Thursday, July 23, 2009

புதுக்கோட்டையில் ஒர் "சைக்கோபாத்!":Psychopath

மின்னஞ்சலின் மூலமாக ஒரு நண்பரொருவர் ஒரு சுவாரசியமான சுட்டி ஒன்று கொடுத்திருந்தார் என்றைக்குமில்லாமல். அது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் வந்தது. அந்த செய்தி எனது மாவட்டத்திலிருந்து ஒரு தொடர் கொலையாளன் எட்டு பெண்களை கொன்றதிற்குப் பிறகு அந்த உடல்களுடன் வன்புணர்வு கொண்டதாகவும் இப்பொழுது பிடிப்பட்டுப் போனதாகவும் அமைந்திருந்தது.

படித்ததும் சட்டென்று நிமிர்ந்து உட்கார வைத்தது. இப்பொழுதுதான் அன்மையில் நானும் ஒரு புத்தகம் சோசியோபாத் எப்படி சைக்கோபாத்தாக பரிணமிக்கிறான் என்பதாக ஒரு உளவியள் துறை வல்லுனரால் எழுதப் பெற்ற புத்தகத்தை வாங்கியிருந்தேன் படித்துத்தான் பார்ப்போமே என்று.

நம்மூரில் எப்பொழுதாவது இது போன்ற தொடர்க் கொலைகள் வெளிச்சத்திற்கு வந்து போவதுண்டு. இருப்பினும் மேற்கத்திய நாடுகளுக்கினையாக அவ்வளவு பெரிய அளவில் இது போன்ற கொலையாளர்கள் இருந்ததாகவோ அல்லது பிடிபட்டு அவர்களின் பின்னணியை தோண்டித் துளாவியதாகவே எந்தவொரு செய்தியும் நானறிந்து படித்தது கிடையாது; நம்மூர் பின்னணியில்.

இன்றைய உலகமயமாக்கப் பட்ட நிலையில் இந்த பூமிப் பந்தே இழுத்து நெருக்கி கட்டப்பட்டுவிட்ட நிலையில் செய்திகளும் அது எது போன்றவையானாலும் சரி புத்தக வடிவிலோ அல்லது பிற காணொலி அல்லது அச்சு வடிவ ஊடகங்களின் வழியாகவோ மக்களுக்கு உடனுக்குடன் சென்றடைகிறது. உதாரணமாக இது போன்ற 'டிவிஸ்டட்' குற்றமொன்று நிகழ்ந்த நிலையில், அச் செய்திகள் மொத்த குற்றம் விளைவிக்கப் பட்ட விரிவான பின்னணியில் எடுத்துயம்பி வேண்டியவர், வேண்டாதவர் என்ற எல்லைகளற்று தேவையான, தேவையில்லாத குப்பைகளையும் மக்களின் மனத்தினுள் விதைத்துச் செல்கிறது; செய்திகள் கொடுக்குறோம் என்ற போர்வையில்.

இந் நிலையில் இந்தியா போன்ற மக்கட் தொகை நிறைந்த நாட்டில் பிறப்பிற்கும், இறப்பிற்குமான சுவடே தெரிய வராமல் எத்தனையோ மக்கள் பூத்து, குலுங்கி, கருகிவிடும் பின்னணியில் இது போன்ற தொடர் கொலைகள் நடைபெறும் கணம் அவைகளின் செய்தி இதுதான் என்று அறிதியிட்டு சொல்லுவதற்கு முன்பே விளைவு ரொம்ப மோசமாக பல பேரின் உயிர்களை காவு எடுத்த நிலையை அடைந்திருக்கக் கூடும்.

பொதுவாக அறியப்பட்ட வரையில் தொடர் கொலையாளிகள் மேற்கத்திய பின்னணியில் பல காலங்கள் சக மக்களோட மிகச் சாமன்யான வாழ்ந்து இவர்தான அவர் என்று இனம் பிரித்து பார்க்க முடியாமலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த புதுக்கோட்டை நிகழ்வு மூன்று மாத இடைவெளியிலயே வெளி வந்திருக்கிறது, அதிர்ஷடவசமானது எனறாலும், இன்னும் நுட்பமாக இயங்கியிருந்தால் இவரும் காலங்களைத் தாழ்த்தியிருக்கக் கூடும்.

எது எப்படியாகினும் கொலையாளியின் வழித்தடம் அசலாக ஒரு "சைக்கோபாத்தின்" செய்களை ஒட்டியே அமைந்திருக்கிறது. இந்த செய்தியின் பொருட்டு பிடிபட்ட கொலையாளியை கண்டிப்பாக சம்பந்தப்பட்ட உளவியல் துறை நிபுணர்களைக் கொண்டு நன்றாக அந்த மனிதரின் பின்புலத்தை ஆய்ந்து, ஆராய்ந்து ஒரு முழு நீள ஆய்வரிக்கையாக எந்த "சமூக, மன, உடல்" சூழ்நிலை அவரை இது போன்ற ஒரு செயலைச் செய்ய தூண்டியது என்பதனை கண்டறியும் பொழுது பின் வரக் கூடிய சம்பவங்களுக்கான சாத்தியக் கூறுகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது யார்யென அறியும் செயல்திறன் இவைகளை கூட்டிக் கொள்ளும் வாய்ப்பாக அமையும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இதனை ஒரு "சிறப்பு நிபுணக் குழுவையமைத்து" இவரிடத்திலிருந்து இந்தியாவிற்கே ஒரு "பைலட்" ஆராய்ச்சியாக அமைய முடிக்கி விட்டால் ரொம்ப பிரோயசனமாக இருக்கும் நம் சமூகத்திற்கு.

