமைப்பில் இராமநாத புரத்திற்கும் கோயம்புத்தூருக்குமான வித்தியாசங்களைப் போன்றே விரிந்து கிடக்கிறது. கரம்பக்குடியின் பாலைவனவாக்கம், ஒரு முறைக்கு மற்றொரு முறை செல்லும் பொழுதிற்கான வித்தியாசங்களை காணும் பொழுது, பாலையேற்றம் தன் கைகளை அகல விரிப்பது ரொம்பவே கண் கூடாக இருக்கிறது. ஏதோ ஒரு காலக் கட்டத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ஒரு புண்ணியவான் அந்தக் காலத்தில காவேரி கால்வாய்களே உள்ளே வராத மாதிரி பார்த்துக் கொண்டாராம்.

ஏன்னா, தண்ணீரால் கண்டமென்று ஒரு குறிப்பிட்ட சமூகம் எண்ணியதால், கால்வாய்களின் வழியாக வெள்ளம் ஊருக்குள் வந்துவிடும் அபாயமிருக்கிறதென்று, அப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவு எடுத்து இருந்திருக்கிறார்கள் :-( அது ஒரு தனிக் கதை. கரம்பக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தாண்டி தஞ்சை எல்லைக்குள் இருக்கும் இடையாத்தியில் ஓடும் காவேரிக் கால்வாய் தண்ணீர் என்னை அவ்வப் பொழுது பொறாமை கொள்ள வைக்கும். இப்பொழுதோ காய்ந்து கிடக்கும் வயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பெருகி வரும் வீடுகளும் அதனையொட்டிய தேவைகளுக்கான திண்டாட்டங்களும், கொழுத்து வளர்ந்து போன கொசுக்களுமாக நீக்கமற எங்கும் வியாபித்து இதிலிருந்து தப்பிப்பதற்கான அடுத்த வழி என்ன என்று விழி பிதுங்க வைக்குமளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

நான் சென்றிருந்த சமயத்தில் கர்நாடகாவில் நல்ல வெள்ளம் போல காவேரிக்கரைகள் கரைபுரண்டு ஓடுமளவிற்கு. அவர்களும் தங்களின் நெஞ்சாங்கூட்டை அகல விரித்து நம்மூர் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். அது தஞ்சாவூரின் பசுமையைக் கொண்டே புரிந்து கொள்ள முடிந்தது.

தஞ்சாவூரை விட்டு கிளம்பிய 30 நிமிடங்களுக்குள்ளாகவே வழியில் ஒரு பெரிய ஏரியை காண முடிந்தது. ஆஹா! என்று வாயை அகல விரித்துக் கொண்டே, கரம்பக்குடியின் பஞ்ச நிலையிலிருந்து ரசித்துக் கொண்டு வரும் பொழுது அப்படியானதொரு நீர் நிலையை கண்டால் வாய் பிளப்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.

எனவே கண்களுக்கு விருந்தாக அந்த ஏரி முழுக்கவுமே சின்னதும் பெரிதுமாக கருப்பு, வெள்ளை, பழுப்பு என நிறைய பறவைகள் மிதந்து கொண்டும், கரைகளில் ஒதுங்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டுமென காட்சியளித்தது. அது போதாதா, "நிறுத்துங்கப்பா வண்டியை" என்று கூவிக் கொண்டே கீழே இறங்கி அது என்ன இடம் என்று விசாரிக்கும் பொழுது வடுவூர் என தெரிந்து கொண்டேன். இந்த வடுவூர் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் உறைந்து கிடக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்திலும், மன்னார்குடி மாவட்டத்தின் ஆளுமைக்குள்ளும் வருகிறது.

அங்கேயே நின்று சில பறவைகளின்
அனுமதியின்றியே புகைப்படங்களை
தட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டே வந்தால், ஒரு பெரிய நுழைவு வாயில் கண்ணில் தட்டுப்பட்டது.


