Monday, January 04, 2010

உடல் + உடை = அரசியல்!

தமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளையும் வாசிக்க முடிந்துவிடுவதில்லை. இப்பொழுதெல்லாம் நண்பர் வட்டம் படித்துவிட்டு இதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் செலவு செய்தால் வீண் விரயமில்லை என்ற வடிகட்டலுக்குப் பிறகே சில நாட்கள், வாரங்களுக்குப் பிறகு நல்ல பதிவுகள் வந்தடைகிறது. இருப்பினும், தான் தோன்றியாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆர்வத்தை கிளப்பும் பதிவுகளை நானாகவே கிடைக்கும் நேரங்களில் அங்கு சென்று தழுவிச் செல்லாமலும் விட்டதில்லை.

எழுத்து என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒரு தானியங்கி முறையில் உள் உந்துதலாக நிகழ வேண்டியதொரு விசயம். அவ்வாறாக நிகழும் பொழுது அங்கே பசப்புத் தனங்களுக்கு இடமிருக்காது என்றே எண்ணுகிறேன். அதனை ஒரு கட்டாயமாக, நிர்பந்தமாக ஆக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பயிற்சி தோள் கொடுத்தாலும், எழுத்தில் ஒரு போலித்தனமும், ஆழமின்மையும் மிளிரக் காணமுடியலாம்.

அண்மைய காலங்களில் அதாவது வலைப்பூக்கள் அநாமதேயமாக எங்கிருந்து வேண்டுமானாலும், குறைந்த பட்ச நேரம் மட்டுமே மூலதனமாக செலவு செய்து தன்னிடம் சரக்கு இருக்கிறது, அது இந்த உலகிற்கு சென்றடைய வேண்டுமென்ற ஆவல் உள்ள எவரும் செயற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிற ஒரு சூழலில், நான் இன்று சந்திக்கின்ற வளரத் துடித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களிடம் கேட்டுக் கொள்வதனைத்தும் "ஏன், நீங்கள் ஒரு ப்ளாக்கர்" கணக்குத் தொடங்கி உங்களின் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதுதான் ;).

அப்படியாக அவரும் தொடங்கும் பொழுது அது அவருக்கு ஒரு ஆரோக்கியமான சுய வளர்ச்சிச் சூழலை உருவாக்கிக் கொடுக்கக் கூடும் என்ற நம்பிக்கையிலேயே, அவ்வாறாக பரிந்துரைக்கிறேன். ஏனெனில், மனித மனமென்பது எப்பொழுதும் தனக்கு பழக்கமான, ஆபத்தற்றதாக கருதிக் கொள்ளும் எல்லைகளிலேயே பயணிக்க பிரியப்படும். அவ்வாறான ஒரு சூழலும் அமைந்து போனால், அதனைத் தாண்டிய ஒரு உலகமும், மனிதர்களும் பல் வேறு பட்ட கருத்து, சமூக, கலாச்சாரங்களின் ஊடான பார்வைகளைக் கொண்டும் இதே தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்ற எண்ணத்தையே மறந்து தன்னுடைய எல்லைக்குள்ளாகவே லயித்து இருக்கும். அதன் நேர் பாதையில் ஏதாவது இடர்பாடுகள் இடரும் வரையிலும்...

மனமும் அதன் வளர்ச்சியுமென்பது ஒரு நீரோடையைப் போன்று ஓடிக் கொண்டே இருப்பதும், தேவையான மாற்றங்களை, பிரபஞ்ச விரிதலைப் போன்று எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்வதற்கு எப்பொழுதும் தயாராக்கிக் கொள்வதுமாக அமைந்து போனால் எங்கிருந்து வருகிறது மனச் சோர்வும், இத்தனை முரண்பாடுகளும்? இந்த தயார்படுத்தலுக்கு எழுத்தும், எண்ணமும் மேலும் வழிவகை செய்து கொடுக்கலாம். மனம் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே என்றுமிருந்தால்.

எனது எழுத்து என்பது என்னை நானே மேலும், மேலும் உட் நோக்கி பார்த்துக் கொள்வதற்கான காலச் சுவடு போன்றதாகக் கருதுகிறேன். அதற்கெனவே, மனதில் ஆழமாக உதித்ததை இங்கு பொதித்து வைத்து விடுகிறேன். பின்பொரு நாளில் கடந்து வந்த வளர்ச்சிப் பாதையின் நீளம், அகலம் அறிந்து கொள்வதற்காக.

அது போன்ற எழுத்தை எல்லார் முன்னிலையிலும் வைக்கக் காரணுமும் எத்தனை பேருக்கு அந்தத் தளத்தின் வீச்சம் பிடிபடுகிறது அல்லது எரடுகிறது என்பதனையும் அறிந்து கொண்டு எனது மேம்பட்ட வளர்ச்சிக்கெனவும் மேலும் பரந்து பட்ட பார்வையை உருவாக்கிக் கொள்ளவும் பயன் படுத்திக் கொண்டுள்ளேன். நமது உலகம், கற்றுக் கொள்ள மனதும் திறந்தே இருக்கும் நிலையில் விரிந்து கொண்டே செல்கிறது என்பதனை இது வரையிலும் எனக்கு ஊறக்கிடைத்த கிணறுகளின் நீள, அகலங்களை அளந்ததின் மூலமாக அறிந்து கொண்டேன். அதன் பொருட்டு இப்பொழுதெல்லாம் சில "கம்பளத் தனமான" வார்த்தைகளை (sweeping statement) விடுவதிலிருந்து முழித்துக் கொள்ள முடிகிறது.

இது அண்மையில் தமிழ்மணத்தில் நடந்து வரும் முரண்பாடுகளுக்கு ஊடான பதிவுகளும் , அதற்குண்டான எதிர் வினைகளுக்கும் சிறிது தொடர்பு இருக்கலாம். புதுப் புது பதிவர்களும், வாசகர்களும் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், அது போன்ற முரண்பாடுகள் ஊடான பதிவுகளும், எதிர் வினைகளும் முடிவற்று நடந்து கொண்டேதான் இருக்கும். அடிப்படையான எண்ணங்களையே அவர்களும் தான் ஊறிக் கிடந்த கிணற்று சாளரத்தின் வழியாக பரந்து பட்ட வானத்தின் ஒரு வட்டத்தைப் பார்த்து அவர்கள் கண்ட வானம் எப்பேர்பட்டது என்பதனை 'பீத்தி' முன் வைக்கலாம், மற்றொருவர் அதற்கு பக்கத்தில் கிடக்கும் கிணற்றிலிருந்து அவர் தரப்பில் கூவிக் கொண்டிருக்கும் அதே வேலையில்.

இப்பொழுது, எனது கிணற்றின் ஊடான அனுபவம் சில வற்றையும், அது எப்படி என் அகக் கண்களை அந்த வேலையில் திறக்க உதவியது, அது போன்று உங்களுக்கும் திறக்க உதவக் கூடுமென்ற நப்பாசையில் இங்கே இறக்கி வைத்து விடுகிறேன் ...

அனுபவம் எண் 1: அப்பொழுது கார்கில் பகுதியில் பாகியுடன் நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தோமென்று நினைக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு முன்னமே இந்தியாவிலிருந்து அமெரிக்கா குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழர் எனக்குப் பழக்கமானார். அவர் இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்தும், படிப்பிற்கும் பொது அறிவிற்கும், பண்பாட்டிற்கும் ஒருவனுடைய அடிப்படை இயல்பிற்கும் எந்த தொடர்புமில்லை என்பதற்கிணங்க, ஒரு அறிவு கெட்ட "கம்பள வார்த்தை" ஒன்றை அவரிடத்தில் மிக்க தேச பக்தியில்(??) உளறி வைத்தேன்.

