Sunday, April 06, 2008

வெண்ணை திரண்டு வந்துச்சு இப்ப ஒடைக்கணுமா? : ஒகேனக்கல்.

இரண்டு வாரங்களாவே தமிழ்மணத்தை உத்து உத்து பார்த்துக்கிட்டே வாரேன் எங்கட நிறைய ஒக்கேனக்கல் சார்ந்த பதிவுகளை உணர்வுப் பூர்வமாக காணோமேன்னு. இங்க மக்கள் நினைச்சிருப்பாங்க போல நாமும் வெறும் புரட்சி கருத்துக்களா எழுதி எதுக்கு வீணா வன்முறையைத் தூண்டி விடுறோமின்னு சும்மா இருந்திருக்கலாம் போல. எப்படியோ, இப்ப திடீர்னு திரைப்படத் துறையினர் நடத்தின உண்ணாவிரதப் போரட்டத்தினை தொடர்ந்து அங்கு சில பேர் பேசிய பேச்சுக்கள் அனல் பறக்க இங்கும் எங்கும் சூடு பற்றிக் கொண்டது.

அதிலும் குறிப்பாக இந்த முறை கழுவுற மீன்ல நழுவுற மீனாக தப்பிக்க வாய்ப்பே இல்லாதபடிக்கு சூழ்நிலையும் அமைந்து போக சில வார்த்தைகளை அள்ளி தெளித்தே ஆகவேணுமிங்கிற கட்டாயத்தில வார்த்தைகளை உதிர்க்க வேண்டியதாப் போச்சு, சில பிரபலங்களுக்கு.

என்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்றால் இந்த கலைக் கூத்தாடிகள் என்னாத்தை பெருசாக பேசிடப் போறாங்க, இன்னமும் பெரிய அளவில் வியாபாரம் அண்டைய மாநிலங்களுடன் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுதென்றே நினைத்திருந்தேன். ஆனால், நாட்டின் ஒருமை பாட்டில் அதீத நம்பிக்கையும், பொறுப்பும் கொண்ட சில கர்நாடாக சமூக அமைப்புகள் தொன்று தொட்டு அடித்து வரும் அழிச்சாட்டியங்கள் எல்லோர் மனத்திலும் கசப்புணர்வையே வளர்த்து வந்திருக்கிறது என்பதனை இந்த திரைப்படத் துறையினரின் பேச்சுக்களை கேட்கும் பொழுது அறிய முடிந்தது.

அதிலும் குறிப்பாக நடிகர் சத்யராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கள் குறிப்பிடும் படியாக அமைந்திருந்தது. சத்யராஜ் தன்னுடைய நீண்ட நாள் மனக் குமுறலை இங்கு கொட்டித் தீர்த்துக் கொண்டதாகவே கருதுகிறேன். அவரின் மீது எழுந்த குற்றச் சாட்டுகள்: முகம் சுழிக்க வைக்கக் கூடிய வகையில் அமைந்த வார்த்தைகள், மற்றும் உடற் செயற்பாடுகள் (body gestures).

மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு சில மணி நேரங்கள் அவையடக்கத்துடனும், ஏனைய ஜெண்ட்ல்மென்களுக்கேயான அடக்க நடிப்புகளுக்கிடையே தானும் அப்படியே சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்வதில் பெரிதாக ஒன்றும் கஷ்டமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை அதிலும் நடிப்பையே தொழிலாக கொண்டவர்களுக்கு, இல்லையா? அப்படியாக இருக்கையில் எதற்காக அதிலிருந்து நழுவி இப்படி தன்னை ஒரு தரம் கெட்டவனாக ஆக்கிக் கொள்ள ஒருவர் முன் வர வேண்டும் (அதற்கு நீங்கள் என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சரி...).

குறைந்த பட்சம் இவ்வளவு தொலைவு இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை வளர்ந்து அதில் எந்த விதமான மத்திய அரசின் குறுக்கீடுகளுமில்லாமல் ஏதோ இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கிடையான பிரச்சினை போன்று பாவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த பக்கமிருந்து ஒரு சிலரேனும் தனக்கும் அது போன்ற மான உணர்வு இருக்கிறது என்பதனை மனதில் பட்டதை பட்டதாக (அதிலும் உண்மையில்லாமலில்லை) கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.

ஆனால், இதிலிருக்கும் உள் அரசியல்தான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. காவேரி பிரச்சினையில்தான் நாம் ஏமாந்து விட்டோம், இதில் ஏமாறத் தயாராக இல்லையென்று கூறிய தலைமையிடம், நன்றாக சூடேறி எல்லா கட்சிகளும், மக்களும் ஓரளவிற்கு ஒன்றுதிரண்டு விழிப்புணர்வுற்று ஒரே குடையின் கீழ் இருக்கும் சமயத்தில் திடீரென்று தலைமையிடம் கர்நாடாக தேர்தல் முடியும் வரை முறுக்கேறிய ஒரு விசயத்தை தள்ளிப் போட்டுவிட்டது. சிறிது ஏமாற்றம்தான்.

எனக்கென்னான்னா, ஒரு தேசத்தை மதிக்கிற ஒரு மூத்த அரசியல் தலைவரா கலைஞர் இப்படி வன்முறையின் ஊடாக ஒன்றும் சாதித்து விட முடியாது என்பதனையும், நாட்டின் ஒருமை பாட்டையும் கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படியே இருக்கட்டும், இருந்தாலும் இந்த உணர்வை தூண்டி அரசியல் விளையாட்டாக ஆக்கிவிட்டு பிறகு எந்த ஒரு தீர்வும் இல்லாமல் ஒரு காவேரிப் பிரச்சினை போலவே பின்னாளில் தொங்கலில் விட்டால், பூனை வெளியே வரப் போவது நிச்சயம்.

நமது எதிர் பார்ப்பை பொய்க்க வைக்காமல் இருந்தால் சரித்தான். ஆனால், இது போன்ற பிரச்சினைகளில் உணர்வை தடவி, உசிப்பு விட்டுவிட்டு பிறகு அதனை வைத்து அரசியல் நடத்தும் சாணக்கியத் தனமிருந்தால், பின்பொரு நாளில் நிஜமாகவே (இப்பவே என்ன எல்லா மாநிலங்களும் தெரிந்து கொண்டுதானே அந்த உணர்வு இல்லையென்று) தேவைப் படும் பொழுது, மக்கள் நினைக்கலாம் "மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கிய"தைப் போன்றுன்னு. அது மாதிரி கழகத்திற்கு ஒரு களங்கம் ஏற்படா வண்ணமும், இந்த கடைசி வாய்ப்பையும் நழுவ விடாமலும், கழகத்தின் மீது இருக்கும் களங்கத்தை துடைத்தெறிவது போன்றும், கர்நாடாக தேர்தலுக்குப் பிறகு தமிழக மக்களுக்காக இந்த குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்க கழகம் கடமை பட்டிருக்கிறது.

இல்லை ஒரே அடியாக தூங்கப் போட்டு விட்டு அரசியல் நடத்த மட்டுமே காவேரியும், ஒகேனக்கல் பிரச்சினையும் தோண்டி எடுக்கப் படுமானால், மக்கள் என்னைக்குமே இந்த நிகழ்வை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.

Related Posts with Thumbnails