Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, February 05, 2023

ஜம்தாரா (Jamtara): கடன் அட்டை திருட்டு

இந்திய சினிமாவிற்கு நெட்ப்ளிக்ஸ் வந்ததிலே ஒரு சிறப்பான சம்பவம் நடந்திருக்கின்னா அது பரவலாக பேசப்படதா விசயங்களை பேச வைக்கிற படங்களை கொடுப்பதுதான். நமக்கு இது வரைக்கும் ஹிந்திப்படங்கள் என்றாலே பளபளப்பான பெரிய பெரிய அரண்மனை போன்ற வீடுகளில் ஐட்டம் பாடல்களை ஒத்தப் பின்னணியில் வண்ண வண்ண பெண்டீரையும், இசையையும் தவழ விட்டு நம்மை மயக்கி படம் காட்டுவார்கள்.



ஆனா, இதற்கு நேர்மாறாக இன்று நெட்ப்ளிக்ஸ் வேறு மாதிரியான ஒரு சினிமா அனுபவத்தை நமக்கு வழங்கி வருகிறது. இது வரைக்கும் நான் பார்த்த ஒரு சில படங்களையும், தொடர்களையும் வைத்து இணைத்துப் பார்த்தால், இந்தியா ஏன் மோடி, அமிச்சா, நிர்மலா போன்றவர்களுடன் மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கெனவே "தெ ஒயிட் டைகர்" என்ற படத்தைப் பற்றி பேசி ஒரு பகுப்பாய்வு செய்தோம்.

அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கிற "#ஜம்தாரா (Jamtara)" என்ற தொடரைப் பார்த்தேன். வேலையில்லா இளைஞர்கள் ஒரு சிறு கிராமத்திலிருந்து அலைபேசியைப் பயன்படுத்தி வங்கி அட்டைகளின் செய்திகளைப் வாடிக்கையாளர் களிடமிருந்து கறந்து (Phising) நூதன திருட்டு செய்கிறார்கள் என்பதே படத்தின் ஒன்லைனர். அந்த திருட்டில் ஈடுபடும் மனிதர்கள் வாழும் இடமும், சமூக கட்டமைப்பும் அவர்களுக்கிடையேயான உறவாடலும் எத்தகையது என்பதை கடத்துவதில் தான் இந்த தொடர் சிக்ஸர் அடித்திருக்கிறது எனலாம்.

அப்படியே இன்றைய வட இந்தியாவின் ஒரு மினி சிற்றூரும், சிறு நகரமும் அதிலுள்ள மக்களின் வாழ்வமைவையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. வட இந்தியா ஏன் தென் மாநிலங்களை விட மிகவும் பின் தங்கி இருக்கிறது? படை படையாக ஊரையே காலி செய்து கொண்டு புலம் பெயர என்ன காரணம்? ஏன் கொலை, கொள்ளை, திருட்டில் அதிகமாக ஈடுபடுகிறார்கள்? இவை அனைத்தையும் இந்தத் தொடரில் இணைக்கும் புள்ளி ஒன்று இருக்கிறது.

அந்தத் தொடரைப் பார்க்கும் போதே எனக்குத் தோன்றியது, இன்றையத் தமிழ்நாடு அவர்களின் பார்வைக்கு ஒரு மினி சிங்கப்பூராகத்தான் காணக் கிடைக்க வேண்டும். நாம் நிலச்சுவாந்தார்களை கடந்து விட்டோம். மகாபாரத சூழ்ச்சி வாய்ப்பாடுகளை தினசரி வாழ்வில் தொடர்பு படுத்தி செய்யப்போகும் படுபாதக செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு செய்யும் தனத்திற்கு என்றென்றைக்கும் தொடர்பற்று இருந்திருக்கிறோம். ஆனால், இவை அனைத்தும் வட மாநிலங்களில் இன்னமும் இருப்பதாகத் தெரிகிறது.


இந்தத் தொடரில் ஜாதிய கட்டமைப்பு மிகப் பெரிய பூதமாக எழுந்து நிற்கிறது. ஒரு பிராமண நிலச்சுவாந்தார் அந்த ஊரையே ஆட்டி வைக்கிறார். அனைத்து அதிகாரமும் ஓரிடத்தில் ஒடுங்கிக் கிடக்கிறது. மக்களும், காவல்துறையும் அவரின் கடைக்கண் பார்வையில் கட்டுண்டுக் கிடக்கிறது. அந்த கதாபாத்திரம் வட இந்தியாவின் சமூக நோய்மைத் தன்மையின் மூல ஊற்றை பேசிச் செல்கிறது.

உழைக்கும் வயதில் உள்ள இத்தனை பெரிய மக்கட்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும், பேராசையும் ஒன்று சேர்ந்தால் என்னாகும் என்பதற்கு இந்த அலைபேசி வழி வாடிக்கையாளர்களிடம் நடத்தப்படும் கொள்ளையேச் சான்று. நைச்சியமாக ஆசை காட்டி வாடிக்கையாளர்களின் கார்டுகளில் இருக்கும் 16 இலக்க எண்ணைப் பெற்று எப்படியாக பணத்தை பரிமாற்றிக் கொள்கிறார்கள் அத்தனை சிறிய சிற்றூரிலிருந்து என்பது ஆச்சர்யமோ ஆச்சர்யம்.

அதுவும் அந்த வாழ்வுப் பின்னணியோடு லட்சக்கணக்கில் இப்படிச் சுருட்டும் போது பயமாக வருகிறது. தொடர்ந்து மன்மோகன் சிங் கூறிய "முறைப்படுத்தப்பட்ட சுருட்டல்" என்ற பதம், அவர்கள் யார் யாரையோ ஒவ்வொரு முறையும் வங்கிக்கு கூட்டிச் சென்று பணத்தை எடுக்கும் போதும், ஓ! இதற்காகத்தன் நாட்டு மக்களையே பாடாய் படுத்தி வங்கிக் கணக்கு தொடங்கச் சொன்னார்களோ என்பதை நினைவூட்டியதை மறக்க முடியாது.

அண்மைய காலத்திய பணச் சுருட்டலில் இது போல பல திட்டங்களில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய வங்கிக் கடன்கள் யார் யாருடைய இயக்கப்படாத வங்கிக் கணக்குகளிலெல்லாம் வரவு வைத்து பெரியளவில் ஸ்கேம் செய்திருப்பதையும் தினமும் தொலைக்காட்சி செய்திகளில் கேட்டு வருகிறோம். அதனுடைய இன்னொரு வடிவம் தான் இந்த phising.  இது ஓர் உறுபிணி போல வட மாநிலங்களில் பெருகி வருவதாகத் தெரிகிறது. 

வரும் காலங்களில் இடப்பெயர்வின் மூலமாக அடைந்து கொள்ளும் வேலை வாய்ப்புகளைத் தாண்டி, அந்தந்த மாநில அரசுகள் ஏதாவது வாழ்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுத்து வாழவைத்துப் பார்க்க வில்லை என்றால், மென்மேலும் கூட்டம் கூட்டமாக தெற்கு புறமாக வந்து அள்ளிக் கொண்டு ஓடி மறைந்து கொள்ளும் கூட்டம் பெருகக் கூடும்.

#ஜம்தாரா

#Jamtara_Netflix_Series

Friday, February 03, 2023

The White Tiger: வெள்ளை புலி!

நேற்று நெட்ப்ளிக்ஸ்ல "த ஒயிட் டைகர்"நு ஒரு படம் பார்த்தேன். இந்தப் படத்தோட கதை புத்தகமாக வெளி வந்திருக்கிறது. ஆனா, அந்தப் புத்தகம் பெரிய அளவில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. சுதந்திர இந்தியா ஏன் முற்று முழுதுமாக அனைத்து மக்களுக்குமான நாடாக இன்னும் தலையெடுக்க முடியவில்லை என்பதை இந்தப்படம் ஃப்ரேம் பை ஃப்ரேமாக சுழன்று மிக அழுத்தமான கதைக்களத்துடன் பேசுகிறது.


வட இந்திய கிராமங்களை உங்கள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் சில காட்சிகளும் உண்டு. சைக்கிள் ரிக்ஷா இழுக்கும் கதாநாயகனின் அப்பா. வாழுமிடத்திற்கு கந்து வட்டியாய் பணம் வசூல் செய்யும் பண்ணையார் கூட்டம், கதாநாயகனின் அப்பாவை தெரு முனையில் நிற்க வைத்து கன்னத்தில் அறையப்படுவதை காண்கிறான்.

அப்பா, சைக்கிள் ரிக்‌ஷா இழுக்கும் ஒரு நாள் நுரையீரலை கரைத்து இரத்த வாந்தியாய் எடுத்து இறந்து போகிறார். கதாநாயகன் பள்ளிப்படிப்பு இடைநிற்றலாகி கூலி வேலைக்குச் செல்கிறான். நிலச்சுவான்தாரான ஊர்த்தலையின் பிள்ளைகளில் ஒன்று அமெரிக்கா ரிடர்ன்.

அமெரிக்காவில் நான் வாழ்ந்தாலும் என்னுடைய அகம் என்னவோ இந்தியப் புத்தியாய்த் தான் இருக்கிறது என்கிறான். அவன் பேசும் வசனங்கள் ரொம்ப முக்கியமானது. அவனுடைய மனைவி அமெரிக்காவில் படித்து மருத்துவராகப் பணியாற்றுகிறவர். அவளே கதாநாயகனை ஒரு விதத்தில் எம்பவர் செய்பவளாய் இருக்கிறாள். ஒவ்வொரு கேரக்டரும் அளவோடு இந்தியாவின் அவலத்தை பேசவோ, கோர முகத்தை எடுத்துக் காட்டவோ அமைக்கப்பட்டவை. அவனிடத்தில் வேலைக்குச் சேர கதாநாயகன் ஆசைப்பட்டு கிராமத்திலிருந்து கிளம்பிச் சென்று கார் ஓட்டுநராகச் ஆகிவிடுகிறான்.

அந்தக் கிராமும் கதாநாயகனோட குடும்பமும் இந்தியா இரண்டிலிருந்து வருபவர்கள் என்றால், பண்ணையார் தனக்குடும்பம் முதல் தர வாழ்வமைவு கொண்ட முதல் இந்தியாவைப் பற்றிப் பேசுகிறது. ஏன் நான் அடிமையாக இருக்கிறேன் என்று கதாநாயகன் தன்னுடைய லோயல் தனம் முழுமையும் காட்டி வேலை செய்யும் பொழுதும், நாயை விடக் கேவலமாக நடத்தப்படும் பொழுது அவனுக்குள்ளாகவே உரையாடிக் கொள்ளும் வசனங்கள் மிக முக்கியமானவை.

படத்தில் இரண்டே சீன் என்னை கவிழ்த்து விட்டது எனலாம். கதாநாயகன் தன்னுடைய பல்லின் கறையை எடுக்க முதன் முதலாக பிரஸ், டூத் பேஸ்ட் எடுத்து கண்ணாடிக்கு முன் நின்று ஒரே நாளில் விளக்கி விளக்கி பற்களின் வெள்ளைத் தன்மையை கொண்டு வர முயற்சிப்பது போல ஒரு காட்சி...


இரண்டாவது, வேலையை விட்டு விலக்கி வைப்பது போல ஒரு சூழல், அதே நேரத்தில் அமெரிக்கா ரிடர்ன் பண்ணையாரின் மகன் டில்லியில் தங்கி அரசியல் வாதிகளுக்கு தினம் தினம் பை பையாக லஞ்சப் பணம் கொண்டு சென்று கொடுப்பதுமாக பிசியாக இயங்கிக் கொண்டிருப்பான் அதனை ஓட்டுநராக கவனித்துக் கொண்டிருப்பான் கதாநாயகன். 

இவை இரண்டையும் இணைத்து போகும் வழியில் திறந்த வெளியில், வானுயர எழுந்து நிற்கிற கட்டிடப் பின்னணியில் மலம் கழித்துக் கொண்டிருப்பவர் ஒருவருடன் தானும் பேன்ட்டை தளர்த்தி நேர் எதிராக அமர்ந்து அவனுடன் சேர்ந்து கதாநாயனும் ஒரு மேனியாக் தனமாக அலறிச் சிரிக்குமொரு காட்சி, ஒட்டு மொத்த இந்திய மனநிலை, அரசியல் போக்கு, பணம், அதிகாரம் படைத்தவர்களின் பொறுப்பற்றத் தனத்தை எள்ளலாகச் சுட்டிக்காட்டும் நுட்பத்தனமென அமைந்தது... 

படத்தில் அது போல பலப்பல காட்சி அமைப்புகள்... நிகழ்கால அரசியல் சூழலை போகிறப் போக்கில் எள்ளி நகையாடிச் செல்கிறது. A must watch movie! 


#Cinema 

#சினிமா

#TheWhiteTiger

Friday, February 26, 2021

கமலஹாசன் சிறுமையின் எச்சம்: Wheelchair Speech

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.
பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.
இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத,
வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான்.
சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.
கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.
கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Sunday, November 15, 2020

Eternity (A Peruvian movie 2017) : முடிவற்ற காலம்!

 ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் அந்தப் படத்தினுடைய கதாபாத்திரங்கள், கடைசியாக நம்முடன் கூடவே வாழ்ந்து போனவர்களாக உணர வைக்கத்தக்க வகையில் வடிவமைக்கப் பட பல காரணிகள் தேவைப்படுவதாக உள்ளது. திரைப்படத்தின் சூல், திரைக்கதை, படமாக்கப்படப் போகும் இடம், கதாப்பாத்திரங்கள் மற்றும் இயக்குனர்.

