Showing posts with label மதங்களும் நானும். Show all posts
Showing posts with label மதங்களும் நானும். Show all posts

Sunday, March 02, 2025

ஆசானுக்கு ஓர் அஞ்சலி: A Tribute To My Beloved Mentor Dr. Ajith Kumar

இன்றைய காலை இப்படி ஒரு செய்தியுடன் விடிந்திருக்க வேண்டாம். என்னுடைய இளமை காலத்தில் என்னிடம் மண்டிக்கிடந்த பல பொதுப்புத்தி கட்டமைப்புகளை தகர்க்க போதுமான இடமளித்து மனிதனாக வார்த்துக் கொள்ள தனது வீட்டுக் கதவை திறந்து விட்டவர்; இயற்கையோடு கலந்துவிட்டார். 

முனைவர் அஜித்குமார் என்னுடைய Ph.D ஆராய்ச்சி படிப்பிற்கான ஆலோசகர். அவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருத்து பெற்றவர். நான் ஒரு முறை ஏதோச்சையாக என்னுடைய முதுகலை பட்டப்படிப்பு ஆராய்ச்சி நாட்களில், டாப்சிலிப்ல் தங்கி பைசன் பற்றிய ஆய்வில் இருந்த போது, இவரை அவரோட டேராடூன் Wildlife Institute of India மாணவர்களோட வைத்து சந்தித்தேன். இவர் வனவுயிரின ஆராய்ச்சி, பேராசிரியர் என்று அவர்களுக்குள் உரையாடிக் கொண்டதை வைத்து அறிந்து கொண்டேன்.

பிறகு நானே என்னை அவரிடத்தில் அறிமுகப் படித்திக் கொண்டேன். என் ஆராய்ச்சி சார்ந்த என்னிடமுள்ள சில சந்தேககங்களை அவரிடத்தில் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டேன். அதுவே என்னை இவரிடத்தில் பிற்காலத்தில் கொண்டு சேர்க்கும் ஓர் சந்திப்பாக அமையுமென்று அன்று கனவிலும் நினைக்கவில்லை.

மறு ஆண்டு, கோவையில் அமைந்திருக்கும் சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி நிலையத்தில் (SACON) பல Junior Research Fellowsக்கான ஆட்கள் தேடிய நிலையில் முதுகலை முடித்திருந்த நான் அந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் கலந்து கொண்டேன். அதுவே என் வாழ்வெனும் வறண்ட பூமியில் விழுந்த முதல் மழை!

தேர்வாகி இருந்தவர்களின் பட்டியலில் என்னுடை பெயரை எப்படியோ நினைவில் வைத்திருந்த அஜித் சார், அவருடைய ஆராய்ச்சிக்கென அவருடைய முதல் இரண்டு மாணவர்களில் என்னையும் ஒருவனாக இணைத்துக் கொண்டு பயணிக்க தந்தியின் மூலமாக என்னை அழைந்திருந்தார்.

அன்று எனக்கு 23 வயதாக இருந்திருக்கலாம். அவருடனான உரையாடல்கள், பயணங்கள், கேளிக்கையான நேரங்கள், அடர்ந்த மழைக்காடுகளிக்கிடையே நட்சத்திரங்கள் கொத்தாக தொங்கி மினுமினுக்கும் நீண்ட இரவின் மடியில் முகாம் தீ எரிய ஓல்ட் மாங்குடன் உலகைப் பற்றியான பொது உரையாடல்கள் இன்றும் பசுமையாக என்னுள் உறைந்து கிடக்கிறது..

இது அத்தனையும் எனக்கு அறிமுகப் படுத்தி கொடுத்த எனது ஆசான் NO MORE. எனக்கே இது வரையிலும் வாழ்ந்த அத்தகைய வாழ்வின்பம் இத்தனை மன நிறைவை கொடுத்திருக்கிறது என்றால், அவருக்கு எத்தகைய நிறைவை கொடுத்திருக்கக் கூடும் என்று உணர முடிகிறது. I am sure he must have lived the fullest and given utmost of his best! Such a great human being ever I come across. Long live his scientific achievement in the academic arena.

An add on - I remember this day, after a long gap one day I called you and you took the call like I just spoken to you a half hour before without any void and allowed me to update, and we discussed about Indian political climate how rapidly it is plunging into abysmall darkness. Fondingly you pointed out that you still crack jokes about me in field trips that how I came up with "Menstrual Symptoms" theory in men and pointed out to me how hilariosly true it is! நன்றி! என்றென்றும் உங்கள் நினைவுடன் - அ. பிரபாகர்.

P.S: என்னுடன் தங்கி அஜித்குமார் சாருக்கு கீழ் மற்றுமொரு ஆராய்ச்சி மாணவராக இயங்கிய முனைவர் உமாபதி எழுதிய பதிவில் இரங்கல் பின்னூட்டமாக எழுதியது ...

I have no words to express my gratitude to my advisor - friend Dr Ajith Kumar, he was one of  my earliest times inspiration who helped me to shape myself up to be the person who I am today. I am so fortuanate and proud to call myself I was one of his first hatchlings of Ph.Ds.

I have so much to share about our fondings during those days! My Ph. D colleague Dr Govindhaswamy Umapathy has already elaboarated his academic achievements. He was a prominent and unavoidable icon in the field of Indian primatology and widlife biology; a rainforest conservation expert with profound knowledge of its ecology, with outstanding floral and faunal field identification skills. My deepest condolences to his family, friends, colleagues and I feel terribly sorry that I couldn't be there to bid final good bye! 😪🫡🙏🏽



Art Courtesy: Dr Gokula Varadharajan

Tuesday, February 13, 2018

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive Move!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.

அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!

Sunday, January 24, 2016

பயத்தின் வழியாக எதிர்மறை எண்ணங்களை சென்றடைதல்!

சிகரெட்டை கட் செய்யும் பணியில் மனத்தை திசை திருப்ப கண் மூடி அமர்ந்த பொழுது மனம் தெரு சுத்தியதில் கிடைத்ததை இங்கே... :)

சில காலங்களுக்கு முன்பு யோகா செய்வதின் மூலமாக எது போன்ற பலன்களை ஈட்டிக் கொள்ள முடியும் என்பதனைச் சார்ந்து ஒரு பதிவு இட்டு அங்கயே யோகா மின் புத்தகம் வேண்டுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யுமாறும் கேட்டு கொண்டிருந்தேன். அது ஒரு ஐந்தாறு வருடமிருக்கும்.

அதனையொட்டி வாரத்திற்கு ஒரு இரண்டு மூன்று மின்னஞ்சல்களாவது யோகா புத்தகம் கேட்டு வந்து கொண்டிருக்கிறது. தவறாது நானும் அனுப்பிக் கொண்டுமிருக்கிறேன்.

சரி இப்பொழுது அது எதுக்கு இங்கே என்று கேக்கலாம். ஏதோ தேடி அடைய வேண்டுமென்பவர்களுக்கு ஒரு சிறு கல்லை எடுத்து அவர்கள் உள்ளே தங்களுக்கென கட்டிக் கொள்ள விருக்கும் மன கட்டுமானத்திற்கு என்னாலான ஒரு சிறு உதவியாக அது இருக்கக் கூடும் என்பதில் கிடைத்த ஒரு அல்ப மகிழ்ச்சி.

நேற்று ஒரு கட்டுரை வாசித்தேன். அதனில் தொடர்ந்து தனக்கென ஓர் ஐந்து நிமிடம் செலவு செய்து கொள்ளக் கூட நேரமில்லை என்பவர்கள் தான், மணிக்கணக்காக இணையத்திலும் தேவையற்ற மற்ற விடயங்களிலும் எத்தனையோ நேரத்தை தொலைத்துக் கொண்டுமிருக்கிறோம் என்று கூறியது. அந்த கட்டுரையில் பட்டியலிட்ட நம்முடைய தினசரி வாழ்வின் நேர தொலைப்பை மறுப்பதற்குமில்லை.

நம்முடைய தினசரி வாழ்வை, முடிவுகளை, போராட்டமாக கருதிக் கொண்டு மண்டை உடைத்து கொண்டிருப்பவைகள் அனைத்துக்குமே உட்கார்ந்து நன்றாக தீர்க்கமாக சிந்தித்து நமக்கென எடுக்கபடாத முடிவுகளே காரணமெனவும், தேவையற்ற, கண்ணுக்கு புலப்படாத பயங்களுமே காரணம் என்பதாக அந்த கட்டுரை சுட்டிச் செல்கிறது.

இந்த பயத்தினை வெல்லும் பொழுதே நமக்கு தேவையான வாழ்க்கைப் பயணம் நமக்கே சென்சிபிலாக இருக்க செய்கிறது. நம்மிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளை நாமே உள் நோக்கி ஆராயப்படாமலேயேதானே தொடர்ந்து நாற்பது வருடங்கள் ஆனாலும் பேசியதையே பேசி, நடந்து கொண்ட பாவனையிலேயே தொடர்ந்து சரியென்று மனம் தீர்மானிக்க அதுவே நமது குண இயல்பாக வெளிப்படுத்தி கொள்ள முடிகிறது.