அட! என்று கீழே இறங்கி பார்த்தால், அது
"வடுவூர் பறவைகள் சரணாலயம்" என்று வளைத்து வளைத்து கூறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனது இரண்டு நண்பர்களுமே தஞ்சாவூரிலேயே இப்பொழுது வசிக்கிறார்கள். இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கவில்லை, இப்படி ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது. எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு முன்னால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரைக்குமாக ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. அவை முழுக்க பல வகையான பறவைகளை தன் மீது கிடத்தியவாறே. கண் கொள்ளாத காட்சி!

நான் மேலும் புகைப்படம் எடுப்போமென்று எண்ணினால் எங்களின் கோடியக்கரை நோக்கிய பயணம் வெகு இரவினில் விழுந்து விடும் என்ற அச்சத்தால் ஒரு அரை கிலோமீட்டர்கள் மட்டுமே நடந்து கண்ணுக்கும், கேமராவிற்கும் சிக்கிய சில பறவைகளை நெஞ்சுக்குள்ளும், மெமரிகார்டுக்குள்ளும் அடக்கிக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறி மனசே இல்லாமல் என்னை வைத்து அடைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இன்னொரு முறை சீசன் நேரத்தில் நான் அங்கு இருக்குமாரு ஒரு வாய்ப்பும்கிட்டினால் சூரியன் கிளம்பி, படுக்கச் செல்லும் வரைக்குமான நேரத்தில் அங்கே கிடந்து உருள வேண்டுமென எண்ணிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.

இது போன்ற எதிர்பாராத காட்சிகளும், சந்திப்புகளும்தான் நம்மை இயற்கையின் முன்னால் நிராயுதமாக நிற்க வைத்து, இன்னும் அனுபவிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் பூமி முழுதும் விரவிக் கிடக்கிறதென்று பறைசாற்றிக் கொண்டுள்ளன. தஞ்சாவூருக்கு அருகே வசிப்பவர்களும், அந்த ஏரியின் வழியாக பயணிக்க நேரும் வெளி ஊர் மக்களும் சற்று நிறுத்தி, நிதானித்து அவசியம் குழந்தை 'குட்டி'களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு முக்கியமான விசயம் உள்ளே செல்வதற்கு அனுமதி இலவசம்!

அன்று நான் பார்த்த பறவைகள்: கூட்ஸ், மூர்ஹென், ஜாக்கானா, கார்மோரண்ட்ஸ், நெல் வயல் ஹெரான், பெரிய வகை ஹெரான், பெயிண்டட் ஸ்ட்ரோக், வாத்து வகைகளில் சில... பைனாகுலர் கைவசம் எடுத்துச் செல்லவில்லை அம்பூட்டுத்தான் வெறும் கண்ணால பார்த்து அடையாளப் படுத்த முடிஞ்சது...

கீழே இருக்கிற கண்கானிப்பு தாத்தா என்னய ஒரு படம் எடுங்க, எடுங்கன்னு கேட்டாரா பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரா, பிடிச்சுட்டேன் இந்தாங்க அவரும்...



P. S: சரணாலயத்தைப் பற்றிய சில விபரங்கள்: 1999ஆம் வருடம் இந்தப் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டதாகவும், மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுவதாகவும், வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவாகை செய்து விடுகிறதாம். ஏறத்தாழ 40 வகையான நீர்ப் பறவைகள் வந்து செல்வதாக தமிழக வனத் துறை செய்தி கையேடு தெரிவிக்கிறது.

Tuesday, November 24, 2009

இந்தியப் பயணத் தொகுப்பு ஒரு முன்னோட்டம்: w/pictures...

மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, எங்கிருந்து தொடங்குவது என்ற எண்ணத்தினூடையே இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். காணாமல் போன நான்கு வாரங்களும் நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன். இந்தப் பயணத்தில் என்னுடைய இரண்டு வயது மகளும் இணைந்திருந்ததால் இம்முறை கொஞ்சம் தூக்கலாக இனிப்பும், கசப்புமாக அனுபவங்களை பெற நேர்ந்தது.

