Sunday, January 24, 2016

பயத்தின் வழியாக எதிர்மறை எண்ணங்களை சென்றடைதல்!

சிகரெட்டை கட் செய்யும் பணியில் மனத்தை திசை திருப்ப கண் மூடி அமர்ந்த பொழுது மனம் தெரு சுத்தியதில் கிடைத்ததை இங்கே... :)

சில காலங்களுக்கு முன்பு யோகா செய்வதின் மூலமாக எது போன்ற பலன்களை ஈட்டிக் கொள்ள முடியும் என்பதனைச் சார்ந்து ஒரு பதிவு இட்டு அங்கயே யோகா மின் புத்தகம் வேண்டுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யுமாறும் கேட்டு கொண்டிருந்தேன். அது ஒரு ஐந்தாறு வருடமிருக்கும்.

அதனையொட்டி வாரத்திற்கு ஒரு இரண்டு மூன்று மின்னஞ்சல்களாவது யோகா புத்தகம் கேட்டு வந்து கொண்டிருக்கிறது. தவறாது நானும் அனுப்பிக் கொண்டுமிருக்கிறேன்.

சரி இப்பொழுது அது எதுக்கு இங்கே என்று கேக்கலாம். ஏதோ தேடி அடைய வேண்டுமென்பவர்களுக்கு ஒரு சிறு கல்லை எடுத்து அவர்கள் உள்ளே தங்களுக்கென கட்டிக் கொள்ள விருக்கும் மன கட்டுமானத்திற்கு என்னாலான ஒரு சிறு உதவியாக அது இருக்கக் கூடும் என்பதில் கிடைத்த ஒரு அல்ப மகிழ்ச்சி.

நேற்று ஒரு கட்டுரை வாசித்தேன். அதனில் தொடர்ந்து தனக்கென ஓர் ஐந்து நிமிடம் செலவு செய்து கொள்ளக் கூட நேரமில்லை என்பவர்கள் தான், மணிக்கணக்காக இணையத்திலும் தேவையற்ற மற்ற விடயங்களிலும் எத்தனையோ நேரத்தை தொலைத்துக் கொண்டுமிருக்கிறோம் என்று கூறியது. அந்த கட்டுரையில் பட்டியலிட்ட நம்முடைய தினசரி வாழ்வின் நேர தொலைப்பை மறுப்பதற்குமில்லை.

நம்முடைய தினசரி வாழ்வை, முடிவுகளை, போராட்டமாக கருதிக் கொண்டு மண்டை உடைத்து கொண்டிருப்பவைகள் அனைத்துக்குமே உட்கார்ந்து நன்றாக தீர்க்கமாக சிந்தித்து நமக்கென எடுக்கபடாத முடிவுகளே காரணமெனவும், தேவையற்ற, கண்ணுக்கு புலப்படாத பயங்களுமே காரணம் என்பதாக அந்த கட்டுரை சுட்டிச் செல்கிறது.

இந்த பயத்தினை வெல்லும் பொழுதே நமக்கு தேவையான வாழ்க்கைப் பயணம் நமக்கே சென்சிபிலாக இருக்க செய்கிறது. நம்மிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளை நாமே உள் நோக்கி ஆராயப்படாமலேயேதானே தொடர்ந்து நாற்பது வருடங்கள் ஆனாலும் பேசியதையே பேசி, நடந்து கொண்ட பாவனையிலேயே தொடர்ந்து சரியென்று மனம் தீர்மானிக்க அதுவே நமது குண இயல்பாக வெளிப்படுத்தி கொள்ள முடிகிறது.

தொடர்ந்து மிகுந்த இறை பக்தியில் தினசரி சடங்காக நான்கு புகைப்படங்களுக்கு முன்பாக அமர்ந்து எழும் ஒருவர் எப்படி எதிர்மறை எண்ணங்களில் சிக்கி, தன்னுடைய வழியில் குறுக்கிடும் மக்களிடமும் அத்தகைய அதிர்வுகளை செலுத்த முடியும். இவைகளை கொண்டு சற்றே அருகே அது போன்ற மனிதர்களை நெருங்கி சென்று படிக்கும் தருவாயில், அங்கே உள் முகமாக தன்னை அறிந்து கொள்ளும் முயற்சி எதுவுமே சாத்திய பட்டிருக்கவில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில் மதச் சடங்கின் வாயிலாக தொடர்ந்து என்ன வெளியே வழங்கப்படுகிறது என்பதிலேயே மனம் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. அந்த எண்ணங்களை உடைத்து கொண்டு தனக்கென யோசிக்கும் 'தியான' மனத்தை அடைய முடிவதே கிடையாது.

