Saturday, January 28, 2012

வியாபிப்பவன்



இரவும் குளிரும்
பனிக்குட திரவ மிதவையில்
பாதுக்காப்பாய் இருந்தயெனை
மஞ்சளொளியான்
ஆற்றின் சலசலப்பினூடே
வெள்ளிக்காசுகளை அள்ளிப்பரப்பி
இனமறியா பல
பறவை ஒலிக்குறிப்புகளுமாக
சங்கீத நாண்பூட்டியபடியே
முற்றத்திற்கு 
அனிச்சையாய் ஈர்த்து
பூனைப் பாதங்களையொட்டி
என்னுள்
அரவமற்று மெதுமெதுவாய்
உள்ளிறங்கி
தன்னையே கரைத்துக் கொண்டிருக்கிறான்.

Sunday, January 08, 2012

எல்லாம் தெரிஞ்ச அம்புஜம் - நடிகை சுஹாசினி!!

அண்மைய காலங்களில் பார்த்து ரசித்த சுப்பிரமணியபுரம், பசங்க, மைனா, அங்காடித் தெரு, வாகை சூடவா போன்ற படங்களுக்குப் பிறகே தமிழ் சினிமா சரியான திசையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது என்ற நம்பிக்கையை என்னைப் போன்றவர்களுக்கு அளித்திருக்கிறது.

அதற்கு முற்றும் முழுக் காரணம் எந்த ஒரு படைப்பும் மக்களின் தன் மண் மணம் மாறாமல் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அழுந்த பதிந்து கொடுக்கும் பொழுது அது பல நிலைகளில் மக்களின் மனதில் ஆழ்ந்த ஒரு தாக்கத்தை விட்டுச் செல்கிறது. தினப்படி வாழ்வில் எத்தனையோ விசயங்கள் தன்னியல்பிலேயே பல அற்புதங்களை உள்ளடக்கி எழுவதும் வீழ்வதுமாக நகர்ந்து வருகிறது. நாம் அதனை கவனிக்கத் தவறி எந்த ஒரு முயற்சியுமற்ற நிலையிலேயே மீண்டும் மீண்டும் மரத்துப் போன ஒரு மனநிலையில் செக்குமாட்டுத் தனத்துடன் அந்த நிகழ்வின் முழு வீச்சத்தினையும் காணத் தவறி வாழ்ந்தும் முடித்திருப்போம்.

உதாரணமாக நாம் தினசரி வாழ்க்கையில் கண்ணுற்று, புழங்கி வரும் காட்சிகளான மாட்டு வண்டியில் - ஆடுகளும், கோழிகளும் மனிதர்களுமாக பகிர்ந்து கொண்டு சந்தைக்கு சென்று வரும் ஒரு வண்டியை அனிச்சையாக பார்த்தவாரே கடந்து போயிருப்போம். ஆனால், அந்த பிராந்தியத்தில் வாழ நேர்ந்திருக்காத ஒரு அயலருக்கு அந்தக் காட்சி முதன் முதலாக காணக் கிடைக்கும் பொழுது மலைத்துப் போய் நின்று, பல கோணங்களில் அதே காட்சியினை அழகு, அழகான லாங்/குலோசப் புகைப்படங்களாக சுட்டுத் தள்ளியிருப்பார். அது போன்ற புகைப்படங்களும் உலக காட்சியகங்களில் காட்சிக்கு பரப்பப் பெற்று பல பரிசுகளையும் அள்ளி இருக்கும்.

மாறாக நியூ யார்க்கிலிருந்து வந்திருக்கும் ஒருவருக்கு, தன் ஊரில் நிற்கும் ஒரு வானுயர்ந்த கட்டிடத்தை போன்றே தான் வந்திருக்கிற இடத்திலும் அதே போன்ற வானுயர்ந்த கட்டிடத்தை வளைத்து வளைத்து புகைப்படமாக எடுத்து போவதிலோ, அல்லது அங்கயே தேக்கமுற்று போயி நின்று விடவோ விரும்ப மாட்டார். அவர் பார்க்க நினைக்கும், அவரை கவரும் விசயங்களே வேறாக இருக்கும்.

அப்படியே அவர் பார்க்கும் அத்தனை விடயங்களும் புதிய கதைகளையும், கோணங்களையும் வழங்கி நிற்கும். அது போலவே, நாம் இங்கிருந்து அங்கு போனால் நமக்கு நிகழ்வதாக இருக்கும். அது நமக்குள் மறைந்திருக்கும் ரசனைத் தன்மையையும், படைப்புத் திறனையும் பொறுத்து பார்க்கும் விடயங்கள் ஆர்வத்தை ஊட்டுவதாக அமையப் பெறலாம்.

இயல்பிலேயே, படைப்பாளிகள் நமக்கும் எட்டாத பல நுண்ணிய இழையில் இழைந்தோடும் அந்த அற்புதங்களை உணர்வு பூர்வமாக வெளிக் கொணர்ந்து அதனை பெரிய திரையில் ஒரு காவியச் சித்திரமாக வரைந்து காண்பிக்கும் பொழுதே அதற்கு பின்னான அதன் அழகியலை, கோரத்தை, சமூக அநீதிகளை, அரசியலை புரிந்து கொள்ளும் நிலைக்கு நம்மை நகர்த்தி வைக்கிறார்கள்.

இது போன்ற காரியங்களை அதனூடாகவே வாழ்ந்து தோய்ந்து போனவர்கள் சொல்ல முற்படும் பொழுது அதனில் ஒரு ஜீவனூட்டம் இருப்பதாகி நம்மை யாவரையும் கட்டிப் போட்டு விடும். உதாரணமாக, அங்காடித் தெருவில் வரும் ஒவ்வொரு பசங்களும் நம் பக்கத்திலேயே வாழ்ந்து, நம்முடனே பயணித்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பின்னான வலிச் சமுத்திரம் நம் பார்வையிலிருந்து பல அக/புற காரணிகளால் மரத்து போகச் செய்யப்பட்டிருக்கிறது. அதனை மிக நுட்பமாக, உணர்வு பூர்வமாக உள்வாங்கிய ஒருவரால் மீண்டும் அதே பசங்களின் வாழ்வு அடிக் கோடிட்டு காட்டப் பெறும் பொழுது அவர்களுக்கான வசந்த காலமும், பூட்டப்பட்டிருக்கிற கதவுகளும் திறக்கப் பெறுவதாக அமைகிறது.

அந்த திறப்பினை நிகழ்த்த கமல்ஹாசன்களையும், அரவிந்த சாமிகளையும், அஜித்களையும் குணாதிசியங்களாக கொண்டு செய்ய முடியுமா? தன் மண்ணில் ஒரே மாதிரியான வாழ்வுச் சூழலையும், கிடைக்கும் புறச் சூழலையும் கொண்டு ஒருவன் வயக்காட்டிலும், புழுதிச் சாலையிலும் வறுபட்டு கன்னம் வற்றி, உள்ளிழுக்கப் பெற்று, தோல் கறுத்து, முடி சுருண்டு இருந்த நிலையில் வறுமையின் கோரப் பிடியிலிருக்கும் அந்தக் கூட்டத்தினை முன் நிறுத்தும் உடல் மொழியையும், இயல்பிலேயே அப்படியாக உருவ ஒற்றுமையும் கொண்டவரே நிகழ்வின் விபரீதத்தை/அபத்தத்தை நம்முள் இன்னும் ஆழமாக இறக்க முடியும். மாறாக, வயதிற்கு சிறிதும் பொருத்தமற்ற அஜித்திற்கோ, கமலுக்கோ உடலை வருத்தி, கன்னம் டொக் விழ ஆறு மாதம் சாப்பிடாமல் போட்டு, நிறத்திற்கு கருமையேற்றி தன் நடிப்பிற்கு பொலிவூட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

அந்த நிலத்திலிருந்தே ஒரு கதாநாயகனை நல்ல ஒரு படைப்பாளி வெளிக் கொணர முடியும். இப்பொழுது, எந்த திசையில் இந்த கட்டுரை நகர்கிறது என்று உங்களால் விளங்கிக் கொள்ள முடியுமே! கதாநாயகியாகவே நடிப்பிலிருந்து விடைப் பெற்றுக் கொண்டு பணி ஓய்வு பெற்ற திருமதி. சுஹாசினி மணிரத்னம் இரண்டு முறை பொது இடங்களில் ஓர் அபத்தமான வேண்டுகோளை படங்களை இயக்கவிருக்கும் இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கையாக முன் வைத்திருக்கிறார்.

ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும், இப்பொழுது உலக திரைப்பட விழாவிலும் இதே கோரிக்கையை எழுப்பி இருக்கிறார். கோரிக்கை இதுதான்: எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!. இவரின் கோரிக்கையை நாம் வேறு யாரோ ஒரு குடும்பத் தலைவியாக இருந்து சொல்லியிருந்தால் எளிதாக அவரின் அறியாமையை கவனத்தில் நிறுத்தி கடந்து வந்து விடலாம். ஆனால், இவர் உலகச் சினிமாக்களையும், நமது படங்களை பல உலக சினிமா விழக்காளுக்கு அறிமுகப் படுத்தும் பணியிலிருப்பதாக தன்னை முன் நிறுத்தி கொள்பவர்.
இவரிடமிருந்து இப்படி ஓர் அபத்தமான, மேட்டிமைத் தன மேலோட்ட எண்ணப்பாடு கொண்ட இந்த கருத்தாக்கத்தை எப்படியாக எடுத்துக் கொள்வது. இந்த எண்ணம் எத்தனை பெரிய இழப்பை நமது படைப்பாளிகளுக்கும், போராடி வர விருக்கிற மண்ணின் மைந்தர்களான இளம் நடிக, நடிகைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்று அறியாமலேயே இன்னமும் சிவப்புத் தோலு கதாநாயர்களை சிவப்பூத் தோலு கதாநாயகிகளுக்கு அறிமுகப் படுத்தச் சொல்லுகிறார்.

எனக்கு என்ன ஆச்சர்யமென்றால் இது போன்ற ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் எது போன்ற பட ரசனையை கொண்டவராக இருப்பார்? அதுவும் நம் ஊரிலிருந்து வெளி வரும் நல்ல படங்களை அறிமுகப் படுத்த எண்ணும் பொழுது, இது போன்ற சிந்தனை சில நல்ல படங்களையும் வடிகட்டி விட பாதகமாக அமைந்து விடாதா?

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போதே இவரின் அபத்த நகைச்சுவையுணர்வு தாங்கும் படியாக இல்லை. ஒரு கட்டத்தில் சொல்லியிருந்தார் ”இப்பொழுது வரும் கதாநாயகர்கள் எண்ணை வழிந்து கொண்டும், திரையில் எங்கு நிற்கிறார்கள் என்று தடவி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும்,” சொல்லி நகைத்தார். அந்த மண்ணுக்கே உரியவர்கள் வேறு எப்படியாக இருப்பார்கள்? இவர் எந்த காலத்தில் இருக்கிறார்? இன்னமும் எம்.ஜி.ஆரைக் கொண்டு அங்காடித் தெரு கதாநாயகனை ரசிக்க, தரிசிக்க வைக்க. நகைமுரணாக இல்லை! உலகப் படங்களில் இவர் எதனை சிறப்பாக இருப்பதாக எண்ணி, பார்த்து சிலாகிக்கிறார்?

இந்த சிந்தனை எப்படியாக இருக்கிறது என்றால் ராகுல் காந்தி அவர் அப்பனைப் போலவே நல்ல அழகாக சிரிக்கிறார், சிவப்புத் தோலை போர்த்தியிருக்கிறார். ஆதலால், இந்தியாவின் சார்பில் உலக மனமகிழ் மன்றமாகிய ஐ.நா போன்ற இடங்களில் அமர வைத்தால் இந்தியாவிற்கு கெளரதை என்ற கிரமாத்து தவக்களை சிந்தனையாக இருக்கிறது. :))

சுஹாசினி பேசாமல் குழந்தை வளர்ப்பிலும், வாசிப்பிலும் தன் சொச்ச மிச்ச காலத்தை கடத்தலாம். எனக்கு கவலையாக இருக்கிறது. இவர் போன்றவர்கள் தனது இருக்கையை முக்கியமான இடங்களிலெல்லாம் எப்படியோ கிடைப்பதாக ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு இது போன்ற அபத்தமான விஷமத்தனமான சிந்தனைகளை அதுவும் எந்தத் துறைக்காக தான் பாடுபடுவதாக நினைத்துக் கொண்டு தனது உழைப்பை போடுகிறாரோ அதுவே நலிந்து எப்பொழுதும் போல அர்விந்த சாமிகளுக்குள்ளும், கமலஹாசனுக்களுக்குள்ளும் முடங்கிக் கிடக்க வழி கோலுகிறார்கள். எப்படி இவர்களாகவே இதனை புரிந்து கொண்டு தகுந்தவர்களை அங்கே அமர விட விலகி நின்று வழி விடுவார்கள்?

இந்த கணினி யுகத்தில் இவர்கள் போன்றவர்கள் ஒரு முக்கியமான விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். காலம் மிக வேகமாக மாறி வருகிறது. ஒரு தனி நபரின் சிந்தனை கண்டங்களுக்கிடையே கை சொடுக்கும் நேரத்திற்கும் குறைவான நொடிகளிலிலேயே பகிர்ந்து கொள்ளப்பட்டு அந்த சிந்தனை யுனிவெர்சல் நேர்த்தியை அடைகிறது. உங்களின் பழமைவாத, குலக் கல்வி சிந்தனை is an utter flop in the world stage where learnt people are laughing at your blabbering!!

Monday, December 26, 2011

எஸ். ராவும் முல்லை பெரியாறும்_தெகாவும்

மனிதர்கள் குறைந்து மனிதம் அரிதாகவே காணப்பெறும் நிலை பரவலாக கண்ணுறும் கால கட்டமிது. முல்லை பெரியாறு அணை கட்டியெழுப்பிய பென்னிகுக் போன்ற மனிதர்களும் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிய நேரும் பொழுது, மனிதர்களின் மனத்தினை எத்தனை எளிதாக நிறமூட்டி பார்த்து விட முடிவதாக எண்ணச் செய்கிறது.

மனம் என்பதிலிருந்துதான் ஆலமரத்திற்கான பெரும் விருட்சமும் விதையாகிறது, கடுகினைப் போன்று சிறுத்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடிக்கும் சுயநலத்தமான எண்ண விதைகளும் சூல் கொள்கிறது. தமிழக பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் குறிப்பாக யானை/காட்டெருமைகளைப் போன்ற பெரிய விலங்குகள் கோடையின் வறட்சி பொருட்டு அவைகள் எல்லை கடந்து பெரும் வலசையேற்றம் செய்து கேரளா மற்றும் கர்நாடக காடுகளுக்கு சென்று வருகிறது. அவைகளுக்கு கிடைக்கும் உரிமை கூட மொழியறிவின் மூலமாக உரையாடத் தெரிந்த மனித மனங்களுக்கு நீரின் அவசியமுணர முடியவியலாதது விந்தையிலும் விந்தைதானே!

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கான நீதிக் கதையே இன்று நடந்து வரும் முல்லைப் பெரியாறு தண்ணீர் பிரச்சினை. ஒரு மனிதர் அந்த அணையை கட்டியெழுப்ப தனது சொத்தையே விற்றழித்து ஊருக்காக அதுவும் பிழைப்பு நடத்த வந்த இடத்தில் மனிதத்தை ஆழ ஊன்றிச் சென்றிருக்கிறார். அதனை நன்றாகவே உள்வாங்கிய அந்தப் பகுதி மக்கள் பென்னிகுக்கையும் ஒரு கடவுளாக்கி விட்டார்கள்.

இதன் நுண்ணிணைப்பு அறியாது இன்றைய அரசியல் சுயநலமிகள் பென்னிகுக்கிற்கும் அந்தப் பகுதி மக்களுக்குமிடையே உள்ள அந்த நுண்ணிழையினை அறுக்க முயற்சிக்கிறார்கள். அதன் விளைவு எப்படியாக இருக்கும் என்பதற்கு சான்றாக சமீபமாக சாரை சாரையாக ஆயிரக்கணக்கில் எல்லைப் பகுதியில் கொந்தளித்து நிற்கும் மக்களின் நன்றியுணர்வே அதற்கு சாட்சி.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை தொகுப்பான “ஆயுத எழுத்து” புத்தகம் மீண்டும் என் கண்ணில் பட்டது. அப்படியே புரட்டிக் கொண்டு வரும் பொழுது இந்த காலக் கட்டத்திற்கு தேவையான இந்த முல்லை பெரியாறு பற்றியான ”நீரில் மிதக்கும் நினைவுகள்” கட்டுரையை ஒத்த எழுத்து கவர்ந்தது. ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் முல்லை பெரியாறின் வரலாறு தெரிந்து கொள்ளும் அவசியத்தில் இருப்பதால் மெனக்கெட்டு இதனை இங்கு மறு தட்டச்சு செய்திருக்கிறேன்.

பென்னிகுக் பற்றி தெரிந்து கொள்ளவும் அந்தப் பகுதி மக்களின் இதயத்தில் எப்படி அவர் சிறு கடவுளர் ஆகிப்போனார் என்று தெரிந்து கொள்ளவும் அவசியம் வாசிங்க. நன்றி - எஸ். ரா!

***************************************


நீரில் மிதக்கும் நினைவுகள் - by எஸ். ராமகிருஷ்ணன்

சில மாதங்களுக்கு முன் ஒரு நண்பரின் திருமண நிகழ்சிக்காக தேனிக்கு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தேன். மணப் பெண்ணின் தந்தை பெயர் பென்னிகுக் தேவர் என்றார்கள். விசித்திரமாகயிருந்தது. நான் சற்றே தயக்கத்துடன் திரும்பவும் அவரது பெயரைக் கேட்டேன். அவர் தனது திருக்கை மீசையைத் தடவியபடியே “பென்னிகுக்” என்றார். தோற்றத்துக்குத் தொடர்பில்லாத பெயராக இருக்கிறதே என்று நான் யோசிப்பதை உணர்ந்தவரைப் போல, இன்னொரு இளைஞரை அழைத்து, “மாப்பிள்ளை, உன் பேரைச் சொல்லுப்பா” என்று அவர் சொன்னது “லோகந்துரை” என அந்த இளைஞன் மிக இயல்பாகச் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை இரண்டும் ஆங்கிலோயர்களின் பெயர்கள்!

