Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

Tuesday, February 16, 2016

பெருமரத்து ஒற்றை இறகு!






பூப்பதும் காய்ப்பதும் உதிர்வதும்

முப்பருவமெனினும்

உதிர்வதை

கனமற்றதாக்கலாம்
பெரு மரத்து
பறவையொன்றின்
ஒற்றை இறகு
சப்தமற்று
தரையிறங்குவதைப் போல!









***************************




பெரும் மழைக்காடொன்றில்
அடர் மழை

தொடர் நுணல்கறங்கல்

மலை முகடுகளையும் பரப்பியபடியே

மறுமுனை 
ஆறு ஒன்றின்
கரையை கடந்து கொண்டிருக்கும்
தலைபிரட்டைகள்.

Monday, February 15, 2016

இதயம் பூட்டிய சிறுமி!




விண்மீனுக்கேயான
கதகதப்புடனான
சிறுமியொருத்தி
கதவுகளற்றப் பெருவெளியில்
பாட்டியொருத்தியின்
பாசவெண்பஞ்சின்
நேர்ப்பார்வையுடன்
பேரனைச் சிநேகம்
கொள்கிறாள்...
கனம்பொறுக்காத
வெண்பஞ்சு
அருகே நெருங்கி
நெக்குருகியதில்
அகம் கண்ட சிறுமியின்
உடலெல்லாம் இதயம்!

**************************************






துளிர்த்து பச்சையம் அதீதம் ஊட்டி

விருட்சமாகி
வானைநோக்கி  பரந்து விரிந்து
மொட்டாகி, பூவுமாகி,
காயாகி, கனியுமாக்கி
யாவும் கடந்து
எல்லாம் அறிந்தோமென
நினைவெட்டிய நாளில்
ஒரு மாலையுடைத்த
திடீர் மழையில்
சிலிர்த்தெழுந்தால் மேனியெல்லாம்
மின்மினி பூத்தவாக்கில்
மீண்டும் துளிர்ப்பு!

Monday, December 16, 2013

வடுவூரில் எதிர்கால நீச்சல் வீரர்கள்: Potential National Swimmers at Vaduvoor

நேற்று வடுவூர் வடக்கு பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றிருந்தோம். எங்கெங்கு நோக்கினும் பச்சைப் பசேல் வயற்காடுகளும், அண்மையில் பெய்து வரும் தொடர் மழையால் மரங்கள் நீரை அருந்தி செழுமையை இலைகளில் காட்டியவாறு தனிந்து நின்று குளுமை காட்டிக் கொண்டிருந்தது.

அருகாமையில் உள்ள நீர் நிலையில் இந்தியாவின் potential divers தங்களின் தேசியத் திறன் அறியாது “அண்ணா, அண்ணா எங்களை படம் பிடியுங்கள்” என்று கூறியவாறே அத்தனை நேர்த்தியையும் காட்டி அரை மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் சுழன்றபடி நீருக்குள் தங்களவு ஆன்மாவை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது படத்தில் உள்ள சிறுவனின் நீர் புகும் நேர்த்தியைக் காணுங்கள்! இதுவே ஒலிம்பிக் போட்டிகளில் பல வருடப் பயிற்சியில் செய்யும் ஒரு நீச்சல் வீரர் செய்யும் சாகசமென்று ஆ, ஓன்று கூச்சலிடும் (what an entering) ஒரு திறமை. இங்கே தானே பழகியதில் செய்து காட்டுகிறான்.

இப்படியாகத்தான் நமது கிராமப்புறங்களிலிருந்து பல தேசிய விளையாட்டு வீரர்கள் இந்தியா ஒன்று, இரண்டாவதை பின் தள்ளியவாரே தன்னை மண்ணுக்குள் புதைத்து விட்டு அரை ஜட்டி போட்டு 20/20 மட்டுமே விளையாட்டு என்று ச்சீயர் லீடிங் செய்து வருகிறது. எல்லாமே பணம், வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தூக்கிப் பிடிக்கும் குணம்.

The real talents yet to be found in the heart of India!

1)


2)
3)
4)
5)
6)
7)
8)

Tuesday, November 19, 2013

தஞ்சாவூர் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஓர் பயணம்: Mullivaaikkaal Mutram (Photos)

என்னோட நண்பன் ஒருத்தனை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு ஒளிஞ்சு கண்டுபிடிச்சு விளையாண்டுகிட்டே இருந்துட்டு நேற்று முகநூலில் வைச்சு கன்னம் மாத்தி, கன்னம் அறைஞ்சுகிட்டு  இன்று நேரா சந்திசிக்கலாம்னு முடிவாகி அவன் தஞ்சாவூர் வந்திருந்தான்.

அவன் எங்களோட நட்பை வட துருவமும் தென் துருவமும் சேராதுங்கிற ரேஞ்சிக்கு 90களிருந்தே சொல்லிட்டு திரியறது உண்டு. ஆனா, அதுக்கு பின்னாடியான திரை மறைவில் ஒரு hate and love காற்றில் தொங்கிட்டே இருக்கும் எங்களைச் சுத்தி.

