Tuesday, October 31, 2006

அமெரிக்காவில் இந்தியர்கள் : தருமியின் கவனத்திற்கு...!

எனக்கு எத பகிர்ந்துக்கிறது எதனை பகிர்ந்துக்ககூடாதுன்னு இன்னும் ஒரு தெளிவு பிறக்காத இந்த காலக் கட்டத்தில், தருமி இங்கே அமெரிக்கத் துளிகள் அப்படின்னு ஒரு பதிவு போட்டதினாலே இதனை பகிர்ந்து கொண்டேயாக வேண்டும் என்று தோன்றியதால் இந்த பதிவு. உங்களின் பார்வைக்கு.

எனக்கும் அமெரிக்கா வந்த புதிதில் தருமி கவனித்த விசயங்கள் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டு கேள்விகணைகளாக துளைத்தெடுத்தது உண்டு, மறுப்பதற்கில்லை. ஏன், சக இந்தியர்களை பொது இடங்களில் பார்த்தால் ஒரு நட்புணர்வுடன் கூடிய புன்முறுவல் பெறுவது ஒரு பெரிய விசயமாக இருக்கிறது? ஆரம்ப காலங்களில், அப்படி எதிர்பார்த்து மூக்குடை பட்டதுமுண்டு, மறுப்பதற்கில்லை.

இது ஒரு நல்ல மனோ தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த விசயமாக படவில்லையா? எனக்கு அப்படித்தான் தெரிகிறது. இருந்தாலும் எனக்கு கிடைத்த சில சொந்த அனுபவங்களை கொண்டு, இது போல் மற்றவர்களுக்கும் அப்படி நடந்திருந்தோ அல்லது காது வழி செய்தியாக கேட்டிருந்தோ சற்று முன்னெச்சரிகையாக அப்படி இருகிய முகம் கொண்டவர்களாக மாறிப் போய் நடந்து திரிகிறோமோ என்ற எண்ணத்தின் தாக்கம் இந்த பதிவுனை பதிவிட தூண்டியது.

கீழே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு பின்னூட்டம் 1997ல் நடந்தது. அதிலிருந்து எனக்கு கிடைத்த செய்தி, ஒரு மனிதருடைய அணுகு முறை அவரின் பிறப்பும், வளர்ப்பும், கல்வியும் மற்ற புற சூழ்நிலைகளை பொருத்தே அமைகிறது. இந்தியர்கள் பார்பதற்கு ஒரே மாதிரியான உருவமைப்பு வெளி நாட்டவர்களுக்கு காணக் கிடைத்தாலும், தனிப்பட்ட மனிதருக்கு அவரின் சொந்த மொழி, ஜாதி, படிப்பு, அந்தஸ்து மற்றும் இத்தியாதிகள் அவருடனேயே நாடுகள் தாண்டியும் ஒட்டிக் கொண்டு வருவது தவிர்க்க முடியாத ஒரு விசயமாக, அது ஒரு firmly embedded behaviorஆக பரிணமித்துக் கொண்டேதான் உள்ளது.

இப்பொழுது அந்த பழைய பின்னூட்டத்தைப் படியுங்கள்:

Thekkikattan said... Deiva,

ஓ, அந்த அனுபவம்பத்தி இங்கே கொஞ்சம் பகிர்ந்துக்க சொல்லிறீங்களா... செய்றேனே,

நான் அமெரிக்கா வந்த புதிதில் நான் இருந்த இடம் கொஞ்சம் அதீதமா வெள்ளைக்காரங்க வசிக்கும் பகுதி (long island, New York) , அதனால இந்தியர்களெ பார்க்கிறதே கொஞ்சம் கஷ்டமின்னு வச்சுக்கங்ளேன். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையிலெ ஒரு நாள் மிதிவண்டி போட்டு ஊர்வலம் வந்துகிட்டு இருக்கிறப்ப திடீர்னு ஒரு இந்தியா ஆள் ஒருத்தர் நம்ம சாயல்லே வீட்டுக்கு வெளியில ச்சேர் ஒண்ணு போட்டு உட்கார்ந்திருந்தார்.

எனக்கு அவரை பார்த்தவுடன் ரொம்ப உற்சாகமாகி மிதிவண்டிய அப்படியே சாச்சி போட்டுட்டு ஓடிப் போயி அய்யா, நீங்க இந்தியாவன்னு மூச்சிறைக்க கேட்டேன். அவரும் நிதானம மேலே கீழே பார்த்துப்புட்டு ஊருக்குப் புச்சா அப்படின்னு ஆங்கிலத்தில கேட்டுப்புட்டு நான் ஒரு மலையாளி, நீங்க தமிழா, அப்படின்னா, தமிழ் பேசுற மக்கள் இருக்கிற பக்கம போயி ஆத்மாவை கண்டுப் பிடிச்சுங்கன்னு சொல்லிட்டு பேச்ச முடிச்சுக்கிட்டாரு.

