Wednesday, December 06, 2006

நவனும், நானும் என் மயானக் கவுஜாவும்...!

நண்பர் நவன், எப்பொழுதோ நான் கவிதை என்று நினைத்து எழுதியிருந்த ஒரு பக்கத்தை படித்து விட்டு மண்டையை பிய்த்துக் கொண்டு எனக்கு என்ன பொருள் என்று பிடிபடவில்லை கொஞ்சம் விளக்க முடியுமா என்று வினவியிருந்தார்...

அந்த கவுஜா இங்கே இருக்கிறது... சென்று பார்த்து படித்து விட்டு நீங்களும் மண்டைய ஸ்கரட்ச் செய்து கொண்டே வந்து மீண்டும் இங்கே வந்து இந்த விளக்க கட்டுரையை படியுங்கள். அப்படியும் பிரியவில்லை என்றால் அந்த கடவுள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் ;-)


அன்பு நவன்,

எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எனது பழைய கூடையை கிளரி நீங்கள் எடுத்துப் படிக்கிறீர்கள் என்பதனை எண்ணும் பொழுது. அதற்கு எனது வந்தனங்கள்.!

இந்த கவிதை போன்ற எழுத்தில் நான் நினைத்து சொல்ல வந்தது: மனித வாழ்வு என்பது நெடு நீண்ட தூரப் பயணம் என்பது போல நமக்குப் புலப் பட்டாலும், அது ஒரு சிறிய முடிவுறும் பயணமே... கோவையில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு முறையும் நான் ஒரு மயானத்தின் வழியாக பயணிப்பதுண்டு, அவ்வாரு செல்லும் பொழுது இது போன்று மனித உடல் ஏதேனும் வேகும் பொழுது எனக்கு வாழ்வின் பொருள் மீண்டும் கண்களின் முன்னால் ஒரு முறை கேள்விக் குறியாக நிலை பெறுவது உண்டு.

மனித வாழ்வு நாம் வாழும் ஒவ்வொரு கனமும் எப்படி வாழ்கிறோம் என்பதனைப் பொருத்து தான் பொருள்ளதாக அமைகிறது என்றால், அதனை எப்படி அனுபவித்து நம் கூடவே வாழ்ந்து வரும் இந்த அப்பா, அம்மா, மற்ற சொந்த பந்தங்களுடன் அனுபவித்து வாழ்வின் சுவையை அதன் நிலையற்ற தன்மையை(மரணம்) கருத்தில் நிறுத்தி... அம்மாவின் புன் முறுவலின் பொருளணர்ந்து தினமும் ஆராதித்து மகிழ்வுடன் வாழ்ந்தால் அதுவே NOWNESS என்பதின் பொருளன்றோ, என்று நினைத்து அப்படி சொல்லி வைத்தேன்...

இன்னும் சில பதிவுகள் இதே லைனில் வெளியிட உள்ளேன். எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருக்கு இத் தருனத்தில் ஆருதலாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்...

நவன், மீண்டும் இங்கு உங்களின் கேள்வியாக என் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.

Sunday, December 03, 2006

The Superintendent of Police மாசிலாமணி சாரின் திடீர் மறைவு...

Image Hosted by ImageShack.us


சனிக் கிழமையைப் போல் (21st) "ஆராதனா" அவர்கள் அஞ்சலி என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டு அதில் மாசிலாமணி என்ற நல்ல காவல் துறை அதிகாரி மரணமுற்றார் எனவும், திருச்சி மாநகரம் கடைசி ஊர்வலத்தை ஒட்டி ஸ்தம்பித்துப் போனதாகவும் எழுதியிருந்தார்.

அதனைப் படிக்கும் பொழுது உண்மையிலேயே அவர் யார் என்பதில் எனக்கு சற்றே குழப்பமாக இருந்தது, இன்று மயிலின் மூலமாக அதிகாரப் பூர்வமாக அறிந்து கொண்டேன், அது வேறு யாருமல்ல நம் எல்லோருக்கும் தெரிந்த, ப்ளாக் செய்யும் நண்பர் தான் அவர் என்பது.

அவரின் ப்ளாக் பக்கங்கள் :

தமிழ் : லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்

ஆங்கிலம் : Safety On Roads

திரு. மாசிலாமணி அவர்கள் ஒரு சிறந்த காவல் துறை அதிகாரியும், ஒரு சிறந்த மனிதர் என்பதும் அவரின் படைப்புகளை காணும் யாவரும் அறியக் கூடும். அவர் இங்கு தமிழ் மணத்திலும் கொஞ்ச நாட்கள் எழுதியிருக்கிறார்.

அவரின் இழப்பு தமிழக சட்ட ஒழுங்கு காவல் துறைக்கு ஒரு மாபெரும் இழப்பு... அதிலும் குறிப்பாக மக்களுக்கு. அவ்வளவு நேர்மையும், தொலை நோக்கு பார்வையும் கொண்டு சிறப்பாக பணியாற்றி வந்தவர்.

இத் தருணத்தில் அவரின் துணைவியார் டாக்டர். டெல்ஃபின் விக்டோரியா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, மாசிலாமணி சாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.

Tuesday, November 21, 2006

சந்தோஷக் குதிப்பு : (Happy Feet)


சுடச்சுட கணினி தொழிற் நுட்பத்தைக் கொண்டு சுடச்சுட அண்டார்டிகாவில் வாழும் பென்குயின்களின் வாழ்வு முறையையும், அவைகளின் பாதுகாப்பையும் மனத்தில் நிறுத்தி உண்மையான தேடல் இருந்தால் எதனையும் சாதிக்கலாமென்ற மனித கோட்பாட்டையும் தவறாமல் நிலை நிறுத்தல் கூறி சுடச்சுட எடுக்கப் பட்ட மிகப் பிரமாண்டமான தயாரிப்பே, இந்த "ஹாப்பி ஃபீட்." இந்த படத்தை நானும் எனது ஒன்பது வயது மகனும் படம் வெளியான அன்றே சுடச்சுட கண்டுகளித்தோம்.

நானும் அவ்வப் பொழுது படத்தின் திறன் அரிய, பையனின் முகத்தை பார்பதுண்டு. அவ்வாரு ஒரு சில முறைகள் பார்த்தவரையில் அவனுக்கு படம் சோர்வை தந்த மாதிரி உணர்ந்தேன். ஆனால், படம் முடிந்துதான் எனக்குத் தெரிந்தது அவன் மிகவும் படத்துடன் ஒன்றிப் போய் பார்த்திருந்திருப்பது.

படத்தில் பென்குயின்களின் இனப்பெருக்க பழக்க வழக்கங்களிலிருந்து, உணவு தேடும் முறை அதன் வாழ்க்கை அமைப்பு என்று அதன் இயற்கை குணங்களை அவ்வப்பொழுது விளக்கினாலும், நம் வாழ்க்கை பாதிப்புடன் சில நேரங்களில் அனிமேஷன் அமைந்து போனது தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.

இந்த படத்தில் அனிமேஷனில் கலக்கியிருக்கிறார்கள். அம்மா Normaவிற்கும், அப்பா Memphisகும், கொஞ்சம் பென்குயின்களின் இயற்கை குணமான பாடுவதிலிர்ந்து தப்பி, கால்களால் தரையில் தட்டி ஆடும் ஒரு சந்தோஷமான முறையிலிருப்பதனைப் போன்ற வித்தியாசத்துடன் நமது ஹீரோ ஜுனியர் Mumble பிறந்து போகிறார்.

அதனால், அந்த பென்குயின் உலகத்தின் சீனியருக்கெல்லாம் சீனியர் Noah, நமது Mumbleயை பாடமுடியாதற்கென காரணம் காட்டியும், வித்தியாசமாக கால்களை தரையில் தட்டி ஆடுவதாலும், மற்ற வளரும் பிள்ளைகளை கெடுத்து விடுவான் எனக் கூறி தனது கூட்டத்திலிருந்தே Mumbleயை விலக்கி வைக்கிறார்.

இதற்கிடையில் நன்றாகப் பாடினால்தான் தனக்கு பார்ட்னரே கிடைக்கும் என்ற நிலையில், எப்படி Mumble பிழைத்துக் கொள்ளப் போகிறானோ என்ற கவலையில் அப்பாவும், அம்மாவும் இருக்கிறார்கள். இருந்தாலும், பிறக்கும் போதே விட்டக் குறை தொட்டக் குறையாக அதே சமயத்தில் முட்டையிலிருந்து வெளியே வரும் தனது காதலி Gloria நல்ல குரல் வளமும் கூட. நம்ம Mumbleக்கு எதிர்ப் பதம்.

சரி, கூட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்ட Mumble தள்ளாடி தள்ளாடி மற்றுமொரு பென்குயின் வகை பேரரசர் Lovelaceயை ஒரே கேள்வியின் மூலம் அசத்தி மற்ற Adelie Amigoe என்ற கூட்டாளிகளுடன் தன்னுடைய ஆட்டத்தின் மூலமாக கவர்ந்து பிறகு நல்ல நண்பர்களாக ஆக்கிக்கொண்டு தனது பயணத்தை தொடர்கிறார்கள்.

இந்தப் பயணம் மீன்களின் நடமாட்டம் மிகவும் குறைந்து போனதால், தங்கள் இனங்கள் மிக வேகமாக அழிந்து போய்க் கொண்டிருப்பதாக கருதி, அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, அதீத மீன் பிடிப்பை கட்டுப் படுத்துவதே தனது நோக்கம் என பயணம் தொடர்கிறது... இடையில் ஏற்படும் இன்னல்கள் என்னன்ன, அதனை எப்படி முகம் கொள்கிறது நமது Mumble, இறுதியில் தனது காதலி Gloriaவுடன் இணைகிறாரா இல்லையா... இதுதான் கதையாக, அருமையான அனிமேஷனைக் கொண்டு மிகவும் அசத்தலான இசை மற்றும் படப்பிடிப்புடன் வழங்கியிருக்கிறார்கள்...



ஒர் பின் குறிப்பு : ஆனா, எனக்கு என்னமோ ஒரு பென்குயின் பாதுகாப்பிற்கென எடுக்கப்பட்ட பிரச்சாரப் பட நொடி இந்தப் படத்தில் அடித்ததை உணர முடிந்தது... அப்படி எடுத்துக் கொண்டாலும், நல்லதுதான் :-)

Sunday, November 12, 2006

எரோப்ளேனில் நான் கண்ட மேற்கத்தியப் பாதை

இப்பவே சொல்லிடறேன், நான் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளன் அல்ல. நான் இங்கு குப்பை கொட்ட ஆரம்பித்து பல வருடங்கள் உருண்டோடி விட்டன. எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுவது, எனக்கு நானே தருவித்துக் கொண்ட வாய்ப்புகள் அவற்றினூடே எனது பயணம். அதனைச் சார்ந்து நான் பார்க்கும் விசயங்களை இந்திய (அதுவும் #2 இந்தியாவிருந்து) மற்றும் அமெரிக்கா கலாச்சார கண்ணோட்டத்துடன் எவ்வாறு ஒன்றிலிருந்து பிரிதொன்று முரண்பட்டு நிற்கிறது என்பதனை நான் கண்டுணர்ந்த வரையில் இந்த வாரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அள்ளித் தூவலாமென்று எண்ணியிருக்கிறேன்.

ஒகே, இப்பொழுது விசயத்துக்குள் போவோம். எப்பொழுதும் போல அரக்கப் பரக்க ஒரு 1 மணி நேரத்துக்கு முன்னாடி ஏர்போர்டில் எனது நண்பர் ஒருவரும், எனது தம்பியும் கொண்டுவந்து என்னை தள்ளிவிட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.

இந்த தொழில் நுட்பமும், அதன் வளர்ச்சியும் காட்டாற்று வெள்ளம் போல் பல சலுகைகளை வழங்கியிருக்கிறது.

உதாரணத்திற்கு பயண டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கி, ஒரு துண்டு காகிதத்துடன் உள்ளே போயி, ஏர்போர்ட் நுழைவாயிலில் உள்ள தான்இயங்கி போர்டிங் பாஸ் வழங்கும் எந்திரத்திடன் (Kiosk) சில நொடிகள் தொட்டுவிட்டு, அது துப்பும் நுழைவுச் சீட்டை பொருக்கி எடுத்து விட்டால் பயணத்திற்கு ரெடியாகி விட்டோமென்று பொருள்.

எனினும், என்னுடைய பயணத்திற்கு மீதம் 30 நிமிடங்களே இருக்கிறது என்பதால் இந்த அணுகுமுறை கூட எனக்கு துரிதமாக இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அடியேன் எவ்வளவு தொலைவு வந்துவிட்டேன் என்று. இந்தியாவில் நான் கரண்ட் பில் கட்ட அரைநாள் க்யூவில் நின்றது நினைவிலிருந்து தொலைந்து போனது, இந்த அவசரத்தில். ஒரு வழியாக ஓட்டமும் நடையுமாக ஒரு 10 நிமிடத்திற்கு முன்பு நானே கடைசி ஆளாக, பேண்டையும் சட்டையையும் தவிர எல்லாத்தையும் அவிழ்த்து செக்யூரிட்டி திரையில் என்னை காமித்து விட்டு வந்து ப்ளேனில் ஏறி கடைசி சீட்டுலையும் வந்து உட்கார்ந்தாச்சுங்க, ஒரு வழியா.

அந்த மிசினுக்கு கூட தெரிஞ்சுருக்கும் போல நான் ஒரு கிராக்குன்னு, கரெக்ட்டா ரெண்டு பசங்க ஐந்து வயசில ஒருத்தன் பேரு ஜெரிமி அப்புறம் ஒம்பது வயசில ஒரு ஆஃப்ரிக்க-அமெரிக்க பையன் பேரு மைக்கேல். இந்த ரெண்டு பசங்களும் தனியா என் கூட அட்லாண்டாவிலிருந்து மினியபாலிஸ் பறக்கிறானுங்க, ஒரே ரோ சீட்டுல அமர்ந்து.

எதுக்காக தனியாக அப்படின்னு கேளுங்க, பசங்கள்ள ஒருத்தன் அப்பாவோட கொஞ்ச நாள் கோடை விடுமுறையை கழிச்சுப்புட்டு அம்மாவீட்டுக்கு போறான், அடுத்தவன் அம்மா வீட்டிலிருந்து அப்பாவீட்டுக்கு போறான்.

இந்த அஞ்சு வயது ஜெரிமி கொஞ்சம் பாவமா ஒரு 10 நிமிஷம் தலையைக் கீழே போட்டுக்கிட்டு உம்னு வுட்கார்ந்து இருந்தான், ஏர்ஹோஸ்டஸ் கொண்டு வந்து உட்காரவைச்சுட்டு பெல்ட் போட்டுட்டு அப்புறம வாரேண்டான்னு சொல்லிட்டுப் போயிட்டா. நான் கையிலே வச்சுருந்த புத்தகத்தோட தெமேன்னு வெரிக்க, புத்தகத்தத்தான் பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்கேன்.

பையன் மெதுவா ஆராய்ச்சில இறங்க ஆரம்பிச்சுட்டான், கொடுத்த ஹெட் செட்ட, அவுக்க முயற்சி பண்ணான் முடியல... நிமிர்ந்து ஒரு முறை பக்கத்து சீட்டு பயல பார்த்தான் அவன் தெமேன்னு ஐபாட்லெ பாட்டு கேட்டுகிட்டு ஜன்னல் வழியா எதையோ தேடிகிட்டு இருந்தான், என்ன தேடி இருப்பான்னு உங்களுக்கு தெரியும் தானே!

பிறகு நம்ம ஜெரிமி என்ன பார்த்தான். நானும் அவன என் ஒன்றைக்கண்ணெ காமிச்சு பய முறுத்திப்புடாம பக்குவமா பார்த்து கேட்டேன்... "டூ யு நீடு மை ஹெல்ப்"ன்னு, தலைய ஆட்டி வச்சான், அப்புறம் அந்த ஹெட் செட்டை எங்க சொருவி என்ன பண்றது அப்படிங்கிறதில ஆரம்பிச்ச எங்க நட்பு, அந்த முழு ப்ளைட் மக்களும் அந்த இரண்டரை மணி நேரம் எப்படா முடியும்ங்கிற அளவிற்கு, கேள்வி பதில் நேரத்திலிருந்து, அவன பூச்சி ஒண்ணு கடிச்சது, அப்புறம் நேத்தைக்கு அடிச்ச சுரம் அப்படின்னு ஒரே கதையாப் போச்சு.

நான் என் 'காட்டு'த்தனமான அணுகு முறையெல்லாம் சொல்லப் போகி, எப்படி பறந்து வட்டமிடும் பூச்சிகளிடமிருந்து கடி வாங்காமல் தப்பிக்கிறதுன்னு சொல்லப் போக அது பக்கத்து சீட்டு மைக்கேலுக்கும் ஆர்வத்தக் கொடுக்க அப்புறமென்ன. ஒரே ஜாலிதான் ப்ளைட் போங்க.

நான் கேட்டேன், தம்பீ, அந்த பூச்சி பறந்து வரும் பொழுது நீ என்ன பண்ணே, பயந்து ஓடுனீயா, இல்லே விரட்டப் பார்த்தீயா, இல்ல அத கண்ணுக்கு கண்ணு நேரா பார்த்தீயாடான்னு. கொஞ்ச நேரம் தீவிரமா யோசிச்சான், கார்டூன்ல வர்ற அவன் ஃபேவரைட் கேரக்டர்ஸ் செய்ற அத்துனை முகபாவங்களையும் செய்துட்டு, ஹீம்... நான் அந்த பூச்சிய நேரா பார்த்தேன் அப்படின்னான்.

நம்ம உடனே "நேசி" யாகி, கூடு விட்டு கூடு பாஞ்சி, நம்ம பூச்சி மனோ தத்துவ ரீதியா யோசிச்சு வைச்சுருக்கிற ஒரு விசயத்தை எடுத்து விட்டேன். என்னவா அது, நீ அது மாதிரி ஒரு ஜந்துவை இனிமே பார்த்தா கண்டுக்காத, சும்மா பார்க்காத மாதிரி எந்த சலனமுமில்லாம இருந்தின்னா உன்னை ஒண்ணும் பண்ணமா அவனுங்க போயிடுவானுங்கன்னு.

சரின்னு கேட்டுகிட்டவன், அடிச்சான் பாருங்க இன்னொரு கேள்வி. அப்ப யானை வந்தா என்ன பண்றது, அடடா, பெரிய கேள்விய கேட்டுப் புட்டானே, அப்படின்னு முழிச்சு ஏதாவது ஏடாகூடமா சொல்லி வைக்காம நீ பெரியவனா ஆனவுடன் பதில் கிடைக்கும் அப்படின்னு சொல்லி வைச்சேன்.

