Showing posts with label வலைச்சரம். Show all posts
Showing posts with label வலைச்சரம். Show all posts

Sunday, October 09, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - V


ஐயா ஞானவெட்டியான், ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்குமே அருந்தொண்டு ஆற்றிவருகிறார். இந்த வயதிலும் அவரின் ஆர்வமும், உழைப்பும் என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுவதுண்டு. அவருடைய அத்துனை வலைத்தளங்களும் பொக்கிஷங்களாக பாதுகாத்து அந்தந்த வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளத்தக்கது எனினும், நான் அடிக்கடி செல்லும் அவரது வலைத்தளம் ஞானவெட்டியானின் ஞான வேள்வி என்ற தளத்திற்குத்தான் இன்றைய நாட்களில்.

அங்கு அன்பர்களின் ஆன்மீகம் சார்ந்த கேள்விகளுக்கு விடை பகன்று வருகிறார்.

18.மனம் என்பது ஆன்மாவா? என்ற கேள்விகளிலிருந்து மனத்தின் வளர்ச்சி நிலைகள் என்று அடுக்கடுக்கான பதிவுகளை அங்கே காணலாம். இருந்தாலும், தமிழ் மணத்தில் இவரின் பதிவுகள் வந்து போகாமல் நின்று போனது நமக்கெல்லாம் ஒரு இழப்பே!

அறிவியலும் ஆன்மீகமும் என்ற வலைத்தளத்தில் செந்தில் குமரன் என்பவர் முன்பொரு காலத்தில் விடாது பதிவுகளை கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே மிகவும் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணத்தில் இயற்பியல் சார்ந்த ப்ரபஞ்ச கோட்பாடுகளையும், அதன்பால் ஏற்படும் ஆச்சர்யத்தை மறக்காமல் ஆன்மீகக் கேள்விகளுனூடையே

வைத்து கேள்விகளையும் தொடுக்கும் விதம் ஒரே கல்லிள் இரண்டு மாங்காய்கள் அடிப்பதனைப் போன்றே வாசகர்களுக்கு அமைந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக அறிவியலும் ஆன்மீகமும் - 3 அனுபவித்துப் பாருங்கள். 

பரஞ்சோதி மற்றும் விழியன் நடத்தி வந்த சிறுவர் பூங்காவும் குழந்தைகளுக்கான

சிறு சிறு குட்டிக் கதைகளும், பாப்பாப் பாடல்களையும் வழங்கி வந்தது. அதுவும் ஒரு நேரத்திற்குப் பிறகு நின்று போனது. அதனை எழுதியவர்கள் இன்னமும் இங்குதான் உலாவிக் கொண்டிருக்க வேண்டுமென்று எனக்குப் பல்லி சொன்னாலும் ஏன் அப்படி எழுதுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்று வினாவ வேண்டும் போல் உள்ளது.

திடீரென்று தஞ்சாவூரான் என்றழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கே உரித்தான குசும்புடன் ஒருவர் வந்தாரய்யா. பதிவுக்குப் பதிவு நகைச்சுவையும், நக்கலும் மோலோங்கியிருந்தாலும் மறக்காமல் அந்த நகைச்சுவைக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் சிந்தனை நம்மை சிரிக்க வைத்து பிறகு யோசிக்க வைக்கத் தவறுவதில்லை. அமெரிக்காவுக்கு இந்தியா வச்ச ஆப்பு! சென்று படித்து வந்தாலே தெரியும் நான் எது போன்றவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேனென்று.

அண்மையில் தமிழ் மணத்துப் பக்கம் வந்து கலக்கிக் கொண்டிருக்கும் சுரேகா! இவரிடம் கதம்பமாக எல்லாத் திறமைகளும் ஒளிந்திருக்கிறது என்பதற்கினங்க வித விதமான பதிவுகளை காணப் பெறலாம் அவர் தளத்தில். சாமி காட்டிய தங்கசாமி! போன்ற வித்தியாசமான மனிதர்களை தின வாழ்க்கையோட்டமென்ற குப்பையிலிருந்து தனித்தெடுத்து நமக்கு அறிமுகப் படுத்துவதாக இருக்கட்டும், பஞ்சு மெத்தையில் படுத்தும் தூக்கம் பெற தவிக்கும் கூட்டத்திற்கிடையே ஈரோட்டுப் பெண்கள் என்ற பதிவில் இப்படியும் சக மனித ஜீவன்கள் இருக்கிறதென்று நம் கண் முன்னே நிறுத்துவதாகட்டும், நல்ல நல்ல வேளைகள் செய்து வருகிறார்.

