Friday, August 09, 2013

எனது மறுபக்கம்...: The Flip Side!

எத்தனை அடித்தாலும் நான் திருந்துவதாக இல்லை. இன்னமும் மனுசங்களின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனது அம்மா அடிக்கடி அவளது 67 வருட வாழ்க்கையில் கற்றுக்கொண்ட நடைமுறை வார்த்தை மிகவும் தாமதமாகவே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது; இருப்பினும் காத்திருப்பதில் பிரயோசனமுள்ளதாக இருக்கிறது its worth a wait. அந்த வார்த்தை- உறவுகளில் சிக்கல்கள் எழுந்து விலகிச் சென்றும், வார்த்தைகளில் அமில மழை பொழிபவர்களைப் பற்றிய நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொள்வதற்கிணங்க இப்படியாக சொல்வாள்...

 *தெரிந்தா செய்கிறார்கள், என்ன செய்றோம்னு தெரியாமச் செய்றதுதானே! காலம் வரும் பொழுது புரிந்து கொள்வார்கள்* .

இந்த காலம் சில பேருக்கு நாட்களாகவோ, மாதங்களாகவோ, வருடங்களாகவோ ஏன் இந்த பிறப்பிற்கும் எட்டாத ஒரு விசயமாகவோ கூட அமைந்து விடக் கூடும். இருப்பினும் இந்த நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொளல் தமக்கு தாமே மன அழுத்தத்திலிருந்தும், வெறுப்பு நம்மை ஆட்கொண்டு நமது பொன்னான இக் கணத்தை அனுபவிக்க விடாமல் சிதைத்து விடக் கூடியதிலிருந்தும் நம்மை கரை தூக்கி விடுவதுமாக அமைந்திருக்கிறதாகப்படுகிறது.

நம் வாழ்வில் வந்து போகும் உறவு மனிதர்களையொட்டி எத்தனை பெரிய கால எதிர்மறை செயல்பாடுகள் நடந்தேறும் பொழுதும் இந்த take in நிச்சயமாக உதவுவதாகவே இருக்கிறது.

என்னோட இன்னொரு அம்மா’ [மாமீ’யார் - i hate this term, ஏன்னா அந்த தமிழ் வார்த்தையே பாருங்க மாமி யார் ? என்று போட்டி போடுவதாக அமைந்து பட்டிக்கிறது :) ], அதாவது என்னோட வைஃபை அம்மாகிட்ட இன்னிக்கு ரொம்ப நேரம் காணொளியில் அரட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவங்களும் அதை ரொம்பவே சிலாகிச்சு பேசினாங்க.

“இந்த மாதிரியான ஒரு கணத்தை நமக்கு இந்த காலம் கொடுத்திருக்கின்னா கிடைக்கற்தக்கன என்று.”

பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக சில கேள்விகளின் மூலமாக அவர்களுடைய இன்றைய வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் போக்கை நோக்கி நகர்ந்தது. அம்மாவிற்கு ஆறு ஏழு பிள்ளைகள் எல்லாம் முப்பது வயதைத் தாண்டி. தான் தனக்கு என்று தன் பெற்றோர்கள் அரைத்த மாவை தனக்கென அரைக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் உள்ளவர்கள்.

அம்மாவின் கணவர் ஓர் மூன்று வருடங்களுக்கு முன்பு மரணித்துவிட்ட நிலையில் தனியாக இவர்கள் வாழ தலைப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர் விரும்பினால் தன் பிள்ளைகளின் யார் வீட்டிலாவது இருந்து துணையோட இருக்கக் கூடிய கதவை தன் பிள்ளைகள் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கிறார்கள். 

இருப்பினும் இந்தம்மாவின் தன்னம்பிக்கையும், அந்த நாகரீகமும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிற நிலையில் இந்த கேள்வியை முன் வைத்தேன். ஏன் உங்களுக்கு இத்தனை பிள்ளைகள் இருந்தும் தனியாக வசிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டவுடனேயே வெடித்து சிரித்து தன் அனுபவத்தை முன் வைக்க தயாராகினார்கள்.

