Showing posts with label வன்முறை. Show all posts
Showing posts with label வன்முறை. Show all posts

Saturday, January 09, 2021

அமெரிக்க மக்களாட்சி உலகிற்குச் சொல்லும் செய்தி என்ன?

 மனிதனுக்கு புகழ் போதையும், கர்வமும் கூடவே கட்டற்ற அறியாமையும் ஒன்றித்து தனக்கு தகுதியற்ற அதிகாரமும் கிடைத்துப் போனால் என்னவாகும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அதிபர் ட்ரம்ப். இவர் உலகமே அன்னார்ந்து பார்க்குமிடத்தில் இருக்கும் இத்தனை பெரிய மக்களாட்சி அரசாங்கத்திற்கு அதிபரானது ஓர் விபத்து என்றால் மிகையாகாது.

கடந்த நான்கு ஆண்டுகளும் இவர் மைனாரிடிகள் பொருட்டு காட்டி வந்த வெறுப்பு என்பது சொல்லிலடங்காதது. பிறக்கும் போதே வாயில் வெள்ளி ஸ்பூனூடன் பிறந்ததாலோ என்னவோ பிற மனிதர்கள் பொருட்டான கரிசனம் என்பது மருந்துக் கூட இவரிடம் காண முடியாது.


இப்பொழுது தேர்தலில் தான் தோல்வியடைந்தாலும் அதனை நாகரீகமாக ஏற்றுக் கொண்டு நகரும் பண்பு இல்லாத குணத்தால், தான் ஏற்கெனவே ஊட்டி வைத்திருந்த நச்சுக் கூட்டத்திற்கு தூபம் போட்டு உலகமே பார்த்து சிரிக்கும் வகையில் ஒரு கூத்தை அரங்கேற்றி கோமாளி ஆகி நிற்கிறார் உலகரங்கில்.இவரின் பேச்சும் ரசனையும் கொஞ்ச கொஞ்சமாக ஊர்ப்புறம் வாழும் படிக்காத வெள்ளையினத்தவரையும், படித்திருந்தாலும் பிற இன மக்களின் மீது வெறுப்பை வைத்திருப்பவர்களுக்கும் மனதிற்கு நெருக்கமான மனிதராக்கிவிட்டிருந்தது. நான் வாழும் மாகாணத்தில் பார்க்க பண்பாடான மனிதராக இருக்கிறாரே என்று ட்ரம்ப் உதிர்க்கும் வார்த்தைகளை வைத்து, யேய், என்னப்பா இப்படியெல்லாம் பேசுகிறார் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பவர்களே அதிகம். அந்தளவிற்கு வெறுப்பு என்ற நச்சை ஊட்டி வந்தார்.

இது அமெரிக்காவிற்கான அவமானமாக நான் பார்க்கவில்லை. ஒரு முட்டாளின் ஆதி அந்தம் தெரியா தற்குறித்தனமான ஒருவரிடத்தில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதையே காட்டக் கூடிய நிகழ்வாகப் பார்க்கிறேன். அந்த இடம் தாமஸ் ஜெஃப்பர்சன், லிங்கன், ரோசவெல்ட், கென்னடி போன்ற சிறந்த மனிதர்கள் வந்து போன இடம், இன்று இப்படி ஒரு மனிதர் அந்த இடத்தை கடந்து சென்றிருக்கிறார்.

ட்ரம்ப் அடித்த அத்தனை அலுச்சாட்டியத்தையும் இவருக்கு முன்னால் வந்து போன
அந்த மனிதர்களின் மாண்பே மக்களாட்சியின் பொருளை காப்பாற்றி இன்று கரை சேர்த்திருக்கிறது. இதுவே உலகத்திற்கு அமெரிக்காவின் ஓர் ஒழுங்குடன் ஒழுகும் டெமாக்ரசி சொல்லும் செய்தி!

இதுவே ஒரு நாள் இந்தியாவிற்கும் டெஸ்டிங் டைமாக வரலாம். இப்பொழுது அந்த திசையை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். நல்வாய்ப்பாக அமெரிக்காவின் ஊடகங்களும், நீதித் துறையும் இந்திய அளவிற்கு சிதைந்து போய் விடாமல் இருந்ததால் இன்று அமெரிக்க டெமாக்ரசி மிக்க சேதாரமில்லாமல் மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், நம் நாட்டில் அதற்கும் வாய்ப்பில்லை. இருண்ட காலம் நமக்கு முன்னால் காத்திருக்கிறது. மீட்டெடுப்பு என்பது மற்றுமொரு சுதந்திர போராட்ட நிகழ்வைக் காட்டிலும் மிக்க உழைப்பை கோரி நிற்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

Friday, March 15, 2019

வெறுப்பின் எச்சமே அழிவு: Hatred Is Self-destruction


நியூசிலண்ட்ல இரு வேறு துப்பாக்கிசூடுகள். ஆனா, இரண்டிற்கும் அடிப்படை காரணம் ஒன்றே. அது வெறுப்பு! மனித மனம் எப்போதும் எதிர்மறை எண்ணங்களின் மீது அதீதமான பிடிப்பு உள்ளதைப் போல நடிக்கும். இருப்பினும் ஓர் ஓரத்தில் நம்முடைய எதிர் முனையில் இருக்கும் நேர்மறை நாட்டாமையின் மீது கண் வைத்தவாரே, முதலில் அது ஒரு சிறு உவப்பு இல்லாத விசயத்தை செய்து பார்க்கும்.
நாம் உடனே விழித்துக் கொண்டு அதட்டி அது இருக்க வேண்டிய இடத்தில் சுருட்டி அமர வைத்து விட்டால் விளைச்சல் நிலத்தில் ஊடுருவும் களைகள் பெருகி பயிரின் விளைவு குறைவாகிவிடுவதைப் போல குறைந்து விடும்.
தவிர்த்து, எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து கேட்டும், பார்த்தும் தவறான வாசிப்புகளும் செய்து வந்தால் அது காட்டுத்தீ போல மட்டுக்குள் கொண்டு வர முடியாத வாக்கில் வளர்ந்து காடு, மேடு, பள்ளம், குழந்தை, முதியோர், நான், நீங்கன்னு பார்க்காம எல்லாரையும் அழித்து விடும்.
இந்த ஐந்து வருட ஆட்சியில் இந்தியா முழுமைக்கும் வெறுப்பு விதைக்கப்பட்டு மெதுவா அது அனைவர் புத்தியிலும் ஊடுருவச் செய்யப்பட்டிருக்கிறது. அது கொளுந்து விட்டு எரிந்து வாழும் வீட்டையே எரித்து சாம்பாலாக்கிக் கொள்வதற்கு முன்னால் விழித்துக் கொண்டால் அனைவருக்கும் நலம்.
இந்த வெறுப்பு, தூய்மை வாதம் பேச வைக்கிறது. குறுகிய சாளரங்களை திறந்து விடுகிறது. அவன் வடுகன், முஸ்லீம், க்ரிஸ்டியன், தாழ்த்தப்பட்ட சாதி என்று இல்லாத ஒன்றை வைத்து அடையாளப் படுத்தி குறுக்கிக்கொள்ளச் செய்கிறது. இன்று ஒரு குழுவை, ஓர் அடையாளப்படுத்தி அவனை அதற்குள் குறுக்கும் அதே மனது நாளை வேறொரு குழுவை இன்னொரு பாட்டிலிலுக்குள் அடைத்துப் பார்க்காது என்று என்ன நிச்சயம்.
நான் தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டே இரவோடு இரவாக தங்களை தற்காப்பு செய்து கொள்வதற்குக் கூட ஆற்றல் இல்லாத ஒரு தாயையும், இரண்டு குழந்தைகளையும் இரத்தச் சகதியில் வெட்டிப் போட்டு விட்டு தலை மறைவாகி விடுபவர்களும் அதே தமிழர்கள் தான். காரணம் உயர் சாதியாம், அவர்கள் தாழ்ந்த சாதியாம். இந்த லட்சணக் கட்டையில் அரசாட்சியை அவர்கள் கையில் கொடுத்து விட்டால் அனைவரும் ஒரே இரவில் ஒரு தாய் பிள்ளைகளாக ஆகி விடுவார்களாம். இதெல்லாம் என்ன மாதிரியான கதை?
பெரியாரும் வந்தேறி, கலைஞரும் வந்தேறி, சு. வெங்கடேசனும் வந்தேறி என்றால் நீ மட்டும் அப்போ யாரு? நீ உன்னுடய நிலப்பரப்பையும் அடையாளத்தையும் குறுக்கக் குறுக்க உன்னுடய இருப்பையே கேள்வி குறியாக்கி விடும் இயற்கையே அது தெரியுமா உனக்கு. வனத்தில் பரந்து விரிந்த காடுகளில் மட்டுமே ஆரோக்கியமான வழியில் பல்லுயிர் பேணல் நடந்தேறுகிறது.
இலங்கையில் நடந்த இனப்போரை காரணம் காட்டுகிறார்கள். அதற்கு பின்னான வரலாற்று சூழ்ச்சி அறிவாயா? அதே பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் நீ சாதிப் பெருமை பேசி வடுகன், வந்தேறி என்று உன்னுடைய இனத்தின் அடையாளத்தையே குறுக்கி அதே பாதையில் செல்லத் துணிகிறாயா? நீ யாருக்கு இரையாகிக் கொண்டிருக்கிறாய் என்று சற்று நிதானித்துப் பார் உண்மை விளங்கும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுதான் நம்முடைய மந்தை கூட்டத்திற்கு நடந்தேறுவது. கூட்டத்தை சிதறடித்தால் வேட்டையாடும் ஊண் உண்ணிக்கு வேட்டையாடல் எளிது. எளிய மூளை உடனடி பயன்பாட்டினை எண்ணித் திளைக்கிறது. திறனுடைய மூளை நீண்ட கால அறுவடையின் மீது கண் வைக்கிறது. நீ யாராக இருக்க வேண்டும்?
ஒரு ஜனநாயகத்திற்கு சீமான், வேல்முருகன் போன்றவர்கள் பேசும் அரசியலும் தேவைதான். அது சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் ஊறுகாய் அளவோட நிப்பாட்டிக் கொள்வது நல்லது. மிஞ்சினால் நஞ்சாகி, ஓர் இலங்கைப் போரைப் போன்று வீட்டிற்கே வரவழைத்து கொள்ளும் அனைத்து சாத்தியங்களையும் கொண்டது என்பதை உணருங்கள்.
பெரிய எண்ணங்களை, வெறுப்பை விதைவிக்காத, நிதானமாக நின்று முடிவெடுக்கும் மனித மாண்பு போற்றுபவர்களை தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றிற்கும் தெருவில் நின்று போராட்டம் நடத்தும் நிலையிலிருந்து மாறி, பதட்டமான சூழலிலிருந்து வெளிவந்து அனைவரும் மென்மேலும் ஒரு மகிழ்வான சமூதாயத்தை பெற்று வாழ்க்கை அமைதியாக நகர அது வழி நடத்தும்.

Sunday, July 13, 2014

கற்கால மனிதனும் நவீன ஏப்களும்: Planet of the Apes

கொஞ்சம் எதிர்பார்ப்புடன் சென்ற படமிது "The dawn of the planet of the apes." மற்ற பாகங்களைக் காட்டிலும் இந்த பகுதி மிக நெருக்கமாக உணரவைத்தது! அதற்கான காரணமாக நான் எடுத்துக் கொண்டது, இன்றைய நாளில் நம்முடன் வாழும் போனோபோ வகை சிம்பன்சி வாலில்லா குரங்குகளிலிருந்து படத்திற்கென ரொம்ப வித்தியாச படித்தி காட்டி விட எத்தனிக்காமல், அப்படியே அதன் உடல் புற அமைப்பிலும் முக வெளிப்பாடுகளிலும் வித்தியாசம் காட்டாமல் அமைத்துக் காட்டியது.  மேலும், இன்றைய உலக அரசியல் மேடையில் மேற்கத்திய கலாச்சரம் பிற இனங்களின் மீது கட்டவிழ்த்து விடும் உளவியல் போர் குயுக்த்தியும் சற்றே கூர்ந்து கவனிக்க வைத்தது.