என்னுடைய விட்டேத்தியான ஞாபக சக்தி திறமைக்கு ஓர் ஆறு மாதத்திற்கு முன்பாக பார்த்த படத்தின் கருவோ, அதன் பெயரோ கூட நினைவில் நிறுத்த முடியாத ஆள். பார்த்த படத்தையே, கடல் மணலைப் போல கொட்டிக் கிடக்கும் திரைப்படங்களிக்கிடையே மீண்டும் போஸ்டரைப் பார்த்து ஏமாந்து போய், தேர்வு செய்து பத்து நிமிடங்கள் ஓட விட்டுப் பார்க்கப் பார்க்க பார்த்த மாதிரியே இருக்கே என்று வெளி வந்து விடும் அளவிற்கே உண்டு.
மேலும் படங்கள் கிடைக்கிறதே என்று துணிந்து க்ளிக்கி விடும் ஆளும் கிடையாது. பனி படர்ந்த மலைப்பாங்கான வெளி, பெரிய ஏரி, வானம் தொட்டு நீளும் பாலை அல்லது கடல் அதில் ஒரு படகு... இப்படியாக போஸ்டர் அமையும் படி இருந்தால் அந்த தூண்டிலை கண்டிப்பாக கடிக்கும் ரகம் எனது ரசனை.
அப்படியாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு போஸ்டர் கண்ணில் சிக்கியது. அந்தப் படத்தை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. படத்தின் கதாபாத்திரங்களான ஃபாக்சியும் (நிலா), வில்காவும் (கதிரவன்) பெரு நாட்டின் ஆன்டெஸ் மலை உச்சியில் அவர்களுடைய குடிசையோட மனதை விட்டு அகல்வேணா என்று அடம்பிடித்தபடி அமர்ந்து விட்டார்கள். வேறு வழியே தெரியாமல் இதை எழுதத் துணிகிறேன்.
படத்தின் பெயர் எடெர்னிடி (Eternity) 2017லில் வெளி வந்த படம். படத்தினுடைய கதாபாத்திரங்கள் இரண்டு பேருமே அய்மாரா மொழி பேசும் பழங்குடி முதியோர்கள். முதியோர்கள் என்றால் தங்களது அந்திமத்தின் கடைசி நாட்களை (உண்மையிலும்) வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அந்த இருவரைத் தவிர படத்தில் நான்கு செம்மறியாடுகள், ஒரு லாமா, நாய் உண்டு. இவைகளைத் தவிர்த்து அவர்களோடு நாமும் சேர்ந்து உண்டு, உறங்க, சும்மா கைகளாலேயே கருங்கற்களை கொண்டு அடுக்கப்பட்ட சுவரையும், கோரைப் புற்களால் வேயப்பட்ட கூரையுமான ஒரு குடிசை உண்டு. பின்பு வீட்டை விட்டு வெளியே வந்தால் பச்சைப் பசேல் என நெஞ்சில் ஒட்டும் கண்ணுக்கெட்டிய தூரம் கொண்ட ஈரமான புல்வெளி மேடும், பனிகாலத்தில் அதே மலைகள் உறைபனியை போர்த்தியுமென கதை சொல்லும்.
அந்தத் தம்பதிகளுக்கிடையேயான உரையாடல் எந்த ஒரு மிகைப்படுத்தலுமில்லா மெல்லிய ஓடையைப் போல நகர்கிறது. தங்களைச் சுற்றி பரந்து விரிந்துள்ள இயற்கையை அவர்களுடைய வாழ்வின் ஒரு பகுதியாக, கூடவே சுவாசித்து, உண்டு, உறங்கி எழும் ஏனைய உறுப்பினராக கையாள்கிறார்கள்.
ஒரு ஹைலைட் சொல்கிறேன்- கணவரான வில்கா, சேகரித்த தானியத்தை தனது மனைவியான ஃபாக்சியுடன் தூற்றிக் கொண்டிருக்கிறார். நிற்க முடியாமல் நின்று கொண்டு ஒரு கையால் தானியம் நிரம்பிய மடித்துணியை பிடித்த வாரே, மறு கையால் அள்ளி அள்ளி காற்றுப் பட போடுவார். அப்பொழுது, காற்று குறைந்து விடும். வில்கா உன்னால் தான் காற்றை வரவழைக்க முடியுமே, செய்யேன் என்று கூறுவார். சரி, வில்கா உட்காருங்க என்று கூறியபடியே, பெருக்க வைத்திருந்த துடைப்பத்தை காற்றில் சுழற்றி தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து "மிஸ்ட் அழகி வந்திருக்கா வலிமையான காற்றே ஆடிப்பாடிக்கொண்டு வா" என்று ஆடிப்பாடிக் கொண்டே ஃபாக்சி காற்றை அழைப்பாள்... சற்று நேரத்தில் அந்தத் திசையில் நல்ல வேகமான காற்று வீசும். இதில் என்ன சிறப்புன்னா, அந்த ஃப்ரேம் ஒரே டேக்கில் எடுத்தது போலவே இருக்கும். காற்று கூட அவர்களுடன் பேசிப் புழங்குவதைப் போன்ற ஒரு தோற்றத்தை நம்மிடம் கடத்துவார்கள்.
ஆன்டெஸ் மலையின் 15 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த மக்களின் நடவடிக்கைகளும் காணவில்லை. வயதான காலத்தில் அந்த தட்பவெப்ப சூழலுக்கு தகுந்தவாறு அங்கு வாழ்வதில் அவர்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சினையாகுகிறது. தன்னுடைய ஒரே மகன், நகரத்திற்கு சென்று விடுகிறான். நகரம் அவனை மொழியை மறக்கச் செய்து விழுங்கிவிட்டதாக அரற்றுகிறார்கள். ஏன் நம்மை இப்படி தனியாக தவிக்க விட்டுவிட்டுச் சென்று விட்டான், என்ன தவறு இழைத்தோமென்று அவர்களின் உரையாடலுக்கிடையே புலம்பலாக வெளிப்படுத்துகிறார்கள், மகனின் பிரிவை. வருவான் என்ற நம்பிக்கையும், அவ நம்பிக்கையுமென எதிர்பார்ப்பில் நம்மையும் கூடவே அமர வைத்து தூரத்து வெளியைப் பார்க்க வைக்கிறார்கள்.
பிரச்சினையின் தீவிரமாக தீக்குச்சிகள் தீரப்போகிறது. ஃபாக்சி தினமும்
தீக்குச்சிகளை எடுத்து எண்ணி எண்ணிப் பார்த்துவிட்டு வில்காவிடம் புலம்பி வருகிறாள். ஒரு நாள் தீர்ந்தும் விடுகிறது. வேறு வழியில்லாமல், தனக்கு வயதாகிவிட்டது என்று மறுத்தாலும் பக்கத்து ஊருக்கு வில்காவை அனுப்பி வைக்கிறாள். அவரும் லாமாவை துணைக்கழைத்துக் கொண்டு செல்லும் வழியில், முடியாமல் சுருண்டு விழுந்து விடுகிறார். கணவர் இரவுதட்டியும் வீடு திரும்புவதற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஃபாக்சி தேடிக்கொண்டு செல்கிறாள். பிறகு இருவருமாக தள்ளாடி வீடு வந்தடைகிறார்கள்.
வந்து பார்த்தால், நாய் வேறு காணாமல் போனச் சூழலில் செம்மறியாடுகள் அனைத்தும் ஓநாயால் கொல்லப்பட்டு கிடக்கிறது. இருவரும் அரற்றி அழுகிறார்கள். அந்த ஃபாக்சியின் அழுகுரல் நம்மை எங்கோ கரையானைப் போல அரித்துக் கொண்டே இருக்கிறது. பிறகு தீக்குச்சிகளும் தீர்ந்து போன நிலையில் நெருப்பை காப்பாற்றி வைக்க சிறு ஓட்டில் சேமித்து வைத்த படி தூங்கச் செல்கிறார்கள். எதிர்பாரா விதத்தில் இரவில் தீ பரவி குடிசையும் எரிந்து நாசமாகி விடுகிறது.
பக்கத்தில் கால்நடைகளுக்கு போட்டு வைத்திருந்த குடிசைக்கு நகர்கிறார்கள், எப்படி கணவர் நோய் வாய்ப்பட, மகனாக வளர்த்த ஒரே லாமாவய் பசிக்கும் கணவருக்காக பலியிடத் துணிகிறாள் என்பதும், அதனை சமைத்து அவருக்கு ஊட்டுவதற்கு முன்பாக அவரின் கைகால்கள் காற்றில் உதறியவாரு உயிர் பிரிகிறது என்பதெல்லாம் நாமும் கூடவே அமர்ந்து அனுபவிப்பதைப் போல அவ்வளவு நேர்த்தியாக படைத்திருக்கிறார்கள்...
படத்தில் வந்த முதியோர்கள் இதற்கு முன்னாள் வேறு எந்த படத்திலும் நடித்ததாகத் தெரியவில்லை. அந்த முகங்கள் அந்தப் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியென அந்த முகமே கதை சொல்கிறது. இசையா மூச்! படத்தில் தாத்தா இசைக்கும் ஒரிரு புல்லாங்குழல் காட்சிகளைத் தவிர இசைக்கு வேலையே இல்லை. எப்படி இந்தப் படத்தை அந்த லெகேஷனில் வைத்து படமாக்கி இருப்பார்கள் என்பதே ஓர் ஆராய்ச்சிக்குறிய விசயம். அழுகாச்சிப் படம்தான். துணையோட பாருங்க, வாழ்வின் பல முரண்கள் கண் முன்னே துகள்களாக உதிர்வதை உணர்வீர்கள்.
ஃபாக்சி, வில்கா பெயர்கள் ஆன்டெஸ் மலைகளைத் தாண்டி நம் காதுகளில் பல நாட்கள் ரீங்காரித்துக் கொண்டிருப்பது உறுதி. A simply awesome movie!

Sunday, July 26, 2020

Mr. Misunderstanding: மிஸ்டர். மிஸ்அன்டர்ஸ்டான்டிங்



Mr. Misunderstandingனு ஒரு படம். இது ஒரு குறும்பட பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் நீண்ட படம். அதில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்குமே இதுவே முதல் படமாக இருந்திருக்க வேண்டும். அந்தக் குறைகளை பொறுத்துக் கொண்டு இந்தப் படம் பேசும் அரசியலுக்காக பார்க்க வேண்டும் என்பவர்கள், குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்காமல் பார்க்கலாம்.
இந்தப் படம் பேசும் அரசியல்-
■ வெளிநாட்டு அதிலும் குறிப்பாக வெள்ளையினத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்தியாவின் ஜிகு ஜிகு பட்டு சமாச்சாரம் சார்ந்த கலாச்சாரத்தின் வழியாக சமூகத்தை படிக்க, பார்க்க நேர்ந்த சில பேருக்கு அந்த ஊர் ஆண்/பெண்களை திருமணம் முடிக்க ஆசை வரும். அப்படி முழுப் பக்கமும் தெரியாமல் விழுபவர்களுக்கு விசயம் தெரிய வரும் போது என்னவாகுகிறது என்பதே ரோஸ் கேரக்டர். ரோஸிற்கு இந்தியாவின் சுப்ரீம் ஜாதி ப்ராமின் பையன் ஒருவனால் ஞான ப்ராப்தம் கிடைத்து இந்திய மயக்கம் தீர்கிறது.😆
■ புராணக் கதையில் நாம் படித்த ராமன், சீதையின் பொருட்டு சந்தேகம் கொண்டு அவளை தீபுகுந்து வெளிவரச் செய்து கற்பை நிரூபிக்கச் சொல்லுவான். இந்தப் படத்தில் நவீன முறையில் தன் கட்டிக் கொண்ட மனைவியின் பொருட்டு சந்தேகம் கொண்ட நவீன ராம், தனது நண்பனைக் கொண்டு ரோஸை தீக்குள் இறக்கி கற்பு நிலையை சுவாசித்து ஆனந்தமடைய எத்தனிக்கிறான். 🙄
■ மேண்மையான சுப்ரீம் என்பவைகள், எத்தனை போலியான நிலைகள் என்பதை செக்ஸ் ஒர்க்கர்ஸ் இல்லங்களுக்கு செல்லும் காட்சிகளும், சந்தேகத்தின் பேரில் படு கேவலமான நிலையை எடுத்து அதனை செயல் படுத்திப் பார்க்க, அதனூடான சூழ்ச்சி, துரோகம் என நீள்வதின் மூலம் புராணத்திற்கும், நிகழ்காலத்திற்குமான வலைபின்னலை கட்சிதமாக நிரப்பிச் செல்கிறது இப்படம். 🤷‍♂️
A snap Shot of a conversation between Ram and his wife Rose: 
She : அனைத்து இந்தியர்களும் இந்தப் புனிதக் கயிற்றை அணிகிறார்களா?.
He : இல்லை நாங்கள் மட்டும் அணிகிறோம்.
She : நாங்கள்?. புரியவில்லை.
He : நாங்கள் பிராமின்ஸ் மட்டும்.
She : எவ்வளவு பேர்?.
மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும்.
She : ஏன் நீங்கள் அணிகிறீர்கள்?
He: சமூகத்தில் பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள்.
She: எனக்கு புரியவில்லை.
இந்தியாவில் நிறைய ஜாதிகள் உள்ளது. அதில் எங்கள் ஜாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த ஜாதி.
She: உங்கள் உயர்ந்த ஜாதி மின்விளக்கு, விமானம், தொலைபேசி, கணிணி, வாகனம், மிதிவண்டி இதில் எதையாவது கண்டுபிடித்ததா?
He : இல்லை. நாங்கள் கடவுளின் பிரதிநிதி. அதனால் உயர்ந்தவர்கள்.
She : கடவுளின் விற்பனைப் பிரதிநிதியா?. யார் இந்த பதவியை உங்களுக்குக் கொடுத்தது?.
He : எந்தப் பதவி?.
She : நீ சொன்னாயே, பிராமின் பதவி. அது குடியரசுத் தலைவர் பதவியா?.
He : இல்லை. அதைக்காட்டிலும் உயர்ந்தது.
She : யார் உங்களுக்கு இதைக் கொடுத்தது?.
He : நாங்கள் பிறப்பாலேயே உயர்ந்தவர்கள்.
She : அதெப்படி பிறப்பால் ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவராகி விட முடியும்? மற்றவர்கள் உயர்ந்தவர்கள் இல்லையா?
He : ஆம்.
She : யார் சொன்னது?
He : எங்கள் புனித நூல் மனுதர்மா.
She : உங்களுடைய புனித புத்தகம் 3% மக்கள் மற்ற 97% மக்களைவிட உயர்ந்தவர்கள். அவர்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லுகிறது.
என்ன வகையான பீ(shit) அது?.

Tuesday, April 09, 2019

ரஜினிக்கு ஒரு கடிதம்: நதிநீர் இணைப்பு

பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே நதிகளை இணைக்க வேண்டும் - ரஜினி காந்த்.

அளவிற்கு மீறிய புகழ், பணம், அதிகாரம் இது எல்லாமே ஒரு நிலையில் காலம் ஒருவருக்கு வைத்த செக்மேட் அல்லது சாபம் எனக் கொள்ளலாம்.

இவைகள் அனைத்தும் கிடைத்தும் ஒருவருக்கு தன்னுடைய லிமிட், டிலிமிட் அறிந்து கொள்ளத் தேவையான தனக்கென நேரம் செலவழிப்பு, நல்ல புத்தகங்கள் வாசிக்கத் தேவையான மன நிலை, தன்னுடைய நிலைக்கென தன்னிடம் பழகும் மனிதர்களைத் தாண்டிய நட்பு பேணும் மனநிலை அமைவது என்பது சிம்ம சொப்பனமே!