தொடர்ந்து மிகுந்த இறை பக்தியில் தினசரி சடங்காக நான்கு புகைப்படங்களுக்கு முன்பாக அமர்ந்து எழும் ஒருவர் எப்படி எதிர்மறை எண்ணங்களில் சிக்கி, தன்னுடைய வழியில் குறுக்கிடும் மக்களிடமும் அத்தகைய அதிர்வுகளை செலுத்த முடியும். இவைகளை கொண்டு சற்றே அருகே அது போன்ற மனிதர்களை நெருங்கி சென்று படிக்கும் தருவாயில், அங்கே உள் முகமாக தன்னை அறிந்து கொள்ளும் முயற்சி எதுவுமே சாத்திய பட்டிருக்கவில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில் மதச் சடங்கின் வாயிலாக தொடர்ந்து என்ன வெளியே வழங்கப்படுகிறது என்பதிலேயே மனம் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. அந்த எண்ணங்களை உடைத்து கொண்டு தனக்கென யோசிக்கும் 'தியான' மனத்தை அடைய முடிவதே கிடையாது.

இங்கேதான், தனக்கென ஐந்து நிமிடங்கள் தன்னுடைய சுவாசத்தை கவனிப்பதிலேயே கூட 'மனத்தின் திண்மை' ஈட்டும் பக்குவம் கைவரப் பெறுவதாக நவீன என்டெப்ருனர்ஸ், தன்னம்பிக்கையூட்டு குருமார்கள் கண்டறிந்து கூறுகிறார்கள். இதுவே சரியென்றும் எனக்கும் படுகிறது.

வயதோடு நான் அறிந்து கொண்டே வருவது- தனக்குள் செல்லவே இங்கே நம்மில் பலருக்கும் பயமிருக்கிறது. அது அப்படி ஒரு இருட்டறையாக இருக்கிறது. பயம் மட்டுமே நம்மை செலுத்தும் மூலமாக இருக்கிறது. நேர்மறை எண்ணங்களை மட்டுமே தங்களுக்குள் கொண்டவர்களே தங்களுக்கான உலகத்தில் நறுமணங்களை பரப்பும் பூஞ்சோலைகளை உருவாக்கி கொள்கிறார்கள். 

Wednesday, December 09, 2015

மதங்களும் மனிதர்களும் வெள்ளத்திற்கு முன்னும்/பின்னும்!

 


மதங்களும் மனிதர்களும் வெள்ளத்திற்கு முன்னும்/பின்னும் ! by Prabhakar

ஒரு நான்கு வாரங்களுக்கு முன் அதாவது சென்னை வெள்ளத்திற்கு முன்பு பின்பு என பிரித்துக் கொண்டால், காலம் மனிதர்களின் நாவை, அவர்களுடைய கருதுகோள்களை எப்படியெல்லாம் புரட்டி போட்டு விடுகிறது என்பதாக விளங்கச் செய்யும்.

எல்லாமே நன்றாக போகிறது என்ற நிலையில் ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுது போக்குவதற்கென ஏதாவது ஒரு விசயம் வாயில் போட்டு மெல்லும் அவலை போன்று தேவைப் படுகிறது. கொஞ்சம் நன்றாக யோசித்துப் பாருங்கள். மாட்டு இறைச்சி சாப்பிட்டால் மரண தண்டனை, எங்கோ ஒரு நாட்டில் அவனது பிராந்தியத்தில் நடக்கும் அரசியல் குழப்படிகளுக்காக அவன் ஆற்றும் செயலை வைத்து, உனது ஊரில் வாழும் அடுத்த மதத்து ஆட்களுடன் பிரச்சினை. அதனை சகியாது ஒரே வீட்டினுள்ளே வசித்து அனைவரையும் போல, உழைத்து, வருமானம் ஈட்டி, குடும்பம் எடுத்து, பிள்ளைகளை வளர்த்து என்று வாழும் ஒருவர் இங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு உண்மையான அக்கறையுடன் ஏனையவர்கள் போலவே ஒரு கருத்தை முன் வைத்தாலும் வேற்று மதத்தவர் என்ற ஒரே அடையாளத்தைக் கொண்டு உடனே கிஞ்சித்தும் சம்பந்தமே இல்லாத அண்டைய நாட்டிற்கு அனுப்பத் துடிக்கும் அவலம்.

நாங்கள் அந்த கூட்டத்தினர் அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கொண்டு போய் முட்டுச் சந்தில் நிப்பாட்டி வைத்திருக்கிறீர்கள். இதெல்லாம் சென்னை வெள்ளத்திற்கு முந்திய அவலுக்கான சமாச்சாரங்கள். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன்பாக நடந்த இயற்கை/செயற்கை பேரிடர் நாம் அனைவர் மனதையும் திருப்பி போட்டு, நம் மீது படிந்த அழுக்கு எண்ணத்தை துடைத்தும் தந்து விட்டு போயிருக்கிறது. பிம்பத்தத்தை கட்டி எழுப்ப முயன்றவர்களின் அத்தனை முயற்சிகளும் இப்பொழுது விழலுக்கு இரைத்த நீராக போய் விட்டது.

மீண்டும் அது போன்ற ஒரு நிலையை கொண்டு வந்து, மக்கள் மனதில் அழுக்கை படிய வைக்க சற்று சிரமப்பட்டே உழைக்க நேரலாம். இது வரைக்கும் படைப்பாற்றலுடன் இயங்கி அதனை கட்டியெழுப்ப முயன்றைதை விட இன்னும் கூடுதலாக இல்லாத மூளையை கசக்கி வேலை செய்தாக வேண்டும்.

எது எப்படியோ எனக்கு பல கேள்விகள் இருக்கிறது. ஒரே ஊரில் பிறந்து வளர்ந்து, அதே
காற்றை சுவாசித்து, நீரை அருந்தி, விளையும் மரக்கறிகளிலிருந்து அரிசி வரையிலும் ஒரே மாதிரி உண்டு, உடுத்தி, அத்தனை வீட்டு விழாக்களிலும் இரு தரப்பும் கை கலந்து வாழும் ஒரு கிராமியப் பின்னணியில் பிணைந்து கிடக்கும் மனிதர்களை உடனே அத்தனை நம்பிக்கைகளையும் கை கழுவி விட்டு விட்டு, அவர்களை எப்படி நீங்கள் சத்திய சோதனையில் இறக்கி தீயின் வழி நடந்து வந்து உன்னை நிரூபித்துக் கொள் என்று பணிப்பீர்கள்?

இன்று அந்த மதத்தவர்கள் இறங்கி வெறும் கைகளால் உங்களது மலத்தையும், சிறு நீரையும், நீங்கள் உண்டு, உடுத்தி விட்டெறிந்த குப்பை கூளங்களையும் அகற்றி தங்களுடைய விசுவாசத்தை நிரூபிக்கும் நிலைக்கு நகர்த்தியிருக்கிறீர்கள். இது அனைத்தும் வெகு இயல்பாக நிகழக் கூடியது. இங்கு பிரித்து வைத்து பார்க்கவோ, பேசவோ வெக்கமாக இருக்கிறது. அவர்கள் உங்கள் வீட்டு அண்டையர்கள். கோவையில் நடந்த ஒரு நிகழ்வை கொண்டு ஒரு பிம்பத்தை எடுத்து கட்டமைக்க விளைந்தாலும், நமது விழுமியச் சாயல்கள் நமது தோலின் நிறத்தையொட்டி இருப்பதனை போலவே, உணர்வுகளாகவும் கலந்துள்ளது. உலகம் திடுக்கிடுகிறது என்பதால், நாமும் நம்மை ஒட்டி மண்ணுடன் கலந்து ஊட்டிக் கொண்ட உணர்வுகளை கொன்று அரசியல் வளர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை.

ஃபேஸ்புக்கிலும் மற்ற சமூக வலைத் தளங்களிலும் தன் எழுச்சியாக எழுந்த இந்த நிவாரணப் பணியின் மூலமாக ஓர் ஆரோக்கியமான சூழல் நம் முன்னால் விரிந்து கிடக்கிறது. இதனை முறையாக கையாண்டு இழந்த பரஸ்பரமான நம்பிக்கைகளை மறு கட்டமைப்பு செய்து கொள்ளும் நேரமிது. சாக்கடை, மலம், குப்பை அள்ளி தங்களுடைய தேச பற்றையும், ஊர் பற்றையும் காட்டுவதற்கென அவர்களை அக்னிபரிச்சைக்கு தள்ளி இருக்கிறேன் என்று இருமாந்திராதீர்கள். தூய்மை இந்தியா என்று குப்பை இல்லாத சிமெண்ட் ரோட்டில் நான்கு தண்ணீர் போத்தல்களை விட்டெரிந்து ஒரு லட்ச ரூபாய் மனிக்கடிகாரம் அணிந்து செய்வதல்லா வெள்ளத்திற்கு பின்னான கழிவு, பிணம் அகற்றலும் - அது நம்முடைய கற்பனைக்கும் எட்டாத ஒரு செயல்.

