Showing posts with label தொடரழைப்பு. Show all posts
Showing posts with label தொடரழைப்பு. Show all posts

Tuesday, April 16, 2013

கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - II

இது டந்த நேர்காணல் பதிவின் தொடர்ச்சி. நிறைவுப்பகுதி!


கவிதா:- நீங்கள் நிறைய படிக்கிறீர்கள் என்று தெரிகிறது..எனது தூசி தட்டப்பட்ட நூலகம்.... இதை தவிர உங்களின் பொழுதுபோக்கு...

தெகா: நிறைய மேய்ஞ்சேன்னு ஒத்துக்க மாட்டேன். ஆனா, அதன் பாதையில் செல்வதற்கு இன்னமும் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்னு வேணா சொல்லலாம், அந்தப் பாதையில் இருப்பதுனாலோ என்னவோ குறைவாகவே இங்க எழுத முடியுது :). மற்றபடி ஏனைய பொழுது போக்குன்னா, பிடிச்சவங்களோட நீண்ட நேரம் கடலை வறுத்து புகையை கக்க வைப்பது; அப்பாம்மா, துணைவி, பிடித்த நண்ப/பிகள் கூடன்னு. நான் ஆர்வமூட்டக் கூடியது என்று நினைக்கிற விதத்தில் அமைந்த சில பதிவுகளையும், என்னோட சொந்த கிறுக்கல்களையும் அவங்கள வம்படியா பிடிச்சு உட்கார வைச்சி, அவங்க நான் வாசிக்கிறதை கேக்கும் பொழுது கஷ்டப்படுவதை பார்த்து ரசிப்பது.

மேலும் பிடியளவே உள்ள நண்பர்கள் கூட அப்பப்ப அரட்டைக் கச்சேரி நடத்துவது. பிறகு என் குழந்தைகள், அதிலும் குறிப்பா இப்பொழுது என்னய ஹை டிமாண்டில் வைத்திருக்கும் 1 வயது பெண் புதுசு, புதுசா நானே வடிவமைத்து வாய் தாலத்தில் மெட்டிசைச்சு போடும் குத்தாட்டாம் அவளிடத்தே ஹிட்டாகி சூடு பிடித்திருப்பதால் # 6ல் கூறியபடியே ரீ-சார்ஜ் போட்டுக் கொள்வதில் இதுவும் கொஞ்சம் கூடவே எனக்கு உதவுகிறது. ட்டி.வியில் பொழுது போக்குன்னா டாகுமெண்டரிகள் பார்ப்பது.

கவிதா:- உங்கள் சொந்த ஊர், அதன் சிறப்பு, வெறுப்பு ஏதாவது.

தெகா: என்னோட சொந்த ஊர் கரம்பக்குடிங்க. புதுக்கோட்டையிலருந்து பேருந்தில் புழுதி பறக்க ஒரு 40 கிலோமீட்டர் பயணம் செய்தால் பட்டுக்கோட்டைக்கு போகிற வழியில் உள்ள ஊர். அந்த ஊருக்கே இன்னமும் தன்னை எந்தப் பக்கம் சேர்த்துகிறதுன்னு தெரியாம முழிக்கிற ஒரு கிராமமுமல்லாத சிறு டவுனுமல்லாத ஊர் 12,500 மக்களோட. என் சொந்த ஊரைப் பற்றி சொல்லிக்கணுமின்னா என்னோட டீனேஜியத்துப் பருவம்தான் நான் அங்கே வயசுக்கு வந்தது ;), நண்பர்களோட பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு மீன் பிடிச்சு விளையாண்டது.

நாவற்பழம் பறிக்க ஐந்து கிலோமீட்டர் மிதிவண்டி அழுத்தி மரத்திலயே குரங்குக் கணக்கா நாள் முழுக்க தொங்கிறது இப்படி எத்தனையோ மனசில பசுமையா இருக்கிற ஞாபகங்கள். இப்போ எனக்கு அங்கே ஒண்ணுமே இல்ல. என்னோட அப்பாம்மாவை தவிர்த்து சொல்லிக்கிற மாதிரின்னு இருந்தாலும், இன்னமும் ஊர் மேல ஒரு இனம் புரியா காதலுண்டு.

வெறுப்புன்னா - மக்கள் ஆசையை மட்டுமே நிறைய சுமந்துட்டு ஆனா உழைக்காம சாப்பிட நிறைய பேர் ரெடியா இருக்கிறதுனாலே நிறைய பொறாமையை மட்டுமே ஊர் சுவாசிக்க காற்றாக உற்பத்திதிட்டு இருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. மேலும் இயற்கையின் பொருட்டு கடந்த கால பசுமை மறைந்து எங்கும் ஒரே கள்ளிக்காடா மாறிட்டு இருக்கிறது. அதனைப் பற்றி கவலைப் படாமல் மென் மேலும் எல்லா நிலங்களிலும் யூகாலிப்டஸ் மரக் கன்றுகள் நடுவதும், வீடுகள் பெருகி நியுயார்க் மான்ஹட்டன் ரேஞ்சிக்கு நிலத்தின் விலை எகிறிவருவதும் எரிச்சல்.


கவிதா : பதிவர் சந்தோஷ் எப்போது உங்கள் பெயரை எழுதினாலும் "தோசை தெகா" என்று எழுதிகிறார். அதனால் நீங்கள் சமையல் செய்வீர்கள் என்று அறிவேன். சமையல் என்பது இந்தியாவை பொறுத்தவரை பெண் என்று தான் இன்றளவும் இருக்கிறது. பற்றாக்குறைக்கு நம் மீடியாக்கள் சமையல் என்பது பெண்ணுக்கு மட்டுமே சொந்தம் போல் குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்து மனதில் பதியவைத்து விடுகின்றன. இதைப்பற்றி உங்களின் கருத்து.

தெகா: "தோசை தெகா" அட இது வரைக்கும் எனக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறதை சொல்லவே இல்லை. சந்தோஷ், கொஞ்சம் எட்டாம தூரத்திலதான் இருந்து போனாரு இல்லன்னா பாவம் அந்தாளை வைச்சே என்னோட எக்ஸ்பெரிமெண்ட் சாப்பாட்டு வகைகளை அவர் மேல வைச்சு ஒரு ஆராய்ச்சியே நடத்தி முடிச்சிருக்கலாம். அவருக்கு ஒரு சட்னி பண்ணினேன் பாருங்க, அப்படி ஒரு சட்டினியை எங்குமே சாப்பிட்டுருக்க வாய்ப்பே இல்லை. சமையலறையில் இருந்த அந்தனை முந்திரிப் பருப்பிலுருந்து, நிலக் கடலை, பொட்டுக்கடலை வரைக்கும் போட்டு ஒரு பஞ்ச் பண்ணி சட்டினியென படைத்தேன், தோசை கடைசியில எனக்கே கிடைக்கலங்க :)).

இந்த சமையல் விசயமாங்க, அது எல்லாம் தானாகவே செய்ய வந்துடும் ஏன்னா பசின்னு ஒண்ணு இருக்கில்ல, அப்படி அதுபாட்டுக்கு வரும் பொழுது யாரும் செஞ்சுப்போடன்னு ஆள் பக்கத்தில இல்லைன்னா தானாகவே தடபிபார்க்கிற மனசு வந்துடும். ஆனா, நம்மூர் சூழ்நிலையில் அதுக்கான அவசியங்களை பெரும்பாலானவர்கள் உருவாக்கிக் கொள்வதில்லை. நம் சமூகத்தில் அதற்கான அவசியமும் ஒரு நாள் வருமென்பதனை உணர்த்துவதுமில்லை. ஆனால், சமையல் என்பது என்னயப் பொறுத்த மட்டில் ஒரு அல்டிமேட் அன்பைக் காட்டும் ஒரு போர் கொல்லை. அங்கே வைத்து எல்லாவற்றையும் சரிசெய்து விடலாம் என்பதேயது! என்னோட மேற்கு மலைக்காடுகளின் தங்கலின் போது, எனக்கு இந்த சமையல் விசயம் ஒரு சர்வைவல் விசயமாத்தான் என்னிடம் ஒட்டிக்கிச்சு . அங்கிருந்து கற்றுக் கொண்டது ரொம்பவே கை கொடுத்தது இங்கு வந்து என் சமையல் கைவரிசையை பல இனமக்களிடம் காமிச்சு ஆஹா, ஒஹோ பட்டம் வாங்க. இருந்தாலும், நம்ம ஆட்கள் இந்த அனுபவத்தையும் ரொம்பவே மிஸ் பண்றாங்க, கமல் மட்டும் படங்களில் அப்பப்போ செஞ்சு காமிப்பார், வாஞ்சையோட...

ஆனா, இப்போ என்னயும் உட்கார வைச்சி சமைச்சுப் போட ஒரு ஆள் வந்தாச்சு. ரொம்ப சுகமாத்தான் இருக்கு. அப்படியே பழகிட்டா நானும் அதே குட்டைதான் :). இன்னொன்ன நல்ல கவனிச்சுப் பார்த்திங்கன்னா, சமையற் கலை வகுப்பிற்கும் சரி, எந்த மாதிரி உணவு விடுதிகளா இருந்தாலும் சரி பெருமளவில் சமையலில் ஈடுபட்டுருப்பது ஆண்கள்தானே? அது என்னாமாதிரியான முரணுங்க, அது.


கவிதா: பெண்' மாதவிடாய் இருக்கும் போது வீட்டில் தனியாக உட்கார வைப்பது, கோயிலுக்கு அனுமதிக்கப்படாததற்கு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கின்றன். அதற்கு நீங்கள் உடன்படுகீறீர்களா?

தெகா: அது என்னங்க "பெரிய மருத்துவ சம்பந்தமான" காரணங்கள் எனக்குத் தெரியலையே. எனக்கு தெரியறது இதுதாங்க அந்த நாட்களில் - உடம்பும் மனசும் சோர்வா இருக்கிறது அம்புட்டுத்தேன். மற்றபடி அந்தப் பதிவில பின்னூட்டங்களில் அடிச்சு விளையாண்டு இருப்பாங்க பாருங்க, மத்த விசயங்களை.

கவிதா: "ஒரு பெண்ணை உடம்பபை தாண்டி அவளின் மனதை தொட்டு அன்பை செலுத்த வேண்டும் - " - உங்களின் ஊரணிப்பார்வையில்...

தெகா: உண்மைதானே அது. அந்த மனசில மட்டுமே தானே நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் பின்னால் வரும் காலங்களிலும், சூழ்நிலை எப்படியாக மாறினாலும். இல்ல, உடம்பை வளர்த்து காமித்தோ, நல்ல ட்ரெஸ் பண்ணி, தலைக் கேசத்தை கோவிக் காமித்தோ மனதை வெல்ல முடியுமா? அப்படியே வென்றாலும் அது அப்படியே நிற்குமா இவையெல்லாமே உதிரும் காலம்தோரும்?

கவிதா:- குழந்தைகள் பெற்ற தம்பதிகளின் விவாகரத்து அவர்களின் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது (எந்த வயது குழந்தையாக இருந்தாலும.)

தெகா: மறுப்பதற்கில்லை. கண்டிப்பாக பாதிப்புறும், ஆனால் அவ்வாறு பாதிப்புறும் விகிதாச்சாரத்தை கூட்டுவதும், குறைப்பதும் அடல்டாகிய நமது கைகளிலேயே உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரிய நேரிட்டால் அப் பிரச்சினையை இரு அடல்டுகளுக்கிடையேனா பிரச்சினை என்ற விகிதத்தில் மட்டுமே அணுகி குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அத்துனை விசயங்களையும் கவனித்துகொள்வது, இன்றியமையாததது. அவ்வாறு அக் குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவரை பிரிந்து வளரும் சந்தர்ப்பத்தில் மற்றொரு பெற்றோரின் பொறுப்பில் வளரும் பொழுது, தனக்கு எதிரியான முன்னால் கணவனையோ/மனைவியைப் பற்றியோ இல்லாத அவதூருகளை பிஞ்சுகளின் மனதில் விதைப்பதை, தாம் அந்த குழந்தைகளின் வாழ்வையும், மனதையும் பாதிக்கிறோமென்றும், பின்னாளில் அதுவே பேக் ஃபயர் ஆகக் கூடிய வாய்ப்பாக இருக்குமென்பதனையும் அறிந்து நடந்து கொள்வது ரொம்ப நலம் பயக்கும், அக் குழந்தைகளுக்கு பிற்காலத்தில்.

