Sunday, November 27, 2011

முல்லை பெரியார் - நீருக்கான போர் - காணொளியுடன்.


இது வரையிலும் இந்த பூகோளம் இரண்டு பெரிய உலக போர்களை சந்தித்திருக்கிறது. மூன்றாவது ஒன்று வர வேண்டும் என்று பரவலாக கனியக் காத்திருக்கும் ஒரு சூழலிலிருக்கிறது. அந்த இனிய சூழலும் இயற்கை வளங்களை யார் சுரண்டி கொழுப்பது என்பதனை ஒட்டியே அமையும் என்று பணம் படைத்தவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது எத்தனை அளவிற்கு உண்மையோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், அண்மைய காலங்களில் நடந்தேறும் வனங்களின் விரைந்து அழித்தொழிப்புப் பரவலாக உலகளவில் மழை பெறும் அளவையும், நிலத்தடி நீரின் குறைவும் அப்பட்டமாக செய்தி சொல்லி நிற்கிறது.

உலகின் மொத்த நீர் வளத்தில் 97.5 சதவீதம் கடல் நீரும் மீதமுள்ள 2.5 சதவீதமே நன்னீருமாக நமக்கு இந்த இயற்கை பிச்சையாக வழங்கி நம்மை போன்ற ஒரு முட்டாள் மனித இனத்தை வைத்து அழுது கொண்டிருக்கிறது இந்த பூமி. இதனிலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நாம் எடுத்துக் கொள்ளும் வாக்கில் அந்த நன்னீர் அமைந்திருப்பதாக நாம் அறிகிறோம்.

இந்தச் சூழலில் நமது தென் மாவட்ட நிலமையை சற்றே உற்று நோக்கினால் ஓர் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நீரோட்டம் இப்பொழுது கிடையாது. விரைவான பாலைவனவாக்கம் நடைபெற்று வருகிறது; இயற்கையாகவே. ஐயூசின் ஆய்வறிக்கை கூட இதனையே வழிமொழிந்து 2020ஆம் வருடமாக்கில் கூடுதலாக இந்த பாலையின் கோர முகத்தை நாம் கண்ணுறலாமென்று அபாய மணி வேறு அடித்து வைத்திருப்தாக எங்கோ படித்த ஞாபகம்.

இது ஒரு சுழற்சியாக கூட நடைபெற்று வரலாம். பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியா முழுவதும் ஒரு மாபெரும் வறட்சியும் அதனையொட்டிய பட்டினிச் சாவுகளும் நடந்தேறி இருக்கிறது. அதிலும் நமது பகுதியில் மிகக் கோரத் தண்டாவம் ஆடி முடித்திருக்கிறது. இதற்கு தீர்வாக கண்டடைந்ததுதான் முல்லை பெரியார் அணையும், அதனையொத்த பல மேற்கு மலைத் தொடர்களை ஒட்டிய பல நீர்த்தேக்க அணைகளும். அந்த பாடம் நிச்சயமாக பல உயிர் சேதங்களுக்கு பின்னாக கற்றுக் கொண்டதது.

அப்படியாக அணைக்கட்டுக்கள் கட்டப்பெறும் பொழுது பல சதுர கிலோமீட்டருக்கான மழைக்காடுகள் அழிக்கப்பெற்று அத்துடனேயே பல ஜீவராசிகளின் வாழ்வும் முடிக்கப் பெற்று நமது சுயநலத்திற்கென அணைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்றே புதிது புதிதாக மென்மேலும் விரிவாக்கம் செய்து கொண்டேச் சென்றால் வனத்தினுள் இருக்கும் பெரிய விலங்குளான யானை, காட்டெருமை ஊருக்குள் நடந்து திரிவதனை காண முடியும். அதனை விட சிறிய விலங்கினங்கள் கண்ணுக்கு எட்டுப்படாமலேயே சுத்தமாக மாண்டொழியும்; அத்துடனே பல அரிய மர, சொடி, கொடி வகைகளும்; அவைகள் அறிவியல் உலகின் பார்வைக்கே வந்திருக்கக் கூட வாய்ப்பில்லாமலே துடைத்தழிக்கப்படலாம்.

இத்தனை சிக்கலை உள்ளடக்கியது இந்த விசயம். இருப்பினும் நமது தேவையை முன் வைத்து ஒரு நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு கேரளத்திலிருந்து உபரியாக வழிந்தோடும் நீரை தேக்கி வைத்து வறட்சிக்கு பெயர் போன தேனி, கம்பம், போடி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஏரியாவிற்கு விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்குமென பயன்படும் வாக்கில் ஓர் அணைக்கட்டு முல்லை பெரியார் என்ற பெயரில் ஒரு ப்ரிட்டிஷ்காரரின் முன்னிலையில் மக்களாவே முன் வந்து பணத்தை போட்டு கட்டியெழுப்பியிருக்கிறார்கள்; கேரளா அரசுடனான 999 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில்.

திடீரென்று சர்வதேச அரங்கில் எல்லைகளை அடிப்படையாக கொண்டு இரு தேச அரசுகள் விளையாடும் ஓட்டு அரசியல் விளையாட்டை இன்று ஒரு நாட்டிற்குள் அடங்கியிருக்கக் கூடிய மாநில அரசுகள் இது போன்ற நீர் வள ஆதார விசயத்தில் வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறது - கேவலமான அபாயகரமான விளையாட்டு. இது எப்படி என்றால் எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து பரட் பரட் என்று சொறிந்து கொள்வதற்கு சமமாக இருக்கிறது. எத்தனை சென்சிடிவான ஒரு விசயமிது? இதனை வைத்து இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்ச்சியை வளர்க்கும் பொருட்டு அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளே முன்னின்று செய்தால் ஒரு நாடாக எப்படி மேலேழும்பி வல்ல’அரசு ஆகுவது?