கொச்சை செய்து, அவமானப் படுத்துவதை எதிர் வரும் காலத்தில் அரவே நிறுத்திக் கொள்வது நல்லது. மனிதர்களின் மனங்களை புரிந்து கொள்ளுங்கள். இன்று அமெரிக்காவில் இஸ்லாமோஃபோயியா என்ற மன பிறழ்சி நோய் அளவிற்கு அவ நம்பிக்கை பீடித்திருக்கிறது. சென்னையில் நடை பெறும் சம்பவங்களை அமெரிக்காவிற்கு அவர்கள் நேரடி தொலைக்காட்சி செய்து மக்களின் மனங்களில் நன்னம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கான விடயங்கள் மேலே கூறிய நமது மண் சார்ந்த விழுமியங்களின் பால் நடந்தேறி வருகிறது. அது அவர்களால் கிஞ்சித்தும் புரிந்து கொள்ளவே முடியாத ஆழத்தை கொண்டது. இதுவே சர்வ தேசத்திற்கு இன்றைய தேவை. இதனையே மொத்த இந்தியாவும் தன்னை ஒரு சரியான பாதையில் செலுத்திக் கொள்ள வேண்டுமாயின், சென்னையில் வெள்ள நீராக பாய்ந்த மனிதத்தை எடுத்து சேர்ப்பது தலையாயக் கடமை.

Saturday, November 19, 2011

ஜெயமோகனின் இந்து மத தட்டைப்படுத்தல் விதி...

இவரையெல்லாம் படிப்பதற்கே ஒரு மண்டை வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பொழுது என்னவோ இந்த தட்டைப்படுத்தல் சித்தாந்தம் சில கேள்விகளை என்னுள் எழுப்பியதால், விமர்சிக்கும் நிலையிலிருந்து தூரத்தில் நின்றாலும் பொதுவில் வைத்து வாசிக்கக் கிடைத்ததால் ஓர் ஓரத்தில் வைத்து நாங்களும் பேசித் தெளிந்து கொள்வோமே என்று இதனை எழுத்தாக்கி முன் வைத்திருக்கிறேன். வாங்க வாசிப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு நியூ யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர் தாமஸ் ஃப்ரீட்மென் எழுதிய த ஃப்ளாட் வேர்ல்ட் புத்தகம் படித்தேன். அன்றைய வளர்ச்சியில் படிக்கும் பொழுது அதன் மேலோட்டமான சர்க்கரை தடவிய விசயங்கள் மயக்கத்தை ஊட்டி அடடா என்ன சிந்தனை என்ன சிந்தனை என்று வாசிக்கும் பொழுது கட்டிப் போட்டிருந்தது. அதன் அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் பல கோடி மக்களின் நசுங்கிய வாழ்க்கையை அந்த எழுத்து எடுத்து காட்டிக் கொண்டிருக்கவில்லை; அதற்கு பின்னான ஃப்ரீட்மெனின் கொள்கை நோக்கு எதனைப் பொறுத்தது என்று புரிந்து கொள்ளும் பக்குவமுமில்லை அன்று எனக்கு. அந்த அரசியல் சார்ந்த எழுத்து அத்தனை மயக்கத்தை ரொம்ப இயல்பாக விதைத்து விட்டுப் போயிருந்தது.

அந்த புத்தகத்தின் வெற்றிக்கான எழுத்துச் சிந்தனைக்கான பாராட்டை நாம் அந்த பத்தி எழுத்தாளருக்கே வழங்க வேண்டும். ஏனெனில் அதற்குப் பின்னான உண்மைகளை மறைத்து உள்ளதை உள்ளபடியே வழங்குவதாக உலகம் முழுமைக்குமே ஒருமுகப் போக்கே (monopoly) சிறந்தது என்று வழங்கி அதனை எடுத்து முன் வைத்த புத்திசாலித்தனத்தினை வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால், அதனில் கூறப்பட்டிருக்கும் உண்மை என்னவெனில் மெக்டொனல்ஸ் போன்ற அதி விரைவு உணவகங்களில் உருவாகும் உணவை உண்டு செரித்துக் கொள்ள பழகி விட்டால் பல ஏற்றத் தாழ்வுகள் மறைந்து விடும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மெக்டெனால்ஸ் பரப்புவதின் அவசியத்தை எடுத்தியம்பி அதனால் மட்டுமே உலக தட்டையாக்கப்படல் சிந்தனை ரீதியாக எப்படி எடுத்து கட்டியெழுப்பப்படும் என்று மயக்கம் ஊட்டக் கூடிய கருதுகோளின் அடிப்படையை நிறுவ முயன்றிருக்கும் அந்தப் படைப்பு.

இந்த உலகம் முழுதிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் லோகல் வாழ்வு ஆதாரத்தில் கிடைக்கும் பொருளாதாரச் சூழலில் அமைத்து கொள்ளும் தன்னிறைவு அணுகுமுறையைத் தவிர்த்து உலகினைத் தட்டையாக்கிவிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்வும், ஒரு மித்த சிந்தனையும் எட்டி விடுவார்கள் பின்பு இந்த பூகோளத்தில் பஞ்சமும், போரும் அற்று ஜீவித்து வாழலாம் என்பதனை போல மிக மேலோட்டமான கருத்தை முன் வைத்து எழுதப்பட்டது. ஆனால் அந்தப் புத்தகம் அறிவுச் சுரண்டல் பண்ணுபவர்களுக்கான ஒரு கையேடு.

அந்தப் புத்தகத்தில் அவர் எப்படி வெளி நாட்டுத்தொழில்கள் இந்தியா போன்ற மூன்றாம் தர நாடுகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டித் தரக்கூடிய அமுத சுரபி, என்று கூறியபடியே இனிப்பு மிட்டாய் வழங்கியிருப்பார் (கசப்பை மறைத்து). அதற்கு அடிப்படையான மனித வளம், ஆங்கிலம் கற்றறிந்த பல கோடி இளைஞ/ஞிகளைக் கொண்டு மிக எதார்த்தமான சூழ்நிலையில் அமைந்து பட்டிருக்கிறது என்ற புள்ளி விபரத்துடன். அதற்குப் பின்னான விசயங்களான இந்த இளைஞர் கூட்டம் எப்படி உறிஞ்சப்பட்டு ஒரு நாட்டிற்கு கிடைக்கற்கறிய அறிவுச் சுரண்டல் நடந்து கொண்டிருக்கிறது என்பதனை உணர முடியாத வாக்கில், நமது இளைஞர்களின் ஆங்கில அறிவு சிலாகிக்கப் பெற்று எப்படி அவர்கள் பீட்சாவும், கோக்கும் வார இறுதி கேளிக்கைகளையும் நடத்தி அமெரிக்கர்களைப் போலவே இன்று சிறு சேமிப்பு அற்று, ஈட்டும் பணத்தை சுழற்சியில் போடுவதின் மூலம் லோகல் பொருளாதாரம் மேம்பாடு அடைய உதவுகிறார்களென்றும், இந்திய இளைஞர்களின் வாழ்க்கை அமெரிக்க இளைஞர்களைப் போலவே இருக்கிறது என்றும் புல்லரித்துப் போய் இருப்பார்.

படிக்கிற என் போன்றவர்களை அந்த மயக்கமூட்டல் என் தலைமுறைக்கும் தாங்கும் விதமாக தடம் பதித்து விட்டுவிடும்.அதற்குப் பின்னான சுரண்டல் புரியாமலேயே! இன்னும் ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்தாலே தான் ஓர் அறிவாளியாக எண்ணிக் கொள்ளும் மயக்கத்திலிருப்பவர்களுக்கு இது போன்ற வாசிப்பு பின்பு எதனை விட்டுச்செல்லும்.

இந்தக் கட்டுரை பேச வந்த விசயம் இதுவல்ல. இருப்பினும், அதே உலகமயமாக்கல் சந்தைப்படுத்தலுக்கான எழுத்து பிரதிநிதியை ஒத்தே இன்று நமது பகுதி உலகில் ஒருவர் எப்படி கடவுளுடன் உரையாட தகுதியான ஒரே மொழியான சம்ஸ்கிருதத்தைக் கொண்டு நாட்டார்கள் தெய்வத்தினையும், மற்ற கோடான கோடி கிராம கடவுளர்களையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து எல்லைகளைக் கடந்து கடவுள் உலகமயமாக்கல் செய்ய முடியுமென்று நமக்கெல்லாம் ஒரு சித்தாந்த லாலிபாப் வழங்க தனது சிந்தனைக் கடையை விரித்திருக்கிறார். அதனை வாசிக்க நேர்ந்ததின் விளைவாக உருவானதுதான் இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்துங்க...

