Wednesday, March 07, 2018

பெரியார் எப்போது யாருக்காக சாதி வெறியர் ஆனார்?: Periyar

தொலைக்காட்சி விவாதங்களில் அபாண்டமாக ஓர் உண்மைக்கு எதிராக பரப்பப்படும் பிரச்சார வாதங்களை சொல்லிவிட்டு, அதனை எதிர் தரப்பினர் அவர்கள் எத்தனை பொய்யர்கள் என்பதாக சான்றோடு எதிர் வாதம் வைக்கும் பொழுது- பொய்யர்களுக்கு ச்சீ இதுவும் ஒரு பொழப்பா என்று கூனிக் குறுகும் உடல் மொழியை காண்பதில் ஒரு சுவராசியம் இருக்கிறது.
அப்படியான ஒரு விவாதத்தை புதிய தலைமுறையில் கண்டேன். பெரியார் ஒரு சாதி வெறியர் என்றும், சாமி சிலைகளை உடைத்தார் என்றும் அப்பட்டமான ஒரு பொய்யை தான் சாமார்த்தியமாக எடுத்து வைப்பதாக வைத்து விட்டு நகர்ந்தார். அதற்கு பதிலுரைக்கும் விதமாக தொல். திருமா அவர்கள் மிக அழகான விதத்தில் அந்த உண்மையை எடுத்து வைத்தார். அப்பொழுது அந்த மய்யநிலையாளர் அவசரமாக தண்ணீர் எடுத்து அருந்திய விதம் பார்க்க கண் கோடி வேண்டுமென்பதாக இருந்தது.
பெரியார் சாதி வெறியை ஊட்டி வளர்த்திருப்பாராயின் எதற்காக அவரை நீங்கள் எதிர்த்திருக்க வேண்டும்? உங்களுடைய அரசியலே சாதிய கருத்தாக்கத்தில், பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் தானே ஆயிரம் ஆண்டு காலங்களாக ஒப்பேறி வருகிறது. அதற்கு வெடி வைக்க வேண்டித் தானே, அதன் ஆணி வேரான இறை நம்பிக்கை என்ற பெயரில் மனிதனை பிரித்தாளும் இடமான நீங்களே நம்பாத அந்த கடவுளர்கள் சன்னிதிக்குள் நீங்கள் விரும்பாத பிற இந்து மனிதர்களையும் அழைத்துக் கொண்டு நுழைய வேண்டி வந்தது.
அந்த ஊரில் உள்ள அனைத்து ஹோமோ செப்பியன்ஸ்ம் ஆலயத்திற்குள் நுழைய வேண்டுமென்றவர் எப்படி ஒரு சாதி வெறியர் ஆகிப்போனார்? பெரியார் என்ன நாட்டில் உள்ள அனைவரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக்க வேண்டுமென்றா ஓர் இயக்கத்தை நடத்தினார்? ஒரு முட்டாளுக்கு கூடத் தெரியும் அது எந்த நாட்டிலும் முடியாத விடயமென்று.
ஏனெனில் அதனின்று விடுபட சில அடிப்படை அறிவு விரிவாக்க பயிற்சி தேவைப்படுகிறது. மனத்திண்மை தேவைப்படுகிறது. எதனையும் கேள்விக்குள்ளாக்கும் ஆராய்ச்சி மனோபாவம் தேவைப்படுகிறது. இயல்பாக நமக்கு வருவது எந்த வித சலனமுமில்லாத தன் முயற்சியற்ற மரவட்டை வாழ்க்கை. அந்த ஓட்டத்தில் இத்தனை ஆழமாக சிந்திக்க திராணி ஏது?
எனவே பெரியார் நம் எல்லாரும் துணுக்குற்று முழித்துக் கொள்ளும் வகையில் எதனை எதிர்த்தால் கவனத்தைப் பெற முடியுமோ அந்த இடத்தை கேள்விக்குள்ளாக்கினார். அதிலொன்றுதான், தானே காசு கொடுத்து வாங்கி போட்டுடைத்த பிள்ளையார் சிலை உடைப்பு. அதனை அன்றைய நீதி மன்றமே கூட அவரிடத்தில் கேள்வி எழுப்பும் பொழுது என்னுடைய காசு நான் வாங்கி உடைத்தேன் என்றாராம்.
வரலாற்றிலிருந்து எதனை யாரிடமிருந்து மறைப்பதற்காக இத்தனை பொய்களை, இத்தனை அதிகார பீடத்திலிருந்து இயக்குகிறார்கள்? அப்படியாயின் யார் எதனைப் பெறக்கூடாது? இது இன்று நேற்று தொடங்கியதாக தெரியவில்லை. வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு 300, 500 வருடங்களையும் தாக்கு பிடித்து மீண்டும் மீண்டும் மனித மேன்மைக்கு எதிரான துரு பிடித்து நாசியை துளைக்கும் கேவலத்தை அரங்கேற்ற துடிக்கிறார்கள்.
அதற்கு உதவியாக ஜீன்ஸும், டிஷர்ட்டும் போட்ட புது யுக இளைஞ, இளைஞிகளும், கமலும், ரசியினும் இன்னும் புதுப்புது வேடமணிந்து தொடர் மனித மேம்பாட்டிற்கு எதிரான காட்டுமிராண்டி அடிமை தனத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போவது மனித இன அவலமன்றி வேறென்ன?

