Thursday, September 29, 2011

கழுகமைவு...


கசிந்தொழுகி முழங்கிக்கொட்டிய
மழை மரணிப்பின்
ஒரு பின் மாலைப்பொழுதில்
வெளுப்பேறிப்போன மென் தோல்
உதறிய உள் மனதுடன்
அவன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான்...

ங்கோ வட்டமிட்டபடியே
கொழுத்த வார்த்தை ரணமேறிய
மனித மன ஊன் உண்ணும்
பூமி பார்ந்திருந்த பட்சியொன்று
அவனருகில் சிறகு சுருட்டி
வந்தமர்ந்து, நிமித்தமாய்
மனவாய் கிளறியது...

ஒப்புவிக்க ஒப்புவிக்க
ரணமருந்தியபடியே
கற்றறிந்த வித்தையின் 
இலக்கணப்படி
அவசரமாய்
சொற்களுக்குள் 
செருகிக் கொண்டிருந்தது...

சூலுற்றிருந்த கருவை இறக்கும் 
நாழிகையை எண்ணியபடி...

பட்சி அறிந்திருக்கவில்லை
தான் உண்டு தரிசித்தது
நொடிப்பொழுதைய
உதிரக் குழம்பையென...

எலும்பு மஜ்ஜை இன்னமும் மிச்சமிருக்கிறது...


P.S: Discussion in Buzz ...Kazhugamaivu...

Monday, September 26, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - III


சிங். செயகுமார் என்று ஒரு வலைப்பதிவர் முன்பொரு காலத்தில் நிறைய விசயங்களை கவிதை வடிவாகவும், சிறுகதைகளாகவும் கொடுத்துக் கொண்டுருந்தார். எழுதியவைகளில் அனேகமானவை காதல் சார்ந்தும் அவரின் சமூக பார்வையாகவும் இருந்தது. சமீப காலமாக அவரைக் காண முடிவதில்லை, அச் சமயத்தில் படித்த காதலர்தினம்! என்ற தலைப்பில் ஒரு கவிதை என் மனதில் தைத்துப் போனதை உங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன். ஏனைய பதிவுகளும் அருமையாக இருக்கும், சுவைத்துப் பாருங்கள்.

கூட்டைக் கலைத்த பின் ஒரு பறவைக்கு நேரும் கொடூரத்தை கொடுப்பது போலவே ஒரு கைம்பெண்ணிற்கும் நம் சமூகத்தில் நிகழும் அவலத்தை தோலுரித்திருக்கார் பஹீமாஜஹான் என்பவர் அழிவின் பின்னர்...... என்ற தலைப்பின் கீழ். இவரின் "ஊற்றுக்களை வரவழைப்பவள், தடுமாறும் தனிப்பாதம்" என்ற பதிவுகளும் ஏனைய பதிவுகளும் மிக நேர்த்தியாக இருக்கிறது.


திறந்து வைத்திருக்கிறாள்


என்று ஒரு குழந்தையின் கள்ளமில்லாத்தனத்தை இந்த மூன்று வரிகளுக்குள் வைத்து, மனிதன் வளர்ந்த பிறகு எவ்வளவு சூது, வாதுடையவானுகிறான் என்று எண்ண வைத்து விடுகிறார் ராஜா சந்திரசேகர். மேலும் தொடர்ந்து "மனிதக் காடு" என்று பெயரிட்ட தலைப்பின் கீழ் நாம் மெது மெதுவாக எப்படி நம்முள்ளே இருக்கும் அந்த கபடமற்றக் குழந்தையை எப்படியெல்லாம் தொலைத்து, தேடித் தேடி எங்கே காண்கிறோமென்று அழகாக அந்தக் கவிதையில் பொதித்து வைத்திருக்கிறார். இவரின் இரண்டு மூன்று வரிக் கவிதைகளில் ஏதாவதொன்றை படிக்க நேர்ந்தாலே அடுத்தடுத்து படிக்கத் தோன்றும் மாஜிக் தீம் இருக்கிறது மற்ற மற்ற பதிவுகளிலும்.


ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம்


செய்கிறோம்


இந்த ஒரு கட்டுரை வடிவ கவிதையே போதும் இந்த வளர்ந்து வரும் நெஞ்சத்துக்குள் பீறிட்டு வெளிக் கிளம்பும் தொலை நோக்குப் பார்வையும் நவன் என்ற பதிவரின் வாழ்வு சார்ந்த பட்டறிவையும் பறைசாற்ற. மென் மேலும் இவர் தொடர்ந்து தனது எண்ணங்களை இங்கே வைப்பார் என்று நம்புவோம்.

பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தில் சிரிப்புக்கும், சிந்திப்பதற்கும் ஏற்ப பல பதிவுகளுண்டு. அங்கே அவ்வப்பொழுது பித்தானாந்தாவாக ஒரு புது அவதாரம் எடுத்து விடுவார் அந்தத் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் போலும். அவ்வாறு எடுத்த அவதார கோலத்தில்தான் 262 : பித்தானந்தாவின் போதனை என்ற தலைப்பின் கீழ் ஒரு கவுஜாவை வடிதிருக்கக் கூடும். அதில் விளையாட்டுப் போக்கில் நிறைய தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். இரட்டை தன்மையில் வாழும் அனைவரையும் ஒரு முறை உட்முகமாக திரும்ப வைக்கும் ஓர் பதிவு. ஏனைய பதிவுகளில் வெடிச் சிரிப்பிற்கும் (குறிப்பாக பின்னூட்டங்களில்), சுய முன்னேற்றக் கட்டுகரைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

Thursday, September 22, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - II


தருமி...! இவரை முதன் முதலில் எப்படி சந்திக்க வாய்ப்புகிட்டியது என்று சற்றே பின் சாய்ந்து அமர்ந்து பொறுமையாக யோசிக்க வேண்டியிருந்தது. அந்த சந்திப்பு எனது ஆங்கில வலைப்பூ பக்கத்தின் மூலமாகத்தான் அமைந்திருந்தது என்று நினைக்கிறேன். அங்கே அவரின் பாணியிலேயே ஒரு கேள்வி why we should be different? என்று கேட்டு ஒரு பதிவிட்டிருந்தற்கு இவர் கொடுத்த லிங்கில் சென்று பார்த்த பொழுதுதான், அங்கே ஒரு கடலளவிற்கு பொக்கிசங்களாக நிறைய பதிவுகள் மின்னிக் கொண்டிருந்தன.

அவைகளில் என்னை மீண்டும் சிந்திக்க தூண்டிய பதிவுகளாக அமைந்தது 49. நான் ஏன் மதம் மாறினேன்...? என்ற அவரின் தொடர்ப் பதிவுகள்தான். எல்லா வளர்ச்சி நிலைகளிலுமுள்ளவர்கள் அவசியம் படித்துப் பார்த்து தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் படி மிக நேர்த்தியாக அமைத்திருப்பார் அந்தப் பதிவுகளை. அதற்காக அவர் எவ்வளவு படித்திருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுதே அவர் பொருட்டு இருக்கும் மரியாதை பல மடங்கு எகிறுகிறது. அதன் பிறகு அவரின் எல்லா பழைய பதிவுகளையும் தோண்டிப் படித்து பல பதிவுகளுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமெழுதியது இன்னமும் நினைவிருக்கிறது.

பிரிதொரு சமயம் இளவஞ்சி எனக்கு, என் காட்டான் பக்கத்தில் பின்னூட்ட அரசியலை சாடி எழுதியிருந்த பொழுது அங்கே வந்து எனக்கு அறிவுருத்தும் படியாக எழுதிய பின்னூட்டத்தின் மூலமாக அவரின் பதிவுகள் பக்கம் செல்ல நேர்ந்தது. இவரின் எழுத்து நடைக்கு நிகர் இவரே! அவரின் பல பதிவுகளை ரசித்துப் படித்து சிரித்து, சிந்திச்சிருக்கிறேன்.` அண்மையில் தோண்டி எடுத்துப் படித்து சிரித்து, சிந்தித்தது காலச்சுழிப்பில் தொலைந்(த்)தவைகள்.. . அதே தளத்தில் நிறைய புகைப்படங்களையும் சுட்டுத் தள்ளி நமக்கு வழங்கி வருகிறார்.

...இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!...

செல்வநாயகி, இவரைப் பற்றி நான் என்ன சொல்லவிருக்கிறது. நிறங்கள் என்ற தலைப்பில் பளுப்பில் இருக்கும் இவரின் வலைத்தளமே வாழ்வின் முரண்களை அதனிலிருந்தே சுட்டிக் காட்டுவதனைப் போல அமைத்து விளாசி வருகிறார் பல விசயங்களை. இங்கு அவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க அனேக வாய்ப்புகளுண்டு. இவர் எழுத எடுத்துக் கொள்ளும் விசயங்கள், அதன் பொருட்டு அவரின் எண்ணங்கள் அதனை வெளிக்கொணர பயன் படுத்தும் மொழியின் ஆளுமை இவைகள் எல்லாமே இவர் வலைப் பக்கத்தின்பால் எனை இழுத்து வைத்திருக்கிறது.