எனக்கு அதனை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த சித்தாந்தத்திற்கான அடிப்படை நல் கருத்தாக்கங்கள் மேலே அறிமுகப்படுத்தியிருந்த அதே ஃப்ரீட்மெனினுடைய உலகமயமாக்கலின் நன்மைகளை எப்படி இனிப்புத் தடவி அதற்கு பின்னாக அழுந்தி, நசுங்கி கொண்டிருக்கும் பன்முக வாழ்வு முறை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வாதாரம், மொழி போன்றவைகளை தவிர்த்து/மறைத்து பேசி ஒரு வித மயக்கத்தை தோற்றுவித்தாரோ அதே செயலை வேறொரு தளத்திலிருந்து நமது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வழங்கியிருக்கிறார் என்பதாக புரிந்து கொண்டேன்.

அந்தக் கட்டுரையின் சாரம்சம்:- இந்தியா போன்ற அகன்ற நிலப்பரப்பை கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் மதம் இந்து மதம். அதற்கென உள்ள கடவுள்களோ வாழும் மக்களை விட அதிகப்படியான எண்ணிக்கையில் உள்ளது. எப்படி இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தேசீய இனமாக கட்டியமைக்க எண்ணி, மத ரீதியாக இணைக்கும் நிலையிலாவது அது சாத்தியப்படுமா என்ற ஒரு முயற்சியின் நிமித்தம் இந்த சம்ஸ்கிருத பொது மொழியை முன் நிறுத்தி அந்த கட்டுரை பேசியிருக்கிறது.

எனது முப்பாட்டனான தாத்தா கூட எங்களுக்கு குல தெய்வம் ஆகிவிட்டார் எனும் பொழுது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அது போன்ற கடவுள் ஒருவர் இருப்பார்தானே? அப்போ அவர் சொல்வதும் சரிதான். சரி, ஆனால் என் முப்பாட்டன் பேசிய, புழங்கிய மொழியில் அவருடன் உரையாடுவதில்தான் எனக்கு கிடைக்கக் கூடிய நெருக்கமும், உணர்வுகளும் கடத்திப் பெறுவதாக எனது மனதும் லயித்து எனக்கு கிடைக்க வேண்டிய நம்பிக்கை சார் விசயங்களும் கிடைத்ததாக நகர்ந்து அடுத்த தலைமுறைக்கும் அதனை கடத்தப்பெற வைக்கிறேன்.

மாறாக, பக்கத்துத் தெரு கிஷ்மு உடைய கொள்ளுத் தாத்தா ஓரளவிற்கு அறியப்பட்டவர் என்பதால், அவர் பேசுகின்ற மொழியின் அ, ஆ கூட தெரியாமல் நான் எனது முப்பாட்டனை அவருக்கு கீழாக இணைத்துக் கொள்வதின் மூலமாக எனக்கான நெருக்கத்தினை எப்படி எட்ட முடியும்? அப்படியெனில்  எனது முப்பாட்டன் அவரை விட இளக்காரமானவரா? எதன் பொருட்டு? அவர் எட்டியிருந்த பொருளாதார அடிப்படையிலா, அல்லது பேசும் மொழி சார்ந்தா? இப்பொழுது இந்த அடிப்படை வாதத்தை விட்டுவிட்டு சற்றே பெரிய கடவுளர்களுக்கு வருவோம்.

உதாரணமாக, எங்களூரில் மகமாயி கோவில் ஒன்று உள்ளது. அங்கே லோகல் பூஜாரியே சூடம் ஏத்தி, அவருக்கு தெரிந்ததைப்பாடி, எங்களுக்கு போதுமான நெருக்கத்தை உருவாக்கித் தருகிறார். அதுவே போதுமானதாக கருதி எத்தனையோ தலைமுறைகளை கடந்து வந்து அந்த வழிபாடும் நிற்கிறது. வருடம் ஒரு முறை கோழி, ஆடுகள் நேர்த்திக்காக பலியிடப்பட்டு அங்கேயே கிராமமாக அமர்ந்து, சமைத்து உண்டு கொண்டாட்டமாக நாளை கடத்துகிறோம்.

இந்த முறையை மாற்றி மிருக பலியிடல் நாகரீகமற்ற செயல். அதனில் ஓர் அழகில்லை. காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறது. மாரியாத்தாளிடம் உரையாடும் மொழியும் அப்படியே இருக்கிறது என்று கூறி 99% சதவீத மக்களுக்கு புரிந்த மொழியைத் தவிர்த்து புரியாத ஒரு மொழியில் அன்னியமாக உணர்ந்து கொண்டு, தன் சார்ந்த நிலத்திற்குள்ளாகவே வேறுபட்டு ஏதோ மற்றுமொரு கட்டமைக்கப்பட்ட உலக கடவுள் நிறுவப்படலின் அவசியத்தில் எனது கொண்டாட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வது அந்த மண்ணின் மணத்தையும், வாழ்வு முறையையும் சிதைக்குமா சிதைக்காதா?

...இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது...


எழுத்தாளர் ஜெயமோகனின் வாதம் - சம்ஸ்கிருதத்தை கடவுளுடன் உரையாடும் ஒரே பொது மொழியாக ஆக்கிவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து கேதர்நாத் வரையிலும் ஒரே சங்கீதமே ஓதப்படும். அதனால் மிசோரத்திலிருந்து குஜாரத் வரையிலும், தமிழகத்திலிருந்து கஷ்மீரம் வரையிலும் அனைத்து இந்தியர்களும் கடவுளின் பொது மொழி புரிந்து தங்களை ஒரே தாயின் பிள்ளைகள் என்று உணர்ந்து அனைத்து சிறு கடவுளர்களும் பெரும் கடவுளர்கள் போன்றே இந்தியாவின் ஏனை பகுதி மக்களின் கவனத்தை பெற்று, என் ஊர் மாரியம்மா கோவிலுக்கு மிசோரத்து பிரஜை வந்து போக வசதியாக இருக்கும் என்று மத ஒருமுக போக்கை கட்டியெழுப்புகிறேன் என தனது மத தட்டைப்படுத்தல் சித்தாந்தத்தை முன் வைத்திருக்கிறார்.


...சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது...


மோலோட்டமாக வாசிக்கும் பொழுது அதே எண்ணம் ஃப்ரீட்மெனிடம் கிடைத்த அடடா என்ன சிந்தனை, என்ன சிந்தனை என்று சித்தம் கலங்க வைக்கக் கூடிய மயக்கமே வந்தது. ஆனால், அதற்குப் பின்னான அபத்தமும், 3000 வருடங்களாக நடந்தேறும் அதே குயுக்தியும் அந்த வார்த்தைகளுக்குப் பின்னான நிழலில் ஒளிந்து நிற்கிறது. இந்த வாரத்தில் ராகுல் சங்கிருத்தியாயன் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற ஆய்வாராய்ச்சியினை ஒத்த புத்தகம் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. சற்றே புனைவு கலந்து மிக அழகாக 6000 வருடங்களுக்கான பின்னோக்கிய நடையில் தொடங்கி முன்னேறி 1940களில் வைத்து முடித்திருக்கிறார்.

இந்த மானிட வளர்ச்சியும்/வீழ்ச்சியும், அதற்குப் பின்னான உண்மையான அரசியலும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அந்த வாசிப்பு ஒரு நல்ல தொடக்கம். ஒரு மானுட இனமாக எங்கிருந்து தொடங்கியது நமது நடை என்று அறிந்து கொள்ள எத்தனித்து தெளிவு வேண்டி நிற்பவர்களுக்கு நல்ல தொடக்கப் புள்ளி அந்த வாசிப்பு. அதனை வாசித்து விட்டு ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தால் அந்த எழுத்திற்கு பின்னான ஒருமுக நோக்குமயம் எதனை வேண்டி நிற்கிறது என்பதனை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த போராட்டம்/பரப்புவாதம் இன்றைய நேற்றைய விசயமாக படவில்லை.