அந்தக் கம்பள வார்த்தை என்னவெனில், "பாகியை துடைத்தெறிந்திட்டா எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்துவிடும்" என்பதுதான் அது. அவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு, நண்பா! அந்த நாட்டில் இன்னமும் எங்களுக்கு தொடர்புடைய பெரியப்பா, பெரியம்மா வகை சொந்தங்கள் வசிக்கிறார்கள் இன்னமும் வந்து போயிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாக கூறினார். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே புரியவில்லை. அப்படியே நிலை குலைந்தவனாக அமர்ந்திருந்தேன். ஒரு நிமிடம் என்னை அவர் நிலையில் வைத்துப் பார்த்தேன். என்னுடைய வார்த்தையின் தீவிரம் புரிந்தது. அன்றிலிருந்து, பல சில நேரங்களில் இது போன்ற குருட்டுத் தனமான கம்பள வார்த்தைகளை தவிர்ப்பதின் அவசியத்தை உணர்ந்தேன்.

அனுபவம் எண் 2: இங்கு அமெரிக்கா வந்த பொழுதினில், எங்களைப் போல உண்டா என்று நாளும் ஏதாவது ஒரு வெட்டி வம்பு பேசுவதுண்டு. ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையைக் காண்பதிலிருந்து ஆரம்பித்து, அரை ட்ராயர் போட்டு நடந்து திரியும் பெண்களைக் கண்டால், பார்க்கில் அமர்ந்து அன்நியோன்யமாக வருடிக் கொள்ளும் ஜோடிகளைக் கண்டால், வாயை விட்டு 'ஐ லவ் யு, ஹனி, மகளே, மகனே' எனச் சொல்லிக் கொள்ளும் மக்களைக் கண்டால்னு சகட்டு மேனிக்கு குருட்டுக் கம்பளம் விரித்தேன். எல்லாமே போலி, வேஷமென்று. அதாவது அந்நாளில் என்னுடைய கிணற்று சாளரத்தின் வழியாக எனக்குக் காணக் கிடைத்த வான வெளியுடன் அவர்களின் கலாச்சாரத்தை தேவையில்லாமல் ஒப்பீடு செய்து கொண்டிருந்திருக்கிறேன். என்ன ஏதென்று எனக்குப் புரிய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே!

அது போன்ற ஒரு நாளில் எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குடும்பத்தாரை அருகிலிருக்கும் 'ஜோன்ஸ் பீச்சாங்கரைக்கு' அழைத்துச் சென்றேன். அதில் உள்ள கணவன், மனைவி ஐம்பதுகளின் மத்தியிலிருந்தார்கள். பத்தாவது படிக்கும் ஒரு மகன். பீச்சாங்கரையில் ஒரே ஜனத் திரள். எங்கு திரும்பினும் கூட்டம். யூனி ஃபார்மாக அந்த சூழலுக்கேயான உடை. பெண்கள் ட்டூ பீஸ், ஆண்கள் அரை ட்ரவுசர் என ஜோடித்திருந்தார்கள்.

என்னுடன் வந்திருந்த அம்மா வட இந்தியர். சுடிதாருக்கு மேலாக போட்டிருந்த துணியையும் வெயில் காய்கிறதென்று தலையில் போட்டு சுத்தியிருந்தார்கள். கால் முதல், தலை வரை துணியாக பீச்சாங்கரையை வலம் வந்து கொண்டிருந்தார். நாங்களும் ஒரு இடத்தை தேர்வு செய்து, துணிக் கம்பளம் விரித்து, கொண்டு வந்த திண் பட்டங்களை வைத்து கடை விரித்தோம். அருகினில் அமர்ந்திருந்த ஏனைய கூட்டம் எங்களைப் பார்ப்பதும், ஏதோ கிசு கிசுப்பதுமாக இருந்தார்கள். ஒரு அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் எங்களைச் சுற்றி ஒரு 15 மீட்டர் சுற்று வட்டத்தில் யாரையுமே காணோம்!

எங்கடா மக்கள் எல்லாம் என்று பார்த்தால், இந்தக் காட்டுமிராண்டிகளுடன் நமக்கெந்த தொடர்மில்லை என்று தொப்புள் கொடி அறுக்கும் விதமாக விலகிச் சென்றிருக்கிறார்கள். இங்கும் எனக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியாகவே அந்த நிகழ்வும், சூழலும் அமைந்திருந்தது. நம் ஊரில் வாரப் பத்திரிக்கைகளும், தினசரிகளிலும் வெள்ளைக்காரிகள் என்றாலே என்னமோ எப்பொழுதும் ட்டூ பீஸில் அழைந்து கொண்டு, சாலையோரங்களில் கண் அடித்து கவிழ்த்து விடும் பெண்கள் என்ற வித பொதுப் புத்தியை விதைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அன்று அந்த மெஜாரிடி சமூகத்தின் முன்னால்... எங்களுக்கு நிகழ்ந்ததின் பொருள் என்ன?

ஒவ்வொரு பூமியிலும் அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல அந்தந்த சமுதாயமும் வசதிக்கேற்ப உடலரசியலை நகர்த்திக் கொள்கிறது. அந்த எல்லைக்குள் வாழும், சமூகக் கண்களுக்கு எது வரையிலும் தோலைக் காமித்தால் முகம் சுழிக்காமல் எடுத்துச் சொல்லக் கூடுமோ அதுவரையிலும் அவர்களுக்கு அது நாகரீகம். அவர்களின் எல்லைக்குள். அதனைக் கொண்டு பிரிதொரு எல்லைக்குள் பிரவேசித்து அதனைப் போல உடலரசியல் செய்யவில்லை என்று கூவுவது எந்த விதத்திலும் நாகரீகமில்லை, அப்படி நிகழ்த்தும் பொழுது அங்கே வீண் பிரச்சினையும், கிணறுகளின் நீள, அகலங்கள் ஒன்றிலிருந்து பிரிதொன்றின் பார்வையில் வித்தியாசப் பட்டுக் கொண்டே போகும். எது வரையிலுமென்றால், அவைகளை விட்டு விலகி மொத்தமாக அந்த வித்தியாசங்களின் கூறுகளை காணும், மனக் கண் திறக்கும் நாள் வரையிலும் என் கிணறு உன் கிணறை விட சிறந்தது/தாழ்ந்தது என்ற முறையிலேயே அமையும்.

பர்தா போட்டிருப்பவர்களின் கண்களுக்கு அதனைப் போடாமல் வெளியே போயி வருபவர்கள் ஆபாசமாகவும், சேலை கட்டிக் கொள்ளாமல் ஜீன்ஸ், ட்டி-ஷர்ட் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும், அவர்களின் கண்களுக்கு மினி ஸ்கர்ட்டும், அரை ட்ரவுசரும் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும் தெரிவது (இந்த வரிசைக்கிரமத்தை பின்னோக்கியாக ஓட்டி ஒருவர் மற்றொருவரை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொண்டுமென...) எல்லாமே இந்த கிணற்று சாளரத்தின் வழியாக பார்க்கும் பார்வையில் தான் கோளாறே ஒழிய அந்தந்த தனிப்பட்ட மனிதரின் நிலையில் அது சரியே. பிடித்திருந்தால்/செல்லும் நிகழ்விற்கு ஒத்து வந்தால் எப்படி வேணா யாரும் இருந்துவிட்டுப் போகட்டுமே!





பி.கு: நான் இங்கு லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து ஓட்டும் வாகனத்தை மட்டுப்படுத்தி குடுபத்தோட, குழந்தை குட்டிகளோட பார்த்தா அதுக்கு நான் என்ன பண்றது :))) ...

35 comments:

நட்புடன் ஜமால் said...

கொஞ்சமே பெரிய பதிவென்றாலும்

நல்லா சொல்லியிருக்கீங்க.

அரசூரான் said...

தெகா, உங்க தலைப்பு வெரும் பதிவு அரசியல்... அதை நினைத்து ரொம்ப கவலையடையாதீர்கள்.

ஆமாம் பீச்சாங்ககரைக்கு போயி என்ன சாப்ட்டீங்க? மசாலா அயிட்டமா? டூ பீஸ்ல இருந்தவங்களுக்கு ஒவ்வாமை ஆகியிருக்கும் அதான் ஓடிட்டாங்க

குடுகுடுப்பை said...

