Tuesday, December 28, 2010

மன் மதன் அம்பு ஒரு மீள்பார்வை - A Re-View

என்னுடைய முந்தைய இடுகையில் ஒரு மூன்று படங்களுடன் சேர்த்து கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்திற்கும் ஒரு பத்தி விமர்சனம் ஒன்று வைத்திருந்தேன். பெரிய அளவிளான பதிவு இதற்கு தேவையில்லை என்றே கருதி அவ்வாறாக சுருக்கியிருந்தேன்.

ஆனால், அண்மையில் சிலரின் விமர்சனப் பதிவுகளை படிக்கும் பொழுது கண்டிப்பாக ஒரு தனி பதிவிடுவதின் அவசியம் விளங்கியது. களத்தில் இறங்கி விட்டேன். இந்தப் படத்திற்கு எங்க பக்கமிருந்து நான்கு பேர் சென்றிருந்தோம். தசவதாரம் பார்த்துவிட்டு திரும்ப வரும் பொழுது எனக்கு என்னவோ மனது நெருடலாகவே இருப்பதாக உணர முடிந்தது. அந்த மனநிலையை என்னுடைய அந்தப் பதிவினை வாசித்தவர்களுக்கே புரிந்திருக்கும்.

மாறாக மன்மதன் அம்பு படத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது அப்படியான ஓர் இறுக்கமில்லை. மனது குதூகலமாக, காருக்குள் நிறைய மகிழ்ச்சி இருந்ததாக உணர முடிந்தது. ஏன் பதிவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காமல் போனது என்று பெரிய அளவில் ஒன்றும் ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. படம் வருவதற்கு முன்பே மெஜாரிடிகளின் மனதில் பேரிடியை இறக்குவது போன்ற அந்த கமல் கவிதை அமைந்து போனது, அதனைத் தொடர்ந்து இந்து சபை அமைப்பு நடத்திய சீன் பொது ஜனம் மத்தியிலும் என்னவோ ஏதோ என்ற பிரம்மையை ஏற்படுத்தி படம் பார்க்கும் மூளைப் பகுதியை தற்காலிகமாக மற்றுமொரு ’ஆட்டுக்கார அலமேலு’ வரும் வரைக்கும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கலாம். ;-)

சரி இந்தப் படம் எந்த விதத்தில் என்னுடைய மூன்று மணி நேரத்தை சுணக்கமில்லாமல் கொலை செய்தது என்று பார்ப்போம். எதிர்பார்த்த மாதிரியே கமலின் வசனங்கள் நிறைய பஞ்ச்களை சுமந்தே வலம் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக மாதவன் கதாபாத்திரத்தின் மூலமாக நமது சமூக ஆண்களின் டிஃபெண்டென்சி அம்மாவை மையமாக வைத்து வளர்க்கப்பட்டதின் கூறுகளை செம கிண்டலாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். உச்சமாக ஒரு சீனில் கழிவறைக்குள் இருக்கும் பொழுது மாதவனின் அம்மா உள்ளே வரலாமா என்று கதவைத் தட்டி கேட்கும் பொழுது அப்பொழுதே டயபர் ஸ்டேஜ்லிருந்து வெளி வந்தவனாக, "அம்மா இப்பொழுதெல்லாம் நான் பெரிய பையனாகிவிட்டேன்" என்ற வாக்கில் அடிக்கும் வசனம் இருப்பதிலேயே அல்டிமேட் கிண்டல் எனக் கொள்ளலாம்.

பல சீன்களில் மாதவனே அம்மாவை இழுத்து, இழுத்து முன் நிறுத்தும் வசனங்களின் மூலமாக எந்த அளவிற்கு நம் இளைஞர்களின் மன முதிர்வின்மை இருப்பதாக காட்டுவதற்கெனவே அது போன்ற காட்சியமைவுகள் என்று விளங்கிக் கொள்ள முடிந்தது. அதன் அடிப்படையிலேயே விவகாரத்தாகி, இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் சங்கீதாவை மாதவன் போன்ற இன்னும் அம்மாவை துணைக்கு அழைக்கும் ஆடவனுக்கு அம்மாவையே வாழ்க்கை துணையாக பெறுவதே பொருத்தமாக இருக்கும் என்கிற அந்த முடிவுக் காட்சி பஞ்ச் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது.

ரமேஷ் அரவிந்த் ஒரு கேன்சர் நோயாளியாக வருகிறார். அடையாளமே தெரியவில்லை! அந்த கதாபாத்திரத்தின் மூலமாக புற்று நோயின் ஆளுமையும், வதையும் நன்றாகவே புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். புற்று நோயாளியின் மனைவியாக ஊர்வசி. பணம் கேட்டு நொய்யென்று அழுது கொண்டே இருக்கிறார். கணவர் பிழைத்துக் கொள்வார் என்றவுடன், தமிழ் சினிமாவின் தாலி செண்டிமெண்டிற்கு அடி கொடுக்கும் விதமாக கைபேசியில் மாங்கல்யத்தை தட்டி, கமலிடம் ”அண்ணா சத்தம் கேக்கிறதா, என் தாலி கெட்டி” என்கிற வாக்கில் வசனம் பரவலாக படம் பார்த்தவர்களால் எதிர்த்த சீட்டின் முனையில் இடித்துக் கொள்ளும் அளவிற்கு தாவிக் குதித்து சிரிப்பலையை உண்டு பண்ணியது.

அடுத்து த்ரிஷா ஒரு நடிகையாகவே வந்து போகிறார். அவர் பாரிசில் இருக்கும் பொழுது கார் ஓட்டியாக ஓர் ஈழத்து தமிழர் அமைந்து போகிறார். அவரும் த்ரிஷாவுடைய பரம விசிரியாகிப் போகிறார். சொல்லவும் வேணுமோ! நம்முடைய மக்களின் தனிமனித துதி பாடல், கடல்கள், மலைகள், தேச எல்லைகளை தாண்டியதில்லையா? நாக்கை வெட்டிக் கொள்ளுபவர்களும், சாலையில் சோறு போட்டு வேண்டுதெலுக்கென மண் சோறு தின்பவர்களும், முட்டிக்காலலேயே மலைப் படிகள் ஏறிச் செல்பவர்களையும், தீ மிதிப்பவர்களையும் உள்ளடக்கியதல்லவா இந்த ரசிக அர்ப்பணிப்பு. அதனை சாடும் வாக்கில், சரியான தேர்ந்தெடுப்பாக இந்த கால கட்டத்தில் ஈழத் தமிழரை வைத்து சொன்ன விதமும் மிகவும் நன்றே!

இவர்களில் பெரும்பாலோனோர் மிக்க உடல் உழைப்பால், பொருளீட்டி சம்பந்தமே இல்லாத சீதோஷ்ண நிலைகளுக்கு முகம் கொடுத்து சொந்த நாட்டிலிருந்து விருப்பமில்லாமலேயே விலகி வாழக் கூடிய நிலையிலிருப்பவர்கள். இருப்பினும், இது போன்ற ஒன்றுக்கும் உருப்பிடாத நடிகை/நடிகர்களுக்கென செலவழிக்கும் தொகையும், அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும் சற்றே யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இவர்களாலேயே வெளி நாடுகளில் குப்பை படங்களும் வசுலில் கொடி கட்டிப் பறக்கிறது. நேர் மாறாக அந்தப் பணத்தில் திளைப்பவர்களோ பணத்தை வாரி வழங்கிய மனிதர்களுக்கு ஒன்றென்றால் எதிர் திசைகளில் இயங்குகிறார்கள். நம் போன்ற அப்பாவிகளுக்கு எது போன்ற கருத்தைச் சொல்லி விளங்க வைக்க முடியும், அதே நடிகை செருப்பெடுத்து காமித்தாலாவது அறிவு வருமா என்று கொஞ்சம் சுருக், நறுக்கென்றே சுடச் சுட ஒரு காட்சியையும் அமைத்துக் கொடுத்து விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கமல் (இங்கே நடிகை அசின் ஞாபகத்துக்கு வரணுமே!).

சரி, க்ரூய்ஸ் கப்பலில் ஒரு நடிகை விடுப்பில் ஊர் சுற்ற செல்லும் பொழுது அவள் கூடவே மேக் அப் மேனையும் பெட்டி பெட்டியாக துணிமணிகளையும், இழுத்துக் கொண்டுச் செல்வாளா, இல்லை வெறும் காப்ரீஸ் பாண்ட்ஸும், ப்ளைன் டி-ஷர்ட்டிலும், தனக்கு மிகவும் பிடித்த சாண்டலிலும் இருக்க பிரியப்படுவாளா? ஒலகப் படம் பார்த்து ரசிக்கும் ஆராய்ச்சியாளர்களே இதில் எது பொருத்தமான உடை, சிகை அலங்காரங்கள் இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு படத்திற்கு பொருத்தமாக அமையும். வருஷ வருஷம் க்ரூய்ஸ் சுத்துவரய்ங்க கணக்கா அட அட முகத்தில பரு, போட்ட அழுக்குச் சட்டை, முகத்தில சவர வித்தியாசம்னு மைனூட்டா கவனிக்கிறாங்கப்பா. இனிமே தமிழ் சினிமா பொழச்சிக்கும்டோய், ரேஞ்சுதான்.

