Monday, December 16, 2013

வடுவூரில் எதிர்கால நீச்சல் வீரர்கள்: Potential National Swimmers at Vaduvoor

நேற்று வடுவூர் வடக்கு பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றிருந்தோம். எங்கெங்கு நோக்கினும் பச்சைப் பசேல் வயற்காடுகளும், அண்மையில் பெய்து வரும் தொடர் மழையால் மரங்கள் நீரை அருந்தி செழுமையை இலைகளில் காட்டியவாறு தனிந்து நின்று குளுமை காட்டிக் கொண்டிருந்தது.

அருகாமையில் உள்ள நீர் நிலையில் இந்தியாவின் potential divers தங்களின் தேசியத் திறன் அறியாது “அண்ணா, அண்ணா எங்களை படம் பிடியுங்கள்” என்று கூறியவாறே அத்தனை நேர்த்தியையும் காட்டி அரை மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் சுழன்றபடி நீருக்குள் தங்களவு ஆன்மாவை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது படத்தில் உள்ள சிறுவனின் நீர் புகும் நேர்த்தியைக் காணுங்கள்! இதுவே ஒலிம்பிக் போட்டிகளில் பல வருடப் பயிற்சியில் செய்யும் ஒரு நீச்சல் வீரர் செய்யும் சாகசமென்று ஆ, ஓன்று கூச்சலிடும் (what an entering) ஒரு திறமை. இங்கே தானே பழகியதில் செய்து காட்டுகிறான்.

இப்படியாகத்தான் நமது கிராமப்புறங்களிலிருந்து பல தேசிய விளையாட்டு வீரர்கள் இந்தியா ஒன்று, இரண்டாவதை பின் தள்ளியவாரே தன்னை மண்ணுக்குள் புதைத்து விட்டு அரை ஜட்டி போட்டு 20/20 மட்டுமே விளையாட்டு என்று ச்சீயர் லீடிங் செய்து வருகிறது. எல்லாமே பணம், வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தூக்கிப் பிடிக்கும் குணம்.

The real talents yet to be found in the heart of India!

1)


2)
3)
4)
5)
6)
7)
8)

Tuesday, December 10, 2013

பிள்ளையிம் கிள்ளி தொட்டிலையும் ஆட்டு: An Irony of Life!

அண்மையில் ஒரு படம் பார்த்தேன் மாட் டொய்மன் நடித்து வெளி வந்த “எலிசியம்.” அதில கதை என்னான்னா பூமியில எத்தனை முடியுமோ அத்தனை கொண்டாட்ட வாழ்க்கை முறையையிம் வாழ்ந்து முடிச்சிட்டு பெருகிப் போன மக்கட் தொகை, சுவாசிக்க நல்ல காத்து, குடிக்கத் தண்ணீர் கிடைக்காத சூழலுக்குப் போயி பூமி ஒரு குப்பை காட ஆகிடுது. பணம் படைத்தவர்களாக சேர்ந்து ஒரு வான் வெளி நகரம் அமைத்து (எலிசியம்) அங்கே வாழத் தலைப்படுகிறார்கள்.

பிறகு என்ன இப்போ எல்லாரும் அமெரிக்காவிற்குள் நுழைய எத்தனிப்பதை வெளியுறவுத் துறை அமைச்சகம் அதனையொட்டிய கெடுபிடிகளையும் வைத்து பார்த்துக் கொள்வதைப் போல எலிசியம் நகரத்திற்குள் இல்லீகள் பூமி இமிக்கிரண்ட்ஸ்களை வர விடாமல் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் பூமியில் வாழும் ஹீரோவிற்கு ஓர் அநீதி நடந்து விடுகிறது. அதனை எதிர்த்து போரட உந்தி எழ இரண்டு உலகத்திற்கும் சுமூகமான பாதை அமைத்துக் கொடுப்பதாக படம் திரையில் விரிகிறது.

போலவே, இப்போ என்னோட முக்கியமான விசயத்திற்கு பார்வையை திருப்புவோம். ஒரு கட்டுரையை இந்தத் தலைப்பில் The Gates Foundation’s hypocritical investments வாசிக்க நேர்ந்தது. வாசிச்சிட்டு கடந்து போவோம்னுதான் நானும் நகர்ந்து பார்த்தேன். ஆனா, கெரகம் விடலை. இந்த உலகத்தில இயங்கும் எந்த ஒரு சோ கால்ட் நல்ல விசயமும் சரி கெட்ட விசயமும் சரி ஒன்றொடொன்று பின்னி பிணைந்தே கிடக்கிறது. எதில இருந்து எதை பிரிச்சு எடுக்கிறதின்னு சிக்கலை உட்கார்ந்து அவிழ்க்க ஆரம்பிச்சு இனம் காண்பதற்கு முன்னமே சுடுகாட்டு பக்கத்தில ஒரு சாதா மனுசன் வாழ்க்கை நகர்ந்து வந்து நின்னுருது.

இப்படியாத்தான் நம்ம பெரிய கடை அண்ணாச்சி பில் கேட்ஸ் இம்பூட்டுத்தான் சம்பாரிக்கணும்னு வழித்தொகை தெரியாம கன்னாபின்னான்னு அவரு கொம்பெனி சம்பாரிக்கப் போக அவருக்கு இப்போ டாலர் பில் எல்லாம் அது துடைக்கக் கூட லாயக்கில்லைன்னு உணரரும் இடத்திற்கு நகர்த்தி வைச்சிருச்சு இந்த வாழ்க்கை. சரி, இரண்டு பூமி கிரகத்தையே வாங்கிப் போடும் அளவிற்கு பணம் குவிஞ்சிருச்சே என்ன செய்றதுன்னு தெரியாம இந்த உலகத்து ஏழை மக்களுக்கு சுகதாரமான உணவு, ஆரோக்கியமான காற்று, உழைக்கும் உழைப்பாளி வர்க்கத்திற்கு முறையான வழியில் சென்றடையும் விசயங்களை ஆதரிப்பது,  வன்முறையற்ற சமூகம் உருவாக வித்திடுவதற்கென அமைந்த நிறுவனத் திட்டங்களை ஆதரித்து முதலீடுவது என தன்னிடம் குவிந்து கிடக்கின்ற அந்தப் பணம் தனக்கு வேலை செய்யத் திட்டமிட்டார்.

அப்படி திட்டமிட்டபடியே அந்த கையிருப்பு பணத்தை பெருக்க எங்கெல்லாம் தனது நிறுவனம் முதலீடு செய்தால் அவரின் கனவை நிறைவேற்றி வைக்க முடியும்னு பாடுபட்டு யோசிச்சு அங்கெல்லாம் பணத்தை முதலீட வைத்திருக்கிறார்கள்.



அதாவது ஒரு பக்கம் வியாதிக்கு, சுகாதரமற்ற ஓர் வாழ்வை வாழத் தேவையான அடிப்படை விசயங்களை வளர்த்து விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அதன் மூலமாக ஈட்டிய பணத்தில் வைத்தியம் செய்கிறார். என்ன ஓர் beautiful mind! முதலீடு செய்யப்பட்ட ஒரு சில நிறுவனங்களை நீங்களே காணுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் ஆரோக்கியமான உணவும், பானங்களும் இந்த உலக மக்களை சென்றடைய பாடுபடுகிறார்கள் என்பதை நீங்களும் அறிந்து கொண்டு எனக்கும் அறியத் தாருங்கள்.



உலக சூடேட்றத்திற்கு எதிராக போராடும் கம்பெனிகளுக்கு ஆதரவாக இங்கும் முதலீடு...




நமக்கு கிடைத்திருக்கும் ஓர் நவீன எலிசியம் படத்தின் நாயகன், எலிசிய நகரத்திலிருந்தே போராடுகிறான் :) .



பி.கு: மேலும் வாசிக்க இங்கே செல்லுங்க... 

http://grist.org/climate-energy/the-gates-foundations-hypocritical-investments/?utm_source=facebook&utm_medium=update&utm_campaign=socialflow

Tuesday, November 19, 2013

தஞ்சாவூர் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஓர் பயணம்: Mullivaaikkaal Mutram (Photos)

என்னோட நண்பன் ஒருத்தனை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு ஒளிஞ்சு கண்டுபிடிச்சு விளையாண்டுகிட்டே இருந்துட்டு நேற்று முகநூலில் வைச்சு கன்னம் மாத்தி, கன்னம் அறைஞ்சுகிட்டு  இன்று நேரா சந்திசிக்கலாம்னு முடிவாகி அவன் தஞ்சாவூர் வந்திருந்தான்.

அவன் எங்களோட நட்பை வட துருவமும் தென் துருவமும் சேராதுங்கிற ரேஞ்சிக்கு 90களிருந்தே சொல்லிட்டு திரியறது உண்டு. ஆனா, அதுக்கு பின்னாடியான திரை மறைவில் ஒரு hate and love காற்றில் தொங்கிட்டே இருக்கும் எங்களைச் சுத்தி.

என்னோட துணைவி, நேற்று நானும் அவனும் அலைபேசியில் பேசிக் கொண்ட தனிப்பட்ட மொழியை கவனிச்சிட்டு ”அப்படி பேசுவீங்க இப்படி நடிக்கிறீங்க ஃபோன்ல அவரோட” அப்படின்னு புருவம் உயர்த்திர அளவிற்கு எத்தனை நாயை கூப்பிட்டுக்க முடியுமோ அத்தனை தடவை மாத்தி மாத்தி கூப்பிட்டுக்கிட்டோம்.

நேரா வந்தவன்கிட்ட என்னய பிடிச்சும் கொடுத்தா. அவன் இது எப்போதுமே அப்படித்தான். அப்படின்னு அதே கிக்கேபிக்கே சிரிப்போட நழுவிட்டான். அவனுக்கு கடுப்பு ஏண்டா நல்ல விசயமே சொல்லி வைக்க மாட்டீங்களாடன்னு. எப்பூடி நாங்க எங்க வைஃபை கிட்ட கூட ஹீரோ வேஷம் கட்டலன்னா- நாலு பேரை வில்லனா ஆக்கினாத்தானே நான் ஹீரோ ஆக முடியும்னு நினைச்சிக்கிட்டு ஹிஹிஹின்னு மனசுக்குள்ளர சிரிச்சிக்கிட்டேன்.

அப்பறம் அவனுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் பார்க்கணும்னு தோணி நேற்றே சொல்லிட்டான் போலாம்டான்னு. சரின்னு ஒரு வழியாக தத்தி தவழ்ந்து இடம் கண்டுபிடிச்சு போனோம்.

இந்த அண்ட வெளியில மிதக்கிற அத்தனை வஸ்துவையும் பார்க்க அரக்கபறக்க ஓர் ஓழுங்கற்ற வழியில இயங்கிற மாதிரி இருந்தாலும், அததது இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கி மிதந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்த மனுசப்பய நடந்துக்கிறதுக்கான காரணங்கள் படிக்க இன்னொரு உலகத்தையே படைக்கணும் போல. கண்ணைக் கட்டுதப்போய்!

நினைவு முற்றம் போயிருந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே அதனை கட்ட முற்பட்டவர்கள் முறையான அனுமதிச் சான்றிதழ்கள் பெற்றுத்தானே ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் அதனை கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது, அத்தனை வருடம் எழும் வரையிலும் காத்திருந்து விட்டு இப்பொழுது மதில் சுவரை இடித்து யாருக்கு எதனை தெரியப்படுத்த அப்படி ஒரு அலங்கோலச் மட்டச் சுவர் கட்டினார்கள் என்ற கேள்வியை தவிர்க்கமுடியவில்லை சாலையிலிருந்து அந்த மொத்த அமைப்பையும் கண்ணுரும் பொழுது. என்னவோ போங்கப்பா!

அங்கு எங்களுடன் அந்த முற்றத்தினை பார்வையிட்ட சிலரில் ஒரு பெண்மணிக்கு ஆச்சர்யம் பெண்களை இப்படி கயிற்றால் பிணைத்து எல்லாம் இப்படிச் செய்திருக்கிறார்களா என்று. எந்தளவிற்கு பதினான்கே கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில் இடம் பெயர்ந்து வாழும் தன் இன மக்களுக்கு நேர்ந்த கோரம் அவர்களது பார்வையிலிருந்து முற்றிலுமாகவே மறைக்கப்பட்டிருப்பதற்கு அது ஒரு சான்று வார்த்தையாக காற்றில் மிதந்து காதடைந்தது.

இத்தனை குறுகிய புவியியல் அமைப்பின் குறுக்கப்பட்ட தொலைவிற்குள்ளும், நமக்கும் அவர்களுக்குமான துயரங்களும், தேவைகளும், தொலைதூர நோக்கும் நமக்கும் மத்திய அமெரிக்காவிற்கும் இடையே கிடக்கும் தூரங்களை கடந்து நிற்பதற்கு ஓப்பானது.

அங்கே பார்த்த சிற்பங்கள் அனைத்தும் இணையத்தில் புழங்கியவர்களுக்கு காணக் கிடைத்ததாகவே இருக்கும். இருந்தாலும், அரிதிப் பெரும்பாண்மையான நமது மக்களுக்கு நிச்சயமாக இந்த முற்றம் ஒரு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி மனதில் ஒரு குற்ற உணர்வை ஊட்டக் கூடியதாகவும், சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் அமையும் என்பது திண்ணம்.


1) நுழைவு முற்றம்...


2) தமிழகம் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் தீக்குளித்தவர்களுக்கான மதில் பதிப்பு...

3) ஈழம் மண்ணில் அவர்கள் படும் வதையை விவரணம் செய்யும் மதில் பதிப்பு...

