Tuesday, October 06, 2009

புவனேஸ்வரிகள் பேசாப் (*தேவை*) பொருட்களா?

இனிமே பார்த்தீங்கன்னா, கொஞ்ச நாட்களுக்கு வேறு எங்குமே "அது மாதியான" பத்திரிக்கைகள் அல்லது கதைகள் தேடிப் படிக்க வேண்டாத குறைக்கு எங்கு திரும்பினும் நம்மூரு புவனேஸ்வரியைப் பற்றி, பத்தி பத்தியா விலாவாரியா எல்லா வெகு ஜன பத்திரிக்கைகளும் எழுதி சமூகச் சேவை பண்ணிக் கொண்டு இருப்பதனைப் பார்க்க முடியும்.

இதனை நன்றாக உற்றுப் பார்த்தால் என்னமோ கன்னாபின்னான்னு இடிக்கிற மாதிரி ஒரு பக்கச் சார்பு நிலை கொண்டு நம் சமூகம் புவனேஸ்வரிகளை கையாள்வதாகப் படுகிறது. எழுதுற பத்திரிக்கைகளில் ஒவ்வொரு கட்டுரையும் சுமார் இரண்டு அடிகளுக்கு குறைச்சலில்லாமல் ஓடுகிறது. முழுமையா மூளை வளர்ச்சியுற்ற எவனுக்கும் தெரியும் எது போன்ற "சமூக நிர்பந்தங்கள்" இது போன்ற புவனேஸ்வரிகளை உருவாக்கவும் செய்து, அது போன்ற நிலையிலிருந்து அவர்கள் நழுவி விடாமல் இருக்க இறுக்கியும் கட்டுறச் செய்கிறது என்பதனை.

இந்தப் பின்னணியில் கோவி கண்ணன் எழுதியிருந்த கட்டுரைக்கு வந்த சில பின்னூட்டங்களை படிக்கும் பொழுது, அட எப்படிய்யா நம்ம மக்கள் முழு பூசணிக்காய சோத்துக்குள்ளர வைச்சு மறைக்க வைக்கப் பார்க்கிறாங்கன்னு தோன்றியதின் விளைவா வந்ததுதான் இந்தப் பதிவு.

ஆமா, அது போன்ற பெண்கள் எங்கு வானத்திலிருந்தா குதிக்கிறார்கள்? இல்லை மூளையில் எழுதப்பட்ட ஒரு சமிக்கை வார்த்தையைக் கொண்டு தன் தொழிலை தொடங்குகிறார்களா? பெண் குழந்தைகளையே அதிகமாக பெற்றெடுத்த பெற்றோர்கள் அந்தக் குழந்தைகள் வளரும் காலம் தோறும் அதிகமாக பயந்தே வாழ்வது இந்தச் சமூகம் அந்த அப்பா என்கிற ஒரு 'சூப்பர் மேன்' அருகிலிருந்து பார்க்க முடியாத ஏதோ ஒரு சூழல் அது துர்ச் சம்பவமாக நிகழும் மரணம், அல்லது விபத்தின் மூலமாக இயங்க முடியா ஒரு நிலை, அல்லது திருமணமாகிய ஒரு பெண்ணே அது போன்ற கணவன் அற்ற நிலையில் எப்படியாக இந்தச் சமூகம் அவர்களை மெல்லமே இந்தச் சமூக ஆற்றுக்குள் இழுத்துச் சென்று விடும் என்று அஞ்சியே வாழும் சூழலைத்தானே நம் 'புனித' மஹாத்மாக்களும், கழுதைப் புலிகளும் பக்கம் பக்கமாக வாழும் ஒரு சமூகத்தில் நடைபெறுகிறது என்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.

அது போன்ற சூப்பர் மேன்கள் (தகப்பன்/அண்ணன்/கணவன்) இல்லாத ஒரு வாழ்வுச் சூழ்நிலையில் அங்கே பெண்களும் கொஞ்சம் இளமையாகவோ அல்லது அழகாகவோ இருந்து போனால் அவர்களுக்கு எந்தந்த ரீதியில் எல்லாம் 'அதுவாக'ஆகிப் போக அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கக் கூடும். அப்படியே தாக்குப் பிடித்து நேர் வழியில் அவர்கள் இயங்கிச் சென்றாலும், அக்கம் பக்கம், புனை கதைகளை ஊட்டுவதின் பேரில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, கடைசியில் அங்கே கொண்டு போய் சேர்ப்பதிலும் நம் பங்குதானே முன்னணியில் இருக்கக் காண்கிறோம்.

