Showing posts with label சிறு கதை முயற்சி. Show all posts
Showing posts with label சிறு கதை முயற்சி. Show all posts

Sunday, July 09, 2006

மரணம் இனிக்கிறது - (தேன்கூடு போட்டி)

"உஸ் என்ன எழவுடிது, பத்து மணிக்கெல்லாம் மண்டையெ போட வைக்கிற வெய்லு கொளுத்துன்னு," அங்கலாய்த்துக் கொண்டே 101 வயது ருக்கு கொல்லைப்புறம் இருக்கிற மகவீட்டு திண்ணையிலே விசிறி மட்டையும் கையுமாய் தினமும் தன் கட்டையை சாய்த்துவிடுவாள் ருக்கு கிழவி.

கிழவி வயசுக்கும் விசிறி மட்டைக்கும் ஒரு தொடர்பு இருக்குங்கிற மாதிரி, கிழவி தூங்குதா இல்லை முழிச்சுகிட்டு இருக்குதான்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, ராத்திரி ஒரு மணியா இருந்தாலும் சரி, மூணு மணியா இருந்தாலும் சரி கைமட்டும் விசிறியொட வீசிகிட்டே இருக்கும்.

ருக்கு ஆத்தாவின் உயரம் நல்ல ஆறடிக்கு இருந்திருக்கணும், நல்ல வெட வெடன்னு உயரம், எளமையிலே நல்ல கலரோட இருந்திருக்கும்ன்னு யார் பார்த்தாலும் சொல்லிடலாம். அப்படி ஒரு உடல் வாகு. ஆனால் முதுமையின்னாவே திரும்பவும் குழந்தையா தேய்றதானேன்னு, கிழவியும் தினமும் கொஞ்ச கொஞ்சமா சுருங்கி போய்கிட்டே இருந்தது. உடல் அளவிற்கு. ஆனா மனசு எப்பொழுதும் ஒரே மாதிரிதான். இன்னமும் அதொட கணவர பத்தி பேசி கிண்டல் பண்ணா வெட்கம் பார்க்கமுடியும் அதுகிட்டெ.

ஆனாலும் இப்பவும், நல்ல திடகாத்திரமா, யார் உதவியுமில்லாம தான் உண்டு தன் வேலை உண்டுன்னு குளிக்கிறதிலேருந்து மற்ற எல்லா வேலையுமே காலைலெ டாண்னு அஞ்சு மணிக்கு எல்லாம் எழுந்திருச்சு செஞ்சிடும்.

ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ராத்திரிலே கண் தெரியாம திறந்து கெடந்த கிணத்துக்குள்ளே விழுந்து, கூடையிலே சவாரிச்சு மேலே வந்துச்சு உடைஞ்சுப் போன இடுப்போட, அன்னிலைலிருந்து குமிஞ்சுதான் நடக்கணும்கிற நெலமை.

அப்படி இருந்தாலும் தினமும் நேரத்திலே வீட்டு கொல்லைப்புறம் பெருக்கிறதிலேருந்து, சாமன் சட்டு கழுவுற வரைக்கும் ஒண்ணும் விட்டு வைக்கிறது கிடையாது. ரெண்டு புள்ளைங்க பெத்ததுதான். ஆசைக்கு ஒண்ணுன்னு. இப்பொ மவன் பெரிய ஆபிசர ஊருர போய் உத்தியோகம் பாக்குறான், மவ உள்ளூருலேயே கட்டிக் கொடுத்து, இன்னைக்கும் கிழவிக்கு துணையா இருக்கா.

கிழவிக்கு எந்த குறைச்சலும் இல்லைதான். யாரடவாது பேசிக்கிட்டே இருக்க ஆளுங்க, நல்ல ஊர் கதை பேசும். ஆனா நெளிவு சுளிவுவோட. அப்படியும் எப்பாவது பிரச்சனை வந்து மவ காதுக்கு வரும் போது கொஞ்சம் ரெண்டு பேருக்கும் அரச புரசலா சாப்பாடு நேரத்திலே, "இந்த கிழவிக்கு வாய வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா, ஏன் இப்படி பண்ணிவைச்சுத் தொலையுது" அப்படின்னு மவ ஆரம்பிக்க, கிழவி, "அடி நான் என்னடி அப்படி சொல்லிப்புட்டேன், வாயெ புடுங்கினா ஒரு வார்த்தை சொல்லி வைச்சேன்" அப்படிங்கிறது அப்பபொ நடக்கிற பேச்சு.

