Showing posts with label பரிணாமம். Show all posts
Showing posts with label பரிணாமம். Show all posts

Thursday, December 31, 2020

செக்கு மாட்டுத் தனம் யாதெனில்? Sapiens

 ஒரு காலத்தில் நாடோடியாக சற்றே முன்னேறி வால் இல்லாத குரங்காக திரிந்த நாம், நம்முடைய சுயநலத்திற்கென பிற விலங்குகளை நம்முடைய தேவைக்கென பழக்கப்படுத்தி நம் வேலைப் பளுவை அதன் மீதி ஏற்றி இளைப்பாறிக் கொண்டோம்.

அதற்கென அவைகளின் வாழும் மொத்த ஆண்டுகளின் எண்ணிக்கையை முழுமையாக வாழ விட்டும், வாழ விடாமலும் நம்முடைய கைகளில் அதன் விதியைக் கொண்டு வந்தோம்.
நாள் முழுவதும் ஒரு வயலில் உழுது விட்டு ஒரு கொட்டகையில் தான் காயடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிரும்கிறோம் என்று உணராத மாட்டிற்கும், மூன்று வயதிலிருந்து படிப்பு, குழந்தமை வீணடிப்பு, வேலை, திருமணம், பிள்ளை பேறு, வீடு, கார், கடன்... மீண்டும் பிள்ளைகளின் படிப்பு என்று ஒரு சுழற்சியில்... இன்னுமொரு மாட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்துக் கொள்ளும் நவீன ஏப்களுமான நமக்கும், அந்த பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?
அவைகளை அன்று அந்த கட்டுப்பாட்டிற்குள் ஒரு மொத்த சமூகமாக நாம் கொண்டு வந்தோம். ஆனால் அதே யுக்தியை பயன்படுத்தி இன்று அரசுகள் நம்மை வேறு மாதிரியான கெடையில் சாத்தி விட்டதோ!
கூட்டம் அதிகரிக்க முறைபடுத்தப்பட்ட சமுக கட்டமைப்பு வேண்டும். அதற்கென அமையப்பெற்ற அந்த மக்களதிகார அமைப்பு, நவீன காலத்தில் சிதைவுற்று மக்களாட்சி நீர்த்துப் போகும் அளவிற்கு அப்யூஸ் செய்யப்பட்டு வருகிறது...
I think its too big to handle with such a vast differences.
டார்வினியக் கோட்பாடு சன்னமாக உயிரின இருத்தலின் பொருட்டு எல்லா காலத்திலும் நடந்தேறும் தொடர் நிகழ்வு தானே. அதில் மனிதன் மட்டும் விதி விலக்கா என்ன? இந்தியாவில் இருக்கும் கட்டற்ற மக்கட்தொகையின் பொருட்டு ஏற்கெனவே அந்த கோட்பாடு இயக்கத்தில் தீவிரத் தன்மையுடன் இருக்கிறது என்பதை நான் பல இடங்களில் சுட்டிக் காட்டி எழுதி வருகிறேன். பிராமினியத்தின் அடிப்படை சித்தாந்தமே அந்த அச்சை சுற்றியே கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது எனலாம்.



Wednesday, September 09, 2020

மனிதனின் நாளைய பரிணாமம்: Future of Sapiens

கேள்வி: குரங்குகளின் பரிணாமம் தான் மனிதன் என்றால் இப்பவும் குரங்குகளின் பரிணாமம் தொடர்ந்திருக்க வேண்டும் அதான் அறிவியல் கோட்பாடு. அப்படி இருக்க ஏன் இப்பொழுது குரங்கிலிருந்து மனிதன் இன்னும் பரிணாமம் ஆகாமல் இருக்கிறான்? இதற்கு தயவுசெய்து அறிவியல் evidence மூலம் பதில் அளிக்க வேண்டும் சும்மா அது இது னு சமாளிக்க கூடாது. 

இப்பவும் நாம் படிமலர்ச்சி பாதையில் தான் பயணிக்கிறோங்கிறதிற்கு ஒரு சிறு உதாரணம். இதைப் படிக்கிறவங்க கோவிச்சிக்கப்பிடாது.

பதில்: நாம இன்றைய வாலில்லா குரங்கினங்களிலிருந்து பிரிந்து படிமலர்ச்சியடைய ஆரம்பித்து பல மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த பரிணாமக் கிளையிலிருந்து பிரிந்து நமக்கு இணையான நமது மூதாதையர்கள் வழிப் பாதையில் பெற்றும், இழந்து மென நடந்த மென் நடையில் இன்று சற்றேறக் குறைய ஒன்னரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நவீன வடிவை எட்டி, ஜஸ்ட் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் குறைவான ஆண்டுகளாகவே நாகரீகமடைந்த கூட்டமாக வாழ்ந்து வருகிறோம்.
Image may contain: one or more peopleஇப்போ நீங்க பரிணாமத்தை நம்பல. நான் அறிவியல் பின்னணியில், கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறவன்னு வைச்சிப்போம். இங்கே இரண்டு விதமான மனித குழுக்கள் பிளவுற்ற நிலையில், ஆனால், சைட் பை சைடாக வாழ்கிறது.
காலப் போக்கில் என்னாகும் இதில் யார் அறிவியலை உள்வாங்கி அடுத்தக் கட்டத் தகவமைவிற்கு தயார் ஆகிறோமோ (உதாரணமாக, ⚠️கோவிட்-19, பொய் - உண்மை, ⚠️தடுப்பூசி, தேவை - தேவையற்றது, ⚠️பூமிச் சூடேட்றம், பொய் - உண்மை, ⚠️ஜாதி, தேவை - தேவையற்றது, ⚠️மதம், தேவை - தேவையற்றது), அவர்கள் முன்னேறுவார்கள். பிறர் மரபணு ரீதியில் கொஞ்சம் கொஞ்சமாக கழிக்கப்பட்டு அழிந்து பட்டு போவர்கள்.
No photo description available.இதுவே எதிர்கால பரிணமிப்பு! அப்போ அந்த அழிந்து போன ஆள் எங்கே காட்டு என்று கேட்க முடியுமா? குரூட் பரிணாமக் கால கட்டத்தில், அலை அலையாக கிளம்பிய போதுதான் அந்த ஹோமினிட்ஸ் இன வகைகள் தேவைப்பட்டது (அவைகளில் சில, ஆஸ்ட்ரோல பித்திகஸ் அ•பரென்சிஸ் ↔️ ஹோமோ எரக்டஸ்↔️ஹோமோ ஹாபிலிஸ்↔️ஹோமோ நாலேடி↔️ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ்,↔️ ஹோமோ சாபியன்ஸ் சாபியன்ஸ்➡️). 

நீங்கள் எதிர்பார்ப்பது இதில 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த நியாண்டர்தால் வெர்சஸ் மாடர்ன் ஹுயுமன் போன்று நேருக்கு நேரான சான்று. நியாண்டர்தால்கள் இன்றைய நவீன சாப்பியன்ஸை, முகம் கொடுத்த போது அவர்களே கூட போட்டியில், மரபணு பின்தங்கிய தகவமைபுக் குறைபாட்டால் மாண்டழிந்தவர்கள் போக, மிஞ்சியவர்கள் இன்றைய வெள்ளையினத்தில் குறிப்பாக ஜெர்மனி பகுதியில் வாழ்பவர்களுடன் இனக் கலப்பு கொண்டு மரபணுக்களாக வாழ்கிறார்கள்.
இன்று அறிவியலை நம்புறவர் வெர்சஸ் நம்பாதவர் என்று மெதுவாக ஊர்ந்து நாளைய மனிதன் படிமலர்ச்சியடைவான். 
ஆர்வம் உள்ளவர்கள் மேலும் வாசிக்க எனது பழைய பதிவுகள்-