கருப்பணன், கலுவன், பெருங்காமன், விருமாண்டி, மூக்கவிருமன், தொத்தன் என குலசாமிகளின் பெயர்களுக்கு ஊடாக லோகந்துரையும் பென்னிகுக்கும் எப்படிக் கலந்தார்கள் என்று ஆச்சரியமாகயிருந்தது. என்னோடு வந்திருந்த கவிஞர் வெங்கடேசன், ‘இவை இரண்டும் பெரியாறு அணையைக் கட்டிய வெள்ளைக்கார இன்ஜினீயர்களின் பெயர்கள்’ என்றதோடு, ‘இதை விடவும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது பார்க்கலாம், வாருங்கள்’ என்று அழைத்துக்கொண்டு போனார்.

சாலையோரத்திலிருந்த டீக்கடையினுள் நுழைந்தோம்.லேசான இருட்டு படிந்த திண்டில் உட்கார்ந்தபடி சுவரைக் காட்டியபோது, அங்கே வேலும் மயிலோடு நிற்கும் முருகன் படமும், வழுக்கை விழுந்த ஏறு நெற்றியும் தொங்கு மீசையும் இடுங்கிய கண்களுடன் கறுப்புகோட் அணிந்த பென்னிகுக்கின் புகைப்படமும் தொங்கிக்கொண்டிருந்தன. அதனடியில் ‘கர்னல் ஜெ.பென்னிகுக்’ எனச் சிறியதாக எழுதப்பட்டிருந்தது. தெய்வ சமானம் கிடைத்த வெள்ளைக்காரனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

”எதற்காக இந்த வெள்ளைக்காரன் படத்தை கடையில் மாட்டிவைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். டீக்கடைக்காரன் பாலைக் கொதிக்கவிட்டபடியே ”பென்னி துரை மட்டுமில்லேன்னா இந்நேரம் இந்தச் சீமையே நாதியத்துப் போயிருப்போம்” என்றவன்., “ஒண்ணு ரெண்டுல்ல, எத்தனை ஆயிரம் பேரு ராத்திரியும் பகலும் காட்டுக்குள்ளயே கிடந்து கல்லு மண்ணு சுமந்து போட்டுக் கட்டுன அணை தெரியுமா? ஆம்பளை, பொம்பளை பச்சைப் பிள்ளைகள்னு செத்த உசிரை கணக்குப் பாக்க முடியாது - அப்படி உயிர்ப்பறி கொடுத்து கட்டினதுய்யா பெரியாறு அணை!” என்றபடியே வெந்நீர்விட்டுக் கண்ணாடி டம்பளர்களைக் கழுவிக்கொண்டிருந்தான்.

அன்று இரவெல்லாம் பென்னிகுக் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் வெங்கடேசன் தன் வீட்டில் இருந்த பெரியாறு அணை பற்றிய ஆவணங்கள், ஒரிஜினல் ரிக்கார்டுகளின் பிரதிகளைக் காட்டிக்கொண்டிருந்தார். “பென்னிகுக்குக்கு ஒரு சிலை இருக்கிறது. மலையில் அணைக்கட்டு கட்டும் நாட்களில் இறந்துபோனவர்களின் சமாதிகள் கவனிப்பாரற்று இருக்கின்றன.”

அன்று முதல் பென்னிகுக்கைக் பற்றித் தெரிந்து கொள்வதற்காக மதுரை மாவட்டம் முழுதும் அலைந்துதிரியத் துவங்கினேன். தேனி, மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமும் பென்னிக்குக்கைப் பற்றி எத்தனையோ கதைகளை வைத்திருக்கின்றன. தங்கள் மூதாதையர்கள் பென்னிகுக்கோடு சேர்ந்து வேலை செய்தவர்கள் என்பதற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அணைக்கட்டு வேலைக்காக கிராமம் கிராமமாக ஆட்களைத் திரட்டி வேலைக்குக் கொண்டுபோய், அவர்களது நல்லது, கெட்டதுகளைப் பகிர்ந்துகொண்ட பேய்காமத் தேவரைப் பற்றிய செய்திகளும் வியப்பாகயிருந்தன. நேற்று நடந்து முடிந்த சம்பவத்தைச் சொல்லுவதுபோல அவர்கள் பென்னிகுக்கைப் பற்றி நினைவுகொண்டார்கள்.

பெரியார் அணையைப் பார்ப்பதற்காக மலையின் மீது பயணம் செய்து கொண்டிருந்தேன். மூச்சுக் காற்றில்கூடப் பசுமை படிந்துவிடுமளவு குளிர்ச்சியான அந்தக் காட்டின் ஊடாக அணைக்கட்டு கண்களால் அளவிட முடியாததுபோல நீண்டுகிடக்கிறது. தண்ணீர்மீது கண்கள் ஒரு பூச்சியைப்போல ஊர்ந்து நகர்கிறது.

காட்டாறுகள் மிருகங்களைப்போல மூர்க்கமானவை. தன்னிடஷ்டப்படி வனத்துக்குள்ளாகச் சுற்றி அலையக்கூடியவை. அதன் குறுக்கே எது வந்தாலும் தடையை மீறிப் பாயக் கூடியவை.

ஒருமுறை மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆதிவாசிகளான காணிகளில் ஒருவன் சொன்னான் -

”மலையில இருக்கிறவரை தண்ணீரை எந்தக் கொம்பனாலும் கட்டுப்படுத்தி வைக்கவே முடியாது. தரையிறங்கினால்தான் அது அடங்கிச் சாந்தமாகும். யானை மாதிரிதான் தண்ணியும்.”

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு சிற்றோடையைப்போல பென்னிகுக்கின் வாழ்க்கைக் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. பெரியாறு அணையின் தண்ணீருக்குள் பென்னிகுக்கின் முகம் இன்றும் அடியாழத்தில் அசைந்துகொண்டேயிருக்கிறது.

அணையைப் பார்வையிட்டபடியே பருந்து உயர்ந்த மரங்களினூடே நடக்கும்போது சருகுகளைக் போலவே கடந்த காலத்தின் நினைவுகளும் சப்தமிடுகின்றன.

நூறு வருடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பொறியாளராகப் பணியாற்ற வந்த பென்னிகுக்கிடம் நில அளவையாளர் ஒருவர், பெரியாற்று நீரை ஓர் அணை கட்டித் தடுத்து நிறுத்தினால் மதுரை, ராமநாதபுர மாவட்டங்களுக்குப் பாசன வசதியை உண்டாக்கலாம் என்று மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் இருந்து ஒரு திட்டமிருப்பதாகத் தெரிவித்தார். பெரியாற்றைப் பார்க்கும்வரை பென்னிகுக்குக்கு அது சாத்தியமானதுதானா என்று சந்தேகமாகவே இருந்தது. பெரியாற்றின் வரைபடங்களையும் அதன் நீர்வரத்தையும் நேரில் பார்த்தபோது, அந்தக் கனவு பென்னிக்குக்கையும் பிடித்துக் கொண்டது.

மேற்கு நோக்கிச் சென்று வீணாகும் ஆற்றுநீரைக் கிழக்காகத் திருப்பி வைகையில் இணைத்துவிட்டால், மதுரை சீமை முழுவதும் பாசன பூமியாகவிடும் என்று திட்ட வரைவுகளைத் தயாரித்தார். ஆனாலும் நினைத்ததுபோல எளிதாக இல்லை வேலை. தடைகளையும் குறுக்கீடுகளையும் தாண்டி, சென்னை மாகாண ஆளுநர் வென்லாக் முன்னிலையில் 1895-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி இந்த அணைக்கட்டுக்காக அடிக்கல் நாட்டும் பணியைத் துவக்கினார். அப்போது, 65 லட்ச ரூபாய் செலவில் அதைக் கட்டி முடிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. பணிகள் துவங்கின. கடினமான வேலை, காட்டு யானைகளின் பயம், பூச்சிகளின் விஷக்கடி, ஆயிரக்கணக்கான பணியாளர்கள். குளிர் தாங்க முடியாமல் சாவு. காலரா, எதிர்பாராத கடும் மழை. தனது கனவை நிறைவேற்றுவதற்காக காட்டு மழைக்குள்ளாகவும் பென்னிகுக் அலைந்துகொண்டிருந்தார். பணியாளர்களோடு தங்கியிருந்து அவர்களது சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொண்டவன், பென்னிகுக்கோடு வேலைசெய்த இளம் பொறியாளர் லோகந்துரை.

