Tuesday, December 10, 2013

பிள்ளையிம் கிள்ளி தொட்டிலையும் ஆட்டு: An Irony of Life!

அண்மையில் ஒரு படம் பார்த்தேன் மாட் டொய்மன் நடித்து வெளி வந்த “எலிசியம்.” அதில கதை என்னான்னா பூமியில எத்தனை முடியுமோ அத்தனை கொண்டாட்ட வாழ்க்கை முறையையிம் வாழ்ந்து முடிச்சிட்டு பெருகிப் போன மக்கட் தொகை, சுவாசிக்க நல்ல காத்து, குடிக்கத் தண்ணீர் கிடைக்காத சூழலுக்குப் போயி பூமி ஒரு குப்பை காட ஆகிடுது. பணம் படைத்தவர்களாக சேர்ந்து ஒரு வான் வெளி நகரம் அமைத்து (எலிசியம்) அங்கே வாழத் தலைப்படுகிறார்கள்.

பிறகு என்ன இப்போ எல்லாரும் அமெரிக்காவிற்குள் நுழைய எத்தனிப்பதை வெளியுறவுத் துறை அமைச்சகம் அதனையொட்டிய கெடுபிடிகளையும் வைத்து பார்த்துக் கொள்வதைப் போல எலிசியம் நகரத்திற்குள் இல்லீகள் பூமி இமிக்கிரண்ட்ஸ்களை வர விடாமல் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் பூமியில் வாழும் ஹீரோவிற்கு ஓர் அநீதி நடந்து விடுகிறது. அதனை எதிர்த்து போரட உந்தி எழ இரண்டு உலகத்திற்கும் சுமூகமான பாதை அமைத்துக் கொடுப்பதாக படம் திரையில் விரிகிறது.

போலவே, இப்போ என்னோட முக்கியமான விசயத்திற்கு பார்வையை திருப்புவோம். ஒரு கட்டுரையை இந்தத் தலைப்பில் The Gates Foundation’s hypocritical investments வாசிக்க நேர்ந்தது. வாசிச்சிட்டு கடந்து போவோம்னுதான் நானும் நகர்ந்து பார்த்தேன். ஆனா, கெரகம் விடலை. இந்த உலகத்தில இயங்கும் எந்த ஒரு சோ கால்ட் நல்ல விசயமும் சரி கெட்ட விசயமும் சரி ஒன்றொடொன்று பின்னி பிணைந்தே கிடக்கிறது. எதில இருந்து எதை பிரிச்சு எடுக்கிறதின்னு சிக்கலை உட்கார்ந்து அவிழ்க்க ஆரம்பிச்சு இனம் காண்பதற்கு முன்னமே சுடுகாட்டு பக்கத்தில ஒரு சாதா மனுசன் வாழ்க்கை நகர்ந்து வந்து நின்னுருது.

இப்படியாத்தான் நம்ம பெரிய கடை அண்ணாச்சி பில் கேட்ஸ் இம்பூட்டுத்தான் சம்பாரிக்கணும்னு வழித்தொகை தெரியாம கன்னாபின்னான்னு அவரு கொம்பெனி சம்பாரிக்கப் போக அவருக்கு இப்போ டாலர் பில் எல்லாம் அது துடைக்கக் கூட லாயக்கில்லைன்னு உணரரும் இடத்திற்கு நகர்த்தி வைச்சிருச்சு இந்த வாழ்க்கை. சரி, இரண்டு பூமி கிரகத்தையே வாங்கிப் போடும் அளவிற்கு பணம் குவிஞ்சிருச்சே என்ன செய்றதுன்னு தெரியாம இந்த உலகத்து ஏழை மக்களுக்கு சுகதாரமான உணவு, ஆரோக்கியமான காற்று, உழைக்கும் உழைப்பாளி வர்க்கத்திற்கு முறையான வழியில் சென்றடையும் விசயங்களை ஆதரிப்பது,  வன்முறையற்ற சமூகம் உருவாக வித்திடுவதற்கென அமைந்த நிறுவனத் திட்டங்களை ஆதரித்து முதலீடுவது என தன்னிடம் குவிந்து கிடக்கின்ற அந்தப் பணம் தனக்கு வேலை செய்யத் திட்டமிட்டார்.

அப்படி திட்டமிட்டபடியே அந்த கையிருப்பு பணத்தை பெருக்க எங்கெல்லாம் தனது நிறுவனம் முதலீடு செய்தால் அவரின் கனவை நிறைவேற்றி வைக்க முடியும்னு பாடுபட்டு யோசிச்சு அங்கெல்லாம் பணத்தை முதலீட வைத்திருக்கிறார்கள்.



அதாவது ஒரு பக்கம் வியாதிக்கு, சுகாதரமற்ற ஓர் வாழ்வை வாழத் தேவையான அடிப்படை விசயங்களை வளர்த்து விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அதன் மூலமாக ஈட்டிய பணத்தில் வைத்தியம் செய்கிறார். என்ன ஓர் beautiful mind! முதலீடு செய்யப்பட்ட ஒரு சில நிறுவனங்களை நீங்களே காணுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் ஆரோக்கியமான உணவும், பானங்களும் இந்த உலக மக்களை சென்றடைய பாடுபடுகிறார்கள் என்பதை நீங்களும் அறிந்து கொண்டு எனக்கும் அறியத் தாருங்கள்.



உலக சூடேட்றத்திற்கு எதிராக போராடும் கம்பெனிகளுக்கு ஆதரவாக இங்கும் முதலீடு...




நமக்கு கிடைத்திருக்கும் ஓர் நவீன எலிசியம் படத்தின் நாயகன், எலிசிய நகரத்திலிருந்தே போராடுகிறான் :) .