இதற்கிடையில் அப்பப்ப ஸைலண்ட் ஆகி திடீர்னு இருந்தாப்புல இருந்து கண் கலங்கி அம்மாவை பார்க்கணுமின்னு ஒரு ரெண்டு மூணு தடவை கேட்டான். அப்புறம் அதிலிருந்து மீட்டுக் கொண்டார வேற எதாவது ஒரு டாபிக், இப்படியே போயிக் கிட்டு இருந்தது நேரம். இதற்கிடையில் மக்கள் எல்லாம் எழுந்துருச்சு எழுந்துருச்சு எங்க சீட்ட நோக்கி பார்க்க ஆரம்பிச்சங்க, ஏன் அப்பிடின்னு உங்களுக்கு தெரியும்தானே !

எல்லாத்துக்கும் முத்தாய்ப்பு வச்ச மாதிரி, பாத்ரூம் வருதுன்னு சொல்லிப்புட்டான்... சரின்னு கூட்டிக்கிட்டும் போனேன் பாத்ரூம் வரைக்கும், நண்பனாகிப் புட்டானேன்னு, அங்க வைச்சு அவன் கொஞ்சம் பெரிய விசயமய்யா இதுன்னு சொன்னான். இது சரிப்பட்டு வராதுன்னு தூரத்தில செவனேன்னு தூங்கி வழிஞ்சுகிட்டு இருந்த ஏர் ஹோஸ்டஸ் அம்மணியை கூப்பிட்டு கிட்டு வாறேண்டா இருடான்னு, பிடிச்சு கொண்டுவந்து ரெண்டு பேரையும் அந்த டீலிங்க பாக்க வுட்டாச்சு.

இப்ப முடிவுக்கு வந்தாச்சு. சரிங்க, அமெரிக்கர்கள் ரொம்ப ப்ரைவேசி வேணுங்கிற ஆட்கள், ஒருத்தன் தோள்பட்டை இன்னொருத்தன் தோள்பட்டை மேல உரசக் கூடாது, எல்லாம் உலகத்த காப்பத்திறதுக்காக எப்பொழுதும் சதா படிச்சிக்கிட்டும், அதப் பத்தி சிந்திச்சுக்கிட்டும், கோட்டும் சூட்டுமா வேலைன்னு வந்துட்டா ரொம்ப சீரியஸா இருக்காங்க.

இப்ப இந்த ஜெரிமி மாதிரி பசங்கள் கிட்டதட்ட 42% ஒரே பெற்றோருடன் (single parent) வாழும் சூழல், பாசம் பங்கு போடப்பட்டு இங்கும் அங்குமாக அலைக்கழிப்பட்டு வருதுங்க. பெற்றோர்கள் யாரு, நாம முன்னமே சொன்ன அந்த உலகத்தை காப்பத்துறவங்கள்ள ஒண்ணுதான். அப்படி இருக்கும் பொழுது, இந்த மாதிரி குழந்தைகள் எல்லார் மனசிலும் என்னங்க எண்ணங்கள ஓடும், எதைப் பார்த்து, கேட்டு வளர்ந்து வருதுங்க.

இந்தமாதிரி முதல் முறையா அப்பாவும் சரி அம்மாவும் சரி ஒருத்தரும் பக்கத்தில இல்லாமல் ப்ளைட் எடுத்துட்டு வரும் பொழுது அதுகளோட மனசில ஒரு இனம் புரியா தவிப்பு, இந்த இன்செக்யூரிட்டின்னு சொல்லுவாங்களே அது எட்டிப் பார்த்துவிட்டு அனுபவம அதன் சுவடுகளை அடி மனதில் விட்டுச் செல்லுமா, செல்லாதா?

ஒரு "வால் ஸ்ட்ரீட் ஜார்னல்" படித்துக் கொண்டு வரும் மோரான், ஜெரிமியின் பக்கத்தில் அமர்ந்திருக்க நேரிட்டு, அந்த மோரானுக்கு குழந்தைகள் என்றாலே அலர்ஜி எனும் பட்சத்தில், கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, இல்லையா?

இது போன்ற சூழலில் வளரும் குழந்தைகளின் "கலெக்டிவ்" மனப் பாங்கு இந்த உலகத்தைப் பொருத்து எதுவாக இருக்கும். வீட்டிலும் அருதி பெரும்பான்மையான நேரம் ட்டி.வியின் முன்பு செலவளிக்க நேரிட்டு, அதில் காட்டப்படும் வன்முறைகள், பாசத்திற்கு ஏங்கிய ஒருவன் ஈவில்-ஆக பின்னால் முரடணாக மாறுவது போன்ற காட்சிகள், கண்களின் வழியே வாங்கி, மனத்தில் இறக்கி, பின்னாளில் அவனும் இதே சமூதாயத்தில் வாழும் ஒரு பிரஜையாகிப் போகிறான்.

அப்படிப் போகும் பட்சத்தில் நாளை அவன் தனது காதலை துப்பாக்கியின் வழியில் வெளியிட எத்தனித்தால், அமைதிக்காக எனும் போர்வையில், இதில் இன்று யாரை குற்றம் கூறுவது? உங்களுக்கு நான் சொல்ல வருவது புரிகிறதா?

நாம் அடிப்படையிலேயே தவறு செய்து வருகிறோம். குழந்தைகளை எங்கு சென்று சந்தித்து பழகினாலும் அவர்கள் இனிமையானவர்கள்தான், சூதுவாதற்று, ஆனால் ஒரு சமுதாயம் தனது சொந்த வெறுப்பு விருப்புக்களுக்காக அவர்களை பகடைக் காய்களாக ஆக்குவது, உண்மையிலேயே வருத்தத்துக்குரியது.

இந்தியாவும் இந்த விரைவுப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதை இப்பொழுது காண முடிகிறது. ஆனால், கேள்வி மட்டும் ஒன்றே, எதனை இழந்து எதனைப் பெறுவதற்கு?

Saturday, November 11, 2006

நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II

எனது முந்தைய "நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I" என்ற பதிவின் நீளம் கருதி அதனை உடைத்து அதன் முடிவுப் பகுதியாக இந்த பதிவினை வழக்குகிறேன்.

இந்தப் பதிவில் மதங்களின் பங்களிப்பு இயற்கை பலாத்காரத்திற்கு எப்படி துணை போகிறது என்பதனை சற்றே உரசிச் செல்லலாம். இருப்பினும் எந்த ஒரு மதத்தினையும் விரல் நீட்டி அதுவே எல்லாவற்றிர்கும் காரணம் என்ற சொல்ல எத்தனிக்கவில்லை.

அப்படி ஒரு புறத் தோற்றத்தை வழங்கினால், அது படிப்பவரின் புரிந்துணர்வு சார்ந்ததே என்பதனை சொல்லிக் கொள்கிறேன்.

மதத்தை போதிக்கும் எந்தவொரு மதக் காவலர்களும் எப்பொழு எல்லாம் ஏதாவொரு கட்டுக்கடங்க இயற்கை சீரழிவு நடந்தேறுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர்கள், கடவுளர்களின் நன் மதிப்பை காப்பாற்றும் அரண்களாக நின்று சாக்கு போக்கு சொல்வது யாவரும் அறிந்ததே. அதற்கான உண்மை காரணத்தை புறம் தள்ளி. இதுவரையிலும் அதுவே நடந்தும் வருகிறது.

ஆனால் எனது பார்வையில் கடவுளும் - இயற்கையும் வேறு வேறாக தோற்றமளிக்கவில்லை. இயற்கையே, நாம் தவறான ஒரு முடிவு எடுத்து அது அவ்வாறு முடிவுறும் பொழுது கண் கூடாக நம் முன் நின்று நம்மை பல் வேறு முறைகளில் தண்டித்தும் விடுகிறது. அல்லது அதற்கு மாறாக நல்லதொரு முடிவை எடுத்து இயற்கையை அரவணைத்து செல்லும் பொருட்டு நம்மை கட்டி அணைத்து மகிழ்விக்கச் செய்கிறது.

எனவே எனது பார்வையில் இவ் இயற்கைதான் நம் கூடவே வாழ்ந்து வரும் கடவுள். கடவுள் வேறு எங்கும் இல்லை.

இவ்வுலகில் வாழும் அத்துனை ஜீவராசிகளும் நாம் செய்கின்ற அடிப்படை விசயங்களையே அவைகளும் செய்து வருகின்றன - உண்ணுதல், இனப்பெருக்கம் செய்தல், உறங்குதல் பிறகு செத்து மடிதல். இதிலிருந்து நமக்கு மட்டும் என்ன விதி விலக்கு, சற்றே விலகி நின்று யோசிக்கும் பொருட்டு, நாமும் அதனையேத்தான் செய்து வருகிறோம், இல்லையா?

சரி விசயம் இப்படியாக இருக்க இந்த இயற்கை-கடவுள் ஏன் மனிதன் என்ற ஒரு விலங்கை மட்டும் சுய-சிந்தனை என்ற ஒர் பரிணாம வழியுனுடே செலுத்தி இங்கே நம்மை முன்னெருத்தி வைத்து பார்க்க வேண்டும்?

இந்த பல இயற்கை சார்ந்த பரிணாம கண் சிமிட்டலுக்கு முன்பு, நம்முடைய இருப்பு இந்த பூமியில் ஒரு விரல் செடுக்கை விட குறைவே என்று பார்க்கும் தருனத்தில் நமக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகமே இந்த இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நிலைக்கு நம்மை மீண்டும் கொணர்வதற்கு.

அங்கேதான் இந்த ஃப்ரீ வில் என்ற பரிணாம யுக்தியும் இயற்கை நமக்கு வழங்கி ஒரு பரிசோதனை ஓட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறது நம்மிடையே.

எங்கோ இல்லாத கடவுள் வந்து இவ்வுலகை காப்பாற்றுவான் என்று கையில் உள்ள கடவுளை கண்ணை கட்டி ஏதோ நடத்துவது போல பலாத்காரங்கள் தொடர்ந்தால்... விளைவுகள் இப்படியாகத்தானே அரங்கேறும்.

நாம் பொறுப்பற்ற செயல்களால் கட்டுக்கடங்காத மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், மனித சந்தோஷங்களுக்காகவுந்தான் இந்த பூமி படைக்கப் பெற்றது என்ற மனோ நிலையில் விசயங்களை அணுகும் பொழுது கிடைப்பது என்னவாக இருக்கும்? ஒரே வீட்டையும் நரகமாக்கி கொள்வதைத் தவிற.

உதாரணமாக, உலக-சூடேற்றத்தினை எடுத்துக் கொள்வோம். பொறுப்பற்ற முறையில் பொருளாதார முன்னேற்றத்தினை மட்டுமே முன்னுருத்தி கார்களின் பெருக்கத்தை பெருக்கி வெளித் தள்ளுவதால் நடைமுறையில் நாம் சந்திக்கும் விளைவு வெப்பச்-சூடேற்றம் (இரண்டாம் பாகம்).

இந்த வெப்பமே கடல் நீர் சூடாவதற்கும் காரணியாகிறது, இந்த கடல் நீர் வெப்பமே வரும் சூறாவளிகளின் பசிக்கு தீனி போட்டு அதன் வேகத்தை இரட்டிப்பாக்கி நம்மை நோக்கி சுழன்று அடிக்க வைக்கிறது. இது போன்ற நேரடி விளைவுகளுக்கு நானும், நீங்களும்தான் காரணமா அல்லது எங்கோ இருக்கும் கடவுளா? எது?

இது போன்ற ஒரு அழிவு வரும் பொழுது இயற்கை சீற்றம் திசை பார்க்கிறதா, மதம் பார்க்கிறதா, ஏழை, பணக்கார நாடு பார்க்கிறதா? எதனையும் பார்பது கிடையாதுதானே. இவைகளனைத்தும் இயற்கையின் முன் சமமே.
இன்று "நாம் என்ற உணர்வுசார்ந்த நிலை (Collective Consciousness)"லிருந்து பல வேறு பட்ட காரணங்களால் மனித இனம் பிளவுப் பட்டு தூர விலகி நிற்பதுவும் கூட, இயற்கையின் மீது நாம் நடத்தும் ஒரு போரின் வெளிப்பாடே அன்றி வேறென்ன.

மதங்கள் இந்த இயற்கை சார்ந்த சீரழிவுகளை மட்டும்படுத்தும் பொறுப்புணர்ந்து, சாக்கு போக்கு ஆருதல் மக்களுக்கு சொல்லுவதை காட்டிலும், உண்மை காரணத்தை எடுத்துக் கூறி நம்முடன் விழித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயற்கை கடவுளை போற்றி, பேணி வாழ்தல் ஒன்றே நாம் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்பதனை எடுத்துயம்புமா?

நாம் இயற்கையின் ஒரு அங்கமே நாம் இல்லாமல் கூட இந்த இயற்கை தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் (டைனோசார்கள் மாண்ட பிறகு எப்படியோ) என்பதனை உணர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த மதங்கள் எடுத்துக் கூறுமா?

Friday, November 10, 2006

நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I

நாம் "இயற்கை உணர்வுசார்ந்த நிலையிலிருந்து (Nature Consciousness)" தினமும் வெகு தொலைவில் நம்மை நிறுத்தல் கூறி அயாராது உழைத்துக் கொண்டு வருகிறோம். அதற்கான சான்றுகளாக, நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமாக பல்கிப் பெருகி வரும், கேலிக்கை சாதனங்கள்.

ரேடியோ, ட்டி.வி, கணினி, வால்க் மேன், சிடிமேன், ஐபாட் அப்புறம் ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தால் வெளியில் வெயில் அடிக்கிறதா அல்லது மழை பெய்கிறதா இல்லை எவனும் குண்டு போட்டு விட்டானா என்று கூட தெரியாத அளவிற்கு நம்மை மதி ம(ழு)யக்க வைக்கும், இயந்தரத்தனமான விளையாட்டுக்கள் வேடிக்கைகள்.

இவைகள் எல்லாம் நம்மை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் என்ற (அவ)நம்பிக்கையிலேயே புதிது புதிதாக ஏதாவதொன்று சந்தைக்கு வர வைத்து கொண்டே இருக்கிறோம்.

இவைகளைனைத்தும், நம்மை இயற்கையிடமிருந்து வெகு தொலைவில் தொடர்பற்று இருக்க வழிகோணுவதால் நாமும் இயற்கை சார்ந்த உணர்வற்று மேலும் மேலும் தேவையற்ற தீங்குகளை இயற்கைக்கு கோப மூட்டுமளவிற்கு வழங்கிவிடுகிறோம்.

இது இப்படியாக இருக்க, நாம் சற்றே அடித்தளத்தில் நின்று உற்று நோக்கினால் உண்மை இப்படியாக எனக்குப் புலப்படுகிறது. நாம் இயற்கையை வெற்றி கொள்ளவே இது போன்ற செயல்களில் நம்மை ஆட்படுத்தி இயற்கையுடன் போரிட்டு வருகிறோம் என்பது தெரியவருகிறது.

இப் போரின் வெளிப்பாடுதான், அண்மைய காலத்து இயற்கை சீற்றங்களனைத்தும் சற்றே நின்று நிதானித்து பார்க்குமளவிற்கு. வருடந்தோறும் நம் துணைக்கண்டத்தில் பெறும் பருவ மழை, பங்ளாதேஷ் போன்ற நாடுகளை துவம்ஷம் செய்யுமளவிற்கு மழை கொட்டித் தீர்க்கிறது, அல்லது மழையே இல்லாமல் பொய்த்துப் போகிறது. அங்கு மட்டும்தான அப்படியாயெனில், இல்லை. சற்றே நமது பார்வையை உலகமனைத்திற்கும் திருப்புவோம்.

இப்பொழுது நடந்தேறிய சுனாமிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், துருக்கி, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்த மாபொரும் நில நடுக்கங்கள் அதனையொட்டிய உயிர் மற்றும் பொருட் சேதங்கள். வட அமெரிக்கா நாடுகளில் அதிகரித்து வரும் சூறாவளி, புயல்கள்.

இதில் காட்ரீனா என்றழைக்கப்படும் அண்மைய சூறாவளி அமெரிக்கா நாட்டையே இயற்கை சார்ந்த உணர்வுநிலைக்கு திருப்பி கொணர்ந்தது என்றால் அது மிகையாகது.

அந்த உணர்வு நிலை, முன்பெலாம் ஏதோ மூன்றாம் தர உலக நாடுகளுக்கு மட்டுமே சொந்தமென நினைந்து வந்த அப் மாபொரும் நாடு அந்த ஒரு புயலின் மூலமாக விழித்துக் கொண்டது. இயற்கை சீற்றம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதனை பொருத்து.

நீங்கள் எல்லாம் முனகுவது எனக்குத் கேக்கிறது, சரி, நேசி, அப்ப இது போன்ற இயற்கை சீரழிவுகள் முன்பு நடந்தேறியதே கிடையாது என்றா சொல்லவருகிறீர்கள என்று. சற்றே பொறுமையாக இதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.

அக் காலத்திலும் நடந்ததுதான். ஒரு முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இது போன்ற கடுமையான வறட்சியோ அல்லது தண்ணீர் தட்டுப்பாடோ நிலவியாதா? எனக்கு தெரிந்து இவ்வளவு மும்முரமாக பேசிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்றே கருதுகிறேன்.

அப்படியெனில் என்னதான் நடந்து போனது, அன்மைய காலத்தில் என்று சற்று பார்ப்போம்.

சதுப்பு நிலக் காடுகளும் இயற்கை சீற்றமும்:

சுனாமியின் தாக்கம் நாகை ஏரியாவில் மட்டும் சற்றே அதீதப் படியான உயிர் மற்றும் பொருட் சேதங்களுடன் நடந்தேறியதை நாம் அறிவோம் அல்லவா? அதனை கண்டிப்பாக அங்கே இயற்கையிலேயே அமைந்திருந்த சதுப்பு நிலக்காடுகளை அழிக்காமல் வைதிருந்தால், அது ஒரு அரணைப் போல செயல் பட்டு சுனாமி அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி கரைக்கு வந்து சேரும் பொழுது, அதன் தாக்கம் இன்று நாம் பார்த்த அளவிற்கு இருந்துதிருக்காது.

