Thursday, September 08, 2016

மனிதன் பாதி மிருகம் மீதி: மரபணு சீரிஸ் - I

ஒரு புத்தகம் வாசிச்சிட்டு இருக்கேன். அதில சுயநலமற்ற மரபணு எப்படி நம்முடைய பரிணாமத்தின் வழியாக பயணப்பட்டு வந்து சேர்ந்திருக்கணும் என்றும் அதனோட பயன் என்னவா இருக்கும்னும் ஒரு கேள்வியோட போகுது.

நாமும் பார்த்திருக்கலாம். பல விலங்குகள் அது மேம்பட்ட பாலூட்டிகளாகவோ, அல்லது பறவை இனங்களிலிலோ, ஏன் கரையான், எரும்பு வகைகளில் கூட இந்த சுயநலமற்ற செயல்பாடுகள் நடைமுறையில் இருப்பதை கண்டிருக்கலாம்.

உதாரணமாக அணில், ஆட்காட்டி குருவி, அல்லது குரங்கு தனக்கென்று பிரத்யோக பாதுகாப்பினைக் கொடுக்கத்தக்க வகையில் முட்டையிட்டோ அல்லது குஞ்சுகள் கூட்டிலோ அல்லது குட்டிகள் அருகமையோ இல்லாத பேச்சிலராக இருந்தாலும், தனக்கு ஆபத்தை உடனடியாக இழைக்கும் விலங்கு, அல்லது சூழல் இருப்பினும் ஏன் ஒலி எழுப்பி மற்ற தன் இன உறுப்பினர்களை விழிப்பு கொள்ளச் செய்கிறது? தனக்கு உடனடியான மரணமே சம்பவிக்கலாம் என்றாலும் ஏன் அனிச்சையாக செய்து வைக்கிறது என்றபடியாக உள்ளது அந்த கேள்வி.

இதற்கு விடையாக தனி நபர் உயிர், உடல் சார்ந்த விசயங்களை பேணி பாதுகாத்துக் கொள்ள எப்படி சுயநல மரபணு அவைகளிடையே பரிணமித்து ஓர் உயிரினத்தை இனமாக இந்த பூமியில் தக்கன பிழைக்க வைக்க உதவுகிறதோ, அதனையொத்தே இந்த சுயநலமற்ற மரபணு பரிணமிப்பு தன்னையொத்த மரபணுக்களை கொண்ட பிற குடும்ப நபர்களாவது தன் ஒரு உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை பெரிதளவில் மிச்சமிருப்பவர்கள் அந்த மரபணுக்களை கடத்திச் செல்ல வாய்ப்பாக அமையுமென்று இந்த தற்சார்பு தற்கொலைக்கு தன்னையும் தாண்டி பரிணாம வழியாக எடுத்து வந்திருப்பதாக பேசுகிறது அந்த புத்தகம்.

இதனையொட்டியே தேனீக்கள், எரும்புகள், கரையான்களிலெல்லாம் ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கத்திற்கு லாயக்கில்லாத உழைப்பாளி நபர்கள் இருந்தாலும், அவைகளின் ப்ரக்ஞையற்ற தற்கொலைச் செயல்களை இந்த மரபணுவே செயலாற்ற வைக்கிறதுன்னும் புரிஞ்சிக்கிறேன்.

போலவே, நம்முடைய செயல்களிலும் இது போன்றே மரபணு தற்காப்பிற்கெனவும், ஓர் இனமாக பரிணமித்து நம்மை தக்க வைத்துக் கொள்ளவும், எது போன்ற செயல்பாடுகளெல்லாம் இந்த இயற்கை கால ஆற்றில் பயனுள்ளதாக இருக்கிறதோ அதெல்லாம் மரபணுவிற்குள் பொதிக்கப்பட்டு நாம வெறும் இயந்திரம் போன்று ஏன், எதற்குன்னு கேள்வி பதில் செஞ்சிக்காமயே குட்டி போட்டு, வளர்த்து, வெட்டுக் கொத்து நடத்தி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு போற அளவிலேயே இருக்கோம்... it is just a by product of genetical interest, effortlessly leading by an innate behavior.

*****************************************************************

நேற்று எப்படி தன்னலமற்ற மரபணு நம்முள் கடத்தப்பெற்று அனிச்சையாக தன் இனம் சார்ந்து செயல்படுதுங்கிறதை பத்தி பேசினோம். இன்னிக்கு இன்னொரு கோணத்தில இந்த பிறருக்கு உதவும் இயல்பு (altruism) எந்தளவிற்கு மனித சகோதரத்தில் முன் நிற்கிறது நிக்கலைன்னு இன்னும் கொஞ்சம் கிட்டே போயி பார்ப்போமா!

சில வருடங்களுக்கு முன்பு ஹிமலயாவிற்கு பக்கத்தில சாமீ கும்பிட போன மக்காவை திடீர்னு பேரிரைச்சலோட மேகம் வெடித்து கொட்டின மழை, வெள்ளமா மாறி மக்களை அடிச்சு எடுத்துகிட்டு போனதா செய்திகள்ல படித்தோம்.

அதில யாரு என்னான்னு தெரியாம அடிச்சு இழுத்துகிட்டு போன பிற வீட்டு மக்காவை குதிச்சு காப்பாத்தினதாவும் சில செய்திகள் வாசிச்சோம். அது போலவே சென்னை வெள்ளம், சுனாமி நிகழ்வுகளின் போதும் நடந்தது.

இருப்பினும் அதற்கு மாறாக மரபணு ரீதியாக இயற்கை எதனை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து சேர்க்கிறதுன்னு பார்த்தா- ஒரே குடும்பத்தில் அம்மாவின் வளர்ப்பால் வளர்த்தெடுக்கப்படுகிற சகோதரர்கள் அதனை பார்த்து வளர்வதாலேயே தான் அந்த பாசப்பிணைப்பு அதீதமாக பதியவைக்கப்படுகிறதாம். அது தூரம் அதிகமாக அதிகமாக அதனுடைய ஈர்ப்பு குறைகிறதாம்... உதாரணமாக சித்தப்பா, பெரியப்பா மக்கள் இப்படியே இது விரிகிறது.

இதனை இன்னும் நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் காட்டிற்குள் செல்வோம். சிம்பன்சிகள் புரத தேவையையொட்டி தனது குட்டிகளுக்கு கொண்டு வரும் இரண்டு கிலோ மாமீசத்தில் பங்கு பிரித்து பிற பெண் சிம்பன்சிகள் பெற்ற குட்டிகளுக்கும், தன்னுடைய குட்டிகளுக்கும் ஒரே அளவில் பிரித்து கொடுத்து தனது தாராள மனதை காட்டும் பட்சத்தில், அந்த குணமே தனது குட்டிகள் ஊட்டச் சத்து குறைந்து மரணிக்கும் தருவாயில் கொண்டு சென்று நிறுத்தினால், இயற்கை எதனைத் தழுவி அடுத்த கட்டத்திற்கு கடத்தும்? தாராள உள்ளம் படைத்த அந்த அம்மாவையா? அல்லது கொஞ்சம் சுயநலமாக தனது குட்டிகளுக்கு அதிகமாக கொடுக்கும் அம்மாவையா? மாற்று கருத்தே இல்லாமல் கொஞ்சம் சுயநலத்துடன் இயங்கும் அம்மாவின் குணத்தைத் தான் இல்லையா?

அப்படியே இப்போ கேமராவை நம்ம வீட்டிற்குள் நகர்த்துங்க. வெளியில இருந்து வந்து இணையும் இரு வேறு நபர்கள் தங்களது குழந்தைகள் என வரும் பொழுது ஒரே நிலையையும், ஆனால், அவரவர்களின் பெற்றோர், சகோ என்றால் ஒரு நிலையையும் எடுக்கும் லாஜிக் ஏன் என்று புரிகிறதா? ஏனெனில், அங்கே தூரம் தூரமாக வளர்ந்து வருவதால் அந்த பாச பிணைப்பு இருக்க வேண்டுமென்ற ’தூரப் படுத்தல் மரபணு’ அந்த விளையாட்டை நிகழ்த்துகிறது. அது அவர்களாகவே செய்யவில்லை, அனிச்சை செயல் (உஷ் அப்பாடா, தப்பிச்சீங்க).

இப்படி எல்லாத்தையுமே ஒரு மிருக நிலையிலிருந்து நம்மை புரிந்து கொண்டால் எல்லா மனிதர்களையும் நேசிக்கலாம், அவங்கவங்க நிலையிலேயே வைத்துன்னு நினைக்கிறேன்.

