Sunday, January 27, 2019

உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

இதுவே முதல் முறை கட்டாரின் வழியாக இந்திய பயணம் மேற்கொண்டது. ஒன்று எனக்கு வயசாகி இருக்கணும் இல்லன்னா எனக்கு தோன்றுவது போலவே தோகாவிலிருந்து அட்லாண்டாவை அடைவது மிக... நீண்ட அயற்சியைக் கொடுக்கக் கூடியதாக உள்ளதுன்னு மற்றவங்களுக்கும் தோன்றக் கூடியதாக இருக்கணும்.
அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நீண்ட பயணத்தை எப்படி பயனுள்ளதாக ஆக்கிக்க முடியும் என்பதின் பேரில் வாசிப்பிலுள்ள சேப்பியன்ஸ் புத்தகம் துணைக்கு வந்தது. இன்னொரு பத்து பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்த உடனேயே எனக்கான தனிப்பட்ட எண்ண வெடிப்புகள் நிகழத் துவங்கியது.
வாசித்துக் கொண்டிருக்கும் பக்கங்கள் எது சேப்பியன்ஸை ஏனைய மனித இனங்களிலிருந்து பிரித்து உலகம் தழுவிய முறையில் ஒரே அடிப்படை கருத்துருவாக்கத்தின் மீது நம்மை நிற்க வைத்து, பிற ஆதி மனித இனங்களை பின்னுக்குத் தள்ளி நம்மை முன்னேறச் செய்தது என்று பேசுகிறது.
அதற்கு அடிப்படையே மொழி என்கிறது இந்த புத்தகம். அதனை நிரூபிக்கும் வாக்கில் அருமையான உரையாடலோடு முன் நகர்த்துகிறார் புத்தக ஆசிரியர்.
ஏனைய உயிரினங்களும் அவையவைகளுக்கேயான சங்கேத ஒலி குறிப்புகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்து தங்களின் பாதுகாப்பை, உணவு தேடும் யுக்தியை பரிமாற்றம் செய்து தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. இருப்பினும் சேப்பியன்ஸ் அடுத்தக் கட்டத்திற்கு எப்படியாக தங்களை நகர்த்திக் கொண்டது? என்பதே அடிப்படைக் கேள்வி.
நெருப்பின் பயன்பாட்டை தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தது ஒரு வகையில் பெரிய தாண்டல் என்றால், நம்முடைய சிக்கலான மொழியறிவு இரண்டாவதாகும்.
இந்த மொழியறிவே கூட சிக்கலான கட்டமைப்பை பெறக் காரணம் நம்முடைய பொரணி பேசத் தக்க கற்பனா வாதமே முதன்மைக் காரணம் என்பதாக சொல்லி விரிகிறது இந்த புத்தகம்.
உதாரணமாக, நம்மை விட குறைந்த பட்ச உரையாடலைக் கொண்ட குரங்கினங்கள் ஆபத்து/உணவு அங்கே இங்கே என்று சுட்டிக்காட்டுக் கொள்ள ஒரு சில ஒலிக்குறியீடுகளின் வழியாக மட்டுமே தங்களது குழுவினருடன் கடத்திக் கொள்கிறது. ஆனால், சேப்பியன்ஸ் எங்கே உணவு இருக்கிறது, அதனை நெருங்கும் போது உள்ள ஆபத்து, அதன் பரப்பிடம், அருகில் என்ன இருக்கிறது, எப்படியாக சென்றால் அந்த இடத்தை விரைவில் அடையலாம், ஆபத்தை தவிர்த்து மீண்டு வருதல் என்பதாக உரையாடத் தலைப்படும் பொழுது எத்தனை மொழியறிவு தேவைப்படுவதாக உள்ளது.
இங்கிருந்துதான் சேப்பியன்ஸ்க்கு இரண்டாவது பெரிய தாண்டல் கிடைத்தது. இந்த உரையாடல், எதார்த்த, கற்பனை, புனைவு என்று பல நிலைகளில் விரிந்து விரிந்து சிறு குழுக்களை இணைக்கத் தக்க பெரிய பொய்களை உருவாக்கி கற்பனை கடவுளர்களை, நிறுவனங்களை எழும்பச் செய்து பரந்த நிலப்பரப்பில் வாழும் ஏனைய குழுக்களையும் இணைத்து ஒரு ஐடியாவிற்கு கீழ் வாழும் எதிரிகளற்ற வாழ்விடங்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
இதுவே நமக்கு முன்னால் வாழ்ந்த பிற மனித இனங்களுக்கு சாத்தியப்படாமல் போனது அவர்களின் இருப்பை ஆழ நிர்மாணித்துக் கொள்வதிலிருந்து தவறச் செய்தது.
புனைவுக் கதைகளே, உடல் இல்லாத ஒரு நிறுவனத்திற்கோ (நல்ல கதை சொல்லிகளே முதுகெலும்பு), கடவுளுக்கோ (சடங்குகள், சம்பிரதாய கட்டுப்பாட்டு புனைவுகளே முதுகெலும்பு) அல்லது நாட்டிற்கோ எல்லைகளை வகுத்து (வாழ்வு சார்ந்த விழுமியங்களை கடைபிடிப்பதாக சொல்லப்படும் புனைவுகளே முதுகெலும்பு) அதற்கென ஓர் உடலைக் கொடுத்து அது இருக்கிறது என்று நம் அனைவரையும் அதன் பின்னால் நிற்கச் செய்து ஒரு பெரும் இனக்குழுவாக கட்டி வைத்திருக்கிறது.
இந்த புனைவுக் கதைகள் சிக்கலான மொழிகளின் ஊடாக சேப்பியன்ஸ்களின் மனங்களில் விதைக்கப்படுவதின் பொருட்டே நம்முடைய இனம் தனித்துவம் பெற்றதாகிறது.
இப்பொழுது நான் நடு வானில் பறந்து கொண்டே இந்த சிந்தனை சிக்கல்களில் என்னை அமிழ்த்தி மீட்டெடுக்கும் வகையில் பறத்தலின் அபாயக் கவலைகளை மறக்கடித்தது கூட அதே கற்பனைப் புனைவுதான்.
பறத்தல் ஆபத்தற்றது என்ற எதார்த்த கற்பனைக் கதைகள் நன்றாகவே ஆழ விதைக்கப்பட்டதும் அது அனைத்து சேப்பியன்ஸ்களின் நம்பிக்கை பெற்றதுமேயாகும்.
இதன் ஒழுங்கிலேயே சென்று யோசித்தால் திருமணம், விழாக்கள், நல்ல பெயரைக் கொண்ட நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு கம்பெனி அனைத்துமே புனைவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பதாகிறதுதானே?
எனில் எது உண்மை? எல்லைகளற்ற நிலமும், இந்த மரங்களும், ஆறுகளும் மலைகளும்தான். மற்ற அனைத்தும் ஓர் ஐடியாதான். அதுவே நம்முடைய இருப்பை முழுமையாக எத்தினிக் (இனப்) போரில் விழுந்து அழிந்து விடாமல் இருக்க தப்பி பிழைத்துக்கிடக்க வைத்திருக்கிறது.
இந்த கதைகளே பெருமளவில் கேள்விகளற்று விதைக்கப்படும் போது பிற்காலத்தில் நமக்கு ஆப்பு வைக்கக் கூடியதாகவும் அமையக் கூடும். அது எப்படி என்று மேல் வாசிப்பில் பிரிதொரு நாள் என்னுடைய எண்ணங்களையும் இணைத்துத் தருகிறேன்.