கிட்டத்தட்ட தமிழகத்தை சுற்றிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் இந்த அரசியல் விளையாட்டை முன் வைத்து விளையாடுகிறது. இதன் அபத்தம் புரியாமல் மத்திய அரசு என்று பெயர் வைத்துக் கொண்டு முட்டி கழண்டவர்கள் இதனை சூப்பர்வைசிங் செய்கிறார்கள். இது எங்கே எப்படி போய் முடியப் போகிறது என்ற தொலை தூர பார்வையே அற்று வீங்கி வெடிக்கும் வரைக்கும் பொறுத்திருப்பது யாருக்கு நன்மை பயக்கும் என்று புரியவே இல்லை.

அண்மையில் ஒரு காணொளியை பார்க்க நேர்ந்தது. அந்த ஆவணப்படத்திற்கான இயக்குனரும் பல அனுபவம் வாய்ந்த சீனியர் இஞ்சினியர்களும் ஒருங்கே இணைந்து 17ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து நேற்று வரையில் இந்த முல்லை பெரியார் அணைக்கட்டு விசயமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றதொரு கல்வியூட்டும் விதமாக ஒரு அருமையான விவரண காணொளியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்த காணொளி கட்டம் கட்டமாக (phase by phase) நகருகிறது. ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய காணொளி இது. ஏனெனில் இன்றைய கேரளா அரசு மிக முனைப்புடன் இந்த 999 வருட ஒப்பந்தத்தை உடைக்க எண்ணி மிக்க பிரயத்தனப்பேரில் பெரிய பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் நாம் குறைந்த பட்சம் இந்த பிரச்சினைக்கு பின்னான உண்மைதான் என்ன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் பொறுப்பான காரியமாகிவிடுகிறது. ஏன்னா, தண்ணீர் இல்லைன்னா நாக்கு வறண்டு செத்து போயிடுவோம்யா... அது நீ கேராளக்காரான இருந்தாலும் இராம்நாட்டில் வாழ்ந்தா உன் வாயிலும் தான் மண்ணு...  


பகுதி - 2

Saturday, November 19, 2011

ஜெயமோகனின் இந்து மத தட்டைப்படுத்தல் விதி...

இவரையெல்லாம் படிப்பதற்கே ஒரு மண்டை வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பொழுது என்னவோ இந்த தட்டைப்படுத்தல் சித்தாந்தம் சில கேள்விகளை என்னுள் எழுப்பியதால், விமர்சிக்கும் நிலையிலிருந்து தூரத்தில் நின்றாலும் பொதுவில் வைத்து வாசிக்கக் கிடைத்ததால் ஓர் ஓரத்தில் வைத்து நாங்களும் பேசித் தெளிந்து கொள்வோமே என்று இதனை எழுத்தாக்கி முன் வைத்திருக்கிறேன். வாங்க வாசிப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு நியூ யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர் தாமஸ் ஃப்ரீட்மென் எழுதிய த ஃப்ளாட் வேர்ல்ட் புத்தகம் படித்தேன். அன்றைய வளர்ச்சியில் படிக்கும் பொழுது அதன் மேலோட்டமான சர்க்கரை தடவிய விசயங்கள் மயக்கத்தை ஊட்டி அடடா என்ன சிந்தனை என்ன சிந்தனை என்று வாசிக்கும் பொழுது கட்டிப் போட்டிருந்தது. அதன் அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் பல கோடி மக்களின் நசுங்கிய வாழ்க்கையை அந்த எழுத்து எடுத்து காட்டிக் கொண்டிருக்கவில்லை; அதற்கு பின்னான ஃப்ரீட்மெனின் கொள்கை நோக்கு எதனைப் பொறுத்தது என்று புரிந்து கொள்ளும் பக்குவமுமில்லை அன்று எனக்கு. அந்த அரசியல் சார்ந்த எழுத்து அத்தனை மயக்கத்தை ரொம்ப இயல்பாக விதைத்து விட்டுப் போயிருந்தது.

அந்த புத்தகத்தின் வெற்றிக்கான எழுத்துச் சிந்தனைக்கான பாராட்டை நாம் அந்த பத்தி எழுத்தாளருக்கே வழங்க வேண்டும். ஏனெனில் அதற்குப் பின்னான உண்மைகளை மறைத்து உள்ளதை உள்ளபடியே வழங்குவதாக உலகம் முழுமைக்குமே ஒருமுகப் போக்கே (monopoly) சிறந்தது என்று வழங்கி அதனை எடுத்து முன் வைத்த புத்திசாலித்தனத்தினை வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால், அதனில் கூறப்பட்டிருக்கும் உண்மை என்னவெனில் மெக்டொனல்ஸ் போன்ற அதி விரைவு உணவகங்களில் உருவாகும் உணவை உண்டு செரித்துக் கொள்ள பழகி விட்டால் பல ஏற்றத் தாழ்வுகள் மறைந்து விடும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மெக்டெனால்ஸ் பரப்புவதின் அவசியத்தை எடுத்தியம்பி அதனால் மட்டுமே உலக தட்டையாக்கப்படல் சிந்தனை ரீதியாக எப்படி எடுத்து கட்டியெழுப்பப்படும் என்று மயக்கம் ஊட்டக் கூடிய கருதுகோளின் அடிப்படையை நிறுவ முயன்றிருக்கும் அந்தப் படைப்பு.

