Monday, July 25, 2011

அய்ன் ராண்ட் உடன் சில வாரங்கள்: The Fountainhead

ஓர் ஆறு மாதங்களுக்கு முன் முதன் முதலாக அய்ன் ராண்ட்  என்ற பெயரை வலையுலகின் மூலமாக கேள்விப்பட்டேன் அதுவும் ஒரு சர்ச்சையின் மூலமாக. அந்த சர்ச்சையின் பேசு பொருள் எதுவாக இருந்தது என்றால் , டமிள் சமூகத்தின் ஆன்மா ஒன்று அந்த பெண் எழுத்தாளாரை இடக்கையால் தள்ளி வைத்து விட்டு நகர்ந்து சென்று விட வேண்டும் என்றும், ஒழுக்க நெறிகளற்ற பெண்மணி கடைசி காலத்தில் மனநலம் குன்றிய நிலையில் மருத்துவமனையிலேயே கிடந்து உயிரை விட்டார் என்ற படியாக மலினப்படித்தி எழுதியதின் பொருட்டு சில முணுமுணுப்புகளை கிளப்பி விட்டிருந்தது.

அந்த சர்ச்சையின் மூலமாக அய்ன் ராண்டின் பெயரை தெரிந்து கொள்ள நேர்ந்த எனக்கு நல்ல வேலையாக சுய புத்தி இருந்ததினால் ஓரங்கட்டி வைத்துவிடாமல் ஒரு நாள் ராண்டின் The Fountainhead என்றதொரு முக்கியமான படைப்பையும் வாசிக்கும் படியான ஒரு நாளையும் அமைத்து கொடுத்திருந்தது. அந்த வாய்ப்பை ராண்டின் - படைப்புகளாக முன் மொழிந்த ப்ரியாவிற்கும், பிடிஎஃப் புத்தகங்களை கொடுத்து மகிழ்ந்த வானம்பாடிகள் பாலா சாருக்கும், நீ அவசியம் படித்தே ஆகவேண்டும் என்று முதலில் வாசித்து விட்டு உசிப்பேத்திய குட்டிபையா சீதாவிற்கும் இத்தருணத்தில் எனது கோட்டான கோட்டி நன்றிகள். இத்தனை பேர் சேர்ந்து என்னை அந்த சமுத்திரத்திற்குள் தள்ளி விட தேவைப்பட்டிருக்கிறது.

நானும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக முங்கி எனது கொள்ளளவிற்கும் அதிகமான விசயங்களை சவ்வூடு பரவல் ரேஞ்சிற்கு என்னுள் ஏற்றிக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு போதை நிலையிலேயே அந்த புத்தகத்தை முடிக்க மனதில்லாமல் முடித்து வைத்திருக்கிறேன்.

எங்கிருந்து எப்படி அத்த புத்தகத்திற்கான எனது பார்வையை இறக்கி வைப்பது என்பதனைப்பற்றி எந்த ஓர் ஐடியாவுமில்லாமல் ஓர் இலக்கற்ற முறையில் ஆரம்பித்திருக்கேன். எழுத்தும், மனதும் அதன் வேலையை மிகச் சரியாகச் செய்யும் என்ற நம்பிக்கையில். நண்பர்களுடன் இந்த புத்தகம் சார்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது புதினத்தில் வரும் சில முக்கியமான கேரக்டர்களுக்கு ஒரு கட்டுரையாக எழுதலாமென்று முடிவெடுத்தோம். ஏனெனில், பேசுவதற்கு பல கோணங்கள் இந்த புதினத்தில் இருக்கிறது. ஒவ்வொரு குணாதியசமும் இந்த மானுடத்தின் மாண்பை, தனது மனத்தின் தனிப்பட்ட சுயநல குண நலனை அழுந்த பதித்துச் செல்கிறது.

புதினம் காதல், தனிமனித விடுதலை, சிந்தனை, தன்முனைப்பு, வஞ்சனை, விஷ மனிதர்களின் கண்ணுக்கு தெரியா தகிடுதத்தங்களின் அணி வகுப்பென பன்முக பரிமாணங்களில் புகுந்து விளையாண்டு நம்மை காலப் பெருங்கடலில் அடித்துச் சென்று விட வைக்கிறது. நிச்சயமாக கதையின் கரு, நடை, வெளிப்படுத்தும் மொழியின் ஆளுமை இவைகளை கருத்தில் கொண்டால் இந்த புதினம் கடந்த பத்தாண்டுகளுக்குள்தான் எழுதி இருக்கப்பட வேண்டுமென்ற பிரமையை கொடுக்கிறது.