இந்த குறுகிய காலப் பயணத்தில் எனக்கு நான்கு நாட்கள் சுவாசம் சார்ந்த சுகவீனமும், நான்கைந்து நாட்கள் என்னுடைய மகளுக்குமாக மருத்துவமனை, மருத்துவ வாசற் காத்திருப்பு என்று நாட்களை கழித்திருந்தேன், இருப்பினும் என்னுடைய ஊர்ச் சுற்றலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

அப்பாடா என்று ஒரு நிமிசம் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது இங்கெல்லாம் நாம் சென்று வந்தோமா என்று மலைப்பாக இருக்கிறது. கோடியக்கரை, முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி (லகூன்), கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து வெள்ளியங்கிரி, சிறுவாணி வனத்தினூடாக மேல் அணைச் சென்று அங்கிருந்து மலம்புழா அணை சென்று பார்த்து விட்டு பாலக்காடு வழியாக மீண்டும் கோவை என எனது பயணம் அமைந்திருந்தது.

ஒவ்வொரு இடத்திற்கு சென்றிந்த பொழுதும் கஞ்சத்தனம், வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது; அந்தப் படங்களைக் கொண்டு பின்னாளில் எழுத நிறைய கிடைக்கக் கூடும் என்ற முன் யோசனையின் பேரில். எனவே, மக்களே கலந்து கட்டியாக என்னிடமிருந்து நிறைய அறிவியல், ஊர் சார்ந்த நினைவோடை மற்றும் அதனைச் சார்ந்த, எப்பொழுதும் நான் நிகழ்த்தும் புலம்பல்களும் அவ்வப் பொழுது வரலாம்.


உடனடியாக எழுத நினைப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு ஒரு முன்னோட்டமாக:

1) நமது சக வலைப்பதிவரும் தன்னார்வ தொண்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ராஜி அவர்களுடன் வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் ஒரு ட்டூர். ஒரு நாள் முழுதுமே அங்கு அமைந்திருந்த சர்வதேச பள்ளி மற்றும், ஈஷா வித்யா என்ற பெயரின் கீழ் பிற்படுத்தப் பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்குமான (ஈஷா அறக்கட்டளையின் வாயிலாக ஆலந்துரை அருகே அமைந்திருக்கும்) பள்ளிக்கும் சென்றிருந்தோம் அங்கு நிறைய ஆச்சர்யங்களும், வாயைக் கட்டிப் போடும் அளவிற்கு நமது தோழியின் உழைப்பும் ஒருங்கே காணக் கிடைத்தது. அதனை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் படங்களுடன் ஒரு பதிவு.



2) கோடியக்கரை சென்ற பொழு அது பறவைகள் நிரம்பி வழிய வேண்டிய அக்டோபர் மாதம், ஆனால் சில அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் ஏன் அது போன்ற பறவைகளின் வரவை குறைத்திருந்தது என்று தெரிந்து கொள்ள முடிந்ததை உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.



3) முத்துப் பேட்டை அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சதுப்பு நிலக் காட்டில் (லகூன்) ஒரு நாள் முழுக்கவும் படகில் மிதந்த அனுபவம், அந்தக் காட்டில் நான் கண்ட இயற்கையின் விந்தைகளை படங்களுடன் ஒரு நாள் விவரிக்கிறேன்.



4) மீண்டும் டாப்ஸ்லிப் சென்ற பொழுதினில், அங்கு செமையான மேக மூட்டம் அதனால் சென்ற வாகனத்திலேயே கோழிகாமுத்தி யானைகள் முகாம் வரையிலும் சென்று அங்கு பூவனின் குடும்பத்தாரை சந்தித்த நெகிழ்ச்சியூட்டும் ஒரு சந்திப்பும், என்னுடைய டாப்ஸ்லிப்னூடான நினைவோடையும் படங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.



