Showing posts with label திராவிடம். Show all posts
Showing posts with label திராவிடம். Show all posts

Sunday, February 26, 2023

கலைஞரின் சற்கர நாற்காலியும் கமலின் ஏகாடியமும்!

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.

பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.

இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத, வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான். 

சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.

கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.

கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Sunday, February 05, 2023

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல்!

 = கற்காலமாக்குதலியம்!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக்   கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு    கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு  கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.


அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது. 

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!


#மீள்

#AdmkFails _2018

Friday, April 09, 2021

தம்பீகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!


ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

Friday, February 26, 2021

முதல் கோணல் முற்றும் கோணல்! PMK's Election Stunt

 நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன். என்ன சொல்லுறதுன்னே தெரியல! இப்படி ஒரு (ஜாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க ஜாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம். 

யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.

உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.

சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...

திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க.

அண்ணா எந்த காரணங்களுக்காக அதை படமெடுக்க விட்டர், பின்பு சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை  தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.

நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.

எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?

திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது? 

அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!

பி.கு: இந்தப் பதிவு 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போது எழுதியது.

கமலஹாசன் சிறுமையின் எச்சம்: Wheelchair Speech

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.
பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.
இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத,
வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான்.
சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.
கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.
கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Wednesday, February 24, 2021

ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்கவைக்கப்பட்டார்?

 எப்போதுமே நமது மனது புறவயமான மயக்கத்தில் கட்டுண்டு கிடப்பதிலேயே பெரும் உவகை கொள்கிறது. அதற்கென காட்சிப் படுத்தலும், மாயவாத செயல்பாடுகளை காணும் போதும் நாம் வெகு எளிதாக அந்த சூழ்ச்சிகளுக்குள் விழுந்து விடுகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்திய, பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வுக்கு காரணமாகிய ஓர் ஆளுங்கட்சி, தேர்தல் கால ஸ்டண்டாக கெடா வெட்டி விருந்து வைத்தாலும், அந்த ஒரு வேளை உணவிற்குப் பின்னாக தாங்கள் இழந்த, இழக்கவிருக்கிற உரிமைகளை எண்ணிப் பார்க்காமல் கை அலம்புகிறோம்.

