Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

Sunday, April 23, 2023

நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5

இன்று உலக புத்தக தினம். 

முகநூலில் இதுவரை எழுதிவந்த #சேப்பியன்ஸ் தொடரைப் பற்றிய பதிவுகளை இங்கு அறிமுகம் செய்கிறேன்.

நிறைய வாசிப்போம்..நாம் கடந்து வந்த பாதையை புரிந்து உலகை நேசிப்போம்.

சேப்பியன்ஸ் - 1

https://m.facebook.com/story.php?story_fbid=10216266244002319&id=1639793180

சேப்பியன்ஸ் - 2

https://m.facebook.com/story.php?story_fbid=10216165801571321&id=1639793180

சேப்பியன்ஸ் - 3

https://m.facebook.com/story.php?story_fbid=10216225088013445&id=1639793180

சேப்பியன்ஸ் - 4

https://m.facebook.com/story.php?story_fbid=10216240898848706&id=1639793180


நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5


ஹோமோ சேப்பியன்ஸ் நூல் எனக்கு என்னவோ மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டு பள்ளி மேற்படிப்பு படித்த அனைவரும் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாகப்படுகிறது.

இப்பொழுது நான் அந்த புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாகரீகங்களுக்குள்ளும் எப்படி சமூக அடுக்கதிகார முறை கட்டமைக்கப்படுகிறது, அது எதன் பொருட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது, அதன் பயன்பாடு என்ன என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

அந்த பக்கங்கங்களை வாசிக்கும் பொழுது எதற்காக இந்த சமூகம் இப்படி ஏற்றத் தாழ்வுகளுடன் இயங்குகிறது என்ற எளிய கேள்விக்கு பதிலுரைக்கிறது. முதல் கட்ட அறிதலின் பொருட்டு வாசிப்பை நாடுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அத்தியாயம். 

வரலாறு தோறும் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஓரளவிற்கேனும் சமப்படுத்த பல அவதார புருஷர்கள் வர வேண்டியத் தேவைதான் என்ன, எதன் பொருட்டு அவர்கள் தொடர்ந்து பேசி, சண்டை செய்ய வேண்டியுள்ளது என்பது அனைத்தும் நமக்கு  விளங்கிவிடும் இந்தப் பக்கங்களை நாம் கடந்துவிடுவதற்குள்.

சமூக அடுக்கு "ஆண்டான் அடிமை" என்ற எளிய கட்டமைப்பில் அதற்குள் பல அடுக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பயன் உயர் அடுக்கில் இருப்பவர்கள் கீழ் அடுக்கில் உள்ளவர்களை சுரண்டி கொழுத்து வாழ்வதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை நிறுவி அதன் பயன்பாட்டினை அறுவடை செய்ய பல கட்டுக்கதைகள் தேவைப்படுகிறது. அதனயொட்டிய புனைக் கதைகள் மனிதர்களின் ஆழ் மனதில் நம்பிக்கை நச்சுக்களாக விதைக்கப்பட்டோ (வர்ணாஷ்ரம), சட்டங்களாக இயற்றியோ (வெள்ளையர்களும், கருப்பினத்தவர்களும் சமமல்ல, ஏழை, பணக்காரர்களின் வாழ்வமைவு ஆசீர்வதிக்கப்பட்டது) காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.


இந்த கட்டமைப்பை விளக்க முற்படும் போது இந்த நூல் மிக தாராளமாக இந்து மதத்தின் பால் பிறந்த சாதிய சமூக அடுக்கு யாரால், எதற்கு உருவாக்கிக் கொள்ளப்பட்டது, அது எவருக்கு பயனளிக்கும் விதத்தில் இன்றும் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சமகால இந்திய அரசியலமைப்பைக் கொண்டு மிகத் தெளிவாக விளக்க எடுத்து கையாண்டுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.

இந்த புத்தகம் உலகம் முழுதிலும் மில்லியன் கணக்கில் விற்பனையாகி இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் சமூக அடுக்கு உருவாக்கத்திற்கு பின்னான அயோக்கியத்தனங்களை, சூழ்ச்சிகளை அப்பட்டமாக அடிக்கோடிட்டு இந்த உலகத்திற்கே புரிய வைக்க இந்துக்களின் சாதியக் கட்டமைப்பை பயன் படுத்திக் கொண்டுள்ளார். 

தீட்டு, தீண்டாமை, தூய்மை, மோலோன், கீழோன் அனைத்தும் ஒருவனை தரம் பிரித்து எவனை எந்தளவிற்கு வளர்ந்து வர இடம் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்கும், ஒவ்வொரு முறையும் பின்புலத்தை தோண்டித் துருவி அறிந்து கொள்வதற்கு பதிலாக கூட்டு அடுக்களைக் கொண்டு பிரித்து வைத்து விட்டால் பொதுப் புத்தியில் அதற்குண்டான புத்திகளை இவன் உள்ளடக்கியவன் என்ற கற்பிதங்களையும் நம்ப வைத்து அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயங்க வைக்க முடியும் என்பதே இதன் ஏற்பாடு.

இப்பொழுது உதாரணமாக ஒன்று பார்ப்போம். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான். நல்ல திறமையானவன் ஏதோ ஒன்று அவனுடைய இரத்தத்திலோ அல்லது மரபணுவிலோ இருக்கிறது அதனால் தான் கருப்பர்களை விட அதி புத்திசாலிகளாக, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறியும் அறிஞர்களாக இருக்கிறார்கள் என்ற வாதம்.

இரண்டு, நம்ம ஊரில் ஒரு குறிப்பிட்ட சாதி இனங்களில் பிறந்த குழந்தைகள் இசையிலும், நாட்டியத்திலும் மிக்க திறமை உள்ளவர்களாக இருக்கக் காரணம் இறைவனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அந்த குலத்தில் பிறப்பதால் தான் என்றொரு வாதம்.

ஆனால், இந்த இரண்டு கதைகளுக்குப் பின்னாலும் மாபெரும் உழைப்புச் சுரண்டலும், சூழ்ச்சியும் புதைந்து கிடக்கிறது என்கிறார் இந்த நூலாசிரியர். பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் மெருகேற்ற மெருகேற்ற அவைகளை நம்மால் வார்த்தெடுத்துக் கொள்ளும் திறமைகளை உள்ளடக்கியே பிறக்கிறது, ஆனால் அதற்குரிய வசதி, வாய்ப்பு அதற்குண்டான நேரத்தை எப்படி வழங்குவது?

இங்குதான் அந்த சமூக அடுக்கமைவு ஒரு சாரருக்கு எளிய வழியையும், அங்கீகரிப்பையும் கொடுத்து மெருகேற்றிக் கொள்ள, மேல் நிலைக்கு செல்லும் படியாக கட்டமைக்கப்பட்டு பயனளிக்கிறது. பயனளிக்காமல் போகக் கூடிய அந்த போர்வை சாதி'யம் கொண்டு மற்றவர்களிடத்தே கண்டறியப் படுகிறது.

இந்த சாதிய கட்டமைப்பு உடையாமல் கட்டிக் காக்கப்படுவதின் சூட்சுமம் இதுதான். இப்போ சாதி மறுப்பு மணங்கள் பெருகும் போது இந்த அடித்தளம் சுக்கு நூறாக தகர்ந்து விடுமல்லவா? தகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் தான் ஏனைய சமூக அநீதிகள் அடங்கி இருக்கிறது.

இப்போ புரிகிறதா இந்த நவீன தீண்டாமை உலகில் நீட், கேட் என்ற வடிகட்டல்கள் எதற்கு என்று? அவதாரப் புருஷர்கள் இத்தனை வரலாற்று ரீதியாக சக்தி படைத்த ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தை வெற்றியடைய வேண்டுமாயின் எத்தனை பெரிய பரந்து பட்ட பொது நோக்கும், கட்டற்ற பரிவும், விசாலமான பார்வையும் கொண்டிருக்க வேண்டும். 

நமக்கு அந்த முழுப் பயன்பாடும் வந்து கிட்டுவதற்கு முன்னதாகவே பல கட்டுக்கதைகளின் மூலமாக அவர்களுடைய பங்களிப்பு முடக்கப்படுகிறது. அந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது போராட்டம் மீண்டும் ஒன்றாவது படிக்கி சறுக்கி வந்து நின்றிருக்கும்.

வரலாற்று புத்தகங்களை எந்த

கரையிலிருந்து நின்று கொண்டு மீள் வாசிப்பு செய்கிறோமென்பதும், இது போன்ற மானுடவியல் சார்ந்த புத்தகங்களை வயதோடு வாசித்து அவரவர்கள் நிலையில் தெளிவடைதும் முக்கியமாகிறது.

ஏனெனில் வரலாற்றில் எப்படி விளையாண்டோம் என்பது ஒரு பொருட்டே அல்ல! பிழைத்து அடுத்த கட்டத்திற்கு நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்வுச் சூழலைக் கொடுத்துச் செல்கிறோமா என்பதே படிமலர்ச்சியில் நம்மை படியெடுக்க இந்த இயற்கை வைத்திருக்கும் ஒரே ரூல்ஸ்!


#சாப்பியன்ஸ் - 5

#Homosapiens book

Thursday, December 31, 2020

எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் by கண்ணதாசன்

 கண்ணதாசன் இந்தப் புத்தகத்தில் முழுக்க முழுக்க சினிமா சார்ந்த எம் ஜி ஆரின் பல்டிகளைப் பற்றி மட்டுமே பேசி இருக்கிறார். அரசியல் சார்ந்து தொடவே இல்லை. சினிமாத்துறையில் எவ்வளவு சில்லரைத் தனமாக இருந்திருக்கிறார் என்பதைப் பற்றியே நேரடியாக விமர்சித்திருக்கிறார்.

