Wednesday, March 20, 2013

கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - I

இந்த கேப்பங்கஞ்சிக்காக உழை உழைன்னு உழைத்த கவிதாவை எப்படியாவது கெளரவித்து காட்டிவிட வேண்டுமென்று அவரது தளத்தில் வெளியிடப்பட்ட எனது இந்த நேர்காணல் மறுபிரசுரிப்பு செய்ய பல முறை கேட்டும் எனக்கு அனுமதி வழங்காமலேயே கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

ஒரு வழியாக மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டு சரி எடுத்து போட்டுக் கொள்வதனால் போட்டு கொள்ளுங்கள் என்று அனுமதியும் கொடுத்தாகி விட்டது. அப்படி போராடி இதன் மறு பிரசுரிப்பு வாங்கியதற்கான காரணமாக சட்டென்று என் மனதில் படிவது என்ன வென்றால், பத்தி பத்தியாக நான் சிந்திச்சு எனது பார்வையை பகிர்ந்து கொண்டதை விட, இதற்கென பல மாதங்கள் என்னுடைய அத்தனை பதிவுகளையும் வாசித்து, அதனின்று கேள்விகளை உருவி மீண்டும் எங்கும் அடி பிராளமல் நான் சென்று கொண்டிருக்கிறேனா என்று என்னை மறு தோண்டுதல் செய்த கவிதாவிற்கு நன்றி கடனாகவாவது இருந்து விட்டு போகட்டுமே என்று மொத்த நேர்காணலையும் இரண்டு பகுதிகளாக பிரித்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இது எனது கடந்த வருடங்களுனுடைய முக்கிய பதிவுகளின் சாரம்சமாக அமையும் என்றால் மிகையாகது. நன்றி! Squirrel Kavitha, are you happy now! 

இதோ அந்த ஆறிப்போன கேப்பங்கஞ்சியை மைக்ரோவோவ் பண்ணி கவிதாவுடன் சேர்ந்து உங்களுக்காகவும்...

**************************************


2005ல் வலைப்பதிவு தொடங்கியுள்ள பிரபா என்ற தெகா'வின் முதல் பதிவிலே கண்டெடுத்த வார்த்தைகள் "தெக்கிக்காட்டானுக்கு முகமூடி கிடையாது, பெயரிலே தெரிந்திருக்கலாம்." முகமூடிகளோடு எழுதும் பலரின் மத்தியில், முகமூடி என்று ஒன்று இல்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், ஓரளவிற்கு தன்னை தானாக இருக்க வைத்துக்கொண்டு, எல்லாவிதமான பரிமாணங்களிலும், எல்லா பொருள்களிலும் எழுதக்கூடிய நண்பர் தெக்கிக்காட்டான் இன்று எங்களுடன்.

லிவிங்ஸ்மைல் வித்யா'விற்கு பிறகு கேள்விகள் கேட்க மிகவும் யோசித்த ஒரு நண்பர் இவராகத்தான் இருப்பார். இது வரை மிக எளிதாகவே எல்லோரிடமும் கேள்விகள் கேட்டு இருக்கிறேன். ஆனால் தெகாஜி ஐய் கேள்விக்கேட்க 2005-08 வரை அவருடைய எல்லா பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து கேட்க வேண்டியதாக இருந்தது. காரணம் எதுவுமே கான்ரோவா, அவரை துருவி கேட்கும்படியாக இல்லை. இப்பவும் இவரை என்ன கேட்பது என்ற தெளிவில்லாமலேயே...


இதோ தெகா...

அடக் கொடுமையே! 2005-'08வரைக்கும் ஒரே மூச்சில படிச்சீங்களா? ஏன் டாக்டர் ஏதும் அறிவுருத்தினாரா எப்படித் தூக்கம் வராதவங்களுக்கும் தூக்கம் இது போன்ற போரிங்கான பதிவுகளை படிப்பதின் மூலமாக தூங்க வைக்க முடியுங்கிறமாதிரி. எப்படியோ பொழச்சுப் கெடந்து வந்து கேள்வியும் கேட்டுறீக்கலே அதுவும் இன்னமும் அந்தத் தூக்கத்திலிருந்து "தெளியாமலயே..." :)). அதுக்காகவாவது இந்தப் பதில்களை தாரேன், திரும்பவும் தூங்கவாது பயன்படுத்திக்கோங்க.