கைராப்ட்ரான் (Chiroptera) அதாங்க நம்ம வவ்வாலு தலைகீழாக தொங்கிட்டே காத்துப் புக முடியாத இடத்திக்குள்ளரக் கூட நிஜ வவ்வாலுங்க அல்ட்ராசோனிக் சப்தத்தை அனுப்பி போகும் வழியில் உள்ள விசயங்களை அறிந்து கொள்வது மாதிரி, இவரின் தளத்தில் ஒரு சிறு நூலகத்திற்கு இணையான எல்லா படைப்புகளும் எளிமையான முறையில் திரட்டி தகவல்களாக தந்திருக்கிறார். ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி!! இப்படி ஒரு விவசாய முறை இருப்பதே அந்தப் பதிவின் மூலமாகத்தான் எனக்கு தெரிய வந்தது. இது போல ஆச்சர்ய மூட்டக் கூடிய பல பதிவுகள் அங்குண்டு.

Saturday, September 17, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - I


எனது சுய புராணங்களை செய்து முடித்த கையோடு, அடுத்தவர்களின் படைப்புகளையும் எந்தளவிற்கு உள்வாங்கி வருகிறேன் என்று எனது அடுத்தடுத்தப் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

திருச்சி மலைக்கோட்டையில் ஏறி என்னால் ஒரு உணர்ச்சிப் பூர்வமான படைப்பாளியான திரு. ஞானசேகரை தனியாக சந்திக்க முடியுமென்றால் நாளைக்கே எனது பயணம் அமைய விருப்பம் கொள்வேன். அவரின் பல படைப்புகளை படித்துவிட்டு மனம் அன்று பூராவும் அதுனூடே சிக்குண்டு தவித்ததுண்டு.

...பொட்டச்சியப் பெக்கப்போற
பொட்டக் கழுதக்கித்
தொணையெல்லாம் ஏதுக்குன்னு
வெசலூரு கெரகாட்டம்
போயிட்டாரு எம்புருஷன்...

என்று தொடங்கி ஒரு பெண் தனக்குத்தானே சுய'ப்ரசவம் பார்ப்பதனை அழகாக, நேர்த்தியாக கொடுத்திருப்பார். நிறைய சமூதாய ஓட்டைகளையும் அங்கே சுட்டிக்காட்ட தவறாமல். அதே தளத்தில் நிறைய சிறு கதைகளும், கவிதைகளும் உண்டு.

மற்றுமொருவர் இப்படியும் தன்னை விளித்துக் கொள்ள யாரேனும் முட்படுவார்களா என்றால் முடியுமென்று தன்னை "ஆடுமாடு" என்றழைத்துக் கொண்டு "கால்நடைகளுக்குள் புகுந்து" ஒரு கிராமத்தின் மணத்தைப் பரப்பி வருகிறார், ஆடுமாடு. இவரின் அனைத்து படைப்புகளுமே அம் மணம் மாறாமல் அத் தளத்தை நிரப்பிக் கொண்டுள்ளது.

இங்கே ஒருவர் தன்மீது இருக்கும் நம்பிக்கையின் எல்லை எவ்வளவு என்று விடாது, உண்மையாகவே விடாது உழைத்து இப்படியும் தனது மன படபடப்பை படைத்திருக்கிறார். அண்மையில் சிவாஜி பட வெள்ளி விழாவின் போது நமது பிரபலம் பேசிய முரணை தோலுரித்து, மூகச்சீலை அகற்றி இங்கே காட்டியிருந்தது, நான் போட இருந்த பதிவை யாரோ முந்திக் கொண்டு போட்டுவிட்டார்களோ என்பதனைப் போன்ற ஒருமித்த சிந்தனைகள், அதன் பொருட்டு அங்கே எழுப்பியிருந்த வினாக்கள் அமைந்திருந்தது.

ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டுமென்ற சமூக கட்டமைப்பினை கையேடாகக் கொண்டு வளர்த்து, திருமணச் சந்தையில் நிறுத்துபவர்களுக்கு சில கேள்விகளுக்கு பதிலும் வேண்டியதில்லை, அப்படி கேள்விகளும் எழ வேண்டுமென்ற கட்டாயமும் இருக்கப் போவதில்லை. ஆனால், இங்கு ரேகுப்தி என்பவர் எவ்வளவுதான் பெண் என்ற அடையாளத்தால் தன் சுயம் இழக்க தேவையில்லை என்பதனை எப்படியெல்லாம் போராடி தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்பதனை...

...மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன்...

என்று தொடங்கி அழகாக ஒரு சிறுகதையை நகர்த்தியுள்ள நேர்த்தி. அவரின் எழுத்து நடை பிடித்திருக்கிறது.


பி.கு: வலைச்சரத்திற்காக எழுதியது 2008ல்...

Friday, September 16, 2011

காட்சிப்பிழை : A mystic Hanging




நேற்றைய நினைவுகள்
பனிப் புகையாக காற்றில் 
முன் இருப்பை ஞாபகமூட்டி
காலப்பெருவெளியில் கரைந்தபடி
நிழலாடிக் கொண்டிருக்கிறது...


புலன்களுக்குப் பிடிபடாத நாளைய
பயங்களும் நம்பிக்கைகளும்
இழுத்துக் கட்டிய
நுண்ணிழையில் ஊசலாடிக்காட்ட...


இன்றைய நாளோ
அவை மடிதுயிலுறங்கி
நேற்றும் நாளையுமான குவியத்தில்
சூன்யமாக்கி கல்லெறிய
மனக் குளத்தில் அலைகளாக
நினைவுக் கறையான்கள்
மெல்ல முன்னேறி
மென்றுகொண்டிருக்கிறது!


Tuesday, September 13, 2011

இயற்கையின் தேர்ந்தெடுப்பு சாதீக்கலவரம்...

பரமக்குடி, எனது ஊரிலிருந்து இரண்டு மூன்று மணி நேர பேருந்து பயணிப்பில் போய் சேர்ந்து விடக்கூடிய தூரத்தில் அமைந்திருக்கிறது. அது ஒரு வேலிக்கருவை மரங்கள் நிரம்பிய, தண்ணீரற்ற ஒரு வறண்ட பாலையூர்.

அதனை ஒற்றி அமைந்ததே எனது ஊரும். எனவே அந்த ஊருக்கும் எனது ஊருக்கும் பெரியளவில் சிந்தனை வேறுபாடுகளோ மனிதர்களின் ஓநாய்த்தனமான மனத் திண்மைக்கு வித்தியாசமிருந்து விட முடியாது. இந்த புகைப்படத்தை நான் காண நேர்ந்தது. இரண்டு மூன்று நாட்களாக இந்த சாதீக் கலவரம் தொடர்பாக எங்கும் பரப்பரப்பு ஒத்திக் கொண்டு அனலாக தகிக்கிறது.

ஒவ்வொரு முறையும் இந்த காட்டுமிராண்டித் தனத்தின் வக்கிரம் எண்ணிடலங்கா வழிகளில் முகம் தரித்தே காண்பித்து விட்டு ஓடி ஒளிந்து கொள்கிறது, மனித ஓநாய்களின் போலிப் புன்னகைகளுக்கு பின்னே. மீண்டும் சரியான நேரத்தில் தன் கோரப்பற்களை துருத்திக் காட்டுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதனை பார்த்து வளர்ந்தவர்களுக்கு இதுவு’ம் ஒரு மற்றுமொரு தினசரிச் செய்தியாகிப் போய் விடுகிறது.

ஆங்கிலேயன் இண்டு இடுக்களிலெல்லாம் வெறும் பத்தாயிரம் பேருக்கும் குறைவாக இங்கு கொண்டு வந்து இத்தனை பெரிய பரப்பை அவனால் கட்டி ஆளமுடிந்ததெனில் அதற்கு காரணம் இந்த காட்டுமிராண்டித்தனத்தின் ரேகைகளே காரணமாக இருந்தது 300 வருடங்களுக்கு முன்பும். அவர்களும் வந்தார்கள், அடிமைகளான வாழ்வை நாமும் சுவைத்தோம்.

ஆனால், அதிலிருந்து இந்த தேசமென அழைத்துக் கொள்ளும் கூட்டு தேச இந்தியா ஏதாவது பாடம் கற்றுக் கொண்டாதா? அது போன்ற சாதீய வேறுபாடுகளை களைவதற்கு எத்தனை வலிமையான சட்டங்களை பாய்ச்சி மாக்களை மக்களாக்கி வைத்திருக்கிறது? காலம் நகர்ந்திருக்கிறதே ஒழிய, ஏதாவது மனித மனங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? அதனையொட்டிய கற்றறிந்தவர்களின் உழைப்பெங்கே? ஏன் அந்த லைம் லைட்டில் அமர்ந்திருக்கும் பெருசுகள் இதனைப் பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை?

