Friday, April 15, 2011

பரிணாம விதி நம் கையில்: Bio-engineering

தெக்கியில் வெளியான துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகளுக்கு நம்ம அனலிஸ்ட் ஒரு காணொளி இணைப்பை கொடுத்து ‘பயங்கரம்’ அப்படின்னு சொல்லியிருந்தார். சரின்னு நானும் உடனே பார்க்க ஆரம்பித்தேன். சில விசயங்கள் நம்ப முடியாத அளவிற்கு முன்னேறி எதனையும் எப்படியும் செய்து கொள்ளலாம் அது நம் கண்களுக்கும், வயிற்றிற்கும் மேலோட்டமான கொண்டாட்டத்தை தருவித்து தருகிறது என்றால் என்ற கொள்கையுடன் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிப்பதாக பட்டது எனக்கு.

என்னுடைய பழைய பதிவொன்றில் இப்படியாக இந்த உயிரிய-தொழில் நுட்பத்தின் கட்டுபாடற்ற மனித கற்பனை எங்கே கொண்டு போயி நிறுத்தலாம் நம்மை என்று விளையாட்டாக கூறி வைத்தேன். ஆனால், அதனை இந்த காணொளி ஆமாம் ரொம்ப பக்கத்திலே வந்திட்டோம்னு சொல்ல வருது.

...Thekkikattan said...

கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))

அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.

இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.

ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக...


Thursday, April 07, 2011

துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகள்:GM Pollution!

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நம்மாழ்வாரின் ஒரு காணொளி பார்த்ததிலிருந்து அவரிடத்தின் மீது எனக்கு அளவற்ற ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறது. அதற்கு முன்னால் நவதான்ய என்றமைப்பின் நிர்வாகியும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக முழங்கி வரும் டாக்டர். வந்தனா சிவா மீதும் இருந்த அதே கவனம் இப்பொழுது இவர் மீதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலாக அவரை இந்த முறை ஊருக்கு வரும் பொழுது எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலை வளர்த்து விட்டிருக்கிறது.

இந்த நிலையில் பஸ்ஸில் ஒரு இழை ஓடிக் கொண்டிருந்தது. அங்கு பார்வையாளனாக மட்டுமே அந்த இழையை பின் தொடர்ந்து வந்தேன். அதில் நமது தஞ்சாவூரான் என்ற விவசாயி இப்படியாக தனது ஆதங்கத்தை இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்துவதின் பொருட்டு பேசிக் கொண்டே செல்லும் பொழுது இப்படியாக ஒரு விசயத்தை முன் வைத்தார்...

...தட்டான், ஈசல், மண்புழு, பிள்ளைப்பூச்சி, பாப்பாத்தி (செவப்பா கரும்புள்ளியோட இருக்கும்), குசுவினிபூச்சி, சில வகை எறும்புகள், தண்ணிபாம்பு, சாரை பாம்பு, பச்சை கொம்பேறிமூக்கன், வண்ணத்துப்பூச்சி, சிட்டுக்குருவி, அணில், ஓணான், அரணை, உடும்பு, தேரை, சாம்பிரானி, பால்நண்டு, நட்டுவாக்காளி, கூழைப்பாம்பு, பச்சைக்கிளி, மரங்கொத்தி, கொக்கு, நாரை, மடையான், மணிப்புறா, காடை, கவுதாரி, குயில், நரி, காட்டுப்பூனை - இது எல்லாமே வயக்காடு, கொல்லைக்காட்டுலேருந்து மறைஞ்சுபோச்சுண்ணே ;( ...

அதனை படித்த பின்பும் என்னால் ஒரு பார்வையாளனாக இருக்க முடியவில்லை. எனது புரிதலாக இயற்கையமைப்பில் எப்படி இந்த மரபணு மாற்ற தொழில் நுட்பம் பல பில்லியன் ஆண்டுகளாக இயற்கை எடுத்து செயல் படுத்தி சிறுகச் சிறுக கட்டியெழுப்பி வரும் உயிரின பன்முகத் தன்மையை, சூழலமைவை (ecosystem) ஒரு சில ஆண்டுகளிலியே துடைத்தெரிய தக்கது என்பதாக எனது கருத்தினை வைத்தேன். அங்கு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே தனிப்பதிவாக கொண்டு வருவதின் அவசியமும் உணர்ந்தேன்.

ஏற்கெனவே 2006, 07லிலுமாக இரண்டு பதிவுகளில் பல விசயங்கள் பின்னூட்டங்களின் மூலமாக அலசப் பட்டிருக்கிறது. இந்த பதிவில் பேசப்படாத விசயங்கள் அங்கே காணப்படலாம்.

அ) பரிணாமச் சீர்கேடு ஓர் அறிமுகம்

ஆ) இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?


இப்பொழுது கொஞ்சம் விரிவாக எப்படி இந்த சர்வதேச பண முதலைகள் தன்னிறைவுடன் ஓடிக் கொண்டிருக்கும் தனியொரு விவசாயின் உயிர்வாதார பிழைப்பிலும், நேரடியாக கை வைத்து தங்களது பணப் பேராசையை தீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள் என்பதை லட்சக்கணக்கில் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் இந்த கால கட்டத்தில் பேசுவது உகந்ததாக இருக்கும்.

இயற்கையின் அமைவில் உணவு சுழற்சி என்பது தன்னியல்போடு ஓடிச் சேர்வது. அது காலங் காலமாக இயற்கை தேர்ந்தெடுப்பின் பொருட்டாக கிடைக்கும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளை கொண்டு மரபணு பண்புகளை கூட்டி குறைத்துக் கொண்டு அந்த சார்ந்து வாழும் ஊரின் மண்ணியல்போடு தொடர்பு கொண்டதாக பரிணமித்து வளர்கிறது. பெரிய படத்தில் சற்றே விரித்து பார்த்தால் அந்த மண்ணில் வாழும் ஆயிரக் கணக்கான நுண்ணுயிர்களையும் அந்த சுழற்சியில் பங்கேற்க வைத்து அவைகளையும் தழைத்து, செழிக்க வைத்து ஏனைய சார்பு உயிரினங்களையும் உய்வித்து வளர்ந்து வரும் சூழலியல் 'வானம்' அந்த நிலமும் அதனில் விளையும் பயிரும், உணவுப் பொருட்களும்.

எப்படி ஒரு குழந்தை உருவாவதில் ஒரு பெண்ணின் சார்பில் கரு முட்டையும், ஆணின் பங்காக ஒரு விந்தணுவும் மட்டுமே இயற்கையமைவில் போதுமானதாக இருக்கிறதோ, அது போலவே தாவர உணவு பொருட்களை சுய சுழற்சி செய்து கொள்ள நம்மிடம் இயற்கை எதிர்பார்க்கும் ஒரே விசயம் அதன் இயல்பில் கை வைக்காமல் விட்டு விடுவதுதான். ஏனெனில் ஒரு விதையின் வழியாக நமக்குத் தேவையான எதிர்கால உணவு உற்பத்திக்கான கருவையும் உள்ளடக்கியே விளைச்சலில் கொடுத்து நிற்கிறது. மாறாக மரபணு மாற்றமுற்ற விதையில் பூச்சிக் கொல்லியை முன்னமே வைத்து தைத்து கொடுத்து சமச்சீரை உடைப்பது மாதிரி இல்லாமல்.