4)

5)
6)

7)
8)


9)
10)

Sunday, October 27, 2013

திசைகளறு பயணம் I - கன்யாகுமரி (Photos)

நேற்றிரவிற்கு முந்தைய இரவில் திடீரென்று ஏதோ வீடற்றவன் மனநிலையில் கிடைத்த பேருந்தில் தாவித் தாவி பயணித்ததில் விடியற்காலத்தில் சூரியனார் விழித்து அரைமணி நேரம் கடந்து இறங்கிய இடம் கன்யாகுமரியாக இருந்தது. :)

புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு அந்த நேரத்தில் ஒரு தனியார் பேருந்து ஒன்று கிடைத்தது. போகும் வழியெங்கும் அப்பொழுதே பெய்திருந்த மழை , மரங்களின் இலைகளில் சார்ந்திருந்த ஈரப்பதத்தை காற்றில் பரப்பி, நெஞ்சின் அடியாழம் வரைக்கும் நுரையீரலின் வழியாக உயிரைத் தொட்டுக் வருடிக் கொண்டிருந்தது. கூடவே இளையராஜவின் என்பதுகளின் பாடல் தொகுப்பை மிதமான சப்தத்துடன் ஓட்டுநர் வேறு தவழ விட்டிருந்தார்.

எனது தலைக்கு நேர் மேலாக பெட்டிகளை வைக்கும் தட்டில்  சுற்றியிருந்த ஒரு வெளிப்புற பிளாஸ்டிக் சிறிதே கிழிந்து காற்றில் ஆடியாடி அசைந்தது. அது என்னுடைய கேசமே காற்றில் சிலும்பிப் பறக்கிறதென ஒரு மயக்கத்தை உண்டு பண்ணி என்னுடைய கல்லூரிக்காலத்துப் பயணத்தை மீண்டும் ஞாபகமூட்டியபடியே தனை மறந்து கேசத்தை சிலுப்பிக் கொள்ளும் அவாவை வழங்கிக் கொண்டிருந்தது.

அது இளையராஜாவின் மந்திர விரல்களின் ஊடே கசிந்தொழுகும் பாடல்களுக்கு மட்டுமேயான சாத்தியம் போல!  இல்லாத முடியை, பயணத்திற்கான இலக்கை, வாழ்க்கைக்கான பொருளை, இறந்து போன ஆன்மாவை இன்னும் உயிர்ப்புடனே ஏதோ ஒரு மூலையில் உன் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று ஞாபகமூட்டுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் அது வழங்கி, வாடிய மனதை மேகத்திற்கு மேலாக எடுத்துயர்த்தி வைத்து விடும் ஒரு வெண்புரவி போல.

மிதக்க மிதக்க அப்பொழுதே ஒரு நோட்டுப் புத்தகத்தில் இளையாராஜவிற்கு செலுத்த வேண்டிய எனது காணிக்கையை எழுத்தின் மூலமாக எழுத வேண்டிய தருணமிது என்று எண்ணும் அளவிற்கு அது என்னை கடந்த காலத்திய ஆயிரக்கணக்கான மைல்களின் பயணிப்புகளின் ஊடே தோன்றிய அனுபவங்களை சார்ந்து இப்பொழுதே மொத்தமாக இறக்கி வைக்கும் தருணமாக அழுத்திக் கொண்டிருந்தது.

ஆனால், இப்பொழுது நான் சொல்ல வந்த விசயம் வேறு. பிரிதொரு சமயம் இளையராஜாவிற்கென ஓர் அமர்வு செய்யலாம்.

எப்பொழுதுமே எனக்கு இந்தியா என்றாலே நெருக்கமான விசயமாக எனக்குள் பற்றிப் படர்வது பேருந்து மற்றும் புகை வண்டிப் பயணங்கள். இது போன்ற தனிப்பட்ட முறையில் இலக்கே அற்று கால் போன போக்கில் கிடைக்கும் ஊர்தியில் ஜன்னலோரமாக அமர்ந்து பிரயாணிப்பதுதான்.

அவ்வாறு பயணிக்கும் பொழுது, பேருந்தின் வேகம்  அதிகரிப்பதனை விட்டு அதனை விட என்னுடைய மனம் வேகம் பிடித்து பிரபஞ்சத்தின் விளிம்பை எட்டிப்பிடித்து விட்டு அதற்கு மேல் அது வளைந்து செல்கிறதே என்ற ஆதங்கத்துடன் பூமிக்கே இறக்கிக் கொண்டு கடந்து செல்லும், ஊர்களையும், மரங்களையும், தண்ணீரற்ற குளம் குட்டைகளையும், மாடு மேய்க்கும் தாத்தாபாட்டிகளையும், சிறார்களையும், மனிதர்களையும் அலுக்காமல் பார்த்துக் கொண்டே அவர்களை பின் தள்ளி முன் நகர்வது ஏதோ வாழ்வின் எதார்த்தத்தை எனக்கு ஞாபகமூட்டியபடியே கடந்து செல்வதாக மனமொரு லயிப்பை எட்ட வைக்கும்.

பெரும்பகுதி இது போன்ற ஊர்திகளின் முன் நகர்வு என்னுடனேயே என்னுள் மையம் கொண்டிருக்க பெரிதும் உதவுகிறது. ஏறி இறங்கும் மனிதர்களின் முகங்களும் அவர்களுடனேயே பயணிக்கும் அனைத்து விதமான வாழ்வு வழங்கிய ரேகைகளும், வீடுகளும் சட் சட்டென திரையிழுத்து காட்சிகளை மாற்றுவதனைப் போல மாறிக் கொண்டே இருக்கும். அது நமது வாழ்வின் நிலையாமைக்கான ஒரு குறியீடாக அமைந்து என்னுள் மென்மேலும் உறங்கிப் போக வடிகாலாக அமைய உதவுவதும் இது போன்ற இலக்கற்ற பயணங்கள் ஒரு கிளர்வுற்ற ஈர்ப்பு நிலையில் நடந்தேற உந்தித் தள்ளுகிறதோ என்று ஒரு முடிவிற்கு வர வேண்டி இருக்கிறது.

இதற்கு முன்பு இது போலவே பல பயணங்களை எனக்கு நானே வழங்கிக் கொண்டிருக்கிறேன். அதிலொன்று வட அமெரிக்காவில் நான் நிகழ்த்திய 2980 மைல் அளவிளான மகிழுந்து பயணம் வாயிலாக ஆறு மாநிலங்களை கடந்து சென்றது. வாழ்வின் மறக்க முடியா பயணங்களில் அதுவும் ஒன்று. அதற்கும் பெரிதாக எந்த ஒரு திட்டமிடலுமில்லை. அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. ஆனால்,  ஏதோ ஒரு வானத்தின் நிலா பின் தொடர்ந்த படியே!

பயணங்கள் எப்பொழுதும் எனக்கு அலுப்பை கொடுத்ததே இல்லை. மனம் வெம்பி சூம்பிக் கிடக்கும் பொழுது இப்படியான பயணங்கள் உள்முகமாக சிந்தனையைத் திருப்பி விடவும், வழியில் தான் சந்திக்கும் புதிய மனிதர்களுடானான உரையாடல் தனக்குள் இருக்கும் உண்மையான இயல்பினை வெளிக்கொணர்ந்து மீண்டும் விரைவாக துளிர்த்தெழும் சாத்தியத்தையும் வழங்குகிறது.

அதனினும் பயணங்களின் பொழுது வாசிக்கும் பழக்கம் இருக்குமாயின் அது மேலும் கூர்மையடைய வாய்ப்பளிக்கிறது. என்னுடைய ஆதர்ச எழுத்தாளரான பாலோவின் த ஸகீர் புத்தகம் வீட்டில் படுத்தவாரே வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த புதினத்தின் ஓட்டம் புத்தகத்தின் எல்லையைத் தொடத் தொட இது இந்த நிலையில் வாசிக்கும் புத்தகமல்ல என்று அவமானமாக உணர்ந்தேன். அதன் விளைவாக அமைந்தது ஒரு நான்கு மணி நேர பேருந்து பயணம். அந்த பேருந்தின் கடைசி நிறுத்தத்திற்கு முன்பாகவே புத்தகத்துனூடான பயணமும் முடிவடைந்தது. பயணத்தின் பிற்பகுதி ஒரு ரம்மியமான மாலை நேரம். காவிரிக் கரையோரமாக பச்சை பசேல் நிறம் பூசிய வயல் காடுகள் அனைத்தும் கலக்கஸ்தான் புல் மேடுகளாக மாறிப்போயிருந்தன.

மீண்டும் கன்யாகுமரி பயணத்திற்கு வருவோம். மதுரையிலிருந்து குமரிக்கு செல்லும் நேரடி அரசு பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தேன். அரசு பேருந்துகளே இப்பொழுதெல்லாம் தொலை தூர பயணத்திற்கு செல்வதற்கென இயக்கப்படுவதாக கருதுகிறேன். அரசு பேருந்துகளின் பயணச் சீட்டின் விலையும் ஒன்றும் சொல்வதற்கில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்குமான பயணச் சீட்டின் விலை அரசு பேருந்திற்கும் தனியாருக்கும் ஒன்பது ரூபாய் வித்தியாசங்களை கொண்டதாக இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் தனியார் பேருந்துகளிலேயே விலை அதிகமிருக்கும். இப்பொழுது அது தலைகீழாக இருக்கிறது. பேருந்துகளின் நிலையும் ஒன்றும் பெரிதாக மெச்சிக் கொள்ளும் படியாகவுமில்லை.

ஓடும் பேருந்திற்குள் முதல் முறையாக கொசுக்கள் முத்தமிட முத்தமிட பயணித்து மகிழ்ந்தது இதுவே முதல் முறை. ஓட்டுநர் எத்தனை மிதித்தும் பேருந்து மணிக்கு 50கி.மீ வேகத்திற்கும் மேல் சென்றிருக்க வாய்ப்பில்லை.

பேருந்தின் ஜன்னல்களின் கண்ணாடிகள் சிரித்து அதிர்ந்து சிரித்து என கொஞ்சம் கொஞ்சம் எட்டிப்பார்த்த தூக்கத்தையும் கொசுக்களுடன் சேர்ந்து கொண்டு காவல் காத்தது.

இந்தனை சந்தோஷத்திலும் விருட்டென்று அமைந்த பயணத்தினால், கையில் இருந்த கேமராவில் பாட்டரி இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அச்சப்பட்ட படியே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காலை மணி மூன்றரையைப் போல எடுத்துப் பார்க்கும் பொழுது சுத்தமாக இறந்து கிடந்தது. கொஞ்சமே என்னை திட்டிக்கொண்டு மேலும் அதனை நினைத்துப் பயணத்தின் இனிமையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த மன அறைக்கு ஒரு பூட்டைப் போட்டு சாத்தி விட்டேன்.

பின்னே என்ன இறங்கி கையில் இருந்த சம்சங் s4 வழியாக கிடைத்ததை எடுத்துக் கொண்டேன். இருந்தாலும் காலை நாலரை மணிக்கு சென்றடைந்து விடும் என்ற பேருந்து சரியாக ஆறரை மணிக்கே சென்றடைந்தது. அதற்குள்ளாக சூரியனார் கொஞ்சம் காத்திரமாகி லென்ஸை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டார். இன்னும் குமரியில் ஐந்து இட்லிகள் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்! அந்த பெண்கள் மீன் விற்பனை செய்யும் சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கக் கூடும். சுற்றி நின்று உணவருந்தியவர்களின் தோல் காய்ச்சலைக் கொண்டு அனுமானிக்க முடிந்தது.

அவர்கள் கடலுக்கும் சற்றே அருகே நின்று இந்த வியபாரம் செய்து வருவது அறியாமல் முகம் அலம்பி பல் விளக்கவென மனதில் நிறுத்தி ஒரு வெண் பொங்கலும், காஃபியும்  அருந்த 95 ரூபாய் கொடுத்து  முதல் போனி செய்து வைத்தேன். கொஞ்சமே வருத்தம். அடுத்த முறை ஐந்து இட்லிகள் பத்து ரூபாய் :) .

நான் பருகித் திளைத்ததிலிருந்து ஒரு சில துளிகள் உங்களின் பார்வைக்காகவும்...


1)



2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)

Monday, September 30, 2013

தஞ்சாவூர் அரசு பொருட்காட்சி : Thanjavur Govt Exhibition'2013

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைந்திருக்கும் முனிசிபல் திடலில் அரசு பொருட்காட்சி ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. நேற்று இரண்டு குட்டிப் பெண்களுடன் அந்தப் பக்கமாக நடையைக் கட்டினோம்.

பொருட்காட்சியின் முதல் நாள் என்பதால் அனுமதி இலவசமாக வழங்கப்பெற்றோம். அத்தனை சிறிய மைதானத்திற்குள் நல்ல திட்டத்துடன் ஸ்டால்கள் அமைக்கப்பெற்றிருந்தாலும், எங்கெங்கும் காணும் மக்கள் கூட்டத்தைத் தவிர சிறிய/பெரிவர்களுக்கென்று மகிழ்வூட்டி தொண்டையை உடைத்துக் கொண்டு கதற வைக்கும் ஃபன் ரைட் எதனையும் காணவில்லை.

பின் வரும் நாட்களில் அவைகள் சேர்ந்து கொள்ளுமோ என்னவோ. போலவே, நிறைய விற்பனை ஸ்டால்களும் இன்னும் அமைக்கப்படவில்லை. அவர்களும் அவர்களின் வழிகளில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தொலைந்த போன கூட்டத்திற்குள் என்னை கண்டு கொண்டது போல அத்தனை மக்களையும் ஒரு சேர ஓர் இடத்தில் வைத்து மையமாக உணவு மைதானத்தில் அமர்ந்து பொண்ணுங்களோட ஒரு சிறு சிற்றுண்டி உண்டது ஹம் ஹம்ம்ம் அனுபவம்! பெண் சிறிதே ஆடினாள்... சாப்பிட்டுக்கொண்டே!

சவகாசமாக மீண்டும் ஒரு முறை பொருட்காட்சி திடல் சூடு பிடிக்க ஆரம்பித்த நாட்களில் செல்ல வேண்டும்.

1) காட்சித்திடலின் நுழைவு வாயில் ...



2) திடலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வனத் துறை காட்சியகம்...







3) ஆவின் பால் நிலைய ஸ்டாலுக்கு நேர் எதிர் முனையில் அமைந்திருக்கும் மீன் வளத்துறை ஸ்டால். இங்கே என்னோட அறுபது வயதித்திய புறக் கண்ணாடி பிம்பம் ஒன்றைச் சந்தித்தேன் :) ...




