Friday, December 21, 2007

தருமியின் நம்பிக்கையும் நம் இளைஞர்களும் - II

எனது முதல் பதிவில் சொல்லியிருந்தேன் என்னோட சொந்தக் கதைகளையும், என்னை சுத்தி நடந்தவைகளையும் விளாவாரியா பகிர்ந்துக்கிறேன்னு. யோவ், தெகா என்னாத்தையா புதுசா நீ வந்து சொல்லி பொலம்பப் போறேன்னு சொல்றீங்களா, உண்மைதான். நம்ம இயக்குனர் ஷங்கரும் எட்டுப் போடாம, அலுவலக பக்கத்திலேயே போகாம RTOலருந்து லைசன்ஸ் எப்படி வாங்கிறாங்கன்னு அங்கே நடக்கிற ஊழல்களை எடுத்துக் காட்டித்தானே அவரு தன் பையை நிரப்பினாரு. அதுக்காக, நமக்கெல்லாம் அங்கே என்ன நடக்குதுன்னு தெரியாதுன்னா பொருள்.

ஆனா, படத்தில ஒரு ஆளை வைச்சு அடிக்கிற மாதிரி காமிச்சவுடனே நாமளே அந்த குணச்சித்திரமா மாறி குத்தறதா, அடிக்கிறதா பார்த்து சிலாகித்துக் கொள்வதில்லையா? அதே மாதிரி, படத்துக் கதை இல்லாட்டியும் உங்க பக்கத்து வீட்டுக்காரன் பட்ட கஷ்டத்தை சொன்னா கேக்காம போயிடுவீங்களா என்ன? அந்த மாதிரி(அடுத்தவன் வீட்டுக் :-) கதைகளுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருக்கும் தானே.

வெளி நாட்டிலிருந்து வருகிற எவருக்கும் நம்மூர்ல பளிச்சின்னு தெரியற ஒரு விசயம் அலுவலங்களில் ஏதாவது ஒரு வேலை நடத்த வேண்டுமெனில் அங்கே இருக்கிற நிர்வாகச் சீர்கேடுகள், கட்டுப்பாடுகள், சில்லூண்டி அரசியல், சேம்போறித்தனம், அடிப்படை நாகரீகமற்றத்தன்மை இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இதனூடாக மேலிடத்திலேயே அதாவது டெல்லியிலேயே அடி பட்டு நொந்து போனவர்களுக்கு எப்படி பிறகு வரும் நாளில் நாட்டினுள் பிரிதொரு இடங்களை சுத்திப் பார்க்கும் பொழுது நல்லெண்ணம் செழித்தோங்கப் போகிறது.

சேகரித்த அனுபவங்களை எப்படியாக அவர்கள் பின்னாலிள் தான் எழுதும் புத்தகங்களிலும் (உ.தா - லோன்லி ப்ளானட்), சுற்றுலா கட்டுரைகளிலும் வெளிப்படுத்தப் போகிறார்கள். இதற்கு ஒரு உதாரணமாக நான் பட்ட அனுபவத்தை, அவ் வெளி நாட்டவர்களுடன் நின்று பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது அதனைப் பற்றி சிறிது கூறுகிறேன்.

சிச்சுவேஷன் நெம்பர் ஒன். இடம்: டெல்லி. நான் வெளி நாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்பவன். இந்தியாவிற்கு நான் வந்து திருமணம் செய்ததால், என் கடவுச் சீட்டு வைத்திருக்கும் நாடு ஒரு நிபந்தனை இட்டது. அப்படி திருமணம் செய்து எனது மனைவியை இங்கு கொணர வேண்டுமெனில், நான் இந்தியாவில் 90 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து தங்கியிருந்ததற்கான சான்றிதழை பெற்று வழங்கினால், டெல்லியிலேயே உள்ள எம்பசியில் மனைவியின் விசாவிற்கு என்னால் மனு தாக்கல் செய்ய முடியுமென்று கூறினார்கள்.

சரி, என்னோட தங்கும் நாட்களும் அந்த 90 நாட்களை தழுவியே வந்ததால் இதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது அது தொடர்பான சான்றிதழ் ஒன்று வாங்கி, எம்பசிக்கு கொடுப்பதிலென்று அப்பாவியாக நம்பினேன். டெல்லியிலேயே உள்ள மத்திய தலைமை வெளியுறவுத் துறை அலுவலகத்திற்கு சென்றேன்; அங்கேதான் நான் பெற வேண்டிய ஒரு சான்றிதழ் வாங்க வேண்டுமென. அதாவது இந்த தேதியில் நான் இந்தியாவிற்கு வந்து இது நாள் வரையிலும் இங்கேதான் உள்ளேன், என்பதற்கென ஒரு கடிதம் அடித்து தரவேண்டும் அந்த அலுவலகலத்திலிருந்து.