இங்கேதான், தனக்கென ஐந்து நிமிடங்கள் தன்னுடைய சுவாசத்தை கவனிப்பதிலேயே கூட 'மனத்தின் திண்மை' ஈட்டும் பக்குவம் கைவரப் பெறுவதாக நவீன என்டெப்ருனர்ஸ், தன்னம்பிக்கையூட்டு குருமார்கள் கண்டறிந்து கூறுகிறார்கள். இதுவே சரியென்றும் எனக்கும் படுகிறது.

வயதோடு நான் அறிந்து கொண்டே வருவது- தனக்குள் செல்லவே இங்கே நம்மில் பலருக்கும் பயமிருக்கிறது. அது அப்படி ஒரு இருட்டறையாக இருக்கிறது. பயம் மட்டுமே நம்மை செலுத்தும் மூலமாக இருக்கிறது. நேர்மறை எண்ணங்களை மட்டுமே தங்களுக்குள் கொண்டவர்களே தங்களுக்கான உலகத்தில் நறுமணங்களை பரப்பும் பூஞ்சோலைகளை உருவாக்கி கொள்கிறார்கள். 

Tuesday, January 19, 2016

நட்சத்திரம் பயணிக்கச் சென்ற ரோகித் வெமுலா: Casteism!

கரையான் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல்கள் போல இந்த சமூகத்தில் தான் எத்தனை கோடி தலைகள் இந்த பூமியின் மேலோட்டில் தினமும் சிறகெடுத்து வெளிக்கிளம்பி, போராடி உணவு சேகரித்து, பொருளீட்டி, இனப்பெருக்கம் செய்து கிடைக்கும் அற்ப ஆயுளுக்குள் தங்களுடைய தடயத்தை விட்டுச் செல்ல வித விதமான முறையில் தங்கள் பாதையில் வைக்கப்படும் சவால்களை சந்தித்து மூன்றுக்கு ஆறில் கனிமமாக தங்களை மாற்றிக் கொள்ளும் இடைவெளியில் எதனை வென்றெடுக்க போராடுகின்றது?

ரோகித் வெமுலா வகை மன வெற்றிடங்களை உருவாக்குவதில் தான் இந்த ஈசல்களுக்கு எத்தனை கொண்டாட்டம். இங்கே ஒரு மனதின் நேர்மையான கேள்விகளுக்கு, தன்னுடைய இருப்பின் அவசியமான தேடல்களுக்கு பொய்மையான, வெற்றுத் தனமான போலி அவசியங்களின் பொருட்டு தொடர்ந்து ரோகித்துகளின் சிறகுகள் சிதைக்கப்பட்டு அவர்கள் மலர்ந்து மணம் பறப்புவதற்கு முன்னாலேயே கசக்கி, சமூக கூட்டு கொலை செய்து எதனையோ தொடர்ந்து நீட்டித்து கொள்ளும் அவசியம் இந்த சமூகத்திற்கு இருந்து போகிறது.

அவர்களின் கடின உழைப்பும், எதிர் நீச்சலின் மூலமாக தாங்களே கற்று கொண்ட மொழி, அறிவுச் சுடரின் பேனா முனையில் தங்களையே உள்ளே மையாக நிரப்பி, வைத்திருந்த அத்தனை மனக் குமுறல்களையும் ஓரு ஏ4 சைஸ் தாளில் நிரப்பி வைத்து விட்டு நட்சத்திரங்களை தேடிச் செல்ல வைத்து விடுகிறது இந்த நாற்றமெடுத்த சமூகம்.