MGR அந்தப் போலிப் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தப் புத்தகத்தைக் கூட உளவுத்துறை, காவல்துறையைக் கொண்டு சந்தையில் இருந்து துடைத்தொழித்ததோடு, எழுதிய கண்ணதாசனையே அரசவைக் கவியாக பேரம் பேசி இருக்கிறார்.
இப்போ அப்படியே கண்ணாடிய கலைஞர் பக்கம் திருப்பினா, வனவாசம் வனவாசம்னு நேரடியாக கண்ணதாசன், கலைஞரின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லாததையெல்லாம் பொழிப்புரையாக எடுத்துக்கட்டி அவரின் மீது பழிக்க அந்த நூலை நடுநிலை கொமார்கள் பயன்படுத்தி வந்தன. அந்தப் புத்தகமும் இன்னும் அச்சில் தான் உள்ளது. மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயமிருக்கும் என்பதற்கிணங்க கலைஞர், காலத்தின் கைகளில் அதனை ஒப்படைத்து விட்டார்.
இதுவே ஒரு பெரிய மனுசனுக்கும், அல்பைகளுக்கும் உள்ள வித்தியாசம். இப்போ இந்தப் புத்தகத்தைக் கூட கலைஞர் நினைச்சிருந்தா பெரிய அளவில் மக்களிடத்தே கொண்டு போய் சேர்த்திருக்க முடியும் தானே? ஏன் அப்படி அவர் செய்யல அதான் கலைஞர். அவர் எல்லோருக்கும் பெய்யும் மழையாக இருந்திருக்கார்! நம்மை கண் திறந்து பார்க்க, பேசப்படாத பல பக்கங்களை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.
இப்போ ஏன் உள்ளும் புறமும் புத்தகம் பரபரப்பா பேசப்படுது? ஏன்னா, எல்லாரும் கலைஞர் மாதிரி இருந்திட முடியாது. சினிமாக்காரய்ங்க வேற அதே ஒப்பனையோட மடியில படுத்தேன், தோள்ல தூங்கினேன்னு படுவர் அடிச்சிக்கிட்டு கிளம்ப்பிட்டாய்ங்க!
சரி, எம் ஜி ஆர் பொருட்டு கண்ணதாசன் இதில் சினிமாத் துறையின் ஒரு பகுதியை மட்டுமே பேசி இருக்கார். எம் ஜி ஆரின் முழுப் கோணல் பகுதியும் கீழே உள்ள கட்டுரையில் மிக அழகாக தொகுத்திருக்காங்க... சுமதி விஜயகுமார்! அவசியம் படிங்க.
🔹️🔹️🔹️🔹️🔹️🔹️
பொதுவாகவே தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை எதிர்ப்பவர்கள், நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் முன்னிறுத்துவது காமராஜரை தான். அவருக்கு முன்போ பின்போ நல்லாட்சி செய்த தலைவர்கள் யாருமே இல்லையா என்ற கேள்வியை புறந்தள்ளிவிட்டு பார்த்தால், காமராஜரின் ஆட்சி ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இப்போது புதிதாக, திரைத்துறையில் வாய்ப்பிழந்த நடிகைகள் தொலைக்காட்சிக்கு போவது போல் நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமாக கமல் மற்றும் ரஜினி இருவரும் முன்னிறுத்தும் தலைவர் எம்ஜிஆர். உண்மையில் கமல் ரஜினியின் நோக்கம் என்ன , உண்மையான மக்கள் தொண்டிற்காகத்தானா , அப்படியென்றால் அவர்கள் மக்களுக்காக எதனை பிரச்சனைகளில் குரல் கொடுத்தார்கள் , எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பதையும் ஒதுக்கி விடுவோம். அவர்கள் முன்னிறுத்தும் எம்ஜிஆரின் ஆட்சி எவ்வளவு சிறப்பாய் இருந்தது என்பதை பார்ப்போம்.
ஒருவரின் திருமண வாழ்க்கை என்பது அவரவர் விருப்பம். பொது வாழ்க்கைக்கு வந்தாலும் அவரது திருமண வாழ்க்கை பற்றி விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் கலைஞரின் மனைவியை ஒன்று , இரண்டு , மூன்று என்று வரிசை படுத்தும் யாரும் தவறி கூட எம்ஜிஆரின் மனைவியை பற்றி மூச்சு விடுவதில்லை. இரண்டு மனைவிகள் இறந்த நிலையில் எம்ஜியார் ஜானகியை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது ஜானகிக்கு திருமணம் ஆகி கணவரும் உயிருடன் தான் இருந்தார். எம்ஜியார் ஜானகிக்கு எழுதிய காதல் கடிதம் கையில் கிடைக்க ஜானகி அம்மையாரின் கணவர் பெரும் பிரச்சனையை உருவாக்கி விட்டார். நள்ளிரவில் தன மகனுடன் வீட்டைவிட்டு கிளம்பிய ஜானகி எம்ஜியாருடனான திருமணத்திற்கு முன்னர் 12 ஆண்டுகள் Living Togetherரில் இருந்தார். (உண்மையில் திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவரையே காத்திருந்து திருமணம் செய்து கொண்ட எம்ஜியாரை பாராட்டியே ஆக வேண்டும்)
காங்கிரஸில் பற்று கொண்டு பின்னர் திராவிட கொள்கையால் ஈர்க்கப்பட்ட பல கோடி மக்களில் எம்ஜியாரும் ஒருவர்.திமுகவின் பிரச்சார முகமாகவே இருந்தார் MGR. அண்ணாவின் மறைவிற்கு பின்னர் திமுகவில் இருந்து பிரிந்து வந்த MGR அதிமுகவை துவங்கினார். பின்னர் அது அஇஅதிமுகவானது . எதனால் என்று கேட்டல் ரஜினி கமலுக்கு விடை தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. இந்திராகாந்தி கொண்டு வந்த அவசர நிலை காலத்தில், மாநில கட்சிகளை கலைத்து விடுவார் என்கின்ற பயத்தில் அதிமுகவை அகில இந்திய அதிமுகவாக மாற்றிய வீரம் மிக்கவர் தான் திரையில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆவார். இந்திரா காந்தி என்று இல்லை. மத்தியில் எந்த ஆட்சி இருக்கிறதோ அதற்கு எப்போதும் இணக்கமாகவே நடந்து கொள்வார்.
சர்க்காரியா கமிஷன் அனைவர்க்கும் தெரியும். பால் கமிஷன் மற்றும் ரே கமிஷன் எத்தனை பேருக்கு தெரியும். திருச்செந்தூர் முருகன் கோவிலின் உதவி ஆணையர் சுப்பிரமணியம் மர்மமான முறையில் இறக்க , அதற்கு நீதி கேட்டு கலைஞர் மதுரை இருந்து திருச்செந்தூர் வரை நடை பயணம் மேற்கொண்டார்.அந்த அழுத்தத்தின் காரணமாக எம்ஜியார் CJR Paul தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு கொடுத்த அறிக்கை அதிமுக அரசுக்கு எதிராக இருந்ததால் அந்த அறிக்கையை MGR வெளியிடவேயில்லை. பின்னர் கலைஞர் அதை வெளியிட்டார். ரே கமிஷன் அதைவிட சுவாரசியமானது.
1974 ஆம் ஆண்டு கலைஞரின் திமுக அரசு மதுவிலக்கை கொண்டு வந்தது.1981ல் MGR மது விலக்கை நீக்கினார். அதற்காக அவர் சொன்ன காரணம், கள்ள சாராயம் அதிகரிக்கிறது அதனால் பலர் இறக்கிறார்கள் என்பதே. மது ஆலை நடத்த ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கே கொடுக்கப்பட்டது. உரிமைகள் அனைத்தும் அதிமுக காரர்களுக்கே கொடுக்கப்பட்டது. மது விற்பனையின் மூலம் வரும் excise வரி அதிக அளவில் உயர்ந்தது. அதாவது தன் குடிமக்களுக்கு தங்கு தடையின்றி ஊத்தி கொடுத்தது MGR அரசு. அதனை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் கேரள அரசு ஒரு ஒப்பந்தம் போட்டது. அதன் படி தமிழக அரசு கெளரவிற்கு 65 லட்சம் லிட்டர் சாராயம் கொடுக்க வேண்டும். 33.50 லட்சம் லிட்டர் அனுப்பிய தமிழக அரசு கையிருப்பு இல்லை என்று நிறுத்தி கொண்டது. காலாவதியான அந்த ஒப்பந்தத்தை வைத்து கொண்டு கேரளா பெரும் புள்ளிகள் தமிழக சாராய உரிமையாளர்களிடம் கள்ள கடத்தலில் சாராயத்தை வாங்கியது. ஒருமுறை அப்படி நடந்த கள்ளக்கடத்தல் கேரளா அரசால் பிடிக்க பட, கடத்தல் கும்பலோ MGRகு 5 கோடி ருபாய் கொடுத்ததாக தெரிவித்தது. சுதாரித்து கொண்ட MGR, கமல் போல விசாரணையே அமைக்க கூடாது என்றெல்லாம் சொல்லாமல், தன் மேல் இருந்த குற்றச்சாட்டிற்கு தானே விசாரணை குழு அமைத்தார். திமுகவின் கடும் போராட்டத்திற்கு பின்னர் அந்த குழு கலைக்கப்பட்டு மத்திய அரசு பாலின் தலைமையின் கீழ் குழு அமைத்தது.
மேற்சொன்ன இரண்டும், நேர்மைக்கும் ஊழலற்ற அரசிற்கும் MGRகும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். இந்த உத்தமரின் ஆட்சியை தான் தாங்கள் தருவோம் என்று கமலும் ரஜினியும் கூறி வருகிறார்கள். ரஜினியாவது கட்டாயத்தின் பெயரில் வருகிறார் என்றால் காப்பியடிப்பதில் பெயர் போன கமல் இப்போது MGRரை ஏன் காப்பி அடிக்க முயல்கிறார் என்று தான் தெரியவில்லை. மேற்சொன்னவைகள் மட்டும் அல்லாமல் இன்னும் விவசாயிகள் படுகொலை , மீனவர்கள் படுகொலை, வன்னிய இடஒதுக்கீடு படு கொலைகள், கம்யூனிஸ்ட்கள் படு கொலை, மாணவர்கள் படுகொலை என்று MGRரின் ஆட்சி முழுவதும் ரத்த சிதறல்கள் உண்டு.
ஏழை எளிய மக்களின் உழைப்பு அனைத்தையும் சாராய விற்பனை மூலம் உறிஞ்சி எடுத்த MGR கல்வி துறையையும் விட்டு வைக்கவில்லை. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், MGRக்கு உங்களை பிடித்திருந்தால் போதும் தனியார் பள்ளி கல்லூரிகளை திறந்து கொள்ளலாம். சாராய வியாபாரிகள் பலர் கல்வி தந்தை ஆனது MGR தயவில் தான்.
MGRரின் திரைத்துறை வாழ்க்கை முதல் பாதியில் திராவிட சித்தாந்தத்தை முன் வைத்து எடுக்கப்பட்டது என்றால் இரண்டாம் பாதி அனைத்தும் ஒரு குடும்பமாக பார்க்க முடியாத அளவிற்கு ஆபாசம் நிறைந்ததாகவே இருக்கிறது. ஒரு சில பாடல்கள் எல்லாம் இன்றைய இரண்டாம் தர படங்களை மிஞ்ச கூடியதாகவே இருக்கிறது.
கமலஹாசன் தந்தி தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த கமல் திமுக, அதிமுக , பிஜேபியிடன் கூட்டணி இல்லை என்பதை சொன்னதும் காங்கிரஸுடனான கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் நழுவ முயன்றததற்கு என்ன அர்த்தம் என்பதை கமல் தான் விளக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வந்த கமல் காங்கிரஸ்சுடன் கூட்டணி வைக்க போகிறாரா இல்லை தனித்து போட்டியிட போகிறாரா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.அவர் பேட்டி கொடுத்த ஓரிரு நாட்களில் புதிய தலைமுறை செய்தியில் இந்தியாவிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் அதற்கு காரணம் இங்குள்ள கட்டுமானம் தான் என்றும் செய்தி வெளியானது. அந்த கட்டுமானத்தில் MGRரின் பங்கு என்ன என்பதை கமல் விலகுவாரா என்பதை பொறித்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திரைத்துறையில் மட்டுமில்லை , அரசியலிலும் MGRருக்கு பொருத்தமான வாரிசாகவே இருப்பார் கமல்.
Coutesy: Thank you, சுமதி. விஜயகுமார்.