இதன் பொருட்டு தனியார் தொண்டு நிறுவனங்களின் ஆர்வலர்களும் இது தொடர்பான நிபுணர்களை அணுகி தனியாகவும் மாவட்ட ஆட்சியரின் துணையுடன் அணுகலாமே... முயற்சிப்பார்களா?

Friday, July 10, 2009

தமிழ் பெரும் விழா - தாமரை - வைரமுத்து: Fetna 2009 - II

அடுத்த நாள் விழாவை ஓரளவிற்கு முழுமையா பார்த்த மாதிரி இருந்தாலும், காலையில 9.30 மணிக்கு முன்னால் வரைக்கும் நடந்த நிகழ்ச்சிகளை பார்க்க முடியல [எனது முதல் நாள் அனுபவம் இங்கே]. ஏன்னா வீட்டிலருந்து கிளம்பி வந்ததே தாமதம். நான் வந்து அமர்ந்த சிறிது நேரம் கழிச்சு ஐயா சிலம்பொலியார் அவர்கள் பேசக் கேட்டேன். அவர் நம் தமிழ்ப் பெயர்கள் என நம்பி வைக்கும் சில பெயர்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று தமிழிலாக்கி காமித்த விதம் அரங்கையே வெடிச் சிரிப்பு சிரிக்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து ஒரு அரட்டை அரங்கம் பாணி நிகழ்ச்சி ஒன்று. அது ஓடிட்டு இருக்கும் போது என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரை ஆவலுடன் கவிஞர். தாமரை வந்திருக்கிறாரா என்று கேட்டேன் அதற்கு அவர் வரவில்லையென்று நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டே நிகழ்ச்சி நிரல் அட்டையின் மீது தனது அலைபேசியின் வெளிச்சத்தை நிரப்பி தேடி இல்லையென்றார்.

இதென்ன புதுக் கதை! நான் இந்த விழாவிலே நண்பர்களன்றி தாமரைக்காகவும் தான் இத்தனை நெருக்கடியிலும் அங்கு சென்றேன். ஆனால், உட் கட்சி பூசலோ இல்லை வேறு என்ன காரணத்தாலோ தாமரை கழட்டி விடப்பட்டிருக்கிறார் போல. எனக்கு ஒரு ஆள் மேலதான் கண்ணா இருக்கு, பார்ப்போம்; பின்னால் என் கெஸ் சரியா என்று. உண்மை பேசுற எவனுக்கும் கிடைக்கும் மரியாதை இப்படியாகத்தான் இருக்க முடியுமென்று பக்கத்து இருக்கையாளரிடம் முனகிக் கொண்டே சீட்டில் நெளிந்தேன்.

அங்கயே பல விதப் பட்ட எண்ணங்களால் சிக்குண்டது மனது. என்ன உலகமிது? மனித மனம் எப்பொழுதும் உண்மைகளை மறுத்து, போலியாக நடித்துக் கொள்வதிலயே அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. போலி மனிதர்கள் தன் நிறம் உயர்த்தி காமிக்க முகச் சாயங்களுக்கு கீழ் ஒளிந்து, உதட்டில் இனிப்பு தடவிய வார்த்தைகளைக் கொண்டு பேசும் விற்பனை மனிதர்களை அப்படியே நம்பி தெரிந்தே வாங்க எத்தனிக்கும் நம் மனது, தெரிந்தே, உண்மை பேசுபவர்களை தவிர்க்க முனைகிறதே, இது எதனால்? பிரச்சினைகளிலிருந்து தன்னை விளக்கி வைத்து, ஒரு பாதுகாப்பான இலக்கிய, காலச்சார காவலன் அவதாரம் எடுக்கத்தானோ? இது எப்படி, தனியொருவனாக தன்னுள்ளே என்றேனும் ஒரு நாள் உண்மையான "அவனை" சந்திக்கும் பொழுது அவன் வாழ்வே அவனை பார்த்து நகைப்பதிலிருந்து விலகி நிற்பதாக அன்றும் தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியும்? இப்படியே எண்ணச் சுழிப்பில் சிக்குற எத்தனித்தது என் மனது...

பின்பு மதிய உணவு இடைவேளை, அதனின்று எனை மீட்டது. சாப்பாடு அசத்தல்! செட்டிநாடு போல, நல்லாவே பண்ணியிருந்தாங்க. அங்கே ஒரு ஜிகு, ஜிகு பிரபலம் கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில், மேஜைக்கு மேஜைக்கு "நீங்க, ரொம்ப அழகா இருக்குறீங்க" பாட்டு பாடியிருப்பாங்க போல சுளுக்காம சிரிச்சிட்டே எதிர்பாட்டு "நன்றிங்க" சொல்லியிருப்பார் போல, அதப் பார்த்திட்டே நான் அரை "நான்(bread)" சாப்பிடாம தட்டிலயே விட்டுட்டேன். பிரபலம்ங்கிற வேலை ரொம்ப கஷ்டம்தானோ!

சாப்பாட்டிற்கு பிறகு நான் ரொம்ப சிலாகிச்சு பார்த்த ஒரு பேச்சுன்னா அது மனித உரிமை குழுவிலிருந்து வந்து பேசிய ஒரு வெள்ளக்காரம்மா டாக்டர் Ellyn Shander. அரங்கத்தில் இருந்த சில மக்களை நெளிய வைச்சு, மனசை நெருடுகிற ஸ்லைடுகளை இது வரைக்கும் நம்மக்களில் சிலர் பார்க்கவே கூச்சப்பட்ட(பயந்த) படங்களையும் வழங்கி அந்தம்மா பாதிக்கப்பட்ட ஈழ மக்களோட தன்னை இணைச்சு பேசிய விதம் என்ன சொல்றது. ம்ம்ம்.