இன்னொரு கொசுறுச் செய்தி. ஆண்களுக்கு குடும்பம் என்ற கருதுகோளே கிட்டியிருக்காதாம் அவர்கள் சகோதர/ சகோதரிகளிடன் வாழ்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பு மட்டும் கிடைத்திருக்காத பட்சத்தில்... அங்குதானே பகிர்ந்து கொள்வது, இரக்கம் காட்டுவது, விட்டுக்கொடுத்து போதல் போன்ற நடைமுறை விசயங்கள் கூர் தீட்டப் படுகிறது.

Sunday, August 28, 2016

சுமத்தலின் வலி...

ஒரிசாவில் ஒரு கணவர் தனது இறந்து போன மனைவியின் பொட்டலத்தை சுமந்தவாறு நடந்தார் நடந்தார் நடந்து கொண்டே இருந்தார்... தனது மகளும் கூடவே நடந்து வருகிறார்; அவ்வப்பொழுது மகள் உடைந்து அழுகிறார். கணவர் வீதியெங்கும் கடந்தகால போராட்ட வாழ்வை தனது மனைவியுடன் சேர்ந்து சமர் கொண்டதை அசை போட்டுக் கொண்டே அந்த பணிரெண்டு கிலோமீட்டரை கடந்து ரியோ ஒலிம்பிக்கில் ஹுசன் போல்ட் கூட தவழ்ந்து கடக்க முடியாத துயர தூரத்தை நடந்தே கடந்து விட்டார்.

இதனைக் கண்டு கொதித்த நெட்டிசன்களும், பொது மக்களும் பல விதமாக தங்களுடைய கையாலாகாத புலம்பல்களை கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், ஓவியமாகவும் தன்னிச்சையாக எழும்பும் உணர்ச்சிகளின் பொருட்டு பொங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

அது போன்ற பொங்கலைத் தவிர வேறு என்ன பெரிதாக அவர்களால் செய்து விட முடியும்? கடந்த எழுபது ஆண்டுகளில் இது போன்ற எத்தனை பொங்கல்களை நாமும் கண்டு இன்று இந்த 3ஜி, 4ஜி, ப்ராடுபாண்ட் யுகத்திற்குள் நம்மை புகுத்தி வைத்திருக்கிறோம்.

சிறு மிளகு பொங்கலாக என்னுடையது எதுக்காக என்றால், இந்த சீற்றம் கொண்ட மக்களில் பெரும்பகுதியானவர்கள் என்னையொத்தவர்கள். கிராமப் பின்னணியில் விசயங்களை நேரடியாக பார்த்து அனுபவித்து வாழ்ந்தவர்களாக இருக்கக் கூடும். பொங்கல் வாதிகளில் சில பேருக்கு இது ஒரு சைக்கோசோமடிக் அன்சைட்டி. பல பேருக்கு தங்களது மனசாட்சியின் ஓலம்.

முரணாக, இந்த நிகழ்வையும் எப்பொழுதும் போல 2020ல் வல்லரசாக்க முன்னேற்றத்தில் கொண்டு போகும் பெரும் கம்பளிகளைக் கொண்ட நகர் புற சுகவாசிகள், நின்று நிதானமாக இந்த நிகழ்வை பார்த்து தீர்ப்பு எழுதுகிறார்கள்.

இது ஒரு தேசமாக தோல்வியடைந்தோம் என்று பார்க்கக் கூடாது, பொட்டலத்தை தூக்கிச் சென்றவருக்கு கடன் வாங்கும் தகுதியோ, அல்லது அவரைச் சுற்றி இருந்த மக்களின் குறையே இது என்பதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆருடம் கூறு கிறார்கள்.

மாறாக கொதித்து எழுந்து இங்கு உணர்சிகளை வெளிப்படுத்தும் கிராம வாசிகளையொத்தவர்கள் தங்களின் கண்களுக்கு முன்னால் அந்த கணவரின் கால்கள் பூமிக்குள் புதைந்து பிணமாக கனக்கும் தனது மனைவியை அடுத்த அடியை இழுத்து சுமப்பதின் வேதனையை மிகத் துல்லியமாக உணர முடிந்ததாலோ என்னவோதான் அவர்கள் அப்படியாக பொங்குகிறார்கள்.

நான்கு பேர்களாக தூக்கிச் சென்று மயானத்தில் உதவக் கூட தனது தோள்களை கொடுக்காத எந்த ஒரு உள்ளத்தாலும் அந்த பொட்டலத்தின் கனத்தை அறிந்து கொள்ளவே முடியாது. எல்லா வியாக்கியானங்களையும் தூரத்தில் இருந்து நிதானமாக இருபது ரூபாயில் ஒரு குடும்பமே வாழ முடியும் என்று ஏழ்மையைக் கூட அழகியலாக்கும் பிறரிடத்தில் வேறு என்னத்தை தான் எதிர்பார்க்க முடியும்?

செத்து மடிந்து மயானத்தில் சாம்பலாக போகக் கூடிய கட்டையிடத்தில் கூட தீண்டாமை கருதி நான்கு கிலோமீட்டர் சுத்தித் தானே எடுத்து செல்லக் கூடிய மனிதத் தன்மையில் இருக்கும் ஊர்களையும், இருபது ரூபாய் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லையென கூலி வேலைக்கு செல்லும் தம்பதியினரை வழி மறித்து கழுத்தறுத்து கொல்லும் மனிதத்தையும் கொண்டவர்களாத்தானே நாம் பரிணமித்து நிற்கிறோம்.

ஒரு பக்கம் பகட்டு, மறு பக்கம் கும்மிருட்டு! நிதர்சனத்தை பொய்மை தின்னப்பார்க்கிறது, விளைவு போர்க் களத்தில் காணக்கிடைக்கும் காட்சிகள் போல இன்று அன்றாட நிகழ்வுகளாக இது போன்ற மனதை உலுக்கும் காட்சிகள் நம்மைச் சுற்றி நிகழ்வுறுகிறது. நாமும் கண்ணுற்று அனிச்சையாக மனம் மரத்துப் போன நிலையில் கடந்து செல்ல நம்மை தயார் படுத்தி வைத்திருக்கிறோம்.

நன்றி: படம் - பாரதி தம்பி.

Tuesday, February 16, 2016

பெருமரத்து ஒற்றை இறகு!






பூப்பதும் காய்ப்பதும் உதிர்வதும்

முப்பருவமெனினும்

உதிர்வதை

கனமற்றதாக்கலாம்
பெரு மரத்து
பறவையொன்றின்
ஒற்றை இறகு
சப்தமற்று
தரையிறங்குவதைப் போல!









***************************




பெரும் மழைக்காடொன்றில்
அடர் மழை

தொடர் நுணல்கறங்கல்

மலை முகடுகளையும் பரப்பியபடியே

மறுமுனை 
ஆறு ஒன்றின்
கரையை கடந்து கொண்டிருக்கும்
தலைபிரட்டைகள்.

Monday, February 15, 2016

இதயம் பூட்டிய சிறுமி!




விண்மீனுக்கேயான
கதகதப்புடனான
சிறுமியொருத்தி
கதவுகளற்றப் பெருவெளியில்
பாட்டியொருத்தியின்
பாசவெண்பஞ்சின்
நேர்ப்பார்வையுடன்
பேரனைச் சிநேகம்
கொள்கிறாள்...
கனம்பொறுக்காத
வெண்பஞ்சு
அருகே நெருங்கி
நெக்குருகியதில்
அகம் கண்ட சிறுமியின்
உடலெல்லாம் இதயம்!

**************************************






துளிர்த்து பச்சையம் அதீதம் ஊட்டி

விருட்சமாகி
வானைநோக்கி  பரந்து விரிந்து
மொட்டாகி, பூவுமாகி,
காயாகி, கனியுமாக்கி
யாவும் கடந்து
எல்லாம் அறிந்தோமென
நினைவெட்டிய நாளில்
ஒரு மாலையுடைத்த
திடீர் மழையில்
சிலிர்த்தெழுந்தால் மேனியெல்லாம்
மின்மினி பூத்தவாக்கில்
மீண்டும் துளிர்ப்பு!