என்னோட துணைவி, நேற்று நானும் அவனும் அலைபேசியில் பேசிக் கொண்ட தனிப்பட்ட மொழியை கவனிச்சிட்டு ”அப்படி பேசுவீங்க இப்படி நடிக்கிறீங்க ஃபோன்ல அவரோட” அப்படின்னு புருவம் உயர்த்திர அளவிற்கு எத்தனை நாயை கூப்பிட்டுக்க முடியுமோ அத்தனை தடவை மாத்தி மாத்தி கூப்பிட்டுக்கிட்டோம்.

நேரா வந்தவன்கிட்ட என்னய பிடிச்சும் கொடுத்தா. அவன் இது எப்போதுமே அப்படித்தான். அப்படின்னு அதே கிக்கேபிக்கே சிரிப்போட நழுவிட்டான். அவனுக்கு கடுப்பு ஏண்டா நல்ல விசயமே சொல்லி வைக்க மாட்டீங்களாடன்னு. எப்பூடி நாங்க எங்க வைஃபை கிட்ட கூட ஹீரோ வேஷம் கட்டலன்னா- நாலு பேரை வில்லனா ஆக்கினாத்தானே நான் ஹீரோ ஆக முடியும்னு நினைச்சிக்கிட்டு ஹிஹிஹின்னு மனசுக்குள்ளர சிரிச்சிக்கிட்டேன்.

அப்பறம் அவனுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் பார்க்கணும்னு தோணி நேற்றே சொல்லிட்டான் போலாம்டான்னு. சரின்னு ஒரு வழியாக தத்தி தவழ்ந்து இடம் கண்டுபிடிச்சு போனோம்.

இந்த அண்ட வெளியில மிதக்கிற அத்தனை வஸ்துவையும் பார்க்க அரக்கபறக்க ஓர் ஓழுங்கற்ற வழியில இயங்கிற மாதிரி இருந்தாலும், அததது இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கி மிதந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்த மனுசப்பய நடந்துக்கிறதுக்கான காரணங்கள் படிக்க இன்னொரு உலகத்தையே படைக்கணும் போல. கண்ணைக் கட்டுதப்போய்!

நினைவு முற்றம் போயிருந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே அதனை கட்ட முற்பட்டவர்கள் முறையான அனுமதிச் சான்றிதழ்கள் பெற்றுத்தானே ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் அதனை கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது, அத்தனை வருடம் எழும் வரையிலும் காத்திருந்து விட்டு இப்பொழுது மதில் சுவரை இடித்து யாருக்கு எதனை தெரியப்படுத்த அப்படி ஒரு அலங்கோலச் மட்டச் சுவர் கட்டினார்கள் என்ற கேள்வியை தவிர்க்கமுடியவில்லை சாலையிலிருந்து அந்த மொத்த அமைப்பையும் கண்ணுரும் பொழுது. என்னவோ போங்கப்பா!

அங்கு எங்களுடன் அந்த முற்றத்தினை பார்வையிட்ட சிலரில் ஒரு பெண்மணிக்கு ஆச்சர்யம் பெண்களை இப்படி கயிற்றால் பிணைத்து எல்லாம் இப்படிச் செய்திருக்கிறார்களா என்று. எந்தளவிற்கு பதினான்கே கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில் இடம் பெயர்ந்து வாழும் தன் இன மக்களுக்கு நேர்ந்த கோரம் அவர்களது பார்வையிலிருந்து முற்றிலுமாகவே மறைக்கப்பட்டிருப்பதற்கு அது ஒரு சான்று வார்த்தையாக காற்றில் மிதந்து காதடைந்தது.

இத்தனை குறுகிய புவியியல் அமைப்பின் குறுக்கப்பட்ட தொலைவிற்குள்ளும், நமக்கும் அவர்களுக்குமான துயரங்களும், தேவைகளும், தொலைதூர நோக்கும் நமக்கும் மத்திய அமெரிக்காவிற்கும் இடையே கிடக்கும் தூரங்களை கடந்து நிற்பதற்கு ஓப்பானது.

அங்கே பார்த்த சிற்பங்கள் அனைத்தும் இணையத்தில் புழங்கியவர்களுக்கு காணக் கிடைத்ததாகவே இருக்கும். இருந்தாலும், அரிதிப் பெரும்பாண்மையான நமது மக்களுக்கு நிச்சயமாக இந்த முற்றம் ஒரு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி மனதில் ஒரு குற்ற உணர்வை ஊட்டக் கூடியதாகவும், சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் அமையும் என்பது திண்ணம்.


1) நுழைவு முற்றம்...


2) தமிழகம் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் தீக்குளித்தவர்களுக்கான மதில் பதிப்பு...

3) ஈழம் மண்ணில் அவர்கள் படும் வதையை விவரணம் செய்யும் மதில் பதிப்பு...

4)

5)
6)

7)
8)


9)
10)

Thursday, July 18, 2013

கற்சிலையொன்று உயிரெழும்பினால்...

ஒண்ணரை மாதமாகவே பூமி சற்றே சுழன்று தன்னுடைய பூமத்திய ரேகையை இடமாற்றிக் கொண்டதோ என்று நம்பும் அளவிற்கு சியாட்டிலில் கொட்டும் மழை போன்றும், நம்மூர் பருவமழை காலங்களையொட்டியே விட்டும் விடாமல் பெய்யும் மழை போன்றும் இங்கே மழை பெய்து வருகிறது.