அதுமட்டுமின்றி இன்னும் நினைவில் தைத்துப் போன விசயங்களையும் நினைவிலிருந்து வெகு தொலைவு செல்வதற்கு முன்பாக இங்கு பதிந்து வைத்து விட மேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ளேன், பார்க்கலாம்.

அன்புடன்,

தெகா.

Tuesday, October 06, 2009

புவனேஸ்வரிகள் பேசாப் (*தேவை*) பொருட்களா?

இனிமே பார்த்தீங்கன்னா, கொஞ்ச நாட்களுக்கு வேறு எங்குமே "அது மாதியான" பத்திரிக்கைகள் அல்லது கதைகள் தேடிப் படிக்க வேண்டாத குறைக்கு எங்கு திரும்பினும் நம்மூரு புவனேஸ்வரியைப் பற்றி, பத்தி பத்தியா விலாவாரியா எல்லா வெகு ஜன பத்திரிக்கைகளும் எழுதி சமூகச் சேவை பண்ணிக் கொண்டு இருப்பதனைப் பார்க்க முடியும்.

இதனை நன்றாக உற்றுப் பார்த்தால் என்னமோ கன்னாபின்னான்னு இடிக்கிற மாதிரி ஒரு பக்கச் சார்பு நிலை கொண்டு நம் சமூகம் புவனேஸ்வரிகளை கையாள்வதாகப் படுகிறது. எழுதுற பத்திரிக்கைகளில் ஒவ்வொரு கட்டுரையும் சுமார் இரண்டு அடிகளுக்கு குறைச்சலில்லாமல் ஓடுகிறது. முழுமையா மூளை வளர்ச்சியுற்ற எவனுக்கும் தெரியும் எது போன்ற "சமூக நிர்பந்தங்கள்" இது போன்ற புவனேஸ்வரிகளை உருவாக்கவும் செய்து, அது போன்ற நிலையிலிருந்து அவர்கள் நழுவி விடாமல் இருக்க இறுக்கியும் கட்டுறச் செய்கிறது என்பதனை.

இந்தப் பின்னணியில் கோவி கண்ணன் எழுதியிருந்த கட்டுரைக்கு வந்த சில பின்னூட்டங்களை படிக்கும் பொழுது, அட எப்படிய்யா நம்ம மக்கள் முழு பூசணிக்காய சோத்துக்குள்ளர வைச்சு மறைக்க வைக்கப் பார்க்கிறாங்கன்னு தோன்றியதின் விளைவா வந்ததுதான் இந்தப் பதிவு.

ஆமா, அது போன்ற பெண்கள் எங்கு வானத்திலிருந்தா குதிக்கிறார்கள்? இல்லை மூளையில் எழுதப்பட்ட ஒரு சமிக்கை வார்த்தையைக் கொண்டு தன் தொழிலை தொடங்குகிறார்களா? பெண் குழந்தைகளையே அதிகமாக பெற்றெடுத்த பெற்றோர்கள் அந்தக் குழந்தைகள் வளரும் காலம் தோறும் அதிகமாக பயந்தே வாழ்வது இந்தச் சமூகம் அந்த அப்பா என்கிற ஒரு 'சூப்பர் மேன்' அருகிலிருந்து பார்க்க முடியாத ஏதோ ஒரு சூழல் அது துர்ச் சம்பவமாக நிகழும் மரணம், அல்லது விபத்தின் மூலமாக இயங்க முடியா ஒரு நிலை, அல்லது திருமணமாகிய ஒரு பெண்ணே அது போன்ற கணவன் அற்ற நிலையில் எப்படியாக இந்தச் சமூகம் அவர்களை மெல்லமே இந்தச் சமூக ஆற்றுக்குள் இழுத்துச் சென்று விடும் என்று அஞ்சியே வாழும் சூழலைத்தானே நம் 'புனித' மஹாத்மாக்களும், கழுதைப் புலிகளும் பக்கம் பக்கமாக வாழும் ஒரு சமூகத்தில் நடைபெறுகிறது என்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.