Sunday, September 06, 2020

படிமலர்ச்சிக் கூண்டிற்குள் கடவுள்: Why evolution is true? Part 4

படைத்த கடவுளுக்கு தொழில் சுத்தமாக படைக்கத் தெரியாதா? பறக்கத் தெரியாத பறவைக்கு இறக்கைகள் எதற்கு? வாலில்லாம வாழப் போற நமக்கு எதற்கு வால் எலும்பு? புல்லு, பூண்டு, இலை, தழை, கொடி சாப்பிடாம இருக்கப் போற நமக்கு குடல்வால் எதற்கு? வாங்க படைத்தவனை கூண்டுல நிப்பாட்டி கேள்வி கேட்போம்.
படிமலர்ச்சி நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறக்கிறது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
எப்பொழுதாவது எண்ணிப்பார்த்திருக்கீர்களா ஏன் கோழிக்கும், மயிலுக்கும்,
ஆஸ்ட்ரிச்சிற்கும் இறக்கைகள் இருந்தாலும் அவைகள் நீண்ட தூரம் பறக்க உதவுதில்லைன்னு? அதிலும் குறிப்பாக தீவுகளில் வாழும் பல பறவையினங்கள் நில வாழ்வன‌ வகைகளாகத்தான் இருக்கிறது. ஏன் அப்படி? தான் சார்ந்து வாழும் சுற்றுப்புறச் சுழலுக்கு தகுந்த மாதிரிதான் உயிரினங்களின் படிமலர்ச்சி அமைகிறது என்று பார்த்தோம்.
அவ்வாறான தீவுப் பறவை வகைளுக்கு மரங்கள் அதிகமாக இருக்கக் கூடிய வாழ்விடமோ, அங்கு ஆபத்து அதிகமில்லாத பகுதியாகவோ இருந்து போவதால் நாள் போக அவைகளுக்கான பறக்கும் மரபியல் பண்பு தேவையற்றதாகிறது. அந்தப் பின்னணியில் உயிரினங்களின் வாழ்விடத் தேவைகள் பொருட்டே தன்னுடைய இருத்தலை நிலை நிறுத்திக் கொள்ள மரபணுப் பிறழ்ச்சியின் (genetic mutation) ஊடாக சிறப்பியல்புகளை பெற்றும், இழந்தும் அடுத்த நிலைக்கு நகர்கிறது.
நிலத்தில் வாழும் பறவையான‌ ஆஸ்ட்ரிச் ஓடும் பொழுது கவனித்தீர்களேயானால் தன்னை சமநிலைப் படுத்திக் கொள்ள இறக்கைகளை விரித்தவாறே விரைந்து ஓடும். அது போலவே பென்குயின்களுக்கு இறக்கைகள் இருக்கிறது, ஆனால், அதனை தண்ணீருக்குள் அதி விரைவில் நீந்தும் தன்மை கொண்டதாக பயன்படுத்துகிறது. இது ஒரு புறம் என்றால் நமக்கும், திமிங்கிலத்திற்கும் மூதாதைகளால் பயன்பாட்டில் இருந்து வந்த பல (பாக)‌ உறுப்புகள் இப்பொழுது சான்றுறுப்புகளாக (Vegtigial) மட்டுமே இருந்து வருகிறது.
Image may contain: one or more people, text that says 'Lemuy Human an $5 FIGURE 14. Vestigial and atavistic tails. Top left: ruffed lemur (Varecia variegates), the tail (caudal) vertebrae our relatives that have tails, unfused first are labeled But the "tail" coccyx top right the caudal vertebrae fused form vestigial structure. Bottom atavistic tail three month Israeli infant. vertebrae are much larger right)'உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் திமிங்கிலங்கள் நான்கு கால்களை கொண்ட தரைவாழ் விலங்கிலிருந்துதான் படிமலர்ச்சி அடைந்தது என்பதின் எச்சமாக‌ பின்னங்கால்களும், இடுப்பெலும்பும் முற்றிலும் வளர்ச்சியுறா நிலையில் உடலின் உள்ளாகவே ஏதோ நிலையில் இருந்து விடுகிறது. அது போலவே நம்முடைய தூரத்து உறவுகளான குரங்குகளிருந்துதான் நாம் படிமலர்ச்சியடைந்தோம் என்பதனை சான்றளிக்க குடல்வாலும் (appendix), வால் எலும்பும் (tail bone) முழுமையடையா நிலையில் சான்றுறுப்பாக இருக்கிறது. குடல்வால் நம்முடைய தூஊஊரத்து சொந்தக்காரய்ங்களான இலை சாப்பிடும் குரங்களில் செல்லுலோசை செரிப்பதற்கென வாழும் பாக்டீரியாக்களை கொண்ட குடல் பகுதியாக இருந்திருக்கிறது. இப்பொழுது நமக்கு அது தேவையற்ற ஓர் ஆணி.
இன்னும் ஒரு படி மேலே சென்று திடுக்கென அந்த முழு வளர்ச்சியடையா சான்றுறுப்புகள் ஒரு சிலரில் மட்டும், குறிப்பிட்ட‌ மரபணுக்கள் பழைய நினைவிலிருந்து உயிர் பெற்று புற உறுப்புகளாக வளர ஆரம்பித்து விடுவதும் உண்டு. மனித குழந்தைகளில் வாலுடன் பிறப்பது, ஒவ்வொரு 500 திமிங்கிலங்களில் ஒரு திமிங்கிலம் பின்னங்கால்களுடன் வெளிப்புறமாக வளர்ந்த நிலையில் பிறப்பது இவையெல்லாம் அதில் அடங்கும்; இந்த நிலை, மீளுறுப்பு (Atavism) என்றயறிப்படுகிறது.
இவைகளெல்லாம் எதனை நோக்கி நம் கவனத்தைக் கோரி நிற்கிறது? கடவுள்தான் இந்த
உலகத்தை, உயிரினத்தை படைத்தான் என்றால் ஏன் இது போன்று விட்டக் குறை தொட்ட குறை உறுப்புகளை ஒன்றிற்கு மற்றொன்று தொடர்பில்லாத இனங்களிலும் வைத்து படைக்க வேண்டும்? ஏன் படைத்தவனுக்கு சுத்தமாக‌ எந்த கோளாறுகளும் இல்லாமல் படைக்கத் தெரியாதா?
விசயம் அதுவல்ல. படிமலர்ச்சியில் மரபணு பிறழ்வின் போது தேவையானதை அடுத்தக் கட்ட இயற்கை தேர்ந்தெடுப்பின் (Natural Selection) போது ஆதரித்தும், தேவையற்றதை ஊக்கப்படுத்தாமலும் எடுத்துச் செல்கிறது. அவ்வாறு தேவையற்ற மரபணு பண்புகள் முற்றும் முழுதாக நம்முடைய செல்களிலிருந்து துடைத்தழிக்கப்படுவது கிடையாது. செயல்பாட்டில் உள்ளதாகவும், அற்றதாகவும் சில புரதப் பொருட்களால் தூண்டப்படுகிறது. செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் அது போன்ற மரபணுக்களை போலி மரபணு (psuedogene) என்கிறார்கள்.
நவீன மரபணு ஆராய்ச்சி முன்னேற்றத்தில் இன்று நாம் கிட்டத்தட்ட நம்முடைய அனைத்து மரபணுக்களையும் அதன் பண்புகளையும் வரைவாக கண்டறிந்திருக்கிறோம். அதில் கிட்டத்தட்ட 3000ம் வகையான மரபணுக்கள் இறந்த மரபணுக்களாக இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். எலிகளில் இருக்கின்ற நுகர்வாற்றல் (Olfactory receptor) நம்மை விட பலப்பல மடங்கு அதிகம். ஆனால், அந்தப் பண்பு நம்மில் மிகக் குறைவு. ஏன் அப்படி? எலிகளுக்கு இரையை, நெருங்கி வரும் ஆபத்தை, இணையை கண்டறிவதில் மிகை நுகவுணர்வு உதவுகிறது. அதே அளவில் நமக்கு தேவையற்றதாகுகிறது. ஏனெனில் நாம் நம்முடைய பார்வையை அதிகளவில் நம்பி இருப்பதால் அதீத நுகர்ச்சி பண்பு சுமையாக அமைகிறது.
சரி உபரியாக அது போன்ற பண்புகளை வைத்துக் கொண்டால் தான் என்ன? என்று ஒரு கேள்வி வரலாம். உதாரணமாக குகைகளில் உள்ள நீர்நிலைகளில் வாழும் மீன்களுக்கு கண்கள் தேவையற்றது. கண்கள் இருந்தால் அதனை பயன்படுத்தப் போவது இல்லை என்றாலும் பாதுகாக்க வேண்டும். அதனை மேலாண்மை செய்ய சக்தி தேவை. இப்படி பல ஆணிகள். எனவேதான் காலப்போக்கில் அது போன்ற மரபணுக்களை செயலற்றதாகவோ, அல்லது மரணித்த நிலையிலேயோ படி எடுக்கப்படுகிறது. இருப்பினும் நமக்கு விட்டுச் செல்லும் ஒரு மரபணு சார்ந்த படிமலர்ச்சி சுவடுகள் இவை.
இதற்கு மேலும் படிமலர்ச்சிக் கோட்பாடு ஒரு பிதற்றல் எனக் கூற முடியுமா?