இந்த படத்தில் எனக்கு பிடிச்ச விசயங்கள் நிறைய. எத்தனை பேர் க்ரூய்ஸ் கப்பலில் பிரயாணம் செய்திருக்கோம். செய்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். வித்தியாசமான முயற்சியாக படத்தின் பெரும் பகுதியை அப்படியாக அமைத்து பழைய ரோமானிய நகரங்களை அவரகளுனூடேயே மிக்க பொறுமையாக நடந்து திரியும் அளவிற்கு கூட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஒளிப்பதிவு சான்சே இல்லை என்ற ரேஞ்சிற்கு பளிச், பச்சை, வெண்மை எது எப்படி இருக்கணுமோ அதற்கும் ஒரு படி மேலே சென்று கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவிலான கேமரா - ஒளிப்பதிவு.

படத்தின் ஒரே தொய்வு கொடுக்கும் விசயமென்றால் கடைசி ஒரு 20 நிமிடங்களைச் சொல்லலாம். நீன்ன்ன்ண்டு கொண்டே சென்றதனைப் போன்ற பிரமையைக் கொடுத்தது எனக்கு. அந்த கமல் கவிதையை அட்லாண்டாவிலும் கழட்டி விட்டார்கள். இங்கும் சாமியைக் காப்பாற்றும் பிரகஸ்தபதிகள் அதிகமாக இருப்பார்களோ என்று எண்ணச் செய்கிறது. காட்டுமிராண்டித் தனத்தின் உச்சம். ஒரு கலைஞன், தான் அமைக்கும் காட்சிக்கு எது உகந்தது என்று நினைக்கிறானோ அதனை வைப்பதற்கான உரிமை கூட இல்லையென்றால் என்ன பெரிய ஊடக உரிமை, படைப்பாளிச் சுதந்திரம் என்று விளங்கவில்லை. தலீபானியம் தலை தூக்குகிறதோ என்று எண்ணச் செய்கிறது.

அந்தக் கவிதையில் நல்ல பழக்க வழக்கம் வர வேண்டுவதனைப் போன்றுதானே பாடல் வரிகள் இருக்கிறது. கலவி முடிந்தவுடன் சுத்தம் பண்ணிக் கொள்ள கூட மாட நின்று உதவு, தொப்பையை, தூக்கத்தை குறை என்ற வாக்கிலும் கூடுதலாக பல நல்ல கருத்துக்களை சொல்லி நிற்பதாகவே அந்தக் கவிதை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அதனில் எங்கிருந்து வந்தது இத்தனை கடவுள் காப்பாற்றும் மனவோட்டம். என்னமோ நடத்துங்கப்பா!

Sunday, December 26, 2010

இந்த வாரம் சினிமா வரம்!

இந்த வாரம் எனக்கு சினிமா வரமாகிப் போனது. மூன்று நாட்கள் இடைவெளியில் நான்கு தமிழ் சினிமாக்கள். இது வரையிலும் செய்யவே துணியாத ஒரு தன் கொலை முயற்சி என்றுதான் சொல்லுவேன். அதிலும் துரதிருஷ்ட வசமாக ஈரம், ஈசன் மற்றும் மைனா இணையத்திலும் (வேற வழியே இல்ல பார்க்க நான் இருக்கிற இடத்தில), கமல்ஹாசனின் மன்மத அம்பு இங்கு ஓடிக் கொண்டிருப்பதால் திரையரங்களிலும் சென்று பார்த்தேன்.

இது அனைத்தும் எனக்கு சாத்தியமாகிப் போனதற்குக் காரணம் மூன்று நாட்களும் எனது உடம்பு கெஞ்சி அடித்து தேவையான உடல் ஓய்வை பெற எண்ணி தலை, மூக்கு மற்றும் உடல் வலி எனவும், காய்ச்சல் எனவும் வீட்டில் அதிக நேரம் இருப்பதாக செய்து விட்டதாலேயே எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈரம் படத்தை சரியாக வெளியான ஒரு வருட இடைவெளியில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். படத்தை வித்தியாசமான முறையில் நகர்த்தியிருந்தார்கள். இரண்டாவது பகுதியில் கொலையுற்ற கதாநாயகியின் ஆவி சுத்தி சுத்தி வந்து தனது கொலைக்கு காரணமானவர்களை கொலை செய்வது சப்பென்று ஆக்கிவிட்டது எனது எதிர்பார்ப்பை. சொல்லப் போனால் நான் இது போன்ற ஒரு கதையையே எதிர்பார்க்கவில்லை; கதையை நகர்த்த ஆரம்பித்த விதமும், படமாக்கப்பட்ட நேர்த்தியும் நான்றாக இருந்ததால். இரண்டாவதாக, செகண்ட் ஹாண்ட் காருக்கும், வாழ்க்கைத் துணைக்குமாக ஒப்பீடு செய்து கொண்டு படத்தின் பாதிக்கும் மேல் கதையை நகர்த்தியிருப்பது ஒரு சமூக சிக்னெஸின் உச்சத்தை காட்டியது.

*********************************

ஈசன் - இயக்குனர் சசிகுமார் சுப்ரமணியபுரத்தை போன்றே மீண்டும் மென்மையான ஒரு கதைத் தேர்வுடன் நம்மையும் ஒட்டவைத்து, நமக்கும் சினமேற்றி கடைசியில் கதாநாயகன் எதிரிகளை கரகரவென்று கழுத்தறுபட்டு கொல்லப்படும் பொழுது நம்மையும் சேர்த்து கலந்து கொள்ள வைப்பதில் ஜெயித்து காட்டுவாரே அது போன்றே ஈசனிலும் ஜெயித்திருக்கிறார். ஈசனில் ஓர் உண்மையான போலீஸ் அதிகாரி எது போன்ற சூழ்நிலைகளில் நிதர்சனத்தை எதிர் கொண்டு கையறு நிலையில் தனது சீனியர் அலுவலர்களால் கூர் மழுங்கடிக்கப்படலாம் என்பதனை அழகாக காட்சியகப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும், இந்தப் படத்தில கொலை செய்யும் கதாபாத்திரமாக வரும் டீனேஜித்திய பருவம் கொஞ்சம் உருத்தலாக இருந்தது.
**********************************

மைனா - ரொம்ப பிடித்திருந்தது! லாஜிக்கலாக நிறைய துளைகள் இருந்தாலும், கதையுடனும் படமாக்கப்பட்ட மலையும் மலை சார்ந்த இடங்களும் கதாபாத்திரங்களின் பங்களிப்பும் அப்படியே நம்மை கட்டிப் போட்டுவிட்டு இதர விசயங்களை எக்ஸ்க்யூஸ் செய்ய வைத்து அத்துடனே நம்மையும் காட்சிகள் நகர்த்திச் செல்கிறது. போலீஸ் அதிகாரியின் மனைவி பக்கம் வரும் உறவுகளும், அவரின் மனைவியும் பல உண்மைகளைச் சொல்லி நிற்கிறது. அந்த உறவில் அந்த அதிகாரி மனிதனுக்கு அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலையை இயக்குனர் அழகாக செதுக்கி தனித்து நிற்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் பொழுது தமிழில் சமீபமாக நல்ல படங்களை கொடுக்க நிறைய புதிய இயக்குனர்கள் வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கை பிறக்கிறது. அதில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அப்படியே அவர் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முடிவு மக்கள் எதனையும் எடுத்துக் கொள்ளும் பக்குவ நிலைக்கு வந்துவிட்டதாக சொல்லி நிற்கிறது.
*******************************

மன்மதன் அம்பு:

என்ன சொல்ல, நல்லா சிரி சிரின்னு வேற எதையும் யோசிக்காம சிரிச்சு படத்தை உள்வாங்கி பார்த்தேன். என் மூணு வயது பொண்ணுக்கு மொதப் படம் இது. கொஞ்சம் டான்ஸ் ஆடினோம். என்னதான் இருந்தாலும் மாதவன் கதாபாத்திரம் மூலமாக சிரிப்பு, சிரிப்பா பல ஆழமான விசயங்களை போற போக்கில எடுத்து கடாசிவிட்டார் நம்ம கோடம்பாக்கத்து ஒலக நாயகன்.

அவர் சந்தேகப் புத்திக்காரர் என்பதால் த்ரிஷா போன்ற இளமையான பெண் சரிபட்டு வரதென்றும், தொட்டத்திற்கெல்லாம் மாதவன், தான், அம்மாவின் பிள்ளை என்பதனை எடுத்து இயம்புவதாலும் கமல், மாதவனுக்கு தனது காதலியான த்ரிஷாவின் விவாகரத்தான நண்பியை இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒருவரை, மாதவனுக்கு தேவை அது போன்ற ஓர் அம்மாதான் என்று க்ரேசி மோகன் ஸ்டைல் ஸ்கிரிப்புடன் பலத்த சிரிப்புகளுக்குகிடையே அவருடன் கோத்து விடுவது யோசிக்க வேண்டிய விசயம். ஏனெனில் மாதவன் அங்கு சந்தேகப் பட வேலையே இல்லை! நம்ம பசங்களும் என் அம்மா மாதிரியேதான் தனக்கும் ஒரு பொண்ணு வேணும்னு தேடுறாய்ங்க, அதுனாலே ஒரு அம்மாவையே கமல் தள்ளிவிட்டுட்டார் :)). படமாக்கப்பட்ட விதம் ரிச்! ஹே! எங்க ஊர்லயும் அந்த கமல் கவிதையை கட் பண்ணிப்போட்டங்கப்பா... கடைசியா சில வரிகளே ஒலிக்கிறது. படு அநியாயம் இதெல்லாம்... அப்படி என்னதான் அந்தப் பாட்டில இருந்திச்சு!!