கவிதா: இந்திய குடும்ப வாழ்க்கை முறைக்கும் அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் இருக்கும் அதிகபட்ச நன்மை தீமைகள்? அமெரிக்கவாழ் இந்தியர்கள் படும் கஷ்டங்கள்.

தெகா: இங்க குழந்தைகளுக்கு தீர்வு எடுக்கும் முடிவை ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் அவங்க கையிலயே கொடுத்திடுறாங்க, அது ரொம்பவே நல்ல விளைவுகளை ஏற்படுத்துறதா தெரியுதுங்க. அது ஆண்/பெண் என்றாலும் தான் முயன்று பார்க்கும் முயற்சி தோல்வியுற்றாலும் அதன் மூலமாக கிடைத்த அனுபவங்கள் அந்த தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வழங்குகிறது, அதுவே ஒரு பொறுப்புள்ள அடல்டாக வாழ்வதற்கும், நிறைய விசயங்களை சாதிப்பதற்கும் உறுதுணையாக இருக்க உதவுகிறது. இதில சில தீமைகளும் உண்டுதான் மறுப்பதற்கில்லை, ஆனால் தவறுகள் நிகழ்ந்து விடுமோன்னு பயந்திட்டே இருந்தா எப்படி அடுத்தடுத்து வரப் போகின்ற அனுபவங்களை தீர்க்கமாக அணுகி அதனில் வெற்றி பெறவும் முடியும். இப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்கவிடும் சமூகத்தால், சும்மா நடித்துக் கொண்டே தன்னோட முழு வாழ்க்கையையும் யாருக்காகவும் வாழ்ந்து தீர்த்துவிட முடிவதில்லை, கொஞ்சமே உண்மையாக வாழ்கிறார்களோன்னு தோணச் செய்கிறது. ஆனா, இதனையே அப்யூஸ் பண்ணுவதனையும் மறுப்பதற்கில்லை.

நம்மூர்ல இதுக்கு அப்படியே எதிர்மறையாக நடை பெறுகிறது. இதுனாலேதான், குடும்பமென்ற ஒன்று அமைத்துக் கொள்ளக் கூட பணம் கொடுத்து மணம் செய்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, யாரோ பார்த்து வைத்த பெண்ணை மண முடித்துக் கொள்ள முடிகிறது, அதனில் ஏதாவது பிரச்சினையென்றாலும், யாரையாவது விரல் சுட்டி காட்டி விட்டு எனக்கென்ன என்று இருந்து விட முடிகிறது... கடைசி வரைக்கும் திருமணமான தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமலேயே சமூகத்திற்காக வாழ்ந்து முடித்திடும் நிலையும் அதிகமாக நடைபெறுகிறது. இப்படி எத்தனையோ, தவறே தான் செய்பவன் கிடையாது என்ற மன நிலையிலையே லயித்து உயித்து வாழ்ந்து அடுத்தவர்களின் உயிரை வாங்கிவிட்டும் சென்று விடுகிறோம்.

அமெரிக்காவில் இந்தியர்கள் படும் கஷ்டமின்னா, சில பேர் இங்க ஒரு கால் அங்கே ஒரு கால்னு வைச்சிட்டு முழுமையா இரண்டு பக்கமுமே வாழமே, குழப்பத்திலயே குழந்தைகளிலிருந்து தன்னோட சுற்றி வாழும் அணைவரையும் படுத்தி எடுத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு மன நிலை இல்லாத பட்சத்தில், ஏதோ அங்கே கிடைக்காத ஒரு வாழ்க்கைத் தேடித்தானே இங்கு வந்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பாக மகிழ்ச்சியாத்தான் இருந்தாகணும், அப்படியில்லென்னா வேஸ்ட் எல்லாமே :)).


கவிதா: காதல் - எந்த வயது காதல் முதிர்ச்சி அடைந்ததாக இருக்கும், வெற்றி பெரும். ? மொழி,இனம், நாடு இவை கடந்த காதல் கல்யாணம் வெற்றி பெருமா?

தெகா: என்னோட "ஏன் நடிக்கணும்" பதிவு படிச்சீங்களா, அதில ரொம்பத் தெளிவா நம்மூர்க் காதல் திருமணங்கள் வெற்றிப் பெறணுமின்னா என்னன்ன அதுக்கு அடிப்படைத் தேவைகள்னு பேசியிருப்பேன். காதலுக்கு முதன்மைத் தேவை... எதனையும் திறந்த மனதுடன் அணுகும் பண்பு, மன முதிர்ச்சி, பொருளாதார தன்னிரைவு, ஒருவரின் மீது ஒருவர் வைக்கும் அசைக்க முடியா நம்பிக்கை இது போல பல பண்புகளை வளர்த்துக்ககணும் அந்தக் காதலை, மணத்தை கடைசி வரை கொண்டு போய் சேர்க்க வேண்டுமாயின்.

மனப் பொறுத்தம் அமைந்துவிட்டால் அது எல்லா தடைகளையும் தாண்டி வந்துவிடும் மேற்கூறிய ஏனைய "தேவைகளுடன்." இது இனம், மொழி, நாடு கடந்து நடை முறை படுத்தக் கூடியதுதான் என்றாலும் அசாத்திய மனத் துணிவும், வாழ்க்கை சார்ந்த தெளிவுமில்லையானால் அதுவே பின்னாளில் பெரும் இடைஞ்சலாக இருக்கக் கூடும், வரும் வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் பொருட்டு.

கவிதா: உங்களிடமிருந்து அடுத்தவர்கள் (குறிப்பாக நான்) கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்/குணம்/பண்பு ?

தெகா: வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே வாழ்ந்து பார்க்கணுமின்னு எல்லாச் சூழ்நிலையிலும் நினைக்கிற மனசு. எத்தனை முறை வீழ்ந்தாலும் வாழ்க்கையை ஒரு கடமையா வாழ நினைக்காம, திரும்பவும் ஆசை ஆசையாக வாழ நினைத்து எழுந்து நிற்கிற குணம். மற்றவங்களுக்கு எடுத்துக்காட்டா இருக்கணுமின்னுட்டு வாழ்க்கை பூராத்தையும் முகமூடி போட்டு வாழ்ந்திட்டு, எனக்கின்னு வரும்பொழுது உள்ளே வெறுமையா உணர்ரதில எனக்கு உடன்பாடு கிடையாதுங்க. அதுனாலே, எனக்கு எது சரின்னு படுதோ, அதனை எடுத்து நடத்துறேன், அதனையே என்னை சுற்றி இருப்பவர்கள் சரின்னு பார்க்கும்படியும் பக்குவப்படுத்துறது, அதுவே தவறாக என்னய பார்க்கும் பொருட்டு அது அவர்களின் பார்வைன்னு ஏற்றுக்கிற பக்குவத்தை எனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் பாதையிலன்னு சில கோடுகளில் பயணித்திட்டு இருக்கேன். இது போன்ற வரையறை செய்யப்பட்ட பாதையிலிருந்து விலகி, முடிவற்ற கோடுகளில் பயனிப்பதால் காலத்திற்கேற்ப வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலையோட இருக்க முடியுது. இது போன்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள எல்லோரும் தங்களை தயார்படுத்திகொண்டால் எத்தனை பிரச்சினைகள் காணமலே போய்விடுமென்று நினைக்கும் பொழுது சற்றே அயர்சியாக இருந்ததுண்டு.


ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :

1. உங்களுக்கு பிடித்த சிறந்த 3 புத்தங்கங்கள்

1) த அல்கெமிஸ்ட் 2) கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் 3) ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த தேர்ட் சிம்பன்சி.

2. ஜார்ஜ் புஷ் ஷிடம்- பிடித்த ஒரு குணம்

அவரின் அசட்டுத் துணிச்சல், அதனை சொல்லிட்டு ஹக் பிக்னு சிரிச்சு வைக்கிறது.

3. உங்களின் மனைவியின் சமையலில் உங்களுக்கு பிடித்தது.

கலவைச் சாதங்களில் சிலதுகள்(மாங்காய், தேங்காய் இப்படி...).

4. இயற்கை நேசிக்கு பிடித்த கலர், பிடித்த இடம் (இந்தியாவில்), பிடித்த உடை

இப்படியெல்லாம் யோச்சித்ததே இல்லை - ட்ராபிகல் கலர்ஸ்னு. பிடித்த இடம் நிறைய இருக்கே , மலையும் மலையும் சார்ந்த இடங்களும். அமைதியா யாருமே இல்லாத இடங்கள். பிடித்த உடையன்னா "லூஸ் குலோத்திங்" கவ்வி பிடிக்காத எல்லா உடைகளும்.

5. உங்கள் குழந்தைகளுக்கு இந்திய கலாசாரத்தை சொல்லிகொடுத்து வளர்க்கறீர்களா?

குறிப்பாக இப்படித்தான்னு இருக்கிற மாதிரி எந்தவொரு அடையாளமும் காமிச்சு வாழ்றதில்லை, அப்படியே எப்படியாக நானிருக்கேனோ அதனையே பார்த்து வேணுங்கிறதை எடுத்துட்டு வேணாததை விட்டுட்டுப் போனாலும் அப்படியே எடுத்துக்கிற மனசோட நான் இருக்கேன். திணிப்பது இல்லை.

6. எல்லா பொருளிலும் ஏதோ ஒரு பதிவு நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இன்னும் எழுத வேண்டும் என்று நினைக்கும் ஏதாவது?

நிகழ்வுகள் நடைபெற நடைபெற நமது எண்ணத்தையும் அதனைச் சார்ந்து பதிந்து வைத்து விடுவோம், அவ்வளவுதான். அதுவும், இது என்னோட வளர் நிலையில் நான் எங்கிருந்துருக்கிறேன் என்பதனை பிரிதொரு நாளில் திரும்ப புரட்டிப் பார்க்க உதவும் என்ற எண்ணத்தில்தான்.

7. அமெரிக்காவை விட்டு துரத்திவிட்டால் என்ன செய்வீர்கள்?

அடச் ச்சே ஏண்டா இவ்வளவு கால தாமதம், அப்படின்னு நினைச்சிக்கிட்டு சந்தோஷமா மூட்டை, முடிச்ச கட்டிக்கிட்டு அடுத்த டெண்ட் அடிக்க கிளம்பிட வேண்டியதுதான்.

8. உங்களுடைய வலைபதிவில் தருமி' என்ற பெயரை நிறைய பார்த்தேன்.ஏன் ன்னு சொல்ல முடியுமா?

அத அவர்கிட்ட இல்லே கேக்கணும் :). இருந்தாலும், அவரு தன்னோட எண்ணத்தை என் பதிவில் விட்டுச் செல்ல காரணமா நான் நினைக்கிறது என்னன்னா "பயகிட்ட சொன்னா எடுத்துக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறான்"னு நினைச்சு அப்பப்போ வந்து அவரோட தடத்தை விட்டுட்டு போறார் போல. இன்னொன்னு, அடுத்த கேப்பங்கஞ்சி நீங்க கொடுக்கப் போறது அவருக்காகத்தான் இருக்கணும், ஆனா, நிறைய தோண்டணும் அங்கே, செய்வீங்களா??

தெகாவின் இன்றைய தத்துவம் :- காகா, காகாவா இருந்தாத்தான் அதுக்கு அழகே... அதுவே தான் மயிலுக்கும்!