Ref: Why Evolution Is True by Jerry A. Coyne
Photo Courtesy: Net

Sunday, August 30, 2020

கரையில் திரிந்த பாலூட்டி திமிங்கலமானது எப்படி? Part 3

தரையில் வாழும் மீன்களைப் பற்றி இரண்டு பதிவிற்கு முன்பு பேசினோம். அவ்வளவு முயற்சி செய்து பல மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கிட்டு தத்தி தவழ்ந்து கரையேறி நீர்நில வாழ்வனவாக படிமலர்ச்சி அடைந்து பிறகு, ஊர்வனவாக ஊர்ந்து டைனோசர்களாகி அதிலிருந்த படியே சிலவை சிறகுகளைப் பெற்று வானத்தில் மிதக்கும் பறவைகளாகின‌ என்றறிந்தோம் (see previous post--> டைனோசர் பறவையான கதை: Part 2).
குளிர் இரத்த உயிரினங்களாகிய ஊர்வனவைகள் பறவைகளாக படிமலர்ச்சி அடைவதற்கான இடைப்பட்ட காலத்தில் பகுதி வெப்ப இரத்தப் (warm blooded) உயிரினங்களாகி, சிறகுகளுக்குத் தேவைப்படும் முடியையும் பெற ஆரம்பித்திருந்தது. சுமாருக்கு 340 மில்லியன் ஆண்டு வாக்கில் ஊர்வன-பறவை இனத்திற்கும் இடைப்பட்ட நிலையிலிருந்த எட்டு அங்குல நீளமுள்ள‌ ஓர் ஊர்வன உயிரினமே முதல் பாலூட்டிக்கான மூதாதை. அது அனேகமாக ஓர் எலியையொத்த பூமிக்கடியில் வாழும் பாலூட்டியாக இருந்திருக்கக் கூடும்.
அதிலிருந்து கிளைத்து பன்முகத்தன்மையோடு பல்கிப் பெருகிய பாலூட்டிகளில் சில
இனங்கள் மீண்டும் தண்ணீருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது ஏன் என்பதே
இன்றையப் பதிவு. தண்ணீருக்குள் வாழும் பாலூட்டிகள் என்றவுடனே நமக்கு நினைவில் வருபவை திமிங்கலங்கள், டால்பின்கள், கடல்சிங்கம், வால்ரஸ் கடல்பசுக்கள். இவைகள் நிலப்பகுதியில் வாழ்ந்தவைதான் என்றாலும் தண்ணீருக்குள் சென்று வாழப்பழகியது என்பதற்கு என்ன சான்று. அதற்கு நாம உதாரணமாக‌ எடுத்துக் கொள்ள வேண்டிய விலங்கு, நமக்கு ரொம்ப‌ அறிமுகமான நீர்யானை (hippopotamus - hippopotamus amphibius).
இவைகள் பெரும்பகுதியான நேரம் தண்ணீருக்குள்தான் வாழ்கிறது. அதாவது மூக்கையும், கண்ககளையும் மட்டும் தண்ணீர் மட்டத்திற்கு மேல் வைத்துக் கொண்டே அப்படியே தண்ணீருக்குள்ளரயே கிடக்கும் (அட நம்ம எருமை மாடே அப்படித்தானே!). அதற்கென அதோட மூக்கையும், கண்களையும் கவனிங்க எவ்வளவு அழக தண்ணீரில் வாழ்வதற்கான தகவமைவை பெற்றிருக்கிறது என்பது விளங்கும். அது மட்டுமல்ல அவைகள் தண்ணீருக்குள்ளாகவே இனப்பெருக்கத்தையும் செய்கிறது. அதற்குத் தேவையான முழுமையான உணவு மட்டும் அங்கேயே கிடைத்திருந்தால் நிலப்பரப்பிற்கு வந்து மேய்ச்சல் செய்யும் தேவையே இல்லாமல் போயிருக்கக் கூடும்.
இந்தப் பின்னணியில் திமிங்கலங்களின் மூதாதைகளை வைத்துப் பார்த்தால், அவைகள் (ஒட்டகத்தையொத்த‌) குளம்பிகளைக் கொண்ட தாவர உண்ணிகளாகத்தான் இருந்திருக்கிறது என்பது புலனாகும். 52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்டுஹையஸ் (Indohyus) என்ற ஒரு தாவர உண்ணி ஓப்பீட்டுளவில் சிறிய மானளவு கொண்ட குளம்பியொன்று தண்ணீரையொட்டியப் பகுதியில் பாதுகாப்பிற்கெனவும், உணவிற்காகவும் திரிந்து கொண்டு, நிலப்பகுதிக்கும் சென்று உண்டு வாழ்ந்திருக்கிறது. அதனுடைய எலும்பு மற்ற பாலூட்டிகளைக் காட்டிலும் அடர்வானதாக இருந்திருக்கிறது. ஏன் அப்படி பருமனுடன் இருந்திருக்க வேண்டும்; நீரில் மூழ்கும் போது மிதந்து விடாமல் இருக்க. பற்களில் ஐசோடோப் சோதனை செய்து பார்க்கும் பொழுது நீரில் உள்ள பிராணவாயுவை உட்கிரகிக்கும் திறனுடனும் இருப்பது தெரியவந்தது.

திமிங்கலமாக அந்த இன்டுஹயஸ் தாண்டியது கால் கிணறு. அதற்கு அடுத்து 50
மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு படிமலர்ச்சியில் வந்த ஆம்புலோசெடஸ் (ambulocetus) என்ற இடைப்பட்ட இனம் கிட்டத்தட்ட முன்னேறி திமிங்கலம் பக்கத்தில் வந்தாலும் இன்னும் நான்கு கால்கள் அதில குளம்புகளோட இருக்கிறது. அதனை வைத்துக் கொண்டு இன்றைய சீல்கள் மாதிரி தரைக்கு வந்து தவழ்ந்து திரிந்து கொண்டிருக்கிறது.
அதிலிருந்து மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னால் வந்த இனமான ரோதோசெடஸ் (rodhocetus) இன்னும் நுட்பமான உறுப்புகளைப் பெறுகிறது; நீண்ட மண்டையோட்டையும், மூக்குத்துளைகள் இன்னும் பின்னாடி நகர்ந்தும் தகவமைவு கொள்கிறது. இருப்பினும் 50 அடி நீளமுடைய ஒரு விலங்கு அத்தனை எடையைத் தூக்கிக் கொண்டு சிறிய இரண்டு முன்னங்கால்களையும், மாற்றமடைந்த இடுப்பு எலும்பையும் கொண்டிருந்ததால் நிலத்தில் நடக்கவே வாய்ப்பற்று முழுதுமாக தண்ணீரில் இருக்கும் நிலைக்கு போனது.
சரி, ஏன் அவைகள் தண்ணீரைத் தேடி சென்றிருக்க வேண்டும்? நிலத்திலும், தண்ணீரிலும் வாழ்ந்த பெரும் பெரும் டைனோசர்கள் மாண்டழிந்த நிலையில் பின்னால் வரும் விலங்குகளுக்கு உணவிற்கோ, தங்களது பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் இல்லை எனும் நிலை வருகிறது. அங்கு புதுவிதமான வாழ்விடம் (ecological niche) அவைகளுக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கிறது. அந்த நிலையில் படிமலர்ச்சியில் சிறு சிறு மரபணு மாற்றங்களின் (mutation) மூலமாக‌ வேகமெடுத்து, புதிய வாழ்விடங்களை நிரப்பிக்குள்ளும் நிலைக்கு விலங்கினங்கள் தள்ளப்படும். அப்படியாகத்தான் தாவர உண்ணியாக கரையோரத்தில் நடந்து திரிந்த ஒரு குளம்பி பிற்காலத்தில் திமிங்கலமாக நமக்கு காணக்கிடைத்தது. ஏன்னா, நவீன திமிங்கலம் ஒரு பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடியே தான் முழுமையடைந்த‌தாம்.


Ref: Why Evolution Is True by Jerry A. Coyne

டைனோசர் பறவையான கதை: Part 2

360 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி டிக்டாலிக் ரோஸியே என்ற மீன், எப்படி நீர் நில வாழ்வனவற்றிற்கு இடைப்பட்ட ஒரு மீனினமாக கரையேறி தத்தக்கபித்தாக்கன்னு நடக்க ஆரம்பித்ததால் நிலத்தில் வாழப்போகும் முதுகெலும்புடைய உயிரினங்களுக்கும் அடிப்படையாய் அமைந்ததுன்னு போன பதிவில் பேசிக்கிட்டோம் (காண்க: மீன்கள் நடந்தனவா ஓர் படிமலர்ச்சிப் பார்வை! :Part 1). 


தண்ணீருக்கும் நிலத்திற்குமாக சென்றுதான் வாழ வேண்டுமென்ற அந்த இரட்டைதன்மை இல்லாது, முழுமையாக நிலத்திலேயே வாழும் ஊர்வனவாக அடுத்து வந்த காலகட்டங்களில் அவைகளில் சில பரபரவென தேவையானவற்றை பெற்றும், இழந்துமென முழுமையான தகவமைவைப் பெறுகிறது. இது வரையிலுமே அவைகள் யாவும் குளிர் இரத்த உயிரினங்களாகவே (cold blooded animal) உள்ளது. அதாவது அவைகளின் உடல் வெப்பம் சுற்றுப்புறச் சூழலுக்குத் தகுந்த மாதிரி மாறாது.
ஆனா, அதை வைத்துக் கொண்டே இந்தப் பேரினம் ஆயிரக்கணக்கான டைனோசார் இனங்களையும் உள்ளடக்கி ஏறத்தாழ 175 மில்லியன் ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டிருக்கிறது. அவைகள் காகத்தின் ஒரு அளவிலிருந்து மூன்று மாடி கட்டட அளவுடைய டைனோசர்களாக வாழ்ந்த போதிலும் ஏதோ போதாமையொன்று தொடர்ந்து கொண்டே வருகிறது.
காகம் அளவே இருந்த ஒரு டைனோசரையொத்த ஓர் உயிரினமே பறவைக்கும் ஊர்வனவற்றிற்குமான இணைப்பு இனமாக ஆர்க்யோப்ரெக்ஸ் (archaeopteryx) இருந்திருக்கிறது. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இது முழுமையான ஒரு பறவையுமல்லாமல் ஊர்வனவுமல்லாமல் இருந்திருக்கிறது; ஆனால் அதனை நோக்கிய நடை. அண்மையில் சீனாவில் மேலும் தெளிவான பறவைகளுக்குறிய குணாதிசியங்களுடான இடைப்பட்ட வேறு சில இனங்களும் படிமங்களாக இப்பொழுது கிடைத்திருக்கிறது.
அவற்றில் சில வேகமாக ஓடி முன்னங்கால்களை படக்கென்று காற்றில் வீசி இரையைப் பற்றி வாயிக்கு எடுத்துச் செல்லும் நுட்பம், பறவைகளுக்கு தேவையான அதே தசை கட்டமைப்பை மெல்ல உள்வைத்து நகர்கிறது படிமலர்ச்சி. இதற்கிடையே பறவைகளின் இறகுகளில் இருக்கும் முடியையொத்த ஒரு தகவமைப்பை பெறுகிறது. இது எதற்காக தோன்றியிருக்கக் கூடும் என்பதில் இரண்டு விதமான கருதுகோள்கள் உண்டு: இணையைக் கவர்வதற்கு அல்லது உடலை வெப்பமேற்றி வைத்துகொள்ள.
அப்படியாக தோன்ற ஆரம்பித்த வகைகளில் ஆண்டுகள் ஓட முன்னங் கால்களில் தேவையான அளவு மாற்றங்கள் பெற்று, மரத்தில் தொற்றி ஏறவும் ஆரம்பிக்கிறது. அந்த தகவமைவு ஓர் உயரமான மரத்திலிருந்து மிதந்து ஊர்ந்து அடுத்த மரத்திற்கு செல்ல உதவியது. இங்கே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமானதொரு கேள்வி- இது போன்ற தகவமைகளைப் பெற எது உந்து சக்தியாக அமைகிறது என்பது. உணவிற்கான போட்டி, பாதுகாப்பிற்கென, தகுதியான உடற்கட்டமைப்பை கொண்டு தப்பிப் பிழைப்பதற்கான தகவமைப்பை எது பெற்றிருக்கிறதோ அதனை இயற்கை இயல்பாகவே தக்கவைத்துக் கொள்கிறது.
ஊர்வனவற்றின் தாடைகளிருந்த பற்களை இழந்து, இடைப்பட்ட இனமான வெப்ப இரத்த (warm blooded) தகவமைவைப் பெற்றும், முதுகுத்தண்டுவடம் நேரடியாக மண்டையோட்டோடு இணைவதை தவிர்த்து, கீழிறிருந்து வந்து இணைவதுபோல் பெற்று, எலும்பின் எடை குறைத்து உள்ளீடற்ற எலும்புகளைப் பெற்று, முன்னங்கால்களை பறப்பதற்கு ஏதுவாக அமைத்துக் கொண்ட நாளில் மிதந்து நகர்வதிலிருந்து, வானத்தில் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது அந்த மாண்டழிந்த டைனோசர்கள்.
பி.கு: சொந்தக் கவனிப்பு - நல்ல உயரமான கோழியை உறிச்சிட்டு கொஞ்சம் கற்பனையை தட்டி விடுங்களேன் நீங்க 🦖 பார்ப்பீங்க.