உண்மையான "டவுன் டு எர்த் பர்சன்" என்பது அதுவாகத்தான் இருக்க முடியும். எளிமை, பணிவு, பக்குவம் என்பதும் அந்த உலகத்தின் கூரையில் தான் இருக்கிறோம் என்றாலும், இடம், பொருள் தன்னுடைய அறிவிற்கு இதைச் சொல்வது பொருத்தமானதா என்று அறிந்து பேசுவதில் இருக்கிறது.

இந்த நதிநீர் இணைப்பை பற்றி இந்த சூப்பர் ஸ்டார் தொடர்ந்து தன்னுடைய மட்டித் தனமான வாதத்தை வைக்கிறாரே, இவர் இந்த பூமியுனுடைய இரண்டு பில்லியன் ஆண்டுகளின் படிமலர்ச்சிப் பற்றி ஏதாவது வாசித்திருப்பாரா?

கடந்த 600 மில்லியன் ஆண்டுகளுக்குள் எது போன்ற கரடு முரடான வளர்ச்சிகளை இந்த பூமி முகம் கொடுத்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தி இருப்பாரா? ஏன் அவ்வளவு தூரம் போகிறோம் பெர்மியன், ட்ரையாசிக், ஜுராசிக், க்ரேட்டேசியஸ் என்ற பூகோள கால க்ரமத்தில் என்னவெல்லாம் இந்த பூமி மேலோடு மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று அவருக்கு யாராது சொல்லி இருப்பார்களா?

300 மில்லியன் ஆண்டுகள் வரைக்குமே கண்டங்களே இல்லாமல் ஒன்றாக பாஞ்சியா (Pangea) என்ற முழுப் தரைப்பகுதியாகத்தான் இந்த பூமி இருந்திருக்கிறது. ஒரே கடல்தான்.

டைனோசார்கள் கோலுச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான் நிலப்பரப்பு பிய்த்துக் கொண்டு தனித்தனியாக கண்டங்களாக நகர்ந்திருக்கிறது. அப்பொழுது ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த நதிகள், ஆறுகளுக்கெல்லாம் என்ன வாகி இருக்கும்?

இருந்த பெரிய ஆறுகள் காணாமல் போயிருக்கும் அத்துடன் அதனையொட்டி வாழ்ந்த உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துப் பட்டிருக்கும். பூமியின் மோலோடு மாற்றி அமைக்கப்பட்டதால் புதிய ஆறுகள் அதனதன் வழியை கண்டுபிடித்து உருவாகி இருக்கும். அதனையொட்டிய நிலப்பரப்பில் அதனையொட்டிய சுற்றுச்சுழலுக்கு தகுந்த தகவமைவுகளுடன் உயிரினங்கள் உருவாகி படிமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கும்.

இவை எதுவுமே ஒரே இரவில் அடைந்த மாற்றங்கள் கிடையாது.
கோடிக்கனக்கான ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த பின்னணியில் வைத்து நம்மை பார்த்தால், நாம் யார் இந்த பூகோளத்தின் வரைபடத்தை திருத்தி எழுதிக் கொள்ள? அப்படி நதிகளின் வழியை திருத்தி அமைக்கும் பொழுது எது போன்ற நீண்ட கால மாற்றங்களை இந்த சுற்றுப் புறச் சூழல் முகம் கொள்ளும் என்று சிந்தித்தது உண்டா, மிஸ்டர். சூப்பர் ஸ்டார்?

அன்று தழைத்து, கொழித்து வாழ்ந்து வந்த டைனோசார்கள் இன்று எங்கே? எதனால் அவைகள் அழிந்து பட்டிருக்கக் கூடும்? நீரும், உணவும் தானே அடிப்படை ஆதாரம் அனைத்து உயிரினத்திற்கும் ஆறுகள் தன்னியல்பில் தனது பாதை கண்டு கடலில் கலப்பது தானே காலச் சக்கரம் அதற்கு வழங்கிய இயல்பு. இதில் உங்க ஒரு கோடி ரூபாய் கொண்டு வேண்டுமானால் இருக்கும் குளம், குட்டை, ஆறுகளை தூர் வார கொடை அளியுங்கள்.

போகாத ஊருக்கு வழி காட்டாதிங்க. செலவு மிச்சம்னு.

யாரோ சொல்கிறார்கள் என்பதால் லாஜிக் இல்லாத தன்னுடைய அறிவிற்கு எட்டாத விசயத்தை எல்லாம் உளரி வைக்கக் கூடாது. தானே தேடிப் படித்து, சிந்தித்து பெரும் பெரும் பிரச்சினைகள் பொருத்து வாயை விட வேண்டும்.

உங்களுக்கு ஒரு புத்தகம் சிபாரிசு செய்கிறேன். ஆராய்ச்சிக்கான புத்தகமே ஆனாலும் ஒரு சினிமாவிற்கு உண்டான பிரமாண்டம் இருக்கிறது. உங்களது வாழ் நாளுக்குள் வாசியுங்கள். பிறகு நதிநீர் இணைப்பு பற்றி பேச கொஞ்சம் யோசிப்பீர்கள்.

The Rise and Fall of the Dinosaurs: A New History of a Lost World by Stephen L. Brusatte

Wednesday, November 07, 2018

அரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission!

இந்த இட ஒதுக்கீடும், இலவசங்களும்தான் தமிழகத்தை முன்னேற விடாமல் பிகாருக்கும், உத்திரபிரதேசத்திற்கும் சொல்லப் போனால் மேலைய நாடுகளையொத்த வாழ்க்கைத் தரத்தில் வாழும் வட இந்திய மாநிலங்களை விட படு கேவலமாக பொருளாதார, சுகாதார, கல்வி மேம்பாடுகளில் பின் தங்கிக் கிடக்க காராணமாகி இருக்கிறது; என்பதைப் போல பல பிள்ளை பிடிக்கிகள் கூறி நெருங்குவார்கள்...
இந்த இனிப்பு தடவிய நச்சு லேகியத்தை எவன் கொடுத்தாலும் அவர்களுடைய வாயிக்குள்ளரயே வைச்சு திணிச்சிடறது மேலும் அந்த லேகியம் பரவலைத் தடுக்கும்.
கேள்வி: இலவசங்கள் ஏழைகளை காப்பாற்றவா அல்லது, அவர்களை மேலும் சோம்பேறிகளாக்கவா?
பதில்: இந்த கேள்விக்கு தானே பதிலைடைஞ்சிகணும்னா, உண்மையான சமூக அறிவியலும் அதனையொட்டிய இயலாத மக்களின் உளவியலையும் ஒரு சேர உள்வாங்கினா பதில் கிடைக்கும்.
எப்படின்னா, தனிமனிதனை (குடும்பத்தை) ஆற்றல்படுத்துவது (empowering) என்பது ஒரு நாள் மட்டும் மேடை போட்டு மக்களை உற்சாகப் படுத்துவதோ அல்லது பள்ளி, கல்லூரி மேடைகளை ஆக்ரமித்து ராமாயண, மகாபாரதக் கதைகளை ஒப்பித்து சிறார்களை மூளைச் சலவை செய்வது போலவோ அல்ல!
சமூக சமன்பாட்டு நிலையை எட்டுவது என்பது மக்களின் தினப்படி வாழ்க்கையில் சில உளவியல் மாற்றங்களை உருவாக்கத்தக்க சொல்லாடல்களை ஏற்படுத்திக் கொடுப்பது, அதற்கான உபகரணங்களை எட்டும் தூரத்தில் நகர்த்தி வைப்பதுமாகும்.
இந்த சாத்தியங்கள் ஒரு நாள் ச்சீயர் லீடிங் செய்து விட்டு நகர்ந்து போய்விடுவது கிடையாது. தினப்படி வாழ்க்கை பயன்பாட்டில் இரண்டர கலப்பதால், கூட்டு சமூகத்தின் உளவியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அவ்வாறு ஒரு சமூகமே அந்த திசையில் பயணிக்க ஆரம்பிக்கும் பொழுது அதன் வெளிப்பாடாக சுகாதார, கல்வி ஏனைய சமூக முன்னேற்றம் சார்ந்த விடயங்களில் மக்கள் விழிப்புணர்வடையும் சாத்தியக் கூறுகளை நோக்கி நகரும்படியாக கதவு திறந்து விடப்படுகிறது.
இலவசங்கள், உண்மையில் அது இலவசங்கள் கிடையாது. மக்களின் வெல்ஃபர் சார்ந்த நலத்திட்டங்களை நேரடியாக மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்க்கும் ஓர் அரசின் அணுகுமுறைதான்.
இப்போ தமிழகம் எந்த அளவில் ஏனைய இந்திய மாநிலங்களைக் காட்டிலும் அடிப்படை கட்டமைப்பு துறைகளில் பின் தங்கிக்கிடக்கிறது? இவையெல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
கூறாய்ந்து பார்த்து நீங்களே கண் திறந்து பார்த்தால் ஒரு தேசமாக உலகரங்கில் உயரவும், மற்ற மாநிலங்களையும் சற்றே நாகரீகமடைந்த மாநிலங்களாக்கி மேலெழுப்பிக் கொள்ளவும் உதவலாம்.

Thursday, February 22, 2018

பிக் பாஸின் நட்ட நடு செண்டர் மய்யம் ஓஆர்ஜி: Maiam

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்னு ஒளி வெள்ளத்திற்கு கீழே நிற்கும் மாய நட்சத்திரங்களெல்லாம் இன்று ”ஒரு மாதிரி பேராசையில்” கிளம்பி வந்திருக்கிறது. அப்படி ஆசை வரவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும் என்றாகிவிட்டது.

காந்தி சென்னார் என்று தீவிர நடுநிலை வாதியான கமல் சார் மேற்கோள் காட்டியது, ”மனிதனின் தேவைகளுக்கு வேண்டுமானால் இந்த பூமி தன் வளங்களை வழங்கலாம் ஆனால் பேராசைக்கு வழங்க முடியாது.” இது கமலுக்கே பொருத்தமான ஒன்றுதானே! சரிதான். இவரின் சிறிய வயது ஆசையான நடிப்பு உலகில் தான் ஓர் இடத்தை அடைய வேண்டுமென்று உழைத்து அவராலான அளவில் புகழையும் ஈட்டி திருப்தி அடைந்து விட்டார்.

இப்பொழுது எந்த இசங்களையும் பின் பற்றி மக்களுக்கான பொதுச் சேவை ஆற்ற வேண்டிய நிலையில் இந்த நாடும், நாட்டு மக்களும் இல்லை, வெறும் ஊழலற்ற(?) அரசாட்சி மட்டுமே வழங்கினாலே போதுமானது என்று புதுப் படம் எடுப்பதனைப் போன்று ஒரு கட்சியையும், அதற்கான கொடியையும் ஏற்றி ஸ்ரீப்ரியா, ஸ்நேகன், பரணி, வையாபுரி போன்ற மொழி போராட்ட மற்றும் பொருளாதார மேதைகளை மேடையேற்றி இன்னொரு “பிக் பாஸ்” பாணியில் மக்களாட்சியில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் இஞ்ச் பை இஞ்சாக நகர்த்தி இன்று நாம் அடைந்திருக்கும் இந்த ஜனநாயக உரிமைகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளி மின்னும் ஒளி வெள்ளத்தின் கீழ் ஊழலாக சுருக்கி நீட், காவேரி நதி நீர் பங்கீடு, இயற்கை வளங்களை புரட்டி போட்டு சாமியார் வளம் பேணல், ந்யூட்ரினோ திட்டம் என்பனவற்றை புட்டியில் அடைத்து கடலில் வீசி விட்டு மூளைச் சலவை செய்ய எத்தனிக்கிறார்.

யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் தனக்கு நடிப்பு நன்றாக வரும் என்ற ஒற்றை காரணத்தை முன் வைத்து வரலாற்றை மறக்கடித்து கண்ணுக்கு முன்னால் அடைந்திருக்கும் வளர்ச்சிகளை குறுக்கி, மற்றுமொரு பீகாராகவும், உத்திர பிரதேசமாகவும் எல்லா துறைகளையும் பின்னுக்கு இழுத்துப் போக நினைப்பவர்களுக்கு துணை நின்று “மதுரை டயலக்” பேசி ஓட்டு அரசியல் பண்ணி விடலாம் என்று நினைப்பது எந்த விதத்தில் சேர்ப்பது?

மக்களை எந்த அளவிற்கு குறைத்து மதிப்பிட்டிருந்தால் இப்படியான ஒரு “மேனாமினிக்கி” அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு கட்சி தொடங்க ஆசை வந்திருக்கக் கூடும்?

ரசினியும் சரி கமலும் சரி இரண்டும் வேறுவேறல்ல ஒரே குட்டை மட்டைதான். வரலாற்று ரீதியாக, சரியாக இந்தியாவில் தமிழகத்தின் நிலை எங்கிருந்து எங்கு நகர்ந்து வந்திருக்கிறது என்று பிடிபடாத அந்த அப்பாவி மக்களை ஒரு பிள்ளை பிடிப்பவனின் சாதுர்யத்துடன் இவர்களை பிஜேபி உள்ளே நுழைந்து கிடைச்ச வரையும் லாபம் என்ற நோக்கில் சுருட்ட நினைக்கிறது.

இது போன்ற ஒரு சூழல் வந்ததிற்கு இது வரையிலும் ஆட்சி செய்து வந்த கழகங்களே காரணம். தேசிய அளவில் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சி என்ன அது எப்படி சாத்தியமானது, எது போன்ற போராட்டங்களை முன்னெடுத்து நம்மால் இந்த நிலையை அடைய முடிந்தது போன்ற விடயங்களை கட்சி பாராபட்சமின்றி எடுத்து கொண்டு சேர்க்காததே முதன்மையான காரணம்.

கழக ஆட்சி மட்டும் 1969க்கு பிறகு தோன்றாமல் இருந்திருந்தால் நான் இன்று அடைந்து இருக்கும் இடத்தை இன்னும் இரண்டு பிறப்பு எடுத்தாலும் அடைந்திருக்க முடியாது. என்னை போன்றுதான் இங்குள்ள அரிதி பெரும்பாண்மையான தமிழக மக்களுக்கும் என்றே நினைக்கிறேன்.