அது போன்ற சூப்பர் மேன்கள் (தகப்பன்/அண்ணன்/கணவன்) இல்லாத ஒரு வாழ்வுச் சூழ்நிலையில் அங்கே பெண்களும் கொஞ்சம் இளமையாகவோ அல்லது அழகாகவோ இருந்து போனால் அவர்களுக்கு எந்தந்த ரீதியில் எல்லாம் 'அதுவாக'ஆகிப் போக அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கக் கூடும். அப்படியே தாக்குப் பிடித்து நேர் வழியில் அவர்கள் இயங்கிச் சென்றாலும், அக்கம் பக்கம், புனை கதைகளை ஊட்டுவதின் பேரில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, கடைசியில் அங்கே கொண்டு போய் சேர்ப்பதிலும் நம் பங்குதானே முன்னணியில் இருக்கக் காண்கிறோம்.

நாம் பேசிக் கொண்டிருப்பது இரண்டாவது இந்தியாவைப் பற்றியோ? ஏனெனில் முதன்மை இந்தியாவில் இது வேறு ஒரு கோணத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம். இப்பொழுது, நாம் இரண்டாவது இந்தியாவைப் பற்றியே பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஏனெனில் இந்த இந்தியாவில்தான் நிறைய குழப்பங்களும், நடிப்பும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதும் மிஞ்சிக் கிடக்கின்றன. அங்கிருந்துதான் இது போன்ற தீண்டத் தாகாத; அப்போ யார்தான் தீண்டி அவ்ளோ பெரிய தொகை எல்லாம் கொடுக்கிறாங்க? பேசா பொருட்களும்(பெண்) உருவாக்கப் படுகிறார்கள்.

அது போன்ற பேசாப் பொருட்கள் நமக்கு அவசியமாக தேவைப்படும் தேவையற்ற ஓர் ஒளி பொருள். அவ்வாறாக உருவாக்கப் பட்டவர்களுடன் நமது இயக்கம் வெளியில் ஏதோ பல சில உள் காரணங்களால் எப்பொழுதாவது வெளி வர நேர்ந்து போனால், அப்பொழுதும் அங்கு தீண்டப் பட்ட பாத்திரமே குற்றவாளி கூண்டினுள் வைத்து உருட்டப் படுகிறது. அதனை எடுத்து கையாள்பவரோ கூட்டத்தில் ஒருவனாக நின்று தண்டனை வாங்கிக் கொடுக்க குரல் கொடுக்கும் நிலைக்கு நகர்ந்து விடுகிறான். இது எது போன்ற நியாயத்தில் சேர்த்தி?

சரி பிரிதொரு நாளில் அந்தப் பாத்திரம் தான் பிடித்து தள்ளப்பட்ட நிலையை நிலை நிறுத்தி வெளி வந்து, இனிமேல் இது போன்ற ஒரு பிழைப்பு எனக்குத் தேவையில்லை என்று கருதி 'சோ கால்ட்' நேர் வழியில் சென்று வாழலாமென்று சிரத்தையுடன் வாழ எத்தனிக்கும் நாளில் கூட அது போன்ற 'கழுதைப் புலிகளும்' - புனித மஹாத்மாக்களும் சுலபமாக அவர்களை அவ்வாறு நல் வழி சமூக ஆற்றில் கலந்து விட விட்டுவிடுகிறார்களா என்ன? அது, அதுபோன்ற வாழ்ந்து கொண்டிருக்கும் 'பேசா பொருட்களின்' வாழ்வுச் சூழலில் இருந்து பார்த்தால்தான அதற்கான விடை காண முடியும் என்று நினைக்கத் தோன்றவில்லை.