அந்தம்மா இந்த ஈழ அவலத்தை தன்னோட இனமான யூதர்கள் , நாசி காலத்தில் பட்ட அவஸ்தைகளுக்கும், வேதனைக்களுக்கும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல இந்த ஈழ நிகழ்வு என்று, ராஜபக்சாவையும், ஹிட்லரையும் ஒரே ஸ்லைடில் காமிக்கும் பொழுது ஏன் இதனை இந்த ஒட்டு மொத்த உலகமும் அவ்வாறு கண்ணுறவில்லை என்ற கேள்வியே தொக்கி நின்றது என் முன்னால்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த உணர்ச்சிகளோட பேசிக் கொண்டே சென்றார்கள். அப்பொழுதும் நினைச்சேன், இந்த சில்லூண்டி ஊர்க்கார சினிமாக் காரய்ங்க எல்லாரையும் கொண்டு வந்து முன்னாலே அமர வைச்சிருக்கலாம்னு. உண்மையான பாடத்தை ஒரு முறையாவது கேக்க வைக்க. தன் உரையை முடிப்பதற்கு முன்பாக பல முறை அரங்கம் உறங்குவதாக உசிப்பேத்தி மக்கள் அனைவரையும் "Next year in Eelam" என்று மூன்று முறைக்கும் அதிகமாக கூற வைத்து அரங்கத்தையே நடு நடுங்க வைத்துவிட்டார்.

உரையின் இறுதியில் அவரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கெளரவிக்கும் விதமாகவும் எல்லாரும் எழுந்து நின்று கை தட்டியது அரைகுறை மனதோடும், தர்மசங்கடத்தோட ஏண்டா வென்று நினைத்தவர்களையும் கூட எழுந்து நிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தியது என்றால் மிகையாக இருக்க முடியாது.

அப்படியாக ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார், எனக்கு அந்த டாக்டர் பேசப் பேச கண்டிப்பாக நம்மூர் கவிஞர் நெளிந்திருக்கக் கூடுமென்றே எண்ணச் செய்தது. அவர் வேறு யாருமல்ல நம்ம கவிப் பேரரசு வைரமுத்து அவர்களேதான். யார் அந்த நிகழ்ச்சி நிரலை அப்படி அமைத்தார்களோ தெரியவில்லை, ஆனால், கண்டிப்பாக கவிஞருக்கு ஒரு செம ச்சேலஞ்சாக அமைந்திருந்தது அந்த மேடை, டாக்டர் Ellyn Shanderக்குப் பிறகு. எனக்கு அப்பொழுதே தோன்றி விட்டது கவிஞர் கடுமையாக இன்னமும் சீரவேண்டும் டாக்டரின் இருப்பை அந்த அரங்கம் சிறிது நேரம் மறக்க வேண்டுமானலென்று.

ஆனால், இம் முறை அவரின் சீற்றம் வயதானால் காடுகளில் வசிக்கக் கூடிய புலிகள் பற்களை, நகங்களை, உடல் வலிமையை இழந்து நிற்கும் பட்சத்தில் எளிமையான விலங்குகளை கொய்துதான் தனது இருப்பை நகர்த்த முடியும். அது போலவே, இவரும் ஏதோ வந்துட்டேன் எல்லாரும் பார்த்துக்கோங்க; நான் தான் அந்தக் கவிஞன் அப்படின்னு மேடையேறி காமிச்சிக்கிட்ட மாதிரியும், ஃபெட்னா மலர் போட்டவர்களை தமிழ் வளர்க்க வேண்டுமானல் இப்படி வரலாறு புறக்கணிக்கப்படக் கூடாதென்று கூறி அண்ணா நூற்றாண்டு விழா மலரில் பசும்பொன் முத்துராமலிங்கம் இடம்பெறவில்லையென்று சீறினார். மேலும் பல சில உள்குத்துக்கள்!

பின்பு திருவிளையாடல் கே.பி சுந்தரம்பாள் பாட்டியை ஞாபப் படுத்துவதைப் போல ஒன்று... இரண்டு... மூன்று... என்று வரிசைப் படுத்தி கூறியதெல்லாம் "நேரக் கொலை" செய்வதின் பொருட்டாகவே நினைக்கச் செய்தது. மொத்தத்தில் என் பணம் அதை நோக்கிச் செல்லவில்லை எனும் போது சற்றே ஆறுதலாகவும் இருந்தது.

அவரின் உரை முடிந்ததுமே நான் மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளிக் கிளம்பி மீண்டும் நுழைவு வாயிலுக்கு வந்த பொழுது பயங்கர "எஸ்கார்ட்களுடன்" கவிப் பேரரசு தன்னைச் சுற்றி நிற்பவர்களையெல்லாம் எறும்புகள் கணக்காக பார்க்காமலயே என்னமோ ஒரு இறுக்கம் ஆழ்ந்து எதனையோ கேட்டுக் கொண்டே நடப்பதனைப் போல நடந்து சென்றதை ஒரு சில விநாடிகள், நானும் நடந்து கொண்டே பார்த்து தொலைத்து விட்டு வீட்டிற்கு வந்தடைத்தேன்.