தெரிந்துகொள்ள /பகிர்ந்துகொள்ள பிளாக் என்பதைவிட ஒரு கருத்தியல் வன்முறை யை சமயங்களில் அதிகமாக காணலாம். நானும் கூட செய்திருப்பேன், ஆனால் நீங்கள் சொன்னது திரும்பபடித்து திருத்திக்கொள்வேன்.

கிரி said...

//அதனை ஒரு கட்டாயமாக, நிர்பந்தமாக ஆக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பயிற்சி தோள் கொடுத்தாலும், எழுத்தில் ஒரு போலித்தனமும், ஆழமின்மையும் மிளிரக் காணமுடியலாம்.//

இது உண்மை தான்.

உங்கள் அனுபவம் நன்றாக இருந்தது.. ஒரு சிலர் அனுபவத்தின் மூலம் தெரிந்து தவறை சரி செய்துகொள்கிறார்கள், ஒரு சிலர் தன் தவறை புரிந்து கொள்ளாமல் சரியென்று தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

வால்பையன் said...

//பி.கு: நான் இங்கு லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து ஓட்டும் வாகனத்தை மட்டுப்படுத்தி குடுபத்தோட, குழந்தை குட்டிகளோட பார்த்தா அதுக்கு நான் என்ன பண்றது :))) ...//


அதுவும் சரிதான்!
பதிவின் ஆரம்பத்தில் சில உள்குத்துகள் இருப்பது போல் தெரியுதே!

மீன்துள்ளியான் said...

/எழுத்து என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒரு தானியங்கி முறையில் உள் உந்துதலாக நிகழ வேண்டியதொரு விசயம். அவ்வாறாக நிகழும் பொழுது அங்கே பசப்புத் தனங்களுக்கு இடமிருக்காது என்றே எண்ணுகிறேன். அதனை ஒரு கட்டாயமாக, நிர்பந்தமாக ஆக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பயிற்சி தோள் கொடுத்தாலும், எழுத்தில் ஒரு போலித்தனமும், ஆழமின்மையும் மிளிரக் காணமுடியலாம்.//

உணர்ந்து சொல்லப்பட்ட கருத்து ...

சாலிசம்பர் said...

பெண்கள் ஆடைக்குறைப்பு செய்து உடையணிவதை ,அது அவர்களின் உரிமை என்ற முறையில் ஆதரிக்கிறோம்.அதே போன்று முழுமையாக உடலை மறைத்து உடையணிவதும் அவர்களின் உரிமை.அதை ஏன் பிற்போக்கு என்று சொல்கிறோம்?

பி.கு:அன்பின் தெகா , இந்த வரிகளை வினவின் 'ப‌ர்தா,நற்குடி'பதிவில் பின்னூட்டமாக மூன்று நாட்களுக்கு முன் இட்டேன்.போய் சேர்ந்ததா இல்லையா என்று தெரியவில்லை?, வெளியாகவில்லை.இந்தப் பதிவுக்கு தொடர்புள்ள‌தாக கருதியதால் இங்கு இட்டுள்ளேன்

கல்வெட்டு said...

// சாலிஜம்பர்...
பெண்கள் ஆடைக்குறைப்பு செய்து உடையணிவதை ,அது அவர்களின் உரிமை என்ற முறையில் ஆதரிக்கிறோம்.அதே போன்று முழுமையாக உடலை மறைத்து உடையணிவதும் அவர்களின் உரிமை.அதை ஏன் பிற்போக்கு என்று சொல்கிறோம்?//

**************


பெண்ணோ ஆணோ ..

பிறந்தது முதல் 18 வயதுவரை எல்லா வகை ஆடைகளையும் அணிந்து வாழும் சுதந்திரசூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுங்கள்.

சேலை
சுரிதார்
பேண்ட் சட்டை
ஸ்கர்ட் ‍ டாப்ஸ்
அரை டவுசர் டாப்ஸ்
பொது இடத்தில் குளிக்க‌ சிங்கிள் பீஸ் நீச்சல் உடை
...


மேலும்....

18 வரை குழந்தைகள் மதமற்று இருக்கட்டும். 18 வயது வரையில் அவர்கள் எல்லா மதத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு தாருங்கள். அனைத்தையும் அறியட்டும். எதையும் தடை செய்யாதீர்கள்.

இப்படி எல்லாவகைச் சுதந்திரத்தையும் கொடுத்து வளர்த்துவிட்டு ...

18 க்குப் பின்னர் அவர்கள் விரும்புவதை எதையும்தடை செய்யாதீர்கள்.
இதுதான் சுதந்திரம்.


இதற்கு பிறகு அவர்கள் அவர்களாக மதம் / உடை என்று எதையும் தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை. அதற்குபின் நீங்கள் அவர்களின் வாழ்க்கையில் உடை/மதம்/பழக்கத்தில் தலையிடவேண்டாம்.



**

செக்குமாடுபோல ஒரு பழக்கத்தையும் , பிறந்தவுடன் மதம் என்ற ஒரு சுமையையும் ஏற்றிவிட்டு அவர்கள் அதைவிடமுடியாமல் கூச்சப்படும்போது அதை உரிமை என்று சொல்லாதீர்கள். அது அறியாமை.

**

உடை என்பது வாழும் இடத்தின் பருவநிலைகளுக்கு ஏற்ப இருக்கவேண்டிய ஒன்று. மேலும் அது அன்றாட வேலைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டியது.

**

பாலைவனத்தில் வரும் மண்புயலில் இருந்து ஆணின் தாடி,மீசை முடிகள் அவனின் சுவாசத்தை காக்கிறது என்றால் பெண்ணிற்கு முகத்தை மூடுவது.

இஸ்லாம் என்ற மதம் பாலைவனத்தில் உருவாகியது என்ற ஒரே காரணத்திற்காக பாளையங்கோட்டைவாசிகளும் அந்த நடையுடைகளைப் பின்பற்றுவது என்பது , மதத்தையும் வாழும் இடத்தையும் வேறுபடுத்த தெரியாத நிலை. :-(((

**

Thekkikattan|தெகா said...

ஜமால்,

கொஞ்சம் பெரிசாத்தான் போயிடுச்சு. கருத்துக்கு நன்றி!

*********

ருத்ரன் வாங்க, வணக்கம்.

****************

அரசூரான்,

//தெகா, உங்க தலைப்பு வெரும் பதிவு அரசியல்...//

அப்படின்னா :D ... நமக்கென்னாத்துக்கு கவலை எல்லாம் வரப் போவுது.

ஓ! பீச்சாங்கரையில சாப்பிட்டதா அப்படி ஒண்ணும் அவங்களுக்கு ஒவ்வாமை வார மாதிரி ஐட்டம் ஏதுமில்லையே... அதனைத் தாண்டியும் புனிதமானதா இருக்குமோ :)

குடுகுடுப்பை said...

செக்குமாடுபோல ஒரு பழக்கத்தையும்..//


செக்கும் இல்லை, செக்குமாடும் இப்ப இல்லை, அதுங்க மாறிடிச்சுண்ணே:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\எங்கடா மக்கள் எல்லாம் என்று பார்த்தால்,//

:)

\\ஏனெனில், மனித மனமென்பது எப்பொழுதும் தனக்கு பழக்கமான, ஆபத்தற்றதாக கருதிக் கொள்ளும் எல்லைகளிலேயே பயணிக்க பிரியப்படும்.//
அப்படி வெளியே வந்து ப்ளாகெல்லாம் எழுதினா அடிவிழும்ன்னு கத்துக்கிடனும்கறதுக்காக ப்ளாக் எழுத சொல்றீங்களா எல்லாரையும்.. :))

கல்வெட்டு said...

பர்தாவை விடுங்கள்.....

இஸ்லாம் பிறந்த இடம் பாலைவனம். பலைவன விலங்கு ஒட்டகம். அதனால் இஸ்லாம் கதை மற்றும் பாலைவன இஸ்லாமியர்களில் ஓட்டக மாமிசம் வந்தது.

சவூதியில் ஒட்டகம் சாப்பிட்டார்கள் என்று ஜாம்பஜாரிலும் குர்பானிக்கு ஒட்டகம் கொடுப்பது (இராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டு ) நடந்து கொன்டுதான் இருக்கிறது.