Friday, February 12, 2016

வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு: மரங்களடர்வு -2



மலையணில்களின் நீண்ட தூரிகையையொத்த அந்த மழைக்காடுகளினூடாக நின்றுநிதானித்துக் காட்டு பூனைகளின் பாதச் சுவடுகள், விட்டைகள், காட்டெருமைகளின் சாணம் மற்றும் அவைகளின் இருப்பு என்று அவதானித்தவாறே
வேலைகளை முடித்த கையோடு, கிடைக்கும் சிற்றோடைக்கு அருகில் பாறையென்றின்மீதாக சப்பணமிட்டவாரு பல மதியங்கள் கழிந்திருக்கிறது.

கண்ணாடிப்  படிகமென சன்னமாக உருண்டோடும் நீராக அத்தனை சுத்தமான தண்ணீர்.
அதன் மீதாக உந்தித் திரியும் ஸ்கிட்டர்ஸ். காய்ந்த சருகொன்றின் மீதாக தொத்தி டைட்டானிக் ஜாக்காக மிதந்து திரியும் எறும்பு. நீர் படிகத்தின் கீழாக என்னையும் கொஞ்சம் பார் என்றபடி ஊர்ந்து நடக்கும் நண்டு. தண்ணீரின் வண்ணத்துடன் இயைந்து போகும் மீன் குஞ்சுகள். ஒன்று மற்றொன்றை விஞ்சும் பேரழகுடன் அணி வகுத்து எனை சுவாசிக்க மறக்கடிக்கும் ஒருரம்மியமான சூழலில் கட்டி போட்டு வைத்திருந்தது அந்த மேற்கு மலை மழைக் காடுகள்.

திரும்பிய பக்கமெல்லாம் மழையில் நனைந்து அடர் கருப்பில் பருத்த அடிப்பகுதியை கொண்ட மரங்களின் அடர்த்தி. பெரும்பகுதியான நேரங்களில் என்னைச் சுற்றிலும் அது என்ன விதமான நேரம் என்று கூட அறிந்து கொள்ள முடியாத வாக்கில் சூரியக் கதிர்களும் கூட காட்டின் தரை தொட அஞ்சி நிற்கும் அடர்வு கொண்ட உச்சிகளையும், உயரங்களையும் கொண்ட மரங்கள். அந்த

மரங்களில் பலவும் என்னை விட பல மடங்கு அதிக வயது கொண்டவை.சற்றே உற்றுக்கேட்டால் நிறைந்த நிசப்தத்தில் பேரமைதியை கற்றுத் தந்தன.


சில் வண்டுகள் மட்டுமே அவ்வப்பொழுது யாரோ ஒருவர் சன்னமான சப்தத்தில் தொடங்க அங்கே இங்கேயென பேரிரைச்சலாக நூற்றுக்கணக்கில் ஒன்று சேர்ந்து ரீங்காரமிட்டு யாரோ ஒரு சிம்ஃபெனி இசைத் தொகுப்பாளர் கையசைத்து திடும்மென ஒரே நேரத்தில் நிறுத்துவதையொத்து நிறுத்திக் கொள்ளும். எங்கோ தூரத்து எதிரொலியாக ஒரு மலபார் விஸ்ஸிங் த்ரஸோ, காட்டுக் கோழியோ அல்லது மரகதப் புறாவோ சப்தமெழுப்பி அந்த அடர் வனமே அதிரச் செய்யும். மதிய உறக்கத்திலிருந்து அப்பொழுதே நெட்டி முறித்து, வாய் பிளந்து கொட்டாவி உதிர்த்து, உயரக் கிளைகளில் ராஜ மிடுக்குடன் ஒரு சிங்கத்தின் கம்பீரத்துடன் மரக் கிளைகளின் தண்டுகளில் நடந்து திரியும் சிங்கவால் குரங்குகள்.

திடும்மென எங்கிருந்தோ அடித்து விரட்டிக் கொண்டு வந்த ஒரு பெரும் கரு 
மேகத் திரள் சூரியக் கதிர்களை மறைத்த படி ஜமுக்காளம் விரிக்க, காடு மேலும் கரிய இருளுக்குள் விழுந்து, அத்தச் சூழலையும் மாற்றிக் காண்பித்து இருக்கிறாயா, அல்லது உன்னையும் சேர்த்து எங்களுடன் இணைத்து கொள்ளவா என்று உருமிக் கடந்து செல்லும்.

பல பொழுதுகள் அதன் மிரட்டலுக்கு அஞ்சாமல் உள்ளிருக்க, இடியுடன் தன் மடி அவிழ்த்து கொட்டிய மழையாக பொழிந்து கொட்டும். குளிர் மழையில் விசிறியாக பரந்து விரிந்த மரத் தண்டுகளின் ஓரமாக அந்தச் சூழலில் ஒதுங்கி கொள்வதும் உண்டு. இல்லையென்றால் தொப்பலாக நனைந்து மேடேறி, நாகரீகமடைந்தால் கடந்து போகும் பேருந்து ஓட்டுநர் பாதி தூரம் போயும் பக்கக் கண்ணாடியில் பார்த்து நிறுத்தி ஏற்றிக் கொள்ளும் பொழுது “சார், அட்டை பார்த்தீங்களா,” உள்ளே ஏத்திறப் போறீங்கன்னு கேட்டபடி வாகனம் நகர்த்துவார். 

இங்கு எங்குமே உணவு பற்றி பேசாததிற்கு காரணமிருக்கிறது. காலையில் கெட்டிச் சட்னி வைத்து வாங்கிய இரண்டு இட்லிகள் மதியம் மூன்று மணிக்கு பிரித்தால் என்ன வாசனையுடன் கிடைத்து விடக் கூடும். அத்தனை நடைக்குப் பிறகு பொட்டலத்தைப் பிரித்து கிள்ளிக் கிள்ளி சாப்பிடும் பொழுது அதன் சுவையே எந்த காண்டினெண்டல் உணவிலும் கிடைக்காத அளவில் உளத்தையும், வயிற்றையும் ஒரு சேர நிரைக்கும். 

வெளியில் வந்தால் மலைவாழ் தேயிலைத் தொழிலாளிகளின் தேநீர்க் கடையில் சில சமயம் ஈக்கள் முதல் போணி செய்யாத போண்டாவோ, வடையோ நல்ல சிவப்பேறிய தேநீருடன் உணவுக்குழாயை வருடியபடி இரைப்பையை நிரப்பும். அரவமற்ற வனப்பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் பசியால் கண்களில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகசைக்க சிவப்பேறிய கண்களுடன் கூடடைவோம்

Wednesday, February 10, 2016

வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு - 1: Memory Lane

கிடைக்கும் இந்த சின்னஞ் சிறிய வாழ்க்கைக்குள் எத்தனை பயணங்கள், இடங்கள், புது மாதிரியான வேலைகள், புதிய மனிதர்கள் என்று விரித்து கொண்டே சென்றால் நம்முடைய வாழ்வின் கடைசி கோப்பையில் மிஞ்சி இருப்பது பிடித்த ரொட்டியை, பிடித்த கட்டன் காஃப்பியில் நனைத்து எடுத்து சாப்பிட எத்தனித்து சிறிதே தாமதித்து வெளியில் இழுக்க உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்து வைத்ததை கடைசி உறிஞ்சலில் ரசித்து அப்படியே விழுங்க ஊத்திக் கொள்வது போல நம்முடைய அனைத்து கடந்து வந்த நினைவு பொதிகளும் தித்திக்கும் வண்ணம் அமைந்திருக்க கூடும்.

என்னுடைய வால்பாறை மற்றும் டாப்சிலிப் நாட்களை இப்பொழுது நினைத்து பார்த்தால் ஏதோ கனவில் வாழ்ந்தது போல இருக்கிறது. ஆனால், நான் அன்றே இதே கோழித் தனமாக அதே கிறுக்குத் தனங்களுடன் வாழ எத்தனித்திருந்ததால், என்னால் முழுமையாக மழையையிலும், வெயிலிலும், அட்டை கடியிலும், யானை விரட்டலிலும், தேவாங்கு பார்க்க சென்ற இரவுகளிலும், யானை, காட்டெருமை சாணங்களை பொரட்டி போட்டும், காட்டு பூனைகளின் விட்டைகளை உடைத்து  போட்டும் அவைகளின் உணவு பழக்க வழக்கங்களை கண்டறியவெனவும் செய்யும் அத்தனை விசயங்களையும் ரசனையுடனும் செய்யும் ஒரு பெரும் வரம் பெற்றிருந்தேன்.