செக்கு மாட்டுத் தனம் யாதெனில்? Sapiens

 ஒரு காலத்தில் நாடோடியாக சற்றே முன்னேறி வால் இல்லாத குரங்காக திரிந்த நாம், நம்முடைய சுயநலத்திற்கென பிற விலங்குகளை நம்முடைய தேவைக்கென பழக்கப்படுத்தி நம் வேலைப் பளுவை அதன் மீதி ஏற்றி இளைப்பாறிக் கொண்டோம்.

அதற்கென அவைகளின் வாழும் மொத்த ஆண்டுகளின் எண்ணிக்கையை முழுமையாக வாழ விட்டும், வாழ விடாமலும் நம்முடைய கைகளில் அதன் விதியைக் கொண்டு வந்தோம்.
நாள் முழுவதும் ஒரு வயலில் உழுது விட்டு ஒரு கொட்டகையில் தான் காயடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிரும்கிறோம் என்று உணராத மாட்டிற்கும், மூன்று வயதிலிருந்து படிப்பு, குழந்தமை வீணடிப்பு, வேலை, திருமணம், பிள்ளை பேறு, வீடு, கார், கடன்... மீண்டும் பிள்ளைகளின் படிப்பு என்று ஒரு சுழற்சியில்... இன்னுமொரு மாட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்துக் கொள்ளும் நவீன ஏப்களுமான நமக்கும், அந்த பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?
அவைகளை அன்று அந்த கட்டுப்பாட்டிற்குள் ஒரு மொத்த சமூகமாக நாம் கொண்டு வந்தோம். ஆனால் அதே யுக்தியை பயன்படுத்தி இன்று அரசுகள் நம்மை வேறு மாதிரியான கெடையில் சாத்தி விட்டதோ!
கூட்டம் அதிகரிக்க முறைபடுத்தப்பட்ட சமுக கட்டமைப்பு வேண்டும். அதற்கென அமையப்பெற்ற அந்த மக்களதிகார அமைப்பு, நவீன காலத்தில் சிதைவுற்று மக்களாட்சி நீர்த்துப் போகும் அளவிற்கு அப்யூஸ் செய்யப்பட்டு வருகிறது...
I think its too big to handle with such a vast differences.
டார்வினியக் கோட்பாடு சன்னமாக உயிரின இருத்தலின் பொருட்டு எல்லா காலத்திலும் நடந்தேறும் தொடர் நிகழ்வு தானே. அதில் மனிதன் மட்டும் விதி விலக்கா என்ன? இந்தியாவில் இருக்கும் கட்டற்ற மக்கட்தொகையின் பொருட்டு ஏற்கெனவே அந்த கோட்பாடு இயக்கத்தில் தீவிரத் தன்மையுடன் இருக்கிறது என்பதை நான் பல இடங்களில் சுட்டிக் காட்டி எழுதி வருகிறேன். பிராமினியத்தின் அடிப்படை சித்தாந்தமே அந்த அச்சை சுற்றியே கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது எனலாம்.