4) தொடக்க நாள் என்பதால் ஏதோ வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி ஓர் அண்ணாவும் தங்கையும் தங்களது திருமணத்தை சார்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். வரதட்சிணை கொடுப்பதும்/வாங்குவதும் தவறு என்ற உரையாடலும் காதில் விழுந்தது. தாண்டிச் சென்று, அண்ணா தனது தங்கையை மூளைச் சலவை செய்வது போன்ற ஒரு உரையாடலில் கூறினார் - திருமணத்திற்கு பிறகு தனித் தனியாக குடும்பம் அமைவதே நம் சமூக வழக்கு என்று?! :)


6) பொண்ணு டொய் ஸ்டால் டொய் ஸ்டால் என்று படுத்த ஆரம்பித்து கண்களில் கண்ணீர் குளம் வெட்டிக் கொண்டிருக்கும் ஒரு தருவாயில், இந்த வடக்கத்தி தம்பி ஒருவன் உயிர் காத்தான்... :)



Friday, August 09, 2013

எனது மறுபக்கம்...: The Flip Side!

எத்தனை அடித்தாலும் நான் திருந்துவதாக இல்லை. இன்னமும் மனுசங்களின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனது அம்மா அடிக்கடி அவளது 67 வருட வாழ்க்கையில் கற்றுக்கொண்ட நடைமுறை வார்த்தை மிகவும் தாமதமாகவே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது; இருப்பினும் காத்திருப்பதில் பிரயோசனமுள்ளதாக இருக்கிறது its worth a wait. அந்த வார்த்தை- உறவுகளில் சிக்கல்கள் எழுந்து விலகிச் சென்றும், வார்த்தைகளில் அமில மழை பொழிபவர்களைப் பற்றிய நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொள்வதற்கிணங்க இப்படியாக சொல்வாள்...

 *தெரிந்தா செய்கிறார்கள், என்ன செய்றோம்னு தெரியாமச் செய்றதுதானே! காலம் வரும் பொழுது புரிந்து கொள்வார்கள்* .

இந்த காலம் சில பேருக்கு நாட்களாகவோ, மாதங்களாகவோ, வருடங்களாகவோ ஏன் இந்த பிறப்பிற்கும் எட்டாத ஒரு விசயமாகவோ கூட அமைந்து விடக் கூடும். இருப்பினும் இந்த நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொளல் தமக்கு தாமே மன அழுத்தத்திலிருந்தும், வெறுப்பு நம்மை ஆட்கொண்டு நமது பொன்னான இக் கணத்தை அனுபவிக்க விடாமல் சிதைத்து விடக் கூடியதிலிருந்தும் நம்மை கரை தூக்கி விடுவதுமாக அமைந்திருக்கிறதாகப்படுகிறது.

நம் வாழ்வில் வந்து போகும் உறவு மனிதர்களையொட்டி எத்தனை பெரிய கால எதிர்மறை செயல்பாடுகள் நடந்தேறும் பொழுதும் இந்த take in நிச்சயமாக உதவுவதாகவே இருக்கிறது.

என்னோட இன்னொரு அம்மா’ [மாமீ’யார் - i hate this term, ஏன்னா அந்த தமிழ் வார்த்தையே பாருங்க மாமி யார் ? என்று போட்டி போடுவதாக அமைந்து பட்டிக்கிறது :) ], அதாவது என்னோட வைஃபை அம்மாகிட்ட இன்னிக்கு ரொம்ப நேரம் காணொளியில் அரட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவங்களும் அதை ரொம்பவே சிலாகிச்சு பேசினாங்க.

“இந்த மாதிரியான ஒரு கணத்தை நமக்கு இந்த காலம் கொடுத்திருக்கின்னா கிடைக்கற்தக்கன என்று.”

பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக சில கேள்விகளின் மூலமாக அவர்களுடைய இன்றைய வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் போக்கை நோக்கி நகர்ந்தது. அம்மாவிற்கு ஆறு ஏழு பிள்ளைகள் எல்லாம் முப்பது வயதைத் தாண்டி. தான் தனக்கு என்று தன் பெற்றோர்கள் அரைத்த மாவை தனக்கென அரைக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் உள்ளவர்கள்.

அம்மாவின் கணவர் ஓர் மூன்று வருடங்களுக்கு முன்பு மரணித்துவிட்ட நிலையில் தனியாக இவர்கள் வாழ தலைப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர் விரும்பினால் தன் பிள்ளைகளின் யார் வீட்டிலாவது இருந்து துணையோட இருக்கக் கூடிய கதவை தன் பிள்ளைகள் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கிறார்கள். 

இருப்பினும் இந்தம்மாவின் தன்னம்பிக்கையும், அந்த நாகரீகமும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிற நிலையில் இந்த கேள்வியை முன் வைத்தேன். ஏன் உங்களுக்கு இத்தனை பிள்ளைகள் இருந்தும் தனியாக வசிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டவுடனேயே வெடித்து சிரித்து தன் அனுபவத்தை முன் வைக்க தயாராகினார்கள்.

“எத்தனைதான் நமக்கு சேவகம் பண்ண, கவனிச்சிக்கன்னு ஆட்கள் இருந்தாலும், நமக்கு பிடிச்ச இடத்தில உட்கார்ந்து எழுந்துன்னு, பிடிச்சதை பிடிச்ச நேரத்தில செஞ்சிகிட்டு வாழுறதுல உள்ள சுகம் கிடைக்குமா தம்பீ” என்பதே அம்மாவினுடைய பதிலாகக் கிடைத்தது.

எத்தனை வாழ்வு அனுபவங்கள் அவர்களை இந்த ஒரு புரிதல் நிலைக்கு நகர்த்தி இருந்தால் தன்னுடைய எழுபதைத் தொட்டு நிற்கும் ஒரு மனுஷியின் எண்ணமாக இது வெளிப்பட்டிருக்கக் கூடும்.

நான் அதன்பால் கட்டுண்டேன். என்னுடைய ஈர்ப்பு- மனிதர்களின்பால் சார்பற்ற நிலையில் மனிதர்களுடன் ஒட்டி ஒழுகுதல், அது வயது நிலைகளையும் கடந்து யார் வெளிப்படுத்தினாலும் அந்த மனிதர்களுக்குள் ஏதோ வெட்டி எடுக்க புதையல் இருப்பதாக கூடுதல் ஒட்டல் ஏற்படும்.

பிறகு அம்மாவின் இந்த நிலைப்பாட்டை பாராட்டி விட்டு, நீங்கள் எடுத்திருப்பதும் ஒரு தேர்வுதான். தனது திருமண நாளிருந்தே, குடும்பம், கணவர், பிள்ளைகள் என்று அடுத்தவர்களுக்காக தன்னுடைய வாழ்வை தோய்த்த நிலையில் கடைசி ஒரு கட்டத்திலாவது தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து தீர்க்கிறேன் என்று எடுத்திருக்கும் இந்த தேர்வை நான் மதிக்கிறேனம்மா.

இருந்தாலும் இன்னும் காலங்கள் நகரும் பொழுது இப்பொழுது இருக்கும் இந்த உள்ளார்ந்த மனசக்திக்கு உடம்பு ஒத்துழைக்காத ஒரு நாளும் வரக் கூடும். அப்படியாக வரும் ஒரு நாளில் அடுத்த ஒரு தேர்வை நீங்கள் எடுக்கும் பொழுது, எனக்கு உங்களைப் பார்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குங்கள் என்று கூறினேன்.

ஏனெனில் அந்த வாய்ப்பை வழங்குவதும், வழங்காமல் போவதும் அவர் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ்களிலே உள்ளது. இது எப்படியாக இருக்கிறது என்று சற்றே உள்ளே புகுந்து யோசித்தால், எந்த வீட்டில் எந்த மனிதர்களுடன் நாம் விருந்தாடப் போகிறோம் என்று வாய்ப்பளித்துப் பார்ப்பதற்கு ஒப்பானாது.

தீர்க்கமாக வாழ்பவர்களுக்கு அங்கே எந்த விதமான சமரசங்களுமில்லை. சுத்தமான தேர்வு மட்டுமே மீதமாகிறது. அங்கே இது போன்ற மனிதர்கள் புகுந்து வெளி வரும் பொழுது விருந்தளிப்பவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.

அதுனாலேயே நான் மிகக் கவனமாக அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். இன்று ஒரு வாழ்ந்து தீர்த்தவளின் வாயிலிருந்து சில நல்ல வார்த்தைகளை வாழ்த்தாக பெற்றேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் இனிதான நாளாக அமைந்திருக்கிறது!

சந்தோஷத்திலேயே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதற்கு ஒப்பான விசயம் வேறொன்றும் இருப்பதாகப் படவில்லை. அது இந்த மிர்சிடீஸ் வகையாறா கார்களையும், சம்ஷாங் s3 and s4 வகை கைபேசிகளையும் விட அதி மன மகிழ்வை ஊட்டுவதாக உள்ளது.

சீக்கிரம் விழித்துக் கொள்பவர்களுக்கு இந்த வாழ்வு ஏதோ ஒரு வகையில் எப்பொழுதுமே மட்டற்ற சந்தோஷத்தை வழங்க காத்துக்கொண்டே இருக்கிறது!

Sunday, July 28, 2013

வானமும் என்னுடைய வாழ்க்கையும்...

மீண்டும் ஒரு அழகானதொரு நள்ளிரவு! இன்று எனக்கு நானே பேசிக்கொண்ட கோயப்புத்தூர் காலம்பாளைய நாள் 1996ஆம் வருடம் போன்றதொரு இரவு. காரின் ஹூடில் மல்லாந்து படுத்தபடி இரவு வானத்தை ஒரு ஏகாந்த நிலையில் தரிசித்தபடி பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே மணி போவது தெரியாமல் அருந்திக் கொண்டிருந்தேன். எனக்கும் இரவு வானத்திற்குமான தொடர்பு சொற்களில் சுருக்கவதாக இல்லை.

எனக்குத் தேவையான அத்தனை உள்ளார்ந்த சக்தியை எப்பொழுதும் ஒவ்வொரு தருணத்திலும் அங்கிருந்தே தரவிறக்கம் செய்து வந்ததாக எனது நினைவு. இந்தியாவிலிருந்து என்னுடைய இருபத்து ஆறாவது வயதில் இது போன்றதொரு சம்பாஷணைக்கு பிறகே அமெரிக்காவிற்கான பயணத்தை நிகழ்த்தி இருக்கிறேன். இடையில் எத்தனையோ மயிர் கூச்சரியும் நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. அது எனக்கும் அந்த நிகழ்வுகளுக்குமான அதிர்வுகளை பன்மடங்கு மற்ற மனிதப் பார்வைகளிலிருந்து எகிறி காமித்தாலும் எனக்கொன்னவோ அவை தேவையானதொரு பாடமகவே அமைந்திருக்கிறதாகப் படுகிறது.

அன்று கோவையில் நிகழ்ந்த அந்த இரவு வானத்தினூடான சம்பாஷணை ஒரு பைத்தியக்காரனின் புலம்பலாக யாராவது ஒட்டுக்கேட்டிருந்தால் நகைத்திருக்கக் கூடும். ஆனால், உள்ளார்த்தமாக அந்த பெளர்ணமி இரவு எனக்கு கொடுத்தது என்னுடைய பதினெழு வருட அமெரிக்கப் பயணத்திற்கு போட்ட உரமாக அமைந்தது.

இன்று மீண்டும் நான் அதே நிலையில் இந்தியா திரும்பும் ஒரு சந்திப்பில் நிற்கிறேன். அதே உத்தரவு கேட்டு. அதே பைத்தியக்காரத்தனம் கொஞ்சமும் குறைந்த பாடில்லை. என்னவோ எனக்கு உத்தரவு கிடைத்த மாதிரியான உணர்வுதான். இரவு வானத்தின் பின்னணியில் மரத்தைப் பார்த்தேன், என்னுடைய வீட்டைப் பார்த்தேன்- செய்வது சரிதானா என்று கேள்வியை முன்வைத்து நட்சத்திரங்களை உற்று நோக்கியபடிபடியே- என்னுடைய மற்றொரு குரல்- மச்சான் எல்லாம் நல்லாதான் நடக்கும். எல்லாமே நல்லபடியாகத்தான் நடந்தேறிருக்கிறது; keep it going என்று உள்ளிருந்து ஒரு குரல். அவ்வளவுதான் எனக்கு வேணும்.

என்னைச் சுற்றியும் எப்பொழுதும் எனக்காக மனம் கசிந்து நல்லதே நடக்கும் என்று உருகும் நல்ல நண்பர்களும்/உறவுகளும் உண்டு. அதனைத் தாண்டிய தீர்க்கமாக ஆற்றோடு மிதக்கும் அபரிதமான மன நிலையும் என்னிடமுண்டு. இத்துடன் ஒருமித்து ஒத்திசைவுடன் அடுத்த கட்ட நகர்வை நிகழ்த்துகிறேன்.

May this universe bless me all along the way! Good luck to me!! போய் வருகிறேன் அமெரிக்கா!! :)

Monday, July 22, 2013

வாத மூட்டழற்சி ஓரு மரபணுப் பிறழ்வு - Rheumatoid Arthritis

என்னோட ப்ளஸ்டூ நாட்கள்லே எங்களுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய வீடு என் வீட்டிற்கு போகும் வழியில் சாலையை பார்த்தபடி அமர்ந்திருக்கும். என் வீட்டிலிருந்து நாங்கள் சந்தித்து மாலைகளைக் கொல்லும் இடத்திற்கு மிகச் சரியாக 750 நடையடிகள் பிடிக்கிறதென்றால் அவனுடைய வீடு சரியாக 550வது அடியில் அமைந்திருக்கும்.

மாதத்தின் பல நாட்கள்ல நல்லாத்தான் இருப்பான். திடீரென்று படுத்தபடி எழுந்து அமரவே ரொம்பச் சிரமப்படுவதாகவும், அப்படியே எழுந்து நடந்து திரிந்தாலும் குன்றியபடியோ அல்லது சிரமத்திற்கு இடையேயோ நடந்து திரிவதாகவும் காணக் கிடைப்பான். ஒரு முறை அவனை அருகே அமர்த்தி வைத்து என்ன பிரச்சினை என்று விசாரித்தேன்.