நேற்று ஒரே பேச்சு. நான் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு மூணரை மைல் அளவிலே உள்ள பழைய நகரம் கான்யர்ஸில் டொர்னாடோ தரை தொட்டு இரயில் தண்டாவாளத்தையும், நிறைய மரங்களையும், கார்களையும் பொரட்டி போட்டுவிட்டு சென்று விட்டதாக.

சரி என்ன சங்கதி என்று தெரிந்து வருவோமென்று என்னுடைய காலச் சுருட்டியுடன் அந்த பக்கமா நகர்ந்தேன். அங்கே ஒரு பழைய காலத்து டச்சுடன் சிலையொன்று அமர்ந்திருப்பதை எப்போதுமே வைத்தக் கண் எடுக்காமல் அதனைச் சுற்றி காரைச் செலுத்தி கடந்து செல்வதுண்டு.

இன்று கீழே இறங்கி என்னதான் கிடைக்கிதுன்னு நெருங்கினேன். என்னால் நிஜம்மாக அந்த இடத்தை விட்டு நகர மனமேயற்று நாற்பத்தம்பது நிமிடம் சுற்றி வருவது மாதிரி ஆகிவிட்டது. அத்தனை வசீகரம் அந்த முகத்தில்! உச்சி வெயில் வேறு. வண்ணம் குழைத்து அப்பிக் கொள்ள முடியாவிட்டாலும். கிடைத்த வரை சுருட்டிக் கொண்டேன்.

அந்த கருஞ்சிலையின் முகத்தில் உள்ள வசீகரம் என் வீட்டு தோட்டத்தில் மெள்ளமே தவழ்ந்தெழும் ஆங்ரி பேர்டிடமும் ஓட்டி அந்த வசீகரச் சிலைக்கு உயிரோட்டியதைப் போன்ற பிரமை தட்டியதால்... இன்று பக்கம் பக்கமாக வைத்துப் பார்க்கத் தோன்றியது.  :)







இவள்தானோ அவள்!!



Thursday, April 04, 2013

மழை திருடும் குழந்தமை: w/photos...


இது ஓர் அழகிய மழைக்காலம். எப்பொழுதும் மழையென்றாலே எனக்கு அலாதிப் பிரியம். அது எனது குழந்தமையை விடாது உசிப்பு எழுப்பி மீண்டும் துளிர்க்க வைத்து விடும் ஒரு கார்காலச் சங்கிலி. இங்கு நேற்றும் இன்றும் விடாது மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்த மழை ரசிப்புத் தன்மையை உளத்திலிருந்து பிரித்தெடுக்க ஒரு வயதிற்கு ஒரு சூழல் என காலம் தவாறது பல வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கொடுத்து, வயதானவர்களின் அனுபவத்தில் ஒரு கிலியையையும் சேர்த்தே செருகி வைத்து விடச் செய்யும். அது சாலையோரத்து வியாபாரியில் தொடங்கி, லாரி ஓட்டும் ஓட்டுநரைத் தொட்டு, பேருந்திற்கு பரபரப்புடன் காத்திருக்கும் அத்துனை பேரையும் வஞ்சகமில்லாமல் நனைத்தெடுத்து அவர்களின் முகத்தில் ஒரு சேர இறந்த போன குழந்தமையை கன நேரம் மறக்கடித்து துள்ளலானா முக மலர்ச்சியையும், அழுத்தி நமத்துப்போன வயோதிக முக வாட்டங்களையும் ஒரு சேர வெளிக் கொணர எத்தனிக்கும் இந்த மழை.

எனக்கும் அது போன்ற ஒரு கிலியை என் மனதினுள் விதைத்து என் குழந்தமையை திருடிச் செல்ல தலைப்பட்டது. சிறு வயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் நான் கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் விதமாக கூரையை பொத்துக் கொண்டு ஒரு சில இடங்களில் ஒழுகி காமித்தது. வீட்டில் பின்புறமாக அடுக்களையை ஒட்டி ஒரு கதவு. நெட்டித் திறந்தால் வெட்ட வெளிக்கு எடுத்துச் செல்ல அத்தனை அம்சக் காட்சிகளையும் உள்ளடக்கியவாறு அமைந்திருக்கும் ஒரு மந்திரக் கதவது.

தாழ்வாரத்தை உடைத்துக் கொண்டு அத்தனை மழை நீரும் உன் அடுக்களைக்குள் கொண்டு வந்து கொட்டுகிறேன் பார் என்று விடாது கொட்டித் தீர்க்கும். பாட்டி அந்த மழையை நைய்ய புடைத்து திட்டியவாரே கிடைக்கும் பாத்திரங்களைக் கொண்டு இரைத்து கொட்டுவாள். பின்பு அப்பா சிறுதொழில் செய்து வந்ததால் வாடிக்கையாளர்களின் வந்து போதலும் பாதிக்கப்பட்டது. இவைகளைப் போன்றே பல சில முகங்களை காட்டி குழந்தமை திருடல் தொடர்ந்து கொண்டே வந்தது. இருந்தாலும் நான் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. இது ஓர் இயற்கையின் திட்டமிடல். நம்மை அதன் முன்னால் மண்டியிடச் செய்யும் அணுகூலம். அந்த சூத்திரத்தை வென்றெடுப்பவனுக்கே இந்த மொத்த பூமியின் அத்துனை அழகையும் ஒரு சேர கையளித்து அவனை தன்னுடன் ஆரத் தழுவி தன்னுள் கரைத்துக் கொள்கிறது.