Sunday, September 06, 2020

படிமலர்ச்சிக் கூண்டிற்குள் கடவுள்: Why evolution is true? Part 4

படைத்த கடவுளுக்கு தொழில் சுத்தமாக படைக்கத் தெரியாதா? பறக்கத் தெரியாத பறவைக்கு இறக்கைகள் எதற்கு? வாலில்லாம வாழப் போற நமக்கு எதற்கு வால் எலும்பு? புல்லு, பூண்டு, இலை, தழை, கொடி சாப்பிடாம இருக்கப் போற நமக்கு குடல்வால் எதற்கு? வாங்க படைத்தவனை கூண்டுல நிப்பாட்டி கேள்வி கேட்போம்.
படிமலர்ச்சி நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறக்கிறது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
எப்பொழுதாவது எண்ணிப்பார்த்திருக்கீர்களா ஏன் கோழிக்கும், மயிலுக்கும்,
ஆஸ்ட்ரிச்சிற்கும் இறக்கைகள் இருந்தாலும் அவைகள் நீண்ட தூரம் பறக்க உதவுதில்லைன்னு? அதிலும் குறிப்பாக தீவுகளில் வாழும் பல பறவையினங்கள் நில வாழ்வன‌ வகைகளாகத்தான் இருக்கிறது. ஏன் அப்படி? தான் சார்ந்து வாழும் சுற்றுப்புறச் சுழலுக்கு தகுந்த மாதிரிதான் உயிரினங்களின் படிமலர்ச்சி அமைகிறது என்று பார்த்தோம்.
அவ்வாறான தீவுப் பறவை வகைளுக்கு மரங்கள் அதிகமாக இருக்கக் கூடிய வாழ்விடமோ, அங்கு ஆபத்து அதிகமில்லாத பகுதியாகவோ இருந்து போவதால் நாள் போக அவைகளுக்கான பறக்கும் மரபியல் பண்பு தேவையற்றதாகிறது. அந்தப் பின்னணியில் உயிரினங்களின் வாழ்விடத் தேவைகள் பொருட்டே தன்னுடைய இருத்தலை நிலை நிறுத்திக் கொள்ள மரபணுப் பிறழ்ச்சியின் (genetic mutation) ஊடாக சிறப்பியல்புகளை பெற்றும், இழந்தும் அடுத்த நிலைக்கு நகர்கிறது.
நிலத்தில் வாழும் பறவையான‌ ஆஸ்ட்ரிச் ஓடும் பொழுது கவனித்தீர்களேயானால் தன்னை சமநிலைப் படுத்திக் கொள்ள இறக்கைகளை விரித்தவாறே விரைந்து ஓடும். அது போலவே பென்குயின்களுக்கு இறக்கைகள் இருக்கிறது, ஆனால், அதனை தண்ணீருக்குள் அதி விரைவில் நீந்தும் தன்மை கொண்டதாக பயன்படுத்துகிறது. இது ஒரு புறம் என்றால் நமக்கும், திமிங்கிலத்திற்கும் மூதாதைகளால் பயன்பாட்டில் இருந்து வந்த பல (பாக)‌ உறுப்புகள் இப்பொழுது சான்றுறுப்புகளாக (Vegtigial) மட்டுமே இருந்து வருகிறது.
Image may contain: one or more people, text that says 'Lemuy Human an $5 FIGURE 14. Vestigial and atavistic tails. Top left: ruffed lemur (Varecia variegates), the tail (caudal) vertebrae our relatives that have tails, unfused first are labeled But the "tail" coccyx top right the caudal vertebrae fused form vestigial structure. Bottom atavistic tail three month Israeli infant. vertebrae are much larger right)'உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் திமிங்கிலங்கள் நான்கு கால்களை கொண்ட தரைவாழ் விலங்கிலிருந்துதான் படிமலர்ச்சி அடைந்தது என்பதின் எச்சமாக‌ பின்னங்கால்களும், இடுப்பெலும்பும் முற்றிலும் வளர்ச்சியுறா நிலையில் உடலின் உள்ளாகவே ஏதோ நிலையில் இருந்து விடுகிறது. அது போலவே நம்முடைய தூரத்து உறவுகளான குரங்குகளிருந்துதான் நாம் படிமலர்ச்சியடைந்தோம் என்பதனை சான்றளிக்க குடல்வாலும் (appendix), வால் எலும்பும் (tail bone) முழுமையடையா நிலையில் சான்றுறுப்பாக இருக்கிறது. குடல்வால் நம்முடைய தூஊஊரத்து சொந்தக்காரய்ங்களான இலை சாப்பிடும் குரங்களில் செல்லுலோசை செரிப்பதற்கென வாழும் பாக்டீரியாக்களை கொண்ட குடல் பகுதியாக இருந்திருக்கிறது. இப்பொழுது நமக்கு அது தேவையற்ற ஓர் ஆணி.
இன்னும் ஒரு படி மேலே சென்று திடுக்கென அந்த முழு வளர்ச்சியடையா சான்றுறுப்புகள் ஒரு சிலரில் மட்டும், குறிப்பிட்ட‌ மரபணுக்கள் பழைய நினைவிலிருந்து உயிர் பெற்று புற உறுப்புகளாக வளர ஆரம்பித்து விடுவதும் உண்டு. மனித குழந்தைகளில் வாலுடன் பிறப்பது, ஒவ்வொரு 500 திமிங்கிலங்களில் ஒரு திமிங்கிலம் பின்னங்கால்களுடன் வெளிப்புறமாக வளர்ந்த நிலையில் பிறப்பது இவையெல்லாம் அதில் அடங்கும்; இந்த நிலை, மீளுறுப்பு (Atavism) என்றயறிப்படுகிறது.
இவைகளெல்லாம் எதனை நோக்கி நம் கவனத்தைக் கோரி நிற்கிறது? கடவுள்தான் இந்த
உலகத்தை, உயிரினத்தை படைத்தான் என்றால் ஏன் இது போன்று விட்டக் குறை தொட்ட குறை உறுப்புகளை ஒன்றிற்கு மற்றொன்று தொடர்பில்லாத இனங்களிலும் வைத்து படைக்க வேண்டும்? ஏன் படைத்தவனுக்கு சுத்தமாக‌ எந்த கோளாறுகளும் இல்லாமல் படைக்கத் தெரியாதா?
விசயம் அதுவல்ல. படிமலர்ச்சியில் மரபணு பிறழ்வின் போது தேவையானதை அடுத்தக் கட்ட இயற்கை தேர்ந்தெடுப்பின் (Natural Selection) போது ஆதரித்தும், தேவையற்றதை ஊக்கப்படுத்தாமலும் எடுத்துச் செல்கிறது. அவ்வாறு தேவையற்ற மரபணு பண்புகள் முற்றும் முழுதாக நம்முடைய செல்களிலிருந்து துடைத்தழிக்கப்படுவது கிடையாது. செயல்பாட்டில் உள்ளதாகவும், அற்றதாகவும் சில புரதப் பொருட்களால் தூண்டப்படுகிறது. செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் அது போன்ற மரபணுக்களை போலி மரபணு (psuedogene) என்கிறார்கள்.
நவீன மரபணு ஆராய்ச்சி முன்னேற்றத்தில் இன்று நாம் கிட்டத்தட்ட நம்முடைய அனைத்து மரபணுக்களையும் அதன் பண்புகளையும் வரைவாக கண்டறிந்திருக்கிறோம். அதில் கிட்டத்தட்ட 3000ம் வகையான மரபணுக்கள் இறந்த மரபணுக்களாக இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். எலிகளில் இருக்கின்ற நுகர்வாற்றல் (Olfactory receptor) நம்மை விட பலப்பல மடங்கு அதிகம். ஆனால், அந்தப் பண்பு நம்மில் மிகக் குறைவு. ஏன் அப்படி? எலிகளுக்கு இரையை, நெருங்கி வரும் ஆபத்தை, இணையை கண்டறிவதில் மிகை நுகவுணர்வு உதவுகிறது. அதே அளவில் நமக்கு தேவையற்றதாகுகிறது. ஏனெனில் நாம் நம்முடைய பார்வையை அதிகளவில் நம்பி இருப்பதால் அதீத நுகர்ச்சி பண்பு சுமையாக அமைகிறது.
சரி உபரியாக அது போன்ற பண்புகளை வைத்துக் கொண்டால் தான் என்ன? என்று ஒரு கேள்வி வரலாம். உதாரணமாக குகைகளில் உள்ள நீர்நிலைகளில் வாழும் மீன்களுக்கு கண்கள் தேவையற்றது. கண்கள் இருந்தால் அதனை பயன்படுத்தப் போவது இல்லை என்றாலும் பாதுகாக்க வேண்டும். அதனை மேலாண்மை செய்ய சக்தி தேவை. இப்படி பல ஆணிகள். எனவேதான் காலப்போக்கில் அது போன்ற மரபணுக்களை செயலற்றதாகவோ, அல்லது மரணித்த நிலையிலேயோ படி எடுக்கப்படுகிறது. இருப்பினும் நமக்கு விட்டுச் செல்லும் ஒரு மரபணு சார்ந்த படிமலர்ச்சி சுவடுகள் இவை.
இதற்கு மேலும் படிமலர்ச்சிக் கோட்பாடு ஒரு பிதற்றல் எனக் கூற முடியுமா?

Ref: Why Evolution Is True by Jerry A. Coyne
Photo Courtesy: Net

Sunday, August 30, 2020

கரையில் திரிந்த பாலூட்டி திமிங்கலமானது எப்படி? Part 3

தரையில் வாழும் மீன்களைப் பற்றி இரண்டு பதிவிற்கு முன்பு பேசினோம். அவ்வளவு முயற்சி செய்து பல மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கிட்டு தத்தி தவழ்ந்து கரையேறி நீர்நில வாழ்வனவாக படிமலர்ச்சி அடைந்து பிறகு, ஊர்வனவாக ஊர்ந்து டைனோசர்களாகி அதிலிருந்த படியே சிலவை சிறகுகளைப் பெற்று வானத்தில் மிதக்கும் பறவைகளாகின‌ என்றறிந்தோம் (see previous post--> டைனோசர் பறவையான கதை: Part 2).
குளிர் இரத்த உயிரினங்களாகிய ஊர்வனவைகள் பறவைகளாக படிமலர்ச்சி அடைவதற்கான இடைப்பட்ட காலத்தில் பகுதி வெப்ப இரத்தப் (warm blooded) உயிரினங்களாகி, சிறகுகளுக்குத் தேவைப்படும் முடியையும் பெற ஆரம்பித்திருந்தது. சுமாருக்கு 340 மில்லியன் ஆண்டு வாக்கில் ஊர்வன-பறவை இனத்திற்கும் இடைப்பட்ட நிலையிலிருந்த எட்டு அங்குல நீளமுள்ள‌ ஓர் ஊர்வன உயிரினமே முதல் பாலூட்டிக்கான மூதாதை. அது அனேகமாக ஓர் எலியையொத்த பூமிக்கடியில் வாழும் பாலூட்டியாக இருந்திருக்கக் கூடும்.
அதிலிருந்து கிளைத்து பன்முகத்தன்மையோடு பல்கிப் பெருகிய பாலூட்டிகளில் சில
இனங்கள் மீண்டும் தண்ணீருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது ஏன் என்பதே
இன்றையப் பதிவு. தண்ணீருக்குள் வாழும் பாலூட்டிகள் என்றவுடனே நமக்கு நினைவில் வருபவை திமிங்கலங்கள், டால்பின்கள், கடல்சிங்கம், வால்ரஸ் கடல்பசுக்கள். இவைகள் நிலப்பகுதியில் வாழ்ந்தவைதான் என்றாலும் தண்ணீருக்குள் சென்று வாழப்பழகியது என்பதற்கு என்ன சான்று. அதற்கு நாம உதாரணமாக‌ எடுத்துக் கொள்ள வேண்டிய விலங்கு, நமக்கு ரொம்ப‌ அறிமுகமான நீர்யானை (hippopotamus - hippopotamus amphibius).
இவைகள் பெரும்பகுதியான நேரம் தண்ணீருக்குள்தான் வாழ்கிறது. அதாவது மூக்கையும், கண்ககளையும் மட்டும் தண்ணீர் மட்டத்திற்கு மேல் வைத்துக் கொண்டே அப்படியே தண்ணீருக்குள்ளரயே கிடக்கும் (அட நம்ம எருமை மாடே அப்படித்தானே!). அதற்கென அதோட மூக்கையும், கண்களையும் கவனிங்க எவ்வளவு அழக தண்ணீரில் வாழ்வதற்கான தகவமைவை பெற்றிருக்கிறது என்பது விளங்கும். அது மட்டுமல்ல அவைகள் தண்ணீருக்குள்ளாகவே இனப்பெருக்கத்தையும் செய்கிறது. அதற்குத் தேவையான முழுமையான உணவு மட்டும் அங்கேயே கிடைத்திருந்தால் நிலப்பரப்பிற்கு வந்து மேய்ச்சல் செய்யும் தேவையே இல்லாமல் போயிருக்கக் கூடும்.
இந்தப் பின்னணியில் திமிங்கலங்களின் மூதாதைகளை வைத்துப் பார்த்தால், அவைகள் (ஒட்டகத்தையொத்த‌) குளம்பிகளைக் கொண்ட தாவர உண்ணிகளாகத்தான் இருந்திருக்கிறது என்பது புலனாகும். 52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்டுஹையஸ் (Indohyus) என்ற ஒரு தாவர உண்ணி ஓப்பீட்டுளவில் சிறிய மானளவு கொண்ட குளம்பியொன்று தண்ணீரையொட்டியப் பகுதியில் பாதுகாப்பிற்கெனவும், உணவிற்காகவும் திரிந்து கொண்டு, நிலப்பகுதிக்கும் சென்று உண்டு வாழ்ந்திருக்கிறது. அதனுடைய எலும்பு மற்ற பாலூட்டிகளைக் காட்டிலும் அடர்வானதாக இருந்திருக்கிறது. ஏன் அப்படி பருமனுடன் இருந்திருக்க வேண்டும்; நீரில் மூழ்கும் போது மிதந்து விடாமல் இருக்க. பற்களில் ஐசோடோப் சோதனை செய்து பார்க்கும் பொழுது நீரில் உள்ள பிராணவாயுவை உட்கிரகிக்கும் திறனுடனும் இருப்பது தெரியவந்தது.