இப்படி குழுமங்களாக வாழ்வது ஆஃப்ரிகா சமவெளிகளில் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நம்மை நரி அடித்து தின்றுவிடாமல் இருக்கவும், பிற காட்டுமிராண்டி கூட்டமும் தான் உண்ணும் உணவையும், நிலத்தையும் அபகரித்து கொள்வதினிலிருந்து தற்காத்து வைத்து கொள்ள தேவைப்பட்டிருக்கலாம். காட்டுமிராண்டித் தோல் இருக்கின்னு உணர நினைத்தால் இங்கே அழுத்தி படிச்சிப்போம் மேலே.

ஆனால் இன்றுதான் நாம் நவீன காட்டுமிராண்டிகளாகிவிட்டோமே, நமக்கென்று அழைத்துக் கொள்ள ஒரு நாடு, அரசாங்கம், சட்டம் என்று இருக்கிறது. ஒருவன் வாய்க்குள் போட்ட சோற்றை மற்றொருவன் பிடிங்கி தின்று விட முடியாது, பாதுகாப்பு இருக்கிறது. அதனைத் தவிர்த்து எதனை நாம் தற்காத்து வைத்து அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்ல இப்படி 500 மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் உனது வீட்டில் இருப்பவனும் அவன் வீட்டில் இருப்பவனும் இப்படி மூர்க்கமாக தாக்கிக் கொள்கிறீர்கள்?

சரி மேல்தட்டில் அமர்ந்திருக்கும் அந்தக் குழு குடிக்கும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும் என்ன புதன் கிரகத்திலிருந்து இறக்குமதி செய்து குடித்து, சுவாசிக்கிறார்களா? இரண்டு பேரும் பொது இடத்தில் மலம், ஜலம் கழித்து அவை இரண்டற கலந்து நாம் அனைவரும் தானே மீண்டும் உள்ளே தள்ளி உணவாக உண்கிறோம். வளர்கிறோம். அதெப்படி, ஒருத்தனில் இருந்து மற்றொருவன் உயர்வாகிவிடுகிறான்?

யார் நமது ஒற்றுமையை விளக்க பாடம் எடுப்பது? சைனாக்காரனா? இல்லை இயற்கை பேரழிவா? எனக்கு இப்பொழுது இதுதான் தோன்றுகிறது. பூமியில் அதுவும் குறிப்பாக இந்தியாவில் ஜனத்தொகை வீங்கி வெடிக்கிறது. இயற்கையாகவே ஒரு வழியை கண்டடைந்தாலே ஒழிய இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் ஒரு சதுர கிலோமீட்டரில் 35 மக்கள் வாழ்கிறார்கள் என்றால் நமது தேசத்தில் சராசரியாக 350 பேர்களை கொண்டிருக்கிறோம்.

அதனையொட்டிய இயற்கைசார் தேவைகளை கொண்டே பார்த்தால் கூட, குடிநீருக்கும், சுத்த காத்திற்கும் கூட பெரும் அடிதடி தேவைப்படப் போகிறது. இந்த லட்சணத்தில் அவன் இவனை செத்த சிவப்பாய் இருக்கிறான், என் மூக்கு நீளம் அவனது சிறுசின்னு அதே சாக்கடைக்குள் கிடந்து கொண்டு ஒருத்தன் மீது இன்னொருவன் கல்லை விட்டெறிந்து கொண்டு நாம் இன்னமும் ஒரு லட்சம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த அதே ஹோமோ எரெக்டஸ் குரங்கேதான் என்று நிரூபிக்கிறோமே? இதனை எதனில் சேர்ப்பது?

சரி இயற்கையே இப்படி ஒரு மக்கள் தொகை ஒழிப்பை தேர்ந்தெடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது, நமது மூளையின் செயல்பாடுகளையொற்றி நமக்கு நாமே குழி பறித்து கொள்வது. அதன் எதிர் முனையில் நின்று மிருக நிலையில் இருக்கும் நம் புத்தி செயல்பாட்டை எப்படி மனித நிலைக்கு நகர்த்துவது என்று ஏன் கிஞ்சித்தும் எண்ணுவது கிடையாது.