இஸ்லாத்திற்கு பொது மொழி அரபி, கிருஸ்துவத்திற்கு இன்றைய நாளில் ஆங்கிலம் எனவே மதம் வளர்கிறது என்று நினைத்திருப்பார் போலும். அதனைக் கருத்தில் கொண்டு இந்தியச் சூழலில் நமக்கு இந்த சம்ஸ்கிருத கடவுள் உரையாடல் மொழியை பொது மொழியாக்க முயன்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிந்தனை ஓர் உயர்ந்த நோக்கத்திற்கானது என்றாலும் அதற்கு பின்னான பூர்வீக நிலத்தின் விழுமியங்கள் சிதைவுக்குள்ளாவதை ஏன் அவர் கருத்தில் நிறுத்த வில்லை என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

ஜெயமோகன் கூறிய வழியில் நடந்தால், எப்படி உலமயமாக்களின் பக்க விளைவாக சிறு விவசாயிகளும், லோகல் பண்ட சந்தையைச் சார்ந்த சிறு தொழில்களும், மக்களும் அதற்கே உண்டான மொழியும், சொல்லாடல்களும், கொண்டாட்டமும் இழந்து ம்யூசியத்தில் வைத்து பார்த்து கல்லா கட்டும் நிலையை அடைய வைத்ததோ அதனைப் போன்றே இந்த கடவுள் பொது மொழியும் நிலத்திற்கான அடையாளங்களை சிதைத்து அந்த மண்ணிற்கே உண்டான கலாச்சார விழுமியங்களை சிறுமைப் படுத்தி அழிக்கவே செய்யும்.

பன்முகத் தன்மையில்தான் உலகின் அழகே செழித்து, கொழித்து வாழ்வதில் பொருளுள்ளதாகவும் இந்த ப்ரபஞ்சத்தின் பிரமாண்டம் உணர வைக்கக் கூடியதாகவும் உள்ளது. இதற்கு மேலும் இது போன்ற உலகமயமாக்கம் அது பொருளாதார, மத, கடவுள் சார்ந்து எடுத்து நிறுத்துவது மென்மேலும் அடிப்படை வாதம் பல்கிப் பெருகவே வழி நடத்திச் செல்லும். இருக்கும் பிரச்சினைகள் போதுமே!    





டிஸ்கி: ஜெயமோகனின் கட்டுரையில் மொழியின் வளர்ச்சி, பிற மொழிகளுடன் ஒரு மொழி ஊடாட நேரும் பொழுது எப்படி ஒன்றிற்கு பிரிதொன்று கொடுத்து, வாங்கி அதன் இலக்கண நெகிழ்வினைக் கொண்டு அந்த மொழி தன் காலங்கள்தோறும் நிலை நிறுத்திக் கொள்கிறது என்பது வரைக்கும் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் இயற்கைசார் அறிவியலாளன் என்ற முறையில். அதனைத் தவிர்த்து ஜெமோ நிறுவ வந்த மத அடிப்படையிலான சம்ஸ்கிருத சித்தாந்த முன் நிறுத்தலை மட்டுமே இங்கே பிரித்திருக்கிறேன். 



Wednesday, September 30, 2009

தீவிரவாதத்திற்கு பொறுப்பாளிகள் யார்?

*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாகப் படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு முன்னமே வாசிக்க கிடைக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...

செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை இங்கு வைத்திருக்கிறார்... அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.

நாயகி,

...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடத்தியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது.

எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருணங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருணங்கள் அல்லவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜென்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்க்கையை ஒரு பொருளற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அலைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.

அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதத்திற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து- இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!


பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

Sunday, December 07, 2008

இந்திய துணை கண்டத் தீவிரவாதம் - தெகாவின் பார்வையில்!

சமீபகாலமா பதிவுகள் எழுதவே தோணுவதில்லை. நடைபெறும் நிகழ்வுகளை கொண்டு எனது எண்ணவோட்டத்தை சுடச்சுட பதியும் பொழுது, அந்த ஒட்டு மொத்த நிகழ்வின் பரிமாணமோ வேறு மாதிரியாக நாட்பட நாட்பட வெளிச்சத்திற்கு வருகிறது. அதுவும் இந்தியாவில் நடைபெறும் அரசியல், கலவரங்கள் சார்ந்த நிகழ்வுகள்.

அதற்கு ஒரு உதாரணமாக அண்மையில் அரசு சட்டக் கல்லூரியில் (எல்லா அரசாங்க கல்லூரிகளிலுமே என்று கூட கூறி விட முடியும்) காலங் காலமாக நடைபெற்று வரும் இந்த ஜாதிச் சண்டையின் பின்னணியை ஆர அமர கவனிக்கும் பொழுது யாருக்கும் தெரிய வந்திருக்கும். இதனில் முக்கியமாக கேமராவும் கையுமாக, ஒருவர் தற்கொலைக்காக ஒரு உயரமான நீர்த் தொட்டியின் மீது ஏறி குதித்து உயிரை மாய்த்து கொள்வதனை நேரடி ஒளிப்பரப்பு செய்வதாகட்டும், கல்லூரியில் ஒருவரை ஒருவர் மாட்டடி அடித்துக் கொண்டு அவர்களும் செத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வன்முறை சார்ந்து இம்யுனிடி கொடுப்பதில் காட்டும் அக்கறையாகட்டும் இந்த வியாபார மீடியாக்களின் பங்கு சகிக்க முடியா அளவிற்கு சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. அது நம் வளர்ச்சியில் ஒரு அபாயகரமான சந்திப்பில் நின்று தவறான பாதையில் வழி நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறோமென்பதற்கான ஒரு வழியாக எனக்குப் படுகிறது.
________________________________

சரி இப்பொழுது பதிவின் கருவிற்குள் செல்வோம். அவந்திகா அண்மையில் நடந்தேறிய மற்றுமொரு ரியல் லைஃப் ஷோ இதுவும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பெற்றது "மும்பை தீவிரவாத தாக்குதலுக்குக்" காரணம் இந்திய அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டுமென்றும், சரியான, நேர்மையான அரசியல்வாதிகளை இந்தியா பெற்று விட்டால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் குறையுமா என்றும் வினவி ஒரு தொடர் விளையாட்டை ஆட அழைத்திருக்கிறார்.

இந்த தீவிரவாத தாக்குதல் அல்லது உலகம் தழுவிய நவீன தீவிரவாத அணுகுமுறை சார்ந்து என் மனதில் எண்ண அலைகள் அவ்வப்பொழுது தீவிர'மாக எழுந்து வீழ்வதுண்டு. இருந்தாலும், இன்றைய பொருளாதார கட்டமைவில் நடைபெறும் சித்து விளையாட்டுக்களும், புவியிருப்பில் அமைந்திருக்கும் நாடுகளின் அரசியல் சார் நகர்வுகளையும் ஒட்டு மொத்தமாக கவனிக்கும் பொழுது, மனித பரிணாம நகர்வில் ஆண்ட்ரோஜனையும், அட்ரீனலின் ஓட்டத்தினையும் கொண்டே எடுக்கப்படும் சுயநலத்தனமான முடிவுகளின் வெளிப்பாடே இந்த நவீன தீவிரவாத விளையாட்டோ என்று என்னை ஒரு கணம் யோசிக்க வைக்கிறது.

காலம் தொட்டே மதங்களின் இருப்பும் மறுப்பும் அவைகளின் நெகிழ்வுறும் தன்மையைக் கொண்டே மக்களால் மானசீகமாக பின்பற்றப் பட்டு தலைமுறையாக கையிறக்கம் பெற்று பல நூறு ஆண்டுகள் மாற்றத்தினூடே தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டு மக்களின் தேவைக்கும் விட்டுக்கொடுத்து தலை தப்பி நிற்பதாகவும், லாஜிக்கலாகவே இயற்கையின் நியதிப்படியே அதுவே சாத்தியமாகவும் தோணச் செய்கிறது எனக்கு.

ஆனால் இன்றைய நிலவரப்படி அது போன்ற ஒரு பாதையில் எந்தவொரு மதத்தினையும் நாம் பரிணமிக்க போதுமான கால அவகாசம் கொடுப்பதாக தெரியவில்லை, அந்தந்த குழுமங்களும் தங்களின் "கடவுளர்களை" காப்பாற்றி அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்காக போராடுவதாகப் படுகிறது. இச் சூழலில் வன்முறையும் ஒரு வாழ்வின் அங்கமாக தேவைப்படாத நாடுகளின் மீது கூட வைத்து திணிக்கப் படுகிறது.

இப்பொழுது இந்திய துணைக் கண்டச் சூழலுக்கு வருவோம். நம் புவியியல் இருப்பு உலக வரைபடத்தில் உற்று நோக்கினால் ஒரு சூடான பகுதியில் (geo-politicaly we are located in a complex place) இருப்பதனைக் பார்க்கலாம். இச் சூழலில் எந்தவொரு முடிவினையும் நம் நாடு எடுத்தோம் கவிழ்த்தோமென்று தான் தோன்றித் தனமாக எடுத்து அதனை நிறைவேற்றி பார்த்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.

உண்மை அப்படியாக இருக்க "கொம்பு சீவி" விடப்படுவதினால் கோபம் கொப்பளித்து 'பாடம் கற்பிக்கிறேன் பார்!' என்று மல்லுக்கு நின்றால் தொலைதூரப் பார்வையில் நாம் சந்திக்கவிருக்கும் இன்னல்கள் நம் கற்பனைக்கும் எட்டாதது. எனவே நம்மூர் அரசியல்வாதிகள் அண்டைய நாடுகளுடன் பகை பாராட்டி அதன் மூலம் ஓட்டு அரசியல் வேண்டுமானால் செய்து கொள்ளலாமே தவிர இது நடைமுறைக்கு சாத்தியப் படாத ஒன்று!