பி.கு: மேலும் வாசிக்க இங்கே செல்லுங்க... 

http://grist.org/climate-energy/the-gates-foundations-hypocritical-investments/?utm_source=facebook&utm_medium=update&utm_campaign=socialflow

Tuesday, November 19, 2013

தஞ்சாவூர் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஓர் பயணம்: Mullivaaikkaal Mutram (Photos)

என்னோட நண்பன் ஒருத்தனை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு ஒளிஞ்சு கண்டுபிடிச்சு விளையாண்டுகிட்டே இருந்துட்டு நேற்று முகநூலில் வைச்சு கன்னம் மாத்தி, கன்னம் அறைஞ்சுகிட்டு  இன்று நேரா சந்திசிக்கலாம்னு முடிவாகி அவன் தஞ்சாவூர் வந்திருந்தான்.

அவன் எங்களோட நட்பை வட துருவமும் தென் துருவமும் சேராதுங்கிற ரேஞ்சிக்கு 90களிருந்தே சொல்லிட்டு திரியறது உண்டு. ஆனா, அதுக்கு பின்னாடியான திரை மறைவில் ஒரு hate and love காற்றில் தொங்கிட்டே இருக்கும் எங்களைச் சுத்தி.

என்னோட துணைவி, நேற்று நானும் அவனும் அலைபேசியில் பேசிக் கொண்ட தனிப்பட்ட மொழியை கவனிச்சிட்டு ”அப்படி பேசுவீங்க இப்படி நடிக்கிறீங்க ஃபோன்ல அவரோட” அப்படின்னு புருவம் உயர்த்திர அளவிற்கு எத்தனை நாயை கூப்பிட்டுக்க முடியுமோ அத்தனை தடவை மாத்தி மாத்தி கூப்பிட்டுக்கிட்டோம்.

நேரா வந்தவன்கிட்ட என்னய பிடிச்சும் கொடுத்தா. அவன் இது எப்போதுமே அப்படித்தான். அப்படின்னு அதே கிக்கேபிக்கே சிரிப்போட நழுவிட்டான். அவனுக்கு கடுப்பு ஏண்டா நல்ல விசயமே சொல்லி வைக்க மாட்டீங்களாடன்னு. எப்பூடி நாங்க எங்க வைஃபை கிட்ட கூட ஹீரோ வேஷம் கட்டலன்னா- நாலு பேரை வில்லனா ஆக்கினாத்தானே நான் ஹீரோ ஆக முடியும்னு நினைச்சிக்கிட்டு ஹிஹிஹின்னு மனசுக்குள்ளர சிரிச்சிக்கிட்டேன்.

அப்பறம் அவனுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் பார்க்கணும்னு தோணி நேற்றே சொல்லிட்டான் போலாம்டான்னு. சரின்னு ஒரு வழியாக தத்தி தவழ்ந்து இடம் கண்டுபிடிச்சு போனோம்.

இந்த அண்ட வெளியில மிதக்கிற அத்தனை வஸ்துவையும் பார்க்க அரக்கபறக்க ஓர் ஓழுங்கற்ற வழியில இயங்கிற மாதிரி இருந்தாலும், அததது இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கி மிதந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்த மனுசப்பய நடந்துக்கிறதுக்கான காரணங்கள் படிக்க இன்னொரு உலகத்தையே படைக்கணும் போல. கண்ணைக் கட்டுதப்போய்!

நினைவு முற்றம் போயிருந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே அதனை கட்ட முற்பட்டவர்கள் முறையான அனுமதிச் சான்றிதழ்கள் பெற்றுத்தானே ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் அதனை கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது, அத்தனை வருடம் எழும் வரையிலும் காத்திருந்து விட்டு இப்பொழுது மதில் சுவரை இடித்து யாருக்கு எதனை தெரியப்படுத்த அப்படி ஒரு அலங்கோலச் மட்டச் சுவர் கட்டினார்கள் என்ற கேள்வியை தவிர்க்கமுடியவில்லை சாலையிலிருந்து அந்த மொத்த அமைப்பையும் கண்ணுரும் பொழுது. என்னவோ போங்கப்பா!

அங்கு எங்களுடன் அந்த முற்றத்தினை பார்வையிட்ட சிலரில் ஒரு பெண்மணிக்கு ஆச்சர்யம் பெண்களை இப்படி கயிற்றால் பிணைத்து எல்லாம் இப்படிச் செய்திருக்கிறார்களா என்று. எந்தளவிற்கு பதினான்கே கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில் இடம் பெயர்ந்து வாழும் தன் இன மக்களுக்கு நேர்ந்த கோரம் அவர்களது பார்வையிலிருந்து முற்றிலுமாகவே மறைக்கப்பட்டிருப்பதற்கு அது ஒரு சான்று வார்த்தையாக காற்றில் மிதந்து காதடைந்தது.

இத்தனை குறுகிய புவியியல் அமைப்பின் குறுக்கப்பட்ட தொலைவிற்குள்ளும், நமக்கும் அவர்களுக்குமான துயரங்களும், தேவைகளும், தொலைதூர நோக்கும் நமக்கும் மத்திய அமெரிக்காவிற்கும் இடையே கிடக்கும் தூரங்களை கடந்து நிற்பதற்கு ஓப்பானது.

அங்கே பார்த்த சிற்பங்கள் அனைத்தும் இணையத்தில் புழங்கியவர்களுக்கு காணக் கிடைத்ததாகவே இருக்கும். இருந்தாலும், அரிதிப் பெரும்பாண்மையான நமது மக்களுக்கு நிச்சயமாக இந்த முற்றம் ஒரு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி மனதில் ஒரு குற்ற உணர்வை ஊட்டக் கூடியதாகவும், சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் அமையும் என்பது திண்ணம்.


1) நுழைவு முற்றம்...


2) தமிழகம் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் தீக்குளித்தவர்களுக்கான மதில் பதிப்பு...

3) ஈழம் மண்ணில் அவர்கள் படும் வதையை விவரணம் செய்யும் மதில் பதிப்பு...