ஓபனிங் சீன் வால்பாறை மழைக்காடுகளில் சிங்கவால் குரங்குகள் தலைக்கு மேலாக கரும் மேகமென பரவித் திரியும் ஓர் உணர்வை, இந்த படத்தில் வரும் ஏப்கள் தாவித் திரியும்படியாக காட்சியாக்கிய கோணம்,  பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இருப்பினும் படத்தின் பிற பகுதிகளில் அப்படியாக இல்லை. வெறும் விடியோ கேம் பார்ப்பதையொத்து அமைந்து போனது மிக்க துரதிருஷ்டவசமானது.

ஏப்களின் தலைவனாக வரும் சீசர் துப்பாக்கி நொறுக்கும் காட்சி மனிதன் முன்னிருத்தி வரும் வன்முறை கலாச்சாரத்திற்கு நுட்பமாக வைக்கப்பட்டிருக்கும் ஓர் அழுத்தமான குறியீடு.

இந்த படத்தை என்னால் இரு வேறு பரிணாம உச்சத்திற்கு வரத் துடிக்கும் இனங்களுக்கிடையே நடக்கும் தப்பிப்பிழைப்பதற்கென நடைபெறும் போராட்டமாக, ஒரு பரந்த பார்வையில் மட்டுமே வைத்து பார்க்க முடியவில்லை. சமகாலத்தில் நடந்தேறும் மதம், இன வேறு பாடுகளைக் கொண்டு நம் ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கும் குறுகிய வட்டத்திற்குள்ளாகவே வைத்துப் பார்க்கத் தூண்டும் விதத்தில் அமைந்தது.

இன்னும் சுருக்கி கூறி சிறிய திரையில் விரித்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமானால், மேற்கத்திய நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளின் மீதாக கட்டவிழ்த்து விடும் உளவியல் போராகவும் பார்க்கத் தூண்டுகிறது. உதாரணமாக, இந்த ஏப்கள் தங்களுக்குள்ளாக மொழியின் ஊடாக விசயங்களை பேசி புரிந்து கொள்வது, ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடுவது போன்ற காட்சியமைப்புகள் இன்றைய பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் இன பிரச்சினையை வைத்து பார்க்கும் படியாக எச்சரித்து செல்வதாக புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு தங்களின் நியாயமான காரணங்களுக்காக இந்த ஏப்கள் போராடத் தயாரானாலும், துப்பாக்கிகளை விட அதி நவீன கன ரக ஆயுதங்களைக் கொண்டு கொத்து கொத்தாக எங்களால் உங்களை கொன்றொழிக்க முடியும் என்ற அபாய மணியை அழுத்தமாக இது போன்ற சிறு இனங்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான பிரச்சாரமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மனிதன் எப்படி துரோகங்களையும், வெறுப்பையும், தன்னை தக்க வைத்துக் கொள்ளும் முன் அவசரத்தன்மையில் கண் மூடித்தனமாக மன சாட்சி அற்று இயங்குவதும், முன் கோபியாக தனது மனித இனத்தையே அழித்துக் கொள்ளும் பாதையில் நடக்கிறான் என்பதனை இந்த படத்தில் ஏப்களை விட்டு கருத்து சொல்ல விட்டிருக்கிறார்கள்.

ஏப்கள் வன்முறையை விரும்பது கிடையாது. ஏப்கள் தங்களுடைய இனத்தில் ஒருவரையே கொல்லாது. ஏப்களின் தளபதியை நோக்கி சீசர் கூறும் ஒரு வசனம் - மனிதர்களிடமிருந்து நீ கற்றுக் கொண்டது கோபமும், வெறுப்பும் மட்டுமே என்று ஒட்டு மொத்த தற்கால மனித இனத்தை தங்களுக்கும் பின் தங்கியவர்களாக கூறி இந்த படம் முன் நகர்கிறது.

Saturday, June 21, 2014

பெண் எழுத்தாளர்களும் எழுத்துலக பிதாமகர்களும்...

புக்கர்ஸ் ப்ரைஸ் வெற்றியாளர் சாரு தனது சக புக்கர்ஸ் வின்னர் அருந்ததி ராயை நோக்கி இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

...//ஆனால் சல்மான் ருஷ்டி அந்த நாவலைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அருந்ததி ராய் எழுதியது ஒரே ஒரு நாவல்.  அதுவும் பால்ய காலம் பற்றிய சுய சரிதை.  உலகப் புகழ்.  அதற்கு மேல் புதினமே எழுதவில்லை.  ஏனென்றால், ஒருவருக்கு ஒரு பால்யம்தானே இருக்க முடியும்? இப்படி இருக்கிறது இந்திய ஆங்கில இலக்கியம். //...

இதனையொட்டியும் வேறு சில பெண் படைப்பாளிகள் சார்ந்த தனது அக்கறையான கேள்விகளுக்கும் அவரது கட்டுரையை வாசித்து தொலைய எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்.

*************

இந்த ஐம்பதுகளை தாண்டிய இரண்டு எழுத்துலக பிதாமகர்களும் கம்பியூட்டர் கைநாட்டுகளாகவே இருந்து தொலைத்திருக்கலாம். இன்னும் தான் மரணிப்பதற்கு குறைந்த பட்சம் நற்பது வருடங்களேனும் இருக்கிறது. அதற்குள் ஏதாவது ஒரு விருதோ குருதோ கிடைத்து விடாமலா இருக்கும். எதற்கு இந்த பிழைப்பு!

இங்கு யாராவது யாரையாவது வந்து எழுத்து தர நிர்ணயம் செய்து தாருங்கள் என்று இந்த பெரிசுகளை கேட்டு வீட்டுக் கதவு தட்டித் நின்றார்களா? தெரியவில்லை. இந்த இணையமும், கட்டற்ற பெரு வெளியும் ஓரளவிற்கு அஞ்சி ஓரத்தில் நின்றவர்களுக்குக் கூட தங்களுக்கு தோன்றிய எண்ணங்களை ஏதோ ஒரு படைப்பு வடிவில் எழுதி வைத்து விட்டு நகர்ந்து செல்லும் ஒரு திறப்பை கொடுத்திருக்கிறது.

அது யாருக்கு பிரயோசனமாக நிற்கிறது நிற்கவில்லை என்பதும், காலம் கடந்தும் நிற்கிறதா அல்லது மக்கித் தொலைத்து ஆடிக் காத்தில் அள்ளிச் செல்கிறதா என்பது பொதுவானது. காலம் வடிகட்டி கொடுக்கப் போவதில் உங்களுக்கும் அவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாகப் படவில்லை.

இருப்பினும் நீங்கள் செயல் ஊக்கியாக, கர்ம வீரராக, சாதித்து முடித்த அருட்பொரும் ஜோதியாக இருந்து அந்த எதிர் பாலினத்தை கை கொடுத்து இலக்கிய உலகில் அடர்த்தியாக எழுதி உலக அரங்கில் சாதிக்க வேண்டி கொளுத்தி போடுகிறீர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட, அதற்கான மொழி இதுவல்ல. இது ஒரு நல்ல ஆசிரியனுக்கு, மனிதர்களின் உளவியல் படிக்கத் தெரிந்த மனிதருக்கோ அழகல்ல.

உடலின் மேடு பள்ளங்களை வைத்தே முன்னுக்கு வருகிறார்கள் என்ற எளிமையான புரிதலோடு எல்லாவற்றையும் குறுக்கலாக ஒரே சீசாவிற்குள் வைத்து பார்த்த பிறகு எப்படி வேறு கோணத்தில் எந்த ஒரு படைப்பையும் நம்மால் கடந்து சென்று பார்க்க முடியும்?

இதில் அந்த முட்டைகோசு தலையர் அருந்ததி ராயை கையை பிடித்து இழுக்கிறார். நீங்கள் இருவரும் எந்த கிராமத்தில் இல்லை இல்லை எந்த கிரகத்தில் வசிக்கிறீர்கள் என்பதாவது அவருக்குத் தெரியுமா?

யார் எதனை எப்பொழுது எழுத வேண்டும் வருடத்திற்கு எத்தனை பக்கங்கள் எழுத வேண்டும் என்று சுத்தி வந்து கேட்கும் அபத்தக் கேள்விகளுக்கு யார் உங்களுக்கு பதிலுரைப்பது.

அருந்ததி ராய் ஒரு நாவல் மட்டுமே எழுதினார் இல்லை மாதத்திற்கு ஐநூறு பக்கங்கள் எழுதுகிறார், அது அவரின் தேர்வு. தன் வாழ்க்யை எப்படி வாழ வேண்டும் என்று எடுக்கும் முடிவு. ஆனால், உங்களைக் காட்டிலும் அவர் அந்த ஒரு புத்தகத்திலேயே நீங்கள் எதனை கசப்பாக நினைத்து பாரா முகம் காட்டி வரும் ஒரு விடயத்தையும், மேலும் முக்கிக் வெளியே எடுக்க திணறிக் கொண்டிருக்கும் ஒரு சமூக அவலத்தை உலகத்திற்கே தோலுறித்துக் காட்டி தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டார்.

இதற்கு மேல் நீங்கள் முக்கிக் கொண்டிருக்கும் அந்த கற்பனை கட்டுக்கதைகளை போன்று கொடுக்க மனமின்றி தற்காலத்தில் நிகழும் சமூக பிரச்சினைகளுக்கு நேரடியான தலையீடுகளில் காலம் தள்ளி வருவதும் அனைவரும் அறிந்ததே. எனக்கு என்னவோ உங்கள் இருவரைக் காட்டிலும் அவர் தைரியசாலியாக கர்ம வீரராக படுகிறார்.

அப்படி என்ன உங்கள் இருவருக்கும் அவரின் மீது அப்படி ஒரு பார்வை. உங்களுடைய கேள்விகளை ஏன் நேரடியாக அவருக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வழிந்து கொள்ளக் கூடாது?

முட்டைக்கோசுக்கு க்யூபா என்பதனை கூபா என்பதாகவே வாசிக்க வேண்டும் என்று எப்படியோ தெரிய வர அதனை தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் சென்றே ஆக வேண்டும் என்று தன் கண்கள் விரிய தான் எழுதி வரும் குப்பைகளில் இது போன்ற டுபாக்கூர் விவரணைகளோடு பக்கம் நிரப்பும் ஒருவருக்கு எதுக்கு புக்கர்ஸ் மேலே எல்லாம் கண்ணு.

பக்த கோடிகள் ஒரு நூறு பேரை வைத்துக் கொண்டு அவர்களுக்கு மட்டுமேயாவது எழுதி உள்ளரயே வெடித்துக் கொள்வது நல்லது.

இந்த எழவை எல்லாம் எதுக்கு இணையத்திலும் ஏத்திக் கொண்டு.
எப்பொழுதுதாவது வாழ்க்கையில் ஒரே ஒரு நல்ல படைப்பையாவது பால் வேறுபாடுகளை, தான் டவுசர் போட்ட பருவத்தில் தப்பும் தவறுமாக கவனித்து வைத்திருந்த கட்டுப் பொட்டி தனங்களிலிருந்து வெளி வந்து தரமான படைப்பை நிகழ்த்தி விடுங்கள்.  நான் வாசிக்கா விட்டாலும் என் பேரனாவது வாசிக்கட்டும்!

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் - படத்திற்கான விமர்சனமல்ல!


இந்த கட்டுரை பேசப்போவது கமல்ஹாசனின் விஸ்வரூபமான ”கேளிக்கை” படத்தை பற்றிய விமர்சனமாக இல்லை.  அந்த படத்தை இப்பொழுது என்னால் பார்க்கக் கூடிய வாய்ப்புமில்லை.  தேடி ஓடி பார்க்கும் அத்தனை தீவிரமான சினிமா ரசிகனுமில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் நடக்கும் கட்டிப் புரதல்களை கண்ணுற்று அங்குமிங்குமாக ஓடி என்னுடைய பார்வையை வைத்தும் மனது கேக்காததால் சில விசயங்களை எனக்கு நானே தெளிவு படுத்திக் கொள்ள இங்கு பதிந்து வைக்கிறேன்.