ஆனால், நம்பவே முடியாத வாக்கில் 1943ஆம் ஆண்டு இந்த புத்தகம் பதிப்பிற்கு வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ட்ராஃப்டாக எழுதப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் கிடப்பில் போட்டு தூசு தட்டல் வேறு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றால் இந்த புதினத்தின் வயதினை நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

இருப்பினும் கதையின் களம், கரு இன்றும் நம்மிடையே நடந்து கொண்டிருப்பதுதான். ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருப்பவருக்கு இது தனக்கும் இந்த கம்பெனிக்குமான உறவு நிலையை அல்லவா பேசிச் செல்கிறது என்ற பின்னணியை பதித்துச் செல்லுவதாகட்டும்; ஒரு தினசரி நாளிதழ் நடத்தும் நிறுவனத்தின் தொழில் சார்ந்த நுணுக்கங்களை எடுத்து இயம்பும் இடமாகட்டும்; கட்டடக் கலையின் நுணுக்கங்களை அதன் வேருக்குச் சென்று எப்படி ஒரு கவிதை படிப்பவன் தனது படைப்பில் ‘ஆன்மா’ இருக்க வேண்டும் என்று நம்புகிறானோ அதனைப் போன்றே இந்த புதினத்தில் கட்டடங்களுக்கும் ஆன்மா உண்டு என்று வாதிடுவதிலாகட்டும்; மேலாக தீராக் காதலின் நிலையாமையை அடிக்கோடிட்டு சொல்லும் இடமாகட்டும் அனைவருக்கும் இந்த புதினத்தில் கவனித்து செல்ல இடமுண்டு.

புதுமைகளை புகுத்துவதில் எத்தனை தூரம் வைராக்கியமும், தொலை நோக்கு சிந்தனையும் கொண்டிருந்தால் மட்டுமே எதிர்ப்புகளை சந்தித்து தன்னுடைய பார்வையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற விசயம் இந்த இடத்தில் என்னுடைய சுய அனுபவத்தில் தெரிந்து கொண்டது வந்து போகிறது. ஊரில் எனது அப்பாம்மாவிற்கு வீடு கட்டும் பொழுது நடைபாதையை சற்றே வித்தியாசமாக வளைத்து செய்ய எண்ணி, கயிறு போட்டு நெளிக்கும் பொழுது - வந்த எதிர்ப்பு லோகல் கொத்தனாரிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும்.

அந்த நிலையில் பள்ளம் வெட்டிக் கொடுக்க உதவிய துரைராஜ் மட்டுமே எனக்காக நின்றார். அது போன்றே சமையலறை திறந்த வெளியாக லிவிங் அறையுடன் இருக்க வேண்டுமென்று மீண்டும், மீண்டும் கூறியும் தனி அறையாக ஆக்கி அதற்கு கதவு வழியும் விட்டிருந்தார்கள், எதிர்ப்பை மீறியும் மீண்டும் இடித்து எனக்கு தேவையான வழியில் செய்து கொண்டது இந்த புதினத்தை வாசிக்கும் பொழுது ஆங்காங்கே எட்டிப்பார்த்தது.

இந்த புதினத்தின் நாயகன் றோர்க் ஹவொர்ட் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவதில் ஆரம்பிக்கிறது நம் பிள்ளைகள் நேர்மையாக வாழ்க்கையை கற்று, ஏற்றுக் கொள்ளும் மனத் தின்மையை விதைப்பதற்கான முதல் தன்னம்பிக்கை விதை. அவன் அவ்வாறு வெளியேற்றப்படுவதற்கான காரணம் தனது சுயமான சிந்தனையில் உதித்த கட்டட வரைபடத்தை தனது செய்முறை பயிற்சிக்கான வழங்கலாக தனது உயர் ஆசிரியர்களிடம் முன் வைக்கும் பொழுது அது அவர்களுக்கு உவப்பானதாக இல்லை.

கேள்விகள் கேக்கப்படும் நிலையில் அவன் வாதிட்டு நிற்பது எப்படி மனிதர்களுக்கு தேவையில்லாமல் எந்த உறுப்பும் அநாவசியமாக இந்த இயற்கை வழங்க வில்லையோ அது போன்றே எந்த தேவையற்ற கலப்புமில்லாமல் ஒரு கட்டடத்திற்கு தேவையான கச்சா பொருட்களை பயன்படுத்துவதும், அதன் அங்கங்களை அமைப்பதும் அவசியமென்று கூறி ரோமானிய கட்டடங்களையே (Parthenon) குறை கூறிச் செல்கிறான், றோர்க். அப்படியாக கூறியதின் விளைவாக வெளியேற்றப்படும் நிலையிலும், தான் சிந்தித்து வடிவமைத்ததில் எந்த தவறுமில்லை என்று அவன் மீது வைக்கும் நம்பிக்கையே அவன் நம்மிடையே வாழ தகுதியற்றவன் என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. அந்த ஓட்டத்தில் எந்த சமரசமுமில்லாமல் எப்படி அவன் பயணம் தொடர்கிறது என்பதாக விரிந்து செல்கிறது. இதிலிருந்தே ஓரளவிற்கு யூகிக்க முடியுமே இந்த கதையாசிரியை எப்படியாக மனிதர்களுக்கு நிறமூட்டி நமக்கு கதை சொல்லிச் செல்லப் போகிறார் என்று.