நாம் பேசிக் கொண்டிருப்பது இரண்டாவது இந்தியாவைப் பற்றியோ? ஏனெனில் முதன்மை இந்தியாவில் இது வேறு ஒரு கோணத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம். இப்பொழுது, நாம் இரண்டாவது இந்தியாவைப் பற்றியே பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஏனெனில் இந்த இந்தியாவில்தான் நிறைய குழப்பங்களும், நடிப்பும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதும் மிஞ்சிக் கிடக்கின்றன. அங்கிருந்துதான் இது போன்ற தீண்டத் தாகாத; அப்போ யார்தான் தீண்டி அவ்ளோ பெரிய தொகை எல்லாம் கொடுக்கிறாங்க? பேசா பொருட்களும்(பெண்) உருவாக்கப் படுகிறார்கள்.

அது போன்ற பேசாப் பொருட்கள் நமக்கு அவசியமாக தேவைப்படும் தேவையற்ற ஓர் ஒளி பொருள். அவ்வாறாக உருவாக்கப் பட்டவர்களுடன் நமது இயக்கம் வெளியில் ஏதோ பல சில உள் காரணங்களால் எப்பொழுதாவது வெளி வர நேர்ந்து போனால், அப்பொழுதும் அங்கு தீண்டப் பட்ட பாத்திரமே குற்றவாளி கூண்டினுள் வைத்து உருட்டப் படுகிறது. அதனை எடுத்து கையாள்பவரோ கூட்டத்தில் ஒருவனாக நின்று தண்டனை வாங்கிக் கொடுக்க குரல் கொடுக்கும் நிலைக்கு நகர்ந்து விடுகிறான். இது எது போன்ற நியாயத்தில் சேர்த்தி?

சரி பிரிதொரு நாளில் அந்தப் பாத்திரம் தான் பிடித்து தள்ளப்பட்ட நிலையை நிலை நிறுத்தி வெளி வந்து, இனிமேல் இது போன்ற ஒரு பிழைப்பு எனக்குத் தேவையில்லை என்று கருதி 'சோ கால்ட்' நேர் வழியில் சென்று வாழலாமென்று சிரத்தையுடன் வாழ எத்தனிக்கும் நாளில் கூட அது போன்ற 'கழுதைப் புலிகளும்' - புனித மஹாத்மாக்களும் சுலபமாக அவர்களை அவ்வாறு நல் வழி சமூக ஆற்றில் கலந்து விட விட்டுவிடுகிறார்களா என்ன? அது, அதுபோன்ற வாழ்ந்து கொண்டிருக்கும் 'பேசா பொருட்களின்' வாழ்வுச் சூழலில் இருந்து பார்த்தால்தான அதற்கான விடை காண முடியும் என்று நினைக்கத் தோன்றவில்லை.

முன்னமேயே அவர்களுடன் தொடர்புடைய "பெரியவர்கள்" துரத்தித் துரத்தி ஏதேதோ காரணங்களுக்காக மேலும் மேலும் பரிவாகப் பேசி, மசியாத பட்சத்தில் மிரட்டி, உருட்டி அது திருமணமே கட்டி நிம்மதியாக வாழலாமென்று புத்துணர்வுடன் வாழ்க்கையை தொடரும் முன்னால் 'பேசாப் பொருளாக' இருந்தாலும் கூட மீண்டும் உள்ளே கொண்டு வந்துவிட மாட்டார்களா என்ன ? இப்படியான ஒரு சமூகச் சூழலை நம்மைச் சுற்றியும் வைத்துக் கொண்டு, வெறுமனே இந்தப் பத்திரிக்கைகளும் ஏதோ அன்றைய வியாபாரத்தை அவசர அவசரமாக கூட்டிக் கொள்ள, அந்தப் பேசாப் பொருட்கள் நிர்பந்திக்கப்படுவதால் செய்வதனையே இவர்களும் எழுத்தின் மூலமாக மேம்போக்காக பேசிக் கொண்டே செல்வதனை எந்த தர்மத்தில் எடுத்துக் கொள்வது அல்லது சேர்ப்பது?