Read: Why Evolution Is True by Jerry A Coyne.

மீன்கள் நடந்தனவா ஓர் படிமலர்ச்சிப் பார்வை! :Part 1



குரங்கையும் நம்மையும் பக்கம் பக்கமா வைச்சுப் பார்த்திங்கன்னா இரண்டு பேருக்கும் உடல் புற உறுப்புகளின் அமைவு ரீதியாக எந்த விதமான வித்தியாசங்களும் இருக்காது. ஏன் ஆடு மாடுகளுக்கே கூட ஒரே விசயம்தான், இல்லையா? எப்பொழுதாவது எண்ணிப் பார்த்திருக்கீங்களா என்ன பெரிசா நாம மட்டும் பொதக்டீர்னு வானத்திலிருந்து குதித்து வந்து சிறப்பு வாய்ந்த ஒரு பாலூட்டி இனமான மனிதனாகி விட்டோமென்று?
ஒரிரு விசயத்தில நாம அவைகளை காட்டிலும் படிமலர்ச்சியில அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டோம். இரண்டு கால்களில் எழுந்து நின்றது, சிந்திப்பது மற்றும் சிக்கலான சொற்களைக் கொண்டு பேசுவது. ஏனைய விசயங்கள் அனைத்தும் நமக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் ஒன்றுதான்; கைகள், கால்கள், காதுகள், கண்கள், மூக்கு, வாய், ஆசன வாய், இனப்பெருக்க உறுப்புகள் இத்தியாதி இத்தியாதி...
அப்படி என்றால் எப்படி இது போன்றதொரு ஒத்திசைவுன்னு கேட்கத் தோன்றும் இல்லையா. இதில வாலில்லா குரங்கிற்கும் நமக்கும் ரொம்பவே ஒப்புமையில் நெருங்கி வருவோம். இருப்பினும் அவைகள் முழுதாக மனித நிலையை எட்டாமலும் இருக்கிறது.
இங்கேதான் மனிதன் ஆதிக் குரங்கிலிருந்து வந்தான் என்றால் இடைப்பட்ட (transitional) குரங்கு இப்பொழுது எங்கே என்று கேட்பீர்கள். படிமலர்ச்சி அடைவது என்பது இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது, நுண்ணிய (micro) மற்றும் பெரியளவில் (macro).
இப்போ தண்ணீருக்குள் மட்டுமே வாழ்ந்த முதுகெலும்பு உடைய மீன் எப்படி நீர் நில வாழ்வனவாக (amphibian) படிமலர்ச்சி அடைந்த பொழுது, இடைபட்ட இனம் என்னவெல்லாம் மாற்றமடைந்தது என்பதனைக் கொண்டு நாம் எப்படி இந்த நிலைக்கு வந்து சேர்ந்தோம்னு ஒரு சிறு உதாரணத்தோடு பார்ப்போம்.
மீன்களின் மண்டை, கழுத்தே இல்லாமல் நேரடியாக முதுகெலும்போடு இணைக்கப்பட்டிருக்கும். விலா எலும்புகளும் பெரிய அளவில் ஒரு கூட்டையொத்த அமைவில் இல்லாமல் ஓடியிருக்கும். மேலும் தண்ணீரில் சுவாசிப்பெதற்கென செதில்களை கொண்டிருக்கும், இல்லையா? இவை மூன்றிலும் சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த மீன் இனங்களில் சில மாற்றங்கள் உண்டாக ஆரம்பித்தது.
அதாவது நீரில் இருந்து வெளியேறி ஒரு குட்டையை விட்டு இன்னொரு குட்டைக்கு தாவி ஏறி முறையான நான்கு கால்களைப் பெறாமலேயே முன், பின் துடுப்புகளில் இன்றைய நம் கால், கைகளுக்கு பயன்படுத்தப் போகும் அதே எலும்புகளை மெல்ல மெல்ல படிமலர்ச்சியுனூடாகப் பெற்று வெளிக்கிட விடிந்தது, நீர் நில வாழ்வனவற்றின் முன்னோடி.
அந்த டிக்டாலிக் ரோஸியே (Tiktaalik roseae) என்ற இணைப்பு மீன் இனம் (missing link spp) மட்டும் அந்த ஆபத்தான விளையாட்டை மேற்கொள்ளவில்லை என்றால் நமக்கு கிடைத்த கால், கைகள் கிடைத்திருக்காது. ஏன்னா, அந்த மீனின் கால்களையொத்த துடுப்பில் இருந்த அடிப்படை எலும்பமைவே இன்று இன்னும் நுட்பமான முறையில், நீண்டு ஒடுங்கியென நம்முடைய கை, கால்களில் இருக்கும் அதே எண்ணிக்கையிலான எலும்புகளுமாகும். எத்தனை விந்தையான விசயம்?
இப்படித்தான் படிப்படியாக காலங்கள் தோறும் முயற்சியே திருவினையாக்கும் என்றளவில் உயிரினங்கள் யாவும் படிமலர்ச்சியடைந்ததின் உண்மை.
கீழ்கண்ட புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிக்க வாசிக்க ஆர்வமூட்டக் கூடிய பகுதியை கடக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
Ref: Why Evolution Is True by Jerry A Coyne







Friday, April 12, 2019

புத்திசாலி – டைனோசாரா, மனிதனா?: ஒரு படிமலர்ச்சிப் பார்வை

படிமலர்ச்சியில இந்த பூமியோட 4.5 பில்லியன் ஆண்டு கால‌ இருப்பிற்கும்,  நம்மோட ஒன்றரை லட்ச ஆண்டுகளோட இருப்பை ஒப்பிட்டா நம்மோட இருப்பு ஒன்றுமே இல்லை இந்த கால ஓட்டத்தில் என்று புரிந்து கொள்ளலாம்.

இரண்டு பில்லியன் ஆண்டுகள் வரைக்குமே அது வரையிலும் இந்த பூமி வாயுக்களாலும், நெருப்பாலும், பொங்கி வழியும் எரிமலைகளின் தீ குழம்புகளாலும் பக்குவப்படுத்தப்படாமல் இருந்தே வந்துள்ளது. இடையில் முதல் உயிரினமான பாக்டீரியாக்கள் எட்டிப்பார்த்து 1.5 பில்லியன் ஆண்டுகள் வரை அடுத்தக் கட்ட உயிரினங்கள் வர வழி கோணி வாழ்ந்து வந்திருக்கிறது.

இருப்பினும் 540 மில்லியன் ஆண்டு வாக்கில்தான் உயிரின பன்முகத் தன்மை விரிவடைந்து எலும்புகளை கட்டமைப்பாக கொண்ட முதுகெலும்புடைய‌ உயிரினங்களும் கடல் சார்ந்த சுற்றுப்புறச் சூழலில் பல்கிப் பெருகி இருக்கிறது (நம்முடைய மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள பாறைகள் இந்த‌ ப்ரிகாம்ப்ரியன் கால கட்டத்தில் உருவானவைகளே). பிரிதொரு நாள் அந்த உயிரினங்கள் நீரிலிருந்து வெளியேறும் தகவமைகளைப் பெற்று சுமாராக 390 மில்லியன் ஆண்டுவாக்கில் தரை ஏறுகிறது. இவைகளே மனிதனாகிய நாம் தோன்றுவது வரைக்குமான முன்னோடி; அவைகளுக்கு உதாரணமாக தவளைகள், சாலமண்டர்கள், முதலைகள், பாம்புகள் மற்றும் டைனோசார்கள் வந்து வாழ்ந்திருக்கின்றன.