முன்னமேயே அவர்களுடன் தொடர்புடைய "பெரியவர்கள்" துரத்தித் துரத்தி ஏதேதோ காரணங்களுக்காக மேலும் மேலும் பரிவாகப் பேசி, மசியாத பட்சத்தில் மிரட்டி, உருட்டி அது திருமணமே கட்டி நிம்மதியாக வாழலாமென்று புத்துணர்வுடன் வாழ்க்கையை தொடரும் முன்னால் 'பேசாப் பொருளாக' இருந்தாலும் கூட மீண்டும் உள்ளே கொண்டு வந்துவிட மாட்டார்களா என்ன ? இப்படியான ஒரு சமூகச் சூழலை நம்மைச் சுற்றியும் வைத்துக் கொண்டு, வெறுமனே இந்தப் பத்திரிக்கைகளும் ஏதோ அன்றைய வியாபாரத்தை அவசர அவசரமாக கூட்டிக் கொள்ள, அந்தப் பேசாப் பொருட்கள் நிர்பந்திக்கப்படுவதால் செய்வதனையே இவர்களும் எழுத்தின் மூலமாக மேம்போக்காக பேசிக் கொண்டே செல்வதனை எந்த தர்மத்தில் எடுத்துக் கொள்வது அல்லது சேர்ப்பது?

கொஞ்ச காலங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து தமிழகத்தை சார்ந்த இது போன்ற 'பேசாப் பொருட்கள்' பெருமளவில் மீட்டெடுக்கப் பட்டு தமிழகத்தில் வைத்து மறு மலர்ச்சி வாழ்வளிக்கப் போகிறோமென்ற திட்டத்தின் பேரில் கொண்டு வந்தவர்களின் இறுதிக் கதை என்னவாக அமைந்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்களை அவ்வாறு வாழ விட்டு வைத்திருப்பார்களா என்பதில் எனக்கு ஐயமே மிஞ்சுகிறது. அவர்களுக்கு நேர்ந்த கதையை தெரிந்தவர்கள் யாராவது இங்கு வந்து பகிர்ந்து கொண்டால்தான் உண்டு.

சரி, இந்தத் தொழிலில் இறங்குவதற்கு முன்னால் அது போன்ற பெண்களில் எத்தனை சதவீதம் பேர் எனக்குப் பிடித்தே இந்தத் தொழிலில் இறங்கினேன் என்ற வாய்ப்பை பெற்றவர்களாக இருக்கக் கூடும்? அப்படியே பிடித்தே இறங்கினேன் என்று சொல்லும் பட்சத்தில் இதனை ஏன் மற்ற நாட்டு அரசாங்கங்கள் போல அவர்களின் தொழிலின் இன்றியமையாமைக் கருதி அங்கீகரிக்கக் கூடாது? அப்படியாக ஆகும் பட்சத்தில் அதனையொட்டிய குற்றங்கள் குறைவதற்கான ஒரு வடிகாலாக அமைய முடியுமல்லவா?

சங்க காலத்திலிருந்து, சிலப்பதிகாரம் தொட்டு நேற்றைய தமிழ்ச் சினிமா வரைக்கும், வெறும் இயக்கப்படுபவர்களை மட்டுமே விமர்சித்து விமர்சனங்கள் வருகிறதே ஒழிய, இயங்குபவர்களை ஒன்றுமே தெரியாதவர்கள் போலவும், சுய சிந்தனையே மழுங்கடிக்கும் அளவிற்கு வசியம் செய்து அவர்களின் வீட்டு வாசலை அடைய வைத்ததாகவே பேசி வருகிறது. அப்படியெனில் 'நாடுபவர்கள்' அனைவரும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களா? புரியாமல் தான் கேட்கிறேன்.