கொஞ்ச காலங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து தமிழகத்தை சார்ந்த இது போன்ற 'பேசாப் பொருட்கள்' பெருமளவில் மீட்டெடுக்கப் பட்டு தமிழகத்தில் வைத்து மறு மலர்ச்சி வாழ்வளிக்கப் போகிறோமென்ற திட்டத்தின் பேரில் கொண்டு வந்தவர்களின் இறுதிக் கதை என்னவாக அமைந்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்களை அவ்வாறு வாழ விட்டு வைத்திருப்பார்களா என்பதில் எனக்கு ஐயமே மிஞ்சுகிறது. அவர்களுக்கு நேர்ந்த கதையை தெரிந்தவர்கள் யாராவது இங்கு வந்து பகிர்ந்து கொண்டால்தான் உண்டு.

சரி, இந்தத் தொழிலில் இறங்குவதற்கு முன்னால் அது போன்ற பெண்களில் எத்தனை சதவீதம் பேர் எனக்குப் பிடித்தே இந்தத் தொழிலில் இறங்கினேன் என்ற வாய்ப்பை பெற்றவர்களாக இருக்கக் கூடும்? அப்படியே பிடித்தே இறங்கினேன் என்று சொல்லும் பட்சத்தில் இதனை ஏன் மற்ற நாட்டு அரசாங்கங்கள் போல அவர்களின் தொழிலின் இன்றியமையாமைக் கருதி அங்கீகரிக்கக் கூடாது? அப்படியாக ஆகும் பட்சத்தில் அதனையொட்டிய குற்றங்கள் குறைவதற்கான ஒரு வடிகாலாக அமைய முடியுமல்லவா?

சங்க காலத்திலிருந்து, சிலப்பதிகாரம் தொட்டு நேற்றைய தமிழ்ச் சினிமா வரைக்கும், வெறும் இயக்கப்படுபவர்களை மட்டுமே விமர்சித்து விமர்சனங்கள் வருகிறதே ஒழிய, இயங்குபவர்களை ஒன்றுமே தெரியாதவர்கள் போலவும், சுய சிந்தனையே மழுங்கடிக்கும் அளவிற்கு வசியம் செய்து அவர்களின் வீட்டு வாசலை அடைய வைத்ததாகவே பேசி வருகிறது. அப்படியெனில் 'நாடுபவர்கள்' அனைவரும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களா? புரியாமல் தான் கேட்கிறேன்.

சரி நம் வீட்டிலும் சரிசமமாக பெண் பிள்ளைகளுடன் (பல தளங்களில் - அம்மா/அக்கா/தங்கை/மனைவி/மகள் என்று) புழங்கிக் கொண்டு எப்படி ஊர் விவகாரம் என்றால் மிக எளிதாக இப்படி உண்மைகளை மறைத்து உதாசீனப் படுத்தி பேசி விட முடிகிறது? அதனைப் பற்றி பேச வருபவர்களையும் ஒரு தீண்டத் தாகாத ஆளாகக் கருதி மனதிற்குள் குறு குறுப்பை வைத்துக் கொண்டு நடித்தே வாழ்ந்து விட முடிகிறது?

என்னமோ போங்க, எத்தனை காலங்கள் வந்தாலும் சில விசயங்களில் தெரிந்தே செய்யும் அநீதிகளுக்கு எந்த விதமான மாற்று நீதிகளும் கிடைத்து விடுவதாக தெரியவில்லை. அது, அந்த நிலையில் பிறந்த அல்லது நிர்பந்திக்கப் பட்டவர்களின் போதாத காலம் என்ற அனேகத்தன்மையில் உஷ்ஷ்ஷ் யப்பாடா அது எனக்கு நடந்து விடவில்லை என்று மூச்சை பிடித்துக் கொண்டு ஓட்டிக் கழித்து விட வேண்டியதுதான் போல.


Wednesday, September 30, 2009

தீவிரவாதத்திற்கு பொறுப்பாளிகள் யார்?

*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாகப் படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு முன்னமே வாசிக்க கிடைக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...

செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை இங்கு வைத்திருக்கிறார்... அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.

நாயகி,

...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடத்தியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது.

எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருணங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருணங்கள் அல்லவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜென்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்க்கையை ஒரு பொருளற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அலைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.

அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதத்திற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து- இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!


பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

Thursday, September 24, 2009

எண்ண சூல்..




வார்த்தை வனங்களில்
மூழ்கி முத்தெடுக்க
முங்கிய பொழுதொன்றில்
தொண்டையில் சிக்கிய
முற்களாக
எழுதாக் கரு!

Wednesday, September 16, 2009

எபோலா வைரஸ்: Ebola Virus(RNA)

காலையில ஒரு நண்பர் கூட பேசிட்டு இருக்கும் போது சொன்னாரு HIV வைரஸையே குழந்தையாக்கும் இன்னொரு புதுவிதமான வைரஸ் மனித சந்தைக்கு வந்திருப்பது தெரியுமான்னு. அது என்ன வைரஸ்ய்யா அப்படின்னு சுதாகரிச்சிக்கிட்டு கேட்டேன் அப்போ அவரு எபோலா வைரஸ் அப்படின்னார். குறைந்தது ஒரு நாளாஞ்சு முறை திரும்பத் திரும்ப சரியாத்தான் பேரை சொல்லுறாரா இல்ல எகோலை (Ecoli)யைத்தான் அப்படி மாத்திச் சொல்லுறாரான்னு உறுதிச் செஞ்சிட்டு, அவரு சொன்ன நோயின் அறிகுறிகளை கேக்க கேக்க ரொம்ப அதிர்ச்சியா வந்துச்சு.

சரின்னு கொஞ்சம் அந்த நோயைப் பத்தி தெரிஞ்சுக்குவோமேன்னு படிக்க உட்கார்ந்தப்போ அடே சாமீன்னு ஆயிப் போச்சு. அதனோட நோயின் தீவிரத்தை அறிந்து கொண்டே வரும் பொழுது, அவ்வளவு சீக்கிரமா மனிதனை சுருட்டிருதுங்க அந்த எபோலா வியாதி.

அந்த நோய் இப்போதைக்கு ஆஃப்ரிகா கண்டத்தில மட்டும் அதுவும் காங்கோ, கேபோன், சுடான், ஐவோரி கோஸ்ட் மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் மனிதர்களிடையே இருக்கும் நிலையில் அறியப்பட்டுள்ளது. எங்கிருந்து குறிப்பாக இந்த நோய் பரவியது என்று தெரியவில்லையாம், இருப்பினும் காங்கோ - குரங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதாம்.

இதன் பரவும் தன்மை மனிதர்களிடையே நேரடித் தொடர்புனாலேயோ அல்லது உடல் சுரப்புகளின் நேரடித் தொடர்பால் பரவுகிறது.

நான்கு வகையான எபோலா வைரஸ் இனங்கள் இருப்பதாகவும் அவற்றில் ஒன்று மட்டும் மனிதனுக்கு பரவும் வகை இல்லையெனவும் தெரிகிறது.

இதன் பரவும் தன்மை ஹெச் ஐ வி யைவிட பல மடங்கு எகிறுவதாக உள்ளது. இந்த நோய் ஒருவரை தொற்றியவுடனேயே உடலுக்குள் பல்கிப் பெருக ஆரம்பிக்கிறது. நான்கிலிருந்து ஆறு நாட்களுக்குள் இந்த நோயின் அறிகுறிகள் தட்டுப்பட ஆரம்பிக்கிறது. நோய் தொற்றிய நாளிலிருந்து அறிகுறி தெரிய வரும் இடைப்பட்ட நாட்களை அடைகாக்கும் பருவம் என்று கூறுகிறார்கள். அந்த அடைக்காக்கும் பருவம் இரண்டு நாட்களிலிருந்து 21 நாட்கள் வரை கூட நடைபெறலாமாம்.

எபோலாவின் அறிகுறிகளாக அறியப்படுவது சுரம், தொண்டைவலி, சக்தியற்ற நிலை, கடும் தலைவலி, தசை மற்றும் எலும்பு இணைப்புகளில் வலி, பேதி, வாந்தி, வறட்டு இருமல் மற்றும் வயிற்று வலி என பட்டியல் நீளுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ரொம்பவே அச்ச மூட்டியது நோய் அறிகுறி தட்டுப்பட ஆரம்பித்த இரண்டாவது வாரத்திற்குள்ளாகவே நாம் மண்டையை போடும் அளவிற்கு செல்லுவதுதான். முத்தாய்ப்பாக அந்த நிலையில் உள்ளும், புறமுமாக இரத்தம் வடிந்து இறக்க நேரிடுகிறதாம். எனவே, பெருமளவில் இரத்தம் இழப்பாலேயே இறுதியாக மரணிக்க நேர்வதாகப் படுகிறது.