ஆனால், என்று நாம் ஒரு சமூகமாக மனிதர்கள் பொருட்டு தீர்க்கமான ஆராய்ச்சியின் பால் காரண காரியங்களை கண்டடைகிறோமோ, அன்று கடைசி நேர மாயவாத மயக்களுக்கு நாம் செவி சாய்க்க மாட்டோம்.
எப்படி இவ்வளவு கோமாளித்தனங்களை அரங்கேற்றிய படியே அதிமுக_வால் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் யாரால் அமரவைக்கப்பட்டு அழகு பார்க்கப்படுகிறது?
ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்க வைக்கப்பட்டார்? யாரால் அது போன்ற ஒரு கருத்து, காட்சி கட்டமைக்கப்பட்டது, அவ்வாறு செய்வதற்குபின்னான லாபம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ மேலே வாசிங்க!
🔹️🔹️🔹️🔹️🔹️
எனது முகநூல் பக்கத்திலும், பொதுவான விவாதங்களிலும்...
நீங்கள் கருணாநிதி நல்லவர், வல்லவர் என்கிறீர்கள், ஆனால் மக்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லையே...
நீங்கள் குறை கூறும், அதிமுகவைத் தானே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கின்றனர்!
ஏன் என்ற கேள்வியை முன் வைப்பார்கள்!!!
நியாயமான கேள்வி, அதற்கான பதிலும் நான் கூறிவிடுவேன்,
இருந்தாலும் ஏற்க மறுப்பார்கள், அது அவர்களது உரிமை என்று அடுத்து விவாதம் செய்ய மாட்டேன்!!!
ஏன் கலைஞரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லை!!
காரணம்,
அதிகார பரவலை, பொருளாதார பரவலை, சாதிய ஏற்றத் தாழ்விண்மையை, மாநில உரிமைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயன்றார்!
1. நிலங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தார்!
2. பேருந்துகளை எல்லோருக்கும் பொதுவாக்கினார்!
3. இடஒதுக்கீட்டை 40% (SC 15%+ BC25%) 48% உயர்த்தி எல்லோருக்கும் கல்வி மற்றும் அரசு வேலைகளை பொதுவாக்கி அதனை உறுதி படுத்தினார்!
4. குடிசை மாற்று வாரியம் மூலமாக, குடிசைகளில் கிடந்தவர்களை அண்ணா நகரில் அடுக்கு மாடிகளில் குடியமர்த்தினார்!
5. குடிசைகளில் வாழ்ந்த பறையர்கள், பள்ளர்கள் சமூக மக்களைப் மக்களைப் பார்த்து "அய்யோ பாவம்" என்று கூறி மகிழ்ந்த குடியானவர்களுக்கு முன்பு, அவர்களை ஓட்டு வீட்டில் வாழ வைத்தார்!
6. உயர்கல்வியை கிராமத்தில் உள்ளவர்களும் படிக்க ஏதுவாக, சென்னை பல்கலைக்கழகத்தை (Madras University) பிரித்து பல பல்கலைக்கழகங்கள் அமைத்து, நிறைய கல்லூரிகளை நிறுவினார்!
7. தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க ஏதுவாக விடுதிகளை கட்டி விட்டார்!
8. நகரத்தில் மட்டுமே இருந்த வசதிகளை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி விட்டார்! அதனால் நகரத்திற்கு செலவு செய்ய நிதி குறைவாக இருந்தது!
9. பெற்றோர்கள் சொத்தில் பங்கு மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு என்று பெண்களுக்கு, அதிகாரத்தை அள்ளி வழங்கி விட்டார்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு என்று அரசியலில் பெண்களை முன்னிலை படுத்திவிட்டார்!
10. இந்தியாவிலேயே, உயர் சாதி மக்கள் மட்டுமே கோலோச்சிய நீதிமன்றத்தில், ஒரு பறையர் சமூகத்தைச் சேர்ந்தவரை நீதிபதியாக நியமனம் செய்தார்!
11. சாதிய படிகளில் கீழ் நிலையில் இருந்த கருணாநிதி முதலமைச்சராகி விட்டார்!
12. கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட ஆட்சியருக்கு இணையானவர் என்று சுதந்திரம் கொடுத்து விட்டார்!
13. மாநில உரிமைகளை பெற, ராஜமன்னார் கமிட்டி அமைத்து, திருமதி இந்திரா அமைச்சரவையிலேயே அதனை சமர்ப்பித்தார்!
14. ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஊடகத்துறையில் (சினிமா, அச்சு) தனது ஆளுமையை செலுத்தினார்!
15. எல்லாவற்றுக்கும் மேலாக...
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத்தை இயற்றி விட்டார்!
விளைவு...
ஊழல் குற்றச்சாட்டு, தனிமனித தாக்குதல்!!!
அதனைத் தொடர்ந்து கலைஞர் ஆட்சிக்கு வரவிடாமல் பார்த்து கொண்டனர்!
சரி, பயனடைந்த மக்கள்........
அவர்கள் பாவம், அறியாமையிலேயே இருப்பவர்கள்!!

Post- Thanks:
Kandasamy Mariyappan
Art Courtesy:
Gokula Varadharajan

Sunday, January 24, 2021

பெரியாரின் பொருளடக்கம்: Periyar In A Nutshell!

நீங்களும் மனிதர்களாகி கொஞ்சமே சிந்திக்க ஆரம்பித்து இதில் ஏதாவது ஒன்றை தொட்டுப் பேசினாலும், வெறுக்கப்படுவீர்கள்.

பெரியார் என்ற மனிதரின் உள்ளடக்கம். 👇
1. இடஒதுக்கீடு,
2. பெண்ணுரிமை,
3. கைம்பெண் மறுமணம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு,
4. திருக்குறள் மாநாடு,
5. தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் எழுத்து சீரமைப்பு,
6. ஆங்கில மொழியின் அவசியம்,
7. மாநில உரிமைகள்,
8. சாதிய ஒழிப்பு,
9. சமூகநீதிக்காக கடைசி வரையிலும் பாடுபட்டது
10. சுயமரியாதை,
👉11. சனாதன கொள்கையை போட்டுடைத்தது,
12. ஹிந்தி மற்றும் சமஸ்கிருத எதிர்ப்பு.
இத்தனையும் இருக்கும் போது ஏன் பெரியார் "கடவுள் மறுப்பு. (#11)" மட்டுமே பேசினார்னு உருட்டுரானுங்க. அந்த அரசியல் புரிஞ்சிட்டா நீங்க வயசிக்கு வந்திட்டீர் என்று உணர்வீராக!

Thursday, December 31, 2020

திராவிடம் என்ன சாதித்தது? : All In One Place

 எப்பொழுதும் அடர்வாக இருக்கக் கூடிய எழுத்துக்கள், பேச்சுக்கள், சிந்திக்கத் தூண்டும் நடைமுறை சார்ந்த விசயங்களை கண்டால் அவைகளைத் தவிர்த்து விட்டு, பொரும்பாலும் நமது மனது வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுக்கத் தக்க விசயங்களையே நாடும்.