இல்லையென்றால் பிகாரிகளும், ராஜாஸ்தானிகளும் உத்திரபிரதேசக்காரர்களும், ஹர்யானகாரர்களைப் போன்றும் நானும் தேடித் தேடி மாமிசம் உண்பவர்களையும், காதலர் தினத்தன்று ஜோடியாக நடந்து செல்பவர்களை சாலையோரத்திலும், உணவு விடுதிகளிலும் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அடித்துக் கொன்று போடுபவர்களில் ஒருவனாக ஒரு படிப்பறிவற்ற காட்டுமிராண்டியைப் போல வாழ்ந்து கொண்டிருப்பேன். இந்த வேலையில் என்னை நாகரீக மடைந்தவனாக மடைமாற்றம் செய்த பகுத்தறிவாத முன்னோடிகளுக்கு நன்றி செலுத்தாமல் வேறு எந்த சூழ்நிலையில் செய்வேன்.

இன்னமும் கமல் போன்றவர்களை இத்தனை உயரத்தில் வைத்து அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் இன்னமும் நாம் போக வேண்டிய தொலைவு மிச்சமிருக்கிறது என்றுதானே புரிந்து கொள்ள முடிகிறது.

இவர் மிகச்சரியாக அரசியல் செய்ய வேண்டிய இடம் பிகார். கேஜ்ரிவாலை அழைத்துக் கொண்டு அடுத்த பிரதம மந்திரியாக தயாராகிக் கொண்டிருக்கும் யோகி, இன்றைய வாய்ச்சவடால் மோடிக்கு எதிராக பிற மாநிலங்களில் சென்று குறைந்த பட்சம் நாகரீகமாக உலக அரங்கில் முன் நிறுத்தி செல்ல அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை கல்வியறிவு, வாழ்வாதரங்களை அமைத்து கொள்ள வகுப்பு எடுக்கட்டும்.

இது தமிழகத்திற்கு தேவையற்றது! இப்பொழுது என்னால் யூகிக்க முடிகிறது இது போன்ற ஓநாய் கூட்டங்களுக்கு இடையே இத்தனை ஆண்டுகள் ஓர் இயக்கத்தை வழி நடத்தி சென்றிருக்க வேண்டுமானால் எத்தனை சாதுர்யம் தேவைப்பட்டிருக்கும். விழித்தெழு!

Sunday, January 17, 2016

மரணத்தை வென்றவன்: The Revenant

இந்த படத்தோட ஒவ்வொரு நிழல் படத்தையும் பார்க்கும் பொழுது, திரையரங்கு சென்று பார்க்க வேண்டுமென்ற அவாவை தூண்டிய படமிது. இருப்பினும் ஒரு பக்கம் ஒரு சிறு தயக்கம் இருந்து கொண்டே இருந்ததை மறுக்க முடியாது. லியோனார்டோ டிகாப்ரியோ, எதிர்பார்த்த படியே ஹக் க்ளாஸாக (Hugh Glass) வந்து நம்மை வாதையின் உக்கிரத்தையும், போராட்டத்தின் நெஞ்சுறுதியையும், தப்பி பிழைப்பதற்கென தனது கடைசி மூச்சை இழுத்து பிடித்து அவர் வெளி வரும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மையும் சேர்த்தே முனக விடுவதிலுமாக அள்ளி கொண்டு சென்று விட்டார்.

இந்த படம் சிறிது உண்மை கதையையும், நிறைய ஹாலிவுட் மசாலாவும் கலந்து கொடுத்து நமது 90 நிமிடங்களையும் வாயை பொத்தியபடி அமர வைத்திருக்கிறது. இயற்கை. அது ஆழப் பகுதியான வான் வெளியாக இருக்கட்டும், கடலாக. பாலையாக, வனமாக இருக்கட்டும் தனித்து விடப் படும் பொழுது வாழ்க்கையின் இண்டு இடுக்குகளையும் ஒன்று மற்ற சூன்யமாக காட்சி வழங்கி நம்மை உறைய வைத்து விடும் நிஜமது. இதற்கென இந்த படம் கனடாவிலும், அர்ஜெண்டைனாவிலும் படமாக்கப் பட்டிருக்கிறது. பனி சூழ்ந்த பாறை முகடுகளும், ஓயாத அருவிகள் மற்றும் ஆறுகளுக்கிடையிலும் நம்மையும் ஊர்ந்தும், நகர்ந்தும், மிதக்கவும் வைத்து, சுட்டுவிடும் பனிக் குளிரில் ஒட்டுத் துணி இல்லாமல் சிலிர்க்க வைத்துமாக டிகாப்பிரியோ நமது முகத்தில் அவருடைய உணர்வுகளை கொண்டு வர வைத்திருக்கிறார்.

அவருடைய நடிப்பின் உச்சம் க்ரிஸ்லி கரடி ஒன்று அவரை பொரட்டி போட்டு குதறுவதில் ஆரம்பிக்கிறது. அந்த கணத்தில் எனக்கு குறுக்குவாட்டாக மண்டை முழுக்க ஓடியது- நான் முதுமலையில் அதே தூரத்தில் வைத்து கரையான் புற்று ஒன்றை நோண்டி கொண்டிருந்த ஒரு கரடியைப் பார்த்ததை மனத்திரையில் கொண்டு வந்து ஜில்லிட வைத்தது. இந்த படத்தில் டிகாப்பிரியோவை விட்டு, விட்டு ஐந்து நிமிடத்திற்கும் மேலாக வந்து குதறும் கரடி காட்சியமைப்பு முதுகெலும்பை ஜில்லிட வைப்பதாக உள்ளது. அதனையொட்டி டிகாப்பிரியோவின் வலிக்கான முனகல்கள் நம்மை சீட்டின் முனைக்கு எடுத்து வந்து மீண்டும் சுதாகரித்து பின்னால் நகர வைக்கத் தக்கதாக உள்ளது.

இத்தனை தத்ரூபமான வாதையின் வெளிப்பாடுகளை இத்தனை அருகாமையில் வைத்து வேறு எந்த படத்திலும் பார்த்ததாக எனக்கு ஞாபகத்திலில்லை. இத்தனை அழகினை கொண்ட இயற்கை, ஓரிரு நிமிடங்களில் இரக்கமேயற்ற கொடுரீயாக மாற முடியுமா என்ற கேள்விக்கு இந்த படம் தொடர்ந்து பதிலுரைத்து கொண்டே வருகிறது.

தொடக்க காட்சியில் தொடர்பேயில்லாத விலங்கு தோல் சேகரிக்கும் ஒரு கூட்டத்தை சிவப்பிந்தியர்கள் ஏன் இப்படி வேட்டையாடுகிறார்கள், என்ற சினிமாத் தனமான ஒரு கழிவிரக்கம் மின்னலைப் போல நமது மனதில் தோன்றி மறையலாம். இருப்பினும் பல இடங்களில் சிவப்பிந்தியர்கள் பக்கமிருந்து பல நியாயமான வாழ்வாதாரங்களை பறித்து கொண்டதற்கான விசயங்களை அவர்கள் தரப்பிலிருந்து பேச விட்டு நம்மை கேக்க விட்டிருக்கிறார்கள்.

சிவப்பிந்திய பெண் ஒருத்தியை அந்த முகாமில் வைத்து அவளை தேவைப்படும் பொழுதுதெல்லாம் வன்புணர்வு கொள்ளுவதாக வரும் ஒரு காட்சியாக இருக்கட்டும், மற்றுமொரு சிவப்பிந்திய ஊரைத் தாண்டி செல்லும் பொழுது மொத்த ஊரே சாகடிக்கப்பட்டு உடல்கள் தங்களின் வாழ்விடத்திற்கு முன்பாகவே விட்டுவிட்டு சென்றது போன்ற காட்சியாக இருக்கட்டும், சிவப்பிந்தியர்கள் எது போன்ற விபரீதங்களை எல்லாம் அந்த கால கட்டத்தில் அனுபவித்திருப்பார்கள் என்பதனை நம்முள் கேள்விகளாக முன் வைத்த படியே நகர்கின்றது.

இந்த படத்தில் ஓர் அழகான காதல் கதையுமுண்டு! அது டைட்டானிக் பாணி. இந்த படம் பாதி உண்மைக் கதையும், மீதி ஹாலிவுட் மசாலாவும் என்று ஆரம்பத்தில் கூறினேலல்லவா? உண்மைப் பகுதி 1800களில் ஹக் க்ளாஸ் என்பவர் நீர் நாய் மற்றும் விலங்கு தோல் வேட்டையாளர். அவரை ஒரு கரடி பொரட்டி எடுத்து விடுகிறது. ஏனைய ஹக் நண்பர்களால் அந்தக் கரடி சுட்டு கொள்ளப்படுகிறது. அந்த நிகழ்வு அவரை சாகும் நிலையில் விட்டு செல்கிறது. காயமுற்ற நிலையில் உள்ள ஹக்கை தூக்கி கொண்டு, தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். பயணம் கரடுமுரடாகிறது. பயணத்தை தொடர்வதே கேள்விக்கு உள்ளாகும் பொழுது, பயண தலைமை இரண்டு பேரை ஹக்குடன் இருக்கு மாறு பணித்து விட்டு ஏனையவர்கள் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்.

ஜான் ஃபிட்ஜரால்ட் தன்னை விட இளைஞரான ஜிம்மை மூளைச் சலவை செய்து, ஹக்கை அரைகுறை உயிரோடு விட்டு விட்டு ஏனையவர்களுடன் தங்களது பயணத்தை தொடர முயல்கிறார். இது வரையிலும் தான் உண்மை கதை. படத்திற்கென வரும் காதல் கதையில், டிகாப்பிரியோ சிவபிந்திய பெண் ஒருத்தியுடன் கலந்து, அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான். வெள்ளையின காலனி மக்கள் ஊர் புகுந்து சுட்டு கொல்லும் மேளாவில், கதாநாயகியும் இறந்து போகிறாள்.

மகனுடன் டிகாப்ரியோ பயணத்தை தொடர்கிறான். இந்த நிலையில் படத்திற்கென ஃபிட்ஜரால்ட், ஹக்கின் மூக்கையும், வாயையும் மூடி கொன்று விட எத்தனிக்கும் பொழுது மகன் போராடி காப்பாற்ற முனையும் பொழுது தந்தைக்கு முன்பாகவே கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்படுகிறான். பின்பு, டிகாப்ரியோவை அப்படியே விட்டுவிட்டு மற்ற இருவரும் சென்று விடுகிறார்கள்.

மூன்று வாரத்தில் முதல் முறையாக படுத்த படுக்கையாக கிடந்தவன், தன் உடம்பை தரையில் போட்டு இழுத்து, இழுத்து ஊர்ந்து சென்று தன்னுடைய மகன் கொலையுண்டு கிடக்கும் காட்சியை காண்பதும், அதற்கென முகத்தில் காட்டும் உணர்வுகள், நமது தொண்டையில் ஏதோ ஒன்று ப்ளக் என்று அடைத்து கொள்ள வைப்பதாக உள்ளது. அந்த காட்சிக்கிடையே சிறிது நேரம் மேகம் சூரியனை மறைத்தும் மறைக்கமாலுமாக நகர்ந்து கொண்டிருப்பதை ரொம்ப நிதானமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். இது போன்ற பல மாலை, காலை சூரிய உதயமும், மறைவுமாக காட்சி படுத்தல்கள், அந்த பகுதியில் நாமும் வாழ்ந்து விட்டு வந்ததிற்கான அடர்த்தியான மன நிலையை விட்டுச் செல்கிறது.

மறைந்து போன காதலி டிகாப்ரியோவின் மரண போராட்டதின் போதும், ஆழ்ந்த உறக்கத்தின் போதுமாக வந்து ஹஸ், ஹஸ்பதும், மரத்தின் வலிமையோடு வாழ்வின் போராட்ட குணத்தை ஒப்பீட்டு அவனை போராட உந்துவதும் ஏதோ சிவப்பிந்தியர்களின் அதெண்டிக்கான மைண்ட் ஸ்பிரிட் இசையை ஒலிக்க விட்டு கேட்பதனை போல வெரி மெடிட்டேடிவ். 

மிச்சக் கதை டிகாப்ரியோ பலி வாங்கும் எண்ணத்துடன் ஃபிட்ஜரால்டை தேடி சென்று பலி வாங்குவதே கதை.

பனியில் ரத்தம் பார்க்கும் பொழுது ஏதோ மனதை பிழிகிறது. வீட்டிற்கு வந்து பாப்பாவின் முகம் பார்க்க முடியாமல் அழுது கொண்டே இருக்க நேர்ந்தது. அவள் என் கண்களை பார்த்து விட்டு அவள் கண்களில் தொடர்ந்து முன் மண்டை முடி கண்களில் வீழ்வதாக கண்ணை துடைத்து கொண்டே இருந்தாள். பிறகு, ஒரே ஒரு கேள்வி எதற்காக அந்த படத்தை பார்க்க சென்றாய்? அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை. 

ஏன் இந்த படத்தை பார்க்க மனது விரும்பியது. உள்ளே ஏதோ ஒரு வெற்றிடம் தொடர்ந்து பரந்து விரிந்த அந்த பனிக் காட்டின் மரங்களில் உரசி எழுப்பும் சப்பத்துடன் ஓலமிட்ட படியே எதனையோ நிரப்பிக் கொள்ள மனது தொடர்ந்து கனத்தை விரும்புகிறதோ என்னவோ. நிலையாமை!!


Sunday, July 13, 2014

கற்கால மனிதனும் நவீன ஏப்களும்: Planet of the Apes

கொஞ்சம் எதிர்பார்ப்புடன் சென்ற படமிது "The dawn of the planet of the apes." மற்ற பாகங்களைக் காட்டிலும் இந்த பகுதி மிக நெருக்கமாக உணரவைத்தது! அதற்கான காரணமாக நான் எடுத்துக் கொண்டது, இன்றைய நாளில் நம்முடன் வாழும் போனோபோ வகை சிம்பன்சி வாலில்லா குரங்குகளிலிருந்து படத்திற்கென ரொம்ப வித்தியாச படித்தி காட்டி விட எத்தனிக்காமல், அப்படியே அதன் உடல் புற அமைப்பிலும் முக வெளிப்பாடுகளிலும் வித்தியாசம் காட்டாமல் அமைத்துக் காட்டியது.  மேலும், இன்றைய உலக அரசியல் மேடையில் மேற்கத்திய கலாச்சரம் பிற இனங்களின் மீது கட்டவிழ்த்து விடும் உளவியல் போர் குயுக்த்தியும் சற்றே கூர்ந்து கவனிக்க வைத்தது.

ஓபனிங் சீன் வால்பாறை மழைக்காடுகளில் சிங்கவால் குரங்குகள் தலைக்கு மேலாக கரும் மேகமென பரவித் திரியும் ஓர் உணர்வை, இந்த படத்தில் வரும் ஏப்கள் தாவித் திரியும்படியாக காட்சியாக்கிய கோணம்,  பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இருப்பினும் படத்தின் பிற பகுதிகளில் அப்படியாக இல்லை. வெறும் விடியோ கேம் பார்ப்பதையொத்து அமைந்து போனது மிக்க துரதிருஷ்டவசமானது.