அந்த இயற்கையின் அமைப்பை உடைத்து, சார்பு நிலையையும், அடிமை தனத்தையும் வளர்க்கும் மரபணு மாற்றமுற்ற மலடி விதைகளை விளைவித்து உண்டது போக மீண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆய்வகத்தில் உருவாக்கித் தரும் விதைகளுக்கு கையேந்தி நிற்பதில் எத்தனை சுதந்திரம் ஒரு விவசாயிக்கு இருந்து விட முடியும். இதுவும் இன்றைய கால கட்டத்தில் பெட்ரோலிய விலை நிர்ணயம் பண்ணக் கூடிய ஒரு சார்பு பொருளாதார நிலைக்கு நாளை நம்மை இந்த உணவு உற்பத்தி திறன் சார்ந்து எடுத்துச் சென்று விடாதா?

பணத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுத்தப் படும் மலடி ரக விதைகளை ஊக்குவிக்கும் மரபணு தொழில் நுட்பம், ஒரு நாட்டின் ஒட்டு மொத்த விவசாயிகளின் உரிமையை மட்டும் பரித்து எடுத்துக் கொள்ள முயலவில்லை, ஒரு தேசத்தின் உணவு தன்னிறைவையும், அதன் உணவுசார் பாரம்பர்யத்தையும், வாழையடி வாழை விவசாய அறிவையும் பிடுங்கிக் கொள்ள முயற்சிக்கிறது என்பதனை ஏன் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை?

இது வரையிலும் நாம் இந்த தொழில் நுட்பத்தின் வழியாக இழக்கும் அரசியல்/சமூக/பொருளாதார சுதந்திரத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்! இதே செய்கை எப்படி பெரியளவில் சுற்றுப் புறச் சூழலையே சிதைத்து நாம் பார்த்து வளர்ந்த நமது கிராம பூமியையே கோரமாக்கிக் காட்டும் என்பதற்கு மேலே தஞ்சாவூரானின் பின்னூட்டமே சாட்சி. ஓர் ஊரில் வாழும் தாவர விலங்குகளுக்கும் அங்கு விளையும் உணவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்காவது ஒரு மாற்றம் அதனில் ஏற்படுமாயின் மொத்த வாழ்வுச் சங்கிலியுமே அறுபட்டு போகிறது.

ஐரோப்பாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விளை நிலத்தின் பக்கமாக வந்து போகும் வண்ணத்து பூச்சிகளின் எண்ணிக்கை 40% சதவீதம் குறைந்து போனதாகவும், ஸ்கைலார்க் எனும் பறவையின் வரத்து போக்கும் சுத்தமாகவே நின்று போனதாகவும் பக்கத்து பக்கத்து வயல்காடுகளில் மரபணு மாற்றமுறச் செய்த விளைபயிர்களையும், இயற்கை முறையில் சாகுபடியாகும் வயல்களுக்கிடையில் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. இதனில் கீழே சிந்திய இயற்கை பயிர்களினான விதைகள் மீண்டும் முளைக்கும் சாத்தியமிருப்பதால் அதனையொட்டிய ஜீவராசிகளின் வரத்து போக்கிற்கான காரணமாக தெரிய வந்திருக்கிறது.

இந்த மரபணு மாற்று பயிர்களுக்கென தூவப்படும் உரங்கள் பயிர்களுக்கான போஷாக்கை தருவதற்கெனவே என்ற வகையில் பாவித்தாலும் மண்ணை நாட்போக மலட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்கிறது. மண்ணும் சுவாசிக்கிறது என்பதனை இந்த இடத்தில் மறந்து போகிறோம்! பூச்சிக் கொல்லிகள் பயிர்களை தாக்கும் தேவையற்ற பூச்சிகளை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளவே என்ற போதிலும் இயற்கையிலேயே அங்கு வாழும் மற்ற ஜீவராசிகள் அதனதன் வேலைகளை செய்வதிலிருந்து முற்றிலுமாக விளக்கி விடுவதால் நன்மை தரும் பூச்சி, பட்டுகள் கூட காலப்போக்கில் சுத்தமாக துடைத்தெரியப் படுகிறது. அல்லது அவைகளிலும் ஏதோ ஒரு வகையில் மரபணு மாற்றத்தை முடுக்கி விட்டு சூப்பர், டூப்பர் வகையில் புது விதமான நச்சு வகையாக மாறிப் போய் விடும் அபாயமாகவும் ஆகிவிடுகிறது. இந்த ரசயானங்களும், பூச்சி கொல்லிகளும் விளைந்த உணவுகளின் ஊடாக நமக்கு வந்தடைகிறது என்று சொல்லிதான் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று இல்லை.

புதிதாக நம் உடம்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பல வேதிய பொருட்களின் இருப்பு (chemical traces) இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இரு வேறு கால அவகாசங்களில் ஒரே மனித உடலில் இருக்கும் வேதிய tracesகளின் மூலமாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. இது எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்? இது போன்ற புற வேதிய பொருட்கள் உடலில் எகிரும் பொழுது புதிது புதிதாக வியாதிகளின் வருகையும் அதிகரிப்பதினில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும். செயற்கையாக கரவை மாடுகளில் வளர்ச்சியைச் தூண்டும் மாற்று மரபணு வளர்ச்சிக் ஹார்மோன்களை உட்செலுத்தி அதிக பாலை பெறும் முயற்சியில் நமக்கு கிடைக்கும் உபரி - (IGF-1- இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி) அந்த பாலின் மூலமாக கிடைக்கப் போய் அதுவே புற்று நோயைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது.

நாமே மரபணு மாற்றங்களை உருவி, சொருவி தேவையானதை சிருஷ்டித்து கொள்வதின் மூலம் உடனடி லாபம் ஈட்டினாலும், இயற்கையில் நிகழ்வுறும் பரிணாம சங்கிலித் தொடர் மாற்றங்கள் நிகழ்வுருவதை சிதைத்தவர்களாகிறோம்.

மேலும் இயற்கையில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இந்த இயற்கை சுற்று சூழலியியல் பின்னணியில் பின்னி பிணைந்து கிடப்பது. ஒரு சில பூச்சிகள் ஒரு சில தாவரங்களை மட்டுமே உண்டு அவைகளின் இனப்பெருக்கத்தையும், பரவலையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதாக இருக்கலாம். ஒரு சில பூச்சிகள், ஒரு சில தாவரங்களில் மட்டுமே அழிவைக் கொடுக்கும் பூச்சிகளின் லார்வாக்களை உண்டு அந்த பூச்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் இயற்கையமைவு இது.

எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையின் பன்முகத் தன்மை போற்றி பாதுக்காக்கபட வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம், ஏனெனில் அந்தந்த சுற்றுப் புறச் சூழ்நிலையில் தமக்கேயான மருத்துவ குணங்களுடன் உள்ள indigenous, ethnollogically முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை, அதனை பேணி பாதுகாப்பதும் நமது எதிர் கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தே!

Selective breeding is wiping out the natural biodiversity! which is not good in the long run - full stop!

தஞ்சாவூரானின் ஊர் வயல் காடுகளில் அவர் பார்க்கும் சாதாரண ஜீவராசிகள் இவ்வளவு சீக்கிரமாக அவரின் பார்வையிலிருந்து காணாமல் போனதிற்கு ஒரு விளக்கமாக இதனையும் கொள்ளலாம். இந்த மறைந்து போனதிற்கு பின்னணியில் கூட நான் மேலே சொன்ன பரிணாமச் சங்கிலி (உணவுச் சங்கிலியும்) சிதைவுற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, நாம் தடைசெய்யப் பெற்ற ஒரு பூச்சிக் கொல்லியை நம் வயலில் பயன்படுத்துகிறோமென்று வைத்துக் கொள்வோம் அது அங்கு வாழும் தவளைகள், நண்டுகள் போன்றவற்றை நேரடியாக பாதிக்கிறது அடுத்த முறை அவைகளின் இனப்பெருக்க முறையில் பெரிய மாற்றமெனில் அவைகளையே உணவாக கொள்ளும் மற்ற பறவைகள், விலங்கினங்களின் நிலை என்னவாக இருக்கும்...? இதுவே மாற்று மரபணு தாவரங்களுக்கும் பொருந்தும், அந்த தாவரங்கள் அந்த லோகல் இயற்கை உணவுச் சங்கிலியை அறுப்பதாக இருக்கலாம் அப்படி அது சிதைவுரும் பொழுது நம்பி உள்ள ஏனைய பிராணிகளும், பூச்சிகளும் உடனடியாக பாதிக்கப்பட்டு மாண்டழியலாம்... :(.