இந்த உயிரினங்கள் தோன்றிய வரைக்குமே பூமி பல மாற்றங்களை மிகவும் கொடூரமான முறைகளில் எதிர் கொண்டே நகர்ந்து வந்திருக்கிறது எனலாம். நாம் நின்று கொண்டிருக்கும் பூமி மேலோட்டிலிருந்து  100 மைல் தொலைவு கீழே சென்றால் மேன்டில் பகுதியை சென்றடையலாம். அந்த மேன்டில் பாறைக் குழம்பாக இருக்கிறது. அது ஓர் ஆற்றின் இயல்புடன் ஓடிக் கொண்டிருப்பதின் விளைவாகவே இங்கு கண்டங்களும் உருவாகி, அதில் மலைகளும், கடலும், நிலப்பரப்பும் கொண்ட ஒரு வனப்பான வாழத் தகுதியான இடமாக இந்த பூமி நமக்கு இடம் கொடுத்து அழகு பார்த்து வருகிறது.

அப்படியான பாறை குழம்பு சுமார் 252 மில்லியன் ஆண்டு வாக்கில் சைபீரியப் பகுதியில் உடைத்துக் கொண்டு மேலே எழும்பி எரிமலைகளின் வழியாக வெடித்து ஆறாக பல நூறு ஆண்டுகள் ஓடி பல கண்டங்களை நிரப்புகிறது. அது போன்றதொரு நிகழ்வுகள் நடை பெறும் கனம் தோறும் சுற்றுப்புறச் சூழலில் பல விதமான மாற்றங்களை உடனடியாகவும், பின் வரும் காலங்களுக்கும் நிரந்தமாக மாற்றி அமைக்கிறது. தவிர்க்க முடியாத பூமிய படிமலர்ச்சியின் இது போன்ற பெரும் நிகழ்வுகள் நடைபெறும் போது 80 சதவிகித உயிரினங்கள் மாண்டழிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறதாம்.

அந்த பேரழிவிற்கு பிறகு மீண்டும் மெதுவாக பூமியில் உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரு சூழல் உருவாகி அது மள மளவென முன்னெப்பொழுதும் இல்லாத வேகத்தில் புது விதமான பல்லுயிர்கள் பெருகக் காரணமாக இருந்தது. சுமாருக்கு 240-230 மில்லியன் ஆண்டுகளின் போது டைனோசார்கள் எட்டிப்பார்க்கிறது. பின்பு அது ஆயிரக்கணக்கான‌ இனங்களாக பல்கிப் பெருகி உலகின் அனைத்து பகுதிகளிலும் அதி சிறந்த தகவமைவுகளுடன் கோலோச்சுகிறது.

மீண்டும் ஒரு பேரழிவு. இந்த முறை அவைகள் சார்ந்து வாழும் சூழல்களான தட்பவெப்பம், உண்ணும் உணவின் போதாமை அல்லது விண்வெளிக் கல் ஒன்று பூமி மீது விழுந்தது என்ற கலவையான காரணிகளால், டைனோசார்களின் இருப்பு ஒரு முடிவிற்கு 65 மில்லியன் ஆண்டுகளின் போது வந்தது.

அந்த முடிவின் ஒரு தொடக்கமாக டைனோசார்கள் விட்டுச் சென்றது படிமலர்ச்சியின் அடுத்த நகர்வான பறவையையொத்த டைனோசார் இனமொன்று. ஆனால், அந்த படிமலர்ச்சியில் பூமி வெகு உக்கிரமாக இடம் கொடுத்து பார்த்தது, மாமிச உண்ணிகளான டி ரெக்ஸ் மற்றும் வெலாசிராப்டர் (ஜீராசிக் பார்க் படங்களில் நாம் அதிகமாக காணும் இனங்கள்). இவைகளே பறவைகளின் முன்னோடியான ஆர்க்யோப்ட்ரெக்ஸின் மூதாதை.

இந்த கால கட்டத்தில நாம எங்கய்யா இருந்தோம்னு கேட்டிங்கன்னா, பூமிக்கடியில குழி பறித்து வாழும் ஒரு சுண்டெலி அளவிற்கே பாலுட்டிகளாக இருந்திக்கக் கூடும். டைனோசார்களின் பேரழிவிற்குப் பிறகான கொழிப்பில் பூமி மீண்டும் தன் இருப்பை சமப்படுத்தி பல்லுயிர் பெருக்கத்தை முடுக்கி விட்டிருக்கிறது.

அந்த தவழ்தலில் இருந்து இப்பொழுது நம்முடைய இருப்பு ஒரு மனித இனமாக வந்தடைய வெறும் ஒரு லட்சம் ஆண்டுகளே! கடந்த 500 மில்லியன் ஆண்டுகளில் இது வரையிலும் ஐந்து பேரழிவு நடந்தேறி இருக்கிறதாம். அதில் ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் 90 சதவீத பேரழிவு ஏற்பட்டே மீண்டும் உயிரினங்கள் தழைத்திருக்கிறது.
இந்த நிலையில் அழிந்து போன டைனோசார்கள் நம்மை விட அதி பலசாலிகளாகவும், உணவு சேகரிக்கும் முறையில் புத்திசாலிகளாகவும் 275 மில்லியன் ஆண்டுகள் இந்த பூமியில நடந்து திரிஞ்சிருக்கு. ஆனா, நாம இந்த அளவுகோள்ல எங்க இருக்கோம்; வெறும் ஒரு லட்சம் ஆண்டுகள் இருப்புதான். ஆனா, அதுக்குள்ளும் எத்தனை பெரிய நாகரீகங்கள் எழுந்து வீழ்ந்திருக்கிறது? உதாரணமாக மத்திய கிழக்காசியாவில் மீசோபொடோமியா, தென்னமெரிக்க மாயன், தெற்காசியாவின் க்மோர், ரோமன் எம்பயர், க்ரீன்லாந்த் வைக்கிங் வாசிகள் போன்ற நாகரீங்கங்களுக்கெல்லாம் என்னாகின?

இவைகள் அனைத்தும் வெறும் 4000ம் ஆண்டுகளுக்குள் தான் நடந்தேறி இருக்கிறது. நன்றாக செழித்து வாழ்ந்து வளர்ந்து பின்பொரு நாள் பூமிய மாற்றங்களால் வியாதியும், இட நெருக்கடியும், நாம் மேற்கொண்ட இயற்கைசார் வளங்களின் மீது அளப்பெரிய அழுத்தமும் ஒன்று கூடி உணவு உற்பத்தி குறைந்து அடித்துக் கொண்டு மாண்டழிந்தது போக ஏனையவர்கள், நல்லதொரு வாழ்விடம் தேடி இடம் பெயர்ந்திருப்பார்கள்.

இப்பொழுது அப்படியே காமெராவை நாம் வாழும் காலக் கட்டத்திற்கு நகர்த்துங்கள். என்ன பார்க்கிறோம். கிட்டத்தட்ட நாம் கடந்த கால வரலாற்றை செயற்கையாக மிக விரைவாக தருவித்துக் கொண்டிருப்பதாகப் படவில்லை. 2030களுக்குள் நமது பூமியின் வெப்ப நிலை ஒரு டிகிரி சென்டிக்ரேட் அதிகரிக்கப் போவதாக தெரிகிறது. அது எது போன்ற விளைவுகளை உயிரினங்களின் மீதும் நம் மீதும் செலுத்தப் போகிறது என்று தெரியாது. அதற்கான தயாரிப்புகளாக மழையளவு குறைந்து வருவது, விரைவு பாலைவனமாகும் நிலை, குடிநீர் பற்றாக் குறை, காற்று மாசு, போதாக் குறைக்கு நாம் எடுக்கும் தவறான அரசியல் முடிவுகள் இந்தக் காரணிகளை ஊக்குவிக்க‌ பெரும் பங்காற்றி வருகிறதுதானே!

எனக்கு எழும்புவது ஒரே ஒரு கேள்விதான் டைனோசார்கள் வாழ்ந்ததின் ஒரு 10 சதவீத இருப்பு ஆண்டுகளாவது நாம் இந்த பூமியில் வாழ்ந்து பார்த்துவிடுவோமா? அப்படி இல்லையெனில் நாம் இந்த பூமியிலேயே தோன்றிய உயிரினங்களில் அதி புத்திசாலியும் அதே நேரத்தில் முட்டாள் உயிரினமும் நாமாகத்தான் இருப்போம்.

P.S: இந்த கட்டுரையை வாசகசாலை இணைய தளத்தில் பிரசுரித்த க. விக்னேஷ்வரன் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.