இந்த உலகம் முழுதிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் லோகல் வாழ்வு ஆதாரத்தில் கிடைக்கும் பொருளாதாரச் சூழலில் அமைத்து கொள்ளும் தன்னிறைவு அணுகுமுறையைத் தவிர்த்து உலகினைத் தட்டையாக்கிவிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்வும், ஒரு மித்த சிந்தனையும் எட்டி விடுவார்கள் பின்பு இந்த பூகோளத்தில் பஞ்சமும், போரும் அற்று ஜீவித்து வாழலாம் என்பதனை போல மிக மேலோட்டமான கருத்தை முன் வைத்து எழுதப்பட்டது. ஆனால் அந்தப் புத்தகம் அறிவுச் சுரண்டல் பண்ணுபவர்களுக்கான ஒரு கையேடு.

அந்தப் புத்தகத்தில் அவர் எப்படி வெளி நாட்டுத்தொழில்கள் இந்தியா போன்ற மூன்றாம் தர நாடுகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டித் தரக்கூடிய அமுத சுரபி, என்று கூறியபடியே இனிப்பு மிட்டாய் வழங்கியிருப்பார் (கசப்பை மறைத்து). அதற்கு அடிப்படையான மனித வளம், ஆங்கிலம் கற்றறிந்த பல கோடி இளைஞ/ஞிகளைக் கொண்டு மிக எதார்த்தமான சூழ்நிலையில் அமைந்து பட்டிருக்கிறது என்ற புள்ளி விபரத்துடன். அதற்குப் பின்னான விசயங்களான இந்த இளைஞர் கூட்டம் எப்படி உறிஞ்சப்பட்டு ஒரு நாட்டிற்கு கிடைக்கற்கறிய அறிவுச் சுரண்டல் நடந்து கொண்டிருக்கிறது என்பதனை உணர முடியாத வாக்கில், நமது இளைஞர்களின் ஆங்கில அறிவு சிலாகிக்கப் பெற்று எப்படி அவர்கள் பீட்சாவும், கோக்கும் வார இறுதி கேளிக்கைகளையும் நடத்தி அமெரிக்கர்களைப் போலவே இன்று சிறு சேமிப்பு அற்று, ஈட்டும் பணத்தை சுழற்சியில் போடுவதின் மூலம் லோகல் பொருளாதாரம் மேம்பாடு அடைய உதவுகிறார்களென்றும், இந்திய இளைஞர்களின் வாழ்க்கை அமெரிக்க இளைஞர்களைப் போலவே இருக்கிறது என்றும் புல்லரித்துப் போய் இருப்பார்.

படிக்கிற என் போன்றவர்களை அந்த மயக்கமூட்டல் என் தலைமுறைக்கும் தாங்கும் விதமாக தடம் பதித்து விட்டுவிடும்.அதற்குப் பின்னான சுரண்டல் புரியாமலேயே! இன்னும் ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்தாலே தான் ஓர் அறிவாளியாக எண்ணிக் கொள்ளும் மயக்கத்திலிருப்பவர்களுக்கு இது போன்ற வாசிப்பு பின்பு எதனை விட்டுச்செல்லும்.

இந்தக் கட்டுரை பேச வந்த விசயம் இதுவல்ல. இருப்பினும், அதே உலகமயமாக்கல் சந்தைப்படுத்தலுக்கான எழுத்து பிரதிநிதியை ஒத்தே இன்று நமது பகுதி உலகில் ஒருவர் எப்படி கடவுளுடன் உரையாட தகுதியான ஒரே மொழியான சம்ஸ்கிருதத்தைக் கொண்டு நாட்டார்கள் தெய்வத்தினையும், மற்ற கோடான கோடி கிராம கடவுளர்களையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து எல்லைகளைக் கடந்து கடவுள் உலகமயமாக்கல் செய்ய முடியுமென்று நமக்கெல்லாம் ஒரு சித்தாந்த லாலிபாப் வழங்க தனது சிந்தனைக் கடையை விரித்திருக்கிறார். அதனை வாசிக்க நேர்ந்ததின் விளைவாக உருவானதுதான் இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்துங்க...

எனக்கு அதனை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த சித்தாந்தத்திற்கான அடிப்படை நல் கருத்தாக்கங்கள் மேலே அறிமுகப்படுத்தியிருந்த அதே ஃப்ரீட்மெனினுடைய உலகமயமாக்கலின் நன்மைகளை எப்படி இனிப்புத் தடவி அதற்கு பின்னாக அழுந்தி, நசுங்கி கொண்டிருக்கும் பன்முக வாழ்வு முறை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வாதாரம், மொழி போன்றவைகளை தவிர்த்து/மறைத்து பேசி ஒரு வித மயக்கத்தை தோற்றுவித்தாரோ அதே செயலை வேறொரு தளத்திலிருந்து நமது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வழங்கியிருக்கிறார் என்பதாக புரிந்து கொண்டேன்.

அந்தக் கட்டுரையின் சாரம்சம்:- இந்தியா போன்ற அகன்ற நிலப்பரப்பை கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் மதம் இந்து மதம். அதற்கென உள்ள கடவுள்களோ வாழும் மக்களை விட அதிகப்படியான எண்ணிக்கையில் உள்ளது. எப்படி இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தேசீய இனமாக கட்டியமைக்க எண்ணி, மத ரீதியாக இணைக்கும் நிலையிலாவது அது சாத்தியப்படுமா என்ற ஒரு முயற்சியின் நிமித்தம் இந்த சம்ஸ்கிருத பொது மொழியை முன் நிறுத்தி அந்த கட்டுரை பேசியிருக்கிறது.