நான் கமலைப் பற்றி பல பதிவுகளில் சிலாகித்தும் அவர் அப்படித்தான் என்ற தனிமனித வெளிப்பாடுகளை பாராட்டியும், அவர் திரையுலகில் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக் கொள்ள எடுக்கும் மெனக்கெடல்களையும் பாராட்டியே எழுதி வந்திருக்கிறேன். அப்பொழுதும் தனியாகவே நின்றதாக ஓர் உணர்வு, இப்பொழுது இந்த படத்தின் சர்ச்சையை ஒட்டியும் தனித்தே இருப்பதாக ஓர் உணர்வு! ஆனா, இன்று அவருக்கு சேர்ந்திருக்கும் கூட்டம் பெரும் கூட்டம். இங்கேதான் அவர் நின்று நிதானித்து தனது மேற்கொண்ட பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒருவர் இரண்டு வழிகளில் ஒரு குன்றின் உச்சத்தை அடையாளம். ஒன்று, பழனி மலையில் ஏறுவதற்கு விஞ்ச் ஏற்பாடு செய்து அலுங்காமல், குலுங்காமல் போய் ஆயிரம் ரூபாயை சிறப்பு தரிசனத்திற்கென யார் கையிலாவது வைத்து திணித்து எல்லாரையும் குறுக்காக நடந்து மிடுக்காக போய் அந்த வேலவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு வரலாம்.  இல்லையென்றால், அரைநாள் முழுக்க வரிசையில் நின்று தனக்கு முன்னாலும், பின்னாலும் இருப்பவர்கள் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டே ஒவ்வொரு அடியாக முன்னேறி உண்மையான உள்ளொளி பெற்று கடைசியில் உச்சத்தை அடையாளம். அது அவரவர்களின் தேர்வு!

ஆனால், விஞ்சில் போவது சரட்டென்று ஏறி உச்சத்தை அடைந்து விடலாம்தான்.  ஆனால் படியேறி வரிசையில் நின்று போவதின் பல அணுகூலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டாமலே அது செய்து விடும்தானே! அதுவும் நல்ல இயங்கும் உடற் செயல் பாடுகளுடன் இருக்கும் ஒருவருக்கு. விஞ்சில் ஏறும் பொழுது இதுதான் உண்மையென்று பூமியில் நடக்கும் விசயங்கள் அறியாமல் போக நிறைய ஆபத்துகள் நமக்குள்ளேயே குவியும் வாய்ப்புகள் அதிகம் தானே?

இங்கே கமல் உலக ரசிகர்களின் பார்வையை நம் பக்கம் திருப்ப நம் ஊர்லயும் உலகப்பார்வை கொண்ட  ஒரு கலைஞன் இருக்காண்டான்னு உலகத்திற்கு எடுத்து இயம்ப வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் இருந்தால் அவர் ஆங்கிலத்திலேயே ஒரு படத்தை ஆஃப்கான், பாலஸ்தைன், நைஜீரியா போன்ற நாடுகளில் சுடச் சுட  உலக தீவிரவாதம் பற்றி பேசி இயக்கி எடுத்து பிறகு அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தால் ரொம்ப நன்மை பயக்கும் என் ஊருக்கும், உங்கள் ஊருக்கும். உலக தீவிரவாதத்தை வீட்டுவாதமாக உருவேற்றி காமிப்பது மிக்க அபத்தமானது, ஆபத்தானது. இந்த விஷ பரீட்சையை உலக மொழியில் நமக்கு கிஞ்சித்தும் 

சம்பந்தமே இல்லாத மொழியில், உடையில், தெருவில் இருந்து தொடங்குவதாக பேசி ஆரம்பித்தாரென்றால் இந்த கட்டுரைக்கே எனக்கு வேலையில்லை. ஆனால், நமது தெருக்களிலிருந்தும் நாம் இதனை வளர்த்தெடுத்து உலகத்திற்கு வழங்குகிறோம் என்ற சிறு எண்ண விதை விதைத்து அதனை இவரின் உக்கிர மெனக்கெடல் வழியாக வழங்கினால், நம்முடனே வாழ்ந்து வரும் பிற மனிதர்களை மென்மேலும் தனிமைப் படுத்துகிறோம் என்ற அடிப்படை அக்கறையுடன் இருப்பதாக படவில்லை.

உலக அரங்கில் இது வரையிலும் இந்தியாவிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட பூர்வீகமாக கொண்ட குடிமகன்களில் யாரேனும் தீவிரவாதத்தில் தோள் கொடுத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதுண்டா? வீட்டினுள் நடக்கும் பிரச்சினைகள் வேறு. ஆனால், அதனை பொறுப்பற்று, தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு நம்மை நகர்த்தி நமது வாழ்வு சூழலுக்கு தகுந்தாற்போல் தீர்வுகளை கண்டடைந்து கொள்வதனைத் தவிர்த்து, கேளிக்கையின் வழியாக உலக சென்றடைதல் நிகழ்த்துகிறேன் பார் என்று கிளம்பினால், கொள்ளிக்கட்டையால் தலையை பிராண்டிக் கொள்வதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது என்னால். அதிலும் இந்த கால கட்டத்தில்.

உலகிலேயே ரெண்டாவது பெரிய இஸ்லாம் வாழ் மக்களை உள்ளடக்கியது இந்தியா. நாம் ஒன்றும் அமெரிக்கா இல்லை. இங்கே நாம் இரண்டற பின்னி பிணைந்து கிடக்கிறோம். இருவரும் ஒத்திசைவுடன் இயங்குவதின் அவசியம் மிக நுண்மையாக மெதுவாக ஆழப் பதிக்கப்பட வேண்டியதின் அவசியம் உணருதல் ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நம்முடைய உடனடித் தேவை உள்ளூருக்குள் எப்படியாக அனைவருக்கும் எல்லாமும் கிட்டும் ஒரு நிலையை எட்டுவது என்பதாகத்தான் இருக்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக இங்கே வாழ்ந்து, உண்டு, வளர்ந்து, மடிந்து வாழும் அனைவருக்கும் கல்வியும், வேலையும் நீக்கமற கிடைப்பது போல ஒரு அடிப்படையான வாழ்வாதாரத்தை அமைத்து, எல்லாரையும் போல வாழ அனைவருக்கும் ஒருவாழ்வு அடிப்படையிலேயே கிடைக்க வேண்டிய சூழலை, ஒரு வாய்ப்பை அமைத்து கொடுப்பதே உண்மையானத் தேவை. 

அது போன்ற ஒரு பின்னணியில் வாழும் எந்த இந்திய குடும்பத்தவனும், வலியப் போயி டுப்பாக்கி தூக்குகிறேன் என்று அலையமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். ஏனெனில் நம் சமூக கட்டமைப்பு அப்படி அதற்கான ஊறல்கள் மனிதர்களை இப்படியாக நொதிக்க வைத்து தண்மை படுத்தி விடுகிறது என்ற அடிப்படை நம்பிக்கை கொள்ளல் வேண்டும். மாற்றம் சிறுகச் சிறுகத்தான் விதைக்க முடியும், அதுவே நீண்ட காலத்திற்கு நிற்கவும் செய்யும். இப்படியாகத்தான் இங்கே வாழ்வும் நகர்ந்து வந்திருக்கிறது. இத்துணை வெளிநாட்டு பிரவேசிப்பு, ஆக்கிரமிப்புகளுக்கு பின்னாலும்.

கிராமப்புரங்களில் இன்னும் எத்தனையோ இடங்களில் படித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள் தனது பெயர்களுக்கு பின்னால் இருக்கும் மத அடையாளத்தால் வேலைகள் மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் சென்று தனது இளமையை தொலைத்து, குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார்கள். அது போன்ற மனிதர்களில் பலரும் மீண்டும் ஊருக்கு திரும்பி கையிலிருக்கும் சொற்ப பணத்தில் தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு, மேற்கொண்டு தனது குடும்பத்துடன் ஒரு நிம்மதியான பொருளாதார தன்னிறைவை எட்டி வாழ முடியாத பட்சத்தில் இன்னும் பலரும் இருக்கிறார்கள். 

எங்கள் ஊரில் பெரும்பாலான மக்கள் கருவாட்டுக் கடையும், கறிக்கடையும், காய்கறி/பழக்கடைகளும், பேரீச்சை பழத்திற்கு இரும்பு வாங்கிக் கொண்டும், மிதிவண்டிகளில் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டும் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களும் ஏனையவர்களைப் போல பெரும்பான்மையுடன் தனது பிள்ளைகளுக்கு எது போன்ற வாழ்வு வேண்டுமென்ற தேர்ந்தெடுப்பு சமூகத்தில் வளர்க்க வேண்டுமென்ற ஆவலை உருவாக்காது போனது யாருடைய குற்றம்?

இப்படியான மறுக்கப்பட்டச் சூழலில் இயல்பாகவே அரசியல் நடத்தும் குருந்தாடி மனிதர்களில் சிலர் ஏதோ சில பல கேள்விகளை அள்ளி வீசி - ஏன் இப்படியாக மாற்றான் தாய் மகன் என்ற முறையிலே நம் பூர்விக மண் என்றாலும் நடத்தப் பெறுகிறோம் என்று கேள்வியே  வீசி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதனைப் போன்று உருவாக்கும் சூழலுக்கு இட்டு, அவர்களும் மண்டையை குடைந்து கேள்விக்கான பதிலை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, இந்த கமல்ஹாசன்களின் உலகளாவிய தீவிரவாத எக்ஸ்போர்ட் கல்வியூட்டு செயல்முறை கேளிக்கை படம் தேவையற்றது. அது தன்னை காதலிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசு என்ற செயல்முறை வகுப்பு எடுப்பதற்கு ஒப்பானதுதானே!

அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட தவறான(?!) கேள்விகளுக்கான பதிலை எட்டி நியாயமான கேள்விகளுக்கு முகம் கொடுக்கிறோம் என்ற நிலைக்கு எட்டும் முன்பு எனது பக்கத்து வீட்டு குடும்பத்திற்கும், எனக்கும், நண்பனுக்கு நல்ல வேலை, வசதி வாய்ப்பு தேவை. நான் எங்கும் சென்று பஞ்சம் பிழைக்க புறப்பட்டு செல்லும் இடத்தில் வைத்து என் மூளை சலவை செய்யப்படுவதற்கு முன்பு இது நடந்தாகணும்.

பிரச்சினையை தூண்டி விடும் சலசலப்பான விசயங்கள் தேவை இல்லை.  நமக்கு இந்தச் சூழலில் பிரச்சனையின் ஆணி வேருக்குச் சென்று பேசி அதற்கான தீர்வை நோக்கி மனிதர்களின் மனதில் ஈரத்தை விதைக்கும் அடிப்படையைப் பேசும் படங்களே தேவை. சிறு பிள்ளைத்தனமான படங்களாகவோ அது கேளிக்கைக்கான படங்களாகவோ இருந்தாலும்.

கமலின் கேளிக்கைக்கான படமான இந்த விஸ்வரூபத்தில் கமல் எப்படி குழந்தைகள் தீவிரவாதத்தின் பால் ஈர்க்கப்படுகிறார்கள், எது அவர்களை அது போன்ற ஒரு சூழலில் போடுகிறது, நம்மூர் கிராமப்புறங்கள் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கும் இப்படியான ஒரு நிலை வந்துவிடக் கூடாதுங்கிற அக்கறையில் நடுநிலையில் நின்று இந்த தீவிரவாதத்திற்கான பரவலை தடுக்க தனது அறிவுஜீவி எண்ணங்களை பயன்படுத்தி இருப்பார் என்று சிலர் நம்பி படத்தை ஆதரிக்கலாம். படத்தைப் பார்த்தபிறகு மற்றொரு பதிவின் மூலமாக இந்த படத்தின் அரசியல் கூறுகளை அலச வாய்ப்பிருக்கிறது அப்பொழுது சந்திப்போம். அதுவரையிலும் இதையே படிச்சிட்டு இருங்க !



பி.கு: என்னுடைய பால்ய காலத்து கல்லூரி படிப்பு திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியிலேயே தொடங்கியது. எனக்கு வாய்த்த அனைத்து நண்பர்களும் அந்த சமூக பின்னணியிலேயே இருந்தார்கள். எனக்கு பரிணாமம் முதல் மரபியல் வரை கல்வியூட்டிய அறிவார்த்தமான பேராசியர்களும், அறிவியர்களும் இவர்களே! எனவே கமல் தொட்டுப் போகும் விசயம் நமது தமிழகத்திற்கு தேவையற்றது. அவர்களுடனான உரையாடலுக்கான சாளரம் எப்பொழுதோ நமது நாட்டில் திறந்து வைத்தாகி விட்டது. அதனை எப்படி நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதனை பொருட்டே, பின் வரும் காலம் அமையவிருக்கிறது.