4)

5)
6)

7)
8)


9)
10)

Sunday, October 27, 2013

திசைகளறு பயணம் I - கன்யாகுமரி (Photos)

நேற்றிரவிற்கு முந்தைய இரவில் திடீரென்று ஏதோ வீடற்றவன் மனநிலையில் கிடைத்த பேருந்தில் தாவித் தாவி பயணித்ததில் விடியற்காலத்தில் சூரியனார் விழித்து அரைமணி நேரம் கடந்து இறங்கிய இடம் கன்யாகுமரியாக இருந்தது. :)

புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு அந்த நேரத்தில் ஒரு தனியார் பேருந்து ஒன்று கிடைத்தது. போகும் வழியெங்கும் அப்பொழுதே பெய்திருந்த மழை , மரங்களின் இலைகளில் சார்ந்திருந்த ஈரப்பதத்தை காற்றில் பரப்பி, நெஞ்சின் அடியாழம் வரைக்கும் நுரையீரலின் வழியாக உயிரைத் தொட்டுக் வருடிக் கொண்டிருந்தது. கூடவே இளையராஜவின் என்பதுகளின் பாடல் தொகுப்பை மிதமான சப்தத்துடன் ஓட்டுநர் வேறு தவழ விட்டிருந்தார்.

எனது தலைக்கு நேர் மேலாக பெட்டிகளை வைக்கும் தட்டில்  சுற்றியிருந்த ஒரு வெளிப்புற பிளாஸ்டிக் சிறிதே கிழிந்து காற்றில் ஆடியாடி அசைந்தது. அது என்னுடைய கேசமே காற்றில் சிலும்பிப் பறக்கிறதென ஒரு மயக்கத்தை உண்டு பண்ணி என்னுடைய கல்லூரிக்காலத்துப் பயணத்தை மீண்டும் ஞாபகமூட்டியபடியே தனை மறந்து கேசத்தை சிலுப்பிக் கொள்ளும் அவாவை வழங்கிக் கொண்டிருந்தது.

அது இளையராஜாவின் மந்திர விரல்களின் ஊடே கசிந்தொழுகும் பாடல்களுக்கு மட்டுமேயான சாத்தியம் போல!  இல்லாத முடியை, பயணத்திற்கான இலக்கை, வாழ்க்கைக்கான பொருளை, இறந்து போன ஆன்மாவை இன்னும் உயிர்ப்புடனே ஏதோ ஒரு மூலையில் உன் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று ஞாபகமூட்டுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் அது வழங்கி, வாடிய மனதை மேகத்திற்கு மேலாக எடுத்துயர்த்தி வைத்து விடும் ஒரு வெண்புரவி போல.

மிதக்க மிதக்க அப்பொழுதே ஒரு நோட்டுப் புத்தகத்தில் இளையாராஜவிற்கு செலுத்த வேண்டிய எனது காணிக்கையை எழுத்தின் மூலமாக எழுத வேண்டிய தருணமிது என்று எண்ணும் அளவிற்கு அது என்னை கடந்த காலத்திய ஆயிரக்கணக்கான மைல்களின் பயணிப்புகளின் ஊடே தோன்றிய அனுபவங்களை சார்ந்து இப்பொழுதே மொத்தமாக இறக்கி வைக்கும் தருணமாக அழுத்திக் கொண்டிருந்தது.

ஆனால், இப்பொழுது நான் சொல்ல வந்த விசயம் வேறு. பிரிதொரு சமயம் இளையராஜாவிற்கென ஓர் அமர்வு செய்யலாம்.

எப்பொழுதுமே எனக்கு இந்தியா என்றாலே நெருக்கமான விசயமாக எனக்குள் பற்றிப் படர்வது பேருந்து மற்றும் புகை வண்டிப் பயணங்கள். இது போன்ற தனிப்பட்ட முறையில் இலக்கே அற்று கால் போன போக்கில் கிடைக்கும் ஊர்தியில் ஜன்னலோரமாக அமர்ந்து பிரயாணிப்பதுதான்.

அவ்வாறு பயணிக்கும் பொழுது, பேருந்தின் வேகம்  அதிகரிப்பதனை விட்டு அதனை விட என்னுடைய மனம் வேகம் பிடித்து பிரபஞ்சத்தின் விளிம்பை எட்டிப்பிடித்து விட்டு அதற்கு மேல் அது வளைந்து செல்கிறதே என்ற ஆதங்கத்துடன் பூமிக்கே இறக்கிக் கொண்டு கடந்து செல்லும், ஊர்களையும், மரங்களையும், தண்ணீரற்ற குளம் குட்டைகளையும், மாடு மேய்க்கும் தாத்தாபாட்டிகளையும், சிறார்களையும், மனிதர்களையும் அலுக்காமல் பார்த்துக் கொண்டே அவர்களை பின் தள்ளி முன் நகர்வது ஏதோ வாழ்வின் எதார்த்தத்தை எனக்கு ஞாபகமூட்டியபடியே கடந்து செல்வதாக மனமொரு லயிப்பை எட்ட வைக்கும்.

பெரும்பகுதி இது போன்ற ஊர்திகளின் முன் நகர்வு என்னுடனேயே என்னுள் மையம் கொண்டிருக்க பெரிதும் உதவுகிறது. ஏறி இறங்கும் மனிதர்களின் முகங்களும் அவர்களுடனேயே பயணிக்கும் அனைத்து விதமான வாழ்வு வழங்கிய ரேகைகளும், வீடுகளும் சட் சட்டென திரையிழுத்து காட்சிகளை மாற்றுவதனைப் போல மாறிக் கொண்டே இருக்கும். அது நமது வாழ்வின் நிலையாமைக்கான ஒரு குறியீடாக அமைந்து என்னுள் மென்மேலும் உறங்கிப் போக வடிகாலாக அமைய உதவுவதும் இது போன்ற இலக்கற்ற பயணங்கள் ஒரு கிளர்வுற்ற ஈர்ப்பு நிலையில் நடந்தேற உந்தித் தள்ளுகிறதோ என்று ஒரு முடிவிற்கு வர வேண்டி இருக்கிறது.

இதற்கு முன்பு இது போலவே பல பயணங்களை எனக்கு நானே வழங்கிக் கொண்டிருக்கிறேன். அதிலொன்று வட அமெரிக்காவில் நான் நிகழ்த்திய 2980 மைல் அளவிளான மகிழுந்து பயணம் வாயிலாக ஆறு மாநிலங்களை கடந்து சென்றது. வாழ்வின் மறக்க முடியா பயணங்களில் அதுவும் ஒன்று. அதற்கும் பெரிதாக எந்த ஒரு திட்டமிடலுமில்லை. அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. ஆனால்,  ஏதோ ஒரு வானத்தின் நிலா பின் தொடர்ந்த படியே!