இது மிகவும் இயல்பானதொன்று! உள்ளடக்கம் இல்லாத இன்றைய அரசியல் தலைமைகளின் பேச்சை நம்பி ஏமாந்து நிற்பதற்கும் அதுவே காரணம். உழைப்பு இல்லாத பெற்ற எதுவும் நிற்காது, சுவைக்காது.
வந்த வழி (வலி) தெரிந்தால்தான் முயன்று பெற்றவைகளை, வாழும் பொழுது வாழ்க்கையில் ரசித்து ருசித்தது போக, பேணி, வரும் தலைமுறைக்கு கடத்திச் சேர்க்க முடியும்.
இல்லைன்னா, எடப்பாடி அன் கோ போன்ற அலிபாபா குழுகிட்ட கொடுத்துட்டு மேலை ஓட்டைப் பார்த்துக்கிட்டு மல்லாக்க படுத்திருக்க வேண்டியதுதான்.
இப்போ வந்த வழி தெரியணுமா, புதியவர்களே பொறுமையா கீழே உள்ள பதிவை படிங்க. நீங்க போட்டிருக்க மேல் சட்டைக்கு யார் காரணமின்னு தெரிஞ்சிக்கலாம்...
🔹️🔹️🔹️🔹️🔹️
1915 இல் கல்வி இலாகாவில் இருந்த மொத்த உத்தியோகங்கள் 518. அந்த 518 இடங்களில் அமர்ந்திருந்த பார்ப்பனர் 399 பேர். கிறித்துவர்களும் ஆங்கிலோ இந்தியர்களும் 23 பேர், முஸ்லிம்கள் 28 பேர், ஆதிதிராவிடர் உட்பட பார்ப்பனரல்லாத இந்துக்கள் 18 பேர்.
1915 இல் அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்று கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் வழங்கிக் கொள்வார்கள்.‌
1916 இல் டாக்டர்.சி. நடேச முதலியார், டாக்டர். டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டியார் ஆகிய மூவரும் சேர்ந்து நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்குகிறார்கள்.
1920 இல் நீதிக்கட்சி அமைச்சரவை பதவிக்கு வந்தது. இதே ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற 26-வது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் வகுப்புரிமை தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
1922 -இல் நீதிக்கட்சி அரசாங்கம் 12 பதவிகள் இருந்தால் அதை 5 பார்ப்பனரல்லாதார், 2 பார்ப்பனர், 2 மகமதியர், 2 கிறிஸ்துவர், 1 தாழ்த்தப்பட்டவர் என பிரித்து வழங்க வேண்டும் என ஒரு அரசாணையை வெளியிட்டது.
1924-இல் மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்ததை, நீதிக் கட்சி அரசாங்கத்தை நடத்திய பனகல் அரசர் நீக்கினார்.
இதே ஆண்டில் நியமனங்களில் வேண்டியவர்களை நியமித்துக் கொள்ளும் முறையை ஒழிக்க, பணியாளர் தேர்வுக் குழுவை இந்தியாவிலேயே முதன் முறையாக ஏற்படுத்தியது நீதிக்கட்சி.
1942- இல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில் வகுப்புவாரி முறை அமலாக்கப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
1947-இல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவை வகுப்புவாரி உரிமையை பின்வருமாறு மாற்றி உத்தரவிட்டது.
இதன்படி 14 இடங்கள் இருந்தால் அதில் 6 இடங்கள் பார்ப்பனரல்லாத முன்னேறிய வகுப்பினருக்கும், 2 இடங்கள் பார்ப்பனரல்லாத பின்தங்கிய வகுப்பினருக்கும், 2 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 2 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், ஒரு இடம் முகமதியருக்கும், ஒரு இடம் கிறிஸ்தவ ருக்கும் ஒதுக்கப்படும்.
1948 - இல் நேரு தலைமையில் அமைந்த இந்திய அரசு "தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர வேறு யாருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது” என சுற்றறிக்கை அனுப்பியது. ஓமந்தூரார் இதனை ஏற்கவில்லை. இதனால் அவரை ”தாடி இல்லாத ராமசாமி” என பார்ப்பனர்கள் அழைத்தனர்.
1950- இல் வகுப்புரிமை இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
1951 காலகட்டத்தில் மாணவர்கள் இன்டர்வகுப்பில் வாங்குகின்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் இவை இரண்டையும் கூட்டி அதன் சராசரியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடைபெற்றது.