அணை கட்டி முடிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்பாராத வெள்ளத்தால் சில நாட்களிலேயே அணை உடைந்துபோனது விசாரணை, தவறான செயல்பாடு என்று குற்றம்சாட்டப்பட்ட பென்னிகுக், தடுப்பணைகள் உருவாக்கப்படாததால்தான் உடைப்பு எற்பட்டது என்று முடிவுசெய்து, காட்டுக்குள் தடுப்பணைகள் கட்டுவதற்கான நிதியுதவி கேட்டு விண்ணப்பித்தார். ஆங்கிலேய அரசாங்கம் பணம் தருவதற்கு மறுத்துவிட்டது.

வேறுவழியின்றி இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை விற்று, பணத்தைத் திரட்டிக் கொண்டுவந்து, மீண்டும் தடுப்பணைகளை உருவாக்கினார். மதுரை மாவட்டப் பகுதிகள் முழுவதும் இந்த அணையால் பாசன வசதி கண்டது. பின்னர், ஆங்கிலேய அரசே பென்னிகுக்கை கெளரவப்படுத்தியது. எந்த தேசம் நம்மை அடிமையாக்கியதோ, அந்த தேசத்திலிருந்து வந்தவர் தமது சொத்தை விற்று, நமது நலனுக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

அன்று முதல் ஒவ்வொரு கிராமமும் இந்த வெள்ளைக்காரப் பொறியாளர்களைத் தங்களது குலசாமிகளைப் போல மனதுக்குள்ளாக வணங்கி வருகிறார்கள். லோகந்துரையும் பென்னிகுக்கும் இப்போது உள்ளூர்ப் பெயர்களாகிவிட்டன.

காலம் எத்தனையோ கதைகளைத் தன் உள்ளங்கை ரேகையைப்போல, மாற்றாமல் வைத்துக்கொண்டேயிருக்கிறது. தண்ணீருக்காக ஒவ்வொரு கோடையிலும் நடக்கும் போராட்டமும் பிரச்சினைகளும் முடிவற்று தொடரும்போதொல்லாம் எவரோ பென்னிக்குக்கை நினைத்துக்கொள்கிறார்கள். இன்று வன உயிர்க்காப்பமாக மாற்றப்பட்டுவிட்ட பெரியாறு பகுதி மலையில் யானைகளுடன் ஈரப்புகையைப்போல, கடந்த காலத்தின் நினைவுகளும் சுற்றியலைகின்றன.

பின்குறிப்பு: இங்கிலாந்திலிருந்து பென்னிகுக்கின் கொள்ளுப்பேரன் சாம்சன், தனது தாத்தா கட்டிய அணையைப் பார்ப்பதற்காகச் சமீபத்தில் தமிழகத்துக்கு வந்திருந்தார். முதல்முறையாக இந்தியா வந்த அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து, பென்னிக்குக்கின் சிலையைப் பார்வையிடச் செய்தார்கள். கூட்டத்திலிருந்த ஒரு பெண் தனது குழந்தைக்கு ‘பென்னிகுக்’ என்று பெயர் வைக்கும்படி சாம்சனிடம் கொடுத்தாள். உணர்ச்சிப்பெருக்கோடு சாம்சன், தனது தாத்தாவின் பெயரை அந்தக் குழந்தைக்கு வைத்தார். கிராமவாசிகளில் ஒருவர், சாம்சனின் கையைப் பிடித்துக்கொண்டு விளையும் ஒவ்வொரு நெல்லிலும் பென்னிகுக்கின் பெயர் ஒட்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். உண்மையை எந்த பாஷையில் சொல்லும்போதும் புரிந்துவிடும் என்பார்கள். அது நிஜமென்று அப்போது காண முடிந்தது.

Wednesday, December 21, 2011

எங்கேயும் எப்போதும் - பேருந்து பயணங்களில்...


இப்படி ஒரு படத்தை தமிழில் நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்றைய பரக்கா வெட்டி அவசர உலகமாக மாறி வரும் நமது தமிழகச் சாலை கலாச்சாரத்தில் மிகவும் அவசியம் தேவைப்படும் படமென்றால் அது மிகையாகிவிடாது.

எனது ஊரில் சக்தி விநாயகர் ட்ரான்ஸ்போர்ட் என்ற பெயரில் ஒரு பேருந்து ஓடுவதுண்டு. கரம்பக்குடிக்கும் புதுக்கோட்டைக்குமான சராசரி பாதையான ஆலங்குடி செல்லாமல் வடவாளம் வழியாக செல்லும் வழியது. எல்லா பேருந்துகளும் குறைந்தது ஏத்தி, இறக்கி என்று ஒண்ணரை மணி நேரம் எடுத்துக் கொண்டு செல்லும். ஆனால், இந்த பேருந்து மட்டும் எனக்கு தெரிந்த ஒரு அண்ணனால் ஓட்டுநராக இயக்கப்பட்டு வந்தது. அவன் ஓர் இளைஞன். அவனுக்கு எல்லாரும் கொண்டு போயி பயணிகளை சேர்க்கும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக 45 நிமிடத்தில் கொண்டு போயி சேர்ப்பதிலொரு அலாதி இன்பம், பெருமை.

அந்த பேருந்து காலை வேளையில் மிகச் சரியாக பள்ளி, கல்லூரி, அலுவலக நேரத்திற்கு உகந்ததாக ஒரு பயணிப்பு செய்யும். அந்த நேரத்திற்கு இவர் ஓட்டுவது எல்லாராலும் ஊக்குவிப்பட்டு, பாட்டு, கும்மாளம் என்று இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அண்ணனுக்கு அப்பொழுதே திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்ததாக எனக்கு ஞாபகம். ஒரு நாள் அந்த பேருந்தை காட்டு வேகத்தில் தனது பட்டன்கள் மாட்டப் படாத சட்டை காற்றில் பறக்க ஓட்டி புளியமரத்தில் மோதி ஓட்டுநர் அண்ணன் அந்த இடத்திலேயே மரணித்து விட்டார். அவரின் அந்த இளம் குடும்பத்தை பாதி வழியே நிறுத்தி விட்டு நிரந்தரமாக அவர் விடைபெற்றுக் கொண்டார்.

இது போலவே தினமும் நாம் கேள்வியுறும், கண்ணுரும் சாலை விபத்துக்களை அந்த பேருந்துக்களில் நம்மையும் ஒருவராக அமர வைத்து இந்த இளம் இயக்குனர் சரவணன் நம்மை உணர வைக்க முயற்சித்து அதில் கன்னாபின்னாவென்று வெற்றியும் அடைந்திருக்கிறார். என்னுடைய சூழலில் கண்ட குப்பை படங்களையும் பார்த்து உணர்ச்சி பூர்வமாக விமர்சனம் முன் வைப்பது என்பது கட்டுப்படியாகாது என்பதால், உற்ற நண்பர்கள், எனையறிந்தவர்களின் தொடர்ந்த நொச்சுக்கு பிறகே பார்த்து வருகிறேன்.

இன்னொரு பாலிசி என்னிடம் ஆன்லைனில் படம் பார்த்தால் விமர்சனம் எழுதக் கூடாது என்பது. ஆனால், அதனை உடைக்க வேண்டியதாகி விட்டது; இந்தப் படத்தின் தாக்கத்தால். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் பொழுதும் தொடர்ச்சியாக பேருந்து பயணங்கள் செய்வது என்பது எனது உயிர்ப்பை மீட்டெடுக்கும் யுக்திகளின் ஒரு பகுதி. இந்தியாவின் நீள அகலங்களை அளந்ததும் பெரும்பாலும் பேருந்து, மட்டும் புகை வண்டிப் பயணங்களின் மூலமாகவே. ஆனால், இன்றைய நிலையில் ஊரில் சாலைகள் மேம்படுத்தப் பட்டிருப்பதனை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் பெருக்கமும் கட்டுக்கடங்காமல் எகிறியிருக்கிறது. விதவிதமான பெயர்களில், இருக்கை வசதிகளுடன் சம்பந்தமே இல்லாத வேகத்தில் இயக்கப்படுகிறது.

ஒரு முறை இங்கிருந்து ஒரு வெள்ளைக்காரரை ஊருக்கு அழைத்து வந்திருந்தேன். அவர் கூறிக்கொண்டு வந்தார் ஊரில் கார் ஒன்று வாடகைக்கு எடுத்து தானே இயக்கப் போவதாக. இத்தனைக்கும் அவருக்கும் இங்கு 30 வருடங்கள் வாகனம் இயக்கிய அனுபவம். ஆனால், விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு வந்து சேருவதற்குள்ளாவுமே தனது திட்டத்தை மாற்றிக் கொண்டார். அது மட்டுமில்லாது, எதிர் இருக்கையை இறுக பற்றிக் கொண்டவர்தான் வழியெங்கும் ஹோலி ஷிட் என்று கூறிக் கொண்டே வந்தார். அந்த அழகில் வண்டிகள் முந்திச் செல்ல எடுக்கும் முயற்சிகளும், மயிரிழையில் இன்னொரு வண்டியின் முன் வந்து மற்றுமொரு வாகனம் இறங்கும் நிலையும் குடல் கலங்க வைத்திருந்தது.