Thekkikattan|தெகா said...

//தெரிந்துகொள்ள /பகிர்ந்துகொள்ள பிளாக் என்பதைவிட ஒரு கருத்தியல் வன்முறை யை சமயங்களில் அதிகமாக காணலாம். நானும் கூட செய்திருப்பேன், ஆனால் நீங்கள் சொன்னது திரும்பபடித்து திருத்திக்கொள்வேன்.//

குடுகுடுப்பை, your comment deserves a little more விளக்கம் :)

கண்டிப்பாக தெரிந்துகொள்ள/பகிர்ந்துகொள்ள என்ற முறையிலேயே அணுகுவது என்றைக்கும் நலம் பயக்கும், இல்லையா? இந்தப் பதிவில நான் சொல்ல வந்த விசயத்தை மிகச் சரியா கடத்தி சேர்த்திருக்கிறேனா தெரியலை.

சொல்ல வந்த விசயம் என்னான்னா, ரிலேடிவாக சமூகத்திற்கு சமூகம் பார்வைகள் இது போன்ற dressing sense and code மாறிக்கொண்டே வருகிறது. நாம் ரொம்ப மாடர்னாக உடையணிந்து கொள்கிறோம் என்று நினைக்கும் அதே உடை 'ஜோன்ஸ் பீச்சாங்கரையில்' inappropriate உடையாகிப் போனது.

அதே போல நாம் வளர்ந்து வந்த சூழலில் என்னதான் மாடர்னாக உடையணிந்து கொள்ள நம் குடும்பத்தார்களுக்கு இடம் கொடுத்து(?) வைத்திருந்தாலும், மினி ஸ்கர்ட் என்ற அளவிற்கு வரும் பொழுது நமக்கும் சற்றே தொண்டை வறண்டு விடும் என்றே நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க. மீறி குறுக்கே நின்னா நம்மை 'காட்டுமிராண்டி'னுடுவாய்ங்க இங்க, இருந்தாலும் நம்ம மனசு, கெளரதை சும்மா விட்டுடுமா ;-)

எனவே, மனசளவிலே நெம்ப வளரணும் போல ...

அதுக்குத்தான் நான் சொன்னேன், திரும்ப நான் எழுதினதையே படிச்சு என்னய வளர்த்துக்க பயன் படுத்திக்கிறேன்னு :)

கல்வெட்டு said...

தெகா,
// லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து //

//மினி ஸ்கர்ட் என்ற அளவிற்கு வரும் பொழுது நமக்கும் சற்றே தொண்டை வறண்டு விடும் என்றே நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க. //


ஆங்...
நான் இன்னா நினைக்கிறேன்னா இதெல்லாம் ஓவரு ..
நீங்க போட்ர லாங் ஸ்கர்ட்டையே நின்னு பாத்துட்டுபோறப்ப , நீங்க மினி ஸ்கர்ட் போட்டால் இரசிகைகள் பட்டாளம் கூடிரும். :‍-)))

ஆண்களுக்கான மினி ஸ்கர்ட்:
வேட்டி அல்லது கைலியை முழங்காலுக்கு மேலே மடித்துக் கட்டுதல்

Thekkikattan|தெகா said...

வாங்க கிரி,

//ஒரு சிலர் தன் தவறை புரிந்து கொள்ளாமல் சரியென்று தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.//

அவங்களுக்கும் 'ஏதோ' தேவைப்படுறதுனாலேதானே எழுத்து மூலமா தொடர்பு கொள்றாங்க, எனவே கிடைக்க வேண்டியது கிடைக்கும். அது அடைய வேண்டிய நேரத்தில சரியா அடைஞ்சிரும். நம்பிக்கைதானே வாழ்க்கை. அதுனாலே, எல்லாரையும் எழுதச் சொல்லுங்க. :)

Thekkikattan|தெகா said...

நன்றி மீன்.

********

//சாலிசம்பர் said...

பெண்கள் ஆடைக்குறைப்பு செய்து உடையணிவதை ,அது அவர்களின் உரிமை என்ற முறையில் ஆதரிக்கிறோம்.அதே போன்று முழுமையாக உடலை மறைத்து உடையணிவதும் அவர்களின் உரிமை.அதை ஏன் பிற்போக்கு என்று சொல்கிறோம்?//

எனக்காக 'கல்வெட்டு' அண்ணே பதில் சொல்லியிருக்காங்க பாருங்க... :-)

இதில என்ன சிக்கல்னா ஒரு பெரிய அளவில தனிப்பட்ட மனிதருக்கு 'சாய்ஸ்' இல்லைங்க. சுவைச்சுப் பார்க்காமலேயே உவ்வே எனக்கு அந்தச் சாப்பாடு பிடிக்காதுன்னு சொல்ற மாதிரிதான் நடந்துக்கிறோம், பல விசயங்களில் தினப்படி வாழ்க்கையில.

அப்படி சுவைக்காத உணவின் மேலே 'கமெண்ட்' அடிக்கிறதையும் நிப்பாட்டிக்கிட்டா ஏது சண்டை, சச்சரவு - அத விட்டுப்போட்டு இட்லியை விட சிறந்த உணவா வட இந்திய 'நான் (naan)' நானைவிட, அமெரிக்கன் பர்கரூ எ ...அப்படின்னு போயிட்டே இருந்தா... முதல்ல சாய்ஸ் பின்னே பேச்சு.

Thekkikattan|தெகா said...

வால்,

//பதிவின் ஆரம்பத்தில் சில உள்குத்துகள் இருப்பது போல் தெரியுதே!//

அப்படியா!! உள்குத்துன்னா என்னாவே ... :))

***********

நன்றி, மீனு!

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு,

நீங்க சொல்றது எல்லாம் நியாயம்தான். இருந்தாலும் ஒரு பெற்றோரா நமக்கின்னு சில கடமைகள், பொறுப்பு இருப்பதாக இடம்/பொருள்/ஏவா பார்த்து செய்கிறேன் என்ற இடத்தில்தான் இந்த சமய கையேட்டு (ரெடிமேட்) சார்ந்த உடை/உணவு/ஏனைய பழக்க வழக்கங்களை பின்பற்றி "தூசியேற்றுகிறோம் எனப் படுகிறது."

ஏதாவது ஒரு வகையில் பெற்றோர்களின் விருப்பு/வெறுப்பு, நம்பிக்கை/அவநம்பிக்கை என ஏதோ ஒரு வித தாக்கத்தில், குழந்தைகளும் பார்த்து வளரும் சூழலைத்தானே நாமும் வழங்கிறோம், வழங்கவும் நேரிடுகிறது? அதுவே பின்பொரு நாளில், பார்த்து, கேட்டு வளர்ந்ததை வைத்து தூக்கிப் பிடிக்கவும் நேரிடுகிறது.

இருப்பினும், நம்முடைய விருப்பு/வெறுப்புகளை வைத்து திணிக்காமல் வளர்வதற்கு ஒரு வித நல்ல சூழலை உருவாக்கிக் கொடுக்கலாம். கொடுப்பது மிகவும் அவசியம்.

இந்த பதிவு முழுதுக்குமே எப்படி அது போன்ற ......செக்குமாடுபோல ஒரு பழக்கத்தையும் , பிறந்தவுடன் மதம் என்ற ஒரு சுமையையும் ஏற்றிவிட்டு அவர்கள் அதைவிடமுடியாமல் கூச்சப்படும்போது அதை உரிமை என்று சொல்லாதீர்கள். அது அறியாமை.... கண்ணாடியினை அணிந்து, அதன் ஊடாக பார்த்து எனது அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதே அடிநாதம்.

மற்றபடி உடை பற்றிய உங்களது பூகோள பழக்க வழக்கம் எல்லாம் மிகச் சரி :-) .

சாலிசம்பர் said...