இந்த எபோலா பத்தி இப்படியும் சொல்லிக்கிறாங்க, செப்டம்பர் 2001க்கு பிறகு பேரழிவைத் தரும் உயிரின ஆயுதமாக மனிதனால் பின் வரும் காலங்களில் இந்த வைரஸ் உருவாக்கப்படலாமென்று.

ஆத்தாடி என்னங்கடா நடக்குது, இந்த பூமியில, எய்ட்ஸ், எபோலா இப்போ பன்றிக் காய்ச்சல் - இப்படி போயிட்டே இருக்கே பட்டியல், ஜனத்தொகைய கண்ண மூடிக்கிட்டு பெருக்கிப்புட்டமோ, இயற்கையே கட்டுப்படுத்த ஆரம்பிச்சிருச்சா இல்ல மனுசப்பய ஆய்வுக் கூடங்கள்ளே ஏதாவது ஏடா கூடமா தயாரிச்சு வெளிய விட்றாய்ங்களா... ஒண்ணுமே புரியலப்பூ.



Source: Ebola hemorrhagic fever (also known as Ebola) is a contagious illness caused by an infection with the Ebola virus. It is often fatal in humans, monkeys, gorillas, and chimpanzees. The virus was first recognized in the Democratic Republic of the Congo (formerly Zaire) in 1976. No case of this illness in humans has ever been reported in the United States. There is no cure; treatment usually consists of providing supportive care while the body fights the infection.

Thursday, September 10, 2009

உண்மையின் விலை - கமல்ஹாசன்?

என்னய அடிக்கடி கோதாவில இறக்கிவிடுகிற ஆட்களில் ப்ரகாஷ்ராஜ்-க்கும், கமலுக்கும் முக்கிய பங்கு உண்டுன்னு நினைக்கிறேன். நம்ம மக்கள் ஒவ்வொரு முறையும் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் வாழ்வுச் சூழலில் எடுத்த முடிவுகளைக் கொண்டு ஏதாவது சொல்ல நேர்ந்தால் உடனே வாரி தூற்றுவதும், தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இது அச்சு அசலாக செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் முன்னெடுத்து நடந்து செல்லும் ஒரு ஆட்டின் கையில் தன் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு பின்னாலேயே நடந்து செல்லும் கூட்டத்தினை ஒத்ததாகப் படுகிறது.

வலியச் சென்று ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி கேட்டறிய ஆர்வப் படுகிறோம், அவரும் குடைச்சல் தாங்காமல் அவருடைய அறிதலின் பொருட்டு எப்படியாக ஒரு விசயத்தைப் பார்க்கிறார் என்று முன் வைக்கிறார். அதனை கேட்டுவிட்டு அரைகுறையாக புரிந்து கொண்டு 'குய்யோ, முறையோ' என்று வானத்திற்கும், பூமிக்கும் எகிருவதால் என்ன லாபமாக பெறுகிறோம்? செம்மறி ஆடுகளின் கூட்டத்தில் தானும் ஒரு பங்காளன் என்பதனைக் காட்டிக் கொள்வதனைத் தவிர, அதிலிருந்து தனிப்பட்ட முறையில் சிந்திப்பதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ஒன்றுமே கிடைப்பதாக இல்லை.

அது போன்ற குழுமத்திலிருந்து ஒருவரை தனிமைப் படுத்தி, அந்த அனுபவத்தைப் பெற்ற மனிதனின் ஒத்த சூழலை வழங்கி நீ எப்படியாக 'எதிர்வினை' செய்திருப்பாய் என்று கேட்கும் நிலையில் கண்டிப்பாக சிறிதே யோசிக்கும் நிலையில் பதில் வேறாகத்தான் இருக்க முடியும். இதுவே ஒரு குழுச் சிந்தனைக்கும் தனிமனித சிந்தனைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்.