அதுபோலவே, வளர்ந்த நாடு என்று தாவிக் குதிக்கும் அமெரிக்காவில் மட்டும் இந்த இயற்கை வளங்கள் சூரையாடப் படாமலா இருக்கிறது என்றால் அங்கும் இதே கதைதான். அங்கும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதனை வெளிச்சம் போட்டு காட்டியது, காட்ரீனா என்ற சூறாவளி.

அங்கும் இது போன்ற சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டதினால் அந்த சூறாவளியின் முழுவீச்சத்தையும் கரைபரப்பில் காண நேர்ந்தது. இன்னமும் ஒரு சுட்டரிக்கையின் மூலமாக தெரிந்த கொண்ட உண்மை ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஒரு ஏக்கர் அளவில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதாக அது சொல்லவருகிறது.

சற்று சிந்தித்து பாருங்கள், இயற்கையே நமக்கு வழங்கியிருக்கும் அரண்களை விட்டொழிந்து விட்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கடற்கரையோரம் மதிற்சுவர் கட்டுவது என்ன முட்டாள்தனமான அணுகுமுறை.

மக்கட் பெருக்கமும், அழிந்து வரும் பயிர் பன்முகத் தன்மையும், வனங்களும்:

1950-60களில் விவசாயத் துறையில் வந்த பசுமை புரட்சி என்கிற திட்டம் பின்னாலில் மெதுவாக தொழிற்புரட்சியாக மாறிப்போனது விவசாயத்துறையிலும், இயற்கை சார்ந்த உற்பத்தி திறனை பின்தள்ளி. இந்த புரட்சியின் காரணமாக 1950 லிருந்து 80களில், உணவு உற்பத்தி 250 சதவீதமாக உயர்ந்ததாம். சரி இப்படி நடந்து போனதில் என்ன நன்மை, தீமை என்று பார்ப்போம்.

பல்கிப் பெருகிக் கொண்டுவரும் இந்த மக்கட் தொகைக்கு பசியாற்றுகிறேன் என்ற பெயரில் இயற்கையிடமிருந்த அத்துனை செல்வங்களையும் பறித்துக் கொண்டு அவளது கருப்பையில் உள்ள சில முட்டைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றுனுள் நமது உடனடித்தேவைக்கென என்ன தேவையோ அதனை மட்டுமே கருத்தில் கொண்டு அவளின் கருப்பையை சூரையாடி, பணப் பயிர்களாக வெளிக்கொணர்ந்து, ரசாயனங்களை மட்டுமே நம்பியே அவைகளையும் பயிரிட்டு அந்த ரசாயனங்களையும் சேர்த்து உணவுப் பொருளாக மாற்றி நாமும் உண்டு, மற்ற உயினங்களுக்கும் ஊட்டி பார்க்காத வியாதிகள் எல்லாம் பார்த்து வருகிறோம் இன்னாலில்.

இந்த பணப் பயிர்கள் தானியங்களாக குறிப்பிட்ட வகை கோதுமை, அரிசி, சோளம் etc., போன்றவைகளாகவே பயிரடப்பட்டு ஏனையெ வகை அந்த ஊரின் சீதோஷ்ன நிலைக்கே உருவான தானியங்கள் துடைத்தெடுக்கப்பட்டு அத்துடன் சேர்த்து அதனை நம்பியிருந்த பூச்சி பட்டுக்களையும் அழித்து, இயற்கை உரங்களையும் பயன் படுத்த முடியாவண்ணம் எல்லாவற்றையும் இழந்து, மீண்டும் அழிவுப் பாதையில் இயற்கையை நடக்க வழிகோணுகிறோம், அத்துடன் இணைந்து வாழும் நம்மையும் அழித்துக் கொண்டுதான்.

மேற்கு மலைதொடர்கள், ஒரு காலத்தில் உள்ளே புக முடியா வண்ணமிருந்த அடர்ந்த காடுகள் இன்று ஒரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்துகள் மூலைமுடுக்கெல்லாம் சென்று வர. அங்கிருந்த மழைக்காடுகள் நிறைய அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் என்ற ஒன்றை கொண்டுவந்ததின் விளைவு இன்று மழையத்துப் போய், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்றிருந்த சுற்று வட்டார ஊர்களும், மாநிலங்களும் ஏன் உலகம்தழுவிய என்று கூட கூறமுடியும் அதன் விளைவை சந்தித்து வருகிறது.

ஃபாசில் எரிபொருள் திருட்டும், இயற்கையின் பெருமூச்சும்:

இந்த ஃபாசில் எரிபொருட்கள் எங்கிருந்து வருகிறது? பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தாவர மற்றும் விலங்குகள் மாண்டழியும் பொழுது அவைகள் புதையுண்டு பலவேறுபட்ட நிலைகளில் பல வேதி மாற்றங்களினுடே பயணித்து இன்று நமக்கு பயன்படும், எரிவாயுவாகவும், நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் கிடைக்கிறது.

எனவே மீண்டும் ஞாபகத்தில் நிறுத்த வேண்டிய விசயம், இவைகள் தண்ணீரைப் போல் தோண்டத் தோண்ட ஊறி வருவது கிடையாது, ஏற்கெனவே அவ்வாறு இருப்பதை வெளியே கொண்டுவருகிறோம் அவ்வளவே.

ஒரு லிட்டர் பெட்ரோலியம் கிடைக்க ஒரு காலத்தில் பல ஆயிரம் நிலப்பரப்பில் இருந்த வனம் அழிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாம். ஏன் அவ்வளவு, ஒரு அடி நிலக்கரி கிடைக்க பத்து அடி தாவர பொருள் அவசியமாம், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு இயற்கைவளம் அழிந்துருந்தால் நாம் இன்று அழித்து தீர்க்கும் இந்த வளங்கள் கிடைத்திருக்கும். நாளை இது போல் நம் சந்ததிக்கு கிடைக்க வாய்புண்டா? விட்டுவைத்திருக்கிறோமா ஏதாவது ஒன்றை?

இதனை வெளிக்கொணர்ந்து முறையற்று பயன்படுத்துவதின் மூலம், (ஒரு அமெரிக்கனுக்கு உணவளிக்க அவருக்குகென ஆகும் எரிபொருளின் செலவு 1600 லிட்டர் பெட்ரோலியமாம் ஒரு வருடத்திற்கு) நமது தலைக்குமேல் இருக்கும் குடையாம் ஒஷொன் திரையையும் கிழித்து மற்ற விளைவுகளையும் விலை கொடுத்தல்லவா வாங்குகிறோம்.

கடல் மாசுபாடு:

எங்குதான் நாம் விட்டுவைத்தோம், கடலுக்குள்ளும் சென்று அணுக் கழிவுகளையும், கொண்டு வந்த பொட்ரோலியம் நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து அல்லது அவைகள் வேண்டுமென்றே கடலில் கலக்க வைத்து அங்குள்ள மழைக்காடுகளை போன்று என்றழைக்கப்படும் "பவளப் பாறைகளின்" அழிவிற்கும் ஏனைய கடல் விலங்குகளுக்கும் அழிவினையும், ஒரு சமச்சீரற்ற நிலையில் அந்த வளம் விழ அடிகோலிடுகிறேம்.

இயற்கையின் பதிலடி நமது சுரண்டல் போருக்கு:

இப்படி பல நிலைகளில் நமது போரை இயற்கைக்கு எதிராக நடத்தி வருகிறொம். எதனை மறந்து என்றால் நாம் இயற்கையின் அங்கம் தான், நமக்காக அல்ல இயற்கை என்பதனை முழுவதுமாக மறந்து போரடுவதின் விளைவு; இயற்கை பிரிதொரு நிலையில் தன்னை தற்காத்துக் கொள்ள, carrying capacity என்ற சமன்பாட்டை பயன்படுத்த நேரிடுகிறது, உயிரனங்களுக்கு எதிராக.

எப்படி, ஒர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட எறும்பின் பெருக்கம் அதிகமுறும் பொழுது அதனை அதற்கெதிரான ஒரு விலங்கினத்திற்கான வளரும் வாய்ப்பை இயற்கையே உற்பத்தித்து அவ் எறும்பினை கட்டுபாட்டுக்குள் கொணர எத்தனிக்கும் அதுவும் முடியாத பட்சத்தில் அதற்கு நிறந்தர அழிவே, தீர்ப்பு.

இது போன்று நமக்கும் அன்மை காலங்களில் இயற்கை இந்த யுக்தியை பயன்படுத்த முற்படுகிறதோ என்று எனக்கு தோன்றச் செய்கிறது. எப்படியெனில்;

அதீதத்து வரும் கணக்கற்ற மக்களின் பெருக்கமும் அதனையொத்த கண்மூடித்தனமான இயற்கை சீரழிப்பும் ஒரு வகையில் இயற்கையே முன் வந்து நம்மை கண்டிப்பதாக உள்ளதுதானோ இந்த சூறாவளி பெருமூச்சுகளும், சுனாமிகளும், பூகம்பங்களும், உடல் வியாதிகளும், வெப்ப சூடேற்றமும் இன்ன பிறவும். யோசிக்கத்தான் வைக்கிறது.

இயற்கையுடனான உணர்வு சார்ந்த நிலை (Nature Consciousness) அற்றுப் போனதே இதற்கெலாம் தலையா காரணமோ?

எனது அடுத்த பதிவில் நம்ம மதக் கடவுளர்களும் இதற்கு எப்படி பொறுப்பாளி ஆகுகிறார்கள் என்பதனைப் பார்ப்போம்.

இதோ எனது அடுத்தப் பதுவிற்கான சுட்டி: நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II

Thursday, November 09, 2006

மருத்துவரே வேண்டாம் - *யோகா* செய்யுங்கள்

நமக்கு இந்தியாவிலிருந்து கிடைத்த பல பொக்கிஷங்களில் இந்த ஹத்த யோகா மிக முக்கியமானது. அறிவியல் பூர்வமாக நிருப்பிக்கப் பட்ட ஒரு சிறந்த மன மற்றும் உடல் நலம் பேணலில் முக்கிய பங்காற்றுகிறது இந்த ஹத்த யோகா.

இயற்கையாகவே வெளியிலிந்து ஒன்றும் உடம்பினுள் செலுத்தாமல் நம்மால் நமக்கு என்ன செய்து கொள்ள முடியும் என்றால், நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற இந்த ஹத்த யோகத்தின் மூலமாக அடையும் நன்மைதான்.

நான் வால்பாறையில் களப்பணி ஆற்றிக் கொண்டு இருக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் ஆழியார் அணைக்கு பக்கத்தில் பேருந்துகள் தேநீர் இடைவெளிக்காக நிறுத்துவார்கள். அப்பொழுது அங்கு ஒரு குண்டலினி சார்ந்த ஆஸ்ரம் இருப்பதை பார்பதுண்டு (மகரிஷி என்று நினைக்கிறேன்). அதனை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு, நமக்கும் அதுக்கும் வெகுதொலைவு என்று நினைத்துக் கொண்டிருந்தேன், பயத்துடன்.

அப்பொழுது ஒரு நண்பி ஒருவரால் எனக்கு யோகா சொல்லிக் கொடுக்கும் (வெள்ளைக் கார)மாஸ்டர் ஒருவரை அறிமுகப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. கோவையில் உள்ள சுவாமி சச்சிதானந்தா யோகா நிறுவனத்தில்.

இருப்பினும் எனக்கு கொஞ்சம் அச்சமிருந்தது, அதனைப் பற்றி அரசல் புரசலான கட்டுக் கதைகளை மட்டுமே கேட்டு வளர்ந்திருந்ததால் என்று நினனக்கிறேன். அதாவது, யோகாவெல்லாம் வாழ்வில் சாமியாராக போக எண்ணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான், அப்படி எண்ணமில்லாமல் சேர்ந்து செய்தாலும் நீயும் அப்படியாக ஆகிவிடுவாய் என்று. அது போன்ற பயமே அந்த காலக் கட்டத்தில் என்னை விலகியே இருக்க வைத்தது.

ஆனால், இங்கு நண்பர்களின் துணை கொண்டு இறங்குவதால், என்னதான் ஆகும் செய்து பார்த்து விடுவோமே என்று, காலை 5.30 லிருந்து 7 மணி வகுப்பில் சேர்ந்தேன். ஒரு இரண்டு மாதங்கள் ஹத்த யோகம் பயின்றேன். அதுதான் நான் வாழ்வில் செய்த ஒரே உருப்படியான காரியம் என்று தினமும் நினைத்து இன்று பெரிமிதம் கொள்கிறேன்.

அந்த நாட்களில் எனக்கு கிடைத்த அனுபவமும், யோகப் பயிற்சியும் பின்னாலில் கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு கிடைத்த ஒரு மரக் கட்டை துண்டு போல என்னை இந்த வாழ்வெனும் சமுத்திரத்தில் சிக்கி மூழ்கி போவதிலிருந்து காத்து வருகிறது என்றால் அது மிகையாகது. எந்தந்த வகையில் என்று சொல்கிறேன். வாருங்கள்.

ஆனால் ஒரு டிஸ்கி, நான் இங்கு பகிர்ந்து கொள்ளும் ஆசனங்களின் படமும் அதனை செய்வதால் உடலுக்கும் மனத்திற்கும் கிடைக்கும் பலன்களும் என்ன என்பதனைப் பற்றியதுதான். உங்களுக்கு இது பற்றிய ஒரு ப்ரக்ஞை கொடுப்பதற்கெனவே. எப்படி செய்வது என்பதனை முறைப்படி ஆசிரியர் கொண்டு கற்பது மிகவும் அவசியம். கற்றால், என்றென்றும் உடல் நலம் சீராக உங்கள் கையில்.

யோகா செய்து வருவதால் எதிலும் ஒரு நிதானம் வருகிறது. ஏனெனில் யோகா உடலிற்கும் மனத்திற்கும் தொம்புட்டி எதிலும் எப்பொழுதும் அளவோடு (Moderation) ஈடுபடும் படி நம்மை அறியாமலேயே மனத்திற்கு ஒரு ஸ்திர தன்மையினை வழங்கிவிடுகிறது அதன் பக்க விளைவாக. ஏன் உடலுக்கும் தான் (சாப்பிடுவதில் கூட).

இந்த ஜிம், விளையாட்டு மைதான உடற் பயிற்சிக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதனை கண்டறிய பலனை அனுபவித்துப் பார்த்தால்தான் விளங்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஆசனமும் நம் உடலினுள் உள்ள உள் உறுப்புகளின் வேலைகளை சரிவரச் செய்ய உதவி புரிகின்றன.

இந்த காலக் கட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரே இடத்தில் அமர்ந்து மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து ஒரு பத்திற்கும் மேற்பட்ட மணி நேரங்கள் வேலை செய்யும் படியான சூழ்நிலை. ஆதனால் இன்று போல் என்றும் இந்த யோகாவிற்கு தேவை வரலாற்றில் இருந்திருக்க முடியாது.

முதுகு தண்டுவடத்திற்கும் (Spinal Chord) யோகாவிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. தண்டுவடத்தின் மூலமாகவே எல்லா நரம்புகளும் பிண்ணப்பட்டுள்ளன, செய்திகளை உடலின் ஏனைய பாகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் இயங்குவதற்கும் இத் தண்டுவடம் உதவுகிறது.

இச் சூழ்நிலையில் தண்டுவட பகுதியை தினமும் முறுக்கி, அப்பகுதியிலும் மற்ற பகுதியிலும் இரத்த ஓட்டத்தையும், ஆக்ஸிஜனேற்றமும் செய்யும் பொழுது உடலும், மனமும் புத்துணர்வு பெற்று வார்த்தைகளில் அடங்கா பேரின்பத்தை உணர வழிவகை செய்கிறது.

எப்பொழுது ஒருவருக்கு வியாதி வருகிறது என்றால் ஒரு உடலுறுப்பில் உள்ள பகுதிகளில் போதுமான அளவிற்கு இரத்த ஓட்டமும், ஆக்ஸிஜனேற்றமும் தடையிறும் பொழுதுதான். அதனை இந்த யோக ஆசனங்களை கொண்டு, உள் உறுப்புகளை மசாஜ் செய்வது போல இழுத்தும், சுருக்கியும், அழுத்தியும் ஏன் அந்த உறுப்புகளின் மீது நமது எண்ணத்தை குவிப்பதின் மூலமாகவும் அதன் செயல்பாடுகளை துரிதப் படுத்துகிறொம். வியாதியும் பக்கத்தில் வராமல் இருக்கிறது.

இப்பொழுது விசயத்திற்குள் செல்வோம் வாருங்கள் நண்ப/நண்பிகளே.

I) Surya - Namaskar (Sun Salutation) - சூரியனுக்கு வணக்கம்

இந்த படத்தை நன்கு கவனித்து பார்த்தீர்களேயானால், உங்களுக்குத் தெரியும் உடலின் இலகுத் தன்மைக்கென நீட்டி, மடக்கி விளையாட்டு மைதானத்தில் செய்யப்படும் ஒரு warm up உடற்பயிற்சி போலவே தென்படும். அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அதனைத் தாண்டியும் மிக்க பலனளிப்பது.

இருந்தாலும் நான் கற்றுக் கொள்ளும் பொழுது ஆசிரியர் கூறினார், இந்த நாளை எப்படி தொடங்க வேண்டும் என்பதனை இதனை செய்யும் வேகத்தைக் கொண்டு அறிதியிட்டுக் கொள்ளலாமென. உடல் சார்ந்த வேலை இன்று உண்டா - சற்று வேகமாக ஒவ்வொரு நிலையையும் மாற்றிச் செய்யுங்கள். அமைதியான மனத்தை ஈடுபடுத்தி சாந்தமாக இருக்க - மெதுவாக ரிதமிக்காக செய்யுங்கள்.

ஆனால், மற்ற ஆசனங்கள் செய்வதற்கு முன்பு, இதனைச் கண்டிப்பாக செய்தால் சேம்பேறித்தனம் நம்மை விட்டு விலகிவிடும். மற்ற ஆசனங்கள் செய்வதும் எளிது. சில நேரங்களில் நிறைய நேரம் இல்லை என்றால் ஒரு மூன்றிலிந்து ஐந்து முறை "சூரிய நமஸ்காரம்" செய்து விட்டு அன்றைய தினத்தை ஓட்டிவிட இது உதவும்.

II) Naga Asana - The Cobra Pose

இந்த படத்தில் காட்டியது போல, இந்த ஆசனம் செய்யப்படும் பொழுது முதுகொலும்பு முறுக்கப்படுகிறது, மணிக்கட்டுக்கு ஸ்திரத்தன்மையும், மார்பு தசைகளும் பயனடைந்து, புத்துணர்வு பெறுகிறது.