எனது முப்பாட்டனான தாத்தா கூட எங்களுக்கு குல தெய்வம் ஆகிவிட்டார் எனும் பொழுது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அது போன்ற கடவுள் ஒருவர் இருப்பார்தானே? அப்போ அவர் சொல்வதும் சரிதான். சரி, ஆனால் என் முப்பாட்டன் பேசிய, புழங்கிய மொழியில் அவருடன் உரையாடுவதில்தான் எனக்கு கிடைக்கக் கூடிய நெருக்கமும், உணர்வுகளும் கடத்திப் பெறுவதாக எனது மனதும் லயித்து எனக்கு கிடைக்க வேண்டிய நம்பிக்கை சார் விசயங்களும் கிடைத்ததாக நகர்ந்து அடுத்த தலைமுறைக்கும் அதனை கடத்தப்பெற வைக்கிறேன்.

மாறாக, பக்கத்துத் தெரு கிஷ்மு உடைய கொள்ளுத் தாத்தா ஓரளவிற்கு அறியப்பட்டவர் என்பதால், அவர் பேசுகின்ற மொழியின் அ, ஆ கூட தெரியாமல் நான் எனது முப்பாட்டனை அவருக்கு கீழாக இணைத்துக் கொள்வதின் மூலமாக எனக்கான நெருக்கத்தினை எப்படி எட்ட முடியும்? அப்படியெனில்  எனது முப்பாட்டன் அவரை விட இளக்காரமானவரா? எதன் பொருட்டு? அவர் எட்டியிருந்த பொருளாதார அடிப்படையிலா, அல்லது பேசும் மொழி சார்ந்தா? இப்பொழுது இந்த அடிப்படை வாதத்தை விட்டுவிட்டு சற்றே பெரிய கடவுளர்களுக்கு வருவோம்.

உதாரணமாக, எங்களூரில் மகமாயி கோவில் ஒன்று உள்ளது. அங்கே லோகல் பூஜாரியே சூடம் ஏத்தி, அவருக்கு தெரிந்ததைப்பாடி, எங்களுக்கு போதுமான நெருக்கத்தை உருவாக்கித் தருகிறார். அதுவே போதுமானதாக கருதி எத்தனையோ தலைமுறைகளை கடந்து வந்து அந்த வழிபாடும் நிற்கிறது. வருடம் ஒரு முறை கோழி, ஆடுகள் நேர்த்திக்காக பலியிடப்பட்டு அங்கேயே கிராமமாக அமர்ந்து, சமைத்து உண்டு கொண்டாட்டமாக நாளை கடத்துகிறோம்.

இந்த முறையை மாற்றி மிருக பலியிடல் நாகரீகமற்ற செயல். அதனில் ஓர் அழகில்லை. காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறது. மாரியாத்தாளிடம் உரையாடும் மொழியும் அப்படியே இருக்கிறது என்று கூறி 99% சதவீத மக்களுக்கு புரிந்த மொழியைத் தவிர்த்து புரியாத ஒரு மொழியில் அன்னியமாக உணர்ந்து கொண்டு, தன் சார்ந்த நிலத்திற்குள்ளாகவே வேறுபட்டு ஏதோ மற்றுமொரு கட்டமைக்கப்பட்ட உலக கடவுள் நிறுவப்படலின் அவசியத்தில் எனது கொண்டாட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வது அந்த மண்ணின் மணத்தையும், வாழ்வு முறையையும் சிதைக்குமா சிதைக்காதா?

...இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது...


எழுத்தாளர் ஜெயமோகனின் வாதம் - சம்ஸ்கிருதத்தை கடவுளுடன் உரையாடும் ஒரே பொது மொழியாக ஆக்கிவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து கேதர்நாத் வரையிலும் ஒரே சங்கீதமே ஓதப்படும். அதனால் மிசோரத்திலிருந்து குஜாரத் வரையிலும், தமிழகத்திலிருந்து கஷ்மீரம் வரையிலும் அனைத்து இந்தியர்களும் கடவுளின் பொது மொழி புரிந்து தங்களை ஒரே தாயின் பிள்ளைகள் என்று உணர்ந்து அனைத்து சிறு கடவுளர்களும் பெரும் கடவுளர்கள் போன்றே இந்தியாவின் ஏனை பகுதி மக்களின் கவனத்தை பெற்று, என் ஊர் மாரியம்மா கோவிலுக்கு மிசோரத்து பிரஜை வந்து போக வசதியாக இருக்கும் என்று மத ஒருமுக போக்கை கட்டியெழுப்புகிறேன் என தனது மத தட்டைப்படுத்தல் சித்தாந்தத்தை முன் வைத்திருக்கிறார்.


...சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது...


மோலோட்டமாக வாசிக்கும் பொழுது அதே எண்ணம் ஃப்ரீட்மெனிடம் கிடைத்த அடடா என்ன சிந்தனை, என்ன சிந்தனை என்று சித்தம் கலங்க வைக்கக் கூடிய மயக்கமே வந்தது. ஆனால், அதற்குப் பின்னான அபத்தமும், 3000 வருடங்களாக நடந்தேறும் அதே குயுக்தியும் அந்த வார்த்தைகளுக்குப் பின்னான நிழலில் ஒளிந்து நிற்கிறது. இந்த வாரத்தில் ராகுல் சங்கிருத்தியாயன் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற ஆய்வாராய்ச்சியினை ஒத்த புத்தகம் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. சற்றே புனைவு கலந்து மிக அழகாக 6000 வருடங்களுக்கான பின்னோக்கிய நடையில் தொடங்கி முன்னேறி 1940களில் வைத்து முடித்திருக்கிறார்.