Monday, November 05, 2012

Bloggers' Voice : I-T ACT SECTION 66 A

ஏதோ ஒரு காரணத்திற்காக 2006 ஆம் ஆண்டு வாக்கில் இப்படியாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு இட்டு வைத்திருக்கின்றேன். அதன் தேவையைக் கருதி அந்தப் பதிவின் சுட்டி இங்கே Indian Bloggers, Its a High Time... http://orani-sittingby.blogspot.com/2006/07/indian-bloggers-its-high-time.html

அண்மையக் காலத்தில் வாயைத் திறந்தால் கூண்டுக் கிளி ஆகும் ஹைடியன், மூன்றாம் தர சர்வதிகார போக்கை நோக்கி நகரும் உலகில் கீழே முன் வைத்திருக்கும் சில கோரிக்கைகளை ஒவ்வொரு சமூக வலைத்தளங்களிலும் இயங்கி வரும் வலைஞர்கள் தங்களுடைய எதிர்கால சுதந்திர கருத்து முன்னெடுப்பினை கருதி இதனை விழிப்பு நிலைக்கு கொண்டு வருவது அவசியமாகிறது.

இது தருமியின் தளத்திலிருந்து அனைத்து விதமான சமூக வலை மக்களுக்கும் கொண்டு செல்லும் போக்கில் தொடரப்பட்டு, இறுதியாக உரிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கென இந்த முயற்சி. எல்லாரும் கலந்துங்க! இப்பொழுது விடயம்...


I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.



 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


பி.கு: ஏனைய வலைஞர்களின் தொடர் பதிவுகளையும் காண அழுத்துங்க இங்கே... http://dharumi.blogspot.com/2012/11/601-i-t-act-section-66.html

Friday, February 19, 2010

பதின்ம கால மன டைரிப் பதிவுகள்...

பதின்ம வயது டைரிக் குறிப்பில இருந்து சில பக்கங்கள் அப்படிங்கிற தலைப்பின் கீழே ஒரு வீட்டுப் பாடம் கொடுத்தாக இங்கே சிறுமுயற்சி முத்துலெட்சுமி. சில தொடரழைப்புகளின் தலைப்பை பார்த்தாவே ஹ்ம்ம் நாமும் கலந்துகிடலாமேன்னு ஒரு ஆர்வம் தொத்திக்கும் அதில இதுவும் ஒண்ணு. எழுத கூப்பிட்டாளுக்கு இங்க வைச்சு ஒரு நன்றி சொல்லிக்கிறேன்.

இந்த தலைப்பில ஒரு முரண் இருக்கு என்னயப் பொருத்த மட்டிலும். நான் பதின்மத்தில இருக்கும் போதெல்லாம் ஏற்கெனவே பிரிண்ட் பண்ணி இருக்கிற சொந்தப் புத்தகப் பக்கங்களிலிருந்து மீண்டும் கை ஒடிய ஒடிய வண்டி வண்டியா நோட்டுப் புத்தகங்கள் வாங்கி எழுதித் தள்ளவே அம்மாவை சுரண்டணும். அம்மா, அப்பாகிட்ட போய் நின்னு ஏதாவது கொடுக்கிறத வாங்கிக் கட்டிகிட்டு உபரியா இந்த நோட்டுக்கள் வாங்கித் தர ஒத்துக்க வைக்கிற ஒரு சூழல்.

அப்படி இருக்கும் பொழுது, பள்ளி ஆறோ ஒரு அரசாங்கப் பள்ளி. அங்கே நீந்தி பேர் பட்டு வெளிக் கிளம்பும் காலம் வரையில் எவரும் 'டேய்! டைரின்னா என்னான்னு தெரியுமாடா, அத எப்படியெல்லாம் பயன்படுத்திக் கணுமின்னாவது தெரியுமாடான்னு' கேக்கிற அளவில இருந்த மாதிரி ஆசிரிய/சியைகளும் என் ஞாபக ரேடாருக்கு முன்னாடி துளாவிப் பார்த்தாலும் தெரியவில்லை. இது போன்ற ஒரு வளர்ப்புச் சூழலில், டைரிங்கிற ஒரு விசயமே 17 வயசு வரைக்கும் எட்டிப் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கவில்லைன்னு நான் சொல்லி இனிமே நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலையில் இருக்க மாட்டீங்கன்னு தெரியும்.

இருந்தாலும் மண்டைக்குள்ளர இருக்கிற அந்த அளவற்ற நோட்டுப் புத்தகங்களில் பொதிஞ்சு போன பச்சை தாள்களிலிருந்து சிலதை அப்படி விசிறிக் காமிப்பது சிலருக்கும் எனக்கும் தேவைப்படலாங்கிறதாலே... நாலு நாளா இப்படி ஒரு விசயத்தை ஏத்துக்கிட்டமே என்ன எழுதலாம்னு எண்ணியபடியே உள்ளரே தூக்கிப் போட்டுட்டு அப்படியே அப்பப்போ மிதந்து வார விசயங்களின் மீது கொஞ்சம் பார்வையை பட்டுப் படாமல் தடவ விட்டு திரும்பவும் காணாம அடிச்ச படியே நாட்கள் நகர்ந்துச்சு.

இதெல்லாம் எப்படின்னா மறு அசை போடுவது மாதிரிதானே! கிடைக்கும் போது வேக வேகமாக இந்த கால்நடைகள் எல்லாத்தையும் உள்ளே வைச்சு அடைச்சிட்டு பின்பு ஓய்வில் இருக்கும் பொழுது எடுத்து மறு அசை போடுவது போல. என்னுடைய பதின்மத்தின் வழியாக கிடைத்த அனுபவ சேகரிப்புகளை எடுத்து அசை போடுவதில் அப்படி ஒரு கடினம் இருந்து விட முடியாது. ஏனெனில் ஆழமாக உராய்ந்து போன விசயங்கள் அது எதன் பொருட்டு ஆனாலும் பசுமையாக ஓர் ஓரத்தில் படிந்தே கிடக்கும் என்ற நம்பிக்கையில் அமர்ந்தே விட்டேன் இன்று முங்கி எடுக்க.

இந்த பதின்ம வயதினூடாகத்தானே வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும், முரண்களையும், சமூக கட்டமைப்புகளையும் ஓரளவிற்கேனும் வயதிற்கு ஒன்றாக அறிந்திருக்கக் கூடும். வாழ்வின் எதிர்மறை செயல்களான சுயநலமும், பொறாமைக் குணமும் வார்த்தெடுக்க பயன்படுத்தப் போகும் பட்டறையெனவும், ஒரே குடும்பமாக ஒற்றை மின் விசிறிக்கி கீழே காலம் சுழற்றி அடித்து திசைக் கொருவராக பல்லாங்குழி ஆடப்படப் போகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் உண்டு களித்து ஓட்டுக் கூரையைப் பார்த்தபடி ஏதேதோ பேசிக்கொண்டு உறங்கிப் போன ஒரு அன்பால் பிணைந்த கூட்டம். ஒரே சிந்தனை, மன ஓட்டம் என அன்பைத் தவிர அங்கே பகிர்ந்து கொள்ள வேறு ஒன்றுமில்லை என்றமைந்த குடும்பமைப்பு. வாழ்வின் அருமை உணர்த்தவென அமைந்த பதின்ம படி நிலைகளவை. இவைகளை இன்னதென்று அறிந்து, அதனை முழுமையாக புரிந்து இது போல ஒரு நாள் தலைகீழாக நின்றாலும் அது போன்ற ஒரு காட்சி இன்று கிடைக்காதென நினைந்து வாழ்ந்திருக்கக் கூடிய அறியாப் பருவமும் அந்த பதின்மம் தானே.


ஊசித் தட்டானாக சிறகடித்து காணாங் கோழியாக நாள் முழுக்கவும் இங்குதான் செல்கிறோம், இதுதான் எங்களுடைய இன்றைய மிஷன் என்று சொல்லி தீர்மானித்துவிட முடியாதபடிக்கு அமைந்த தினப்படி நண்பர்களுடனான கேளிக்கை விளையாட்டுக்கள் தான் எத்தனை. பரிணாமத்தில் வேட்டையாடி பிழைத்து இன்று மனிதர்களாக காட்டிக் கொள்ள எத்தனிக்கும் மனிதர்களுக்கிடையே இருந்து அப்பவே விட்டு விலகி மணிக் கணக்காக வேலி ஓணான்களையும், சிறு வகை வேலிப் பறவைகளையும் தேடி திரிந்த காலமது. மண்டை உடைதல்களும், சிறு சிறு வீரத் தழும்புகளுமென உடலெங்கும் காயங்களால் எழுதிக் கொண்டதும் அதுவே சுவடுகளாக தன் பதின்மம் சுட்டும் கையேடு என்றறியாமல் எழுதி தீர்த்ததும் அதே பதின்மத்தில்தானே.

காதலுக்கென பள்ளி நண்பி ஒருத்தியின் வீட்டுப் பாட நோட்டை கெஞ்சி அடித்து வீட்டுக்கு வாங்கி வந்து அச்சு பிறழாமல், அவள் எழுத்துகளில் போடும் சுழிப்புகளின் அழகில் மயங்கிய நேரம் போக அந்த நோட்டு/புத்தகங்களுக்கு, எதிர்த்த வீட்டில் சினிமா கொட்டகையில் வேலை பார்க்கும் ஒருவரிடம் அழகான சினிமா போஸ்டர் வாங்கி அதில் எனது பதின்ம வயதுக் காதலை குறியீடாக காட்ட அட்டை போட்டு கொடுத்தனுப்பி எனது வேதிய உடற் செயற்பாடுகளை அறிந்து கொள்ள உதவியதும் இந்தப் பதின்மம்தான்.

பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பள்ளிகளின் மீதான வெறுப்பு அப்படியே இங்கும் தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது. பள்ளி சென்ற நேரத்தில் சக நண்பர்களுடன் புழங்கிய நேரம் போக பள்ளி கட்டடத்தின் வேலிகளுக்குள் ஒரு வேற்றுக் கிரக வாசியாக தடித்த தோல்களுடனும், வெம்பிய மனதுடனும் சிறைப் பறவையாக திரிந்திருக்கக் கூடுமென்று இப்பொழுதும் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. மாலை வேலையில் எனக்குப் பிடித்த நண்பர்களுடன் வரும் வழியில் செய்யும் அட்டகாசங்கள் அந்த எட்டு மணி நேர வாசனையை துடைந்தெறிந்து நாளைய நோக்கிய எதிர்பார்ப்பை விதைத்து அந்த மன நிலையை கடக்க வைத்திருக்கிறது. இப்பொழுது நிதானமாக நின்று யோசித்தால் அது யார் மீதான தவறு என்பது கொஞ்சமே விளங்குகிறது.

இதுவரையிலுமே கவனித்திருக்கக் கூடும் பள்ளிப் புத்தகங்களை தவிர்த்து பிற விசயங்களை படிப்பதற்கான ஒரு புறச் சூழல் அமையா வாழ்வமைப்பு என்பதனை. இருப்பினும் அப்பாம்மாவின் உறுத்தலற்ற வாழ்வியல் சூத்திரங்களான, தனித்துவம் பேணல், தனி மனித மனச் சுதந்திரத்தின் அவசியம், விரும்பிய அளவில் சுதந்திரமாக விட்டுத் திருப்புவது, எனக்கும் அப்பாவிற்குமான இயல்பான நட்பு முறை - கடைசியாக பள்ளி இறுதியாண்டில் "தம்பீ, தோலுக்கு மேலே வளர்ந்திட்டே, நண்பன் மாதிரிதான் இனிமே பாவிக்க முடியுமென்ற அந்த பண்பான வார்த்தைகளும்," யார் ஏதாவது என்னைப் பற்றி அப்படி இப்படிக் கூறினாலும் "அவன் அப்படி செய்திருக்க மாட்டானே"ங்கிற இன்றளவும் உள்ள அம்மாவின் அசாத்தியமான நம்பிக்கையும் கூடுதல் பொறுப்பை என்னிடமே வழங்கிவிட்டது. அன்று தொடங்கிய வாழ்வியல் பாடம் அந்தப் பட்டறையில் பயின்ற எனக்கு இன்றளவும் தோல்விக்கும்/வெற்றிக்குமான முழு பொறுப்புகளை நானே முகம் கொடுத்து யார் மீதும் விரல் நீட்டும் கெட்ட பழக்கத்தை பழகிக் கொள்ளாதவாறு பார்த்துப் பழகிக் கொண்டதும் அந்தப் பதின்மத்தில்தானே.