திமிங்கலமாக அந்த இன்டுஹயஸ் தாண்டியது கால் கிணறு. அதற்கு அடுத்து 50
மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு படிமலர்ச்சியில் வந்த ஆம்புலோசெடஸ் (ambulocetus) என்ற இடைப்பட்ட இனம் கிட்டத்தட்ட முன்னேறி திமிங்கலம் பக்கத்தில் வந்தாலும் இன்னும் நான்கு கால்கள் அதில குளம்புகளோட இருக்கிறது. அதனை வைத்துக் கொண்டு இன்றைய சீல்கள் மாதிரி தரைக்கு வந்து தவழ்ந்து திரிந்து கொண்டிருக்கிறது.
அதிலிருந்து மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னால் வந்த இனமான ரோதோசெடஸ் (rodhocetus) இன்னும் நுட்பமான உறுப்புகளைப் பெறுகிறது; நீண்ட மண்டையோட்டையும், மூக்குத்துளைகள் இன்னும் பின்னாடி நகர்ந்தும் தகவமைவு கொள்கிறது. இருப்பினும் 50 அடி நீளமுடைய ஒரு விலங்கு அத்தனை எடையைத் தூக்கிக் கொண்டு சிறிய இரண்டு முன்னங்கால்களையும், மாற்றமடைந்த இடுப்பு எலும்பையும் கொண்டிருந்ததால் நிலத்தில் நடக்கவே வாய்ப்பற்று முழுதுமாக தண்ணீரில் இருக்கும் நிலைக்கு போனது.
சரி, ஏன் அவைகள் தண்ணீரைத் தேடி சென்றிருக்க வேண்டும்? நிலத்திலும், தண்ணீரிலும் வாழ்ந்த பெரும் பெரும் டைனோசர்கள் மாண்டழிந்த நிலையில் பின்னால் வரும் விலங்குகளுக்கு உணவிற்கோ, தங்களது பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் இல்லை எனும் நிலை வருகிறது. அங்கு புதுவிதமான வாழ்விடம் (ecological niche) அவைகளுக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கிறது. அந்த நிலையில் படிமலர்ச்சியில் சிறு சிறு மரபணு மாற்றங்களின் (mutation) மூலமாக‌ வேகமெடுத்து, புதிய வாழ்விடங்களை நிரப்பிக்குள்ளும் நிலைக்கு விலங்கினங்கள் தள்ளப்படும். அப்படியாகத்தான் தாவர உண்ணியாக கரையோரத்தில் நடந்து திரிந்த ஒரு குளம்பி பிற்காலத்தில் திமிங்கலமாக நமக்கு காணக்கிடைத்தது. ஏன்னா, நவீன திமிங்கலம் ஒரு பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடியே தான் முழுமையடைந்த‌தாம்.


Ref: Why Evolution Is True by Jerry A. Coyne

டைனோசர் பறவையான கதை: Part 2

360 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி டிக்டாலிக் ரோஸியே என்ற மீன், எப்படி நீர் நில வாழ்வனவற்றிற்கு இடைப்பட்ட ஒரு மீனினமாக கரையேறி தத்தக்கபித்தாக்கன்னு நடக்க ஆரம்பித்ததால் நிலத்தில் வாழப்போகும் முதுகெலும்புடைய உயிரினங்களுக்கும் அடிப்படையாய் அமைந்ததுன்னு போன பதிவில் பேசிக்கிட்டோம் (காண்க: மீன்கள் நடந்தனவா ஓர் படிமலர்ச்சிப் பார்வை! :Part 1). 


தண்ணீருக்கும் நிலத்திற்குமாக சென்றுதான் வாழ வேண்டுமென்ற அந்த இரட்டைதன்மை இல்லாது, முழுமையாக நிலத்திலேயே வாழும் ஊர்வனவாக அடுத்து வந்த காலகட்டங்களில் அவைகளில் சில பரபரவென தேவையானவற்றை பெற்றும், இழந்துமென முழுமையான தகவமைவைப் பெறுகிறது. இது வரையிலுமே அவைகள் யாவும் குளிர் இரத்த உயிரினங்களாகவே (cold blooded animal) உள்ளது. அதாவது அவைகளின் உடல் வெப்பம் சுற்றுப்புறச் சூழலுக்குத் தகுந்த மாதிரி மாறாது.
ஆனா, அதை வைத்துக் கொண்டே இந்தப் பேரினம் ஆயிரக்கணக்கான டைனோசார் இனங்களையும் உள்ளடக்கி ஏறத்தாழ 175 மில்லியன் ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டிருக்கிறது. அவைகள் காகத்தின் ஒரு அளவிலிருந்து மூன்று மாடி கட்டட அளவுடைய டைனோசர்களாக வாழ்ந்த போதிலும் ஏதோ போதாமையொன்று தொடர்ந்து கொண்டே வருகிறது.
காகம் அளவே இருந்த ஒரு டைனோசரையொத்த ஓர் உயிரினமே பறவைக்கும் ஊர்வனவற்றிற்குமான இணைப்பு இனமாக ஆர்க்யோப்ரெக்ஸ் (archaeopteryx) இருந்திருக்கிறது. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இது முழுமையான ஒரு பறவையுமல்லாமல் ஊர்வனவுமல்லாமல் இருந்திருக்கிறது; ஆனால் அதனை நோக்கிய நடை. அண்மையில் சீனாவில் மேலும் தெளிவான பறவைகளுக்குறிய குணாதிசியங்களுடான இடைப்பட்ட வேறு சில இனங்களும் படிமங்களாக இப்பொழுது கிடைத்திருக்கிறது.
அவற்றில் சில வேகமாக ஓடி முன்னங்கால்களை படக்கென்று காற்றில் வீசி இரையைப் பற்றி வாயிக்கு எடுத்துச் செல்லும் நுட்பம், பறவைகளுக்கு தேவையான அதே தசை கட்டமைப்பை மெல்ல உள்வைத்து நகர்கிறது படிமலர்ச்சி. இதற்கிடையே பறவைகளின் இறகுகளில் இருக்கும் முடியையொத்த ஒரு தகவமைப்பை பெறுகிறது. இது எதற்காக தோன்றியிருக்கக் கூடும் என்பதில் இரண்டு விதமான கருதுகோள்கள் உண்டு: இணையைக் கவர்வதற்கு அல்லது உடலை வெப்பமேற்றி வைத்துகொள்ள.
அப்படியாக தோன்ற ஆரம்பித்த வகைகளில் ஆண்டுகள் ஓட முன்னங் கால்களில் தேவையான அளவு மாற்றங்கள் பெற்று, மரத்தில் தொற்றி ஏறவும் ஆரம்பிக்கிறது. அந்த தகவமைவு ஓர் உயரமான மரத்திலிருந்து மிதந்து ஊர்ந்து அடுத்த மரத்திற்கு செல்ல உதவியது. இங்கே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமானதொரு கேள்வி- இது போன்ற தகவமைகளைப் பெற எது உந்து சக்தியாக அமைகிறது என்பது. உணவிற்கான போட்டி, பாதுகாப்பிற்கென, தகுதியான உடற்கட்டமைப்பை கொண்டு தப்பிப் பிழைப்பதற்கான தகவமைப்பை எது பெற்றிருக்கிறதோ அதனை இயற்கை இயல்பாகவே தக்கவைத்துக் கொள்கிறது.
ஊர்வனவற்றின் தாடைகளிருந்த பற்களை இழந்து, இடைப்பட்ட இனமான வெப்ப இரத்த (warm blooded) தகவமைவைப் பெற்றும், முதுகுத்தண்டுவடம் நேரடியாக மண்டையோட்டோடு இணைவதை தவிர்த்து, கீழிறிருந்து வந்து இணைவதுபோல் பெற்று, எலும்பின் எடை குறைத்து உள்ளீடற்ற எலும்புகளைப் பெற்று, முன்னங்கால்களை பறப்பதற்கு ஏதுவாக அமைத்துக் கொண்ட நாளில் மிதந்து நகர்வதிலிருந்து, வானத்தில் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது அந்த மாண்டழிந்த டைனோசர்கள்.
பி.கு: சொந்தக் கவனிப்பு - நல்ல உயரமான கோழியை உறிச்சிட்டு கொஞ்சம் கற்பனையை தட்டி விடுங்களேன் நீங்க 🦖 பார்ப்பீங்க.