பனி படர்ந்திருக்கும் விடியற் காலப் பொழுதில் கிடைக்கும் ஏதோ உணவை எடுத்துக் கொண்டு காட்டினுள் நடையைக் கட்டினால் மீண்டும் உலகம் இருளினுள் சுருளச் சுருள ஓட்டமும் நடையுமாக மலை உருட்ட வீடு வந்து சேர்க்கும் சரிவான மலைகளில் உருண்டு பொரண்ட நட்களென சென்றவை அவை. எல்லாவற்றிலுமே ரசனை இருந்தது! மைன்ட் ஃபுல் நாட்களவை!!

வண்டுகள், வண்ணத்து பூச்சிகள், தவளைகள், ஊர்வன,  பறவைகள் என எது கிடைத்தாலும் அதனை அடையாளம் காணவென குறிப்பெடுத்து பட்டியலில் இணைத்தாக வேண்டுமென வெறி பிடித்து நகர்ந்த நாட்களவை.

அதே நாட்களில் தான் இக்பால் ம்யூசிகல் கடையுமெனக்கு அறிமுகமாயிருந்தது. வரும் வழியில் வாரத்திற்கு ஒரு டிடிகே90 புது கெசட் வாங்கி அங்கயே இளையராஜவின் 70பது மற்றும் 90களின் பாடல்களை மிக்க சிரத்தையாக கேசட் பை கேசட்டாக பதிவிற்கு கொடுத்து, இரவின் இடுப்பை தாண்டியும் மிக மென்மையாக, சிறுத்தையின் நடமாட்டத்திற்கு அஞ்சிய ஒரு புள்ளிமானின் அச்ச குரலுக்கும், விட்டு விட்டு சிம்ஃபொனி நடத்தும் சில் வண்டுகளின் ரீங்காரத்திக்கிடையிலே விடிய விடிய பாடல்களை ரசித்து கொண்டு கிடந்த நாட்களவையும் கூட.

இத்தனைக்கும் அன்று எனக்கு எந்த காதலியும் கிடையாது. இப்படி ஒரு ரசனையுடன் லயித்துக் கிடக்க. வரும் போகும் வழியில் நான்  உடுத்தி இருக்கும் உடையையும், கழுத்தில் தொங்கும் பைனாகுலரையும் கண்டு விடலைப் பெண்கள் கண் வைத்து போவது மட்டுமே நடந்து வந்தது.

ஆனால், இரவின் மடியில் மேகம் நடைபாதை இறங்கி தேயிலை தோட்டத்தின் ஊடாக தூவலாக அள்ளி கன்னம் வருட வருட எதனைப் பற்றியும் லட்சியமற்று ஓஷோவுடனும், கிட்டுவுடனும் கேள்வி பதில் செஷன் நடத்தியபடியோ, போடா கடவுளுமில்லை, பிசாசுமில்லை என்று அந்த கும்மிருட்டிருக்கு சவால் விட்டபடியோ காட்டெருமையின் நடமாட்டம் கவனித்தபடி காட்டு வாசியாகி திரிந்த நாட்களவை.

ஆனால், அந்த பச்சைய மொசைக் காடு வரும் காலங்களில் எனக்கென வேறு விதமான திட்டத்தை வைத்திருந்திருக்கிறது. என்னுடைய அகந்தயை, மனிதனின் புறவயமான வண்ண தோலுரிப்புகளின் ஊடாக எது போன்ற மனிதனாக பரிணமித்து நிற்கிறேன் என்று டெஸ்ட் வைக்க காத்திருக்கிறது என்று அறியாமலயே!

இது போன்ற மற்றுமொரு இரவில் தொடர்ந்து பயணம் செய்யலாம். நிறைய இருக்கிறது... பேச... 

Tuesday, February 09, 2016

தேர்ந்த மனதும் அஞ்சலியும் by Prabhakar

.. *நிலமே அற்றவன் போலத்தெரியும் இந்தப்பையனைக் கவர்ந்தது எது? அந்த நிலத்தில் வேரூன்றி எழுந்த புனைவுலகின் மலர்ந்த மலர்களை மட்டுமே இவன் பார்க்கிறான். கலை அப்படியும் சென்றடையக்கூடும் போலும்* ...

இந்த முடிவு பத்தியிலிருந்து என்னுடைய உரையாடல் தொடங்குகிறது. அந்த *நிலமற்றவன்* என்ற ஒற்றை சொல்லாடல் எத்தனை எள்ளலையும், அலட்சியத்தையும் கொண்டதாக உள்ளது. ஹ்ம்ம்.