றோர்க்கின் மறுமுனையை நிறமூட்ட எண்ணி அவனது கல்லூரியிலேயே சீனியர் மாணவனாக மேற்படிப்பு படிப்பதற்கென பண முடிப்புடனும், வேண்டாத பட்சத்தில் உடனடியாக வேலையில் சேருவதற்கான ஒரு பெரிய கம்பெனி அழைப்புடனும் வெளியேரும் பீட்டர் கீட்டிங்ஸ்; நமது மெஜாரிடி மனிதர்களின் எதார்த்த உருவம் அவன். அடுத்தவர்களின் உழைப்பையும், காரியத்திற்காக எதனையும் இழக்க தயாராக இருக்கும் சுயபுத்தியற்ற, குழப்பமான குணாதிசியம் - எடுப்பார் கைபிள்ளை. சூழல்கள் தோறும் அவனது சுரண்டலையொட்டிய வளர்ச்சியே குற்ற உணர்ச்சியாக வந்து போவதனை எப்படி தவிர்த்து முன்னேறிச் செல்கிறான் போன்ற இடங்கள் நம்மை நாமே தரிசித்து செல்வதாக அமைந்து விடுகிறது.

பல வருடங்களாக காதலித்து கொண்டிருக்கிற ஒருத்தியை தனது சொந்த லாபத்திற்காக திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்ட முதல் நாள் மாலையில் விட்டுவிட்டு தான் வேலை செய்யும் கம்பெனி முதலாளியின் பெண்ணை (டாமினிக் ஃப்ராங்கன்) திருமணம் செய்து கொள்கிறான். அதற்கு பின்னணியில் அவன் அம்மா கொடுக்கும் பாடங்கள் ‘பணம், புகழ்’ என்ற போதையின் அடிப்படையில் இயங்கும் குடும்பங்களுக்கு சாலப்பொருத்தமான குணாதிசியமாக வந்து போகிறது.

இருப்பினும் தான் ஏற்கெனவே காதலித்த காதலியிடத்தில் அத்தனை நெருக்கமாக தன்னை உணர முடிந்தாலும், பணத்திற்காகவும், வெளிப்புற தேவைகளுக்காகவும் தன்னை விட, தனது அலைவரிசைக்கு சற்றும் பொருத்தமில்லாத வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறான். இந்த சூழ்நிலை விலங்கினை போட்டுக் கொள்பவர்கள் நம்மில் எத்தனையோ பேர் உண்டுதானே? ஏதேதோ தேவைகளுக்காக, எத்தனை சமரசங்கள் செய்து கொண்டு வாழ்க்கைத் துணை விசயத்திலும் சோடை போய் விடுகிறோம். இந்த புத்தகத்தில் மண வாழ்க்கைக்கு பின்னான பீட்டரின் வாழ்க்கை டாமினிக்குடன் நடக்கும் உரையாடலைக் கொண்டு, அது போன்ற மனிதர்கள் எது போன்ற நடை பிணங்களாக உலாவக் கூடுமென்ற படத்தை நன்கே திரைவிரித்துக் காட்டுகிறது.

பிரிதொரு நாளில் தான் கட்டிக் கொண்டவளையே, தனக்காக ஒரு பெரிய கட்டட ப்ரொஜெக்டை அடைய வேண்டி வேறு ஒருவனுக்கும் விட்டுக்கொடுத்து அதன் மூலமாக வரும் பணத்தையும் பேரையும் ஈட்டுகிறான். அது போன்ற சூழ்நிலைகள் எதார்த்த வாழ்வில் திரைமறைவிற்கு பின்னாக, இருட்டடிக்கப்பட்ட மன விகாரங்களாக சமூகத்தில் நடைபெறுவதினை போகும் போக்கில் அந்தந்த சூழ்நிலைகளில் அதற்கான குணாதிசியங்களைக் கொண்டு பேசிக் கொள்ளும் அழுத்தமான, அழுக்கான வார்த்தைகளைக் கொண்டு நகர்த்திச் செல்கிறார் அய்ன் ராண்ட்.