இந்த மானிட வளர்ச்சியும்/வீழ்ச்சியும், அதற்குப் பின்னான உண்மையான அரசியலும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அந்த வாசிப்பு ஒரு நல்ல தொடக்கம். ஒரு மானுட இனமாக எங்கிருந்து தொடங்கியது நமது நடை என்று அறிந்து கொள்ள எத்தனித்து தெளிவு வேண்டி நிற்பவர்களுக்கு நல்ல தொடக்கப் புள்ளி அந்த வாசிப்பு. அதனை வாசித்து விட்டு ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தால் அந்த எழுத்திற்கு பின்னான ஒருமுக நோக்குமயம் எதனை வேண்டி நிற்கிறது என்பதனை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த போராட்டம்/பரப்புவாதம் இன்றைய நேற்றைய விசயமாக படவில்லை.

இஸ்லாத்திற்கு பொது மொழி அரபி, கிருஸ்துவத்திற்கு இன்றைய நாளில் ஆங்கிலம் எனவே மதம் வளர்கிறது என்று நினைத்திருப்பார் போலும். அதனைக் கருத்தில் கொண்டு இந்தியச் சூழலில் நமக்கு இந்த சம்ஸ்கிருத கடவுள் உரையாடல் மொழியை பொது மொழியாக்க முயன்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிந்தனை ஓர் உயர்ந்த நோக்கத்திற்கானது என்றாலும் அதற்கு பின்னான பூர்வீக நிலத்தின் விழுமியங்கள் சிதைவுக்குள்ளாவதை ஏன் அவர் கருத்தில் நிறுத்த வில்லை என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

ஜெயமோகன் கூறிய வழியில் நடந்தால், எப்படி உலமயமாக்களின் பக்க விளைவாக சிறு விவசாயிகளும், லோகல் பண்ட சந்தையைச் சார்ந்த சிறு தொழில்களும், மக்களும் அதற்கே உண்டான மொழியும், சொல்லாடல்களும், கொண்டாட்டமும் இழந்து ம்யூசியத்தில் வைத்து பார்த்து கல்லா கட்டும் நிலையை அடைய வைத்ததோ அதனைப் போன்றே இந்த கடவுள் பொது மொழியும் நிலத்திற்கான அடையாளங்களை சிதைத்து அந்த மண்ணிற்கே உண்டான கலாச்சார விழுமியங்களை சிறுமைப் படுத்தி அழிக்கவே செய்யும்.

பன்முகத் தன்மையில்தான் உலகின் அழகே செழித்து, கொழித்து வாழ்வதில் பொருளுள்ளதாகவும் இந்த ப்ரபஞ்சத்தின் பிரமாண்டம் உணர வைக்கக் கூடியதாகவும் உள்ளது. இதற்கு மேலும் இது போன்ற உலகமயமாக்கம் அது பொருளாதார, மத, கடவுள் சார்ந்து எடுத்து நிறுத்துவது மென்மேலும் அடிப்படை வாதம் பல்கிப் பெருகவே வழி நடத்திச் செல்லும். இருக்கும் பிரச்சினைகள் போதுமே!    





டிஸ்கி: ஜெயமோகனின் கட்டுரையில் மொழியின் வளர்ச்சி, பிற மொழிகளுடன் ஒரு மொழி ஊடாட நேரும் பொழுது எப்படி ஒன்றிற்கு பிரிதொன்று கொடுத்து, வாங்கி அதன் இலக்கண நெகிழ்வினைக் கொண்டு அந்த மொழி தன் காலங்கள்தோறும் நிலை நிறுத்திக் கொள்கிறது என்பது வரைக்கும் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் இயற்கைசார் அறிவியலாளன் என்ற முறையில். அதனைத் தவிர்த்து ஜெமோ நிறுவ வந்த மத அடிப்படையிலான சம்ஸ்கிருத சித்தாந்த முன் நிறுத்தலை மட்டுமே இங்கே பிரித்திருக்கிறேன். 



Friday, November 11, 2011

நிறங்களணிவகுப்பு : Fall Color's Photography

இயற்கைதான் எத்தனை நிறங்களைத் தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் படைத்து, அழித்து செய்து கொண்டே இருக்கிறது. அதன் கற்பனை எப்பொழுதும் வற்றா ஜீவநதி. தொடர்ந்து ஆச்சர்யங்களை உள்ளடக்கி பூமி முழுதுக்குமே பரப்பி வைத்திருக்கிறது. கண்ணுற்று கண்களை அகல விரிப்பத்தற்குத்தான் அதே இயற்கை படைத்த ஜீவராசிகளுக்கு கற்பனை வறட்சி போலும்...

ஒரு மாலை வேளையில் என்னை கிறங்கடித்த ஒளி வெள்ளத்தில் எனைச் சுற்றிலும் மிதந்து கொண்டிருந்த நிறங்களை எனது புகைப்பட லென்ஸின் வழியாக சுருட்டிக் கொள்ள முனைந்ததின் விளைவு நீங்கள் இங்கே கண்ணுருவது.

# 1 - டெலிடப்பீஸ்கள் வாழும் வீட்டைச் சுற்றிலும் - இயற்கையின் அழகு பெரிதா நான் தயாரித்த வீட்டின் நிறத்தின் அழகா...!!



























# 2 - மிக மெதுவாக இரவு பகலென்று மிதமான குளிரும், சரேலென்று ஒரு நாள் காயும் வெயிலும் இலைகளின் நிறங்களை மெருகூட்டிக் கொண்டே வருகிறது...



