விசாரித்து தெரிந்துகொண்ட பிறகு அந்த முகவரி அறிந்து கொண்டு ஆட்டோ வாலாக்களிடம் பதில் சொல்லி முடித்து வாசலில் வந்து இறங்கும் பொழுது காலை மணி 11 இருக்கும். அதற்குள்ளும் அங்கு கருப்பு, வெளுப்பு, மஞ்சள், வெள்ளை என்று அனைத்து நிறத்தவரும் அடிதடி நடப்பது போல ஒரு மூன்றடி வாசலுக்கு வெளியே குவிந்து கிடந்தார்கள். ஒரு வழியாக ஒரு சீக் மாமாவிடம் பல இடிபாடுகளுக்கிடையே அவரை கண்டெடுத்து ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்வி கேட்பதற்கு முன்னாலேயே அவர் போயிட்டு நாளைக்கு வாங்க, இன்னிக்கு பார்க்கப் போறவங்களுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னவே டோக்கன் கொடுத்து முடிச்சாச்சி, நாளைக்கு வாங்கன்னுட்டார்.

அடப் போங்கப்பான்னு வெறுத்துப் போயி அங்கே நின்னுட்டு இருந்த இன்னொரு கனெடியன் குடியுரிமை பெற்ற இந்தியர்கிட்ட கொஞ்சம் நம்ம சூழ்நிலையை சொல்லி விசாரிச்சா அவர் கேட்டாரு ஒரு கேள்வி. நீங்க இன்னமும் இந்திய கடவுச் சீட்டை கையில வைச்சிருந்தா முதலில் அதனை கொண்டுபோய் இதனோட இன்னொரு கிளை அலுவலகத்தில ஒப்படைச்சிட்டு அங்கிருந்து அந்த ஒப்படைச்சிட்டதிற்கான நகலை இங்க கொண்டு வந்து காமிச்சாத்தான் உங்க கேசையே இந்த அலுவலகத்தில பார்ப்பாங்கன்னு 'நச்'சின்னு சொல்லிட்டார். ஆஹா, பெரிய தகவலாச்சேன்னு வாங்கிட்டு, அடுத்து அந்த கிளை அலுவல முகவரி வாங்கிட்டு அடுத்த நாள் அங்கே போனேங்க.

தெரிஞ்சுப் போச்சு நம்மளை மாதிரியே நிறைய பேரு இங்கே திரியறாங்க நாம மட்டும் ஒண்ணும் ஓவியமில்லன்னு. எதுக்கும் கொஞ்சம் சீக்கிரமாகவே போயிடுவோமின்னு காலையில 7 மணிக்கெல்லாம் அலுவலக வாயிலிள் போய் நின்னாச்சு. எங்களுக்கும் முன்னாலேயே அங்கே இன்னொரு பெரிய கூட்டம் கேட்டுக்குள் போட்டிருந்த ஒரு 20 இருக்கைகளை நிரப்பிட்டு உட்கார்ந்திருக்கு. அதுக்கு பிறகு வந்த நாங்க எல்லாம் வெளியிலே, குச்சியும், துப்பாக்கியும் வைச்சிட்டு நிக்கிற அந்த காவலாளிகள், கேட்டுக்கிட்ட நெருங்கிற ஆட்களை சலோ, சலோன்னு விரட்டிட்டு இருக்கார். கொஞ்சம் குலோஷ் அப்பில் பேசினவர்கிட்டயெல்லாம் என்னமோ சைகையில் இரண்டு விரல்களில் காமிச்சார்.

மணி ஓடிட்டே இருக்கு. நாங்களும் நிக்கிறோம். ஒவ்வொரு அலுவலக பணியாளரா ஆற அமர கையில் லஞ்ச் பேக்குடன் 11.30 மணி வரைக்கும் வந்திட்டே இருக்காங்க. யப்பா, இதெல்லாம் நடக்கிறது கும்மிடிப் பூண்டி வி.யூ.ஓ அலுவலகத்தில இல்லைங்க, மத்திய வெளியுறவுத் துறை அலுவலகத்தில, அதுவும் டெல்லியீல மறந்துடாதீங்க. நாங்க இப்ப வெளியில நின்ன காவலாளிக்கிட்ட சத்தம் போட ஆரம்பிச்சாச்சு, சத்தம் கேட்டு வெளியில டீ குடிக்க வந்த ஒரு அலுவலர், அட விடப்பா அவரன்னு சொல்லிட்டு போனார். சரி, தொலைங்கடான்னு வசுல் பண்ண முடியாததலா முறைச்சிக்கிட்டே உள்ளே விட்டார்.