எனக்கு என்னட இதுன்னு ஆகிப்போச்சு, எவ்ளோ பேசவேண்டியிருக்கிற இடத்தில ஒரு மொழி வந்து புகுந்து காலிபண்ணிப் புடிச்சே அப்படின்னு ஒரே ஏமாத்தமா போயிருச்சு, இவ்வளவுக்கும் அவரு வீட்டுக்கும் நான் இருக்கிற வீட்டுக்கும் நடந்து போற தொலைவுதான்னு வச்சுக்கங்க.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு உலக அறிவு கிட்ட ஆரம்பிச்சு எப்படி நாம் மனிதர்கள் நமக்குள்ளேயே நிறைய பிளவுகளை வச்சுக்கிட்டு வெளியில வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். வெளுத்தது எல்லாம் பால் இல்லை என்கிற குழந்தை தனமான எண்ணத்திலிருந்து அடெல்ட் உலகத்துக்கு வந்துட்டேன் (அதிக மனிதனாக இராதே... உன் ஃபீலிங்க்ஸ் எல்லாம் கடலுக்கு அப்பாலே வச்சுக்கோ).

அதற்கு பிறகும் சில டெஸ்ட்களும் செஞ்சுட்டுத்தான், குஜாராத்தி மக்களோட இன்னபிற குரூப் இப்பிடி...

இப்ப எனக்கு நானே ஒரு நாடு, அதிலெ நானே எவெரித்திங்...

பி.கு: இதில் மாணவ உலகத்திற்கும், சாப்ட் வேர் மக்களுக்கும் பொருந்தாது.

இது அடெல்ஸ் ஒன்லி. ;-))

Monday, May 22, 2006


மேலே பேசப் பட்ட மனிதர் முதல் தலைமுறை, தனது உறவுமுறை அடிப்படையில் அமெரிக்கா குடிபெயர்ந்தவராக இருக்கலாம். அதனால் அவருக்கு ஏற்கெனவே இந்தியாவில் நல்ல உலக நடப்புகள் தெரிந்த நட்பு வட்டங்கள், கல்வி சார்ந்த உலகம் சுற்றும் நண்பர்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். அச் சூழலில் அவருடன் நான் கூறிய அத்துனை firmly embedded behaviorகளும் பயணித்து, காது வழி செய்திகளை கொண்டு, பிற இந்தியர்களை சந்தித்தால் keep it short என்ற அறிவுரையின் படி நடந்து கொண்டிருக்கலாம்.

புதிதாக வந்தவர்களுக்கு கொஞ்சம் மன ஆருதலும், சில நேரங்களில் சொந்த வீட்டு நிர்வாகத்திற்குகென (பலசரக்கு சாமான்கள் வாங்கும் கடை, அல்லது அங்கு சென்று வருவதற்கென வாகன வசதி இப்படி) பல ரூபங்களில் இன்னல்கள் இருக்கலாம். அப்படி அவர்கள் நெருங்கி வரும் பட்சத்தில் எப்படி பதிலுரைப்பது என்ற எண்ணமே கூட இருக்கலாம்.

இதிலும் இங்கு நீண்ட காலங்கள் வசிப்பவருக்கு, அது போன்ற சில சூழ் நிலைகள் அமையப் பெற்று அதற்கென இறங்கி வேலையும் பார்த்த பட்சத்தில் என்ன இருதியில் கிடைக்கிறது. கசப்பான அனுபவங்களாக கூட இருந்திருக்கலாம்.

எனக்கு சில அப்படியும் இப்படியும் கிட்டியது. அவைகளிலிருந்து சில. எனக்கு Long Islandல் இருந்த காலத்தில் ஒரு குஜாரத்தி குடும்பம் அறிமுகமானது, அதுவும் பேருந்து பிரயாணத்தின் போதுதான். அந்த மனிதர் தனது 50களின் தொடக்கத்தில் தனது பொறியாளர் வேலையையும், தனது துணைவியாரின் மேல் நிலை ஆசிரியப் பணியையும் இந்தியாவில் துறந்து விட்டு, தனது ஒரே மகனுக்கென அமெரிக்கா குடிபெயர்ந்தவர்கள். மிக்க கஷ்டம் இங்கே.

ஆரம்பத்தில் தனது சகோதரியின் வீட்டில்தான் இருந்தார்கள், ஆனால் எவ்வளவு நாட்களுக்கு ஒரு குடும்பத்திற்கே கார் ஓட்டி, தட்டு முட்டு சாமான்கள் வாங்குவதற்கு எடுத்துக் கொண்டு திரிய முடியும் இன்னொரு host குடும்பத்திற்கு. வந்த மூன்று மாதங்களிலேயே வெளியே வரும் சூழ்நிலை.

அந்த நேரத்தில்தான் என்னுடைய அறிமுகம் கிடைத்தது. பிறகு கிட்டத்தட்ட அந்த அறிமுகம் இரண்டு வருடம் தொடர்ந்தது. அவருக்கு வேலை முடிந்து வரும் பொழுது காரில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் இறக்கி விடுவது, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்குச் செல்லவும், பலசரக்கு சாமான்கள் வாங்கவும் என்று லிஸ்ட் கொஞ்சம் நீண்டுதான் இருந்தது.