அந்த புகைப்படத்தில் பார்த்தோமானல், ஒரு மனிதனை. நாயை விடக் கேவலமான முறையில் அவன் வாழ்ந்த வீதியிலேயே வைத்து நடத்தப்பெறுவதாக தெரிகிறது. எனக்கு அந்த ஒரு அசையா படத்தினை பார்க்கும் பொழுதே, ஈழத்தில் தமிழர்கள் பட்டிருக்கக் கூடிய சிதைவு நினைவுக்கு பளிச்சென மின்னி மனத்திரையில் வெட்டி மறைகிறது.

அங்கு சிங்களவன் - தமிழன் என்ற இனவெறி இருக்கிறது. இங்கே என்ன கேடு, உங்களுக்கு? அங்கே ஏறி மிதித்து கொண்டு வரும் சிங்களவன் ஒரு நாள் சைனாக்காரனுடன் சேர்ந்து நம்மை பிடரியில் மிதித்தால் அப்பொழுதும் நாம் இருவரும் கம்புச் சண்டை போட்டு நம்முள்ளரயே அடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருப்போமா? அல்லது அவனை சந்திக்க தயாராவோமா? எவன் நமக்கு சரியான பாடத்தை நம் எருமை மூளையில் உறைக்கும்படி உணர வைப்பான்?

இல்ல மொத்தமா இயற்கையின் நகர்வின் பாதையிலேயே சென்று இப்படி வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு அடித்துக் கொண்டு சிறுகச் சிறுக முடித்துக் கொள்வோமா? அதுதான் இயற்கையின் திட்டமுமோ? சிந்திக்க மறுப்பின் எருமை மாட்டு நிலையிலேயே உழண்டு மிருக நிலையிலேயே மரணிப்பும் நிகழ்ந்து, நிகழ்ந்து மீண்டும் மீண்டும் மீசை முறுக்கிக் கொண்டே திரிந்து விடலாமா?

ஒரு குரங்கு எழுந்து வெட்ட வெளியில் நின்று பார்க்க எத்தனித்ததின் விளைவே இன்று புதன் கிரகத்திற்கு ரோபாட் அனுப்பி தண்ணீர் இருக்கிறதா என்று சிந்திக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால், நம்மில் இன்னும் பலபேர் வெட்டவெளியில் நின்றபடியே உறைந்து விட்டோம்... பிற மனிதர்களோட சமமாக பயணிக்க திராணியற்று. விளைவு, மனித பிணங்கள். வீட்டுக்கு வீடு தலையணைக்கு கீழ் அருவாள்கள் வைத்துக் கொண்டு குரங்கு மூதாதையர்கள் மாதிரியே வாழ்க்கையை நகர்த்த சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா 2020 அல்ல இன்னும் 1000 வருடமானாலும் அங்கயேதான் நாம் தேங்கிக் கிடப்போம். போலோ, நைக்கி ஷு, டையும் மனிதனை வெளிப்புறத்தில்தான் மாற்றியிருக்கிறது பெயருக்கு பின்னான வெறீஈஈஈ ஷெட்டி, நாயர், ஐயர், புதிதாக வன்னி... போன்ற அடைமொழிகளுக்கு உள்ளாக ஒளிந்து கிடக்கிறது நம் பரிணாம ஓநாயின் கூரான, கோரமான பற்கள்.



பி.கு: இந்த பதிவினை எழுதுவதற்கான ஜுவலை இங்கிருந்து கிடைச்சது. அதையெல்லாம் முழுசா படிச்சா நானும் பின்னோக்கி 50 ஆயிரம் வருஷம் நடக்கணும். அதுனாலே முழுசா படிக்கல இருந்தாலும்... ஒரு முறை பாத்து வைங்க. ஒரு தேசத்தின் எதிர்காலம் எங்கே ஒளிந்திருக்கிறது என்பதனையாவது அறிந்து கொள்ளலாம்.

Sunday, September 11, 2011

வலைச்சரம் தொடுக்கப் போகிறேன்...


சில வருடங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் எனது மேய்ச்சல் நிலங்களாக பிடித்த சில வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். அதனை தெக்கியிலும் கொண்டு வரும் நோக்கில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நன்றி!

அப்பப்போ என்னையும் நினைவில் வைச்சு இப்படி ஏதாவது உருப்படியாக செய்யுமிடத்தில் கூட கூப்பிட்டு விட்டுடுறாங்கப்பா. திக்கித் திணறி இப்பத்தான் என்னோட முதன்மை வலைத் தளத்தில் 99 பதிவுகள் போட்டுருக்கேன், அதுவும் இரண்டு வருட அவகாசத்தில் அப்படின்னா பார்த்துக்கோங்க எவ்வளவு சரக்கு நம்மகிட்ட இருக்குன்னு.