அப்பொழுது கூறினான் எலும்புகளின் சந்திப்புகளில் உபரியாக கால்சியம் படிந்து இணைப்புகளை இயக்கவே முடியாதபடிக்கு வலி உயிர்கொள்வதாக இருக்கிறது என்றான். அதிலும் குளிர்காலங்களிலும், காலை வேலைகளிலும் இந்த பிரச்சினை அதிகமாக இருப்பதாக கூறினான். அன்று அதன் தீவிரம் உணர்ந்து கொள்ள முடிவதாக இல்லை.

இன்று ஒரு 26 வயது மதிக்கத்தக்க பெண்ணை சந்தித்தேன். அவளுடைய பெயர் லோலா ஜேன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். பேச்சு முதலில் புகை பிடிப்பதனைப் பற்றியதாக அமைந்தது. அப்படியே நகர்ந்து கஞ்சா புகைத்தால் தான் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவையும், கீமோதெரபியின் தேவையையும் குறைத்துக் கொள்ள முடியும் என்று தனது உறவினர், கலிஃபோர்னியாவில் இருந்து கூறியதாக கூறினாள்.

சட்டென்று எனக்கு உள்ளே மணியடித்தது. இத்தனை சிறு வயது, ஆரோக்கியமாக காட்சியளிக்கும் ஒருத்திக்கு எதற்கு கீமோதெரபி தேவைப்படுகிறது. சற்றே தலையை சாய்த்து எதற்காக கீமோ எடுத்துக் கொள்கிறாய் என்று அன்னியத்தை உடைத்தேன்.

அவ்வளவுதான் அடுத்த இருபது நிமிடத்திற்கு மேல் எனக்கு ரூமாட்டாய்ட் ஆர்த்தரைட்டிஸ் (Rheumatoid Arthritis) பற்றி அத்தனை விபரங்களையும் அவளுடைய சொந்த அனுபவத்தின் ஊடாக வழங்கி சில இடங்களில் அவளுடைய வலியையும் எனக்குள் நகர்த்தி மீட்டெடுத்துக் கொண்டாள்.

இந்த வகை ஆர்த்தரைட்டிஸ் கை/கால் விரல்களின் இணைப்புகளில் சிறு வீக்கமாக ஆரம்பிக்கிறது. முதலில் வலியுடன் ஆரம்பித்து எலும்பு கரைவதும், பின்பு சிறுகச் சிறுக விரல்களை வளைக்கிறது. இது ஒரு மரபணு சார்ந்த வியாதி. தன்னுடை உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே தவறாக நம்முடைய உடல் திசுக்களைத் தாக்குவது autoimmune disorder.

இந்த வியாதி எலும்பு இணைப்புகளில் மட்டும் பிரச்சினை கொடுப்பதோடு விடுவதில்லை. தொடர்ந்த உடல் சோர்வும் அவ்வவப்பொழுது உடல் காய்ச்சல் வழங்குவதுமாக தொடர்கிறது. ஒரு சூழலில் மொத்தமாக முடக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து விடும் நிலைக்கு இட்டுச் செல்வதாக தெரிகிறது.

என்னுடன் பேசிக்கொண்டிருந்த லோலாவின் வீட்டில் நான்கு தலைமுறையாக இது பெண் குழந்தைகளுக்கே அதிகமாக மரபணுவின் மூலமாக கடத்தப் பெற்றிருப்பதாக கூறினாள். இது வரையிலும் இந்த வியாதியை முற்றிலும் குணப்படுத்த மருத்துவத்தில் எந்த தீர்வையும் எட்ட வில்லையாம். மேலாண்மை செய்து வைத்துக் கொள்வது ஒன்றே வழியாம்.

இவர்களுடைய குடும்பத்தில் பல தலைமுறைகளாக இந்த வியாதியை அனுபவித்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒன்றை கவனித்தாகக் கூறினாள். அது கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் இந்த வியாதிக்கான எந்த அறிகுறியும், வலியும் அண்டுவதில்லை என்பதாக. கொள்ளுப்பாட்டி ஒன்று இதனை அறிந்து தொடர்ச்சியாக பதினொரு வருடங்கள் அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றிருக்கிறார்.

இல்லையென்றால் சற்கர நாற்காலியில் அமர நேரிடும் என்ற பயத்தின் அடிப்படையில். அது போலவே இனிமேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில் சற்கர நாற்காலியில் அமரும் நிலையும் ஏற்பட்டதாம்.

லோலாவின் வலியின் அனுபவம் பற்றி சொல்லும் பொழுது கேட்ட எனக்கே மயிற் கூச்சரிப்பு ஏற்பட்டது. பாதங்களை வைத்து ஒரு அடிக்கு இன்னொரு அடி எடுத்து வைப்போம் என்ற எண்ணமே கிலியை ஏற்படுத்துமாம்; ஏனெனில், ஒவ்வொரு அடியும் ஏதோ உடைந்த கண்ணாடி சிதில்களில் எடுத்து வைப்பதனைப் போன்ற ஷார்ப்பான வலியை கொடுப்பதாக அமையும் என்று கூறினாள்.

ஏன் இங்கு லோலாவைப் பற்றி குறிப்பாக பேசி இந்த வியாதியைப் பற்றி பேச வேண்டும் என்று தோணலாம்.  ஏன்னா, இந்த வியாதி பொதுவாக நாற்பது வயதிலிருந்து அறுபது வயதுடையவர்களிக்கிடையே எட்டிப்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால், லோலாவிற்கோ 26ஏ வயதுதான், பார்க்க ரொம்ப ஆரோக்கியமான இளம் பெண். விரல்களை நீட்டி இப்பொழுதே இந்த வியாதியின் அறிகுறியாக சிறிதே நுனிப்பகுதி வளைவதை காண்பித்தாள். கண்களில்தான் எத்தனை அயர்ச்சி. இது ஏன் எனக்கு என்பதாக.

ஒரு பெண்ணின் முட்டையும், விந்தணுவும் இணைந்த மறு நொடியிலிருந்துதான் எத்தனை விதமான மரபணு சமிக்கைகள் இரண்டு பெற்றோர்களின் குணாதிசியங்களை உள்ளடக்கி பரிமாறி, மறுபதிப்பு நிகழ்ந்து அதுவும் சரியான இடத்தில் வைக்கப்பெற்று, சரியான காலத்தில் ஒவ்வொரு உடல் சார்ந்த குணாதிசிய பண்புகள் வெளிக்கிளம்ப காரணங்களாகின்றன.

இதனில் எங்காவது ஒரிடத்தில் ஒரு குளறுபடியென்றாலும் வாழ்க்கை முழுதுக்குமே அந்த உயிரினத்தை அரைகுறையாகவோ அல்லது முழுமையாகவோ முடக்கி விடுகிறது. இத்தனை நமது சக்திக்கும் உட்படாத விசயங்களை எல்லாம் ஏதோ இயற்கையின் ஒரு இயங்கு விதிக்கு உட்பட்டு பெறப்பட்ட இந்த உடம்பையும், பரிணாமம் வழங்கிய களிமண் மண்டையும் வைத்துக் கொண்டு நான் அவனை விட செத்த செவப்பா இருக்கேன், காசு இருக்கு என்று ஜல்லி அடித்துக் கொண்டு ஒருவன் உயிரை இன்னொருவன் எடுத்துக் கொண்டிருப்பதை எந்த மரபணு வியாதி இயக்குகிறது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சுயநலமே உயர்வு என்பதாகப் படுகிறது! அதுவும் மரபணுவில் பொதிக்கப்பட்ட ஒரு விசயம்தானே!!

Thursday, July 18, 2013

கற்சிலையொன்று உயிரெழும்பினால்...

ஒண்ணரை மாதமாகவே பூமி சற்றே சுழன்று தன்னுடைய பூமத்திய ரேகையை இடமாற்றிக் கொண்டதோ என்று நம்பும் அளவிற்கு சியாட்டிலில் கொட்டும் மழை போன்றும், நம்மூர் பருவமழை காலங்களையொட்டியே விட்டும் விடாமல் பெய்யும் மழை போன்றும் இங்கே மழை பெய்து வருகிறது.

நேற்று ஒரே பேச்சு. நான் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு மூணரை மைல் அளவிலே உள்ள பழைய நகரம் கான்யர்ஸில் டொர்னாடோ தரை தொட்டு இரயில் தண்டாவாளத்தையும், நிறைய மரங்களையும், கார்களையும் பொரட்டி போட்டுவிட்டு சென்று விட்டதாக.

சரி என்ன சங்கதி என்று தெரிந்து வருவோமென்று என்னுடைய காலச் சுருட்டியுடன் அந்த பக்கமா நகர்ந்தேன். அங்கே ஒரு பழைய காலத்து டச்சுடன் சிலையொன்று அமர்ந்திருப்பதை எப்போதுமே வைத்தக் கண் எடுக்காமல் அதனைச் சுற்றி காரைச் செலுத்தி கடந்து செல்வதுண்டு.

இன்று கீழே இறங்கி என்னதான் கிடைக்கிதுன்னு நெருங்கினேன். என்னால் நிஜம்மாக அந்த இடத்தை விட்டு நகர மனமேயற்று நாற்பத்தம்பது நிமிடம் சுற்றி வருவது மாதிரி ஆகிவிட்டது. அத்தனை வசீகரம் அந்த முகத்தில்! உச்சி வெயில் வேறு. வண்ணம் குழைத்து அப்பிக் கொள்ள முடியாவிட்டாலும். கிடைத்த வரை சுருட்டிக் கொண்டேன்.

அந்த கருஞ்சிலையின் முகத்தில் உள்ள வசீகரம் என் வீட்டு தோட்டத்தில் மெள்ளமே தவழ்ந்தெழும் ஆங்ரி பேர்டிடமும் ஓட்டி அந்த வசீகரச் சிலைக்கு உயிரோட்டியதைப் போன்ற பிரமை தட்டியதால்... இன்று பக்கம் பக்கமாக வைத்துப் பார்க்கத் தோன்றியது.  :)







இவள்தானோ அவள்!!



Thursday, June 13, 2013

பறவைகளின் உயரம் வேறு -ஒரு மானுடப் பார்வை!

நேற்று வெளியில உட்கார்ந்து நாலஞ்சு பேரு பேசிகிட்டு இருந்தோம். திடீர்னு மரத்து மேலே இருந்து Gray Catbirdவோட ஒரு குஞ்சு ஒண்ணு கீழே விழுந்து வைச்சிருச்சு. விழுந்த மாத்திரத்திலேயே எனக்கு தெரிஞ்சுப் போச்சு நிறைய ஆக்சன் இருக்கப்போவுதுன்னு. அடுத்த நொடி விழுந்து வைச்ச குஞ்சு சுதாரிச்சு எழுத்து தத்தித் தவறி நகர ஆரம்பிச்சிச்சு.

எங்கயோ சுத்திக்கிட்டு இருந்த அணிலொன்று சரசரவென நகர்ந்து மரத்தின் அடிக்கிளையை நோக்கி நகர அம்மா பறவை தாழப் பறந்து வந்து காச்சாமூச்சான்னு அணிலை பார்த்து சத்தம் போட ஆரம்பிச்சிச்சு தனது சிறகுகளை எல்லாம் கோவத்தில விரிச்சு அணிலை பயமுறுத்துவது மாதிரி.

பக்கத்தில அமைதியா இரை தேடிட்டு இருந்த Northern Cordinal, Eastern Towhee and Brown Thrasherநு ஒரு பெரிய பட்டாளமே ஒண்ணு கூடி வந்து சிலது அணிலை நோக்கி பறந்து போயி மேலே இடிக்கிற மாதிரி போயி மிரட்டினது. சிலது தனது சிறகுகளையும், வாலையும் ஆட்டி எத்தனை அந்த அணிலை மிரட்டி அந்த குஞ்சிடமிருந்து தூரமா வைச்சிக்க முடியுமோ அத்தனைக்கு உதவியா நின்னு பார்த்துகிச்சுங்க.

இத்தனையும் நான் பார்த்துக்கிட்டே ஓடு விவரணையில இறங்கி அந்த நிகழ்வை அங்கே உட்கார்ந்திருந்தவிங்ககிட்ட விளக்கிக்கிட்டே என்னோட கேமராவுடன் விளையாடிட்டு இருந்தேன்.

ஆனா, அந்த நிகழ்வு நடந்திட்டு இருந்தது கொஞ்சம் அடர்த்தியான கருப்பு அப்பிய இடமென்பதாலும், எங்களுக்கும் அவைகளுக்குமான தூரமும் கொஞ்சம் அதிகமென்பதாலும் சரியான படி புகைப்படமாக்க முடியல.

அந்த குஞ்சுப் பறவை இப்பவே சிறகெடுக்க ஆரம்பிச்சிருக்கிறதாலே உயர எவ்வி பறக்க முடியாம, தரையிலிருந்து ஓர் ஒண்ணரை அடி உயரத்திற்கு பறந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. பின்னே புதருக்குள் நடந்து போயி மறைந்து கொண்டது.

இருந்தாலும் அவைகள் கூடி நின்று போராடினது, நமது பிழைத்து கிடப்பதற்கான ஆயத்தங்கள் எப்படியெல்லாம் நம்மை விட கீழ் தங்கிய விலங்கினங்களாக கருதப்படும் உயிரினங்களில் கூட நன்றாக ஆழ விதைக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், விதிவிலக்காக மனிதன் மட்டுமே அந்த தன்முனைப்பற்ற உள்ளுணர்வின் முனையை மழுக்கி சுயநலத்தின் உச்சத்தில் இருந்து எந்தந்த காரணங்களுக்காகவோ பிறர் சாக மனமிறங்கா நவீன விலங்கினமாகி இருக்கிறோம் என்று நிரூபித்து வருகிறோம்.

இந்த சுயநலப் போக்கே நம்மை பரிணாம ஏணியில் ஏற்றி வைக்க காரணமானதும், கீழே இறக்க தேவையானதாகவும் காலம் சுற்றி வருகிறது.