Saturday, November 17, 2012

முழிச்சிக்கோங்க : சினிமா டுப்பாக்கி...

இந்தப் படத்தை இயக்குனவர் நிறைய கூகுள்ல ஆராய்ச்சி செய்றவர் போல. எப்படியோ இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் தீவிர தீவிரவாத கண்காணிப்பிற்கு விதையைத் தூவி ஏதோ அவரால் ஆன நாட்டுச் சேவையை ஆத்தி இருக்கார்.

உண்மையான மரணம் வாழும் பொழுதே பயந்து சக மனிதனைக் கண்டு அஞ்சி வாழ்வதுதான். இந்தியாவின் மக்கள் கலப்பு என்பது ரொம்ப சிக்கலானது. அது பல நூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாற்றை உள்ளடக்கியது.

அதனால் இன்றைய நவீன அமெரிக்கப் பார்வையில் நம் தெருவிற்குள் இந்த உலகளாவிய அரசியலை தெரிந்தோ தெரியாமயோ பரப்புரை செய்வது நன்மை விளைவிப்பதைக் காட்டிலும் அதீத தீமையையே விதைத்துச் செல்லும்.

கீழே இணைத்திருக்கிற புகைப்படம் நான் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அதிகம் பேச வேண்டியதில்லை... நீங்களே பார்த்துக்கோங்க.

...ஏன் விஜயகாந்த், அர்ஜூன் வகையறா சினிமா தீவிரவாத ஒழிப்புகளைக் காட்டிலும் முருகதாஸ் வகையறா சினிமா  டுப்பாக்கி சமூக உளவியலுக்கு நச்சு என்பதற்கு கீழ்கண்ட இந்த புகைப்பட ஒருங்கிணைப்பு உதவக் கூடும்.

ரசினி சார் இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தாராமா! தீவிரவாத விழிப்புணர்வு கொடுத்துக்கிட்டார் போல...

இன்னும் கரம்பக்குடிக்கு வரலங்கிற அளவில எங்கூர்ல தீவிர தீவிரவாத விழிப்புணர்வு பரவலன்னு நம்புறேன்...


தொடர்புடைய மற்றுமொரு பதிவு - 


ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பு - பாபர் மசூதி இடிப்பு!

http://thekkikattan.blogspot.com/2010/10/blog-post.html

Sunday, November 27, 2011

முல்லை பெரியார் - நீருக்கான போர் - காணொளியுடன்.


இது வரையிலும் இந்த பூகோளம் இரண்டு பெரிய உலக போர்களை சந்தித்திருக்கிறது. மூன்றாவது ஒன்று வர வேண்டும் என்று பரவலாக கனியக் காத்திருக்கும் ஒரு சூழலிலிருக்கிறது. அந்த இனிய சூழலும் இயற்கை வளங்களை யார் சுரண்டி கொழுப்பது என்பதனை ஒட்டியே அமையும் என்று பணம் படைத்தவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது எத்தனை அளவிற்கு உண்மையோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், அண்மைய காலங்களில் நடந்தேறும் வனங்களின் விரைந்து அழித்தொழிப்புப் பரவலாக உலகளவில் மழை பெறும் அளவையும், நிலத்தடி நீரின் குறைவும் அப்பட்டமாக செய்தி சொல்லி நிற்கிறது.

உலகின் மொத்த நீர் வளத்தில் 97.5 சதவீதம் கடல் நீரும் மீதமுள்ள 2.5 சதவீதமே நன்னீருமாக நமக்கு இந்த இயற்கை பிச்சையாக வழங்கி நம்மை போன்ற ஒரு முட்டாள் மனித இனத்தை வைத்து அழுது கொண்டிருக்கிறது இந்த பூமி. இதனிலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நாம் எடுத்துக் கொள்ளும் வாக்கில் அந்த நன்னீர் அமைந்திருப்பதாக நாம் அறிகிறோம்.

இந்தச் சூழலில் நமது தென் மாவட்ட நிலமையை சற்றே உற்று நோக்கினால் ஓர் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நீரோட்டம் இப்பொழுது கிடையாது. விரைவான பாலைவனவாக்கம் நடைபெற்று வருகிறது; இயற்கையாகவே. ஐயூசின் ஆய்வறிக்கை கூட இதனையே வழிமொழிந்து 2020ஆம் வருடமாக்கில் கூடுதலாக இந்த பாலையின் கோர முகத்தை நாம் கண்ணுறலாமென்று அபாய மணி வேறு அடித்து வைத்திருப்தாக எங்கோ படித்த ஞாபகம்.

இது ஒரு சுழற்சியாக கூட நடைபெற்று வரலாம். பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியா முழுவதும் ஒரு மாபெரும் வறட்சியும் அதனையொட்டிய பட்டினிச் சாவுகளும் நடந்தேறி இருக்கிறது. அதிலும் நமது பகுதியில் மிகக் கோரத் தண்டாவம் ஆடி முடித்திருக்கிறது. இதற்கு தீர்வாக கண்டடைந்ததுதான் முல்லை பெரியார் அணையும், அதனையொத்த பல மேற்கு மலைத் தொடர்களை ஒட்டிய பல நீர்த்தேக்க அணைகளும். அந்த பாடம் நிச்சயமாக பல உயிர் சேதங்களுக்கு பின்னாக கற்றுக் கொண்டதது.

அப்படியாக அணைக்கட்டுக்கள் கட்டப்பெறும் பொழுது பல சதுர கிலோமீட்டருக்கான மழைக்காடுகள் அழிக்கப்பெற்று அத்துடனேயே பல ஜீவராசிகளின் வாழ்வும் முடிக்கப் பெற்று நமது சுயநலத்திற்கென அணைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்றே புதிது புதிதாக மென்மேலும் விரிவாக்கம் செய்து கொண்டேச் சென்றால் வனத்தினுள் இருக்கும் பெரிய விலங்குளான யானை, காட்டெருமை ஊருக்குள் நடந்து திரிவதனை காண முடியும். அதனை விட சிறிய விலங்கினங்கள் கண்ணுக்கு எட்டுப்படாமலேயே சுத்தமாக மாண்டொழியும்; அத்துடனே பல அரிய மர, சொடி, கொடி வகைகளும்; அவைகள் அறிவியல் உலகின் பார்வைக்கே வந்திருக்கக் கூட வாய்ப்பில்லாமலே துடைத்தழிக்கப்படலாம்.

இத்தனை சிக்கலை உள்ளடக்கியது இந்த விசயம். இருப்பினும் நமது தேவையை முன் வைத்து ஒரு நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு கேரளத்திலிருந்து உபரியாக வழிந்தோடும் நீரை தேக்கி வைத்து வறட்சிக்கு பெயர் போன தேனி, கம்பம், போடி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஏரியாவிற்கு விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்குமென பயன்படும் வாக்கில் ஓர் அணைக்கட்டு முல்லை பெரியார் என்ற பெயரில் ஒரு ப்ரிட்டிஷ்காரரின் முன்னிலையில் மக்களாவே முன் வந்து பணத்தை போட்டு கட்டியெழுப்பியிருக்கிறார்கள்; கேரளா அரசுடனான 999 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில்.

திடீரென்று சர்வதேச அரங்கில் எல்லைகளை அடிப்படையாக கொண்டு இரு தேச அரசுகள் விளையாடும் ஓட்டு அரசியல் விளையாட்டை இன்று ஒரு நாட்டிற்குள் அடங்கியிருக்கக் கூடிய மாநில அரசுகள் இது போன்ற நீர் வள ஆதார விசயத்தில் வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறது - கேவலமான அபாயகரமான விளையாட்டு. இது எப்படி என்றால் எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து பரட் பரட் என்று சொறிந்து கொள்வதற்கு சமமாக இருக்கிறது. எத்தனை சென்சிடிவான ஒரு விசயமிது? இதனை வைத்து இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்ச்சியை வளர்க்கும் பொருட்டு அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளே முன்னின்று செய்தால் ஒரு நாடாக எப்படி மேலேழும்பி வல்ல’அரசு ஆகுவது?

கிட்டத்தட்ட தமிழகத்தை சுற்றிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் இந்த அரசியல் விளையாட்டை முன் வைத்து விளையாடுகிறது. இதன் அபத்தம் புரியாமல் மத்திய அரசு என்று பெயர் வைத்துக் கொண்டு முட்டி கழண்டவர்கள் இதனை சூப்பர்வைசிங் செய்கிறார்கள். இது எங்கே எப்படி போய் முடியப் போகிறது என்ற தொலை தூர பார்வையே அற்று வீங்கி வெடிக்கும் வரைக்கும் பொறுத்திருப்பது யாருக்கு நன்மை பயக்கும் என்று புரியவே இல்லை.

அண்மையில் ஒரு காணொளியை பார்க்க நேர்ந்தது. அந்த ஆவணப்படத்திற்கான இயக்குனரும் பல அனுபவம் வாய்ந்த சீனியர் இஞ்சினியர்களும் ஒருங்கே இணைந்து 17ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து நேற்று வரையில் இந்த முல்லை பெரியார் அணைக்கட்டு விசயமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றதொரு கல்வியூட்டும் விதமாக ஒரு அருமையான விவரண காணொளியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்த காணொளி கட்டம் கட்டமாக (phase by phase) நகருகிறது. ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய காணொளி இது. ஏனெனில் இன்றைய கேரளா அரசு மிக முனைப்புடன் இந்த 999 வருட ஒப்பந்தத்தை உடைக்க எண்ணி மிக்க பிரயத்தனப்பேரில் பெரிய பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் நாம் குறைந்த பட்சம் இந்த பிரச்சினைக்கு பின்னான உண்மைதான் என்ன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் பொறுப்பான காரியமாகிவிடுகிறது. ஏன்னா, தண்ணீர் இல்லைன்னா நாக்கு வறண்டு செத்து போயிடுவோம்யா... அது நீ கேராளக்காரான இருந்தாலும் இராம்நாட்டில் வாழ்ந்தா உன் வாயிலும் தான் மண்ணு...  


பகுதி - 2

Saturday, November 19, 2011

ஜெயமோகனின் இந்து மத தட்டைப்படுத்தல் விதி...

இவரையெல்லாம் படிப்பதற்கே ஒரு மண்டை வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பொழுது என்னவோ இந்த தட்டைப்படுத்தல் சித்தாந்தம் சில கேள்விகளை என்னுள் எழுப்பியதால், விமர்சிக்கும் நிலையிலிருந்து தூரத்தில் நின்றாலும் பொதுவில் வைத்து வாசிக்கக் கிடைத்ததால் ஓர் ஓரத்தில் வைத்து நாங்களும் பேசித் தெளிந்து கொள்வோமே என்று இதனை எழுத்தாக்கி முன் வைத்திருக்கிறேன். வாங்க வாசிப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு நியூ யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர் தாமஸ் ஃப்ரீட்மென் எழுதிய த ஃப்ளாட் வேர்ல்ட் புத்தகம் படித்தேன். அன்றைய வளர்ச்சியில் படிக்கும் பொழுது அதன் மேலோட்டமான சர்க்கரை தடவிய விசயங்கள் மயக்கத்தை ஊட்டி அடடா என்ன சிந்தனை என்ன சிந்தனை என்று வாசிக்கும் பொழுது கட்டிப் போட்டிருந்தது. அதன் அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் பல கோடி மக்களின் நசுங்கிய வாழ்க்கையை அந்த எழுத்து எடுத்து காட்டிக் கொண்டிருக்கவில்லை; அதற்கு பின்னான ஃப்ரீட்மெனின் கொள்கை நோக்கு எதனைப் பொறுத்தது என்று புரிந்து கொள்ளும் பக்குவமுமில்லை அன்று எனக்கு. அந்த அரசியல் சார்ந்த எழுத்து அத்தனை மயக்கத்தை ரொம்ப இயல்பாக விதைத்து விட்டுப் போயிருந்தது.