இந்த ஈசல்களின் குறுகிய, சாதீயம் என்ற புற்றால் இந்த அறிவியலுக்கே சிறிதும் சம்பந்தமில்லாத கனன்று கொண்டிருக்கும் அந்த ’தீ’ மரபணுக்குள் புகுந்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விட்டுச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் கொண்டதாக இந்த தோல் சார் இன வெறுப்பு கையிறக்கம் செய்யதக்கதாக அமையப் பெற்று ஒரு சமூகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் சமூக கூட்டுக் கொலைகளை நிகழ்த்திக் கொண்டே ஒன்றுமே அதில் தங்களுக்கு பங்கு இல்லை என்ற வாக்கிலும் கடந்து போயி கொண்டே இருக்கிறது. இதற்கு அடிப்படையான துர் நாற்றத்தின் மூல குழிதான் எங்கே இருக்கிறது? மருத்துவத்தில் ஒரு புற்றுக் கட்டியை அகற்றி கொள்ள அதற்கான வழிகள் இருக்கிறது. ஆனால், உணர்வுகளில் சாக்கடைத் தண்ணீரை கலந்தது போல இருக்கும் இந்த வெறுப்பை எப்படி டைலயசிஸ் செய்வது கொள்வது? அதனை ஓன் ஆன் ஓன் செய்து கொள்வது சாத்தியமா?

இல்லை, இல்லை என்று கூறி கொண்டே மண்டையின் மறு பக்கம் கோரப் பற்கள் துருத்த, ஓநாயின் எச்சிலை ஒழுக விட்டபடி அடுத்து எங்கே கூட்டு சமூக கொலையை நிகழ்த்த முடியுமென்று தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.

சமூக ஆற்றின் ஒவ்வொரு துளைகளிலும், இடுக்குகளிலும் இந்த சாக்கடை நீர் கலந்தே இருக்கிறது. கடவுளர்களின் உருவத்தில், அவர்களுக்கு செய்யும் பூஜை அதனையொட்டி செய்யப் படும் சடங்களில், அதுக்கென அழைக்கப்படும் ஈசல் கூட்டங்களில், தோலின் நிறத்தில், அமற வைக்கப்படுமிடத்தில் , திருமண நிச்சயத்தில், பெயர் சூட்டலில், பந்தலில், பேருந்தில், கிணற்றடியில், கல்விச் சாலையில் இது போன்று எத்தனை எத்தனையோ தினசரி வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பிளவுகளை தொடர்ந்து அறிந்தோ அல்லது மூளை என்ற ஒரு வஸ்து தங்களுக்கு இருப்பதே அறியாமலேயோ செய்து கொண்டு தான் வருகிறது.

கிஞ்சித்தும் சக மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒரு சமூகத்திற்கான கேடு வரலாற்று புத்தகங்களில் நமக்கு பாடமாக கற்றுக் கொடுக்க காத்திருக்கிறது. ரோகித் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய “எனது உடலுக்கும் ஆன்மாவிற்குமான தூரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது” இந்த ஒரு விசயமே அந்த இளைஞனின் மன அழத்தை, அறிவை, பக்குவத்தை, தொலை நோக்கு பார்வையை எடுத்து பறைசாற்றக் கூடியது.

அவன் எவர்களை எதிர்த்து போராடினான்? எதற்காக போராடினான்? தான் வாழும் ஒரு சமூகத்திற்குள்ளயே ‘தன்னுடைய பிறப்பே ஒரு தேவையற்ற விபத்து என்றும் சரியாக அங்கீகரிக்கப்படாத தன்னுடைய குழந்தமை” என்று வெம்பி தொடர் இன்னல்களை அவன் வழியில் பொதித்து மனதை வெற்றிடமாக, நம்பிக்கையிழப்பை உருவாக்கி கொடுத்தது எது? நமது அன்றாட வாழ்க்கையில் நட்சத்திரங்களை பற்றியும், இயற்கையின் இயல்பியலையும் நம்மில் எத்தனை பேர் தொடர்ந்து ஒன்றுடன் மற்றொன்றிற்கு தொடர்பு படுத்தி வாழத் தலைப்படுகிறோம்?

தன்னுடைய தாய் ஒரு சாதாரண தையல் மிஷினைக் கொண்டு அத்தனை தூரம் அவனை கொண்டு வந்ததிற்கு பலனாக அவன் தன்னுடைய இருப்பை அத்தனை பெரிய குன்றில் ஏறி அமர்த்திக் கொள்ள செய்த முயற்சி சரிதானே. அவன் நட்சத்திரங்களையும் இயற்கையின் மான்பையும் போற்றி வாழும் இடத்திற்கு தன்னை நகர்த்திக் கொண்டது அவன் பெற்ற கல்வியும், அந்த இடத்திற்கு தன்னை நகர்த்தி வைத்துக் கொள்ள உதவிய அந்த உண்மையான புத்தகங்களும், அது போன்ற தொலை நோக்கு கொண்ட நல்ல மனிதர்களுமே காரணமாக இருக்க முடியும். சரியான பாதையில் தானே பயணித்து கொண்டிருந்திருக்கிறான்?