Link for Part 3: ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens-3

Saturday, January 26, 2019

மகப்பேறு மரணங்கள் ஒரு பரிணாமப் பார்வை: Sapiens வாசிப்பு - 1

இந்த முறை சென்னை புத்தகத் திருவிழாவில பல முக்கியமான புத்தகங்கள் வாங்கினேன். அதில் யுவால் நோவா ஹராரி எழுதிய "சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு" ம் ஒன்று.

இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் மொழி பெயர்ப்புகள் மிகத் தேவையான ஒன்று என்று பல இடங்களில் உணர்கிறேன்; அதுவும் 25 பக்க வாசிப்புக்குள்ளாகவே இந்தப் புத்தகம் அதனை உறுதி செய்கிறது!

ஏனெனில் பரிணாம உயிரியலின் (evolutionary biology) அடிப்படை இயங்குதளம் பற்றிய அறிவு போதுமானதாக இருக்கும் எனக்கே இந்த நூல் பல இடங்களில் அட என்று நிமிர்ந்து உட்காரச் செய்வதாக உள்ளது.

இதன் பின்னணியில் அந்த வாசிப்பே அற்ற மற்ற துறை சார்ந்த வாசகர்களுக்கு எது போன்றதொரு வாசிப்பனுவத்தை வழங்கக் கூடும் என்று எண்ணும் பொழுது அறிவியல், வரலாறு சார்ந்த தமிழ் மொழி பெயர்ப்புகள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அறிவுசார் நிலையில் நகர்த்தக் கூடிய முக்கிய கருவியாகும் என்று தோன்றச் செய்கிறது.