# 3 - அவைகளின் அணிவகுப்பு..




























# 4 ... பச்சையத்தை எரித்துக் கொண்டே...



































# 5 - எத்தனைதான் ஜொலிக்கும் சிவப்புக் கம்பளங்களை தரைப்படுகைளாக நாம் விரித்தாலும் இந்த நிறங்களுக்கு இணையாகுமா...




























# 6 ... அணிலொன்று தனது வீட்டை விட்டுவிட்டு தற்காலிக நகர்வு செய்திருப்பதும் ஏதோ நீண்ட நூழிழையில் முடிச்சொன்றை இட்டு சென்றிப்பதாக படுகிறது...




























# 7 - வண்ணங்களை நான் என் தலையில் கொட்டிக் கொள்வதற்கு சற்று முன்பாக :-) ...




# 8 - இன்னும் கீழே இறங்கி ...



கே. ஜே. ஏசுதாசின் இந்த பாடலைக் கேளுங்க... பூமிக்கு எத்தனை நிறமூட்டி பாடி பார்த்திருக்கிறார்னு. அழகான பாடல்...

பூமியென்னும் பெண்ணும்
பொட்டு வைத்துக் கொண்டு
பச்சையாடை கட்டிப்பார்த்தாள்...
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்...

Tuesday, November 08, 2011

கூடன்குளமும் அணுக்களின் நண்பர் அப்துல் கலாமும்...

பாரதம் அகன்று விரிந்த நிலப்பரப்பினை உடைய ஒரு நாடு. கனவு காணச் சொன்ன நமது ஏரோநாடிகல் அறிவியல் விஞ்ஞானியும் முன்னாள் குடியரசு தலைவருமான டாக்டர். அப்துல் கலாமின் ஆய்வறிக்கையை மக்கள் மிகவும் ஆவலோட எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கு முன்னதாகவே ஓரளவிற்கு நம்மாலும் யூகிக்க முடிந்தது அவரின் இறுதி வார்த்தை என்னவாக இருக்குமென்று. நமது எதிர்பார்ப்பு பொய்த்துவிடவில்லை. அவரின் அணுகுண்டு சாதனைக்கு பின்னாக நம்மை பாகிஸ்தானிடமிருந்து காத்த அதே உத் வேகத்துடன் இப்பொழுது கூடன்குளத்தில் அணு உலை நிறுவி தமிழகத்திற்கும் அதனையொட்டிய அணி சாரா மாநிலங்களுக்கும் தங்குதடையற்ற மின்சார உற்பத்தியை பகிர்ந்தளித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகோணும் வாக்கில் இந்த அணு உலை நிரூவப்படுவதின் அவசியம் நம் மக்களுக்கு முன் எடுத்து வைத்திருக்கிறார்.

அதற்காக மிக நீண்ட நாற்பது பக்க அளவில் தன்னுடைய ஆய்வறிக்கையாக அவரின் கருத்துக்களை இப்பொழுது முன் வைத்திருக்கிறார். நல்லது! என்னால் அத்தனை பக்கங்களையும் அவ்வளவு பொறுமையாக அமர்ந்து வாசிக்க முடிய வில்லை. ஏனெனில், அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தை பற்றியான பாதகங்களில் அவர் எடுத்து முன் வைத்திருக்கும் உதாரணமாக ஹிரோஷிமா மற்றும் நகசாகி விடயத்தில், அந்த வீச்சு பின் வரும் தலை முறைகளுக்கு எந்த பாதிப்பையும் வழங்கியதாக தெரிய வரவில்லை என்று முழு பூசணிக்காயை எதுக்குள்ளோ வைத்து மறைத்து கொடுப்பது மாபெரும் வரலாற்று பிழையாகவும், பாவமாகவும் கருதுவதால் மேற்கொண்டு என்னால் ஏனோ வாசிக்க முடியவில்லை.

நான் ஏற்கெனவே அண்மையில் நிகழ்ந்தேறிய ஜப்பானிய அணு உலை விபத்தினையொட்டி இப்படியாக ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!! கட்டுரை எழுதி சில முக்கியமான கேள்விகளையும் முன் வைத்திருந்தேன். இந்த சூழலில் இப்பொழுது கூடன்குளம் அணு உலை இயக்கப்படக் கூடிய கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஜெர்மனி மற்றும் சில விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இதே அணு உலைகளுக்கு எதிரான ஒரு நிலைக்கு நகர்ந்து தூய்மையான ஆற்றல் (clean energy/eco friendly) பயன்படுத்தப்படுவதின் அவசியமறிந்து, இருக்கும் உலைகளையும் எப்படி கவணித்து மேலாண்மை செய்வது என்ற கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒரு கட்டத்தில் நமது கனவு கலாம் அவர்கள், மிக வேகமாக நாட்டை முன்னேற்றுவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று என்று ஒரு நாட்டின் இதர பகுதி மக்களுக்கென ஒரு மாநிலம் பலியிடப் பட்டாலும் தவறில்லை என்ற நோக்கில் மிகச் சாதாரணமாக தியாகிகளாக அறைகூவல் விட்டிருக்கிறார் அந்தப் பகுதி மக்களுக்கு.