இட ஒதுக்கீடு செல்லாது என்று ஆன நிலையில், காங்கிரஸ் ஆட்சியாக இருந்தபோதிலும், அதிகாரம் பார்ப்பனரல்லாத குமாரசாமி ராஜா அவர்கள் கையில் இருந்ததால், 1951-52 கல்வியாண்டில் நேர்காணலுக்கு அதிக மதிப்பெண்களை ஒதுக்கி பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஓரளவு நியாயம் வழங்கியது மாகாண அரசு.
இதனால் இந்த ஆண்டில் மொத்தமிருந்த 318 மருத்துவ இடங்களில் 63 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 130 இடங்கள் ஜாதி இந்துக்களுக்கும், 125 இடங்கள் மற்றவர்களுக்கும் கிடைத்தது.
1952 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜாஜி ஆட்சிக்கு வருகிறார். பார்ப்பனர்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் வகையில் ,நேர்காணலுக்கு இருந்த மதிப்பெண்களை 150 லிருந்து 50 ஆக அதிரடியாகக் குறைத்தார். 1952-53 கல்வியாண்டில் மொத்தமிருந்த 318 மருத்துவ இடங்களில் 104 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 56 இடங்கள் ஜாதி இந்துக்களுக்கும், 158 இடங்கள் மற்றவர்களுக்கும் கிடைத்தது.
அதாவது மக்கள் தொகையில் 100க்கு 3 பேராக இருந்த பார்ப்பனர்களுக்கு கடந்த ஆண்டைவிட 41 மருத்துவ இடங்கள் கூடுதலாகக் கிடைத்தது. பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்களுக்கு கடந்த ஆண்டைவிட 74 இடங்கள் குறைவாகக் கிடைத்தது.
எஞ்சினியரிங் கல்லூரி சேர்க்கையிலும் கடந்த ஆண்டைவிட பார்ப்பனர்கள் 92 இடங்களை அதிகமாகப் பெற்றார்கள்.
பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்கள் கடந்த ஆண்டைவிட 88 இடங்கள் குறைவாகப் பெற்றார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி தேர்விலும் தேர்ச்சி விகிதத்தை 42 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகக் குறைத்தார். இதனால் கூடுதலாக பாதிக்கப்பட்டது பார்ப்பனர் அல்லாத மாணவர்கள்தான் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
10.6.1953 விடுதலையில் வந்த ஒரு செய்தி ” சென்ற ஆண்டில் செலக்ஷன் என்ற பன்னாடை முறை இல்லை. ஆனால் இந்த ஆண்டில் உயர்திரு ஆச்சாரியார் அவர்களின் அதிகார லீலைகளில் ஒன்றாக இந்த வடிகட்டும் முறை புகுத்தப்பட்டது" என்று சொல்கிறது.
பன்னாடை என்றால் வடிகட்டும் துணி. அதைக்கொண்டு வடிகட்டி பலரையும் தூக்கி எறிந்து விடுவார்கள். அதனால்தான் இந்த செலக்ஷன் முறைக்கு இந்தப் பெயர் சொல்லி அழைத்தது விடுதலை.
மூன்றாவது ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத்தேர்வை பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஏற்பாட்டையும், மருத்துவ கல்லூரி சேர்க்கையில் உள்ள NEET தேர்வையும் நாம் இந்த பன்னாடை முறையோடு ஒப்பிடலாம்.
இதோடு நிறுத்தவில்லை ஆச்சாரியார், குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதாவது கிராமத்தில் உள்ள மாணவர்கள் மூன்று மணி நேரம் மட்டும் பள்ளிக்கு சென்றால் போதும். மற்ற நேரங்களில் தந்தையார் செய்யும் தொழிலைச் செய்ய வேண்டும். ஆனால் நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தாது. இந்த அநீதியும் கிட்டத்தட்ட NEET என்ற அநீதிக்கு இணையானதுதான்.
பெரியார் தலைமையில் நடந்த போராட்டங்களின் விளைவாக உண்டான முதல் அரசமைப்புச் சட்ட திருத்தம்தான் இன்று இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க காரணம்.
இட ஒதுக்கீடும் பணியாளர் தேர்வு வாரியமும் இல்லையென்றால் பதவிகள் அனைத்தும் ஏற்கனவே பதவிகளில் இருப்பவர்களின் உறவினர்களுக்கே சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.
உதவிய நூல்கள்:
வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யூனல் ஜி.ஓ) பேராசிரியர் க அன்பழகன், திராவிடர் கழக வெளியீடு.
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம், பேராசிரியர் அருணன், திராவிடர் கழக வெளியீடு.
Thirunavukarasan Manoranjitham
வழியாக... Thank you!