இந்த பரிணாம மாசுபாட்டையும், இயற்கையின் சுழற்சியில் தலையிட்டு ஊடறுப்பையும் நிறுத்திக் கொள்வது எல்லா முட்டையையும் ஒரே கூடையில் போட்டு ஒரு நாள் போட்டு உடைத்து கொள்வதனை போலல்லாமல், தப்பி பிழைத்துக் கொள்ள சிந்தித்து செயல் படுவோம்! இதுவே ஒரு தேசத்தின் உணவு தன்னிரைவிற்கும், அமைதிக்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் குறியீடான ‘முளை விதை’ பொருள் சொல்லி நிற்கட்டும்.

முற்றிலுமாக நமது பன்முக உணவுத் தாவர விதைகளை இழந்ததிற்கு பின்பாக குய்யோ, முறையோ என்று கதறிக் கொண்டு எங்கோ செயற்கையாக விதைகளை உற்பத்தித் தரும் ஆய்வுக் கூடங்களை நம்பியே கையேந்தி நிற்பதில் பொருளொன்றுமிருக்காது.

அப்படியே இந்த காணொளியையும் பார்த்து விசயத்தின் வீரியத்தையும், தீவிரத்தையும் உணர்ந்து கொள்ளுவோம்...




Sunday, April 03, 2011

திருப்பதி ஏழுமலையானே ராஜபக்சேவிற்கு ஆசீர்வாதம்?!

இந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்து இனம் புரியாத எரிச்சலும், மானுட நம்பிக்கை இழக்க வைக்கும் எண்ணங்களுமாக என்னுள் எழுந்து போகிறது. நம்முடைய அரசு யாரை எரிச்சல் படுத்தி பார்க்க மேலும், மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி பார்க்கிறது? இந்த புகைப்படத்தினை பார்த்த மாத்திரத்தில் இருந்து என்னுள் எழுந்த கேள்விகளில் சில:

அ) ஆயிரக் கணக்கில் மனித உயிர்களை உயிரோடும், குத்துயிரும், கொலை உயிருமாக இருக்கும் போதே புல்டோசர் கொண்டு நிரவியும், குழியுனுள் போட்டு மூடியும் கொன்ற ஒருவருக்கு எப்படி இன்னமும் மனித மாண்புகள் இருக்கக் கூடுமென்று எந்த கடவுளும் ஆசிர்வதிக்கும்? அதற்கு சாமீ பூஜாரிகளும் இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் போலவே அங்கீகரித்து ஆசீர்வதிப்பார்கள்? அவருக்கு மென்மேலும் எதனை நிகழ்த்த ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது?

ஆ) ஒருவரை ஏதோ ஒரு நோக்கத்திற்காகவோ அல்லது அறியாமலோ கொன்று விட்டால் கூட ஒரு காலத்தில் மனசாட்சி கேக்காமல் தன்னையே ஒப்படைத்து கொள்ளும் மனித மனத்திற்கிடையே, எப்படி ஒருவர் பல்லாரயிக்கணக்கான உயிர்களை கதறக் கதற அழித்தொழித்துவிட்டு இப்படி மண்டைக்குள் எந்த குடைச்சலுமே இல்லாமல் புன்னகைத்து அலைந்து திரிய முடியும்? சரி, சில மனிதர்கள் நம்புவது போலவே ஆவி, பேய், பிசாசு சமாச்சாரங்கள் உண்மையாக இருந்தால் இவர்களை ஏன் போய் பிராண்டப்படாது? அப்போ அதுவும் உண்மையில்லையா??

இது போன்ற பல கேள்விகள். அதனையொட்டியும் சில பின்னூட்டங்களையும், உண்மைத் தமிழன் பதிவினையும் படித்ததிற்கு பின்னாலும் வந்த சிந்தனையையும் சற்றே விரிவாக கீழே வைத்திருக்கிறேன். பொறுமை உள்ளவர்களும், தன்னைத் தானே தரம் பிரித்து பார்த்துக் கொள்ள விரும்புவர்களும், please go on read...

மற்ற விலங்குகளிடமிருந்து நம்மை பிரித்துணர நமக்கு கிடைத்த சிறப்பு பண்புகளிலேயே ஆறாம் அறிவாக கிடைத்த சிந்திக்கும் பண்பே சிறந்தது என்று இங்கே பலர் அறிவோம். இந்த சிந்திக்கும் திறனாலேயே நாம் இன்றைய பரிணாம ஏணியின் உச்சத்தில் ஒரு மானுட இனமாக ஏனைய ஜீவராசிகளை அடக்கி ஒடுக்கி உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கிடைத்த குச்சி ஐசை சுவைத்துக் கொண்டுமிருக்கிறோம்.

இந்த சிந்திக்கும் திறனுக்கு மிகவும் துணையாக இருப்பது நமது ஞாபக சக்தி. இந்த ஞாபக சக்தி தனிமனித வளர்ச்சியினைக் கொண்டு பல குண நலன்களாக தேவையான பொழுது இப்பொழுது நடக்கும் ஒரு நிகழ்வினூடாக பழைய விசயத்தினை வைத்து தைத்து எடுக்கும் முடிவிற்கு முக்கிய காரணியாக செயல்பட்டு நம் முன்னால் நிற்கும் அந்த மனிதன் எது போன்ற எண்ணச் செயல்பாடுகளை கொண்டவன் என்பதனை அறியத் தருவதாக இருக்கிறது.

அந்த தனிமனிதன் தனிப்பட்ட முறையில் குண நலன்களாக பொது நலனை கருத்தில் கொண்டு அடுத்தவர்களுக்கு நிகழும் தன் முயற்சியற்ற அநீதிகளை தனக்கானதாக கருதி எந்த தருணத்திலும் சமரசம் அடைந்து கொள்ளாமல் தக்க தருணத்தில் நீதி பெற்றுத் தரும் ஒரு ’மைட்டோகாண்ட்ரியா’வாக ஒரு சமூகத்தில் இருக்கலாம். மாறாக, சுயநலத்துடனும், வசதியாகவும் தனக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் உண்மை விசயங்களை புறந்தள்ளி இயல்பாகவே அது போன்ற விசயங்களிலிருந்து தன்னை விடுவித்து கடந்து செல்லும் ஒரு நிகழ்வாக பார்வையுரும் சுயநல நபராகவே தன்னை, தன் சிந்திக்கும் திறனை பழக்கப்படுத்திக் கொள்பவராக அமைந்து விடுவர்.

