Friday, December 25, 2015

அகவய நட்பற்ற பெரியாரும், ராஜாஜியும்...

இரண்டு பெரியவர்களோட நட்பு ஒழுகல் பொருட்டு ஓர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கட்டுரை எழுதி வைச்சிருந்தேன். ஆனால், எனக்கு வேண்டிய ஒருவருக்கு அதை அனுப்பி வைச்சு, அந்த கட்டுரையை பதிவேற்றலாமான்னு கேட்டேன். அவர் சொன்னார், அப்படியே கிடப்பில வைச்சிக்கோ, இன்னொரு ஐந்து வருஷம் போகட்டும் அப்பவும் நீ கேட்டுருக்க கேள்விகள் சரியா இருந்தா பதிவேற்றுன்னு.

நான் கேட்ட கேள்வி அதில என்னான்னா, பெரியாரும், ராஜாஜியும் ஒருவர் தட்டில இருந்து இன்னொருத்தர் எடுத்து சாப்பிடுற அளவிற்கு நண்பர்களாக இருந்தும், பெரியார் கடைபிடித்த பிரபஞ்ச பொது விதி ‘மனிதத்தை மதித்தலை’ எதன் பொருட்டு ‘குலக் கல்வியை’ ஆதரித்த ராஜாஜியிடம் அக வயமாக கொண்டு சேர்க்க முடியவில்லை.

இது அரசியல் சார்ந்த ஒரு நிலைப்பாடா அல்லது அகம் சார்ந்த மன மலர்தலில் நடந்த சிக்கலா? அக நக நட்பது நட்பா, அல்லது முக நக நட்பது நட்பா?? 

இதில் என்னாத்தை பெரிசா நட்பு பாராட்டுதலின் பேரில் கடத்தி சென்று சேர்த்திருக்கிறார்கள்?

இரு வேறு துருவங்களில் கருத்தியல், அகவய வேறுபாடுகளை கொண்டவர்களாகினும்... 
அப்போ அந்த இரண்டு பெரிய மனிதர்களுமே தங்களுடைய சகிப்புத் தன்மையின் அடிப்படையில் மட்டுமே நாகரீகம் பொழங்கியவர்களா? 

பெரியாரை பொருட்டு எனக்கு ஒரு வருத்தமுண்டு , இத்தனை பெரிய உண்மையை ராஜாஜியிடமே கூட கடத்தி சென்று அவரை விழிப்படைய வைக்க முடியாத நிலையில் நட்பு பாராட்டி இருக்கிறாரேயென...

Wednesday, December 09, 2015

மதங்களும் மனிதர்களும் வெள்ளத்திற்கு முன்னும்/பின்னும்!

 


மதங்களும் மனிதர்களும் வெள்ளத்திற்கு முன்னும்/பின்னும் ! by Prabhakar

ஒரு நான்கு வாரங்களுக்கு முன் அதாவது சென்னை வெள்ளத்திற்கு முன்பு பின்பு என பிரித்துக் கொண்டால், காலம் மனிதர்களின் நாவை, அவர்களுடைய கருதுகோள்களை எப்படியெல்லாம் புரட்டி போட்டு விடுகிறது என்பதாக விளங்கச் செய்யும்.

எல்லாமே நன்றாக போகிறது என்ற நிலையில் ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுது போக்குவதற்கென ஏதாவது ஒரு விசயம் வாயில் போட்டு மெல்லும் அவலை போன்று தேவைப் படுகிறது. கொஞ்சம் நன்றாக யோசித்துப் பாருங்கள். மாட்டு இறைச்சி சாப்பிட்டால் மரண தண்டனை, எங்கோ ஒரு நாட்டில் அவனது பிராந்தியத்தில் நடக்கும் அரசியல் குழப்படிகளுக்காக அவன் ஆற்றும் செயலை வைத்து, உனது ஊரில் வாழும் அடுத்த மதத்து ஆட்களுடன் பிரச்சினை. அதனை சகியாது ஒரே வீட்டினுள்ளே வசித்து அனைவரையும் போல, உழைத்து, வருமானம் ஈட்டி, குடும்பம் எடுத்து, பிள்ளைகளை வளர்த்து என்று வாழும் ஒருவர் இங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு உண்மையான அக்கறையுடன் ஏனையவர்கள் போலவே ஒரு கருத்தை முன் வைத்தாலும் வேற்று மதத்தவர் என்ற ஒரே அடையாளத்தைக் கொண்டு உடனே கிஞ்சித்தும் சம்பந்தமே இல்லாத அண்டைய நாட்டிற்கு அனுப்பத் துடிக்கும் அவலம்.

நாங்கள் அந்த கூட்டத்தினர் அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கொண்டு போய் முட்டுச் சந்தில் நிப்பாட்டி வைத்திருக்கிறீர்கள். இதெல்லாம் சென்னை வெள்ளத்திற்கு முந்திய அவலுக்கான சமாச்சாரங்கள். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன்பாக நடந்த இயற்கை/செயற்கை பேரிடர் நாம் அனைவர் மனதையும் திருப்பி போட்டு, நம் மீது படிந்த அழுக்கு எண்ணத்தை துடைத்தும் தந்து விட்டு போயிருக்கிறது. பிம்பத்தத்தை கட்டி எழுப்ப முயன்றவர்களின் அத்தனை முயற்சிகளும் இப்பொழுது விழலுக்கு இரைத்த நீராக போய் விட்டது.