காரை ஓட்டிக்கொண்டே சிந்தனைக்குள் பயணிக்க வேண்டியாதாகிப் போனது. இந்த மனிதர் அன்று கிராமத்து மனிதனின் எளிமைக்குள் புகுந்து தனது வாழ்வு எனும் பெரும் சமுத்திரத்தில் நீந்தத் தொடங்கிய காலத்திற்கும் இன்று நிற்கும் புள்ளிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்ணுற்றால் விரிசல் இரு பெரும் கண்டங்கள் விலகிப் போன தொலைவாகப் படுகிறதெனக்கு. மனிதனின் உயரங்களின் நிலை மாற மாற, மனித நிலைகளும் பல விசயங்களை இழக்கத்தான் நேரிடுகிறதோ. சிலர் தனது தூக்கத்தை, சிரிப்பை, சந்தோஷத்தை, சிலர் நல்ல நண்பர்களை, நல்ல தன்னிடம் உள்ள வாழ்வு நெறிகளை இப்படி... இவரின் முகத்தில் நிலவிய இறுக்கத்தை கவனித்தால் பெரும் நிகழ்வுகள் இவரின் எளிமையை சிதைத்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது...

அதனைத் தொடர்ந்து இரவு உணவும், பாட்டுக் கச்சேரியும் போல. ஆனால், எனக்கு அதுக்கு மேல தாங்காது என்பதால் கிளம்ப வேண்டியதாப் போச்சு. இத் தருணத்தில் இத்தனை எண்ணங்களையும் எனக்கு வாய்க்க பேருதவிய நண்பர் பழமைபேசிக்கு ஒரு நன்றி.

விழா சிறப்பாக நடந்தேற உழைத்தவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்!

நிறைய தமிழ்பதிவர்கள் வந்திருப்பாங்க போல, ஆனா, என் கண்ணில எப்படியோ தட்டுப்படாம தப்பிச்சிட்டாங்க. அடுத்த முறை வைச்சிக்கிறேன். இத்தனைக்கும் பரவாயில்லாம ஒரு டி-ஷர்ட்தான் போட்டுருந்தேன் :-) .

தமிழ் பெரும் விழா: Fetna 2009_Atlanta - I

சமீபத்தில அட்லாண்டாவில நடந்த வட அமெரிக்கா தமிழ் பெரும் விழாவில (Fetna-2009) நானெல்லாம் கலந்துகிட்ட கதையே ஒரு ரெண்டு மூணு பதிவா போடலாமுங்க. எப்போதுமே நமக்கு கடைசி நேர ஜுரம் வந்து ஒட்டிக்கிட்டு அது மூலமா கிடைக்கிற காது மடலோரம் ஜிவ்க்கு அடிமையாகிப் போனதால அப்படியா இருக்குமோ.

ஏன்னு முழிக்கிறீங்களா? அந்த வெக்கக் கேட்டை நானே சொல்லிக்கிறேனுங்க. என் ஊர்லயே விழா நடந்ததாலும் சில காரணங்களுக்காக அட நமக்கு இல்லாத நுழைவுச் சீட்டா மெதுவா வாங்கிக்குவோம்னு இருந்தேனுங்க. அதோட மட்டுமில்ல இந்த கூட்டம்னாவே கொஞ்சம் என்னவோ தெரியல உள்ள இருக்கிறவனுக்கு ஒத்துக்க மாட்டீங்குது. அதுவும் ஜிகு, ஜிகு கூட்டம் உதட்டுச் சாயத்தோட (I like all natural ;-) , பெரீய மனுசயிங்க கூடுற இடமா இருந்தா உள்ள இருக்கவன் சண்டிமாட்டுக் கணக்கா உதருரான் உள்ளகிடந்து.

அதோட மட்டுமில்ல விழாவுக்கு வருவதாக இருந்த ஒரு சில ஆட்களின் படங்களை பார்த்ததும் எனக்குத் தோணியது; தமிழ் வளர்க்கணும் தான், கஷ்டப்பட்டு சம்பாரிச்சதை அதுக்கும் கொஞ்சம் கொடுக்கணும்தான். ஆனா, அழைப்பிதழில் இருந்த ஒரு சில மூஞ்சிகளுக்கும் சேர்த்து அழுதுதான் அத வளர்க்கணுமின்னா என்னாத்தை சொல்றதுன்னு கொஞ்சம் உடம்பெல்லாம் கூசுனதும் உண்மைதானுங்க.

இருந்தாலும் ஒரு சில நண்பர்களுக்காக எப்படியாவது கலந்துக்கணுமின்னு நினைச்சிட்டே இருந்தேங்க. அப்பன்னு பார்த்து நம்ம பழமைபேசி ஒரு பதிவு போட்டு சிலாகிச்சு எழுதியிருந்தார், எனக்கு இன்னமும் வெக்கமாப் போச்சு. என்னடாது உள்ளூர்குள்ளர இருந்துட்டு போக முடியாம செஞ்சிக்கிட்டோமேன்னு வருத்தமா இருந்துச்சு.

சரினுட்டு அவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டு முடிஞ்சா கூப்பிடுங்கய்யான்னு செய்தி கொடுத்தேன். உடனே பழமைபேசி கூப்பிட்டு அட வாருமய்யா நிறையா இடமிருக்கு உள்ளர அப்படின்னு ரொம்ப எளிமையா சொன்னாரு. சுய தொழில் ஆளு நான், சட சடன்னு என்னோட வேல இடத்தை நிரப்பிக்க ஒரு ஆளை பிடிச்சு அமர வைச்சுட்டு விரைந்தேன்.