இது போன்று ஞாபக சக்தியில் நிறுத்தும் பழைய, கடந்து போன சம்பவங்களில் கசப்பான, உடலுக்கும்/மனதிற்கும் தீய்மை தரும் விடயங்களை மறந்து கடப்பது நமக்கு மிக்க நன்மை பயக்கும். அதே சமயத்தில் உலக ப்ரபஞ்ச ரீதியில் ஒட்டு மொத்தமாக மனித நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்து போனதினையொட்டி இன்னொரு இனத்தின் ஊடாக பிறந்தவர் தவறான எண்ணங்களை தனது இனத்திற்கு ஊட்டி வலிமையற்ற ஓரினத்தை தனது சுய லாபங்களுக்காக துடைத் தெரியும் துர்ச் சம்பவத்தை கண்ணுருகிறோம் என்றால் எப்படி அந்த மனிதனை இன்னமும் நம் கூடவே வைத்துக் கொண்டு ஒன்றுமே நிகழாத மனநிலையில் நம்மால் மறந்து வாழ்ந்து விட முடியும்?

மனிதர்களாக அப்படி கடந்து விடுவதும், அது போன்ற மனிதர்களை நம் கூடாக வாழ விடுவதும் நாளை நடந்து முடித்திருப்பதனைக் காட்டிலும் பெரியளவில் எடுத்து நிகழ்த்த முயல மாட்டான் என்று எந்த நிச்சயத்தில் நாம் நிம்மதியாக உண்டு, உறங்கி எழ முடியும்? இதற்காக நீ செய்வதனை நிறுத்திக் கொண்டாயா என்ற அதி புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டு மடக்க நேரத்தை இழக்க வேண்டாம்...

சில வருடங்களுக்கு முன்பு மும்பை தாஜ் மற்றும் புகைவண்டி நிலையத்திலும் கண் மூடித்தனமாக கட்டவிழ்த்து விடப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானின் நேரடித் தலையீடு இருப்பதாக அதனைத் தொடர்ந்த வருடங்களில் பாகிஸ்தானும் அந்த துப்பாக்கிச் சூட்டிற்கான விசாரணையில் ஒத்துழைக்க செய்யவில்லையென ‘கிரிக்கெட் பேச்சு வார்த்தையில்’ கூட சேர்த்துக் கொள்ளாமல் உலக மேடையில் நம் தேசம் அவர்களை அவமானப் படுத்தி பார்த்தது.

இங்கு சில பேர் சொல்வது போல அதாவது விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அன்றைய சூழ்நிலையில் பாகிஸ்தானை புறக்கணித்து உலகத்தின் பார்வையை அந்த நாட்டை நோக்கி பார்க்க வைக்கும் நோக்கில் செய்து காமித்தோம். என்னை பொருத்த மட்டில் அதுவும் ஒரு நல்ல அரசியல் நகர்வு என்பேன். ஆனால், இன்று எந்தளவிற்கு அந்த நாடு இந்தியாவின் பாதுகாப்பு கருதி பாதி வழி வந்து நம் நாட்டின் கோரிக்கைகளை ஏற்றிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது வட்டியும் முதலுமாக இந்த வாரம் நடந்து முடிந்த ‘கிரிக்கெட் பேச்சு வார்த்தையில்’ முதல் மரியாதை கொடுத்து பாகியின் பழைய கோபத்தை தனிந்து போகச் செய்திருக்கிறது.

இதன் பின்னணியிலேயேதான் உலக அரங்கில் அந்த குட்டியூண்டு இலங்கை தீவில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தேறிய இனப்படுகொலை தொடர்பாக உலக அரங்கில் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிப்பு அந்த நாட்டின் அதிபருக்கு இருக்கிறது. ஆனால், அதனின்று தப்பித்து தப்பித்து எந்த அடையாளங்களை அப்புறப்படுத்தவோ என்னவோ இன்றைய அளவிலும் எந்த ஒரு வெளி நாட்டு மனித உரிமை கழகத்தினையோ, பத்திரிக்கைகளையோ உள்ளே விடாமல் அடைத்து வைத்துக் கொண்டு எதனையோ அவசர அவசரமாக செய்து கொண்டிருக்கிறார்.


அண்டைய தேசமான மிகப் பெரிய ஜனநாயகத்தை உள்ளடக்கிய ஒரு நாடு அதன் கை சுத்தமாக இருந்தால், காந்தி பிறந்த மண் அஹிம்சையை போதிக்கும், சிறப்பாக எடுத்தியம்பும் ஒரு நாடு இலங்கையில் இது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது எனும் பட்சத்தில் அந்த அதிபரை உலக சபையின் முன் நிறுத்தி நீதியை நிலை நாட்டித் தருவது என்பது அதன் பங்கும், கடமையுமில்லையா?

ஒரு முரடனை தனிமைப் படுத்தி, அவன் உண்மையான முகம் வெளிக் கொண்டு வர அதற்கான வழிகளுக்கான சந்தர்ப்பம் அமையும் பொழுதெல்லாம் சுறுக்கை இறுக்குவதின் மூலமாக மட்டுமே அல்லவா அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும். அதனை விட்டுவிட்டு ஒரு இனப்படுகொலையாளனை எப்படி தோழனாக கொள்ள முடியும்? அப்போ பாகிஸ்க்கு ஒரு நீதி, இந்த குட்டித் தீவு அதிபருக்கு ஒரு நீதியா?!

இது வரையிலும் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த உலக மானுட ஒழுக்க நெறி, மாண்புகளை எல்லாம் இழந்து விட்டோம் என்ற வாக்கில் ஒரு மனிதன் இனப் படுகொலையை நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் எல்லாம் நிகழ்த்தி விட்டு எப்படி இப்படி விசிலடித்துக் கொண்டு கேளிக்கை விளையாட்டுகளில் நல்லவனாக வலம் வர முடியும்?

விளையாட்டை விளையாட்டாக பார் என்றால் அத்தனை உயிர்களின் விலை என்ன மயிரா? யார் நீதியை பெற்றுத் தருவது? விளையாட்டு வீரர்களுக்கும் சமூக கடமை இருக்கிறதா இல்லையா? அவர்கள் என்ன ரோபாட்டா? இது போன்ற விளையாட்டுக்களிலிருந்து தனிமை படுத்தி காட்டுவதிலிருந்து உலக சபையில் என்ன நடந்திருக்கிறது என்று நாம் யோசிக்க வைக்க வில்லையெனில் பிறர் யார் யோசிக்க வைப்பார்கள்?


Photo Credit: Net

Sunday, March 20, 2011

லிபியாவின் கடாஃபிக்கு குரல் குடுப்போம் வாங்க...

லிபியாவில் ‘ஆபரேசன் ஆடிசி டாவ்ன்’ தொடங்கி கடாஃபி மற்றும் அவர்களது மகன்களின் கொக்கரிப்பிற்கு ஒரு முடிவுரை உலக நாடுகள் சேர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் நமது அ’ஹிம்சையை மட்டுமே விரும்பும் தேசம் இங்கிருந்து கடாஃபியை அடிக்காதீங்க, அடிக்காதீங்கன்னு கூக்குரலிடுகிறது. யாருக்காவது என்ன ஏதுன்னு ஏதாவது தெரியுமா?

லிபியாவில் கடந்த 40 வருடங்களாக தனது இரும்பு கரத்தைக் கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி பெட்ரோல் வளத்தின் மூலமாக கிடைக்கும் அத்தனை பொருளாதாரத்தையும் தானும், தன் மகன்களின் மூலமாகவும் வெளி நாட்டு பாடகிகளை கொண்டு வந்து நாலு பாட்டு பாடு மில்லியன் கணக்கா பணம் தாரேன்னு நாட்டின் பணத்தை செலவு பண்ணி களிக்கும் கூட்டத்திற்கு ஏன் இத்தனை பெரிய ஜனநாயகம், சர்வதிகார அரசாங்கத்திற்காக குரல் கொடுக்கிறது?