ஆனால் இந்த ஈசல்களின் பார்வையில் அதுவே அவனை எதிர் முனையில் நிறுத்தி விட்டது. இன்று அவன் “நான் அந்த நட்சத்திரங்களில் வேறு மாதிரியான வாழ்க்கை ஏதாவது இருக்கிறதா” என்று தேடித் செல்கிறேன் என்று தேடிச் செல்ல வைத்து விட்டது. இது போன்ற எத்தனையோ கடிதங்களை நாமும் வாசித்து கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்.

அவன் வயதை ஒத்தவர்களும், கல்விச் சாலைகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் சமூக அக்கறையும், அறிவும் கொண்டு அரசியல் நிலைப்பாடுகளை இப்பொழுது செதுக்கி கொள்ள வில்லை என்றால் பின்பு எந்த வயதில் அவர்கள் தங்களுக்கான மன வெளிப்பாடுகளை செதிக்கி கொள்ள முடியும். அரசியல் வாதங்களும், நிலைப்பாடுகளும் தானே நம்முடைய வாழ்க்கையையே செதுக்குகிறது. யார் எங்கே இருக்க வேண்டும், எதனை வணங்க வேண்டும், எந்த வழிபாட்டு தளத்துக்குள் யார் நுழைய வேண்டும் நுழையக் கூடாது என்பது வரைக்குமாக அது நீட்டுகிறது. இந்த வயதில் என்ன அரசியல் வேண்டிக் கிடக்கிறது என்று கேட்பவர்களை நோக்கி இந்த கேள்வியை வைக்கிறேன்.

இந்த சமூகத்திற்கு எந்த விதமான கடவுளர்களும், பிழைப்பு வாத நீதிமான்களும், கட்சி தலைவர்களும், மத குருமார்களும், கதை புக் எழுத்தார்களும் உணர்வூட்டமோ, மனசாட்சியோ கொடுத்து விட முடியாது என்பது ஊர்ஜிதமாகி வருகிறது. கூட்டமாக மீண்டு வரவே முடியாத ஒரு பெரும் சாம்பல் பள்ளத் தாக்கை நோக்கி மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

தான் வணங்கும் ஒரு கடவுளின் அடையாளத்தில் ஒருவன் தன்னுடைய ஆளுமையை, சாதியை காட்டிக் கொள்ள முடியுமெனில் இந்த ஈசல் சமூகம் எப்படி தன்னிரைவோடு தனக்கென அக மன ஆராய்ச்சி செய்து கொள்ளும். வெளியுலகில் இல்லை நரகமும், சொர்க்கமும் அடித்து பிடித்துக் கொண்டு துண்டு போட்டு வைக்க, இங்கயே இப்பொழுதே அதனை உருவாக்கியும், அழித்து வரும் நம் கைகளிலேயே அது உள்ளது.

ஏன் மனிதத்தை நம்பிய ரோகித் போன்றவர்களுக்கு பேய், பிசாசுகளின் பேரிலும் கடவுளர்கள் பேரிலும் நம்பிக்கை இல்லையென்பது, இது போன்ற அகால மரணத்தை தழுவியர்கள் கூட இருண்மையில் அதற்கு காரணமானவர்களை ஒன்றுமே செய்து விட முடியவில்லை என்பதனை தனது நிகழ்கால வலியின் ஊடாக எழுப்பி கொண்ட கேள்விகளின் விளைவாகத்தன் இருக்கக் கூடும்.

எது எப்படியாகினும் சானம் தொடர்ந்து ஒரு சமூகத்தை மென்மேலும் மூடிக் கொண்டே வருகிறது. இங்கே தாராசு தட்டுகளில் இருக்க கூடிய நியாய, அநியாங்களின் எடை சமமானதாக இல்லை. எடுத்து கொண்டிருப்பவர்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கொடுத்து கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே விட்டு கொடுப்பதும், அனுசரித்து போவதும் பலவீனமாக பார்க்கப் படுகிறது.