அப்பாவின் அந்தப் பண்பு நிலையும் அம்மாவின் பொறுப்புணர்வும் ஒரு கலவையாக என்னுள் இறங்க 15 வயதிற்குப் பிறகு பள்ளியில் கொஞ்சம் ஈடுபாடு கூடிக்கொண்டது. அதற்கு என்னைச் சுற்றி அமைந்த சமூக மக்களின் அழுத்தமும் ஒரு காரணமாக அமைந்து போனது. இருப்பினும் அங்கும் என் விருப்பப்படியே கணக்குப் பாடங்களுக்கு ஒளிந்து உயிரியல் பிரிவை தேர்ந்தெடுத்ததும் அதற்குத் துணையாக வீட்டில் உள்ளவர்களின் "கணக்குப் போட்டுப் பாடங்களை" தேர்ந்தெடுக்க வைக்கும் குறுக்கீடுகளும் இல்லாமல் போக படிப்பு விசயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த உதவியாக இருந்தது.

அதுவே பின்னாளில் காடுகண்டிக் கழுதையாக மேற்கு மலைத் தொடர்களில் சறுக்கித் திரியும் வாய்ப்பையும் பெற்று, இன்றும் பொருளாதார ரீதியில் பெரிய அளவில் சாதித்துக் காட்ட முடியாதெனினும் மனசிற்கு நெருக்கமாக எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை திருப்பிக் கொள்ளும் அந்த திசை திருப்பும் துடுப்பை என் கையிலேயே அமைத்துப் பார்க்கும் அளவிற்கு அந்தப் பதின்ம வாழ்வுப் பட்டறை சுதந்திரத்தை கொடுத்துப் பார்த்தது.

அதுவே பள்ளிகளில் இருந்த போதும் சரி, கல்லூரிகளின் தொடக்கத்தில் ஆரம்பித்த பதின்மத்தின் இறுதி நிலையிலும் சரி உடை அலங்காரங்களில் கொஞ்சம் வித்தியாசமாக தலைக்கு எண்ணெய் வைக்காமல் நீண்ட கேசத்துடன் போவதற்கும், குத்தூசி போன்ற ஒடிந்த தேகம் உடையவனாகினும் கை வைக்காத செய்தித் தாள்களை ஒத்த டி-ஷர்ட்கள் அணிந்து செல்வது என நீண்டது. அப்பொழுதெல்லாம் வகுப்பு ஆசிரியர்கள் மீண்டும் வீட்டுக்கு அனுப்பியோ அல்லது வார்னிங் கொடுத்து மீண்டும் மற்றவர்களுடன் சேர்த்து கொள்வது வரைக்குமான தனித்துவம் பேணலாக தொக்கி நிற்கிது ;-).

இன்றளவிலும் 'தெக்கிக்காட்டான்' பெயர் வைத்துக் கொள்வது வரைக்குமாக தொடர்கிறது. அதற்கும் இதற்குமான வயது வித்தியாசம் 21 வருடங்கள். எனினும், இன்னும் சில பேருக்கு நம்பிக்கை இருக்கிறது நான் ஒரு தண்ணியில் வெந்துவிடுவேன் என்று. பார்ப்போம். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்று;-) .

கூட்டிக் கழித்து எனது பதின்மத்தை திரும்பிப் பார்த்தால் வாழ்க்கை எனக்கு குறைவில்லாமல் அந்த கூர்மைத் தீட்டல்களுக்கான ஆயத்தங்களை வாழ்வுச் சாலையின் இரு மருங்கிலும் வஞ்சகமில்லாமல் காட்சியகப் படுத்தியே வந்திருப்பதாய் இன்று மெல்ல மறு அசை போடும் பொழுது என்னால் உணர முடிகிறது.


இத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது...

தருமி

காட்டாறு

மீன்துள்ளியான்

செல்வநாயகி

Sunday, December 07, 2008

இந்திய துணை கண்டத் தீவிரவாதம் - தெகாவின் பார்வையில்!

சமீபகாலமா பதிவுகள் எழுதவே தோணுவதில்லை. நடைபெறும் நிகழ்வுகளை கொண்டு எனது எண்ணவோட்டத்தை சுடச்சுட பதியும் பொழுது, அந்த ஒட்டு மொத்த நிகழ்வின் பரிமாணமோ வேறு மாதிரியாக நாட்பட நாட்பட வெளிச்சத்திற்கு வருகிறது. அதுவும் இந்தியாவில் நடைபெறும் அரசியல், கலவரங்கள் சார்ந்த நிகழ்வுகள்.

அதற்கு ஒரு உதாரணமாக அண்மையில் அரசு சட்டக் கல்லூரியில் (எல்லா அரசாங்க கல்லூரிகளிலுமே என்று கூட கூறி விட முடியும்) காலங் காலமாக நடைபெற்று வரும் இந்த ஜாதிச் சண்டையின் பின்னணியை ஆர அமர கவனிக்கும் பொழுது யாருக்கும் தெரிய வந்திருக்கும். இதனில் முக்கியமாக கேமராவும் கையுமாக, ஒருவர் தற்கொலைக்காக ஒரு உயரமான நீர்த் தொட்டியின் மீது ஏறி குதித்து உயிரை மாய்த்து கொள்வதனை நேரடி ஒளிப்பரப்பு செய்வதாகட்டும், கல்லூரியில் ஒருவரை ஒருவர் மாட்டடி அடித்துக் கொண்டு அவர்களும் செத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வன்முறை சார்ந்து இம்யுனிடி கொடுப்பதில் காட்டும் அக்கறையாகட்டும் இந்த வியாபார மீடியாக்களின் பங்கு சகிக்க முடியா அளவிற்கு சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. அது நம் வளர்ச்சியில் ஒரு அபாயகரமான சந்திப்பில் நின்று தவறான பாதையில் வழி நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறோமென்பதற்கான ஒரு வழியாக எனக்குப் படுகிறது.
________________________________

சரி இப்பொழுது பதிவின் கருவிற்குள் செல்வோம். அவந்திகா அண்மையில் நடந்தேறிய மற்றுமொரு ரியல் லைஃப் ஷோ இதுவும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பெற்றது "மும்பை தீவிரவாத தாக்குதலுக்குக்" காரணம் இந்திய அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டுமென்றும், சரியான, நேர்மையான அரசியல்வாதிகளை இந்தியா பெற்று விட்டால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் குறையுமா என்றும் வினவி ஒரு தொடர் விளையாட்டை ஆட அழைத்திருக்கிறார்.

இந்த தீவிரவாத தாக்குதல் அல்லது உலகம் தழுவிய நவீன தீவிரவாத அணுகுமுறை சார்ந்து என் மனதில் எண்ண அலைகள் அவ்வப்பொழுது தீவிர'மாக எழுந்து வீழ்வதுண்டு. இருந்தாலும், இன்றைய பொருளாதார கட்டமைவில் நடைபெறும் சித்து விளையாட்டுக்களும், புவியிருப்பில் அமைந்திருக்கும் நாடுகளின் அரசியல் சார் நகர்வுகளையும் ஒட்டு மொத்தமாக கவனிக்கும் பொழுது, மனித பரிணாம நகர்வில் ஆண்ட்ரோஜனையும், அட்ரீனலின் ஓட்டத்தினையும் கொண்டே எடுக்கப்படும் சுயநலத்தனமான முடிவுகளின் வெளிப்பாடே இந்த நவீன தீவிரவாத விளையாட்டோ என்று என்னை ஒரு கணம் யோசிக்க வைக்கிறது.

காலம் தொட்டே மதங்களின் இருப்பும் மறுப்பும் அவைகளின் நெகிழ்வுறும் தன்மையைக் கொண்டே மக்களால் மானசீகமாக பின்பற்றப் பட்டு தலைமுறையாக கையிறக்கம் பெற்று பல நூறு ஆண்டுகள் மாற்றத்தினூடே தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டு மக்களின் தேவைக்கும் விட்டுக்கொடுத்து தலை தப்பி நிற்பதாகவும், லாஜிக்கலாகவே இயற்கையின் நியதிப்படியே அதுவே சாத்தியமாகவும் தோணச் செய்கிறது எனக்கு.

ஆனால் இன்றைய நிலவரப்படி அது போன்ற ஒரு பாதையில் எந்தவொரு மதத்தினையும் நாம் பரிணமிக்க போதுமான கால அவகாசம் கொடுப்பதாக தெரியவில்லை, அந்தந்த குழுமங்களும் தங்களின் "கடவுளர்களை" காப்பாற்றி அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்காக போராடுவதாகப் படுகிறது. இச் சூழலில் வன்முறையும் ஒரு வாழ்வின் அங்கமாக தேவைப்படாத நாடுகளின் மீது கூட வைத்து திணிக்கப் படுகிறது.

இப்பொழுது இந்திய துணைக் கண்டச் சூழலுக்கு வருவோம். நம் புவியியல் இருப்பு உலக வரைபடத்தில் உற்று நோக்கினால் ஒரு சூடான பகுதியில் (geo-politicaly we are located in a complex place) இருப்பதனைக் பார்க்கலாம். இச் சூழலில் எந்தவொரு முடிவினையும் நம் நாடு எடுத்தோம் கவிழ்த்தோமென்று தான் தோன்றித் தனமாக எடுத்து அதனை நிறைவேற்றி பார்த்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.

உண்மை அப்படியாக இருக்க "கொம்பு சீவி" விடப்படுவதினால் கோபம் கொப்பளித்து 'பாடம் கற்பிக்கிறேன் பார்!' என்று மல்லுக்கு நின்றால் தொலைதூரப் பார்வையில் நாம் சந்திக்கவிருக்கும் இன்னல்கள் நம் கற்பனைக்கும் எட்டாதது. எனவே நம்மூர் அரசியல்வாதிகள் அண்டைய நாடுகளுடன் பகை பாராட்டி அதன் மூலம் ஓட்டு அரசியல் வேண்டுமானால் செய்து கொள்ளலாமே தவிர இது நடைமுறைக்கு சாத்தியப் படாத ஒன்று!

இருக்கும் வழி ஒரே வழியே! பொருளாதார வகையில் தன்னிறைவு எட்டி, தன் நாட்டிற்கு போதுமான பாதுகாப்பை, எல்லை கடந்த தீவிரவாதத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்தற்குரிய வழிமுறைகளைக் கண்டு, நாட்டின் எல்லைக்குள் வாழும் எல்லாரும் நிறைவாக வாழும் ஒரு வழிவகை கண்டு, பிரிவினை வாத அரசியலை தவிர்த்து நாட்டினை எடுத்துச் செல்வதே வாழும் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையளிக்கும் கட்டத்தில் இருப்பதாக ஏனைய தீவிரவாத விசயங்களில் கவனத்தை செலுத்தாமல், தான் பயனுறும் உடனடித் தேவைகளில் கவனம் செலுத்த முடியும்.

நாம் வெறுமனே அரசியல்வாதிகளை குறை கூறுவதில் எந்த பொருளும் கிடையாது, என்னமோ அரசியல்வாதிகள் எங்கிருந்தோ குதித்து நம்மிடையே தோன்றிவிட்டதாக நினைத்துக் கொள்வதற்கு! அவர்கள் நம் ஒட்டு மொத்த சமூகத்தின், எண்ணவோட்டத்தின், ஒழுக்க நெறிகளின் பிரதிநிதிகளே! அது அப்படியாகக் கிடையாது என்று கூறினால், கண்டிப்பாக நம்மால் அது போன்ற பொய்யான பிரதிநிதிகளை சகித்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? மாற்றுத் தலைவர்களை நம் எண்ணங்களின் பிரதிபலிப்பானை தேடிக் கொண்டே இருப்போமே...! இத்தனை கோடி மக்களிருந்தும் நமக்கு கிடைப்பதெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாமே எனும் பொழுது என்ன தெரியவருகிறது அதிலிருந்து?