*படிமலர்ச்சி = பரிணாமம்

Thursday, February 14, 2019

ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens 3

சேப்பியன்ஸ் புத்தகத்தின் முதலாம் பகுதியை முடித்த நிலையில் இதனை பகிர்ந்து கொள்ளாமல் நகர்வதற்கு மனம் ஒப்பவில்லை.
எப்பொழுது சேப்பியன்ஸின் மூளையளவு பெருத்து, நிமிர்ந்த நடை கொண்டு, இரண்டு கைகளை வீசி நடந்து திரியும் நிலைக்கு இந்த பரிணாமம் அவர்களை எடுத்துச் சென்றதோ அன்றே அவர்களின் அறிவுப் பசியும், குடற்பசியும் பல்கிப்பெருகி மிக்க அழிவுகளையும், கட்டுக்கடங்கா வளர்ச்சியையும் விதைத்து அவர்களின் வழித்தடம் தோறும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறது எனலாம்.
ஆஃப்ரிகாவின் கிழக்கு கடற்கரையோரம் மெதுவாக நடந்து ஆசியாவின் மத்தியப் பகுதியை அடைந்தவர்கள் அப்படியே கொஞ்சம் பேர் இந்திய துணைக்கண்டப் பகுதியிலும், மேற்படி நகர்ந்து தெற்காசியப் பகுதிகளிலும் குடியேறினர்.
இடையில் தங்களுடைய உப மனித இனங்களை சந்திக்கும் கணம் தோறும் அறிவின்பால் சார்ந்தவர்களை புணர்ந்து உள்கிரகித்தோ, அல்லது பகையுணர்ச்சியின்பால் போரிட்டு அழித்தோ சேப்பியன்ஸ் இனம் தங்களை அந்த சூழலியலுக்கு தகுந்தாற் போல் தகவமைத்துக் கொண்டு தழைத்து வாழ்கிறார்கள்.
வேட்டையாடிகளாக இருந்த காலத்தில், நம்முடன் புழக்கத்தில் இல்லாத விலங்கினங்களை சந்திக்கும் கணம் தோறும், அதி புத்திசாலித்தனமான மண்டையறிவுடன் உருவாக்கப்பட்ட நாம் பல்வேறு பட்ட வேட்டை உக்திகளைக் கொண்டு ஏனைய விலங்கினங்களை கொன்று குவிக்கும் ஒரு பேரழிவின் கருவியாக்கி இருந்தது நம்மை இந்த இயற்கை என்பதை நாம் இங்கு மறந்து விடக் கூடாது.
பல கோடி ஆண்டுகளாக பல கண்டங்களில் செழித்து வாழ்ந்து வந்த பல பெரும் பாலூட்டிகள் எங்கெல்லாம் இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் காலூன்றினானோ அங்கெல்லாம் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே அழித்தொழிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில் நாம் வேட்டையாடிகளாக இருந்த காலத்தில் இயக்கமே அற்ற நாடோடிகள் என்றளவில் மட்டுமே நம்மை குறுக்கி பார்த்துக் கொள்ள முடியாது. நாம் பேரழிவுகளையும், போராட்டங்களின் ஊடாகவும் இந்த பரந்து விரிந்து கிடந்த கிரகத்தில் நம்முடைய ஆளுமையை மென்மேலும் வளர்தெடுத்துக் கொள்ள இரத்தம் சிந்தி ஆதி சேப்பியன்ஸ் செப்பணிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றளவில் புரிந்து கொள்ள வேண்டும்.
தெற்காசியாவின் தீவுகளிலிருந்து மெல்லப் பரவி என்று அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலண்ட் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கும் பெருமளவிலான விலங்கு உணவுச் சங்கிலிகளையும், அதனைத் தொடர்ந்த சூழலியல் மாற்றங்களையும் உருவாக்கத் தொடங்கினார்களோ அன்றே நமது அடுத்தக்கட்ட நகர்வும் தொடங்கிவிட்டது.
அதற்கு சில பத்தாயிரம் வருடங்களுக்குப் பின்னால் சைபீரியாவின் மேற்கு நிலப்பரப்பில் பனி உறைவினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த இணைப்பு, மேம்பட்ட சூழலியல் தகவமையும், விலங்கு புரதத்தின் பால் ஈர்க்கப்பெற்றிருந்த அந்த பகுதியில் வாழ்ந்த சேப்பியன்ஸ்களை மெல்ல வலசை போகும் பாலூட்டிகளின் பின்னால் நகர வைத்து வட அமெரிக்கா கண்டத்திற்குள் காலூன்ற வைத்தது.
அங்கும் ஒரு மாபெரும் பேரழிவிற்கு இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் வழி கோணி, சுற்றுச் சூழலில் ஒரு பெரும் மாற்றத்தினை உருவாக்குகின்றனர்.
இதிலிருந்து என்ன புரிய வருகிறது என்றால் எங்கெல்லாம் சேப்பியன்ஸ் காலடி பட்டதோ அங்கெல்லாம் அதி பயங்கரமான உருவத்தினை கொண்ட பாலூட்டிகளையும், எடையுடைய பறவைகளையும், பல்லூயிர்களையும் பெருமளவில் கொன்று குவித்திருக்கிறான். தங்களுடைய உடை, உணவு, பாதுகாப்பு என பல காரணங்களுக்காக.
அது மிக இயல்பாகவே நடந்திருக்கிறது. கற்கால கருவிகளை கையாண்ட காலத்திலேயே கிட்டத்தட்ட 50 விழுக்காடு அத்தனை பெரிய பேரழிவுகளையும் நிகழ்த்தியிருக்கிறது இந்த இருகால் கொண்ட அப்பாவிகளைப் போல் உள்ள சேப்பியன்ஸ் இனம்மென்று இந்த புத்தகம் பல சான்றுகளுடன் சுட்டிச் செல்கிறது.
பின் வந்த காலங்களில் அந்த பல்லூயிர்களின் நடமாட்டம் குறைந்த காலத்தில், வேளாண் இனம் அடுத்தக் கட்ட அலையாக இந்த நிலப்பரப்பெங்கும் ஆளுமை கொள்கிறது. முதல் ஆழிப்பேரலையையொத்த வேட்டையாடி சேப்பியன்ஸ் பரவலில் பெரும் விலங்கினங்கள் அழித்தொழிக்கப்பட்டன. இரண்டாவது அலையான வேளாண் குடிகள் நிலத்தினை திருத்தியும், அழித்தும் அடுத்த மாற்றத்தினை நிகழ்த்துகிறார்கள்.
மூன்றாவது அலையாக தொழிற்புரச்சி ஓங்கிய காலத்தில் நாம் இருக்கிறோம்... அவர்கள் அளவிற்கு அழிக்க ஒன்றுமில்லை என்றாலும் மிச்சமிருப்பது நம்முடைய இருப்பிற்கான இந்த பிராணவாயு அதுவும் மிச்சமிருக்கும் இந்த வனங்களில் மட்டுமே. அதனையும் கண் மூடித்தனமாக பழைய நினைப்புதான் பேராண்டி கணக்காக கையாண்டால், நாம் இந்த பூமிப்பந்தின் மேலடுக்கில் முகவரியில்லாமல் துடைத்தெரியப்படுவோம்.