பீட்டர், தொழில் சார்ந்து பெரும்பாலான சூழ்நிலைகளில் றோர்க்கின் உதவியையே நம்பிக் கிடந்தாலும், எப்படியாக சூழ்ச்சிகளின் வழி முன்னேறி மறுமுனையில் சரேலென சறுக்கி ஆரம்பித்த இடத்தை விட இன்னும் பாதாளத்தில் விழுந்து கூனிக் குறுகி, ஒழுக்க நெறி போண்டியாகி மனதில் தன்னை ஒன்றுமற்ற வெற்றிடமாக உணர்ந்து கொள்கிறான் ஒருநாள் என்பதாக விரிந்து செல்கிறது. அவனுக்கான ஒவ்வொரு வார்த்தைகளும் நம்மை நாமே மறுபரிசீலனை செய்து கொள்ள சொல்வதாக அமைந்துவிடுகிறது.

டாமினிக் ஃப்ராங்கன் முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையையும், தைரியத்தையும் முதன்மையாகக் கொண்டு இந்த புதினத்தின் சில முக்கியமான குணாதிசியங்களுக்கு முகமூடி கழட்டும் வேலையில் கன கச்சிதமா செய்ய வருகிறது. மற்றவர்களுடன் அவளுக்கான உரையாடல் மிகவும் கூர்மையானது. எந்த பாசாங்குமில்லாமல், ஆன்மா ஊடுருவி தன் நிலை உணர்த்துவதாகவே அமைந்திருக்கும். ஆனால், டாமினிக்குகும், றோர்க்குமிடையேயான காதல் எப்படியாக வார்த்தையில் போடுவதென்றே தேடுமளவிற்கான அதிர்வுகளை உருவாக்கவல்லது.

காதலில் மிக்க முதன்மையானது விட்டுக் கொடுப்பது. றோர்க்கின் குணாதிசியம் எதற்காகவும் தொழில் ரீதியில் தனது கொள்கையை தளர்த்தி கொள்ளாதது. நேர்மாறாக டாமினிக்கின் மீதான காதல் வெளிப்படையாக றோர்க்கிடையே இருந்து மொழி அளவில் வெளிப்படுத்ததுதில்லை எனினும், டாமினிக்கின் எதிர்மறையளவில் முதலில் தொழில் ரீதியாகக் கூட றோர்க்கிற்கு பல நஷ்டங்களை ஈட்டித் தந்தாலும் றோர்க், டாமினிக்கிடம் தனது வெறுப்பை உமிழ்வதாகவே இல்லை.

டாமினிக்கின் மனதினுள் றோர்க் ஓர் உயர்ந்த இடத்தை பெற்றிருக்கிறான். நடைமுறையில் ஒருவன் பல உயரங்களை எட்ட வேண்டுமானால் பல சமரசங்களை, மனிதர்களை ஈட்டிக் கொண்டாலே அதற்கு தகுதியான ஆள் எனும் எதார்த்த நிலையில் றோர்க்கின் எதிர் நிலையை நன்கு அறிந்தவளாக டாமினிக் அவனைப் பற்றி கவலை கொள்கிறாள்.

எப்படியாக இந்த குணத்துடன் இவன் எதிர்காலத்தில் எது போன்ற பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கக் கூடும் என்று பயத்தின் பொருட்டே அவனுக்கு எப்பொழுதாவதே அமையும் கட்டட ப்ராஜெக்ட்களை கூட எதிர்மறையாக விமர்சனம் எழுதுவதாக எழுதி, அந்த தொழிலிருந்தே விலக்கி விடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதாக நினைத்து இயங்குகிறாள். இது இந்த புதினத்தில் பொதித்து வைக்கப்பட்ட ஒரு அருமையான காதல் கதை.

இது போன்ற காதலின் அடிப்படையில் அதனை பேசுவதற்கென ஒரு நாளும் அமைகிறது. யாரிடமும் காட்டாத தனது மற்றொரு முகத்தை காட்டுகிறாள். றோர்க்கின் மீதான அதீத காதலால், அவனை இந்த தொழிலை அப்படியே விட்டுவிட்டு, நகரத்திலிருந்து தூரமாக விலகி, எங்காவது கிராமத்திற்கு சென்று பிழைத்து கொள்ளலாம் என்று அதற்கான தனது தரப்பு காரணத்தையும் வைக்கிறாள். டாமினிக்கின் நியாயமற்ற பயத்தையொட்டி காரணங்களை மறுத்து முதலில் அவளின் எண்ணங்களை திருத்திக்கொள்ளச் சொல்கிறான்.