நான் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட மாலை 4 மணிக்கு மேல நடைபெற்ற நிகழ்சிகளையே காண முடிஞ்சது. எனவே சில முக்கியமான தமிழ் பெரியவர்களின் பேச்சை கேக்க முடியாம போயிடுச்சுங்க. [என்னோட வயசோ அல்லது வளர்ச்சி நிலையோ தெரியல ஆனா என்னோட எதிர்பார்த்த ஆசையா இருந்தது என்னான்னா; நிறைய தமிழ் ஆர்வலர்களின் பேச்சை அதுவும் வெளி உலகத்திற்கு தெரியாம நிறைய கிராமங்களில் தங்களோட தமிழ் ஆர்வத்தால ஒரு கிராமத்தில ஆசிரியானகவோ அல்லது கோவில்களில் பாடிக்கொண்டோ திரியும் பண்டாரங்களைப் போன்றவர்களும் இந்தத் திருச் சபையால் அழைக்கப்பட்டு அவர்களும் வந்திருந்தா நல்லாந்திருக்குமே, அவர்களையும் பார்த்திருக்கலாம், கேட்டுருக்லாம் சந்தோஷப் படுத்தி பாத்திருக்கலமே...]

விழா நுழைவு வாயில் எல்லாம் அருமையா செஞ்சிருந்தாங்க வாழை மரம் எல்லாம் கட்டி, பூ, தேங்காய், சந்தனம், பன்னீர் தெளிப்பான், கல்கண்டுன்னு ரொம்ப நாளா மிஸ் பண்ணிட்டு இருக்கிற விசயத்தையெல்லாம் வைச்சு ஒரு விழாவிற்கான சூழ்நிலையை தவழ விட்டுருந்தாங்க. கொஞ்சம் ஆர்வம் தொத்திக்கிச்சு அதையெல்லாம் பார்த்தவுடன்.

இப்போ நுழைவுச் சீட்டு ஈசியா கிடைக்கிதுன்னாரா நம்ம பழமையார் நானும் பணத்தை எடுத்து நுழைவுக் கூண்டுக்குள்ளர இருக்கவங்கட்ட நீட்டிகிட்டே ஒரு சீட் அப்படின்னேன். உள்ளே இருந்தவங்க உங்க பேருன்னு கணினிகிட்ட போயி தட்டச்ச போனங்க, நான் என் கந்தர்வ கோலத்தை சொன்னேன். "ஓ! அப்படியா, அது முன்பதிவு இல்லாம கஷ்டமாச்சே, நீங்க "ந்தோ, அவரைக் கேட்டுப் பாருங்க..." அப்படின்னு சில விருமாண்டியண்ணே, முரளியண்ணே, மாதவண்ணாச்சி போன்ற பிரபலம் போல இருந்த விழா நடத்தும் பிரபலங்களை எடுத்து அடுக்கி விட்டாங்க.

எனக்கு உள்ளே இருக்கிறவன் இப்போ உதர ஆரம்பிச்சுட்டான். அப்போன்னு பார்த்து எனக்கு பரிச்சியமான முகம் ஒண்ணு டக்கின்னு என் முன்னே உதயமானுச்சு. "என்னங்கய்யா இங்கே..." விசயத்தை சொன்னேன். அவரு "அட வாங்க இது நம்ம விழாங்கன்னு..." எப்படியோ எனக்கு இரண்டு நாள் கலந்துகிற மாதிரி நுழைவுச் சீட்டுகள் வாங்கி கொடுத்தார்.

உஷ் யப்பாடான்னு கண்ணு கட்டி அடிச்சு பிடிச்சு உள்ளே போய் உட்கார்ந்தா... உட்கார்ந்தா... "என்னய எங்கப்பா, எப்படி சினிமாவில வளர்த்தாருன்னு" ஒருத்தரு தமிழ்ல பேசி, தமிழ் வளர்த்துட்டு இருந்தாரு. எனக்கு வீட்டில பொண்டாட்டி, புள்ளய விட்டுட்டு வந்து இப்படி தனியா உட்கார்ந்துருக்கிறனேன்னு தான் ஞாபகம் வந்துச்சு. அது ஏன்னு தெரியல!

இப்படியெல்லாம் முன்னமே கொஞ்சம் என் மனசில ஓடினதுனாலேதான் ஒரு சிறப்பு ஆர்வமில்லமா இருந்திருக்கேனோ என்னவோ... நம்ம கலாச்சார மரபுபடி - ஒரு காலத்தில எனக்கும் இந்த சினிமாக்காரய்ங்கள பக்கத்தில வைச்சு பார்க்கணுங்கிற ஆவல் மாதிரி ஏதாவது இருந்திருக்கலாமோங்கிறதை தோண்டி தூர் எடுத்து பார்க்கிறேன், அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக ஞாபமே இல்ல.

சரி அந்தக் கால கட்டமெல்லாம் அது மாதிரியான விசிலடிக்கும் வயசில வந்தாலும் சரி வெவரம் தெரியாத வயசு மனசில வந்துட்டுப் போச்சுன்னு சமாதானம் சொல்லிக்கலாம், ஆனா இப்போ என்னமோ ஆகிப்போச்சு எனக்கு. பிரபலமின்னாலே உடம்பெல்லாம் பச, பசன்னு அரிக்கிற மாதிரி ஒரு உணர்வு. வயசாகிப் போச்சோ!

கஷ்டப்பட்டு சம்பாரிக்கிற நம்ம காசை, இவ்வளவு கொடுமையும் சகிச்சிக்கிட்டு அந்த மொகரக்கட்டைகள பார்க்க போய் உட்கார்ந்தா எனக்குள்ளர இருக்கிறவன் என்னயப் பார்த்து நமட்டுத் தனமா சிரிப்பானா, இல்லையா? சோ, விழாவில இருந்தேன்... ஒட்டியும் ஒட்டாம...