அதான் நீட்சியாக இன்று பல நாட்களாக எண்ணத்தில் வைந்திருந்த நீர்க்குமிழ் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. இருப்பினும் குழந்தமைத் திருடல் விடுவதாய் இல்லை. எனது குடையைத் தாண்டி மழை சில் சில்லென்று என் முதுகையும், புகைப்படக் கருவியின் லென்ஸை தொட்டு என் வயோதிக வாடலை படரச் செய்ய எத்தனித்தது. புறம் தள்ளி கிடைத்ததை சுருட்டிக் கொண்டு வந்து விட்டேன். இதோ உங்களுடன் ஒரு சில மழைக்காட்சிகள்.

மழையும் நானும் என்று எழுத வேண்டுமானால் என்னால் குறைந்தது இருநூறு பக்கங்கள் எழுத முடியும் என்றே எண்ணுகிறேன். எப்பத்தானோ! :)

பி.கு: மேலும் ஓய்ந்து போன ஒரு மழை பற்றிய நினைவோடை வாசிக்க - பூவன் கடவுளாகிப் போனான்:காட்டாறு
****************************
********************

1) ஒரு தென்மேற்கு பருவ மழை காலத்தின் போது தொப்பலாக நனைந்து போன கரம்பக்குடி வீதியும், மரங்களும் அந்த ஓட்டு வீடும்.


2) மஞ்சள் வெயிலுனூடாக ஒரு அம்ம்மெரிக்கா மாலை மழை நேரம்.

 

3) இலைகளுக்கு வலிக்காமல் மெல்ல பட்டுப்பரவி உருண்டு திரண்டு...


 


4) இன்றைய மழையில் துளித் துளியாய் முகிழ்ந்து, வெடித்து குடைக்குள் எனையும் காட்டியவாறே...

Thursday, February 28, 2013

வாழ்வும் வண்ணங்களும்! Photos




கனவு நினைவுருவாக்கம்
கொள்கையில்
வாழ்வும் முதுமையும்
மிகுதிகளாக...







பரந்த வாழ்வு
பாடகசாலையில்
தூரிகைகளைக்
கொண்டு
வண்ண
திட்டமிடுகையில்
அதனதன்வழியில்
அனைத்தும்
தன்னையே
தீட்டிக்கொண்டது!


Friday, October 19, 2012

மலர்களுக்குள் ஆண்களுக்கான விடை: Flower Structure!

பரிணாமம் எப்பொழுதும் எனக்கு ஒரு வியப்பூட்டும் நந்தவனம். அது விசயங்களை குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டவென மறைத்து வைத்திருக்கும் சாக்லேட் பார்களை போலவே பல வாழ்க்கை சூத்திரங்களை மறைத்து வைத்திருக்கிறது. அவதானிக்கும் தருணம் தோறும் என்னுடைய அனுபவ எல்லைக்களுக்கு ஏற்ப பெரிய சிறகுகளைப் சிறுகச் சிறுக கொடுத்து விரிவடைய வைத்துக் கொண்டு வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு மலர்களின் அமைப்பை பற்றி படித்துக் கொண்டிருந்தேன். மலர்களின் இதழ்களை கடந்து சென்ற எனக்கு பெரும் ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது அப்பொழுது விளங்கவில்லை. சற்று மென்மேலும் தவழ்ந்து அறிந்து கொண்டிருக்கும் பொழுது, மலர்களின் உள்ளே நடு நயமாக பெரிய வயிற்றுடன் அமைந்துப்பட்டிருந்த பெண் இனப்பெருக்க உறுப்பான சூல்வித்தினைச் (carpel) சுற்றிலும் அரண்களாக எழுந்து அழகூட்டிக் கொண்டிருந்த ஆண் இனப்பெருக்க உறுப்பான பல ஸ்டெமென்களை (stamen) பார்க்கும் பொழுது என்னுடைய சிந்தனை சிறகு நின்று நிதானித்து விரியத் தொடங்கியது.

இந்த அமைப்பிற்கும் மனித ஆண்/பெண் தேடல் சார்ந்த ஈர்ப்பிற்கும், மரபணு கொண்டு சேர்ப்பிற்கான பரிணாம விளையாட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக் கூடுமா என்று சிந்திக்க தோன்றியது. அதன் விளைவு இந்த பதிவு. என்னுடைய கோணங்கி சிந்தனை எப்படியாக இந்த மலரின் இனப்பெருக்க தேர்ந்தாய்வை நம்முடன் தொடர்பு படுத்திக் கொண்டது என்பதற்கு முன்பாக முதலில் ஒரு மலரின் அமைப்பிற்குள் சென்று வந்துவிடுவோம்.

