Monday, May 07, 2018

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்!

என்ன படித்து, எத்தனை நாடுகள் சுற்றி, எவ்வளவு சாமி கும்பிட்டு என்ன பயன். என்றேனும் ஒரு நாள் நாம் ஒரு சராசரி மிருக குணங்களைக் கொண்ட மனிதன் தான் என்று தன்னைப் பற்றிய சுவடை விட்டு விட்டுச் செல்லும் நாளும் வருகிறது தானே!
நான் ஒரு முறை கருப்பர்களும், செவ்விந்தியர்களும் தாங்கள் எதற்காக இத்தனை வலிகளுனூடாக அலைக்கழிக்கப்பட்டு கொல்லப்படுகிறோம் என்று தெரியாமல் செத்து மடிந்த வரலாற்று பாதையின் ஊடாக பயணம் ஒன்று மேற்கொண்டேன்.
அந்தப் பயணத்தின் இறுதி இலக்காக அமைந்து போனது க்ராண்ட் கன்யான், அரிசோனா. அந்த பூகோளத்து மலைச் சுவடுகளின் மீதாக நின்று கொண்டு பரந்து விரிந்து கிடந்த பள்ளத் தாக்குகளை நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது மாலை மங்கி, சூரியன் கூடடையும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு சிவப்பிந்தியர் புல்லாங்குழல் ஒன்றை வைத்து வாசித்து பெரும் பாரத்துடன் அந்த சூரியனை வழி அனுப்பினார்.
அது மேலும் சுமையை இரட்டிப்பாக்கியது. மற்றுமொரு சிவப்பிந்திய பெண்ணுடன் பேசும் பொழுது, எங்கெல்லாம் இந்தப் பரப்பில் உங்களுடைய முன்னோடிகள் வாழ்ந்தார்கள் என்று வினவினேன். அதற்கு அந்தம்மா, அவர்கள் எல்லா இடங்களிலும் இருந்திருப்பார்கள், இருக்கிறார்கள் என்றார். அதாவது அந்த பள்ளத்தாக்கின் சரிவான மலைப் பிளவுகளில் கூட வாழ்ந்திருக்கிறார்கள் என்றார். என்னால் என்னுள் எழுந்த மலைப்பை விலக்கி வைக்கவே முடியவில்லை.
எதனை அவர்கள் தங்களுக்குப் பின்னால் விட்டுப்போக இப்படி ஒரு கடினமான தட்ப வெப்ப சுற்றுப் புறச் சூழலில் வாழத் தலைப்பட்டிருக்க முடியும் என்ற எண்ணம் என்னை வதைக்கத் தொடங்கியது? அவர்களைப் பற்றி மென்மேலும் வாசிக்க வாசிக்க அவர்கள் வரலாற்றில் செய்த மிகப் பெரிய பிழை, அன்னிய மனிதர்களை நம்பியதும், இயற்கையை அளவுக்கு மீறி காதலித்ததுமே காரணமென்பதாக இருந்தது. நிலத்தின் மீது சிறிதும் பற்றற்று அத்தனை பெரிய நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.
பிரிதொரு நாள் வெள்ளையர்கள் வந்து, மூத்த குடிமக்களிடம் நிலச் சுரண்டல் செய்ய ஆரம்பித்து, எழுதி வாங்க பேனா நீட்டும் போது கூட நகைத்துக் கொண்டே “சுப்ரீம் ஃஸ்பிரிட்டோட” இடத்தை யார், யாருக்கு எழுதி கொடுப்பது என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு கூட்டம் இந்த பூமிப் பந்தில் இருக்க தகுதியானதா? விட்டு வைப்பார்களா? இடப் பற்றாக் குறையாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், வறுமை, நோய், பசி, பட்டினி என்று மரணித்துக் கொண்டிருக்கும் ஒரு காடையர் கூட்டம், அனைத்தும் லாகவமாக அமைந்து போன ஒரு புதிய இடத்தை கண்டதும், இது போன்ற அப்பாவி மனிதர்கள் இதனை அனுபவிப்பதைப் பற்றி என்ன நினைத்திருக்கக் கூடும்? சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் கூடிப் பழகியும், பிரிந்து சூழ்ந்தும் அழிதொழித்து விட்டார்கள்.
இயற்கையோடு ஒன்றித்து பேராசை எனும் பேயை அடக்கி வாழ்ந்த ஒரு பெரும் கூட்டம் தன்னுடைய அழிவின் விளிம்பில் கண்டதெல்லாம், வலி, வலி, வலி மற்றும் சாக்காடு.