Tuesday, April 16, 2013

கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - II

இது டந்த நேர்காணல் பதிவின் தொடர்ச்சி. நிறைவுப்பகுதி!


கவிதா:- நீங்கள் நிறைய படிக்கிறீர்கள் என்று தெரிகிறது..எனது தூசி தட்டப்பட்ட நூலகம்.... இதை தவிர உங்களின் பொழுதுபோக்கு...

தெகா: நிறைய மேய்ஞ்சேன்னு ஒத்துக்க மாட்டேன். ஆனா, அதன் பாதையில் செல்வதற்கு இன்னமும் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்னு வேணா சொல்லலாம், அந்தப் பாதையில் இருப்பதுனாலோ என்னவோ குறைவாகவே இங்க எழுத முடியுது :). மற்றபடி ஏனைய பொழுது போக்குன்னா, பிடிச்சவங்களோட நீண்ட நேரம் கடலை வறுத்து புகையை கக்க வைப்பது; அப்பாம்மா, துணைவி, பிடித்த நண்ப/பிகள் கூடன்னு. நான் ஆர்வமூட்டக் கூடியது என்று நினைக்கிற விதத்தில் அமைந்த சில பதிவுகளையும், என்னோட சொந்த கிறுக்கல்களையும் அவங்கள வம்படியா பிடிச்சு உட்கார வைச்சி, அவங்க நான் வாசிக்கிறதை கேக்கும் பொழுது கஷ்டப்படுவதை பார்த்து ரசிப்பது.

மேலும் பிடியளவே உள்ள நண்பர்கள் கூட அப்பப்ப அரட்டைக் கச்சேரி நடத்துவது. பிறகு என் குழந்தைகள், அதிலும் குறிப்பா இப்பொழுது என்னய ஹை டிமாண்டில் வைத்திருக்கும் 1 வயது பெண் புதுசு, புதுசா நானே வடிவமைத்து வாய் தாலத்தில் மெட்டிசைச்சு போடும் குத்தாட்டாம் அவளிடத்தே ஹிட்டாகி சூடு பிடித்திருப்பதால் # 6ல் கூறியபடியே ரீ-சார்ஜ் போட்டுக் கொள்வதில் இதுவும் கொஞ்சம் கூடவே எனக்கு உதவுகிறது. ட்டி.வியில் பொழுது போக்குன்னா டாகுமெண்டரிகள் பார்ப்பது.

கவிதா:- உங்கள் சொந்த ஊர், அதன் சிறப்பு, வெறுப்பு ஏதாவது.

தெகா: என்னோட சொந்த ஊர் கரம்பக்குடிங்க. புதுக்கோட்டையிலருந்து பேருந்தில் புழுதி பறக்க ஒரு 40 கிலோமீட்டர் பயணம் செய்தால் பட்டுக்கோட்டைக்கு போகிற வழியில் உள்ள ஊர். அந்த ஊருக்கே இன்னமும் தன்னை எந்தப் பக்கம் சேர்த்துகிறதுன்னு தெரியாம முழிக்கிற ஒரு கிராமமுமல்லாத சிறு டவுனுமல்லாத ஊர் 12,500 மக்களோட. என் சொந்த ஊரைப் பற்றி சொல்லிக்கணுமின்னா என்னோட டீனேஜியத்துப் பருவம்தான் நான் அங்கே வயசுக்கு வந்தது ;), நண்பர்களோட பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு மீன் பிடிச்சு விளையாண்டது.

நாவற்பழம் பறிக்க ஐந்து கிலோமீட்டர் மிதிவண்டி அழுத்தி மரத்திலயே குரங்குக் கணக்கா நாள் முழுக்க தொங்கிறது இப்படி எத்தனையோ மனசில பசுமையா இருக்கிற ஞாபகங்கள். இப்போ எனக்கு அங்கே ஒண்ணுமே இல்ல. என்னோட அப்பாம்மாவை தவிர்த்து சொல்லிக்கிற மாதிரின்னு இருந்தாலும், இன்னமும் ஊர் மேல ஒரு இனம் புரியா காதலுண்டு.

வெறுப்புன்னா - மக்கள் ஆசையை மட்டுமே நிறைய சுமந்துட்டு ஆனா உழைக்காம சாப்பிட நிறைய பேர் ரெடியா இருக்கிறதுனாலே நிறைய பொறாமையை மட்டுமே ஊர் சுவாசிக்க காற்றாக உற்பத்திதிட்டு இருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. மேலும் இயற்கையின் பொருட்டு கடந்த கால பசுமை மறைந்து எங்கும் ஒரே கள்ளிக்காடா மாறிட்டு இருக்கிறது. அதனைப் பற்றி கவலைப் படாமல் மென் மேலும் எல்லா நிலங்களிலும் யூகாலிப்டஸ் மரக் கன்றுகள் நடுவதும், வீடுகள் பெருகி நியுயார்க் மான்ஹட்டன் ரேஞ்சிக்கு நிலத்தின் விலை எகிறிவருவதும் எரிச்சல்.


கவிதா : பதிவர் சந்தோஷ் எப்போது உங்கள் பெயரை எழுதினாலும் "தோசை தெகா" என்று எழுதிகிறார். அதனால் நீங்கள் சமையல் செய்வீர்கள் என்று அறிவேன். சமையல் என்பது இந்தியாவை பொறுத்தவரை பெண் என்று தான் இன்றளவும் இருக்கிறது. பற்றாக்குறைக்கு நம் மீடியாக்கள் சமையல் என்பது பெண்ணுக்கு மட்டுமே சொந்தம் போல் குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்து மனதில் பதியவைத்து விடுகின்றன. இதைப்பற்றி உங்களின் கருத்து.

தெகா: "தோசை தெகா" அட இது வரைக்கும் எனக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறதை சொல்லவே இல்லை. சந்தோஷ், கொஞ்சம் எட்டாம தூரத்திலதான் இருந்து போனாரு இல்லன்னா பாவம் அந்தாளை வைச்சே என்னோட எக்ஸ்பெரிமெண்ட் சாப்பாட்டு வகைகளை அவர் மேல வைச்சு ஒரு ஆராய்ச்சியே நடத்தி முடிச்சிருக்கலாம். அவருக்கு ஒரு சட்னி பண்ணினேன் பாருங்க, அப்படி ஒரு சட்டினியை எங்குமே சாப்பிட்டுருக்க வாய்ப்பே இல்லை. சமையலறையில் இருந்த அந்தனை முந்திரிப் பருப்பிலுருந்து, நிலக் கடலை, பொட்டுக்கடலை வரைக்கும் போட்டு ஒரு பஞ்ச் பண்ணி சட்டினியென படைத்தேன், தோசை கடைசியில எனக்கே கிடைக்கலங்க :)).

இந்த சமையல் விசயமாங்க, அது எல்லாம் தானாகவே செய்ய வந்துடும் ஏன்னா பசின்னு ஒண்ணு இருக்கில்ல, அப்படி அதுபாட்டுக்கு வரும் பொழுது யாரும் செஞ்சுப்போடன்னு ஆள் பக்கத்தில இல்லைன்னா தானாகவே தடபிபார்க்கிற மனசு வந்துடும். ஆனா, நம்மூர் சூழ்நிலையில் அதுக்கான அவசியங்களை பெரும்பாலானவர்கள் உருவாக்கிக் கொள்வதில்லை. நம் சமூகத்தில் அதற்கான அவசியமும் ஒரு நாள் வருமென்பதனை உணர்த்துவதுமில்லை. ஆனால், சமையல் என்பது என்னயப் பொறுத்த மட்டில் ஒரு அல்டிமேட் அன்பைக் காட்டும் ஒரு போர் கொல்லை. அங்கே வைத்து எல்லாவற்றையும் சரிசெய்து விடலாம் என்பதேயது! என்னோட மேற்கு மலைக்காடுகளின் தங்கலின் போது, எனக்கு இந்த சமையல் விசயம் ஒரு சர்வைவல் விசயமாத்தான் என்னிடம் ஒட்டிக்கிச்சு . அங்கிருந்து கற்றுக் கொண்டது ரொம்பவே கை கொடுத்தது இங்கு வந்து என் சமையல் கைவரிசையை பல இனமக்களிடம் காமிச்சு ஆஹா, ஒஹோ பட்டம் வாங்க. இருந்தாலும், நம்ம ஆட்கள் இந்த அனுபவத்தையும் ரொம்பவே மிஸ் பண்றாங்க, கமல் மட்டும் படங்களில் அப்பப்போ செஞ்சு காமிப்பார், வாஞ்சையோட...

ஆனா, இப்போ என்னயும் உட்கார வைச்சி சமைச்சுப் போட ஒரு ஆள் வந்தாச்சு. ரொம்ப சுகமாத்தான் இருக்கு. அப்படியே பழகிட்டா நானும் அதே குட்டைதான் :). இன்னொன்ன நல்ல கவனிச்சுப் பார்த்திங்கன்னா, சமையற் கலை வகுப்பிற்கும் சரி, எந்த மாதிரி உணவு விடுதிகளா இருந்தாலும் சரி பெருமளவில் சமையலில் ஈடுபட்டுருப்பது ஆண்கள்தானே? அது என்னாமாதிரியான முரணுங்க, அது.


கவிதா: பெண்' மாதவிடாய் இருக்கும் போது வீட்டில் தனியாக உட்கார வைப்பது, கோயிலுக்கு அனுமதிக்கப்படாததற்கு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கின்றன். அதற்கு நீங்கள் உடன்படுகீறீர்களா?

தெகா: அது என்னங்க "பெரிய மருத்துவ சம்பந்தமான" காரணங்கள் எனக்குத் தெரியலையே. எனக்கு தெரியறது இதுதாங்க அந்த நாட்களில் - உடம்பும் மனசும் சோர்வா இருக்கிறது அம்புட்டுத்தேன். மற்றபடி அந்தப் பதிவில பின்னூட்டங்களில் அடிச்சு விளையாண்டு இருப்பாங்க பாருங்க, மத்த விசயங்களை.

கவிதா: "ஒரு பெண்ணை உடம்பபை தாண்டி அவளின் மனதை தொட்டு அன்பை செலுத்த வேண்டும் - " - உங்களின் ஊரணிப்பார்வையில்...

தெகா: உண்மைதானே அது. அந்த மனசில மட்டுமே தானே நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் பின்னால் வரும் காலங்களிலும், சூழ்நிலை எப்படியாக மாறினாலும். இல்ல, உடம்பை வளர்த்து காமித்தோ, நல்ல ட்ரெஸ் பண்ணி, தலைக் கேசத்தை கோவிக் காமித்தோ மனதை வெல்ல முடியுமா? அப்படியே வென்றாலும் அது அப்படியே நிற்குமா இவையெல்லாமே உதிரும் காலம்தோரும்?

கவிதா:- குழந்தைகள் பெற்ற தம்பதிகளின் விவாகரத்து அவர்களின் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது (எந்த வயது குழந்தையாக இருந்தாலும.)

தெகா: மறுப்பதற்கில்லை. கண்டிப்பாக பாதிப்புறும், ஆனால் அவ்வாறு பாதிப்புறும் விகிதாச்சாரத்தை கூட்டுவதும், குறைப்பதும் அடல்டாகிய நமது கைகளிலேயே உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரிய நேரிட்டால் அப் பிரச்சினையை இரு அடல்டுகளுக்கிடையேனா பிரச்சினை என்ற விகிதத்தில் மட்டுமே அணுகி குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அத்துனை விசயங்களையும் கவனித்துகொள்வது, இன்றியமையாததது. அவ்வாறு அக் குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவரை பிரிந்து வளரும் சந்தர்ப்பத்தில் மற்றொரு பெற்றோரின் பொறுப்பில் வளரும் பொழுது, தனக்கு எதிரியான முன்னால் கணவனையோ/மனைவியைப் பற்றியோ இல்லாத அவதூருகளை பிஞ்சுகளின் மனதில் விதைப்பதை, தாம் அந்த குழந்தைகளின் வாழ்வையும், மனதையும் பாதிக்கிறோமென்றும், பின்னாளில் அதுவே பேக் ஃபயர் ஆகக் கூடிய வாய்ப்பாக இருக்குமென்பதனையும் அறிந்து நடந்து கொள்வது ரொம்ப நலம் பயக்கும், அக் குழந்தைகளுக்கு பிற்காலத்தில்.

கவிதா: இந்திய குடும்ப வாழ்க்கை முறைக்கும் அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் இருக்கும் அதிகபட்ச நன்மை தீமைகள்? அமெரிக்கவாழ் இந்தியர்கள் படும் கஷ்டங்கள்.

தெகா: இங்க குழந்தைகளுக்கு தீர்வு எடுக்கும் முடிவை ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் அவங்க கையிலயே கொடுத்திடுறாங்க, அது ரொம்பவே நல்ல விளைவுகளை ஏற்படுத்துறதா தெரியுதுங்க. அது ஆண்/பெண் என்றாலும் தான் முயன்று பார்க்கும் முயற்சி தோல்வியுற்றாலும் அதன் மூலமாக கிடைத்த அனுபவங்கள் அந்த தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வழங்குகிறது, அதுவே ஒரு பொறுப்புள்ள அடல்டாக வாழ்வதற்கும், நிறைய விசயங்களை சாதிப்பதற்கும் உறுதுணையாக இருக்க உதவுகிறது. இதில சில தீமைகளும் உண்டுதான் மறுப்பதற்கில்லை, ஆனால் தவறுகள் நிகழ்ந்து விடுமோன்னு பயந்திட்டே இருந்தா எப்படி அடுத்தடுத்து வரப் போகின்ற அனுபவங்களை தீர்க்கமாக அணுகி அதனில் வெற்றி பெறவும் முடியும். இப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்கவிடும் சமூகத்தால், சும்மா நடித்துக் கொண்டே தன்னோட முழு வாழ்க்கையையும் யாருக்காகவும் வாழ்ந்து தீர்த்துவிட முடிவதில்லை, கொஞ்சமே உண்மையாக வாழ்கிறார்களோன்னு தோணச் செய்கிறது. ஆனா, இதனையே அப்யூஸ் பண்ணுவதனையும் மறுப்பதற்கில்லை.