ஒண்ணு மட்டும் நிச்சயம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ண வோட்டம் இந்த "சுயநலப்" போக்கு சார்ந்து மாற வேண்டும், அதற்குத் தேவை என்னன்ன அப்படின்னு ஒவ்வொரு தனிமனிதனும் தீவிரமாக யோசிக்க வேண்டும், அப்படி யோசித்து தன்னைத் தானே திருத்திக் கொண்டு பொது வாழ்க்கைக்கும், ஏனைய துறைகளுக்கும் சென்றால் மட்டுமே ஒரு விடிவுகாலம் நம் நாட்டிற்கு கிட்டும் என்பது எனது எண்ணம்.

நானும் இன்னோட பங்கிற்கு ஒரு நாலு பேரை முன்னுரைக்கிறேன்...


1) தருமி

2) சுரேகா

3) சுகா

4) சந்தோஷ்



மேலும் இவங்க இல்லாம யாரெல்லாம் தானும் தன்னோட பார்வையை முன் வைக்கணுமின்னு நினைக்கிறீங்களோ கண்டிப்பா செய்ங்க. நன்றி!




பி.கு: இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - வன்முறை வாழ்க்கைக்கு யார் பொறுப்பு...?

Tuesday, July 03, 2007

எப்பொழுதும் ஏழரை இப்ப *எட்டு* பாகம் - II

இன்னும் எட்டுல மூணே முடிக்கலைல்லே, அப்புறம் எப்படி நான் நாலுக்குப் போறது. என்னது இன்னும் அந்த மூணே படிக்கலையா அப்ப இங்கே ஏறி அங்கே இறங்கி சமர்த்தா படிச்சிட்டு வந்திருங்க, ப்ளீஸ்.

என்னடா இவன் மூணைப் போட்டு இந்த இழு இழுக்கிறானேன்னு நினைக்காதீங்க. அதிலதாங்க நிறைய திருப்பு முனையான விசயங்கள் என் வாழ்க்கையில் நடந்துச்சு. இப்ப விசயத்துக்கு வருவோம். அப்படியே படிச்சி கிடிச்சு ஃபெயிலாப் போன அந்த ஒரு பாடத்தையும் எழுதி பாஸு பண்ணி வைச்சிருந்தேன்.

இதற்கிடையில் என்னத்தடா இனிமே படிச்சி வேலை தேடின்னு நினைக்க வைக்கிற மாதிரி கொஞ்சம் வீட்டுக்குள்ள வேற அடுத்தடுத்தப் பசங்க ரெடியாகிட்டானுங்க. கல்லூரி வாசல மிதிக்க. நான் அவங்களுக்கு இடம் கொடுக்கலாமின்னு நினைச்சு, என் முடிவ என் அண்ணன் கிட்ட சொன்னேன், அவரும் முதல் முறையா என் வாழ்க்கையே திருப்பிப் போடுற மாதிரி ஒரு அறிவுரை கூறினார். தம்பி இப்ப இருக்கிற குடும்ப கஷ்டத்தப் பாத்து பயந்து கிடைக்கிறதெ விட்டுறாதே, மேலே படி அதுவும் ஏதாவது வித்தியாசமான்னு சொன்னாரு.

திரும்பவும் எனக்கு வந்துருச்சு வேகம். அந்த வருசம் தி ஹிண்டுவில வந்த அத்துனை வெளி மாநில கல்லூரிகளுக்கும், பல்கலை கழகங்களுக்கும் வித்தியாச வித்தியாசமான முதுகலை பட்டப் படிப்பு என்ன இருக்கோ அதுவாப் பார்த்து அப்ளை பண்ண ஆரம்பிச்சேன். அதில் ஒரு பஞ்சாப் கல்லூரியும், திருப்பதி பல்கலை கழகமும் அடக்கம் (Microbiology, Virology etc.,). அவ்ளோ த்தீ உள்ளர.

திடீர்னு ஒரு நாள் மயிலாடுதுறை ஏ.வி.சி.சி கல்லூரியில இந்த மாதிரி எம்.எஸ்ஸி wildlife biology முதுகலை பட்டப் படிப்பு இருக்காமான்னு விளம்பரம் வந்துச்சு. சரி விடுன்னு விண்ணப்பம் தருவிச்சு அனுப்பியிருந்தேன். நுழைவுத் தேர்வு எழுத கூப்பிட்டுருந்தார்கள். நான் போன பேருந்திலேயே என்னோட இன்னொரு +2 படிச்சவரும் இருந்தார், அவரும் அங்கேதான் போயிட்டு இருக்கார்.

எழுதினோம் இரண்டு பேரும். தேர்ந்தெடுத்தாங்க. அது தாங்க எனக்கு பிள்ளையார் சுழி போட்ட மாதிரி. அன்னைக்கு என் காலில் கட்டிய சக்கரம்தான் மேற்குமலைத் தொடர்களின் எல்லா வாசல்களிலும் நுழைந்து இந்தியாவின் எல்லை வரை எடுத்துட்டுப் போயி, வால்பாறையில் வைத்து ஒரு வெள்ளைக் காரியுடன் ஒரு காட்டுத் தனமான காதலில் விழுந்து அது பிறகு உலகின் சில இடங்களுக்கு செல்லுமளவிற்கு இட்டுச் சென்றது அந்தச் சக்கரம்.

இப்ப ஞாபகம் இருக்கா இந்தக் காட்டான் எ,பி,சி,டி கிணத்துக்குள்ளே இருந்து மக்கடிச்சவன் ஒரு பி.எச்டி தீசிஸ் எழுதுற வரைக்கும் வளர்ந்துட்டான் இந்த பாயிண்ட்ல. இதில ஆங்கிலத்திலதான் பேசிவேங்கிற மாதிரி ஒரு சின்ன குட்டிப் பையன் வேற. எம்பூட்டுத் தூரம் போயாச்சு. திரும்பிப் பார்த்தா 2200மீட்டர் பெருங்குன்றை உட்காராம ஒரே மூச்சுல ஏறி முடிச்ச மாதிரியில்ல இருக்கு.

(நாலு). எம்.எஸ்சிக்கு ஒரு ஆறு மாசம் களப்பணி உண்டு நான் படிச்ச வனவியல் படிப்புக்கு. அதுக்கு டாப்ஸ்லிப் ஏரியாவை தேர்ந்தெடுத்து, காட்டெருமைகள் மேல ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தேன். அங்கே வைச்சுத்தான் ஒரு நாள் எதார்த்தமா என் வருங்கால ப்பி.எச்டி அட்வைசரை (டாக்டர் அஜித் குமார், அப்ப அவரு யாருன்னே தெரியாது எனக்கு), அவரு அவரோட டேராதூன் மாணவர்களுடன் களப்பணிக்கு வந்திருக்கும் பொழுது சந்திக்க நேர்ந்தது. சும்மா ஆர்வக் கோளாறு வந்து எனக்குள்ள சந்தேகத்த யாரோ என் அறைக்கு வெளியே இருந்து நம்ம சப்ஜெக்ட் பேசுறாங்களேன்னு போயி பார்த்தா இவரு உட்கார்ந்து இருந்தார். என் சந்தேகத்தை கேட்டேன். அவரும் ஆர்வமா விளக்கினார்.

பின்னாலே இரண்டு வருஷம் கழிச்சு நான் தேசீய அளவில நடந்த Jனியர் ஆராய்ச்சி மாணவன் நுழைவுத்தேர்வுல கலந்துகிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டப்ப யாருடா அதுக்கு முதன்மை அறிவியலர் (principle scientist)ன்னு பார்த்தா நான் ஏதோச்சையாக சந்திச்ச நம்ம டாப்ஸ்லிப் ஆசான். அவருக்கும் ஆச்சர்யம் நேர்முக தேர்வில் என் பின்புலத்தை கேட்டப்ப. டாப்ஸ்லிப் சந்திப்பு கண்டிப்பாக அவரின் மனதை விட்டும் அகலவில்லை.

(ஐந்து). முதுகலை முடிச்சுட்டு வீட்டுக் போன முடிஞ்சது கதைன்னு, ஒரு சீனியர் மூலமாக கெஞ்சிக் கூத்தாடி பொள்ளாச்சியில மையமாக கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான "டைகர் நேச்சர் கிளப்"ல என்னைய Ecologistஆ தள்ளிவிட்டாங்க. அதனை நடத்தின அந்த நபர் ஒரு டூபக்கூர் பார்ட்டின்னு பின்னாலே தான் தெரிய வந்தது. என்னைய பொள்ளாச்சியில இருக்கிற முக்கிய வர்த்தக இடங்களுக்கெல்லாம் கூட்டிட்டுப் போய் அந்த நிறுவனத்தின் உறுப்பினர் கிட்டயெல்லாம் இவருதான் நம்ம நிறுவனத்தின் சயிண்டிஸ்ட்ன்னு:-P அறிமுகப் படுத்திவைச்சுட்டு, வசுல அவரு கரெக்டா பாக்கெட் பண்ணிக்குவார் போல.

எனக்கு டாப்ஸ்லிப்ல எப்படியோ தங்க ஒரு இடம் வன அதிகாரிங்கிட பேசி பிடிச்சுக் கொடுத்தார். அங்க உள்ள மெஸ்ஸில சாப்பிட்டுக் கோங்க நான் அக்கவுண்டை கவனிச்சிக்கிறேன்னு சொல்லிட்டு ஆளு எஸ்கேப்பூ. அங்க பணம் கொடுப்பாரோ இல்லையோ, தினமும் பொள்ளாச்சியில இருந்து வார பேருந்துல டைகர் நேச்சர் கிளப்பின் சயிண்ட்டிஸ்க்கு (யாரு நம்மதான்) தவறாம, இருக்கிற அத்துனை நாளிதழ்கள், வார, இரு வார மகஜின்கள் என்று தினமும் சப்ளை நடந்தது.

கீழே இருந்து திருப்பூர் பனியன் கம்பெனி வாலாக்களிலிருந்து மத்த கவுண்டர் குடும்ப ஆட்கள் வரை மேலே வரும் பொழுது என்னை "கைடு" வேலைக்கு அட நம்ம நிறுவன சயிண்ட்டிஸ்ட்னு அள்ளிப் போட்டுக் கொண்டு அங்குள்ள ஜீவராசிகளை சுட்டிக் காட்ட அழைத்துச் செல்வார்கள்.
இவ்வளவுக்கும் சம்பளம் ரூபாய் 500. இன்னமும் டாப்ஸ்லிப் ரேஞ்சர் எல்லார்கிட்டயும் சொல்லி சிரிக்கிறாராம் நான் அங்க இருந்தப்ப இரண்டு மாத மெஸ் பாக்கின்னு. இது கூட எனக்கு இப்ப ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்னால் சென்றப்பத்தான் தெரிய வந்தது.

அந்த "தங்களின்" போதுதான் எனக்கு "தனிமையின்" அவசியம் புரிய ஆரம்பித்தது. பெரும்பாலான நேரங்களில் தனியாகவே கரியஞ்சோலையின் வழியாக நடந்து சென்று அங்குள்ள வாட்ச் டவரில் நிறைய நேரம் அருகமையே உள்ள ஒரு சின்ன நீர் தொட்டியை(water hole) இலக்காகப் பார்த்து அமர்ந்து விடுவதுண்டு. கோடையில் விலங்குகள் தண்ணீர் பற்றாக்குறையின் போது அங்குதானே வரும், அங்கு வைத்துப் பார்ப்பதற்கு ஏதுவாக அந்த தொட்டி. அந்த அனுபவம் எத்துனை கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்கறிய. அது மற்றுமொரு உந்துதல் பலகையாக பின்னாலில் அமைந்தது என்றால் அது தான் உண்மை.

கொஞ்ச நாட்கள் கழிச்சு இது சரிப்பட்டு வராதுப்பான்னு என்னாட வழி இதிலிருந்து மீண்டு கொஞ்சம் நல்லபடி இருக்கன்னு பார்த்தப்பத்தான். முதுமலையில இருக்கிற IISC., CES களப்பணி மையத்தில இருந்து களப்பணியாற்றுவதற்கு ஒரு ஆள் தேவைப்பட்டது தெரிஞ்சது. தலை தெறிக்க ஓடி அங்ஙன விழுந்தேன்.