நகைச்சுவை ஒரு பக்கம். பை த வே, கவிதா உங்கள் அனைத்துக் கேள்விகளும் ரொம்பவே ஆழமாக உணர்ந்து இங்கு கொணரப்-பட்டதாகவும் என்னய நானே உட்முகமாக மேலும் பார்த்துக் கொள்ள வேண்டி கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவும் எண்ணச் செய்தது, உங்களின் உழைப்பும் அது சார்ந்த இந்த கேப்பங்கஞ்சியும். வாழ்த்துக்கள்! நன்றி!!

இப்பக் உங்க கேப்பங்கஞ்சி குடிச்சிக்கிட்டே... பேசுவோமா...


கவிதா: வாங்க தெகாஜி..எப்படி இருக்கீங்க. .வீட்டில் அனைவரும் சுகமா..? அமெரிக்காவில் இருக்கீங்க.அங்கேயிருந்து ஆரம்பிக்கலாமே. பொழுது விடிந்து பொழுது போன.. அமெரிக்காவை நம்பியே உலகம் இருப்பது போன்ற பிரம்மை அதிகமாகிக்கிட்டே போகுது...அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் கண்டிப்பாக அடிப்படுகிறோம், அடிப்படுவோம் என்று தெரிகிறது. 1 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று சமீபத்திய சர்வே சொல்லுகிறது. அங்கே இருக்கும் நம் இந்தியர்களுக்கு வருங்காலத்தில் பாதுகாப்பு இருக்குமா? உங்களால் நிலைமையை ஏதாவது கணிக்க முடியுமா .?

தெகா:- சுகத்துக்கு என்னங்க குறைச்சல், மனசு நம்ம கையாண்ட இருக்கிறதுனாலே எதைதை எப்படி பண்ணிக்கோணுமோ அப்படிப்படிப் பண்ணிப் போட்டு சந்தோஷமா வைச்சிக்க வேண்டியதுதான். எனக்கு இந்த சந்தோஷம் கடையில எடை போட்டு காசு கொடுத்து வாங்கிட முடியுங்கிறதில நம்பிக்கையில்லைங்-கோவ்(அதாவது புறப் பொருட்களின் மூலமாக). இது போலவே வீட்டில இருக்கிறவங்களையும் மனச வைச்சிக்க சொல்லி கேட்டுக்கிறதுனாலே எல்லாரும் நல்லாத்தான் இருக்கணுங்கிற மாதிரி நான் நம்பிக்கிறேன்.

[வாசகர்கள்: கேட்ட கேள்வி ஒரு வரி, இதுக்கு இப்படி எழுதினா எவன் உட்கார்ந்து படிக்கிறதாம் :))]

அமெரிக்காவா, அதை ஏன் கேக்குறீங்க நான் இங்கன வந்த நேரம் அமெரிக்காவை இந்தியாவிற்கு மாத்திட்டாங்களாம். அதுனாலே இங்கிருக்கிற பொருளாதார, கலாச்சார, மற்ற ஏனைய அதிர்வுகளை-யெல்லாம் என்னால் அங்கிருக்கும் செய்தித்தாள்களின் மூலமாகவும், ஏனைய மீடியாக்களின் மூலமாகவும்தான் உணர்ந்து கொள்ள முடிகிறதுன்னா பார்த்துக் கொள்ளுங்களேன் எந்தளவிற்கு உலகம் இறுக்கி கட்டப்பட்டிருக்கிறதா எல்லாரும் உணர்ராங்கன்னு.


இந்தியர்களின் நிலையும், பாதுகாப்பும்: பார்க்கலாம் அது வரப் போகின்ற அமெரிக்கா அதிபர் தேர்தலை ஒட்டியே சந்திக்கவிருக்கும் நிகழ்வுகளவை. குடியரசுக் கட்சி ஆட்சியமைத்தால் நிலமை கொஞ்சம் மேலும் சிக்கலாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமிருப்பதாக எண்ணத் தோணுகிறது. நம்மூர்ல ஐம்பது பேர் மட்டுமே ஏறிப் போர பேருந்தில 110பேரு பேரோம் எனக்கும் ஒரு ஒத்தைக் கால வைச்சிக்க நீங்க தள்ளி நின்னு இடங் கொடுக்காமயா போயிடுவீங்க, அப்படியே என் உசிருக்கு இங்க கேடு வரும் பொழுது அங்கே வாரேன்னா... சொல்லுங்க. எதுக்கும் இரட்டைக் குடியுரிமை வாங்கி வைச்சிட்டோம்ல.

