Wednesday, May 02, 2018

வாயால் வடை சுடுவது எப்படி?

முதலில் 2020ல் இந்தியாவை சூப்பர் பவராக வளர்த்தெடுப்போம் என்றார்கள். ஆனால், இப்பொழுதோ நம்மைச் சுற்றி நடந்தேறும் நிகழ்வுகளை காணும் பொழுது 1920களுக்கு முன்பிருந்த காலத்திற்கு முன்பாக நம்மை கடத்திச் சென்று விட்டார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
வாயால் வடை சுட முடியுமா? முடியும் என்கிறார்கள் முழித்துக் கொண்டே கனவு காணச் சொல்பவர்கள். கடந்த நான்கு வருடங்களில் என்ன மாதிரியான அடிப்படை கட்டமைப்புகள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் சென்றடைந்திருக்கிறது.
எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிர் மறையான செயல்பாடுகளும் அதனையொட்டிய ஓலங்களும் தான் காதில், கண்ணில் விழுகிறது. வெற்று மாயையைக் கொண்டு ஊதிப் பெருக்குவதால் யாருக்கு லாபம்? அவர்களைச் சுற்றி உடனடியாக லாபமடையும் ஒரு சில சதவிகிதத்தினரைத் தவிர. அது உண்மையான வளர்ச்சியா, நிலைக்குமா? வந்த மாதிரியே ஒரு நாள் அதற்கும் கூடுதலாக பிய்த்துக் கொண்டு சென்று விடாதா?
அப்படிச் சமச்சீரற்ற ஒரு வளர்ச்சிக்குள் வாழ எத்தனிப்பவர்களும் அதே நிலப்பரப்பையும் இயற்கை வளங்களையும், சாலைகளையும் தானே பகிர்ந்து கொண்டு ஒரு தேசத்து மக்களாக வாழ வேண்டும். எப்படி ஆயிரம் ஆண்டு காலங்களாக அதே மனிதமற்ற முறையில் மேல் கீழ் என மக்களை பிரித்து, பகிர்ந்து கொண்டு வாழ மனமற்ற மடையர்களாக வாழ்ந்தோமோ அப்படியே மீண்டும் இந்த நவீன காலத்திலும் எப்படி ஒப்பேத்த முடியும்?
நடிப்பும், பொய்யும் புரட்டும் செய்து மக்களை என்னவோ நேற்றே அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டு வாசிகளைப் போல நினைத்துக் கொண்டு அத்தனை சூழ்ச்சிகளோடு தங்களுக்கு வேண்டியதை இன்று அரசு அதிகாரம் தங்கள் கைகளில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எப்படிச் சுரண்டி வஞ்சிக்க முடியும்?
இது அனைவருக்குமான தேசமில்லையா? எப்படி வெக்கமே இல்லாமல் நாடு நாடாக சென்று அதுவும் தனிவொரு விமானத்தில் பறந்து ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து இறங்கி வரும் தேவ தூதனைப் போல கைகளை ஆட்டிக் கொண்டே உலாவித் திரிய முடிகிறது?
நீ வரும் ஊரிலிருந்துதானே பத்து வயதிற்கும் குறைந்த வயதுடைய சிறுமிகளை கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள்? இன்னொரு இடத்தில் இன்னொரு சிறுமியை வன்புணர்ந்து கொன்றவனுக்கு தண்டனையாக ஆறு மாதம் தண்ணீர் சப்ளை செய்யச் சொல்வதும், மாட்டுக்கறி வைத்திருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் அடித்துக் கொல்வதும், தன் மதம் சாரா தன்னுடைய நாட்டு குடிமக்களை வேற்றொரு நிலத்து மக்களாக பாவிக்கச் சொல்லி வெறுப்பு அரசியல் பேசுவதும், அனைவருக்கும் சென்றடைய