Sunday, January 27, 2019

உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

இதுவே முதல் முறை கட்டாரின் வழியாக இந்திய பயணம் மேற்கொண்டது. ஒன்று எனக்கு வயசாகி இருக்கணும் இல்லன்னா எனக்கு தோன்றுவது போலவே தோகாவிலிருந்து அட்லாண்டாவை அடைவது மிக... நீண்ட அயற்சியைக் கொடுக்கக் கூடியதாக உள்ளதுன்னு மற்றவங்களுக்கும் தோன்றக் கூடியதாக இருக்கணும்.
அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நீண்ட பயணத்தை எப்படி பயனுள்ளதாக ஆக்கிக்க முடியும் என்பதின் பேரில் வாசிப்பிலுள்ள சேப்பியன்ஸ் புத்தகம் துணைக்கு வந்தது. இன்னொரு பத்து பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்த உடனேயே எனக்கான தனிப்பட்ட எண்ண வெடிப்புகள் நிகழத் துவங்கியது.
வாசித்துக் கொண்டிருக்கும் பக்கங்கள் எது சேப்பியன்ஸை ஏனைய மனித இனங்களிலிருந்து பிரித்து உலகம் தழுவிய முறையில் ஒரே அடிப்படை கருத்துருவாக்கத்தின் மீது நம்மை நிற்க வைத்து, பிற ஆதி மனித இனங்களை பின்னுக்குத் தள்ளி நம்மை முன்னேறச் செய்தது என்று பேசுகிறது.
அதற்கு அடிப்படையே மொழி என்கிறது இந்த புத்தகம். அதனை நிரூபிக்கும் வாக்கில் அருமையான உரையாடலோடு முன் நகர்த்துகிறார் புத்தக ஆசிரியர்.
ஏனைய உயிரினங்களும் அவையவைகளுக்கேயான சங்கேத ஒலி குறிப்புகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்து தங்களின் பாதுகாப்பை, உணவு தேடும் யுக்தியை பரிமாற்றம் செய்து தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. இருப்பினும் சேப்பியன்ஸ் அடுத்தக் கட்டத்திற்கு எப்படியாக தங்களை நகர்த்திக் கொண்டது? என்பதே அடிப்படைக் கேள்வி.
நெருப்பின் பயன்பாட்டை தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தது ஒரு வகையில் பெரிய தாண்டல் என்றால், நம்முடைய சிக்கலான மொழியறிவு இரண்டாவதாகும்.
இந்த மொழியறிவே கூட சிக்கலான கட்டமைப்பை பெறக் காரணம் நம்முடைய பொரணி பேசத் தக்க கற்பனா வாதமே முதன்மைக் காரணம் என்பதாக சொல்லி விரிகிறது இந்த புத்தகம்.
உதாரணமாக, நம்மை விட குறைந்த பட்ச உரையாடலைக் கொண்ட குரங்கினங்கள் ஆபத்து/உணவு அங்கே இங்கே என்று சுட்டிக்காட்டுக் கொள்ள ஒரு சில ஒலிக்குறியீடுகளின் வழியாக மட்டுமே தங்களது குழுவினருடன் கடத்திக் கொள்கிறது. ஆனால், சேப்பியன்ஸ் எங்கே உணவு இருக்கிறது, அதனை நெருங்கும் போது உள்ள ஆபத்து, அதன் பரப்பிடம், அருகில் என்ன இருக்கிறது, எப்படியாக சென்றால் அந்த இடத்தை விரைவில் அடையலாம், ஆபத்தை தவிர்த்து மீண்டு வருதல் என்பதாக உரையாடத் தலைப்படும் பொழுது எத்தனை மொழியறிவு தேவைப்படுவதாக உள்ளது.
இங்கிருந்துதான் சேப்பியன்ஸ்க்கு இரண்டாவது பெரிய தாண்டல் கிடைத்தது. இந்த உரையாடல், எதார்த்த, கற்பனை, புனைவு என்று பல நிலைகளில் விரிந்து விரிந்து சிறு குழுக்களை இணைக்கத் தக்க பெரிய பொய்களை உருவாக்கி கற்பனை கடவுளர்களை, நிறுவனங்களை எழும்பச் செய்து பரந்த நிலப்பரப்பில் வாழும் ஏனைய குழுக்களையும் இணைத்து ஒரு ஐடியாவிற்கு கீழ் வாழும் எதிரிகளற்ற வாழ்விடங்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
இதுவே நமக்கு முன்னால் வாழ்ந்த பிற மனித இனங்களுக்கு சாத்தியப்படாமல் போனது அவர்களின் இருப்பை ஆழ நிர்மாணித்துக் கொள்வதிலிருந்து தவறச் செய்தது.
புனைவுக் கதைகளே, உடல் இல்லாத ஒரு நிறுவனத்திற்கோ (நல்ல கதை சொல்லிகளே முதுகெலும்பு), கடவுளுக்கோ (சடங்குகள், சம்பிரதாய கட்டுப்பாட்டு புனைவுகளே முதுகெலும்பு) அல்லது நாட்டிற்கோ எல்லைகளை வகுத்து (வாழ்வு சார்ந்த விழுமியங்களை கடைபிடிப்பதாக சொல்லப்படும் புனைவுகளே முதுகெலும்பு) அதற்கென ஓர் உடலைக் கொடுத்து அது இருக்கிறது என்று நம் அனைவரையும் அதன் பின்னால் நிற்கச் செய்து ஒரு பெரும் இனக்குழுவாக கட்டி வைத்திருக்கிறது.
இந்த புனைவுக் கதைகள் சிக்கலான மொழிகளின் ஊடாக சேப்பியன்ஸ்களின் மனங்களில் விதைக்கப்படுவதின் பொருட்டே நம்முடைய இனம் தனித்துவம் பெற்றதாகிறது.
இப்பொழுது நான் நடு வானில் பறந்து கொண்டே இந்த சிந்தனை சிக்கல்களில் என்னை அமிழ்த்தி மீட்டெடுக்கும் வகையில் பறத்தலின் அபாயக் கவலைகளை மறக்கடித்தது கூட அதே கற்பனைப் புனைவுதான்.
பறத்தல் ஆபத்தற்றது என்ற எதார்த்த கற்பனைக் கதைகள் நன்றாகவே ஆழ விதைக்கப்பட்டதும் அது அனைத்து சேப்பியன்ஸ்களின் நம்பிக்கை பெற்றதுமேயாகும்.
இதன் ஒழுங்கிலேயே சென்று யோசித்தால் திருமணம், விழாக்கள், நல்ல பெயரைக் கொண்ட நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு கம்பெனி அனைத்துமே புனைவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பதாகிறதுதானே?
எனில் எது உண்மை? எல்லைகளற்ற நிலமும், இந்த மரங்களும், ஆறுகளும் மலைகளும்தான். மற்ற அனைத்தும் ஓர் ஐடியாதான். அதுவே நம்முடைய இருப்பை முழுமையாக எத்தினிக் (இனப்) போரில் விழுந்து அழிந்து விடாமல் இருக்க தப்பி பிழைத்துக்கிடக்க வைத்திருக்கிறது.
இந்த கதைகளே பெருமளவில் கேள்விகளற்று விதைக்கப்படும் போது பிற்காலத்தில் நமக்கு ஆப்பு வைக்கக் கூடியதாகவும் அமையக் கூடும். அது எப்படி என்று மேல் வாசிப்பில் பிரிதொரு நாள் என்னுடைய எண்ணங்களையும் இணைத்துத் தருகிறேன்.

Link for Part 3: ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens-3

Saturday, January 26, 2019

மகப்பேறு மரணங்கள் ஒரு பரிணாமப் பார்வை: Sapiens வாசிப்பு - 1

இந்த முறை சென்னை புத்தகத் திருவிழாவில பல முக்கியமான புத்தகங்கள் வாங்கினேன். அதில் யுவால் நோவா ஹராரி எழுதிய "சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு" ம் ஒன்று.

இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் மொழி பெயர்ப்புகள் மிகத் தேவையான ஒன்று என்று பல இடங்களில் உணர்கிறேன்; அதுவும் 25 பக்க வாசிப்புக்குள்ளாகவே இந்தப் புத்தகம் அதனை உறுதி செய்கிறது!

ஏனெனில் பரிணாம உயிரியலின் (evolutionary biology) அடிப்படை இயங்குதளம் பற்றிய அறிவு போதுமானதாக இருக்கும் எனக்கே இந்த நூல் பல இடங்களில் அட என்று நிமிர்ந்து உட்காரச் செய்வதாக உள்ளது.

இதன் பின்னணியில் அந்த வாசிப்பே அற்ற மற்ற துறை சார்ந்த வாசகர்களுக்கு எது போன்றதொரு வாசிப்பனுவத்தை வழங்கக் கூடும் என்று எண்ணும் பொழுது அறிவியல், வரலாறு சார்ந்த தமிழ் மொழி பெயர்ப்புகள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அறிவுசார் நிலையில் நகர்த்தக் கூடிய முக்கிய கருவியாகும் என்று தோன்றச் செய்கிறது.

இந்த புத்தகம் இன்றும் நாம் எதிர் கொள்ளும் பல நிகழ்கால உடலியல், உளவியல் சார்ந்து நம் கைகளுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளுக்கு எதுவெல்லாம் காரணிகளாக இருந்து செயல்படுகிறது என்பதை ஆழமாக அலசிச் செல்கிறது.

உதாரணமாக மகப்பேறு சமயத்தில் ஏன் தாய் சேய் மரணம் நிகழ்கிறது என்பதை நம்முடைய எழுந்து நின்று இரண்டு கால்களில் (bipedal) நடக்கும் காலத்திலிருந்து தொடங்கி, நம்முடைய மூளையின் அளவு, எடை என பிணைத்து பிறப்புறுப்பின் குறுகலே அதற்கான மூலம் என்று நம்மை புரிந்து கொள்ள கோரி நிற்கிறது. இங்கே உடனே ஏன் மகப்பேறு நேரத்தில் மருத்துவர் பேறு வழியை பெரிதாக்க கத்தி வைத்து சிறிது கிழித்து விடுகிறார் என்பதற்கான பரிணாம வழி விடைகிடைக்கக்கூடும்😲

மூளையின் எடையே ஒரு சுமை அதனை இந்த பரிணாமம் நம் தலையில் தூக்கி வைத்து உடலின் 25% சக்தியை உட்கொள்ளும் பேர்பசி கொண்ட வஸ்துவை, நாம் வேலை வாங்க சிந்தனையின் வீச்சம் அதிகரிக்கச் செய்தோமெனவும் அதுவே ஏனைய விலங்குகளைக் காட்டிலும் அதி வேகமாக முன்னேறி பரிணாம உச்சாணிக் கொம்பில் அமர வழி வகுத்தது எனவும் புரிந்து கொள்ளச் செய்தது.

இல்லையென்றால் வேட்டையாட உடல் திராணியற்ற நிலையில் ஊனுண்ணி சாப்பிட்டு மிச்சம் வைத்த மாமிசத்தை கழுதைப் புலிகள் வரண்டியது போக, நாம் இன்னமும் எலும்பை உடைத்து மஜ்ஜை உண்ணும் நிலையிலேயே இருந்திருப்போம்தானே.

அதே மூளையின் எடையே நம் தோள்களுக்கு மேல் வைக்கப்பட அதன் இன்னலாக கழுத்துப் பிடிப்பும், முதுகு வலியும் வரக்காரணம் என்று சொல்லும் போது, நிறைய உடல் சார்ந்த உபாதைகளுக்கு காரணம் கிடைக்கிறது.

அப்படியே தொடர்ந்து ஏன் பிற பாலூட்டிகளில் முழுமையாக வளர்ச்சியுற்ற குட்டி பிறந்து விழுந்த சில மணிதுளிகளுக்குள்ளாகவே எழுந்து நின்று நடக்கவும், சில வாரங்களுக்குள்ளாகவே இரைதேடிச் செல்லத் தக்கதாகவும் அமைந்து விடுகிறது எனக் கேள்வி எழுப்பி பதிலாக மனித மூளையின் வளர்ச்சி அளவும், கருப்பையில் சிசு இருக்கும் காலளவும், பிறக்கும் பொழுது பிறப்புருப்பின் குறுகல் கூறுகளுமே பரிணாமத்தில் இன்றளவும் ப்ரீமெச்சூர்டுத் தனமாக மனிதக் குழந்தைகள் ஈன்றெடுப்பிற்கான காராணமென சுட்டிக்காட்டுகிறார்.

இதுவே மனிதன் ஒரு நாகரீமாக பிற்காலத்தில் பரிணமிப்பதற்கான முதன்மைக் காரணி என்றும் அடையாளப்படுத்துகிறார். ஏனெனில் மனிதக் குழந்தைகளின் சார்ந்து வாழும் ஆண்டுகள் நீண்டிருப்பதால் அதற்கு குழுவாக சார்ந்து வாழும் ஒரு சூழல் தேவைப்படுகிறது, பின்னே அது ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டு, பிற்சேர்க்கைகளான மதம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ற கற்பிதங்களை அளவிற்கு அதீதமாக ஏற்றிக் கொண்டு எப்படி நம்முடைய இருப்பையே இன்று கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டது சேப்பியன்ஸ் என்பதாக இந்தப் புத்தகம் பின் வரும் பக்கங்களில் பேசுமென்று நினைக்கிறேன்...