Friday, December 03, 2010

பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1

இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது.

நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன.

அந்த கிரகங்களில் நமக்கு கிடைத்த தட்பவெப்ப சூழல்களைக் கொண்டு உயிரினங்கள் உருவாகி பல்கி பெருகியிருக்கக் கூடுமே என்ற கருதுகோளின் படி நாம பல பத்தாண்டுகளாக வானத்தை அளந்து வருகிறோம். வேற்று கிரக வாசிகளிடமிருந்து ஏதாவது சமிக்கைகள் மிதந்து வந்து அடைகிறதாவென (SETI).

இப்படியான சூழ்நிலையில் நேத்து அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நடத்தி வந்த ஓர் ஆராய்ச்சியில் அது போன்ற வேற்று கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான நிகழ்தகவுகள் ரொம்பவே சாத்தியம் என்று கட்டியம் கூறும் வாக்கில் ஒரு சான்று கிடைத்துள்ளது.

கேட்ட நேரத்தில இருந்து அண்டவெளி உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு (Astrobiologist) சந்தோஷம் நிலைகொள்ள வில்லையென அமெரிக்கா தொலைகாட்சிகளின் செய்திகள் அலறி அடித்துக் கொண்டு அந்தத் துறை சார்ந்தவர்களை அழைத்து நேர்முகம் காண்பதிலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது.

பொதுவாக இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஆறு விதமான அடிப்படை உயிரின வேதியப் பொருட்களின் மூலக்கூறுகளைக் கொண்டே கட்டமைக்கப்பெற்றிருக்கிறது (கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்.பரஸ் மற்றும் சல்.பர்).

இதனில் முக்கியமாக பாஸ்.பரஸ் நமது மரபணு சமிக்கைகளை கடத்திச் செல்லும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏக்களின் உயிர்ச் செல் கட்டமைப்பில் முக்கியமான பங்காற்றுகிறது.

இந்த பின்னணியில் நமக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற வேதிய அட்டவணையில் இந்த பாஸ்.பரஸின் பண்புகளையொத்த அளவில் ஆர்சினிக் என்ற வேதிய தனிமம் மட்டுமே இருக்கிறது. ஆனால், இது பூமிய உயிர் அனைத்திற்கும் உடலில் சாரும் பொழுது நச்சுத்தன்மையை வழங்கி, வளர்சிதை மாற்றம் அளவில் பாதிப்பை வழங்கும் தன்மையைக் கொண்டது. எனவே, ஆர்சினிக் வந்து பூமியில் வாழும் உயிர் அனைத்திற்கும் a big no no வேதியற் கூறு.

ஆனா, இயற்கையின் விளையாட்டப் பாருங்க. அறிவியல் புனைவுகளில் கன்னாபின்னான்னு கற்பனைக்கு எட்டிய மாதிரியெல்லாம் வேற்று கிரகங்களில் கிடைக்கிற வேதியற் கூறுகளையும், சுற்றுச் சூழலையும் கொண்டு உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக அள்ளிக் கட்டி எழுதுவாங்க. படிக்க படிக்க நாமும் கற்பனை உலகில் அந்த ஜீவராசி கூட்டத்தோட கூட்டமா ஒரு மனுச ஜீவராசியாவே திரிவோம்.

அந்த இட்டுக்கட்டு கதைமாதிரிக்கு, நாசாவின் புதிய பாக்டீரியம் கண்டுபிடிப்பு அது போன்ற கதைகள் எவ்வாறு உண்மையாகலாம்னு சான்று சொல்லி நிக்கிது. கலி.போர்னியா மகாணத்தில உள்ள ஓர் ஏரியில ஆராய்ச்சி செஞ்சிகிட்டு இருந்திருக்காங்க. அந்த ஏரிக்கு பேரு மோனோ ஏரி (Mono Lake). அந்த ஏரியை தேர்ந்தெடுத்ததற்கு காரணமே 50 வருஷத்திற்கு மேல மற்ற புதுத் தண்ணியோட கலக்காம கெடக்கிறதுனாலே அதில எக்கச்சக்கமான உப்பும், அமிலத் தன்மையும் மற்றும் இந்த ஆர்சினிக் நச்சுத் தன்மையும் இருக்குங்கிறதுனாலே தொழவி பார்த்துருக்காங்க ஏதாவது சிக்குதான்னு. அப்போதான் இந்த புதுவிதமான பாக்டீரியம் நம்ம பூமி உயிரி கட்டமைப்பு வேதிய மூலக்கூறுகளுக்கு எதிராக அமைந்த ஆர்சினிக்கைக் கொண்டு உயிர்வாழும் புது வகையான நுண்ணுயிரி வாழ்வது தெரிய வந்திருக்கு. அதுக்கு பேரும் வைச்சாச்சு GFAJ-1 அப்படின்னு.

சரி எப்படி நிரூபிச்சாங்க? ஆய்வுக் கூடத்தில வைச்சு இந்த பாக்டீரியத்தை வளர்த்திருக்காங்க. பாஸ்.பரஸை கொஞ்சமும், ஆர்சினிக்கை தாராளமாகவும் வழங்கி அதில இந்த பாக்டீரியம் ஆர்சினிக்கை ஊட்டமாக கொண்டு செழித்து வளர்ந்திருக்கு.

இந்த ஒத்த புது வகையான நுண்ணுயிரியை கண்டுபிடிச்சதின் மூலமா மொத்த உயிரியல் பாடப் புத்தகங்களையும் திரும்ப எழுதுற மாதிரி ஆகிப்போச்சு. அதுக்கெல்லாம் மேல இந்த அண்டவெளியில் இருக்கிற கோடான கோடி, கோடி, கோடி கிரகங்களில் எது போன்ற வேதிய மூலக்கூறுகளைக் கொண்டும் உயிர்கள் கட்டமைக்கப்படுமென்றால் கண்டிப்பாக வேற்று கிரக உயிர்கள் திளைச்சு வாழணும்மப்போய்னு உறுதியாகிப் போச்சல்ல.

இயற்கையின் விந்தையில் எதுவும் சாத்தியமேன்னு சொல்லி நிக்கிது இந்த ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம். எந்த வெளி கிரகத்திலே எந்த பத்து தலை டைனோசரோ, இல்ல நாலு கால் மனுசன் பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு நடந்து திரியுறானோ, I cant wait to get that news! :-)



பி.கு: நம்ம நண்பர் கையேடு கூட இது பொருத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கார் - வேறொரு உயிர்

- Photo Courtesy: Net

Tuesday, November 30, 2010

இயற்கையின் ஒளி விளையாட்டு :Photos 1

#1 உன்னுள் எனைக் காண்கிறேன் ...



#2 எத்தனை விந்தையடா...!




#3 ஆசை நிறைவேறுமா? கண்களை மூடிக் கொண்டு ஊதி மொத்த புற இதழ் கற்றைகளையும் தள்ளுங்க பார்ப்போம்...



#4 இந்த காட்டுப் பூங்கொத்து யாருக்கு...? [பின் இணைப்பு - இந்தப் பூங்கொத்தை தருமிக்கு வழங்கிவிட்டேன் - அவரின் இலக்கிய பயணத்தில் மென்மேலும் பல சிறப்புகளை எட்ட வாழ்த்துக்களுடன் ;-) ]



#5 ஒற்றை டூலிப் பறிக்கக் கூடாது...




#6 ரோசி ரோஸ் - வெட்கத்தின் உட்சத்தில்...



#7 ஒரு சிறு நெல்மணியின் அளவில் உள்ள விதைக்குள் இத்தனை கவிதையான அழகா...



*************************************
******************************

பி.கு: இந்தக் கவிதையை எல்லாரும் கேட்டிருக்கீங்களா? கமல் எழுதி, த்ரிஷாவோட வாசிச்சிருக்கார். பெரிய பெரிய விசயமெல்லாம் சொல்ல வந்திருக்காருங்கோவ்... ரெண்டு மூணு தடவ கேட்டா புரியுற மாதிரி இருக்கு. கேளுங்க! :)

Thursday, November 18, 2010

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் இடைவெளி: What if...

தொடர்ந்து பதிவுகளா கொடுப்பதாக இந்த வாரம் அமைந்து போனதிற்கு வருந்துவதா? மகிழ்ச்சி கொள்வதா? பொதுவாக பழக்க போதைக்காக பதிவு எழுதுவது என்பது என்னிடம் இல்லை, சராசரியாக ஆண்டிற்கு 25 பதிவுகளே பதிந்து வருகிறேன். அது போன்ற பதிவுகளும் உள்ளிருந்து கொப்பளித்து வெளிக் கிளம்பும் வாக்கில் அமைந்தாலே உண்டு.

எண்ணங்கள் தவிர்க்க முடியாத வழியில் ஒரு குழந்தை முட்டிக் கொண்டு தாயின் மடியிலிருந்து வெளிவருவதாகவே எனது கட்டுரைகளும் இருந்தாலே ஒழிய அது வெளி உலக பார்வைக்கு கிடையாது. அப்படியாக உறங்க போட்ட கட்டுரைகளும் என்னிடமுண்டு. எதற்காக இதனை இங்கு முன் வைக்கிறேன் என்றால் தொடர்ந்து பதிவுகளை கொடுத்து திகட்ட வைத்து விடக் கூடாதே என்பதின் அடிப்படையிலேயே. நோ மோர் சுய புராணம்!