நட்சத்திரங்களையும், பிரபஞ்ச துகள்களையும் தினசரி வாழ்வில் இணைக்கத் தெரிந்தவன் இங்கு வாழ தகுதியற்றவனாகிறான். சிறுமைக்கு பிறந்தவனாகிறான். தன்னை முனைவர் அளவிற்கும் அறிவியலை மூச்சாக சுவாசிக்க தெரிந்தவன் ‘இன்னொரு உலகிற்கு தனது ஆவியை அனுப்பி பயணம் செய்ய நிர்பந்தப்படுத்தப் படுகிறான்.”

ஒரே கிணற்றுக்குள் கிடந்து உழண்டு கொண்டிருக்கும் தலைபிரட்டைகளில் எது உயர்வு, எது தாழ்வு! இது ஒரு சமூக அவலம்!! வெட்கித் தலை குனிய வேண்டிய விசயம். யாருக்கு என்ன, துடைத்து போட்டு விட்டு நகர்ந்து கொண்டே இருப்போம். எத்தனையோ பார்த்து விட்டோம் இதனையும் பார்க்கத் தெரியாதா!

P.S: இந்த கடிதத்தை வாசிக்கும் பொழுது என்ன மாதிரியான உணர்வுகளை உங்கள் மனது கடந்து செல்கிறது... முதலும் கடைசியுமான கடிதம்


Sunday, January 17, 2016

மரணத்தை வென்றவன்: The Revenant

இந்த படத்தோட ஒவ்வொரு நிழல் படத்தையும் பார்க்கும் பொழுது, திரையரங்கு சென்று பார்க்க வேண்டுமென்ற அவாவை தூண்டிய படமிது. இருப்பினும் ஒரு பக்கம் ஒரு சிறு தயக்கம் இருந்து கொண்டே இருந்ததை மறுக்க முடியாது. லியோனார்டோ டிகாப்ரியோ, எதிர்பார்த்த படியே ஹக் க்ளாஸாக (Hugh Glass) வந்து நம்மை வாதையின் உக்கிரத்தையும், போராட்டத்தின் நெஞ்சுறுதியையும், தப்பி பிழைப்பதற்கென தனது கடைசி மூச்சை இழுத்து பிடித்து அவர் வெளி வரும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மையும் சேர்த்தே முனக விடுவதிலுமாக அள்ளி கொண்டு சென்று விட்டார்.

இந்த படம் சிறிது உண்மை கதையையும், நிறைய ஹாலிவுட் மசாலாவும் கலந்து கொடுத்து நமது 90 நிமிடங்களையும் வாயை பொத்தியபடி அமர வைத்திருக்கிறது. இயற்கை. அது ஆழப் பகுதியான வான் வெளியாக இருக்கட்டும், கடலாக. பாலையாக, வனமாக இருக்கட்டும் தனித்து விடப் படும் பொழுது வாழ்க்கையின் இண்டு இடுக்குகளையும் ஒன்று மற்ற சூன்யமாக காட்சி வழங்கி நம்மை உறைய வைத்து விடும் நிஜமது. இதற்கென இந்த படம் கனடாவிலும், அர்ஜெண்டைனாவிலும் படமாக்கப் பட்டிருக்கிறது. பனி சூழ்ந்த பாறை முகடுகளும், ஓயாத அருவிகள் மற்றும் ஆறுகளுக்கிடையிலும் நம்மையும் ஊர்ந்தும், நகர்ந்தும், மிதக்கவும் வைத்து, சுட்டுவிடும் பனிக் குளிரில் ஒட்டுத் துணி இல்லாமல் சிலிர்க்க வைத்துமாக டிகாப்பிரியோ நமது முகத்தில் அவருடைய உணர்வுகளை கொண்டு வர வைத்திருக்கிறார்.