கவிதா: மனித அட்டைகள்? உங்களுடன் முற்றிலுமாக முரண்படுகிறேன். கூட்டுகுடும்ப நிலை மாறுவதால், நிறைய பிரச்சனைகள் நம்மிடையே வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் நம் இந்திய கலாசாரத்திற்கு எதிராக நம்மை அழைத்து செல்கின்றன. இருவரே இருக்கும் ஒரு வீட்டில், அவர்கள் தவறுகள் செய்யும் போது சொல்லிக்காட்டி திருத்தவோ, சண்டையிடும் போது நடுவில் சென்று சமாதானம் செய்யவோ ஆள் இல்லையென்றால் எல்லோருமே திருமணம் ஆன 2 வருடங்களுக்குள் விவாகரத்து பெறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுவார்கள். மட்டுமல்லாது குழந்தைகள் பெரியவர்களின் ஆசிர்வாதத்திலும், அறிவுரை, அன்பிலும் வளருவதே சிறந்தது.. மட்டுமல்லாது முதியோர் இல்லங்கள் உருவாகாது. முதிய வயதில் கண்டிப்பாக நம்மின் அன்பும் அனுசரணையும் அவர்களுக்கு தேவையல்லவா?

தெகா:- இந்த கூட்டுக் குடும்பத்தினால கிடைக்கிற நன்மை தீமைகளை நன்றாகவே அலசித்தான் அந்தப் பதிவில் பேசியிருப்பேன். அதாவது ஒரு காலத்தில இது போன்ற கூட்டமைவு தன்னலமற்ற நிலை சற்றே மேலோங்கி, பொதுநலம் சற்று தூக்கலாக அதாவது தேவைகள் மட்டுக்குள் இருக்கப்பெற்று ஒரு குடும்பத்திற்குள் இருக்கப் பெற்ற அணைவரும் ஏதோ ஒரு வழியில் தனது பங்களிப்பை முன் வைத்து மன முறிவுகளை தவிர்த்து வாழ்ந்திருந்த பட்சத்தில் நீங்கள் கூறியபடி பல விதத்தில் உபயோகமாக இருந்திருக்கலாம் (ஆனா, குடும்பமே அழகிழந்து நிம்மதியில்லாமல் பல ஓட்டைகளுடனுடம், அரசியல் பூசல்களுடனும் வாழ நேரும் பொழுது அங்கே என்ன குழந்தைகளுக்கு சென்றுகிடைக்க வழிவகை இருக்க முடியும்?).

இன்றைய நிலையோ வேறாக இருக்கிறது. தேவைகள் பெருகிவிட்டது, உழைக்காமல் உண்ண வேண்டுமென்றோ அல்லது சட்டை கசங்காமல் பொருளீட்டுவது [இது போன்ற ஒட்டுண்ணி வாழ்வும் இதில வருதாங்க ஒயிட் காலராம்:)] போன்ற எண்ணம் தலைத்தோங்கி பொத்தாம் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையும் வந்த நிலையில் இது போன்ற கூட்டமைவு தேவையற்ற மன உளைச்சல்களயே கொடுக்கிறது குடும்ப உறுப்பினரிடத்தே, அதுவும் குறிப்பாக வயதான பொற்றோர்களுக்கு. திருமணமான தம்பதிகளில் பிற மக்களின் பங்களீப்பு என்பது அத் திருமணம் உடைந்துவிடாமல் பாதுக்காக்கப்படவே என்று சொல்லும் நிலையே, இரு வயதுக்கு வராத சிறு பிள்ளைகளுக்கு எதற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் ஊர்? என்றுதான் மாற்றுக் கேள்வி கேக்க வைக்கிறது. அவர்களே இன்னமும் குழந்தைகளாக தங்களின் அன்றாட வாழ்வியல் முரண்களை உற்று நோக்கி, பேசித் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளும் மன நிலையில் கூட தங்களை வைத்துக்கொள்ளத் தெரியாத மன பக்குவத்தில் இருக்கும் பொழுது, பிறகு சம்பிரதாயத்திற்காக பிறர் கொடுக்கும் தீர்வுகளை அவர்களது என்று எண்ணி ஏமாற்றிக் கொண்டு வாழும், வாழ்வும் இனிக்கவா செய்யும்? இதிலிருந்து எனக்குத் தெரிய வருவதே, தம்பதிகளின் இடைவெளி எவ்வளவாக மனத்திலும், மணப் பொருத்தத்திலும் இருக்க முடியுமென தெரிகிறது.