இந்த வாரத்தில் பல பதிவுகள் அவரவர்கள் பார்வையில் எது ஒழுக்கம்/பண்பாடு/பாரம்பர்யம்/கலாச்சாரம் என்று முன் வைத்து தன் தனது குதிருக்குள் எது போன்ற ஊறல்கள் இருக்கிறது என்பதனை மூடியை அகற்றி காமித்துக் கொண்டார்கள். என்னுடைய பெற்றோர்களின் வளர்ப்பின் அடிப்படையிலும், அவர்களைத் தாண்டி எனக்கு கிடைத்த வாய்ப்பின் அடிப்படையில் பெறப்பெற்ற உலக ஊடாட்டங்களைக் கொண்டும் எது போன்ற மன முதிர்ச்சியை, விசயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அப்படியே இல்லையெனில் கேள்விப்படும் அல்லது அந்த சமயத்தில் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியாத விசயங்களில் தலையை குனிந்து கொண்டு அதில் என்ன இருக்கிறது ஏன் என்னால் என் மன உலகை அந்த விசயம் சார்ந்து விரித்துக் கொள்ள முடியவில்லை என்ற பாங்கில் உள்ளரயே குமைந்துக் கொண்டு, காணாங் கோழியாகிவிடுவேன்; நன்கு புரிந்துகொள்ளும் வரையில்.

இங்கு நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் நிகழ்வுகளும், அது இயங்கும் தன்மையும் ரொம்ப விசிச்சிரமானது. எப்படியான வளைவுகளில் எது போன்ற ஆச்சர்ய விசயங்களை நம் வழியில் போட்டு அதனை புரட்டிப் போட்டுவிட்டு மேற்கொண்டு நம் பயணத்தை உந்தி தள்ள சவால் விடப் போகிறது என்பது யாருக்குமே தெரிவதில்லை.

அது போன்ற சவால்கள் மரணம் என்பது எவ்வளவு நாம் ஒவ்வொருவருக்கும் நிச்சயதாம்பூலம் செய்யப்பட்டு எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கும் ஒரு கொண்டாட்டமோ அது போலவே இது போன்ற வாழ்வின் சவால்களும் வந்து போகும். நாம் வளரும் பொழுது, அதிர்ஷ்ட வசமாக பொறுப்பான பெற்றோர்களை பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களும் அவர்களுக்குத் தெரிந்த சமூக அறிவைக் கொண்டும், தானே வளர்த்தெடுத்துக் கொண்ட சுய அறிவையும் கொண்டுதான், தன் குழந்தைகளுக்கு வாழுமிடம், சூழல்களின் வழியாக கையிறக்கம் செய்து கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த பெற்றோர்களுக்கும் ஓர் அறிவுசார் எல்லை இருக்கிறது. அதனைத் தாண்டி தான் பெறாத அறிவையும், பேரையும், புகழையும் அடையவே பொறுப்பாக நின்று தனக்கு சரியென பட்ட விசயங்களைக் கூறிக் கொண்டே தன் பெற்ற கல்வியை விட தன் குழந்தைகளுக்கு சிறப்பாக அமையுமாறும், தாங்கள் புழங்கிய மனிதர்களைக் காட்டிலும் இன்னும் கூடுதலாக அறிவில் சிறந்த மனிதர்கள் உலவும் உலகில் சங்கமித்து பரந்து விரிந்து வன்முறையற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து அவர்கள் சந்ததியை பெருக்க வேண்டுமென்று நினைத்தே அவர்களுக்கு கிடைக்காத அத்தனை வாய்ப்புகளையும் மறந்து/மறுத்து குழந்தைகளுக்கு வழங்கியே வாழ்ந்து விடுகிறார்கள், இல்லையா?

பெற்றோர்களுக்கும் அறிவுசார் எல்லைகளைக் கொண்டு என்று வரும் பொழுது, அவர்களுக்கு எட்டிய வளர்ச்சியைக் கொண்டே அவர்களால் தனக்கு வழங்கப்படும் வாழ்வின் சவால்களுக்கு விடையளிக்க முடியுமல்லவா? இது ஒரு சின்ன லாஜிக். தனது மகன்/மகள் தன்னைக் காட்டிலும் இன்னும் பெரிய பல்கலையில் பயிலும் வாய்ப்பைப் பெற்று, அறிவிலும், அவர்களுக்குக் கிடைத்த கூடுதல் உலக/மனித அனுபவம், வெளிநோக்கு (exposure) தளங்களைக் கொண்டு தன் இருப்பை கூடுதலாக ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும் நிலையை எட்டிய பிறகு எப்படி அந்த மூளை இன்னமும் தனது பெற்றோர்களின் அறிவு சார் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்து விட முடியும்?

அதனை ’உணர்ந்து கொள்ளும்’ பெற்றோர்கள் தனது பிள்ளைகளை வெளித் தளத்தில் எப்படி குப்புரடிச்சு எழுந்து தவழும் நிலைக்கு வந்தவுடன் தன் கண்களையே நம்ப முடியாமல் கைகொட்டி ஆர்ப்பரித்து கண்கள் அகல விரிய தங்களது முதல் அனுபவத்தை பெறுவார்களோ அதனைப் போன்றுதான், பின்னாலிலும் தன்னை விட பல வேறு வாழ்க்கை சவால்களை எதிர் நோக்கி முன்னெடுத்துச் செல்லும் பக்குவத்திற்கு வந்திருந்தால் வாயடைத்து சந்தோஷத்தில் நின்று அனுபவிப்பார்கள்.


தன் வயதில், அதே தெருவில் ஏதோ ஒரு social stigmaவைக் கொண்டு ஒரு குடும்பமே வெட்டிக் கொல்லப்பட்டதையோ, அல்லது சமூகமாக நெருக்கடி பேச்சுகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதையோ அவர் கண்ணுற்றிருக்கலாம் அது அப்படி நிகழ்ந்தது சரியென்றும் எண்ணியே அவரும் தனது முதுமை எட்டியிருக்கலாம். ஆனால், அந்த பெற்றோர்களைக் காட்டிலும் பல சாத்திய வித்தைகளை பெறும் வண்ணம் வாய்ப்புகளை பெற்று வளர்ந்த இந்த மனிதனும் அதே பாதையை தேர்ந்தெடுக்கிறான் என்றால், எங்கே தவறு நிகழ்ந்திருக்கிறது?

இப்போதான் பதிவின் கருவிற்கு வருகிறேன். இங்கேதான் குழந்தை பருவத்திலிருந்து பதின்மம் வரைக்குமான பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் எந்தளவிற்கு அமைகிறதோ அதனை ஒட்டியே எதிர்கால சமூக முகம் காட்டல் ஒரு தனி மனிதனுக்கு இருக்கப் போகிறது என்பேன்.

சில சமயங்களில் இந்த உலகம் பூராவும் வாழ்க்கையில் பக்குவ மடைந்த மனிதர்கள் கல்வியறிவே இல்லாது போனாலும் ஒரு அன்னை தெரசா ரேஞ்சிலேயோ ஏன் அப்படி, குறைந்த பட்சம் மனிதாபிமான முள்ளவர்களாக, தன் மனசாட்சியைக் கேட்டு தனக்கு நேர்ந்தால் (what if...) என்ற அடிப்படைக் கேள்வியை கேட்டுக் கொள்ளும் நல்லவர்களாகிப் போய்விடுகிறார்கள். அவன் கைக்கு மீறி நடந்த ஒரு நிகழ்விற்காக அவன் கழுத்தில் நான் கத்தியை வைக்கிறேனே, நாளக்கி இதே போன்று என்னால் எடுக்கப்படாத ஒரு முடிவிற்காக என் கழுத்தில் அவன் கத்தியை வைத்தால்.... (அப்படியாக யோசிப்பது...)

ஊரில் ஒரு சம்பவம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இரு தரபட்ட பெற்றோர்களை வைத்து பார்க்கலாம். ஒரு பெண் தனக்கு தன் பெற்றோர்கள் பார்த்து செய்யப் போகும் திருமணம் பிடிக்காமல் தனக்கு பிடித்தவனுடன் நடையைக் கட்டி விடுகிறாள். அதுவும் திருமணத் தேதியெல்லாம் குறித்து பத்திரிக்கையும் அடித்து விநியோகித்து என்ற காலகட்டத்தில். இப்பொழுது இது வெளியில் தெரிய வருகிறது, வளர்த்தெடுத்த குடும்பத்திற்கும், தாம்பூலம் போட்ட குடும்பத்திற்கும் பிறகு சம்பந்தமே இல்லாமல் வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் ஊருக்கும் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது நல்ல பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் படிப்பறிவே இல்லாத பெற்றோர் # 1) தனது பிள்ளைகளுடன் இரவு உணவை உண்டு கொண்டே சம்பாஷிக்கிறார்கள்... நன்றாகத்தானே போயிக்கொண்டு இருந்தது எப்படி பெத்தவங்களுக்கே தெரியாமல் இப்படி நடந்து போனது, இன்னும் கூடுதலாக அவரின்/ளின் அப்பா நேரத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கலாம், அவள்/னுடன் பேசி தெரிந்து கொண்டிருக்கலாம், வீட்டில் உரையாடுவதற்கு கூடுதலாக வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கலாமென்று லாஜிக்கல் விசயங்களின் பொருட்டு பேசிக்கொண்டே... ம்ம்ம் என்ன பிரச்சினையோ நமக்குத் தெரியாது. பாவம்! எவ்வளவு மனக் கஷ்டமோ இப்பொழுது...