முறையாக செய்வதின் பொருட்டு இடம் விலகிப் போன "தண்டுவடத் தட்டு (displaced spinal disc)" திரும்பவும் இருந்த இடத்தில் கொண்டுவரும் சிகிச்சையில் பயனுட்டுவதாக தெரிகிறது.

இது போன்று தண்டுவடத்தை முன்னிறுத்தி செய்யப்படும் ஆசனங்கள் தட்டுக்களுக்கிடையே உள்ள ஸ்பாஞ்சிகளில் ஆயில் அடிப்பது போல அடித்து இலகுத்தன்மையை மெருகூட்டி கொள்ளலாம் [Flexibility enhancement].

III) Shalabha Asana - The Locust Pose

இந்த ஆசனத்தின் மூலமாக மேல், கீழ் இடுப்புத் தசைகளின் ஸ்திரத்தன்மையும், இலகுத் தன்மையும் ஈட்டப் படுகிறது.


அது மட்டுமன்றி பெறுகுடல், சிறுகுடல், வாயு பிரட்சினை, சிறு நீரக நீர்ப்பை (bladder) போன்றவைகளில் உள்ள பிரட்சினைகளை அண்ட விடாமல் பார்த்துக் கொள்கிறது. தண்டுவடமும் பயனடைகிறது என்பதனை சொல்லவும் வேண்டுமோ.

கால்கள் விரைத்து நீட்டப் பெறுவதால் அதுவும் ஸ்திரத் தன்மையடைகிறது.

IV) Dhanura Asana - The Bow Pose

மீண்டும் முதுகொலும்பிற்கு வலிமையையும், புத்துணர்வையும் ஊட்டும் ஒரு ஆசனம். இது இடுப்பு, கழுத்து வலி போன்றவைகள் வராமல் தடுக்க சிறந்த காப்பீடு.

வயிற்றுப் பகுதி நன்றாக இழுத்து விடப்படுவதால் அஜீரணக் கோளாரு நன்கு கவனித்துக் கொள்ளப்படுகிறது.

அந்த படத்தில் இருப்பதைப் போன்று கால்களை கையால் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஊஞ்சலைப் போன்று முன்னும் பின்னும் சென்று வந்தால், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள அனைத்து உள் உறுப்புகளும் மசாஜ் அடையப் பெறுவதால், மண்ணை திண்ணாலும் செரிச்சுப் போகுது எனக்கு.

பல காலங்கள் செய்து வந்தால் உடம்பின் மேல் பாதி நல்ல ஸ்திரத் தன்மை அடையப் பெறலாமாம்.

V) Sarvanga Asana - The Shoulder Stand

இதன் முக்கியப் பயன் கழுத்து (அங்கேதானே இருக்கு தைராய்டு, பாரா தைராய்டு), முதுகுத்தண்டு, மார்பு இவைகளுக்கு இலகுத்தன்மையினை வழங்குவதோடு, பின்னால் கூறப் போகும் சக்ரா மற்றும் தலை கீழாக நிற்கும் ஒரு ஆசனத்திற்கு கிடைக்கும் அத்துனை பயன்களும் இதற்குமுண்டு.


VI) Hala Asana - The Plow Pose

மேலே பேசப்பட்ட ஆசனம் செய்யும் பொழுதுதே இதனையும் செய்ய முடியும், என்ன கால்களை தலைக்கு நேராக கொண்டுவருவதற்கு முன்பாக பின்னால் கொண்டு சென்று தரையை படத்தில் உள்ளவாறு தொட்டு நிறுத்தி வைத்துவிட்டால் அவ்வளவுதான் இந்த ஏர் ஆசனம்.

இது கால்களுக்கு இலகுத் தன்மையை வழங்குகிறது. மூட்டுவலி, தைராய்டு, மார்பகப் பகுதி நன்கு அழுத்திவிடப்படுவதால் நுரையீரல், மற்றும் வயிறு, இடுப்பு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து நல்ல ஆக்ஸிஜனேற்றமும் அப்பகுதிகளில் நடை பெறுகிறது.

VII) Ugra Asana - The Noble Pose

இந்த வகை ஆசனத்தில் படத்தை கவனித்தால் தெரியும் உடம்பின் முன் பாதியை தாழ்த்தி கைகளை கொண்டு கால்களை தொட்டு ரிலாக்ஸ் செய்யும் பொழுது, முதுகொலும்பு மற்றும் பின் தசைகள் வளைக்கப் பட்டும், நீட்டப் பட்டும் இருப்பது.

அது மட்டுமல்லாமல் வயிறுப் பகுதி இறுக்கப்பட்டும், சுருக்கப்பட்டும் மீண்டும் பழைய நிலைக்கே திருப்பப்படுகிறது. அதனால் அப்பகுதிகளில் இரத்த ஓட்டம் அதீதப் படுத்தப்படுகிறது. இதுவே அப்பகுதிகளில் உள்ள தசைகளுக்கு ஒரு பொலிவை கொடுக்கிறது.

எல்லாவற்றுகும் மேலாக சீரணக் கோளாறு, மலச்சிக்கல் இந்த ஆசனம் செய்யும் பொருட்டு தவிர்க்கப் படுகிறது. கால்களுக்கு அசதியிலிருந்து ஒர் ஓய்வும் உண்டு.

VIII) Matsya Asana - The Fish Pose

இது மேலே பார்க்கப்பட்ட ஆசனத்தை தொடர்ந்து செய்வது நலம். மார்ப்புப் பகுதியை முன் தள்ளி விரியவைப்பதால், அதிகப்படியான ஆக்ஸிஜன் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. சுவாசப் பகுதியில் உள்ள கற்றடைப்பும், இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜனேற்றமும் நடைபெறுகிறது.

படத்தைப் பார்த்தால் தெரியும், தலை தலைகீழாக வைக்கப்பட்டிருப்பதை. அப்படி வைத்துப் பிடிக்கும் பட்சத்தில் சைனஸ் பகுதி விரிவடைந்து அது சம்பந்தப்பட்ட அடைப்பு மட்டும் ஏனைய பிரட்சினைகளிலிருந்து படிப்படியாக நிவாரணம்.

IX) Sirsha Asana - The Headstand

Image Hosted by ImageShack.us
நாள் முழுவதும் நாம எல்லோரும் உட்கார்ந்துகிட்டோ அல்லது நடந்தோ செல்லும் பொழுது, அன்னிச்சையாக நமது இதயம் தான் பாட்டுக்கு மல்லுக் கட்டி இரத்தத்தை முடிந்தளவிற்கு தலைப்பகுதிக்கு உந்தித் தள்ளிக் கொண்டு இருக்கிறது, இல்லையா.

அது அப்படியாக இருக்கையில் இயற்கைக்கு மாறாக நாமாக வழிய சென்று, அந்த தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதீதப் படுத்தி புத்துணர்வு ஊட்டத்தான் இந்த தலைகீழாக நிற்கும் ஆசனம்.

இதன் மூலமாக உடம்பின் எல்லா பகுதிகளுமே பயனடைகிறது என்றால் அது மிகையே கிடையாதுங்க. கால் மேலேலேலே இருப்பதால் இப்ப, சாதராணமாக நடைபெறும் இரத்த ஓட்டம் சற்று நம் முயற்சியால் தலைகீழாக நடக்கிறது. அதன் பலனும் சொல்லிளடங்கா.

இந்த ஆசனம் முறைப்படி செய்யக் கற்று கொண்டால் concentration சக்தி கூடி, மெது மெதுவாக தியானத்தில் உட்புக உதவும்.

X) Chakra Asana - The Wheel Pose

இது கொஞ்சம் கஷ்டமான ஆசனம்தான். இருந்தாலும், சிறந்த வழியில் பயனுள்ளதாக அமைகிறது.

இது முழு உடம்புக்குமே வலிமையை கொடுக்கக் கூடியது. அதிலும் சிறப்பாக கார்டியோ வஸ்குலார் சம்பந்தபட்ட வகையில் (இதயம்) மிக்க பலனுடையது. மேலும், கைகால்கள், தோள்பட்டை, முதுகொலும்பு எல்லாவற்றுகும் வலிமை சேர்க்க உதவுகிறது.

இதில் முழுமை அடையா விட்டாலும், கொஞ்சம் வந்தால் கூட பலன் என்னவோ உறுதி.

XI Ardha Matsyendra Asana - The Half Spine Twist Pose

இந்த ஆசனம்தான் முதுகுத் தண்டுவடத்தை முறுக்குவதிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது.

கம்பியூட்டர், மற்றும் ட்டி.வியின் முன்னால் அதிக நேரம் அமர்ந்து இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் மிக்க உதவலாம். ஒரே நேரத்தில் எல்லா உடம்புப் பகுதிகளுமே இறுக்கப்பட்டு தளர்த்தப் படுவதால் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் துரிதப் படுத்தப் பட்டு பயன் அடைகிறோம்.

வயிற்றுப் பகுதி நன்கு அமுக்கப் படுவதால், அப்பகுதியின் தசைகள் நன்கு பொலிவடைகிறது.

XII) Sava Asana - The Corpse Pose

இது நம்ம எல்லோருக்கும் பிடிச்ச ஆசனம் ;-) பண்ண ஆரம்பிச்சாலே சும்மா தூக்கம் சொக்க ஆரம்பிச்சுடும். நான் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு ஆசனம் செய்து முடித்தவுடன், ரிலாக்ஸ் ஆவதற்கும் மனதை அடுத்த ஆசனம் செய்வதற்கு தயார் செய்வதற்கும் இந்த ஆசனத்தை தவறாமல் செய்வேன்.

இரவில் தூக்கம் வரதாவர்கள் இந்த ஆசனத்தின் படி மனத்தையும், உடம்பையும் எப்படி ரிலாக்ஸ் செய்வது முறைப்படி என்று தெரிந்து கொண்டால் ஈசியாக தன்னை தூங்கப் போட்டுக் கொள்ளலாம்.

இந்த எளிய ஆசனத்தின் மூலமாக இரத்தக் கொதிப்பைக் கூட கட்டுப் படுத்த முடியும். ஏனெனில் இந்த ஆசனத்தில் மனதற்ற நிலையில் இருக்க முயற்சி எடுப்பதால், மிகவும் அமைதியான சூழல் நமக்கு எட்டுகிறது.

Naadi Suthi and Pranayama

கபால சுத்தி பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு (சப்பனம் போட்டு), அடி வயிற்றிலிருந்து காற்றை உந்தி தள்ளுவது வேகமாக. அப்படி பல முறை செய்து, சுவாச பகுதியை சுத்தம் செய்து விட்டால், பிறகு நாடி சுத்திதான்.

நம் உடம்பில் மூன்று முக்கிய நாடிகள் உள்ளனவாம். அவைகள் முறையே இடா (Ida), பிங்கல(Pingala) மற்றும் சுஸ்ம்ன (Sushmna).

இதில் மூச்சுக் காற்றை இடது மூக்குத் துவாரத்தின் வழியே இழுக்கும் பொழுது (வலதை மூடிக்கொண்டு) - உடம்பு குளிர்ச்சியடைகிறதாம் (இட நாடி). பிறகு அந்த அசுத்தக் காற்றை வலது மூக்குத் துவாரத்தின் வழியே வெளிச் செலுத்தி (இடதை மூடிக்கொண்டு), பிறகு சுத்தக் காற்றை அதே துவாரத்தின் வழியே உள் வாங்குவது (பிங்கல நாடி) - உடம்பு உஷ்ணமேற்றப் படுகிறதாம். இது இரண்டும் சம நிலையில் இருப்பது அவசியம் தானே.

சுஸ்ம்ன, தியானத்தின் போது இரு நாடிகளைக் கொண்டும் சீராண முறையில் சுவாசிக்கும் முறை.

எனக்கு இயல்பாக ஆஸ்மா போன்ற மூச்சிரைப்பு வருவதுண்டு, எப்பொழுதாவது தூசி அலர்ஜியின் பொருட்டு. ஆனால் இந்த மூச்சுப் பயிற்சி கிட்டதட்ட அதனை ஒழித்து கட்டிவிட்டதெனவே நினைக்கிறேன்.

மீண்டும் சொல்லிவிடுகிறேன். இங்கே நான் கூறியிருக்கும் ஆசனங்கள் எனக்கு பிடித்தவைகளிலிந்து சில அதுவும் அதனுடைய பயன் பாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் மட்டுமே.

இதில் எப்படி அந்த ஆசனத்தை செய்வது என்ற செய்முறை வழங்கப்படாததற்குக் காரணம், யாரும் முறையான ஆசிரியர் இல்லாமல் முயற்சி செய்யக் கூடாது என்பதற்காகத்தான். இருந்தாலும், இது சம்பந்தமான ஒரு எளிய PDF Format புத்தகம் ஒன்று உள்ளது வேண்டியவர்கள் எனக்கு மயில் இந்த முகவரியில் அனுப்பவும். karthikprab@gmail.com



பி.கு: எனது இரண்டாவது பதிவு கீழே வந்த பின்னூட்டங்களில் ஒன்றிற்கு பதிலுரைக்கும் வண்ணம் தடகள உடற்பயிற்சிக்கும் யோகாவிற்கும் உள்ள சில அடிப்படை வித்தியாசங்களுடன்... பதிவு இங்கே ==> யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!

Tuesday, November 07, 2006

காட்டிற்குள் ஓர் முதலிரவு...!!!

இது ஒர் இயற்கை நேசியின் தயாரிப்பு (டாப்ஸ்லிப்>> வால்பாறை மற்றும் அக்காமலை):

எனக்கு இது வாழ்வின் ஓர் மறக்க முடியாத நாள். எதிர் பார்த்து, திட்டமிட்ட படி நடப்பதில் ஒண்ணும் சுவாரசியம் அவ்வளவாக கிடைக்கிறது இல்லை. ஆனா, இது போன்ற எதிர் பாராம நடக்கிற விசயங்கள் தான் மனசில ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி பிறகு அதனை வாழ்க்கை முழுக்கவுமே சுமந்து திரியற மாதிரி அமைச்சுடும் இல்லையா, அது இனிமையான அனுபவமா இருந்தாலும் சரி கசப்பானதாக இருந்தாலும் சரி.

ஆனா, எங்களுக்கு அன்று கிட்டியது ஒரு இனிமையான அனுபவம். இது நடந்தது, புல் மேடுகளில் (Grass Hills). இந்த இடம் டாப் ஸ்லிப்பிலிருந்து ஒரு 12 லிருந்து 15 கிலோமீட்டர் தூரம், மேலே கீழேன்னு ஏறி இறங்கி நடந்து போன வரகலியார்னு ஒரு யானை முகாம் வரும். அங்கிருந்து நின்னு பார்த்த நம் முகத்துக்கு முன்னாடி மழைக்காடுகள் பச்சை கம்பளமாக விரிந்து ஒரு பெரிய, பாதி ஒன்றுமற்ற வழுக்கு பாறையாகவும், பாதி எலுமிச்சை புற்களும் (Lemon Grass) நிரம்பிய மலை ஒன்று எழுந்து நிற்கும்.

அந்த மலைக்கு பேரு, பெருங்குன்று. நல்ல சரிவான மலை. ஏறுவது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கும், ஆனா, ஏறி உச்சத்தில நின்னு கீழே தெரியும் ஊர்காடுகளையும், வனத்தையும் பார்த்தால் அத்துனை சோர்வும் காணமல் போயி விடும்.

சரி, அன்னிக்கு நாங்க ஒரு ஆறு பேருங்க, டாப்ஸ்லிப்பிலிருந்து கொஞ்சம் மளிகை சாமான்கள், மெழுகுவர்த்தி எல்லாம் வாங்கிக் கொண்டு வரகலியார் செல்வதாக திட்டம். வரகலியார், போற வழியில கோழிகமுத்தின்னு (அப்படின்னா என்ன பொருள்னு கேக்காதீங்க, தெரியாது) ஒர் இடம், அங்கே ஒரு யானை முகாம் கூட இருக்கு. அங்க நிறைய சுற்றுலா பயணிகள் வந்து போவதைக் காணாலாம்.

ஏன்னா, நிறைய காட்டெருமை (Indian Bison) பார்க்கலாம் அப்படின்னு, ஆனா, ஒண்ணு தெரிஞ்சிக்கிறது இல்லை, அருதப் பழசான எட்டூருக்கு சத்தம் கேக்கிறமாதிரி வண்டிகளை எல்லாம் எடுத்துட்டு வந்து மிருகங்களை துரத்தி தூரத்தில் நிறுத்தி விடுறாங்க அவுங்களே அப்படிங்கிறத.

நம்ம கதைக்கு போவோம். அந்த கோழிகமுத்தி யானை முகாமில நாங்க உக்காருவதில்ல, அதனையும் தாண்டி ஒரு சின்ன ஆறு ஓடுற இடமா பார்த்துத் தான் உட்கார்ந்து, ஏதாவது கொஞ்சம் கடிச்சிகிட்டு, குடிச்சிக்கிடுவோம். இப்ப உட்கார்ந்துகிட்டு இருக்கும் போதே, யாரெல்லாம் என் கூட இருக்காங்க அப்படிங்கிறத பார்த்திடுவோம்.

ஆறு பேருன்னு சொன்னேன் இல்லீய. அதில் எங்களோட குருஷி ஒர் பி.ஹெச்டி கைடு. இவரு காம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில டாக்டரேட் வாங்கினவர், நம்ம மேற்கு மலைத்தொடர்களில் வாழும் சிங்கவால் குரங்குகளின் (Lion tailed macaque) மேல் ஆராய்ச்சி செய்து. இவர் கிட்டே இருந்து, எனக்கு வாழ்க்கையை பத்தின பிரக்ஞை நிறைய கிடைச்சுதுங்க.

ஒரு சராசரி இந்திய ஆண் மகனுக்கு இருக்கும் இயல்பிலிருந்து, கொஞ்சம் விலகி வாழ்வின் சூட்சுமங்களை உணர்ந்து, மேற்கத்திய தொடுதலுடன் இந்திய முறையில் எப்படி குடும்பம் சந்தோஷமாக நடத்துவது என்பதனைப் பொருட்டு, சொல்லாமல் வாழ்ந்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவர் கையால் சமைத்து நாங்கள் நிறைய சாப்பிட்டிருக்கிறோம். ஒரு நல்ல நண்பனுக்கு நண்பனாகவும், ஆசிரியனுக்கு ஆசிரியாராகவும் இருந்து வருகிறார். இன்றும்.