Read: Why Evolution Is True by Jerry A Coyne.

மீன்கள் நடந்தனவா ஓர் படிமலர்ச்சிப் பார்வை! :Part 1



குரங்கையும் நம்மையும் பக்கம் பக்கமா வைச்சுப் பார்த்திங்கன்னா இரண்டு பேருக்கும் உடல் புற உறுப்புகளின் அமைவு ரீதியாக எந்த விதமான வித்தியாசங்களும் இருக்காது. ஏன் ஆடு மாடுகளுக்கே கூட ஒரே விசயம்தான், இல்லையா? எப்பொழுதாவது எண்ணிப் பார்த்திருக்கீங்களா என்ன பெரிசா நாம மட்டும் பொதக்டீர்னு வானத்திலிருந்து குதித்து வந்து சிறப்பு வாய்ந்த ஒரு பாலூட்டி இனமான மனிதனாகி விட்டோமென்று?
ஒரிரு விசயத்தில நாம அவைகளை காட்டிலும் படிமலர்ச்சியில அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டோம். இரண்டு கால்களில் எழுந்து நின்றது, சிந்திப்பது மற்றும் சிக்கலான சொற்களைக் கொண்டு பேசுவது. ஏனைய விசயங்கள் அனைத்தும் நமக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் ஒன்றுதான்; கைகள், கால்கள், காதுகள், கண்கள், மூக்கு, வாய், ஆசன வாய், இனப்பெருக்க உறுப்புகள் இத்தியாதி இத்தியாதி...
அப்படி என்றால் எப்படி இது போன்றதொரு ஒத்திசைவுன்னு கேட்கத் தோன்றும் இல்லையா. இதில வாலில்லா குரங்கிற்கும் நமக்கும் ரொம்பவே ஒப்புமையில் நெருங்கி வருவோம். இருப்பினும் அவைகள் முழுதாக மனித நிலையை எட்டாமலும் இருக்கிறது.
இங்கேதான் மனிதன் ஆதிக் குரங்கிலிருந்து வந்தான் என்றால் இடைப்பட்ட (transitional) குரங்கு இப்பொழுது எங்கே என்று கேட்பீர்கள். படிமலர்ச்சி அடைவது என்பது இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது, நுண்ணிய (micro) மற்றும் பெரியளவில் (macro).
இப்போ தண்ணீருக்குள் மட்டுமே வாழ்ந்த முதுகெலும்பு உடைய மீன் எப்படி நீர் நில வாழ்வனவாக (amphibian) படிமலர்ச்சி அடைந்த பொழுது, இடைபட்ட இனம் என்னவெல்லாம் மாற்றமடைந்தது என்பதனைக் கொண்டு நாம் எப்படி இந்த நிலைக்கு வந்து சேர்ந்தோம்னு ஒரு சிறு உதாரணத்தோடு பார்ப்போம்.
மீன்களின் மண்டை, கழுத்தே இல்லாமல் நேரடியாக முதுகெலும்போடு இணைக்கப்பட்டிருக்கும். விலா எலும்புகளும் பெரிய அளவில் ஒரு கூட்டையொத்த அமைவில் இல்லாமல் ஓடியிருக்கும். மேலும் தண்ணீரில் சுவாசிப்பெதற்கென செதில்களை கொண்டிருக்கும், இல்லையா? இவை மூன்றிலும் சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த மீன் இனங்களில் சில மாற்றங்கள் உண்டாக ஆரம்பித்தது.
அதாவது நீரில் இருந்து வெளியேறி ஒரு குட்டையை விட்டு இன்னொரு குட்டைக்கு தாவி ஏறி முறையான நான்கு கால்களைப் பெறாமலேயே முன், பின் துடுப்புகளில் இன்றைய நம் கால், கைகளுக்கு பயன்படுத்தப் போகும் அதே எலும்புகளை மெல்ல மெல்ல படிமலர்ச்சியுனூடாகப் பெற்று வெளிக்கிட விடிந்தது, நீர் நில வாழ்வனவற்றின் முன்னோடி.
அந்த டிக்டாலிக் ரோஸியே (Tiktaalik roseae) என்ற இணைப்பு மீன் இனம் (missing link spp) மட்டும் அந்த ஆபத்தான விளையாட்டை மேற்கொள்ளவில்லை என்றால் நமக்கு கிடைத்த கால், கைகள் கிடைத்திருக்காது. ஏன்னா, அந்த மீனின் கால்களையொத்த துடுப்பில் இருந்த அடிப்படை எலும்பமைவே இன்று இன்னும் நுட்பமான முறையில், நீண்டு ஒடுங்கியென நம்முடைய கை, கால்களில் இருக்கும் அதே எண்ணிக்கையிலான எலும்புகளுமாகும். எத்தனை விந்தையான விசயம்?
இப்படித்தான் படிப்படியாக காலங்கள் தோறும் முயற்சியே திருவினையாக்கும் என்றளவில் உயிரினங்கள் யாவும் படிமலர்ச்சியடைந்ததின் உண்மை.
கீழ்கண்ட புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிக்க வாசிக்க ஆர்வமூட்டக் கூடிய பகுதியை கடக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
Ref: Why Evolution Is True by Jerry A Coyne







Sunday, July 26, 2020

கண்ணீர்ப் பாதை (Trail of Tears) : செவ்விந்தியர்கள்

வட அமெரிக்காவின் பூர்வ குடிகளான சொரோக்கி இந்தியர்களை திடீரென ஒரு நாள் ஜியார்ஜியாவிலிருந்து வெளியேற்றி, ஓக்லோகோமா என்ற மாகாணத்திற்கு நகர்த்தினார்கள். அது ஓர் எலும்பை சில்லிடச் செய்யும் பனிக்காலம். நடையோ 2200 மைல்கள். போகும் வழியிலேயே 4000 பேர் மரணித்திருக்கிறார்கள். அந்த நடைக்குப் பெயர் "கண்ணீர்ப் பாதை (Trail of Tears)."
வரலாற்றின் இந்தப் பகுதி அமெரிக்கக் குழந்தைகளுக்கு தொடக்கப்பள்ளி புத்தகங்களில் வைத்து சொல்லிக் கொடுக்கப்பட்டு மறந்தும் விடுகிறார்கள். பெரிதாக வளர்ந்து நிற்கும் 80 சதவிகித மக்களுக்கோ இதனைப் பற்றிய அறிதலே இல்லை. அதுனாலேயே தான் போகும் போக்கில் வெறுப்பை கக்கும் வகையில் நடந்தேறும் துப்பாக்கிக் சூடுகளும், பிற நிற மக்களின் மீதான வெறுப்பும் உள்ளங்களில் மண்டிக் கிடக்கிறது.
நாம் வாழும் நிலப்பரப்பின் சொந்த வரலாறு அறியாமல் வாழ்வது என்பது, நமக்கு பெற்றோர்கள் இருந்தும் அவர்களைப் பற்றிய உண்மையான அறிமுகம் இல்லாமல் வாழ்ந்ததிற்கு ஓப்பானதே. அப்படி அறிமுகம் கிட்டாமல், ஓர் குறிப்பிட்ட வயது வரையிலும் வாழ நேர்வது நாம் அனைவருக்கும் நிகழ்வதே.
இருப்பினும் கற்றறிந்தவர்களின் வாதங்களை கேட்க நேரும் பொழுது சிக்கென அவர்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஏன் அப்படி அறிந்து கொள்ள வேண்டும்? நமக்கு முன்னால் வாழ்ந்த இந்த நிலப்பரப்பின் மூத்த குடிகள் எந்த அநீதிகளுக்கு எதிராக போராடி அழிந்தார்கள், வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள. மேலும் அன்று யாரால் இந்த பூமிக்கு அவர்கள் உரமாக்கப் பட்டார்களோ அவர்களே கூட இன்று நமக்கு நல்லவனாக பாவனை செய்து நீதி போதனை செய்து கொண்டிருக்கக் கூடும்.
வரலாறு நம்மை மனிதமிக்கவர்களாக்கும். வரலாறு நம்மை முழுமையடைய வைக்கும். வரலாறு நம்மை செய்த தவறுகளுக்கான பரிகாரங்களை நோக்கி எதிர்காலத்தில் வழி நடத்தும்.
Absolutely, yes. Why? Well, history would give a profound insight about their own country; make them humbled and to be inclusive. It is one's lack of history, make one become inhuman and arrogant toward a fellow individual. It will make you to think before you ask someone "to go back to your country."
This one single book can open up a pandora of our other side of the world. Try it!
♦️ Bury my heart at the wounded knee by Dee Brown.