Tuesday, October 04, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - IV


எனது கடந்த பதிவில் சுய முன்னேற்றக் கட்டுரைகளும் இடம் பெறுகிறதென்று பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தைப் பற்றி சுட்டிக் காட்டியிருந்தேன். அதே லைனில் என்.கணேசன் என்பவரும் விட்டு விலாசிக் கொண்டுள்ளார். அதே பெயரின் தளத்தின் கீழ், அங்கே அவரே எழுதிய சிறுகதைகள், கவிதைகள், சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. அண்மையில் நான் அங்கு வாசித்த படகு புகட்டிய பாடம் என்ற சுய முன்னேற்றக் கதையில் கோபத்தை கையாள்வது எப்படி என்பதனை மிக அழகாக சில உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருந்தது பிடித்திருந்தது.

அனாதை என்ற பெயரில் ஒருவர் இங்கு உண்மையிலேயே அனாதையாக நிறைய கிடைக்கற்கரிய உலகப் திரைபடங்களைப் பற்றி எழுதிவருகிறார். இவர் தான் பார்த்த அதாவது இன்னா படம்தான் இன்னா மொழிதான் என்றில்லை போல அத்தனை இன, மொழி எல்லைகளையும் தாண்டி படம் பார்த்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும் திறமை அசத்தலாக உள்ளது. இது போன்ற மக்களும் இங்கு இது போன்ற ரசனையுடன் இருப்பது நமக்குப் பெருமைதானே! இவர் Cronicas / காலக்குறிப்புகள் என்ற தலைப்பின் கீழ் எப்படித் தனக்கு இது போன்ற ஆர்வம் கிளம்பியதென்ற நினைவுகூர்தலுடன் நிறைய விசயங்களை அங்கே பகிர்ந்துர்க்கிறார். சினிமா பிரியர்களுக்கு அத் தளம் ஒரு தங்கச் சுரங்கமாக அமையும்.

K.P. குப்புசாமி என்ற ஓய்வுற்ற காவலதிகாரி ஒருவர் மூலிகை வளம் பற்றி எழுதி வருகிறார். அங்கே அது போன்ற தாவரங்களின் புகைப்படங்கள் அவைகளின் குடும்ப வகை, தாவரப் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் என்று அவரின் பக்கங்கள் மூலிகைச் செடிகள் மற்றும் அவைகள் எவ்வாறு பல்வேறு வியாதிகளுகளை குணப்படுத்தலாம் என்பதனை பட்டியிலிட்டுக் நிறைத்திருக்கிறார். சும்மா பார்ப்பதற்கே கண்களுக்கு

பச்சை நிற செடிகளின் படங்களையும் டெம்ப்ளேட்டையும் கொண்டு குளிர்சியூட்டுகிறார்.

சிங்கநல்லூர் சுகா, இவரை நான் விடுவதே இல்லை. தான் பார்த்து வளர்ந்த விசயங்கள் தன்னைச் சுற்றிலும் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அந் நேரத்தில் ஒரு அனிச்சையாகத்தான் நம் மனத்தில் ஏறி சிம்மாசனமுற்றிருக்கும். ஆனால், ஊரைப் பிரிந்திருந்து விட்டு அவைகளை மீண்டும் அனுபவிக்கும் பொழுது அவைகள் ஒரு புது பரிமாணம் காட்டிப் போகத் தவறுவதில்லை என்பதற்கு இவரின் பல பதிவுகள் சாட்சி. அப்படி ஒரு பதிவாக இவரின் கோடை காலத்து மீண்டும் மழை அமைந்திருக்கும்.