அந்த புத்தகத்தின் வெற்றிக்கான எழுத்துச் சிந்தனைக்கான பாராட்டை நாம் அந்த பத்தி எழுத்தாளருக்கே வழங்க வேண்டும். ஏனெனில் அதற்குப் பின்னான உண்மைகளை மறைத்து உள்ளதை உள்ளபடியே வழங்குவதாக உலகம் முழுமைக்குமே ஒருமுகப் போக்கே (monopoly) சிறந்தது என்று வழங்கி அதனை எடுத்து முன் வைத்த புத்திசாலித்தனத்தினை வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால், அதனில் கூறப்பட்டிருக்கும் உண்மை என்னவெனில் மெக்டொனல்ஸ் போன்ற அதி விரைவு உணவகங்களில் உருவாகும் உணவை உண்டு செரித்துக் கொள்ள பழகி விட்டால் பல ஏற்றத் தாழ்வுகள் மறைந்து விடும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மெக்டெனால்ஸ் பரப்புவதின் அவசியத்தை எடுத்தியம்பி அதனால் மட்டுமே உலக தட்டையாக்கப்படல் சிந்தனை ரீதியாக எப்படி எடுத்து கட்டியெழுப்பப்படும் என்று மயக்கம் ஊட்டக் கூடிய கருதுகோளின் அடிப்படையை நிறுவ முயன்றிருக்கும் அந்தப் படைப்பு.

இந்த உலகம் முழுதிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் லோகல் வாழ்வு ஆதாரத்தில் கிடைக்கும் பொருளாதாரச் சூழலில் அமைத்து கொள்ளும் தன்னிறைவு அணுகுமுறையைத் தவிர்த்து உலகினைத் தட்டையாக்கிவிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்வும், ஒரு மித்த சிந்தனையும் எட்டி விடுவார்கள் பின்பு இந்த பூகோளத்தில் பஞ்சமும், போரும் அற்று ஜீவித்து வாழலாம் என்பதனை போல மிக மேலோட்டமான கருத்தை முன் வைத்து எழுதப்பட்டது. ஆனால் அந்தப் புத்தகம் அறிவுச் சுரண்டல் பண்ணுபவர்களுக்கான ஒரு கையேடு.

அந்தப் புத்தகத்தில் அவர் எப்படி வெளி நாட்டுத்தொழில்கள் இந்தியா போன்ற மூன்றாம் தர நாடுகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டித் தரக்கூடிய அமுத சுரபி, என்று கூறியபடியே இனிப்பு மிட்டாய் வழங்கியிருப்பார் (கசப்பை மறைத்து). அதற்கு அடிப்படையான மனித வளம், ஆங்கிலம் கற்றறிந்த பல கோடி இளைஞ/ஞிகளைக் கொண்டு மிக எதார்த்தமான சூழ்நிலையில் அமைந்து பட்டிருக்கிறது என்ற புள்ளி விபரத்துடன். அதற்குப் பின்னான விசயங்களான இந்த இளைஞர் கூட்டம் எப்படி உறிஞ்சப்பட்டு ஒரு நாட்டிற்கு கிடைக்கற்கறிய அறிவுச் சுரண்டல் நடந்து கொண்டிருக்கிறது என்பதனை உணர முடியாத வாக்கில், நமது இளைஞர்களின் ஆங்கில அறிவு சிலாகிக்கப் பெற்று எப்படி அவர்கள் பீட்சாவும், கோக்கும் வார இறுதி கேளிக்கைகளையும் நடத்தி அமெரிக்கர்களைப் போலவே இன்று சிறு சேமிப்பு அற்று, ஈட்டும் பணத்தை சுழற்சியில் போடுவதின் மூலம் லோகல் பொருளாதாரம் மேம்பாடு அடைய உதவுகிறார்களென்றும், இந்திய இளைஞர்களின் வாழ்க்கை அமெரிக்க இளைஞர்களைப் போலவே இருக்கிறது என்றும் புல்லரித்துப் போய் இருப்பார்.

படிக்கிற என் போன்றவர்களை அந்த மயக்கமூட்டல் என் தலைமுறைக்கும் தாங்கும் விதமாக தடம் பதித்து விட்டுவிடும்.அதற்குப் பின்னான சுரண்டல் புரியாமலேயே! இன்னும் ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்தாலே தான் ஓர் அறிவாளியாக எண்ணிக் கொள்ளும் மயக்கத்திலிருப்பவர்களுக்கு இது போன்ற வாசிப்பு பின்பு எதனை விட்டுச்செல்லும்.

இந்தக் கட்டுரை பேச வந்த விசயம் இதுவல்ல. இருப்பினும், அதே உலகமயமாக்கல் சந்தைப்படுத்தலுக்கான எழுத்து பிரதிநிதியை ஒத்தே இன்று நமது பகுதி உலகில் ஒருவர் எப்படி கடவுளுடன் உரையாட தகுதியான ஒரே மொழியான சம்ஸ்கிருதத்தைக் கொண்டு நாட்டார்கள் தெய்வத்தினையும், மற்ற கோடான கோடி கிராம கடவுளர்களையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து எல்லைகளைக் கடந்து கடவுள் உலகமயமாக்கல் செய்ய முடியுமென்று நமக்கெல்லாம் ஒரு சித்தாந்த லாலிபாப் வழங்க தனது சிந்தனைக் கடையை விரித்திருக்கிறார். அதனை வாசிக்க நேர்ந்ததின் விளைவாக உருவானதுதான் இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்துங்க...

எனக்கு அதனை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த சித்தாந்தத்திற்கான அடிப்படை நல் கருத்தாக்கங்கள் மேலே அறிமுகப்படுத்தியிருந்த அதே ஃப்ரீட்மெனினுடைய உலகமயமாக்கலின் நன்மைகளை எப்படி இனிப்புத் தடவி அதற்கு பின்னாக அழுந்தி, நசுங்கி கொண்டிருக்கும் பன்முக வாழ்வு முறை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வாதாரம், மொழி போன்றவைகளை தவிர்த்து/மறைத்து பேசி ஒரு வித மயக்கத்தை தோற்றுவித்தாரோ அதே செயலை வேறொரு தளத்திலிருந்து நமது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வழங்கியிருக்கிறார் என்பதாக புரிந்து கொண்டேன்.

அந்தக் கட்டுரையின் சாரம்சம்:- இந்தியா போன்ற அகன்ற நிலப்பரப்பை கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் மதம் இந்து மதம். அதற்கென உள்ள கடவுள்களோ வாழும் மக்களை விட அதிகப்படியான எண்ணிக்கையில் உள்ளது. எப்படி இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தேசீய இனமாக கட்டியமைக்க எண்ணி, மத ரீதியாக இணைக்கும் நிலையிலாவது அது சாத்தியப்படுமா என்ற ஒரு முயற்சியின் நிமித்தம் இந்த சம்ஸ்கிருத பொது மொழியை முன் நிறுத்தி அந்த கட்டுரை பேசியிருக்கிறது.

எனது முப்பாட்டனான தாத்தா கூட எங்களுக்கு குல தெய்வம் ஆகிவிட்டார் எனும் பொழுது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அது போன்ற கடவுள் ஒருவர் இருப்பார்தானே? அப்போ அவர் சொல்வதும் சரிதான். சரி, ஆனால் என் முப்பாட்டன் பேசிய, புழங்கிய மொழியில் அவருடன் உரையாடுவதில்தான் எனக்கு கிடைக்கக் கூடிய நெருக்கமும், உணர்வுகளும் கடத்திப் பெறுவதாக எனது மனதும் லயித்து எனக்கு கிடைக்க வேண்டிய நம்பிக்கை சார் விசயங்களும் கிடைத்ததாக நகர்ந்து அடுத்த தலைமுறைக்கும் அதனை கடத்தப்பெற வைக்கிறேன்.

மாறாக, பக்கத்துத் தெரு கிஷ்மு உடைய கொள்ளுத் தாத்தா ஓரளவிற்கு அறியப்பட்டவர் என்பதால், அவர் பேசுகின்ற மொழியின் அ, ஆ கூட தெரியாமல் நான் எனது முப்பாட்டனை அவருக்கு கீழாக இணைத்துக் கொள்வதின் மூலமாக எனக்கான நெருக்கத்தினை எப்படி எட்ட முடியும்? அப்படியெனில்  எனது முப்பாட்டன் அவரை விட இளக்காரமானவரா? எதன் பொருட்டு? அவர் எட்டியிருந்த பொருளாதார அடிப்படையிலா, அல்லது பேசும் மொழி சார்ந்தா? இப்பொழுது இந்த அடிப்படை வாதத்தை விட்டுவிட்டு சற்றே பெரிய கடவுளர்களுக்கு வருவோம்.

உதாரணமாக, எங்களூரில் மகமாயி கோவில் ஒன்று உள்ளது. அங்கே லோகல் பூஜாரியே சூடம் ஏத்தி, அவருக்கு தெரிந்ததைப்பாடி, எங்களுக்கு போதுமான நெருக்கத்தை உருவாக்கித் தருகிறார். அதுவே போதுமானதாக கருதி எத்தனையோ தலைமுறைகளை கடந்து வந்து அந்த வழிபாடும் நிற்கிறது. வருடம் ஒரு முறை கோழி, ஆடுகள் நேர்த்திக்காக பலியிடப்பட்டு அங்கேயே கிராமமாக அமர்ந்து, சமைத்து உண்டு கொண்டாட்டமாக நாளை கடத்துகிறோம்.

இந்த முறையை மாற்றி மிருக பலியிடல் நாகரீகமற்ற செயல். அதனில் ஓர் அழகில்லை. காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறது. மாரியாத்தாளிடம் உரையாடும் மொழியும் அப்படியே இருக்கிறது என்று கூறி 99% சதவீத மக்களுக்கு புரிந்த மொழியைத் தவிர்த்து புரியாத ஒரு மொழியில் அன்னியமாக உணர்ந்து கொண்டு, தன் சார்ந்த நிலத்திற்குள்ளாகவே வேறுபட்டு ஏதோ மற்றுமொரு கட்டமைக்கப்பட்ட உலக கடவுள் நிறுவப்படலின் அவசியத்தில் எனது கொண்டாட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வது அந்த மண்ணின் மணத்தையும், வாழ்வு முறையையும் சிதைக்குமா சிதைக்காதா?

...இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது...


எழுத்தாளர் ஜெயமோகனின் வாதம் - சம்ஸ்கிருதத்தை கடவுளுடன் உரையாடும் ஒரே பொது மொழியாக ஆக்கிவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து கேதர்நாத் வரையிலும் ஒரே சங்கீதமே ஓதப்படும். அதனால் மிசோரத்திலிருந்து குஜாரத் வரையிலும், தமிழகத்திலிருந்து கஷ்மீரம் வரையிலும் அனைத்து இந்தியர்களும் கடவுளின் பொது மொழி புரிந்து தங்களை ஒரே தாயின் பிள்ளைகள் என்று உணர்ந்து அனைத்து சிறு கடவுளர்களும் பெரும் கடவுளர்கள் போன்றே இந்தியாவின் ஏனை பகுதி மக்களின் கவனத்தை பெற்று, என் ஊர் மாரியம்மா கோவிலுக்கு மிசோரத்து பிரஜை வந்து போக வசதியாக இருக்கும் என்று மத ஒருமுக போக்கை கட்டியெழுப்புகிறேன் என தனது மத தட்டைப்படுத்தல் சித்தாந்தத்தை முன் வைத்திருக்கிறார்.


...சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது...


மோலோட்டமாக வாசிக்கும் பொழுது அதே எண்ணம் ஃப்ரீட்மெனிடம் கிடைத்த அடடா என்ன சிந்தனை, என்ன சிந்தனை என்று சித்தம் கலங்க வைக்கக் கூடிய மயக்கமே வந்தது. ஆனால், அதற்குப் பின்னான அபத்தமும், 3000 வருடங்களாக நடந்தேறும் அதே குயுக்தியும் அந்த வார்த்தைகளுக்குப் பின்னான நிழலில் ஒளிந்து நிற்கிறது. இந்த வாரத்தில் ராகுல் சங்கிருத்தியாயன் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற ஆய்வாராய்ச்சியினை ஒத்த புத்தகம் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. சற்றே புனைவு கலந்து மிக அழகாக 6000 வருடங்களுக்கான பின்னோக்கிய நடையில் தொடங்கி முன்னேறி 1940களில் வைத்து முடித்திருக்கிறார்.