Wednesday, November 07, 2018

வியக்க வைத்த டாக்டர் கலைஞர்: A rare of a kind


ஓர் அதி சிறந்த மூளையால் என்ன செய்து விட முடியும்? சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை, அதன் தேவைகளை நுட்பமாக அவதானிக்க முடியும். அதற்குப் பிறகு மிகக் கடுமையான உழைப்பிற்குப் பின்னால் தன்னை படிப்படியாக நகர்த்தி ஒரு சமூகத்தையே எதிர் காலத்தில் புரட்டிப் போடும் திட்டங்களை 18 மணி நேர கடின உழைப்பின் பேரில் திட்டம் தீட்டி அதனை மனதிற்குள் அடைகாத்து வைத்து தனக்கு கிடைக்கும் சொற்ப காலத்திற்குள் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும்.
ஆனால், அதற்கும் ஏகப்பட்ட தடைக்கற்கல் போடப்படும் நேரடியாகவும்மறைமுகமாகவும் என்பதனை மறந்து விடக் கூடாது. எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? தொலை நோக்கு பார்வையோடு பரந்து பட்டு எல்லா மனிதர்களுக்கும் சென்றடையும் திட்டங்களை இயற்றும் எந்த ஒரு தலைவனும் நிகழ்காலத்தில் அதிகமாக வெகுஜன மக்களை சென்றடைவது கிடையாதே அது ஏன்? என்று கேள்வி கேட்டுக் கொண்டதுண்டா?
மேம்போக்கான மனிதர்களை சென்றடையும் "லாலிபப்" திட்டங்கள் ஓர் உடனடி நிறைவுத் தன்மையை எட்டி, அதனை விட இன்னும் பெருமளவிலான திட்டங்களை எட்டுவதை மட்டுப்படுத்துவதற்கான ஒரு கால விரைய தலைவர்களை கொண்டு சமூகத்தையே பின்னோக்கி இழுத்து பிடித்து வைத்திருக்கவும் முடியும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
அதுதான் புர்ச்சி தலைவரும், தலைவியும் செய்த அரசியல். இன்றைய எடுபுடி தலைவர் அளவிற்கு தரம் தாழ்ந்து விடாமல் இருக்க அந்த புர்ச்சி தலைவர்களை, அந்த நுட்பங்களை உணர்ந்த அதி மூளை, அவர்களை பாதையில் கொஞ்சமேனும் ஒட்டி நடக்க வழி நடத்தி இருக்க முடியும் என்பதையும் நாம் உள்வாங்கி கொள்ள வேண்டும்.
ஏனெனில் நீங்கள் ஒரு நிழல் அரசாங்கத்துடன் சமரிட்டுக் கொண்டே உங்களுடைய இலக்கை அடைய முயற்சிக்கிறீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
இத்தனை சூழ்ச்சிகளுக்கிடையிலும் தன்னை தக்க வைத்துக் கொண்டு ஓரளவிற்கு இன்று நீங்கள் இருக்குமிடத்திற்கு நகர்த்தி வைத்திருக்க உதவிய அந்த அதி சிறந்த மூளைதான் கலைஞர்.
உதாரணத்திற்கு, அவரால் சிந்தித்து ஆசியாவிலேயே ஒரு சிறந்த கால் நடைகளுக்கான ஆராய்ச்சி மையத்தை, தமிழுக்கான ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் என அடிப்படை கட்டுமானத்தை உருவாக்கித் தரத்தான் முடியும்.
அதனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பது, அவரின் தொலை நோக்குப் பார்வையை உள்வாங்கிக் கொண்ட மக்களாகிய நம்முடைய பொறுப்பு.
வாட்சப் மட்டுமே ஜர்னல்ஸ், என்சைக்ளோபீடியா, அரசியல் திறனாய்வுக் கட்டுரைகளை வழங்கும் மாபெரும் வாசிப்பிற்கான ரிசோர்ஸ் என்று கருதி, பொய் பரப்புரைகளுக்கு தானும் இரையாகி அடுத்தவர்களையும் இரையாக்க தூண்டுவது அறியாமையின் உச்சம்.
அது அரசியல் அரிச்சுவடியே இன்னும் கையில் ஏந்தவில்லை என்பதற்கான லிட்மஸ் என்பதாக புரிந்து கொள்கிறேன்.

Related Posts with Thumbnails