முதலிள் தவறான கூண்டை நோக்கி படையெடுப்பு ஏன்னா, எதுக்கு எங்கே நிக்கணுங்கிற எந்த ஒரு தகவலுமில்லை. அரைமணி நேரம் அதில காலி. கடைசியில வியர்த்து கொட்டிக்கிட்டு இருந்த அந்த கூண்டாளியை கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டதில, நான் போக வேண்டிய இடம் இரண்டாவது மாடியாம்.

அங்கிருந்து நகர்ந்து அந்த அலுவலகத்துக்குள் போவதற்கு முன்னால், 'சுவற்றில்' ஒரு வாசகம் இங்கே லஞ்சம் யாராவது கேட்டால் 'எங்களிடம்' தெரிவியுங்களென்று :). அங்கே ஒருத்தர் இருந்தாரு, அவரு ஆமை வேகத்தில என்ன வேணுமின்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, நான் எங்கே போகணுமின்னு சொல்லி மேலே அனுப்பினார். அந்த அலுவலக அறை அப்படியே எனக்கு 10 வருஷத்திற்கு முன்னே படிச்ச ஆர்.கே. நாரயண் நாவல்களில் வரக் கூடிய அலுவலக அறைக் காட்சிகளான லொடக், லொடக் சத்தத்துடன் ஓடுகின்ற கரை படிந்த மின் விசிறிகள், உரிந்து காலாவதியாகிப் போய் தொங்குகிற சுவற்றுப் பூச்சுகள், பழுப்படித்து மங்கிப் போன காகிதக் கட்டுக்கள், அதற்கெலாம் மேலாக ஊழியர்களின் மன நிலையை கிரகித்துக் கொண்டு எதிரொலிக்கும் தூங்க மூஞ்சி சூழ்நிலையில் அமைந்திருக்கும் மொத்த அறை என அவர் விவரித்த காட்சிகள் அனைத்தும் என் கண் முன் விரிந்தது.

அங்கே சென்ற பொழுது அவ்வளவு பெரிய அறையில் மொத்தமே இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் ஒரு லோக்கல் மேகசினை கையில் பிடித்துக் கொண்டும், மற்றொருவர் மூஞ்சிக்கு முன்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தினசரியை பிடித்த வாக்கில் உள்ளே தூங்கினாரா இல்லை படித்துக் கொண்டிருந்தாரா அந்த சுவற்றுப் பல்லிக்கே வெளிச்சம் என்கிற நிலையில் இருந்தனர். நான் உள்ளே நுழைந்த கையோடு 'எச்சூஸ் மீ' என்று சற்றே உற்சாக குரலில் கத்தி வைக்க, முதலில் மேகசின்காரர் ஸ்லோ மோசனில் தலையை நிமிர்த்தி, என்னாவாம் என்பது போல ஒரு லுக் விட்டார், பாஸ்போர்டை காமித்து இதனை இங்கு ஒப்படைக்கணும் என்றேன்.

அதற்கு சார்! என்று கையில் பல்லி மட்டுமே பார்க்க அமர்ந்திருந்தவரை விளித்து உங்களைத்தான் பார்க்க வந்திருக்கார் என்றார். அவரும் மெதுவாக திரைச் சீலை விளக்கி எனக்கு காட்சியளித்ததுடன், ந்தோ பாரு நாலாவது டேபில் அங்க இருக்கிறவர்தான் இதனை பண்ணிக் கொடுப்பார் அவர் இன்னும் வரலை ஒரு மணி நேரம் கழிச்சி வந்து பாருன்னு, பாஸ்போர்ட்டை இங்கே வைச்சுட்டுப் போயிக்கன்னு சொல்லிட்டாரு. மணியப் பார்த்தா கிட்டத்தட்ட 10.30க்கும் மேலே யாரோ அந்தக் கடவுள் இன்னும் படியேறலை.

வெளியிலேயே உட்கார்ந்து ஈ'விரட்டிட்டு திரும்ப உள்ளே போய் பார்த்தா அந்த டைப் அடிக்கிற ஆள் வந்திருந்தார், நம்ம ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆள் சொல்லச் சொல்ல அவரு அடிக்கிறார் :). இதெல்லாம் என்னாது. சரி லூஸ்ல விடுன்னு, 6x12 இஞ்ச் சிங்கம் போட்ட முத்திரைத்தாளில் எழுதிக் கொடுத்துட்டாங்க ஒரு வழியா. முடிச்சுட்டு நேரத்தைப் பார்த்தா மணி 1.45.