பயணங்கள் எப்பொழுதும் எனக்கு அலுப்பை கொடுத்ததே இல்லை. மனம் வெம்பி சூம்பிக் கிடக்கும் பொழுது இப்படியான பயணங்கள் உள்முகமாக சிந்தனையைத் திருப்பி விடவும், வழியில் தான் சந்திக்கும் புதிய மனிதர்களுடானான உரையாடல் தனக்குள் இருக்கும் உண்மையான இயல்பினை வெளிக்கொணர்ந்து மீண்டும் விரைவாக துளிர்த்தெழும் சாத்தியத்தையும் வழங்குகிறது.

அதனினும் பயணங்களின் பொழுது வாசிக்கும் பழக்கம் இருக்குமாயின் அது மேலும் கூர்மையடைய வாய்ப்பளிக்கிறது. என்னுடைய ஆதர்ச எழுத்தாளரான பாலோவின் த ஸகீர் புத்தகம் வீட்டில் படுத்தவாரே வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த புதினத்தின் ஓட்டம் புத்தகத்தின் எல்லையைத் தொடத் தொட இது இந்த நிலையில் வாசிக்கும் புத்தகமல்ல என்று அவமானமாக உணர்ந்தேன். அதன் விளைவாக அமைந்தது ஒரு நான்கு மணி நேர பேருந்து பயணம். அந்த பேருந்தின் கடைசி நிறுத்தத்திற்கு முன்பாகவே புத்தகத்துனூடான பயணமும் முடிவடைந்தது. பயணத்தின் பிற்பகுதி ஒரு ரம்மியமான மாலை நேரம். காவிரிக் கரையோரமாக பச்சை பசேல் நிறம் பூசிய வயல் காடுகள் அனைத்தும் கலக்கஸ்தான் புல் மேடுகளாக மாறிப்போயிருந்தன.

மீண்டும் கன்யாகுமரி பயணத்திற்கு வருவோம். மதுரையிலிருந்து குமரிக்கு செல்லும் நேரடி அரசு பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தேன். அரசு பேருந்துகளே இப்பொழுதெல்லாம் தொலை தூர பயணத்திற்கு செல்வதற்கென இயக்கப்படுவதாக கருதுகிறேன். அரசு பேருந்துகளின் பயணச் சீட்டின் விலையும் ஒன்றும் சொல்வதற்கில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்குமான பயணச் சீட்டின் விலை அரசு பேருந்திற்கும் தனியாருக்கும் ஒன்பது ரூபாய் வித்தியாசங்களை கொண்டதாக இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் தனியார் பேருந்துகளிலேயே விலை அதிகமிருக்கும். இப்பொழுது அது தலைகீழாக இருக்கிறது. பேருந்துகளின் நிலையும் ஒன்றும் பெரிதாக மெச்சிக் கொள்ளும் படியாகவுமில்லை.

ஓடும் பேருந்திற்குள் முதல் முறையாக கொசுக்கள் முத்தமிட முத்தமிட பயணித்து மகிழ்ந்தது இதுவே முதல் முறை. ஓட்டுநர் எத்தனை மிதித்தும் பேருந்து மணிக்கு 50கி.மீ வேகத்திற்கும் மேல் சென்றிருக்க வாய்ப்பில்லை.

பேருந்தின் ஜன்னல்களின் கண்ணாடிகள் சிரித்து அதிர்ந்து சிரித்து என கொஞ்சம் கொஞ்சம் எட்டிப்பார்த்த தூக்கத்தையும் கொசுக்களுடன் சேர்ந்து கொண்டு காவல் காத்தது.

இந்தனை சந்தோஷத்திலும் விருட்டென்று அமைந்த பயணத்தினால், கையில் இருந்த கேமராவில் பாட்டரி இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அச்சப்பட்ட படியே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காலை மணி மூன்றரையைப் போல எடுத்துப் பார்க்கும் பொழுது சுத்தமாக இறந்து கிடந்தது. கொஞ்சமே என்னை திட்டிக்கொண்டு மேலும் அதனை நினைத்துப் பயணத்தின் இனிமையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த மன அறைக்கு ஒரு பூட்டைப் போட்டு சாத்தி விட்டேன்.

பின்னே என்ன இறங்கி கையில் இருந்த சம்சங் s4 வழியாக கிடைத்ததை எடுத்துக் கொண்டேன். இருந்தாலும் காலை நாலரை மணிக்கு சென்றடைந்து விடும் என்ற பேருந்து சரியாக ஆறரை மணிக்கே சென்றடைந்தது. அதற்குள்ளாக சூரியனார் கொஞ்சம் காத்திரமாகி லென்ஸை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டார். இன்னும் குமரியில் ஐந்து இட்லிகள் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்! அந்த பெண்கள் மீன் விற்பனை செய்யும் சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கக் கூடும். சுற்றி நின்று உணவருந்தியவர்களின் தோல் காய்ச்சலைக் கொண்டு அனுமானிக்க முடிந்தது.

அவர்கள் கடலுக்கும் சற்றே அருகே நின்று இந்த வியபாரம் செய்து வருவது அறியாமல் முகம் அலம்பி பல் விளக்கவென மனதில் நிறுத்தி ஒரு வெண் பொங்கலும், காஃபியும்  அருந்த 95 ரூபாய் கொடுத்து  முதல் போனி செய்து வைத்தேன். கொஞ்சமே வருத்தம். அடுத்த முறை ஐந்து இட்லிகள் பத்து ரூபாய் :) .

நான் பருகித் திளைத்ததிலிருந்து ஒரு சில துளிகள் உங்களின் பார்வைக்காகவும்...


1)



2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)

Monday, September 30, 2013

தஞ்சாவூர் அரசு பொருட்காட்சி : Thanjavur Govt Exhibition'2013

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைந்திருக்கும் முனிசிபல் திடலில் அரசு பொருட்காட்சி ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. நேற்று இரண்டு குட்டிப் பெண்களுடன் அந்தப் பக்கமாக நடையைக் கட்டினோம்.