நம்மூர்ல இதுக்கு அப்படியே எதிர்மறையாக நடை பெறுகிறது. இதுனாலேதான், குடும்பமென்ற ஒன்று அமைத்துக் கொள்ளக் கூட பணம் கொடுத்து மணம் செய்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, யாரோ பார்த்து வைத்த பெண்ணை மண முடித்துக் கொள்ள முடிகிறது, அதனில் ஏதாவது பிரச்சினையென்றாலும், யாரையாவது விரல் சுட்டி காட்டி விட்டு எனக்கென்ன என்று இருந்து விட முடிகிறது... கடைசி வரைக்கும் திருமணமான தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமலேயே சமூகத்திற்காக வாழ்ந்து முடித்திடும் நிலையும் அதிகமாக நடைபெறுகிறது. இப்படி எத்தனையோ, தவறே தான் செய்பவன் கிடையாது என்ற மன நிலையிலையே லயித்து உயித்து வாழ்ந்து அடுத்தவர்களின் உயிரை வாங்கிவிட்டும் சென்று விடுகிறோம்.

அமெரிக்காவில் இந்தியர்கள் படும் கஷ்டமின்னா, சில பேர் இங்க ஒரு கால் அங்கே ஒரு கால்னு வைச்சிட்டு முழுமையா இரண்டு பக்கமுமே வாழமே, குழப்பத்திலயே குழந்தைகளிலிருந்து தன்னோட சுற்றி வாழும் அணைவரையும் படுத்தி எடுத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு மன நிலை இல்லாத பட்சத்தில், ஏதோ அங்கே கிடைக்காத ஒரு வாழ்க்கைத் தேடித்தானே இங்கு வந்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பாக மகிழ்ச்சியாத்தான் இருந்தாகணும், அப்படியில்லென்னா வேஸ்ட் எல்லாமே :)).


கவிதா: காதல் - எந்த வயது காதல் முதிர்ச்சி அடைந்ததாக இருக்கும், வெற்றி பெரும். ? மொழி,இனம், நாடு இவை கடந்த காதல் கல்யாணம் வெற்றி பெருமா?

தெகா: என்னோட "ஏன் நடிக்கணும்" பதிவு படிச்சீங்களா, அதில ரொம்பத் தெளிவா நம்மூர்க் காதல் திருமணங்கள் வெற்றிப் பெறணுமின்னா என்னன்ன அதுக்கு அடிப்படைத் தேவைகள்னு பேசியிருப்பேன். காதலுக்கு முதன்மைத் தேவை... எதனையும் திறந்த மனதுடன் அணுகும் பண்பு, மன முதிர்ச்சி, பொருளாதார தன்னிரைவு, ஒருவரின் மீது ஒருவர் வைக்கும் அசைக்க முடியா நம்பிக்கை இது போல பல பண்புகளை வளர்த்துக்ககணும் அந்தக் காதலை, மணத்தை கடைசி வரை கொண்டு போய் சேர்க்க வேண்டுமாயின்.

மனப் பொறுத்தம் அமைந்துவிட்டால் அது எல்லா தடைகளையும் தாண்டி வந்துவிடும் மேற்கூறிய ஏனைய "தேவைகளுடன்." இது இனம், மொழி, நாடு கடந்து நடை முறை படுத்தக் கூடியதுதான் என்றாலும் அசாத்திய மனத் துணிவும், வாழ்க்கை சார்ந்த தெளிவுமில்லையானால் அதுவே பின்னாளில் பெரும் இடைஞ்சலாக இருக்கக் கூடும், வரும் வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் பொருட்டு.

கவிதா: உங்களிடமிருந்து அடுத்தவர்கள் (குறிப்பாக நான்) கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்/குணம்/பண்பு ?

தெகா: வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே வாழ்ந்து பார்க்கணுமின்னு எல்லாச் சூழ்நிலையிலும் நினைக்கிற மனசு. எத்தனை முறை வீழ்ந்தாலும் வாழ்க்கையை ஒரு கடமையா வாழ நினைக்காம, திரும்பவும் ஆசை ஆசையாக வாழ நினைத்து எழுந்து நிற்கிற குணம். மற்றவங்களுக்கு எடுத்துக்காட்டா இருக்கணுமின்னுட்டு வாழ்க்கை பூராத்தையும் முகமூடி போட்டு வாழ்ந்திட்டு, எனக்கின்னு வரும்பொழுது உள்ளே வெறுமையா உணர்ரதில எனக்கு உடன்பாடு கிடையாதுங்க. அதுனாலே, எனக்கு எது சரின்னு படுதோ, அதனை எடுத்து நடத்துறேன், அதனையே என்னை சுற்றி இருப்பவர்கள் சரின்னு பார்க்கும்படியும் பக்குவப்படுத்துறது, அதுவே தவறாக என்னய பார்க்கும் பொருட்டு அது அவர்களின் பார்வைன்னு ஏற்றுக்கிற பக்குவத்தை எனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் பாதையிலன்னு சில கோடுகளில் பயணித்திட்டு இருக்கேன். இது போன்ற வரையறை செய்யப்பட்ட பாதையிலிருந்து விலகி, முடிவற்ற கோடுகளில் பயனிப்பதால் காலத்திற்கேற்ப வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலையோட இருக்க முடியுது. இது போன்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள எல்லோரும் தங்களை தயார்படுத்திகொண்டால் எத்தனை பிரச்சினைகள் காணமலே போய்விடுமென்று நினைக்கும் பொழுது சற்றே அயர்சியாக இருந்ததுண்டு.


ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :

1. உங்களுக்கு பிடித்த சிறந்த 3 புத்தங்கங்கள்

1) த அல்கெமிஸ்ட் 2) கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் 3) ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த தேர்ட் சிம்பன்சி.

2. ஜார்ஜ் புஷ் ஷிடம்- பிடித்த ஒரு குணம்

அவரின் அசட்டுத் துணிச்சல், அதனை சொல்லிட்டு ஹக் பிக்னு சிரிச்சு வைக்கிறது.

3. உங்களின் மனைவியின் சமையலில் உங்களுக்கு பிடித்தது.

கலவைச் சாதங்களில் சிலதுகள்(மாங்காய், தேங்காய் இப்படி...).

4. இயற்கை நேசிக்கு பிடித்த கலர், பிடித்த இடம் (இந்தியாவில்), பிடித்த உடை

இப்படியெல்லாம் யோச்சித்ததே இல்லை - ட்ராபிகல் கலர்ஸ்னு. பிடித்த இடம் நிறைய இருக்கே , மலையும் மலையும் சார்ந்த இடங்களும். அமைதியா யாருமே இல்லாத இடங்கள். பிடித்த உடையன்னா "லூஸ் குலோத்திங்" கவ்வி பிடிக்காத எல்லா உடைகளும்.

5. உங்கள் குழந்தைகளுக்கு இந்திய கலாசாரத்தை சொல்லிகொடுத்து வளர்க்கறீர்களா?

குறிப்பாக இப்படித்தான்னு இருக்கிற மாதிரி எந்தவொரு அடையாளமும் காமிச்சு வாழ்றதில்லை, அப்படியே எப்படியாக நானிருக்கேனோ அதனையே பார்த்து வேணுங்கிறதை எடுத்துட்டு வேணாததை விட்டுட்டுப் போனாலும் அப்படியே எடுத்துக்கிற மனசோட நான் இருக்கேன். திணிப்பது இல்லை.

6. எல்லா பொருளிலும் ஏதோ ஒரு பதிவு நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இன்னும் எழுத வேண்டும் என்று நினைக்கும் ஏதாவது?

நிகழ்வுகள் நடைபெற நடைபெற நமது எண்ணத்தையும் அதனைச் சார்ந்து பதிந்து வைத்து விடுவோம், அவ்வளவுதான். அதுவும், இது என்னோட வளர் நிலையில் நான் எங்கிருந்துருக்கிறேன் என்பதனை பிரிதொரு நாளில் திரும்ப புரட்டிப் பார்க்க உதவும் என்ற எண்ணத்தில்தான்.

7. அமெரிக்காவை விட்டு துரத்திவிட்டால் என்ன செய்வீர்கள்?

அடச் ச்சே ஏண்டா இவ்வளவு கால தாமதம், அப்படின்னு நினைச்சிக்கிட்டு சந்தோஷமா மூட்டை, முடிச்ச கட்டிக்கிட்டு அடுத்த டெண்ட் அடிக்க கிளம்பிட வேண்டியதுதான்.

8. உங்களுடைய வலைபதிவில் தருமி' என்ற பெயரை நிறைய பார்த்தேன்.ஏன் ன்னு சொல்ல முடியுமா?

அத அவர்கிட்ட இல்லே கேக்கணும் :). இருந்தாலும், அவரு தன்னோட எண்ணத்தை என் பதிவில் விட்டுச் செல்ல காரணமா நான் நினைக்கிறது என்னன்னா "பயகிட்ட சொன்னா எடுத்துக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறான்"னு நினைச்சு அப்பப்போ வந்து அவரோட தடத்தை விட்டுட்டு போறார் போல. இன்னொன்னு, அடுத்த கேப்பங்கஞ்சி நீங்க கொடுக்கப் போறது அவருக்காகத்தான் இருக்கணும், ஆனா, நிறைய தோண்டணும் அங்கே, செய்வீங்களா??

தெகாவின் இன்றைய தத்துவம் :- காகா, காகாவா இருந்தாத்தான் அதுக்கு அழகே... அதுவே தான் மயிலுக்கும்!




Thursday, April 04, 2013

மழை திருடும் குழந்தமை: w/photos...


இது ஓர் அழகிய மழைக்காலம். எப்பொழுதும் மழையென்றாலே எனக்கு அலாதிப் பிரியம். அது எனது குழந்தமையை விடாது உசிப்பு எழுப்பி மீண்டும் துளிர்க்க வைத்து விடும் ஒரு கார்காலச் சங்கிலி. இங்கு நேற்றும் இன்றும் விடாது மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்த மழை ரசிப்புத் தன்மையை உளத்திலிருந்து பிரித்தெடுக்க ஒரு வயதிற்கு ஒரு சூழல் என காலம் தவாறது பல வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கொடுத்து, வயதானவர்களின் அனுபவத்தில் ஒரு கிலியையையும் சேர்த்தே செருகி வைத்து விடச் செய்யும். அது சாலையோரத்து வியாபாரியில் தொடங்கி, லாரி ஓட்டும் ஓட்டுநரைத் தொட்டு, பேருந்திற்கு பரபரப்புடன் காத்திருக்கும் அத்துனை பேரையும் வஞ்சகமில்லாமல் நனைத்தெடுத்து அவர்களின் முகத்தில் ஒரு சேர இறந்த போன குழந்தமையை கன நேரம் மறக்கடித்து துள்ளலானா முக மலர்ச்சியையும், அழுத்தி நமத்துப்போன வயோதிக முக வாட்டங்களையும் ஒரு சேர வெளிக் கொணர எத்தனிக்கும் இந்த மழை.

எனக்கும் அது போன்ற ஒரு கிலியை என் மனதினுள் விதைத்து என் குழந்தமையை திருடிச் செல்ல தலைப்பட்டது. சிறு வயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் நான் கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் விதமாக கூரையை பொத்துக் கொண்டு ஒரு சில இடங்களில் ஒழுகி காமித்தது. வீட்டில் பின்புறமாக அடுக்களையை ஒட்டி ஒரு கதவு. நெட்டித் திறந்தால் வெட்ட வெளிக்கு எடுத்துச் செல்ல அத்தனை அம்சக் காட்சிகளையும் உள்ளடக்கியவாறு அமைந்திருக்கும் ஒரு மந்திரக் கதவது.

தாழ்வாரத்தை உடைத்துக் கொண்டு அத்தனை மழை நீரும் உன் அடுக்களைக்குள் கொண்டு வந்து கொட்டுகிறேன் பார் என்று விடாது கொட்டித் தீர்க்கும். பாட்டி அந்த மழையை நைய்ய புடைத்து திட்டியவாரே கிடைக்கும் பாத்திரங்களைக் கொண்டு இரைத்து கொட்டுவாள். பின்பு அப்பா சிறுதொழில் செய்து வந்ததால் வாடிக்கையாளர்களின் வந்து போதலும் பாதிக்கப்பட்டது. இவைகளைப் போன்றே பல சில முகங்களை காட்டி குழந்தமை திருடல் தொடர்ந்து கொண்டே வந்தது. இருந்தாலும் நான் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. இது ஓர் இயற்கையின் திட்டமிடல். நம்மை அதன் முன்னால் மண்டியிடச் செய்யும் அணுகூலம். அந்த சூத்திரத்தை வென்றெடுப்பவனுக்கே இந்த மொத்த பூமியின் அத்துனை அழகையும் ஒரு சேர கையளித்து அவனை தன்னுடன் ஆரத் தழுவி தன்னுள் கரைத்துக் கொள்கிறது.

அதான் நீட்சியாக இன்று பல நாட்களாக எண்ணத்தில் வைந்திருந்த நீர்க்குமிழ் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. இருப்பினும் குழந்தமைத் திருடல் விடுவதாய் இல்லை. எனது குடையைத் தாண்டி மழை சில் சில்லென்று என் முதுகையும், புகைப்படக் கருவியின் லென்ஸை தொட்டு என் வயோதிக வாடலை படரச் செய்ய எத்தனித்தது. புறம் தள்ளி கிடைத்ததை சுருட்டிக் கொண்டு வந்து விட்டேன். இதோ உங்களுடன் ஒரு சில மழைக்காட்சிகள்.

மழையும் நானும் என்று எழுத வேண்டுமானால் என்னால் குறைந்தது இருநூறு பக்கங்கள் எழுத முடியும் என்றே எண்ணுகிறேன். எப்பத்தானோ! :)

பி.கு: மேலும் ஓய்ந்து போன ஒரு மழை பற்றிய நினைவோடை வாசிக்க - பூவன் கடவுளாகிப் போனான்:காட்டாறு
****************************
********************

1) ஒரு தென்மேற்கு பருவ மழை காலத்தின் போது தொப்பலாக நனைந்து போன கரம்பக்குடி வீதியும், மரங்களும் அந்த ஓட்டு வீடும்.