இனிமே என்ன, நாளைக்கு படையெடுப்பு அடுத்த கிளை அலுவலகத்திற்கு... அங்கும் சொல்றேன் எப்படியெல்லாம் நம் மக்கள் efficientஆ வேலை பார்க்கிறாங்க அப்படின்னு, இப்ப வர்ட்டா...

12 comments:

ஆடுமாடு said...

தெக்கிட்டான் ஐயா, இது ஒண்ணும் புதிதல்ல. இங்க பணம் இருந்தாதான் எல்லாம்.

ஒரு இன்ஸிடண்ட் சொல்றேன்.

எங்கம்மாவுக்கு மகாராஷ்ட்ரா அரசோட பென்சன் வருது. ஒருமுறை வீட்டுக்கு ஒரு லெட்டர். நான்கு வருடத்துக்கான அரியர்ஸ் பணம் அனுப்பப் பட்டிருப்பதாக தகவல்.

அதைத் தூக்கிக்கொண்டு
பக்கத்து டவுணில் உள்ள கிளை கருவூலத்துக்குப் போனால், 'அப்படியா?' எங்களுக்கு ஒரு தகவலும் இல்லையே என்றார்கள்.

சென்னையில் உயர் பதவியில் இருக்கும் நண்பர் ஒருவரை பிடித்து இது பற்றி விசாரிக்க சொன்னேன்.

அவர் அவருடைய நண்பரிடம் சொல்லி விசாரித்து, சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து கிளை கருவூலத்துக்கு லெட்டர்.
இதை கண்டு எரிச்சலடைந்த ஆபீசர், எதுக்கு சென்னை வர போனீங்க என்று அம்மாவை காய்ச்சி எடுத்துவிட்டார்.

நான் போனேன். இங்க உள்ள விஷயத்தை இங்கதானே கேட்கணும் என்றார். 'நீங்க தெரியலைன்னு சொன்னீங்க... அதனாலதான்' என்றேன்.

பிறகு ஏகப்பட்ட பஞ்சாயத்துக்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து தந்தார்கள்.

அப்புறம் மோப்பம் பிடித்ததில், அப்பாவி விதவைகளுக்கு வரும் அதிகப்படியான அரியர்ஸ் பணங்களை வட்டிக்கு விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இது நடந்தது பத்துவருடத்துக்கு முன்பு. இப்ப என்னென்ன கூத்து நடக்கிறதோ.

ரூபஸ் said...

// யப்பா, இதெல்லாம் நடக்கிறது கும்மிடிப் பூண்டி வி.யூ.ஓ அலுவலகத்தில இல்லைங்க, மத்திய வெளியுறவுத் துறை அலுவலகத்தில, அதுவும் டெல்லியீல மறந்துடாதீங்க//

அங்கயுமா??
இந்திய ஒருமைப்பாடை இதுல தான் காமிக்கிறாங்க..

அரசு அலுவலகங்களை பார்க்கும்போது இம்சை அரசனில் வடிவேலுவின் வசன்ம்தான் நினைவிற்கு வருகிறது..

நல்லாயிருக்கு..

Thekkikattan|தெகா said...

ஆடுமாடு,

ஐயா! என்றா என்னை விளிக்கிறீர்கள். நானும் உங்களை ஒத்த வயதுடையோன் என்றே நினைக்கிறேன்.

//அப்புறம் மோப்பம் பிடித்ததில், அப்பாவி விதவைகளுக்கு வரும் அதிகப்படியான அரியர்ஸ் பணங்களை வட்டிக்கு விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இது நடந்தது பத்துவருடத்துக்கு முன்பு. இப்ப என்னென்ன கூத்து நடக்கிறதோ.//


இது போன்ற வன் கொடுமைகள் நம் நாட்டிலிருந்து ஒழிந்தே போக என்ன இன்னும் ஒரு நூற்றாண்டு எடுத்துக் கொள்ளுமா? பக்ரிப் பசங்க, எவ்வளவு திருடினாலும் அவனுகளின் ஆசைக்கு அளவே கிடையாது... :(

வவ்வால் said...