இப்பொழுது மேலை நாடுகளில் அவ்வாறு "தன் பொறுப்புணர்த்தி" வாழ வழிவகை செய்யும் குழந்தைகள் அனைத்துமே பெற்றோர்களை உதாசீனப் படுத்துகிறதென்றோ, யாருமே திருமணத்தில் முழுமையாக வாழாமல் இருக்கிறார்களொன்றோ பொருள் கொள்ள முடியுமா? நான் அருகாமையிலிருந்து கவனித்த வரையிலும், பொற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிருக்கிற உறவு நல்ல நண்பர்கள் நிலையிலிருப்பதால், தூரத்தே பிரிந்து இருந்தாலும், தேவையானதை நன்றாகவே பார்த்து பார்த்து செய்து கொடுப்பதனைப் போல் உள்ளது பொற்றோர்களுக்கு, அவர்களும் தங்களின் நிலையுணர்ந்து எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வதால் தேவையற்ற மனச் சங்கடங்கள் தவிர்க்கப்படுகிறது.இந்தப் பதிவிலும்... முதுமை ஒரு சாபக்கேடாஅந்தப் பதிவிலும நடை பெருவதினைப் போல நான் இங்கு கண்ணுற்றது கிடையாது.

ஆனால், இங்கு போன்று பொருளாதார, சமூக கட்டமைப்பு நம்மூரில் இன்னமும் அரசாங்கமோ அல்லது மங்களோ அமைத்துக் கொள்ளாத காரணத்தினால் இது போன்ற உதாசீனங்கள், முதுமையில் அப்யூஸ் எல்லாம் பார்க்க வேண்டிய நிலையில் அவர்களை பிடித்து தள்ளிவிடுகிறது.

கவிதா: கருக்கலைப்பு சட்டம் தேவையான்னு ஒரு பதிவு போட்டு இருக்கீங்க. கண்டிப்பா தேவையில்லை. நான் கருவுகிறேன் என்றால் அது என் உடம்பும் மனசும் சம்பந்தப்பட்ட என்னுடைய சொந்த விஷயம், குழந்தை சரியாக வளரவில்லை என்பது மட்டுமல்ல எந்த ஒரு என் சொந்த காரணங்களுக்காக நான் கருவை கலைக்கலாம் என்பதே சரி என்று நினைக்கிறேன். ஒரு பெண் தனக்கு தேவை தேவையில்லை என்று தானே முடிவெடுக்க உரிமை கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும் இல்லையா?

தெகா:- கருக்கலைப்புச் சட்டம் தேவையா என்ற பதிவில் என்னுடைய நிலையை தெளிவாக கூறிவிட்டேன். அதாவது கருவுற்றிருக்கும் பொழுது ஆரம்ப கால கட்டத்தில் நன்கு தேர்வுற்ற மருத்துவர்களால் கண்டறியப்பட்ட - குழந்தையின் இன்றியமையா உறுப்புகள் பாதிப்புற்று பிறப்பிற்குப் பிறகு தொன்று தொட்டு மருத்துவ தேவைகளையும், பிற மக்களின் அருகமையும், பொற்றோர்களின் ஈடுபாடு அவர்களின் பொருளாதார சூழ்நிலை இவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கே அந்த கருவை வளர்த்து ஈன்றெடுப்பதா வேண்டாமா என்ற இறுதிக் கட்ட முடிவை அவர்களின் பொருட்டே கொடுப்பதே சிறப்பு என்று கூறியிருக்கிறேன் தெளிவாக அந்தப் பதிவின் மூலமாக.