என்று பேச்சை அடுத்த தளத்திற்கு நகர்த்தி எடுத்துச் செல்வார்கள். அது போன்றே ஒரு தொழு நோயாளியோ அல்லது மனப் பிறழ்சி கொண்டு அலைந்து திரியும் ஒரு நபரைப் பார்க்க நேர்ந்து அவர்கள் மற்ற சிறார்களால் கல்லை விட்டு எரிந்தோ அல்லது பரிகசித்து பேசி/துன்பமிழைப்பதனைக் கண்டால் தனது பிள்ளைகளுக்கு அது போன்று பேசுவதின் ‘அறியாமை’யையிம், அது துன்பம் இழைக்கப்பட்டவருக்கான வலியையிம் எடுத்துரைப்பார்கள் - அது பண்பாட்டுடன் வளர்ந்து வரும் குடும்பத்துக்கான அறிகுறி. அதாவது அடுத்தவர்களின் மனது புண்பட தன் வழியில் நேரடியாக ஒரு விசயத்தை இழைக்காதே என்பது அடிப்படையில் விதைக்கப்பட்ட ஒரு ”யுனிவெர்சல் நல்லொழுக்கம்.” அதனை ஆண்டிபட்டியிலும் பயன்படுத்தலாம், அண்டார்டிகாவிலும் பயன்படுத்தலாம். உதை வாங்கி சாக வைத்து விடாது.

குடும்பம் # 2) நல்ல படிப்பறிவும் வெளி நோக்கு பார்வையும் இருந்தாலும் அந்த பண்பாடு என்ற வஸ்து விழிப்புணர்வு கிடையாத பெற்றோர்கள். அங்கு தினமும் அடுத்த குடும்பங்களைப் பற்றிய பொரணிபேசுதல் அவர்களின் பொழுது போக்கு. அதனில் குழந்தைகளும் தெரிந்தோ தெரியாமலோ காது வழியாக கேட்டு பழகி பிறகு தானும் கலந்து கொள்ளும் அளவிற்கு வந்த குடும்பம். அங்கும் இது போன்ற ஒரு உணவு கூடல் - அங்கும் மேற் கூறிய நல்லொழுக்க அடிப்படை குறிகளைக் கொண்ட குடும்பத்திற்கான அதே சம்பாஷணை. அங்கு பெற்றோர்கள் சொல்கிறார்கள் - காதலனுடன் நடையைக் கட்டிய பெண்ணின் அம்மா பொறுத்தான முதல் விமர்சனம் ’அவ, பொம்பளையா அவ, சரியான ஓடுகாலிய பெத்து வைச்சிருக்கா’ இப்போ அப்பா சொல்லுறார் ’நானா இருந்த்த்தாஆஆஆ அந்த பொண்ண கண்டுபிடிச்சு வெட்டி பொலி போட்டுருவேன்...’ அப்படியே தொழு நோயாளி/மனப் பிறழ்வு சூழ்நிலைக்கும் இது போன்ற முரட்டு வைத்தியம் ‘இவிங்கள எல்லாம் தெருவுக்குள்ளர விடாம கூடியடிக்கணும்... சகிக்கல’ அப்படின்னு சொல்லிட்டு நகர்ந்திடும்.

இப்போ பேசுவோம். இந்த இரண்டு குடும்ப சூழல்களில் வளர்ந்த பிள்ளைகள் எந்தந்த சூழ்நிலைகளில் எது போன்ற ரியாக்‌ஷன்களை முன் வைப்பார்கள்? அந்த அடிப்படை சம்பாஷணை விதைத் தூவல் இரு வேறு உலகங்களாக பரிணமிக்கிறது ஒவ்வொரு தனிமனித சமூக வெளி நோக்கிலும், இல்லையா? அப்பொழுது, வாழ்க்கை தன்னை விட பெரிது, சூழ்நிலைகளை அது பாட்டுக்கு நகர்த்திக்கொண்டே செல்கிறது, #2வில் அந்த அப்பா சொன்னதைப் போன்று ...அந்த பொண்ணை கண்டுபிடிச்சு வெட்டி பொலி போட்டுருவேன்னு.... சொன்னதிற்கு இணங்க அவர்களின் பிள்ளைகள் நாளக்கி இது போன்று ஒரு சம்பவம் யாருடைய குடும்பத்திலோ நிகழப் போக அதே வார்த்தையை உதிர்ப்பார் அல்லது தனக்கு தன் பிள்ளை தன்னை விட அறிவுசார் தளத்தில் எங்கோ போய் நிற்கின்றது இவரால் ஜுரணிக்க முடியாத ஒரு கருத்தியலைக் கொண்டு வருகிறது அப்பொழுது, வெட்டிப் போட்டுவிட்டு சிறைச்சாலைக்கு அவர் சென்று விடுவாரா, அல்லது தானே விஷமருந்தி மரணத்தை கட்டி பிடித்துக் கொள்வாரா?

மீண்டும் இங்கேதான் அந்த பெற்றோர்களின் அடிப்படை உரையாடல் பிள்ளைகளிடத்தில் கைகூடி மிக்க நலன் பயக்கிறது. தன் சக்திக்கு மீறிய தனிக் குடும்ப நிகழ்வுகள் தன்னைச் சுற்றி நிகழும் பொழுது (முட்டாள் தனமான, எதிர்மறை எண்ணங்களை கொட்டுவதை தவிர்க்க), what if... கேள்வியைக் கேட்டு மூர்க்கமான தன் சினத்தை மூக்கணாங்கயிறு போட்டு அடக்கிக் கொள்வதின் பொருட்டு அந்த அடிப்படைக் கல்வி உதவ வேண்டும். தன்னை விட பெரிய நிகழ்வு அது வெளியில், ஆனால் அதற்காக தான் முட்டி தேய உழைத்து உருவாக்கிய/வளர்த்த பிள்ளைகள் தன் வாழ்க்கை அளவை விட Outgrow ஆகி நிற்கிறார்கள் என்பதனால் தன் குடும்பத்தை நிந்தித்து கொள்வது எப்படி சமயோசிதமாக யோசிக்கும் மண்டைக்கு சாத்தியம்?

இப்போ புரிகிறதா? நம்முடைய பெரும்பாலான வியாதிகளின் மூலம் எங்கிருந்து வருகிறதென்று. ஆம்! நாம் பிள்ளைகளை நல் வழி படுத்தவே “நமக்குத் தெரிந்த விசயங்களை” உட்புகுத்தி வளர்க்கிறோம், ஆனால் நாளக்கி நம் மீது பிள்ளைகள் ஏறி நம் பார்வைக்கும் எட்டாத தூர விசயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதனை நாம் உணரவேண்டும். வளர்வதுதான் வாழ்க்கை தேய்வதல்லவே!

எனவே, முடிந்தளவிற்கு குழந்தைகளுடன் கிடைக்கும் ‘வாய்ப்புகள்’ தோரும் நல்ல ’யுனிவெர்சல் ஒழுக்கம் சார்ந்த’ உரையாடல்களை நிகழ்த்துங்கள் அது பின் வரும் காலங்களில் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் யாரையும் தனி மனித குடும்பங்களில் மூக்கை நுழைத்து பரிகசிக்கும் காட்டுமிராண்டித் தனத்தை தொடராத வாக்கில். அதுவே ஆரோக்கிய வாழ்வு உனக்கும், எனக்கும் ஒரு சமூகத்திற்கும் ஏன் இந்த உலகிற்குமே!!




பி.கு: அண்மையில் இந்தக் கட்டுரை எனது பெற்றோர்களுடன் உரையாடும் பொழுது கருவாக உருவானது. இங்கே அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல், உங்களுக்காகவே!!

Tuesday, November 16, 2010

நான் ஏன் வலைபதிகிறேன்: சுயசொரிதல்...

ஓ! பாய்!! எங்கிருந்து இந்த பகுதியை நான் ஆரம்பிக்கிறதிங்கிறதிலேயே ஜாங்கிரி சுத்துற அளவிற்கு விசயமிருக்கு. ம்ம்ம் நான் பதிவ எழுத ஆரம்பிச்சு ஐந்து வருஷமாகிப்போச்சப்போய்... எனக்கு இந்த கணினியில தமிழ்ல கூட எழுத முடியுங்கிறதை நானே தட்டு தடுமாறி விழுந்து, அங்க நின்னு இங்க நின்னு கடைசியா இந்த வலைப்பூக்கள், பிறகு தமிழ்மணம் அப்படின்னு ஒண்ணு ஒண்ணா என் சொந்த தேடல்ல (இப்பெல்லாம் இத பயன்படுத்தவே வெக்கமா இருக்கு...) இங்க வந்து விழுந்தேன்.

ஏன் அப்படி நிகழ்ந்ததுன்னா, ஏதோ ஒண்ணு இன்னும் நிறைய மனிதர்கள்கிட்ட இருந்து கத்துக்க இருக்கின்னு தேடித் தேடி கண்டம் கண்டமா பராக்கு பார்த்திட்டு கத்துக்கிட்டு வந்தாலும், நம்ம மக்கள், நமக்கு நெருக்கமானவங்க எப்படியா உரையாடிகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும்னு வாரது இயற்கைதானே? அதானே சம்பந்தமோ, பொருத்தமோ இல்லாத இடமின்னாலும் இதுக்குள்ளர கெடக்கணும்னு ஒரு உறுதியும் கொண்டு அதுவும் நானே எடுத்துக்கிட்டது (இல்லன்னா, நான் விலகுகிறேன்னு பதிவ போடச் சொல்லும்...), யாரும் எனக்கு அறிவுரை கொடுக்கல. இங்க இருக்கவங்க யாரு என்னான்னு கூட அறிமுகப் படுத்தி அதுக்குப் பிறகு எழுந்து நடக்கவோ, தவழவோ சொல்லிக் கொடுக்கல. புதிசா வாரவங்க நிறைய பேரு நிறைய பக்க பலத்தோட, பின்னணியோட இப்பொல்லாம் வருவதனையும் அவதானிக்கிறேன்.