கிட்டத்தட்ட எகிப்தில் மக்கள் எழுச்சி எழ ஆரம்பித்த சமயத்திலேயே லிபியாவிலும் மக்கள் துணிந்து தெருவிற்கு வந்து விட்டார்கள். சர்வதிகாரிக்கு எதிராக எழுந்து போராட்டம் நடத்த முன் வர வேண்டுமென்றால் தனது உயிரை இரண்டாம் பட்சமாக பனயம் வைத்து விட்டுத்தான் முன் வந்திருப்பார்கள். அதுவும் இத்தனை ஆண்டுகள் வறுவலுக்கு பிறகு.

இது போன்ற ஒரு வாய்ப்பை பயன்படுத்தி ஜனநாயகத்தில் திளைத்த நாகரீக நாடுகள் அது போன்று தானாக மக்களே முன் வந்து கேக்கும் நிலையில் தன்னாலான உதவிகளை செய்து, ஏனைய சர்வாதிகாரிகளுக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் செயல்களை செய்து மக்களுக்கு ஒரு தீர்வை வாங்கி கொடுப்பதல்லவா முறையாக இருக்க முடியும்.

இருந்தாலும் யூ. என்_க்கு செலக்ட்டிவ்வா மனித உரிமைகள் பாதிக்கப்படும் பொழுது, தட்டிக் கேட்கப் போகும் இடம் எது போன்றது, செல்வதின் மூலமாக ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்பதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இறங்குகிறது என்பதனை மறுப்பதற்கில்லை. ஈழத்திலோ அல்லது உகண்டாவிலோ நடந்தேறிய இனப் படுகொலையின் போதெல்லாம் இது போன்ற செலக்ட்டிவ் முன் உரிமைகளே முன் நின்றன. இது போன்ற சமயங்களில் உலக நாடுகளுக்கிடையே முடிவு எடுப்பதில் பிளவுற்று இருந்தாலும் அங்கே சென்று செலவழிப்பதில் எந்த பயனுமில்லை என்றால், மனித உரிமை மீறல்களைக் கூட கிடப்பில் போட்டு வேடிக்கை பார்க்க வைத்து வந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

கடாஃபி தனது நாட்டின் தேசீய தொலைக்காட்சியிலேயே தோன்றி போராட்டக்காரர்களை நோக்கி - இதோ எனது கூலிப்படை இன்று இரவு வருகிறது, எந்த ஈவு இரக்கமும் காட்டப் போவதில்லை சாவதற்கு தயாராக இருங்கள் என்று அறைகூவல் விட்டே கோரக் கொண்டாட்டத்தை தொடர்கிறார். இதனை யூ. என் என்ற அமைப்பு அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டுமா? இதன் மூலமாக என்ன இந்த உலகத்திற்கு செய்தியாக கொடுக்க முடியும்? மேலும் பல ஈழ, உகாண்டாவை ஒத்த படுகொலைகளை நடத்துங்கள் உங்களின் சொந்த குடும்ப பேராசைக்காக என்று விட்டுவிடலாமா.

ஏன் இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு யூ.என்_ல் கடாஃபி நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக ஓட்டு போடுவதில் இருந்து வெளி வந்தது, வந்தும் ஏனைய நாடுகள் எடுத்திருக்கும் முயற்சியினை உடனடியாக நிறுத்துமாறும் கூறி வருகிறது. ஏன் இதனைப் போன்று அன்று ஈழத்தில் இறுதி கட்ட போரில் அத்தனை அப்பாவி உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், சீனாவும் இலங்கை அரசாங்கத்திற்கு பக்க பலமாக நின்று கொல்லத் துணை போகிறது என்று தெரிந்தும் இந்தியா இன்று லிபியாவிற்கு விடும் அறை கூவலை அன்று ஈழ மக்களுக்காக விடவில்லை? ஒன்னுமே புரியலை...


சகாய விலையில் எண்ணெய் தருகிறேன் என்றால் மனித உயிர்கள் ஒன்று மற்றதாகி விடுகிறதா? இங்கேயும் நம் சுயநலம் வெட்ட வெளிச்சத்தில் அம்மணமாக நிற்கிறது.

பஹ்ரைனில் நம்மவர்கள் அந்த நாட்டு அரசருக்கு ஆதரவாக பாகிஸ்தானின் கூலிப்படைகள் எப்படி அந்த நாட்டு அரசருக்கு சாதகமாக போலீஸ் என்ற பெயரில் அடித்து கொல்வதற்கு துணை நிற்கிறதோ, அதே நிலையில் நம்மூரிலிருந்து சாதாரணமாக வேலைக்கு சென்றவர்களும் கிட்டத்தட்ட பாகிஸ் கூலிப்படைகளின் மனம் போன்றே தாங்களும் நடந்து கொள்வதாக படிக்க முடிகிறது.

அங்கும் 200-300 வருடங்களாக ஒரே பெரும்பான்மையற்ற சன்னி முஸ்லீம் நாட்டை ஆண்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட ஷியா பிரிவினர் தங்களுக்கும் சம உரிமை வேண்டுமென்று போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் எங்கிருந்து நாம் இடையில் வருகிறோம். ஏன் இந்த சுயநலத்தனமான நிலையை எடுக்க வேண்டும்? அங்கே, நமக்கு வேலை போய் விடலாம் என்பதனைத் தவிர வேறு ஏதாவது யோசிப்பதற்கு இருக்கிறதா? இது போன்ற புத்தியைத்தான் நாம் ஐக்கிய நாட்டுச் சபையிலிலும் காட்டி வருகிறோம்.

நீதி, நியாயம் என்ற ஒன்றெல்லாம் நமது சுயநலத்திற்கு முன்பு ஒன்று மற்றதாகி விடுகிறது என்றுதான் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் காட்டிக் கொள்கிறோம். இதனையே பிர தேசங்களில் தற்காலிகமாக இருக்கும் பொழுதும் கண்ணை மூடிக் கொண்டு முன் வைக்கவும் எத்தனிக்கிறோம் விளைவுகளை பற்றி சிறிதும் கவலையோ, அக்கறையோ இல்லாமல்.

லிபியாவிலும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் நடந்து வரும் மக்கள் எழுச்சியினையொட்டி வரும் ஆபத்திற்கு பின்னால் பல நாட்டு மக்கள் வெளியேறி வருகிறார்கள். நம்மூர்க்காரர்கள் ஊருக்கு சென்று என்ன செய்வது, நம்மூரில் எனக்கு உள்ள சூழ்நிலையை விட இதுவே பரவாயில்லை என்று அங்கயே இருந்து விடவும் துணிவதாக செய்திகள் படிக்கிறோம் அதுவும் லிபியா போன்ற நாட்டிலிருக்கும் நம்மூர் பெண்களே இப்படியாக முடிவு எடுத்து தங்கியிருக்கிறார்களாம். இதன் மூலமாக தெரிய வருவது என்ன? நம்மூரில் எத்தனை துயரங்களையும், பொருளாதார நலிவடைவையும் பார்த்திருந்தால் அப்படியான ஒரு துணிவிற்கு வந்திருப்பார்கள். இதனை நினைத்து பெருமைபட்டுக் கொள்ளவா முடியும்.

நம்மால் செய்ய முடியாததை அடுத்தவன் செய்யவாவது விட்டு விலகி நிற்போம். இந்த நேரத்தில போயி இரட்டை நிலை எடுப்பதெல்லாம் எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற மாதிரி காட்டி கொடுத்துவிடும். கொஞ்சம் அப்படி ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கலாம், ஈழத்தில நடந்தப்போ இருந்த மாதிரியே!



