Tuesday, April 09, 2019

ரஜினிக்கு ஒரு கடிதம்: நதிநீர் இணைப்பு

பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே நதிகளை இணைக்க வேண்டும் - ரஜினி காந்த்.

அளவிற்கு மீறிய புகழ், பணம், அதிகாரம் இது எல்லாமே ஒரு நிலையில் காலம் ஒருவருக்கு வைத்த செக்மேட் அல்லது சாபம் எனக் கொள்ளலாம்.

இவைகள் அனைத்தும் கிடைத்தும் ஒருவருக்கு தன்னுடைய லிமிட், டிலிமிட் அறிந்து கொள்ளத் தேவையான தனக்கென நேரம் செலவழிப்பு, நல்ல புத்தகங்கள் வாசிக்கத் தேவையான மன நிலை, தன்னுடைய நிலைக்கென தன்னிடம் பழகும் மனிதர்களைத் தாண்டிய நட்பு பேணும் மனநிலை அமைவது என்பது சிம்ம சொப்பனமே!

உண்மையான "டவுன் டு எர்த் பர்சன்" என்பது அதுவாகத்தான் இருக்க முடியும். எளிமை, பணிவு, பக்குவம் என்பதும் அந்த உலகத்தின் கூரையில் தான் இருக்கிறோம் என்றாலும், இடம், பொருள் தன்னுடைய அறிவிற்கு இதைச் சொல்வது பொருத்தமானதா என்று அறிந்து பேசுவதில் இருக்கிறது.

இந்த நதிநீர் இணைப்பை பற்றி இந்த சூப்பர் ஸ்டார் தொடர்ந்து தன்னுடைய மட்டித் தனமான வாதத்தை வைக்கிறாரே, இவர் இந்த பூமியுனுடைய இரண்டு பில்லியன் ஆண்டுகளின் படிமலர்ச்சிப் பற்றி ஏதாவது வாசித்திருப்பாரா?

கடந்த 600 மில்லியன் ஆண்டுகளுக்குள் எது போன்ற கரடு முரடான வளர்ச்சிகளை இந்த பூமி முகம் கொடுத்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தி இருப்பாரா? ஏன் அவ்வளவு தூரம் போகிறோம் பெர்மியன், ட்ரையாசிக், ஜுராசிக், க்ரேட்டேசியஸ் என்ற பூகோள கால க்ரமத்தில் என்னவெல்லாம் இந்த பூமி மேலோடு மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று அவருக்கு யாராது சொல்லி இருப்பார்களா?

300 மில்லியன் ஆண்டுகள் வரைக்குமே கண்டங்களே இல்லாமல் ஒன்றாக பாஞ்சியா (Pangea) என்ற முழுப் தரைப்பகுதியாகத்தான் இந்த பூமி இருந்திருக்கிறது. ஒரே கடல்தான்.

டைனோசார்கள் கோலுச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான் நிலப்பரப்பு பிய்த்துக் கொண்டு தனித்தனியாக கண்டங்களாக நகர்ந்திருக்கிறது. அப்பொழுது ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த நதிகள், ஆறுகளுக்கெல்லாம் என்ன வாகி இருக்கும்?

இருந்த பெரிய ஆறுகள் காணாமல் போயிருக்கும் அத்துடன் அதனையொட்டி வாழ்ந்த உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துப் பட்டிருக்கும். பூமியின் மோலோடு மாற்றி அமைக்கப்பட்டதால் புதிய ஆறுகள் அதனதன் வழியை கண்டுபிடித்து உருவாகி இருக்கும். அதனையொட்டிய நிலப்பரப்பில் அதனையொட்டிய சுற்றுச்சுழலுக்கு தகுந்த தகவமைவுகளுடன் உயிரினங்கள் உருவாகி படிமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கும்.

இவை எதுவுமே ஒரே இரவில் அடைந்த மாற்றங்கள் கிடையாது.
கோடிக்கனக்கான ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த பின்னணியில் வைத்து நம்மை பார்த்தால், நாம் யார் இந்த பூகோளத்தின் வரைபடத்தை திருத்தி எழுதிக் கொள்ள? அப்படி நதிகளின் வழியை திருத்தி அமைக்கும் பொழுது எது போன்ற நீண்ட கால மாற்றங்களை இந்த சுற்றுப் புறச் சூழல் முகம் கொள்ளும் என்று சிந்தித்தது உண்டா, மிஸ்டர். சூப்பர் ஸ்டார்?

அன்று தழைத்து, கொழித்து வாழ்ந்து வந்த டைனோசார்கள் இன்று எங்கே? எதனால் அவைகள் அழிந்து பட்டிருக்கக் கூடும்? நீரும், உணவும் தானே அடிப்படை ஆதாரம் அனைத்து உயிரினத்திற்கும் ஆறுகள் தன்னியல்பில் தனது பாதை கண்டு கடலில் கலப்பது தானே காலச் சக்கரம் அதற்கு வழங்கிய இயல்பு. இதில் உங்க ஒரு கோடி ரூபாய் கொண்டு வேண்டுமானால் இருக்கும் குளம், குட்டை, ஆறுகளை தூர் வார கொடை அளியுங்கள்.

போகாத ஊருக்கு வழி காட்டாதிங்க. செலவு மிச்சம்னு.

யாரோ சொல்கிறார்கள் என்பதால் லாஜிக் இல்லாத தன்னுடைய அறிவிற்கு எட்டாத விசயத்தை எல்லாம் உளரி வைக்கக் கூடாது. தானே தேடிப் படித்து, சிந்தித்து பெரும் பெரும் பிரச்சினைகள் பொருத்து வாயை விட வேண்டும்.

உங்களுக்கு ஒரு புத்தகம் சிபாரிசு செய்கிறேன். ஆராய்ச்சிக்கான புத்தகமே ஆனாலும் ஒரு சினிமாவிற்கு உண்டான பிரமாண்டம் இருக்கிறது. உங்களது வாழ் நாளுக்குள் வாசியுங்கள். பிறகு நதிநீர் இணைப்பு பற்றி பேச கொஞ்சம் யோசிப்பீர்கள்.

The Rise and Fall of the Dinosaurs: A New History of a Lost World by Stephen L. Brusatte

0 comments:

Related Posts with Thumbnails