கருத்தடை சாதனம் கொண்டு குழந்தை கட்டுப்பாட்டை தவிர்த்து விடுவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னால் வைத்து பார்க்க முடியாத நிலையிலும் குழந்தை "கடவுள் கொடுத்தது" அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற காலாவதியான கருத்தோட்டத்தில் எந்தவிதமான பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றிகும் மேலாக குழந்தையின் பாலினத்தைப் கண்டறியும் பொருட்டு லக்சுரியில் வைத்துக் கொள்வதும், கலைத்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே ட்டூ மச். எ பிக் நோ, நோ.

கவிதா:- தீவிரவாதம், வன்முறை போன்ற செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ப்பு முறை, குடும்ப சூழல் காரணம் என்பது தவறான கருத்தாக இருக்கிறது. எனக்கு தெரிந்து நல்ல முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் தீயநட்பு, சமுதாய தாக்கம் போன்றவற்றால் வாழ்க்கையில் தடம் மாறி போனதை பார்த்து இருக்கிறேன். உங்களின் கருத்து.?!

தெகா:- குழந்தைகள் எது போன்ற சூழலில் வாழ்ந்து வருகிறது என்பதும், எது போன்ற பொற்றோர்களை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு இந்த சமூதாயத்தை முதலில் பருவத்தை எட்டுவதற்கு முன்னமே வீட்டின் வளர்ப்புச் சூழலைக் கொண்டே பார்த்து, கேட்டுத் தெரிந்து கொள்கிறது. அது போன்றே குழந்தைகளின் தனித்துவத்தன்மை பேணல் என்ற கட்டுரையின் மூலமாக எப்படி குழந்தைகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்பதனை விளக்கியிருப்பேன். என்னை பொருத்த மட்டில் பெரியவர்களின் வழிகாட்டுதல்கள் என்று கூறிக்கொண்டு எல்லாவற்றையுமே வலிய குழந்தைகளின் தலையில் வைத்து திணிப்பதனையே ஒரு வன்முறையாகத்தான் பார்க்க முடிகிறது.

மற்றபடி நீங்கள் கூறியபடியே பிரிதொரு சமயத்தில் தானும் ஒரு அடல்டாக எட்டும் நிலையில் கூடா நட்பு, தீய பழக்கம், சமூகத் தாக்கம் இன்ன பிற வன்முறையை நோக்கி அடியெடுத்துச் செல்ல வழிகோணலாமென்றாலும், அது நடைபெறும் காலமும் சூழலும் வேறு. ஆனால், முதல் அடி வளர்ப்புத் தளத்திலயே கோளாறுக்கி விடுவதுதான் மிக்க வருத்தத்துக்குரியது. உதாரணம்: பிடிக்காத ஒரு கல்வியில் கட்டாயப்படுத்தி புகுத்தி விடுவதோ, அல்லது தவறானா முறையில் பிற சமயங்களைப் பற்றியோ, அல்லது பிரிதொரு பாலினத்தின் மீது காழ்புணர்ச்சி வரும் வகையில் தனது புரியாத கருத்துக்களை தனது குழந்தைகளிடத்தே ஊட்டி வளர்த்து விடுவது, இப்படி. வித்தியாசம் புரிகிறதா??

கவிதா:- உங்களின் குட்டி கவிதைகள் படித்தேன்..:))-ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!! எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க தோன்றுகிறது..? உயிருடம் இருக்கும் நம்மை பிணங்கள் என்று சொல்லலாமா? உணர்வுகள் அற்றவர்களை, மனிதநேயம் இல்லாதவர்களை வேண்டுமானால் சொல்லலாம்.. ஆனால் எல்லோரையுமா? ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!!

தெகா: கவுஜா என்றால் வாழ்வின் முரண்பாடுகளின் மூட்டைகளை தோலுரித்து காட்டுவதற்கெனவே அமைந்தவை இல்லையா? அந்த ரீதியில் வைத்துப் பார்க்கும் பொழுது என்றோ ஒரு நாள் நாம் எல்லாம் மரணிக்கப் போகிறவர்கள்தான் இருந்தாலும், இன்று இறந்தவர் என்னமோ தேவையற்றுப் போனதாகவும், நமக்கு அவரை(பிணத்தை) பார்க்கக் கூட நேரமில்லா தொனியில் பரபரவென்று இருப்பதனைப் போலவும் கண்ணுற நேர்ந்ததால், அப்படி மரணத்தின் மடியில் நான் அமர்ந்து கொண்டு எள்ளி நகையாடுவதனைப் போல அமைத்திருக்கிறேன். பாதி பேரு இங்கே "இறந்த நிலையில்" தானேங்க இன்னமும் வாழ்ந்திட்டு இருக்கோம். எதுக்காகவாவது ஒன்றுக்கு தினமும் பயந்தவாறே.