Saturday, July 27, 2019

Dragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்

1870கள் அமெரிக்காவிற்கு ரொம்ப முக்கியமானதொரு பத்தாண்டு. ஒரே நேரத்தில் இரு வேறு கரைகளிலிருந்து இரு வேறு இனங்களுக்கு இடையேயான
போராட்டத்தை வாசிப்பனுபவத்தின் மூலமாகப் பெற முடியுமா? முடியும் என்கிறது இரு வேறு வித்தியாசமான தளங்களைக் கொண்ட புத்தகங்கள்.
இதில என்ன முக்கியமானதொரு விசயம்னா- ஒரு புத்தகம் முழுக்க முழுக்க வரலாற்று உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் சிவப்பிந்தியர்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது (Bury My Heart At Wounded Knee by Dee Brown).
மற்றுமொன்று நம்ம ஜுராசிக் பார்க், ப்ரே, நெக்ஸ்ட், மைக்ரோ போன்ற பிரபலமான நாவல்களை கொடுத்த மைக்கேல் க்ரிக்டன் எழுதிய Dragon Teeth என்ற புனைவு நூல்.
சிவப்பிந்தியர்களை பற்றிய புத்தகத்தில் நாம் அவர்களுடன் திறந்த வெளியில், பனியில், மலைகளின் குடைவிடங்களில், பள்ளத்தாக்குகளில் அவர்களுடன் அவர்களது எருது தோலில் கட்டப்பட்ட குடிசையில் உண்டு, படுத்துறங்கி, குதிரையில் பயணித்து நட்ட நடு இரவில் காலனி காலத்தைய அரசு அதிகாரிகளுக்காக காத்திருந்து, நீட்டும் இடத்தில் கையெழுத்திட்டதை சாட்சியாக இருந்து பார்ப்பதாகட்டும்...
அவ்வாறு பெற்றுக் கொண்ட நிலத்திற்கு இணையாக அவர்களுக்கு ரேஷன் முறையில் கொடுக்கப்படும் காபி, சீனி, கம்பளி மற்றும் துப்பாக்கி வெடி பொருள் கொடுப்பதை தாமதப் படுத்தி அதன் மூலமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஒருவனாக நின்று பார்ப்பதுதாகட்டும்...
தங்களுக்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட நிலத்திற்குள் உள்ள மலைகளில் தங்கம் கிடைப்பதாக செய்தி பரவி, ஒப்பந்தத்தையும் மீறி அப்பொழுதே புதிதாக கட்டப்பட்ட புகை வண்டி பயணத்தின் மூலமாக மேற்கத்திய பயணம் எளிமை பட, திபுதிபுவென் கூட்டம் சிவப்பிந்தியர்களின் நிலத்திற்குள் படையெடுக்க ஆரம்பித்ததும் அவர்களுக்குள் நடைபெற்ற மன சஞ்சலங்களை கேட்டவாறு, புகை வண்டியை மறித்து பொருட்களை கொள்ளையடிக்க குதிரைச் சவாரி செய்வதில் ஒருவனாக ட்ரைனை விரட்டிச் செல்வதுமாக சென்று...
அவ்வாறு அடிக்கடி நிகழும் பொழுது அவர்களைத் தேடி அழிக்க வரும் காலனி படை வீரர்களை தந்திரமாக சுற்றி வளைத்து கொன்று போடுவதாகட்டும்...
பின்பொரு நாள் அவர்களது கிராமங்களுக்குள் காலனி படை வீரர்கள் வந்து குடும்பம் குடும்பமாக கொன்று தலைத் தோலோடு வெட்டிப் போடுவதை நடுங்கிய உடலோடு கண்ணுருவதாக இருக்கட்டும்... சிவப்பிந்தியர் வாசிப்பு நம்மை அவர்களில் ஒருவனாக இருந்து அந்த போராட்டத்திற்கான நீதிகளை பார்க்க வைக்கும்.
அதே நேரத்தில் மைக்கேல் க்ரிக்டனோட புனைவில் அந்த வெள்ளையர்களின் பூட்டிய இரயில் பெட்டியின் அறைக்குள் இருந்து நம்மை எது போன்ற உரையாடல் நடைபெறுகிறது சிவபிந்தியர்களை பற்றி என கேட்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது.
அந்த புகை வண்டி உரையாடல்கள் டைனோசார்களின் புதை படிமங்களை தேடிச் செல்லும் அறிவியலாளர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுக்களுக்கிடையே சிவப்பிந்தியர்கள் பற்றியான அச்சம், அன்றைய போரில் எந்த ஜெனரல் கொல்லப்பட்டார் என்றும், மணிக்கு 10 கி.மீ வேகத்திலே நாள் கணக்கில் நம்மை அந்த புகை வண்டியில் கூட்டிச் செல்கிறார்கள்.
இதில் வரும் ஆண்டுகளும், சம்பந்த்தப்பட்ட இடங்களும், இரண்டு இனங்களில் முக்கியமான மனிதர்களின் பெயர்களுகும் சிறிதும் மாற்றமில்லாமல் கொடுப்பதை வாசிக்கும் போது, மாறி மாறி நாம் குதிரையின் மீதேறி அமர்ந்தவாறு அந்த புகை வண்டியை தடுத்து நிறுத்த திட்டமிடுவதாகவும், புகை வண்டிக்குள்ளிருந்து உணவின் விலையைப் பற்றிய குறைகூறலும், கடந்து போகும் ஸ்டேசன்களிலிருந்து எங்கே சிவப்பிந்தியர்கள் தாக்கி விடுவார்களோ என்ற பயத்துடன் பயணம் செய்வதாகவும் எடுத்துச் செல்வது ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவம்.
இரண்டு புத்தகத்திற்கும் பேக் ரெஃபரன்ஸ்ல் கடுமையான உழைப்பு தெரிகிறது. புனைவுதானே என்று க்ரிக்டனும் விட்டுவிடவில்லை...

Wednesday, April 24, 2019

பொதுபுத்திக் கனவுகள்: Sapiens - 4


கட்டுக்கதைகளே நம்மை உலகினோடு ஒட்டி ஒழுக கட்டியெழுப்பப் பட்டுள்ள சிறைகளின் மதில்களை ஒத்தது என்கிறார் சேப்பியன்ஸ் புத்தகத்தின் ஆசிரியர். இதனை நிறுவ இவர் மதங்கள், அரசுகள், அரசியல் கொள்கைகள், ஒரு பெரிய கார்ப்பரேட்டின் வியாபார முழக்கங்கள் என்ற விசயங்களை கையில் எடுக்கிறார்.
நம்முடைய அன்றாட சொந்த அக விருப்பத்தின் பால் நாடுகின்ற தன்னியல்பில் வாழ்வது (live your life), கனவுப் பயணம் (dream trip) போன்ற விசயங்களில் கூட எந்த அளவுக்கு வெளியிலிருந்து கட்டமைக்கப்படுகிற கற்பனை வாதம் நம்மை அகத்திலும் வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்று அலசி அதிர வைக்கிறார்.
இதனை சற்றே விரித்துப் பார்த்தால் குழந்தைகளை நாம் தற்சார்பு (independent) முறையில் வளர்த்தெடுக்கிறோம் என்ற அணுகுமுறையில், தேனிலவிற்கு சென்றே ஆக வேண்டுமென்ற இடத் தேர்வில், நம்முடைய பெற்றோர்களை எப்படி நலம் பேணுவது என்று எடுக்கப்படும் முடிவுகளில் என்று அனைத்திலும் இன்று கார்ப்பரேட் விளம்பரங்கள் நமக்கான தேவைகளை பொதுமைப் படுத்தி அதன் வழியில் நம்மை வழி நடத்தி வருவதை தெரிந்து கொள்ள முடியும்.
எண்ணிப்பார்க்கும் பொழுது அதில் பெரிய உண்மைகள் இருப்பதாகவே படுகிறதெனக்கு. இன்றைய அளவில் பயணங்கள் மேற்கொள்வது என்பது ஊருக்கு சொல்லிக் கொள்ளத்தக்க மெச்சும் செயலாகிப்போனதுதானே. அது போன்ற பயணங்கள் தன்னியல்பில் உந்தப்படாமல், பயண ஏற்பாட்டு மையங்களும், விமான போக்குவரத்துக் கழகங்களும், ஏனைய சுற்றுலாத் துறை மேம்பாட்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றி புனையப்பட்ட கருத்துக்கள் நம்மை அந்த இடத்திற்கு செல்லத் தூண்டுவதில் முதன்மைப் பங்கு வகிக்கிறதுதானே.
மிகுந்த பொருட்செலவில் மேற்கெள்ளப்பட்டும் அது போன்ற பியர்ப்ரஷ்சர் (அடுத்தவர்களுக்கான) பயணங்கள் ஏதாவது நமக்கு படிப்பினைகளை ஆழ் மனதில் விட்டுச் செல்கிறதா என்றால் மிகவும் சொற்பமானவர்களே அதனை பெற்றதாக ஒப்புக்கொள்வோம்.
இப்படியான பொது கற்பனைவாத விதைப்புகளே பொதுவான விசயங்களான மதம் பொருட்டோ, ஒரு கார்ப்பரேட்டின் விற்பனை சார்ந்த மூளை மழுங்கடிக்கும் வியாபார யுக்தி பொருட்டோ கூட ஒற்றிணைந்து நம்மை இயக்கிச் செல்கிறது என்கிறார் ஆசிரியர். இதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டுமாயின் தனிப்பட்ட முறையில் இவைகளை கேள்வி எழுப்பி அதன் பொருட்டே நம்மை வெளிக் கொண்டு வர முடியும் என்கிறாரவர்.
பெரும்பாண்மையானவர்களால் ஒரு கதை நம்பப்பட்டு அதுவே சிறந்தது என்று எனும் பொழுது வெகு சிலர் தன்னிச்சையாக அதிலிருந்து வெளிக்கிட்டு, மற்றவர்களுக்கு தான் அறிந்ததை உணர்த்தி அதிலிருந்து மீட்டெடுக்க, ஏற்கெனவே நம்பிக்கொண்டிருக்கும் கதையை விட இன்னும் வலிமையான ஒரு கதையை கட்டமைப்பது அவசியமாகிறது (உ.தா: இன்றைய இந்திய அரசியலை எடுத்துக்கொள்ளலாம் - செக்கியுலர் வெர்சஸ் அடிப்படைவாதம்).
பெரிய அளவில் இன்றும் அடையாளப் பேணல் கருதி கண்டங்களை தழுவி நிற்பது மதங்கள். இது பல தரப்பட்ட மனிதர்களையும் ஒரு சில குறிப்பிட்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒன்றிணைத்து கட்டி இழுத்துக் கொண்டு போக ஒரு கால கட்டத்தில்உருவாக்கப்பட்டது. இதன் தேவை மனித ஓட்டத்தில் அவனுடைய சிந்தனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த கதையின் ஆணி வேர் சற்றே நெகிழ்ச்சியுறும் பொழுது, அந்த சித்தாந்தின் மீதான நம்பிக்கை பெருமளவில் மக்களிடத்தில் குறைந்து அது காற்றோடு கரைந்து காணாமல் போய்விடும் வாய்ப்புண்டு.
இந்த கால கட்டத்தில் நமக்கு இன்னொரு புனைவு தேவை. அது இந்த ஒட்டுமொத்த மனித குலத்தையும் அடுத்தக்கட்ட பரிணாம நவீனப்படுதலுக்கு தயார் படுத்துவதாக அமைய வேண்டும். எந்த கதை சொல்லி எதிலிருந்து ஆரம்பிப்பார்?