//செக்குமாடுபோல ஒரு பழக்கத்தையும் , பிறந்தவுடன் மதம் என்ற ஒரு சுமையையும் ஏற்றிவிட்டு அவர்கள் அதைவிடமுடியாமல் கூச்சப்படும்போது அதை உரிமை என்று சொல்லாதீர்கள். அது அறியாமை.//

கல்வட்டு,
கூச்சப்படுவதற்கு பதிலாக பெருமையாக கருதினால்,அதில் ஆபத்து ஒன்றும் இல்லாதபோது ஆதரிப்பது தானே முறை?.
தான் அய்யங்காராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று வளர்ந்த பெண் ஒருவர் சொல்வதும்,வேதங்கள் சமட்கிருதத மொழியில் இருக்கிறது,அதனால் சமட்கிருதத்தில் தான் கோயிலில் ஓதுவோம் என்று சொல்வதும் ஆபத்தானவை.அத்தகைய ஆபத்து ஒன்றும் பர்தா அணிவதில் இல்லையே.

கல்வெட்டு said...

//
தெகா said...,
இருந்தாலும் ஒரு பெற்றோரா நமக்கின்னு சில கடமைகள், பொறுப்பு இருப்பதாக இடம்/பொருள்/ஏவா பார்த்து செய்கிறேன் என்ற இடத்தில்தான் இந்த சமய கையேட்டு (ரெடிமேட்) சார்ந்த உடை/உணவு/ஏனைய பழக்க வழக்கங்களை பின்பற்றி "தூசியேற்றுகிறோம் எனப் படுகிறது."

ஏதாவது ஒரு வகையில் பெற்றோர்களின் விருப்பு/வெறுப்பு, நம்பிக்கை/அவநம்பிக்கை என ஏதோ ஒரு வித தாக்கத்தில், குழந்தைகளும் பார்த்து வளரும் சூழலைத்தானே நாமும் வழங்கிறோம், வழங்கவும் நேரிடுகிறது? அதுவே பின்பொரு நாளில், பார்த்து, கேட்டு வளர்ந்ததை வைத்து தூக்கிப் பிடிக்கவும் நேரிடுகிறது.//


தெகா,
பெற்றோர்கள் இல்லாமல் அனாதையாக தெருவில் வளரும் குழந்தைகூட அது வாழும் சூழல் சார்ந்த பழக்கவழக்கங்களை தானாக சுவிகரித்துக் கொள்ளும். காலப்போக்கில் அவற்றை அது மாற்றிக்கொண்டு அடுத்த நிலைக்கு போகும் அல்லது அங்கேயே தேங்கிவிடும்.

எனவே, பெற்றோர்களின் விருப்பு/வெறுப்பு, நம்பிக்கை/அவநம்பிக்கை போன்ற தாக்கம் நிச்சயம் குழந்தைகளை பாதிக்கும்.

இங்கே கவனிக்கப்பட வேண்டியது குழந்தைகளின் தனித்தன்மை.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு யுனீக் கிரியேட்சர்.ஒரே குடும்பத்தில் ஒரே பெற்றோரால் வளர்க்கப்படும் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்தபின் வெவ்வேறு பாதையை (உண்வு ,உடை,பழக்கம்,கல்வி) தேர்ந்த்தெத்து வளரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

எனவே, பெற்றோர்கள் " தங்களின் பழக்கம் இது , பின்னாளில் நீ உனதை தேர்ந்தெடுத்துக்கொள் " என்ற விசயத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அது அவர்களின் மனத்தடைகளைக் களையும்.

***

நாம் நல்ல மென்டோராக இருக்க வேண்டும் சர்வதியாரியாக இருக்கக்கூடாது.

‍‍‍‍‍‍=======



உடை என்பது மிகவும் அல்ப மேட்டர். நல்ல புரிதல் இருந்தால் இதைக் கடந்து போகலாம்.

பல முறை நான் சொல்லியுள்ளது..... மறுபடியும் இங்கே...


எனது அனுபவங்களில் சில....

(1)
சேலையில் வக்கிர மூவ்களை கொடுக்கும் நமது திரைப்படங்களைவிட, ஜட்டி-பிராவுடன் (பிகினி) என்னிடம் வந்து "தனியாக நீச்சல் அடிக்கிறேன் , கொஞ்ச நேரம் எனக்காக இங்கேயே இருக்க முடியுமா" என்று என்றுமே பார்த்துப் பேசியிராத ஒரு அறிமுகம் இல்லாத, வெளிநாட்டுப்பெண் நேரிடையாக கேட்டதுண்டு. நேரடியான பேச்சுக்கள் மனத்தடைகளைக் குறைக்கும்.

(Life Gurad இல்லாத நீச்சல் குளங்களில் தனியா ஒருவர் மட்டும் இருக்க அனுமதியில்லை. பாதுகாப்பு காரணக்களுக்காக)


(2) அத்தி பூத்தாற்போல் எனக்கு இந்தியாவில் அப்படி ஒரு அனுபவம் கிடைத்தது. நல்ல மனங்கள் உண்டு என்பதைச் சொல்லவே இது...

டில்லியில் இருந்து ஹரித்துவார் ..இதர இடங்களுக்கு ஒரு நாள் பயணம். பயணம் சென்றபோது , பயணத்தின் போது இளம் தம்பதியினர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் 1 வயது குழந்தையுடன் வந்திருந்தார்கள்.
பஸ்பயண நேரமே பழக்கம்.

ஹரித்துவாரில் குளித்து முடிதபின், அந்தப்பெண் உடைமாற்ற வேண்டும். கங்கைக் கரையிலேயே உடைமாற்றல் நடக்கும். ஆண்கள் நாங்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டோம். நான் மட்டும் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டேன். நாங்கள் வந்தபின் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணும் அவள் கணவனும் குளிக்கச் சென்றனர். மனைவியின் பாதுகாப்புக்காக அந்தக் கணவன் இரண்டாவது முறைக் குளியல்.

இருவரும் வந்தபின் அந்த கணவன் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டார். அந்தப் பெண் இப்போது உடை மாற்றவேண்டும். அவர்கள் இருவரும் என்னையும் அழைத்து சேலையை சுற்றிப்பிடிக்கச் சொன்னார்கள்.

நானும் , அவளது கணவரும் ஒரு சேலையை வட்டமாகச் சுற்றிப்பிடித்து வெளிப்புறமாக நோக்கியிருந்தோம். குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு நாங்கள் பிடித்துக்கொண்ட 'சேலை வட்ட மறைப்புக்குள்' வேறு புதிய உடை மாற்றினாள் அந்தப் பெண்.

**

லயலோ கல்லூரி லீனா மணிமேகலை உடை சர்ச்சை!
http://osaichella.blogspot.com/2007/12/blog-post_4567.html

Thekkikattan|தெகா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//அப்படி வெளியே வந்து ப்ளாகெல்லாம் எழுதினா அடிவிழும்ன்னு கத்துக்கிடனும்கறதுக்காக ப்ளாக் எழுத சொல்றீங்களா எல்லாரையும்.. :))//

எப்படிங்க எதுக்காக மண்டை கணத்தவங்க எல்லாம் வெளியே வந்து தனது கருத்துக்களை பகிர்த்துக்கணுமின்னு சொல்ல வந்தேன்னு மிகச் சரியா கண்டுபிடிச்சு வெளியே கொண்டு வந்தீங்க :)) .

உண்மைதானே! அப்போதுதான் தான் கருதிகிட்டு இருக்கிற கருத்து தன் எல்லையைத் தாண்டி, பல காரணிகளை (நாடு, மதம், கலாச்சாரம், சமூகம் - தனி மனித சிந்தனை அப்படின்னு) சந்திக்கும் பொழுது எது போன்ற எதிர் வினைகளை சந்திக்கிறது/சந்திக்கலைன்னு cross check பண்ணிக்கிட்டு மேலே வளர முடியும். அதுக்குத்தான் எழுத வரணும்.

கல்வெட்டு said...