கவிதா: நீங்கள் இயற்கை நேசி என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. இது இயற்கை குணமா அல்லது நீங்கள் வளர்த்துகொண்டதா?

தெகா:- நம் எல்லோருக்குள்ளுமே அந்த வேட்டையாடும், இயற்கையுடன் ஒட்டி உறவாடி மகிழும் பொழுது கிடைக்கும் ஆத்ம சுகம் என்றைக்குமே அழியாது இருக்கும், இது குழந்தை பருவத்தையொட்டி பீரிட்டு வெளிப்படுவதனை காண முடியும், ஆனால் மீண்டும் தான் வளரும் சூழலும், வாழ்க்கைத் தேவைகளும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் எதார்த்தம் மறந்து செயற்கைத் தனத்தில் ஒட்டிக் கொள்ள வழிவாகை செய்துவிடுகிறது. எனக்கு என்னமோ, அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி வானத்தை அன்னாந்து பார்த்து பேட்டரியை (எண்ண) ரீ-சார்ஜ் செய்து கொள்வது பழக்கமாகிப் போன ஒன்று, அதுவும் இரவு வானமென்றால் அலாதி பிரியம். அப்படியே அதற்கு கீழே இருக்கக் கூடிய மரம், மட்டை, பூச்சி அத்துனை ஜந்துக்களையும் பார்க்கும் பொழுது பூமிப் பந்தின் பரிணாமச் சுழற்சியில் நம்முடனே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தாம், அவைகளன்றி இங்கே நமக்கென்ன பூலோக சொர்க்கம் கிடைக்க வழி, என்றாகிப் பார்க்கத் தோன்றுகிறது.

அது அப்படியாக இருக்க ஏதோ குருட்டாம் போக்கில் நல்ல வேளையாக எனது பொற்றோர்கள் மெத்தப் படித்தவர்களாக இல்லாமல் போக, எனக்கு மூளைச் சலவை பண்ணப்படக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்ததும் ஒரு லக்கியான நிகழ்வுதான், ஏனெனில் அப்படியாக அமைந்திருந்தால் இன்னேரம் எங்கோ ஒரு கூண்டுக்குள் அமர்ந்து ஆணிப் புடுங்கியிருப்பேன், கண்ணீல் ரத்தம் சொட்டச் சொட்ட. என் கல்லூரி வாழ்க்கை முழுதுமாக பச்சைப் பசேல் மேற்கு மலைக் காடுகளில் அமைந்து போனதும் நேசியாகிப் போனதற்கு மற்றொரு காரணம்.


கவிதா:- எப்படி அடுத்தவர்களை புண்படுத்தாமல் பதிவெழுத நம் மனதை கட்டுப்படுத்த வேண்டும், எப்படி முகமூடிகளாக உலாவராமல் உணமையான பெயரில் பதிவுகளும் , மறுமொழிகளும் இட நம்மை கட்டுப்படுத்தவேண்டும் என்று பதிவுலக நண்பர்களுக்கு சொல்லுங்களேன்.