மனித வாழ்வின் எதார்த்தமான வாழ்வை ஒரு படைப்பாளி படைக்கும் பொழுது அதனை தரிசிக்க வாய்ப்பு கிட்டியவர்கள் அவரவர்களின் வாழ்வுப் பின்னணியில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டோ, அல்லது தன்னுடைய முன்னோர்களின் வாழ்விட அமைப்பு, வாழ்க்கை முறை, கடந்த வந்த ஏற்ற இறங்கங்கள், மொழி போன்றவைகள் தாக்கமூற்றி ஆழமாக மனதினில் தடயங்களை விட்டு சென்று பார்வையாளனை, அல்லது வாசகரின் ஆன்மாவை நெஞ்சிலிருந்து உருவி ஆணி அடித்து கட்டிப் போட்டு விட்டதாக உணரச் செய்ய வல்லது. இதனை இன்னொரு கூடு விட்டு கூடு பாயும் கதை சொல்லிக்கு சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமன்பதல்ல.
சில சூழ்நிலைகளில் வாழ்வியலின் எதார்த்ததை அப்படியே பருக நினைப்பவர்களுக்கு மொழியோ அல்லது உணவு, உடை சார்ந்த பழக்க வழக்கமோ தடையாக இருந்து விட முடியாது. கண்களின் வழியாக ஊடுருவி ஒரு ஆன்மாவை தரிசிக்கும் அந்த குழந்தைமைக்கே ஆனா சூழ்ச்சியற்ற தூய மனமிருந்தாலே அந்த கதையின் மையத்திற்குள் தங்களை உள்ளே நகர்த்தி கதா மாந்தர்களுடன் அழுவும் பொழுது அழுதும், சிரிக்கும் பொழுது சிரித்தும், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்தும் மீண்டும் வரக் கூடிய ஆன்ம சிதைப்பு, மறு கட்டெடுப்பு நடத்தி மயான வைராக்கியத்துடன் வெளி வரக் கூடிய அளவிற்கு ஒரு கிராமத்தின் பாலக்கட்டையை வைத்தே கூட நாடுகளின் எல்லைகளை கடந்து மனதுகளின் மையத்துக்குள் அந்த மண் சார்ந்த மக்களை, அவர்களின் வாழ்வியலைக் கொண்டு சேர்க்க முடியும்.
இந்த பின்னணியில் வைத்து பார்க்கும் பொழுது அந்த ஒற்றை பாலத்தை பின்புலமாக கொண்டு கதை சொல்லிய இயக்குனர், எழுத்தாளர் ஒரு மலையாளியாக இருந்து போகும் பச்சத்தில், இரண்டு தலைமுறைக்கு முன்பே புலம் பெயர்ந்த தாய் தந்தைகளை பின்புலத்தில் கொண்டிருந்தாலும், மலையாள வாசிப்பு, நல்ல சினிமா ரசனையுள்ள மக்கள் தங்களுடைய சந்ததிகளுக்கு நல்ல படைப்புகளை கண்டெடுக்கவும், அடையாள படுத்திக் கொடுக்கவும் தவறி இருப்பார்களா என்ன?
எல்லாவற்றுக்கும் மேலாக தனி மனித மனது ஏதோ ஒரு வகையில் தனக்கு தேவையான வற்றை அடைந்து கொண்டதாக எண்ணும் பச்சத்தில், இந்த பொருள் சார் உலகிலிருந்து தப்பி அதனையும் தாண்டி வேறு எதனையோ தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கும். அது போன்ற உள்ளங்கள் நாடு, எல்லை, மதங்கள் தாண்டி வெளியுலகில் பயணித்து கொண்டே இருக்கிறது. சில பேருக்கு அது இந்த வாழ்விலேயே, குறிப்பிட்ட வயதுகுள்ளேயே அமைய பெற்றவர்களாக இருக்கும் பச்சத்தில் இது போன்ற ட்ரைப்யூட் கிடைப்பதில் ஒன்றும் எனக்கு ஆச்சர்யமில்லை.
நான் கோவையில் இருக்கும் பொழுது சுத்தமாக ஒரு வார்த்தை கூட மலையாளம் தெரியாமல் மிகககக மெதுவாக ஊர்ந்து நகரும் படங்களை கூட பார்த்ததுண்டு. என்னுடைய முனைவர் வழிகாட்டி ஒரு மலையாளி. ஒரு முறை அப்படியான ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் மிக குதுகலமாக அந்த படத்தைப் பற்றிச் சொல்லி, நீங்கள் பார்த்தே ஆக வேண்டுமென்று கூறி அவரும் திரையரங்கு சென்று படத்தை பார்த்துவிட்டு என்னை பார்த்து புன் முறுவலுடன் 'இனிமே, சாமீ ஆளைவிடு' என்ற ரேஞ்சிற்கு நடந்த நிகழ்வு அது.
அது ஏன் இங்கே என்றால், மொழி ஆங்கில உப தலைப்பு இல்லையென்றாலும் கதா பாத்திரங்களுடன் தங்களை இணைத்துக் கொண்ட ஒரு சிறந்த கதை சொல்லி மையத்துடன், கதாபாத்திரங்களுடன் வைத்து தைத்து விட முடியும். தேவை அதற்கான ரசனையாளன் அல்லது முற்றிய மனது!
இந்த ஒரு சிறு ரசனைக்கான/தான் வாசிக்கும், படங்களின் ரகங்களை தேர்ந்தெடுக்கும் பின்னணியில் எது போன்ற ரசிகன் இருக்க முடியும் என்று புரிந்து கொள்வதில் என்ன குழப்பம் அல்லது ஆச்சர்யம். எதற்காக அந்த கதை சொல்லி இப்படியான ஒரு ரசிகனை தான் சம்பாதித்து இருக்கிறோமா என்று தெரிய வரும் பச்சத்தில், அவரே துணுக்குற வேண்டும்?
இதிலிருந்து எனக்கு தெரிய வருவது என்னவென்றால் அந்த கதை சொல்லியின் ஜெனியூன் ஈடுபாடு, கலப்படமற்ற எழுத்து, இயக்கம் மற்றும் வழங்கிய விதம்- தன்னுடைய மண்ணைப் பற்றியும், அந்த மண் சார் மக்களைப் பற்றியும் அதன் விழுமியங்களைப் பற்றியும் எந்த விதமான சாய்வுகளுக்கும் உட்படுத்தாமல் காலங்களை தாண்டி எதார்த்தம் சொல்லி நிற்பவையாக வழங்கியிருக்க வேண்டும்.
இன்னும் நான்கு தலைமுறைகளைக் கடந்து ஈழத்திலிருந்தோ/தமிழகத்திலிருந்தோ புலம் பெயர்ந்த ஒரு தமிழன் இதே போன்றதொரு ட்ரைப்யூட் ஏதாவது தன் மண் சார்ந்த விழுமியங்களை, விளிம்பு நிலை வாழ்க்கையை சொல்லும் ஓர் உண்மையான கதை சொல்லிக்கு எடுப்பான். அப்பொழுதும் இது போன்றே இத்தனை மொழியறிவோடு இருக்கும் ஒருவன் எப்படி பத்து மிதி/மாட்டு வண்டிகளோடு வாழ்ந்த ஒரு கதை சொல்லியைப் பற்றி அறிந்து இத்தனை உருக்கத்தோடு வயொலின் பின்னணியில் ஒலிக்க நம்மை விசும்பச் செய்யும் வகையில் ஓர் அஞ்சலி செலுத்த முடியுமென்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருப்போம்.
தொடர்ந்து ஆழ் மனதின் எல்லைகளற்ற பெரும் விசும்பல்களும், பொறாமையும், அகங்காரமும் மட்டுமே வேப்ப மரத்தின் உச்சியில் நின்று அசைந்தாடுவதை ஒத்து காட்டிக் கொடுப்பதாக உள்ளது இந்த அண்டமகா பேரொளியின் பெருமூச்சுகளை செவி மடுக்கும் பொழுது.
பி.கு: இந்த தொடர்புடைய சுட்டிகள் சம்பந்தபட்டவர்களைபற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது அதற்கு ஒரு சிறப்பு நன்றி! தெறிஞ்சிக்காமயே செத்தாலும் நெஞ்சு வேகும்தேய்ன்... இருந்தாலும்...

Related Links:




Sunday, January 24, 2016

பயத்தின் வழியாக எதிர்மறை எண்ணங்களை சென்றடைதல்!

சிகரெட்டை கட் செய்யும் பணியில் மனத்தை திசை திருப்ப கண் மூடி அமர்ந்த பொழுது மனம் தெரு சுத்தியதில் கிடைத்ததை இங்கே... :)

சில காலங்களுக்கு முன்பு யோகா செய்வதின் மூலமாக எது போன்ற பலன்களை ஈட்டிக் கொள்ள முடியும் என்பதனைச் சார்ந்து ஒரு பதிவு இட்டு அங்கயே யோகா மின் புத்தகம் வேண்டுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யுமாறும் கேட்டு கொண்டிருந்தேன். அது ஒரு ஐந்தாறு வருடமிருக்கும்.

அதனையொட்டி வாரத்திற்கு ஒரு இரண்டு மூன்று மின்னஞ்சல்களாவது யோகா புத்தகம் கேட்டு வந்து கொண்டிருக்கிறது. தவறாது நானும் அனுப்பிக் கொண்டுமிருக்கிறேன்.

சரி இப்பொழுது அது எதுக்கு இங்கே என்று கேக்கலாம். ஏதோ தேடி அடைய வேண்டுமென்பவர்களுக்கு ஒரு சிறு கல்லை எடுத்து அவர்கள் உள்ளே தங்களுக்கென கட்டிக் கொள்ள விருக்கும் மன கட்டுமானத்திற்கு என்னாலான ஒரு சிறு உதவியாக அது இருக்கக் கூடும் என்பதில் கிடைத்த ஒரு அல்ப மகிழ்ச்சி.

நேற்று ஒரு கட்டுரை வாசித்தேன். அதனில் தொடர்ந்து தனக்கென ஓர் ஐந்து நிமிடம் செலவு செய்து கொள்ளக் கூட நேரமில்லை என்பவர்கள் தான், மணிக்கணக்காக இணையத்திலும் தேவையற்ற மற்ற விடயங்களிலும் எத்தனையோ நேரத்தை தொலைத்துக் கொண்டுமிருக்கிறோம் என்று கூறியது. அந்த கட்டுரையில் பட்டியலிட்ட நம்முடைய தினசரி வாழ்வின் நேர தொலைப்பை மறுப்பதற்குமில்லை.

நம்முடைய தினசரி வாழ்வை, முடிவுகளை, போராட்டமாக கருதிக் கொண்டு மண்டை உடைத்து கொண்டிருப்பவைகள் அனைத்துக்குமே உட்கார்ந்து நன்றாக தீர்க்கமாக சிந்தித்து நமக்கென எடுக்கபடாத முடிவுகளே காரணமெனவும், தேவையற்ற, கண்ணுக்கு புலப்படாத பயங்களுமே காரணம் என்பதாக அந்த கட்டுரை சுட்டிச் செல்கிறது.

இந்த பயத்தினை வெல்லும் பொழுதே நமக்கு தேவையான வாழ்க்கைப் பயணம் நமக்கே சென்சிபிலாக இருக்க செய்கிறது. நம்மிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளை நாமே உள் நோக்கி ஆராயப்படாமலேயேதானே தொடர்ந்து நாற்பது வருடங்கள் ஆனாலும் பேசியதையே பேசி, நடந்து கொண்ட பாவனையிலேயே தொடர்ந்து சரியென்று மனம் தீர்மானிக்க அதுவே நமது குண இயல்பாக வெளிப்படுத்தி கொள்ள முடிகிறது.

தொடர்ந்து மிகுந்த இறை பக்தியில் தினசரி சடங்காக நான்கு புகைப்படங்களுக்கு முன்பாக அமர்ந்து எழும் ஒருவர் எப்படி எதிர்மறை எண்ணங்களில் சிக்கி, தன்னுடைய வழியில் குறுக்கிடும் மக்களிடமும் அத்தகைய அதிர்வுகளை செலுத்த முடியும். இவைகளை கொண்டு சற்றே அருகே அது போன்ற மனிதர்களை நெருங்கி சென்று படிக்கும் தருவாயில், அங்கே உள் முகமாக தன்னை அறிந்து கொள்ளும் முயற்சி எதுவுமே சாத்திய பட்டிருக்கவில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில் மதச் சடங்கின் வாயிலாக தொடர்ந்து என்ன வெளியே வழங்கப்படுகிறது என்பதிலேயே மனம் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. அந்த எண்ணங்களை உடைத்து கொண்டு தனக்கென யோசிக்கும் 'தியான' மனத்தை அடைய முடிவதே கிடையாது.