“எத்தனைதான் நமக்கு சேவகம் பண்ண, கவனிச்சிக்கன்னு ஆட்கள் இருந்தாலும், நமக்கு பிடிச்ச இடத்தில உட்கார்ந்து எழுந்துன்னு, பிடிச்சதை பிடிச்ச நேரத்தில செஞ்சிகிட்டு வாழுறதுல உள்ள சுகம் கிடைக்குமா தம்பீ” என்பதே அம்மாவினுடைய பதிலாகக் கிடைத்தது.

எத்தனை வாழ்வு அனுபவங்கள் அவர்களை இந்த ஒரு புரிதல் நிலைக்கு நகர்த்தி இருந்தால் தன்னுடைய எழுபதைத் தொட்டு நிற்கும் ஒரு மனுஷியின் எண்ணமாக இது வெளிப்பட்டிருக்கக் கூடும்.

நான் அதன்பால் கட்டுண்டேன். என்னுடைய ஈர்ப்பு- மனிதர்களின்பால் சார்பற்ற நிலையில் மனிதர்களுடன் ஒட்டி ஒழுகுதல், அது வயது நிலைகளையும் கடந்து யார் வெளிப்படுத்தினாலும் அந்த மனிதர்களுக்குள் ஏதோ வெட்டி எடுக்க புதையல் இருப்பதாக கூடுதல் ஒட்டல் ஏற்படும்.

பிறகு அம்மாவின் இந்த நிலைப்பாட்டை பாராட்டி விட்டு, நீங்கள் எடுத்திருப்பதும் ஒரு தேர்வுதான். தனது திருமண நாளிருந்தே, குடும்பம், கணவர், பிள்ளைகள் என்று அடுத்தவர்களுக்காக தன்னுடைய வாழ்வை தோய்த்த நிலையில் கடைசி ஒரு கட்டத்திலாவது தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து தீர்க்கிறேன் என்று எடுத்திருக்கும் இந்த தேர்வை நான் மதிக்கிறேனம்மா.

இருந்தாலும் இன்னும் காலங்கள் நகரும் பொழுது இப்பொழுது இருக்கும் இந்த உள்ளார்ந்த மனசக்திக்கு உடம்பு ஒத்துழைக்காத ஒரு நாளும் வரக் கூடும். அப்படியாக வரும் ஒரு நாளில் அடுத்த ஒரு தேர்வை நீங்கள் எடுக்கும் பொழுது, எனக்கு உங்களைப் பார்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குங்கள் என்று கூறினேன்.

ஏனெனில் அந்த வாய்ப்பை வழங்குவதும், வழங்காமல் போவதும் அவர் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ்களிலே உள்ளது. இது எப்படியாக இருக்கிறது என்று சற்றே உள்ளே புகுந்து யோசித்தால், எந்த வீட்டில் எந்த மனிதர்களுடன் நாம் விருந்தாடப் போகிறோம் என்று வாய்ப்பளித்துப் பார்ப்பதற்கு ஒப்பானாது.

தீர்க்கமாக வாழ்பவர்களுக்கு அங்கே எந்த விதமான சமரசங்களுமில்லை. சுத்தமான தேர்வு மட்டுமே மீதமாகிறது. அங்கே இது போன்ற மனிதர்கள் புகுந்து வெளி வரும் பொழுது விருந்தளிப்பவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.

அதுனாலேயே நான் மிகக் கவனமாக அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். இன்று ஒரு வாழ்ந்து தீர்த்தவளின் வாயிலிருந்து சில நல்ல வார்த்தைகளை வாழ்த்தாக பெற்றேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் இனிதான நாளாக அமைந்திருக்கிறது!

சந்தோஷத்திலேயே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதற்கு ஒப்பான விசயம் வேறொன்றும் இருப்பதாகப் படவில்லை. அது இந்த மிர்சிடீஸ் வகையாறா கார்களையும், சம்ஷாங் s3 and s4 வகை கைபேசிகளையும் விட அதி மன மகிழ்வை ஊட்டுவதாக உள்ளது.

சீக்கிரம் விழித்துக் கொள்பவர்களுக்கு இந்த வாழ்வு ஏதோ ஒரு வகையில் எப்பொழுதுமே மட்டற்ற சந்தோஷத்தை வழங்க காத்துக்கொண்டே இருக்கிறது!

Related Posts with Thumbnails