இந்த புத்தகம் இன்றும் நாம் எதிர் கொள்ளும் பல நிகழ்கால உடலியல், உளவியல் சார்ந்து நம் கைகளுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளுக்கு எதுவெல்லாம் காரணிகளாக இருந்து செயல்படுகிறது என்பதை ஆழமாக அலசிச் செல்கிறது.

உதாரணமாக மகப்பேறு சமயத்தில் ஏன் தாய் சேய் மரணம் நிகழ்கிறது என்பதை நம்முடைய எழுந்து நின்று இரண்டு கால்களில் (bipedal) நடக்கும் காலத்திலிருந்து தொடங்கி, நம்முடைய மூளையின் அளவு, எடை என பிணைத்து பிறப்புறுப்பின் குறுகலே அதற்கான மூலம் என்று நம்மை புரிந்து கொள்ள கோரி நிற்கிறது. இங்கே உடனே ஏன் மகப்பேறு நேரத்தில் மருத்துவர் பேறு வழியை பெரிதாக்க கத்தி வைத்து சிறிது கிழித்து விடுகிறார் என்பதற்கான பரிணாம வழி விடைகிடைக்கக்கூடும்😲

மூளையின் எடையே ஒரு சுமை அதனை இந்த பரிணாமம் நம் தலையில் தூக்கி வைத்து உடலின் 25% சக்தியை உட்கொள்ளும் பேர்பசி கொண்ட வஸ்துவை, நாம் வேலை வாங்க சிந்தனையின் வீச்சம் அதிகரிக்கச் செய்தோமெனவும் அதுவே ஏனைய விலங்குகளைக் காட்டிலும் அதி வேகமாக முன்னேறி பரிணாம உச்சாணிக் கொம்பில் அமர வழி வகுத்தது எனவும் புரிந்து கொள்ளச் செய்தது.

இல்லையென்றால் வேட்டையாட உடல் திராணியற்ற நிலையில் ஊனுண்ணி சாப்பிட்டு மிச்சம் வைத்த மாமிசத்தை கழுதைப் புலிகள் வரண்டியது போக, நாம் இன்னமும் எலும்பை உடைத்து மஜ்ஜை உண்ணும் நிலையிலேயே இருந்திருப்போம்தானே.

அதே மூளையின் எடையே நம் தோள்களுக்கு மேல் வைக்கப்பட அதன் இன்னலாக கழுத்துப் பிடிப்பும், முதுகு வலியும் வரக்காரணம் என்று சொல்லும் போது, நிறைய உடல் சார்ந்த உபாதைகளுக்கு காரணம் கிடைக்கிறது.

அப்படியே தொடர்ந்து ஏன் பிற பாலூட்டிகளில் முழுமையாக வளர்ச்சியுற்ற குட்டி பிறந்து விழுந்த சில மணிதுளிகளுக்குள்ளாகவே எழுந்து நின்று நடக்கவும், சில வாரங்களுக்குள்ளாகவே இரைதேடிச் செல்லத் தக்கதாகவும் அமைந்து விடுகிறது எனக் கேள்வி எழுப்பி பதிலாக மனித மூளையின் வளர்ச்சி அளவும், கருப்பையில் சிசு இருக்கும் காலளவும், பிறக்கும் பொழுது பிறப்புருப்பின் குறுகல் கூறுகளுமே பரிணாமத்தில் இன்றளவும் ப்ரீமெச்சூர்டுத் தனமாக மனிதக் குழந்தைகள் ஈன்றெடுப்பிற்கான காராணமென சுட்டிக்காட்டுகிறார்.

இதுவே மனிதன் ஒரு நாகரீமாக பிற்காலத்தில் பரிணமிப்பதற்கான முதன்மைக் காரணி என்றும் அடையாளப்படுத்துகிறார். ஏனெனில் மனிதக் குழந்தைகளின் சார்ந்து வாழும் ஆண்டுகள் நீண்டிருப்பதால் அதற்கு குழுவாக சார்ந்து வாழும் ஒரு சூழல் தேவைப்படுகிறது, பின்னே அது ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டு, பிற்சேர்க்கைகளான மதம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ற கற்பிதங்களை அளவிற்கு அதீதமாக ஏற்றிக் கொண்டு எப்படி நம்முடைய இருப்பையே இன்று கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டது சேப்பியன்ஸ் என்பதாக இந்தப் புத்தகம் பின் வரும் பக்கங்களில் பேசுமென்று நினைக்கிறேன்...

அப்பப்போ எழுதுவேன் as I further continue reading this book, I suppose! 😏 Part 2 Link : உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

Related Posts with Thumbnails