எல்லாமே என்னுடைய சொந்த முயற்சியில என்னோட அறிவு தளத்தில யார், என்ன சொல்லுறாங்க, எங்க உண்மை இருக்கு, எங்க பாசாங்கு நிரம்பி இருக்கு, எங்க சும்மா நேரத்தை கொல்ல யாகூ, கூகுள் சாட் அறையில இருந்து நேரடியா இங்க வந்து பழகிக்கிறதுக்கு மட்டும் இருக்காங்கன்னும், அதனைத் தாண்டி எப்படி மரணத்தை கண்ணுக்கு கண்ணாக பார்த்தவனாக, வாழ்க்கையையும் வாழ்ந்து, புரிந்து கொண்டவர்கள் யார் என்பதனையும் என்னளவிலான புரிதல்களோட மேலும் வாழ்வினை படிப்பதற்காக அவர்களின் வீடு தேடி போய் வாசிப்பதுமாக எனது ஐந்து வருட வலையுலக வாழ்க்கையை ஓட்டியிருக்கிறேன். இங்கு பல வலையுலகப் போர்களை பார்த்திருக்கிறேன், பல மனிதர்களின் நிறங்களைக் கண்டிருக்கிறேன், அவர்களுக்கான அங்கீகாரப் போரில் வாழ்வின் காலத்தினையும், தேய்வினையும் கண்டுணர்ந்ததிருக்கிறேன்.

இது எப்படி இருக்கின்னா எனக்கு, இப்படியாக; கற்பனைய விரிச்சிக்கோங்க கீழ் கண்டவாறு, எனக்கு திடீர்னு ஒரு 1000 வருஷம் வாழுற மாதிரியான வரம் கிடைச்சிருச்சு (அய்யோ நிஜ வாழ்க்கையில அப்படியான ஒரு தப்பை செய்ய மாட்டேங்க...). அதுவும் அந்த சிறப்பு வரத்தில ஒரு முப்பத்தஞ்சு மைலுக்கு மேல நிலையான இடத்தில பூமியை மட்டும் சுத்த விட்டு நான் கீழிருப்பவர்களின் வாழ்வையும், தேய்வையும் அவர்களின் பாரம்பரியம்/கலாச்சாரம்/பண்பாடு போன்ற மற்ற காலத்தினூடாக அழித்தெழுதும் விசயங்களையும் கண்ணுற்றுக் கொண்டே வாழ்ந்து வருவதனைப் போன்றதாக.

உங்களால் அனுமானிக்க முடிகிறதா அப்படிப்பட்டதான ஒரு வாழ்க்கையின் அவதானிப்பில் எத்தனை விசயங்களை கண்டுணர்ந்து எத்தனை விதமான நம்முள் எழும் கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும் தனிமனித/சமூக வாழ்வின் பொருட்டு எது போன்ற விசயங்களில் அலட்டிக் கொள்வது நலம் பயக்கும், பயக்காது என்பதிலிருந்து இன்னும் எது எதுக்கோ சுயமாக கற்றுக்கொள்ள முடிந்திருக்கும்!

சமூகத்தில வாழ்ந்திட்டு இருக்கும் போது பிச்சை எடுத்து சாப்பிடுற நிலைக்கும் போறோமா அதுவும் நம்மோடதான், இல்ல ஊழல் செஞ்சு கோடி கோடியா சுருட்டிக் கொண்டு வாழுறோமா அதுவும் நம்மோடதான். அதப்பொருத்து ஒருத்தனுக்கும் கவலை இருக்காதுங்கிறதையும் தெரிஞ்சிக்கணும். காலம் பாட்டுக்கு இயங்கி போயிட்டே இருக்கு!

திரும்பவும் கதை. இப்போ அந்த பூமிக்கு மேல நின்னு பார்த்துட்டு இருந்தப்போ, மூணு தலை முறைக்கு முன்னாடி நம்மோட பாட்டி மொட்டை போட்டுக்கிட்டு ஆறு வயசில கல்யாணம் கட்டி, 17 வயசில அதுவோட கணவன் புட்டுக்கப் போக இதுக்கு ஒரு மொட்டை போட்டு, வெள்ளப் புடவை சாத்தி திண்ணைக் கொண்டையில உட்கார வைச்சி எத்தனை ஈ போகுது வருதுன்னு எண்ணிக்கிட்டு உட்கார வைச்சிருந்ததையும் பார்த்தோம், அதே நேரத்தில ஒரு 200 வருஷத்தை பாஸ்ட் ஃபார்வேர்ட் பண்ணி இன்னைக்கு மறுமணம் பண்ணவிட்டு அதே வயசு ஆள ISOல வேலைக்கு அனுப்பி அடுத்த நிலாவிற்கு போற ராக்கெட்டின் திசையறி மானியின் புரெஜெக்ட் கட்டுறதின் தலைமைக்கு ஆளாப் போடுற அளவிற்கு மாறியிருந்தா அதிசயமா இருக்குமா இல்லையா. வெயிட், வெயிட், இந்த நிலையில பாவம் அந்த மொட்டை போட்ட பாட்டி, வெறும் ஈயை எண்ணியே, போர் அடிச்சுப் போயி சேர்ந்திருக்கும் சமூகத்தின் மேல அத்தனை கோபத்தையும் வைச்சிட்டு; நியூக்ளியார் வெப்பனையே மனசிக்குள்ளர அது கட்டி முடிச்சிருக்கும் தான் சாவும் பொழுது இந்த ஊரையே எவனெல்லாம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்தானோ அவனப் பூராவும் கூடவே வாரிக்கிட்டு போற ரேஞ்சிற்கு... யாருக்குத் தெரியும் அது என்ன புத்தகமா எழுதினிச்சு, நாம தெரிஞ்சிக்க.

சோ, நஷ்டம் அந்த தனி மனுசிக்குத்தான். ஆனா, அதே கால கட்டத்தில் ஏதாவது பலப்பல மனுசியோ/மனுசனோ அதன் வலியை நன்கு உள்வாங்கி சிறிது சிறிதாக நம்ம பாட்டியின் தெருமுனையிலோ ஊரின் மறு கோடியிலோ முனகியிருக்கக் கூடும். அந்த சிந்தனையின் பொருட்டு விளங்காத தடிமாட்டுத் தோல் கொண்ட மற்ற மனிதர்களுக்கும் விளங்கியிருக்கக் கூடும்; நாம் பேசிக் கொண்டிருக்கும் பாட்டியின் சிறு வயதின் தேவைகளும், ஏக்கங்களும், வலிகளும்... இது போன்றதாகத்தான் சமூகத்தின் தேவைகள் காலம் தோரும் விரித்து உள்வாங்க உதவியாக இருந்திருக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தில் பேசுவதற்கு கூட கூலி கிடைத்தால்தானே வாயைத் திறப்பதான சந்திப்பில் காலம் சுழன்று நம் கலாச்சாரத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பொழுது, உண்மையான அக்கறையோடு பேசுபவர்களையும் காகம் கரைந்து கூட்டத்தை சேர்த்து அழுகி கெடக்கும் மாமீச எச்சத்தை உண்ணக் காத்து நிற்கும் ஹைனாக்கள் போல சுற்றி வந்து அவர்களை விரட்டியடிப்பதாலும், கிடைத்திருக்கும் சுய உணர்வோடு தன்னிச்சையாக சிந்திக்கும் காலங்களான ஒரு 30 வருடங்களுக்குள் என்னாத்தை பெரிசாக வாழ்ந்து முடித்ததினைப் போன்று உணர்ந்து விடப் போகிறோம்; தன் எண்ணத்தை கூட வெளிப்படுத்திவிடா வண்ணம்.

தனக்கான சிந்தனைகளுக்கு கூட வாய்பூட்டு போட்டு, நழுவிக் கொண்டு நன்றாக வாழ்ந்து முடித்திருக்கிறோம் (தனக்கு மட்டுமேயாக) என்று எண்ணி மண்ணுக்குள் புகுந்து பாறையின் ஒரு பகுதியா மீண்டும் ஆகிக்கொள்வதில், யாருக்கு லாபம்?

இப்போ பாயிண்டிற்கு வருகிறேன், என்னுடைய தளம் ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது என்று கூறினேன். எழுதுவது அனைத்தும் எனக்கேயான சுய விமர்சனங்களும், என்னால் முடியாத, என்னை விட பெரிதாக எனக்கு முன்னால் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வாழ்வை பொருத்தான சிக்கல்களில் ஏன் நான் இப்படி ரியாக்ட் செய்கிறேன்; எப்படியாக எனக்கு வழங்கப்பட்ட சூழல்களிலிருந்து மீண்டு அதன் பொருட்டான தெளிவு சார்ந்த கட்டுரைகளையுமே, தேடல்களையுமே இங்கு பிரதானமாக வைத்து எழுதி வைக்கிறேன்.