ஏப்களின் தலைவனாக வரும் சீசர் துப்பாக்கி நொறுக்கும் காட்சி மனிதன் முன்னிருத்தி வரும் வன்முறை கலாச்சாரத்திற்கு நுட்பமாக வைக்கப்பட்டிருக்கும் ஓர் அழுத்தமான குறியீடு.

இந்த படத்தை என்னால் இரு வேறு பரிணாம உச்சத்திற்கு வரத் துடிக்கும் இனங்களுக்கிடையே நடக்கும் தப்பிப்பிழைப்பதற்கென நடைபெறும் போராட்டமாக, ஒரு பரந்த பார்வையில் மட்டுமே வைத்து பார்க்க முடியவில்லை. சமகாலத்தில் நடந்தேறும் மதம், இன வேறு பாடுகளைக் கொண்டு நம் ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கும் குறுகிய வட்டத்திற்குள்ளாகவே வைத்துப் பார்க்கத் தூண்டும் விதத்தில் அமைந்தது.

இன்னும் சுருக்கி கூறி சிறிய திரையில் விரித்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமானால், மேற்கத்திய நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளின் மீதாக கட்டவிழ்த்து விடும் உளவியல் போராகவும் பார்க்கத் தூண்டுகிறது. உதாரணமாக, இந்த ஏப்கள் தங்களுக்குள்ளாக மொழியின் ஊடாக விசயங்களை பேசி புரிந்து கொள்வது, ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடுவது போன்ற காட்சியமைப்புகள் இன்றைய பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் இன பிரச்சினையை வைத்து பார்க்கும் படியாக எச்சரித்து செல்வதாக புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு தங்களின் நியாயமான காரணங்களுக்காக இந்த ஏப்கள் போராடத் தயாரானாலும், துப்பாக்கிகளை விட அதி நவீன கன ரக ஆயுதங்களைக் கொண்டு கொத்து கொத்தாக எங்களால் உங்களை கொன்றொழிக்க முடியும் என்ற அபாய மணியை அழுத்தமாக இது போன்ற சிறு இனங்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான பிரச்சாரமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மனிதன் எப்படி துரோகங்களையும், வெறுப்பையும், தன்னை தக்க வைத்துக் கொள்ளும் முன் அவசரத்தன்மையில் கண் மூடித்தனமாக மன சாட்சி அற்று இயங்குவதும், முன் கோபியாக தனது மனித இனத்தையே அழித்துக் கொள்ளும் பாதையில் நடக்கிறான் என்பதனை இந்த படத்தில் ஏப்களை விட்டு கருத்து சொல்ல விட்டிருக்கிறார்கள்.

ஏப்கள் வன்முறையை விரும்பது கிடையாது. ஏப்கள் தங்களுடைய இனத்தில் ஒருவரையே கொல்லாது. ஏப்களின் தளபதியை நோக்கி சீசர் கூறும் ஒரு வசனம் - மனிதர்களிடமிருந்து நீ கற்றுக் கொண்டது கோபமும், வெறுப்பும் மட்டுமே என்று ஒட்டு மொத்த தற்கால மனித இனத்தை தங்களுக்கும் பின் தங்கியவர்களாக கூறி இந்த படம் முன் நகர்கிறது.

Monday, December 03, 2012

புலியுடனான பயணம் : Life of Pi


இந்தப் படத்திற்கும் எனக்குமான தொடர்பு என்று கூற வேண்டுமானால், இது எனக்கு ஓர் ஆன்மீக அனுபவம். படம் கூற வந்த விசயங்கள். அதனை வழங்கிய விதம். 3டி முறையின் பிரமாண்டம் அனைத்திற்கும் மேலாக படம் என்னால் பார்க்கப்பட்ட முறை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக எழுதிக் கொண்டு செல்லும் அளவிற்கு உள்வாங்கப்பட்டிறுக்கிறது.

இதனை முப்பரிமாண முறையில் பார்ப்பேன் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. எனக்கு காணக்கிடைத்த காட்சிக்கான நேரத்தில் அம்முறையிலேயே இந்தப் படம் திரையிடப்பட்டது. அது ஒரு முதல் பரிசு! இல்லையெனில் இத்தனை வசீகரத்தை இந்தப் படம் வழங்கியிருக்காது. தத்ரூபம், மலைப்பு மற்றும் காட்சிப்படுத்தப்பட்டதின் பிரமாண்டம் அப்படியே ஒவ்வொரு சட்டத்திற்குள்ளும் என்னை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

இரண்டாவது அத்தனை பெரிய திரையரங்கில் என்னைத் தவிர்த்து வேறு யாருமே இல்லாதது. படம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, நிறையவே லயித்து ஓரு மோன நிலையில் இருக்கும் பொழுது சுய நினைவிற்கு வந்தவனாக இத்தனை பிரமாண்டமாக எடுத்த ஒரு படத்தை எனக்காகவே இத்தனை பேர் உழைப்பைச் சிந்தி, படத்தின் இயக்குனர் சொந்த அழைப்பின் பேரில் திரையிட்டு காண்பிக்கபடுவதான பூரிப்பு, பெருமை அந்த திரையரங்கத்தின் காலி இருக்கைகளை காணும் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டது. பாக்கியசாலியாக உணர்ந்து கொண்டு ஓர் ஏகாந்தத்தின் உச்சத்திற்கே இட்டுச் சென்றது; கொஞ்சம் குறுகுறுப்பு ஓர் ஓரமாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தாலும்.

படமும் ஒரு பதினைந்து நிமிட ஏனைய முப்பரிமாண திரைப்படங்களுக்கான அறிமுக திரையிடலுக்குப் பிறகாக, படத்தின் முதல் காட்சியே ஒரு முறை நான் எந்த ஊரில் படம் பார்க்கிறேன் என்று தரையிறங்க வைக்கும் கேள்வியுடனே அமைந்திருந்தது. தமிழ்! ஒரு தாலாட்டு போன்ற பாடலுடனும், அதிர்ந்து கொட்டும் நம்மூர் மழையுடனும் உள்ளே அழைத்துச் சென்றது.

படம் பாண்டிச்சேரியின் தெருக்களில் ஆரம்பித்து பள்ளி, வீடுகள் அப்படியே முண்ணார் என்று நகர்ந்து பசிபிக் பெருங்கடலின் மையப்பகுதியில் சூல் கொண்டு விடுகிறது. பாண்டிச்சேரியை இந்தப்படத்தின் கேமராவின் பார்வையில் பார்க்கும் பொழுது ரொம்பவே வித்தியாசமாக காட்டியிருக்கிறார்கள். முண்ணார் - இவங்க லென்ஸ்களில்தான் எத்தனை அழகு! எப்படி நாம் பார்த்து பழகிய இடங்களையே இவர்களால் இத்தன நயமாக, பூமியிலிருந்து தனித்து தொங்கும் ஒரு இந்திரபுரியாக மாற்றிக் காமிக்க முடிகிறது. இங்குதான் கலாச்சாரத்திற்கென ஒரு சிறப்பு அகக்கண் திறந்து கொள்கிறதோ என்பதாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

படத்தின் வசனங்களுக்கு ஊடே அம்மா, அப்பா என்று இயக்குனர் தைரியமாக உலகத்திற்கு நம் மொழியில் பெற்றோர்களை விளிக்கும் சொற்களை அறிமுகப்படுத்திய பாங்கு வெகு அழகான துணிச்சல்! தபூ வெகு இயல்பான மத்திய வயது தோழிமார்களுக்கான அழகுடன் ஜொலித்திருக்கிறார். அவர் பேசும் ஈழத்தமிழ் தேனாக இனிக்கிறது.

வெளியூர்க்காரன் வந்து நமக்கான அழகியலை அதன் உச்சரிக்கும் மேட்டிமைத்தனத்திற்கு எடுத்துச் சென்று உச்சரிக்க விட்டு நம்மை அறியாமை என்ற புதைகுழியிலிருந்து மீட்டு எடுக்கச் செய்ய வேண்டி இருக்கிறது. Loved it!

சின்னதாக ஒரு மீசை அரும்பா காதலையையும் எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். அதற்கான காட்சிகளில் வரும் ஒவ்வொரு பெண்ணும் பொருட்களும் அத்தனை அழகாக இருக்கிறார்கள். பையன் கட்டி வைக்கப்பட்ட செவ்வந்தி மாலைகளுக்கிடையே நாட்டியம் கற்றுக் கொள்ளும் ஆனந்தியை பார்ப்பது, அப்படியே என்னுடைய சந்தை நாட்களை நினைவூட்டி அலேக்காக தூக்கி அருகே வைத்துக் கொண்டது. மேலும், பாண்டிச்சேரி கடற்கரை காட்சி. அந்த சிதில பாலத்திற்கு கீழே மெல்லிய மாலை நேர ஒளிக்கீற்றுகளுக்கிடையே அமர்ந்து ஆனந்தி அவனது மணிக்கட்டில் ஞாபகத்திற்கென கட்டிவிடும் கயிறு, கவிதை! ஆங்கிலப்படத்திற்கென இந்திய அதுவும் தமிழ்ப்பெயர்களை சிதைக்காமல் முழுமையாக உச்சரிக்க விட்டது புதுமை. இயல்பாக இருந்தது!

படத்தில் நாயகச் சிறுவனின் குடும்பம் தங்கள் பாண்டியில் வைத்து நடத்திய மிருக காட்சி சாலை மூட நேர்ந்ததின் விளைவாக அத்தனை மிருகங்களையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு கனடா நாட்டிற்கு புலம்பெயர நேர்கிறது. அப்பொழுது இரவு நேர குடும்ப உணவு அருந்தலின் போது அப்பா அதனை முன் மொழிகிறார். நாயகச் சிறுவனுக்கு அது ஓர் அதிர்ச்சி. பிஞ்சிக் காதல் உடைபடுவதை உணர முடிகிறது. அதற்கான முஸ்தீபாக அப்பா கொலம்பஸ் எப்படி பயணம் மேற்கொள்வதின் அவசியத்தை உணர்த்தினார் என்று கூற வரும் பொழுது, சிறுவன் கூறுகிறான் “ஆனா, அப்பா கொலம்பஸ் இந்தியாவை தேடி வந்தார்.” என்ற ஒற்றை வசனத்தில் பல வரலாற்று மற்றும் இன்றைய சமகால இந்திய சூழ்நிலையையின் சவால்களை, அவலத்தை முன் வைத்தாகப் படுகிறது.

இந்த பின்னணியில் கப்பல், குடும்பத்தையும் விலங்குகளையும் ஏற்றிக் கொண்டு, குடும்ப நபர்களில் இருவர் சைவம் உண்பவர்களாகவும் மற்ற இருவர் அசைவத்தையும் உள்ளடக்கியவர்களாக நம் கலாச்சார சங்கிலியை கட்டுடைக்கிறார்.

கப்பலின் உணவகத்தில் ஒரு புத்தமத துறவியைக் கொண்டு எது போன்ற உணவு எந்த மாதிரியான வாழ்வுச் சூழலில் சைவமாகிறது என்று விளக்கும் இடமும், நாயகச் சிறுவனைக் கொண்டு ‘இப்படியாக நடந்துவிட்டால் (what if)' சைவனாக இருந்தவனை அப்படியே சமைக்கப்படாத மீனை உண்ண வைத்து, இவ்வளவுதான் நமது வாழ்வு என்று இந்திய மேட்டிமை மனங்களை அடிப்படையான - தப்பிப்பிழைத்தலுக்கானதும், ஆரம்பக் கல்வியூட்டு விழிப்புணர்வு கேள்விக்குள்ளும் தள்ளி விட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர்.

இப்பொழுது அவர்களின் பயணம் ஒரு பெரும் புயலில் சிக்கிக் கொண்டு கப்பல் மூழ்க நேரிடும் பொழுது, நாயகனுடன் சேர்ந்து, ஒரு கழுதைப் புலி, வரிக்குதிரை, ஒரு புலியும் கொஞ்சம் தாமதமாக ஓர் ஒரங்குட்டனும் இணைந்து கொள்கிறார்கள் ஒரு சிறிய படகில். இங்கிருந்துதான் படத்திற்கும் எனக்குமான ஆன்மீக அதாவது அகமன பயணம் தொடங்குகிறது. நாம் ஒவ்வொருவரும் கூடவே பயணித்து பல கேள்விகளை கேட்டுக் கொள்ளும் ஒரு சூழ்நிலைக்கு மிக இயல்பாக நம்மை அந்த படத்தின் குணாதிசியத்தில் பொருத்தி பின்பு தனிமை படுத்தி விடுகிறார் திறமையாக இயக்குனர்.

அந்தப் படத்தின் நாயகனைப் போலவே அத்தனை இடர்பாடுகளுக்கிடையேயும் இயற்கை நடாத்தும் ஆனந்த தாண்டவத்தை அவன் ரசிக்க தவறியாதாகவே எந்த ஓர் அபாயகரமான இடத்திலும் காட்சியப் படுத்தப்படவேயில்லை.

அது அவன் பெற்றோர்களுடன் கப்பலில் வரும் பொழுது சந்திக்கும் முதல் புயலாகட்டும், பிரிதொரு சமயம் கடல் முழுக்கவுமே ஜெல்லி மீன்களால் ஒளியூட்டப்பட்டு அதனைக் கண்டு அவன் ஆர்ப்பரித்து நீருடன் விளையாண்டு கொண்டிருக்கும் இடத்தில் அந்த அமைதியை, பேரானந்தத்தை சிதைக்கும் படியாக ஒரு திமிங்கிலாம் அவனுடைய கடைசி உயிர் காக்கும் உணவு சேமிப்பையும் அத்தோட்டு போகும் படியாக செய்யும் பொழுதும் அதனைக் கண்டு வியந்து நிற்பதாக காட்சிப்படுத்தப் பட்டிறுப்பதும், மீண்டும் ஒரு புயல் அதன் பிரமாண்டா வானம், இடி, மின்னல் பார்த்து அவனுடன் பயணிக்கும் முதல் பாதி எதிரி புலியை வெளியே அழைத்து ”தவற விடாதே, வந்து பார்” என்று கொக்கரிக்கும் இடம் அனைத்தும் பல விசயங்களை என்னுள் விதைத்துச் சென்றது என்றால் மிகையாக இருக்க முடியாது.