இந்தச் சூழலில் இப்படித் திடீர்னு நெஞ்சடைக்கிற மாதிரி மத்த பதிவுகளை எல்லாம் படிச்சி அவைகளுக்கு தொடுப்பு வேற கொடுக்கணுமின்னு கட்டாயத்தோட இந்த வலைச்சரங்கள் இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டாங்க. எதிர்பார்ப்பை கொஞ்சம் உங்க கைக்குள்ளயே வைச்சிக்கோங்க, இந்தப் பக்கம் வராவங்க இந்த ஒரு வாரத்திற்கு மட்டும்.

நான் எழுத ஆரம்பிச்ச வருஷத்தில இருந்து இன்னிக்கு வரைக்கும் என்கிட்ட ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றமின்னு பார்த்தா, தட்டச்சும் பொழுது இப்ப வேகமாக தமிழில் தட்டச்ச முடிகிறது முன்பிருந்ததை விட. இரண்டாவது, அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி இந்த இடத்தில் இவங்க சொன்ன மாதிரியே எழுத்தில் எந்தவொரு பெரிய மாற்றமுமில்லை, அதே காய்ந்த விசயங்களை பற்றித்தான் பெரும்பாலும் என் பதிவுகள் அமைந்திருக்கிறது. மேலும் எழுத்துப் பிழைகள் கொஞ்சம் மட்டுப் பட்டிருப்தை மறுப்பதற்கில்லை.

என்னோட ஆரம்பக் கால பதிவுகள் ரொம்பவே வேகமாக இருந்தது. அந்த நேரத்தில் இங்கும் நடந்த வலை அரசியல் எல்லாம் தெரியாமல் சமூக அவலங்களை முகமூடி அகற்றி காட்டுகிறேன் பார் என்று புறப்பட்ட பதிவுகள் எல்லாம் உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே சென்று உறங்க ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் சீரங்கத்து எழுத்தாளர் வலை பதிவுகளைப் பற்றி வரையறுத்திருந்தது அதாவது "ஒரு பத்து நிமிட பாப்பிலாரிட்டிக்காகத்தான்" எழுதுகிறேன் என்று விளங்காமலேயே இங்கே பதிப்பித்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால், இப்பொழுது தான் தெரிகிறது இப்படி இங்கு எழுதுவதற்கு (காசு வாங்காமல்) உளவியல் ரீதியான காரணமிருப்பதை.

அந்த நேரத்தில் ஊரில் பார்த்த காட்சிகளாக, படித்து விட்டு பொற்றோர்களையும், சமூகத்தையும் சுரண்டிச் சாப்பிடும் இளைஞர்களை பார்த்து உதவாக்கரை பட்டாதாரிகள்...! என்றழைத்து ஒரு பதிவும், பிரிதொரு சமயம் அவர்களே எப்படி பரிணமித்து பல்கிப் பெருகி மனித அட்டைகளாக சமூகத்தில் வாழ எத்தனிக்கிறார்கள் என்பதனை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஜீவராசிகள் மனதில் ஈவு இரக்கமற்ற நிலையில் நம்மூர் அனாதைக் குழந்தைகளை அலட்சியம் செய்து அவ் குழந்தைகளை புலம் பெயர வைக்கிறார்கள் என்று தொடர்ந்து கொண்டே செல்லும் அந்நாளைய பதிவுகள்.

பிறகு தமிழ்மணத்திலிருந்து திடீரென்று ஓர் அழைப்பு. அந்த வாரத்தில் நான் வழங்கிய சில பதிவுகள் எனக்கே பிடித்து விட்டதுதான். குழந்தைகளை எப்படி நமது தேவைக்காக நம்முடைய நிறைவேறா எண்ணங்களை அவர்களுனூடையே வைத்து திணித்து நம் அவர்களின் படைப்பாற்றலையும், வாழ்வையுமே பாலடிக்கிறோம் என்பதனை குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்... என்ற பதிவிலும், வளர்ந்து வரும் நாகரீக உலகில் முதலில் எது நாகரீகமென்று கேட்டு விட்டு, பிறகு நட்சத்திர வாரத்தில் அதன் தாக்கம் எங்கே கொண்டு போய் விடுகிறது நம்மை என்பதனை எரோப்ளேனில் நான் கண்ட மேற்கத்தியப் பாதை என்று சொல்லி முடித்திருப்பேன்.