சரி இந்தப்படத்தில் என்ன அப்படியொரு விசேசம். இது அத்தனையும் தத்ரூபமாக வழங்கப்பட்டிருக்கிறது. இல்லாது படத்தின் நாயகர்களை நம்மில் ஒருவராக ஆக்கி அவர்களை அந்த பேருந்துகளில் அமர்த்தி அவர்களுடன் நம்மையும் பயணிக்க விட்டு படத்தின் இறுதியில் மிகப் பெரிய விபத்தொன்றை சந்திக்க விட்டு முக்கிய கதாபாத்திரம் ஒன்றையும் மரணிக்க விட்டு பதறடித்து விடுகிறார் இயக்குனர்.

இயல்பாக தமிழ் படங்களில் மனதை தொடுகிறேன் பேர்வழியென்று கொடுக்கும் வாழ்வு கசப்புகளை அதீதமாக கலந்து நகைச்சுவையாக்கி விடுவார்கள், ஆனால் இந்தப் படத்தில் மிகையே கிடையாது.

பேருந்தில் ஏறுவதற்கு முன்னால் எல்லாரையும் போல பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், தம் என்று கலவையான மனிதர்கள் கலவையான வேலைகளை நாம் அனைவரும் செய்வதனைப் போன்றே செய்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தங்களது வாழ்க்கையே தலைகீழாக மாறப் போவது தெரியாமல். பல கலர் கனவுகளுடன் பயணம் துவங்குகிறது.

அப்படியே ப்ளாஷ்பேக்காக காதல் கதையும் சுத்தப்படுகிறது. இரண்டு செட் காதலர்களைக் கொண்டு ரொம்ப வித்தியாசமாக நகர்த்தியிருக்கிறார்கள். அஞ்சலியினை ஒட்டி வரும் கதாபாத்திரக் குடும்பச் சூழலில் வரும் அப்பா ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், அது போலவே அவளுக்கான கதாநயாகன் ஒரு இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான் இரண்டுமே பெரிதாக உறுத்தலே இல்லாமல் அந்த காதலுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. அவளின் வெளிப்பாடு ஒரு பெண்ணுள் இருக்கும் ஆண்மையின் ஆளுமையை வெளி விடுவது. ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது.

காதலில் விழுவதற்கு முன்னாக ரொம்ப எதார்த்தமாக நடை முறைப் படுத்த வேண்டிய விசயங்களை ஒரு பிரச்சார முறையில், சாலை விபத்து தடுக்கப்படுவதின் அதே வீரியத்துடன் இந்த காதல் முன் எச்சரிக்கையும் அழகாக கையாளப்பட்டிருக்கிறது. காதலனை அதட்டி உருட்டி இரத்தப் பரிசோதனை எடுத்துக் கொள்ளச் சொல்வது அவனது ஜாதகத்தினை விட அது கொடுக்கும் வரலாறு முக்கியமென்று கூற வருகிறது.

பிறகு உறுப்பு தானத்திற்கு கையெழுத்துப் போட வைத்து அவன் பயப்படும் பொழுது அடிக்கும் வசனங்கள் டாப் கியரில் நகர்கிறது. வேறு எந்த படத்திலும் இவ்வளவு அழுத்தமாக உறுப்பு தானம் பேசப் படவில்லை. அதே கதாநாயகன் விபத்தில் மரணிக்க நேரும் பொழுது அஞ்சலி மருத்துவரிடம் உறுப்புகளை எடுத்துக்கச் சொல்லி கூறும் காரணங்கள் நிச்சயமாக இன்னும் நிறைய மக்களை உறுப்பு தானம் செய்ய வைக்க முன்வருமாறு உந்தச் செய்யலாம். அதற்கெனவே அந்த கதாநாயகனை சாகடிக்க வேண்டியிருந்திருக்கிறது இயக்குனருக்கு என்பது புரிந்து கொள்ளக் கூடியது.

இரண்டாவது செட் காதலர்கள் அதே க்யூட்நெஸ். உயிர்ப்பு எல்லாம் இருக்கிறது. அநன்யா அசத்தியிருக்கார். பெரியளவில் அவர்கள் எதுவும் படத்தில் செய்தி சொல்லிப் போவதாக இல்லை. ஆனால், கலகலப்பாக்கிறார்கள். பாடல்கள அனைத்து அருமையாக அமைந்து போயிருக்கிறது. படம் பிடித்த விதவும் அழகே!

பேருந்தினுள் உள்ள பயணிகளில் யாரேனும் ஒருவருடன் நம்மால் ஐடெண்டிஃபை செய்துக் கொள்ள முடியும். ரொம்ப எதார்த்தமாக இருக்கிறார்கள்.  ஒரு குழந்தையிடம் உடனே என்னய கட்டிக்கிறாயா என்று அந்த புதுப் பொண்டாட்டிக்காரர் கேட்பது, அது அம்மாவிடம் சென்று உரையாடும் டயலாக், கொஞ்சம் அதிகம் என்பதனைத் தவிர.

ஒருவர் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வருகிறார். ஐந்து வருட பிரிவு ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது மனைவியைப் பிரிந்த கணவர். அவரின் ஐந்து வயது குழந்தையின் குரலை ரிங்க் டோனாக வைத்திருப்பதும், பேருந்தில் ஒலிக்கும் ஒவ்வொரு அலைபேசியின் ரிங் டோனைக் கேக்கும் பொழுது சிரிப்பை வரவழைக்கிறது. அந்த மத்திய கிழக்கு நாட்டிலிருந்து திரும்பும் அப்பா கூட நமக்கு ஒரு பெரும் செய்தியை கொண்டு வருகிறார். அவர் ஒவ்வொரு முறை குழந்தையுடன் பேசும் பொழுது இதோ கிளம்பிட்டேன் என்று கூறுவார், அதுவே பின்னாளில் குழந்தை உண்மையாக அப்பா ஊர் திரும்பும் போது கூட நம்பிக்கையற்ற முறையில் ட்ரீட் செய்ய தலைப்படுவதை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

அந்த பேருந்து விபத்துக்குள்ளாகும் காரணமும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அதனை படம் பிடித்த விதமும் பிரமாண்டமாக இருக்கிறது. தமிழுக்கு இது கண்டிப்பாக புதிது! ஓட்டுநர்கள் தங்களுக்கு பின்னால் எத்தனையோ குடும்பங்களின் மனிதர்கள் பல விதமான கனவுகளுடன் பயணித்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை உணர வைப்பதற்கான அழகானதொரு படைப்பு. குடித்து விட்டு, கவனமற்ற முறையில், முறையான சாலை விதிகளை கடைபிடிக்காத தான் தோன்றித் தனமான, முரட்டு வளர்ப்பு பின்னணியில் வரும் ஓட்டுநர்கள் இந்தப் படத்தை பார்த்தேனும் ஒரு முடிவிற்கு வந்தால் அதுவே இந்த படத்தை எடுக்கத் துணிந்த சரவணனுக்கு கிடைத்த வெற்றி.

எனக்கு படத்தை பார்த்து முடித்ததும், வாழ்க்கைதான் எத்தனை நெகிழ்வுத் தன்மையும், நிலையற்றதுமாய் விரிந்து கிடக்கிறது என்று நினைவிற்கு வந்து அழுத்தி என்னை மிகவும் டிஸ்டர்ப் செய்து விட்டது. எப்பொழுதும் போலவே ஒரு பாட்டம் கண்ணீர் வடித்தேன். இந்த படத்திற்கென உழைத்த அனைவருக்கும் ஒரு சபாஷ்...

மிக மிக நல்ல படம்!


பி.கு:  பண்புடன்.காம் தளத்திற்காக எழுதியது.

Sunday, November 27, 2011

முல்லை பெரியார் - நீருக்கான போர் - காணொளியுடன்.


இது வரையிலும் இந்த பூகோளம் இரண்டு பெரிய உலக போர்களை சந்தித்திருக்கிறது. மூன்றாவது ஒன்று வர வேண்டும் என்று பரவலாக கனியக் காத்திருக்கும் ஒரு சூழலிலிருக்கிறது. அந்த இனிய சூழலும் இயற்கை வளங்களை யார் சுரண்டி கொழுப்பது என்பதனை ஒட்டியே அமையும் என்று பணம் படைத்தவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது எத்தனை அளவிற்கு உண்மையோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், அண்மைய காலங்களில் நடந்தேறும் வனங்களின் விரைந்து அழித்தொழிப்புப் பரவலாக உலகளவில் மழை பெறும் அளவையும், நிலத்தடி நீரின் குறைவும் அப்பட்டமாக செய்தி சொல்லி நிற்கிறது.

உலகின் மொத்த நீர் வளத்தில் 97.5 சதவீதம் கடல் நீரும் மீதமுள்ள 2.5 சதவீதமே நன்னீருமாக நமக்கு இந்த இயற்கை பிச்சையாக வழங்கி நம்மை போன்ற ஒரு முட்டாள் மனித இனத்தை வைத்து அழுது கொண்டிருக்கிறது இந்த பூமி. இதனிலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நாம் எடுத்துக் கொள்ளும் வாக்கில் அந்த நன்னீர் அமைந்திருப்பதாக நாம் அறிகிறோம்.