இங்கேதான், தனக்கென ஐந்து நிமிடங்கள் தன்னுடைய சுவாசத்தை கவனிப்பதிலேயே கூட 'மனத்தின் திண்மை' ஈட்டும் பக்குவம் கைவரப் பெறுவதாக நவீன என்டெப்ருனர்ஸ், தன்னம்பிக்கையூட்டு குருமார்கள் கண்டறிந்து கூறுகிறார்கள். இதுவே சரியென்றும் எனக்கும் படுகிறது.

வயதோடு நான் அறிந்து கொண்டே வருவது- தனக்குள் செல்லவே இங்கே நம்மில் பலருக்கும் பயமிருக்கிறது. அது அப்படி ஒரு இருட்டறையாக இருக்கிறது. பயம் மட்டுமே நம்மை செலுத்தும் மூலமாக இருக்கிறது. நேர்மறை எண்ணங்களை மட்டுமே தங்களுக்குள் கொண்டவர்களே தங்களுக்கான உலகத்தில் நறுமணங்களை பரப்பும் பூஞ்சோலைகளை உருவாக்கி கொள்கிறார்கள். 

Tuesday, January 19, 2016

நட்சத்திரம் பயணிக்கச் சென்ற ரோகித் வெமுலா: Casteism!

கரையான் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல்கள் போல இந்த சமூகத்தில் தான் எத்தனை கோடி தலைகள் இந்த பூமியின் மேலோட்டில் தினமும் சிறகெடுத்து வெளிக்கிளம்பி, போராடி உணவு சேகரித்து, பொருளீட்டி, இனப்பெருக்கம் செய்து கிடைக்கும் அற்ப ஆயுளுக்குள் தங்களுடைய தடயத்தை விட்டுச் செல்ல வித விதமான முறையில் தங்கள் பாதையில் வைக்கப்படும் சவால்களை சந்தித்து மூன்றுக்கு ஆறில் கனிமமாக தங்களை மாற்றிக் கொள்ளும் இடைவெளியில் எதனை வென்றெடுக்க போராடுகின்றது?

ரோகித் வெமுலா வகை மன வெற்றிடங்களை உருவாக்குவதில் தான் இந்த ஈசல்களுக்கு எத்தனை கொண்டாட்டம். இங்கே ஒரு மனதின் நேர்மையான கேள்விகளுக்கு, தன்னுடைய இருப்பின் அவசியமான தேடல்களுக்கு பொய்மையான, வெற்றுத் தனமான போலி அவசியங்களின் பொருட்டு தொடர்ந்து ரோகித்துகளின் சிறகுகள் சிதைக்கப்பட்டு அவர்கள் மலர்ந்து மணம் பறப்புவதற்கு முன்னாலேயே கசக்கி, சமூக கூட்டு கொலை செய்து எதனையோ தொடர்ந்து நீட்டித்து கொள்ளும் அவசியம் இந்த சமூகத்திற்கு இருந்து போகிறது.

அவர்களின் கடின உழைப்பும், எதிர் நீச்சலின் மூலமாக தாங்களே கற்று கொண்ட மொழி, அறிவுச் சுடரின் பேனா முனையில் தங்களையே உள்ளே மையாக நிரப்பி, வைத்திருந்த அத்தனை மனக் குமுறல்களையும் ஓரு ஏ4 சைஸ் தாளில் நிரப்பி வைத்து விட்டு நட்சத்திரங்களை தேடிச் செல்ல வைத்து விடுகிறது இந்த நாற்றமெடுத்த சமூகம்.

இந்த ஈசல்களின் குறுகிய, சாதீயம் என்ற புற்றால் இந்த அறிவியலுக்கே சிறிதும் சம்பந்தமில்லாத கனன்று கொண்டிருக்கும் அந்த ’தீ’ மரபணுக்குள் புகுந்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விட்டுச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் கொண்டதாக இந்த தோல் சார் இன வெறுப்பு கையிறக்கம் செய்யதக்கதாக அமையப் பெற்று ஒரு சமூகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் சமூக கூட்டுக் கொலைகளை நிகழ்த்திக் கொண்டே ஒன்றுமே அதில் தங்களுக்கு பங்கு இல்லை என்ற வாக்கிலும் கடந்து போயி கொண்டே இருக்கிறது. இதற்கு அடிப்படையான துர் நாற்றத்தின் மூல குழிதான் எங்கே இருக்கிறது? மருத்துவத்தில் ஒரு புற்றுக் கட்டியை அகற்றி கொள்ள அதற்கான வழிகள் இருக்கிறது. ஆனால், உணர்வுகளில் சாக்கடைத் தண்ணீரை கலந்தது போல இருக்கும் இந்த வெறுப்பை எப்படி டைலயசிஸ் செய்வது கொள்வது? அதனை ஓன் ஆன் ஓன் செய்து கொள்வது சாத்தியமா?

இல்லை, இல்லை என்று கூறி கொண்டே மண்டையின் மறு பக்கம் கோரப் பற்கள் துருத்த, ஓநாயின் எச்சிலை ஒழுக விட்டபடி அடுத்து எங்கே கூட்டு சமூக கொலையை நிகழ்த்த முடியுமென்று தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.

சமூக ஆற்றின் ஒவ்வொரு துளைகளிலும், இடுக்குகளிலும் இந்த சாக்கடை நீர் கலந்தே இருக்கிறது. கடவுளர்களின் உருவத்தில், அவர்களுக்கு செய்யும் பூஜை அதனையொட்டி செய்யப் படும் சடங்களில், அதுக்கென அழைக்கப்படும் ஈசல் கூட்டங்களில், தோலின் நிறத்தில், அமற வைக்கப்படுமிடத்தில் , திருமண நிச்சயத்தில், பெயர் சூட்டலில், பந்தலில், பேருந்தில், கிணற்றடியில், கல்விச் சாலையில் இது போன்று எத்தனை எத்தனையோ தினசரி வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பிளவுகளை தொடர்ந்து அறிந்தோ அல்லது மூளை என்ற ஒரு வஸ்து தங்களுக்கு இருப்பதே அறியாமலேயோ செய்து கொண்டு தான் வருகிறது.

கிஞ்சித்தும் சக மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒரு சமூகத்திற்கான கேடு வரலாற்று புத்தகங்களில் நமக்கு பாடமாக கற்றுக் கொடுக்க காத்திருக்கிறது. ரோகித் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய “எனது உடலுக்கும் ஆன்மாவிற்குமான தூரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது” இந்த ஒரு விசயமே அந்த இளைஞனின் மன அழத்தை, அறிவை, பக்குவத்தை, தொலை நோக்கு பார்வையை எடுத்து பறைசாற்றக் கூடியது.

அவன் எவர்களை எதிர்த்து போராடினான்? எதற்காக போராடினான்? தான் வாழும் ஒரு சமூகத்திற்குள்ளயே ‘தன்னுடைய பிறப்பே ஒரு தேவையற்ற விபத்து என்றும் சரியாக அங்கீகரிக்கப்படாத தன்னுடைய குழந்தமை” என்று வெம்பி தொடர் இன்னல்களை அவன் வழியில் பொதித்து மனதை வெற்றிடமாக, நம்பிக்கையிழப்பை உருவாக்கி கொடுத்தது எது? நமது அன்றாட வாழ்க்கையில் நட்சத்திரங்களை பற்றியும், இயற்கையின் இயல்பியலையும் நம்மில் எத்தனை பேர் தொடர்ந்து ஒன்றுடன் மற்றொன்றிற்கு தொடர்பு படுத்தி வாழத் தலைப்படுகிறோம்?

தன்னுடைய தாய் ஒரு சாதாரண தையல் மிஷினைக் கொண்டு அத்தனை தூரம் அவனை கொண்டு வந்ததிற்கு பலனாக அவன் தன்னுடைய இருப்பை அத்தனை பெரிய குன்றில் ஏறி அமர்த்திக் கொள்ள செய்த முயற்சி சரிதானே. அவன் நட்சத்திரங்களையும் இயற்கையின் மான்பையும் போற்றி வாழும் இடத்திற்கு தன்னை நகர்த்திக் கொண்டது அவன் பெற்ற கல்வியும், அந்த இடத்திற்கு தன்னை நகர்த்தி வைத்துக் கொள்ள உதவிய அந்த உண்மையான புத்தகங்களும், அது போன்ற தொலை நோக்கு கொண்ட நல்ல மனிதர்களுமே காரணமாக இருக்க முடியும். சரியான பாதையில் தானே பயணித்து கொண்டிருந்திருக்கிறான்?