மீண்டும் அது போன்ற ஒரு நிலையை கொண்டு வந்து, மக்கள் மனதில் அழுக்கை படிய வைக்க சற்று சிரமப்பட்டே உழைக்க நேரலாம். இது வரைக்கும் படைப்பாற்றலுடன் இயங்கி அதனை கட்டியெழுப்ப முயன்றைதை விட இன்னும் கூடுதலாக இல்லாத மூளையை கசக்கி வேலை செய்தாக வேண்டும்.

எது எப்படியோ எனக்கு பல கேள்விகள் இருக்கிறது. ஒரே ஊரில் பிறந்து வளர்ந்து, அதே
காற்றை சுவாசித்து, நீரை அருந்தி, விளையும் மரக்கறிகளிலிருந்து அரிசி வரையிலும் ஒரே மாதிரி உண்டு, உடுத்தி, அத்தனை வீட்டு விழாக்களிலும் இரு தரப்பும் கை கலந்து வாழும் ஒரு கிராமியப் பின்னணியில் பிணைந்து கிடக்கும் மனிதர்களை உடனே அத்தனை நம்பிக்கைகளையும் கை கழுவி விட்டு விட்டு, அவர்களை எப்படி நீங்கள் சத்திய சோதனையில் இறக்கி தீயின் வழி நடந்து வந்து உன்னை நிரூபித்துக் கொள் என்று பணிப்பீர்கள்?

இன்று அந்த மதத்தவர்கள் இறங்கி வெறும் கைகளால் உங்களது மலத்தையும், சிறு நீரையும், நீங்கள் உண்டு, உடுத்தி விட்டெறிந்த குப்பை கூளங்களையும் அகற்றி தங்களுடைய விசுவாசத்தை நிரூபிக்கும் நிலைக்கு நகர்த்தியிருக்கிறீர்கள். இது அனைத்தும் வெகு இயல்பாக நிகழக் கூடியது. இங்கு பிரித்து வைத்து பார்க்கவோ, பேசவோ வெக்கமாக இருக்கிறது. அவர்கள் உங்கள் வீட்டு அண்டையர்கள். கோவையில் நடந்த ஒரு நிகழ்வை கொண்டு ஒரு பிம்பத்தை எடுத்து கட்டமைக்க விளைந்தாலும், நமது விழுமியச் சாயல்கள் நமது தோலின் நிறத்தையொட்டி இருப்பதனை போலவே, உணர்வுகளாகவும் கலந்துள்ளது. உலகம் திடுக்கிடுகிறது என்பதால், நாமும் நம்மை ஒட்டி மண்ணுடன் கலந்து ஊட்டிக் கொண்ட உணர்வுகளை கொன்று அரசியல் வளர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை.

ஃபேஸ்புக்கிலும் மற்ற சமூக வலைத் தளங்களிலும் தன் எழுச்சியாக எழுந்த இந்த நிவாரணப் பணியின் மூலமாக ஓர் ஆரோக்கியமான சூழல் நம் முன்னால் விரிந்து கிடக்கிறது. இதனை முறையாக கையாண்டு இழந்த பரஸ்பரமான நம்பிக்கைகளை மறு கட்டமைப்பு செய்து கொள்ளும் நேரமிது. சாக்கடை, மலம், குப்பை அள்ளி தங்களுடைய தேச பற்றையும், ஊர் பற்றையும் காட்டுவதற்கென அவர்களை அக்னிபரிச்சைக்கு தள்ளி இருக்கிறேன் என்று இருமாந்திராதீர்கள். தூய்மை இந்தியா என்று குப்பை இல்லாத சிமெண்ட் ரோட்டில் நான்கு தண்ணீர் போத்தல்களை விட்டெரிந்து ஒரு லட்ச ரூபாய் மனிக்கடிகாரம் அணிந்து செய்வதல்லா வெள்ளத்திற்கு பின்னான கழிவு, பிணம் அகற்றலும் - அது நம்முடைய கற்பனைக்கும் எட்டாத ஒரு செயல்.

கொச்சை செய்து, அவமானப் படுத்துவதை எதிர் வரும் காலத்தில் அரவே நிறுத்திக் கொள்வது நல்லது. மனிதர்களின் மனங்களை புரிந்து கொள்ளுங்கள். இன்று அமெரிக்காவில் இஸ்லாமோஃபோயியா என்ற மன பிறழ்சி நோய் அளவிற்கு அவ நம்பிக்கை பீடித்திருக்கிறது. சென்னையில் நடை பெறும் சம்பவங்களை அமெரிக்காவிற்கு அவர்கள் நேரடி தொலைக்காட்சி செய்து மக்களின் மனங்களில் நன்னம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கான விடயங்கள் மேலே கூறிய நமது மண் சார்ந்த விழுமியங்களின் பால் நடந்தேறி வருகிறது. அது அவர்களால் கிஞ்சித்தும் புரிந்து கொள்ளவே முடியாத ஆழத்தை கொண்டது. இதுவே சர்வ தேசத்திற்கு இன்றைய தேவை. இதனையே மொத்த இந்தியாவும் தன்னை ஒரு சரியான பாதையில் செலுத்திக் கொள்ள வேண்டுமாயின், சென்னையில் வெள்ள நீராக பாய்ந்த மனிதத்தை எடுத்து சேர்ப்பது தலையாயக் கடமை.

Related Posts with Thumbnails