Friday, July 23, 2010

புது ஃபேஷன் ஷெட்டி, ஐயர், ரெட்டி, மேனன்: Is it fool's identity?

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” இது தமிழில் ரொம்ப பரவலாக பல மேடைகளில், சங்கங்களில், குழுக்களாக கூடி மகிழுமிடங்களில் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு வாக்கியம். இது வாக்கியம் என்றளவிலேயே பயன்படுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாடு எப்பொழுதும் எனக்கு உண்டு. எனது அவதானிப்பின் படியும், பயணங்களின் ஊடாகவும் நான் அறிந்து கொண்ட ஒரு விடயம், தமிழகத்தைக் காட்டிலும் வட இந்தியா மற்றும் ஏனைய தென்னிந்தியாவில் இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக ராஜ் பட்டேல், ஷில்பா ஷெட்டி, முகேஷ் ஷர்மா, ரேணுகா அய்யர், ப்ரீயா ரெட்டி,  அன்பு மேனன் என்று புழக்கத்தில் இருப்பதனைக் காணும் பொழுது உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது.

பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இது போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த ஜாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு வாடகைக்கு பிடிக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் xxxx என்றோ, மீரா xxxx என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குழுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

அண்மைய காலத்தில் தமிழகத்தில் அது போன்ற ‘ஜாதி அடைமொழிகள்’ சிறிதே வெளிப்பார்வைக்கு எழுதி அறிவித்துக் கொள்வது குறைந்திருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் லோ கட் ஜீனும் , யூ பெட் என்ற வாசகத்தை கொண்ட டீ சர்ட்டும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டறியாத உடை உடுத்திகளின் மண்டைகளை கொண்ட ட்ரெண்ட் செட்டர்களின் நடவடிக்கைகளைப் போல, நவீன யுவன்/யுவதிகளில் பலர் ஐயர்களையும், படையாச்சிகளையும், ரெட்டிகளையும், ஷெட்டிகளையும் தங்களின் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தி வருவதும் ’ட்ரெண்ட் செட்டிங்’ அவதானிப்பிலேயே என்னால் கண்ணுற்று கடந்து போக முடியவில்லை.

ஏனெனில் இன்று நாம் தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியால் இந்த பரந்து விரிந்து கிடந்த உலகத்தை ஒருங்கே இணைத்துக் கட்டி, ஒரு சொடுக்கு நிகழ்த்தும் நிகழ்விற்கும் குறைவான காலத்தில் ஒரு மண்டைக்குள் இருக்கும் எண்ணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அது உலகம் முழுதுமே கற்றறிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு - ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக் என்று மாய்ந்து, மாய்ந்து எழுதி, படித்து உலகம் சுற்றி தனது மண்டை வளர்ந்து விட்டதாக அறிவித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இன்னமும் இந்த அடைமொழியின் மூலமாக எது போன்ற விளைவுகளை இந்த மனிதக் கடலில் கலக்க எண்ணி கலக்கிறோம். இது போன்ற அறிவு முண்டியடிக்கும் ஒரு கால கட்டத்தில், அது போன்ற துருத்தல்கள் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ளக் கூட வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?

அப்படி அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது ?

சரி அரைகுறைகளை விட்டுவிடுவோம். காலம் வரும் பொழுது தானாகவே விளங்கிக் கொள்வார்கள் என்ற நப்பாசையில். கலைச் சேவையோ அல்லது லைம் லைட்டிற்கு கீழே நிற்கும் மனிதர்களை எடுத்துக் கொள்வோம். ஒரு இயக்குனர் தனது படங்களின் மூலமாகவோ, அல்லது தனது புத்தகத்தின் மூலமாகவோ சில சமூக கருத்துக்களை முன் வைக்கும் இடத்தில் இருப்பவர் எப்படி தான் ஒரு முட்டாள், இன்னும் அந்தக் கட்டத்தையே தாண்டவில்லை என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வே அற்ற நிலையில் இப்படி சமூகத்தில் தன்னை அது போன்ற ஒரு ’நச்சு அடைமொழியுடன்’ முன் நிறுத்திக் கொண்டிருக்க முடியும்.