இருப்பினும் நான் அங்கு இருந்த வரையிலும் பார்த்துக் கொண்டேன். பிறகு அங்கிருந்து இன்னொரு மாநிலத்திற்கு நாங்கள் வந்து விட்டதால், என்ன அவர்களுக்கு ஆனது என்று தெரியவில்லை. எனக்கு நடந்ததை மற்றவர்கள் அறிந்து கொள்ளும் பொழுது - இப்படியாக நடக்கலாம் என்ற அனுமானம் மற்றவர்களுக்கு.

பிறகு இப்பொழுது மிக அண்மையில் நடந்தது. இங்கு ஜியார்ஜியாவில், ஒரு நாள் என்றுமில்லாமல் பெட்ரோல் பங் ஒன்றில் ஒரு கோப்பை தேநீர் வாங்காலமென்று சென்ற பொழுது இந்திய இளைஞர் ஒருவர் காரில் அமர்ந்த படி செல் பேசியில் இருந்தார், அவரும் என்னை பார்த்திருந்ததால் கையசைத்துவிட்டு கடையினுள்ளே சென்று கொண்டிருந்தேன். ஆனால் அவர் பின்னால் வந்து தமிழிலேயே, நீங்கள் தமிழா என்று வினாவினார். நானும் ஆமாம் என்று ஆரம்பித்து அடுத்த பத்து நிமிடங்கள் தொலை பேசி எண்கள் பரிமாறிக்கொண்டு அன்று மாலை சந்திப்பதாக பிரிந்தோம்.

அவர் நான் இருக்கும் டவுனில் வேலை பார்பதற்காக வந்திருப்பதாகவும், தங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். நானும் எனது வீட்டில் தற்சமயத்திற்கு எனது தம்பியுடன் மட்டுமே இருப்பதால், வெளியில் தங்குவதற்கு பதிலாக எனது வீட்டிலேயே கொடுக்கும் வாடகையை கொடுத்துவிட்டு தங்கலாமே என்று கூறினேன். ஆனால், பார்ட்டி உஷார் பார்ட்டி போல (என்ன உஷாரோ, நானும் திருந்தாத ஜன்மம் :-)

பின்னால், அவர் வேலையில் ஏற்பட்ட பெரும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டு வேலையை வேண்டாமென்று எழுதி கொடுத்துவிட்டு (வேண்டாமய்யா என்று நாங்கள் சொல்லியும்), இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே அலுவலத்திற்கு செல்லும் பொழுது, போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். அங்கிருந்து எனக்கு தொலைபேசி வருகிறது. என்னை விட்டால் அவருக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை என்றும், எப்படியாவது தன்னை பெயிலில் வெளியே எடுக்குமாறும் கலக்கமுற்ற நிலையில் தொலை பேசினார்.

எனக்கு ஒரே படபடப்பு என்னாடா இது இப்படி ஆகிப் போகிவிட்டதே என்று. பிறகு இங்கிருக்கும் மக்களிடம் பேசி சிறிது அறிவு அது சார்ந்து பெற்றுக் கொண்டு பெயிலில் எடுத்தும் ஆகிவிட்டது. அவருக்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் பட்சத்திலும் தனது ஜாதி பொருட்டு ரொம்பவே பெரிமிதம் உண்டு, ஒரு முறை என்னை அவரின் பெயருடன் ராஜாவை இணைத்து அழைக்கச் சொன்னதிற்கு நான் அழித்த மறுமொழியை 'காட்டான்' பாணியில், அவரின் வாழ்வில் மறக்க வாய்ப்பில்லை.

வீட்டிருக்கு சாப்பிட அழைத்தாலும் என்ன நினைப்பாரோ தெரியாது, ஏதோ நாம் அவரிடமிருந்து எதிர்பார்த்துதான் அழைக்கிறோமென்று ஒரு தடுமாறல் இருக்கும். பிறகு அந்த அரெஸ்ட்டுக்கு பிறகு அவரது பேச்சில் ஒரு மாற்றம் தெரிந்தது. எங்கள் வீட்டிலும் வந்து தங்கித்தான் இருக்க வேண்டுமென்ற சூழ்நிலை.

எனக்கு ஏதோச்சையாக சந்தித்த சந்திப்பில் கிடைத்த சில நல்ல நண்பர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் மதுரைக்காரர்கள் ரொம்ப பாசக் காரங்கப்பா. எல்லாத்தையும் அப்படியே, சிதம்பர ரகசியமாகவே இருந்தாலும் பகிர்ந்துப்பாங்க. வெள்ளாந்தியான மனசு.

சரி, எப்படியோ நான் கூறிய விசயங்களிலிருந்து சில உண்மைகள் கிடைத்திருக்கக் கூடுமென்று நினைக்கிறேன். அப்படி கிடைத்திருந்தால் கூட்டிக் கழிச்சு அவங்க அவங்களும் அவுக அவுகளுக்கு எது சரின்னு படுதோ அது படி வாழ்கையில சோதனைகள் மேற்கொண்டு அனுபவிச்சு பார்த்திட வேண்டியதுதான்.