இந்த வலைத்தளத்தின் மூலமாக என் அறிவார்ந்த தளத்தில் இயங்கும் மக்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவ்வளவுதான். வேறு எங்குமே இதனை வைத்துக் காரியம் சாதித்துக் கொள்ளவோ, அல்லது நாளக்கி அவர்கள் தேவைப்படுவார்கள் கர்மமே கண்ணாக கும்மியடிக்க வேண்டிய நிலையில் எந்த மனிதர்களையும் நான் பிடித்தும் வைத்திருக்கவில்லை, அவர்களும் என்னைப் பிடித்து வைத்திருக்கவில்லை? ஆச்சர்யம்தானே?! அப்படியான மனிதர்கள் இங்கு மென்மேலும் இருக்கக் கூடும்.

இது போன்ற புரிதல்கள் உண்மையாக தன்னுடைய கருத்துக்களை பதிய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு கண்டிப்பா உதவக் கூடும். இல்லையெனில் கூட்டமாக வந்து, கூட்டமாக சென்றால் நாம் எதுவுமே தனிமனித சோதனைகள் சார்ந்து முகம் கொடுத்து, அதிலிருந்து மீண்டு எழ ஒரு போதும் தன்னை தயார்படுத்திக்கொள்ள முடியாது.

மேலும் முன்னெப்பொழுதுமில்லாத வாக்கில் இப்பொழுது இந்த இணையம் ஒரு அருப்பெரும் கதவை திறந்து விட்டிருக்கிறது. அது பல வேறுபட்ட நிலைகளில், தளங்களில் இயங்கும் ஜாம்பவான்களையும் அவர்களின் வாசிப்பின் வீச்சம், வாழ்க்கையின் ஆழம், பிற பிரதேசங்களின் பழக்க வழக்கம்/அங்கே நிலவும் கலாச்சாரம்/பண்பாடு போன்ற பல விசயங்களை ஒருங்கே கொண்டு வந்து ‘உரையாட’ ஒரு அருமையான இடமாக்கிக் கொடுத்திருக்கிறது.

இதெல்லாம் ஒரு 20 வருடத்திற்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத விசயம். நானெல்லாம், அறிவார்த்தமாக இயங்கும் மனிதர்களை அவரவர்கள் இருக்குமிடங்களிலேயே சென்று பார்க்கும் நிலையிலேயே இருந்தது. அதுவும் தேடித் தேடி. இன்று அவரவர்களும் கிடைக்கும் நேரத்தில் இப்படி இணையத்தின் ஊடாக ‘உரையாட’ காத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களை படியுங்கள், எங்கிருந்து, எங்கு சென்று எது போன்ற வாழ்வுச் சாலையின் மூலமாக நடந்து எங்கே இருக்கிறார்கள், ஏன் இப்படி பேசுகிறார்கள் என்பதனை அவதானியுங்கள். நாம் செய்யும் பெரிய தவறு தனக்கு முன்னாக இருக்கும் வாய்ப்பினை பார்க்கத் தவறுவதுதான்.

பல இடங்களில் நான் குறிப்பிட்டபடி இந்த தளத்திற்கு வந்து வாசிப்பவர்கள் முதலில் என் பெயரைக் கொண்டு முன் முடிவு செய்பவர்கள் அத்தோடு நிற்கட்டும், அதனைத் தாண்டியும் எடுத்தாளும் பேசு பொருள், எழுத்து நடை உவப்பாய் இல்லையா, கழியுங்கள். பொருட்டு கிடையாது. ஆழமறிந்தவர்கள் மட்டுமே எஞ்சினாலே போதும். இந்தத் தளம் எனக்கானது, என் விழிப்பு நிலையை மேலும் வளர்த்துக் கொள்ளவும், முகம் கொடுக்கவே அஞ்சும் கேள்விகளை எழுப்பிக் கொள்ளவுமே இந்தத் தளம்.

அதன் பொருட்டு எனக்கு உறுதுணையாய் இருப்பவர்கள், இங்கே பொழங்கி வருகிறார்கள். புரியாதவர்கள், புரியும் பொழுது படித்துக் கொண்டால் போதும்!

இது எந்த தனிமனித லாப நோக்கிற்காகவும் எழுதப்படும் தளமில்லை. த்தோ, அவரை தெரிந்து வைத்திருந்தால் அது ஆகும்; இவரைத் தெரிந்து வைத்திருந்தால் இதுவாகும் என்பதற்கு - என்னை மென்மேலும் வளர்த்தெடுக்க வைத்திற்கும் ஒரு விளையாட்டுத்தளம்.

என்னுடனான இந்த ப்ளாக்கின் மூலமாக நெருக்கமானவர்களுக்கு கூட பூர்ண சுதந்திரம் கொடுத்தே வைத்திருக்கிறேன், நேராகவே சொல்லி என்னுடனான கருத்துக்களில் ஒப்புமை இல்லையெனில் எப்பொழுது வேண்டுமானாலும், சுதந்திரமாக நடையை கட்டலாமென்று. ஏனெனில், எதுவும் கட்டிப் போட்டிருக்கக் கூடாது. அவர்களுக்காக நானும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது, என்ற நல்ல எண்ணத்திலேயே. முகமூடியுடன் பழகிக்கொள்வது நேர விரயம், இரண்டு பக்கமுமே.

என்னைப் போன்று ஓடித் தேய எண்ணமுள்ளவர்கள் சத்தமில்லாமல் வந்து போவது ஒன்றே போதும், இதற்கான நேரம் செலவழிப்பதற்கான தட்டிக் கொடுப்பதாக. முகமூடிகளற்ற, உண்மையை நேசிக்கும், மரணத்தை அதன் கண் நோக்க தைரியமுள்ளவன் எஞ்சக் கடவ!

Friday, November 12, 2010

கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post

கலாச்சாரம், பண்பாடு இன்னும் என்னன்னவோ சரியாகவே புரிந்து கொள்ளப்படாத ஒரு விசயத்தைப் பத்தி பேசிகிட்டு ரொம்ப அரைவேக்காட்டுத் தனமா விசனப்பட்டு பதிவுகள் மேல பதிவுகளா படிச்சு எனக்கு மண்டை காஞ்சிப் போச்சு. தேடித் தேடி அது மாதிரி பேசுற கட்டுரைகளை எல்லாம் போயி படிக்கிறதில்ல. எதிர்பாராத விதமா எடரி விழுந்து படிக்கப்போயி தனித்தனியா மறுமொழிகள் வேற இட்டு, அதனைச் சார்ந்து வேற்று சிந்தனைகளை கிளறி விடல் எண்ணி எப்பவோவது என்னோட சொந்த புரிதலை வைப்பதுண்டு.

இருந்தாலும் தனித்தனியாக விவாதித்திக்கொண்டே இருக்க முடியாது. ஏன்னா இன்றைய நவீன சூழல்ல நிறைய புதிய புதிய ஆட்களை பழைய மண்டைக்குள்ளரயே வைச்சு வெளி உலகத்திற்கு அறிமுகப் படுத்துறதுனாலே எல்லாருக்கும் பொதுவான ஒரு கட்டுரையா இருக்கட்டுமேன்னு இது.

நண்பர் கல்வெட்டு கலாச்சாரம் என்ற கழிச்சலில் போகும் வார்த்தைக்கு இப்படியாக அவரின் பதிவென்றில் விளக்கமளித்திருக்கிறார்...

...கலாச்சாரம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒரு பேராசியருக்கு பாடம் எடுக்கப்போய் அவர் அதில் இருந்து என்னிடம் இருந்து விலகிப்போய்விட்டார். நான் சொல்லும் பேராசிரியர் தமிழர் அல்ல வட இந்தியர் ஒருவர். கலாச்சாரம் என்பது எப்போதும் இறந்தகாலத்தைக் குறிக்கும். இறந்தகாலம் அல்லது கடந்தகாலம் என்பது எல்லை இல்லாதது. கி.பி என்று ஆரம்பித்து கடந்தகாலத்தை நோக்கிச் சென்றால் கிறித்துவின் பிறப்பில் நின்று அந்தர்பல்டி அடுத்து கி.மு என்றாகி எல்லையில்லாமல் விரியும்.

கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும் பெரிசுகளிடம் "எந்த காலகட்டத்திற்கான கலாச்சாரம் இப்போது இந்த ஆண்டில் கெட்டுவிட்டது?" என்று கேட்கலாம். ஒரு பேச்சுக்கு கண்ணகி காலத்தில் இருந்ததே அக்மார்க் கலாச்சாரம் என்றால், எல்லா ஊரிலும் பரத்தையர்கள் பகிரங்கமாக வாழ அதே பெரிசுகள் ஒத்துக்கொள்வார்களா? இல்லை, குறைந்த பட்சம் "கட்டைவண்டியில் மட்டும்தான் பயணம் செய்வேன்" என்று வாழ்வார்களா? டயர் வண்டி வந்த காலத்தில் கட்டைவண்டிக்காரர்களும், கட்டை வண்டிக்கு சக்கரம் செய்யும் தச்சர் மற்றும் மேல் இரும்புப்பட்டை பட்டை செய்யும் கொல்லரும் "இதெல்லாம் அழிவுக்கான அறிகுறி . டயர் வயக்காடில் போனா நல்லதா?" என்றுகூட அலுத்துக் கொண்டார்கள். ட்ராக்டரே போகும் காலம் வரவில்லையா? கூமுட்டைகள் பேசும் கலாச்சாரம் என்பது தனக்குத் தெரிந்த வரலாற்றில் இருந்து வசதிப்படி செலக்ட் செய்து கொள்வது.