அவருடைய நடிப்பின் உச்சம் க்ரிஸ்லி கரடி ஒன்று அவரை பொரட்டி போட்டு குதறுவதில் ஆரம்பிக்கிறது. அந்த கணத்தில் எனக்கு குறுக்குவாட்டாக மண்டை முழுக்க ஓடியது- நான் முதுமலையில் அதே தூரத்தில் வைத்து கரையான் புற்று ஒன்றை நோண்டி கொண்டிருந்த ஒரு கரடியைப் பார்த்ததை மனத்திரையில் கொண்டு வந்து ஜில்லிட வைத்தது. இந்த படத்தில் டிகாப்பிரியோவை விட்டு, விட்டு ஐந்து நிமிடத்திற்கும் மேலாக வந்து குதறும் கரடி காட்சியமைப்பு முதுகெலும்பை ஜில்லிட வைப்பதாக உள்ளது. அதனையொட்டி டிகாப்பிரியோவின் வலிக்கான முனகல்கள் நம்மை சீட்டின் முனைக்கு எடுத்து வந்து மீண்டும் சுதாகரித்து பின்னால் நகர வைக்கத் தக்கதாக உள்ளது.

இத்தனை தத்ரூபமான வாதையின் வெளிப்பாடுகளை இத்தனை அருகாமையில் வைத்து வேறு எந்த படத்திலும் பார்த்ததாக எனக்கு ஞாபகத்திலில்லை. இத்தனை அழகினை கொண்ட இயற்கை, ஓரிரு நிமிடங்களில் இரக்கமேயற்ற கொடுரீயாக மாற முடியுமா என்ற கேள்விக்கு இந்த படம் தொடர்ந்து பதிலுரைத்து கொண்டே வருகிறது.

தொடக்க காட்சியில் தொடர்பேயில்லாத விலங்கு தோல் சேகரிக்கும் ஒரு கூட்டத்தை சிவப்பிந்தியர்கள் ஏன் இப்படி வேட்டையாடுகிறார்கள், என்ற சினிமாத் தனமான ஒரு கழிவிரக்கம் மின்னலைப் போல நமது மனதில் தோன்றி மறையலாம். இருப்பினும் பல இடங்களில் சிவப்பிந்தியர்கள் பக்கமிருந்து பல நியாயமான வாழ்வாதாரங்களை பறித்து கொண்டதற்கான விசயங்களை அவர்கள் தரப்பிலிருந்து பேச விட்டு நம்மை கேக்க விட்டிருக்கிறார்கள்.

சிவப்பிந்திய பெண் ஒருத்தியை அந்த முகாமில் வைத்து அவளை தேவைப்படும் பொழுதுதெல்லாம் வன்புணர்வு கொள்ளுவதாக வரும் ஒரு காட்சியாக இருக்கட்டும், மற்றுமொரு சிவப்பிந்திய ஊரைத் தாண்டி செல்லும் பொழுது மொத்த ஊரே சாகடிக்கப்பட்டு உடல்கள் தங்களின் வாழ்விடத்திற்கு முன்பாகவே விட்டுவிட்டு சென்றது போன்ற காட்சியாக இருக்கட்டும், சிவப்பிந்தியர்கள் எது போன்ற விபரீதங்களை எல்லாம் அந்த கால கட்டத்தில் அனுபவித்திருப்பார்கள் என்பதனை நம்முள் கேள்விகளாக முன் வைத்த படியே நகர்கின்றது.

இந்த படத்தில் ஓர் அழகான காதல் கதையுமுண்டு! அது டைட்டானிக் பாணி. இந்த படம் பாதி உண்மைக் கதையும், மீதி ஹாலிவுட் மசாலாவும் என்று ஆரம்பத்தில் கூறினேலல்லவா? உண்மைப் பகுதி 1800களில் ஹக் க்ளாஸ் என்பவர் நீர் நாய் மற்றும் விலங்கு தோல் வேட்டையாளர். அவரை ஒரு கரடி பொரட்டி எடுத்து விடுகிறது. ஏனைய ஹக் நண்பர்களால் அந்தக் கரடி சுட்டு கொள்ளப்படுகிறது. அந்த நிகழ்வு அவரை சாகும் நிலையில் விட்டு செல்கிறது. காயமுற்ற நிலையில் உள்ள ஹக்கை தூக்கி கொண்டு, தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். பயணம் கரடுமுரடாகிறது. பயணத்தை தொடர்வதே கேள்விக்கு உள்ளாகும் பொழுது, பயண தலைமை இரண்டு பேரை ஹக்குடன் இருக்கு மாறு பணித்து விட்டு ஏனையவர்கள் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்.