பொருட்காட்சியின் முதல் நாள் என்பதால் அனுமதி இலவசமாக வழங்கப்பெற்றோம். அத்தனை சிறிய மைதானத்திற்குள் நல்ல திட்டத்துடன் ஸ்டால்கள் அமைக்கப்பெற்றிருந்தாலும், எங்கெங்கும் காணும் மக்கள் கூட்டத்தைத் தவிர சிறிய/பெரிவர்களுக்கென்று மகிழ்வூட்டி தொண்டையை உடைத்துக் கொண்டு கதற வைக்கும் ஃபன் ரைட் எதனையும் காணவில்லை.

பின் வரும் நாட்களில் அவைகள் சேர்ந்து கொள்ளுமோ என்னவோ. போலவே, நிறைய விற்பனை ஸ்டால்களும் இன்னும் அமைக்கப்படவில்லை. அவர்களும் அவர்களின் வழிகளில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தொலைந்த போன கூட்டத்திற்குள் என்னை கண்டு கொண்டது போல அத்தனை மக்களையும் ஒரு சேர ஓர் இடத்தில் வைத்து மையமாக உணவு மைதானத்தில் அமர்ந்து பொண்ணுங்களோட ஒரு சிறு சிற்றுண்டி உண்டது ஹம் ஹம்ம்ம் அனுபவம்! பெண் சிறிதே ஆடினாள்... சாப்பிட்டுக்கொண்டே!

சவகாசமாக மீண்டும் ஒரு முறை பொருட்காட்சி திடல் சூடு பிடிக்க ஆரம்பித்த நாட்களில் செல்ல வேண்டும்.

1) காட்சித்திடலின் நுழைவு வாயில் ...



2) திடலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வனத் துறை காட்சியகம்...







3) ஆவின் பால் நிலைய ஸ்டாலுக்கு நேர் எதிர் முனையில் அமைந்திருக்கும் மீன் வளத்துறை ஸ்டால். இங்கே என்னோட அறுபது வயதித்திய புறக் கண்ணாடி பிம்பம் ஒன்றைச் சந்தித்தேன் :) ...




4) தொடக்க நாள் என்பதால் ஏதோ வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி ஓர் அண்ணாவும் தங்கையும் தங்களது திருமணத்தை சார்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். வரதட்சிணை கொடுப்பதும்/வாங்குவதும் தவறு என்ற உரையாடலும் காதில் விழுந்தது. தாண்டிச் சென்று, அண்ணா தனது தங்கையை மூளைச் சலவை செய்வது போன்ற ஒரு உரையாடலில் கூறினார் - திருமணத்திற்கு பிறகு தனித் தனியாக குடும்பம் அமைவதே நம் சமூக வழக்கு என்று?! :)


6) பொண்ணு டொய் ஸ்டால் டொய் ஸ்டால் என்று படுத்த ஆரம்பித்து கண்களில் கண்ணீர் குளம் வெட்டிக் கொண்டிருக்கும் ஒரு தருவாயில், இந்த வடக்கத்தி தம்பி ஒருவன் உயிர் காத்தான்... :)



Friday, August 09, 2013

எனது மறுபக்கம்...: The Flip Side!

எத்தனை அடித்தாலும் நான் திருந்துவதாக இல்லை. இன்னமும் மனுசங்களின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனது அம்மா அடிக்கடி அவளது 67 வருட வாழ்க்கையில் கற்றுக்கொண்ட நடைமுறை வார்த்தை மிகவும் தாமதமாகவே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது; இருப்பினும் காத்திருப்பதில் பிரயோசனமுள்ளதாக இருக்கிறது its worth a wait. அந்த வார்த்தை- உறவுகளில் சிக்கல்கள் எழுந்து விலகிச் சென்றும், வார்த்தைகளில் அமில மழை பொழிபவர்களைப் பற்றிய நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொள்வதற்கிணங்க இப்படியாக சொல்வாள்...

 *தெரிந்தா செய்கிறார்கள், என்ன செய்றோம்னு தெரியாமச் செய்றதுதானே! காலம் வரும் பொழுது புரிந்து கொள்வார்கள்* .

இந்த காலம் சில பேருக்கு நாட்களாகவோ, மாதங்களாகவோ, வருடங்களாகவோ ஏன் இந்த பிறப்பிற்கும் எட்டாத ஒரு விசயமாகவோ கூட அமைந்து விடக் கூடும். இருப்பினும் இந்த நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொளல் தமக்கு தாமே மன அழுத்தத்திலிருந்தும், வெறுப்பு நம்மை ஆட்கொண்டு நமது பொன்னான இக் கணத்தை அனுபவிக்க விடாமல் சிதைத்து விடக் கூடியதிலிருந்தும் நம்மை கரை தூக்கி விடுவதுமாக அமைந்திருக்கிறதாகப்படுகிறது.

நம் வாழ்வில் வந்து போகும் உறவு மனிதர்களையொட்டி எத்தனை பெரிய கால எதிர்மறை செயல்பாடுகள் நடந்தேறும் பொழுதும் இந்த take in நிச்சயமாக உதவுவதாகவே இருக்கிறது.

என்னோட இன்னொரு அம்மா’ [மாமீ’யார் - i hate this term, ஏன்னா அந்த தமிழ் வார்த்தையே பாருங்க மாமி யார் ? என்று போட்டி போடுவதாக அமைந்து பட்டிக்கிறது :) ], அதாவது என்னோட வைஃபை அம்மாகிட்ட இன்னிக்கு ரொம்ப நேரம் காணொளியில் அரட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவங்களும் அதை ரொம்பவே சிலாகிச்சு பேசினாங்க.

“இந்த மாதிரியான ஒரு கணத்தை நமக்கு இந்த காலம் கொடுத்திருக்கின்னா கிடைக்கற்தக்கன என்று.”

பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக சில கேள்விகளின் மூலமாக அவர்களுடைய இன்றைய வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் போக்கை நோக்கி நகர்ந்தது. அம்மாவிற்கு ஆறு ஏழு பிள்ளைகள் எல்லாம் முப்பது வயதைத் தாண்டி. தான் தனக்கு என்று தன் பெற்றோர்கள் அரைத்த மாவை தனக்கென அரைக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் உள்ளவர்கள்.

அம்மாவின் கணவர் ஓர் மூன்று வருடங்களுக்கு முன்பு மரணித்துவிட்ட நிலையில் தனியாக இவர்கள் வாழ தலைப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர் விரும்பினால் தன் பிள்ளைகளின் யார் வீட்டிலாவது இருந்து துணையோட இருக்கக் கூடிய கதவை தன் பிள்ளைகள் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கிறார்கள். 

இருப்பினும் இந்தம்மாவின் தன்னம்பிக்கையும், அந்த நாகரீகமும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிற நிலையில் இந்த கேள்வியை முன் வைத்தேன். ஏன் உங்களுக்கு இத்தனை பிள்ளைகள் இருந்தும் தனியாக வசிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டவுடனேயே வெடித்து சிரித்து தன் அனுபவத்தை முன் வைக்க தயாராகினார்கள்.

“எத்தனைதான் நமக்கு சேவகம் பண்ண, கவனிச்சிக்கன்னு ஆட்கள் இருந்தாலும், நமக்கு பிடிச்ச இடத்தில உட்கார்ந்து எழுந்துன்னு, பிடிச்சதை பிடிச்ச நேரத்தில செஞ்சிகிட்டு வாழுறதுல உள்ள சுகம் கிடைக்குமா தம்பீ” என்பதே அம்மாவினுடைய பதிலாகக் கிடைத்தது.

எத்தனை வாழ்வு அனுபவங்கள் அவர்களை இந்த ஒரு புரிதல் நிலைக்கு நகர்த்தி இருந்தால் தன்னுடைய எழுபதைத் தொட்டு நிற்கும் ஒரு மனுஷியின் எண்ணமாக இது வெளிப்பட்டிருக்கக் கூடும்.

நான் அதன்பால் கட்டுண்டேன். என்னுடைய ஈர்ப்பு- மனிதர்களின்பால் சார்பற்ற நிலையில் மனிதர்களுடன் ஒட்டி ஒழுகுதல், அது வயது நிலைகளையும் கடந்து யார் வெளிப்படுத்தினாலும் அந்த மனிதர்களுக்குள் ஏதோ வெட்டி எடுக்க புதையல் இருப்பதாக கூடுதல் ஒட்டல் ஏற்படும்.

பிறகு அம்மாவின் இந்த நிலைப்பாட்டை பாராட்டி விட்டு, நீங்கள் எடுத்திருப்பதும் ஒரு தேர்வுதான். தனது திருமண நாளிருந்தே, குடும்பம், கணவர், பிள்ளைகள் என்று அடுத்தவர்களுக்காக தன்னுடைய வாழ்வை தோய்த்த நிலையில் கடைசி ஒரு கட்டத்திலாவது தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து தீர்க்கிறேன் என்று எடுத்திருக்கும் இந்த தேர்வை நான் மதிக்கிறேனம்மா.

இருந்தாலும் இன்னும் காலங்கள் நகரும் பொழுது இப்பொழுது இருக்கும் இந்த உள்ளார்ந்த மனசக்திக்கு உடம்பு ஒத்துழைக்காத ஒரு நாளும் வரக் கூடும். அப்படியாக வரும் ஒரு நாளில் அடுத்த ஒரு தேர்வை நீங்கள் எடுக்கும் பொழுது, எனக்கு உங்களைப் பார்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குங்கள் என்று கூறினேன்.

ஏனெனில் அந்த வாய்ப்பை வழங்குவதும், வழங்காமல் போவதும் அவர் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ்களிலே உள்ளது. இது எப்படியாக இருக்கிறது என்று சற்றே உள்ளே புகுந்து யோசித்தால், எந்த வீட்டில் எந்த மனிதர்களுடன் நாம் விருந்தாடப் போகிறோம் என்று வாய்ப்பளித்துப் பார்ப்பதற்கு ஒப்பானாது.

தீர்க்கமாக வாழ்பவர்களுக்கு அங்கே எந்த விதமான சமரசங்களுமில்லை. சுத்தமான தேர்வு மட்டுமே மீதமாகிறது. அங்கே இது போன்ற மனிதர்கள் புகுந்து வெளி வரும் பொழுது விருந்தளிப்பவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.

அதுனாலேயே நான் மிகக் கவனமாக அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். இன்று ஒரு வாழ்ந்து தீர்த்தவளின் வாயிலிருந்து சில நல்ல வார்த்தைகளை வாழ்த்தாக பெற்றேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் இனிதான நாளாக அமைந்திருக்கிறது!

சந்தோஷத்திலேயே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதற்கு ஒப்பான விசயம் வேறொன்றும் இருப்பதாகப் படவில்லை. அது இந்த மிர்சிடீஸ் வகையாறா கார்களையும், சம்ஷாங் s3 and s4 வகை கைபேசிகளையும் விட அதி மன மகிழ்வை ஊட்டுவதாக உள்ளது.

சீக்கிரம் விழித்துக் கொள்பவர்களுக்கு இந்த வாழ்வு ஏதோ ஒரு வகையில் எப்பொழுதுமே மட்டற்ற சந்தோஷத்தை வழங்க காத்துக்கொண்டே இருக்கிறது!

Sunday, July 28, 2013

வானமும் என்னுடைய வாழ்க்கையும்...

மீண்டும் ஒரு அழகானதொரு நள்ளிரவு! இன்று எனக்கு நானே பேசிக்கொண்ட கோயப்புத்தூர் காலம்பாளைய நாள் 1996ஆம் வருடம் போன்றதொரு இரவு. காரின் ஹூடில் மல்லாந்து படுத்தபடி இரவு வானத்தை ஒரு ஏகாந்த நிலையில் தரிசித்தபடி பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே மணி போவது தெரியாமல் அருந்திக் கொண்டிருந்தேன். எனக்கும் இரவு வானத்திற்குமான தொடர்பு சொற்களில் சுருக்கவதாக இல்லை.