இதுதான் டமிளனின் கலாச்சாரம் என்று ஏதேனும் ஒரு காலத்தை மட்டும் குறிக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப ஒருவித பழக்கங்கள் இருந்து இருக்கும். அடுத்து வரும் காலங்களில் அது மாறிவிடும். கண்ணகியின் பாட்டிகூட கண்ணகியிடம் "அந்தக்காலத்தில் இருந்த மாதிரியா இருக்கு? காலம் கெட்டுப்போச்சு. சூதானமா இரு புள்ள‌" என்று சொல்லி இருக்கக்கூடும். அந்தப்பாட்டிக்கு அவரின் காலம் நல்ல கலாசாரம். நமக்கு?

கலாச்சாரம் என்பது வரலாறு. மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களால் மதிப்பிடப்படும் ஒன்று. பண்பாடு, கலாச்சாரம் குறித்து விரிவாக எழுதும் போது நிறைய உரையாட வாய்ப்புண்டு...


இப்போ என்னோடது. கீழ் படிக்க நேர்பவை பின்னூட்டமாக எழுத ஆரம்பித்தது இந்தப் பதிவிற்காக... ஆபத்தான கலாச்சாரம்...!

வாழ்க்கை என்பது ஒரே நேர் கோட்டில் ஓடுவது கிடையாது. அது மனிதருக்கு மனிதர் புரிந்து கொள்ளும் படிகளைக் கொண்டு வளைந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது; எப்படி வான்வெளியில் பொருட்களின் பருமனுக்கு ஏற்ப வெளியே வளைந்து பிற பொருட்களின் ஈர்ப்பினிலின்றி விலகி ஓடவோ, இழுத்து பிடித்து தன்னைச் சுற்றி சுழலலவோ ஆக்கிக் கொள்வதனைப் போன்று.

இந்த தவறாக புரிந்து உள்வாங்கி கொள்ளப்பட்ட “கலாச்சாரம்” என்ற ஒற்றைச் சொல் எப்படி அடுத்தவரின் உடல் நிலையையிம், அவரின் தினசரி வாழ்க்கையையில் கூட நிம்மதியாக இல்லாமல் ஆக்கும் அளவிற்கு, தன் கையை மீறிய ஒரு விசயம் பாதிப்பினை வழங்கி விடுகிறது.

ஒருவருக்கு ஒரு விசயம் அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பதற்காக காலம் பிறர் ஒருவர் தன் வளர்ச்சியைக் கொண்டு எடுத்திருக்கும் முயற்சிக்கு அவரது அனுபவத்தின் மூலமாக தேடிச் சென்றடையக் கூடிய பாடங்களை வழங்காமல் அவர்களின் வாழ்கையை முடித்து விடுவது கிடையாதுதானே!

எதார்த்த வாழ்வில் விசயங்களின் ஓட்டம் அவ்வாறாக சுழன்றடித்து ஓடித் தேய்கையில் எப்படி தனி ஒருவனாக கடந்த கால விழுமியங்களில் சிக்கி தனக்கு உவப்பாய் இருக்கிறது என்பதற்காக, முட்நோக்கியே நகரும் கால அம்புக்குறியை வளைத்து பின்னோக்கி இழுக்க முடியும்.

இங்கு நம்மால் முடிந்தது, ஒதுங்கி நின்று அது போன்ற அனுபவப் பாடம் வேண்டியவர்களை விட்டு அதன் சாதக பாதகங்களை பெற விடுவது மட்டுமே! அந்தக் கட்டுரையில் பேசப் பட்ட விசயம் ஆண்/பெண் திருமணம் கட்டாமல் “சேர்ந்து வாழ்வது”பற்றியது என்பதால் இப்படியாகச் சொல்லியிருந்தேன். அது போன்ற ஒரு வாழ்வுச் சூழலில் ஈடுபடுபவர்கள் ஒன்றும் வயது முதிராத பள்ளிச் சிறார்கள் இல்லையே, உடல்/மன ரீதியில் சுயமாக சிந்திக்கும் நிலையில்தானே இருக்கிறார்கள்... இந்த பின்னணியில் எல்லாம் அவர்களுத் தெரிந்தேதானே இறங்குவார்கள்; எல்லா சாதக/பாதங்களையும் நேர் கொள்ளும் முடிவோடு.

ஏன், அது போன்ற உறவு நிலைகளில் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லையா? ஏன், மனிதனின் மனம் எப்பொழுதும் ஆண்/பெண் உறவு நிலையை குறுக்கி காமம் என்ற ஊறுகாய்க்குள்ளரயே தன்னையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்கிறது? எங்கே அப்போ தவறு நிகழ்கிறது? ஒரு பெண்ணை ஆற்றைக் கடக்க தோளில் சுமந்து சென்று அத்துடனே சுமையை இறக்கிய நபரா நீங்கள், அல்லாது மனத்துடனேயே வாழ்வுச் சாலையெங்கும் தூக்கிச் சுமக்கும் நபரா?


.... அந்தக் கட்டுரையில் சில சமூகம் கெட்டுப் போகிறதே என்று விசனத்துடன் என்ன செய்து இதனை கட்டுப்படுத்தாலம் என்ற தொனியில் கீழ்காணும் வரிகள்...

//'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' //

//என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...?//


அடுத்து கலாச்சாரம், கலாச்சாரம் என்று பேசுகிறோமே, எது கலாச்சாரம்? பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஏமாற்றிக் கொண்டு வாழ்வதெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா?

ஆண்/பெண் உறவு சார்ந்தும், ஆடைகள் உடுத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கில் மட்டுமே இந்தக் கலாச்சாரம் விழிப்புடன் இருக்கிறதே அது ஏன்? அதுவும், இந்த உறவு நிலையில் போலியாக இணைந்தே 30, 40 வருடங்கள் என ஊருக்காக வாழ்ந்து முடிக்கும் நிலையில் - இடையில் அடிதடி, நிம்மதியின்மை, மனச் சோர்வு, அடுத்தவருக்கு என்ன வேண்டும், தன்னுடைய டேஸ்ட் என்ன, தனக்கே என்ன வேண்டும் என்றே தெரியாமல் விழிபிதிங்கி என்னமோ பிறப்பெடுத்துவிட்டேன் வாழ்ந்து முடிக்கணுங்கிற கடமை உணர்ச்சியோட மல்லுக்கட்டி அக்கப்போர் பண்ணி வாழ்வதில் என்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது?

அதே சமயத்தில் இப்படியாக ஆண்/பெண் உறவுகளின் சிக்கல்களை புரிந்து கொண்டு மீண்டும் நிலையான உறவுகளுக்குள் வருவது எவ்வளவு மேல் எனலாம்; தன்னைப் பற்றிய சுயமான முடிவுகளோட, தேவைகள், குறிக்கோல் என பெற்ற அனுபவங்களைக் கொண்டு தனக்குத் தகுந்த மாதிரி தைத்துக்கொண்ட உடையை மட்டும் அணிந்து கொள்ளும் பக்குவத்தோடு. ... sum of experiences = lifely wisdom for future harmony.

மாறாக மோட்டில் முட்டிக் கொள்வதனைப் போன்று ஒவ்வொருவரும் ஒரு துருவத்தில் நின்று கொண்டு, இவர் பேசுவது அவருக்கு புரியவில்லை; அவரது இவருக்கு... ஒண்ணு காட்டிற்கு இழுத்தால் இன்னொன்னு மோட்டிற்கு இழுத்துக் கொண்டுமென உரையாடலே இன்றி அமைத்துக் கொள்ளும் வாழ்வில் எப்படியான தன்னைப் பற்றிய புரிதல் முழுமையாக இருக்க முடியும்.

இன்னும் எவ்வளவோ இருக்கிறது பேசுவதற்கு. அதற்காக எல்லாரும் இப்படி செய்து வாழ்க்கை புரிஞ்சிக்கோங்கப்பான்னு சொல்லல. தனக்குப் புரிஞ்சதை வைச்சு, தன்னோட வளர்ச்சியை வைச்சு, தான் வாழும் சூழலை வைச்சு மட்டுமே இந்த மொத்த உலகத்தையும் அளந்துவிட முடியாது. அதுனாலே உடம்ப பார்த்துக்குவோம். தனிமனித நிலையில் அவங்கவங்களும் தனக்குத் தேவையான வழியில, வாழ்க்கை பாடத்தை பெற அனுமதிப்போம். அடிச்செல்லாம் பழுக்க வைக்க முடியுமா??


*** இதுவும் கலாச்சார சீரழிவிற்குள் வருமா ...

புது ஃபேஷன் ஷெட்டி, ஐயர், ரெட்டி, மேனன்: Is it fool's identity?


***அப்படியே இதுவும் வருமுங்களா பார்த்துச் சொல்லுங்க...



பி. கு: அப்படி இல்லாம இந்த பொஸ்தகத்தில எழுதியிருக்கு அத தூக்கிப் புடிச்சிக்கிட்டு, த்தோ அந்த அஞ்சாவது வீட்டில இருக்கவன் தொடர மாட்டிங்கிறான் எப்படி அவன வழிக்கு கொண்டு வாரதுன்னு அடாவடியா உட்கார்ந்து யோசிச்சா, நம் பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒரு அருவா தயார் செஞ்சு தலையணைக்கு கீழே வைச்சிக்க வேண்டியதுதான் - வீட்டுக்கு வீடு. :)

Related Posts with Thumbnails