இடர்பாடுகள் என்பது நாம் எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கிலேயே நம் மனதில் காட்சியாகி விரிகிறது. அதன் சுமை, சுமையற்றத் தன்மை எப்படியாக வந்தடைகிறது என்பதற்கு நடுக்கடலில் மிதக்கும் ஒரு சிறு படகும் அதனில் நம்மையே உணவாக உட்கொள்ளக் கூடிய ஒரு மாமிச பட்சினியுடன் பயணித்துக் கொண்டே ஆன்மத் தேடல் செய்யவிடுவது exotic experience!

சில நேரங்களில் ஏதோ ஒரு ஃபேரிடேல் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்றளவில் அந்த இரவு வானமும், மாலை நேர சூரிய அஸ்தமனத்திற்கான ஒளியும் மதிமயங்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக நான் பல அற்புதமான இரவு நேர வானங்களை மேற்கு மலைத் தொடர்களின் பல பாகங்களிலிருந்தும் பார்த்திருக்கிறேன். இத்தனை பெரிய திரையரங்கிற்குள் முப்பரிமாண முறையில் அதே இரவு வானத்தை காட்டும் பொழுது அந்த படகின் இருப்பை போலவே பால்வீதியில் என் இருப்பும் எத்தனை சிறியது, பொருளடையது, எனக்கே எனக்குமட்டுமானது என்று ஒட்டி பார்த்துக் கொள்ளவும் முடிந்தது.

அவனுக்கும் புலிக்குமிடையிலே நடக்கும் எல்லைச் சண்டையில் ஒரு முறை, நாயகன் அந்த சிறிய படகில் சிறுநீர் கழித்து இது என்னுடைய எல்லை அது உன்னுடைய எல்லை என்று பிரித்து அலறி நிற்கும் பொழுது, புலி அவன் முகத்தில் எல்லையிட்டு சிறுநீர் கழிப்பது மெல்லிய புன்னகையுனூடே யாருக்கு யார் எல்லை வகுத்து கொடுப்பது என்பதனை நகைச்சுவையாக கூறி புரிய வைத்திருக்கிறார்கள்.

இடையில் வந்து போகும் அந்த மாமிசவுண்ணும் தாவரத் தீவு. லாங்க் ஷாட்டில் ஏதோ ஒரு பெண் வானம் பார்க்க படுத்திருப்பதனைப் போன்று காட்டுகிறார்கள். அங்கு ஆயிரக்கணக்கில் வாழ்வதாக காட்டப்படும் நீர்நாய்கள், எத்தனை துல்லியமான க்ராஃபிக்ஸ். சுத்தமாக நம்பமுடியவில்லை உண்மைக்கும், பொய்மைக்கும் நவீன காலங்களில் வரும் படங்களில் கையாளப்படும் விஞ்ஞான வசதிகளை உற்று நோக்கினால். அத்தனை தத்ரூபம்!

படத்தின் இறுதியில் எப்படியாக இந்தக் கதை மற்றுமொரு கிளைக்கதையாக துளிர்க்கிறது என்பதனின் மூலமாக, நம்மையே இரண்டு கதைகளில் எந்தக் கதையை எடுத்துக் கொள்வீர்கள் என்பதனைக் கொண்டு எது போன்ற நபர்கள் நாம் ஒவ்வொருவரும் என்பதனை அறிந்து கொள்ள விடுவது - நல்ல அணுகுமுறை!

எனக்கு புலியுடன் தனித்து விடப்பட்ட பகுதியிலேயே அதிகமான வாழ்க்கைக்கு தேவையான சுவையான உரையாடலுக்கான சாத்தியங்களையும், மனத் திறப்புகளையும் உருவாக்கித் தருவதால் அந்தப் பகுதியுடன் இணைத்துக் கொள்ள முடிந்தது. படத்தின் நாயகன் அப்படியானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கரை சேர்ந்தானா, இல்லை, புலியுடனான வாழ்க்கை என்பது மனப்பிறழ்சியால் அவனுக்கு, வழங்கப்பட்டதா என்பது subjective!

இருப்பினும் எனக்கு இந்த படம் வழங்கியது என்னுடைய பனிரெண்டு டாலருக்கும் உயர்வான அனுபவத்தை, திளைப்பை! Simply had a mixer of astounding, mesmerizing and exotic experience; never wanting to finish the movie to end.

Saturday, November 17, 2012

முழிச்சிக்கோங்க : சினிமா டுப்பாக்கி...

இந்தப் படத்தை இயக்குனவர் நிறைய கூகுள்ல ஆராய்ச்சி செய்றவர் போல. எப்படியோ இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் தீவிர தீவிரவாத கண்காணிப்பிற்கு விதையைத் தூவி ஏதோ அவரால் ஆன நாட்டுச் சேவையை ஆத்தி இருக்கார்.

உண்மையான மரணம் வாழும் பொழுதே பயந்து சக மனிதனைக் கண்டு அஞ்சி வாழ்வதுதான். இந்தியாவின் மக்கள் கலப்பு என்பது ரொம்ப சிக்கலானது. அது பல நூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாற்றை உள்ளடக்கியது.

அதனால் இன்றைய நவீன அமெரிக்கப் பார்வையில் நம் தெருவிற்குள் இந்த உலகளாவிய அரசியலை தெரிந்தோ தெரியாமயோ பரப்புரை செய்வது நன்மை விளைவிப்பதைக் காட்டிலும் அதீத தீமையையே விதைத்துச் செல்லும்.

கீழே இணைத்திருக்கிற புகைப்படம் நான் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அதிகம் பேச வேண்டியதில்லை... நீங்களே பார்த்துக்கோங்க.

...ஏன் விஜயகாந்த், அர்ஜூன் வகையறா சினிமா தீவிரவாத ஒழிப்புகளைக் காட்டிலும் முருகதாஸ் வகையறா சினிமா  டுப்பாக்கி சமூக உளவியலுக்கு நச்சு என்பதற்கு கீழ்கண்ட இந்த புகைப்பட ஒருங்கிணைப்பு உதவக் கூடும்.

ரசினி சார் இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தாராமா! தீவிரவாத விழிப்புணர்வு கொடுத்துக்கிட்டார் போல...

இன்னும் கரம்பக்குடிக்கு வரலங்கிற அளவில எங்கூர்ல தீவிர தீவிரவாத விழிப்புணர்வு பரவலன்னு நம்புறேன்...


தொடர்புடைய மற்றுமொரு பதிவு - 


ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பு - பாபர் மசூதி இடிப்பு!

http://thekkikattan.blogspot.com/2010/10/blog-post.html

Sunday, January 08, 2012

எல்லாம் தெரிஞ்ச அம்புஜம் - நடிகை சுஹாசினி!!

அண்மைய காலங்களில் பார்த்து ரசித்த சுப்பிரமணியபுரம், பசங்க, மைனா, அங்காடித் தெரு, வாகை சூடவா போன்ற படங்களுக்குப் பிறகே தமிழ் சினிமா சரியான திசையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது என்ற நம்பிக்கையை என்னைப் போன்றவர்களுக்கு அளித்திருக்கிறது.

அதற்கு முற்றும் முழுக் காரணம் எந்த ஒரு படைப்பும் மக்களின் தன் மண் மணம் மாறாமல் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அழுந்த பதிந்து கொடுக்கும் பொழுது அது பல நிலைகளில் மக்களின் மனதில் ஆழ்ந்த ஒரு தாக்கத்தை விட்டுச் செல்கிறது. தினப்படி வாழ்வில் எத்தனையோ விசயங்கள் தன்னியல்பிலேயே பல அற்புதங்களை உள்ளடக்கி எழுவதும் வீழ்வதுமாக நகர்ந்து வருகிறது. நாம் அதனை கவனிக்கத் தவறி எந்த ஒரு முயற்சியுமற்ற நிலையிலேயே மீண்டும் மீண்டும் மரத்துப் போன ஒரு மனநிலையில் செக்குமாட்டுத் தனத்துடன் அந்த நிகழ்வின் முழு வீச்சத்தினையும் காணத் தவறி வாழ்ந்தும் முடித்திருப்போம்.

உதாரணமாக நாம் தினசரி வாழ்க்கையில் கண்ணுற்று, புழங்கி வரும் காட்சிகளான மாட்டு வண்டியில் - ஆடுகளும், கோழிகளும் மனிதர்களுமாக பகிர்ந்து கொண்டு சந்தைக்கு சென்று வரும் ஒரு வண்டியை அனிச்சையாக பார்த்தவாரே கடந்து போயிருப்போம். ஆனால், அந்த பிராந்தியத்தில் வாழ நேர்ந்திருக்காத ஒரு அயலருக்கு அந்தக் காட்சி முதன் முதலாக காணக் கிடைக்கும் பொழுது மலைத்துப் போய் நின்று, பல கோணங்களில் அதே காட்சியினை அழகு, அழகான லாங்/குலோசப் புகைப்படங்களாக சுட்டுத் தள்ளியிருப்பார். அது போன்ற புகைப்படங்களும் உலக காட்சியகங்களில் காட்சிக்கு பரப்பப் பெற்று பல பரிசுகளையும் அள்ளி இருக்கும்.

மாறாக நியூ யார்க்கிலிருந்து வந்திருக்கும் ஒருவருக்கு, தன் ஊரில் நிற்கும் ஒரு வானுயர்ந்த கட்டிடத்தை போன்றே தான் வந்திருக்கிற இடத்திலும் அதே போன்ற வானுயர்ந்த கட்டிடத்தை வளைத்து வளைத்து புகைப்படமாக எடுத்து போவதிலோ, அல்லது அங்கயே தேக்கமுற்று போயி நின்று விடவோ விரும்ப மாட்டார். அவர் பார்க்க நினைக்கும், அவரை கவரும் விசயங்களே வேறாக இருக்கும்.

அப்படியே அவர் பார்க்கும் அத்தனை விடயங்களும் புதிய கதைகளையும், கோணங்களையும் வழங்கி நிற்கும். அது போலவே, நாம் இங்கிருந்து அங்கு போனால் நமக்கு நிகழ்வதாக இருக்கும். அது நமக்குள் மறைந்திருக்கும் ரசனைத் தன்மையையும், படைப்புத் திறனையும் பொறுத்து பார்க்கும் விடயங்கள் ஆர்வத்தை ஊட்டுவதாக அமையப் பெறலாம்.

இயல்பிலேயே, படைப்பாளிகள் நமக்கும் எட்டாத பல நுண்ணிய இழையில் இழைந்தோடும் அந்த அற்புதங்களை உணர்வு பூர்வமாக வெளிக் கொணர்ந்து அதனை பெரிய திரையில் ஒரு காவியச் சித்திரமாக வரைந்து காண்பிக்கும் பொழுதே அதற்கு பின்னான அதன் அழகியலை, கோரத்தை, சமூக அநீதிகளை, அரசியலை புரிந்து கொள்ளும் நிலைக்கு நம்மை நகர்த்தி வைக்கிறார்கள்.

இது போன்ற காரியங்களை அதனூடாகவே வாழ்ந்து தோய்ந்து போனவர்கள் சொல்ல முற்படும் பொழுது அதனில் ஒரு ஜீவனூட்டம் இருப்பதாகி நம்மை யாவரையும் கட்டிப் போட்டு விடும். உதாரணமாக, அங்காடித் தெருவில் வரும் ஒவ்வொரு பசங்களும் நம் பக்கத்திலேயே வாழ்ந்து, நம்முடனே பயணித்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பின்னான வலிச் சமுத்திரம் நம் பார்வையிலிருந்து பல அக/புற காரணிகளால் மரத்து போகச் செய்யப்பட்டிருக்கிறது. அதனை மிக நுட்பமாக, உணர்வு பூர்வமாக உள்வாங்கிய ஒருவரால் மீண்டும் அதே பசங்களின் வாழ்வு அடிக் கோடிட்டு காட்டப் பெறும் பொழுது அவர்களுக்கான வசந்த காலமும், பூட்டப்பட்டிருக்கிற கதவுகளும் திறக்கப் பெறுவதாக அமைகிறது.

அந்த திறப்பினை நிகழ்த்த கமல்ஹாசன்களையும், அரவிந்த சாமிகளையும், அஜித்களையும் குணாதிசியங்களாக கொண்டு செய்ய முடியுமா? தன் மண்ணில் ஒரே மாதிரியான வாழ்வுச் சூழலையும், கிடைக்கும் புறச் சூழலையும் கொண்டு ஒருவன் வயக்காட்டிலும், புழுதிச் சாலையிலும் வறுபட்டு கன்னம் வற்றி, உள்ளிழுக்கப் பெற்று, தோல் கறுத்து, முடி சுருண்டு இருந்த நிலையில் வறுமையின் கோரப் பிடியிலிருக்கும் அந்தக் கூட்டத்தினை முன் நிறுத்தும் உடல் மொழியையும், இயல்பிலேயே அப்படியாக உருவ ஒற்றுமையும் கொண்டவரே நிகழ்வின் விபரீதத்தை/அபத்தத்தை நம்முள் இன்னும் ஆழமாக இறக்க முடியும். மாறாக, வயதிற்கு சிறிதும் பொருத்தமற்ற அஜித்திற்கோ, கமலுக்கோ உடலை வருத்தி, கன்னம் டொக் விழ ஆறு மாதம் சாப்பிடாமல் போட்டு, நிறத்திற்கு கருமையேற்றி தன் நடிப்பிற்கு பொலிவூட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

அந்த நிலத்திலிருந்தே ஒரு கதாநாயகனை நல்ல ஒரு படைப்பாளி வெளிக் கொணர முடியும். இப்பொழுது, எந்த திசையில் இந்த கட்டுரை நகர்கிறது என்று உங்களால் விளங்கிக் கொள்ள முடியுமே! கதாநாயகியாகவே நடிப்பிலிருந்து விடைப் பெற்றுக் கொண்டு பணி ஓய்வு பெற்ற திருமதி. சுஹாசினி மணிரத்னம் இரண்டு முறை பொது இடங்களில் ஓர் அபத்தமான வேண்டுகோளை படங்களை இயக்கவிருக்கும் இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கையாக முன் வைத்திருக்கிறார்.

ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும், இப்பொழுது உலக திரைப்பட விழாவிலும் இதே கோரிக்கையை எழுப்பி இருக்கிறார். கோரிக்கை இதுதான்: எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!. இவரின் கோரிக்கையை நாம் வேறு யாரோ ஒரு குடும்பத் தலைவியாக இருந்து சொல்லியிருந்தால் எளிதாக அவரின் அறியாமையை கவனத்தில் நிறுத்தி கடந்து வந்து விடலாம். ஆனால், இவர் உலகச் சினிமாக்களையும், நமது படங்களை பல உலக சினிமா விழக்காளுக்கு அறிமுகப் படுத்தும் பணியிலிருப்பதாக தன்னை முன் நிறுத்தி கொள்பவர்.
இவரிடமிருந்து இப்படி ஓர் அபத்தமான, மேட்டிமைத் தன மேலோட்ட எண்ணப்பாடு கொண்ட இந்த கருத்தாக்கத்தை எப்படியாக எடுத்துக் கொள்வது. இந்த எண்ணம் எத்தனை பெரிய இழப்பை நமது படைப்பாளிகளுக்கும், போராடி வர விருக்கிற மண்ணின் மைந்தர்களான இளம் நடிக, நடிகைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்று அறியாமலேயே இன்னமும் சிவப்புத் தோலு கதாநாயர்களை சிவப்பூத் தோலு கதாநாயகிகளுக்கு அறிமுகப் படுத்தச் சொல்லுகிறார்.

எனக்கு என்ன ஆச்சர்யமென்றால் இது போன்ற ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் எது போன்ற பட ரசனையை கொண்டவராக இருப்பார்? அதுவும் நம் ஊரிலிருந்து வெளி வரும் நல்ல படங்களை அறிமுகப் படுத்த எண்ணும் பொழுது, இது போன்ற சிந்தனை சில நல்ல படங்களையும் வடிகட்டி விட பாதகமாக அமைந்து விடாதா?

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போதே இவரின் அபத்த நகைச்சுவையுணர்வு தாங்கும் படியாக இல்லை. ஒரு கட்டத்தில் சொல்லியிருந்தார் ”இப்பொழுது வரும் கதாநாயகர்கள் எண்ணை வழிந்து கொண்டும், திரையில் எங்கு நிற்கிறார்கள் என்று தடவி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும்,” சொல்லி நகைத்தார். அந்த மண்ணுக்கே உரியவர்கள் வேறு எப்படியாக இருப்பார்கள்? இவர் எந்த காலத்தில் இருக்கிறார்? இன்னமும் எம்.ஜி.ஆரைக் கொண்டு அங்காடித் தெரு கதாநாயகனை ரசிக்க, தரிசிக்க வைக்க. நகைமுரணாக இல்லை! உலகப் படங்களில் இவர் எதனை சிறப்பாக இருப்பதாக எண்ணி, பார்த்து சிலாகிக்கிறார்?

இந்த சிந்தனை எப்படியாக இருக்கிறது என்றால் ராகுல் காந்தி அவர் அப்பனைப் போலவே நல்ல அழகாக சிரிக்கிறார், சிவப்புத் தோலை போர்த்தியிருக்கிறார். ஆதலால், இந்தியாவின் சார்பில் உலக மனமகிழ் மன்றமாகிய ஐ.நா போன்ற இடங்களில் அமர வைத்தால் இந்தியாவிற்கு கெளரதை என்ற கிரமாத்து தவக்களை சிந்தனையாக இருக்கிறது. :))

சுஹாசினி பேசாமல் குழந்தை வளர்ப்பிலும், வாசிப்பிலும் தன் சொச்ச மிச்ச காலத்தை கடத்தலாம். எனக்கு கவலையாக இருக்கிறது. இவர் போன்றவர்கள் தனது இருக்கையை முக்கியமான இடங்களிலெல்லாம் எப்படியோ கிடைப்பதாக ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு இது போன்ற அபத்தமான விஷமத்தனமான சிந்தனைகளை அதுவும் எந்தத் துறைக்காக தான் பாடுபடுவதாக நினைத்துக் கொண்டு தனது உழைப்பை போடுகிறாரோ அதுவே நலிந்து எப்பொழுதும் போல அர்விந்த சாமிகளுக்குள்ளும், கமலஹாசனுக்களுக்குள்ளும் முடங்கிக் கிடக்க வழி கோலுகிறார்கள். எப்படி இவர்களாகவே இதனை புரிந்து கொண்டு தகுந்தவர்களை அங்கே அமர விட விலகி நின்று வழி விடுவார்கள்?

இந்த கணினி யுகத்தில் இவர்கள் போன்றவர்கள் ஒரு முக்கியமான விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். காலம் மிக வேகமாக மாறி வருகிறது. ஒரு தனி நபரின் சிந்தனை கண்டங்களுக்கிடையே கை சொடுக்கும் நேரத்திற்கும் குறைவான நொடிகளிலிலேயே பகிர்ந்து கொள்ளப்பட்டு அந்த சிந்தனை யுனிவெர்சல் நேர்த்தியை அடைகிறது. உங்களின் பழமைவாத, குலக் கல்வி சிந்தனை is an utter flop in the world stage where learnt people are laughing at your blabbering!!

Wednesday, December 21, 2011

எங்கேயும் எப்போதும் - பேருந்து பயணங்களில்...


இப்படி ஒரு படத்தை தமிழில் நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்றைய பரக்கா வெட்டி அவசர உலகமாக மாறி வரும் நமது தமிழகச் சாலை கலாச்சாரத்தில் மிகவும் அவசியம் தேவைப்படும் படமென்றால் அது மிகையாகிவிடாது.

எனது ஊரில் சக்தி விநாயகர் ட்ரான்ஸ்போர்ட் என்ற பெயரில் ஒரு பேருந்து ஓடுவதுண்டு. கரம்பக்குடிக்கும் புதுக்கோட்டைக்குமான சராசரி பாதையான ஆலங்குடி செல்லாமல் வடவாளம் வழியாக செல்லும் வழியது. எல்லா பேருந்துகளும் குறைந்தது ஏத்தி, இறக்கி என்று ஒண்ணரை மணி நேரம் எடுத்துக் கொண்டு செல்லும். ஆனால், இந்த பேருந்து மட்டும் எனக்கு தெரிந்த ஒரு அண்ணனால் ஓட்டுநராக இயக்கப்பட்டு வந்தது. அவன் ஓர் இளைஞன். அவனுக்கு எல்லாரும் கொண்டு போயி பயணிகளை சேர்க்கும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக 45 நிமிடத்தில் கொண்டு போயி சேர்ப்பதிலொரு அலாதி இன்பம், பெருமை.

அந்த பேருந்து காலை வேளையில் மிகச் சரியாக பள்ளி, கல்லூரி, அலுவலக நேரத்திற்கு உகந்ததாக ஒரு பயணிப்பு செய்யும். அந்த நேரத்திற்கு இவர் ஓட்டுவது எல்லாராலும் ஊக்குவிப்பட்டு, பாட்டு, கும்மாளம் என்று இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அண்ணனுக்கு அப்பொழுதே திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்ததாக எனக்கு ஞாபகம். ஒரு நாள் அந்த பேருந்தை காட்டு வேகத்தில் தனது பட்டன்கள் மாட்டப் படாத சட்டை காற்றில் பறக்க ஓட்டி புளியமரத்தில் மோதி ஓட்டுநர் அண்ணன் அந்த இடத்திலேயே மரணித்து விட்டார். அவரின் அந்த இளம் குடும்பத்தை பாதி வழியே நிறுத்தி விட்டு நிரந்தரமாக அவர் விடைபெற்றுக் கொண்டார்.

இது போலவே தினமும் நாம் கேள்வியுறும், கண்ணுரும் சாலை விபத்துக்களை அந்த பேருந்துக்களில் நம்மையும் ஒருவராக அமர வைத்து இந்த இளம் இயக்குனர் சரவணன் நம்மை உணர வைக்க முயற்சித்து அதில் கன்னாபின்னாவென்று வெற்றியும் அடைந்திருக்கிறார். என்னுடைய சூழலில் கண்ட குப்பை படங்களையும் பார்த்து உணர்ச்சி பூர்வமாக விமர்சனம் முன் வைப்பது என்பது கட்டுப்படியாகாது என்பதால், உற்ற நண்பர்கள், எனையறிந்தவர்களின் தொடர்ந்த நொச்சுக்கு பிறகே பார்த்து வருகிறேன்.

இன்னொரு பாலிசி என்னிடம் ஆன்லைனில் படம் பார்த்தால் விமர்சனம் எழுதக் கூடாது என்பது. ஆனால், அதனை உடைக்க வேண்டியதாகி விட்டது; இந்தப் படத்தின் தாக்கத்தால். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் பொழுதும் தொடர்ச்சியாக பேருந்து பயணங்கள் செய்வது என்பது எனது உயிர்ப்பை மீட்டெடுக்கும் யுக்திகளின் ஒரு பகுதி. இந்தியாவின் நீள அகலங்களை அளந்ததும் பெரும்பாலும் பேருந்து, மட்டும் புகை வண்டிப் பயணங்களின் மூலமாகவே. ஆனால், இன்றைய நிலையில் ஊரில் சாலைகள் மேம்படுத்தப் பட்டிருப்பதனை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் பெருக்கமும் கட்டுக்கடங்காமல் எகிறியிருக்கிறது. விதவிதமான பெயர்களில், இருக்கை வசதிகளுடன் சம்பந்தமே இல்லாத வேகத்தில் இயக்கப்படுகிறது.

ஒரு முறை இங்கிருந்து ஒரு வெள்ளைக்காரரை ஊருக்கு அழைத்து வந்திருந்தேன். அவர் கூறிக்கொண்டு வந்தார் ஊரில் கார் ஒன்று வாடகைக்கு எடுத்து தானே இயக்கப் போவதாக. இத்தனைக்கும் அவருக்கும் இங்கு 30 வருடங்கள் வாகனம் இயக்கிய அனுபவம். ஆனால், விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு வந்து சேருவதற்குள்ளாவுமே தனது திட்டத்தை மாற்றிக் கொண்டார். அது மட்டுமில்லாது, எதிர் இருக்கையை இறுக பற்றிக் கொண்டவர்தான் வழியெங்கும் ஹோலி ஷிட் என்று கூறிக் கொண்டே வந்தார். அந்த அழகில் வண்டிகள் முந்திச் செல்ல எடுக்கும் முயற்சிகளும், மயிரிழையில் இன்னொரு வண்டியின் முன் வந்து மற்றுமொரு வாகனம் இறங்கும் நிலையும் குடல் கலங்க வைத்திருந்தது.

சரி இந்தப்படத்தில் என்ன அப்படியொரு விசேசம். இது அத்தனையும் தத்ரூபமாக வழங்கப்பட்டிருக்கிறது. இல்லாது படத்தின் நாயகர்களை நம்மில் ஒருவராக ஆக்கி அவர்களை அந்த பேருந்துகளில் அமர்த்தி அவர்களுடன் நம்மையும் பயணிக்க விட்டு படத்தின் இறுதியில் மிகப் பெரிய விபத்தொன்றை சந்திக்க விட்டு முக்கிய கதாபாத்திரம் ஒன்றையும் மரணிக்க விட்டு பதறடித்து விடுகிறார் இயக்குனர்.

இயல்பாக தமிழ் படங்களில் மனதை தொடுகிறேன் பேர்வழியென்று கொடுக்கும் வாழ்வு கசப்புகளை அதீதமாக கலந்து நகைச்சுவையாக்கி விடுவார்கள், ஆனால் இந்தப் படத்தில் மிகையே கிடையாது.

பேருந்தில் ஏறுவதற்கு முன்னால் எல்லாரையும் போல பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், தம் என்று கலவையான மனிதர்கள் கலவையான வேலைகளை நாம் அனைவரும் செய்வதனைப் போன்றே செய்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தங்களது வாழ்க்கையே தலைகீழாக மாறப் போவது தெரியாமல். பல கலர் கனவுகளுடன் பயணம் துவங்குகிறது.

அப்படியே ப்ளாஷ்பேக்காக காதல் கதையும் சுத்தப்படுகிறது. இரண்டு செட் காதலர்களைக் கொண்டு ரொம்ப வித்தியாசமாக நகர்த்தியிருக்கிறார்கள். அஞ்சலியினை ஒட்டி வரும் கதாபாத்திரக் குடும்பச் சூழலில் வரும் அப்பா ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், அது போலவே அவளுக்கான கதாநயாகன் ஒரு இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான் இரண்டுமே பெரிதாக உறுத்தலே இல்லாமல் அந்த காதலுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. அவளின் வெளிப்பாடு ஒரு பெண்ணுள் இருக்கும் ஆண்மையின் ஆளுமையை வெளி விடுவது. ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது.

காதலில் விழுவதற்கு முன்னாக ரொம்ப எதார்த்தமாக நடை முறைப் படுத்த வேண்டிய விசயங்களை ஒரு பிரச்சார முறையில், சாலை விபத்து தடுக்கப்படுவதின் அதே வீரியத்துடன் இந்த காதல் முன் எச்சரிக்கையும் அழகாக கையாளப்பட்டிருக்கிறது. காதலனை அதட்டி உருட்டி இரத்தப் பரிசோதனை எடுத்துக் கொள்ளச் சொல்வது அவனது ஜாதகத்தினை விட அது கொடுக்கும் வரலாறு முக்கியமென்று கூற வருகிறது.

பிறகு உறுப்பு தானத்திற்கு கையெழுத்துப் போட வைத்து அவன் பயப்படும் பொழுது அடிக்கும் வசனங்கள் டாப் கியரில் நகர்கிறது. வேறு எந்த படத்திலும் இவ்வளவு அழுத்தமாக உறுப்பு தானம் பேசப் படவில்லை. அதே கதாநாயகன் விபத்தில் மரணிக்க நேரும் பொழுது அஞ்சலி மருத்துவரிடம் உறுப்புகளை எடுத்துக்கச் சொல்லி கூறும் காரணங்கள் நிச்சயமாக இன்னும் நிறைய மக்களை உறுப்பு தானம் செய்ய வைக்க முன்வருமாறு உந்தச் செய்யலாம். அதற்கெனவே அந்த கதாநாயகனை சாகடிக்க வேண்டியிருந்திருக்கிறது இயக்குனருக்கு என்பது புரிந்து கொள்ளக் கூடியது.

இரண்டாவது செட் காதலர்கள் அதே க்யூட்நெஸ். உயிர்ப்பு எல்லாம் இருக்கிறது. அநன்யா அசத்தியிருக்கார். பெரியளவில் அவர்கள் எதுவும் படத்தில் செய்தி சொல்லிப் போவதாக இல்லை. ஆனால், கலகலப்பாக்கிறார்கள். பாடல்கள அனைத்து அருமையாக அமைந்து போயிருக்கிறது. படம் பிடித்த விதவும் அழகே!

பேருந்தினுள் உள்ள பயணிகளில் யாரேனும் ஒருவருடன் நம்மால் ஐடெண்டிஃபை செய்துக் கொள்ள முடியும். ரொம்ப எதார்த்தமாக இருக்கிறார்கள்.  ஒரு குழந்தையிடம் உடனே என்னய கட்டிக்கிறாயா என்று அந்த புதுப் பொண்டாட்டிக்காரர் கேட்பது, அது அம்மாவிடம் சென்று உரையாடும் டயலாக், கொஞ்சம் அதிகம் என்பதனைத் தவிர.