இந்த மானிட வளர்ச்சியும்/வீழ்ச்சியும், அதற்குப் பின்னான உண்மையான அரசியலும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அந்த வாசிப்பு ஒரு நல்ல தொடக்கம். ஒரு மானுட இனமாக எங்கிருந்து தொடங்கியது நமது நடை என்று அறிந்து கொள்ள எத்தனித்து தெளிவு வேண்டி நிற்பவர்களுக்கு நல்ல தொடக்கப் புள்ளி அந்த வாசிப்பு. அதனை வாசித்து விட்டு ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தால் அந்த எழுத்திற்கு பின்னான ஒருமுக நோக்குமயம் எதனை வேண்டி நிற்கிறது என்பதனை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த போராட்டம்/பரப்புவாதம் இன்றைய நேற்றைய விசயமாக படவில்லை.

இஸ்லாத்திற்கு பொது மொழி அரபி, கிருஸ்துவத்திற்கு இன்றைய நாளில் ஆங்கிலம் எனவே மதம் வளர்கிறது என்று நினைத்திருப்பார் போலும். அதனைக் கருத்தில் கொண்டு இந்தியச் சூழலில் நமக்கு இந்த சம்ஸ்கிருத கடவுள் உரையாடல் மொழியை பொது மொழியாக்க முயன்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிந்தனை ஓர் உயர்ந்த நோக்கத்திற்கானது என்றாலும் அதற்கு பின்னான பூர்வீக நிலத்தின் விழுமியங்கள் சிதைவுக்குள்ளாவதை ஏன் அவர் கருத்தில் நிறுத்த வில்லை என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

ஜெயமோகன் கூறிய வழியில் நடந்தால், எப்படி உலமயமாக்களின் பக்க விளைவாக சிறு விவசாயிகளும், லோகல் பண்ட சந்தையைச் சார்ந்த சிறு தொழில்களும், மக்களும் அதற்கே உண்டான மொழியும், சொல்லாடல்களும், கொண்டாட்டமும் இழந்து ம்யூசியத்தில் வைத்து பார்த்து கல்லா கட்டும் நிலையை அடைய வைத்ததோ அதனைப் போன்றே இந்த கடவுள் பொது மொழியும் நிலத்திற்கான அடையாளங்களை சிதைத்து அந்த மண்ணிற்கே உண்டான கலாச்சார விழுமியங்களை சிறுமைப் படுத்தி அழிக்கவே செய்யும்.

பன்முகத் தன்மையில்தான் உலகின் அழகே செழித்து, கொழித்து வாழ்வதில் பொருளுள்ளதாகவும் இந்த ப்ரபஞ்சத்தின் பிரமாண்டம் உணர வைக்கக் கூடியதாகவும் உள்ளது. இதற்கு மேலும் இது போன்ற உலகமயமாக்கம் அது பொருளாதார, மத, கடவுள் சார்ந்து எடுத்து நிறுத்துவது மென்மேலும் அடிப்படை வாதம் பல்கிப் பெருகவே வழி நடத்திச் செல்லும். இருக்கும் பிரச்சினைகள் போதுமே!    





டிஸ்கி: ஜெயமோகனின் கட்டுரையில் மொழியின் வளர்ச்சி, பிற மொழிகளுடன் ஒரு மொழி ஊடாட நேரும் பொழுது எப்படி ஒன்றிற்கு பிரிதொன்று கொடுத்து, வாங்கி அதன் இலக்கண நெகிழ்வினைக் கொண்டு அந்த மொழி தன் காலங்கள்தோறும் நிலை நிறுத்திக் கொள்கிறது என்பது வரைக்கும் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் இயற்கைசார் அறிவியலாளன் என்ற முறையில். அதனைத் தவிர்த்து ஜெமோ நிறுவ வந்த மத அடிப்படையிலான சம்ஸ்கிருத சித்தாந்த முன் நிறுத்தலை மட்டுமே இங்கே பிரித்திருக்கிறேன். 



Sunday, August 14, 2011

இது எப்படி சாத்தியமாகிறது...?

அப்பொழுதே சூடாக நடந்தேறி முடிந்திருந்த ஈழ இனப்படுகொலையின் தாக்கத்தின் அடிப்படையில், இந்த கட்டுரை ஜுன் மாதம் 2009ல் எழுதியது. பொங்கி எழும் மனத்தின் ஓலத்தினை தணிப்பதற்கென கொட்டித் தீர்த்தது. பின்னாளில் ஈழ நேசனுக்கு அனுப்பி ஏதோ ஒரு சூழலில் பிரசுரிப்போம் என்றவாக்கில் நிறுத்தி வைத்திருந்ததை, மீண்டும் தூசு தட்டி இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.

மறைந்த பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை அரக்க பரக்க தூக்கில் தொங்கவிட எத்தனித்து கொண்டிருக்கும் இந்த சூழலில், இணையத்தில் நடக்கும் உரையாடல்கள் சிலவை நாம் உண்மையிலேயே சிந்திப்பு திறனை இழந்து மீடியாக்கள் கொடுப்பதனை அப்படியே ஏற்றுக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்ளும் நிலைக்கு நகர்ந்து வெகு தூரம் சென்றுவிட்டோமோ என்று எண்ணச் செய்கிறது.


உலக அரங்கில் ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது உண்மையே என்று சானல் 4 கொடுத்த காணொளி ஆவணப்படத்தின் மூலம் இந்த உலகத்தையே பதறச் செய்த செய்தி, இத்தனை பெரிய ஜனநாயகத்தை உள்ளடக்கிய ஒரு நாடு, காந்திய வழியில் செல்லும் அஹிம்சா நாட்டிற்கு பாரா முகம் காட்டும் வெறும் செய்தியாகிப் போனது. இப்பொழுது வேக வேகமாக 20 வருடங்களுக்கு முன்னால் குற்றம் சுமத்தப்பட்டு ஏற்கெனவே தண்டனையும் அனுபவித்தவர்களை மீண்டும் தூக்கிலிட வேண்டிய அவசரமென்ன, என்பது புரியவில்லை.

எங்குதான் சென்று யூ டர்ன் அடிப்போம் என்று பார்க்கலாம். இப்பொழுது ஒரே மொழி பேசினாலும் பல மனங்களை உள்ளடக்கி அதனதன் தேவைகளையொட்டி ஓடித் திரியும் உள்ளங்களுக்கென பொதுவானதொரு வாசிப்பு...

இது எப்படி சாத்தியமாகிறது...?

பூகோளத்தின் பரப்பில் நாம் பிறந்து விழும் இடத்தைக் கொண்டுதான் நம் வாழ்வு முறை பெரும்பான்மையாக தீர்மானிக்கப் படுகிறது. அவ்வாறு வாழப் போகும் வாழ்வு எப்படி நகர்ந்து, ஊர்ந்து அன்றாட வாழ்வில் அடிப்படை தேவைகளுக்கு கூட களைத்து தேய்ந்து விடாமலும், மலர்ந்தும் மலராமல் பிஞ்சிலேயே கசக்கப் படாமலும், கண்கள் மலங்க விழித்த படி அதில் கொத்து மண் விழுந்து, வானம் பார்த்த பிண்டமாய் வீழாமலும் வாழ வைப்பது என்பது அப்பரப்பின் அரசியல் ஆளுமையைப் பொருட்டும், மக்களையாளும் மனித மனங்கள் பொருத்தும், தனி மனிதனின் வாழ்க்கை அமைகிறது. 

அவ்வாறு வாழ, வழி நடத்தி செல்லப்பட சுதந்திரமானதொரு பூகோளப் பரப்பு அவசியமாகிறது. சக மனிதனை கெளரவத்துடன் மதித்து மனித ஆற்றல் வெளிப்பட அந்த சுதந்திரம் மிகவும் இன்றியமைதாகிவிடுகிறது.

அவ்வாறு வாழ வழிவகை கிடைத்தவர்கள் தன் மனத்தினூடாக பார்க்கும் அனைத்தும் அழகுடையதாக பார்ப்பதும் இயற்கைதான். அதே மனது சக மனிதன் ஒருவன் தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பங்களில் கால் சதவிகிதம் கூட கிடைக்காமல் வாழ்க்கை மறுக்கப்பட்டு துன்பங்களிலேயே உழன்று, சொல்லொண்ணா சித்திரவதைகளை அனுபவித்து வாழ்கிறான் என்பதனை கண்ணுரும் பொழுது பார்வையாளனாகவே இருக்கிறது. 

தான் பேசும் மொழியினாலோ, அல்லது தரித்திருக்கும் தோல் நிறத்தினாலோ சக மனித துயரம் என உணரும் பொழுது அந்த சுகவாசியின் மனதினுள் கூட ஓர் ஓரத்தில் அதிர்ச்சி கலந்த இரக்கம் சுரப்பதும் இயற்கைதான்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு எங்கோ ஓர் இனப்படுகொலை நடந்தேறி அதனின்று தப்பித்து இன்றைக்கு ஒரு நபர் ஒரு புத்தகத்தின் மூலமாக தான் கண்டதை அனுபவித்ததை முன் வைக்கிறார், நாமும் படிக்கிறோம். அந்த வாசிப்பின் ஊடாக நாம் நினைக்கிறோம் மனித நிலையில் இப்படியெல்லாம் சிந்தித்து சக மனிதனை சித்ரவதைத்து தினப்படி கொல்லாமல் கொன்றதை, அந்த ஆசிரியன் அப்படியே விவரிக்கும் பொழுது கண்கள் ஓரத்தில் நீர் வழிய புத்தகத்தை மூடி வைத்து விடத் தோன்றும்.

இப்படி ஒரு மூர்க்க மனம் படைத்த மனிதர்கள் எனும் இனத்தில் நாமும் ஒருவராக பிறந்திருக்கிறோமே என்று நினைத்து நம் பிறப்பிற்கே வெக்கப்பட்டிருப்போம், கண்ணீர் வடித்து சாப்பிட மனமின்றி சில நாட்கள் இருந்திருப்போம்.

மேலே கூறிய அனைத்தும் இன்னமும் மனித நிலையில் ஆரோக்கிய வாழ்வினூடாக வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற எந்த ஒரு மனித மனத்திற்கும் பொருந்தக் கூடும். அது தவிர்த்து, தன் சுய வளர்ச்சிக்காகவும், லாபத்திற்காகவும் வாழும் இந்த ஒரு வாழ்க்கையில் இது போன்ற உணர்வுகளை தொலைத்து சக மனிதன் ஒருவன் பக்கத்து வீட்டில் அலறி துடித்து சாக நேரிடும் பொழுது எப்படி நம்மால் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேளிக்கை சாதனங்களின் ஒலி குப்பியை திருகி அங்கு ஒன்றுமே நடைபெறவில்லை என நடித்துக் கொண்டு நம் வழியிலேயே சொன்று கொண்டிருக்க முடியும்?

ஏதாவது ஒரு நிமிடமேனும் நம் ஆழ் மனது தெரிந்தே அவ்வாறு இருந்திருக்கிறோமே என்று, நம் ஒட்டு மொத்த வாழ்க்கையின் வாழ்வு முறையை ஒரு நாள் கேள்விக்கு உட்படுத்தி நம் பிறப்பின் நோக்கத்தையே கேள்வி நிலையில் நிறுத்தி விடாதா? எத்தனையோ பட்டங்களை பெற்றிருக்கலாம். எல்லோரும் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தை எட்டியிருக்கலாம். ஆனால், மனதிற்கும் தன் உணர்வுகளுக்கும் நெருக்கமான ஒரு சில விடயங்களிலேனும் வாழ்ந்து பார்த்திருக்காத பட்சத்தில் தன் மொத்த வாழ்க்கையுமே அந்த தனிப்பட்ட நபரைப் பொருத்தவரை அவருக்கு இழப்பாகத்தானே தோன்றும்.