மேலும் இயற்கை நேசி என்ற வலைத் தளத்தில் இயற்கை சார்ந்த விசயங்களை சொந்த அனுபவங்கொண்டு என்னோட (தெகா) வாசனையையும் அதில் குழைத்து பல பதிவுகள் கொடுத்திருக்கிறேன், ஆர்வமுள்ளவர்கள் அங்கே சென்றும் பார்க்கலாம்.


ஊருணியிலும் எனது சிந்தனைகளை வேற்றுக் கிரக வாசிகளும் படிக்க வேண்டும் (முடிந்தால் படிச்சிக்கட்டுங்கிற தைரியத்தோட:) என்ற நல்லெண்ணத்தில் வைத்திருக்கேன். தோண்டிப் பார்க்க நினைக்கிறவங்க தோண்டிப் பாருங்க, ஏதாவது கிடைக்கலாம்.


அப்படா, முடிந்தது சுய-புராணம். அடுத்த பதிவில் இருந்து எப்பலாம் அடுத்தவங்க பதிவு படிக்க நேர்ந்து, அப்படி படித்த பதிவுகளில் எது மனதில் தைத்துப் போனதோ அவர்களை மனதிலிருந்து எடுத்து வெளியே அறிமுகப் படுத்தி வைக்கிறேன்.


அது வரைக்கும் நிம்மதியா மூச்சு வாங்கிக்கோங்க, ஏன்னா, மூச்ச பிடிச்சி திரும்ப இழுத்துப் பிடிக்க வருவேன் அதான்.

Friday, September 09, 2011

நாழிகைக்கடத்தி... w/photo

Time Machine... நாழிகைக்கடத்தி...

சதா எந்நேரமும் பழுப்பேறியபடி மேகங்கள்
தலைக்குச் சற்றே மேலாக
மிக அருகில் மேலும் மேலுமென
கருக்குளித்துக் கொண்டிருந்தது...

காலக் கடிகாரம்
என்னுள் கிரீச்சிட்டபடியே
மிக மெதுவாக
மூர்ச்சைக்கு அருகில் முன்னேறி
மிக அரிதாக
தனது கண்களை மூடிமூடித் திறந்தது...

கடிகாரம் தொட்டு
இப்படியும் அப்படியுமாக குலுக்கியதில்
ஓரிரு நிமிடம் குளக்கரையில்
அரைஞாண் கயிறு தெரிய
யார் தோட்டத்திலோ திருடிய
வெள்ளரிப் பிஞ்சுகளை குமித்து வைத்துவிட்டு
காலத்தை சுழற்றியடித்து நீந்திக்கொண்டிருந்தோம்...

மறு குலுக்கலில் டையும் கோட்டும் பாவித்தபடி
தினப்படி சாத்தியறைந்த அறைக்கதவிற்கு பின்னாக
வார்த்தைப் போர் நிகழ்வதாக நிழலாடி
வெளியே நிறுத்தியிருக்கும்
பென்ஸ் ஊர்தியின் அடுத்தமாத
தவணையை நினைவூட்டியது...

வெளியேறி ஊர்தியை
செலுத்தத் துவங்குகையில்
சிறுதூறலாக விழுந்து
தெறிக்கும் மழைத்துளிகள்
குளத்துச் சிறுவர்களின் சிரிப்பொலிகளாகி
அரைஞாண்கயிற்றின் ஞாபகமூட்டியபோது
காலக் கடிகாரம் இறந்தே கிடந்தது.

Monday, September 05, 2011

வார்த்தெடுப்பு...



தோலுரிப்பதற்கெனவே
எனைச் சுற்றிலும்
சிதில மனித மனங்கள்
தினப்படி உதிர
சிதிலங்களாக உதிர்ந்து விழும்
எதிர்பார்ப்புக் கோட்டைகள்
அந்த மணல் கோபுரங்களைப் போலவே...

பீராயப்படாத சிதில எச்சங்கள்
எப்பொழுதும் மன அழுக்குகளாக
கசிந்து படர்ந்து கொண்டேயிருக்கிறது...

துடைக்கத் துடைக்க
அகத்தின் மீது படியும்
அந்த கண்ணாடி நீராவியினையொத்தே...

கழட்டி முடிக்கும் நாளில்
புது நாணயமென
திறந்தே கெடக்கிறது
மணல் குழி!

Related Posts with Thumbnails