தெகா: பொதுத் தளத்தில் எது போன்ற புரட்சிக் கருத்துக்களையும், மாற்றுச் சிந்தனைகளையும் யாவரும் பகிர்ந்துகொள்ளல் எண்ணி(பொறுப்போடு) வைப்பதில் நமக்கு உள்ளார்ந்த திருப்தி கிடைக்கிறது என்றாலும், ஏனையோரின் பிரதி விவாதங்களும் அவர்களின் மாற்றுக் கருத்துக்களும் ஒருமித்த சிந்தனையுடனும், இசைபுடனும் இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பை சற்றே நம் கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே, பாதி இரத்த அழுத்தத்தை பங்களீப்பவர் தவிர்த்துக் கொள்ள முடியும். ஏனெனில், அது போன்ற மாற்றுச் சிந்தனைகளை முன் வைப்பவர் என்னுடைய வளர்ச்சி நிலையின் எல்லைக்குள் பிரவேசிக்காமலோ அல்லது அவருக்கு அவர் எடுத்திருக்கும் சார்பு நிலை சரியொன்றோ எண்ணிக் கொண்டிருக்கும் பட்சத்தில், எவரவர் சார்பு நிலையோ அல்லது கருத்துக்களோ தினப்படி பல மாறுதல்களை அவர்கள் எண்ணும் எண்ணமாகவே விட்டு பயணித்து செல்லும் பட்சத்தில் தானாகவே மனத்தினுள் மாற்றங்களை உணர்வர்.

இருந்தாலும், பங்களீப்பவர் அதனை முன்னமே உணர்ந்தவர் என்ற முறையில் நம்முடைய பார்வையை முன் வைக்காலமே தவிர "அடித்து பழுக்க வைத்துவிட முடியும்" என்ற அணுகு முறை ஒரு போதும் பலனளித்ததாக பொருள் கிடையாது என்று கருதி விலகி இருப்பது நலம் பயக்கலாம். பங்களீத்தவர் மனவோட்டம் எப்படியாக இருக்க வேண்டுமெனில் மாற்றுச் சிந்தனையை மனத்தினுள் விதைத்தாகிவிட்டது, காலப் போக்கில் அலசி, ஆராய்ந்து நன்மை தீமைகளை ஏற்றுக் கொள்வது வாசிப்பாளரின் கைவசமென்றெண்ணி அவர்களிடத்தேயே விட்டுவிடுவதாக இருக்க வேண்டும்.

இல்லையெனில், கோபத்தில் சொல்ல வந்த விசயத்தின் மையக் கருத்து சிதைபட்டு, எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை வாசிப்பாளனிள் விட்டுவிடாமல் இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவதும், சினமுறும் பொழுது அங்கே எண்ணவோட்டம் சீராக இருப்பதும் கிடையாது. ஒரு நல்ல விசயத்தை முன்னுறுத்தி எழுதப் படும் கருத்து குறைந்த பட்சம் மனத்தினுள் பல மணி நேரங்கள் தக்க வைக்கப்படும் பொருட்டு அங்கே தெளிவான சிந்தனை பிறக்க ஏதுவாகிறது, அப்படியாக முன் வைக்கப்படும் கருத்துக்களும் கண்டிப்பாக "திறந்த நிலை" (தன் முனைப்பில் தன்னை வளர்த்துக் கொள்ள விரும்புபவனை) வாசிப்பாளனை தொட்டுச் செல்லாமல் விட்டுப் போவதுமில்லை என்பது என் கருத்து.


...to be contd -2



5 comments:

கவிதா | Kavitha said...

பல மாதங்கள் என்னுடைய அத்தனை பதிவுகளையும் வாசித்து, //

என்னை சோம்பேறின்னு நினைச்சீங்களா? இல்ல வெட்டின்னு நினைச்சீங்களா?

பேட்டி எடுப்பதற்காக சம்பந்தப்பட்டவரின் பதிவுகளை படிப்பேன். ஆனா மாதக்கணக்காக இல்லை. இதற்கு முன் பதிவிட்ட கேப்பங்கஞ்சியின் தேதியை கவனிக்கவும். :)

கவிதா | Kavitha said...

பகிர்ந்ததற்கு நன்றி..

Thekkikattan|தெகா said...

//என்னை சோம்பேறின்னு நினைச்சீங்களா? இல்ல வெட்டின்னு நினைச்சீங்களா? //

இது இரண்டும் இருந்தாத்தான் என்னோட பதிவுகளையே தொட்டுச் செல்ல முடியும். :)

யாத்தே! நீங்க சொன்னதை வைச்சுத்தான் இதையே இப்படி எழுதி முன் கொண்டு வர முடிஞ்சிச்சு. ஓவர் தன்னடக்கம் தன்னையே அடக்கமாக்கிடும். :))

Anonymous said...