அடுத்தது, நம்ம வரகலியார் யானை முகாமில் வாழும் பண்மையாளன், பெயர் எழுதப்படுவதற்காக மாற்றப்பட்டு வேல் முருகன் என்று வைத்துக்கொள்ளுவோம். முருகன் எனக்கு, என்னுடைய பி.ஹெச்டி குரு எப்படியோ அப்படியே இவரும், இன்னொரு வகையில். நேற்று விட்டுவிட்டு வந்த ஒரு படிப்பிற்கான குரங்கு கூட்டத்தை மறுநாள் எங்கு, எத்தனை மணிக்கு சென்றால் பிடிக்கலாம் என்பதிலிருந்து - நடந்து போகும் வழியில் காட்டு யானைகள் நடந்து போயிருக்கிறதா இல்லையா என்பது வரைக்கும் காட்டிற்குள் எல்லாமே அத்துப் படியாக வைத்திருப்பார்.

அதற்கெல்லாம் மேலாக, சார் என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது. இவரிடமிருந்தும் நிறைய பணிவு சார்ந்த வாழ்வியல் சூட்சுமங்களை கற்றுக் கொண்டேன். அவன் ஒரு மடையன் என்று தெரிந்தும் எப்படி அவனுக்கு வேண்டியதை கொடுத்து, மடையனை சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்ற மனோத்துவம் முருகனுக்கு அத்துப்படி ;).

சரி, மீதம் உள்ள நான்கு பேர்களும் ஆராய்ச்சி மாணக்கர்கள் என்னையும் சேர்த்து. இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.

அன்று வரகலியார் வந்து சேர்ந்தவுடன், அன்றிரவு பால் வீதியில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை அள்ளிப் பருகிக் கொண்டே (இது எங்களுக்கு ஒரு வாடிக்கை), முகாம் தீ போட்டுக் கொண்டு எங்களது குருவின் அனுபவங்களை கேட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது, முருகன் அலும்னிய தட்டுக்கள், பாத்திரங்கள் சகிதமாய் தனது மகளுடன் பருப்பு சாம்பாரும், சோறும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இருக்கும் உடம்பு அயர்ச்சியில் எது கொடுத்தாலும் அது அமிர்தமே அங்கு. அதிலும், முகாமில் இருப்பவர்களின் கைவண்ணத்தில் சமைத்ததை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் சமையல் வேறு எங்குமே காண முடியாத சுவையில் அமைந்திருக்கும் :).

மறுநாளும் வந்தது. அன்று மிதமான குளிருடன், நல்ல மிஸ்டியான நாள். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, மலைகாடுகளுனுடே நடந்து பெருங்குன்று ஏறுவதாக திட்டமிட்டோம். அதன் படி ஒரு நான்கு நாட்கள் அங்கிருந்து விட்டு, திரும்ப வருவதாகவும் திட்டமிடப் பட்டது. அதற்கென தேவையான, ஸ்லிப்பிங் பேக், மெழுகுவர்த்தி, அரிசி, கருவாடு, உருளைக் கிழங்கு அப்புறம் ஓல்டு மாங்க் (அட அது இல்லாமலா :-) எல்லாம் அள்ளிக் கொண்டு. நடுங்கும் குளிரில், தரிசனம் தரும் அத்துனை மிருகங்களையும் தரிசித்துக் கொண்டே பெருங்குன்றின் அடிவாரத்தை அடைந்தாகிவிட்டது.

பெருங்குன்றின் உயரம் 1850 மீட்டர்கள் கடல் மட்டத்திற்கு மேல். ஆனால் அந்த உயரத்தின் உச்சியை அடைவதற்கு நடந்து செல்லும் பாதைதான் அலாதியான சுகம். நெஞ்சு தரையை தொட ஒரு இரண்டு அடி இடைவெளிதான் இருக்கும், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் சரிவை.

நின்று நின்று பறவைகள், தவளைகள் பார்த்து நேரமாகிப் போனதால், காட்டிற்குள்ளேயே பாத்திரத்தை வைத்து கஞ்சி காச்சி, கருவாடு நெருப்பில் சுட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் நடை. எப்படியோ, மாலை நேர வாக்கில், மலையின் மீது இருக்கும் குடிலுக்கு சென்றடைந்தோம். அந்த குடில் கட்டப் பட்டது வெள்ளைக்காரன் காலத்தில், கோடையை குளு குளுன்னு கொண்டாட போல.

அங்க போயிட்டா அது தாங்க புல் மேடுகள் (Grass Hills). சும்மா, கண்ணுக் கெட்டிய தூரம் வரைக்கும், உதறிப் போட்ட வெளிர் நிற பச்சை ஜமுக்காளம் போல மேடும் பள்ளமுமாக இருக்கும். நாங்க போன சமயம் பார்த்து குறிஞ்சிப் பூ பூத்திருந்தது. ரொம்ப லக்கிங்க நாங்க. அப்பப்பா, எவ்ளோ அழகு!

ஹும், அன்று இரவு கொஞ்சம் ஓல்ட் மாங்க நாக்கில் தடவிக் கொண்டு வந்த கலைப்பு தெரியாமல், ஒரு 11 மணி வாக்கில் கிடைத்த இடத்தில் சுருண்டாச்சு. மறுநாள் காலையும் புலர்ந்தது, இன்னும் அடர்த்தியான மிஸ்ட்டும், குளிருடனும். எங்கோ இன்னொரு உலகத்தில் இருப்பதை போல ஒரு உணர்வு, இருக்காதா பின்னே. எம்புட்டுத் தூரம் இந்த நாகரீக கோமாளிகளை விட்டு விட்டு, இப்படி அந்ரான காட்டுக்குள்ள வந்து இருக்கோம். ஏதாவது ஒண்ணுன்ன, தன் காலே தனக்கு உதவி இங்கெல்லாம்.

பிறகு ஒரு பதினோரு மணிக்கெல்லாம் மிஸ்ட் கொஞ்சம் மட்டுப்பட்டு, இடங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. வந்தது, நம்ம குருஷிக்கு ஒரு ஐடியா, வரைபடத்தை எடுத்து விரித்தார் எங்கள் முன்னால், இங்கிருந்து மூணாறு (Munnar) எங்கிருக்கிறது என்பதனை சுட்டிக் காமித்து விட்டு, நாம் இன்று அங்குதான் செல்லப் போகிறோம். இப்பொழுது கிளம்பினால் இன்று மாலைக்குள் அங்கு சென்று விடலாமென்று யூகித்து, கையில் இருக்கும் காம்பஸ்-சை நம்பி. போகலாமென்று எலோரும் ஒரு மனதாக ஒத்துக் கொண்டோம். எனக்கு மட்டும், நாளைக்கு போகலாமே என்று உள்ளுக்குள் ஒர் நப்பாசை.

முருகன், ஒரு அலும்னிய பானை, இரண்டு தட்டுக்கள், முன்று டம்ளர் அரிசி, கொஞ்சம் கருவாடு, ரெண்டு உருளைக் கிழங்குகள், மட்டும் எடுத்துக் கொண்டார். அதான் நாளைக்கு திரும்ப வந்துடுவோம்லன்னு நினைச்சுக்கிட்டு.


வழியெங்கும் குறிஞ்சி மலர்களை செடிகளோடு பார்த்துக் கொண்டே, புல் வெளி பறவைகளையும், ஓர் இடத்தில் நீலகிரிமலை ஆடு (Nilgiri Tahr) பார்க்கக் கூடிய வாய்ப்புடன் சென்று கொண்டே இருந்தோம். பிறகு ஒரு இரண்டரை மணி வாக்கில் கட்டன் காபி குடிக்கலாமென நினைத்தோம். முருகன், மல மலவென்று கொண்டுவந்ததை இறக்கி வைத்துவிட்டு, ஒரு சின்ன பாறைச் சந்தில் பாத்திரம் உட்காரும் படியாக இடத்தை தேர்வு செய்து தீ போட விறகு குச்சிகளுக்கு அலைந்ததை கவனித்து நானும் கொஞ்சம் உதவி செய்யப் போய், என் அறை மாணக்கன், ஒரு நமட்டுச் சிரிப்பை உதிர்த்து, குருஷிக்கு தூபம் போடும் விதமாக, நீயும் ஒரு அஸிஸ்டெண்ட் ஆகிவிட்டாயா என விளித்தார். எல்லோரும் சிரித்தார்கள்... பாடம் எண் 10000023 ;).

அந்த சிரிப்பின் விலை என்ன என்பதனை பின்னால் பார்க்கலாம். மீண்டும் கதைக்கு போகலாம். கட்டன் காபியும் சில பிரட் துண்டுகளும் சாப்பிட்டு விட்டு, ஒரு அரை மணி நேரம் நடந்திருப்போம், எதிர்த்தார்ப் போல ஒரு பெரிய பள்ளத்தாக்கு இறங்கி நடக்க முடியாத வாக்கில் சரிந்து கிடந்தது எங்களின் முன்னால்.

ஆனால், அருகிலேயே ஒரு பசுஞ் சோலை (Shola) இருந்தது. இந்த புல் மேடுகளில் இருக்கும் சோலைகளுக்கும் (Grass Land Sholas) அதனை விட கொஞ்சம் குறைந்த உயரத்தில் இருக்கும் சோலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புல் மேடுகளில் அடிக்கும் காற்று மற்றும் திசை, கொட்டும் மழையளவு, மலையின் உயரம் இவைகளைக் கொண்டு அங்கு வளரும் தாவரங்களின் உயரம், அதன் இலையமைப்பு, பூ, காய்காக்கும் விதம் இவையெல்லாமே வித்தியாசமாக இருக்கும். ரொம்ப அடர்வாக, மரங்கள் குள்ளமாகவும் இருக்கும்.

ஏற்கெனவே, மேகம் திரண்டு மிஸ்டியான சூழலில் சிறிது மழைத் தூரவும் செய்திருந்தது. இந்த நிலையில், வெளிச்சம் மங்க ஆரம்பித்து , பள்ளத்தாக்கின் மேற்புறமாக அதி வேக காற்றை உணர முடிந்தது. அதன் விளிம்பில் நின்று பார்க்கும் பொழுது தூரத்தில் தெரியும் மூணாறு ட்டீ எஸ்டேட்டின் ஃபாக்டரியின் அஸ்பெடாஸ் கூரை அங்கு அடிக்கும் வெயிலில் தகதகத்தது. அதுதான் நாங்கள் அடைய வேண்டிய இலக்கு. முடியுமா இன்றைக்கு.

வேறு வழியில்லாமல் அந்த குறைந்த அளவே நம்பகத் தன்மையுடைய திசைகாட்டியை நம்பி அந்த அடர்ந்த சோலைக்குள் இறங்கி விட்டோம். இப்பொழுது மழையும் சற்று கனத்திருந்தது. மழைக்காட்டிற்குள் எப்பொழுதுமே பூமி சற்று ஈரப்பசையுடந்தான் இருக்கும், அதிலும் புதிதாக அண்மையில் மழை பெய்திருந்தால் சறுக்கி விழுவதற்கு சொல்லவே வேண்டியதில்லை.

புதியவர்கள் அந்த ட்ரிக்கை கற்றுக் கொள்ளும் வரைக்கும், கொஞ்சம் கஷ்டம்தான் காட்டினுள் காணக் கூடிய விலங்குகளை அவைகள் நம்மை காண்பதற்கு முன்பு நாம் அவைகளை காண்பது ;-).

சோலைக்குள் அந்த நெலைமைதான் இப்பொழுது. நிறைய அட்டைகள் (Leeches) வெளி வர ஆரம்பித்து விட்டன, காலை வைத்து எடுக்குமிடமெங்கிலும் இரண்டு மூன்று தலையை தூக்கி நாட்டியமாடியபடி தனது பசியை தீர்த்துக் கொள்ள தயாராக இருந்தது. உங்களுக்கு தெரியுமா? அட்டைகள் கடிப்பதற்கு முன்பு ஹிருடின் என்ற சுரப்பை கடிக்கும் வாயிலில் சொலுத்தி விடுவதால் நமக்கு கடிக்கப்பெறுகிறோம் என்ற பிரஞ்கையும் அற்று, அவருக்கு இரத்தமும் தடையில்லாமல் சப்ளை ஆகிக் கொண்டிருக்க அந்த சுரப்பு பயன்படுகிறது. அந்த அட்டையும் இரத்தத்தை தன் வயிறு வெடிக்குமட்டும் அருந்தி விட்டு, தானாக விழுந்த பின்னும் இரத்தம் வழிவது நிற்க 5லிருந்து 10 நிமிடங்களாவது எடுத்துக் கொள்ளும்.

மீண்டும் விசயத்திற்கு போவோம். அந்த அட்டைகளுக்கு பயந்தும், மேலும் மேலும் வெளிச்சம் மங்கி இருண்டு கொண்டே சென்றதால் இதற்கு மேலும் எந்த திசையில் செல்கிறொம் என்பதனை அறியாது, நடப்பதது உசிதமல்ல என்பதனை கொண்டு வெளியில் வந்துவிடுவது என்று முடிவு கட்டினோம். ஏனெனில், திசைகாட்டி காட்டும் திசையில் சென்று நடக்கும் பொழுது சரிவு மிக மோசமாக நடக்க முடியாத பட்சமாக இருக்கும் பட்சத்தில், திசையை மாற்றி நடக்க வேண்டி வரும், அவ்வாறு அடிக்கடி மாற்றி மாற்றி சுத்தி நடக்கும் பொழுது நேரமும் விரயமாகி, காணமல் போகவும் சாத்தியமுண்டு.

எனவே, வெளியே வந்து விட்டோம். மணியைப் பார்த்தால் மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் தூரலாக மாறி இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த சோலை ஓரத்திலேயே பெரிய பாறை ஒன்றை கண்டோம். அருகிலேயே ஒரு மரமும் கூட, சிறு தூரலிருந்து தப்பித்துக் கொள்ள. பாறையான பகுதி அட்டைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், ஏனைய மிருகங்களின் அண்மையினை அறிந்து கொள்ளவும்.

இப்பொழுது, தெரிந்து விட்டது. இரவு இங்குதான் கழியப் போகிறது எங்களுக்கென்று. இன்னும் அந்த அரிசியும் ஏனைய பொருட்களும் கைவசம் இருக்கிறது. ஓல்ட் மாங்க்தான் மிஸ்ஸிங். ஒரு உரச் சாக்கும் கைவசம், அது முருகனின் அவசர குடையாக அவாதாரமெடுத்துக் கொள்ளும் அவ்வப்பொழுது. இப்பொழுது அந்த உரச் சாக்கும், எங்களது இரண்டு பேரின் மழை கோட்டும் எங்களுக்கு கேம்பிங்க் கூரையாக ஆகிப் போனது.

முதலில் என்னைப் பார்த்து சிரித்தார்களே ஞாபகம் இருக்கிறதா, காப்பி போடும் பொழுது, சுள்ளி பொருக்குவதில் உதவினேன் முருகனுக்கென்று? இப்பொழுது சுள்ளி கதைக்கு உதாவாது. எரிக்கக் கூடிய வகையில் உள்ள மரக் கிளைகள் வேண்டும். அதுவும் ஒரு பணிரெண்டு மணி நேரத்திற்கு எரிக்கப் படும் விதமாக.

அப்படியானால், எல்லோரும் எழுந்து சென்று முழுதுமாக இருட்டுவதற்கு முன்பு பொருக்கி சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டிய நிலை. முருகனுக்கு, கவலைப் படர்ந்த சந்தோஷம், சில மடையன்கள் தன் நிலையிலிருந்து இறங்கி வந்து தனக்கு உதவுவதை பார்த்து ;).

ஒரு வழியாக கிடைத்தது. தண்ணீர், தண்ணீருக்கு என்ன பண்ணுவது? அருகில் இருந்த ஒரு சிறு பாறையின் பிளவிலிருந்து ஒரு நீண்ட புல்லின் நுனியின் வழியே வடிந்த சொட்டு நீரை, கால் கடுக்க நின்று அரை பாத்திரம் நிரப்பி எடுத்து வந்தோம். சமைப்பதற்கு அது உதவியது. கேம்ப் தீயும் போட்டாகிவிட்டது. நமது கருவாட்டு ப்ரியர் - குருஷிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அடடா, பசங்களுக்கு ஒரு மிகப் பெரிய அனுபவம் கிடைச்சுக்கிட்டு இருக்குங்கிறத நினைக்கும் பொழுது.

ஆனா, குளிருதே என்ன பண்ணுவது. இருந்த ஒரு நண்பியையும் நேரமாக நேரமாக ஒரு வட இந்திய நணபர் தனது கூட்டுக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார். நானெல்லாம் ஒரு ட்யூப் லைட் அப்ப (அந்த காலத்தில...:-)) . சரி அது போகட்டும், அந்த இரவு, சுழற்சி அடிப்படையில் ஒருவர் மாத்தி ஒருவர் கண் விழித்திருந்து (காவலுக்காக), தூங்கி வழிஞ்சு கொண்டே, அந்த மிஸ்ட், அந்த தூரல், அந்த த்ரில் அப்படின்னு ஒரு கலந்த கலைவயா கழிந்தது.

விடிந்ததும் சில காட்டெருமைகள் அருகில் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். பார்த்ததும் எங்களுக்கு தெரிந்த சங்கோதப் பாஷையில் ஒருவருக்கு ஒருவர் தலையாட்டிக் கொண்டு, சாமீ திரும்ப குடிலுக்கு நடையைக் கட்டுவொமென்று, குருஷியை மல்லுக்கட்டி திரும்ப அழைத்தோம். மீண்டும் மழையில் நனைந்த குறிஞ்சு பூக்களினுடே நடந்து மதியம் போல குடில் வந்த்தடைந்தோம்.

அந்த இரவு எல்லா இரவுகளை விடவும், ஒரு சிறந்த இரவு எனக்கு. இப்ப வுடு ச்சூட்... நீங்க என்னா இரவுன்னு நினைச்சுக்கிட்டு படீச்சீங்க இதுவரைக்கும்;-))

இதற்கு முன்னால் எழுதப்பட்ட டாப் ஸ்லிப் தொடர்பான பதிவுகள்:

காதலிக்க நேரமில்லை...!

அபூர்வக் காதல் : சிம்பயொசிஸ்

பிள்ளையார சந்திச்சப்பா: யானை விரட்டு..!

Monday, November 06, 2006

குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்...