வேண்டிய கல்வியை தட்டிப் பறித்து நுழைவுத் தேர்வு என்ற பெயரில் பிற மாநில கல்வி திட்டத்தில் படித்து தேர்ந்த மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி இத்தனை பெரிய மக்கட் தொகை கொண்ட தேசத்தில் எது போன்ற கூட்டு பங்களீப்பு கடைசி கிராமம் வரை சென்றடையும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற வாக்கில் செய்து முடித்திருக்க முடியும்.
மோடியைப் பற்றி இது வரையிலும் நேரடியான எது போன்ற விமர்சனங்களும் என்னிடமிருந்து வைத்தது கிடையாது. ஆனால், இப்பொழுது வைக்கிறேன். இது வரையிலும் ஊதிப் பெருக்கிய அளவிற்கு கட்டியெழுப்பப் பட்ட பிம்பத்திற்கு பைசாவிற்கும் உபயோகமற்ற ஒரு பிரதமரே இவர். தன்னுடைய தேசம் பொருத்தும், அதன் பிரச்சினைகள் குறித்தும், தன்னையொத்த பிற்படுத்தப்பட்ட மிகவும் கீழ் நிலையில் வாழும் சக தேச மனிதர்களைப் பற்றியும் கிஞ்சித்தும் அறிவற்ற ஒரு மூடராகத்தான் ஓடித் தேய்கிறார்.
நல்ல உடைகளையும், உணவையும் வழங்கி, எழுதிக் கொடுப்பதை பல நாள் பழக்கிக் கொண்ட (எரிச்சலூட்டும்) உடல் மொழியைக் கொண்டு வழங்குவதற்காக, ஒரு வாடகைக்கு அமர்த்திக் கொண்ட உள்ளீடற்ற ஒரு மனிதராகாத்தான் இவரை என்னால் பார்க்க முடிகிறது.
நாம் 1980களிலேயே கவர்ச்சி அரசியல் என்றால் என்ன அதன் விளைவுகள் எது போன்றது என்பதனை எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக் கொண்டோம். இவர் இப்பொழுதே இந்த இணைய பலூனை நம்பி சாலையை பெருக்கிறார். கங்கையை சுத்தம் செய்கிறார். கழிவரைக்கு குழி தோண்டி செங்கல் வைத்து சிமெண்ட் பூசுகிறார். கிழவிக்கு செருப்பு போட்டு விடுவது என்று காலாவதியாகிப் போன மயக்க அரசியல் அதுவும் உலகம் விழித்துக் கொண்ட வேலையில் செய்து வருகிறார். இது யாரை ஏமாற்ற? தன்னையே ஏமாற்றிக் கொள்கிறோமே ஒரு பிரதமராக என்று ஒரு நொடி மின்னலாக தோன்றி மறையாதா?
அத்தனையும் வெற்று வார்த்தைகள். அண்மையில் வந்த ஒரு செய்தி- உலகில் வாழ
லாயக்கற்ற அதி மாசுப்பட்ட நகரங்களில் 15ல், பதினான்கு நகரங்கள் இந்தியாவில் இருக்கிறது என்று ஓர் அறிக்கை தெரிவித்திருக்கிறது. அனைத்தும் இவருடைய ஆட்கள் ஆளும் மாநிலங்கள். இப்படி தலை வெட்டுப்பட்ட கோழி போல ஓடும் திசையறியாமல் ஓடிக் கொண்டும், தன்னுடைய மக்களுக்கிடையே வெறுப்பு அரசியலை விதைத்து “கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கு” இணையாக அரசியல் செய்து கொண்டிமிருந்தால், அவைகள் கடைசியாக நம்மை எங்கே கொண்டு நிறுத்தும்?

ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தனுக்கும் கீழே... அதி விரையில் அது சாத்தியமே. வரும் 2019ல் மட்டும் வெற்றியை அவர் தலையில் தூக்கி வைத்து விட்டால், புரோகிதர் இல்லாமலே காரியம் செய்து விடுவார்கள்.

0 comments:

Related Posts with Thumbnails