ராம்நாட் - கோமுட்டி வற்றல்
உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா,பல்லி மிட்டாய்
சென்னை-நெல், அவல், மனோரஞ்சிதப்பூ
மதுரை -இட்லி,ஜிகிர்தண்டா,வெற்றிலை

கல்லிடைக்குறிச்சி -அப்பளம், சரவணன்-மீனாட்சி
திருநெல்வேலி- அருவா, உடும்புக்கறி
குற்றாலம்- ரசமலாய்
கடையநல்லூர்-இடிச்சபுளி
பொட்டல்புதூர்-சர்க்கரைப் பொங்கல்
பாபநாசம்- கார்லிக் நான்

கீழக்கரை - புளியோதரை, வென்பொங்கல் தொதல்,சீப்புபணியம்,ஓட்டுமா
இராஜபாளையம் - கொயயாப்பழம், குள்ளக்கத்திரி வத்தல்

தெக்கிக்காடு-பால் பன்,பழைய சாதம்
குலசேகரன்- மரவள்ளிக் கிழங்கு, அன்ரூல்ட் பேப்பர் பொரியல்
கொல்லாம் பழம் ,
நெல்லை - அல்வா,பாப்பாளி தோசை
மணப்பாறை - முருக்கு, மண்டைப்பனியாரம்
சாத்தூர் - சேவு,சாமியார்கோட்டம் பாக்கு
சங்கரநயினார் கோவில் - பிரியாணி, கருப்பு அவரைக்காய் கூட்டு
ப்ரானூர் பார்டர் - சிக்கன், சின்ன மாம்பழம்
நாமக்கல் - முட்டை, பல்பு மீன் வருவல்
பழனி - பஞ்சாமிர்தம்
கோயம்புத்தூர் - மைசூர்பாக், சப்போட்டா தொக்கு,மிளாகா ரசம்
திண்டுக்கல் - தலைப்பாகட்டு பிரியாணி,தக்காளி வருவல்
பொள்ளாச்சி - இளநீர், வெண்டைக்கா பாயாசம்
ராமேஸ்வரம் - கருவாடு, மழிப்பிமீன் தொக்கு
உடன்குடி - கருப்பட்டி
சவுதி - பேரீச்சம்
திருப்பதி - லட்டு
விருதுநகர் - புரோட்டா , பன்னீர் பஜ்ஜு
மதுரை - அயிரை மீன், அரைத்த மஞ்சள்
திண்டுக்கல், ஆம்பூர் - பிரியாணி , புண்ணாக்கு சட்னி
காரைக்குடி - உப்புக்கண்டம் , கடுகு கொழம்பு
சிதம்பரம் - இறால் வருவல் , பிரம்புப்பாய்
சிதம்பரம் - சிறுமீன்
மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
வேலூர் - வாத்துக்கறி , தார் டின்
சேலம் - வெடிச்ச மாம்பழம்
ஊத்துகுளி - வெண்ணெய், சோன்பப்டி
ராசிபுரம் - நெய், வெளக்கமாறு
முதலூர் - மஸ்கோத் அல்வா
ஊட்டி - டீ வர்க்கி
திருச்சி - பெரியபூந்தி, கொளுத்தி மீன் சூப்
காயல்பட்டிணம் - முக்கலர் அல்வா
கன்னியாகுமரி - முந்திரிகொத்து
தூத்துக்குடி - மக்ரூன்
அருப்புக்கோட்டை - காராச்சேவு
பாலவாநத்தம் - சீரணி மிட்டாய்
வெள்ளியணை - அதிரசம்
திருச்செந்தூர் - பனங்கல்கண்டு
நெய்வேலி - முந்திரி
மன்னார்குடி - பன்னீர்சீவல்
மேச்சேரி - ஆடு, கணக்கு மட்டை
ஊட்டி - உருளை
கொடைக்கானல் - ஹோம் மேட் சாக்லேட்
தூத்துக்குடி - உப்பு
அரவக்குறிச்சி - முருங்கை

Thekkikattan|தெகா said...

ஹாஹாஹா... வாவ்! வாவ்!! இந்த பொறவிக்குள்ளர இங்கெல்லாம் போயி துண்ணுப்போட்டு பார்த்திட்டு சொல்லுதேன். நன்றிம்மே! அவ்வ்வ்வ்

Related Posts with Thumbnails