Showing posts with label தாமரை. Show all posts
Showing posts with label தாமரை. Show all posts

Friday, July 10, 2009

தமிழ் பெரும் விழா - தாமரை - வைரமுத்து: Fetna 2009 - II

அடுத்த நாள் விழாவை ஓரளவிற்கு முழுமையா பார்த்த மாதிரி இருந்தாலும், காலையில 9.30 மணிக்கு முன்னால் வரைக்கும் நடந்த நிகழ்ச்சிகளை பார்க்க முடியல [எனது முதல் நாள் அனுபவம் இங்கே]. ஏன்னா வீட்டிலருந்து கிளம்பி வந்ததே தாமதம். நான் வந்து அமர்ந்த சிறிது நேரம் கழிச்சு ஐயா சிலம்பொலியார் அவர்கள் பேசக் கேட்டேன். அவர் நம் தமிழ்ப் பெயர்கள் என நம்பி வைக்கும் சில பெயர்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று தமிழிலாக்கி காமித்த விதம் அரங்கையே வெடிச் சிரிப்பு சிரிக்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து ஒரு அரட்டை அரங்கம் பாணி நிகழ்ச்சி ஒன்று. அது ஓடிட்டு இருக்கும் போது என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரை ஆவலுடன் கவிஞர். தாமரை வந்திருக்கிறாரா என்று கேட்டேன் அதற்கு அவர் வரவில்லையென்று நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டே நிகழ்ச்சி நிரல் அட்டையின் மீது தனது அலைபேசியின் வெளிச்சத்தை நிரப்பி தேடி இல்லையென்றார்.

இதென்ன புதுக் கதை! நான் இந்த விழாவிலே நண்பர்களன்றி தாமரைக்காகவும் தான் இத்தனை நெருக்கடியிலும் அங்கு சென்றேன். ஆனால், உட் கட்சி பூசலோ இல்லை வேறு என்ன காரணத்தாலோ தாமரை கழட்டி விடப்பட்டிருக்கிறார் போல. எனக்கு ஒரு ஆள் மேலதான் கண்ணா இருக்கு, பார்ப்போம்; பின்னால் என் கெஸ் சரியா என்று. உண்மை பேசுற எவனுக்கும் கிடைக்கும் மரியாதை இப்படியாகத்தான் இருக்க முடியுமென்று பக்கத்து இருக்கையாளரிடம் முனகிக் கொண்டே சீட்டில் நெளிந்தேன்.

அங்கயே பல விதப் பட்ட எண்ணங்களால் சிக்குண்டது மனது. என்ன உலகமிது? மனித மனம் எப்பொழுதும் உண்மைகளை மறுத்து, போலியாக நடித்துக் கொள்வதிலயே அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. போலி மனிதர்கள் தன் நிறம் உயர்த்தி காமிக்க முகச் சாயங்களுக்கு கீழ் ஒளிந்து, உதட்டில் இனிப்பு தடவிய வார்த்தைகளைக் கொண்டு பேசும் விற்பனை மனிதர்களை அப்படியே நம்பி தெரிந்தே வாங்க எத்தனிக்கும் நம் மனது, தெரிந்தே, உண்மை பேசுபவர்களை தவிர்க்க முனைகிறதே, இது எதனால்? பிரச்சினைகளிலிருந்து தன்னை விளக்கி வைத்து, ஒரு பாதுகாப்பான இலக்கிய, காலச்சார காவலன் அவதாரம் எடுக்கத்தானோ? இது எப்படி, தனியொருவனாக தன்னுள்ளே என்றேனும் ஒரு நாள் உண்மையான "அவனை" சந்திக்கும் பொழுது அவன் வாழ்வே அவனை பார்த்து நகைப்பதிலிருந்து விலகி நிற்பதாக அன்றும் தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியும்? இப்படியே எண்ணச் சுழிப்பில் சிக்குற எத்தனித்தது என் மனது...