ஆனால், அவளுக்கு பயமே எஞ்சியிருப்பதால் ஒரு உயர்ந்த காதலனுக்கே உரிய தொனியில், அவன் கூறுவது - நீ எடுக்கும் எந்த ஒரு முடிவிலும் நான் தலையிட போவதில்லை எனவும், நீ எப்பொழுது அந்த பயத்திலிருந்து மீண்டு நம்பிக்கை பெறுகிறாயோ அந்த நாள் வரையிலும் காத்திருக்கிறேன், உன்னை நான் காதலித்து கொண்டிருமிருப்பேன் என்று கூறி வழியனுப்பி வைக்கிறான் - பின்னான தத்துவம் நேசிப்பவளுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கிப் பார்ப்பது தானே நேசிக்கப்பட்டுக் கொண்டிருப்பவனுக்கு அழகு என்ற கான்செப்ட் மென்மையாக பொதித்து வைக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பின்னான டாமினிக்கின் ஓட்டம் மிகவும் ஆர்வமூட்டக் கூடியது. இங்குதான் அய்ன் ராண்ட் பல எதிர்மறை விமர்சனங்களை, சலசலப்பை வாசிப்பவர்களின் மனத்தினுள் ஏற்படுத்தியிருக்கக் கூடும். பீட்டர் கீட்டிங்ஸ், டாமினிக் அப்பாவின் கம்பெனியிலேயே வேலை செய்து வருவதால், அவளை திருமணம் செய்து கொண்டால் அந்த நிறுவனத்தை தனக்கானதாக ஆக்கிக்கொள்ளலாம் என்று கணக்கு போட்டு வைத்திருப்பான்.

டாமினிக் அப்பாவும் பீட்டர் திருமணம் செய்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று ஆசைபடுகிறார். அது டாமினிக்கிற்கும் தெரியும். பீட்டர் அவளை இம்ப்ரெஸ் செய்வதற்கென போலியான காதல் வார்த்தைகளை சொல்லும் பொழுது டாமினிக்கின் எதிர்வினை வெரி ஷார்ப் அண்ட் ஸ்மார்ட். பின்னாளில், றோர்க்கிடமிருந்து விடைபெற்றவளாக, அவனது நண்பன் பீட்டர் கீட்டிங்ஸை அவளின் அப்பாவிற்கு பிடித்த மாதிரியே திருமணம் செய்து கொள்கிறாள்.

அவனுடன் வாழும் வாழ்க்கை பல பாடங்களை பீட்டருக்கு தேவையான உள் மன விசாரணைகளை நடத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. கூடவே இருக்கிறாள். ஒரு மனைவியாக, அலங்கார பொருளாக அவனுக்கு தேவையான முறையில் எந்த வித எதிர்ப்புமே இல்லாமல், அவனுக்கு தேவையான ஒரு கண்ணாடியாகவே பிரதிபலித்து வருகிறாள். அதனையும் பீட்டர் உணர்ந்தவனாக அந்த மண வாழ்க்கையில் வளர்ந்தும் வருகிறான்.

ஒரு நாள் அதற்கு மேலும் அவனால் எடுத்து கொள்ள முடியாத சூழலில் நேராகவே கேட்கும் பொழுது அவனுடனான சம்பாஷணை ஒவ்வொரு திருமணத்திற்குள் ஊறி நொதித்துப் போன மன நிலையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. அந்த நிலையில் பீட்டரை அணுகும் டாமினிக்கின் நிலை தன்னை விட பல படிகள் வளர வேண்டி உள்ள ஒரு குழந்தையை மதிப்பது போலவேயான காட்சி விரியும்...

பேசியே தனது ஆளுமைக்குள் வைத்துக் கொள்ளும் சூழ்ச்சிகள் நிரம்பிய மத போதகரையொட்டிய ஒரு குணாதியசம்; கிட்டத்தட்ட ஏனைய அனைத்து கதாபத்திரங்களின் வாழ்க்கையிலும் குறிக்கீடுவது போல எல்ஸ்வொர்த் டூஹே கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தின் மூலமாக மத போதகர்கள் எது போன்ற வேலையை நம்முடைய சமூகத்தில் செய்து வருகிறார்கள் என்று வாழை பழத்தில் ஊசியை ஏற்றுவது போல சொல்லி விளக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அது போன்ற மனிதர்களின் செயற்பாடுகளும் வெளிப்புற தோற்றத்தில் சுயநலமற்ற செயல்களாக காட்சியளிப்பதால், இனங்காண்பதும் கடினம்.