அப்பப்போ எழுதுவேன் as I further continue reading this book, I suppose! 😏 Part 2 Link : உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

Thursday, September 08, 2016

மனிதன் பாதி மிருகம் மீதி: மரபணு சீரிஸ் - I

ஒரு புத்தகம் வாசிச்சிட்டு இருக்கேன். அதில சுயநலமற்ற மரபணு எப்படி நம்முடைய பரிணாமத்தின் வழியாக பயணப்பட்டு வந்து சேர்ந்திருக்கணும் என்றும் அதனோட பயன் என்னவா இருக்கும்னும் ஒரு கேள்வியோட போகுது.

நாமும் பார்த்திருக்கலாம். பல விலங்குகள் அது மேம்பட்ட பாலூட்டிகளாகவோ, அல்லது பறவை இனங்களிலிலோ, ஏன் கரையான், எரும்பு வகைகளில் கூட இந்த சுயநலமற்ற செயல்பாடுகள் நடைமுறையில் இருப்பதை கண்டிருக்கலாம்.

உதாரணமாக அணில், ஆட்காட்டி குருவி, அல்லது குரங்கு தனக்கென்று பிரத்யோக பாதுகாப்பினைக் கொடுக்கத்தக்க வகையில் முட்டையிட்டோ அல்லது குஞ்சுகள் கூட்டிலோ அல்லது குட்டிகள் அருகமையோ இல்லாத பேச்சிலராக இருந்தாலும், தனக்கு ஆபத்தை உடனடியாக இழைக்கும் விலங்கு, அல்லது சூழல் இருப்பினும் ஏன் ஒலி எழுப்பி மற்ற தன் இன உறுப்பினர்களை விழிப்பு கொள்ளச் செய்கிறது? தனக்கு உடனடியான மரணமே சம்பவிக்கலாம் என்றாலும் ஏன் அனிச்சையாக செய்து வைக்கிறது என்றபடியாக உள்ளது அந்த கேள்வி.

இதற்கு விடையாக தனி நபர் உயிர், உடல் சார்ந்த விசயங்களை பேணி பாதுகாத்துக் கொள்ள எப்படி சுயநல மரபணு அவைகளிடையே பரிணமித்து ஓர் உயிரினத்தை இனமாக இந்த பூமியில் தக்கன பிழைக்க வைக்க உதவுகிறதோ, அதனையொத்தே இந்த சுயநலமற்ற மரபணு பரிணமிப்பு தன்னையொத்த மரபணுக்களை கொண்ட பிற குடும்ப நபர்களாவது தன் ஒரு உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை பெரிதளவில் மிச்சமிருப்பவர்கள் அந்த மரபணுக்களை கடத்திச் செல்ல வாய்ப்பாக அமையுமென்று இந்த தற்சார்பு தற்கொலைக்கு தன்னையும் தாண்டி பரிணாம வழியாக எடுத்து வந்திருப்பதாக பேசுகிறது அந்த புத்தகம்.

இதனையொட்டியே தேனீக்கள், எரும்புகள், கரையான்களிலெல்லாம் ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கத்திற்கு லாயக்கில்லாத உழைப்பாளி நபர்கள் இருந்தாலும், அவைகளின் ப்ரக்ஞையற்ற தற்கொலைச் செயல்களை இந்த மரபணுவே செயலாற்ற வைக்கிறதுன்னும் புரிஞ்சிக்கிறேன்.

போலவே, நம்முடைய செயல்களிலும் இது போன்றே மரபணு தற்காப்பிற்கெனவும், ஓர் இனமாக பரிணமித்து நம்மை தக்க வைத்துக் கொள்ளவும், எது போன்ற செயல்பாடுகளெல்லாம் இந்த இயற்கை கால ஆற்றில் பயனுள்ளதாக இருக்கிறதோ அதெல்லாம் மரபணுவிற்குள் பொதிக்கப்பட்டு நாம வெறும் இயந்திரம் போன்று ஏன், எதற்குன்னு கேள்வி பதில் செஞ்சிக்காமயே குட்டி போட்டு, வளர்த்து, வெட்டுக் கொத்து நடத்தி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு போற அளவிலேயே இருக்கோம்... it is just a by product of genetical interest, effortlessly leading by an innate behavior.

*****************************************************************

நேற்று எப்படி தன்னலமற்ற மரபணு நம்முள் கடத்தப்பெற்று அனிச்சையாக தன் இனம் சார்ந்து செயல்படுதுங்கிறதை பத்தி பேசினோம். இன்னிக்கு இன்னொரு கோணத்தில இந்த பிறருக்கு உதவும் இயல்பு (altruism) எந்தளவிற்கு மனித சகோதரத்தில் முன் நிற்கிறது நிக்கலைன்னு இன்னும் கொஞ்சம் கிட்டே போயி பார்ப்போமா!

சில வருடங்களுக்கு முன்பு ஹிமலயாவிற்கு பக்கத்தில சாமீ கும்பிட போன மக்காவை திடீர்னு பேரிரைச்சலோட மேகம் வெடித்து கொட்டின மழை, வெள்ளமா மாறி மக்களை அடிச்சு எடுத்துகிட்டு போனதா செய்திகள்ல படித்தோம்.

அதில யாரு என்னான்னு தெரியாம அடிச்சு இழுத்துகிட்டு போன பிற வீட்டு மக்காவை குதிச்சு காப்பாத்தினதாவும் சில செய்திகள் வாசிச்சோம். அது போலவே சென்னை வெள்ளம், சுனாமி நிகழ்வுகளின் போதும் நடந்தது.

இருப்பினும் அதற்கு மாறாக மரபணு ரீதியாக இயற்கை எதனை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து சேர்க்கிறதுன்னு பார்த்தா- ஒரே குடும்பத்தில் அம்மாவின் வளர்ப்பால் வளர்த்தெடுக்கப்படுகிற சகோதரர்கள் அதனை பார்த்து வளர்வதாலேயே தான் அந்த பாசப்பிணைப்பு அதீதமாக பதியவைக்கப்படுகிறதாம். அது தூரம் அதிகமாக அதிகமாக அதனுடைய ஈர்ப்பு குறைகிறதாம்... உதாரணமாக சித்தப்பா, பெரியப்பா மக்கள் இப்படியே இது விரிகிறது.

இதனை இன்னும் நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் காட்டிற்குள் செல்வோம். சிம்பன்சிகள் புரத தேவையையொட்டி தனது குட்டிகளுக்கு கொண்டு வரும் இரண்டு கிலோ மாமீசத்தில் பங்கு பிரித்து பிற பெண் சிம்பன்சிகள் பெற்ற குட்டிகளுக்கும், தன்னுடைய குட்டிகளுக்கும் ஒரே அளவில் பிரித்து கொடுத்து தனது தாராள மனதை காட்டும் பட்சத்தில், அந்த குணமே தனது குட்டிகள் ஊட்டச் சத்து குறைந்து மரணிக்கும் தருவாயில் கொண்டு சென்று நிறுத்தினால், இயற்கை எதனைத் தழுவி அடுத்த கட்டத்திற்கு கடத்தும்? தாராள உள்ளம் படைத்த அந்த அம்மாவையா? அல்லது கொஞ்சம் சுயநலமாக தனது குட்டிகளுக்கு அதிகமாக கொடுக்கும் அம்மாவையா? மாற்று கருத்தே இல்லாமல் கொஞ்சம் சுயநலத்துடன் இயங்கும் அம்மாவின் குணத்தைத் தான் இல்லையா?

அப்படியே இப்போ கேமராவை நம்ம வீட்டிற்குள் நகர்த்துங்க. வெளியில இருந்து வந்து இணையும் இரு வேறு நபர்கள் தங்களது குழந்தைகள் என வரும் பொழுது ஒரே நிலையையும், ஆனால், அவரவர்களின் பெற்றோர், சகோ என்றால் ஒரு நிலையையும் எடுக்கும் லாஜிக் ஏன் என்று புரிகிறதா? ஏனெனில், அங்கே தூரம் தூரமாக வளர்ந்து வருவதால் அந்த பாச பிணைப்பு இருக்க வேண்டுமென்ற ’தூரப் படுத்தல் மரபணு’ அந்த விளையாட்டை நிகழ்த்துகிறது. அது அவர்களாகவே செய்யவில்லை, அனிச்சை செயல் (உஷ் அப்பாடா, தப்பிச்சீங்க).

இப்படி எல்லாத்தையுமே ஒரு மிருக நிலையிலிருந்து நம்மை புரிந்து கொண்டால் எல்லா மனிதர்களையும் நேசிக்கலாம், அவங்கவங்க நிலையிலேயே வைத்துன்னு நினைக்கிறேன்.

இன்னொரு கொசுறுச் செய்தி. ஆண்களுக்கு குடும்பம் என்ற கருதுகோளே கிட்டியிருக்காதாம் அவர்கள் சகோதர/ சகோதரிகளிடன் வாழ்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பு மட்டும் கிடைத்திருக்காத பட்சத்தில்... அங்குதானே பகிர்ந்து கொள்வது, இரக்கம் காட்டுவது, விட்டுக்கொடுத்து போதல் போன்ற நடைமுறை விசயங்கள் கூர் தீட்டப் படுகிறது.

Related Posts with Thumbnails