கடன் அன்பை முறிக்கும் :-)

Monday, October 23, 2006

காகிதப் புலிகளும் *வச்சிபார்க்கத் தெரியாத* கமலும்!!

இது போன்ற ஒரு பதிவ போடணுமின்னு எனக்கு எப்ப "விருமாண்டி" கேசட் வெளியீட்டு விழாவும் அதனைத் தொடர்ந்த அரசல் புரசலான குரு (கே. பாலசந்தர்) - சிஷ்ய (கமல் ஹாசன்) பந்தம் கொஞ்சம் விரிசலாகி அனல் கணந்ததைக் காண முடிந்தலிருந்து கமலின் உள்ளத்தில் உள்ள சில சிந்தனைகளை உணர முடிந்தது.

இந்த பதிவை இப்பொழுது கொணர்ந்தற்கு காரணம், அவரது குருவான இயக்குனர் பாலசந்தர் பல புரட்சிகரமான கருத்துள்ள படங்களை கமலைக் கொண்டும், ஏனைய கதாபாத்திரங்களை கொண்டும் தமிழ் கூறு சமூதாயத்திற்கு சொல்லியிருக்கிறார் என்பதனை கேள்விப் பட்டிருக்கின்றேன். இருந்தாலும், அப்படிபட்ட படங்களை இந் நாள் வரையிலும் காண கொடுத்து வைக்கவில்லை.

இருப்பினும் நமது தமிழ் மணத்தில் அண்மையில் சத்தியப் ப்ரியன் எழுதிய கமல் - ஒரு சகாப்தம் என்ற பதிவின் மூலம் பல திரைப்படங்களின் சிறப்பு தொகுப்பு ஒரே இடத்தில் கிடைத்தது. அதுவும் ஒரு காரணம் இந்த பதிவை துரிதப் படுத்தி எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்வதற்கு.
விதவை மறுகல்யாணம், விபச்சாரியை(?!) பட நாயகன் காதலித்து மணப்பது இப்படி பலப்பல என திரைப்படங்களின் மூலம்(மட்டுமே) பல புரட்சிகள் முன் வைக்கப்பட்டதாக கேள்விபட்டதுண்டு.

ஆனால், இன்று கமலுக்கு நல்ல நண்பர்கள் அருகமையில் இல்லாமல் இருப்பதால்தான், யாரும் இடித்துக் கூறுவதற்கு இல்லையெனவும், அதனால்தான் அவரும் தனக்கு அமைந்த மனைவிமார்களில் ஒருவரையேனும் தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கருத்துச் சொல்லி மேடையில் சொல்லாமல் சொல்லி தனது குரு, விருமாண்டி பட கேசட் விழாவில் பொறுப்பாக இடித்துக் கூறிவிட்டார்.

அன்றுதான் கமலின் மறு முகத்தை காண முடிந்தது. பொதுவாகவே, கமல் தனது சொந்த குடும்ப விசயம் குறித்து பொதுவில் பேசுவதை விரும்பவது கிடையாது (அடுத்தவர்களும்). அப்பச்சத்தில் அப்படி ஒரு வசனத்தை, மேடையேறி போட்டுடடைத்ததால், அவரும் சற்றே சினம் சீண்டப் பட்டவராக அதற்கு பதிலிருக்கும் தொனியில் கூறியது.

சமூகத்தில் நல்ல (புரட்சி) கருத்துக்களை கூறுபவர்கள் யாரும் தனது சொந்த வாழ்வில் முயன்று சோடை போவது கிடையாது. அவர்கள் பாதுகாப்பான வலையின் மேல் இருந்துதான் தனது புரட்சிக் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

விதவை திருமணத்தை ஆதரித்து கருத்தும் கூறும் ஒருவர் தனது சொந்த வாழ்க்கையில் அப்படி ஒரு வாழ்வை அமைத்துக் கொள்வது கிடையாது. இது போன்றே ஏனைய கருத்துக்களும் (ஏன் அப்படி? உடனே அதற்கு நாம் கூறும் மறுமொழி, அது அது அவரவர்களின் சொந்த விருப்பத்தை பொறுத்தது, அதில் நாம் யார் நம் மூக்கை நுழைக்க என்று... நான் முயன்று தோற்றவன் என்ற முறையில் கேக்கிறேன் இங்கு). இப்படியாக தனது சொந்த வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கக் கூடும் என்பதனை அந்த "காகிதப் புலிகளுக்கு" சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார் கமல் அன்று. எவ்வளவு புரிதலுக்கென உள்ள இடைவெளி என்று பாருங்கள்.

இதிலிருந்து சில விசயங்கள் எனக்குப் புரிய வந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அது போன்ற புரட்சிகரமான கருத்துக்களை சொல்லி பேரும், பணமும், புகழும் வேண்டுமானால் அள்ளி குவித்திருக்கலாம் வெள்ளித் திரைகளின் மூலமாகவும் அல்லது புதினங்களின் மூலமாகவும், தனது சொந்த வாழ்வில் யாரேனும் தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்களா இந்த காகிதப் புரட்சியாளார்கள் என்பது எனக்குத் தெரிந்து தெரியவில்லை (இருக்கலாம் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக). உதாரணத்திற்கு, குழந்தைகளின் தத்தெடுப்பை பற்றிய கருத்தைச் சொல்லி படம் எடுக்கும் ஒருவர், தனக்கென்று ஒரு குழந்தையேனும் தத்தெடுத்து தனது வீட்டிலேயே வைத்து வளர்க்கிறாரா? அதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்ள?