(ஆறு). அங்கதான் இரண்டாவது(எங்க லைன்ல) பெரிய ஆள இந்தியாவில சந்திச்சேன். முதல்ல நான் டாப்ஸ்லிப்ல சந்திச்ச என் ப்பி.எச்டி அட்வைசர் டாக்டர். அஜித் குமார் இவர் காம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில இருந்து இந்திய சிங்க வால் குரங்குகளின் மீது ஆராய்ச்சி பண்ணி ப்பி. எச்டி பண்ணவர். ஒரு பெரிய குரங்கு ஆராய்ச்சி நிபுணர் இந்தியாவிலிருந்து - உலகத்தில எல்லாருக்கும் தெரியும் இந்த லைன்ல இருக்கவங்களுக்கு. இந்த IISC., களப்பணியில சேர்ந்தப்ப அங்க இரண்டாவது பெரிய ஆள் யானைகளின் மீது ஆராய்ச்சி நடத்துரவர் டாக்டர் சுகுமாரை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

இதுக்கிடையில் சும்மா கை பரபரக்க எ.ஜே.ட்டி ஜான்சிங், ஆசாட் ரஹ்மானின்னு, ஈஸ்வர் ப்ரகாஷ் யாரெல்லாம் இந்தியாக்குள்ள பெரிய வனவாழ் ஜீவராசிகள் ஆராய்ச்சியாளர்கள் இருக்காங்களோ அவங்களுக்கு நான் யாரு, எவருன்னு சொல்லி வேலை கேட்டோ இல்லைன்னா நான் தனியாக குஜாராத்தில் இருக்கும் சவுக்கு நில காட்டுக் கழுதைகளின் மீது ஆராய்ச்சி செய்யணுமின்னு ப்ரியப் படுறேன் எனக்கு நிதி உதவி கிடைக்குமான்னு கல்லெறிஞ்சு பார்க்கிறது சொந்தக் கடுதாசி மூலமாக. பிரிதொரு நேரத்தில் அவங்கெல்லாம் எங்காவது நான் சந்திக்க நேரும் பொழுது கண்டிப்பாக என் பெயரை கேக்கும் பொழுது ஞாபகத்தில் நிக்கிற மாதிரி அந்த கடுதாசி இருந்ததை சொல்லி கேட்டதுமுண்டு.

இதினாலே என்னாடா தெகான்னு கேட்டா. அட, அய்யாக்களா இவங்கள எல்லாம் சந்திச்சப்ப நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயம், எளிமை இவ்வளவு பேரு எடுத்துருந்தாலும், பொண்டாட்டியோட சமையல் கட்டுல நின்னு உதவி பண்றது. தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவி வைக்கிற டீசன்சி. தன் குழந்தைகள குளிப்பாட்டி விடுறதுன்னு வாழ்க்கையை வாழவும் கத்துக் கொடுத்தாங்க. அது.

(ஏழு). இப்ப நம்ம காதல் கதை. நம்மூர்ல, இருக்கிற ஜாதிக்குள்ள இன்னமும் உப ஜாதியா இருந்தாக் கூட இல்லவே இல்லைன்னு மறுத்து திருமணத்துக்கு ஒத்துக்காத காலக் கட்டத்தில நான் போயி இனம் விட்டு இனம்(race) திருமணம் பண்ண சம்மதிக்க வைக்கணுமின்ன ச்சும்மாவா. ஆத்தாவும், அம்மாவும் விட்டேனா பாருங்க, நான் சின்ன வயசில ஸ்கூலுக்கு இழுத்துட்டுப் போறப்ப எடுத்துகிட்ட கடிக்கிற டிரைனிங் ;-), கிணத்துக்குள்ள இறங்கி எ.பி.சி.டி படிச்ச கெட்டிக்காரத்தனமெல்லாம் பயன்படுத்தினதுனாலே, அந்த நேரத்தில வெற்றி நம்ம பக்கம்தான். பிறகு எல்லோரும் குடும்பத்தோட "மார்ஸ் அட்டாக்" படம் பார்த்திட்டு வெளியே வந்தப்ப அம்மா பயந்து மிரண்டு போயி தம்பி நீ எப்படிடா தனியாள போயி அங்கே(அமெரிக்காவில) சமாளிக்கப் போறேன்னு கேட்டு பீதியக் கெளப்புற அளவுக்கு உண்மையான காட்டானகவே இருந்திருக்கேன்.

இருந்தாலும் என் அம்மாவும் அப்பாவும் போன பிறவியில வெள்ளைக் காரய்ங்களா பொறந்துருப்பாங்களோன்னு அப்பப்ப சந்தேகம் வருது. நான் அடிக்கிற கூத்துக்கெல்லாம் உடன் பட்டு, என்னைய விட்டுப் பார்த்து அதில இருந்து கிடைக்கிறதெ பகிர்ந்துக்கிற அளவிற்கு முதிர்ச்சி எங்கேயிருந்து வந்தது? இன்னமும் கேட்டுக் கிட்டுத்தான் இருக்கேன் அந்தக் கேள்விய. அந்த விசயத்தில் நான் கொடுத்து வைச்சவன். I do love my parents dearly.

இந்த திருமணத்தில என்ன சாதனைன்னா, "சுய பரிசோதனை"ங்கிறது ஒவ்வொருவருக்கும் எவ்ளோ முக்கியமின்னு தெரிஞ்சுக்கிட்டதுதான். எல்லாத்தையும் எனக்கு நானே சொல்லிக் கொடுத்துக்கிட்டு தெரிஞ்சுக்கணுமின்னு, ஏதோ ஒண்ணு என்னை பிடிச்சு தள்ளிக்கிட்டே இருந்துச்சு. இன்னும் அந்த "தனம்" இருக்கு. இந்த கரடு முரடான பாதையின் மூலமாக எனக்கு கிடைச்ச ஒரு சந்தோஷம் என் மகன். :-). இதுவும் சாதனைதானே?

(எட்டு). நான் அமெரிக்கா வந்தப்பெல்லாம் இம்பூட்டு சாஃப்ட்வேர் மக்கள்ஸ் இல்லை இங்க. இப்பத்தான் எங்கே நான் இருக்கேன்னு தெரியாத அளவிற்கு நிறைய இளம்தாரி புள்ளைகள பார்க்க முடியுது. என் முதல் வேலை இங்க வந்தவுடன் பார்த்தது ஒரு விரைவு உணவகத்தில் அதுவும் கடை மூடுற ஷிஃப்ட், விடிகாலை மூன்று மணிக்கு துடைச்சு, மொழுகி, கடையடைச்சுட்டு பனிக்காலங்களில் மிதிவண்டி அழுத்த முடியாதாகையால் கால்நடையாக சில நேரங்களில் முழங்கால் முழுக சரக் சரக்கென்று கொட்டிக் கிடக்கும் snowவின் ஊடே நடந்தே வீடு சேர்வது. சேர்ந்த புதிதில் நிறைய நின்று வேலை செய்தும், டேபில் துடைச்சு பழக்கமில்லாததாலும் இந்திய அசட்டுத் தனத்தில், பாத்ரூம் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டு அழுததுண்டு.

இப்பொழுது நினைத்தால் நான் எவ்வளவு spoilt bratஆக இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று புரிகிறது. ஆனால் அந்த வேலையின் மூலமாக நான் எப்படி corporate(capitalistic) america வேலை செய்கிறது என்பதனை அறிந்து கொண்டேன்.

வந்த புதிசில இங்க உள்ள நிறைய பல்கலை கழங்களுக்கு போக வாய்ப்பும் கிடைத்தது. அப்படி கிடைச்சப்ப என் தீஸிஸ் எழுத நிறைய ரிபஃரென்ஸ்க்கு அங்குள்ள நூலகங்களையும் பயன் படுத்திக்க முடிஞ்சுச்சு. எப்படி உண்மையான அறிவியல் உலகம் இந்த உலகத்தில் இயங்குகிறதென கண்கூடாக பல அறிவியல் கான்ஃபரென்ஸ்களில் காண நேர்ந்தது.
இங்கும் அதே பல்லவியே பாடப்பட்டது (brown nosing, internal politics, references etc., etc.,). விடாது இந்திய வன ஆராய்ச்சித் துறையில் முனைவர் பட்டத்துடன் இங்கு கணிதத்தை தவிர வேறு எது கொடுத்தாலும் அடித்து விளையாடும் சொந்த நாட்டுக் காரர்களுடன் பேசிச் ஜெயிப்பது என்பது கொம்பாகவே எனக்குப் பட்டது. சிறிது காலங்கள் மோதி விட்டு, எனது ஆர்வத் துறையிலிருந்து நிறைய மாற வேண்டி இருந்ததால்(compromise), துறைசார் வேலையை கொஞ்சம் தள்ளிப் போட்டு விட்டு இப்பொழுது எனக்கு நானே சம்பளம் கொடுத்துக் கொள்வதாக வாழ்வை அமைத்துக் கொண்டது.

சரி முடிச்சுடறேன். இதிலிருந்து என்ன தெரிஞ்சுக் கிட்டேன் வாழ்க்கையைப் பற்றின்னா. ரொம்பச் சிம்புல். நீ யாரோ அதுவாகவே இரு. பேப்பர் ரோஸ்டை (அட தோசைங்க) அமெரிக்காவில் இருக்கிறேன் என்பதற்காக fork and knifeவைத்து சாப்பிட்டு உன்னையே காமெடியன் ஆக்கிக்கொள்ளதே :-). படிப்பு என்பது உன் கண்களை திறந்து காட்டி, சிந்திக்க வைப்பதற்கு மட்டுமே அந்த பட்டையங்களை ஈன்று விட்டதின் மூலமாக நான் அதி புத்திசாலியாகிவிட்டதாக பொருள் கிடையாது. அடக்கம் அமரருள் உய்க்கும்.

அட ஆமாமில்ல எட்டு பேர நான் பரிந்துரைக்கணுமில்ல:

மதி கந்தசாமி
நவன்
சுந்தர வடிவேல்
குமரன்(Kumaran)
செல்வ நாயகி
ஞானசேகர்
மங்கை
சுகா

யம்மாடியோவ். தண்ணீ ப்ளீஸ்.

Monday, July 02, 2007

எப்பொழுதும் ஏழரை இப்ப *எட்டு* பாகம் - I

இதுக்கு மேலேயும் நான் காத்துகிட்டு இருந்தேன்னு வைச்சுக்கோங்க ஏதாவது பார்சல்ல எனக்கு அனுப்பி வைச்சுடப் போறாங்க இந்த ஜோதியில கலந்துக் கொள்ளச் சொல்லி கூப்பிட்டுருந்தவர்கள்.

அது என்னமோ தெரியலை என்னையும் மனசில நிறுத்தி மூணு பேரு கூப்பிட்டு இருக்காங்கப்பா. முதலில் கப்பிப் பய கத்தியிருந்தார் இங்கே, பிறகு கவிதா கூவியிருந்தார் இங்கே, கடைசியா நம்ம தருமி கர்ஜித்து இதுதான் உனக்கு மருவாத அம்புட்டுத்தேன், வந்து உள்ளேன் அய்யா சொல்லிட்டு ஓடிப்போன்னு சொன்னதுக்கப்புறமும் வரலைன்னா சரியா வருமா வராது அதான் வந்துட்டேன். இனிமே இது உங்கப் பாடு.

(ஒண்ணு). எங்கே ஆரம்பிக்கிறதுன்னே தெரியலையே. சரி நான் செத்து பொழச்சவண்டாங்கிறதில இருந்து ஆரம்பிப்போம். ஏன்னு கேளுங்க நான் பொறந்தப்பா உசிரோட இருப்பனான்னே நிறைய பேருக்கு சந்தேகமா இருந்துச்சாம். என் பாட்டி சொல்லும் மண்டை மட்டும்தான் இருந்துச்சு மரைக்கா மாட்டமின்னு (தலைபிரட்டை மாதிரி - பாருங்க அப்பவே நான் இயற்கை நேசியா இருந்திருக்கேன் :-) ).