ஒருவர் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வருகிறார். ஐந்து வருட பிரிவு ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது மனைவியைப் பிரிந்த கணவர். அவரின் ஐந்து வயது குழந்தையின் குரலை ரிங்க் டோனாக வைத்திருப்பதும், பேருந்தில் ஒலிக்கும் ஒவ்வொரு அலைபேசியின் ரிங் டோனைக் கேக்கும் பொழுது சிரிப்பை வரவழைக்கிறது. அந்த மத்திய கிழக்கு நாட்டிலிருந்து திரும்பும் அப்பா கூட நமக்கு ஒரு பெரும் செய்தியை கொண்டு வருகிறார். அவர் ஒவ்வொரு முறை குழந்தையுடன் பேசும் பொழுது இதோ கிளம்பிட்டேன் என்று கூறுவார், அதுவே பின்னாளில் குழந்தை உண்மையாக அப்பா ஊர் திரும்பும் போது கூட நம்பிக்கையற்ற முறையில் ட்ரீட் செய்ய தலைப்படுவதை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

அந்த பேருந்து விபத்துக்குள்ளாகும் காரணமும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அதனை படம் பிடித்த விதமும் பிரமாண்டமாக இருக்கிறது. தமிழுக்கு இது கண்டிப்பாக புதிது! ஓட்டுநர்கள் தங்களுக்கு பின்னால் எத்தனையோ குடும்பங்களின் மனிதர்கள் பல விதமான கனவுகளுடன் பயணித்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை உணர வைப்பதற்கான அழகானதொரு படைப்பு. குடித்து விட்டு, கவனமற்ற முறையில், முறையான சாலை விதிகளை கடைபிடிக்காத தான் தோன்றித் தனமான, முரட்டு வளர்ப்பு பின்னணியில் வரும் ஓட்டுநர்கள் இந்தப் படத்தை பார்த்தேனும் ஒரு முடிவிற்கு வந்தால் அதுவே இந்த படத்தை எடுக்கத் துணிந்த சரவணனுக்கு கிடைத்த வெற்றி.

எனக்கு படத்தை பார்த்து முடித்ததும், வாழ்க்கைதான் எத்தனை நெகிழ்வுத் தன்மையும், நிலையற்றதுமாய் விரிந்து கிடக்கிறது என்று நினைவிற்கு வந்து அழுத்தி என்னை மிகவும் டிஸ்டர்ப் செய்து விட்டது. எப்பொழுதும் போலவே ஒரு பாட்டம் கண்ணீர் வடித்தேன். இந்த படத்திற்கென உழைத்த அனைவருக்கும் ஒரு சபாஷ்...

மிக மிக நல்ல படம்!


பி.கு:  பண்புடன்.காம் தளத்திற்காக எழுதியது.

Sunday, October 30, 2011

மேட்டிமைத்தனம் + போலி அறிவியல் = ஏழரை அறிவு!

அது என்னப்பா ஏழாம் அறிவு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி படமா வருதேன்னும், ஹாரீஸ் ஜெயராஜ்வோட இசையும் கொஞ்சம் கவனிக்க வைச்சிருந்ததாலும் ஏதோ ஓர் உந்துதல் இந்த படத்தை பார்க்கணும்னு. பார்த்தேன். இரண்டும் கெட்டான் அப்படிங்கிறதுக்கு மிகச் சரியா பொருளைக் கொடுத்த படமிது!

பிறகு எதுக்கு இதைப் பத்தி எழுதி நேரத்தை வீணடிக்கிறன்னு கேட்டீங்கன்னா, கண்டிப்பா பேசப்படணும். ஏன்? ஓரளவிற்கு உயிரியலையே மேஜரா எடுத்து படிச்ச என்னயே பாதி வழியே படம் பார்த்திட்டு இருக்கும் போதே ஒரு தற்குறியா உணர வைச்ச படமாச்சே அதுனாலே மத்தவிங்களுக்கும் மணி அடிச்சு அப்படி ஃபீல் செஞ்சிராதீங்க இதுவும் ஒரு சாதாரண தமிளு படமின்னு சொல்லவாவது உதவட்டுமேன்னு இதை எழுத உட்கார்ந்திருக்கேன்.

இந்த அளவிற்கு பணத்தை கொட்டி எடுக்குறீங்கன்னா, ஒண்ணு முற்று முழுதுமாக உண்மையான வரலாற்று உண்மைகளை (அப்படின்னு ஒண்ணு இருந்தா) உள்ளடக்கி அதை மக்களுக்கு கொண்டு போயி சேர்க்கும் முயற்சியில் படத்தை கொடுங்க, அதே மாதிரி அறிவியல் பேசுறீங்களா அடிப்படை விசயங்களை புரிஞ்சிட்டு அதுக்கு மேலே அதில நிகழ்த்தக் கூடிய விசயங்களா கற்பனையை கலந்து கொடுங்க. இரண்டுமே இல்லாம மொட்டையன் குட்டையில விழுந்த மாதிரி ஏற்கெனவே அடிப்படை அறிவியல் அறிவு இல்லாத ஒரு சமூகத்திற்கு எது போன்ற எண்ண விதைகளை விதைப்பீர்கள்?

இந்த படத்தையெல்லாம் இத்தனை தீவிரமாக எடுத்துக் கொண்டு விமர்சனம் எழுதுவது என்பது கண்ணில்லாத குருடன் யானையைத் தடவின மாதிரிதான் இருந்தாலும், பேசப்படுவதின் மூலமாக அடுத்து இதே வழியில் இறங்கி பணம், புகழ் சம்பாரிக்க எண்ணுபவர்களுக்கு ஒரு இரண்டாவது யோசைனையாக இருக்கட்டும் என்றளவிலாவது பேசப்படுவது அவசியமாகி விடுகிறது.

இந்தப் படத்தில 1600 வருடங்களுக்கும் முன்பாக வாழ்ந்த போதி தர்மர் என்ற தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட ஒரு துறவியைப் பற்றி நமக்கெல்லாம் தெரியவில்லை என்ற அவமான உணர்வுடன், குற்ற உணர்வு கொள்ளச் செய்யும் பீடிகையுடன் தொடங்கும் படம் மலை, காடுகள், ஆறுகள் வழியாக பயணித்து பின்பு மரபணு பாடம் எடுக்க எத்தனிக்கிறது.

எனக்கு அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. அப்படியே ரெகுலர் சினிமா மசாலாத்தனமாக ஓட்டி முடித்திருந்தால் என்னிடமிருந்து இப்படி ஒரு கட்டுரை வந்திருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. மரபணு அறிவியல் சார்ந்த அடிப்படை அறிவு என்னவென்றால் - பரம்பரை வியாதிகள், முடி, கண்ணின் நிறம், உடற் சார்ந்த ஒற்றுமைகள் மரபணு வழி கடத்தப் பெறலாம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை பரம்பரையாக.

அதே நேரத்தில் எனது தாத்தன் தொடர்ந்து பல மணி நேரங்கள் தண்ணீர் அடிக்கும் பம்ப் செட்டில் 1000 குடங்களை அடித்து நிறப்பும் திறன் கொண்டவர், எனது அப்பா பெரிய கால்பந்து வீரர், மஹாத்தமா, அறிவியல் விஞ்ஞானி, பேராசிரியர் போன்ற புற பண்புகள் அதாவது முயன்று பெற்ற திறமைகள் கடத்தப் பெறுவது கிடையாது என்பது கண் கூறு, அனுபவ வழி உண்மை. இதுக்கு பெரிதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூட தேவை இல்லை. வீட்டிற்குள் நிகழும் விசயங்களை கொண்டே புரிந்து கொள்ள முடியும்.

இந்த படத்தில் போதி தர்மா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக முயன்று பெற்ற பண்பான கம்பு சுத்துறது, தொடர்ந்து பல மணி நேரங்கள் சுவற்றை உற்று நோக்குவது, வியாதிகளுக்கு மருத்துவ மூலிகைகளைக் கொண்டு குணப்படுத்துவது போன்ற விசயங்களை இருபது தலைமுறைகளை தாண்டி வந்த படத்தின் கதாநாயகனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதாக கூறி ஜல்லி அடிப்பதனை தாங்க முடியவில்லை. இது போன்ற பண்புகள் கடத்தப்படக் கூடியதுதான் என்று புதிதாக எதுவும் ஆராய்சிகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்களோ என்று ஒரு நிமிடம் என்னயே அதிர்ச்சியடைய வைத்தது என்றால் மிகையில்லை.

அதனை சப்பை கட்டும் விதமாக கதாநாயகி, இது போன்ற பரம்பரை குணங்கள் தலைமுறையாக கடத்தப்பெறுகிறது என்று வேறு அழுத்தம் திருத்தமாக கூறுவார். அடக் கொடுமையே! ஏற்கெனவே ஊர்க் காடுகளில் டேய் என் முப்பாட்டான், தாத்தா யார் தெரியுமாடா என்று மூடத்தனமாக ஒட்டு பீடிக்கு அருவா தூக்கும் இன்றைய இளைஞர்கள் வாழும் ஒரு சமூகத்திற்கு நவீன அறிவியல் பேசும் ஒரு படத்தில் அதே போன்ற மொண்ணை பேசும் வச்சனம் தேவையா? அது உண்மையா?

இந்த லட்சனத்தில் சமூகத்திற்கு ஏன் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏதோ பெரிய பெருமை சேர்க்கும் விசயத்தை உள்ளடக்கி வந்திருக்கிறது என்று கூவிக் கொண்டு டிக்கெட் வித்து தீத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை அறிவையும் உள்ளடக்கிய பல ஞானிகளை பெற்றெடுத்த பூமியில் தான் இன்னமும் ஜாதி என்ற பெயரில் நடந்தேறும் அத்தனை வெட்டுக் குத்துகளும், அநீதிகளும் அதே ஞானிகளின் காலத்திலிருந்து இன்றைய அப்துல் கலாம்கள் வாழும் நாள் வரையிலும் நீட்டித்து நிற்கிறது. அதே அடிப்படை வாத பிரிவினைகளைக் கொண்டே இதோ நேற்று ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட ஈழ மக்களுக்கான அநீதியும் அடக்கம். இவைகளே உண்மையாக பேசப்பட வேண்டிய பாடங்கள், படங்கள்?

இது போன்ற பிரச்சினைகளை முகத்திற்கு முகமாக பேசக் கூடிய படங்கள் ஒன்றையும் காணோம். உயிரியல் தொழி நுட்பத்தை பயன்படுத்தி வரப் போகும் நவீன போர் உத்திகளை பற்றி பேசியமையும், எப்படியாக அது போன்ற நோய்கள் மிக விரைவில் பரவி மக்களை சென்றடையும் என்று இந்த படம் காட்டிய வரைக்கும் சரி, அது போலவே தாய் மொழியில் பயின்று, பேசி அறிவியல் ஞானத்தை எட்டுவது என்பதுமாக இரண்டு நேர்மறையான எண்ணங்களை கொண்டு சேர்ப்பது இந்த படத்தில் கவணிக்க வேண்டி விசயங்கள் என்றால் - நேர் எதிராக பல விசயங்கள் மூட/மேட்டிமை மயக்கத்தை தூவி, நிரூவி நிற்கிறது.

1600 வருடங்களுக்கு மேலாக நம் கூடவே நடந்து வரும் ஒரு மாபெரும் விசயம் நமது சமூகத்திற்குள்ளாகவே மக்களை பிளவு படுத்தி, அடிமை சாசனத்தில் வைத்திருக்கும் மக்களுக்கான விடியலான தீர்வு இட ஒதுக்கீட்டு விசயம். அதனை இந்தப் படம் போகும் போக்கில் இந்தியா இழிவான நிலைக்கு போவதற்கான அடிப்படை பிரச்சினைகளான ஊழல், சிபாரிசு மற்றும் இட ஒதுக்கீடு என்ற கேடுகெட்டவைகளில் ஒன்றுடன் இணைத்துச் செல்கிறது. என்னவோ, இந்த இட ஒதுக்கீட்டிற்கு முன்பாக பாலாறும், தேனாறும் இந்த சமூதாயத்தில் ஓடிக் கொண்டிருந்த மாதிரியும் அந்த மக்கள் அனைவரும் அப்பொழுது வேற்று கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்ற ரீதியில் விசயத்தை மிகவும் எளிமை படுத்திச் செல்கிறது.

அதற்கு பின்னான அவசியமும், ஒரு நாடாக, ஒரு இனமாக மேலேழும்ப வேண்டுமாயின் சமதளம் எப்படியாக பரப்பபப் பட வேண்டுமென்ற அடிப்படை தேடல் கூட இல்லாது அப்படி ஒரு மேட்டிமைத் தன எள்ளலுடன் இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை புறம் தள்ளி பேசி நகர்த்திச் செல்கிறார்கள். இது போன்ற மேம்போக்கான எண்ண வெளிப்பாடுகளை கொண்ட விசயம் பேச எதற்கு அறிவியல் துணை தேவைப்படுகிறது? பரம்பரை குணம் இரத்தத்தில் பாய்ந்தோடுகிறது என்பதாகவும் அதனை மீள் பிரதியெடுக்க படத்தில் கதாநாயகனுக்கு ஏற்றிய பச்சை நிற சர்பத்தை தண்டுவடத்தில் ஏற்றி ராஜ ராஜ சோழனையும், போதி தர்மாக்களையும் இன்றைய பரமக்குடி பிரஜைகளாக உருவாக்கவா? நிகழ்கால பிரச்சினைகளை பேசி அதன் பொருட்டான விழிப்புணர்வை பரப்புவதே உண்மையாக ஒரு சமூகமாக பிழைத்து தம்மை தக்க வைத்துக் கொள்வதற்கான வழி முறையாக இருக்க முடியும்.

மாறாக அறிவியலின் துணைகொண்டு நம்பிக்கையின் அடிப்படையில் பேசப்படும் விசயங்களுக்கு உயிர் ஊட்டி மென்மேலும் மூட நம்பிக்கைகள் பல்கிப் பெருக வழியமைப்பது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாகத்தான் அமையும். Thanks for no thanks!


பி.கு: இங்கே ஒரு விஞ்ஞானி இப்படியாக பாஞ்சிருக்கார் (அழுத்தி படிங்க )... அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சினிமாவில் நகைப்புக்குள்ளாக படுவது நினைத்து கடுப்பை கிளப்புகிறது.

Related Posts with Thumbnails