Showing posts with label மக்களாட்சி. Show all posts
Showing posts with label மக்களாட்சி. Show all posts

Sunday, February 05, 2023

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல்!

 = கற்காலமாக்குதலியம்!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக்   கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு    கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு  கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.


அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது. 

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!


#மீள்

#AdmkFails _2018

Friday, April 09, 2021

தம்பீகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!


ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

Wednesday, February 24, 2021

சமூக ஊழலைப் பேசாத சகாயம்!

தமிழ்நாட்டிற்கான அடுத்த அன்னா ஹசாரேவை அனுப்பி இருக்கானுங்க. குழம்பிய குட்டையில் மீன் பிடிச்ச வரைக்கும் லாபம் என்பதே கணக்கு. இந்த மண்டகாசயம் அவ்வளவு நாணயஸ்தராக இருந்திருந்தால், தன் கண்ணுக்கு முன்னால் நடந்த ஒரு ஊழல் திட்டத்தை வைத்தே, பதவி விலகி அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பேன் என்றல்லவா செய்திருக்க வேண்டும்?

அவ்வாறு இல்லாமல் அந்த அரசாங்கத்திடமிருந்தே இத்தனை ஆண்டுகள் சம்பளம் பெற்றுக் கொண்டு, தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பாக பதவி விலகி இப்படி "#பண_ஊழலே" இந்த #சமூகத்தின் ஏனைய பிரச்சினைகளுக்குமான #பிணி என்று வெற்று கோசம், கமலைப் போல செய்யப் போவது ஏன்?
👉🏿மதத்தை அரசியலோடு கலக்கிறார்களே அது ஊழல் கணக்கில் வராதா?
👉🏿கல்விக்கு செல்லக் கூடிய நிதியை, அனைவரும் கல்வி கற்கும் சூழலை கண்ணிற்கு புலப்படாத இடங்களிலெல்லாம் வைத்து கதவை அடைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
👉🏿தன் மாநிலத்திற்குள் இயங்கும் மக்கள் சேவை நிறுவனங்களிலெல்லாம் மொழி தெரியாத வெளி மாநிலத்தவர்களை வைத்து நிரைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
👉🏿மாநில மொழியை தவிர்த்து ஹிந்தி மொழியை உங்க துறைக்குள்ளாகவே திணிக்கிறார்களே அது ஊழலில் வராதா...
👉🏿மக்களாட்சியின் மாண்பையே குலைக்கும் விதமாக வெற்றிப்பெற்ற பிற கட்சி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்களே அது ஊழலில் வராதா?

இவற்றையெல்லாம் யார் பேசுவது. இதெல்லாம் யாருடைய பிரச்சினைகள்?
சகயம், இதெல்லாம் எங்க பேசி ஆரம்பிங்க பார்ப்போம். நீங்க அரசியல் கட்சி தொடங்கிறீங்களா இல்லை டிட்டேரியல் கல்லூரி தொடங்கிறீங்களான்னு தெரிஞ்சிடும்.
ஏன்யா! கொடுத்த உத்தியோகத்தில நேர்மையா இருக்கிறது ஒரு தகுதியாய்யா இப்படி ஊரை ஏமாத்த? மனசாட்சின்னு ஒரு விசயம் இருந்தா இந்த நேரத்தில நீங்க இதை செய்ய மாட்டீர்?







Saturday, January 09, 2021

கதம்ப நிகழ்வுகளும் என் எண்ணங்களும் - 1

மக்களாட்சி மீதான வன்முறையும் ட்ரம்பும்: A Failed Coup

இவிங்க எல்லாம் 1650களில் பல்லு விளக்காம கரையேறின பற்களோட, குளிக்காம அழுக்கா, கண்கள் எல்லாம் பஞ்சடைத்துப் போயி, குதிரை மேல ஏறி வழிப்பறி பண்ணிக்கிட்டு திரிவானுங்களே அந்த மாதிரி தங்களை கற்பனை செய்து கொண்ட கற்காலத்து எண்ண மனிதர்கள். வெளியுலகத்தோட தொடர்பே இல்லாம திடீர்னு ஜுமான்சி படத்தில சம்பந்தமே இல்லாத காலத்திய மனிதர்கள் நகரத்திற்குள் புகுந்து ஓடித் திரிவது போன்று ஒரு காட்சி வருமே, அது போல இருந்தது நேற்று பார்த்த காட்சிகள்.