நான் ரொம்ப எதிர்பார்த்துப் போன இன்னொரு ஆள் வேற வரலை! கொஞ்சம் ரோசமான ஆளு! டேய்! கொடுத்தக் காசுக்கு போதும்டான்னு சொல்லப்பிடாது... ரொம்ப கஷ்டப்பட்டு இந்த விழாவை முன்னெடுத்தி, எவ்வளவோ சகிப்புத்தன்மையோட இவிங்களோட எல்லாம் நாம கூடியாடி வேல செய்ய வேண்டியிருக்கேன்னு பல்லைக் கடிச்சிட்டுக் கூட இருந்து நடத்தி முடிச்சிருப்பீங்க. உங்களயெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகுமிங்க.

இதன் அடிப்படையில நானும் என்னோட அனுபவத்தை இந்த விழாவின் பொருட்டு பதிந்து வைச்சிக்கிறது அவசிமின்னு உணர்ந்ததாலே இரண்டு பகுதிகளாக எதிர்பார்ப்பு, சந்திப்பு, மகிழ்ச்சி, ஏமாற்றம் அப்படின்னு எழுதி வைச்சிக்கலாம்னுதான் இந்த முயற்சி. இது இல்லாம இன்னொன்னு வருது.

Wednesday, July 01, 2009

கடவுளர்கள்: சாரு Vs ஜெமோ-Readers

சில நேரத்தில "எவன் கடவுள்"னு தன்னய வித்து நிரூபிக்க நடத்துகிற சில கண்றாவி அடிதடிகளையும், பல்டிகளையும் படிச்சி தெரிஞ்சிக்கிறப்ப ஏண்டா எழுதப் படிக்க வருதுன்னு வர்றது எல்லாருக்கும் இயற்கைதானோ? எனக்கும் வந்துச்சுங்க. சமீபத்தில ஒரு சில ஆட்களோட பதிவுகளில் இணைச்சு வைக்கப்பட்டிருந்த அந்தக் கடவுள்களின் எழுத்தை தரிசிச்சப்போ.

உடனே தோணியது என்னான்னா, நல்ல வேளை இது போன்ற ஆட்களின் புத்தகங்களை நான் உழைச்சு சம்பாரிச்ச காசை கொடுத்து வாங்கி என் அலமாரியில வைக்காம இருந்திருக்கேனேன்னு நினைக்கும் பொழுதும், அந்தத் தேடல் இவிங்க கையில கொண்டு வந்து நிப்பாட்டாம இருந்துச்சேன்னு நினைக்கும் பொழுதும் கொஞ்சம் ஆறுதலாத்தான் இருக்கு.

இன்னிக்கு காலையில கூட ஒரு "ஆண்டிக்(antique)" கடையில நிப்பாட்டி வந்தேன். எனக்கு பக்கத்தில உள்ள கடை. அங்கேதான் பழைய புத்தங்கள் அது ஒரு மூணு மாசத்திற்கு முன்ன வெளி வந்ததாகக் கூட இருக்கலாம் அடி மாட்டு விலைக்கு கிடைக்கும். ஆயிரக்கணக்கான புத்தகங்கள். ஒரு மணி நேரத்திற்கும் மேலா நின்னேன். அழகு அழகான எழுத்துக்களில், வண்ணமயமான அட்டைப் படங்களுடன் அவ்வளவு புத்தங்கள். அதுவும் மலிவான விலைக்கு! என்னோட வர்றதுக்கு தயாரா இருந்தாலும் ஒன்று கூட நம்ம சுவைக்கு ஒத்து வரலை. நான் தூக்கியும் சுமக்கல. இத்தனைப் புறக் காரணிகளும் சேர்ந்து ஒரு புத்தகம் வாங்குவதை தீர்மானிக்கிறது; அதுவுமில்லாம எழுதப்பட்ட நடை, வாக்கியமைப்பு, எழுத எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் இவைகளும் கூடவே ஒரு புத்தகம் தன்னை வித்துக் கொள்வதில் பெரும்பங்காற்றுகிறதென்றால் அது மிகையில்லைதானே.

புத்தகங்களின் வாழ்க்கையே இப்படியாக இருக்கும் பொழுது, அதனை எழுதியவர்களின் நிலையை யோசித்தால் காலம் தோறும் வளர்ந்து, தேய்ந்து வரும் கருத்துகளின் ஊடாக தன் நிலை வாசிக்கும் வாசிப்பாளனுக்கு வெளிச்சமூட்டி வாசகர் வட்டத்தை கூட்டியும் குறைத்தும் கொள்ளும் காலம் தோறும் அவர்களினூடாக பிரசவித்த புத்தகங்களும் சந்தையில் விலை போகிறது அல்லது சிறு பூச்சிகளுக்கு புகலிடமாகிறது.

இத்தனை தடைகளையும் தாண்டி ஒருவன் தன் உழைப்பு பணத்தைக் கொடுத்து வாங்கி வாசிக்கிறான் என்றால், அதில் வாசிப்பவனை ஒரு முட்டாள் என்கிற ரீதியில் தவறாக வழி நடத்தி, தன் சுய அரிப்புகளை தீர்த்துக்கொள்ள கிடைத்த ஒரு தளமாக்கப்பட்டிருந்தால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனமாக வாசிப்பாளனுக்கு தோன்றக் கூடும். அதி தீவிர படிப்பாளிகளின் உலகத்தில கூட என்ன நடக்குதுன்னா, ஏற்கெனவே தான் படிச்ச புத்தகங்களை அது எப்பேர்பட்ட எழுத்தாளனா இருந்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட ஆளைத் தாண்டி அதெல்லாம் அடுத்த ஆளுக்கு கைமாறும் பொழுது பெரும்பாலானவை குப்பையாக கருதப்பட்டு அது சென்றடைய வேண்டிய இடத்திற்கு சென்றடைகிறது.