இன்று நம் வீட்டிலிருந்து ஒரு 30 கிலோமீட்டர்களே வித்தியாசத்தில் எத்தனையோ அப்பாவி உயிர்கள், எதிரபாராத முறைகளிலெல்லாம் சூறையாடப் பட்டுக்கொண்டிருக்கிறது ஒரு சில அற்ப காரணங்களுக்காக. ஆனால், சுதந்திரமான ஆரோக்கிய சூழலில் சுகவாசியாக வாழும் நாம், நம்மினம் அல்லல் படுவதைக் கண்டு கொதித்தெழுவதை விட்டுவிட்டு, அரிதாரம் பூசிக் கொண்டு ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் இருப்பதாக கூறி முகம் திருப்பிக் கொள்வது வேதனை அளிப்பது.

பின்னாளில், இக்கோர கொடுமைகள் தாங்கி வெளி வந்த சுயசரிதை வாசிக்குங்கால், என் இனம் தத்தளிக்கும் போது என் குரல் ஓங்கி ஒலிக்கவில்லையே என கண்ணீர் விடுவதால் இன்று நடக்கும் கொடுமைக்கு பயன் ஏது? சிந்தனைவாதிகளாகவும், அறிவு ஜீவிகளாகவும், அரசியல் சாணக்கியர்களாகவும், மனித நேயர்களாகவும் மார்தட்டி இறுமாந்து திரியும் நாம், மெல்லவே முகத்திரை கிழித்து, கதைகள் பேசுவதை நிறுத்தி, ஒற்றுமை வளர உழைப்பது எப்படி என்று சிந்திப்போமா?

Wednesday, November 10, 2010

பிள்ளைகளுக்கான பாலியல் உபத்திரமும், நம்மூர்ச் சட்டமும்...

தனி மனித ஒழுக்கம் சார்ந்த குற்றங்கள் ஒரு சமூக பார்வையில் பார்க்கப்படும் பொழுதும், அதே நேரத்தில் மிக நெருக்கமாக உணரும் பொழுதும் எவ்வாறாக அந்த பிரச்சினை திசை திருப்பப்படலாம் என்பதற்கு அண்மைய கோயம்புத்தூரின் சிறார்கள் கடத்தலும் அதனைத் தொடர்ந்த அவர்களின் படுகொலையும் ஒரு உதாரணமாகக் கொள்ள முடியும்.

பரவலாக இது போன்ற குற்றங்கள் ஒரு சமூகத்தில் முற்று முழுதாக தவிர்த்து வாழ்ந்து கொண்டிருப்பதாக எந்த நாட்டிலும் காண முடியாதுதான். ஆனால், இது போன்ற ransomக்காக குழந்தைகளை கடத்தி வைத்து பணம் பறிப்பதென்பது ஆங்காங்கே பரவலாக இப்பொழுது தலையெடுத்து வருகிறது நம்மூரில் என்பது கவணிக்கப்பட வேண்டிய ஒரு க்ரைம். ஏனெனில், நம் போன்ற ஒரு ஃப்ரீ ரேஞ்சிங் சமூகத்தில் அவ்வாறாக தொடர் நிகழ்வுகளாக ஆகிப் போவதற்கு மிக்க வாய்ப்புகளும் இருக்கிறது.

ஆனால், நான் அவதானித்த வரையிலும் நம் சமூகத்தில் குழந்தைகளின் மீதான வன்முறை கட்டவிழ்ப்பிற்கு போதுமான சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை என்றுதான் கருதச் செய்கிறது. இது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் சட்டம் சார்ந்த தண்டனைகளில் சிறிதும் சமரசங்களற்று எல்லா இடங்களிலும் விரவி பயன்பாட்டில் இருக்கும் போதுதான், அது போன்ற செயல்களில் இறங்க எத்தனிக்கும் எதிர்கால மனிதர்களுக்கு ஒரு விழிப்பேற்றும் அரணாக இருந்து குற்றங்கள் குறைப்பதற்கான வழியாக அமைய முடியும்.

அதற்கு மாறாக ஒரு சமூகம் கண்டும் காணாததுமாக வீட்டிற்குள்ளும், வெளியிலும் பாலியல் சார்ந்த உபத்திரங்கள் தன் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கும் பொழுது கட்டப்பஞ்சாயத்து நிகழ்த்தியோ, அல்லது வெளியில் தெரிந்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலமே பாலாய் போய்விடுமென்றோ அல்லது தன் குடும்ப மானத்திற்கே கலங்கமென்றோ அல்லது குற்றமிழைத்தவர் தனக்கு ரொம்ப வேண்டியவராகிப் போய்விட்டார் வெளியில் தெரிந்தால் அவரின் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்து விடுமொன்றோ நாம் சாதாரணமாக கடந்து போய் விடுவது மென்மேலும் இது போன்ற உபரத்திரவாதிகளை வளர்த்தே விடும் என்பதில் ஏதாவது ஐயமுண்டா?

இதுவேதான் மீண்டும், மீண்டும் அடக்கி வைக்கப்பட்ட புற வய உணர்வுகள் ஒரு சமூகத்தில், இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளிடத்திலும் கூட மென்மேலும் வளர்தெடுக்க வழிகோணிவிடுகிறது. உதாரணமாக, பள்ளிகளில் இது போன்ற துன்புறுத்தலை பழக்க விதத்தில் (habitual behavior) தொடர்ந்து ஒரு மனிதர் செய்து வருகிறார், அவருக்கு நல்ல பின்புலமும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மனிதரும் சமூகத்தில் ஒரு குடும்பத்துடன் எல்லாரையும் போலவே தானும் முழுதுமாக வாழ்ந்து முடிக்க வேண்டுமென்ற ஆசையுடனே வளைய வந்து கொண்டிருக்கிறார்; தான் செய்வது தவறு என்று தெரிந்தும் கூட அந்த குற்றத்தை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே.

இந்த சூழலில் சட்டம் தன் வேலையை மிகச் சரியாக செய்தால் இது போன்ற சபல மனிதர்கள் மிகச் சுலபமாக தன்னை அந்த பழக்க நிலையிலிருந்து தன்னோட குடும்ப கெளரவத்திற்காகவேனும் தன்னை மாற்றி எழுதிக் கொள்வார். மாறாக, ஒவ்வொரு முறையும் அவரின் சபல இயக்கம் வெளிப் பட்டு அவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாதுகாப்புடன் திரியும் பொழுது, பின்னாலில் அதே முறையில் இயங்க எத்தனிப்பவர்களுக்கு எப்படியானதொரு விழிப்புணர்வு கிட்டியிருக்கக் கூடும்.

நாமும் தினசரிகளிலும், அண்டை அயலர் வீடுகளிலும் பல இது போன்ற குழந்தைகள் சார்ந்த பாலியல் உபத்திர இன்னல்கள் பற்றி வாசித்து விட்டு நகர்ந்து கொண்டேதான் இருப்போம். ஆனால், இதற்கு பின்னான சமூக படிப்பும், சட்டத்தின் கிடுக்கிப் பிடியான முறையான தண்டனையும் அமுலில் இருந்தால் கண்டிப்பாக விசயம் பரவலாக சென்றடைந்து மனசாட்சிக்கு பயப்படாதவர்களுக்கு இந்த சட்டமாவது பயமுறுத்தி நேர் பாதையில் பயணிக்கச் செய்யலாம்.

பல நிகழ்வுகளில் கவனித்திருக்கிறேன், அமெரிக்கன் மீடியாக்களில் இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் கனம்தோரும் பலவிதமான சட்ட ரீதியான பாய்ச்சல்கள் அந்த குற்றம்சாட்டப்பட்டவரின் மீதானது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. ஒரு முறை மாட்டினால், சொச்ச மிச்ச காலங்களும் அந்த மனிதரின் பின்னாலே அந்த குற்றம் ஊர் உலகறிய தொடர்கிறது. அதுவும் எதார்த்த ரீதியில் மிகவும் உண்மை. முதலில் தேசிய அளவில் மீடியாக்களில் அந்த நபரின் முகம் நிறுத்தி நிதானமாக காட்டப்படுகிறது. பின்பு அவருக்கான தண்டனை சிறைச்சாலையில் கழித்து முடித்து வெளியில் வந்தால் அவருக்கான child predator என்ற அடைமொழியுடன் கூடிய ஒரு எண்ணும், முழுமையான மற்ற விபரங்களும் அடங்கிய ப்ரோஃபைல் ஒன்றும் தயார் செய்யப்பட்டு அது கணினியிலேயே பொது மக்களும் பெறத்தக்க வகையில் போட்டு வைத்து விடுகிறார்கள்.

இப்பொழுது அந்த குறிப்பிட்ட நபரோ அல்லது அது போன்ற குற்ற பின்னணியில் சிறை சென்று வெளி வந்தவர் எந்த நகரத்தில், எந்த தெருவில் வசிக்கிறார் என்றளவில் தெரிந்து கொள்ளக் கூடிய வசதிகளை செய்து தந்து விடுகிறார்கள். எனவே எப்பொழுதும் அது போன்ற நபர்கள் தொடர் கண்கானிப்பில் இருப்பதனைப் போன்றே ஆகிவிடுகிறதல்லவா?

இது போன்ற கடுமையான சட்டம் தன் வாழ் நாள் முழுதும் தன்னைச் சுற்றி வருகிறது என்று ஒரு சமூகத்தையே விழிப்புணர்வு அடையச் செய்யும் பொழுது, குற்றமிழைக்க எண்ணும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கொண்டு வெளிக்கிட துணிந்தாலும் சம்பந்தப்படுபவர் ஒரு கனமேனும் எண்ணிப்பார்க்கக் கூடிய நிலையை உருவாக்கித் தருகிறது. ஆனால், நம்முடைய சமூகத்தில் இப்படியா செய்திகளில் படிக்கிறோம்? முதலில் பத்தி பத்தியாக சம்பவ வர்ணனை விரசமூட்டும் வகையில், பிறகு கட்டுரையின் கடைசி பத்தியில் போனால் போகிறதென்று அந்த நபரின் அடுத்த நிலை எப்படியாகும் என்ற சொல்லிவிட்டு ஊத்தி மூடிவிட்டு நகர்ந்து விடுவார்கள். அடுத்த கேசு கிடைக்கிறதா வேறு எங்காவது என்று, இதுதானே நிலமை?

மேலும் சட்டத்தை முறை படுத்தி செலுத்த வேண்டியவர்களே சிறு, சிறு சபலங்களுக்கு பின் சென்று தங்களுடைய வாலிடிட்டியையே இழந்து நிற்கும் பொழுது, எப்படி குற்றம் இழைக்க வரிசை கட்டுபவர்களிடத்திலும் சட்டம் முறைப்படி இயக்கப்படுமென்ற விழிப்புணர்வு இருக்கும். இது போன்ற சிவிக் சென்ஸ், சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களிடமிருந்து ஆரம்பித்து எந்த சமரசமுமின்றி, ஏழை/பணக்காரன்/பதவி என்று பார்க்காமல் இயக்கப்படுத்தி சட்டம் உயிரோடும், உயிர்ப்போடுமிருக்கிறது என்று காட்டினாலே ஒழிய குற்றங்களின் வீச்சம் குறையாது.

அப்படி ஒரு நாள் மலர்ந்து விட்டால் இது போன்ற ரசிக மனோபாவ ‘என்கவுண்டர்கள்’ தேவைப்படாது. இந்த என்கவுண்டரின் மூலமாக என்னதான் நமக்கு புரிய வைக்க எத்தனிக்கிறார்கள், ஒரு சமூகமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு பின்னான சட்ட மாற்று மாசோதாக்களை எழுப்பவதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்தும், சமூக அறிவியல் ரீதியில் குற்றவாளியிடமிருந்து மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் எது போன்ற விசயங்களை கரந்து அதனை நடைமுறை படுத்த முடியுமென்ற ஆய்வுகளற்றும், பிராச்சார தொனியில் சமூகமறிய வழங்குவதனைத் தவிர்த்து, ஊழல் மலிந்து வழியும் ஒரு சமூகத்தில் ப்ரீமெச்சூர்டாக வேக வேகமா ஒரு கேசை மூடுவதின் மூலம் இன்னும் காத்துக்கிடக்கும் குற்றவாளிகள் அறியாமை வழி நடந்தேரவே காத்துக் கொண்டிருப்பார்கள்.