அடுத்து, அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படமான ’அங்காடித் தெரு’ நல்ல ஒரு சமூக கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்ட படம். அதனில் இரண்டு பாடல்கள் அப்படியே தூக்கி மிதக்க வைத்த பாடல்கள் அந்த வசிகரமான குரலும், பாடலின் ஆழமும் திளைக்க வைத்து எங்கோ நம்மை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே அந்தக் குரலுக்கு சொந்தமான மனிதர்களின் பெயரோ, புற அடையாளங்களோ முன் நிறுத்தப் படாத வரையிலும் எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது நம்மால் லயித்திருக்க முடிந்தது, ஆனால் எதார்த்தமான ஒரு சூழலில் அந்தப் பாடலை பாடியவரின் பெயருக்குப் பின்னால் கண்ட இந்த அடைமொழிகள் - ஜானகி அய்யர், நரேஷ் அய்யர் போன்றவைகள் மீண்டும் நம்மை பூமிக்கே கொண்டு வந்து ஒரு அர்ப்பனாக்கி மாடுகளை கட்டுத்தறியில் கட்டி வைத்ததிற்கிணையாக நம்மை சிக்குற வைத்து விடாதா? இது போன்ற முன்னிருத்தல்கள் எல்லாம் எதற்காக; அதுவும் மனிதத்தின் மேன்மை பண்புகளான நேசம், பாசம், காதல், பரிவுகளைப் பற்றி பாடி மனிதர்களின் இறுக்கங்களை தளர்த்தும் ஒரு தளத்தில் இருப்பவர்களுக்கு. உண்மையாகவே எனக்கு புரியவில்லை!

அப்படியெனில் இது வரையிலும் அது போன்ற மனிதர்கள் இதன் பின்னணியில் இருக்கும் அபாயத்தை/அபத்தத்தை உணரவே இல்லையா? தான் இந்தத் துருத்தலை தூக்கிக் கொண்டு அலைவதால் முதலில் தான் ஒரு முட்டாள் என்பதனை ஊரறிய ஒத்துக் கொள்பவனாகவும், அடுத்த மனிதர்களை சஞ்சலமடையவும், உணர்வுகளை நசுங்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வற்ற மூடனாகத்தானே நம்மால் புரிந்து கொள்ள முடியும்?

இப்படி குழுக்களாக, சிறிது சிறிதாக உடைத்து உடைத்து ஒரே நாட்டிற்குள் வாழ நேர்ந்து போனால், எப்படி நாமும் 2020க்குள் இது போன்ற சில்லறைத் தனமான விடயங்களிலிருந்து வெளிப்பட்டு உலக அரங்கில் ‘சூப்பரு பவரு’ன்னு அறியப் படுத்திக்கிறது; இவ்வளவு ஓட்டை ஊழல்களை நம்மிடம் வைத்துக் கொண்டு.

எது போன்ற வாழ்க்கை கல்வி, இவர்களின் வாழ்க்கையை எந்தச் சூழலில் பேரிடியாக அடித்து சக மனிதனை மனிதனாக மட்டுமே பார்த்து பழகும் ஒரு நல்ல பண்பை ஊட்டும் வகையில் ஒரு வாய்ப்பை வழங்கப் போகிறது? Morons!

இது என்னுடைய சுய விசாரிப்புகளாக எழுந்த எண்ணங்களே! அப்படியே இந்தப் பாட்டை கேட்டு கொஞ்சம் நேரம் மறந்து மிதப்போம்...



NK Dreams¨‘°ºO™ - Un Perai Sollum .mp3
Found at bee mp3 search engine

14 comments:

வால்பையன் said...

காந்தியை விட்டுடிங்களே!

surname said...

இங்கே சுட்டிக் காட்டியிருக்க கடைசிப் பெயரெல்லாம் குடும்ப பெரில்லையா?????

மரா said...

நல்லதொரு கட்டுரையாக வந்திருக்க வேண்டிய விடயம். ரொம்ப மேம்போக்கா டீல் பண்ணியிருக்கீக.பிறகு பேசுவோம்.

Unknown said...

தெகா, எப்படி இருக்கீக? வீட்டில் எல்லாம் நலமா... குட்டிப் பாப்பா எப்படி இருக்கா?

அதே வழக்கமான சாடல், காரம்.
சந்திப்போம். இது நிறைய விவாதிக்கப்படவேண்டிய விஷயம். நான் வழக்கம்போல வேடிக்கைப் பார்க்கிறேன் :)

Thekkikattan|தெகா said...