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களுக்கு பெரும்பங்கு இருப்பினும், தான் சார்ந்து வாழும் சமுதாயமும் அதில் பெரும்பங்கு வகிப்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும், அந்த சமுதாயமும் தனிப்பட்ட மனிதர்களின் கூட்டு முயற்சியாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்த கட்டமைப்பு இரண்டு வகைகளில் உதவலாம் அல்லது உதவாமலும் போகச் செய்யலாம்; அந்த முழுச் சமுதாயத்தில் உள்ள நபர்கள் யாவரும் பலனை அனுபவிக்கும் வண்ணம்.

முதல் வகையில் தான் நம்பும், இதுதான் வாழ்வு முறை என்ற எண்ண வழி நெறிப் பாதையில், பாரம்பரியமாக முன்னோர்கள் விட்டுவிட்டுச் சென்ற பாதையில் எந்த கேள்வியுமே இல்லாமல் நடந்து செல்வது. அதன் பாணியில் வளர்க்கப்பட்ட குழந்தைகள், தன் பெற்றோர்களால், அவர்களுக்கு வழங்கப்பட்ட செப்பனிடப் பட்ட பாதையிலே நோகாமல், சட்டை கசங்காமல் கடந்து, வாழ்வெனும் மகா சமுத்திரத்தை கடந்து முடிக்கையில் எதனை தன்னுடன் எடுத்துச் செல்கிறார். அது அனுபவப் பொதிகள் மட்டுமேதானகத்தான் இருக்க முடியுமல்லவா?

தன் வாழ்வின் எல்லையில் இருக்கும் பொழுது சற்றே கடந்த வந்த பாதையை மெல்ல அசை போட்டு பார்க்கும் பொழுது தான் எடுத்த முயற்சிகளின் மூலமாக சமூதாயத்திற்கு ஏதேனும் படைப் பங்களிக்களிப்பு அளிக்கப்பட்டிறுக்கிறதா என்று உட்நோக்கும் பொழுது இவைகள் யாவும் வெளி வருகின்றன.

இந்த முதல் வகை வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் செய்யும் தவறு அல்லது அணுகுமுறை குழந்தை வளர்ப்பில் என்னவெனில், தன்னிடம் உள்ள, தன்னால் இயலாத காரியங்களை தன்னுள் கோட்பாடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய விசயங்களை, தனது குழந்தைகளின் மேல் திணித்து அதன் படி நடக்கக் கூறியோ அல்லது எந்தவொரு துணிச்சலான காரியத்தையும் தனியே எடுத்து அதனை பட்டறிந்து அறிவதற்கான சாதகமான சூழ்நிலையை மறுத்தோ வளர்ப்பது.

உதாரணத்திற்காக பல விதமான பெற்றோர்களின் மன நிலையை எடுத்துக் கொள்வோம்; படிப்பு, மதம், பயம் மற்றும் பழக்க வழக்கம் சார்ந்து. இவைகள் யாவும் எந்த ஒரு தனிப்பட்ட மனிதருக்கும் தனது பால்ய வயது முதற்கொண்டே தனது பெற்றோர்களின் மூலமாக கையிறக்கம் பெற்று அதுவும் தலைமுறை தலைமுறையாக பழைய பால் புது கிண்ணத்தில் மாற்றப்படுவது போல, அது தனது குழந்தைகளுக்கு ஊட்டப் படுகிறது.

அதிலும் குறிப்பாக தனது உண்மையற்ற பயம் அதனைத் தொடர்ந்த ஐயப்பாடுகள் தீர்க்கப் படாமல் இருக்கும் பட்சத்தில், அப்படியே எந்த ஒரு வடிகட்டலுமில்லாமல் தனது குழந்தைகளுக்கு மூளைச்சலவையின் மூலமாக சென்றடைகிறது.

மதம் சார்ந்த அத்துனை மூட நம்பிக்கைகளும் இப்படியே சென்றடைவதாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் மதம் சார்ந்த ஐயப்பாடுகளும், தனி மனித தேடல்களும், அதற்கான விடைகளும் தேடிப் பெறாத பட்சத்தில் எஞ்சியிருப்பது குழப்பமும் அதனைச் சார்ந்த பயமும் பல நிலைகளில் மனித வன்முறைக்கு வித்திடுகின்றன; பிற்காலத்தில், பல நிலைகளில்.

அது போலவே, இயற்கையாகவே ஒரு குழந்தை அதற்கென தனி இயல்புகளுடன் தனக்கு கிட்டும் சூழலில் வளர்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு அச் சூழலுடன் ஒன்றி வாழும் பொருட்டு, அது அதற்கென பிடித்தமான விசயங்களை கவனித்து அதில் ஆர்வம் காட்டலாம் அல்லது நாமே அந்த பன்முக தோற்றச் சூழலை உருவாக்கிக் கொடுக்கும் பட்சத்தில் அவைகள் எதில் ஆர்வம் அதிகம் செலுத்துகிறதோ அதனை அறிந்து அதன் பொருட்டு வாய்ப்புகளை பெருக்கிக் கொடுத்து ஒத்தாசையாக இருக்கலாம்.

அப்படியாக இருக்கும் பட்சத்தில் அக் குழந்தைகளும் மன நிறைவுடன், எந்தச் சூழ்நிலையிலும் தனக்கு மானசீகமான ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் எந்த விதமான மன குன்றுதலுமில்லாமல் வாழ்ந்து வரலாம், பிற்காலத்தில் (மாடு மேய்ப்பவனாக இருந்தாலும் சரி அல்லது இசை மேதையாக இருந்தாலும் சரி - மன நிறைவு அதில் அவனுக்கு கிட்டும் பட்சத்தில்).

அவ்வாறின்றி, பெற்றோர்கள் எந்தத் துறையில் அதிக வாய்பிருக்கின்றதோ (அல்லது சொல்லிக் கொள்வதற்கு பெருமையாக இருக்கும் என்பதால்) அதனை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் மீது அந்த முடிவை வைத்துத் திணிக்கும் பொழுது, பெற்றோர்களுக்கு பிறகு பிடிக்காத ஒன்றை 'கடமையே' என்று எந்த பிடித்தமுமில்லாமல் செய்து வாழ்வும் கசந்து தனது பொற்றொர்களின் ஆசையை தனது வாழ்வாக ஏற்று வாழ்ந்து சாக நேரிடும்.

உதாரணமாக, அப்பா மருத்துவத்தில் பெரிய நிபுணர் என்றால் அவரது பிள்ளையும் அதே துறையில் இருப்பது. இது போல, கிளிப் பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதனைப் போன்று சொல்லிக் கொடுப்பதினால் ஏதாவது Creativity அங்கே துளிர்க்கிறதா என்றால் சாத்தியம் மிகக் குறைவே! அதே சமயத்தில், தன் ஆர்வத்தில் ஒருவர் அந்தத் துறையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தனது முழுத் திறமையும் அதில் போட முடிகிறது, ஏனெனில் தனக்கு என்ன இயல்பாக இருப்பதை போல செய்ய முடிகிறதோ அதில் முயற்சி இன்றியே இயல்பாய் பல சாதனைகள் ஏற்படுத்தப் படுகின்றன.

இதில் கஷ்டகாலம் என்னவென்றால், பெற்றோர் தான் வாழ்நாளில் தான் செய்யும் காலவதியாகிப் போன வாழ்வியல் சார்ந்த அணுகுமுறையினை தனது சந்ததிகளுக்கு கண்ணாடியில் 'தூசி படர்வதைப்' போன்று கொஞ்சம் கொஞ்சமாக தனது வாழ் நாளின் பெரும் பகுதியில் அவர்களுக்கு ஏற்றி வைத்துவிட்டுச் செல்வதுதான்.

பிற்காலத்தில் அக் குழந்தை பெரியவனாகி தன் கற்றுக் கொண்ட முரண்பாடுகளை, தனது சம காலத்தில் சோதனைப் படுத்திப் பார்க்கும் பொழுது மிக்க உபத்திரவங்களுக்கிடையே தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டியதாகி விடுகிறது.

அப்படி மாற்றியமைத்துக் கொள்ள பெரும்பாலும் முன் வராத பட்சத்தில் தான் தனி மனித வெளிப்பாடாக தோன்றிய ஒரு குறிப்பிட்ட "தூசியேற்றப்படுத்தல்" ஒரு முழு சமூதாயத்திற்குமே அமையப் போய், அது இரு வேறுபட்ட சமூகங்களுக்கிடையே வன்முறையில் கொண்டு போய் விட்டு விடுகிறது. உதாரணத்திற்கு மதம், ஜாதி சார்ந்த வன்முறைகள் இதில் அடக்கம்.

எனவே, குழந்தை வளர்ப்பில் பெற்றொர்கள் வன்முறையை கையாளாமல், குழந்தைகளின் இயல்பிற்கு விட்டு, அதற்கென உள்ள தனித் திறமையையும், ஆர்வத்தையும் கண்டறிந்து அதனை ஊக்கப் படுத்தினால், என்றைக்கும் அவர்கள் உங்களின் நினைவுகளினூடேயே (நன்றியுணர்வுடன்) வாழ்வார்கள்.

இளம் வயதிலேயே சுயமாக வாழ்வதின் அத்தியாவசியமென்ன, கூட்டுக் குடும்பம் என்ற முறையில் மொக்கையாக ஒட்டுண்ணி வாழ்வு வாழ்ந்து சமூதாயத்தை சவக் குழியில் தள்ளாமல் இருப்பதற்கு எப்படி வழிகோணுதல் வேண்டும் என்ற அடிப்படை அறிவை முதலில் தான் பெற்றுக் கொள்வது குழந்தை வளர்ப்பில் மிக்க நலம் பயக்கலாம். இல்லையெனில் "உதவாக்கரை பட்டாதாரிகள்...! போன்ற ஒரு இளைஞனை நம்மிடையே நாம் உருவாக்க நேரிடலாம். அப்படி எண்ணற்ற மக்களை உருவாக்கிய பட்சத்தில் ஒரு சமூதாயமும் அசனைச் சார்ந்த கூட்டமைப்பான நாடும் எந்த நிலையில் இருக்கும் என்பதனை இங்கும் அதனைப் பற்றிய பேச்சு இருக்கிறது.

மற்றும் இங்கே தருமி அவர்கள் "ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை" என்ற தலைப்பில் எழுதியிருக்கும் மதமும் மற்ற விசயங்களும் எப்படி மெது மெதுவாக மூளை சலவை செய்யப் பெற்று சிறுவர்களின் மனத்தில் ஏற்றமுறச் செய்யப்படுகிறது என்பதனை, தனது சொந்த அனுபவத்தின் மூலமாக சில சிந்தனைகளை அங்கு வைத்திருக்கிறார். முடிந்தால் அங்கும் சென்று வாருங்கள்.

Sunday, November 05, 2006

அந்திம காலம் by ரெ.கார்த்திகேசு...

ஒரு ஏழு நாட்களுக்கு இன்று இரவிலிருந்து என் தொந்திரவு ஆரம்பிக்கிறது. பொறுமை காத்து, ஏழு நாட்களையும் ஏழு நிமிடங்களாக உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

இது எனக்கு ஒரு சிறப்பு வாரம் என்பதால் இதற்காக ஒரு சிறப்பு நன்றியினை தமிழ்மண அன்பர்களுக்கு தெரிவித்துக் கொண்டு எனது பதிவினை தொடர்கிறேன். நன்றி!


நேற்றும் இன்றும் சுமார் ஒரு ஆறு மணி நேர இடைவெளியில் இரண்டு அமர்வுகளில் இந்த *அந்திம காலம்* என்ற புதினத்தை அவ்வப்பொழுது பொங்கி எழும் உணர்வுத் துளிகளுக்கிடையில் உணர்ந்துண்டேன்.

அதனை இங்கு வந்து போகும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமென்று தான் இந்த அறிமுக கட்டுரை. எனக்கு முன்னாலே அந்த நாவலை வேறு யாரேனும் வாசிக்க நேர்ந்திருந்தால் அக் கதையின் ஆழத்தை நீங்களும் உணர்ந்திருக்கக் கூடும்.

இந்த புதினம் முழுதுமே சுந்தரம் எனும் பணி ஒய்வுற்ற ஆசிரியர் தனக்கு விதிக்கப் பட்டிருக்கும் கடைசி நாட்களை எப்படி மாறி மாறி மரணத்துடன் தர்க்கித்து வாழ்வின் பொருளையும், பொருளற்ற தன்மையினையும் தன்னை சுற்றியுள்ள உறவுகளின் மூலமாகவும் ஆராய்கிறார் என்பதனை கதையாசிரியர் ரெ. கார்த்திகேசு வழி நடத்தி சென்றிருக்கிறார். இக் கதையை வாசிக்கும் பொழுது வாழ்வை பற்றிய தெளிவு நமக்கு பிறக்கும் படியாக உணர்த்தி இருக்கிறார் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.

எப்படி வாழ்வு இன்பமும், துன்பமும் கலந்த கலைவயே என்ற போதிலும், எந்த சுழ்நிலையில் அதனை நாம் ஆராதிக்கிறோம் எந்த சுழலில் அதனை நாம் சற்றும் உணராமல் ஒரு தாவர நிலையிலேயே பின் தங்கி முழுதுமாக ஆராதிக்க மறந்து வாழ்கிறோம் என்பதனை பல பக்கங்களில் மிக ஆழமாக மனதை நெருடி உணர்த்தியிக்கிறார்.

ஒரு நல்ல நண்பனுக்குரிய தன்மைகளாக ராமாவின் மூலமாகவும், ஜானகியின் மூலமாக நல்ல துணையாளுக்குரிய குண நலன்களைக் கொண்டும், தண்ணியின் மீது வெறுப்பைக் காட்டும் தனது அத்தையின் மூலமாக மெளனத்தின் சிறப்பையும், தனது அக்கா-அன்னாவின் மூலமாக அவள் தாயா அல்லது தனது சகோதரியா என்று கேள்விகள் எழுப்பும் அளவிற்கு, தனது அப்பாவின் மரணத்திற்கு பிறகு அவள் தனக்கென்று ஒரு துணையே தேடிக்கொள்ளாமல், தனக்கே துணையாக கடைசிகாலத்தில் இருப்பதைக் கொண்டு கேள்விகள் தொடுப்பதாக இருக்கட்டும் - பக்கத்திற்கு பக்கம் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது.

அது மட்டுமில்லாமல், தனக்கு கடவுள் என்ற ஒரு தனிப்பட்ட உருவத்தின் மீது நம்பிக்கை மனத்தளவில் பிறக்க வில்லையெனினும், தனது வியாதி முற்றிய நிலையில் மனப் பிறழ்சி தொடுக்கும் கேள்விகள் - மரணத்தையொட்டிய பயத்தால்.

பிறகு இன்று பொதுநலம் குன்றிய நிலையில் சுயநலம் மிஞ்சிய நிலையில் எப்படி திருமணங்கள் விவாக ரத்துகளில் முடிகிறது என்பதனை, இரு வேறு வழிகளில் ஒப்புமை படுத்துவெதற்கென தனது மகளைக் கொண்டு இந்த நவீன மனித வாழ்வைப் பற்றிய அணுகுமுறையும் தொட்டுச் செல்ல தவறவில்லை.

ஆக மொத்தத்தில் ஒவ்வொருவரும் படித்துணர வேண்டிய அருமையான நாவல்.

மதுரை திட்டத்தின் கீழ் யுனிகோடு முறையில் PDF formatல் கீழிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்த பக்கங்கள் 174. கீழ் காணும் சுட்டியில் பயணித்து, அந்த பக்கத்தில் ஏழாவது வரியில் இப்படியாக காணும் *அந்திம காலம் (நாவல்) கார்த்திகேசு 0172* சுட்டியை சுட்டி பயனடையுங்கள்.

மேலும் ஒரு தகவல், இங்கு நிறைய பேருக்கு மதுரை திட்டம் பற்றி தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். கேள்விப்படாதவர்கள், அந்த பக்கத்தில் இன்னும் பல அறிய தமிழ் இலக்கிய பொக்கிஷங்கள் பொதிக்கப் பட்டிருக்கிறது என்பதனை அறிய. நன்றி.

Tuesday, October 31, 2006

அமெரிக்காவில் இந்தியர்கள் : தருமியின் கவனத்திற்கு...!

எனக்கு எத பகிர்ந்துக்கிறது எதனை பகிர்ந்துக்ககூடாதுன்னு இன்னும் ஒரு தெளிவு பிறக்காத இந்த காலக் கட்டத்தில், தருமி இங்கே அமெரிக்கத் துளிகள் அப்படின்னு ஒரு பதிவு போட்டதினாலே இதனை பகிர்ந்து கொண்டேயாக வேண்டும் என்று தோன்றியதால் இந்த பதிவு. உங்களின் பார்வைக்கு.

எனக்கும் அமெரிக்கா வந்த புதிதில் தருமி கவனித்த விசயங்கள் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டு கேள்விகணைகளாக துளைத்தெடுத்தது உண்டு, மறுப்பதற்கில்லை. ஏன், சக இந்தியர்களை பொது இடங்களில் பார்த்தால் ஒரு நட்புணர்வுடன் கூடிய புன்முறுவல் பெறுவது ஒரு பெரிய விசயமாக இருக்கிறது? ஆரம்ப காலங்களில், அப்படி எதிர்பார்த்து மூக்குடை பட்டதுமுண்டு, மறுப்பதற்கில்லை.

இது ஒரு நல்ல மனோ தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த விசயமாக படவில்லையா? எனக்கு அப்படித்தான் தெரிகிறது. இருந்தாலும் எனக்கு கிடைத்த சில சொந்த அனுபவங்களை கொண்டு, இது போல் மற்றவர்களுக்கும் அப்படி நடந்திருந்தோ அல்லது காது வழி செய்தியாக கேட்டிருந்தோ சற்று முன்னெச்சரிகையாக அப்படி இருகிய முகம் கொண்டவர்களாக மாறிப் போய் நடந்து திரிகிறோமோ என்ற எண்ணத்தின் தாக்கம் இந்த பதிவுனை பதிவிட தூண்டியது.

கீழே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு பின்னூட்டம் 1997ல் நடந்தது. அதிலிருந்து எனக்கு கிடைத்த செய்தி, ஒரு மனிதருடைய அணுகு முறை அவரின் பிறப்பும், வளர்ப்பும், கல்வியும் மற்ற புற சூழ்நிலைகளை பொருத்தே அமைகிறது. இந்தியர்கள் பார்பதற்கு ஒரே மாதிரியான உருவமைப்பு வெளி நாட்டவர்களுக்கு காணக் கிடைத்தாலும், தனிப்பட்ட மனிதருக்கு அவரின் சொந்த மொழி, ஜாதி, படிப்பு, அந்தஸ்து மற்றும் இத்தியாதிகள் அவருடனேயே நாடுகள் தாண்டியும் ஒட்டிக் கொண்டு வருவது தவிர்க்க முடியாத ஒரு விசயமாக, அது ஒரு firmly embedded behaviorஆக பரிணமித்துக் கொண்டேதான் உள்ளது.