சரி, கமல் என்ன செய்திட்டார் தனக்கு அப்படி "வைத்துப் பார்த்துக் கொள்ள தெரியாதவர்" என்ற பெயரை ஈட்டிக் கொள்ள. புரிகிறது, அவரது சொந்த வாழ்வை பற்றி நாம் தர்க்கவிப்பது நாகரீகமற்ற செயல் என்பது. இப் பொழுது கமலும் ஒரு நடிகர் இல்லாத பட்சத்தில் ஒரு சராசரி நபராக இருந்திருந்தால் இப்பொழுது அவரது வாழ்வு விமரிசனத்திற்கு ஆளாகி இருப்பதைப் போல ஆகியிருக்குமா?

அவர் பொது வாழ்வில் இருப்பதால் மட்டும் தனக்கென்று சொந்த விருப்பு, வெறுப்புகள் தன் வாழ்வில் இருக்காதா? அல்லது அப்படியே இருந்தாலும் தான் ஒரு "ரோல் மாடலாக" மற்றவர்களுக்கு இருக்க வேண்டுமென்ற சமூதாய கட்டாயத்தின் பேரில் தனது சொந்த சந்தோஷத்தை தொலைத்து தியாகியாகி விட வேண்டுமென்ற கட்டாயாமா, என்ன? இதில் எது?

அவரை ஒரு தனிப்பட்ட மனிதராக அணுகும் பட்சத்தில் நம்மிடையே இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் மறையும் பொழுது, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சுய பரிசோதனை தன் வாழ்வை பொருட்டும் நிகழ்த்திப் பார்க்க முடியும் அது எதுவெனினும்.

சமூகம் ஒரு கட்டமைப்பை வைத்து திணித்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அளவுகோலினை நிர்யிணத்திருந்தால் தனிமனித தேடல்களுக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறது அல்லவா? அதுவும் கமல் போன்றவர்கள் "லைம் லைட்"க்கு கீழ் இருந்து போவதால், அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் போன்றவர்கள்தான். ஒரு சதாரண மனிதனுக்கு கிடைக்கக் கூடிய சுதந்திரம் கூட அவர்களுக்கு கிடைப்பதில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Monday, October 09, 2006

***வன்முறை வாழ்கைக்கு யார் பொறுப்பு...?***

*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாக படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு படிக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...


செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை இங்கு வைத்திருக்கிறார்... அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.

நாயகி,

...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடதியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சாமாய் இருக்கிறது.

எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருனங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருனங்கள் அல்லாவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜன்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்கையை ஒரு பொருளாற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அழைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.

அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறாதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரட்சினைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!


பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

Tuesday, October 03, 2006

*பரிணாமப் போர்* எழில், அபூ முஹை இவர்களுடன் தெகா...

நண்பர்கள் எழிலும், அபூ முஹையும் கடந்த சில தினங்களாக பரிணாமம் பொருட்டு ஒரு போர் நடத்திக் கொண்டுள்ளார்கள். நான் பாட்டுக்கு செவனேன்னு இருந்தாலும் என்னையும் பிடிச்சு சில ஆட்கள் உள்ளே தூக்கிப் போட்டுடுறாங்க :-)).

அவங்க நிமித்தமா நான் கடல் மாட்டம் இருக்கிற விசயத்திலிருந்து ஒரு துளி எடுத்துச் சிந்தப் போக விளைவு நீங்களும் இந்த ஜோதியில நனையணுமின்னு ஆகிப் போகுது.

சரி, எழில் இங்கேயும், அபூ முஹை இங்கேயும் ஆளுக்கொரு பதிவா போட்டு இருக்காங்க, அத முதல்ல படிச்சிக்கங்க. தவறாம பின்னூட்டங்கள படிங்க அங்கதான் நிறைய விசயங்கள் இருக்கு ;-).

அபூ முஹை அவர்களொடத படிச்சிட்டு என்னோட முதல் பின்னூட்டம் ஒண்ணு போட்டேன். தெரியும். திரும்பவும் எழுதுற மாதிரி இருக்குமின்னு. அதே மாதிரி திரும்பவும் அவர் பதில் அடிச்சி இன்னும் நிறைய கேள்விகள் கேட்டிருந்தார். அதுக்கு பதில் சொல்லப் போகி நீண்ண்ண்டுப் போச்சு.

சரி, இங்கயும் இருக்கட்டும் பிறகு உதவுமின்னு பதிந்து வைச்சிருக்கேன்.

சில மாதங்களுக்கு முன்பு சுவனப்ரியனுக்கும் எனக்கும் இந்த தலைப்பில *பரிணாமம்,* சுவனப்ரியன், மற்றும் தெகா... கருத்துப் பரிமாற்றம் பண்ணிக்கொண்டோம், அதுவும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் அதனையும் படிச்சிப் பாருங்க.