பி.கு: குற்றங்கள் குறைப்பதற்கான ஒரே வழி சட்டத்தை சரியாக முறையாக சமரசங்களற்றும், கை நீட்டுவதை அரவே நிப்பாட்டுவதின் மூலமுமே சாத்தியம். முறைப்படி சட்டம் பின் தொடரப்படும் பொழுது அது கண்டிப்பாக மக்களின் மனதில் (pyschic) ஆழமாக பதியப்பட்டுவிடும். காசு கொடுத்து வெளிய வந்திரலாம்னு தோன்றுவது நின்றுவிட்டால், encounterபண்ணி கேசை மூட வேண்டிய அவசிமிருக்காது.

இது போன்ற சம்பவங்களையொட்டி எது போன்று பின்வரும் க்ரைம்களுக்கு நம்மை தயார்படுத்தி கொள்ள முடியுமென்று புதுக்கோட்டையில் தொடர்கொலை செய்து மாட்டிய சம்பவத்தின் பொழுது எழுதிய பதிவையும் முடிஞ்சா வாசிங்க ... புதுக்கோட்டையில் ஒரு ‘சைக்கோபாத்!” - Psychopath


Wednesday, July 07, 2010

An Inspiring Speech, deliverance by Sunitha Krishnan

புற வெளிப்பாடுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு வாழும் நம்மிடையே... இது போன்ற மனிதர்களுக்கிடையேயும் நாமும் பங்கு போட்டுக்கிட்டு இருக்கோம் இந்த உலகத்தைன்னு நினைக்கும் பொழுது மூஞ்ச கொண்டு போயி எங்க வைச்சிக்கிறதின்னே தெரியல... நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.


இந்த வீடியோ கண்டிப்பா பார்த்தே ஆகணும் பல காரணங்களுக்காக.



இணைப்பிற்கு செல்ல இங்கே அழுத்துங்க ...Sunitha Krishnan’s Fight Against Sex Slavery

Wednesday, September 30, 2009

தீவிரவாதத்திற்கு பொறுப்பாளிகள் யார்?

*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாகப் படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு முன்னமே வாசிக்க கிடைக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...

செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை இங்கு வைத்திருக்கிறார்... அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.

நாயகி,

...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடத்தியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது.

எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருணங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருணங்கள் அல்லவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜென்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்க்கையை ஒரு பொருளற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அலைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.

அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதத்திற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து- இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!


பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

Sunday, December 07, 2008

இந்திய துணை கண்டத் தீவிரவாதம் - தெகாவின் பார்வையில்!

சமீபகாலமா பதிவுகள் எழுதவே தோணுவதில்லை. நடைபெறும் நிகழ்வுகளை கொண்டு எனது எண்ணவோட்டத்தை சுடச்சுட பதியும் பொழுது, அந்த ஒட்டு மொத்த நிகழ்வின் பரிமாணமோ வேறு மாதிரியாக நாட்பட நாட்பட வெளிச்சத்திற்கு வருகிறது. அதுவும் இந்தியாவில் நடைபெறும் அரசியல், கலவரங்கள் சார்ந்த நிகழ்வுகள்.

அதற்கு ஒரு உதாரணமாக அண்மையில் அரசு சட்டக் கல்லூரியில் (எல்லா அரசாங்க கல்லூரிகளிலுமே என்று கூட கூறி விட முடியும்) காலங் காலமாக நடைபெற்று வரும் இந்த ஜாதிச் சண்டையின் பின்னணியை ஆர அமர கவனிக்கும் பொழுது யாருக்கும் தெரிய வந்திருக்கும். இதனில் முக்கியமாக கேமராவும் கையுமாக, ஒருவர் தற்கொலைக்காக ஒரு உயரமான நீர்த் தொட்டியின் மீது ஏறி குதித்து உயிரை மாய்த்து கொள்வதனை நேரடி ஒளிப்பரப்பு செய்வதாகட்டும், கல்லூரியில் ஒருவரை ஒருவர் மாட்டடி அடித்துக் கொண்டு அவர்களும் செத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வன்முறை சார்ந்து இம்யுனிடி கொடுப்பதில் காட்டும் அக்கறையாகட்டும் இந்த வியாபார மீடியாக்களின் பங்கு சகிக்க முடியா அளவிற்கு சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. அது நம் வளர்ச்சியில் ஒரு அபாயகரமான சந்திப்பில் நின்று தவறான பாதையில் வழி நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறோமென்பதற்கான ஒரு வழியாக எனக்குப் படுகிறது.
________________________________

சரி இப்பொழுது பதிவின் கருவிற்குள் செல்வோம். அவந்திகா அண்மையில் நடந்தேறிய மற்றுமொரு ரியல் லைஃப் ஷோ இதுவும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பெற்றது "மும்பை தீவிரவாத தாக்குதலுக்குக்" காரணம் இந்திய அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டுமென்றும், சரியான, நேர்மையான அரசியல்வாதிகளை இந்தியா பெற்று விட்டால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் குறையுமா என்றும் வினவி ஒரு தொடர் விளையாட்டை ஆட அழைத்திருக்கிறார்.

இந்த தீவிரவாத தாக்குதல் அல்லது உலகம் தழுவிய நவீன தீவிரவாத அணுகுமுறை சார்ந்து என் மனதில் எண்ண அலைகள் அவ்வப்பொழுது தீவிர'மாக எழுந்து வீழ்வதுண்டு. இருந்தாலும், இன்றைய பொருளாதார கட்டமைவில் நடைபெறும் சித்து விளையாட்டுக்களும், புவியிருப்பில் அமைந்திருக்கும் நாடுகளின் அரசியல் சார் நகர்வுகளையும் ஒட்டு மொத்தமாக கவனிக்கும் பொழுது, மனித பரிணாம நகர்வில் ஆண்ட்ரோஜனையும், அட்ரீனலின் ஓட்டத்தினையும் கொண்டே எடுக்கப்படும் சுயநலத்தனமான முடிவுகளின் வெளிப்பாடே இந்த நவீன தீவிரவாத விளையாட்டோ என்று என்னை ஒரு கணம் யோசிக்க வைக்கிறது.

காலம் தொட்டே மதங்களின் இருப்பும் மறுப்பும் அவைகளின் நெகிழ்வுறும் தன்மையைக் கொண்டே மக்களால் மானசீகமாக பின்பற்றப் பட்டு தலைமுறையாக கையிறக்கம் பெற்று பல நூறு ஆண்டுகள் மாற்றத்தினூடே தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டு மக்களின் தேவைக்கும் விட்டுக்கொடுத்து தலை தப்பி நிற்பதாகவும், லாஜிக்கலாகவே இயற்கையின் நியதிப்படியே அதுவே சாத்தியமாகவும் தோணச் செய்கிறது எனக்கு.

ஆனால் இன்றைய நிலவரப்படி அது போன்ற ஒரு பாதையில் எந்தவொரு மதத்தினையும் நாம் பரிணமிக்க போதுமான கால அவகாசம் கொடுப்பதாக தெரியவில்லை, அந்தந்த குழுமங்களும் தங்களின் "கடவுளர்களை" காப்பாற்றி அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்காக போராடுவதாகப் படுகிறது. இச் சூழலில் வன்முறையும் ஒரு வாழ்வின் அங்கமாக தேவைப்படாத நாடுகளின் மீது கூட வைத்து திணிக்கப் படுகிறது.

இப்பொழுது இந்திய துணைக் கண்டச் சூழலுக்கு வருவோம். நம் புவியியல் இருப்பு உலக வரைபடத்தில் உற்று நோக்கினால் ஒரு சூடான பகுதியில் (geo-politicaly we are located in a complex place) இருப்பதனைக் பார்க்கலாம். இச் சூழலில் எந்தவொரு முடிவினையும் நம் நாடு எடுத்தோம் கவிழ்த்தோமென்று தான் தோன்றித் தனமாக எடுத்து அதனை நிறைவேற்றி பார்த்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.

உண்மை அப்படியாக இருக்க "கொம்பு சீவி" விடப்படுவதினால் கோபம் கொப்பளித்து 'பாடம் கற்பிக்கிறேன் பார்!' என்று மல்லுக்கு நின்றால் தொலைதூரப் பார்வையில் நாம் சந்திக்கவிருக்கும் இன்னல்கள் நம் கற்பனைக்கும் எட்டாதது. எனவே நம்மூர் அரசியல்வாதிகள் அண்டைய நாடுகளுடன் பகை பாராட்டி அதன் மூலம் ஓட்டு அரசியல் வேண்டுமானால் செய்து கொள்ளலாமே தவிர இது நடைமுறைக்கு சாத்தியப் படாத ஒன்று!

இருக்கும் வழி ஒரே வழியே! பொருளாதார வகையில் தன்னிறைவு எட்டி, தன் நாட்டிற்கு போதுமான பாதுகாப்பை, எல்லை கடந்த தீவிரவாதத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்தற்குரிய வழிமுறைகளைக் கண்டு, நாட்டின் எல்லைக்குள் வாழும் எல்லாரும் நிறைவாக வாழும் ஒரு வழிவகை கண்டு, பிரிவினை வாத அரசியலை தவிர்த்து நாட்டினை எடுத்துச் செல்வதே வாழும் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையளிக்கும் கட்டத்தில் இருப்பதாக ஏனைய தீவிரவாத விசயங்களில் கவனத்தை செலுத்தாமல், தான் பயனுறும் உடனடித் தேவைகளில் கவனம் செலுத்த முடியும்.

நாம் வெறுமனே அரசியல்வாதிகளை குறை கூறுவதில் எந்த பொருளும் கிடையாது, என்னமோ அரசியல்வாதிகள் எங்கிருந்தோ குதித்து நம்மிடையே தோன்றிவிட்டதாக நினைத்துக் கொள்வதற்கு! அவர்கள் நம் ஒட்டு மொத்த சமூகத்தின், எண்ணவோட்டத்தின், ஒழுக்க நெறிகளின் பிரதிநிதிகளே! அது அப்படியாகக் கிடையாது என்று கூறினால், கண்டிப்பாக நம்மால் அது போன்ற பொய்யான பிரதிநிதிகளை சகித்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? மாற்றுத் தலைவர்களை நம் எண்ணங்களின் பிரதிபலிப்பானை தேடிக் கொண்டே இருப்போமே...! இத்தனை கோடி மக்களிருந்தும் நமக்கு கிடைப்பதெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாமே எனும் பொழுது என்ன தெரியவருகிறது அதிலிருந்து?

ஒண்ணு மட்டும் நிச்சயம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ண வோட்டம் இந்த "சுயநலப்" போக்கு சார்ந்து மாற வேண்டும், அதற்குத் தேவை என்னன்ன அப்படின்னு ஒவ்வொரு தனிமனிதனும் தீவிரமாக யோசிக்க வேண்டும், அப்படி யோசித்து தன்னைத் தானே திருத்திக் கொண்டு பொது வாழ்க்கைக்கும், ஏனைய துறைகளுக்கும் சென்றால் மட்டுமே ஒரு விடிவுகாலம் நம் நாட்டிற்கு கிட்டும் என்பது எனது எண்ணம்.

நானும் இன்னோட பங்கிற்கு ஒரு நாலு பேரை முன்னுரைக்கிறேன்...


1) தருமி

2) சுரேகா

3) சுகா

4) சந்தோஷ்



மேலும் இவங்க இல்லாம யாரெல்லாம் தானும் தன்னோட பார்வையை முன் வைக்கணுமின்னு நினைக்கிறீங்களோ கண்டிப்பா செய்ங்க. நன்றி!




பி.கு: இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - வன்முறை வாழ்க்கைக்கு யார் பொறுப்பு...?

Monday, October 09, 2006

***வன்முறை வாழ்கைக்கு யார் பொறுப்பு...?***

*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாக படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு படிக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...


செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை இங்கு வைத்திருக்கிறார்... அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.

நாயகி,

...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடதியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சாமாய் இருக்கிறது.

எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருனங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருனங்கள் அல்லாவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜன்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்கையை ஒரு பொருளாற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அழைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.

அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறாதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரட்சினைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!


பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

Related Posts with Thumbnails