//சாலிசம்பர்...
கூச்சப்படுவதற்கு பதிலாக பெருமையாக கருதினால்,அதில் ஆபத்து ஒன்றும் இல்லாதபோது ஆதரிப்பது தானே முறை?.
தான் அய்யங்காராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று வளர்ந்த பெண் ஒருவர் சொல்வதும்,வேதங்கள் சமட்கிருதத மொழியில் இருக்கிறது,அதனால் சமட்கிருதத்தில் தான் கோயிலில் ஓதுவோம் என்று சொல்வதும் ஆபத்தானவை.அத்தகைய ஆபத்து ஒன்றும் பர்தா அணிவதில் இல்லையே.//



சாலிசம்பர்,

1.தான் அணியும் ஒரு உடையை தான் பெருமையாக நினைப்பதும் , அதே கருத்தைக் கொண்டவர்கள் அதை ஆதரிப்பதும் அவர்களின் உரிமை. ஆனால் பலர் வசிக்கும் ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் "இது பத்தினி வாழும் வீடு" என்று எழுதிவைப்பதுபோல அடுத்தவர்களை கேவலப்படுத்துவதை சமுதாயக் குற்றமாக நான் நினைக்கிறேன்.


2. தான் அய்யங்காராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்வதும் நான் பர்தா அணிவதால் பெருமைப்படுகிறேன் என்று சொல்வதும் எனது பார்வையில் ஒன்றே. (அணியும் உடையிலும் , பிறப்பிலும் என்ன பெருமை உள்ளது??)

3.வேதங்கள் சமட்கிருதத மொழியில் இருக்கிறது,அதனால் சமட்கிருதத்தில் தான் கோயிலில் ஓதுவோம் என்று சொல்வதும், குரானை அரபியில்தான் ஓதுவேன் என்று சொல்வதும் எனது பார்வையில் ஒன்றே.

4.மதக் காரணக்களுக்காக தன்னை பண்டமாகக் கருதிக் கொள்ளும் சுதந்திரம் யாருக்கும் உள்ளது. ஆனால் நான் கலந்து கொள்ளும் ஒரு விழாவில் ஒரு பெண் பர்தாவுடன் முகத்தை மூடிக்கொண்டு கலந்துகொண்டால், "பண்டத்தை தின்னுவதற்காகவே பிறப்பெடுத்த நாயாக என்னையும் நினைக்கிறார் இந்தப்பெண் " என்று நான் அவமானமாய்த்தான் உணர்வேன்.

5. பர்தா அணியும் அவர்கள் உரிமையை நான் மதித்தாலும், "அது எதற்காக அணியப்படுகிறது என்ற உண்மை தெரிகின்ற காரணத்தால்" ஆணாகிய நான் அவமானமாய்த்தான் உணர்வேன்.

6.உடை என்பது உடலின் மீதான அரசியல். இருபாலருக்கும் அதில் பங்கு உண்டு. சமுதாயத்திற்கும் அதில் பங்கு உண்டு.

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு,

//ஆண்களுக்கான மினி ஸ்கர்ட்:
வேட்டி அல்லது கைலியை முழங்காலுக்கு மேலே மடித்துக் கட்டுதல்//

இதுவும் செஞ்சு பார்த்தாச்சு, பெர்முடா கணக்கா அள்ளி டவுசரு மாதிரி சொருகிக்கிறது. இருந்தாலும் ரொம்பக் காத்தும், குளிருமைய்யா எப்படி இங்க :D - so, கோடை காலத்திற்கு மட்டும்தான் லுங்கி தலைகாட்டும்.

//நாம் நல்ல மென்டோராக இருக்க வேண்டும் சர்வதியாரியாக இருக்கக்கூடாது//

மிக்க உண்மை. சர்வதிகாரியாக இருந்து போனால் (நல்ல நண்பர்களின் நிலையிலிருந்து நழுவி) அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் ஆட்டம் கண்டு விடுகிறது, என்பதற்கு நம்மூரின் பல பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை உட்நோக்கி பார்த்தாலே தெரியுமே. அங்கே இரு சாரருக்குமே இழப்பு ஏராளம்.

//சேலையில் வக்கிர மூவ்களை கொடுக்கும் நமது திரைப்படங்களைவிட,//

:))) ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி இதப் பத்தி ஒரு முறை நியுயார்க் யுனிவெர்சிடியில சில பெண்களுடனான டிஸ்கஷனில் பேச்சு வந்தது அப்போ, நீங்க சொன்ன இந்த விசயத்தையே அப்படியே சுட்டிக்காட்டி பசக்கின்னு என் வாயை அடைச்சிட்டாங்க.
நம்ம சினிமாப் பாடல்களில்தான் ஆடலுடன் எத்தனை விதமான suggestive moves ;), எந்த விதத்தில் ராப் பாடல்களில் வரும் ட்டூ பீசில் ஆடும் ஆட்டத்திற்கு நம்மது குறைச்சல்? சொல்லப் போனால் நம்மது கொஞ்சம் வக்கிரம் தூக்கல்...

மற்றபடி நீங்கள் சொன்ன ஹரித்துவார் நிகழ்ச்சியெல்லாம்... தனிப்பட்ட மனித மனத்தின் வளர்ச்சியையும், பக்குவத்தையும் அது காட்டுகிறது. அதுக்கு வளரணுமே :D ....

******

இன்னொன்னு தெரியுமா, Lonely Planetங்கிற tourist guide புத்தகத்தில நம்மூர் மாதிரியான நாடுகளுக்குப் பயணம் செய்யும் பெண்களுக்கான ஒரு எச்சரிக்கையாக உடையைப் பற்றி சொல்லும் போது, நல்லா உடலை மறைக்கிற மாதிரி உடுத்திட்டு இருக்கச் சொல்லியிருப்பாங்க. ஏன்னா, நம்மாளுங்க கொஞ்சம் ஓவரா உணர்ச்சி வசப்பட்டுருவாங்கங்கிறதுக்காக. அடிக்கடி செய்தித் தாள்களிலும் படிச்சிருப்பீங்க. இதப் பத்தி என்ன நினைக்கிறீங்க. அது நிறைய விசயங்களை தாங்கி நிற்கிறதுன்னு நான் நினைக்கிறேன்.

சாலிசம்பர் said...

//பர்தா அணியும் அவர்கள் உரிமையை நான் மதித்தாலும், "அது எதற்காக அணியப்படுகிறது என்ற உண்மை தெரிகின்ற காரணத்தால்" ஆணாகிய நான் அவமானமாய்த்தான் உணர்வேன்.//

கல்வெட்டு,

அது எதற்காக அணியப்படுகிறது என்ற உண்மை தெரியாமலேயே தான் பெரும்பாலான சிறுமிகளும்,வயதான பெண்களும் பர்தாவை உடுத்துகிறார்கள்.நீங்கள் சொன்னபடி அது ஒரு பாலைவன தேசத்து உடை,தங்கள் கலாச்சாரமாக கருதி அதை இங்கே உடுத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.அப்படியிருக்கும்போது அவமானப்பட என்ன இருக்கிறது.

(சுமஜ்லா அவர்களின் பண்டம்,நற்குடி போன்ற சொற்களுக்குப்பின்னால் படுகேவலமான பின்னூட்டம் ஒன்று இருக்கிறது)

கல்வெட்டு said...

//தெகா ...
ஏன்னா, நம்மாளுங்க கொஞ்சம் ஓவரா உணர்ச்சி வசப்பட்டுருவாங்கங்கிறதுக்காக. அடிக்கடி செய்தித் தாள்களிலும் படிச்சிருப்பீங்க. இதப் பத்தி என்ன நினைக்கிறீங்க.//

தெகா,
இது நான் அறிந்தவரை உண்மை.
பாலியல் வறட்சிதான் காரணம்.

உதாரணம் பதிவுகளில் இருந்து:

1. பலர் இன்னும் தங்கள் கதைகளில் பாலியல் விவரணைகளையும், ஒரு பெண்ணுடன் நட்பாய் இருத்தலேயே சிலாகித்து எழுதுவதும் அதை ஆகச்சிறந்த இலக்கியம் என்பதும்.

2.மார்பு/இடை தெரியும் பெண்களின் போட்டோவை போட்டு அதைக் கவர்ச்சி என்று சொல்லுதல்.