ஆனால் இந்த ஈசல்களின் பார்வையில் அதுவே அவனை எதிர் முனையில் நிறுத்தி விட்டது. இன்று அவன் “நான் அந்த நட்சத்திரங்களில் வேறு மாதிரியான வாழ்க்கை ஏதாவது இருக்கிறதா” என்று தேடித் செல்கிறேன் என்று தேடிச் செல்ல வைத்து விட்டது. இது போன்ற எத்தனையோ கடிதங்களை நாமும் வாசித்து கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்.

அவன் வயதை ஒத்தவர்களும், கல்விச் சாலைகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் சமூக அக்கறையும், அறிவும் கொண்டு அரசியல் நிலைப்பாடுகளை இப்பொழுது செதுக்கி கொள்ள வில்லை என்றால் பின்பு எந்த வயதில் அவர்கள் தங்களுக்கான மன வெளிப்பாடுகளை செதிக்கி கொள்ள முடியும். அரசியல் வாதங்களும், நிலைப்பாடுகளும் தானே நம்முடைய வாழ்க்கையையே செதுக்குகிறது. யார் எங்கே இருக்க வேண்டும், எதனை வணங்க வேண்டும், எந்த வழிபாட்டு தளத்துக்குள் யார் நுழைய வேண்டும் நுழையக் கூடாது என்பது வரைக்குமாக அது நீட்டுகிறது. இந்த வயதில் என்ன அரசியல் வேண்டிக் கிடக்கிறது என்று கேட்பவர்களை நோக்கி இந்த கேள்வியை வைக்கிறேன்.

இந்த சமூகத்திற்கு எந்த விதமான கடவுளர்களும், பிழைப்பு வாத நீதிமான்களும், கட்சி தலைவர்களும், மத குருமார்களும், கதை புக் எழுத்தார்களும் உணர்வூட்டமோ, மனசாட்சியோ கொடுத்து விட முடியாது என்பது ஊர்ஜிதமாகி வருகிறது. கூட்டமாக மீண்டு வரவே முடியாத ஒரு பெரும் சாம்பல் பள்ளத் தாக்கை நோக்கி மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

தான் வணங்கும் ஒரு கடவுளின் அடையாளத்தில் ஒருவன் தன்னுடைய ஆளுமையை, சாதியை காட்டிக் கொள்ள முடியுமெனில் இந்த ஈசல் சமூகம் எப்படி தன்னிரைவோடு தனக்கென அக மன ஆராய்ச்சி செய்து கொள்ளும். வெளியுலகில் இல்லை நரகமும், சொர்க்கமும் அடித்து பிடித்துக் கொண்டு துண்டு போட்டு வைக்க, இங்கயே இப்பொழுதே அதனை உருவாக்கியும், அழித்து வரும் நம் கைகளிலேயே அது உள்ளது.

ஏன் மனிதத்தை நம்பிய ரோகித் போன்றவர்களுக்கு பேய், பிசாசுகளின் பேரிலும் கடவுளர்கள் பேரிலும் நம்பிக்கை இல்லையென்பது, இது போன்ற அகால மரணத்தை தழுவியர்கள் கூட இருண்மையில் அதற்கு காரணமானவர்களை ஒன்றுமே செய்து விட முடியவில்லை என்பதனை தனது நிகழ்கால வலியின் ஊடாக எழுப்பி கொண்ட கேள்விகளின் விளைவாகத்தன் இருக்கக் கூடும்.

எது எப்படியாகினும் சானம் தொடர்ந்து ஒரு சமூகத்தை மென்மேலும் மூடிக் கொண்டே வருகிறது. இங்கே தாராசு தட்டுகளில் இருக்க கூடிய நியாய, அநியாங்களின் எடை சமமானதாக இல்லை. எடுத்து கொண்டிருப்பவர்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கொடுத்து கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே விட்டு கொடுப்பதும், அனுசரித்து போவதும் பலவீனமாக பார்க்கப் படுகிறது.

நட்சத்திரங்களையும், பிரபஞ்ச துகள்களையும் தினசரி வாழ்வில் இணைக்கத் தெரிந்தவன் இங்கு வாழ தகுதியற்றவனாகிறான். சிறுமைக்கு பிறந்தவனாகிறான். தன்னை முனைவர் அளவிற்கும் அறிவியலை மூச்சாக சுவாசிக்க தெரிந்தவன் ‘இன்னொரு உலகிற்கு தனது ஆவியை அனுப்பி பயணம் செய்ய நிர்பந்தப்படுத்தப் படுகிறான்.”

ஒரே கிணற்றுக்குள் கிடந்து உழண்டு கொண்டிருக்கும் தலைபிரட்டைகளில் எது உயர்வு, எது தாழ்வு! இது ஒரு சமூக அவலம்!! வெட்கித் தலை குனிய வேண்டிய விசயம். யாருக்கு என்ன, துடைத்து போட்டு விட்டு நகர்ந்து கொண்டே இருப்போம். எத்தனையோ பார்த்து விட்டோம் இதனையும் பார்க்கத் தெரியாதா!

P.S: இந்த கடிதத்தை வாசிக்கும் பொழுது என்ன மாதிரியான உணர்வுகளை உங்கள் மனது கடந்து செல்கிறது... முதலும் கடைசியுமான கடிதம்


Sunday, January 17, 2016

மரணத்தை வென்றவன்: The Revenant

இந்த படத்தோட ஒவ்வொரு நிழல் படத்தையும் பார்க்கும் பொழுது, திரையரங்கு சென்று பார்க்க வேண்டுமென்ற அவாவை தூண்டிய படமிது. இருப்பினும் ஒரு பக்கம் ஒரு சிறு தயக்கம் இருந்து கொண்டே இருந்ததை மறுக்க முடியாது. லியோனார்டோ டிகாப்ரியோ, எதிர்பார்த்த படியே ஹக் க்ளாஸாக (Hugh Glass) வந்து நம்மை வாதையின் உக்கிரத்தையும், போராட்டத்தின் நெஞ்சுறுதியையும், தப்பி பிழைப்பதற்கென தனது கடைசி மூச்சை இழுத்து பிடித்து அவர் வெளி வரும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மையும் சேர்த்தே முனக விடுவதிலுமாக அள்ளி கொண்டு சென்று விட்டார்.

இந்த படம் சிறிது உண்மை கதையையும், நிறைய ஹாலிவுட் மசாலாவும் கலந்து கொடுத்து நமது 90 நிமிடங்களையும் வாயை பொத்தியபடி அமர வைத்திருக்கிறது. இயற்கை. அது ஆழப் பகுதியான வான் வெளியாக இருக்கட்டும், கடலாக. பாலையாக, வனமாக இருக்கட்டும் தனித்து விடப் படும் பொழுது வாழ்க்கையின் இண்டு இடுக்குகளையும் ஒன்று மற்ற சூன்யமாக காட்சி வழங்கி நம்மை உறைய வைத்து விடும் நிஜமது. இதற்கென இந்த படம் கனடாவிலும், அர்ஜெண்டைனாவிலும் படமாக்கப் பட்டிருக்கிறது. பனி சூழ்ந்த பாறை முகடுகளும், ஓயாத அருவிகள் மற்றும் ஆறுகளுக்கிடையிலும் நம்மையும் ஊர்ந்தும், நகர்ந்தும், மிதக்கவும் வைத்து, சுட்டுவிடும் பனிக் குளிரில் ஒட்டுத் துணி இல்லாமல் சிலிர்க்க வைத்துமாக டிகாப்பிரியோ நமது முகத்தில் அவருடைய உணர்வுகளை கொண்டு வர வைத்திருக்கிறார்.

