Monday, February 26, 2018

பேரரசன் அசோகன் by ’தருமி’ மொழிபெயர்ப்பு

பேராசான் தருமி மொழி பெயர்த்த பேரரசன் அசோகன் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கிறேன். வாசித்து கொண்டிருக்கும் பொழுதே அடக்க முடியாத உந்துதலின் பேரில் ஒன்றை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது (இது அந்த புத்தகத்திற்கான முழு நீள வாசிப்பனுபவமல்ல. முழுதும் வாசித்தவுடன் முழுமை படுத்தலாமென்று எண்ணியுள்ளேன்).
.
பல நூற்றாண்டுகளை அநாயசியமாக அந்த நூல் ஓரிரு பத்திகளில் கடந்து செல்கிறது. அந்த பத்திகளில் எது போன்ற அரசன் ஆண்டான் என்பதனைக் கொண்டு மக்கள் எது போன்ற வாழ்வுச் சூழலில் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை நினைக்கும் பொழுதே திகீர் என்கிறது.

அரசியல் சித்தாந்தமற்ற வர்ணாசிரம சூழ்ச்சியும், அதனையொட்டிய அண்டைய நாட்டு படையெடுப்பின் போது அந்த அரசு கவிழ்ந்து வேறு ஓர் அரசிற்கு கீழ் சில நூற்றாண்டுகள் ஆளப்பட்டு மீண்டும் வீழ்த்தப்பட்டுன்னு... காலச் சுழற்சியின் ஒவ்வொரு பக்கத்திலும் நிலையாமையை சுட்டியபடியே நகர்கிறது அந்த நூல். அடிநாதமாக பொதுத் தன்மையே நின்று நிலைக்கும் சித்தாந்தமென நிரவ முற்படுகிறது. வரலாறு மாற்றி எழுதப்பட்டாலும் நீடித்து நிற்பது அறம் சார்ந்த அரசாட்சியே!

அது நூல் அல்ல ஒரு பாடம் போல இருக்கிறது. அப்பட்டமான முறையில் ஒரிடத்தில் இந்திய துணைக்கண்டம் ஏன் நண்டு தனத்தினாலும், வர்ணாசிராமத்திற்கு அடிமைத் தனம் அடைந்ததாலும் அந்த தேசம் வரலாற்று சுவடுகள் தோறும் வீழ்த்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த பதிவு அந்த புத்தகத்திற்கான விமர்சனமாக நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் முழுமையாக வாசித்து முடிக்காத நிலையில் அப்படி எழுதுவது அறமாகாது என்பதால் நிறுத்திக் கொள்ளலாம்.

சொல்ல வந்தது எப்பொழுதும் மனித வரலாற்றில் தொடர்ந்து அநீதிக்கும் நீதிக்குமான போராட்டம் நடந்து கொண்டேதான் வந்திருக்கிறது. குட் அண்ட் ஈவில்கான சமநிலை எட்டலில் எந்த கால கட்டத்தில் எந்த பக்கம் அதிகமான நல்ல/கெட்ட எண்ணவோட்டம் அதிகமாக குவிகிறதோ அதன் நீட்சியாக நாம் கண்டுணரும் செயல் பாடுகள் ஒரு சமூகத்துள் பாவி நிரையும்.

அநீதி ஓங்கும் பொழுது எதிர் முனையில் இருப்பவர்கள் சோர்வுற்று இனிமேல் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஒரு சொட்டு நஞ்சு அற்ற தூய்மையான துளி என்றாலும் அது அடர்த்தியாக உள்ள நஞ்சுக் குடுவைக்குள் செலுத்தப்படும் பொழுது அதன் வீரியம் குறைக்கக் கூடியதாக அமைவதைப் போல ஆங்காங்கே தொடர்ந்து எழுப்பப்படும் அநீதிக்கெதிரான குரல்கள் அவசியம் (அது இன்றைய சிரியா, ஆதிவாசி மது, விழுப்புரம் ஆராயியின் குடும்பம் என்பதாக நீள்கிறது...).

ஆகவே, மக்களே தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள். சிறு துளி பெரு வெள்ளம்.

0 comments:

Related Posts with Thumbnails