நம்மால் மலர்களே இல்லாத ஒரு உலகையோ அல்லது சினிமாப் பாடல்களையோ நினைத்தும் பார்க்க முடியுமா? அந்த உலகுதான் எத்தனை நிறமிழந்து, வாழ்க்கையற்று சாம்பல் நிறமாக இருக்கும். மலர்கள் அழகிற்கெல்லாம் அழகு சேர்க்கும் ஒரு ரோஜா வனம். கண்களுக்கு முன்னால் அலைகள் வடிவில் விரிந்து கிடக்கும் மலைகளின் சரிவிலும், எழுச்சியிலும் வண்ண வண்ண மலர்களால் நிறைந்திருந்தால் மனம் ஒரு செளந்தர்யத்தின் ஒரு வண்டாக எழுந்து அத்தனை மலர்களையும் ஒரு பறவை பார்வையில் பார்க்க சிடுசிடுத்துக் கொண்டிருக்கும். அத்தனை அழகூட்டு சிரிப்பினை உள்ளடக்கியது அந்தப் பூக்கூட்டம்.

பூக்கும் தாவரங்களில் (angiosperms) உள்ள ஒரு பூவின் பரிணாம வடிவமைப்பை பார்த்துவிடலாமா இப்பொழுது. ஒரு பூக்காம்பு ஒரு மொட்டை யாருக்கோ தான் பரிசளிக்கவிருக்கும் பெட்டியினை சுமந்து நிற்பதாக தன்னுடைய புல்லிவட்ட புற இதழ்களைக் (sepal) கொண்டு உள்ளே இருக்கும் பரிசினை பாதுக்காக்கிறது. இது சற்று தடிமனான இலைகளைப் போல் தோன்றும், அதன் முக்கிய பயன் மலர்வதற்கு முன்னாக அந்த மலரை பொத்தி பாதுகாப்பளிப்பது.

இப்பொழுது அந்த மொட்டு மெல்ல அவிழ்கிறது. வண்ணம் வெடிக்கிறது. புறவயமாக இந்த பூமிக்கு அழகூட்டும் அல்லிவட்டம் (petal) மலர்களின் இனங்களுக்கு தகுந்தாற் போல பல நிறங்களைக் கொண்டு விரிவடைகிறது. ஒவ்வொரு மலரும் தனக்குள்ளேயே ஒரு உலகத்தை உள்ளடக்கியே எழுந்து நிற்கிறது.

ஒரு மலருக்குள் ஆண்/பெண் இனப்பெருக்க உறுப்புகளை உள்ளடக்கியிருந்தால் அதனை ஒரு முழு பூவாகவும், அப்படி அன்றி பெண் இனப்பெருக்க விசயங்கள் ஒரு பூவிலும், ஆண் விசயங்கள் மற்றொரு பூவிலும் அமைந்திருந்தால் அது முழுமையற்ற பூவாகவும் கருதிக் கொள்வோம்.

எப்படியாகினும் இவைகளை இணைத்து வைப்பது என்னவோ புறக்காரணிதான் என்பதனை ஞாபகத்தில் நிறுத்திக் கொள்வோம் (அது காற்றாகவோ, நீராகவோ, பூச்சி/பறவை இத்தியாதி விசயங்களாகத் தானிருக்கும்).


பெண் இனப்பெருக்க பாகங்கள்:

இப்பொழுது அல்லிவட்டத்தை (petal) தொடாமல் உள்ளே பார்வையை செலுத்தினால் நடுநயமாக பூக்களுக்கான ராணியைப் போல ஒரு தண்டு நின்று கொண்டிருக்கும். சற்றே ஒரு பேரிளம் பெண்ணை ஒற்ற தசைப் பிடிப்புடன். அந்த ராணியின் பெயர் சூல்வித்திலை (carpel). இந்த ராணி மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த அமைப்பை ஒரு வீணையாக மனதில் நிறுத்திக் கொள்வோம். அந்த வீணையை தூக்கி நிறுத்தினால் அதன் குடுவை அமைப்பு கீழ் நோக்கி இருக்கும், அல்லவா?

அந்த வீணை அமைப்பின் முகப்பில் சூலகமுடி (stigma) இருக்கிறது. அதன் கீழாக நீண்டு ஓடும் வீணையின் கழுத்துப்பகுதிக்கு பெயர் சூலகத்தண்டு (style). இவைகள் இரண்டையும் உள்வாங்கியபடி இருக்கும் வீணையின் குடுவைப்பகுதியினை சூலகம் (ovary) எனக் கொள்க. அதனை ஊடுருவி பார்த்தால் அதனுள் பொதிக்கப்பற்றிருக்கிறது, பெண் சூல் முட்டை (ovule).

ஆண் பகுதி:

இப்பொழுது அந்த ராணியைச் சுற்றியும் நிறைய கலங்கரை விளக்கங்களைப் போல எழுந்து நிற்கும் ஆண் இனப்பெருக்க உறுப்பு. அந்த ராணியை சுற்றிலும் அண்ணார்ந்து பார்த்தபடியோ, அல்லது குனிந்து பார்த்த படியோ மிக அருகாமையில் நின்று கவரக் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மொத்த கலங்கரை விளக்கத்தினை Stamen என்று கொள்வோம்.