பின்பு மதிய உணவு இடைவேளை, அதனின்று எனை மீட்டது. சாப்பாடு அசத்தல்! செட்டிநாடு போல, நல்லாவே பண்ணியிருந்தாங்க. அங்கே ஒரு ஜிகு, ஜிகு பிரபலம் கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில், மேஜைக்கு மேஜைக்கு "நீங்க, ரொம்ப அழகா இருக்குறீங்க" பாட்டு பாடியிருப்பாங்க போல சுளுக்காம சிரிச்சிட்டே எதிர்பாட்டு "நன்றிங்க" சொல்லியிருப்பார் போல, அதப் பார்த்திட்டே நான் அரை "நான்(bread)" சாப்பிடாம தட்டிலயே விட்டுட்டேன். பிரபலம்ங்கிற வேலை ரொம்ப கஷ்டம்தானோ!

சாப்பாட்டிற்கு பிறகு நான் ரொம்ப சிலாகிச்சு பார்த்த ஒரு பேச்சுன்னா அது மனித உரிமை குழுவிலிருந்து வந்து பேசிய ஒரு வெள்ளக்காரம்மா டாக்டர் Ellyn Shander. அரங்கத்தில் இருந்த சில மக்களை நெளிய வைச்சு, மனசை நெருடுகிற ஸ்லைடுகளை இது வரைக்கும் நம்மக்களில் சிலர் பார்க்கவே கூச்சப்பட்ட(பயந்த) படங்களையும் வழங்கி அந்தம்மா பாதிக்கப்பட்ட ஈழ மக்களோட தன்னை இணைச்சு பேசிய விதம் என்ன சொல்றது. ம்ம்ம்.

அந்தம்மா இந்த ஈழ அவலத்தை தன்னோட இனமான யூதர்கள் , நாசி காலத்தில் பட்ட அவஸ்தைகளுக்கும், வேதனைக்களுக்கும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல இந்த ஈழ நிகழ்வு என்று, ராஜபக்சாவையும், ஹிட்லரையும் ஒரே ஸ்லைடில் காமிக்கும் பொழுது ஏன் இதனை இந்த ஒட்டு மொத்த உலகமும் அவ்வாறு கண்ணுறவில்லை என்ற கேள்வியே தொக்கி நின்றது என் முன்னால்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த உணர்ச்சிகளோட பேசிக் கொண்டே சென்றார்கள். அப்பொழுதும் நினைச்சேன், இந்த சில்லூண்டி ஊர்க்கார சினிமாக் காரய்ங்க எல்லாரையும் கொண்டு வந்து முன்னாலே அமர வைச்சிருக்கலாம்னு. உண்மையான பாடத்தை ஒரு முறையாவது கேக்க வைக்க. தன் உரையை முடிப்பதற்கு முன்பாக பல முறை அரங்கம் உறங்குவதாக உசிப்பேத்தி மக்கள் அனைவரையும் "Next year in Eelam" என்று மூன்று முறைக்கும் அதிகமாக கூற வைத்து அரங்கத்தையே நடு நடுங்க வைத்துவிட்டார்.

உரையின் இறுதியில் அவரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கெளரவிக்கும் விதமாகவும் எல்லாரும் எழுந்து நின்று கை தட்டியது அரைகுறை மனதோடும், தர்மசங்கடத்தோட ஏண்டா வென்று நினைத்தவர்களையும் கூட எழுந்து நிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தியது என்றால் மிகையாக இருக்க முடியாது.

அப்படியாக ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார், எனக்கு அந்த டாக்டர் பேசப் பேச கண்டிப்பாக நம்மூர் கவிஞர் நெளிந்திருக்கக் கூடுமென்றே எண்ணச் செய்தது. அவர் வேறு யாருமல்ல நம்ம கவிப் பேரரசு வைரமுத்து அவர்களேதான். யார் அந்த நிகழ்ச்சி நிரலை அப்படி அமைத்தார்களோ தெரியவில்லை, ஆனால், கண்டிப்பாக கவிஞருக்கு ஒரு செம ச்சேலஞ்சாக அமைந்திருந்தது அந்த மேடை, டாக்டர் Ellyn Shanderக்குப் பிறகு. எனக்கு அப்பொழுதே தோன்றி விட்டது கவிஞர் கடுமையாக இன்னமும் சீரவேண்டும் டாக்டரின் இருப்பை அந்த அரங்கம் சிறிது நேரம் மறக்க வேண்டுமானலென்று.