3.கணுக்கால் தெரிந்தாலே உணர்ச்சிவசப்படுதல்

என்று ...எல்லாமே பாலியல் வறட்சியின் பக்கவிளைவுகள்.
ஜாக்கெட்டை விட்டு பிரா விலகி வெளியில் தெரிந்தால் பிரளயமே வந்துவிடும். காரணம் பாலியல் வறட்சி !

‍‍‍‍‍‍====
Into the Wild என்று ஒரு படம்.
அந்த படத்தில் ஒரு காட்சியில் கதையின் நாயகன் ஒரு தம்பதியைச் சந்திப்பான். அந்தப் பெண் அப்படியே மார்பு தெரிய அவனிடம் சகஜமாக உரையாடுவாள் (படத்தைப் பார்த்தால் அவளின் உடல் குறித்த எந்த அரசியலும் இன்றி இயல்பாக இருக்கும்) பிச்சாத்து breast ...எனது கை கால் போலவே அது ஒரு அங்கம் அதில் என்ன இருகிறது என்ற உடல் மொழியில் இயல்பாக இருப்பாள்.

இந்தப்படம் தமிழ்நாட்டில் வெளியானல் இந்த காட்சி மட்டும் கருப்பு பட்டையடித்து போஸ்டராக ஒட்டப்பட்டு படத்தின் ஜீவனே காமம் என்பது போல விளம்பரப்படுத்தப்படும்.
http://www.fanpop.com/spots/into-the-wild/images/6638143/title/wild

கல்வெட்டு said...

//சாலிசம்பர்...
அது எதற்காக அணியப்படுகிறது என்ற உண்மை தெரியாமலேயே தான் பெரும்பாலான சிறுமிகளும்,வயதான பெண்களும் பர்தாவை உடுத்துகிறார்கள்.நீங்கள் சொன்னபடி அது ஒரு பாலைவன தேசத்து உடை,தங்கள் கலாச்சாரமாக கருதி அதை இங்கே உடுத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.அப்படியிருக்கும்போது அவமானப்பட என்ன இருக்கிறது.//


அந்த உண்மை , பண்டம் மூடும் விசயமும், சக மனிதரிடம் இருந்து உடம்பைக்காக்கும் நோக்கிலெயே இது இங்கே பயன்படுகிறது என்ற உண்மை தெரிந்த காரணத்தினால்.....
எனக்கு அவமானமாக இருக்கும். இது எனது உணர்வுகள்.

உடையின் உண்மை அரசியல் தெரியாவிடில் இயல்பாக இருக்கலாம் என்பது இயல்பு. Ignorance is bliss

****
ஒரு விழா அழைப்பின் பேரில் நீங்கள் ஒரு நண்பன் வீட்டிற்குச் செல்கிறீர்கள். அவரது ம‌னைவி எல்லாக் கேள்விக்கும் அடுப்படியில் இருந்தே பதில் கொடுக்கிறார். கடைசிவரை நண்பர் அவரது மனைவியை உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை.
எப்படி உண‌ர்வீர்கள்?

(எனக்கு அப்படி நடந்தால் அவமானமாய் உணர்வேன். வீட்டுப் பெண்களை உங்களிடம் இருந்து மறைக்க நினைத்தால் உங்களை அழைக்கவே கூடாது. அழைத்து அவமானப்படுத்துவது கேவலம்)

***

பர்தா பிரச்சனை என்பதைவிட‌... பொதுவாக இதை அணுகலாம்.

முகத்தை மறைத்து பேசும் முறை அல்லது , தன்னை பாதுகாக்க என்று எண்ணி , முகத்தை மறைத்து , என்னிடம் பேசினால் நான் அதை எனது அவமானமாக கருதுவேன் அவ்வளவே.

** : பழகும் முன்னரே மதம் அல்லது அவர்களின் வாழும் சூழல் கற்பித்த முன் முடிவுகளுடன் ஒரு பெண் என்மீது கொண்ட நம்பிக்கியின்மை அது. :-((((((

** :அடுத்த அடுத்த சந்திப்புகளில்கூட இது மாறாது என்றும் தெரியவரும்போது , உடல் அரசியல் மனிதனை எவ்வளவு கேவலப்படுத்துகிறது என்று தெரியும் போது குறுகிப்போவேன் நான்.

Thekkikattan|தெகா said...

சாலி,

//கூச்சப்படுவதற்கு பதிலாக பெருமையாக கருதினால்,அதில் ஆபத்து ஒன்றும் இல்லாதபோது ஆதரிப்பது தானே முறை?.
தான் அய்யங்காராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று வளர்ந்த பெண் ஒருவர் சொல்வதும்,வேதங்கள் சமட்கிருதத மொழியில் இருக்கிறது,அதனால் சமட்கிருதத்தில் தான் கோயிலில் ஓதுவோம் என்று சொல்வதும் ஆபத்தானவை.//

கம்பளப் பேச்சு எல்லா பக்கமும்தான் நிகழ்கிறது, சாலிசம்பர். சேலை/சுரிதார் உடுத்தாமல் மற்ற உடைகளை உடுத்துபவர்களை பார்த்து நம் சமூகம் வேறு மாதிரி பேசுவதில்லையா? ஏன், தினமலரிலும், தினகரனிலும், தினத்தந்தியிலும் அமெரிக்கச் செய்தி என்றாலே அது போடுவதற்கு ட்டூ பீஸில் ஒரு வெள்ளைத் தோல் தேவைப்படுகிறது? அதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? எல்லாம் ignorance is blissஆக இருக்கிற வரைக்கும் ஆழகாத்தான் இருக்கும், அதுவே அரசியலா ஆக்கிட்டே வந்தா இரும்புக்கரமாகிடும் ...

சாலிசம்பர் said...

//உடை என்பது மிகவும் அல்ப மேட்டர். நல்ல புரிதல் இருந்தால் இதைக் கடந்து போகலாம். //
கல்வெட்டு,
இது தான் எனது கருத்தும்.இந்த அல்பமேட்டரிலும் முற்போக்கு,நற்போக்கு,பிற்போக்கு வாதங்கள் தேவையா என்பதே எனது வாதம்.

தெகா,
பதிவு தெளிந்த நீரோடையாக இருக்கிறது.ஆனால் உங்களுடைய‌ பின்னூட்டங்கள் கமல் பாணியில் குழப்புகின்றன.:-))
//அதுவே அரசியலா ஆக்கிட்டே வந்தா இரும்புக்கரமாகிடும் ...//
நிச்சயமாக.

Thekkikattan|தெகா said...

//பதிவு தெளிந்த நீரோடையாக இருக்கிறது.ஆனால் உங்களுடைய‌ பின்னூட்டங்கள் கமல் பாணியில் குழப்புகின்றன.:-))//

சாலி, அது ஒண்ணுமில்ல எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம் என்று சுத்தி வளைச்சு சொல்லவாரேன்னு நினைக்கிறேன் :) .

இப்போ புரிஞ்சிருக்குமே!

கல்வெட்டு said...

//சாலிசம்பர்..
இந்த அல்பமேட்டரிலும் முற்போக்கு,நற்போக்கு,பிற்போக்கு வாதங்கள் தேவையா என்பதே எனது வாதம்.//


சாலிசம்பர்,
பிரா கண்டுபிடிக்கப்பட்டது 1913 ல் by a New York socialite named Mary Phelps Jacob.

இப்போது அது எல்லா மதப் பெண்களாலும் பயனப்டுத்தப்படுகிறது. உடல் சார்ந்த மிக அவசியமான தேவை இது.

1913 முன்னரே எழுதப்பட்ட மதப்புத்தகங்கள் இதைச் அணியச் சொல்லவில்லை. என்ன செய்யலாம்?

இப்படி எல்லாம் ஒன்று கண்டுபிடிக்கப்படும் என்று அந்தக்கால மதத்தூதர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை.


1.மதப்புத்தகம் சொல்லாததை காலத்திற்கு ஏற்ப ஏற்கும்போது,

2.மதப்புத்தகம் சொல்லியதை காலம்/ வாழும் சூழல் / பருவ நிலை/ கருதி மாற்றிக்கொள்ளலாம்.