P.S: Photo Courtesy: Net

ஓநாய் நிலவு, சூப்பர் நிலவு - Wolf & Super Moon Photography

ஏற்கெனவே சில முறை தெக்கி பதிவுகளில் நிலவின் புகைப்படங்கள் தோன்றியிருக்கின்றன.இருப்பினும் இயற்கையில் ஏதாவது அதிசிய நிகழ்வுகள் நிகழ்ந்தே கொண்டே இருப்பதால் அவ்வப்பொழுது அவைகளையும் சுருட்டும் பொழுது நான் அனுபவித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு பிடித்திருக்கிறது.



இங்கு மேலும் இரண்டு புகைப்படங்கள் உங்களுக்காக. ஒன்று கடந்த ஜனவரி மாதம் 2010 ‘ஓநாய் நிலவு (wolf moon)' என்று பெரிதாக இயற்கை புகைப்பட கலைஞர்களால் கொண்டாடப்பட்டு சுட்டுத் தள்ளப்பட்ட நிலவின் புகைப்படம் எனது புகைப்பட பெட்டியின் வழியாக. அந்த இரவு நேரத்தில் வீட்டிலிருந்து எஸ்ஸாகி அருகிலிருந்த ஒரு பெரிய சர்ச் மைதானத்தில் பேயோடு பேயாக நின்று, குளிரில் பற்கள் கிடுகிடுக்க எடுத்த ஜில் நிலவு இதுதான்...



ஏற்கெனவே இந்த பதிவில் சொன்னதைப் போன்று புகைப்படமெடுக்க முழு நிலவு காலம் சரியான தருணம் கிடையாதாம். எனவே ரொம்ப துள்ளியமாக பார்க்கணமின்னா இந்த நிலாவை பாருங்க.

Moon in July Night

அடுத்து நேற்று இரவு எடுத்த சூப்பர் நிலவு. இது 18 வருடங்களுக்கு ஒரு முறைதான் பூமிக்கு மிக அருகே வந்து போகிற நிலவாம். பல முறை பல முகங்களில் படம் எடுத்து தலைக்கேறி இருப்பதால் என்னாத்தை வெளியிலே போயி எடுக்கிறதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். கடைசியாக சோம்பேறித்தனத்தை உதறி, ட்ரைபாட் எதுவுமே இல்லாம முடிஞ்ச அளவிற்கு ஆட்டமில்லாம எடுக்க முனைந்த படம்தான் இது... I would say this is an OK shot :D...


Super Moon 2011

Wednesday, March 16, 2011

ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!!

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியான ஜப்பான் இயற்கை கொடுத்த தொடர் அடியினை சந்தித்து தடுமாறி நிற்கும் இந்த சூழ்நிலையில் அணு சக்தி தொழில் நுட்பத்தை பற்றி மறு பரிசீலனை உலகம் தழுவிய முறையில் செய்வது நமக்கெல்லாம் அவசியமாகிறது.

ஜப்பான் தனது பூமிய இருப்பில் அதிகளவு பூகம்பத்தையும், தொடர்பாக ஆழிப்பேரலையையும் சந்திக்கும் ஓரிடத்தில் அமைந்து போய் தனது இருப்பை நகர்த்தி வருகிறது. அவர்கள் இந்த இயற்கை சார்ந்த பேரழிவினை கடந்த கால அனுபவத்தைக் கொண்டு மிக்க ஆயத்தத்துடன் எதிர் நோக்கும் தன்மை இருப்பினும், இந்த சமீபத்திய பூமியச் சிலிர்ப்பு அவர்களை எதிர்பாராத நிலைகுலைவில் இருத்தி வைத்திருக்கிறது.

நில அதிர்வு ஏற்பட்ட அடுத்த நிமிடத்திலேயே ஆழிப்பேரலையின் பயணம் தொடங்கி விடுகிறது. அதன் வேகமும், நிகழ்த்தப் போகும் சேதாரமும் எதனை ஒத்ததாக இருக்கப் போகிறது என்பது, நாம் கரைப் பகுதியில் அமைத்து வைத்திருக்கும் தொழிற்நுட்பங்களையும், நம்மிடம் இருக்கும் மக்கட் தொகையையும் கொண்டே இறுதியில் கணித்து தெரிந்து கொள்வதாக இருக்கிறது.

அத்தனை பெரிய அனுபவத்தையும், தொழில் நுட்பத்தையும், பொருளாதாரத்தையும், முன் ஏற்பாடுகளையும், நேர்மையாக மக்களுக்கென இயங்கும் அரசாங்க எந்திரத்தையும் கொண்டிருக்கும் ஒரு நாடே இப்படியான ஒரு அவல நிலையில் இந்த அணு சக்தி உலைகளுக்கு நிகழ்ந்த நிகழ்வினால் நிலை குலைந்து நிற்கும் பொழுது ஏனைய மூன்றாம் தர நாடுகளுக்கு இது போன்ற எதிர்பாராத ஒரு இயற்கை பேரழிவினையொட்டி அணு உலை விபத்து நிகழ்ந்தால் என்னவாகும் என்று நினைக்கும் பொழுது மண்டை கிறு கிறுக்கிறது. அதிலும் குறிப்பாக நமது சுரண்டல் அரசாங்கத்தை கொண்ட நாட்டில் எப்படியெல்லாம் விளைவை சந்திப்போம்?

கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அணு உலை கண்டிப்பாக 35+ வருடங்களுக்கு முன்பாக கட்டமைக்கப்பட்டிருப்பதாகத்தான் இருக்க முடியும். இந்த கால இடைவெளியில் அதன் கட்டமைப்பே கலகலத்துத்தான் போயிக்கொண்டிருக்கும். அங்கே இது போன்ற ஒரு பூகம்பத்தாலோ அல்லது ஏதோ ஒரு தொழிற்நுட்பக் காரணத்தாலோ வெடிப்பு நிகழ்ந்து கதிரியக்கம் நிகழப்படுமாயின் எது போன்ற தற்காப்பு முன்னெடுப்புகள் கை வசத்தில் உள்ளன? அந்த திட்டத்தில், மக்களையும் பங்கு கொள்ள வைத்து தயார் நிலையில் அறிவூட்டி நாம் திட்டங்களை தீட்டி வைத்திருக்கிறோம். இத்தனை மக்கட் தொகையையும் உள்ளடக்கி கொண்டு, சரிவர அவர்களுக்கு இந்த கதிரியக்கத்தின் சாதக பாதகங்களை அறிவுறுத்தி வைக்காமல் எப்படி கண்களை மூடிக் கொண்டு மேலும் மேலும் அணு உலைகளை நாட்டின் இதரப் பகுதிகளுக்கும் பரப்பி வைக்க நம்மால் முடியும்?

குறைந்த பட்சம் இருக்கும் மக்கட் தொகையினை கருத்தில் கொண்டாவது இயற்கை-நண்ப தொழிற்நுட்ப வழியில் இது போன்ற மின் சக்திக்கென அணு உலைகளை பயன்படுத்தி பிற்காலத்தில் அதன் கழிவுகளாலும், விபத்துக் காலங்களில் நடந்தேறும் கதிர் வீச்சுக் கோரங்களை கணக்கில் கொண்டு மாற்றுத் திட்டங்களான காற்று, நீர், சூரிய வெப்பத்தினைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் உக்தியினை சொடுக்கி ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டால்தான் என்ன.

இப்பொழுது ஜப்பானில் அணு உலை வெடித்த இடத்திலிருந்து 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கூட கதிரின் தாக்கம் இருப்பதாக அறியப்படுகிறது. இது போன்றதொருதளவில் நமது நாட்டில் கல்பாக்கத்திலோ அல்லது கூடான் குளத்திலோ நடந்தேறினால் கதிரியக்கத்தின் தாக்கம் எது வரைக்கும் சென்றடையும்? எப்படி மக்களை அப்புறப்படுத்தி எந்த மாநிலத்தில் கொண்டு போய் விடுவோம்? எந்த வீட்டை அது போன்ற ஒரு கதிர் வீச்சு நடைபெறும் நாளில் அடைத்து காற்று கூட உட்புக முடியாதவாறு பூட்டிக் கொண்டு உள்ளயே இருப்போம்?