வால்பையன் said...
காந்தியை விட்டுடிங்களே//

வால், அந்தப் பேரு எதைச் சொல்லி நிக்கிது. கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்... ஆனா, அதை வைச்சு ஒரு கூட்டம் பொழச்சிக் கெடக்கு இன்றைய நாள்லேன்னு தெரியும் ;)

Thekkikattan|தெகா said...

surname said...
இங்கே சுட்டிக் காட்டியிருக்க கடைசிப் பெயரெல்லாம் குடும்ப பெரில்லையா????//

அப்படியா? எப்படி?? அப்போ நேத்தைக்கு வரைக்கும் வாழ்ந்த அப்பன், தாத்தன் பேரை இல்ல கடைசிப் பெயர போட்டுக்கிட்டு இருந்தோம். இது என்ன இந்தியா முழுக்கவுமே குழு குழுவா ஒரே குடும்பப் பெயரா? அப்போ இந்த மாதிரி குடும்பப் பெயர்களுக்கும் சமூக ஏற்ற இறக்கத்திற்கும் எந்த தொடர்புமே இல்லையா?

தருமி said...

ஒரு வேளை 'மயிர் இருக்க மவராசி கொண்ட போட்டுக்கிறா' அப்டின்ற தத்துவமா இருக்குமோ?!

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூராரே!!!! தலீவா எப்படி இருக்கீக. இங்க எல்லாரும் நல்லாருக்கோம். என்ன கம்பெனிய கட்டி எழுப்பிறதிலேயே எல்லாரையும் மறந்துட்டியளா?? :)) சீக்கிரமா மின்னஞ்சிறேன்...

//அதே வழக்கமான சாடல், காரம்.
சந்திப்போம். இது நிறைய விவாதிக்கப்படவேண்டிய விஷயம். நான் வழக்கம்போல வேடிக்கைப் பார்க்கிறேன் :)//

ஏதோ அங்கன கத்திப்போட்டு நம்மால முடிஞ்சதையாவது அடக்கி வாசிக்கவாவது வைச்சிக்குவோம்னுதேய்ன். வேடிக்கை மட்டுமே பார்க்காம ஏதாவது சொல்லி வைங்க அப்போதான் நிறையும் :D

ராஜ நடராஜன் said...

fools identity = முட்டாள்களின் அடையாளம்!நல்லாயிருக்குதே:)

கண் உள்ளவன் பார்க்க கடவன்!

Robin said...

இதற்கு ஒரே தீர்வு இந்த மாதிரி ஜாதி பெயர்களை பெருமையாக சொல்லிக்கொண்டு திரிவோரை கேலி செய்வதே.
சமுதாயம் இதைக் கேவலமாகப் பார்க்கிறது என்று தெரிந்தாலே இந்தக் கேட்ட பழக்கம் ஒழிந்துவிடும்.

Thekkikattan|தெகா said...

தருமி said...
ஒரு வேளை 'மயிர் இருக்க மவராசி கொண்ட போட்டுக்கிறா' அப்டின்ற தத்துவமா இருக்குமோ?//

இருக்கலாமோ!! ஒரு வார்த்தை சொன்னாலும் கல்வெட்டில அடிச்சி வைக்கிற மாதிரி சுருக்கி சொல்லிடுறது--- ச்சூப்பரு. அந்த attitudeல வைச்சி எல்லாத்தையும் பார்க்காதிங்கன்னுதானே சொல்ல வாரீங்க.

Thekkikattan|தெகா said...

ராஜ நடராஜன் said...
fools identity = முட்டாள்களின் அடையாளம்!நல்லாயிருக்குதே:)

கண் உள்ளவன் பார்க்க கடவன்//

:)

துளசி கோபால் said...

இதுலே பலதும் குடும்பப்பெயர்கள். கேரளாவில் ஆந்திராவில் வீட்டுப்பெயர்கள் முன்னால் போட்டுக்குவாங்க.

ஆமாம்...... கௌரவத்துக்குக் கொடுக்கும் பட்டங்களையெல்லாம் நீட்டி முழக்கி முன்னால் போட்டுக்கும் நபர்களைப்பற்றி என்ன நினைக்கறீங்க?

இன்னும் வேற என்னென்னவோ கூட வருது..... இப்போ வேணாம்.

Anonymous said...

சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.
சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

நல்லையா தயாபரன்

Related Posts with Thumbnails