Saturday, June 21, 2014

பெண் எழுத்தாளர்களும் எழுத்துலக பிதாமகர்களும்...

புக்கர்ஸ் ப்ரைஸ் வெற்றியாளர் சாரு தனது சக புக்கர்ஸ் வின்னர் அருந்ததி ராயை நோக்கி இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

...//ஆனால் சல்மான் ருஷ்டி அந்த நாவலைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அருந்ததி ராய் எழுதியது ஒரே ஒரு நாவல்.  அதுவும் பால்ய காலம் பற்றிய சுய சரிதை.  உலகப் புகழ்.  அதற்கு மேல் புதினமே எழுதவில்லை.  ஏனென்றால், ஒருவருக்கு ஒரு பால்யம்தானே இருக்க முடியும்? இப்படி இருக்கிறது இந்திய ஆங்கில இலக்கியம். //...

இதனையொட்டியும் வேறு சில பெண் படைப்பாளிகள் சார்ந்த தனது அக்கறையான கேள்விகளுக்கும் அவரது கட்டுரையை வாசித்து தொலைய எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்.

*************

இந்த ஐம்பதுகளை தாண்டிய இரண்டு எழுத்துலக பிதாமகர்களும் கம்பியூட்டர் கைநாட்டுகளாகவே இருந்து தொலைத்திருக்கலாம். இன்னும் தான் மரணிப்பதற்கு குறைந்த பட்சம் நற்பது வருடங்களேனும் இருக்கிறது. அதற்குள் ஏதாவது ஒரு விருதோ குருதோ கிடைத்து விடாமலா இருக்கும். எதற்கு இந்த பிழைப்பு!

இங்கு யாராவது யாரையாவது வந்து எழுத்து தர நிர்ணயம் செய்து தாருங்கள் என்று இந்த பெரிசுகளை கேட்டு வீட்டுக் கதவு தட்டித் நின்றார்களா? தெரியவில்லை. இந்த இணையமும், கட்டற்ற பெரு வெளியும் ஓரளவிற்கு அஞ்சி ஓரத்தில் நின்றவர்களுக்குக் கூட தங்களுக்கு தோன்றிய எண்ணங்களை ஏதோ ஒரு படைப்பு வடிவில் எழுதி வைத்து விட்டு நகர்ந்து செல்லும் ஒரு திறப்பை கொடுத்திருக்கிறது.

அது யாருக்கு பிரயோசனமாக நிற்கிறது நிற்கவில்லை என்பதும், காலம் கடந்தும் நிற்கிறதா அல்லது மக்கித் தொலைத்து ஆடிக் காத்தில் அள்ளிச் செல்கிறதா என்பது பொதுவானது. காலம் வடிகட்டி கொடுக்கப் போவதில் உங்களுக்கும் அவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாகப் படவில்லை.

இருப்பினும் நீங்கள் செயல் ஊக்கியாக, கர்ம வீரராக, சாதித்து முடித்த அருட்பொரும் ஜோதியாக இருந்து அந்த எதிர் பாலினத்தை கை கொடுத்து இலக்கிய உலகில் அடர்த்தியாக எழுதி உலக அரங்கில் சாதிக்க வேண்டி கொளுத்தி போடுகிறீர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட, அதற்கான மொழி இதுவல்ல. இது ஒரு நல்ல ஆசிரியனுக்கு, மனிதர்களின் உளவியல் படிக்கத் தெரிந்த மனிதருக்கோ அழகல்ல.

உடலின் மேடு பள்ளங்களை வைத்தே முன்னுக்கு வருகிறார்கள் என்ற எளிமையான புரிதலோடு எல்லாவற்றையும் குறுக்கலாக ஒரே சீசாவிற்குள் வைத்து பார்த்த பிறகு எப்படி வேறு கோணத்தில் எந்த ஒரு படைப்பையும் நம்மால் கடந்து சென்று பார்க்க முடியும்?

இதில் அந்த முட்டைகோசு தலையர் அருந்ததி ராயை கையை பிடித்து இழுக்கிறார். நீங்கள் இருவரும் எந்த கிராமத்தில் இல்லை இல்லை எந்த கிரகத்தில் வசிக்கிறீர்கள் என்பதாவது அவருக்குத் தெரியுமா?

யார் எதனை எப்பொழுது எழுத வேண்டும் வருடத்திற்கு எத்தனை பக்கங்கள் எழுத வேண்டும் என்று சுத்தி வந்து கேட்கும் அபத்தக் கேள்விகளுக்கு யார் உங்களுக்கு பதிலுரைப்பது.

அருந்ததி ராய் ஒரு நாவல் மட்டுமே எழுதினார் இல்லை மாதத்திற்கு ஐநூறு பக்கங்கள் எழுதுகிறார், அது அவரின் தேர்வு. தன் வாழ்க்யை எப்படி வாழ வேண்டும் என்று எடுக்கும் முடிவு. ஆனால், உங்களைக் காட்டிலும் அவர் அந்த ஒரு புத்தகத்திலேயே நீங்கள் எதனை கசப்பாக நினைத்து பாரா முகம் காட்டி வரும் ஒரு விடயத்தையும், மேலும் முக்கிக் வெளியே எடுக்க திணறிக் கொண்டிருக்கும் ஒரு சமூக அவலத்தை உலகத்திற்கே தோலுறித்துக் காட்டி தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டார்.

இதற்கு மேல் நீங்கள் முக்கிக் கொண்டிருக்கும் அந்த கற்பனை கட்டுக்கதைகளை போன்று கொடுக்க மனமின்றி தற்காலத்தில் நிகழும் சமூக பிரச்சினைகளுக்கு நேரடியான தலையீடுகளில் காலம் தள்ளி வருவதும் அனைவரும் அறிந்ததே. எனக்கு என்னவோ உங்கள் இருவரைக் காட்டிலும் அவர் தைரியசாலியாக கர்ம வீரராக படுகிறார்.

அப்படி என்ன உங்கள் இருவருக்கும் அவரின் மீது அப்படி ஒரு பார்வை. உங்களுடைய கேள்விகளை ஏன் நேரடியாக அவருக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வழிந்து கொள்ளக் கூடாது?

முட்டைக்கோசுக்கு க்யூபா என்பதனை கூபா என்பதாகவே வாசிக்க வேண்டும் என்று எப்படியோ தெரிய வர அதனை தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் சென்றே ஆக வேண்டும் என்று தன் கண்கள் விரிய தான் எழுதி வரும் குப்பைகளில் இது போன்ற டுபாக்கூர் விவரணைகளோடு பக்கம் நிரப்பும் ஒருவருக்கு எதுக்கு புக்கர்ஸ் மேலே எல்லாம் கண்ணு.

பக்த கோடிகள் ஒரு நூறு பேரை வைத்துக் கொண்டு அவர்களுக்கு மட்டுமேயாவது எழுதி உள்ளரயே வெடித்துக் கொள்வது நல்லது.

இந்த எழவை எல்லாம் எதுக்கு இணையத்திலும் ஏத்திக் கொண்டு.
எப்பொழுதுதாவது வாழ்க்கையில் ஒரே ஒரு நல்ல படைப்பையாவது பால் வேறுபாடுகளை, தான் டவுசர் போட்ட பருவத்தில் தப்பும் தவறுமாக கவனித்து வைத்திருந்த கட்டுப் பொட்டி தனங்களிலிருந்து வெளி வந்து தரமான படைப்பை நிகழ்த்தி விடுங்கள்.  நான் வாசிக்கா விட்டாலும் என் பேரனாவது வாசிக்கட்டும்!

Related Posts with Thumbnails