இருக்கும் வழி ஒரே வழியே! பொருளாதார வகையில் தன்னிறைவு எட்டி, தன் நாட்டிற்கு போதுமான பாதுகாப்பை, எல்லை கடந்த தீவிரவாதத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்தற்குரிய வழிமுறைகளைக் கண்டு, நாட்டின் எல்லைக்குள் வாழும் எல்லாரும் நிறைவாக வாழும் ஒரு வழிவகை கண்டு, பிரிவினை வாத அரசியலை தவிர்த்து நாட்டினை எடுத்துச் செல்வதே வாழும் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையளிக்கும் கட்டத்தில் இருப்பதாக ஏனைய தீவிரவாத விசயங்களில் கவனத்தை செலுத்தாமல், தான் பயனுறும் உடனடித் தேவைகளில் கவனம் செலுத்த முடியும்.

நாம் வெறுமனே அரசியல்வாதிகளை குறை கூறுவதில் எந்த பொருளும் கிடையாது, என்னமோ அரசியல்வாதிகள் எங்கிருந்தோ குதித்து நம்மிடையே தோன்றிவிட்டதாக நினைத்துக் கொள்வதற்கு! அவர்கள் நம் ஒட்டு மொத்த சமூகத்தின், எண்ணவோட்டத்தின், ஒழுக்க நெறிகளின் பிரதிநிதிகளே! அது அப்படியாகக் கிடையாது என்று கூறினால், கண்டிப்பாக நம்மால் அது போன்ற பொய்யான பிரதிநிதிகளை சகித்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? மாற்றுத் தலைவர்களை நம் எண்ணங்களின் பிரதிபலிப்பானை தேடிக் கொண்டே இருப்போமே...! இத்தனை கோடி மக்களிருந்தும் நமக்கு கிடைப்பதெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாமே எனும் பொழுது என்ன தெரியவருகிறது அதிலிருந்து?

ஒண்ணு மட்டும் நிச்சயம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ண வோட்டம் இந்த "சுயநலப்" போக்கு சார்ந்து மாற வேண்டும், அதற்குத் தேவை என்னன்ன அப்படின்னு ஒவ்வொரு தனிமனிதனும் தீவிரமாக யோசிக்க வேண்டும், அப்படி யோசித்து தன்னைத் தானே திருத்திக் கொண்டு பொது வாழ்க்கைக்கும், ஏனைய துறைகளுக்கும் சென்றால் மட்டுமே ஒரு விடிவுகாலம் நம் நாட்டிற்கு கிட்டும் என்பது எனது எண்ணம்.

நானும் இன்னோட பங்கிற்கு ஒரு நாலு பேரை முன்னுரைக்கிறேன்...


1) தருமி

2) சுரேகா

3) சுகா

4) சந்தோஷ்



மேலும் இவங்க இல்லாம யாரெல்லாம் தானும் தன்னோட பார்வையை முன் வைக்கணுமின்னு நினைக்கிறீங்களோ கண்டிப்பா செய்ங்க. நன்றி!




பி.கு: இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - வன்முறை வாழ்க்கைக்கு யார் பொறுப்பு...?

Sunday, September 28, 2008

உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!

ம்ம்... சரியாக 2001ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், நானும் மாநிலம் மாறி என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி புதிய மாநிலத்தில் இணைத்துக் கொள்ளும் அவசியத்தில் இருந்தேன். அப்படியாக நானும் அந்த அலுவலகத்தில் என்னுடைய பழைய ஓட்டுநர் உரிம அட்டையை ஒப்படைத்து விட்டு, புதிய மாநில அட்டையை வாங்கும் பொழுதும், புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதர கேள்விகளுக்கு பதிலுரைத்துக் கொண்டு வரும் பட்சத்தில், ஓரிடத்தில் நிறுத்தி பொறுமையாக "டு யூ வாண்ட் ட்டு பி ஆன் ஆர்கன் டொனர்" என்று கேட்டார்.

அப்படியே ஒரு நிமிடம் ஆடிப் போய் யாரோ பொடீர் என்று செவுட்டில் அடித்ததினைப் போன்று உறைந்து போனேன். அவரிடம் ஒரு நிமிடம் என்று கேட்டுக் கொண்டு, என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு" என்னடா இது இதுபோன்ற ஒரு கேள்வியை என் வாழ் நாளில் நான் கேட்டுக் கொண்டதே இல்லையே இப்படியான சாவுடன் தொடர்படுத்தக் கூடிய கேள்வியை இவ்வளவு சாதாரணமாக கேட்டு சிந்திக்க வைத்திவிட்டாரே என்று ஆட வைத்தது.

இருந்தாலும் மறுபக்கம் வாய் கிழிய எல்லாம் பேசும் நமக்கு சாவு என்றவுடன் சும்ம அதிர்ந்து போகுதே ஏன், இறந்த பிறகு தம்மிடம் பிரயோசனமாக பிறருக்கு உதவும் வாக்கில் உள்ள சில உறுப்புகளை எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டவுடன் ஏன் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வறை உதறுதே ஏன்? என்று மனம் குழம்பிப் போனது உண்மை. சுதாகரித்துக் கொண்டு மரண பயத்தை தூரத்தே வைத்துவிட்டு உள்ளுணர்வை எழுப்பி கேட்டவுடன் இயல்பென்ற ஒரு விசயம் கடிவாளத்தை பற்றிக் கொண்டது, நானும் அதன்படியே "எஸ், ப்ளீஸ் ஆட் மீ" என்று கூறிவிட்டேன். அன்றிலிருந்து நானும் ஒரு உடலுறுப்பு பங்களிப்பாளன்.


இதனை எழுத வேண்டுமென நீண்ட நாட்களாகவே ஆசைப் பட்டதுண்டு, ஆனால் பிறரை தர்மசங்கடத்தில் ஆட்படுத்தக் கூடும் என்பதினால் தள்ளிப் போட்டதுண்டு. இன்று தினகரனில் ""உள்ளத்தில் நல்ல உள்ளம்..."" என்ற தலைப்பிட்ட உடலுறுப்பு தானம் எந்தளவில் இந்தியாவில் செயலில் இருக்கிறது என்பதனைப் பற்றி படிக்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததது அங்கே குறிப்பிடப்பட்டிருந்த சில புள்ளியல் சார்ந்த குறியீடுகள்.

உதாரணத்திற்கு அந்தக் கட்டுரையிலிருந்து... "உலக அளவில் ஸ்பெயின்தான் உறுப்பு தானம், உடல் தானத்தில் முதலிடம் வகிக்கிறது. அங்கு வசிக்கும் 4.60 கோடி பேரில் 14500 பேர் முன்வந்து உறுப்பு மற்றும் உடல் தானம் செய்கிறார்கள். ஆனால், 100 கோடி பேர் வசிக்கும் இந்தியாவில் ஆண்டுக்கு 30 முதல் 40 பேர் மட்டுமே உடல் தானம் செய்கிறார்கள்.".... என்று குறிப்பிட்டதை படித்தவுடன், நான் ஏன் அப்படி அது போன்ற ஒரு கேள்வி ப்ரக்ஞையுணர்வே அற்று வாழ்ந்திருக்கிறேன் 2001ம் ஆண்டு வரை என்பது பட்டென புரிந்தது.

ஏன், இத்தனை மக்கள் தொகையுடன் உள்ள ஒரு நாடு, இத்தனை மீடியாக்கள் தங்களுடைய பிழைப்பை ஜரூராக நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் கூட வெறும் 30 லிரிந்து 40 பேர் மட்டுமே முன் வந்து தானம் செய்யும் நிலை? மதத்தில், இறப்பிற்குப் பிறகு இது போன்ற உடலுறுப்புகளுடன் மேலே வந்தால்தான் மீண்டும் பிறப்பெடுக்கும் பொழுது ஏதுவாக இருக்க முடியும் என்ற முறையில் எழுதப் பட்டுள்ளதா? எனக்குத் தெரிந்தவரையில் இந்து மதத்தில் அப்படிய் அடிக் கோடிட்டு காட்டப்பட்டு குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரியவில்லை. பிற மதங்களை பற்றி, நோ ஐடியா!

இத்தனை நல்லவர்களை கொண்ட(?!) நம் நாடு ஏன் ஸ்பெயினைக் காட்டிலும் இத்தனை கருமியாக இறப்பிற்குப் பிறகும் கூட மனிதர்களை வைத்திருக்கச் செய்கிறது? எப்படியோ, எல்லா மதங்களும் ஆத்மா என்ற ஒன்று இருப்பதாகவும், அது மட்டுமே நமது மரணிப்பிற்கு பிறகு மேலெழும்பிச் சென்று பிறகு எங்கடைய வேண்டுமோ அங்கடைந்து மறு-சுழற்சி (ரீ-சைக்கிலிங்) செய்யப் படுவதாக அறிகிறேன்.