இந்தச் சூழலில் நமது தென் மாவட்ட நிலமையை சற்றே உற்று நோக்கினால் ஓர் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நீரோட்டம் இப்பொழுது கிடையாது. விரைவான பாலைவனவாக்கம் நடைபெற்று வருகிறது; இயற்கையாகவே. ஐயூசின் ஆய்வறிக்கை கூட இதனையே வழிமொழிந்து 2020ஆம் வருடமாக்கில் கூடுதலாக இந்த பாலையின் கோர முகத்தை நாம் கண்ணுறலாமென்று அபாய மணி வேறு அடித்து வைத்திருப்தாக எங்கோ படித்த ஞாபகம்.

இது ஒரு சுழற்சியாக கூட நடைபெற்று வரலாம். பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியா முழுவதும் ஒரு மாபெரும் வறட்சியும் அதனையொட்டிய பட்டினிச் சாவுகளும் நடந்தேறி இருக்கிறது. அதிலும் நமது பகுதியில் மிகக் கோரத் தண்டாவம் ஆடி முடித்திருக்கிறது. இதற்கு தீர்வாக கண்டடைந்ததுதான் முல்லை பெரியார் அணையும், அதனையொத்த பல மேற்கு மலைத் தொடர்களை ஒட்டிய பல நீர்த்தேக்க அணைகளும். அந்த பாடம் நிச்சயமாக பல உயிர் சேதங்களுக்கு பின்னாக கற்றுக் கொண்டதது.

அப்படியாக அணைக்கட்டுக்கள் கட்டப்பெறும் பொழுது பல சதுர கிலோமீட்டருக்கான மழைக்காடுகள் அழிக்கப்பெற்று அத்துடனேயே பல ஜீவராசிகளின் வாழ்வும் முடிக்கப் பெற்று நமது சுயநலத்திற்கென அணைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்றே புதிது புதிதாக மென்மேலும் விரிவாக்கம் செய்து கொண்டேச் சென்றால் வனத்தினுள் இருக்கும் பெரிய விலங்குளான யானை, காட்டெருமை ஊருக்குள் நடந்து திரிவதனை காண முடியும். அதனை விட சிறிய விலங்கினங்கள் கண்ணுக்கு எட்டுப்படாமலேயே சுத்தமாக மாண்டொழியும்; அத்துடனே பல அரிய மர, சொடி, கொடி வகைகளும்; அவைகள் அறிவியல் உலகின் பார்வைக்கே வந்திருக்கக் கூட வாய்ப்பில்லாமலே துடைத்தழிக்கப்படலாம்.

இத்தனை சிக்கலை உள்ளடக்கியது இந்த விசயம். இருப்பினும் நமது தேவையை முன் வைத்து ஒரு நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு கேரளத்திலிருந்து உபரியாக வழிந்தோடும் நீரை தேக்கி வைத்து வறட்சிக்கு பெயர் போன தேனி, கம்பம், போடி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஏரியாவிற்கு விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்குமென பயன்படும் வாக்கில் ஓர் அணைக்கட்டு முல்லை பெரியார் என்ற பெயரில் ஒரு ப்ரிட்டிஷ்காரரின் முன்னிலையில் மக்களாவே முன் வந்து பணத்தை போட்டு கட்டியெழுப்பியிருக்கிறார்கள்; கேரளா அரசுடனான 999 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில்.

திடீரென்று சர்வதேச அரங்கில் எல்லைகளை அடிப்படையாக கொண்டு இரு தேச அரசுகள் விளையாடும் ஓட்டு அரசியல் விளையாட்டை இன்று ஒரு நாட்டிற்குள் அடங்கியிருக்கக் கூடிய மாநில அரசுகள் இது போன்ற நீர் வள ஆதார விசயத்தில் வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறது - கேவலமான அபாயகரமான விளையாட்டு. இது எப்படி என்றால் எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து பரட் பரட் என்று சொறிந்து கொள்வதற்கு சமமாக இருக்கிறது. எத்தனை சென்சிடிவான ஒரு விசயமிது? இதனை வைத்து இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்ச்சியை வளர்க்கும் பொருட்டு அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளே முன்னின்று செய்தால் ஒரு நாடாக எப்படி மேலேழும்பி வல்ல’அரசு ஆகுவது?

கிட்டத்தட்ட தமிழகத்தை சுற்றிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் இந்த அரசியல் விளையாட்டை முன் வைத்து விளையாடுகிறது. இதன் அபத்தம் புரியாமல் மத்திய அரசு என்று பெயர் வைத்துக் கொண்டு முட்டி கழண்டவர்கள் இதனை சூப்பர்வைசிங் செய்கிறார்கள். இது எங்கே எப்படி போய் முடியப் போகிறது என்ற தொலை தூர பார்வையே அற்று வீங்கி வெடிக்கும் வரைக்கும் பொறுத்திருப்பது யாருக்கு நன்மை பயக்கும் என்று புரியவே இல்லை.

அண்மையில் ஒரு காணொளியை பார்க்க நேர்ந்தது. அந்த ஆவணப்படத்திற்கான இயக்குனரும் பல அனுபவம் வாய்ந்த சீனியர் இஞ்சினியர்களும் ஒருங்கே இணைந்து 17ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து நேற்று வரையில் இந்த முல்லை பெரியார் அணைக்கட்டு விசயமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றதொரு கல்வியூட்டும் விதமாக ஒரு அருமையான விவரண காணொளியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்த காணொளி கட்டம் கட்டமாக (phase by phase) நகருகிறது. ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய காணொளி இது. ஏனெனில் இன்றைய கேரளா அரசு மிக முனைப்புடன் இந்த 999 வருட ஒப்பந்தத்தை உடைக்க எண்ணி மிக்க பிரயத்தனப்பேரில் பெரிய பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் நாம் குறைந்த பட்சம் இந்த பிரச்சினைக்கு பின்னான உண்மைதான் என்ன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் பொறுப்பான காரியமாகிவிடுகிறது. ஏன்னா, தண்ணீர் இல்லைன்னா நாக்கு வறண்டு செத்து போயிடுவோம்யா... அது நீ கேராளக்காரான இருந்தாலும் இராம்நாட்டில் வாழ்ந்தா உன் வாயிலும் தான் மண்ணு...  


பகுதி - 2

Saturday, November 19, 2011

ஜெயமோகனின் இந்து மத தட்டைப்படுத்தல் விதி...

இவரையெல்லாம் படிப்பதற்கே ஒரு மண்டை வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பொழுது என்னவோ இந்த தட்டைப்படுத்தல் சித்தாந்தம் சில கேள்விகளை என்னுள் எழுப்பியதால், விமர்சிக்கும் நிலையிலிருந்து தூரத்தில் நின்றாலும் பொதுவில் வைத்து வாசிக்கக் கிடைத்ததால் ஓர் ஓரத்தில் வைத்து நாங்களும் பேசித் தெளிந்து கொள்வோமே என்று இதனை எழுத்தாக்கி முன் வைத்திருக்கிறேன். வாங்க வாசிப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு நியூ யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர் தாமஸ் ஃப்ரீட்மென் எழுதிய த ஃப்ளாட் வேர்ல்ட் புத்தகம் படித்தேன். அன்றைய வளர்ச்சியில் படிக்கும் பொழுது அதன் மேலோட்டமான சர்க்கரை தடவிய விசயங்கள் மயக்கத்தை ஊட்டி அடடா என்ன சிந்தனை என்ன சிந்தனை என்று வாசிக்கும் பொழுது கட்டிப் போட்டிருந்தது. அதன் அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் பல கோடி மக்களின் நசுங்கிய வாழ்க்கையை அந்த எழுத்து எடுத்து காட்டிக் கொண்டிருக்கவில்லை; அதற்கு பின்னான ஃப்ரீட்மெனின் கொள்கை நோக்கு எதனைப் பொறுத்தது என்று புரிந்து கொள்ளும் பக்குவமுமில்லை அன்று எனக்கு. அந்த அரசியல் சார்ந்த எழுத்து அத்தனை மயக்கத்தை ரொம்ப இயல்பாக விதைத்து விட்டுப் போயிருந்தது.

அந்த புத்தகத்தின் வெற்றிக்கான எழுத்துச் சிந்தனைக்கான பாராட்டை நாம் அந்த பத்தி எழுத்தாளருக்கே வழங்க வேண்டும். ஏனெனில் அதற்குப் பின்னான உண்மைகளை மறைத்து உள்ளதை உள்ளபடியே வழங்குவதாக உலகம் முழுமைக்குமே ஒருமுகப் போக்கே (monopoly) சிறந்தது என்று வழங்கி அதனை எடுத்து முன் வைத்த புத்திசாலித்தனத்தினை வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால், அதனில் கூறப்பட்டிருக்கும் உண்மை என்னவெனில் மெக்டொனல்ஸ் போன்ற அதி விரைவு உணவகங்களில் உருவாகும் உணவை உண்டு செரித்துக் கொள்ள பழகி விட்டால் பல ஏற்றத் தாழ்வுகள் மறைந்து விடும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மெக்டெனால்ஸ் பரப்புவதின் அவசியத்தை எடுத்தியம்பி அதனால் மட்டுமே உலக தட்டையாக்கப்படல் சிந்தனை ரீதியாக எப்படி எடுத்து கட்டியெழுப்பப்படும் என்று மயக்கம் ஊட்டக் கூடிய கருதுகோளின் அடிப்படையை நிறுவ முயன்றிருக்கும் அந்தப் படைப்பு.