டூஹே, மிக மிக நல்லவராக பேச்சு சாமார்த்தியத்தை வைத்து சமூகத்தின் அனைத்து தரப்பிலும் உள்ள பெரிய மனிதர்களை இந்த இயற்கைக்கு, கடவுளுக்கு முன்னால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதாக நம்ப வைத்து இவரை விட பெரிய ஆளாக ஆகிவிடாத படிக்கு ஒரு செக் மேட்டாக இருந்து கொண்டு, தன்னை ஒரு கடவுள் அவதாரமாக காட்டிக் கொள்கிறார். அதனை கதையோட்டத்தின் ஊடாக அய்ன் ராண்ட் தோலுறித்து அருமையாக நம் முன்னால் காட்டத் தவறவில்லை.

சராசரிகளின் குணாதிசியங்களில் பொருந்திப் போகாத றோர்க் போன்றவர்களின் ஆன்மாவை உடைக்க, கட்டட துறை சார்ந்த ஏனைய இஞ்சினியர்களை தான் வேலை செய்யும் நாளிதழிலில் பாராட்டி எழுதுபவர் கடைசி வரையிலும் கண்டும் காணாமல் இருப்பது போலவே இருக்கிறார், டூஹே. டாமினிக்கும் அதே பத்திரிக்கை கம்பெனியில் வேலை செய்யும் பொழுது அவருக்கு இணையாக சாலஞ்சிங் முறையில் உரையாடக் கூடியவராக டாமினிக் அமைந்து போவதால், டூஹேவிற்கு, டாமினிக் மீதான கவனம் திரும்புகிறது. டாமினிக்கிற்கும் டூஹேயின் சூழ்ச்சியும் எதனை நோக்கிய ஓட்டமாக அவரின் வாழ்க்கை ஓடுகிறது என்பதனையும் அறிந்தவளாக இருக்கிறாள். ஆரம்பித்திலிருந்தே றோர்க்கிற்கும், டாமினிக்கிற்கும் இடையிலான வெறுப்பு-காதல் பகுதி டூஹேயால நன்றாகவே புரிந்து கொள்ளப்படுகிறது . பீட்டர் குழப்பமான சராசரி மனிதன் என்பதால் மிக எளிமையாக டூஹேயால் அவரின் பிடிக்குள் ஆழ்ந்து அழிவுப் பாதையை தேர்ந்தெடுக்கிறான்.

டாமினிக், டூஹே இருவரும் வேலை பார்க்கும் நாளிதழின் முதலாளியான க்கெய்ல் வைனாண்டையே, தனது சூழ்ச்சி வளையில் தள்ளி விட்டு பார்க்கிறார். வைனாண்ட், மத போதகருக்கு எதிர் முனையிலிருந்து (சரியான கல்விச் சூழ்நிலையற்று, குடும்பமையாமல், ரெளடி வாழ்வுச் சூழல்) வாழ்க்கையில் முன்னேறி பெரும் தொழிலதிபராகிறான். இருவருக்குமே தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அனைத்து விதமான சூழ்ச்சிகளையும், தேவையான பொழுது மனிதர்களை பயன்படுத்தி கொள்வதும், தூக்கி எறிவதுமான அனைத்து குணாதிசியங்களும் பொருந்தி வருவதாக ஒரு முன்னால் கேங்க் தலைவனான வைனாண்டை, டூஹேவுடன் இணைத்து சொல்வது மிக கவனிக்கதக்கது. இதுனாலேயே இந்த புதினத்திற்கு பல கோணங்கள் உண்டு என்றும், மிக்க விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கக் கூடுமென்றும் கருதுகிறேன்.

டாமினிக்கிடமிருந்து பீட்டர் விலகி செல்வதற்கான சூழ்நிலையையும் டூஹேயே வழங்குகிறான். வைனாண்ட் தன்னை வளர்த்து எடுத்துக் கொண்ட சூழல் பணமும் அதற்குண்டான சக்தியும் எந்த மனிதரையும் வளைக்கும் சக்தி வாய்ந்தது என்று நம்பவைக்கிறது. அப்படியாக அவைகளைக் கொண்டு பல மனிதர்களையும் அவர்களின் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு விலைக்கு வாங்கி, பிடிக்காத பொறுப்புகளை எடுத்து நடத்துமாறு அமைத்து கொடுத்து குரூர திருப்தி அடைந்து கொள்பவான்; இது போன்று இன்றளவும் எத்தனையோ பேர் இருக்கத்தானே செய்கிறார்கள்?