அப்படி இருக்கும் பொழுது உடலுறுப்பிற்கும், ஆத்மாவிற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? எனவே, இந்த உடலுறுப்புச் சார்ந்த விசயத்தில் நிறைய மரண பயமும், கொஞ்சமே மதம் சார்ந்த விசயமும் குறுக்கிடுவதாக நான் கருதுகிறேன். மரணத்தைப் பற்றிய பயத்தை மரணிக்க வைத்துவிட்டால் நீங்களும் குபேரனாக வாழ்ந்து முடித்ததாக இச் சமூகம் உணரும் இந்த "தானாக முன் வந்து உடலுறுப்பு தானம் செய்யும் பொறுட்டு" இல்லையா?

ஆனால், இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளின் உச்சமாக ஆய்வுக் கூடங்களிலே இது போன்ற டி.என்.ஏ பொறுத்தம் கொண்ட உடலுறுப்புகளை உற்பத்திக்கவும் முனைந்துவிட்டால், மனித பயத்தினையும், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் போற்றி பாதுகாத்து கேள்வி நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தமிருக்காது - அதுவும் ஒன்று.

நம்மூரில் நடிகர் கமல்ஹாசன் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானம் செய்திருப்பதாக அறியும் தருவாயில், அவரின் மீது பன்மடங்கு அறிவுசார் மரியாதை கூடுகிறது.

இதனை வாசிப்பவர்களின் பார்வை எதனைப் பொறுட்டு ஒத்துப் போகிறது, விலகி நிற்கிறது என்பதனை அறிய ஆவலாக இருக்கிறது. பகிர்ந்து கொள்ளுங்கள், நல்லவர்களே!

Thursday, June 29, 2006

ஐயப்பன் சாமியும் "தீட்டுப்" பெண்களும்...

இது சம்பந்தமான எனது தெளிவினை இங்கு ஆங்கிலத்திலும் இட்டு வைத்திருக்கிறேன், அன்பர்கள் என்னை தவறாக கணிப்பதற்கு முன்பு அங்கும் சென்று வந்து விட்டு விடுங்கள். நன்றி!

இப்பொழுது செய்திக்கு போவோம்...

இது ரொம்ப நாட்களா எனக்கு பிடிபடவே இல்லை. நான் சின்ன பையனா இருக்கிறப்ப, எங்க பார்த்தாலும் நிறைய ஆத்மாக்கள் திடீர்னு மகாத்மாவ ஆயி காவி வேஷ்டியும் நெத்தி நிறைய சந்தனப் பட்டையுமா திரியறதைப் பார்க்கிறது உண்டு. ஆனா, ஆண்கள் மட்டும்தான் அந்த ஆட்டத்தில சேர்த்தி, பெண்களுக்கு கிடையாது, ஏன்னு கேட்டேன் அப்ப சொன்னப்ப புரியல (தீட்டு அது இதுன்னு... இப்பவும் கூடத்தான்).

இதிலென்ன இன்னொரு முக்கியமான விசயமுன்னா பட்டை (இந்த பட்டை அந்தப் பட்டை இல்லைங்கோவ்..) அடிக்கிற ஆசாமிகள் எல்லாம் அத நிறுத்திப் புட்டு நல்ல புள்ளையா சங்கதியா நேரம் தவறாம சாப்பிட்டு குளிச்சு என்னன்னமோ செய்வாங்க, அந்த நேரத்திலே (இப்போ ஐயப்பன் சாமீ கொஞ்சம் அது மாதிரியான ரூல்ஸைக் கூட தளர்த்திக்கிட்டு வாரதா கேள்வி). எப்படியோ நல்லா இருந்தா சரி!

வந்த விசயத்தை விட்டுப்புட்டு நான் எதையோ பேசிகிட்டு இருக்கிறேன். நேத்தைக்கு ஒரு செய்தி யாரோ ஒரு கன்னட நடிகை ஐயப்பா சாமியை சபரிமலையில வைச்சு தொட்டு கும்பிட்டு தீட்டு பண்ணிப்புட்டாராம்.

இப்போ ஐயப்பன் டென்ஷன்ல ஆம்பிளை பக்தர்களை பார்த்து இதெல்லாம் அதட்டி உருட்டி கேட்க மாட்டீங்களப்பா அப்படின்னு கேட்டதற்கு, நம்ம ஆளுங்க சாமி சார்பா, சாமீயை இந்தம்மா தீட்டு பண்ணிப் புடுச்சு அப்படின்னு சொல்லி கோர்ட்ல கேஸ் எல்லாம் போடப் போறதாக் கேள்வி.

அது சரி, இது என்ன சாமீ ஆம்பிளைக்கு ஒரு ரூல்ஸ் அப்புறம் பெண்களுக்கு ஒரு ரூல்ஸ் வைச்சுருக்காரு... இது என்னிக்காவது பிரட்சினையாகப் போகுதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், இந்த அம்மா அதத் தொடங்கி வைச்ச மாதிரி இருக்கு இப்போ. இந்த பெண் உரிமை மீறல் அது இதுன்னு என்னமோ சொல்லிக்கிட்டு இருக்கிற அம்மாக்கள் எல்லாம் என்ன பண்ணப் போறங்க இந்த விசயத்திலே பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

இங்கு கூட இதனைப் பற்றி பேசி வருகிறார்கள்...

Friday, June 09, 2006

*மதம் தேவையா* - "அ.குமாருக்கு" ஒரு பதில்

இங்கு நண்பர் அருள் ஒரு பதிவு மதம் தேவையா என்ற தலைப்பில் ஒரு கேள்வியை வைத்துள்ளார், அங்கு சென்று படித்துவிட்டு இதனை தொடர்ந்தால் வால் தலை புரியும் எதனைப் பற்றியது இப்பதிவு என்பது... ஒரு நடை இதிலேஏறி போயிட்டு வந்திடுங்க ப்ளீஸ்...

ஒகே அருள், மதம் என்பது எதுவரைக்கும் என்பதனைப் பார்ப்போம். தாங்களுக்கு தனது சிறு வயதில் தி.க மக்களையும் அவர்களுடன் தங்களுக்கு அவ்வளர்ச்சிக்குரிய இறை நம்பிக்கைகளுடன் தர்க்கிக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது, சரியா? அவ்வாறு அவ் மன நிலைக்கு இட்டுச் சென்றது எது? தாகம்! அத் தாகமும் தேடலும் இருக்கு வரைதான் நீங்கள் ஒரு சூழலில் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எதிலிருந்து "நீச்சல் எது" "மிதத்தல் எது" என்ற வித்தியாசங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு, இல்லையா?

ஓஷோவிற்கு தனது குழந்தைப் பருவமொட்டியே அத்தாகமும் மிதப்பதற்கான நல்ல சூழலும் அவரைச் சுற்றி தனது பாட்டானர் மூலமும் இதர விசயங்கள் மூலமும் வாய்த்திருந்தன. ஆனால், நம்மை போல conditioned சூழ்நிலையில் சிக்கித் தவித்தவர்களுக்கு அப் பசி நம்மை நாமே ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் வரைக்கும் தொடர வேண்டி வருகிறது.

எந்த நாள் வரை என்றால் ஒஷொ ஒரு "சிவப்பு சாமியார்" கிடையாது என்பதனையும் அவரது புத்தகங்களை தானே பணம் கொடுத்து வாங்கி படிக்கும் காலம் கிட்டும் வரை (ராணி என்ற பத்திரிகை ஒரு காலத்தில் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைந்த காலத்தில் ஒஷொவைப் பற்றிய ஒரு விஷப் பிரச்சாரம் நடத்தி வந்தது... ஒஷொ ஒரு செக்ஸ் சாமியார் என்று... அது போன்ற வாரப் பத்திரிகைகள் வாங்கி படிக்கும் ஒரு விழிப்புணர்வற்ற மக்களிடையே வாழும் சூழலிருந்து விலகி).

அந் நாளை நாம் எட்டும் வரை இந்த மதம் சார்ந்த கோட்பாடுகளை சுவைத்து எது கிட்டுகிறது என்பதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம், அல்லவா? எல்லா வரையறுக்கப்பட்ட புத்தகங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் ஒரு எல்லையும் உண்டு அல்லவா? அவ் எல்லையைத் தொட்டு கேள்விகள் மட்டுமே எஞ்சும் பொழுது, தேடலும் தொடர்கிறது. அத் தேடலே உங்களை "மித, நீந்ததே" என்ற விழிப்புணர்விற்கு இட்டுச் சென்றது எனலாமா?