இப்ப என்னோட அன்மைய பதிவுகளுக்கான பின்னூட்டத் தொகுப்புகள்... முதல் பின்னூட்டம்...

I feel, placing some facts over here is useless and baseless.

//'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்ற அடிப்படை உயிரியல் கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறது. பரிணாம கோட்பாடு சொல்வது உண்மை என்று ஒப்புக்கொண்டால், இன்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உயிரியல் கொள்கை பொய்யாகி விடும். இதற்கு பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?//

ஏனுங்க, ஒரு சினை முட்டையும், ஒரு விந்தணுவும் இணைந்து இம்புட்டு பெரிய ஜடங்களான நம்மை, இரண்டு, நான்கு, எட்டுன்னு பல்கிப் பெருகிதானேங்க எங்கன மூஞ்சி இருக்கிறது, எங்கன கையிருக்கிறது, இப்படி எல்லா செய்திகளையும் மரபணு மூலம செய்தி கோர்வைகள் எடுத்திட்டு போறது எல்லாம், இது யாரு சொல்லிங்க நடக்குது?

அதே மாதிரி தானப்ப இந்த Primordial Source or Juiceன்னு சொல்ற உயிர் கனிமங்களை கொண்ட காமெட் (comet) ஒன்று பூமியின் மீது மோதி போது இங்கு உயிர் தோன்றுவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம். அல்லது இங்கு இருக்கும் வேதிய பொருட்களை கொண்டே முதல் செல் ஒன்று தோன்றி இருக்க அனேக வாய்ப்புகள் அதிகமே, என்று சிந்திச்சு அது தொடர்ப நிறைய காலங்களையும் ஆராய்ச்சில் செலவு செஞ்சு சிந்திக்கும் யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய கூற்றுக்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

என்கிட்ட காட்டு இது எல்லாத்துக்கும் ப்ரூப்பேன்னு அடம் பிடிச்ச எப்படிப்பா. சின்னப் பிள்ளைங்க விளையாட்டு மாதிரி இருக்குது. மில்லியன் வருஷமுன்ன என்னமோ ஒரு நூற்றாண்டு மாதிரி நினைச்சுக்கிட்டும், பேசிகிட்டும் இருக்கிறோம்.

சரி 68 மில்லியன் வருஷங்களுக்கு முன்னால் இந்த சூப்பர், டூப்பர் மூளையைக் கொண்ட கடவுளின் புதல்வன் எங்கே இருந்தான்? உடனே நீங்கள் அப்ப மனுஷன் இருந்தானா இல்லையான்னு எப்படி உங்களுக்கு தெரியும், பக்கத்தில இருந்து நோட் எடுத்தியான்னு கேட்கப் புடாது... யோசிக்கணும், அந்த புத்தகத்தை கொஞ்சம் தள்ளி வைச்சுப்புட்டு மத்த புத்தகங்களையும் படிக்கணும்...

இப் பூமியில் நம்மின் தற்காலிக இருப்பும் ஒரு சான்ஸ் மட்டுமே... இதில் இன்னும் கொஞ்ச காலங்களுக்கு இருந்து போயிச் சேருவதா, இல்லை அடித்துகொண்டு சீக்கிரமா போயிச் சேருவதா என்பது நமது கையிலும் இருக்கிறது.

டைனோசார்களுக்கு அதி பயங்கர பசின்னா, நமக்கு அதி பயங்கர "மதம்"பிடிச்ச மதம் பிடிச்சிருக்கு இது இரண்டுமே எடுத்திட்டு போய்ச் சே(ரப்)ர்ந்த இடம் ஒண்ணாத்தான் இருக்கப் போகுதோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு...

Posted by *இயற்கை நேசி* Mon Oct 02, 07:27:21 AM

அதற்கு அவர் இப்படியாக தனது ஐயப்பாடுகளை தெரிவித்திருந்தார்...

//அதே மாதிரி தானப்ப இந்த Primordial Source or Juiceன்னு சொல்ற உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் ஒன்று பூமியின் மீது மோதி போது இங்கு உயிர் தோன்றுவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம். அல்லது இங்கு இருக்கும் வேதிய பொருட்களை கொண்டே முதல் செல் ஒன்று தோன்றி இருக்க அனேக வாய்ப்புகள் அதிகமே//

எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பும் இன்னும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்றுதான் பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர ஆதாரபூர்வமாக எதுவும் இன்னும் நிரூபிக்கப் படவில்லை.

ஆனால் பதிலளிக்கப்படாத கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

1) உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் பூமியின் மீது மோதிய போது இங்கு ஒரே ஒரு உயிர்தான் தோன்றியதா? அல்லது பல உயிர்கள் தோன்றினவா?