இந்த உலகம் முழுதிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் லோகல் வாழ்வு ஆதாரத்தில் கிடைக்கும் பொருளாதாரச் சூழலில் அமைத்து கொள்ளும் தன்னிறைவு அணுகுமுறையைத் தவிர்த்து உலகினைத் தட்டையாக்கிவிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்வும், ஒரு மித்த சிந்தனையும் எட்டி விடுவார்கள் பின்பு இந்த பூகோளத்தில் பஞ்சமும், போரும் அற்று ஜீவித்து வாழலாம் என்பதனை போல மிக மேலோட்டமான கருத்தை முன் வைத்து எழுதப்பட்டது. ஆனால் அந்தப் புத்தகம் அறிவுச் சுரண்டல் பண்ணுபவர்களுக்கான ஒரு கையேடு.

அந்தப் புத்தகத்தில் அவர் எப்படி வெளி நாட்டுத்தொழில்கள் இந்தியா போன்ற மூன்றாம் தர நாடுகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டித் தரக்கூடிய அமுத சுரபி, என்று கூறியபடியே இனிப்பு மிட்டாய் வழங்கியிருப்பார் (கசப்பை மறைத்து). அதற்கு அடிப்படையான மனித வளம், ஆங்கிலம் கற்றறிந்த பல கோடி இளைஞ/ஞிகளைக் கொண்டு மிக எதார்த்தமான சூழ்நிலையில் அமைந்து பட்டிருக்கிறது என்ற புள்ளி விபரத்துடன். அதற்குப் பின்னான விசயங்களான இந்த இளைஞர் கூட்டம் எப்படி உறிஞ்சப்பட்டு ஒரு நாட்டிற்கு கிடைக்கற்கறிய அறிவுச் சுரண்டல் நடந்து கொண்டிருக்கிறது என்பதனை உணர முடியாத வாக்கில், நமது இளைஞர்களின் ஆங்கில அறிவு சிலாகிக்கப் பெற்று எப்படி அவர்கள் பீட்சாவும், கோக்கும் வார இறுதி கேளிக்கைகளையும் நடத்தி அமெரிக்கர்களைப் போலவே இன்று சிறு சேமிப்பு அற்று, ஈட்டும் பணத்தை சுழற்சியில் போடுவதின் மூலம் லோகல் பொருளாதாரம் மேம்பாடு அடைய உதவுகிறார்களென்றும், இந்திய இளைஞர்களின் வாழ்க்கை அமெரிக்க இளைஞர்களைப் போலவே இருக்கிறது என்றும் புல்லரித்துப் போய் இருப்பார்.

படிக்கிற என் போன்றவர்களை அந்த மயக்கமூட்டல் என் தலைமுறைக்கும் தாங்கும் விதமாக தடம் பதித்து விட்டுவிடும்.அதற்குப் பின்னான சுரண்டல் புரியாமலேயே! இன்னும் ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்தாலே தான் ஓர் அறிவாளியாக எண்ணிக் கொள்ளும் மயக்கத்திலிருப்பவர்களுக்கு இது போன்ற வாசிப்பு பின்பு எதனை விட்டுச்செல்லும்.

இந்தக் கட்டுரை பேச வந்த விசயம் இதுவல்ல. இருப்பினும், அதே உலகமயமாக்கல் சந்தைப்படுத்தலுக்கான எழுத்து பிரதிநிதியை ஒத்தே இன்று நமது பகுதி உலகில் ஒருவர் எப்படி கடவுளுடன் உரையாட தகுதியான ஒரே மொழியான சம்ஸ்கிருதத்தைக் கொண்டு நாட்டார்கள் தெய்வத்தினையும், மற்ற கோடான கோடி கிராம கடவுளர்களையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து எல்லைகளைக் கடந்து கடவுள் உலகமயமாக்கல் செய்ய முடியுமென்று நமக்கெல்லாம் ஒரு சித்தாந்த லாலிபாப் வழங்க தனது சிந்தனைக் கடையை விரித்திருக்கிறார். அதனை வாசிக்க நேர்ந்ததின் விளைவாக உருவானதுதான் இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்துங்க...

எனக்கு அதனை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த சித்தாந்தத்திற்கான அடிப்படை நல் கருத்தாக்கங்கள் மேலே அறிமுகப்படுத்தியிருந்த அதே ஃப்ரீட்மெனினுடைய உலகமயமாக்கலின் நன்மைகளை எப்படி இனிப்புத் தடவி அதற்கு பின்னாக அழுந்தி, நசுங்கி கொண்டிருக்கும் பன்முக வாழ்வு முறை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வாதாரம், மொழி போன்றவைகளை தவிர்த்து/மறைத்து பேசி ஒரு வித மயக்கத்தை தோற்றுவித்தாரோ அதே செயலை வேறொரு தளத்திலிருந்து நமது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வழங்கியிருக்கிறார் என்பதாக புரிந்து கொண்டேன்.

அந்தக் கட்டுரையின் சாரம்சம்:- இந்தியா போன்ற அகன்ற நிலப்பரப்பை கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் மதம் இந்து மதம். அதற்கென உள்ள கடவுள்களோ வாழும் மக்களை விட அதிகப்படியான எண்ணிக்கையில் உள்ளது. எப்படி இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தேசீய இனமாக கட்டியமைக்க எண்ணி, மத ரீதியாக இணைக்கும் நிலையிலாவது அது சாத்தியப்படுமா என்ற ஒரு முயற்சியின் நிமித்தம் இந்த சம்ஸ்கிருத பொது மொழியை முன் நிறுத்தி அந்த கட்டுரை பேசியிருக்கிறது.

எனது முப்பாட்டனான தாத்தா கூட எங்களுக்கு குல தெய்வம் ஆகிவிட்டார் எனும் பொழுது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அது போன்ற கடவுள் ஒருவர் இருப்பார்தானே? அப்போ அவர் சொல்வதும் சரிதான். சரி, ஆனால் என் முப்பாட்டன் பேசிய, புழங்கிய மொழியில் அவருடன் உரையாடுவதில்தான் எனக்கு கிடைக்கக் கூடிய நெருக்கமும், உணர்வுகளும் கடத்திப் பெறுவதாக எனது மனதும் லயித்து எனக்கு கிடைக்க வேண்டிய நம்பிக்கை சார் விசயங்களும் கிடைத்ததாக நகர்ந்து அடுத்த தலைமுறைக்கும் அதனை கடத்தப்பெற வைக்கிறேன்.

மாறாக, பக்கத்துத் தெரு கிஷ்மு உடைய கொள்ளுத் தாத்தா ஓரளவிற்கு அறியப்பட்டவர் என்பதால், அவர் பேசுகின்ற மொழியின் அ, ஆ கூட தெரியாமல் நான் எனது முப்பாட்டனை அவருக்கு கீழாக இணைத்துக் கொள்வதின் மூலமாக எனக்கான நெருக்கத்தினை எப்படி எட்ட முடியும்? அப்படியெனில்  எனது முப்பாட்டன் அவரை விட இளக்காரமானவரா? எதன் பொருட்டு? அவர் எட்டியிருந்த பொருளாதார அடிப்படையிலா, அல்லது பேசும் மொழி சார்ந்தா? இப்பொழுது இந்த அடிப்படை வாதத்தை விட்டுவிட்டு சற்றே பெரிய கடவுளர்களுக்கு வருவோம்.

உதாரணமாக, எங்களூரில் மகமாயி கோவில் ஒன்று உள்ளது. அங்கே லோகல் பூஜாரியே சூடம் ஏத்தி, அவருக்கு தெரிந்ததைப்பாடி, எங்களுக்கு போதுமான நெருக்கத்தை உருவாக்கித் தருகிறார். அதுவே போதுமானதாக கருதி எத்தனையோ தலைமுறைகளை கடந்து வந்து அந்த வழிபாடும் நிற்கிறது. வருடம் ஒரு முறை கோழி, ஆடுகள் நேர்த்திக்காக பலியிடப்பட்டு அங்கேயே கிராமமாக அமர்ந்து, சமைத்து உண்டு கொண்டாட்டமாக நாளை கடத்துகிறோம்.

இந்த முறையை மாற்றி மிருக பலியிடல் நாகரீகமற்ற செயல். அதனில் ஓர் அழகில்லை. காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறது. மாரியாத்தாளிடம் உரையாடும் மொழியும் அப்படியே இருக்கிறது என்று கூறி 99% சதவீத மக்களுக்கு புரிந்த மொழியைத் தவிர்த்து புரியாத ஒரு மொழியில் அன்னியமாக உணர்ந்து கொண்டு, தன் சார்ந்த நிலத்திற்குள்ளாகவே வேறுபட்டு ஏதோ மற்றுமொரு கட்டமைக்கப்பட்ட உலக கடவுள் நிறுவப்படலின் அவசியத்தில் எனது கொண்டாட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வது அந்த மண்ணின் மணத்தையும், வாழ்வு முறையையும் சிதைக்குமா சிதைக்காதா?

...இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது...


எழுத்தாளர் ஜெயமோகனின் வாதம் - சம்ஸ்கிருதத்தை கடவுளுடன் உரையாடும் ஒரே பொது மொழியாக ஆக்கிவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து கேதர்நாத் வரையிலும் ஒரே சங்கீதமே ஓதப்படும். அதனால் மிசோரத்திலிருந்து குஜாரத் வரையிலும், தமிழகத்திலிருந்து கஷ்மீரம் வரையிலும் அனைத்து இந்தியர்களும் கடவுளின் பொது மொழி புரிந்து தங்களை ஒரே தாயின் பிள்ளைகள் என்று உணர்ந்து அனைத்து சிறு கடவுளர்களும் பெரும் கடவுளர்கள் போன்றே இந்தியாவின் ஏனை பகுதி மக்களின் கவனத்தை பெற்று, என் ஊர் மாரியம்மா கோவிலுக்கு மிசோரத்து பிரஜை வந்து போக வசதியாக இருக்கும் என்று மத ஒருமுக போக்கை கட்டியெழுப்புகிறேன் என தனது மத தட்டைப்படுத்தல் சித்தாந்தத்தை முன் வைத்திருக்கிறார்.


...சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது...


மோலோட்டமாக வாசிக்கும் பொழுது அதே எண்ணம் ஃப்ரீட்மெனிடம் கிடைத்த அடடா என்ன சிந்தனை, என்ன சிந்தனை என்று சித்தம் கலங்க வைக்கக் கூடிய மயக்கமே வந்தது. ஆனால், அதற்குப் பின்னான அபத்தமும், 3000 வருடங்களாக நடந்தேறும் அதே குயுக்தியும் அந்த வார்த்தைகளுக்குப் பின்னான நிழலில் ஒளிந்து நிற்கிறது. இந்த வாரத்தில் ராகுல் சங்கிருத்தியாயன் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற ஆய்வாராய்ச்சியினை ஒத்த புத்தகம் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. சற்றே புனைவு கலந்து மிக அழகாக 6000 வருடங்களுக்கான பின்னோக்கிய நடையில் தொடங்கி முன்னேறி 1940களில் வைத்து முடித்திருக்கிறார்.

இந்த மானிட வளர்ச்சியும்/வீழ்ச்சியும், அதற்குப் பின்னான உண்மையான அரசியலும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அந்த வாசிப்பு ஒரு நல்ல தொடக்கம். ஒரு மானுட இனமாக எங்கிருந்து தொடங்கியது நமது நடை என்று அறிந்து கொள்ள எத்தனித்து தெளிவு வேண்டி நிற்பவர்களுக்கு நல்ல தொடக்கப் புள்ளி அந்த வாசிப்பு. அதனை வாசித்து விட்டு ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தால் அந்த எழுத்திற்கு பின்னான ஒருமுக நோக்குமயம் எதனை வேண்டி நிற்கிறது என்பதனை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த போராட்டம்/பரப்புவாதம் இன்றைய நேற்றைய விசயமாக படவில்லை.

இஸ்லாத்திற்கு பொது மொழி அரபி, கிருஸ்துவத்திற்கு இன்றைய நாளில் ஆங்கிலம் எனவே மதம் வளர்கிறது என்று நினைத்திருப்பார் போலும். அதனைக் கருத்தில் கொண்டு இந்தியச் சூழலில் நமக்கு இந்த சம்ஸ்கிருத கடவுள் உரையாடல் மொழியை பொது மொழியாக்க முயன்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிந்தனை ஓர் உயர்ந்த நோக்கத்திற்கானது என்றாலும் அதற்கு பின்னான பூர்வீக நிலத்தின் விழுமியங்கள் சிதைவுக்குள்ளாவதை ஏன் அவர் கருத்தில் நிறுத்த வில்லை என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

ஜெயமோகன் கூறிய வழியில் நடந்தால், எப்படி உலமயமாக்களின் பக்க விளைவாக சிறு விவசாயிகளும், லோகல் பண்ட சந்தையைச் சார்ந்த சிறு தொழில்களும், மக்களும் அதற்கே உண்டான மொழியும், சொல்லாடல்களும், கொண்டாட்டமும் இழந்து ம்யூசியத்தில் வைத்து பார்த்து கல்லா கட்டும் நிலையை அடைய வைத்ததோ அதனைப் போன்றே இந்த கடவுள் பொது மொழியும் நிலத்திற்கான அடையாளங்களை சிதைத்து அந்த மண்ணிற்கே உண்டான கலாச்சார விழுமியங்களை சிறுமைப் படுத்தி அழிக்கவே செய்யும்.

பன்முகத் தன்மையில்தான் உலகின் அழகே செழித்து, கொழித்து வாழ்வதில் பொருளுள்ளதாகவும் இந்த ப்ரபஞ்சத்தின் பிரமாண்டம் உணர வைக்கக் கூடியதாகவும் உள்ளது. இதற்கு மேலும் இது போன்ற உலகமயமாக்கம் அது பொருளாதார, மத, கடவுள் சார்ந்து எடுத்து நிறுத்துவது மென்மேலும் அடிப்படை வாதம் பல்கிப் பெருகவே வழி நடத்திச் செல்லும். இருக்கும் பிரச்சினைகள் போதுமே!    





டிஸ்கி: ஜெயமோகனின் கட்டுரையில் மொழியின் வளர்ச்சி, பிற மொழிகளுடன் ஒரு மொழி ஊடாட நேரும் பொழுது எப்படி ஒன்றிற்கு பிரிதொன்று கொடுத்து, வாங்கி அதன் இலக்கண நெகிழ்வினைக் கொண்டு அந்த மொழி தன் காலங்கள்தோறும் நிலை நிறுத்திக் கொள்கிறது என்பது வரைக்கும் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் இயற்கைசார் அறிவியலாளன் என்ற முறையில். அதனைத் தவிர்த்து ஜெமோ நிறுவ வந்த மத அடிப்படையிலான சம்ஸ்கிருத சித்தாந்த முன் நிறுத்தலை மட்டுமே இங்கே பிரித்திருக்கிறேன். 



Friday, November 11, 2011

நிறங்களணிவகுப்பு : Fall Color's Photography

இயற்கைதான் எத்தனை நிறங்களைத் தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் படைத்து, அழித்து செய்து கொண்டே இருக்கிறது. அதன் கற்பனை எப்பொழுதும் வற்றா ஜீவநதி. தொடர்ந்து ஆச்சர்யங்களை உள்ளடக்கி பூமி முழுதுக்குமே பரப்பி வைத்திருக்கிறது. கண்ணுற்று கண்களை அகல விரிப்பத்தற்குத்தான் அதே இயற்கை படைத்த ஜீவராசிகளுக்கு கற்பனை வறட்சி போலும்...

ஒரு மாலை வேளையில் என்னை கிறங்கடித்த ஒளி வெள்ளத்தில் எனைச் சுற்றிலும் மிதந்து கொண்டிருந்த நிறங்களை எனது புகைப்பட லென்ஸின் வழியாக சுருட்டிக் கொள்ள முனைந்ததின் விளைவு நீங்கள் இங்கே கண்ணுருவது.

# 1 - டெலிடப்பீஸ்கள் வாழும் வீட்டைச் சுற்றிலும் - இயற்கையின் அழகு பெரிதா நான் தயாரித்த வீட்டின் நிறத்தின் அழகா...!!



























# 2 - மிக மெதுவாக இரவு பகலென்று மிதமான குளிரும், சரேலென்று ஒரு நாள் காயும் வெயிலும் இலைகளின் நிறங்களை மெருகூட்டிக் கொண்டே வருகிறது...



































# 3 - அவைகளின் அணிவகுப்பு..




























# 4 ... பச்சையத்தை எரித்துக் கொண்டே...



































# 5 - எத்தனைதான் ஜொலிக்கும் சிவப்புக் கம்பளங்களை தரைப்படுகைளாக நாம் விரித்தாலும் இந்த நிறங்களுக்கு இணையாகுமா...




























# 6 ... அணிலொன்று தனது வீட்டை விட்டுவிட்டு தற்காலிக நகர்வு செய்திருப்பதும் ஏதோ நீண்ட நூழிழையில் முடிச்சொன்றை இட்டு சென்றிப்பதாக படுகிறது...




























# 7 - வண்ணங்களை நான் என் தலையில் கொட்டிக் கொள்வதற்கு சற்று முன்பாக :-) ...




# 8 - இன்னும் கீழே இறங்கி ...



கே. ஜே. ஏசுதாசின் இந்த பாடலைக் கேளுங்க... பூமிக்கு எத்தனை நிறமூட்டி பாடி பார்த்திருக்கிறார்னு. அழகான பாடல்...

பூமியென்னும் பெண்ணும்
பொட்டு வைத்துக் கொண்டு
பச்சையாடை கட்டிப்பார்த்தாள்...
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்...

Related Posts with Thumbnails