மனம் என்பது பரிணாமங்களை சந்தித்து தினமும் மாற்றங்களின் ஊடே பயணித்து நாம் விழிப்புற்று திறந்த நிலையில் இருக்கும் பொழுது மட்டுமே "மிதக்கும் நிலையை" எட்ட வாய்ப்பளிக்கிறது. அவ்வாறு அற்ற நிலையில் இருக்கும் பொழுதுதான், நாம் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்தும் எழுகின்றன வீழ்கின்றன.

எனவே மதங்கள் ஒருவனை கேள்விகள் கேட்கும் விழிப்புணர்வு நிலைக்கு இட்டுச் செல்வதற்கும் உதவலாம் அல்லவா? ஒரு விசயத்தைப் பற்றி தர்க்கம் செய்வதற்கு, ஒன்று அவ் விசயத்தைப் பற்றி நன்கு படித்து கிரகித்திருக்க வேண்டும், அல்லது "அதுவாகவே" இருந்து வாழ்ந்து அனுபவித்து இருந்து இருக்க வேண்டும். என்னை பொருத்த மட்டில் நான் இரண்டாவது சாரத்துடன் இணைத்துக் கொள்வேன். ஏனெனில் நீ அதுவாகவே வாழ்ந்துருக்கிறாய் எனும் பொருட்டு நல்லது கெட்டது இரண்டுமே புசித்திருக்க வேண்டும்.

இது தருமி அவர்களுக்கு கிட்டியது, அவரின் தாகம் அந்த புத்தகத்துடன் (பைபிள்) தடைப்பட்டு போகவில்லை, எனெனில் அவரின் விழிப்புணர்வு நிலை மேலோங்கி இருக்கக் காரணமாக அம் மதம் சார்ந்த வழிபாடுகள் மற்றும் இத்தியாதி விசயங்கள், அவரது தாகத்தை மென்மேலும் அதீதப் படுத்திய காரணியாகக் கூட இருந்திருக்காலமல்லவா?

அந்த ஒரு சிறு பாதையே அவரை இன்று நம்மிடையே கொணர்ந்து நம்மையும் சிந்தனையோட்டத்தில் கலக்கவைத்தது எனலாமா? இருப்பினும் அது ஒரு தனிமனிதனிரின் உழைப்பு, தேடல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதனால அவருக்கு divine force-ல் நம்பிக்கையிருக்காது என்று நான் கூறிவிட மாட்டேன், "அவரின் விழிப்புணர்வு நிலை மற்றொரு தளத்திற்கு உயர்ந்திருக்கிறது, அவ்வளவே" என்பது எனது நிலைப்பாடு.

மதத்தினால் கட்டுண்டு போவதில் எனக்கும் உடன்பாடு கிடையாதுதான். இருப்பினும் மதங்கள் ஒரு அரண் போல நாம் விபரம் தெரியாத வயதில் நம்மை நெறியிட்டு வழி நடத்தி அவ் விழிப்புணர்வு நிலைக்கு எட்ட உதவுகிறது. ஒரு சமூதாயம் விபரம் தெரியாத வயது மக்களை வழி நடத்தி மதம் அற்ற சூழலில் எடுத்துச் சொல்ல முடியாது எனென்றால், நம்மில் நிறைய "பெரிய சிறியவர்களின்" மனம் அடைபட்டு "அ" நிலையிலேயே தடைப்பட்டு கிடப்பதால் தான்...

தேடல் உள்ளவருக்கு தித்திக்கும் தேன் இவ் வாழ்கை, அவருக்கு நல்ல இரவுத் தூக்கமும் கிட்டலாம் எப்படியெனில் திறந்த மனது இருப்பதால் அவர் எதற்காகவும் அஞ்சத்தேவையில்லை எதனையும் ஏற்கலாம், இழக்கலாம் என்ற நிம்மதியுடன் இருப்பதால்.அவ்வாறு மதமே அற்ற சூழலில் எல்லா மக்களும் விழிபுணர்வுற்று "மித, நீந்ததே" நிலையை எட்டியிந்தால் மட்டுமே நம்முடைய பிள்ளைகளுக்கும் அந்த "state of mind concept"-யை வாழ்ந்து விட்டுச் செல்ல இயலும். அரிதுப் பெரும்பான்மையினோர் அவ்வாறு தேடலற்ற, சுய சிந்தனையற்ற ஒரு சூழலில் வாழும் பொருட்டு, எப்படி தரம் பிரித்து எதில் "உண்மை" இருக்கிறது என்பதனை அறிவது?

மற்றுமொரு கபடமற்ற செயலுடன் நானும் எனது வீட்டாரும் இருந்ததை நினைவு கூர்ந்து அத்துடன் எனது இந்த நீண்டு போன பின்னூட்ட பதிலை நிறுத்திக் கொள்கிறென். நான் பத்தாம் வகுப்பு படித்துகொண்டிருப்பதற்கும் முன்புதான் என்று நினைக்கிறேன் ஒரு ஃபாஷனுக்காக ஃபான்சி கடையில் விற்ற சிலுவையும், பிறையையும் கருப்புக் கயிற்றில் அணிந்த திரிந்த ஞாபகம் இங்கு வந்து போனது. மேலும் எனது அம்மாவின் பூஜை அறையில் மேரியும், குழந்தை ஏசுவும் சிறு கற்சிலையாக ஏனைய இந்துக் கடவுளர்களின் வரிசையில் கொலுவீற்றிந்ததும் நினைவில் வந்து போனது. அது எனது தங்கையின் விருப்பத்திற்காக (மத நல்லிணக்க கருத்து {எங்களுக்கு இன்று இருப்பதற்கு} எனது பெற்றோர்களின் "மித, நீந்ததே" என்ற சுய வெளிப்பாடு ஒரு காரணமோ?).

ஆக, இந்த மதங்கள் கோட்பாடுகள் நிரம்ப படித்தவர்களுக்கும், நிரம்ப விபரம் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே ஒரு விசயமாக படுகிறது. அது ஏன்?

மனம் எவ் நிலையிலும் திறந்திருப்பவர்களுக்கும் சுயத் தேடல் உள்ளவர்களுக்கும் என்றென்றும் "மித, நீந்ததே கான்செப்ட்" சாத்தியம். புல் தானகவே வளர்கிறது, மீண்டும் ஒஷொ ;-))

பி.கு: நான் *எரிக்கிறதா இல்லெ புதைக்கிறதா* என்ற ஒரு பதிவை இங்கு இட்டு வைத்ததிற்கும் ஒரு காரணமுண்டு. அதுவும் மனத் திறப்பு பற்றிய ஒரு திறனாய்வே...

Tuesday, June 06, 2006

சாத்தான் தினமாம் இன்னிக்கு...

இன்னிக்கு என்னமோ சாத்தானின் தினமாம், எது இன்னிக்கு தொடங்கினாலும் அது விளங்காதாம், ஏன்னா 6.6.06 எந்த புத்தகத்திலோ யாரோ எழுதி வைத்திருக்கிறாரம். அதான் இந்த பதிவெ இன்னிக்கு தொடங்கி வைப்போமின்னு...ஹி...ஹி...ஹி.

ஏங்க மனித மண்டை எப்பப் பார்த்தாலும் கோணங்கித்தனமா யோசிச்சு வைக்கிது. இப்பெ இந்த நாள்லெ பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஒரு மாதிரியா பார்க்கப் படணுமாம், அதினாலே காலச்சாரங்களின் அதிபதியான அமெரிக்கா நாட்டில் வாழும் சில சிறப்பு ஜந்துக்கள் குழந்தை பிறப்பு தேதியை தள்ளி போட்டுக் கொண்டதாம். கருமமுட சாமீ.

அப்படித்தான் பிறந்து வைத்து விட்டால் அக்குழந்தைகளை என்ன பண்ணுவது? சரி, இது போன்ற ஒரு விசயம் இருக்கிறது என்பதனை அறியாத நாட்டில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? எதோ எனக்கு இதற்கும் நம்மூரில ஜாதகம் குறைந்த பட்சம் 10 பொருத்தம் பார்த்து பண்ணுவதற்கும் தொடர்பு இருப்பதாக தோன்றுகிறது. அவ்வாறு ஒரு பொருத்தமெல்லாம் இருக்கிறது என்று தெரியாமலேயே திருமணம் செய்து கொள்ளும் மக்களின் கதை என்னவாகிறது?

அது போலவே என் சாமீயை கும்பிட்டதான் நேர் பேருந்தில் செர்க்கம் இல்லென்னா... அப்படின்னா, அப்படி ஒரு சாமீ இரு(ந்துரு)க்கிறார் அப்படின்னு தெரியாதவங்க எல்லாம் என்னாவாகிறார்கள், இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது... ?

ஒண்ணுமே புரியலே உலகத்திலே... வட்டம் பெரிசாக பெரிசாக நிறைய கேள்விகள் மட்டுமே எஞ்சி நிற்கிறது எனக்கு.

Related Posts with Thumbnails