அதற்கென அவர் இட்டுக்கட்டிய உதாரணங்கள் அணைகள் கட்டப்படும் பொழுதும், ஏரோ பிளேன் கண்டிபிடித்த பொழுதும், உயர்ந்த கட்டிடங்கள், இதர மனித சாதனைகளுடன் இந்த அணு சார்ந்த விசயத்திலும் மனித இனம் உற்சாகத்துடனும், மனத் துணிவுடனும் இறங்கி செயலாற்ற வேண்டுமென்று கூறியிருக்கிறார். எனக்கு என்ன விளங்கவில்லையெனில்... அவர் சுட்டிக்காட்டிய அனைத்து விசயங்களிலும் அசம்பாவிதங்கள் நிகழும் கனம் தோறும் பாதிப்பு உடனடியாக அதன் அருகாமையில் இருப்பவருக்கு மட்டுமே நிகழக் கூடும். உயிர் பாதிப்பும் பெருமளவில் இல்லை, அதனை தலைமுறைகளாக கடத்தப் பெறுவதும் கிடையாது என்பதுதான். இந்த அணுக்களை உள்ளடக்கி ஒரு சூட்கேசுக்குள் கொண்டு வரும் சக்தியின் வீரியத்தின் மகத்துவத்தை, இப்பொழுது நாம் டன் கணக்கில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலக்கரியினை எரித்து பெறப்படும் சக்தியின் ஆற்றலோடு ஓப்பிட்டு செய்யும் அதே கனத்தில் அதன் அழிவின் வீரியத்தையும்/வீச்சத்தையும் நாம் ஏன் யோசிக்க தவறுகிறோம்?

அணுக் கதிர் வீச்சு காற்றின் மூலமாக பரவி உடனடி விளைவுகளை உருவாக்குவதோடு, மனிதனின் மரபணுக்களின் கட்டமைப்பு வரையிலுமாக ஊடுருவி சிதைத்து பல தலைமுறைகளுக்கு பிறக்கும் சந்ததியினரின் உடல் உள்/வெளி உறுப்புகளின் செயல்பாடுகளிலும், அமைப்புகளிலும் எண்ணற்ற விதங்களில் விளையாடி விடுகிறது. அதற்குச் சான்றாக எத்தனையோ காணொளிகள் ஹிரோஷிமா/நகசாகி நிகழ்விற்கு பிறகு இரண்டாம் தலைமுறையிலும் வெளிக் காண்பதனை நம்மால் கவனத்தில் நிறுத்த முடியும்.

அதெப்படி இத்தனை ஆபத்து நிறைந்த ஒரு தொழில்நுட்பத்தை நூறு சதவீகிதம் பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டு போக முடியும்? 15 வருடங்கள் அந்த அணு உலைகள் கட்டுவதற்கான பொழுதென்றால் அதன் பயன்பாடு வெறும் 50 வருடங்களே இருக்கிறதாம். அதற்கு பிறகு ஸ்விட்ச் ஆஃப் செய்திவிடுவோமென்று திருகியும் அந்த ஆலையை மூடி விட முடியாது. காரணம் ஒரு முறை அந்த அணுக்களின் இயக்கம் தொடங்கிவிட்டால் அதுவாக வீரியமிழந்து அயர்ந்து போகும் வரையில் தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கிறதாம்; பத்தாயிரம் வருடங்களை தாண்டியும். அதனை மேலாண்மை செய்து பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்வதற்கே சொற்பமான நிதி ஒதுக்கீடு செய்து வைக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு என்று வரும் பொழுது நமக்கெல்லாம் மணி அடிக்கணுமே, அந்த பணம் எப்படி செலவழிக்கப்படும் எதிர்காலத்திலென்று.

சில தொழிற் நுட்ப தேவைகளுக்கென கடற்கரையை ஒட்டியே இது போன்ற அணு உலைகள் கட்டியெழுப்பப்படுகிறது. அதாவது இந்த அணு உலைகளின் இயக்கத்தின் போது உருவாகும் அதீதமான வெப்பத்தினை தணிப்பதற்கென தொடர்ந்து குளிர்வான நீர் உள்ளே சென்று வெளிப்புக வைக்கப்படுகிறது, வெப்பமூட்டப்பட்ட நீர் மீண்டும் கடலுக்குள் தள்ளப்படுவதோடு அதனூடாக தடம் கண்டுபிடிக்க தக்க கதிர்வீச்சும் (traceable amount of radiation) கடல் நீரோடு கலக்கப்படும் வாய்ப்பிருப்பதால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு சென்றடைகிறது, அதனை உட்கொள்ளும் நமக்கு சிறிது சிறிதாக நச்சூட்டப்பட்டு விதவிதமான புற்று நோய் வெளிப்பாடுகள் அறியப்படலாம்.

இந்தியாவில் மொத்தம் எத்தனை அணு உலைகள் இது வரையிலும் உள்ளது? எத்தனையோ பிற கடற்கரையையொட்டிய மாநிலங்கள் இருந்தாலும் இரண்டாவது அணு உலை இங்கே தமிழகத்தில் நிறுவப்பட்டதின் சூட்சுமம் அதன் பாதுகாப்பு கருதியே என்று எண்ணுகிறேன். அதாவது எதிரி நாடுகளின் எட்டித் தொடும் தூரத்திலிருந்து விலகி அமைப்பதற்காக குறிப்பாக பாகிஸ்தான் போன்ற துஷ்ட நாடுகளின் தொட்டு விடும் தூரத்திலிருந்து என்று வைத்துக் கொள்வோம். ஆமா, அதான் இப்போ பாகிஸ்தான், சைனா போன்ற நாடுகளுக்கெல்லாம் ஸ்ரீலங்காவிற்கு நல்ல நண்பராகிப் போனதே அதே பயம் ஏன் இப்பொழுது இங்கும் வரவில்லை? அது அப்படியே இருக்கட்டும்.