எப்படியோ, அப்படி இப்படின்னு தட்டி கிட்டி அந்த தலைபிரட்டை ஸ்டேஷ்ல இருந்து "துணைவன்" ஸ்டேஷ்க்கு கொண்டுவந்து விட்டுடாங்க. ஏன் துணைவனா, இதுக்கப்பறம் இவன் பிழைச்சா தம்புரான் செயல்னு முருகன்டே நேந்துக்கிட்டாங்களாம். அதான் அந்தப் பட்டப்(பட்டுப் போன?!) பெயர். அந்த பேருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் பின்னாலே என் மண வாழ்க்கையும் அமைஞ்சுச்சு அதனையும் சொல்றேன்.

(இரண்டு). பள்ளிப் பருவத்தப் பத்தி சொல்றதா இல்லையா. சொல்லாம விட்டா நிறைய விட்டுப் போகுமில்லை. சரிங்க, ஒன்னாப்புல இருந்து மூனாப்பு வரைக்கும் யாரும் என் கிட்ட நெருங்கி ஸ்கூலுன்னு சொல்லவே பயப்படுவாங்களாம். அப்படியே இருந்தாலும் ரெண்டு பேரு தரத்தரன்னு இழுத்து கொண்டுபோய் விடணுமாம், அப்ப இரண்டு பக்கமும் திரும்பி திரும்பி கடிச்சி எல்லாம் வைப்பேனாம்.

பள்ளிக்கூடம் சும்மா பேருக்குத்தான் "அரசாங்க ஆரம்பச் சீரணிப் பள்ளியோ" என்னமோ பேரு. இப்ப என்ன, சொல்லிப்பிடறேன், யாராவது என்னைய தம்பி உனக்கு எ.பி.சி,டி தெரியுமாடான்னு கேட்டுப் புட்டா அடுத்த முறை அவரு என்ன பார்க்க பல மாதங்கள் ஆகலாம். ஒரு முறை என் மாமா ஒருத்தர் பிடிங்கடான்னு என் தம்பியையும், என் சகோதரியையும் விட்டு 500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுற கணக்கா ஓடுன என்னைய துரத்திப் பிடித்துக் அமுக்கி கொண்டுவந்து அவரு கையில ஒப்படைச்சாங்க. அன்னிக்கு கொஞ்ச நேரம் கூடையில அமர்த்தி கிணத்துக்குள்ள இறக்கி வைச்சாங்க, மனப்பாடம் பண்ணேன், 26 லெட்டர்ஸையும். சாதனை, இல்லையா.

பிறகு பத்தாம் வகுப்பு பரிட்சை. தகிடு தத்தம் போட்டு கடம் அடிச்சி, அடிச்சி பாஸுக்கு மேல பண்ணிப்புடுவேன்னு எழுதி இருந்ததிலே, முதல் நாள் சாயந்திரம் வந்த "மாலை முரசில" எப்படியோ 75ல இருந்து 80க்கு கிடையில் போட வேண்டிய ஹைஃபென்(-) இல்லாம போனதால நான் பெயிலு. இரவு பதினோரு மணி வரைக்கும் வீட்டுக் போறதா வேண்டாமான்னு உட்கார்ந்து இருக்கும் பொழுது அப்பா வந்து "அட வாடா இதுக்கு போயி அலட்டிக்கெல்லாமான்னு" வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி எல்லோரும் வெளிய படுத்திட்டு என்னைய மட்டும் பத்திரமா உள்ளேயே வச்சுப் பார்த்துக்கிட்டாங்க.

இருந்தாலும் மறுநாள் காலையில ஒரு சின்ன நம்பிக்கை, எங்க மத்த நாளிதழ்களெ எப்படி இருக்குன்னுப் பார்ப்போமின்னு "தினகரன்" வாங்கிப் பார்த்தா... பார்த்தா.... ஆத்தா நான் பாஸாகிட்டேன்னு வயல் வரப்பில ஓடிட்டு சொல்ற கணக்கா நான் கண்ணு முண்ணு தெரியாமா மிதிவண்டிய அழுத்திகிட்டே போயி எங்க கடையில இருந்த அத்தனை கஸ்டமருக்கும் யோவ் அப்பா எல்லோருக்கும் இலவச ட்டீய போட்டுக் கொடுக்கச் சொல்லுமய்யான்னு ஆர்டர் போடுற அளவிற்கு இன்ப அதிர்ச்சியில மிதந்ததை சொல்லவா.

கணக்க நினைச்சாலே கண்ணு கட்டுனதுனால +2வில ப்யூர் சயின்ஸ்தான் படிப்பேன்னு, ITIதான் உன் வசதிக்கு முடியுமின்னு படிச்சவங்க என்ன சுருட்டிப் போட நினைச்சும், அழுது புரண்டு +2வும் சேர்ந்தாச்சு. அப்பத்தான் அய்யாவுக்கு பர்சனாலிட்டி ப்ரக்ஞை துளிர்விட ஆரம்பிச்ச நேரம் (வயசுக்கு வந்தாச்சில்ல:-).

உடனே ஒடம்ப தேத்தணுமின்னு தமிழ்வாணன் பிரசுரத்தில இருந்து அயிரம் எப்படிகளிலிருந்து "கரத்தே கற்றுக் கொள்ளுங்கள்" VPP மூலமாக தருவிச்சு பணம் டெலிவரியப்ப கொடுக்கிற மாதிரி செஞ்சுருந்தேன். புத்தகமும் வந்துச்சு. அப்பா தான் கடையில இருந்தார். புத்தகத்தையும் பிரிச்சு பார்த்தார். பணத்தை கொடுத்துட்டு, கடுப்பாகி "புல்தடுக்கிப் பயில்வான் மாதிரி இருந்துக்கிட்டு ஏண்டா உனக்கு இந்த வேலை" அப்படின்னுட்டு என்கிட்ட கொடுத்துட்டார். உள்ளர சந்தோஷம் இருந்திருக்கமலா இருந்திருக்கும், அப்பாவுக்கு.

அது என் நண்பர்கள் வட்டத்திற்கு வர இன்னமும் ஊர்ல சில பேர் என்ன செல்லம கூப்பிடுற பேரு "புல்தடுக்கி பயில்வான்." பிறகு சாயந்திர வேளைகளில் ஆ, ஊன்னு கை கால்களை மாத்தி, மாத்தி காத்தில் உதைப்பதை பார்த்து எங்க பாட்டி (ஆத்தா)விலிருந்து, வீட்டுக் கோழிவரை என் பக்கமே வராமல் "அடியே ஒமவனுக்கு என்னமோ ஆயிப்போச்சுடின்னு" சொல்லிக்கிட்டு திரியற அளவிற்கு பாடி பில்டிங் நடந்துச்சு ஒரு நாலு வாரத்துக்கு.

(மூணு). படிப்ப சீரியச எடுக்க அரம்பிச்சது கொஞ்சம் +2விலதான்னு நினைக்கிறேன். ஆனால் அது நாள் வரைக்கும் இங்கிலிபீஸ்னாவே வேப்ப மரந்தான் என் ஞாபகத்துக்கு வந்தது. பள்ளிய முடிச்சுப் போட்டு திருச்சிப் பக்கம் கொண்டு போய் தள்ளிவிட்டுட்டு வந்திட்டாங்க பட்டப் படிப்பிற்கென.

அங்கேயும் கணிதமில்லாத பாடந்தே வேணுமின்னு விலங்கியல் எடுத்தேன். ஆனால், ஆங்கில வழி கல்வியாப் போச்சே. சமாளிச்சேன். அங்கேதான் வாழ்க்கையைப் பற்றிய ப்ரக்ஞை கொஞ்சம் எட்டிப் பார்க்க ஆரம்பிச்சது. ஹாஸ்டல் கிடைக்காம மன்னார்புரத்தில குமார் லாட்ஜில் தங்கி, சாப்பாட்டுக்கு இங்கயும் அங்கயும் அலைஞ்சு, அதுக்கிடையிலேயே, என். எஸ்.பி ரோடு போயி கலர் பார்த்து, ஐஸ்க்ரீம் சாப்பிட கத்துகிட்டு, விடாம குரூப் குரூப்பா சினிமா போயி யாரையும் சினிமா பார்க்கவிடாம தருதலத்தனம் பேசி...

இப்படியே போயிக்கிட்டுருந்த வாழ்க்கை கடைசி செமஸ்டர்ல அலட்சியமா மரபியல், சைட்டோலஜி மற்றும் பரிணாமப் பேப்பர்ல ஜஸ்ட் மிஸ்ஸிடு மூணு மார்க் ரீதியில ஃபெயிலாப் போயி, வீட்டுல ஒரு வருசம் உட்காரப் போயி, நிஜம் இன்னமும் சுட ஆரம்பிச்சது. அடுத்தது என்னான்னு புரியலை. வீட்டுல ஏற்கெனவே ஒரு எம்.எஸ்சி குத்த வைச்சு உட்கார்ந்து இருக்க அதே சமயத்தில் இப்ப நான் வேற. அப்பத்தான் உணர ஆரம்பிச்சேன், ஆங்கிலம் இல்லைன்னா உலகத்தில ஒண்ணுமில்லையோன்னு. ஆங்கில கிறுக்கு பிடிக்க ஆரம்பிச்சுச்சு.

ஊரில் வந்த தி ஹிண்டு, ஸ்போர்ட்ஸ் ஸ்டார், Fரண்ட் லைன், பழைய ரீடர்ஸ் டைசஸ்ட்னு அப்பா சக்திக்கும் மீறி தினமும் பரிட்சைக்கு படிக்கிற மாதிரி ஆங்கில டிக்சனரியும் கையுமாய் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து மணி நேரம் மேய ஆரம்பித்தேன் ஒரு வேப்ப மரத்தடிக்கு கீழே அமர்ந்து.

பிறகு இரவு முழுக்க ரேடியோவை தலைக்கு பக்கத்தில வைச்சுக்கிட்டு, voice of america, radio masco அப்படி இப்படின்னு sw2ல போட்டு விடிய விடிய கேக்கிறது. திரும்பவும் ஆத்தாதான் எல்லார்கிட்டயும் பொழம்பித் தள்ளும், எங்கடி அவன் தூங்கிறான் ரா முழுக்க என்னாதான் அந்த ரோடியோ பொட்டியில இருக்கோ அதப் பிடிச்சு நோண்டிக் கிட்டே இருக்கான்னு சொல்லும். அதனை இன்னமும் அப்பாவும், அம்மாவும் எனது கடின உழைப்பிற்கு கீழே அந்த நாட்களை சேர்த்துக் கொள்வார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் பிரியற மாதிரி இருந்துச்சு.

பிறகு ஒரு மன நோயாளி கணக்கா கொல்லைக்கு போறப்ப, வாரப்ப, தனியா நடந்து திரியறப்பன்னு எனக்கு நானே ரெண்டு காரெக்டர்வச்சுக்கிட்டு (hi, how are you - i am fine) கேள்வியும் நானே பதிலும் நானேன்னு பேச்சு ஆங்கிலத்த வளர்த்துக்க பேசித் திரிவேன்.

இருந்தாலும் பாருங்க, உச்சரிப்பு இன்னமும் கைகூடலை. அதுவும் நம்ம ரேடார்ங்கிற ப்ரக்ஞைக்கு கீழே வராத நேரம். அது தொடர்ப நிறைய அசிங்கப் பட்டதுமுண்டு.அதுக்கு ஒரு உதாரணம் Pony Horseக்கு Bony Horseன்னு சொல்லி எல்லாரையும சிரிக்க வைச்சது. அது எல்லாருக்கும் சிரிப்பு எனக்கு நெருப்பா இருந்துச்சு. அது எதுக்காக சிரிக்கிறாங்கன்னு தெரியலை. முட்டி மோதி தெரிஞ்சிக்கிட்டப்ப கையில the oxford dictionary pronunciationக்கு உதவி பண்ண வந்துச்சு...

மிச்சத்தை அடுத்த அடுத்தப் பதிவில சொல்லிக்கிட்டே வாரேன்... பதிவு பெருசாப் போயிக்கிட்டே இருக்கு, உடைச்சு உடைச்சுத் தாரேன்...