ஒன்று தெரியுமா? இது போன்ற கதிர்களிலிருந்து வரும் கழிவுப் பொருட்கள் 10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வருடங்கள் கூட தனது வீரியத்தை இழக்காமல் கதிர் வீச்சை வெளிப்படுத்துகிறதாம். இதனை வைத்து பாதுகாப்பதற்கே இடம் தேடி வருகிறோம், அதாவது கழிவினைக் கூட எப்படி ஜப்பான் அணு உலையினுள் குளிர்ந்த நீரைச் செலுத்தி வெப்பத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள போராடியதோ அதனைப் போன்றே இந்த கழிவினையும் வைத்து கண்ணும், கருத்துமாக பாதுகாத்து வரவேண்டும்.

நம்ம பிச்சாத்து போபால் விபத்திலேயே பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலி கொடுத்துவிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி துடைச்சி போட்டுட்டு மறந்து போனவிங்க நாம. இனிமே வரப் போறதுக்கு மட்டும் அலட்டிக்கவா போறோம். ஆனா, இந்த அணு கதிர் வீச்சில என்னவொரு மறுக்க முடியாத தடயத்தை விட்டுக்கிட்டே போகுமின்னா நான்கு தலைமுறைக்கும் தள்ளி பிறக்கும் குழந்தைகளில் கூட குறைபாடுகளை மரபணுக்களின் வழியாக வெளிப்படுத்தி நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன்னு சொல்லிகிட்டே இருக்கும்.

ஜப்பானில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் விபத்தின் பிரமாண்டத்தைக் கண்டு சைனாவே எல்லா அணு உலைகளுக்கும் போட்டிருந்த எதிர்கால ஒப்பந்தத்தை கடாசப் போகிறதாம். எனவே, நாம சைனாவை பார்த்துத்தானே சூடு போட்டுக்குவோம், இப்போ அவங்கள நகல் படுத்தி ஒரு நல்ல சூடு போட்டுக்குவோம் வாங்க!


கதிர்வீச்சின் நீள அகலத்தை புரிந்து கொள்ள இந்த படத்தை பார்த்து புரிஞ்சிக்குவோம். இது இப்பொழுது ஜப்பானில் நிகழ்ந்த அணு உலை வெடிப்பினையொட்டிய projection ...



Photo Courtesy: Net

Thursday, February 10, 2011

எகிப்து மக்கள் எழுச்சியும் அதிபரின் அலட்சியமும்...

எனக்கும் எகிப்திய மக்கள் எழுச்சிக்கும் என்ன தொடர்பு? கடந்த 25ம் தேதியிலிருந்து தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இத்தனை நாள் நின்ற மக்களின் மன உறுதிக்கும், அஞ்சா துணிவிற்குமிடையே அவர்கள் விரும்பிய செய்தி சற்று முன் கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் 300 பொது மக்களை இழந்திருக்கிறார்கள். அந்த நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகிறார் இன்று இரவு என்பதே அது.

அரக்கபரக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வன்முறையை நம்பும் நபர் என்ற பின்னணி தெரிய வந்ததும் அங்கு கூடியிருக்கும் மக்களுக்கு என்ன நடக்கப்போகிறதோ என்ற கவலை எனக்கும் இருந்தது. இந்த நிலையில், எகிப்து நாட்டின் இராணுவம் இப்பொழுது முன் வந்து ஒரு செய்தியறிக்கையின் மூலமாக போராட்டக்காரர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மக்களின் எழுச்சிக்கு முன்பு எந்த அடக்குமுறையும் நிற்க முடியாது என்பதனை இந்த போரட்டம் உறுதி செய்திருக்கிறது. இந்த போராட்டத்தில் முதல் கட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாணவர்களும், டாக்டர்களும், இஞ்சினியர்களும்தான் என்பது கூடுதல் சுவராசியம். அடுத்த நான்கு ஐந்து மணி நேரங்களில் என்ன நடக்க விருக்கிறது என்பதும் அதி முக்கியம் வாய்ந்தது.

*மேலே எழுதிய குறிப்பு அந்த நாட்டு இராணுவம் கூறியதைக் கொண்டு எழுதப்பட்டது. ஆனால், பிறகு தேசிய தொலைகாட்சியில் தோன்றிய அதிபர் முபாரக் வளைச்சு வளைச்சு பேசி தான் பதவி விலக இப்பொழுது முடியாது என்று கூறி அனைவரின் முகத்திலும் கரியை பூசி விட்டார். மக்கள் மிக மிக கோபமாக இருக்கிறார்கள். இன்று என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.

இந்த போராட்டம் தொடர்பாக மேலும் படிக்க என்னுடைய முந்தைய பதிவு...

...எகிப்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? அதன் மூலமாக உலகத்திற்கும் நமக்கும் என்ன செய்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த எகிப்திய எழுச்சி சூழ்நிலையில் உலக அரசியல் பெரிய மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. வெளி உலக பார்வைக்கு நம் எல்லோருக்குமே அந்த நாடு பல சிறப்பு வரலாற்று சின்னங்களை தாங்கி நன்றாகத்தானே போயிக் கொண்டிருந்தது என்பதாகத்தான் அவதானித்து வைத்திருப்போம். எகிப்திலிருந்து இது போன்ற ஒரு மக்களின் எழுச்சியை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இதோ நம் கண்ணிற்கு முன்பாகவே ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த மாற்றம் அரசியல் ரீதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் ஏனெனில் உலக அமைதிக்கே அந்த பூமியே ஒரு ‘ஹாட்ஸ்பாட்’ஆக விளங்கி வருகிறது எனலாம். அதனையொட்டியே இது வரையிலும் உலக அரசியலும் புது பொழிவு அடைந்திருக்கிறது அல்லது அழகிழந்திருக்கிறது. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது சமச்சீராக பாய்ந்து அங்கு வாழும் மக்கள் அனைவருமே தனக்கென மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கென அமைந்துபட்டிருப்பது அவசியம். அது இன, மொழி பொருளாதார பரவல் என பல வகையிலும் தன்னை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதனையும் உள்ளடக்கியவாரே இருப்பது அவசியம்.

தவிர்த்து, நாட்டை ஆளும் வர்க்கம் பொதுப்படையான நலனை மறுத்து, மறந்து மக்களுக்கு எதிர் திசையில் பயணித்து தன் நலனுக்கும், பிற நாடுகளின் ஆர்வத்திற்கென இயங்கினால் இறுதி நிலை நாம் காணும் இன்றைய எகிப்தின் நிலையாகத்தான் இருக்கும்.

முப்பது வருடங்களாக தனக்கென ஒரு துணை ஜனாதிபதியைக் கூட அமைத்துக் கொள்ளாமல் எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக், யாருடைய லாபத்திற்கோ அமைதியான முறையில் நாட்டை ஆள்கிறேன் என்று இயங்கியிருப்பதாக இந்த மக்களின் எழுச்சி உலகத்திற்கு பறைசாற்றி நம் கண் முன்னால் விரிந்து நிற்கிறது; பதினொராவது நாளான இன்றும். வரலாற்றில் இது போன்ற அமைதியான எழுச்சி ஒரு நாட்டின் அதிபருக்கு எதிராக முன்னால் நடந்திருக்குமா என்று அறியமுடியவில்லை. இதனில் ஆச்சர்யபடத்தக்க விசயம் என்னவென்றால் இணையத்தின் பங்கு அதிகமாக பயன்பட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சிக்கு பின்னால் என்று அறியும் பொழுது உண்மையிலேயே நமக்கெல்லாம் சுத்தமான அரசியல் ஆரோக்கிய காற்று இன்னும் எட்டிவிடும் இலக்கிலேயே இருக்கிறது என்பதாகப்படுகிறது.