இது இரண்டு பகுதிகளாக உள்ளது. நீண்ட தண்டு (மகரந்த கம்பி-filament) அதன் நுனியில் பல மகரந்ததூள்களை கொண்ட மகரந்த பை (anther). இங்கிருந்தே மகரந்த தூள்கள் புறக்காரணிகளைக் கொண்டு பெண்ணின் பிசுபிசுப்புடன் அமைந்துப்பட்டிருக்கிற சூலகமுடிகளுக்கு ஆணின் மகரந்த தூள்களை கொண்டு சேர்க்கின்றன.

மெதுவாக அந்த மகரந்தத் தூள், சூலகத்தண்டின் வழியாக சில வேதிய மாற்றங்களைப் பெற்றபடியே சூலகத்திற்கு சென்றடைகிறது. அங்கே தனக்காக காத்திருக்கும் சூல் முட்டையுடன் பற்றிப்படறி, இரண்டற கலந்து அடுத்த தலைமுறையை மரபணு பரிவர்த்தனை மூலமாக சாதித்துக் கொள்கிறது. சூல்கொண்டவுடன், அந்த வீணையின் புற அமைப்பு அதாவது சூலகம் நாம் உண்ணும் பழப்பகுதியாகவும், உள்ளமைப்பு விதையாகவும் ஆகிவிடுகிறது.

இப்பொழுது நாம் முழுமையாக ஒரு மலரின் அமைப்பினையும் அது எப்படி சூல் கொள்கிறது என்றும் பார்த்தாகிவிட்டது.

இதில் புதிதாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதனை இங்கு வைத்து தைத்து விடுகிறேன். இயற்கையமைவில் பார்த்தால் ஆண்/பெண் பாலின விகிதாச்சாரம் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே போல அமைந்து விடுவது கிடையாது. இயற்கையின் தேர்ந்தெடுப்பதில் எப்பொழுதும் ஆண் போராடியே தனது மரபணு சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் கட்டாயத்தில் வைக்கப்படுவதாக அறிய முடிகிறது.

அதற்கு உதாரணமாக அனைத்து உயிரினங்களின் ஆண்/பெண் புறத் தோற்றத்திற்கென அமைந்த வண்ண வண்ண ஜிகர்தண்டா வேலைகளை வைத்துப் பார்த்தாலே தெரியும். இதனில் குறிப்பாக பறவைகளில் ஆண் சற்றே தூக்கலான நிறங்களையும், குரல் வளத்தையும் பெற்று தனக்கு போட்டியான மற்றொரு ஆண் பறவையிலிருந்து பெண்ணின் பார்வையை தன்னிடத்தே கவர்ந்து வெற்றி கொள்ளும் கட்டாயத்திலிருக்கிறது.

போலவே, விலங்குகளில் எது அதிகமான போராட்டத் திறனையும், உடல் வலிமையையும் பெற்றிருக்கிறதோ அது அதிகப்படியான பெண்களை பெற்றுக் கொள்கிறது. இதனில் கூர்ந்து கவனித்தால் அது மலர்களிளாகட்டும், விலங்குகளிளாகட்டும் பெண் நடுநயமாக நின்று தன்னுடைய சுட்டு விரல் அசைப்பில் தனக்கு எது போன்ற திறனைக் கொண்ட, வலிமை மிக்க வாரிசை அடைந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கும் பீடத்தில் அமர்ந்திருப்பதாக இருக்கும்.

என்னுடைய சிந்தனை இந்த அடிப்படையின் புரிதலோடு இந்த மலர்களின் இனப்பெருக்க அமைப்பை காண தலைப்பட்டது. எப்படியெனில், ஒரே ஒரு சூல்வித்திலை சுற்றிலும் ஏன் அத்தனை ஆண் இனப்பெருக்க ஸ்டேமெனை நிறுத்தி வைத்திருக்கிறது? இது இனவிருத்தி செய்யும் வாய்ப்பை அதிகரிக்கவே அப்படியான ஓர் இயற்கையமைவு என்றாலும், எப்படி ஆஃப்ரிகா சமவெளிகளில் இன்றளவும் விலங்குகளிடத்தில் போட்டியின் அடிப்படையில் இயற்கை தேர்ந்தெடுப்பு நடைபெறுகிறதோ அதனே இந்த ஒரு மலர் உலகத்திலும் நடைபெறுகிறது.

இங்கே ஒரு திருகல், ஒரு சூல்வித்திலையை சுற்றிலும் நிற்கும் அந்த ஸ்டெமென்களை பார்க்கும் பொழுது, நம் உலகில் ஆண்களின் இயல்பான பெண்களைக் கண்டதும் நடைபெறும் தலை திரும்பல்களுக்கான பரிணாமப் புரிதலை உள்ளடக்கியிருக்கிறதாகப் படுகிறது :) ... இது ஒரு மனித ஆணின் தவறல்ல பரிணாம உயிரிய நிரலிப் பரப்பல். முயன்று சிறந்த மரபணுக்களை அடுத்த பரிணாமச் சக்கரத்தில் ஏற்றி வைக்க இயற்கை அமைத்து வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு.