இந் நிலையில் அப் புத்தங்களை எழுதியவர்களே வலிய முன் வந்து "நான் எழுத்துலகின் ப்ரம்மா" என்ற ரீதியில் சுய தம்பட்டம் செய்து கொள்வது, பொது பேருந்து இடத்தில் நின்று கொண்டு கைமதுனம் செய்து கொள்வதற்கு சமமாகவே கருதமுடிகிறது. இன்றைய எழுத்துலகில் அதிலும் நம்மூரில் சினிமா பிரபலங்களைப் போலவே எழுத்தாளர்களும் அறியப் படவேண்டும் என்று நினைப்பது கேலிக் கூத்தானது. சினிமாவின் மூலமாக ஒரு நடிகன் அறியப்படுகிறான் என்றால் அது கருவாட்டுக் கடையில் நிற்கும் கூட்டத்திற்கும் வைரக் கடையில் கூடுமிடத்திற்கும் உள்ள வித்தியாசங்களைப் போன்றது.

ஒரு எழுத்தாளன் தனது அவதானிப்பின் ஆளுமை பொருட்டு ஒரு வாசிப்பாளனின் மனதினுள் தனது சுவடுகளை விட்டுச் செல்கிறான். அது வாழ்வு முழுவதுக்குமே சில மாற்றங்களை வாசிப்பாளனின் உலகியல் பார்வையினுள் ஏற்படுத்திச் செல்லலாம். அவ்வாறாக, தன்னை பரிணமித்தாக கருதிக் கொள்ளும் எழுத்தாளர்களோ அந்த எழுத்தை தாண்டிய உலகத்தினுள் இது போன்ற அற்ப "சுய விளம்பரங்களுக்கு" விலை போய் தன்னை தரம் தாழ்த்திக் கொள்வதில் என்ன பொருளிருக்க முடியும்? தன்னைக் காட்டிலும் தனக்கு முன்னமோ, அல்லது சமகாலத்திலோ வாழ்ந்த, வாழ்கிற பிற சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் "அறிவுசார்ந்த கைமதுனம்" செய்து கொண்டார்கள்/கிறார்கள் என்றால் இப்பொழுது அவர்களின் மீதும், சமகால எழுத்தாளர்களின் மீதும் வாறி வீசும் சேறுகளின் ஊடாக நீங்கள் எதனை நிறுவ முயற்சிக்கிறீர்கள்? அதனைக் காட்டிலும் நீங்கள் சிறந்தவர்களாக கருதப் படவேணும் என்ற எண்ணத்தினாலேதானே இருக்க முடியும்.

தொடக்க காலத்தில் நீங்களே கூட அதே ஆட்களின் படைப்புகளை வாசித்தே உங்களின் மாறுபட்ட சிந்தனையை வளர்த்து கொண்டவர்களாய் இருந்திருக்கக் கூடலாமல்லவா? மாறாக, இப்பொழுது மாற்று எழுத்தாளரின் மீது வைக்கும் உங்கள் கருத்துக்கள் அடுத்தவரின் படைப்புகள் அனைத்துமே குப்பையெனவும், தான் மட்டுமே தமிழகத்தில் சிந்திப்பவன் அதனால் மற்ற படைப்பாளிகளை படிக்காதீர்கள் என்ற உங்களது தொனி வாசிப்பாளனின் பரந்து பட்ட வாசிப்பினை நீங்களே வலியச் சென்று அடைக்க முயற்சிக்கிறீர்கள் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாமா? இது எது மாதிரியான "கை மதுனம்?" வெக்கமாக இல்லை? இவ்வளவு பரந்து, விரிந்து சிந்திக்க தெரிந்தும் ஒரு பொது இடத்தில் எப்படி நாகரீகமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவற்று உளறி கொட்டுவதால் எங்களைப் போன்றவர்களுக்கு - சகித்துப் போவதில் கூட சலிப்பு தட்டிவிடுகிறது.

நீ பார்த்து, படித்து அனுபவித்தாய் என்றால் அதனைக் கூட வெளிப்படுத்துவதில் ஒரு நாகரீகம் இருக்கிறது. எதனை உன் விருப்பத்தின் பேரில் பார்த்து அனுபவித்தாயோ அது உன்னுடைய சுய விருப்பத்தின், சுவையின், தேடலின் பொருட்டு அமைந்தாக இருக்கலாம். அதனை பொது இடத்தில் அறிமுகப் படுத்தும் பொழுது கேட்கும் அனைவருக்கும் பிடித்திருக்க வேண்டுமென்ற தொனி, "அர்ப்பனக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில கொடை பிடிப்பானாம்" என்பதாகப் படுகிறது.