பிறகு "பேருந்து ஜன்னலோர இருக்கை பிரயாணம், பயனங்களும் பாடங்களும்" போன்ற பதிவுகளிலும் ஏனைய பிற இடுகைகளிலிலும் நிறைய அன்றாடம் நாம் இயந்திரத் தனமாக கண்ணுரும் காட்சிகளுக்கு, சுகா ஒரு புது பரிமாணத்தைக் கொடுத்து நமக்கும் அவர் உள்வாங்கி இருக்கும் வீட்சத்திற்கு நம்மையும் இட்டுச் செல்ல முயற்சித்திருப்பார். அத் தளத்திலேயே இவரது பென்சில் ஓவியங்களும் காணக் கிடைக்கும்.

Monday, September 26, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - III


சிங். செயகுமார் என்று ஒரு வலைப்பதிவர் முன்பொரு காலத்தில் நிறைய விசயங்களை கவிதை வடிவாகவும், சிறுகதைகளாகவும் கொடுத்துக் கொண்டுருந்தார். எழுதியவைகளில் அனேகமானவை காதல் சார்ந்தும் அவரின் சமூக பார்வையாகவும் இருந்தது. சமீப காலமாக அவரைக் காண முடிவதில்லை, அச் சமயத்தில் படித்த காதலர்தினம்! என்ற தலைப்பில் ஒரு கவிதை என் மனதில் தைத்துப் போனதை உங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன். ஏனைய பதிவுகளும் அருமையாக இருக்கும், சுவைத்துப் பாருங்கள்.

கூட்டைக் கலைத்த பின் ஒரு பறவைக்கு நேரும் கொடூரத்தை கொடுப்பது போலவே ஒரு கைம்பெண்ணிற்கும் நம் சமூகத்தில் நிகழும் அவலத்தை தோலுரித்திருக்கார் பஹீமாஜஹான் என்பவர் அழிவின் பின்னர்...... என்ற தலைப்பின் கீழ். இவரின் "ஊற்றுக்களை வரவழைப்பவள், தடுமாறும் தனிப்பாதம்" என்ற பதிவுகளும் ஏனைய பதிவுகளும் மிக நேர்த்தியாக இருக்கிறது.


திறந்து வைத்திருக்கிறாள்


என்று ஒரு குழந்தையின் கள்ளமில்லாத்தனத்தை இந்த மூன்று வரிகளுக்குள் வைத்து, மனிதன் வளர்ந்த பிறகு எவ்வளவு சூது, வாதுடையவானுகிறான் என்று எண்ண வைத்து விடுகிறார் ராஜா சந்திரசேகர். மேலும் தொடர்ந்து "மனிதக் காடு" என்று பெயரிட்ட தலைப்பின் கீழ் நாம் மெது மெதுவாக எப்படி நம்முள்ளே இருக்கும் அந்த கபடமற்றக் குழந்தையை எப்படியெல்லாம் தொலைத்து, தேடித் தேடி எங்கே காண்கிறோமென்று அழகாக அந்தக் கவிதையில் பொதித்து வைத்திருக்கிறார். இவரின் இரண்டு மூன்று வரிக் கவிதைகளில் ஏதாவதொன்றை படிக்க நேர்ந்தாலே அடுத்தடுத்து படிக்கத் தோன்றும் மாஜிக் தீம் இருக்கிறது மற்ற மற்ற பதிவுகளிலும்.


ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம்


செய்கிறோம்


இந்த ஒரு கட்டுரை வடிவ கவிதையே போதும் இந்த வளர்ந்து வரும் நெஞ்சத்துக்குள் பீறிட்டு வெளிக் கிளம்பும் தொலை நோக்குப் பார்வையும் நவன் என்ற பதிவரின் வாழ்வு சார்ந்த பட்டறிவையும் பறைசாற்ற. மென் மேலும் இவர் தொடர்ந்து தனது எண்ணங்களை இங்கே வைப்பார் என்று நம்புவோம்.

பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தில் சிரிப்புக்கும், சிந்திப்பதற்கும் ஏற்ப பல பதிவுகளுண்டு. அங்கே அவ்வப்பொழுது பித்தானாந்தாவாக ஒரு புது அவதாரம் எடுத்து விடுவார் அந்தத் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் போலும். அவ்வாறு எடுத்த அவதார கோலத்தில்தான் 262 : பித்தானந்தாவின் போதனை என்ற தலைப்பின் கீழ் ஒரு கவுஜாவை வடிதிருக்கக் கூடும். அதில் விளையாட்டுப் போக்கில் நிறைய தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். இரட்டை தன்மையில் வாழும் அனைவரையும் ஒரு முறை உட்முகமாக திரும்ப வைக்கும் ஓர் பதிவு. ஏனைய பதிவுகளில் வெடிச் சிரிப்பிற்கும் (குறிப்பாக பின்னூட்டங்களில்), சுய முன்னேற்றக் கட்டுகரைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

Thursday, September 22, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - II


தருமி...! இவரை முதன் முதலில் எப்படி சந்திக்க வாய்ப்புகிட்டியது என்று சற்றே பின் சாய்ந்து அமர்ந்து பொறுமையாக யோசிக்க வேண்டியிருந்தது. அந்த சந்திப்பு எனது ஆங்கில வலைப்பூ பக்கத்தின் மூலமாகத்தான் அமைந்திருந்தது என்று நினைக்கிறேன். அங்கே அவரின் பாணியிலேயே ஒரு கேள்வி why we should be different? என்று கேட்டு ஒரு பதிவிட்டிருந்தற்கு இவர் கொடுத்த லிங்கில் சென்று பார்த்த பொழுதுதான், அங்கே ஒரு கடலளவிற்கு பொக்கிசங்களாக நிறைய பதிவுகள் மின்னிக் கொண்டிருந்தன.

அவைகளில் என்னை மீண்டும் சிந்திக்க தூண்டிய பதிவுகளாக அமைந்தது 49. நான் ஏன் மதம் மாறினேன்...? என்ற அவரின் தொடர்ப் பதிவுகள்தான். எல்லா வளர்ச்சி நிலைகளிலுமுள்ளவர்கள் அவசியம் படித்துப் பார்த்து தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் படி மிக நேர்த்தியாக அமைத்திருப்பார் அந்தப் பதிவுகளை. அதற்காக அவர் எவ்வளவு படித்திருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுதே அவர் பொருட்டு இருக்கும் மரியாதை பல மடங்கு எகிறுகிறது. அதன் பிறகு அவரின் எல்லா பழைய பதிவுகளையும் தோண்டிப் படித்து பல பதிவுகளுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமெழுதியது இன்னமும் நினைவிருக்கிறது.

பிரிதொரு சமயம் இளவஞ்சி எனக்கு, என் காட்டான் பக்கத்தில் பின்னூட்ட அரசியலை சாடி எழுதியிருந்த பொழுது அங்கே வந்து எனக்கு அறிவுருத்தும் படியாக எழுதிய பின்னூட்டத்தின் மூலமாக அவரின் பதிவுகள் பக்கம் செல்ல நேர்ந்தது. இவரின் எழுத்து நடைக்கு நிகர் இவரே! அவரின் பல பதிவுகளை ரசித்துப் படித்து சிரித்து, சிந்திச்சிருக்கிறேன்.` அண்மையில் தோண்டி எடுத்துப் படித்து சிரித்து, சிந்தித்தது காலச்சுழிப்பில் தொலைந்(த்)தவைகள்.. . அதே தளத்தில் நிறைய புகைப்படங்களையும் சுட்டுத் தள்ளி நமக்கு வழங்கி வருகிறார்.

...இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!...