சரி நம் வீட்டிலும் சரிசமமாக பெண் பிள்ளைகளுடன் (பல தளங்களில் - அம்மா/அக்கா/தங்கை/மனைவி/மகள் என்று) புழங்கிக் கொண்டு எப்படி ஊர் விவகாரம் என்றால் மிக எளிதாக இப்படி உண்மைகளை மறைத்து உதாசீனப் படுத்தி பேசி விட முடிகிறது? அதனைப் பற்றி பேச வருபவர்களையும் ஒரு தீண்டத் தாகாத ஆளாகக் கருதி மனதிற்குள் குறு குறுப்பை வைத்துக் கொண்டு நடித்தே வாழ்ந்து விட முடிகிறது?

என்னமோ போங்க, எத்தனை காலங்கள் வந்தாலும் சில விசயங்களில் தெரிந்தே செய்யும் அநீதிகளுக்கு எந்த விதமான மாற்று நீதிகளும் கிடைத்து விடுவதாக தெரியவில்லை. அது, அந்த நிலையில் பிறந்த அல்லது நிர்பந்திக்கப் பட்டவர்களின் போதாத காலம் என்ற அனேகத்தன்மையில் உஷ்ஷ்ஷ் யப்பாடா அது எனக்கு நடந்து விடவில்லை என்று மூச்சை பிடித்துக் கொண்டு ஓட்டிக் கழித்து விட வேண்டியதுதான் போல.


Wednesday, September 30, 2009

தீவிரவாதத்திற்கு பொறுப்பாளிகள் யார்?

*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாகப் படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு முன்னமே வாசிக்க கிடைக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...

செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை இங்கு வைத்திருக்கிறார்... அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.

நாயகி,

...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடத்தியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது.

எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருணங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருணங்கள் அல்லவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜென்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்க்கையை ஒரு பொருளற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அலைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.

அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதத்திற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து- இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!


பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

Thursday, September 24, 2009

எண்ண சூல்..




வார்த்தை வனங்களில்
மூழ்கி முத்தெடுக்க
முங்கிய பொழுதொன்றில்
தொண்டையில் சிக்கிய
முற்களாக
எழுதாக் கரு!

Wednesday, September 16, 2009

எபோலா வைரஸ்: Ebola Virus(RNA)

காலையில ஒரு நண்பர் கூட பேசிட்டு இருக்கும் போது சொன்னாரு HIV வைரஸையே குழந்தையாக்கும் இன்னொரு புதுவிதமான வைரஸ் மனித சந்தைக்கு வந்திருப்பது தெரியுமான்னு. அது என்ன வைரஸ்ய்யா அப்படின்னு சுதாகரிச்சிக்கிட்டு கேட்டேன் அப்போ அவரு எபோலா வைரஸ் அப்படின்னார். குறைந்தது ஒரு நாளாஞ்சு முறை திரும்பத் திரும்ப சரியாத்தான் பேரை சொல்லுறாரா இல்ல எகோலை (Ecoli)யைத்தான் அப்படி மாத்திச் சொல்லுறாரான்னு உறுதிச் செஞ்சிட்டு, அவரு சொன்ன நோயின் அறிகுறிகளை கேக்க கேக்க ரொம்ப அதிர்ச்சியா வந்துச்சு.

சரின்னு கொஞ்சம் அந்த நோயைப் பத்தி தெரிஞ்சுக்குவோமேன்னு படிக்க உட்கார்ந்தப்போ அடே சாமீன்னு ஆயிப் போச்சு. அதனோட நோயின் தீவிரத்தை அறிந்து கொண்டே வரும் பொழுது, அவ்வளவு சீக்கிரமா மனிதனை சுருட்டிருதுங்க அந்த எபோலா வியாதி.

அந்த நோய் இப்போதைக்கு ஆஃப்ரிகா கண்டத்தில மட்டும் அதுவும் காங்கோ, கேபோன், சுடான், ஐவோரி கோஸ்ட் மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் மனிதர்களிடையே இருக்கும் நிலையில் அறியப்பட்டுள்ளது. எங்கிருந்து குறிப்பாக இந்த நோய் பரவியது என்று தெரியவில்லையாம், இருப்பினும் காங்கோ - குரங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதாம்.