ஆனா கிழவிக்கு இந்த வெயில் காலம் வந்துருச்சுன்னா சுத்தமா பிடிக்காது. ஏதோ நெஞ்சு பட படன்னு கோழி இறக்கைய அடிச்சுகிறது மாதிரி அடிச்சுகிதுன்னு கம்ளைண்ட் பண்ணிகிட்டே விசிறி மட்டையும் அதுவுமா மரத்துக்கு மரம் போயி உட்கார்ந்து விசிறிகிட்டே இருக்கும். பாக்கவே பாவமா இருக்கும்.

கிழவி வாழ்க்கையிலே எல்லாத்தையும் பார்த்துருச்சு. கணவனே தன்னோட 27 வயசிலேயே சாக கொடுத்திட்டு, அவரு வச்சுட்டுப் போன நெல புலங்களே வைச்சு புள்ளைய படிக்க வைச்சு, கல்யாணமும் பண்ணிக் கொடுத்து, மருமவ வெறுப்பு பார்த்து, மகன் பாசத்துக்கு ஏங்கி, தன் அண்ணன் வீட்டு புள்ளைங்க பசி, பட்டினியா கெடக்கிறத பார்க்க சகிக்காமெ கொல்லைப்புறம ஒரு புள்ளைய வரச் சொல்லி கழுத்துச் செய்ன கழட்டிக் கொடுத்து, மக வீட்டு பசி, பட்டினியிலெ உழண்டு, ஆறுதலா அங்கேயே கிடந்து, ரெண்டு வீட்டு பேரக் குழந்தைங்களயும் பார்த்து வைச்சுருச்சு.

கடைசிய மவ வீட்டு பஞ்சமும் பறந்து போய், பேரக் குழந்தைகளும் அது அதுவும் அங்கொண்னும் இங்கொண்னும்மாய் மணம் முடிச்சுப் போக ஆரம்பிக்கும் போது, அதுக்கு வயது 101 இருக்கலாம். அப்பவும் ஒரே புலம்பல்தான், "என்னாட பசங்களா என்னையெ விட்டுட்டு எல்லாம் போறீங்க, சாகக் கிடக்கையிலே யாரும் பக்கத்திலே இருக்க மாட்டீங்க போலன்னு." அப்படியேதான் நடந்தும் முடிஞ்சிச்சு.

அந்த கிழவி ஒவ்வொரு நாளும் காலன திட்டமா இருந்ததே இல்லை, எப்பெல்லாம் சின்ன வயசு பசங்கலோ இல்லை யாருக்கவாது மாரடைப்பே வந்து செத்து போன கிழவியோட பொலம்பல் இப்பிடித்தான் இருக்கும் "பாவம் நேத்தைக்கு மொளச்ச காளானெ எல்லாம் டக்கு டக்குன்னு பிடிங்கிக்கிறான், பாழப் போன எமதர்ம ராசா, என்னை அழைச்சுக்கிட்டா என்ன கேடு, அதுகளெ வுட்டுபுட்டுன்னு." அப்படி ஒரு மனசு.

அந்த ருக்கு கிழத்துக்கும் ஒரு நாள் அழைப்பு வந்தது. வயித்துபோக்குன்னு. மறுநாள் ரொம்ப அமைதியா தன்னை சுத்தி பேத்தி மக, கொள்ளு பேத்திகள், பேரன்கள் நிக்க, தன் மகளை மட்டும் கூப்பிட்டு ’ஒரு வா தண்ணி குடுடின்னு’ வாங்கி குடிச்சுப்புட்டு, கையிலிருக்க விசிறிமட்டை இன்னும் யாருக்காகவோ விசிறிக்கிட்டு இருக்கிற மாதிரி விசிறிக்கிட்டு இருக்க, மகளை வைச்சக் கண்ணு வாங்காம, தூங்குறத்துக்கு போற மாதிரியா எந்த வலியோ, குழப்பமோ, பயமோ இல்லாமல் இமைங்க மட்டும் படம் பார்த்த வரைக்கும் போதுமின்னு மூடிக் கொண்ட மாதிரி மூடிக்கிச்சு.

இந்த கிழவி பள்ளிக்கூட பக்கம் போனதில்லெ, ஒரு வார்த்தை படிக்கத் தெரியாது. ஆனா நிறையெ பேருக்கு ஏதோ ஒரு விதத்தில உதவிருக்கு. யாருக்குமே சுமையா இல்லாம, சத்தமில்லாமலே வந்து, சத்தமில்லாமலே வாழ்ந்து போயிருக்குது. நெனச்சுப்பார்த்தா மரணத்தை இந்த கிழவியை விட யாருமே அனுபவிச்சு தழுவியிருக்க முடியாதோ அப்படின்னு தோணுது.

Related Posts with Thumbnails