செல்வநாயகி, இவரைப் பற்றி நான் என்ன சொல்லவிருக்கிறது. நிறங்கள் என்ற தலைப்பில் பளுப்பில் இருக்கும் இவரின் வலைத்தளமே வாழ்வின் முரண்களை அதனிலிருந்தே சுட்டிக் காட்டுவதனைப் போல அமைத்து விளாசி வருகிறார் பல விசயங்களை. இங்கு அவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க அனேக வாய்ப்புகளுண்டு. இவர் எழுத எடுத்துக் கொள்ளும் விசயங்கள், அதன் பொருட்டு அவரின் எண்ணங்கள் அதனை வெளிக்கொணர பயன் படுத்தும் மொழியின் ஆளுமை இவைகள் எல்லாமே இவர் வலைப் பக்கத்தின்பால் எனை இழுத்து வைத்திருக்கிறது.

கைராப்ட்ரான் (Chiroptera) அதாங்க நம்ம வவ்வாலு தலைகீழாக தொங்கிட்டே காத்துப் புக முடியாத இடத்திக்குள்ளரக் கூட நிஜ வவ்வாலுங்க அல்ட்ராசோனிக் சப்தத்தை அனுப்பி போகும் வழியில் உள்ள விசயங்களை அறிந்து கொள்வது மாதிரி, இவரின் தளத்தில் ஒரு சிறு நூலகத்திற்கு இணையான எல்லா படைப்புகளும் எளிமையான முறையில் திரட்டி தகவல்களாக தந்திருக்கிறார். ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி!! இப்படி ஒரு விவசாய முறை இருப்பதே அந்தப் பதிவின் மூலமாகத்தான் எனக்கு தெரிய வந்தது. இது போல ஆச்சர்ய மூட்டக் கூடிய பல பதிவுகள் அங்குண்டு.

Saturday, September 17, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - I


எனது சுய புராணங்களை செய்து முடித்த கையோடு, அடுத்தவர்களின் படைப்புகளையும் எந்தளவிற்கு உள்வாங்கி வருகிறேன் என்று எனது அடுத்தடுத்தப் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

திருச்சி மலைக்கோட்டையில் ஏறி என்னால் ஒரு உணர்ச்சிப் பூர்வமான படைப்பாளியான திரு. ஞானசேகரை தனியாக சந்திக்க முடியுமென்றால் நாளைக்கே எனது பயணம் அமைய விருப்பம் கொள்வேன். அவரின் பல படைப்புகளை படித்துவிட்டு மனம் அன்று பூராவும் அதுனூடே சிக்குண்டு தவித்ததுண்டு.

...பொட்டச்சியப் பெக்கப்போற
பொட்டக் கழுதக்கித்
தொணையெல்லாம் ஏதுக்குன்னு
வெசலூரு கெரகாட்டம்
போயிட்டாரு எம்புருஷன்...

என்று தொடங்கி ஒரு பெண் தனக்குத்தானே சுய'ப்ரசவம் பார்ப்பதனை அழகாக, நேர்த்தியாக கொடுத்திருப்பார். நிறைய சமூதாய ஓட்டைகளையும் அங்கே சுட்டிக்காட்ட தவறாமல். அதே தளத்தில் நிறைய சிறு கதைகளும், கவிதைகளும் உண்டு.

மற்றுமொருவர் இப்படியும் தன்னை விளித்துக் கொள்ள யாரேனும் முட்படுவார்களா என்றால் முடியுமென்று தன்னை "ஆடுமாடு" என்றழைத்துக் கொண்டு "கால்நடைகளுக்குள் புகுந்து" ஒரு கிராமத்தின் மணத்தைப் பரப்பி வருகிறார், ஆடுமாடு. இவரின் அனைத்து படைப்புகளுமே அம் மணம் மாறாமல் அத் தளத்தை நிரப்பிக் கொண்டுள்ளது.

இங்கே ஒருவர் தன்மீது இருக்கும் நம்பிக்கையின் எல்லை எவ்வளவு என்று விடாது, உண்மையாகவே விடாது உழைத்து இப்படியும் தனது மன படபடப்பை படைத்திருக்கிறார். அண்மையில் சிவாஜி பட வெள்ளி விழாவின் போது நமது பிரபலம் பேசிய முரணை தோலுரித்து, மூகச்சீலை அகற்றி இங்கே காட்டியிருந்தது, நான் போட இருந்த பதிவை யாரோ முந்திக் கொண்டு போட்டுவிட்டார்களோ என்பதனைப் போன்ற ஒருமித்த சிந்தனைகள், அதன் பொருட்டு அங்கே எழுப்பியிருந்த வினாக்கள் அமைந்திருந்தது.

ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டுமென்ற சமூக கட்டமைப்பினை கையேடாகக் கொண்டு வளர்த்து, திருமணச் சந்தையில் நிறுத்துபவர்களுக்கு சில கேள்விகளுக்கு பதிலும் வேண்டியதில்லை, அப்படி கேள்விகளும் எழ வேண்டுமென்ற கட்டாயமும் இருக்கப் போவதில்லை. ஆனால், இங்கு ரேகுப்தி என்பவர் எவ்வளவுதான் பெண் என்ற அடையாளத்தால் தன் சுயம் இழக்க தேவையில்லை என்பதனை எப்படியெல்லாம் போராடி தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்பதனை...

...மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன்...

என்று தொடங்கி அழகாக ஒரு சிறுகதையை நகர்த்தியுள்ள நேர்த்தி. அவரின் எழுத்து நடை பிடித்திருக்கிறது.


பி.கு: வலைச்சரத்திற்காக எழுதியது 2008ல்...

Sunday, September 11, 2011

வலைச்சரம் தொடுக்கப் போகிறேன்...


சில வருடங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் எனது மேய்ச்சல் நிலங்களாக பிடித்த சில வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். அதனை தெக்கியிலும் கொண்டு வரும் நோக்கில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நன்றி!

அப்பப்போ என்னையும் நினைவில் வைச்சு இப்படி ஏதாவது உருப்படியாக செய்யுமிடத்தில் கூட கூப்பிட்டு விட்டுடுறாங்கப்பா. திக்கித் திணறி இப்பத்தான் என்னோட முதன்மை வலைத் தளத்தில் 99 பதிவுகள் போட்டுருக்கேன், அதுவும் இரண்டு வருட அவகாசத்தில் அப்படின்னா பார்த்துக்கோங்க எவ்வளவு சரக்கு நம்மகிட்ட இருக்குன்னு.

இந்தச் சூழலில் இப்படித் திடீர்னு நெஞ்சடைக்கிற மாதிரி மத்த பதிவுகளை எல்லாம் படிச்சி அவைகளுக்கு தொடுப்பு வேற கொடுக்கணுமின்னு கட்டாயத்தோட இந்த வலைச்சரங்கள் இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டாங்க. எதிர்பார்ப்பை கொஞ்சம் உங்க கைக்குள்ளயே வைச்சிக்கோங்க, இந்தப் பக்கம் வராவங்க இந்த ஒரு வாரத்திற்கு மட்டும்.

நான் எழுத ஆரம்பிச்ச வருஷத்தில இருந்து இன்னிக்கு வரைக்கும் என்கிட்ட ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றமின்னு பார்த்தா, தட்டச்சும் பொழுது இப்ப வேகமாக தமிழில் தட்டச்ச முடிகிறது முன்பிருந்ததை விட. இரண்டாவது, அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி இந்த இடத்தில் இவங்க சொன்ன மாதிரியே எழுத்தில் எந்தவொரு பெரிய மாற்றமுமில்லை, அதே காய்ந்த விசயங்களை பற்றித்தான் பெரும்பாலும் என் பதிவுகள் அமைந்திருக்கிறது. மேலும் எழுத்துப் பிழைகள் கொஞ்சம் மட்டுப் பட்டிருப்தை மறுப்பதற்கில்லை.