2) மஞ்சள் வெயிலுனூடாக ஒரு அம்ம்மெரிக்கா மாலை மழை நேரம்.

 

3) இலைகளுக்கு வலிக்காமல் மெல்ல பட்டுப்பரவி உருண்டு திரண்டு...


 


4) இன்றைய மழையில் துளித் துளியாய் முகிழ்ந்து, வெடித்து குடைக்குள் எனையும் காட்டியவாறே...

Wednesday, March 20, 2013

கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - I

இந்த கேப்பங்கஞ்சிக்காக உழை உழைன்னு உழைத்த கவிதாவை எப்படியாவது கெளரவித்து காட்டிவிட வேண்டுமென்று அவரது தளத்தில் வெளியிடப்பட்ட எனது இந்த நேர்காணல் மறுபிரசுரிப்பு செய்ய பல முறை கேட்டும் எனக்கு அனுமதி வழங்காமலேயே கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

ஒரு வழியாக மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டு சரி எடுத்து போட்டுக் கொள்வதனால் போட்டு கொள்ளுங்கள் என்று அனுமதியும் கொடுத்தாகி விட்டது. அப்படி போராடி இதன் மறு பிரசுரிப்பு வாங்கியதற்கான காரணமாக சட்டென்று என் மனதில் படிவது என்ன வென்றால், பத்தி பத்தியாக நான் சிந்திச்சு எனது பார்வையை பகிர்ந்து கொண்டதை விட, இதற்கென பல மாதங்கள் என்னுடைய அத்தனை பதிவுகளையும் வாசித்து, அதனின்று கேள்விகளை உருவி மீண்டும் எங்கும் அடி பிராளமல் நான் சென்று கொண்டிருக்கிறேனா என்று என்னை மறு தோண்டுதல் செய்த கவிதாவிற்கு நன்றி கடனாகவாவது இருந்து விட்டு போகட்டுமே என்று மொத்த நேர்காணலையும் இரண்டு பகுதிகளாக பிரித்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இது எனது கடந்த வருடங்களுனுடைய முக்கிய பதிவுகளின் சாரம்சமாக அமையும் என்றால் மிகையாகது. நன்றி! Squirrel Kavitha, are you happy now! 

இதோ அந்த ஆறிப்போன கேப்பங்கஞ்சியை மைக்ரோவோவ் பண்ணி கவிதாவுடன் சேர்ந்து உங்களுக்காகவும்...

**************************************


2005ல் வலைப்பதிவு தொடங்கியுள்ள பிரபா என்ற தெகா'வின் முதல் பதிவிலே கண்டெடுத்த வார்த்தைகள் "தெக்கிக்காட்டானுக்கு முகமூடி கிடையாது, பெயரிலே தெரிந்திருக்கலாம்." முகமூடிகளோடு எழுதும் பலரின் மத்தியில், முகமூடி என்று ஒன்று இல்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், ஓரளவிற்கு தன்னை தானாக இருக்க வைத்துக்கொண்டு, எல்லாவிதமான பரிமாணங்களிலும், எல்லா பொருள்களிலும் எழுதக்கூடிய நண்பர் தெக்கிக்காட்டான் இன்று எங்களுடன்.

லிவிங்ஸ்மைல் வித்யா'விற்கு பிறகு கேள்விகள் கேட்க மிகவும் யோசித்த ஒரு நண்பர் இவராகத்தான் இருப்பார். இது வரை மிக எளிதாகவே எல்லோரிடமும் கேள்விகள் கேட்டு இருக்கிறேன். ஆனால் தெகாஜி ஐய் கேள்விக்கேட்க 2005-08 வரை அவருடைய எல்லா பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து கேட்க வேண்டியதாக இருந்தது. காரணம் எதுவுமே கான்ரோவா, அவரை துருவி கேட்கும்படியாக இல்லை. இப்பவும் இவரை என்ன கேட்பது என்ற தெளிவில்லாமலேயே...


இதோ தெகா...

அடக் கொடுமையே! 2005-'08வரைக்கும் ஒரே மூச்சில படிச்சீங்களா? ஏன் டாக்டர் ஏதும் அறிவுருத்தினாரா எப்படித் தூக்கம் வராதவங்களுக்கும் தூக்கம் இது போன்ற போரிங்கான பதிவுகளை படிப்பதின் மூலமாக தூங்க வைக்க முடியுங்கிறமாதிரி. எப்படியோ பொழச்சுப் கெடந்து வந்து கேள்வியும் கேட்டுறீக்கலே அதுவும் இன்னமும் அந்தத் தூக்கத்திலிருந்து "தெளியாமலயே..." :)). அதுக்காகவாவது இந்தப் பதில்களை தாரேன், திரும்பவும் தூங்கவாது பயன்படுத்திக்கோங்க.

நகைச்சுவை ஒரு பக்கம். பை த வே, கவிதா உங்கள் அனைத்துக் கேள்விகளும் ரொம்பவே ஆழமாக உணர்ந்து இங்கு கொணரப்-பட்டதாகவும் என்னய நானே உட்முகமாக மேலும் பார்த்துக் கொள்ள வேண்டி கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவும் எண்ணச் செய்தது, உங்களின் உழைப்பும் அது சார்ந்த இந்த கேப்பங்கஞ்சியும். வாழ்த்துக்கள்! நன்றி!!

இப்பக் உங்க கேப்பங்கஞ்சி குடிச்சிக்கிட்டே... பேசுவோமா...


கவிதா: வாங்க தெகாஜி..எப்படி இருக்கீங்க. .வீட்டில் அனைவரும் சுகமா..? அமெரிக்காவில் இருக்கீங்க.அங்கேயிருந்து ஆரம்பிக்கலாமே. பொழுது விடிந்து பொழுது போன.. அமெரிக்காவை நம்பியே உலகம் இருப்பது போன்ற பிரம்மை அதிகமாகிக்கிட்டே போகுது...அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் கண்டிப்பாக அடிப்படுகிறோம், அடிப்படுவோம் என்று தெரிகிறது. 1 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று சமீபத்திய சர்வே சொல்லுகிறது. அங்கே இருக்கும் நம் இந்தியர்களுக்கு வருங்காலத்தில் பாதுகாப்பு இருக்குமா? உங்களால் நிலைமையை ஏதாவது கணிக்க முடியுமா .?

தெகா:- சுகத்துக்கு என்னங்க குறைச்சல், மனசு நம்ம கையாண்ட இருக்கிறதுனாலே எதைதை எப்படி பண்ணிக்கோணுமோ அப்படிப்படிப் பண்ணிப் போட்டு சந்தோஷமா வைச்சிக்க வேண்டியதுதான். எனக்கு இந்த சந்தோஷம் கடையில எடை போட்டு காசு கொடுத்து வாங்கிட முடியுங்கிறதில நம்பிக்கையில்லைங்-கோவ்(அதாவது புறப் பொருட்களின் மூலமாக). இது போலவே வீட்டில இருக்கிறவங்களையும் மனச வைச்சிக்க சொல்லி கேட்டுக்கிறதுனாலே எல்லாரும் நல்லாத்தான் இருக்கணுங்கிற மாதிரி நான் நம்பிக்கிறேன்.

[வாசகர்கள்: கேட்ட கேள்வி ஒரு வரி, இதுக்கு இப்படி எழுதினா எவன் உட்கார்ந்து படிக்கிறதாம் :))]

அமெரிக்காவா, அதை ஏன் கேக்குறீங்க நான் இங்கன வந்த நேரம் அமெரிக்காவை இந்தியாவிற்கு மாத்திட்டாங்களாம். அதுனாலே இங்கிருக்கிற பொருளாதார, கலாச்சார, மற்ற ஏனைய அதிர்வுகளை-யெல்லாம் என்னால் அங்கிருக்கும் செய்தித்தாள்களின் மூலமாகவும், ஏனைய மீடியாக்களின் மூலமாகவும்தான் உணர்ந்து கொள்ள முடிகிறதுன்னா பார்த்துக் கொள்ளுங்களேன் எந்தளவிற்கு உலகம் இறுக்கி கட்டப்பட்டிருக்கிறதா எல்லாரும் உணர்ராங்கன்னு.


இந்தியர்களின் நிலையும், பாதுகாப்பும்: பார்க்கலாம் அது வரப் போகின்ற அமெரிக்கா அதிபர் தேர்தலை ஒட்டியே சந்திக்கவிருக்கும் நிகழ்வுகளவை. குடியரசுக் கட்சி ஆட்சியமைத்தால் நிலமை கொஞ்சம் மேலும் சிக்கலாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமிருப்பதாக எண்ணத் தோணுகிறது. நம்மூர்ல ஐம்பது பேர் மட்டுமே ஏறிப் போர பேருந்தில 110பேரு பேரோம் எனக்கும் ஒரு ஒத்தைக் கால வைச்சிக்க நீங்க தள்ளி நின்னு இடங் கொடுக்காமயா போயிடுவீங்க, அப்படியே என் உசிருக்கு இங்க கேடு வரும் பொழுது அங்கே வாரேன்னா... சொல்லுங்க. எதுக்கும் இரட்டைக் குடியுரிமை வாங்கி வைச்சிட்டோம்ல.

கவிதா: மனித அட்டைகள்? உங்களுடன் முற்றிலுமாக முரண்படுகிறேன். கூட்டுகுடும்ப நிலை மாறுவதால், நிறைய பிரச்சனைகள் நம்மிடையே வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் நம் இந்திய கலாசாரத்திற்கு எதிராக நம்மை அழைத்து செல்கின்றன. இருவரே இருக்கும் ஒரு வீட்டில், அவர்கள் தவறுகள் செய்யும் போது சொல்லிக்காட்டி திருத்தவோ, சண்டையிடும் போது நடுவில் சென்று சமாதானம் செய்யவோ ஆள் இல்லையென்றால் எல்லோருமே திருமணம் ஆன 2 வருடங்களுக்குள் விவாகரத்து பெறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுவார்கள். மட்டுமல்லாது குழந்தைகள் பெரியவர்களின் ஆசிர்வாதத்திலும், அறிவுரை, அன்பிலும் வளருவதே சிறந்தது.. மட்டுமல்லாது முதியோர் இல்லங்கள் உருவாகாது. முதிய வயதில் கண்டிப்பாக நம்மின் அன்பும் அனுசரணையும் அவர்களுக்கு தேவையல்லவா?

தெகா:- இந்த கூட்டுக் குடும்பத்தினால கிடைக்கிற நன்மை தீமைகளை நன்றாகவே அலசித்தான் அந்தப் பதிவில் பேசியிருப்பேன். அதாவது ஒரு காலத்தில இது போன்ற கூட்டமைவு தன்னலமற்ற நிலை சற்றே மேலோங்கி, பொதுநலம் சற்று தூக்கலாக அதாவது தேவைகள் மட்டுக்குள் இருக்கப்பெற்று ஒரு குடும்பத்திற்குள் இருக்கப் பெற்ற அணைவரும் ஏதோ ஒரு வழியில் தனது பங்களிப்பை முன் வைத்து மன முறிவுகளை தவிர்த்து வாழ்ந்திருந்த பட்சத்தில் நீங்கள் கூறியபடி பல விதத்தில் உபயோகமாக இருந்திருக்கலாம் (ஆனா, குடும்பமே அழகிழந்து நிம்மதியில்லாமல் பல ஓட்டைகளுடனுடம், அரசியல் பூசல்களுடனும் வாழ நேரும் பொழுது அங்கே என்ன குழந்தைகளுக்கு சென்றுகிடைக்க வழிவகை இருக்க முடியும்?).

இன்றைய நிலையோ வேறாக இருக்கிறது. தேவைகள் பெருகிவிட்டது, உழைக்காமல் உண்ண வேண்டுமென்றோ அல்லது சட்டை கசங்காமல் பொருளீட்டுவது [இது போன்ற ஒட்டுண்ணி வாழ்வும் இதில வருதாங்க ஒயிட் காலராம்:)] போன்ற எண்ணம் தலைத்தோங்கி பொத்தாம் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையும் வந்த நிலையில் இது போன்ற கூட்டமைவு தேவையற்ற மன உளைச்சல்களயே கொடுக்கிறது குடும்ப உறுப்பினரிடத்தே, அதுவும் குறிப்பாக வயதான பொற்றோர்களுக்கு. திருமணமான தம்பதிகளில் பிற மக்களின் பங்களீப்பு என்பது அத் திருமணம் உடைந்துவிடாமல் பாதுக்காக்கப்படவே என்று சொல்லும் நிலையே, இரு வயதுக்கு வராத சிறு பிள்ளைகளுக்கு எதற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் ஊர்? என்றுதான் மாற்றுக் கேள்வி கேக்க வைக்கிறது. அவர்களே இன்னமும் குழந்தைகளாக தங்களின் அன்றாட வாழ்வியல் முரண்களை உற்று நோக்கி, பேசித் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளும் மன நிலையில் கூட தங்களை வைத்துக்கொள்ளத் தெரியாத மன பக்குவத்தில் இருக்கும் பொழுது, பிறகு சம்பிரதாயத்திற்காக பிறர் கொடுக்கும் தீர்வுகளை அவர்களது என்று எண்ணி ஏமாற்றிக் கொண்டு வாழும், வாழ்வும் இனிக்கவா செய்யும்? இதிலிருந்து எனக்குத் தெரிய வருவதே, தம்பதிகளின் இடைவெளி எவ்வளவாக மனத்திலும், மணப் பொருத்தத்திலும் இருக்க முடியுமென தெரிகிறது.