இன்றை காலகட்டத்தில் மற்றுமொரு வியாபார உத்தியும் கொடி கட்டி பறக்கிறது. அது எதிர்மறை விமர்சனங்கள் கொண்டுவரும் கருத்துக்களை கொச்சையாக அது தனி மனித தாக்குதலாகவோ அல்லது எல்லாமே தெரியும் எனக்கு என்ற ரீதியில் கருத்து கூறுவதாகாவோ அல்லது பால் உணர்வுகளை தூண்டும் மட்டரகமான ரசனைகளை ஊக்குவிப்பதனைப் போல தன்னை வெளிப்படுத்தி அதன் மூலமாக (thriving in controversy) தன்னை மக்களிடத்தே கொண்டு சேர்க்க விரும்புவது. ஆனால், இது போன்ற ஸ்டண்டுகள் காலப் போக்கில் உதிர்ந்து விடுகிறது என்பதனை எப்படி இந்த முற்றிலும் உணர்ந்த ஞானிகள் அறியாமல் மறந்துவிடுகிறார்கள்.

சுய சிந்தனை மீட்டெடுப்பு என்பது ஒரு விதத்தில் அதிக வாசிப்பினை நாடும் மனிதர்களுக்கு நாட்பட நாட்பட கைவரும் ஒரு கலையாக மாறுவது இயற்கை. ஆனால், இன்றைய நிலையில் சினிமா நடிகர்களுக்கும், கட்சி தலைவர்களுக்கும் கொடி பிடித்தும், மண் சோறு தின்றும் தனது முரட்டுத் தனமான அர்ப்பணிப்பை காட்டுவது போலவே, இந்த சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட இலக்கிய உப நடிகர்களும்(வாசிப்பாளன் எனக் கொள்க) தயாராக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். இது போன்ற வாசிப்பாளர்கள், வாசிப்பின் அடிப்படை நோக்கமே பகுத்தறிந்து தன் இயல்பு மாறாமல் எச் சூழலிலும் தன்னை தக்க வைக்கத்தான் என்பதனை மறந்து தன் நேசிக்கும் ஒருவன் எது செய்தாலும் அது சரியே என்ற நிலை எடுப்பது எப்படி "சுய சிந்தனையின்" பொருட்டு கட்டப்பட்டதாக அமையமுடியும்? எது மாற்றியது? இது போன்ற புத்தி மழுங்கல்களை வாசிப்பாளனிடத்தும், எழுத்தாளனிடத்தும்?

ஒரு சமூகத்தின் மொத்த அறியாமையும் இதற்குள் அடங்குமா? ஒப்பீட்டு நிலையில் இந்தியா போன்ற சமூகத்தில் ஒரு பணக்கார, ஏழைத் தன்மை எப்படியாக வரையறுக்கப் படுகிறது? மாடி வீட்டில் வாழ்பவன், கூரை வீட்டில் வாழ்பவனை கீழே போட்டுப் பார்க்கிறான்; அது போலவே மிதி வண்டி வைத்திருப்பவனை, இரு சக்கர மோட்டர் வாகனம் வைத்திருப்பவனும்; கார் வைத்திருப்பவன் மோட்டர் வாகனம் வைத்திருப்பவனையும் தாழ்வான எண்ணத்தில் பார்ப்பது போலவே, இங்கு சமீப காலமாக நான் கண்டு வருவது, இந்தப் புத்தகத்தை வாசித்திருக்கிறேன், இந்த உலக சினிமா பார்த்திருக்கிறேன், அதனை பார்க்க, கேட்க நேராதவர்கள் எல்லாம் என்னை கடவுளாக மதிக்க, போற்ற கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அதே அகம்பாவ மனவோட்டத்தின் அடிப்படைதான் இதன் ஊற்றா? இது போன்ற ஒப்பீட்டு ட்ரெண்ட் மேலை நாட்டு எழுத்தாளர்களிடம் இன்று இருக்கிறதா?

சரி, மற்ற மொழி படங்களையும், இலக்கியங்களையும் படித்து, பார்த்து (சில நேரத்தில செய்யமாலயே) சிலாகித்து யார் முதலில் அதனை வெளிக் கொண்டுவரப் போகிறோம் என்ற போட்டா போட்டியில் வசதியாக ஒரு விசயத்தை மறந்து விடுகிறோம், அது அந்தப் படைப்புகளை படைத்த மனிதர்கள் தனி பட்ட வாழ்வில் கடைபிடித்த எழுத்து நாகரீகம். அதனை ஏன் நாமும் கடைபிடிக்க முன் வருவதில்லை? விடுதலை போராட்டத்தில் வன்முறை கூடாது என்று போதிக்கும் நாம், தனிப்பட்ட வாழ்வில் துப்பாக்கி கிடைத்தால் தன் துறை சார்ந்த மற்றுமொரு பிரபலத்தை போட்டுத் தள்ளிவிடுவோமென்கிற அளவிற்கு மன ஆர்பரிப்பு. இது எப்படி சாத்தியமாகிறது?

எல்லா நிலைகளிலும் தனிமனித துதி பாடல் அவசியம்தானா? அதனையே முதலில் ஒரு சமூகத்தில் கட்டுடைத்து மாற்றமடைய வைக்காமல், என்னவர் என்ன சொன்னாலும் அதற்கு "சப்பை கட்டுவோம்" என்ற திவீரவாத எண்ணவோட்டத்தை ஊக்குவிப்பது, காந்தியத்தின் பால் காதல் கொண்ட நம்மூர் எழுத்தாளர்களுக்கு நியாயமா? ஊரான் ஒருவனின் சட்டையை பிடிக்கும் பொழுது ஒரு நியாயம், தனக்கு என்றால் ஒன்றா? என்னங்கடா இது நியாயம்? வளருங்கப்பா!



பி.கு: மேலும் நம் இலக்கிய எதிர்காலம் முகமூடி கழட்டப் பட்ட நிலையில் ... சாரு நிவேதா எனும் ’பரமார்த்த குருவும்’ அவரின் இணைய சிஷ்யார்களும்

Related Posts with Thumbnails