Sunday, March 04, 2018

பேரரசன் அசோகர்: பகுதி - 2 (அசோக சக்கரம்)

அசோக சக்கரமிருக்கிறது. இந்திய பாடப் பிரிவிலும் வாழ்க்கை முறையிலும் அசோகரின் வரலாறு எங்கே...?
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதைத்து அழிக்கப்பட்ட வரலாற்றுச் சுவடுகளின் மீதங்களிலிருந்து புதிருக்கான விடையை அவிழ்ப்பது போல மிக்க சிரமமேற்று அந்த காலத்திய காலனிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நமக்கு வரலாற்றின் பக்கங்களிலிருந்து சுத்தமாக அழிக்கப்பட்ட விடயங்களை நம்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நூலில் அது போன்ற ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகளை காணும் போது ஏன் அதற்கு பிறகான ஒருங்கிணைந்த இந்திய துணைக் கண்டத்தில் புதிதாக எதுவுமே கண்டுபிடிக்கப்பட்டு இணைக்கப்பட வில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே வருகிறது.
ஆனால் கச்சிதமாக நம்மிடம் கொட்டிக் கிடந்த தரவுகளையும், துணுக்குகளையும் பிற நாட்டவர் போரிட்டு அழித்தொழித்தது போதாதென இங்கு வாழ்ந்த பண்டிதர்களும் நிறையவே துடைத்தழித்திருக்கிறார்கள் என்பதாக தெரிகிறது.
இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய எஞ்சிய கல்வெட்டுகளில் இருந்து அசோக சக்கரம் அந்த கால கட்டத்தில் ஆண்ட அசோகன் தொடங்கி அவன் வாரிசுகள் வரையிலும் பரவலாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இருப்பினும் பின் வந்த காலங்களில் வேத விற்பன்னர்கள் அடிப்படையான அசோகனின் சக்கரத்தை...
//...சக்கரம் ஒன்றைச் சுழற்றும் நிகழ்வு பழைய வேதகாலத்து புராணங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. வேத இலக்கியங்களில் தலைவன் காலத்தையே படைக்கிறார். அவனிடமிருந்தே அறவழி பிறக்கிறது. மகிழ்ச்சி பிரவாகமெடுக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் பரிணமிக்கிறது. பிராமண வேதங்களில் இந்தத் தலைவன் தன் கையில் ஒரு சக்கரம் கொண்டுள்ளான். அது அழிவுக் கருவியாக பகைவர்களைக் கொன்று குவிக்கும் எந்திரமாக செயல்படுகிறது. இதுவே இந்து மதப்பரிமாணத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் விஷ்ணு என்னும் கடவுளாக உருவெடுக்கிறது ...//
என்பதாக திரித்து நோகாமல் நொங்கு எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் இந்த வேத விற்பன்னர்கள். சக்கரம் என்னவோ புத்த காலத்தில் அசோக பேரரசால் ஓர் அறம் சார்ந்த அரசின் குறியீடாக பயன்பாட்டிற்கு வந்தது பின்னாலில் விஷ்ணு வின் அழிவுக் கருவியாக திரிக்கப்பட்டு இருக்கிறது.
ஆங்கிலத்தில் plagiarism என்று கூறுவார்கள் அறிவுசார் திருட்டு என்பதாக தமிழ் படுத்திக் கொள்ளலாம். பார்க்கும் அளவில் தோண்டித் துருவி இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை ஒன்றிணைத்து பார்த்தால் நமக்கு இன்றைக்கு மத நூல்களாகவும், பெரிய பெரிய விஷ்ணு, பெருமாள் (அந்த சிலைகள் கூட புத்த சிலைகளாக இருக்க அனேக வாய்ப்புகள் உண்டு போல...) கோவிலாகவும் எழுந்து நிற்கும் அத்தனையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்த சமயத்திற்கென எழுதப் பட்டதும், எழுப்பப்பட்டதுமாக தோன்றுகிறது. அதனிலிருந்து அறிவுசார் திருட்டின் மூலமாக உருவியவையே இன்று நாம் கண்ணுரும் சில விடயங்கள்.
இந்த இடத்தில் ஓர் விடயம் குறிப்பாக கவனிக்கத்தக்கது. அசோகர் காலத்திய புத்த மதம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் பின்பு வந்த வேத விற்பன்னர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும், பிற தேசங்களுக்கு சென்றடைந்த புத்த மதம் சார்ந்த குறிப்புகள் பெருமளவில் இலங்கையிலும் இருப்பதாக இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
இதன் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் இன்றைய கால கட்டத்தில் நமக்குத் தெரியாத ஏதோ ஒன்று இனப் படுகொலையாளன் ராசபக்‌ஷேவிற்கு தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே விடாமல் திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசித்து செல்கிறாரோ என்று எண்ணுகிறேன்.
நான் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த காலத்திலாவது அசோகர் மரம் நட்டார் என்று அளவிலும், ஆரிய, திராவிடர் வரலாறு பற்றியும் படித்தாக நினைவு. இந்த முப்பது வருட இடைவெளியில் அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் எது போன்ற திரித்தல், இடைச் செருகல்கள் அதிலும் செய்யப்பட்டிருக்கிறது என்பது கவணித்து கொண்டிருப்பவர்களுக்கே வெளிச்சம்.

Related Posts with Thumbnails