தனிமனித சிந்தனையின் பொருட்டு எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் தீர்க்கமானவை. ஏனெனில் அத் தீர்வுகள் ஒரு குறிப்பிட்ட கால ஓட்டத்தின் வாயிலாக மிகத் தெளிவாக தனக்கு உகந்ததென எடுக்கப்பட்டது . சமூக கட்டமையுடன் நிர்பந்தங்களை மட்டுமே அதன் நீட்சியாக இயங்கி வரும் ஒரு சமூகத்தில், தன்னுடைய சுய சிந்தனையின் பொருட்டு தன் சூழலுக்கேற்ப தீர்வையும் எடுத்து, தைரியமாக முகம் கொடுத்து வாழ்ந்து காட்ட வேண்டுமெனில் அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். செம்மறிக் குழுவில் ஒரு ஆடாக இருப்பதனில் அவ்வளவு பெரிய அளவில் எந்த ஒரு தனித் திறமையும் தேவைப்படுவதில்லை. அதே நேரத்தில் எதனையும் பெரிதாக தனிப்பட்ட முறையில் விட்டுச் செல்வதும் அங்கே நடைபெறுவதில்லை.

தன்னிலை அற்ற நிலையிலேயே அங்கே ஒருவரின் வாழ்வு நகர்ந்து முடிந்திருக்கும். அந்த நகர்வு மிக்க துன்பங்களுக்கிடையேயாகவோ, மன வெறுமைகளுக்கிடையேயாகவோ கூட இருந்திருக்கலாம், அல்லது குழு நிர்பந்தத்தின் பேரில் யாருக்காகவோ வாழ்ந்து முடிந்திருக்கலாம். இவைகளுக்கான தற்காலிக தப்பித்தலாக இடம் பெயர்வு பொருளாதாரத் தேவை, வேலை வாய்ப்பு என்று அமைத்துக் கொள்வதும் இங்குதானே அதிகமாக நடந்தேறுகிறது. அங்கே இழப்பு நேர்ந்தது என்னவோ அந்த தனிப்பட்ட நபருக்குத் தானே ஒழிய குழுவிற்கல்ல. ஆனால், அந்த நிர்பந்தத்தின் பொருட்டு வாழ்ந்து முடித்து விட்டு, ஏதோ அதனை ஒரு சாதனையாக பறைசாற்றி கொள்வதனை எந்த கணக்கில் சேர்ப்பது.

சரி, விசயத்தின் ஆழத்திற்கு செல்வோம். வளர்ந்தே முடித்து விட்டோமென்று கூறிக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவில்தான் எத்தனை எத்தனை கலாச்சார காவலர்கள். தங்கும் விடுதிகளில், கடற்கரை ஓரங்களில், கங்கை நதியோரத்திலென எங்கு திரும்பினும் கலாச்சாரம் காவல் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் இந்த நிலைமை? காற்று நிரம்பிய ஒரு ரப்பர் பந்தை எவ்வளவு ஆழத்திற்கும் எடுத்துச் சென்று அதனை அமிழ்த்தி வைத்தாலும் அது விடுவிக்கப் படும் பொழுது அதே வேகத்தில் முட்டி வெடித்து வெளிக் கிளம்புகிறது, அது போலவும்தானே இந்த ஆசைகளும். விரும்பியவர்கள் தன் தேடலாக சென்று கண்டறிய வேண்டிய விசயங்களை எது போன்ற குமிழ்களைக் கொண்டு மூடி வைத்தால் வெடித்துக் கிளம்பாமல் இருக்க வைக்க முடியும்? அது போன்ற சமூக மூடிகள்தான், இது போன்ற வணங்கும் திருத்தளங்களாகட்டும், பயணிக்கும் பேருந்துகளிலிருந்து புகைவண்டிப் பயணங்களிலெல்லாம் பீரிட்டு வெளிக் கிளம்ப வைக்கும் ஒரு மூலமாக அமைகிறதா?

திருமணம் என்ற "இணைப்பு" எதன் பொருட்டாக அமைகிறது? இரு ஒருமித்த எண்ண, கருத்துக்களை கொண்ட இரு வேறு தனி நபர்கள் ஒன்றாக இணைந்து நல்ல நண்பர்களாக பரஸ்பரமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக மகிழ்ந்து/துன்பப்பட்டு வாழ்க்கையை பட்டுணர்ந்து செல்வதற்கென அமைத்துக் கொடுக்கும் ஒரு சமூக அமைப்பு தானே,அது? அதுவே அடிப்படையாக இருக்கும் பொழுது எப்படி அந்த இருவரில் ஒருவர் மட்டும் சுத்தமாக மன ரீதியாக மரணித்து வாழ்வதில் யாருக்கு லாபம்? லாபமடைவதனைப் போல வாழ்ந்து கொண்டிருப்பவரே கூட இறுதியில் தான் ஏமாந்தே வாழ்வதாக உணரும் காலமும் வருகிறது.