ஆடு மாடு,

உங்களுக்குமா, அடக்கொடுமையே, இப்போது தான் எங்கம்மாவுக்கும் இதே தான் ஆச்சு, இப்போ தான். 1500 லஞ்சம் கொடுக்காமல் அவர்களின் ஒய்வு கால பணமும் வரவில்லை. இத்தனைக்கும் தமிழாசிரியர், எந்த வித மேல்ப்படி வருமானமும் இல்லை. என்னால் தான் பணம் தராமல் இருக்காங்க. வரப்போ வரட்டும். எப்படினு பார்த்துக்கலாம்னு இருக்கேன்.

அவர்கள் செய்வது செய்யட்டும் ஆனால் அந்த அலுவலர்கள் வா... போ என்று தான் பேசுகிறார்கள். ஒரு வயதான தமிழாசிரியர் என்று கூடப்பார்க்காமல், நான் வந்து சத்தம் போடுகிறேன் என்றால் உனக்கு ஒன்றும் தெரியாது அப்படித்தான் என எங்கம்மா அடக்குறாங்க!

இது நடந்து சரியாக ஒரு வாரம் தான் ஆகிறது.இன்னும் ஓய்வு பெறவில்லை, ஓய்வு பெறும் முன்னர் 6 மாதம் முன்னரே சில பணப்பட்டுவாடா நடக்கும் , அவர்கள் பணிக்காலம் முடியும் முன்னரே அதன் நடை முறை துவங்கி விடும். அதற்கே 1500 கொடுத்தால் தான் காரியம் ஆகும் என்கிறார்கள். நான் நீங்க சும்மா இருங்க என்ன ஆகுதுனு பார்க்கலாம் என்று சொல்லிவைத்துள்ளேன்.

ஆடு மாடு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொல்லுங்கள், அதையே பின் பற்றிவிடலாம்.

Thekkikattan|தெகா said...

Mangai Said...

mmm...

Like companies Govt also need to implement Performance evaluation.

ஆடுமாடு said...

//ஐயா! என்றா என்னை விளிக்கிறீர்கள். நானும் உங்களை ஒத்த வயதுடையோன் என்றே நினைக்கிறேன்//

ஐயா, எனக்கு 40 வயதுதான் ஆகப்போகிறது. உங்களுக்கு அதிகம் என்று நினைக்கிறேன்.

ஆடுமாடு said...

//ஆடு மாடு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொல்லுங்கள், அதையே பின் பற்றிவிடலாம்//

ஒண்ணுமில்லை. சி.எம். செல்லுக்கு ஒரு லெட்டர். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒரு லெட்டர். போதும்.

Thekkikattan|தெகா said...

ஐயா, எனக்கு 40 வயதுதான் ஆகப்போகிறது. உங்களுக்கு அதிகம் என்று நினைக்கிறேன்.//

ஆடுமாடு, நான் யூகித்தது சரியாகப் போய் விட்டது. நான் உங்களை விட இரண்டு வயது இளையவன் :-). சும்மா "தெகா"ன்னு சொல்லுங்க...

Thekkikattan|தெகா said...

ரூபஸ்,

//அங்கயுமா??
இந்திய ஒருமைப்பாடை இதுல தான் காமிக்கிறாங்க...//

:-)) அதே, அதே அப்படியே நகல் எடுத்த மாதிரியே உள்ளூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில ஆரம்பிச்சு, நாட்டின் எல்லயிலிருக்கிற வெளியுறவுத்துறை அலுவலகம் வரை ஒரே கதைதான் போங்க...

முதல் முறையா இந்தப் பக்கம்? அடிக்கடி வந்து போங்க ஏதாவது கிடைக்கும் படிக்க அப்பப்ப :-))

SurveySan said...

//ஒண்ணுமில்லை. சி.எம். செல்லுக்கு ஒரு லெட்டர். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒரு லெட்டர். போதும்.
//

முகவரி?

நல்ல விஷயங்களை வெளிக்கொணர்கிறது இந்தப் பதிவு.

ஆடுமாடு said...

சர்வேசன்
//முகவரி?//

முதல் அமைச்சரின் தனிபிரிவு
தலைமைச் செயலகம்
சென்னை.

நேரில் கொடுத்தால் உங்கள் மனுவை பரிசோதித்து உங்களுக்கு ஒரு துண்டு சீட்டு கொடுப்பார்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இல்லையென்றால் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தரலாம்.

சில நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

நன்றி

ஆடுமாடு said...

//நான் யூகித்தது சரியாகப் போய் விட்டது. நான் உங்களை விட இரண்டு வயது இளையவன் :-). சும்மா "தெகா"ன்னு சொல்லுங்க...//

அப்ப தம்பிதானா... ஒகே தெகா.

Related Posts with Thumbnails