ஆனால், இம் முறை அவரின் சீற்றம் வயதானால் காடுகளில் வசிக்கக் கூடிய புலிகள் பற்களை, நகங்களை, உடல் வலிமையை இழந்து நிற்கும் பட்சத்தில் எளிமையான விலங்குகளை கொய்துதான் தனது இருப்பை நகர்த்த முடியும். அது போலவே, இவரும் ஏதோ வந்துட்டேன் எல்லாரும் பார்த்துக்கோங்க; நான் தான் அந்தக் கவிஞன் அப்படின்னு மேடையேறி காமிச்சிக்கிட்ட மாதிரியும், ஃபெட்னா மலர் போட்டவர்களை தமிழ் வளர்க்க வேண்டுமானல் இப்படி வரலாறு புறக்கணிக்கப்படக் கூடாதென்று கூறி அண்ணா நூற்றாண்டு விழா மலரில் பசும்பொன் முத்துராமலிங்கம் இடம்பெறவில்லையென்று சீறினார். மேலும் பல சில உள்குத்துக்கள்!

பின்பு திருவிளையாடல் கே.பி சுந்தரம்பாள் பாட்டியை ஞாபப் படுத்துவதைப் போல ஒன்று... இரண்டு... மூன்று... என்று வரிசைப் படுத்தி கூறியதெல்லாம் "நேரக் கொலை" செய்வதின் பொருட்டாகவே நினைக்கச் செய்தது. மொத்தத்தில் என் பணம் அதை நோக்கிச் செல்லவில்லை எனும் போது சற்றே ஆறுதலாகவும் இருந்தது.

அவரின் உரை முடிந்ததுமே நான் மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளிக் கிளம்பி மீண்டும் நுழைவு வாயிலுக்கு வந்த பொழுது பயங்கர "எஸ்கார்ட்களுடன்" கவிப் பேரரசு தன்னைச் சுற்றி நிற்பவர்களையெல்லாம் எறும்புகள் கணக்காக பார்க்காமலயே என்னமோ ஒரு இறுக்கம் ஆழ்ந்து எதனையோ கேட்டுக் கொண்டே நடப்பதனைப் போல நடந்து சென்றதை ஒரு சில விநாடிகள், நானும் நடந்து கொண்டே பார்த்து தொலைத்து விட்டு வீட்டிற்கு வந்தடைத்தேன்.

காரை ஓட்டிக்கொண்டே சிந்தனைக்குள் பயணிக்க வேண்டியாதாகிப் போனது. இந்த மனிதர் அன்று கிராமத்து மனிதனின் எளிமைக்குள் புகுந்து தனது வாழ்வு எனும் பெரும் சமுத்திரத்தில் நீந்தத் தொடங்கிய காலத்திற்கும் இன்று நிற்கும் புள்ளிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்ணுற்றால் விரிசல் இரு பெரும் கண்டங்கள் விலகிப் போன தொலைவாகப் படுகிறதெனக்கு. மனிதனின் உயரங்களின் நிலை மாற மாற, மனித நிலைகளும் பல விசயங்களை இழக்கத்தான் நேரிடுகிறதோ. சிலர் தனது தூக்கத்தை, சிரிப்பை, சந்தோஷத்தை, சிலர் நல்ல நண்பர்களை, நல்ல தன்னிடம் உள்ள வாழ்வு நெறிகளை இப்படி... இவரின் முகத்தில் நிலவிய இறுக்கத்தை கவனித்தால் பெரும் நிகழ்வுகள் இவரின் எளிமையை சிதைத்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது...

அதனைத் தொடர்ந்து இரவு உணவும், பாட்டுக் கச்சேரியும் போல. ஆனால், எனக்கு அதுக்கு மேல தாங்காது என்பதால் கிளம்ப வேண்டியதாப் போச்சு. இத் தருணத்தில் இத்தனை எண்ணங்களையும் எனக்கு வாய்க்க பேருதவிய நண்பர் பழமைபேசிக்கு ஒரு நன்றி.

விழா சிறப்பாக நடந்தேற உழைத்தவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்!

நிறைய தமிழ்பதிவர்கள் வந்திருப்பாங்க போல, ஆனா, என் கண்ணில எப்படியோ தட்டுப்படாம தப்பிச்சிட்டாங்க. அடுத்த முறை வைச்சிக்கிறேன். இத்தனைக்கும் பரவாயில்லாம ஒரு டி-ஷர்ட்தான் போட்டுருந்தேன் :-) .

Related Posts with Thumbnails