3.மதப்புத்தகம் சொல்லிவிட்டது என்பதற்காக விடாமல் அணிவது அவர்கள் தனிப்பட்ட உரிமை.

*****
ஒரு உடை என்பது நிச்சயம் அல்பமேட்டர். ஆனால் அதன் தேவையும் மதம் சமூகம் விதிக்கும் கட்டளைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

ஒவ்வொரு உடையின் பின்னாளும் உடல் சார்ந்த / சமூகம் சர்ந்த அரசியல் மற்றும் வரலாறு உள்ளது. அது தெரியவரும்போது மனதுக்குள் ஒப்பீடுகள் நடக்கின்றன.

வருத்தம் / அவமானம் இவற்றுடன் நான் கடந்து போகிறேன். இது எனது புரிதல் மட்டுமே.

Yes... கடந்து போகலாம். :-)))

Thekkikattan|தெகா said...

Thekkikattan|தெகா said...
கல்வெட்டு, உங்களின் பின்னூட்டங்கள் இந்தப் பதிவின் மறைபொருள் பேசி ஒரு முழுமையை எட்ட உதவியிருக்கிறது. அத்தனைக் கருத்துக்களுக்கும் சேர்த்து மொத்தமா ஒரு நன்றி இங்கே சொல்லிக்கிறேன்.

எல்லா (மதக்) கிணறுகளும், உண்மையான நம்மூர் நிலக் கிணறுகளில் தண்ணீர் வறண்டு வெறும் வெற்றுக் கிணறுகளா ஆன மாதிரி, மக்கள் எல்லாம் மதப் புத்தங்களையும் வாசித்து, வாசித்து வறண்டு போயி ஒரு நாள் எல்லா கிணறுகளையும் இணைச்சு மனிதம் வாழ, தழைக்க யோசிக்க பரிணாமம் மெல்ல அவர்களின் மண்டைக்குள் இருக்கும் அந்த மெமெரி இடத்தை சுரண்டி விட்டு வேற எதையாவது வைச்சு திணிக்கட்டுங்கிற ஆசையோட இந்தப் பதிவ முடிச்சிக்குவோம். :-)

//வருத்தம் / அவமானம் இவற்றுடன் நான் கடந்து போகிறேன். இது எனது புரிதல் மட்டுமே.//

அப்படியெல்லாம் ரொம்ப வருத்தப் படாதீங்க, அதுக்குள்ளர இருந்துதானே மிச்ச, சொச்ச காலத்தை கடத்தணும். இல்லன்னா, இனொருக்கா பொறக்கணும் ஆமா சொல்லிட்டேன்; காலம் அப்படி நினைக்காம இருக்கிற ஒரு கட்டத்தில திரும்ப உங்களை பிறக்க வைச்சிடும் ... :)))

பி.கு: உங்களுக்குத் தெரிந்த நண்பர்களையும் எழுதச் சொல்லுங்க! ;)

மணிகண்டன் said...

*****
இப்படி எல்லாம் ஒன்று கண்டுபிடிக்கப்படும் என்று அந்தக்கால மதத்தூதர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை.

1.மதப்புத்தகம் சொல்லாததை காலத்திற்கு ஏற்ப ஏற்கும்போது,

2.மதப்புத்தகம் சொல்லியதை காலம்/ வாழும் சூழல் / பருவ நிலை/ கருதி மாற்றிக்கொள்ளலாம்.

3.மதப்புத்தகம் சொல்லிவிட்டது என்பதற்காக விடாமல் அணிவது அவர்கள் தனிப்பட்ட உரிமை.
******

இது மாதிரி பேசறது எல்லாம் தப்பு தப்பு தப்பு. கன்னத்துல போட்டுக்கோங்க :)-

மதத்தையும், சமூக சூழலையும் மதிப்பவர்கள் இதைவிட எளிதான ஒருவழியாய் பின்பற்றி வருகின்றனர். காலத்திற்கு ஏற்றவாறு மாறிவிட்டு இதைத் தான் எங்கள் மதமும் அப்பொழுதே கூறி இருக்கிறது என்று ஏதாவது ஒரு prose எடுத்து காலத்திற்கு ஏற்ற intrepretation கொடுக்கிறார்கள் :)- அவர்களை நிம்மதியாக இருக்கவிடாமல் நமது முற்போக்குவாதிகளும் விடாமல் அவர்களிடம் விவாதம் செய்து துன்பப்படுகின்றனர் / துன்புறுத்துகின்றனர் :)-

கல்வெட்டு said...

தெகா , சாலிசம்பர், மணிகண்டன் மற்றும் உரையாடலில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி!

களம் அமைத்துக்கொடுத்த தெகா நன்றி (ஜோடா ப்ளீஸ்)

****

கொசுறு:

::1::

அமிலப் பெண்கள் (இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )
http://rishansharif.blogspot.com/2009/01/blog-post_08.html


இந்தப்படத்தில் உள்ள பெண்கள் அனைவரும் இஸ்லாமியர் என்று தெரிகிறது.. இவர்களை அல்லா ஏன் காக்காமல் விட்டான் என்பதை அவர்களே அவர்களின் அல்லாவிடம் கேட்டுக் கொள்ளட்டும்.

அறியப்படும் நீதி

A: நல்லவன் ஏதோ ஒரு மதத்தில் சேர்ந்து வாழலாம்/பொழுதைப் போக்கலாம்.

B: மதத்தில் சேர்ந்து, மதப்புத்தம படித்து, மதச்சட்டை அணிந்து, மதக் கடவுள் தொழுது, மதக் கடவுளுக்கும் தூதருக்கும் விசுவாசமாய் இருந்தால் மட்டும் ....அவன் நல்லனாகிவிடமுடியாது.

C: சாத்தானை இறைவனாலும் விரட்டமுடியாது.


D: ஆடையோ அல்லது எல்லாம் வல்ல இறைவனோ பெண்களை எக்காலாத்திலும் காக்காது.

E: சமூகமும் சரியான புரிதலுமே பெண்களைக் காக்கும்.

:-(((((

----------

::2::Tony Blair said wearing full face veils was a "mark of separation"
http://news.bbc.co.uk/1/hi/england/bradford/6066726.stm

Thekkikattan|தெகா said...

மணி, உங்களுக்கும் சேர்த்தே 'ஜோடா' குடிச்சி நன்றி சொல்லிட்டார் நம்ம கல்வெட்டு.

ஸ்டீவன் ஹாவ்கிங்ஸ் எழுதின the universe in a nutshell மாதிரி, இந்த மதப் புத்தகங்ளிலும் எல்லாத்திற்கும் விடைகள் விரிஞ்சு சொல்லிட்டே போகும், எல்லா மதப் புத்தகங்களுக்கும் இன்னொரு பேரு இருக்கு அது - the eternal encyclopedia for samalification ;)

பதி said...

அருமையன விவாதங்களுடன் கூடிய பதிவு.

நண்பர்களிடமும் பகிர்ந்துள்ளேன் !!!! களம் அமைத்த தெகா வுக்கு நன்றி...

தெகா,

நீங்கள் கூறியுள்ளது போல பல பொதுப் புத்தியில் விளைந்த கிணற்றுத் தவளை கருத்துக்களை கொண்டிருந்தாலும், யாரிடத்திலும் வெளியிட்டு வாங்கிக் கட்டியதில்லை. தமிழகத்தை விட்டு வெளியே வந்த சில மாதங்களிலேயே அது மாறி விட்டது தனிக் கதை. உடை பற்றிய எண்ணங்கள், வந்த உடனேயே மாறக் காரணம் நம்ம long skirt (லுங்கி) தான் !!!

பிரான்ஸ் வந்த சேர்ந்த ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு பொது சமையலறையுடன் கூடிய விடுதியொன்றில் தங்க நேர்ந்ததில், லுங்கி அணியும் பொழுது காட்சிப் பொருள் ஆனதிலேயே உணர்ந்தேன் உடை பற்றிய பார்வையும் இருக்கும் இடத்தைப் பொருத்து மாறும் என !!!

Related Posts with Thumbnails