எப்படியெனில், அந்த நபரின் சுயநலத்திற்கென தன்னை தொலைத்து விட்டு அரை மனதாக வாழ்ந்திருக்கும் இவரும் முழுமையாக வாழ்ந்திருக்கவில்லை, அதே நேரத்தில் அந்த பலன்களைப் பெற்ற சுயநலமி தன்னுடன் மிகவும் இணக்கமாகவும், முழுமையான புரிதலுடனும் வாழ்ந்திருக்க வேண்டிய நண்பர்/நண்பியை இப்படி அடாவடியாக இரும்புக் கரத்தின் கீழ் அடக்கி ஆண்டிருக்கிறோமே என்று நினைத்து வெட்கி ஒரு நாள் அவரும் மரணிக்கக் கூடும்; தன்னால் ஒரு நபரைக் கூட உண்மையாக நேசிக்க வைக்க முடியவில்லையே என்று.

இந்த நிலையில் அன்பு எனற பரஸ்பர புரிதலின் பொருட்டு கூடும் இருவர் எந்த நிர்பந்தமும் தன்னை கட்டாயப்படுத்தி வைக்காத நிலையில் தொடர்ந்தும் விரும்பியே கூடவே இருப்பதே உண்மையான காதலாகவும், அன்பாகவும், புரிதலாகவும், தெளிதலாகவும் இருக்கக் கூடும். இது இறக்கைகள் சிதைக்கப்பட்டு கூண்டுக்குள் வைத்து அழகினை ரசித்து வரும் ஒரு கிளி மனப்பான்மைக்கும், அதே கிளியை இறக்கைகளுடனும் பறந்து திரிவதற்கான எல்லா உரிமைகளையும் கொடுத்து மீண்டும், மீண்டும் விரும்பியே வளர்ப்பவரிடத்தே வருவதற்கும் ஒத்த வித்தியாசங்களைக் கொண்டது. இதில் எந்த நிலையில் கட்டற்ற அன்பு வெளிப்படுத்தப் படுகிறது? எதனில் நிறைவு கிட்டிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாக அறிந்து கொள்கிறோம்.

இதனில் யாராவது ஒருவருக்கு அப்படி இணைந்து வாழ்வதில் விருப்பமில்லையெனில் மாட்டுத் தரியில் கட்டி வைத்து, சாப்பாடு போட்டு வளர்க்கும் பசுவிற்கு/காளைக்கு இணையாக வாழ்ந்து முடிப்பதில் யாருக்கு என்ன சுகம் கிட்டியிருக்க முடியும்? அதனின்றி, அதன் போக்கில் விட்டு அதன் தேடலை அறியத் தருவது, தனி மனித நிலையில் நாகரீகமற்ற செயலா? இதனில் எங்கிருந்து வருகிறோம், மூன்றாவது நபரும், சமூகமும்? அதுவும் சமபந்தப் பட்ட இருவருமே சூழ்நிலையின் கணத்தை அறிந்து பக்குவமாக விலகிச் சென்றிருக்கும் பட்சத்தில் இது என்ன மற்ற செம்மறிகள் குழுவிலிருந்து "ப்பா, ப்பா" என்று கதறுவது - எப்படி உனக்கு மட்டும் இது போன்ற தனிச் சிந்தனையின் பொருட்டு வாழ்க்கையை எடுத்துச் செல்லும் துணிவை யார் கொடுத்தது என்ற கழிவிரக்கத்தின் பால் வரும் கதறலாகப் படுகிறது எனக்கு. சாவு என்ற நிகழ்வு ஒரு முறைதான் நிகழ வேண்டும், தினமும் செத்து வாழ்வதனை எதனில் சேர்ப்பது?