எனக்குத் தேவையான அத்தனை உள்ளார்ந்த சக்தியை எப்பொழுதும் ஒவ்வொரு தருணத்திலும் அங்கிருந்தே தரவிறக்கம் செய்து வந்ததாக எனது நினைவு. இந்தியாவிலிருந்து என்னுடைய இருபத்து ஆறாவது வயதில் இது போன்றதொரு சம்பாஷணைக்கு பிறகே அமெரிக்காவிற்கான பயணத்தை நிகழ்த்தி இருக்கிறேன். இடையில் எத்தனையோ மயிர் கூச்சரியும் நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. அது எனக்கும் அந்த நிகழ்வுகளுக்குமான அதிர்வுகளை பன்மடங்கு மற்ற மனிதப் பார்வைகளிலிருந்து எகிறி காமித்தாலும் எனக்கொன்னவோ அவை தேவையானதொரு பாடமகவே அமைந்திருக்கிறதாகப் படுகிறது.

அன்று கோவையில் நிகழ்ந்த அந்த இரவு வானத்தினூடான சம்பாஷணை ஒரு பைத்தியக்காரனின் புலம்பலாக யாராவது ஒட்டுக்கேட்டிருந்தால் நகைத்திருக்கக் கூடும். ஆனால், உள்ளார்த்தமாக அந்த பெளர்ணமி இரவு எனக்கு கொடுத்தது என்னுடைய பதினெழு வருட அமெரிக்கப் பயணத்திற்கு போட்ட உரமாக அமைந்தது.

இன்று மீண்டும் நான் அதே நிலையில் இந்தியா திரும்பும் ஒரு சந்திப்பில் நிற்கிறேன். அதே உத்தரவு கேட்டு. அதே பைத்தியக்காரத்தனம் கொஞ்சமும் குறைந்த பாடில்லை. என்னவோ எனக்கு உத்தரவு கிடைத்த மாதிரியான உணர்வுதான். இரவு வானத்தின் பின்னணியில் மரத்தைப் பார்த்தேன், என்னுடைய வீட்டைப் பார்த்தேன்- செய்வது சரிதானா என்று கேள்வியை முன்வைத்து நட்சத்திரங்களை உற்று நோக்கியபடிபடியே- என்னுடைய மற்றொரு குரல்- மச்சான் எல்லாம் நல்லாதான் நடக்கும். எல்லாமே நல்லபடியாகத்தான் நடந்தேறிருக்கிறது; keep it going என்று உள்ளிருந்து ஒரு குரல். அவ்வளவுதான் எனக்கு வேணும்.

என்னைச் சுற்றியும் எப்பொழுதும் எனக்காக மனம் கசிந்து நல்லதே நடக்கும் என்று உருகும் நல்ல நண்பர்களும்/உறவுகளும் உண்டு. அதனைத் தாண்டிய தீர்க்கமாக ஆற்றோடு மிதக்கும் அபரிதமான மன நிலையும் என்னிடமுண்டு. இத்துடன் ஒருமித்து ஒத்திசைவுடன் அடுத்த கட்ட நகர்வை நிகழ்த்துகிறேன்.

May this universe bless me all along the way! Good luck to me!! போய் வருகிறேன் அமெரிக்கா!! :)

Monday, July 22, 2013

வாத மூட்டழற்சி ஓரு மரபணுப் பிறழ்வு - Rheumatoid Arthritis

என்னோட ப்ளஸ்டூ நாட்கள்லே எங்களுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய வீடு என் வீட்டிற்கு போகும் வழியில் சாலையை பார்த்தபடி அமர்ந்திருக்கும். என் வீட்டிலிருந்து நாங்கள் சந்தித்து மாலைகளைக் கொல்லும் இடத்திற்கு மிகச் சரியாக 750 நடையடிகள் பிடிக்கிறதென்றால் அவனுடைய வீடு சரியாக 550வது அடியில் அமைந்திருக்கும்.

மாதத்தின் பல நாட்கள்ல நல்லாத்தான் இருப்பான். திடீரென்று படுத்தபடி எழுந்து அமரவே ரொம்பச் சிரமப்படுவதாகவும், அப்படியே எழுந்து நடந்து திரிந்தாலும் குன்றியபடியோ அல்லது சிரமத்திற்கு இடையேயோ நடந்து திரிவதாகவும் காணக் கிடைப்பான். ஒரு முறை அவனை அருகே அமர்த்தி வைத்து என்ன பிரச்சினை என்று விசாரித்தேன்.

அப்பொழுது கூறினான் எலும்புகளின் சந்திப்புகளில் உபரியாக கால்சியம் படிந்து இணைப்புகளை இயக்கவே முடியாதபடிக்கு வலி உயிர்கொள்வதாக இருக்கிறது என்றான். அதிலும் குளிர்காலங்களிலும், காலை வேலைகளிலும் இந்த பிரச்சினை அதிகமாக இருப்பதாக கூறினான். அன்று அதன் தீவிரம் உணர்ந்து கொள்ள முடிவதாக இல்லை.

இன்று ஒரு 26 வயது மதிக்கத்தக்க பெண்ணை சந்தித்தேன். அவளுடைய பெயர் லோலா ஜேன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். பேச்சு முதலில் புகை பிடிப்பதனைப் பற்றியதாக அமைந்தது. அப்படியே நகர்ந்து கஞ்சா புகைத்தால் தான் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவையும், கீமோதெரபியின் தேவையையும் குறைத்துக் கொள்ள முடியும் என்று தனது உறவினர், கலிஃபோர்னியாவில் இருந்து கூறியதாக கூறினாள்.

சட்டென்று எனக்கு உள்ளே மணியடித்தது. இத்தனை சிறு வயது, ஆரோக்கியமாக காட்சியளிக்கும் ஒருத்திக்கு எதற்கு கீமோதெரபி தேவைப்படுகிறது. சற்றே தலையை சாய்த்து எதற்காக கீமோ எடுத்துக் கொள்கிறாய் என்று அன்னியத்தை உடைத்தேன்.