நிறைய பிள்ளைகள் அதிர்ச்சியில் அழுததாகவும் செய்தி வந்தது. கூட்டத்தில்
இருந்தவர்கள் ஏதோ அவுட் ஆஃப் டைமிலிருந்து வந்தவர்களாக புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும், ஆனா, போலிஸ் பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டது என்றும் கேவிக் கேவி அழுது கொண்டே நடைய கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் இருந்த எண்ணப்பாடுகளை ஒத்த மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். இந்தச் சிறிய கூட்டத்தின் உலகமே வேறையப்பா! 12 பேக் பியரும், ஒரு ஷாட் துப்பாக்கியும், கராஜ்க்குள் அமர்ந்து கவ்பாய் வாழ்க்கையை கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையற்ற ஒரு கூட்டமது. நல்ல புத்தியில் உள்ளவனுக்கு அங்கே வேலையில்லை. இது நவீன அமெரிக்க வானில் படர்ந்து மறைந்த ஓரங்க கோமாளி நாடகம்!
                                                            @@@@@@@@@@@
                                                                @@@@@@
மழைக்காடுகள் அழிப்பும் Xவைரஸ்களும்

மழைக்காடுகள் அழிக்கப் படுவதாலே, ஈபோலா போன்ற உயிர்கொல்லி வைரசுகள் விலங்குகளிலிருந்து மனிதனுக்கு தாவும் புதிய திரிபு வைரசுகளாகி தொற்றுகிறது என்கிறது புதிய வகை ஆராய்ச்சிகள்.
எப்படி?
காடுகள் அழிந்து அங்கு வாழும் விலங்குகள் அழியும் பொழுது நம் கூடவும் வாழப் பழகிய எலி, பூச்சி, கொசு போன்றவைகள் அந்த இடத்தை நிரப்பி வைரஸ்களை அங்கிருந்து நம்முடைய இடத்திற்கு நகர்த்துகிறது. இப்பொழுது ஈபோலா போல புது விதமான வைரஸ் ஒன்று மனிதக் கரை ஏறி இருப்பதாக செய்தி கசிந்திருக்கிறது. அதுவும் ஈபோலா வைரஸை கண்டறிந்து அறிவித்த அதே ஆராய்ச்சியாளர் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
எனக்கு இந்தத் தொடர்பு படுத்தல் மிக்க பொருள் உள்ளதாகப் படுகிறது. நம்முடைய செயல்பாடுகளில் சுற்றுச் சூழலைப் பேணும் வாழ்க்கை முறையோடு மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இந்த நுண் கிருமிகளே மனித குலத்தை அச்சுருத்தும் பெரும் சவலாக அமையும்.
                                                        @@@@@@@@@@
                                                                @@@@@@

100% திரையரங்க நிரப்பல் கொரோனாவிற்கான சிவப்பு கம்பள விரிப்பு! உருமாறிய நுண்மின்னு அலறி தீர்த்தது ஊடகங்கள். இன்று திரையரங்களில் 100% நிரப்பலோட படம் பார்க்கலாங்கிறதிற்கு விளம்பரம்.

இப்படி அரசிற்கும் பொறுப்பில்ல, ஊடகங்களுக்கும் பொறுப்பில்லன்னா, மக்களா பார்த்து தங்களது உசிரையும், குடும்பத்தின் உசிரையும் காப்பாத்திக்கிட்டாத்தான் உண்டு. ஜஸ்ட் பூனை கண்ணை மூடிக்கிட்டதாலே உலகம் இருண்டுவிடுவதில்லை, என்பதற்கிணங்க பணப் பைத்தியங்கள் தங்களது சுயநலத்திற்காக எடுக்கும் முடிவுகளால் தொற்று ஒழிந்து விட்டது என்று முடிவிற்கு போகாதீர்கள் மக்களே!
இன்னும் கொரோனா என்கிற கத்தி நம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டுதான் உள்ளது. ஞாபகத்தில் நிறுத்தி ஒதுங்கியே இருங்க!

Related Posts with Thumbnails