இப்பொழுது மேலை நாடுகளில் அவ்வாறு "தன் பொறுப்புணர்த்தி" வாழ வழிவகை செய்யும் குழந்தைகள் அனைத்துமே பெற்றோர்களை உதாசீனப் படுத்துகிறதென்றோ, யாருமே திருமணத்தில் முழுமையாக வாழாமல் இருக்கிறார்களொன்றோ பொருள் கொள்ள முடியுமா? நான் அருகாமையிலிருந்து கவனித்த வரையிலும், பொற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிருக்கிற உறவு நல்ல நண்பர்கள் நிலையிலிருப்பதால், தூரத்தே பிரிந்து இருந்தாலும், தேவையானதை நன்றாகவே பார்த்து பார்த்து செய்து கொடுப்பதனைப் போல் உள்ளது பொற்றோர்களுக்கு, அவர்களும் தங்களின் நிலையுணர்ந்து எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வதால் தேவையற்ற மனச் சங்கடங்கள் தவிர்க்கப்படுகிறது.இந்தப் பதிவிலும்... முதுமை ஒரு சாபக்கேடாஅந்தப் பதிவிலும நடை பெருவதினைப் போல நான் இங்கு கண்ணுற்றது கிடையாது.

ஆனால், இங்கு போன்று பொருளாதார, சமூக கட்டமைப்பு நம்மூரில் இன்னமும் அரசாங்கமோ அல்லது மங்களோ அமைத்துக் கொள்ளாத காரணத்தினால் இது போன்ற உதாசீனங்கள், முதுமையில் அப்யூஸ் எல்லாம் பார்க்க வேண்டிய நிலையில் அவர்களை பிடித்து தள்ளிவிடுகிறது.

கவிதா: கருக்கலைப்பு சட்டம் தேவையான்னு ஒரு பதிவு போட்டு இருக்கீங்க. கண்டிப்பா தேவையில்லை. நான் கருவுகிறேன் என்றால் அது என் உடம்பும் மனசும் சம்பந்தப்பட்ட என்னுடைய சொந்த விஷயம், குழந்தை சரியாக வளரவில்லை என்பது மட்டுமல்ல எந்த ஒரு என் சொந்த காரணங்களுக்காக நான் கருவை கலைக்கலாம் என்பதே சரி என்று நினைக்கிறேன். ஒரு பெண் தனக்கு தேவை தேவையில்லை என்று தானே முடிவெடுக்க உரிமை கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும் இல்லையா?

தெகா:- கருக்கலைப்புச் சட்டம் தேவையா என்ற பதிவில் என்னுடைய நிலையை தெளிவாக கூறிவிட்டேன். அதாவது கருவுற்றிருக்கும் பொழுது ஆரம்ப கால கட்டத்தில் நன்கு தேர்வுற்ற மருத்துவர்களால் கண்டறியப்பட்ட - குழந்தையின் இன்றியமையா உறுப்புகள் பாதிப்புற்று பிறப்பிற்குப் பிறகு தொன்று தொட்டு மருத்துவ தேவைகளையும், பிற மக்களின் அருகமையும், பொற்றோர்களின் ஈடுபாடு அவர்களின் பொருளாதார சூழ்நிலை இவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கே அந்த கருவை வளர்த்து ஈன்றெடுப்பதா வேண்டாமா என்ற இறுதிக் கட்ட முடிவை அவர்களின் பொருட்டே கொடுப்பதே சிறப்பு என்று கூறியிருக்கிறேன் தெளிவாக அந்தப் பதிவின் மூலமாக.

கருத்தடை சாதனம் கொண்டு குழந்தை கட்டுப்பாட்டை தவிர்த்து விடுவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னால் வைத்து பார்க்க முடியாத நிலையிலும் குழந்தை "கடவுள் கொடுத்தது" அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற காலாவதியான கருத்தோட்டத்தில் எந்தவிதமான பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றிகும் மேலாக குழந்தையின் பாலினத்தைப் கண்டறியும் பொருட்டு லக்சுரியில் வைத்துக் கொள்வதும், கலைத்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே ட்டூ மச். எ பிக் நோ, நோ.

கவிதா:- தீவிரவாதம், வன்முறை போன்ற செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ப்பு முறை, குடும்ப சூழல் காரணம் என்பது தவறான கருத்தாக இருக்கிறது. எனக்கு தெரிந்து நல்ல முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் தீயநட்பு, சமுதாய தாக்கம் போன்றவற்றால் வாழ்க்கையில் தடம் மாறி போனதை பார்த்து இருக்கிறேன். உங்களின் கருத்து.?!

தெகா:- குழந்தைகள் எது போன்ற சூழலில் வாழ்ந்து வருகிறது என்பதும், எது போன்ற பொற்றோர்களை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு இந்த சமூதாயத்தை முதலில் பருவத்தை எட்டுவதற்கு முன்னமே வீட்டின் வளர்ப்புச் சூழலைக் கொண்டே பார்த்து, கேட்டுத் தெரிந்து கொள்கிறது. அது போன்றே குழந்தைகளின் தனித்துவத்தன்மை பேணல் என்ற கட்டுரையின் மூலமாக எப்படி குழந்தைகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்பதனை விளக்கியிருப்பேன். என்னை பொருத்த மட்டில் பெரியவர்களின் வழிகாட்டுதல்கள் என்று கூறிக்கொண்டு எல்லாவற்றையுமே வலிய குழந்தைகளின் தலையில் வைத்து திணிப்பதனையே ஒரு வன்முறையாகத்தான் பார்க்க முடிகிறது.

மற்றபடி நீங்கள் கூறியபடியே பிரிதொரு சமயத்தில் தானும் ஒரு அடல்டாக எட்டும் நிலையில் கூடா நட்பு, தீய பழக்கம், சமூகத் தாக்கம் இன்ன பிற வன்முறையை நோக்கி அடியெடுத்துச் செல்ல வழிகோணலாமென்றாலும், அது நடைபெறும் காலமும் சூழலும் வேறு. ஆனால், முதல் அடி வளர்ப்புத் தளத்திலயே கோளாறுக்கி விடுவதுதான் மிக்க வருத்தத்துக்குரியது. உதாரணம்: பிடிக்காத ஒரு கல்வியில் கட்டாயப்படுத்தி புகுத்தி விடுவதோ, அல்லது தவறானா முறையில் பிற சமயங்களைப் பற்றியோ, அல்லது பிரிதொரு பாலினத்தின் மீது காழ்புணர்ச்சி வரும் வகையில் தனது புரியாத கருத்துக்களை தனது குழந்தைகளிடத்தே ஊட்டி வளர்த்து விடுவது, இப்படி. வித்தியாசம் புரிகிறதா??

கவிதா:- உங்களின் குட்டி கவிதைகள் படித்தேன்..:))-ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!! எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க தோன்றுகிறது..? உயிருடம் இருக்கும் நம்மை பிணங்கள் என்று சொல்லலாமா? உணர்வுகள் அற்றவர்களை, மனிதநேயம் இல்லாதவர்களை வேண்டுமானால் சொல்லலாம்.. ஆனால் எல்லோரையுமா? ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!!

தெகா: கவுஜா என்றால் வாழ்வின் முரண்பாடுகளின் மூட்டைகளை தோலுரித்து காட்டுவதற்கெனவே அமைந்தவை இல்லையா? அந்த ரீதியில் வைத்துப் பார்க்கும் பொழுது என்றோ ஒரு நாள் நாம் எல்லாம் மரணிக்கப் போகிறவர்கள்தான் இருந்தாலும், இன்று இறந்தவர் என்னமோ தேவையற்றுப் போனதாகவும், நமக்கு அவரை(பிணத்தை) பார்க்கக் கூட நேரமில்லா தொனியில் பரபரவென்று இருப்பதனைப் போலவும் கண்ணுற நேர்ந்ததால், அப்படி மரணத்தின் மடியில் நான் அமர்ந்து கொண்டு எள்ளி நகையாடுவதனைப் போல அமைத்திருக்கிறேன். பாதி பேரு இங்கே "இறந்த நிலையில்" தானேங்க இன்னமும் வாழ்ந்திட்டு இருக்கோம். எதுக்காகவாவது ஒன்றுக்கு தினமும் பயந்தவாறே.

கவிதா: நீங்கள் இயற்கை நேசி என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. இது இயற்கை குணமா அல்லது நீங்கள் வளர்த்துகொண்டதா?

தெகா:- நம் எல்லோருக்குள்ளுமே அந்த வேட்டையாடும், இயற்கையுடன் ஒட்டி உறவாடி மகிழும் பொழுது கிடைக்கும் ஆத்ம சுகம் என்றைக்குமே அழியாது இருக்கும், இது குழந்தை பருவத்தையொட்டி பீரிட்டு வெளிப்படுவதனை காண முடியும், ஆனால் மீண்டும் தான் வளரும் சூழலும், வாழ்க்கைத் தேவைகளும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் எதார்த்தம் மறந்து செயற்கைத் தனத்தில் ஒட்டிக் கொள்ள வழிவாகை செய்துவிடுகிறது. எனக்கு என்னமோ, அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி வானத்தை அன்னாந்து பார்த்து பேட்டரியை (எண்ண) ரீ-சார்ஜ் செய்து கொள்வது பழக்கமாகிப் போன ஒன்று, அதுவும் இரவு வானமென்றால் அலாதி பிரியம். அப்படியே அதற்கு கீழே இருக்கக் கூடிய மரம், மட்டை, பூச்சி அத்துனை ஜந்துக்களையும் பார்க்கும் பொழுது பூமிப் பந்தின் பரிணாமச் சுழற்சியில் நம்முடனே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தாம், அவைகளன்றி இங்கே நமக்கென்ன பூலோக சொர்க்கம் கிடைக்க வழி, என்றாகிப் பார்க்கத் தோன்றுகிறது.

அது அப்படியாக இருக்க ஏதோ குருட்டாம் போக்கில் நல்ல வேளையாக எனது பொற்றோர்கள் மெத்தப் படித்தவர்களாக இல்லாமல் போக, எனக்கு மூளைச் சலவை பண்ணப்படக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்ததும் ஒரு லக்கியான நிகழ்வுதான், ஏனெனில் அப்படியாக அமைந்திருந்தால் இன்னேரம் எங்கோ ஒரு கூண்டுக்குள் அமர்ந்து ஆணிப் புடுங்கியிருப்பேன், கண்ணீல் ரத்தம் சொட்டச் சொட்ட. என் கல்லூரி வாழ்க்கை முழுதுமாக பச்சைப் பசேல் மேற்கு மலைக் காடுகளில் அமைந்து போனதும் நேசியாகிப் போனதற்கு மற்றொரு காரணம்.


கவிதா:- எப்படி அடுத்தவர்களை புண்படுத்தாமல் பதிவெழுத நம் மனதை கட்டுப்படுத்த வேண்டும், எப்படி முகமூடிகளாக உலாவராமல் உணமையான பெயரில் பதிவுகளும் , மறுமொழிகளும் இட நம்மை கட்டுப்படுத்தவேண்டும் என்று பதிவுலக நண்பர்களுக்கு சொல்லுங்களேன்.

தெகா: பொதுத் தளத்தில் எது போன்ற புரட்சிக் கருத்துக்களையும், மாற்றுச் சிந்தனைகளையும் யாவரும் பகிர்ந்துகொள்ளல் எண்ணி(பொறுப்போடு) வைப்பதில் நமக்கு உள்ளார்ந்த திருப்தி கிடைக்கிறது என்றாலும், ஏனையோரின் பிரதி விவாதங்களும் அவர்களின் மாற்றுக் கருத்துக்களும் ஒருமித்த சிந்தனையுடனும், இசைபுடனும் இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பை சற்றே நம் கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே, பாதி இரத்த அழுத்தத்தை பங்களீப்பவர் தவிர்த்துக் கொள்ள முடியும். ஏனெனில், அது போன்ற மாற்றுச் சிந்தனைகளை முன் வைப்பவர் என்னுடைய வளர்ச்சி நிலையின் எல்லைக்குள் பிரவேசிக்காமலோ அல்லது அவருக்கு அவர் எடுத்திருக்கும் சார்பு நிலை சரியொன்றோ எண்ணிக் கொண்டிருக்கும் பட்சத்தில், எவரவர் சார்பு நிலையோ அல்லது கருத்துக்களோ தினப்படி பல மாறுதல்களை அவர்கள் எண்ணும் எண்ணமாகவே விட்டு பயணித்து செல்லும் பட்சத்தில் தானாகவே மனத்தினுள் மாற்றங்களை உணர்வர்.

இருந்தாலும், பங்களீப்பவர் அதனை முன்னமே உணர்ந்தவர் என்ற முறையில் நம்முடைய பார்வையை முன் வைக்காலமே தவிர "அடித்து பழுக்க வைத்துவிட முடியும்" என்ற அணுகு முறை ஒரு போதும் பலனளித்ததாக பொருள் கிடையாது என்று கருதி விலகி இருப்பது நலம் பயக்கலாம். பங்களீத்தவர் மனவோட்டம் எப்படியாக இருக்க வேண்டுமெனில் மாற்றுச் சிந்தனையை மனத்தினுள் விதைத்தாகிவிட்டது, காலப் போக்கில் அலசி, ஆராய்ந்து நன்மை தீமைகளை ஏற்றுக் கொள்வது வாசிப்பாளரின் கைவசமென்றெண்ணி அவர்களிடத்தேயே விட்டுவிடுவதாக இருக்க வேண்டும்.

இல்லையெனில், கோபத்தில் சொல்ல வந்த விசயத்தின் மையக் கருத்து சிதைபட்டு, எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை வாசிப்பாளனிள் விட்டுவிடாமல் இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவதும், சினமுறும் பொழுது அங்கே எண்ணவோட்டம் சீராக இருப்பதும் கிடையாது. ஒரு நல்ல விசயத்தை முன்னுறுத்தி எழுதப் படும் கருத்து குறைந்த பட்சம் மனத்தினுள் பல மணி நேரங்கள் தக்க வைக்கப்படும் பொருட்டு அங்கே தெளிவான சிந்தனை பிறக்க ஏதுவாகிறது, அப்படியாக முன் வைக்கப்படும் கருத்துக்களும் கண்டிப்பாக "திறந்த நிலை" (தன் முனைப்பில் தன்னை வளர்த்துக் கொள்ள விரும்புபவனை) வாசிப்பாளனை தொட்டுச் செல்லாமல் விட்டுப் போவதுமில்லை என்பது என் கருத்து.


...to be contd -2



Related Posts with Thumbnails