அந்த பின்னணியில் உள்ள வைனாண்ட் ஒரு கட்டட புராஜெக்டிற்கென யோசித்து கொண்டிருக்கும் பொழுது பீட்டரை தந்திரமாக அவரிடம் சிபாரிசு செய்து முதலில் டாமினிக்கை சந்திக்க வைக்க திட்டமிடுகிறார் டூஹே. வைனாண்ட், டூஹேவை நன்கறிந்தவராக (பாம்பின் கால் பாம்பறியுமாம்) ஒரு மாமா அளவிற்கு இறங்கிவிட்டாயா இதனால் உனக்கு என்ன லாபமென்றும் கேட்டு வைக்கிறான். எப்படியோ டாமினிக்கை சந்திக்க வைத்து விடுகிறார் டூஹே, அந்த சந்திப்பில் நேரடியாகவே, டாமினிக்கிடம் டூஹேவிற்கும், பீட்டருக்குமான தொடர்பு இந்த சந்திப்பு எதன் அடிப்படையில் டூஹே செய்து கொடுத்தான் போன்றவற்றை உள்ளது உள்ளபடியாக வைனாண்ட் எடுத்து முன் வைத்து விட்டு, இந்த ப்ராஜெக்டை பீட்டருக்கு நான் கொடுக்க வேண்டுமானால் டாமினிக்கை தன்னுடன் குரூஸ் வர சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனையை முன் வைக்கிறான். அதற்கு டாமினிக் அது பீட்டரின் முடிவினையொத்தது என்று விலகி நிற்கிறாள்.

மேலே கூறியபடியே பீட்டரின் முன் இந்த நிபந்தனை வரும் பொழுது, அவன் டாமினிக்கை உனக்கு இதனில் உடன்பாடா என்று கேட்டபடியே வைனாண்டின் ப்ராஜெக்டை விட்டுக் கொடுக்க மனமில்லாதவானாக அவளை விட்டு கொடுத்து விட்டுச் சென்று விடுகிறான். ஒரு வகையில் வைனாண்ட், டூஹே மற்றும் பீட்டர் அனைவருமே றோர்க் போன்றோரின் நேர்மையான, தன்னம்பிக்கை மிக்கவர்களை கடை கோடியில் தள்ளி முகமிழந்த வாழ்விற்கு தள்ளுவதில் முதன்மையில் இருக்கிறார்கள். இங்கு றோர்க் நேரடியாக பல சந்தர்பங்களில் வைனாண்ட் நாளிதழிலின் மூலமாக அவனுடைய புராஜெக்ட்கள் பகடிக்கு உள்ளாகி எதிர்கால வாய்ப்புகள் நழுவி செல்லும் சூழலை உருவாக்கி கொடுத்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் பழி வாங்கும் ஒரு பயணமாகவே, றோர்க்கின் மீது கொண்ட காதலின் வயப்பாட்டில் பீட்டரிலிருந்து, வைனாண்ட் வரையுமாக மிக அருகிலிருந்தே அவர்கள் செய்த தவற்றை அவர்களே உணர்ந்து வருந்துமாறு அப்படியொரு வலியேற்ற மிக்க பயணத்தை மேற்கொள்வதாக டாமினிக்கின் குணாதிசியத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பின்னாளில் வைனாண்ட், முற்றிலுமாக தனது மற்றொரு முகத்தை எந்த முகமூடியுமில்லாமால் திறந்து நிற்பதும் டாமினிக்கிடமே!

இந்த புதினத்தின் மீதான எனது பார்வை எழுத எழுத போததாக நீண்டு கொண்டே செல்வதால், இரண்டு பகுதியாக உடைத்திருக்கிறேன். பகுதி இரண்டில் சந்திப்போம்...


**பகுதி இரண்டும் போட்டாச்சு - இங்கே வைச்சிருக்கேன் அதை... 
அய்ன் ராண்ட் - பகுதி 2 : The Fountainhead (Part - 2)


********************************************

பி.கு: றோர்கின் தனிமனித சிந்தனை, ஆக்கம் தொடர்பான பவர்ஃபுல் பஞ்ச் காணொளி வடிவில். இதுவே அமெரிக்காவை கட்டமைத்தவர்களின் கனவும் கூட...





**** இந்த புத்தகம் வேண்டுவோர் thekkikattan at gmail dot comக்கு மின்னஞ்சுங்க அனுப்பி வைக்கிறேன் பி.டி.ஃப் கோப்பாக...

10 comments:

vasu balaji said...