இப்பொழுது அந்த பழைய பின்னூட்டத்தைப் படியுங்கள்:

Thekkikattan said... Deiva,

ஓ, அந்த அனுபவம்பத்தி இங்கே கொஞ்சம் பகிர்ந்துக்க சொல்லிறீங்களா... செய்றேனே,

நான் அமெரிக்கா வந்த புதிதில் நான் இருந்த இடம் கொஞ்சம் அதீதமா வெள்ளைக்காரங்க வசிக்கும் பகுதி (long island, New York) , அதனால இந்தியர்களெ பார்க்கிறதே கொஞ்சம் கஷ்டமின்னு வச்சுக்கங்ளேன். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையிலெ ஒரு நாள் மிதிவண்டி போட்டு ஊர்வலம் வந்துகிட்டு இருக்கிறப்ப திடீர்னு ஒரு இந்தியா ஆள் ஒருத்தர் நம்ம சாயல்லே வீட்டுக்கு வெளியில ச்சேர் ஒண்ணு போட்டு உட்கார்ந்திருந்தார்.

எனக்கு அவரை பார்த்தவுடன் ரொம்ப உற்சாகமாகி மிதிவண்டிய அப்படியே சாச்சி போட்டுட்டு ஓடிப் போயி அய்யா, நீங்க இந்தியாவன்னு மூச்சிறைக்க கேட்டேன். அவரும் நிதானம மேலே கீழே பார்த்துப்புட்டு ஊருக்குப் புச்சா அப்படின்னு ஆங்கிலத்தில கேட்டுப்புட்டு நான் ஒரு மலையாளி, நீங்க தமிழா, அப்படின்னா, தமிழ் பேசுற மக்கள் இருக்கிற பக்கம போயி ஆத்மாவை கண்டுப் பிடிச்சுங்கன்னு சொல்லிட்டு பேச்ச முடிச்சுக்கிட்டாரு.

எனக்கு என்னட இதுன்னு ஆகிப்போச்சு, எவ்ளோ பேசவேண்டியிருக்கிற இடத்தில ஒரு மொழி வந்து புகுந்து காலிபண்ணிப் புடிச்சே அப்படின்னு ஒரே ஏமாத்தமா போயிருச்சு, இவ்வளவுக்கும் அவரு வீட்டுக்கும் நான் இருக்கிற வீட்டுக்கும் நடந்து போற தொலைவுதான்னு வச்சுக்கங்க.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு உலக அறிவு கிட்ட ஆரம்பிச்சு எப்படி நாம் மனிதர்கள் நமக்குள்ளேயே நிறைய பிளவுகளை வச்சுக்கிட்டு வெளியில வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். வெளுத்தது எல்லாம் பால் இல்லை என்கிற குழந்தை தனமான எண்ணத்திலிருந்து அடெல்ட் உலகத்துக்கு வந்துட்டேன் (அதிக மனிதனாக இராதே... உன் ஃபீலிங்க்ஸ் எல்லாம் கடலுக்கு அப்பாலே வச்சுக்கோ).

அதற்கு பிறகும் சில டெஸ்ட்களும் செஞ்சுட்டுத்தான், குஜாராத்தி மக்களோட இன்னபிற குரூப் இப்பிடி...

இப்ப எனக்கு நானே ஒரு நாடு, அதிலெ நானே எவெரித்திங்...

பி.கு: இதில் மாணவ உலகத்திற்கும், சாப்ட் வேர் மக்களுக்கும் பொருந்தாது.

இது அடெல்ஸ் ஒன்லி. ;-))

Monday, May 22, 2006


மேலே பேசப் பட்ட மனிதர் முதல் தலைமுறை, தனது உறவுமுறை அடிப்படையில் அமெரிக்கா குடிபெயர்ந்தவராக இருக்கலாம். அதனால் அவருக்கு ஏற்கெனவே இந்தியாவில் நல்ல உலக நடப்புகள் தெரிந்த நட்பு வட்டங்கள், கல்வி சார்ந்த உலகம் சுற்றும் நண்பர்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். அச் சூழலில் அவருடன் நான் கூறிய அத்துனை firmly embedded behaviorகளும் பயணித்து, காது வழி செய்திகளை கொண்டு, பிற இந்தியர்களை சந்தித்தால் keep it short என்ற அறிவுரையின் படி நடந்து கொண்டிருக்கலாம்.

புதிதாக வந்தவர்களுக்கு கொஞ்சம் மன ஆருதலும், சில நேரங்களில் சொந்த வீட்டு நிர்வாகத்திற்குகென (பலசரக்கு சாமான்கள் வாங்கும் கடை, அல்லது அங்கு சென்று வருவதற்கென வாகன வசதி இப்படி) பல ரூபங்களில் இன்னல்கள் இருக்கலாம். அப்படி அவர்கள் நெருங்கி வரும் பட்சத்தில் எப்படி பதிலுரைப்பது என்ற எண்ணமே கூட இருக்கலாம்.

இதிலும் இங்கு நீண்ட காலங்கள் வசிப்பவருக்கு, அது போன்ற சில சூழ் நிலைகள் அமையப் பெற்று அதற்கென இறங்கி வேலையும் பார்த்த பட்சத்தில் என்ன இருதியில் கிடைக்கிறது. கசப்பான அனுபவங்களாக கூட இருந்திருக்கலாம்.

எனக்கு சில அப்படியும் இப்படியும் கிட்டியது. அவைகளிலிருந்து சில. எனக்கு Long Islandல் இருந்த காலத்தில் ஒரு குஜாரத்தி குடும்பம் அறிமுகமானது, அதுவும் பேருந்து பிரயாணத்தின் போதுதான். அந்த மனிதர் தனது 50களின் தொடக்கத்தில் தனது பொறியாளர் வேலையையும், தனது துணைவியாரின் மேல் நிலை ஆசிரியப் பணியையும் இந்தியாவில் துறந்து விட்டு, தனது ஒரே மகனுக்கென அமெரிக்கா குடிபெயர்ந்தவர்கள். மிக்க கஷ்டம் இங்கே.

ஆரம்பத்தில் தனது சகோதரியின் வீட்டில்தான் இருந்தார்கள், ஆனால் எவ்வளவு நாட்களுக்கு ஒரு குடும்பத்திற்கே கார் ஓட்டி, தட்டு முட்டு சாமான்கள் வாங்குவதற்கு எடுத்துக் கொண்டு திரிய முடியும் இன்னொரு host குடும்பத்திற்கு. வந்த மூன்று மாதங்களிலேயே வெளியே வரும் சூழ்நிலை.

அந்த நேரத்தில்தான் என்னுடைய அறிமுகம் கிடைத்தது. பிறகு கிட்டத்தட்ட அந்த அறிமுகம் இரண்டு வருடம் தொடர்ந்தது. அவருக்கு வேலை முடிந்து வரும் பொழுது காரில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் இறக்கி விடுவது, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்குச் செல்லவும், பலசரக்கு சாமான்கள் வாங்கவும் என்று லிஸ்ட் கொஞ்சம் நீண்டுதான் இருந்தது.

இருப்பினும் நான் அங்கு இருந்த வரையிலும் பார்த்துக் கொண்டேன். பிறகு அங்கிருந்து இன்னொரு மாநிலத்திற்கு நாங்கள் வந்து விட்டதால், என்ன அவர்களுக்கு ஆனது என்று தெரியவில்லை. எனக்கு நடந்ததை மற்றவர்கள் அறிந்து கொள்ளும் பொழுது - இப்படியாக நடக்கலாம் என்ற அனுமானம் மற்றவர்களுக்கு.

பிறகு இப்பொழுது மிக அண்மையில் நடந்தது. இங்கு ஜியார்ஜியாவில், ஒரு நாள் என்றுமில்லாமல் பெட்ரோல் பங் ஒன்றில் ஒரு கோப்பை தேநீர் வாங்காலமென்று சென்ற பொழுது இந்திய இளைஞர் ஒருவர் காரில் அமர்ந்த படி செல் பேசியில் இருந்தார், அவரும் என்னை பார்த்திருந்ததால் கையசைத்துவிட்டு கடையினுள்ளே சென்று கொண்டிருந்தேன். ஆனால் அவர் பின்னால் வந்து தமிழிலேயே, நீங்கள் தமிழா என்று வினாவினார். நானும் ஆமாம் என்று ஆரம்பித்து அடுத்த பத்து நிமிடங்கள் தொலை பேசி எண்கள் பரிமாறிக்கொண்டு அன்று மாலை சந்திப்பதாக பிரிந்தோம்.

அவர் நான் இருக்கும் டவுனில் வேலை பார்பதற்காக வந்திருப்பதாகவும், தங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். நானும் எனது வீட்டில் தற்சமயத்திற்கு எனது தம்பியுடன் மட்டுமே இருப்பதால், வெளியில் தங்குவதற்கு பதிலாக எனது வீட்டிலேயே கொடுக்கும் வாடகையை கொடுத்துவிட்டு தங்கலாமே என்று கூறினேன். ஆனால், பார்ட்டி உஷார் பார்ட்டி போல (என்ன உஷாரோ, நானும் திருந்தாத ஜன்மம் :-)

பின்னால், அவர் வேலையில் ஏற்பட்ட பெரும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டு வேலையை வேண்டாமென்று எழுதி கொடுத்துவிட்டு (வேண்டாமய்யா என்று நாங்கள் சொல்லியும்), இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே அலுவலத்திற்கு செல்லும் பொழுது, போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். அங்கிருந்து எனக்கு தொலைபேசி வருகிறது. என்னை விட்டால் அவருக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை என்றும், எப்படியாவது தன்னை பெயிலில் வெளியே எடுக்குமாறும் கலக்கமுற்ற நிலையில் தொலை பேசினார்.

எனக்கு ஒரே படபடப்பு என்னாடா இது இப்படி ஆகிப் போகிவிட்டதே என்று. பிறகு இங்கிருக்கும் மக்களிடம் பேசி சிறிது அறிவு அது சார்ந்து பெற்றுக் கொண்டு பெயிலில் எடுத்தும் ஆகிவிட்டது. அவருக்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் பட்சத்திலும் தனது ஜாதி பொருட்டு ரொம்பவே பெரிமிதம் உண்டு, ஒரு முறை என்னை அவரின் பெயருடன் ராஜாவை இணைத்து அழைக்கச் சொன்னதிற்கு நான் அழித்த மறுமொழியை 'காட்டான்' பாணியில், அவரின் வாழ்வில் மறக்க வாய்ப்பில்லை.

வீட்டிருக்கு சாப்பிட அழைத்தாலும் என்ன நினைப்பாரோ தெரியாது, ஏதோ நாம் அவரிடமிருந்து எதிர்பார்த்துதான் அழைக்கிறோமென்று ஒரு தடுமாறல் இருக்கும். பிறகு அந்த அரெஸ்ட்டுக்கு பிறகு அவரது பேச்சில் ஒரு மாற்றம் தெரிந்தது. எங்கள் வீட்டிலும் வந்து தங்கித்தான் இருக்க வேண்டுமென்ற சூழ்நிலை.

எனக்கு ஏதோச்சையாக சந்தித்த சந்திப்பில் கிடைத்த சில நல்ல நண்பர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் மதுரைக்காரர்கள் ரொம்ப பாசக் காரங்கப்பா. எல்லாத்தையும் அப்படியே, சிதம்பர ரகசியமாகவே இருந்தாலும் பகிர்ந்துப்பாங்க. வெள்ளாந்தியான மனசு.

சரி, எப்படியோ நான் கூறிய விசயங்களிலிருந்து சில உண்மைகள் கிடைத்திருக்கக் கூடுமென்று நினைக்கிறேன். அப்படி கிடைத்திருந்தால் கூட்டிக் கழிச்சு அவங்க அவங்களும் அவுக அவுகளுக்கு எது சரின்னு படுதோ அது படி வாழ்கையில சோதனைகள் மேற்கொண்டு அனுபவிச்சு பார்த்திட வேண்டியதுதான்.

கடன் அன்பை முறிக்கும் :-)

Monday, October 23, 2006

காகிதப் புலிகளும் *வச்சிபார்க்கத் தெரியாத* கமலும்!!

இது போன்ற ஒரு பதிவ போடணுமின்னு எனக்கு எப்ப "விருமாண்டி" கேசட் வெளியீட்டு விழாவும் அதனைத் தொடர்ந்த அரசல் புரசலான குரு (கே. பாலசந்தர்) - சிஷ்ய (கமல் ஹாசன்) பந்தம் கொஞ்சம் விரிசலாகி அனல் கணந்ததைக் காண முடிந்தலிருந்து கமலின் உள்ளத்தில் உள்ள சில சிந்தனைகளை உணர முடிந்தது.

இந்த பதிவை இப்பொழுது கொணர்ந்தற்கு காரணம், அவரது குருவான இயக்குனர் பாலசந்தர் பல புரட்சிகரமான கருத்துள்ள படங்களை கமலைக் கொண்டும், ஏனைய கதாபாத்திரங்களை கொண்டும் தமிழ் கூறு சமூதாயத்திற்கு சொல்லியிருக்கிறார் என்பதனை கேள்விப் பட்டிருக்கின்றேன். இருந்தாலும், அப்படிபட்ட படங்களை இந் நாள் வரையிலும் காண கொடுத்து வைக்கவில்லை.

இருப்பினும் நமது தமிழ் மணத்தில் அண்மையில் சத்தியப் ப்ரியன் எழுதிய கமல் - ஒரு சகாப்தம் என்ற பதிவின் மூலம் பல திரைப்படங்களின் சிறப்பு தொகுப்பு ஒரே இடத்தில் கிடைத்தது. அதுவும் ஒரு காரணம் இந்த பதிவை துரிதப் படுத்தி எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்வதற்கு.
விதவை மறுகல்யாணம், விபச்சாரியை(?!) பட நாயகன் காதலித்து மணப்பது இப்படி பலப்பல என திரைப்படங்களின் மூலம்(மட்டுமே) பல புரட்சிகள் முன் வைக்கப்பட்டதாக கேள்விபட்டதுண்டு.

ஆனால், இன்று கமலுக்கு நல்ல நண்பர்கள் அருகமையில் இல்லாமல் இருப்பதால்தான், யாரும் இடித்துக் கூறுவதற்கு இல்லையெனவும், அதனால்தான் அவரும் தனக்கு அமைந்த மனைவிமார்களில் ஒருவரையேனும் தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கருத்துச் சொல்லி மேடையில் சொல்லாமல் சொல்லி தனது குரு, விருமாண்டி பட கேசட் விழாவில் பொறுப்பாக இடித்துக் கூறிவிட்டார்.

அன்றுதான் கமலின் மறு முகத்தை காண முடிந்தது. பொதுவாகவே, கமல் தனது சொந்த குடும்ப விசயம் குறித்து பொதுவில் பேசுவதை விரும்பவது கிடையாது (அடுத்தவர்களும்). அப்பச்சத்தில் அப்படி ஒரு வசனத்தை, மேடையேறி போட்டுடடைத்ததால், அவரும் சற்றே சினம் சீண்டப் பட்டவராக அதற்கு பதிலிருக்கும் தொனியில் கூறியது.

சமூகத்தில் நல்ல (புரட்சி) கருத்துக்களை கூறுபவர்கள் யாரும் தனது சொந்த வாழ்வில் முயன்று சோடை போவது கிடையாது. அவர்கள் பாதுகாப்பான வலையின் மேல் இருந்துதான் தனது புரட்சிக் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

விதவை திருமணத்தை ஆதரித்து கருத்தும் கூறும் ஒருவர் தனது சொந்த வாழ்க்கையில் அப்படி ஒரு வாழ்வை அமைத்துக் கொள்வது கிடையாது. இது போன்றே ஏனைய கருத்துக்களும் (ஏன் அப்படி? உடனே அதற்கு நாம் கூறும் மறுமொழி, அது அது அவரவர்களின் சொந்த விருப்பத்தை பொறுத்தது, அதில் நாம் யார் நம் மூக்கை நுழைக்க என்று... நான் முயன்று தோற்றவன் என்ற முறையில் கேக்கிறேன் இங்கு). இப்படியாக தனது சொந்த வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கக் கூடும் என்பதனை அந்த "காகிதப் புலிகளுக்கு" சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார் கமல் அன்று. எவ்வளவு புரிதலுக்கென உள்ள இடைவெளி என்று பாருங்கள்.

இதிலிருந்து சில விசயங்கள் எனக்குப் புரிய வந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அது போன்ற புரட்சிகரமான கருத்துக்களை சொல்லி பேரும், பணமும், புகழும் வேண்டுமானால் அள்ளி குவித்திருக்கலாம் வெள்ளித் திரைகளின் மூலமாகவும் அல்லது புதினங்களின் மூலமாகவும், தனது சொந்த வாழ்வில் யாரேனும் தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்களா இந்த காகிதப் புரட்சியாளார்கள் என்பது எனக்குத் தெரிந்து தெரியவில்லை (இருக்கலாம் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக). உதாரணத்திற்கு, குழந்தைகளின் தத்தெடுப்பை பற்றிய கருத்தைச் சொல்லி படம் எடுக்கும் ஒருவர், தனக்கென்று ஒரு குழந்தையேனும் தத்தெடுத்து தனது வீட்டிலேயே வைத்து வளர்க்கிறாரா? அதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்ள?

சரி, கமல் என்ன செய்திட்டார் தனக்கு அப்படி "வைத்துப் பார்த்துக் கொள்ள தெரியாதவர்" என்ற பெயரை ஈட்டிக் கொள்ள. புரிகிறது, அவரது சொந்த வாழ்வை பற்றி நாம் தர்க்கவிப்பது நாகரீகமற்ற செயல் என்பது. இப் பொழுது கமலும் ஒரு நடிகர் இல்லாத பட்சத்தில் ஒரு சராசரி நபராக இருந்திருந்தால் இப்பொழுது அவரது வாழ்வு விமரிசனத்திற்கு ஆளாகி இருப்பதைப் போல ஆகியிருக்குமா?