மக்களின் எழுச்சிக்கு முன்னால் எந்த உலக அரசியலும் மண்டியிடும் என்பதற்கு இந்த எகிப்திய மக்களின் எழுச்சி சான்று கூறி நிற்கிறது. இந்த நிலைக்கு அந்த மக்களை எடுத்து வந்திருக்கும் முப்பது வருட கால அரசியல் பின்னணியை சற்று உள்வாங்கி பார்த்தோமானல் எத்தனை துன்பங்களை எகிப்திய மக்கள் தாங்கி வந்திருப்பார்கள் என்றும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். மரங்களை வெட்டி அகலச் சாலைகளை அமைத்து கொடுப்பதும், வெளி நாட்டு தொலைகாட்சி ஊடகங்களையும், சோப் ஆப்ராக்களை ஒலிபரப்பியும், அலைபேசிகளை கிலோவிற்கு இன்ன விலை என்று தருவித்து தருவதும், இணையத்தின் அலைகற்றைகளை அகலப்படுத்திக் கொடுப்பதும் உண்மையான வளர்ச்சியாக கொண்டு ஏமாற்றி ஒரு நாட்டில் வெறுமனே மக்களை ரொம்ப நாட்கள் கட்டிப் போட்டு வைத்திருக்க முடியாது என்பதாகத்தான் இந்த காட்சி நமக்கு விளக்கி நிற்கிறது. இத்துனை குரல்கள் வெளியில் வெடித்து தெரித்து வரமுடியாமல் இருந்திருக்க வேண்டுமென்றால், இந்த நீண்ட முப்பது கால இடைவெளியில் எத்தனை அடக்கு முறைகள் பயன்படுத்தப்பட்டு, அவர்களின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டு ஓரமாக்கியிருக்க வேண்டும்.

பொருளாதார சமச்சீரமைவு எல்லா இடங்களிலும் நிரம்பி இருந்திருக்கவில்லை. எழுபது மில்லியன் மக்களை உள்ளடக்கிய ஒரு நாட்டில் ஒரு சாரார் மட்டும் அந்த பொருளாதார குச்சி ஐசையை சுவைத்துக் கொண்டிருக்க நிறைய படித்த இளைஞர்கள் வேலையற்று, குரல்வளை திருகப்பட்டு அடக்கி ஒடுக்கிப்பட்ட வாக்கில் இணையத்தையும் திறந்து கொடுத்து, உலக அரசியலையும் கவனிக்கும் வகையில் பணிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு ஒரு தீப்பொறியாக கிளம்பி இன்று காட்டுத் தீயாக நாடு முழுமைக்குமே விரவி நிற்கிறது இந்த எழுச்சி.

இந்த நிலையில் ஏன் உலகமே இந்த நிகழ்வை கவலையுடன் பேசியும், கவனித்து வருகிறது? உலகமே என்றால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் கவனித்து கண்ணத்தில் கைவைத்தால் உலகமே கவனிக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும். எகிப்தின் மக்கள் எழுச்சிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? இங்கேதான் வருகிறது, உலக அரசியல் சித்து விளையாட்டும், மறுயமைவும். அந்த பிராந்தியத்தில் எகிப்து மிகப்பெரிய நாடு. இதன் அரசியல் நகர்வுகள் மொத்த மத்திய கிழக்கு நாடுகளிலும் அதன் அலைகளை எழுப்பும்.

இது வரையிலும் நாட்டையாண்ட அதிபர் வருடத்திற்கு 1.5 பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து பெற்று அந்தப் பணம் அங்குள்ள ராணுவத்தை மேலாண்மை செய்வதற்கெனவே செலவிடப்பட்டிருக்கிறது எனும் பொழுது சற்றே யோசிக்க வேண்டும். அமெரிக்கா எதற்காக இத்தனை பெரிய தொகையை அந்த நாட்டிற்கென கொடுத்து வருகிறது? எகிப்து தனது அண்டைய நாடான இஸ்ரேலுடன் தனது நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. நம் அனைவருக்கும் தெரியும், மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்ரேலூடனான உறவு. இப்பொழுது புள்ளியை இணையுங்கள். அந்த பிராந்தியத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எந்த விசயத்திலும் கவனித்து பார்த்திருந்தால் எகிப்து எதுவுமே சொல்லுவதற்கு இல்லை என்ற நிலையையே எடுத்திருப்பதாக அறியலாம். அப்படியெனில் என்ன நடந்திருக்கலாம் அந்த எகிப்து அதிபருக்கும் அவருக்கு கீழே வாழ்ந்து வரும் மக்களுக்கும் என்பதனை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த மக்கள் போராட்டச் சூழலில், இவ்வளவு பெரிய தொகையை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா ஜனநாயகத்தை உலகளாவிய முறையில் வழங்க உழைத்துக் கொண்டிருப்பதாக தன்னை முன்னிருத்திக் கொள்ளும் நிலையில், கண்டிப்பாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நல்ல முடிவை எகிப்திற்கு மக்களின் பக்கமாக நின்று வழங்க முடியும், அவ்வாறு செய்ய வேண்டியது அதன் கடமையாகிறது.
அதுவே தன்னெழுச்சியாக ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் அந்த நாட்டிற்கெனவும் பிற்காலத்தில் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தன்னுடைய எஜெண்டாவை க்ளியராக முன்னெடுத்து வைக்கும் ஒரு நகர்வாக அமைய முடியும். மாறாக, 11 நாட்கள் நகர்ந்தும் இன்னமும் பழைய அரசியல் நாடங்களை அரங்கேற்றி கொண்டிருந்தால் உலக அரங்கில் முகமூடி கிழிந்து தொங்கி அமெரிக்கா தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து தப்பிக்க முடியாது. மேலும் அந்த பிராந்தியத்து இளைஞர்களின் மனதில் மென்மேலும் வில்லனாக தன்னை தக்க வைத்துக் கொள்ளும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுப் போகும். இந்த சூழலை அமெரிக்கா சரியாக பயன்படுத்திக் கொள்வது மிக்க அவசியமாகிறது.

இந்த எகிப்தின் மக்கள் எழுச்சி பல நாடுகளுக்கும் தேவைப்படுவதாகத்தான் தெரிகிறது. புரையோடிப் போன அரசியல் பெருச்சாளிகளை உள்ளடக்கிய நாடுகளாக பல நாடுகள் தன் அழகிழந்து நிற்கிறது. ஊழல்களிலும், வறுமையிலும் சுயமிழந்து, தொலைகாட்சிகளிலும் அதனூடான வக்கிரங்களிலும், அலைபேசிகளிலும், இலவசங்களிலும் தற்காலிகமாக தங்களை தொலைத்து இலக்கற்று மிதந்து கொண்டிருக்கும் ஜனநாயங்களை கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் இது போன்ற ஒரு புதிய ஜனநாயக் எழுச்சி தேவை. அதனூடாக தங்களை மீட்டெடுத்திக் கொள்ள என்பதனையே இந்த எகிப்திய தன்னெழுச்சி தனித்துவமாக நின்று விழித்தெழ சொல்கிறது!
Photo Courtesy: NY Times and Net.
...

Related Posts with Thumbnails