குட் ஜாப் தெ.கா. அந்தத் திளைப்பிலிருந்து இன்னும் மீண்டு வரலைன்னு தெரியுது. யார் என்ன சொன்னாலும் இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன் படித்த பின் ஒருவரின் பார்வை முற்றிலும் வேறாய் இருக்கும். பதின்ம வயதில் படித்து ரோர்க்கைப் போல் வாழ வேண்டும் என்று பித்துப் பிடித்த கூட்டம் என்றெல்லாம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் முதலில் இந்தப் புத்தகத்தைப் படித்தபோது 22 வயது. நீங்கள் இந்த வயதில் படித்திருக்கிறீர்கள். இன்னும் பலரும் பல்வேறு நிலைகளில் படித்திருப்பதை அறிவேன். ஆனால் இந்த பிரமிப்பு, இந்தக் கதாபாத்திரங்களின் மேல் உள்ள காதல், வெறுப்பு, அசூயை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. 22 வயதில் படித்தபோது வாழ்க்கை அவ்வளவு புரியாத வயது. பின்னர் பல்வேறு வயதுகளில் திரும்பப் படிக்கையில் பரிமாணம் அகண்டுகொண்டே போகின்றதே ஒழிய அப்போது இப்படி நினைத்தது தவறு என்று தோன்றியதே இல்லை. யூட்யூபில் முழுப்படமும் இருக்கிறது. கேரி கூப்பரும், நீலும், மற்றவர்களும் புத்தகத்திலிருந்து எழுந்துவந்தார்ப் போலிருக்கும் நடிப்பு. தொடருங்கள். :))

Thekkikattan|தெகா said...

பாலா சாரே... இந்த புத்தகம் நான் வாசித்ததில் உங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. :)

இரண்டாவது பகுதியில் அந்த படத்தின் யூட்யுப் இணைப்பை கொடுப்போம்னு நினைச்சிட்டு இருக்கேன். சில இடங்களில் திரைக்கதையில் சிறு மாற்றங்களுடன், படமும் நன்றாக வந்திருக்கிறது...

தருமி said...

வாசித்துப் பல்லாண்டுகள் ஆச்சு. முதலாக இதை வாசித்து முடித்ததும் ஆசிரியையின் அடுத்த நாவலைத் தேட ஆரம்பித்து atlas shrugged வாசித்த நினைவு.

ஆசிரியை பற்றியும் கொஞ்சம் சொல்லிவிடுங்களேன்..........

Karthikeyan Rajendran said...

மிக நீண்ட உரை ஆனால் சுவாரசியமாக இருந்தது.


என் வீட்டுக்கும் கொஞ்சம் வாங்க நண்பரே!!!!!!!!!!!

Thekkikattan|தெகா said...

//வாசித்துப் பல்லாண்டுகள் ஆச்சு. முதலாக இதை வாசித்து முடித்ததும் ஆசிரியையின் அடுத்த நாவலைத் தேட ஆரம்பித்து atlas shrugged வாசித்த நினைவு.//

உங்கள எல்லாம் நினைச்சா பயமாத்தேன் இருக்கு. எப்பவோ இதெல்லாம் படிச்சு contain பண்ணி உங்க எழுத்துக்குள்ளரயும், வாழ்க்கைகுள்ளரயும் பொதித்சு கொடுத்திருக்கீங்களே. உங்ககிட்ட படிச்ச மாணவர்கள் எல்லாம் உண்மையாவே ஒரு வகையில லக்கி ஃபெல்லோஸ். :)

//ஆசிரியை பற்றியும் கொஞ்சம் சொல்லிவிடுங்களேன்..........//

நிச்சயமாக எழுதிடுவோம், தருமி. She deserves that intro to our tamil diaspora.

vidivelli said...

சுவையான நல்ல நீள் பதிவு..
பதிவிற்கு பாராட்டுக்கள் சகோ..


sempakam.blogspot.com

Thekkikattan|தெகா said...

ஸ்பார்க் கார்த்தி @ said...
மிக நீண்ட உரை ஆனால் சுவாரசியமாக இருந்தது.

என் வீட்டுக்கும் கொஞ்சம் வாங்க நண்பரே!!//

வணக்கம். அழைப்பிற்கு நன்றி ஸ்பார்க் :). அடுத்த முறை கோவையில் இருக்கும் பொழுது பார்க்கலாம்.

Thekkikattan|தெகா said...

vidivelli said...
சுவையான நல்ல நீள் பதிவு..
பதிவிற்கு பாராட்டுக்கள் சகோ.//

நன்றி விடிவெள்ளி! :)

Anna said...

Wow! மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். Ayn Rand பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, இப்புத்தகம் வாசித்ததில்லை. நிச்சயம் வாசிக்க வேண்டும்.

Thekkikattan|தெகா said...

Analyst - அடுத்த பகுதியில உங்களுக்கான மறுமொழி இருக்குதுங்கோவ்... :)

Related Posts with Thumbnails