என்னோட ஆரம்பக் கால பதிவுகள் ரொம்பவே வேகமாக இருந்தது. அந்த நேரத்தில் இங்கும் நடந்த வலை அரசியல் எல்லாம் தெரியாமல் சமூக அவலங்களை முகமூடி அகற்றி காட்டுகிறேன் பார் என்று புறப்பட்ட பதிவுகள் எல்லாம் உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே சென்று உறங்க ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் சீரங்கத்து எழுத்தாளர் வலை பதிவுகளைப் பற்றி வரையறுத்திருந்தது அதாவது "ஒரு பத்து நிமிட பாப்பிலாரிட்டிக்காகத்தான்" எழுதுகிறேன் என்று விளங்காமலேயே இங்கே பதிப்பித்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால், இப்பொழுது தான் தெரிகிறது இப்படி இங்கு எழுதுவதற்கு (காசு வாங்காமல்) உளவியல் ரீதியான காரணமிருப்பதை.

அந்த நேரத்தில் ஊரில் பார்த்த காட்சிகளாக, படித்து விட்டு பொற்றோர்களையும், சமூகத்தையும் சுரண்டிச் சாப்பிடும் இளைஞர்களை பார்த்து உதவாக்கரை பட்டாதாரிகள்...! என்றழைத்து ஒரு பதிவும், பிரிதொரு சமயம் அவர்களே எப்படி பரிணமித்து பல்கிப் பெருகி மனித அட்டைகளாக சமூகத்தில் வாழ எத்தனிக்கிறார்கள் என்பதனை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஜீவராசிகள் மனதில் ஈவு இரக்கமற்ற நிலையில் நம்மூர் அனாதைக் குழந்தைகளை அலட்சியம் செய்து அவ் குழந்தைகளை புலம் பெயர வைக்கிறார்கள் என்று தொடர்ந்து கொண்டே செல்லும் அந்நாளைய பதிவுகள்.

பிறகு தமிழ்மணத்திலிருந்து திடீரென்று ஓர் அழைப்பு. அந்த வாரத்தில் நான் வழங்கிய சில பதிவுகள் எனக்கே பிடித்து விட்டதுதான். குழந்தைகளை எப்படி நமது தேவைக்காக நம்முடைய நிறைவேறா எண்ணங்களை அவர்களுனூடையே வைத்து திணித்து நம் அவர்களின் படைப்பாற்றலையும், வாழ்வையுமே பாலடிக்கிறோம் என்பதனை குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்... என்ற பதிவிலும், வளர்ந்து வரும் நாகரீக உலகில் முதலில் எது நாகரீகமென்று கேட்டு விட்டு, பிறகு நட்சத்திர வாரத்தில் அதன் தாக்கம் எங்கே கொண்டு போய் விடுகிறது நம்மை என்பதனை எரோப்ளேனில் நான் கண்ட மேற்கத்தியப் பாதை என்று சொல்லி முடித்திருப்பேன்.

மேலும் இயற்கை நேசி என்ற வலைத் தளத்தில் இயற்கை சார்ந்த விசயங்களை சொந்த அனுபவங்கொண்டு என்னோட (தெகா) வாசனையையும் அதில் குழைத்து பல பதிவுகள் கொடுத்திருக்கிறேன், ஆர்வமுள்ளவர்கள் அங்கே சென்றும் பார்க்கலாம்.


ஊருணியிலும் எனது சிந்தனைகளை வேற்றுக் கிரக வாசிகளும் படிக்க வேண்டும் (முடிந்தால் படிச்சிக்கட்டுங்கிற தைரியத்தோட:) என்ற நல்லெண்ணத்தில் வைத்திருக்கேன். தோண்டிப் பார்க்க நினைக்கிறவங்க தோண்டிப் பாருங்க, ஏதாவது கிடைக்கலாம்.


அப்படா, முடிந்தது சுய-புராணம். அடுத்த பதிவில் இருந்து எப்பலாம் அடுத்தவங்க பதிவு படிக்க நேர்ந்து, அப்படி படித்த பதிவுகளில் எது மனதில் தைத்துப் போனதோ அவர்களை மனதிலிருந்து எடுத்து வெளியே அறிமுகப் படுத்தி வைக்கிறேன்.


அது வரைக்கும் நிம்மதியா மூச்சு வாங்கிக்கோங்க, ஏன்னா, மூச்ச பிடிச்சி திரும்ப இழுத்துப் பிடிக்க வருவேன் அதான்.

Related Posts with Thumbnails