அவர் பொது வாழ்வில் இருப்பதால் மட்டும் தனக்கென்று சொந்த விருப்பு, வெறுப்புகள் தன் வாழ்வில் இருக்காதா? அல்லது அப்படியே இருந்தாலும் தான் ஒரு "ரோல் மாடலாக" மற்றவர்களுக்கு இருக்க வேண்டுமென்ற சமூதாய கட்டாயத்தின் பேரில் தனது சொந்த சந்தோஷத்தை தொலைத்து தியாகியாகி விட வேண்டுமென்ற கட்டாயாமா, என்ன? இதில் எது?

அவரை ஒரு தனிப்பட்ட மனிதராக அணுகும் பட்சத்தில் நம்மிடையே இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் மறையும் பொழுது, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சுய பரிசோதனை தன் வாழ்வை பொருட்டும் நிகழ்த்திப் பார்க்க முடியும் அது எதுவெனினும்.

சமூகம் ஒரு கட்டமைப்பை வைத்து திணித்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அளவுகோலினை நிர்யிணத்திருந்தால் தனிமனித தேடல்களுக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறது அல்லவா? அதுவும் கமல் போன்றவர்கள் "லைம் லைட்"க்கு கீழ் இருந்து போவதால், அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் போன்றவர்கள்தான். ஒரு சதாரண மனிதனுக்கு கிடைக்கக் கூடிய சுதந்திரம் கூட அவர்களுக்கு கிடைப்பதில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Monday, October 09, 2006

***வன்முறை வாழ்கைக்கு யார் பொறுப்பு...?***

*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாக படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு படிக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...


செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை இங்கு வைத்திருக்கிறார்... அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.

நாயகி,

...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடதியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சாமாய் இருக்கிறது.

எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருனங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருனங்கள் அல்லாவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜன்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்கையை ஒரு பொருளாற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அழைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.

அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறாதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரட்சினைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!


பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

Tuesday, October 03, 2006

*பரிணாமப் போர்* எழில், அபூ முஹை இவர்களுடன் தெகா...

நண்பர்கள் எழிலும், அபூ முஹையும் கடந்த சில தினங்களாக பரிணாமம் பொருட்டு ஒரு போர் நடத்திக் கொண்டுள்ளார்கள். நான் பாட்டுக்கு செவனேன்னு இருந்தாலும் என்னையும் பிடிச்சு சில ஆட்கள் உள்ளே தூக்கிப் போட்டுடுறாங்க :-)).

அவங்க நிமித்தமா நான் கடல் மாட்டம் இருக்கிற விசயத்திலிருந்து ஒரு துளி எடுத்துச் சிந்தப் போக விளைவு நீங்களும் இந்த ஜோதியில நனையணுமின்னு ஆகிப் போகுது.

சரி, எழில் இங்கேயும், அபூ முஹை இங்கேயும் ஆளுக்கொரு பதிவா போட்டு இருக்காங்க, அத முதல்ல படிச்சிக்கங்க. தவறாம பின்னூட்டங்கள படிங்க அங்கதான் நிறைய விசயங்கள் இருக்கு ;-).

அபூ முஹை அவர்களொடத படிச்சிட்டு என்னோட முதல் பின்னூட்டம் ஒண்ணு போட்டேன். தெரியும். திரும்பவும் எழுதுற மாதிரி இருக்குமின்னு. அதே மாதிரி திரும்பவும் அவர் பதில் அடிச்சி இன்னும் நிறைய கேள்விகள் கேட்டிருந்தார். அதுக்கு பதில் சொல்லப் போகி நீண்ண்ண்டுப் போச்சு.

சரி, இங்கயும் இருக்கட்டும் பிறகு உதவுமின்னு பதிந்து வைச்சிருக்கேன்.

சில மாதங்களுக்கு முன்பு சுவனப்ரியனுக்கும் எனக்கும் இந்த தலைப்பில *பரிணாமம்,* சுவனப்ரியன், மற்றும் தெகா... கருத்துப் பரிமாற்றம் பண்ணிக்கொண்டோம், அதுவும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் அதனையும் படிச்சிப் பாருங்க.

இப்ப என்னோட அன்மைய பதிவுகளுக்கான பின்னூட்டத் தொகுப்புகள்... முதல் பின்னூட்டம்...

I feel, placing some facts over here is useless and baseless.

//'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்ற அடிப்படை உயிரியல் கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறது. பரிணாம கோட்பாடு சொல்வது உண்மை என்று ஒப்புக்கொண்டால், இன்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உயிரியல் கொள்கை பொய்யாகி விடும். இதற்கு பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?//

ஏனுங்க, ஒரு சினை முட்டையும், ஒரு விந்தணுவும் இணைந்து இம்புட்டு பெரிய ஜடங்களான நம்மை, இரண்டு, நான்கு, எட்டுன்னு பல்கிப் பெருகிதானேங்க எங்கன மூஞ்சி இருக்கிறது, எங்கன கையிருக்கிறது, இப்படி எல்லா செய்திகளையும் மரபணு மூலம செய்தி கோர்வைகள் எடுத்திட்டு போறது எல்லாம், இது யாரு சொல்லிங்க நடக்குது?

அதே மாதிரி தானப்ப இந்த Primordial Source or Juiceன்னு சொல்ற உயிர் கனிமங்களை கொண்ட காமெட் (comet) ஒன்று பூமியின் மீது மோதி போது இங்கு உயிர் தோன்றுவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம். அல்லது இங்கு இருக்கும் வேதிய பொருட்களை கொண்டே முதல் செல் ஒன்று தோன்றி இருக்க அனேக வாய்ப்புகள் அதிகமே, என்று சிந்திச்சு அது தொடர்ப நிறைய காலங்களையும் ஆராய்ச்சில் செலவு செஞ்சு சிந்திக்கும் யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய கூற்றுக்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

என்கிட்ட காட்டு இது எல்லாத்துக்கும் ப்ரூப்பேன்னு அடம் பிடிச்ச எப்படிப்பா. சின்னப் பிள்ளைங்க விளையாட்டு மாதிரி இருக்குது. மில்லியன் வருஷமுன்ன என்னமோ ஒரு நூற்றாண்டு மாதிரி நினைச்சுக்கிட்டும், பேசிகிட்டும் இருக்கிறோம்.

சரி 68 மில்லியன் வருஷங்களுக்கு முன்னால் இந்த சூப்பர், டூப்பர் மூளையைக் கொண்ட கடவுளின் புதல்வன் எங்கே இருந்தான்? உடனே நீங்கள் அப்ப மனுஷன் இருந்தானா இல்லையான்னு எப்படி உங்களுக்கு தெரியும், பக்கத்தில இருந்து நோட் எடுத்தியான்னு கேட்கப் புடாது... யோசிக்கணும், அந்த புத்தகத்தை கொஞ்சம் தள்ளி வைச்சுப்புட்டு மத்த புத்தகங்களையும் படிக்கணும்...

இப் பூமியில் நம்மின் தற்காலிக இருப்பும் ஒரு சான்ஸ் மட்டுமே... இதில் இன்னும் கொஞ்ச காலங்களுக்கு இருந்து போயிச் சேருவதா, இல்லை அடித்துகொண்டு சீக்கிரமா போயிச் சேருவதா என்பது நமது கையிலும் இருக்கிறது.

டைனோசார்களுக்கு அதி பயங்கர பசின்னா, நமக்கு அதி பயங்கர "மதம்"பிடிச்ச மதம் பிடிச்சிருக்கு இது இரண்டுமே எடுத்திட்டு போய்ச் சே(ரப்)ர்ந்த இடம் ஒண்ணாத்தான் இருக்கப் போகுதோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு...

Posted by *இயற்கை நேசி* Mon Oct 02, 07:27:21 AM

அதற்கு அவர் இப்படியாக தனது ஐயப்பாடுகளை தெரிவித்திருந்தார்...

//அதே மாதிரி தானப்ப இந்த Primordial Source or Juiceன்னு சொல்ற உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் ஒன்று பூமியின் மீது மோதி போது இங்கு உயிர் தோன்றுவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம். அல்லது இங்கு இருக்கும் வேதிய பொருட்களை கொண்டே முதல் செல் ஒன்று தோன்றி இருக்க அனேக வாய்ப்புகள் அதிகமே//

எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பும் இன்னும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்றுதான் பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர ஆதாரபூர்வமாக எதுவும் இன்னும் நிரூபிக்கப் படவில்லை.

ஆனால் பதிலளிக்கப்படாத கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

1) உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் பூமியின் மீது மோதிய போது இங்கு ஒரே ஒரு உயிர்தான் தோன்றியதா? அல்லது பல உயிர்கள் தோன்றினவா?

2) உயிரினங்கள் தாம் வாழும் காலச்சூழலுக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெற்றன என்றால், உலகெங்கிலும் வசிக்கும் மனிதர்கள் ஒரே உடலமைப்பை கொண்டிருப்பது எப்படி? பனிப்பிரதேசங்களில் வாழும் மனிதர்களுக்கு கரடிகளைப்போல உடலெங்கும் முடியும், பாலைவனப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு ஒட்டகத்தைப் போன்ற திமிலும், கடற்புறங்களில் வசிப்பவர்களுக்கு மீனைபோல செதிளும் இல்லாமற் போனதேன்?

3) குரங்கிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்கிறது பரிணாம கோட்பாடு. இன்று குரங்கு, மனிதன் என இரு உயிரினங்களும் இருப்பதை பார்க்கிறோம். இவற்றிற்கு இடைப்பட்ட semi-finished உயிரினங்கள் எங்கே? கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், ஏன்? பரிணாம factory-ஐ மூடி விட்டார்களா என்ன? அல்லது, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இரவு குரங்காக தூங்கியவர்கள் மறுநாள் காலை மனிதனாக விழித்தெழுந்தார்களா?

Posted by இப்னு பஷீர் Mon Oct 02, 08:45:35 PM

மீண்டும் என்னுடையது...

அதில் பல கேள்விகள் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த புத்துணர்வை ஊட்டியதால், எங்கே தொடங்குவது என்று தெரியாமல் தொடங்கினேன், தொடங்கி எங்கே முடிப்பது என்றும் தெரியாமல் முடித்தேன். ஏனெனில் இதில் நிறைய விசயங்கள் சொல்லப் பட வேண்டி உள்ளதால், எப்படி விளக்க முற்படினும் நிறைவு பெறாமலேயே போனதைப் போன்ற உணர்வைத் தருகிறது.

இதோ அ. முஹையின் பின்னூட்ட பதிலுக்கு எனது பின்னூட்டம்...

இந்த "இருக்கலாம்" என்ற அனுமான வார்த்தையை அறிவியல் கோப்புகளிலும், கட்டுரைகளிலும் பயன்படுத்துவதற்குக் காரணமய்யா, அந்தத் துறை இன்னும் வளர்வதற்கு ஏதுவாக இருக்க அனேக வாய்ப்புகள் இருப்பதனை கருத்தில் கொண்டே (to be plausible for new things, since our mind is dynamic so it tends to expand as we grow and know more new things... it is not so rigid like our Religious conceptual theories). இப்பொழுது கூட லூசியும், கயல் விழியும் நம்முடைய அண்மைய கால மூதாதையர்கள், 3 மில்லியன் வருடங்கள் முன்பு வரையிலும் என்று கண்டுபிடித்தார்களே. அது போல இன்னும் நிறைய தடயங்கள் வர வர சேர்த்துக் கொள்ளத்தான் இந்த "இருக்கலாம்."

இல்லையெனில் கடவுள் போன்ற "சர் ஐசக் நீயுடன்" சொல்லிவிட்டார் அதனால் அவர் கூறிய கோட்பாட்டில் எந்த புது மாற்றங்களையும் செய்ய முடியாது என, எப்படி நாமே எழுதி வைத்துக் கொண்ட இந்த மதக் கோட்பாடுகளை கட்டிக் கொண்டு மாரடிக்கின்றொமோ அது போல நிலமை ஆகி, அடித்துக் கொண்டு சாக வேண்டி வரும். அதனால் தான் அந்த அனுமான "இருக்கலாம்" என்ற வார்த்தை.

இரண்டாவது, நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு இயற்கையின் சூட்சுமங்களை அறிந்து கொள்ள முயற்சிக்க வில்லையெனில், உங்களுக்கு அடிப்படை விசயங்களை இது போன்ற பின்னூட்டங்களை கொண்டு விளக்குவது நலம் பயக்கா.

//இங்கு ஒரே ஒரு உயிர்தான் தோன்றியதா?//

மீண்டும், நான் கூறிய ஒரு சினை முட்டையும், விந்தணுவும் நடத்தும் விந்தையைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சித்தீர்களா? அமீபா, பாரமீசியம் போன்ற தன் இனப் பெருக்க உயிரினங்கள் எவ்வாறு பல்கிப் பெருகுகிறது என்பதனைப் பற்றிய பிரஞை தாங்களிடம் உள்ளதா?

சரி, எப்படி இயற்கையில் புது உயிரின உருவாக்கம் (Speciation) நடைபெறுகிறது என்ற அடிப்படை புரிவு தாங்களுக்கு உண்டா? அதற்கென உதாரணமாக நிறைய தென் அமெரிக்கா காடுகளில் உள்ள குரங்கினங்களில் நடைபெற்றிருக்கிறது, தேடி (தேடினால்தான் கிடைக்கும்) அறிந்து கொள்ள முயற்சித்துப் பாருங்கள்.

நான் எனது இளநிலை பட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தான் படித்தேன். அங்கு டாக்டர் முகமது இஸ்மெய்ல் பரிணாமம் சார்ந்த கோட்பாடுகளைப் பற்றிய வகுப்புகள் எடுத்தார். அப்படி அவர் எடுக்கும் பொழுது எனக்கு இந்த மதங்களுக்கும், இந்த பாடத்திற்கும் சிறிதளவேனும் தொடர்பு இருப்பதாக எண்ணவே தோன்றவில்லை. ஏன் என்பது இப்பொழுது கொஞ்சம் விளங்குகிறது. அந்த பேராசிரியருக்கு இது தொடர்பான பிரஞ்கை இருந்திருக்குமா அன்று, என்று இன்று யோசிக்கிறேன்.

முடிந்தால் அடுத்த முறை அங்கு சென்று பேசலாம் இது நிமித்தமென எண்ணியுள்ளேன்.

//இன்று குரங்கு, மனிதன் என இரு உயிரினங்களும் இருப்பதை பார்க்கிறோம். இவற்றிற்கு இடைப்பட்ட semi-finished உயிரினங்கள் எங்கே? கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? //

இது போன்ற கேள்விகளையெல்லாம் படிக்கும் பொழுது நீங்கள் இது தொடர்பாக போக வேண்டிய தொலைவு வெகு தூரம் என்று தெரிகிறது. ஏன், அவ்வளவு தூரம் செல்ல வேண்டும், நமது தாத்தாவிற்கு தாத்தாவிலிருந்து 200வது தாத்தாவுக்கு எந்த ஊர், அவர் எப்படி இருந்தார், அவரின் குணாதியசம்மென்ன, என்ற குறிப்பேடு தாங்கள் கையில் நமது தகப்பனார்கள் ஏதாவது நோட்டுப் புத்தகம் போட்டு எழுதி ஒப்படைத்துவிட்டா செல்கிறார்கள். நாமும் நாளை அதனை நமது சந்ததிகளிடத்தே ஒப்படைத்து விட்டு செல்ல.

எப்படி அந்த உணர்வு நம்முள் வருகிறது, அந்த பண்புகளும், குண நலன்களும்... அப்படியே அவர்கள் இன்று நம்மோட வாழ நேர்ந்து போனால் நமது நிலைதான் என்ன? அப்படி அவர்கள் நம்மோட இன்று வாழவில்லை என்பதால் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்க சாத்தியமில்லை என்று பொருளா?

இங்குதான் தகுதி உள்ளது தப்பிப் பிழைக்குமென உள்ள கோட்பாடு அமுலுக்கு வருகிறது. அந்த ஹோமோ எரக்டஸூம் நம்முடன் சம காலத்தில் வாழ நேர்ந்திருந்தால், யாரிடம் அதிக தகுதி உணவை பறிக்க, சேமிக்க, குடும்பத்தை கட்டிக் காப்பாத்த, வளைந்து கொடுத்துப் போக இருக்கிறதோ அதுகள் தப்பிப் பிழைக்கும். போராட்டத்தில்.

நாம் நம் தாத்தாவிற்கு அந்த நிலையை உருவாக்கி கொடுப்போம் அப்படி வாழ்வா, சாவா நிலை வந்தால் என்பதே உண்மை.

எனவே, அந்தப் பண்புகள் ("அடப்போங்கப்ப எத்தனை முறை சொல்றதுன்னு வருது எனக்கு") ஒரு தலைமுறையில இருந்து இன்னொரு தலைமுறைக்கு மரபணு சமிக்கைகள் மூலமா கடத்தப் படுது. உதாரணதுக்கு, நான் வெள்ளைக் காரிய திருமணம் பண்ணிக் கொண்டால், எனக்குப் பிறக்கும் குழந்தையும் அதனை தொடர்ந்து வரும் சந்ததிகளும் என்னுடைய மரபணுவையும் (கொஞ்சமாவது - காலம் கடக்கக் கடக்க) தூக்கி கொண்டு திரியும் என்பதில் ஏதாவது மறுப்பு இருக்கிறதா?

இங்கே இரு வேறு பட்ட மனித இன கலவை நடந்ததாக கொள்ளுங்கள், பின்னாளில் தேவையில்லாத குணங்களை கொண்ட மரபணுக்கள் கொஞ்ச கொஞ்சமாக தவிர்க்கப் பட்டு கிடைக்கும் சீதோஷ்ண நிலைக்கும், உணவு வகைகளுக்கும் தேவையான பண்புகளை இரண்டு பக்கமும் எடுத்துக் கொண்டு பல்கிப் பெருகி ஒரு சூழலில் புதிவிதமான இனமாகவே நடந்து வந்து இன்னமும் நடையை கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். அதனால் எங்கடா அந்த முதல் ஆள் என்று கேக்கக் கூடாது... அப்படியும் தொல் பொருள் ஆராய்சிகளின் போது இடைப்பட்ட இனங்களின் எலும்பு மிச்சங்கள் கிடைக்காமலில்லை, இல்லையா? நம்மிலிருந்து மிகுந்த வேறுபாடுகளுடன்...

அதனால் அன்று, நான் அந்த படத்தில் இல்லையென்பதால் என்னுடைய பங்களிப்பு அங்கு இல்லை என்று பொருளா?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கைவலிக்கிறது. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இல்லையென்றால் தனிப்பதிவு போட வேண்டி வரும் :-)

Related Posts with Thumbnails