இதன் பரவும் தன்மை மனிதர்களிடையே நேரடித் தொடர்புனாலேயோ அல்லது உடல் சுரப்புகளின் நேரடித் தொடர்பால் பரவுகிறது.

நான்கு வகையான எபோலா வைரஸ் இனங்கள் இருப்பதாகவும் அவற்றில் ஒன்று மட்டும் மனிதனுக்கு பரவும் வகை இல்லையெனவும் தெரிகிறது.

இதன் பரவும் தன்மை ஹெச் ஐ வி யைவிட பல மடங்கு எகிறுவதாக உள்ளது. இந்த நோய் ஒருவரை தொற்றியவுடனேயே உடலுக்குள் பல்கிப் பெருக ஆரம்பிக்கிறது. நான்கிலிருந்து ஆறு நாட்களுக்குள் இந்த நோயின் அறிகுறிகள் தட்டுப்பட ஆரம்பிக்கிறது. நோய் தொற்றிய நாளிலிருந்து அறிகுறி தெரிய வரும் இடைப்பட்ட நாட்களை அடைகாக்கும் பருவம் என்று கூறுகிறார்கள். அந்த அடைக்காக்கும் பருவம் இரண்டு நாட்களிலிருந்து 21 நாட்கள் வரை கூட நடைபெறலாமாம்.

எபோலாவின் அறிகுறிகளாக அறியப்படுவது சுரம், தொண்டைவலி, சக்தியற்ற நிலை, கடும் தலைவலி, தசை மற்றும் எலும்பு இணைப்புகளில் வலி, பேதி, வாந்தி, வறட்டு இருமல் மற்றும் வயிற்று வலி என பட்டியல் நீளுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ரொம்பவே அச்ச மூட்டியது நோய் அறிகுறி தட்டுப்பட ஆரம்பித்த இரண்டாவது வாரத்திற்குள்ளாகவே நாம் மண்டையை போடும் அளவிற்கு செல்லுவதுதான். முத்தாய்ப்பாக அந்த நிலையில் உள்ளும், புறமுமாக இரத்தம் வடிந்து இறக்க நேரிடுகிறதாம். எனவே, பெருமளவில் இரத்தம் இழப்பாலேயே இறுதியாக மரணிக்க நேர்வதாகப் படுகிறது.

இந்த எபோலா பத்தி இப்படியும் சொல்லிக்கிறாங்க, செப்டம்பர் 2001க்கு பிறகு பேரழிவைத் தரும் உயிரின ஆயுதமாக மனிதனால் பின் வரும் காலங்களில் இந்த வைரஸ் உருவாக்கப்படலாமென்று.

ஆத்தாடி என்னங்கடா நடக்குது, இந்த பூமியில, எய்ட்ஸ், எபோலா இப்போ பன்றிக் காய்ச்சல் - இப்படி போயிட்டே இருக்கே பட்டியல், ஜனத்தொகைய கண்ண மூடிக்கிட்டு பெருக்கிப்புட்டமோ, இயற்கையே கட்டுப்படுத்த ஆரம்பிச்சிருச்சா இல்ல மனுசப்பய ஆய்வுக் கூடங்கள்ளே ஏதாவது ஏடா கூடமா தயாரிச்சு வெளிய விட்றாய்ங்களா... ஒண்ணுமே புரியலப்பூ.



Source: Ebola hemorrhagic fever (also known as Ebola) is a contagious illness caused by an infection with the Ebola virus. It is often fatal in humans, monkeys, gorillas, and chimpanzees. The virus was first recognized in the Democratic Republic of the Congo (formerly Zaire) in 1976. No case of this illness in humans has ever been reported in the United States. There is no cure; treatment usually consists of providing supportive care while the body fights the infection.

Related Posts with Thumbnails