Monday, April 22, 2019

பொன்பரப்பி கலவரமும் சேப்பியன்ஸ் நூலும்: Sapiens - 5

நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5
ஹோமோ சேப்பியன்ஸ் நூல் எனக்கு என்னவோ மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டு பள்ளி மேற்படிப்பு படித்த அனைவரும் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாகப்படுகிறது.
இப்பொழுது நான் அந்த புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாகரீகங்களுக்குள்ளும் எப்படி சமூக அடுக்கதிகார முறை கட்டமைக்கப்படுகிறது, அது எதன் பொருட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது, அதன் பயன்பாடு என்ன என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
அந்த பக்கங்கங்களை வாசிக்கும் பொழுது எதற்காக இந்த சமூகம் இப்படி ஏற்றத் தாழ்வுகளுடன் இயங்குகிறது என்ற எளிய கேள்விக்கு பதிலுரைக்கிறது. முதல் கட்ட அறிதலின் பொருட்டு வாசிப்பை நாடுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அத்தியாயம்.
வரலாறு தோறும் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஓரளவிற்கேனும் சமப்படுத்த பல அவதார புருஷர்கள் வர வேண்டியத் தேவைதான் என்ன, எதன் பொருட்டு அவர்கள் தொடர்ந்து பேசி, சண்டை செய்ய வேண்டியுள்ளது என்பது அனைத்தும் நமக்கு விளங்கிவிடும் இந்தப் பக்கங்களை நாம் கடந்துவிடுவதற்குள்.
சமூக அடுக்கு "ஆண்டான் அடிமை" என்ற எளிய கட்டமைப்பில் அதற்குள் பல அடுக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பயன் உயர் அடுக்கில் இருப்பவர்கள் கீழ் அடுக்கில் உள்ளவர்களை சுரண்டி கொழுத்து வாழ்வதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை நிறுவி அதன் பயன்பாட்டினை அறுவடை செய்ய பல கட்டுக்கதைகள் தேவைப்படுகிறது. அதனயொட்டிய புனைக் கதைகள் மனிதர்களின் ஆழ் மனதில் நம்பிக்கை நச்சுக்களாக விதைக்கப்பட்டோ (வர்ணாஷ்ரம), சட்டங்களாக இயற்றியோ (வெள்ளையர்களும், கருப்பினத்தவர்களும் சமமல்ல, ஏழை, பணக்காரர்களின் வாழ்வமைவு ஆசீர்வதிக்கப்பட்டது) காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
இந்த கட்டமைப்பை விளக்க முற்படும் போது இந்த நூல் மிக தாராளமாக இந்து மதத்தின் பால் பிறந்த சாதிய சமூக அடுக்கு யாரால், எதற்கு உருவாக்கிக் கொள்ளப்பட்டது, அது எவருக்கு பயனளிக்கும் விதத்தில் இன்றும் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சமகால இந்திய அரசியலமைப்பைக் கொண்டு மிகத் தெளிவாக விளக்க எடுத்து கையாண்டுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.
இந்த புத்தகம் உலகம் முழுதிலும் மில்லியன் கணக்கில் விற்பனையாகி இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் சமூக அடுக்கு உருவாக்கத்திற்கு பின்னான அயோக்கியத்தனங்களை, சூழ்ச்சிகளை அப்பட்டமாக அடிக்கோடிட்டு இந்த உலகத்திற்கே புரிய வைக்க இந்துக்களின் சாதியக் கட்டமைப்பை பயன் படுத்திக் கொண்டுள்ளார்.
தீட்டு, தீண்டாமை, தூய்மை, மோலோன், கீழோன் அனைத்தும் ஒருவனை தரம் பிரித்து எவனை எந்தளவிற்கு வளர்ந்து வர இடம் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்கும், ஒவ்வொரு முறையும் பின்புலத்தை தோண்டித் துருவி அறிந்து கொள்வதற்கு பதிலாக கூட்டு அடுக்குகளைக் கொண்டு பிரித்து வைத்து விட்டால் பொதுப் புத்தியில் அதற்குண்டான புத்திகளை இவன் உள்ளடக்கியவன் என்ற கற்பிதங்களையும் நம்ப வைத்து அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயங்க வைக்க முடியும் என்பதே இதன் ஏற்பாடு.
இப்பொழுது உதாரணமாக ஒன்று பார்ப்போம். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான். நல்ல திறமையானவன் ஏதோ ஒன்று அவனுடைய இரத்தத்திலோ அல்லது மரபணுவிலோ இருக்கிறது அதனால் தான் கருப்பர்களை விட அதி புத்திசாலிகளாக, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறியும் அறிஞர்களாக இருக்கிறார்கள் என்ற வாதம்.
இரண்டு, நம்ம ஊரில் ஒரு குறிப்பிட்ட சாதி இனங்களில் பிறந்த குழந்தைகள் இசையிலும், நாட்டியத்திலும் மிக்க திறமை உள்ளவர்களாக இருக்கக் காரணம் இறைவனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அந்த குலத்தில் பிறப்பதால் தான் என்றொரு வாதம்.
ஆனால், இந்த இரண்டு கதைகளுக்குப் பின்னாலும் மாபெரும் உழைப்புச் சுரண்டலும், சூழ்ச்சியும் புதைந்து கிடக்கிறது என்கிறார் இந்த நூலாசிரியர். பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் மெருகேற்ற மெருகேற்ற அவைகளை நம்மால் வார்த்தெடுத்துக் கொள்ளும் திறமைகளை உள்ளடக்கியே பிறக்கிறது, ஆனால் அதற்குரிய வசதி, வாய்ப்பு அதற்குண்டான நேரத்தை எப்படி வழங்குவது?
இங்குதான் அந்த சமூக அடுக்கமைவு ஒரு சாரருக்கு எளிய வழியையும், அங்கீகரிப்பையும் கொடுத்து மெருகேற்றிக் கொள்ள, மேல் நிலைக்கு செல்லும் படியாக கட்டமைக்கப்பட்டு பயனளிக்கிறது. பயனளிக்காமல் போகக் கூடிய அந்த போர்வை சாதி'யம் கொண்டு மற்றவர்களிடத்தே கண்டறியப் படுகிறது.
இந்த சாதிய கட்டமைப்பு உடையாமல் கட்டிக் காக்கப்படுவதின் சூட்சுமம் இதுதான். இப்போ சாதி மறுப்பு மணங்கள் பெருகும் போது இந்த அடித்தளம் சுக்கு நூறாக தகர்ந்து விடுமல்லவா? தகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் தான் ஏனைய சமூக அநீதிகள் அடங்கி இருக்கிறது.
இப்போ புரிகிறதா இந்த நவீன தீண்டாமை உலகில் நீட், கேட் என்ற வடிகட்டல்கள் எதற்கு என்று? அவதாரப் புருஷர்கள் இத்தனை வரலாற்று ரீதியாக சக்தி படைத்த ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தை வெற்றியடைய வேண்டுமாயின் எத்தனை பெரிய பரந்து பட்ட பொது நோக்கும், கட்டற்ற பரிவும், விசாலமான பார்வையும் கொண்டிருக்க வேண்டும்.
நமக்கு அந்த முழுப் பயன்பாடும் வந்து கிட்டுவதற்கு முன்னதாகவே பல கட்டுக்கதைகளின் மூலமாக அவர்களுடைய பங்களிப்பு முடக்கப்படுகிறது. அந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது போராட்டம் மீண்டும் ஒன்றாவது படிக்கி சறுக்கி வந்து நின்றிருக்கும்.
வரலாற்று புத்தகங்களை எந்த கரையிலிருந்து நின்று கொண்டு மீள் வாசிப்பு செய்கிறோமென்பதும், இது போன்ற மானுடவியல் சார்ந்த புத்தகங்களை வயதோடு வாசித்து அவரவர்கள் நிலையில் தெளிவடைதும் முக்கியமாகிறது.
ஏனெனில் வரலாற்றில் எப்படி விளையாண்டோம் என்பது ஒரு பொருட்டே அல்ல! பிழைத்து அடுத்த கட்டத்திற்கு நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்வுச் சூழலைக் கொடுத்துச் செல்கிறோமா என்பதே படிமலர்ச்சியில் நம்மை படியெடுக்க இந்த இயற்கை வைத்திருக்கும் ஒரே ரூல்ஸ்!

Related Posts with Thumbnails