அடுத்து ஏதாவது எசகு பிசகாக மனித தவறுகளோ, எந்திர கோளாறுகளாலோ, அல்லது தவிர்க்க/அணுமானிக்க முடியாத இயற்கைச் சீற்றத்தால் அணு உலைக்கு சேதம் நிகழ்ந்து போனால், மக்களுக்கென எது போன்ற பாதுகாப்பு வசதிகள் அவர்களை அந்த ஏரியாவில் இருந்து நகர்த்தி வெளி எடுத்துச் செல்லுவதற்கென திட்டங்கள் வைத்திருக்கிறோம். மேலும் இது போன்ற கண்ணுக்கு புலப்படாத கதிர்வீச்சுகள் காற்றிலும் பரவும் குணம் கொண்டதால் அணு உலைகள் எழுப்பப்படும் இடத்தை சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட மக்கட் தொகைக்கு மேலாக இருக்கக் கூடாது என்பதும் உலக அணு உலை அமைப்பு சட்டத்திலும் ஏதாவது இருக்கக் கூடுமே, அது இங்கே பயன்பாட்டில் உள்ளதா?

அமெரிக்காவில் ஒரு முறை ஆந்தராக்ஸ் புரளியில் இருந்த சமயம், உடனடியாக மக்களிடத்தில் கொந்தளிப்பு எல்லா கடைகளிலிலும் ஜன்னல், கதவோர ஓட்டைகளை அடைப்பதற்கான டக்ட் டேப் வித்து தீர்த்தது. அத்தனை கல்வியூட்டு, மற்றும் விழிப்புணர்வோடும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதற்கென முன்னெச்செரிக்கையோடு தற்காலிகமாக பாதுகாப்பினை தரும் வீடுகளின் கட்டமைப்பையும் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் நம்மூரில் ஓட்டு வீடுகளும், குச்சியால் வேய்ந்த ஓலை வீடுகளையும் கொண்ட அமைப்பில் இது போன்ற ஓர் அசம்பாவிதங்கள் நிகழுமாயின் எத்தனை தூரம் தாக்கு பிடிக்க முடியும்? அல்லது மக்களுக்கு உண்மையாக அணுக்கதிர் வீச்சு என்றால் என்ன, அது எது போன்ற விளைவுகளை உருவாக்க வல்லது போன்ற அடிப்படை விழிப்புணர்வு வழங்கப்பட்டிருக்கிறதா? பொது ஜனங்களின் நிலைப்பாடு அதன் உண்மையான சாதக/பாதகமறிந்து முழு மனதுடன் அதனை எதிர் கொள்ளும் நிலைக்கு நகர்ந்திருக்கிறார்களா?

இதோ அவர்கள் செய்கிறார்கள், இவர்கள் செய்கிறார்கள் என்று புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வதனைப் போலில்லாமல், லஞ்சம் வாங்கிய அரசு/அரசியல் ஊழியரின் நிலையறிந்து அதனை அரசாங்கமே 10 அல்லது 20% லஞ்சம் வாங்கியவர்களின் ஓய்வூதியத்தில் பிடித்து கொள்ளும் என்ற நிலைக்கு நகர்ந்திருக்கும் ஒரு கேடு கெட்ட நிலையில் இது போன்ற அதி முன்னெச்செரிக்கையும்/திட்டமிடலும் தேவைப்படும் ஒரு ஹை ரிஸ்க், நச்சு தொழிற் நுட்பம் இந்த சமூக பின்னணியில் நமக்குத் தேவையா?

மாறாக வருடத்தின் 300 நாட்களிலும் அடித்து கொளுத்தும் சூரிய வெப்பக் கதிர்களிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின் உற்பத்தியை பெறத் தக்க சோலார் பானல் திட்டத்தினையும், காற்றாலை, ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டங்களையும் (Wind, Water and solar) மேலும் முடிக்கி விட்டு சுற்றுப்புறச் சூழல் பேணலுடன் மக்களின் ஆரோக்கியம் பேணும் திட்டங்களில் இந்த 42,000 ஆயிரம் கோடிகளை கொட்டினால் என்ன? இதன் மூலமாக இந்த அணு உலையின் இயக்கம் 50 வருடங்களுக்குப் பிறகு மண்டையடியுடன் வைத்து மேய்ப்பதற்கென செலவும், ரிஸ்கிலிருந்தும் தப்பிக்கலமால்லவே!

இந்த மொத்த திட்டமும் எனக்கென்னவோ கண்ணை இழந்து சித்திரத்தை வாங்குவதற்கும், கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கும் இணையாகவே வைத்து பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது.

கீழே உள்ள படம் இப்போ ஜப்பானில் நடந்த அணு உலை கசாமுசாவில் கடலின் மறுகோடியில் இருக்கும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு 10 நாட்களுக்குள் ட்ரெசபில் கதீர்வீச்சு அறியப்பட்டதாக புரெஜெக்ட் செய்யப்பட்டது...



மேலும் வாசிக்க:

1) டாக்டர் அப்துல் கலாம் -  

Nuclear power is our gateway to a prosperous future

2) பேரா - டிரேந்திர ஷர்மா - Why Say NO to Nuclear – Prof. Dhirendra Sharma 


4) நமது பதிவர் கையேடு (இயற்பியலர்) - 

இந்தியா - அமெரிக்க அணு உடன்படிக்கை மற்றும் இந்திய அணு ஆற்றல்..!!??



Related Posts with Thumbnails