ஜான் ஃபிட்ஜரால்ட் தன்னை விட இளைஞரான ஜிம்மை மூளைச் சலவை செய்து, ஹக்கை அரைகுறை உயிரோடு விட்டு விட்டு ஏனையவர்களுடன் தங்களது பயணத்தை தொடர முயல்கிறார். இது வரையிலும் தான் உண்மை கதை. படத்திற்கென வரும் காதல் கதையில், டிகாப்பிரியோ சிவபிந்திய பெண் ஒருத்தியுடன் கலந்து, அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான். வெள்ளையின காலனி மக்கள் ஊர் புகுந்து சுட்டு கொல்லும் மேளாவில், கதாநாயகியும் இறந்து போகிறாள்.

மகனுடன் டிகாப்ரியோ பயணத்தை தொடர்கிறான். இந்த நிலையில் படத்திற்கென ஃபிட்ஜரால்ட், ஹக்கின் மூக்கையும், வாயையும் மூடி கொன்று விட எத்தனிக்கும் பொழுது மகன் போராடி காப்பாற்ற முனையும் பொழுது தந்தைக்கு முன்பாகவே கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்படுகிறான். பின்பு, டிகாப்ரியோவை அப்படியே விட்டுவிட்டு மற்ற இருவரும் சென்று விடுகிறார்கள்.

மூன்று வாரத்தில் முதல் முறையாக படுத்த படுக்கையாக கிடந்தவன், தன் உடம்பை தரையில் போட்டு இழுத்து, இழுத்து ஊர்ந்து சென்று தன்னுடைய மகன் கொலையுண்டு கிடக்கும் காட்சியை காண்பதும், அதற்கென முகத்தில் காட்டும் உணர்வுகள், நமது தொண்டையில் ஏதோ ஒன்று ப்ளக் என்று அடைத்து கொள்ள வைப்பதாக உள்ளது. அந்த காட்சிக்கிடையே சிறிது நேரம் மேகம் சூரியனை மறைத்தும் மறைக்கமாலுமாக நகர்ந்து கொண்டிருப்பதை ரொம்ப நிதானமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். இது போன்ற பல மாலை, காலை சூரிய உதயமும், மறைவுமாக காட்சி படுத்தல்கள், அந்த பகுதியில் நாமும் வாழ்ந்து விட்டு வந்ததிற்கான அடர்த்தியான மன நிலையை விட்டுச் செல்கிறது.

மறைந்து போன காதலி டிகாப்ரியோவின் மரண போராட்டதின் போதும், ஆழ்ந்த உறக்கத்தின் போதுமாக வந்து ஹஸ், ஹஸ்பதும், மரத்தின் வலிமையோடு வாழ்வின் போராட்ட குணத்தை ஒப்பீட்டு அவனை போராட உந்துவதும் ஏதோ சிவப்பிந்தியர்களின் அதெண்டிக்கான மைண்ட் ஸ்பிரிட் இசையை ஒலிக்க விட்டு கேட்பதனை போல வெரி மெடிட்டேடிவ். 

மிச்சக் கதை டிகாப்ரியோ பலி வாங்கும் எண்ணத்துடன் ஃபிட்ஜரால்டை தேடி சென்று பலி வாங்குவதே கதை.

பனியில் ரத்தம் பார்க்கும் பொழுது ஏதோ மனதை பிழிகிறது. வீட்டிற்கு வந்து பாப்பாவின் முகம் பார்க்க முடியாமல் அழுது கொண்டே இருக்க நேர்ந்தது. அவள் என் கண்களை பார்த்து விட்டு அவள் கண்களில் தொடர்ந்து முன் மண்டை முடி கண்களில் வீழ்வதாக கண்ணை துடைத்து கொண்டே இருந்தாள். பிறகு, ஒரே ஒரு கேள்வி எதற்காக அந்த படத்தை பார்க்க சென்றாய்? அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை. 

ஏன் இந்த படத்தை பார்க்க மனது விரும்பியது. உள்ளே ஏதோ ஒரு வெற்றிடம் தொடர்ந்து பரந்து விரிந்த அந்த பனிக் காட்டின் மரங்களில் உரசி எழுப்பும் சப்பத்துடன் ஓலமிட்ட படியே எதனையோ நிரப்பிக் கொள்ள மனது தொடர்ந்து கனத்தை விரும்புகிறதோ என்னவோ. நிலையாமை!!


Related Posts with Thumbnails