2) உயிரினங்கள் தாம் வாழும் காலச்சூழலுக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெற்றன என்றால், உலகெங்கிலும் வசிக்கும் மனிதர்கள் ஒரே உடலமைப்பை கொண்டிருப்பது எப்படி? பனிப்பிரதேசங்களில் வாழும் மனிதர்களுக்கு கரடிகளைப்போல உடலெங்கும் முடியும், பாலைவனப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு ஒட்டகத்தைப் போன்ற திமிலும், கடற்புறங்களில் வசிப்பவர்களுக்கு மீனைபோல செதிளும் இல்லாமற் போனதேன்?

3) குரங்கிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்கிறது பரிணாம கோட்பாடு. இன்று குரங்கு, மனிதன் என இரு உயிரினங்களும் இருப்பதை பார்க்கிறோம். இவற்றிற்கு இடைப்பட்ட semi-finished உயிரினங்கள் எங்கே? கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், ஏன்? பரிணாம factory-ஐ மூடி விட்டார்களா என்ன? அல்லது, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இரவு குரங்காக தூங்கியவர்கள் மறுநாள் காலை மனிதனாக விழித்தெழுந்தார்களா?

Posted by இப்னு பஷீர் Mon Oct 02, 08:45:35 PM

மீண்டும் என்னுடையது...

அதில் பல கேள்விகள் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த புத்துணர்வை ஊட்டியதால், எங்கே தொடங்குவது என்று தெரியாமல் தொடங்கினேன், தொடங்கி எங்கே முடிப்பது என்றும் தெரியாமல் முடித்தேன். ஏனெனில் இதில் நிறைய விசயங்கள் சொல்லப் பட வேண்டி உள்ளதால், எப்படி விளக்க முற்படினும் நிறைவு பெறாமலேயே போனதைப் போன்ற உணர்வைத் தருகிறது.

இதோ அ. முஹையின் பின்னூட்ட பதிலுக்கு எனது பின்னூட்டம்...

இந்த "இருக்கலாம்" என்ற அனுமான வார்த்தையை அறிவியல் கோப்புகளிலும், கட்டுரைகளிலும் பயன்படுத்துவதற்குக் காரணமய்யா, அந்தத் துறை இன்னும் வளர்வதற்கு ஏதுவாக இருக்க அனேக வாய்ப்புகள் இருப்பதனை கருத்தில் கொண்டே (to be plausible for new things, since our mind is dynamic so it tends to expand as we grow and know more new things... it is not so rigid like our Religious conceptual theories). இப்பொழுது கூட லூசியும், கயல் விழியும் நம்முடைய அண்மைய கால மூதாதையர்கள், 3 மில்லியன் வருடங்கள் முன்பு வரையிலும் என்று கண்டுபிடித்தார்களே. அது போல இன்னும் நிறைய தடயங்கள் வர வர சேர்த்துக் கொள்ளத்தான் இந்த "இருக்கலாம்."

இல்லையெனில் கடவுள் போன்ற "சர் ஐசக் நீயுடன்" சொல்லிவிட்டார் அதனால் அவர் கூறிய கோட்பாட்டில் எந்த புது மாற்றங்களையும் செய்ய முடியாது என, எப்படி நாமே எழுதி வைத்துக் கொண்ட இந்த மதக் கோட்பாடுகளை கட்டிக் கொண்டு மாரடிக்கின்றொமோ அது போல நிலமை ஆகி, அடித்துக் கொண்டு சாக வேண்டி வரும். அதனால் தான் அந்த அனுமான "இருக்கலாம்" என்ற வார்த்தை.

இரண்டாவது, நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு இயற்கையின் சூட்சுமங்களை அறிந்து கொள்ள முயற்சிக்க வில்லையெனில், உங்களுக்கு அடிப்படை விசயங்களை இது போன்ற பின்னூட்டங்களை கொண்டு விளக்குவது நலம் பயக்கா.

//இங்கு ஒரே ஒரு உயிர்தான் தோன்றியதா?//

மீண்டும், நான் கூறிய ஒரு சினை முட்டையும், விந்தணுவும் நடத்தும் விந்தையைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சித்தீர்களா? அமீபா, பாரமீசியம் போன்ற தன் இனப் பெருக்க உயிரினங்கள் எவ்வாறு பல்கிப் பெருகுகிறது என்பதனைப் பற்றிய பிரஞை தாங்களிடம் உள்ளதா?

சரி, எப்படி இயற்கையில் புது உயிரின உருவாக்கம் (Speciation) நடைபெறுகிறது என்ற அடிப்படை புரிவு தாங்களுக்கு உண்டா? அதற்கென உதாரணமாக நிறைய தென் அமெரிக்கா காடுகளில் உள்ள குரங்கினங்களில் நடைபெற்றிருக்கிறது, தேடி (தேடினால்தான் கிடைக்கும்) அறிந்து கொள்ள முயற்சித்துப் பாருங்கள்.