அதனால் பூக்களே எங்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள் :)


Saturday, September 22, 2012

கூடங்குளம் - ஒரு சிலந்தியின் செய்தி: With Photos!

நம்மைச் சுற்றியும் எப்பொழுதும் எங்கேயும் விந்தையான விசயங்கள் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது. அது போன்ற நிகழ்வுகள் யாவும் பெரிய இயக்கங்களாக நம் முன்னால் விரிந்து காட்சி தர வேண்டுமென்று எதிர்பார்ப்பது நுட்பங்களை அவதானிக்க தவறிய சிறு மூளை செயல்பாட்டில் மரத்தன்மை ஊறிப் போனதே காரணம் என்பதனை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள இன்று எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது.

அது ஒரு சிறு நடை. வீட்டின் முன் புறமாக நடந்து இடது பக்கமுள்ள சுவற்றினையொட்டி நின்று மரத்தின் வேர்களை பார்த்து கொண்டிருப்பதெனக்கு பிடிக்கும். அப்படியான ஒரு பயணத்தில் என் கண் முன்னால் கையொப்பம் சிலந்தி (Signature Spider) ஒன்று நெடுக்காக ஓடிய கேபிளுக்கும் அருகாமையே இருந்த புதருக்குமாக ஒரு வலையை தனக்கேயுரிய சிறப்பானதொரு வடிவமைப்பில் பின்னிப் பரப்பி இருந்தது.



கவனிக்காது அதனைப் பிளந்து கொண்டு நடக்க இருந்தவன் சற்றே தமாதித்து கண்களின் குவியத்தை நெருக்கி கொண்டுவர மரத்துப் போன புலன் விலகி, அதன் பிரமாண்டம் கண்ணில் சிக்கிக்கொண்டது. அங்கயே நின்று கவனித்து கொண்டிருக்கையில் அதனைப் பற்றிய விரிவான கட்டுரையொன்று என் மன 70mmல் விரிய ஆரம்பித்தது. திரும்ப நகர்ந்தவன், அதிர்ந்து கையொப்ப சிலந்தின் தவத்தை எனது மனச் சிந்தனை சப்தம் கலைத்து விடாமலிருக்க மிக மெதுவாக எனது எண்ணத்தை உள்ளே வைத்து வெடித்துக் கொண்டுடே நகர்ந்து மீண்டும் புகைப்படக் கருவியுடன் சிலந்தி வீட்டின் முன் வந்து நின்று கொண்டேன்.

இப்பொழுது காற்றின் விசை எங்கள் இருவரின் நோக்கத்தையுமே கேள்விக்குறியாக்கியிருந்தது. கையொப்பச் சிலந்தி ஊஞ்சலில் இறுகப்பற்றிக் கொண்டு அலறி அனுபவித்துக் கொண்டே முன்னும் பின்னுமாக சென்று வரும் ஒரு சிறுமியைப் போல, தன் வலையின் வலிமையை கவனித்துக் கொண்டே ஆடிக்கொண்டிருந்தது. நானோ எனது புகைப்படக் கருவியின் அத்தனை குப்பிகளையும் திருகி கிடைக்கும் வெளிச்சத்திற்கேற்ப சிலந்தியி்ன் தெளிவான படத்தை கொண்டு வந்திருக்கும் பொழுது முன்னும் பின்னுமாக நகர்ந்து சோதனை செய்து கொண்டிருந்தது, காற்று.



அதற்கும் சற்றே சளைத்தவன் நானில்லை என்று மேகமும் அவ்வப்பொழுது சூரியானரை மறைத்தும், வெளிக்காட்டியுமென அடுத்த ரோதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தது. எனக்கும் அந்த சிலந்திக்குமான இடைவெளி ஒன்றரை அடிதான் இருந்திருக்க முடியும். இடையில் கொசுக்கள் வேறு என்னிடம் அளவற்ற சாப்பாடு கேட்டுக் கொண்டிருந்தது. பகிர்ந்து கொள்வது கருணை மிக்கது என்று கேள்விப்பட்டிந்ததால் சரி சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று அரை டவுசர் போட்டு விட்டுவிட்டேன்.

இத்தனைக்குமிடையே அந்த சிலந்தி ஒரு அற்புதமான விளையாட்டை நிகழ்த்தி காண்பித்தது. இத்தனை போராட்டத்தையும் ”நீ சந்திப்பது ஒன்றுமல்ல” என்று கட்டியம் கூறி நின்றதாக அமைந்ததால்தான் இந்த கட்டுரையே உங்களுக்கு.

அப்படியாக காற்று வீசியதால் ஒரு இலையொன்று அதன் வலையின் மீது சிக்கி தொங்க ஆரம்பித்தது. அதனைக் கவனித்த சிலந்தி உடனே இரண்டே ஸ்விங்கில் அதனிடம் சென்று ஒவ்வொரு இழையாக அறுக்க ஆரம்பித்தது; மேலும் கீழுமாக நகர்ந்து. தொடர்ந்து நானும் எனது புகைப்பட செட்டப்பை மாற்றி மாற்றி முடிந்தளவிற்கு பதிந்து கொண்டேன். முற்றுமாக அதனை எடுத்து பொடீர் என்று கீழே போட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்தது.