அவருடைய நடிப்பின் உச்சம் க்ரிஸ்லி கரடி ஒன்று அவரை பொரட்டி போட்டு குதறுவதில் ஆரம்பிக்கிறது. அந்த கணத்தில் எனக்கு குறுக்குவாட்டாக மண்டை முழுக்க ஓடியது- நான் முதுமலையில் அதே தூரத்தில் வைத்து கரையான் புற்று ஒன்றை நோண்டி கொண்டிருந்த ஒரு கரடியைப் பார்த்ததை மனத்திரையில் கொண்டு வந்து ஜில்லிட வைத்தது. இந்த படத்தில் டிகாப்பிரியோவை விட்டு, விட்டு ஐந்து நிமிடத்திற்கும் மேலாக வந்து குதறும் கரடி காட்சியமைப்பு முதுகெலும்பை ஜில்லிட வைப்பதாக உள்ளது. அதனையொட்டி டிகாப்பிரியோவின் வலிக்கான முனகல்கள் நம்மை சீட்டின் முனைக்கு எடுத்து வந்து மீண்டும் சுதாகரித்து பின்னால் நகர வைக்கத் தக்கதாக உள்ளது.

இத்தனை தத்ரூபமான வாதையின் வெளிப்பாடுகளை இத்தனை அருகாமையில் வைத்து வேறு எந்த படத்திலும் பார்த்ததாக எனக்கு ஞாபகத்திலில்லை. இத்தனை அழகினை கொண்ட இயற்கை, ஓரிரு நிமிடங்களில் இரக்கமேயற்ற கொடுரீயாக மாற முடியுமா என்ற கேள்விக்கு இந்த படம் தொடர்ந்து பதிலுரைத்து கொண்டே வருகிறது.

தொடக்க காட்சியில் தொடர்பேயில்லாத விலங்கு தோல் சேகரிக்கும் ஒரு கூட்டத்தை சிவப்பிந்தியர்கள் ஏன் இப்படி வேட்டையாடுகிறார்கள், என்ற சினிமாத் தனமான ஒரு கழிவிரக்கம் மின்னலைப் போல நமது மனதில் தோன்றி மறையலாம். இருப்பினும் பல இடங்களில் சிவப்பிந்தியர்கள் பக்கமிருந்து பல நியாயமான வாழ்வாதாரங்களை பறித்து கொண்டதற்கான விசயங்களை அவர்கள் தரப்பிலிருந்து பேச விட்டு நம்மை கேக்க விட்டிருக்கிறார்கள்.

சிவப்பிந்திய பெண் ஒருத்தியை அந்த முகாமில் வைத்து அவளை தேவைப்படும் பொழுதுதெல்லாம் வன்புணர்வு கொள்ளுவதாக வரும் ஒரு காட்சியாக இருக்கட்டும், மற்றுமொரு சிவப்பிந்திய ஊரைத் தாண்டி செல்லும் பொழுது மொத்த ஊரே சாகடிக்கப்பட்டு உடல்கள் தங்களின் வாழ்விடத்திற்கு முன்பாகவே விட்டுவிட்டு சென்றது போன்ற காட்சியாக இருக்கட்டும், சிவப்பிந்தியர்கள் எது போன்ற விபரீதங்களை எல்லாம் அந்த கால கட்டத்தில் அனுபவித்திருப்பார்கள் என்பதனை நம்முள் கேள்விகளாக முன் வைத்த படியே நகர்கின்றது.

இந்த படத்தில் ஓர் அழகான காதல் கதையுமுண்டு! அது டைட்டானிக் பாணி. இந்த படம் பாதி உண்மைக் கதையும், மீதி ஹாலிவுட் மசாலாவும் என்று ஆரம்பத்தில் கூறினேலல்லவா? உண்மைப் பகுதி 1800களில் ஹக் க்ளாஸ் என்பவர் நீர் நாய் மற்றும் விலங்கு தோல் வேட்டையாளர். அவரை ஒரு கரடி பொரட்டி எடுத்து விடுகிறது. ஏனைய ஹக் நண்பர்களால் அந்தக் கரடி சுட்டு கொள்ளப்படுகிறது. அந்த நிகழ்வு அவரை சாகும் நிலையில் விட்டு செல்கிறது. காயமுற்ற நிலையில் உள்ள ஹக்கை தூக்கி கொண்டு, தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். பயணம் கரடுமுரடாகிறது. பயணத்தை தொடர்வதே கேள்விக்கு உள்ளாகும் பொழுது, பயண தலைமை இரண்டு பேரை ஹக்குடன் இருக்கு மாறு பணித்து விட்டு ஏனையவர்கள் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்.

ஜான் ஃபிட்ஜரால்ட் தன்னை விட இளைஞரான ஜிம்மை மூளைச் சலவை செய்து, ஹக்கை அரைகுறை உயிரோடு விட்டு விட்டு ஏனையவர்களுடன் தங்களது பயணத்தை தொடர முயல்கிறார். இது வரையிலும் தான் உண்மை கதை. படத்திற்கென வரும் காதல் கதையில், டிகாப்பிரியோ சிவபிந்திய பெண் ஒருத்தியுடன் கலந்து, அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான். வெள்ளையின காலனி மக்கள் ஊர் புகுந்து சுட்டு கொல்லும் மேளாவில், கதாநாயகியும் இறந்து போகிறாள்.

மகனுடன் டிகாப்ரியோ பயணத்தை தொடர்கிறான். இந்த நிலையில் படத்திற்கென ஃபிட்ஜரால்ட், ஹக்கின் மூக்கையும், வாயையும் மூடி கொன்று விட எத்தனிக்கும் பொழுது மகன் போராடி காப்பாற்ற முனையும் பொழுது தந்தைக்கு முன்பாகவே கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்படுகிறான். பின்பு, டிகாப்ரியோவை அப்படியே விட்டுவிட்டு மற்ற இருவரும் சென்று விடுகிறார்கள்.

மூன்று வாரத்தில் முதல் முறையாக படுத்த படுக்கையாக கிடந்தவன், தன் உடம்பை தரையில் போட்டு இழுத்து, இழுத்து ஊர்ந்து சென்று தன்னுடைய மகன் கொலையுண்டு கிடக்கும் காட்சியை காண்பதும், அதற்கென முகத்தில் காட்டும் உணர்வுகள், நமது தொண்டையில் ஏதோ ஒன்று ப்ளக் என்று அடைத்து கொள்ள வைப்பதாக உள்ளது. அந்த காட்சிக்கிடையே சிறிது நேரம் மேகம் சூரியனை மறைத்தும் மறைக்கமாலுமாக நகர்ந்து கொண்டிருப்பதை ரொம்ப நிதானமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். இது போன்ற பல மாலை, காலை சூரிய உதயமும், மறைவுமாக காட்சி படுத்தல்கள், அந்த பகுதியில் நாமும் வாழ்ந்து விட்டு வந்ததிற்கான அடர்த்தியான மன நிலையை விட்டுச் செல்கிறது.

மறைந்து போன காதலி டிகாப்ரியோவின் மரண போராட்டதின் போதும், ஆழ்ந்த உறக்கத்தின் போதுமாக வந்து ஹஸ், ஹஸ்பதும், மரத்தின் வலிமையோடு வாழ்வின் போராட்ட குணத்தை ஒப்பீட்டு அவனை போராட உந்துவதும் ஏதோ சிவப்பிந்தியர்களின் அதெண்டிக்கான மைண்ட் ஸ்பிரிட் இசையை ஒலிக்க விட்டு கேட்பதனை போல வெரி மெடிட்டேடிவ். 

மிச்சக் கதை டிகாப்ரியோ பலி வாங்கும் எண்ணத்துடன் ஃபிட்ஜரால்டை தேடி சென்று பலி வாங்குவதே கதை.

பனியில் ரத்தம் பார்க்கும் பொழுது ஏதோ மனதை பிழிகிறது. வீட்டிற்கு வந்து பாப்பாவின் முகம் பார்க்க முடியாமல் அழுது கொண்டே இருக்க நேர்ந்தது. அவள் என் கண்களை பார்த்து விட்டு அவள் கண்களில் தொடர்ந்து முன் மண்டை முடி கண்களில் வீழ்வதாக கண்ணை துடைத்து கொண்டே இருந்தாள். பிறகு, ஒரே ஒரு கேள்வி எதற்காக அந்த படத்தை பார்க்க சென்றாய்? அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை. 

ஏன் இந்த படத்தை பார்க்க மனது விரும்பியது. உள்ளே ஏதோ ஒரு வெற்றிடம் தொடர்ந்து பரந்து விரிந்த அந்த பனிக் காட்டின் மரங்களில் உரசி எழுப்பும் சப்பத்துடன் ஓலமிட்ட படியே எதனையோ நிரப்பிக் கொள்ள மனது தொடர்ந்து கனத்தை விரும்புகிறதோ என்னவோ. நிலையாமை!!


Related Posts with Thumbnails