கமல் சொன்ன ...“ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவதில் சங்கடங்கள் ஏற்பட்டன. ‘இந்தக் குழந்தைகளின் தாயார் இவர்’ என்று சொன்னால் அதுமட்டும் போதாது. எனது மனைவி யார்? என்றும் கேட்டனர். எனவேதான் சரிகாவை துணைவியாக ஆக்கிக் கொண்டேன்... இந்தக் கூற்று மிகவும் தவறாக அப்படியே ரா' வாக பார்க்கப் படுகிறது, எனக்கு அதனில் நமது சமூகத்தின் பொருட்டு அவருக்கு இருக்கும் மன வருத்தம் தெரித்துக் கிடப்பதனைத்தான் காட்டுகிறது. நமது சமூகம் திருமணங்களை இப்படி மலிவு படுத்தி 'விடுதி'களில் அறை எடுப்பதற்கு என்ற நிலைக்கு அவ்வளவு பெரிய இணைப்பை தரம் தாழ்த்தி பார்க்கக் கூடிய ஒரு மன நிலைக்கு வர வைத்திருக்கிறதே என்ற அங்கலாய்ப்பு அதனில் பொதிந்து கிடக்கிறது. அங்கே புற அடையாளமே முன் நிறுத்தப் படுகிறது. இருவர் மனமொத்து வாழ்ந்து குழந்தைகளையும் பெற்று வாழும் மனப் பொருத்தத்தை விட இந்த வெளிப்புற சம்பிரதாய "கால் கட்டா" இருவரை ஒட்டி வைத்திருக்கிறது என்ற "சமூக மலிவு எண்ணத்தை" ஒரு அடையாளமாக அவர் வைத்துக் கூறியிருக்கக் கூடும்.

கடைசியாக ஒரு கேள்வி "கற்பு" என்பது யாது, அது எங்கே இருக்கிறது? பிறர்மனை நோக்காமலும், மனதிலும் இச்சை கொண்டு எதிர் பாலினத்தவரை பார்க்காமல் இருப்பதுவுமே நடுநிலை மாறா கற்பு எனில் நாம் பலமுறை அதிலிருந்து நழுவியவர்களாக உணர நேரிடும். இந் நிலையில், நம்மைப் போன்ற சமூகத்தில் பிறர்மனை நோக்கல் என்பது அத்தோடு நின்றுவிடுவதுமில்லை. லைசென்ஸ்டு திருமணமானவர் ஆனால் வெளியில் இலைமறை காயாக "வைத்துக் கொள்ளும்" நிலையும் பார்க்கிறோம். எனவே, நமது சமூகத்திற்கு இது போன்ற களவாணித் தனங்களை ஊக்குவிப்பதிலேயே அதிக அக்கறை இருப்பதாகப் படுகிறது. இந்த நிலையில் உண்மையாக, தைரியத்துடன் உள்ளதை உள்ளதாக எதிர் கொண்டு வாழும் மனிதர்கள் "சமூகத்தில் வெறுக்கத்" தக்கவர்களாக ஆகிப் போகி விடுகிறார்கள்? என்ன கொடுமையிது சரவணா!

Wednesday, September 09, 2009

மெளனாசை




சப்தமொடுங்கிய இரவுகளில்
நிசப்தங்களாக கசிந்தொழிகியபடி
மன ஆர்ப்பரிப்பு!
சுவர்க்கோழிகளை விடவும்
ரீங்காரித்தவாறே
அங்குமிங்குமாக விடாது
ஊறிக்கிடக்கிறது...
விடிந்தவேளையில் சூல்கொண்ட
எண்ணங்களில்
வெளிச்சம்பார்த்து கதறி
மறைந்தன சில...
அக்கோழிகள்
போலவே சிறு அசைவு கண்டு
உறைந்து
இரவு நேர ஃபாண்டசி எண்ண
மனிதர்களைக் கண்டு
மனது மன
இருட்டறைகளில் நாளைய
இரவை எதிர்ப்பார்த்து
தஞ்சம் கொள்ளும்.

Monday, August 31, 2009

கனவு...




இன்றைய நாளைகள்
வெண்பஞ்சு முகில்களினூடாக
இறுக்கிக் கட்டிய நிலையில்
நாளைய இன்றைகளில்
தூக்கம் தொலைத்தபடி
முடிவற்ற
மண்முகடுகளுக்கிடையே
வாழ்வுப்பயணம்!

Related Posts with Thumbnails