அதன் உடனடி நடவடிக்கையை கவனித்தவன் மனதில் ஓடியது வீட்டில் சிறு சிறு ஓட்டை உடைசல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் அலட்சியம் காட்டி மொத்தமாக செலவு செய்து சரி செய்து கொள்ளும் மனப் போக்கில் இருக்கும் எனக்கு இந்த சிலந்தியின் உடனடி இயக்கம் எதனையோ சொல்லிக் கொண்டிருப்பதாகப்பட்டது. உடனே மனம் திருந்திய மணவாடு ஆகிவிட்டேன் என்று புரிந்து கொண்டிருக்க மாட்டீர்கள். படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எனக்கொள்க!





இலையை தனது தேவையான இழைகளை அகற்றி அதன் கனம் மொத்தமும் தனது வீட்டை சிதைத்து விடாமலிருக்க நடத்திய அதிரடி நடவடிக்கையில் வெற்றியடைந்த சிலந்தி - புகைப்படத்தின் வாயிலாக...







இந்த அவதானிப்பின் நீதி- வரும் முன் காப்போம். கூடங்குளம் மக்களுக்கு வந்திருக்கிற இந்த விழிப்புணர்வு ஃபுக்கிஷிமா அணு உலை விபத்திற்கு பின்புதானே என்றும், ஒப்பந்தம் போட்டு அடிக்கல்லும் நட்டு இந்தனை கோடிகளை அரசியல் சாணக்கியர்கள் பிரித்துக் கொண்டது போக மிச்சத்தை அங்கே கட்டடம் எழுப்பி 24/7 கரண்ட் வாங்க, நாளை அந்த உணு உலைக்கு ஏதோ நிகழ்ந்தாலோ அல்லது எப்படி அந்த அணு உலை பயன்பாடு நாற்பது வருடங்களுக்குள் முடிந்து அதற்கு பின்னான அணுக் கழிவுகளை 10 ஆயிரம் வருடங்கள் வைத்து பாதுக்காப்பதைப் பற்றியோ கவலை இல்லை என்று கூறுபவர்களுக்கும், ஒப்பந்தம் போட்டு பணம் செலவு செய்தாகிவிட்டது வரும் காலத்தில் மூன்று மாவட்டங்களை பலி கொடுத்தாலும் தகும் என்று சகித்துக் கொள்ள தயாராக உள்ளவர்களுக்கும் இந்த சிலந்தி ஏதோ சொல்ல வருகிறது என்றே தோன்றவும் செய்கிறது.

மேலும் அணு உலை சார்ந்த பழைய கஞ்சி குடிக்க-


1) ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!!

2) கூடன்குளமும் அணுக்களின் நண்பர் அப்துல் கலாமும்...

Sunday, April 08, 2012

வசந்த கால ஒளிச் சிதறல்கள்: Lake Photography - 1

ஓர் ஐந்து நிமிட நடை என் வீட்டருகே எனக்கு இத்தனை புதிதான கண்ணாடி படிகங்களலான ஒளிச் சித்திரங்களை நிரந்தரமாக சுருட்டிக் கொள்ள உதவிச் சென்றது.

கற்றதை, பெற்றதை அதன் மூலமாக அறிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ளவே இந்த மொழியும், அதற்கான எழுத்து குறியீடுகளும் தோன்றி இருக்கக் கூடுமென்ற அடிப்படையிலேயே இங்கே நான் கண்ட ஒளிக் காட்சிகளை பதிந்து வருகிறேன்.

இப்பொழுது இங்கே வசந்த காலம். சூரியனாரின் காத்திரமான ஒளியும் கூட புதுப் பெண்ணாக பளிச்சிட்டு நிற்கும் மரங்களின் பசுமையின் மீது படும்பொழுது அந்த வெளிச்சம் வெட்கி மேலும் அழகூட்டி நிற்கிறது.


மரங்களுக்கும் கண்ணாடி காமிக்கும் முயற்சியில்...


பெரியவன் ஒருவன் அப்படியே நெடுக விழுந்து அழகிற்கு அழகு சேர்த்து, நீந்திச் செல்லும் பறவைகளுக்கு ஒய்வெடுக்கும் சுமைதாங்கியாகிப்போனான் ...



தூரத்தில் தெரியும் மரங்களுக்கு டார்ச் அடிச்சுப் பார்க்கும் சூரியனார். அப்படியே ஆயில் பெயிண்டிங்காக தூரிகை இல்லாமல் வரைந்து காட்டும் வேளையில்...

#1


#2


மேகத்திற்கு பட்டுடுத்தி, தரையிறக்கி கண்ணாடியிலும் பொதித்து...

a)


b)


பளிங்கித் தரையில் சிறிதே தண்ணீர் தெளித்து வெளிச்சத்தின் ஊடாக காணும் பொழுதாக...

c)


d)


e)


இந்த காட்சிகளை மிக அருகிலேயே ஏகாந்தத்தின் உச்சத்தில் அமர்ந்து பருக காத்திருக்கும் ஓர் அமைதிக் குடில்...


Related Posts with Thumbnails