தொடரும் பாகம் - 2ல.

Sunday, June 18, 2006

இதோ எனது ஆறு...

என்னை ஆறுடன் இணைத்த நாகை சிவாவிற்கு நன்றிகளுடன் எனக்குப் பிடித்த ஆறுகள் இங்கே...

I பிடித்த ஆறு மனிதர்கள்:

* பயணத்தின் பொழுது அருகே அமர்ந்திருக்கும் எவரும்...

* சட்டை போடத எங்கள் ஊர் ஊமையன் (பெயரளவிற்கு)...

* எனது நல்ல நண்பர்களாகிப் போன அப்பாவும், அம்மாவும்...

* எனது குட்டி நண்ப-மகன்...

* வாழ்கையை நிஜமாக வாழும் எவரும் (உள்ளொன்று வைத்து புறமொன்று)...
* போரட்டமே வாழ்வாக வாழ்ந்து இப்பொழுதும் ஜெயிக்கத் துடிக்கும் எந்த மனிதர்களும்...

II பிடிக்கமலேயே(பிடித்து) செய்து வருவது:

* கண், காது போலவே இப்பொழுது ஒட்டிக் கொண்டு திரிய எத்தனிக்கும் செல் ஃபோன்...

* பெட்ரோல் போடும் பொழுது என் வாகனத்தின் மீது ஏற்படும் வெறுப்பு...

* சாரை சாரையாக போகும் கார்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு நெளிவது...

* வீட்டினுள் தமிழ் சப்தம் கேட்பதற்கென இருக்கும் சன் ட்டி.வி...

* வீட்டிற்குள் நடக்கும் வெட்டிப் பஞ்சாயத்து...

* மிதந்து பேசும் அன்பர்களுடன் உரையாடல்...

III எப்பொழுது வேண்டுமானாலும் செய்ய விரும்புவது:

* மிஸ்டியான காலையில் தனிமையில் காட்டிற்குள் சென்று பறவைகளின் சப்பதத்தை பருகுவது...

* மழை பெய்யும் பொழுது மழைக் காடுகளில் மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டே அதன் அழகை ரசிப்பது...

* மழைத் துளி சிலீர் சிலீரென்று முகத்தில் அறையெ கண்ணை குறுக்கிக் கொண்டு டூ-வீலர் ஓட்டுவது...

* இப்பொழுது பழகிப் போன அட்லாண்டா - நூ யார்க் கார் பயணம், தன்னந் தனியே சிந்தனைகளினூடையே பாடல்கள் மட்டுமே உணவாக அருந்தி 18 மணி டிரைவிற்கு பிறகு தரிசனம்...

* இந்தியாவில் எங்கே போகிறோம் என்று தெரியமாலே பயணிக்கும் நீண்ட தூர ரயில் மற்றும் பேருந்துப் பிரயாணங்கள்...

* ஹிமாலய மலையோரங்களில் பேருந்தில் அமர்ந்து கீழே வீழ்ந்து கிடக்கும் பள்ளத்தாக்குகளை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ந்து விடலாம் என்ற நினைவுக்கூடேயே பயணித்துக் கொண்டே அதன் அழகைப் பருகுவது...

IV வாழ்வின் பிரமாண்டங்கள் என நான் எண்ணி பிரமிப்பது:

* எப்படி உலகில் உள்ள இந்த ஏழு பில்லியன் மக்களும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாச வித்தியாசமாக இருப்பதை காணும் பொழுது, இயற்கையின் பிரமிப்பை கண்டு மலைத்துப் போவது...

* எப்படி நாம் சிந்திக்கும் விதம் நம்மை யார் என்பதனை நிர்ணயிக்குது என்பதனை சிந்திக்கும் பொழுது...

* பஞ்சம், பட்டினி என்பது எப்படி ஒரு சாரருக்கு மட்டும் சொந்தமாகிப் போனது என்று பார்க்கும் பொழுது...

* பஞ்சத்திலிருந்து தப்பித்து மூணு வேளை சாப்பாடு நிச்சயம் எனும் நாளில் வானத்தை அண்ணாந்து பார்க்க கற்றுக் கொண்ட மனிதம்...

* எப்படி மனித மனம் மட்டும் "இப்படியும்" "அப்படியும்" எண்ணக் கற்றுக் கொண்டது... அவர் அவர்களின் தேவைகளுக்கேற்ப...

* திறந்த கதவின் நிலையை பிடித்துக் கொண்டு வானத்தை பார்த்துக் கொண்டு ஏதோ நீண்ட பிரயாணம் பூமிப் பந்தில் இருந்து கொண்டு செல்வதாக எண்ணித் திளைப்பது - ஏனைய கோள்களின் இருப்பும், அதன் சுழற்சியும், பால் வீதிகளின் மிதப்பும் அதன் பயணங்களும், பிறகு இப் ப்ரபஞ்சத்தின் அகன்ற விரிவடையும் தன்மையினை நினைவிற் கொள்ளும் பொழுது ஏற்படும் மலைப்பு - இரவு வானம்.

V படித்ததில் மனதில் தைத்தது:

* தே தேர்டு சிம்பன்சி - ஜேர்டு டைமண்ட் எழுதியது, ஒரு பரிணாம சிந்தனையூட்டு புத்தகம் - மனித விலங்குகளைப் பற்றியது...

* த புக் - ஆலன் வுட்ஸ் எழுதியது, எல்லா மதங்களையும் தோலுரித்து, மதங்கள் எப்படி மனிதனுக்கு சங்கிலியிட்டுச் சென்றிருக்கிறது என்று காட்டும் பொருட்டு உள்ள தத்துவப் புத்தகம்...

* ஓஷொ எழுதிய அருதிப் பெரும்பான்மையான படைப்புகளும்...

* டீபக் சாப்ராவின் சில படைப்புகளும் அவரின் எண்ண ஓட்டமும்...

* பால்ய வயதில் படித்த தி. ஜா-வின் மோக முள்... (சில வருடங்களுக்கு முன்பு படித்த "த அல்கெமிஸ்ட்" - Paulo Coelho)...

* இன்னும் படித்துக் கொண்டே பிரமித்துக் கொண்டிருக்கும் - ஸ்டீவன் ஹாவ்கிங்-ன் ப்ரபஞ்சம் பற்றி எழுதிய புத்தகங்கள்...

VI என்னை சமீபத்தில் கவர்ந்த ஆறு பேர்:

நிறையெ பேர் இங்கு இருக்கிறார்கள், முன்னமே அவர்கள் இந்த ஆறில் கலந்து விட்டதால் இப் பொழுது சில பேர் என் பார்வையில்...

* தருமி

* ஞானசேகர்

* நாமக்கல் சிபி

* செல்வ நாயகி

* சந்தோஷ்

* கார்த்திக்

Tuesday, May 30, 2006

இன்னொரு புலம்பல் மதுமிதாவிற்காக...

வலைப்பதிவர் பெயர்: பிரபாகர்

வலைப்பூ பெயர் :

தெக்கிக்காட்டான் - எனது வளர்சிதை மாற்றத்தினைசமூகத்தினுடே புகுத்தி என்னை வளர்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் தொடங்கப்பட்டது.

இயற்கை நேசி - இயற்கை சார்ந்த விழிப்புணர்வேற்று பூ

ஊருணி - எனது ஆங்கிலப் பதிவு

ஊர்:

புதுக்கோட்டையை அடுத்த சிறு காய்ந்துப் போன டவுனுமில்லாத கிராமமுமல்லாத - கரம்பக்குடி. எங்கெங்கோ எதற்கோ சுற்றித் திரிந்துவிட்டு, தற்போதைய வாசம் அட்லாண்டா...

நாடு:

இப்ப எந்தப் பக்கம் ரெண்டு பக்கமும்தான், இந்தியா-அமெரிக்கா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:

என் பசி என்னைக் இங்கு கொணர்ந்தது எனலாம்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :

அக்டோபர், 09, 2005

இது எத்தனையாவது பதிவு:

எல்லா பூக்களையூம் சேர்த்து 56

இப்பதிவின் சுட்டி(url):

http://thekkikattan.blogspot.com/2006/05/blog-post_30.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:

*தெக்கிக்காட்டன்* என்பது ஒரு வலைப்பூவின் பெயர். ஏன் அப்படி ஒரு பெயரை பொருக்கி எடுத்தேன் என்றால், ஒரு ந(ட்)ப்பு ஆசையில்தான் எத்துனை பேர் இங்கு பெயருக்கும் ஆளுக்கும் முடிச்சுப் போடமல் உள்ளே வருகிறார்கள் தைரியமாக என்பதனை காண்பதற்கும், சுய அறிவிப்பாக நான் பெயருக்கும் வெளிப்புற தோற்றதிற்கும் அப்பாற்பட்டவன் என்பதனை உணர்த்துவதற்குமே... அங்கு நான் வளர்ந்து சிதைவுறுவதை அவ்வப்பொழுது எழுதி வருகிறேன் (எழுத்துப் பிழைகளுடன்).

எனது மற்றொரு வலைப்பூ *இயற்கை நேசி* அங்கு இயற்கை விழிப்புணர்வூட்டும் பொருட்டு எனது சொந்த அனுபவங்களையும், படித்ததையும், பார்த்தையும், கேட்டதையும் ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டும், பரிணாமம் எனும் இப்பொழுதுக்கு கெட்ட வார்த்தையாக உள்ளதை நல்ல வார்த்தையாக்கும் முயற்சிலும் கூட அப்பூவை இயக்க எண்ணம்.

*ஊருணி* எனும் ஆங்கில வலைப்பூவும் உள்ளது, அதில் நிறைய விசயங்களை என்னுள் நடக்கும் மாற்றங்களை, புரிதல்களையும் பதித்து வைக்கிறேன், தெக்கிக்காட்டான் பதிவுகளுக்கும் இந்த வலைப்பூவிற்கும் சிறிது தொடர்பு இருக்கலாம்.

சந்தித்த அனுபவங்கள்:

எதனை விடுவது எதனை சேர்ப்பது... கற்றுக்கொண்டே இருக்கிறேன், நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமுமாக... அனுபவமே ஒருவரின் அளவிற்கரிய பெட்டகம் என்பதனை நம்புகிறேன்.

பெற்ற நண்பர்கள்:

ஹீம்... மனிதர்கள் பலவிதம்... ஏகப்பட்ட நல்ல உள்ளங்கள், வளர்ந்தும் வளரும் நிலையிலும்.

கற்றவை:

அனுபவமே ஒருவரின் அளவிற்கரிய பெட்டகம் என்பதனை நம்புகிறேன். மேலும் அன்பே சிவம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:

கிடைக்கிறது... இருந்தாலும் கொஞ்சம் பின்னால் திரும்பி பார்த்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

இனி செய்ய நினைப்பவை:

என்னை வளர்த்துக் கொள்வதும், பலதரப்பட்ட மனிதர்களின் மூக்குக் கண்ணாடியின் வழியியே இவ்வாழ்வையையும் அதன் முறண்பாடுகளை காணுவதும்...

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

எங்கே தொடங்குவது... ஹீம் அதான் அந்த ரெண்டு கெட்டான் ஊரு கரம்பக்குடி, மழை பேஞ்சாத்தான் தண்ணீர் அப்படிங்கிற காஞ்சுப் போன புழுதி பறக்கும் ஊருல என்னுடைய பயணம் ஆரம்பித்து, ஊரணிக் கரையில இருக்கிற அரச மரத்தில ஏறி உக்கார்ந்து பரீட்சைக்கு படிச்சி, அப்புறம் ஊர் ஊரா சுற்றி அந்த டிகிரி இந்த டிகிரின்னு வாங்கி, கடைசில கோயம்புத்தூர் பக்கமா போயி மழைகாடுகளில் ஆதிவாசிகளோட வாசிகளா ஐக்கியமாகி. அங்கொயிருந்து சம்பந்தமே இல்லாத கான்கீரிட் காடான அமெரிக்கா வந்து விழுந்துட்டேன் இப்போ.

Related Posts with Thumbnails