போலவே, நம்முடைய நிலப்பரப்பிலும் அப்படியானதொரு கூட்டம் கூடி களித்து, சேர்ந்து, பிரிந்து என்று பல அரிதாரங்களை பூசி வரலாறு தோரும் கூடவே நடந்து வருகிறது. சூழ்ச்சியும், வஞ்சகமும் எப்படியோ ஒரு மூலையில் எச்சமாக இருந்து கருகருவென காலத்திற்காக காத்திருந்து நம்பிப் பழகுபவர்களை சாய்த்து விடுகிறது. வரலாற்று புத்தகங்களை புரட்டும் பொழுது டையரி குறிப்புகளாக கிடைக்கும் வலி மிகுந்த முனகல்களை, வரிகளுக்கிடையே வாசிக்கும் பொழுது நமக்கு அவைகள் ஒரு சங்கேத குறிப்பாக கிடைக்கப்பெறுகிறது.
இன்று நாம் அழுது புலம்பும் அத்தனையும் ஏற்கெனவே அந்த வஞ்சகத்திற்கும், சூழ்ச்சிக்கும் இரையாகிப் போன நம் முன்னோடிகளின் வலி மிகுந்த முனங்கல்தான். மீண்டும் மீண்டும் அதே பாசத்தில் வழிக்கி வழிக்கி விழுந்து கொண்டே இருக்கிறோம். ஏனெனில் அந்த நோயின் மூலக் கூறு நானோ பார்டிகில்ஸ்களுக்கு இணையானது. உள்ளிருந்தே மெள்ளக் கொல்லக் கூடிய வாக்கில் பாவனையாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு எதிரியின் குணம் தன்னிருப்பை அறிவித்து விட்டு நேருக்கு நேராக சந்திப்பது. ஒரு ஒட்டுண்ணியின் குணம் சார்ந்திருந்து மெல்ல அனுபவித்துக் கொண்டே கொல்லுவது. இதில் இரண்டாவது ரகம் நம்மை ஆரோக்கியமாக வாழவே விடாது. நோஞ்சானாக நம்மை வைத்து தனக்குத் தேவையானதை அடைந்து கொள்வதற்கான அத்தனை தகவமைவுகளையும் பெருக்கிக் கொள்ளும். நோய் கூறு அறிந்தாலே ஒழிய இதற்கு வைத்தியமே இல்லை.
நம்முடைய சமூகத்தின் சாபக்கேடு இது. சிவப்பிந்தியர்கள் ஓரளவிற்கு நேராடியான எதிரியை நிராயுதபானிகளாக சந்தித்தார்கள். போராடினார்கள், மாண்டார்கள். ஆனால், நாம் எதிர் கொள்ளும் ஒட்டுண்ணிகளோ பச்சோந்தித் தனமானது, கூடவே இருந்து நிறத்தை மாற்றி இரண்டர கலந்து விட்டது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்றே தனது இருப்பை புரண்டு காமித்தாலும், மீண்டும் தேவையானதை அடைந்து கொண்டு ஹைபர்னேசன் மோடிற்கு சென்று விடுகிறது. என்னதான் செய்வது.
விசயத்திற்கு வாரேன். பல ஆண்டுகளாக நானும் ப்ரீ மெச்சூர்டாக வயசுக்கு வந்திட்டதாக அறிவிச்சிக்க வேண்டாம்னு காலம் கொடுத்து கொடுத்து ஒவ்வொரு கதவா தட்டித் தட்டி மாதிரி எடுத்துப் பார்க்கிறேன், ஒண்ணு சொன்ன மாதிரியே அந்த குணம் ஏதோ ஒரு பாயிண்டுல வெளிக்காமிச்சிடுது.
இப்பொழுது நீட், நுழைவுத் தேர்வு, வெறுப்பு அரசியல், காவேரி நதி நீர் பங்கீட்டு விசயம்னு நடக்கிற அனைத்து சமூக நீதி சார்ந்த விசயத்திலும் கொலகாரத்தனமாக எதுவுமே தவறாக தெரியாமல், முட்டுக் கொடுத்து ஒண்ணுமே தெரியாத அப்பாவிகளாக அதே நேரத்தில் தெளிவா எடுக்கிற நிலையைப் பார்த்து, நான் வயசுக்கு வந்துட்டேன்னு அறிவிச்சு கதவை இழுத்து சாத்திக்கலாம்னு ஒரு முடிவிற்கு வந்திருக்கேன்.
அன்பர்களே, நீங்கள் எனக்கு நிறைய கத்துக் கொடுத்திருக்கீங்க. அதெல்லாம் பெரும் வாசிப்பினாலே நீங்களே எடுத்த முடிவா, இல்ல நான் டவுசர் போட்டுக்கிட்டு நாலாப்பு படிக்கும் போது, அதே வகுப்பில நீங்க இருந்தாலும் பத்தாப்பு படிக்கிற அளவிற்கு உலகறிவு புகுத்தப்பட்டு வெளிக்கிடுறீங்களான்னு தெரியாது. ஆனா, இது நானாவே விரலை சுட்டுச் சுட்டு கத்துகிட்டது. நாய் வால நிமிர்த்த முடியாதுன்னு!
சிவப்பிந்தியர்களுக்கும் நம் முன்னோடிகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிது. ஆனா, அது காலவதியாகிப் போனது. மூளையை பலப்படுத்தணும், சூழ்ச்சி வெல்லும்!

0 comments:

Related Posts with Thumbnails