அவ்வளவுதான் அடுத்த இருபது நிமிடத்திற்கு மேல் எனக்கு ரூமாட்டாய்ட் ஆர்த்தரைட்டிஸ் (Rheumatoid Arthritis) பற்றி அத்தனை விபரங்களையும் அவளுடைய சொந்த அனுபவத்தின் ஊடாக வழங்கி சில இடங்களில் அவளுடைய வலியையும் எனக்குள் நகர்த்தி மீட்டெடுத்துக் கொண்டாள்.

இந்த வகை ஆர்த்தரைட்டிஸ் கை/கால் விரல்களின் இணைப்புகளில் சிறு வீக்கமாக ஆரம்பிக்கிறது. முதலில் வலியுடன் ஆரம்பித்து எலும்பு கரைவதும், பின்பு சிறுகச் சிறுக விரல்களை வளைக்கிறது. இது ஒரு மரபணு சார்ந்த வியாதி. தன்னுடை உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே தவறாக நம்முடைய உடல் திசுக்களைத் தாக்குவது autoimmune disorder.

இந்த வியாதி எலும்பு இணைப்புகளில் மட்டும் பிரச்சினை கொடுப்பதோடு விடுவதில்லை. தொடர்ந்த உடல் சோர்வும் அவ்வவப்பொழுது உடல் காய்ச்சல் வழங்குவதுமாக தொடர்கிறது. ஒரு சூழலில் மொத்தமாக முடக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து விடும் நிலைக்கு இட்டுச் செல்வதாக தெரிகிறது.

என்னுடன் பேசிக்கொண்டிருந்த லோலாவின் வீட்டில் நான்கு தலைமுறையாக இது பெண் குழந்தைகளுக்கே அதிகமாக மரபணுவின் மூலமாக கடத்தப் பெற்றிருப்பதாக கூறினாள். இது வரையிலும் இந்த வியாதியை முற்றிலும் குணப்படுத்த மருத்துவத்தில் எந்த தீர்வையும் எட்ட வில்லையாம். மேலாண்மை செய்து வைத்துக் கொள்வது ஒன்றே வழியாம்.

இவர்களுடைய குடும்பத்தில் பல தலைமுறைகளாக இந்த வியாதியை அனுபவித்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒன்றை கவனித்தாகக் கூறினாள். அது கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் இந்த வியாதிக்கான எந்த அறிகுறியும், வலியும் அண்டுவதில்லை என்பதாக. கொள்ளுப்பாட்டி ஒன்று இதனை அறிந்து தொடர்ச்சியாக பதினொரு வருடங்கள் அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றிருக்கிறார்.

இல்லையென்றால் சற்கர நாற்காலியில் அமர நேரிடும் என்ற பயத்தின் அடிப்படையில். அது போலவே இனிமேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில் சற்கர நாற்காலியில் அமரும் நிலையும் ஏற்பட்டதாம்.

லோலாவின் வலியின் அனுபவம் பற்றி சொல்லும் பொழுது கேட்ட எனக்கே மயிற் கூச்சரிப்பு ஏற்பட்டது. பாதங்களை வைத்து ஒரு அடிக்கு இன்னொரு அடி எடுத்து வைப்போம் என்ற எண்ணமே கிலியை ஏற்படுத்துமாம்; ஏனெனில், ஒவ்வொரு அடியும் ஏதோ உடைந்த கண்ணாடி சிதில்களில் எடுத்து வைப்பதனைப் போன்ற ஷார்ப்பான வலியை கொடுப்பதாக அமையும் என்று கூறினாள்.

ஏன் இங்கு லோலாவைப் பற்றி குறிப்பாக பேசி இந்த வியாதியைப் பற்றி பேச வேண்டும் என்று தோணலாம்.  ஏன்னா, இந்த வியாதி பொதுவாக நாற்பது வயதிலிருந்து அறுபது வயதுடையவர்களிக்கிடையே எட்டிப்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால், லோலாவிற்கோ 26ஏ வயதுதான், பார்க்க ரொம்ப ஆரோக்கியமான இளம் பெண். விரல்களை நீட்டி இப்பொழுதே இந்த வியாதியின் அறிகுறியாக சிறிதே நுனிப்பகுதி வளைவதை காண்பித்தாள். கண்களில்தான் எத்தனை அயர்ச்சி. இது ஏன் எனக்கு என்பதாக.

ஒரு பெண்ணின் முட்டையும், விந்தணுவும் இணைந்த மறு நொடியிலிருந்துதான் எத்தனை விதமான மரபணு சமிக்கைகள் இரண்டு பெற்றோர்களின் குணாதிசியங்களை உள்ளடக்கி பரிமாறி, மறுபதிப்பு நிகழ்ந்து அதுவும் சரியான இடத்தில் வைக்கப்பெற்று, சரியான காலத்தில் ஒவ்வொரு உடல் சார்ந்த குணாதிசிய பண்புகள் வெளிக்கிளம்ப காரணங்களாகின்றன.

இதனில் எங்காவது ஒரிடத்தில் ஒரு குளறுபடியென்றாலும் வாழ்க்கை முழுதுக்குமே அந்த உயிரினத்தை அரைகுறையாகவோ அல்லது முழுமையாகவோ முடக்கி விடுகிறது. இத்தனை நமது சக்திக்கும் உட்படாத விசயங்களை எல்லாம் ஏதோ இயற்கையின் ஒரு இயங்கு விதிக்கு உட்பட்டு பெறப்பட்ட இந்த உடம்பையும், பரிணாமம் வழங்கிய களிமண் மண்டையும் வைத்துக் கொண்டு நான் அவனை விட செத்த செவப்பா இருக்கேன், காசு இருக்கு என்று ஜல்லி அடித்துக் கொண்டு ஒருவன் உயிரை இன்னொருவன் எடுத்துக் கொண்டிருப்பதை எந்த மரபணு வியாதி இயக்குகிறது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சுயநலமே உயர்வு என்பதாகப் படுகிறது! அதுவும் மரபணுவில் பொதிக்கப்பட்ட ஒரு விசயம்தானே!!

Related Posts with Thumbnails