நான் எனது இளநிலை பட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தான் படித்தேன். அங்கு டாக்டர் முகமது இஸ்மெய்ல் பரிணாமம் சார்ந்த கோட்பாடுகளைப் பற்றிய வகுப்புகள் எடுத்தார். அப்படி அவர் எடுக்கும் பொழுது எனக்கு இந்த மதங்களுக்கும், இந்த பாடத்திற்கும் சிறிதளவேனும் தொடர்பு இருப்பதாக எண்ணவே தோன்றவில்லை. ஏன் என்பது இப்பொழுது கொஞ்சம் விளங்குகிறது. அந்த பேராசிரியருக்கு இது தொடர்பான பிரஞ்கை இருந்திருக்குமா அன்று, என்று இன்று யோசிக்கிறேன்.

முடிந்தால் அடுத்த முறை அங்கு சென்று பேசலாம் இது நிமித்தமென எண்ணியுள்ளேன்.

//இன்று குரங்கு, மனிதன் என இரு உயிரினங்களும் இருப்பதை பார்க்கிறோம். இவற்றிற்கு இடைப்பட்ட semi-finished உயிரினங்கள் எங்கே? கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? //

இது போன்ற கேள்விகளையெல்லாம் படிக்கும் பொழுது நீங்கள் இது தொடர்பாக போக வேண்டிய தொலைவு வெகு தூரம் என்று தெரிகிறது. ஏன், அவ்வளவு தூரம் செல்ல வேண்டும், நமது தாத்தாவிற்கு தாத்தாவிலிருந்து 200வது தாத்தாவுக்கு எந்த ஊர், அவர் எப்படி இருந்தார், அவரின் குணாதியசம்மென்ன, என்ற குறிப்பேடு தாங்கள் கையில் நமது தகப்பனார்கள் ஏதாவது நோட்டுப் புத்தகம் போட்டு எழுதி ஒப்படைத்துவிட்டா செல்கிறார்கள். நாமும் நாளை அதனை நமது சந்ததிகளிடத்தே ஒப்படைத்து விட்டு செல்ல.

எப்படி அந்த உணர்வு நம்முள் வருகிறது, அந்த பண்புகளும், குண நலன்களும்... அப்படியே அவர்கள் இன்று நம்மோட வாழ நேர்ந்து போனால் நமது நிலைதான் என்ன? அப்படி அவர்கள் நம்மோட இன்று வாழவில்லை என்பதால் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்க சாத்தியமில்லை என்று பொருளா?

இங்குதான் தகுதி உள்ளது தப்பிப் பிழைக்குமென உள்ள கோட்பாடு அமுலுக்கு வருகிறது. அந்த ஹோமோ எரக்டஸூம் நம்முடன் சம காலத்தில் வாழ நேர்ந்திருந்தால், யாரிடம் அதிக தகுதி உணவை பறிக்க, சேமிக்க, குடும்பத்தை கட்டிக் காப்பாத்த, வளைந்து கொடுத்துப் போக இருக்கிறதோ அதுகள் தப்பிப் பிழைக்கும். போராட்டத்தில்.

நாம் நம் தாத்தாவிற்கு அந்த நிலையை உருவாக்கி கொடுப்போம் அப்படி வாழ்வா, சாவா நிலை வந்தால் என்பதே உண்மை.

எனவே, அந்தப் பண்புகள் ("அடப்போங்கப்ப எத்தனை முறை சொல்றதுன்னு வருது எனக்கு") ஒரு தலைமுறையில இருந்து இன்னொரு தலைமுறைக்கு மரபணு சமிக்கைகள் மூலமா கடத்தப் படுது. உதாரணதுக்கு, நான் வெள்ளைக் காரிய திருமணம் பண்ணிக் கொண்டால், எனக்குப் பிறக்கும் குழந்தையும் அதனை தொடர்ந்து வரும் சந்ததிகளும் என்னுடைய மரபணுவையும் (கொஞ்சமாவது - காலம் கடக்கக் கடக்க) தூக்கி கொண்டு திரியும் என்பதில் ஏதாவது மறுப்பு இருக்கிறதா?

இங்கே இரு வேறு பட்ட மனித இன கலவை நடந்ததாக கொள்ளுங்கள், பின்னாளில் தேவையில்லாத குணங்களை கொண்ட மரபணுக்கள் கொஞ்ச கொஞ்சமாக தவிர்க்கப் பட்டு கிடைக்கும் சீதோஷ்ண நிலைக்கும், உணவு வகைகளுக்கும் தேவையான பண்புகளை இரண்டு பக்கமும் எடுத்துக் கொண்டு பல்கிப் பெருகி ஒரு சூழலில் புதிவிதமான இனமாகவே நடந்து வந்து இன்னமும் நடையை கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். அதனால் எங்கடா அந்த முதல் ஆள் என்று கேக்கக் கூடாது... அப்படியும் தொல் பொருள் ஆராய்சிகளின் போது இடைப்பட்ட இனங்களின் எலும்பு மிச்சங்கள் கிடைக்காமலில்லை, இல்லையா? நம்மிலிருந்து மிகுந்த வேறுபாடுகளுடன்...

அதனால் அன்று, நான் அந்த படத்தில் இல்லையென்பதால் என்னுடைய பங்களிப்பு அங்கு இல்லை என்று பொருளா?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கைவலிக்கிறது. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இல்லையென்றால் தனிப்பதிவு போட வேண்டி வரும் :-)

Related Posts with Thumbnails