Wednesday, February 28, 2018

பேரரசன் அசோகர் - பகுதி 1 by தருமி

இந்த அத்தியாயத்தில் வரலாற்றை, புராணங்களின் வழியாக திருத்தி, இடைச்செருகல் செய்து தங்களுக்கு தேவையானதை செய்து வந்திருக்கிறார்கள் வேத விற்பன்னர்கள் என்பதாக தெளியவைக்கிறது.
இன்றைய காலத்தில் மோடி, எடப்பாடி, பன்னீர் போன்ற அடியாட்களை (ஷத்ரியர்களை) முன் நிறுத்தி வேலை நடத்திக்கொள்வது போலவே, ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பும் வேத விற்பன்னர்கள் அதே ஒட்டுண்ணி பாவனையில் வயிற்று பிழைப்பு நடத்தி இருக்கிறார்கள் என்பதும் இதன் மூலமாக தெளிவாகுகிறது.
இப்பொழுது கூட எடப்பாடிக்கு பக்கத்தில் ஒரு தேனீயின் சுறுசுறுப்புடன் ஒரு தலைமை செயலளாலர் சுற்றித் திரிவது நவீன ஏற்பாட்டின் ஓர் குறியீடு.
இத்துடன் அந்த நூலின் பக்கத்தை இணைத்துள்ளேன், அன்றும் இன்றும் அதே நிலைதான் நடந்தேறுகிறது. தவறாமல் வாசித்து விடுங்கள்.


Monday, February 26, 2018

பேரரசன் அசோகன் by ’தருமி’ மொழிபெயர்ப்பு

பேராசான் தருமி மொழி பெயர்த்த பேரரசன் அசோகன் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கிறேன். வாசித்து கொண்டிருக்கும் பொழுதே அடக்க முடியாத உந்துதலின் பேரில் ஒன்றை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது (இது அந்த புத்தகத்திற்கான முழு நீள வாசிப்பனுபவமல்ல. முழுதும் வாசித்தவுடன் முழுமை படுத்தலாமென்று எண்ணியுள்ளேன்).
.
பல நூற்றாண்டுகளை அநாயசியமாக அந்த நூல் ஓரிரு பத்திகளில் கடந்து செல்கிறது. அந்த பத்திகளில் எது போன்ற அரசன் ஆண்டான் என்பதனைக் கொண்டு மக்கள் எது போன்ற வாழ்வுச் சூழலில் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை நினைக்கும் பொழுதே திகீர் என்கிறது.

அரசியல் சித்தாந்தமற்ற வர்ணாசிரம சூழ்ச்சியும், அதனையொட்டிய அண்டைய நாட்டு படையெடுப்பின் போது அந்த அரசு கவிழ்ந்து வேறு ஓர் அரசிற்கு கீழ் சில நூற்றாண்டுகள் ஆளப்பட்டு மீண்டும் வீழ்த்தப்பட்டுன்னு... காலச் சுழற்சியின் ஒவ்வொரு பக்கத்திலும் நிலையாமையை சுட்டியபடியே நகர்கிறது அந்த நூல். அடிநாதமாக பொதுத் தன்மையே நின்று நிலைக்கும் சித்தாந்தமென நிரவ முற்படுகிறது. வரலாறு மாற்றி எழுதப்பட்டாலும் நீடித்து நிற்பது அறம் சார்ந்த அரசாட்சியே!

அது நூல் அல்ல ஒரு பாடம் போல இருக்கிறது. அப்பட்டமான முறையில் ஒரிடத்தில் இந்திய துணைக்கண்டம் ஏன் நண்டு தனத்தினாலும், வர்ணாசிராமத்திற்கு அடிமைத் தனம் அடைந்ததாலும் அந்த தேசம் வரலாற்று சுவடுகள் தோறும் வீழ்த்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த பதிவு அந்த புத்தகத்திற்கான விமர்சனமாக நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் முழுமையாக வாசித்து முடிக்காத நிலையில் அப்படி எழுதுவது அறமாகாது என்பதால் நிறுத்திக் கொள்ளலாம்.

சொல்ல வந்தது எப்பொழுதும் மனித வரலாற்றில் தொடர்ந்து அநீதிக்கும் நீதிக்குமான போராட்டம் நடந்து கொண்டேதான் வந்திருக்கிறது. குட் அண்ட் ஈவில்கான சமநிலை எட்டலில் எந்த கால கட்டத்தில் எந்த பக்கம் அதிகமான நல்ல/கெட்ட எண்ணவோட்டம் அதிகமாக குவிகிறதோ அதன் நீட்சியாக நாம் கண்டுணரும் செயல் பாடுகள் ஒரு சமூகத்துள் பாவி நிரையும்.

அநீதி ஓங்கும் பொழுது எதிர் முனையில் இருப்பவர்கள் சோர்வுற்று இனிமேல் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஒரு சொட்டு நஞ்சு அற்ற தூய்மையான துளி என்றாலும் அது அடர்த்தியாக உள்ள நஞ்சுக் குடுவைக்குள் செலுத்தப்படும் பொழுது அதன் வீரியம் குறைக்கக் கூடியதாக அமைவதைப் போல ஆங்காங்கே தொடர்ந்து எழுப்பப்படும் அநீதிக்கெதிரான குரல்கள் அவசியம் (அது இன்றைய சிரியா, ஆதிவாசி மது, விழுப்புரம் ஆராயியின் குடும்பம் என்பதாக நீள்கிறது...).

ஆகவே, மக்களே தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள். சிறு துளி பெரு வெள்ளம்.

Thursday, February 22, 2018

திராவிடத்தால் வாழ்ந்தோம்: Impact of Dravida Movement

திராவிட ஆட்சிகாலங்களில் ”அ, ஆ, இ, ஈ...” என்று
பள்ளிகளுக்கு சென்று படிக்க ஆரம்பித்தவர்களுக்கு...

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். என்னை போன்ற ”இந்தியா 2” (have not) பகுதியிலிருந்து படித்து முன்னேறியவர்களின் அறைகூவலிது. திராவிட இயக்கம் மட்டும் தோன்றாமலிருந்து இருந்தால் இன்னமும் நானெல்லாம் ஏதாவது ஒரு பொட்டல் காட்டில் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருப்பேன்.

ஹிந்துத்துவா பிள்ளை பிடிப்பவர்கள் என் கையில் ஒரு காவி கொடியை சொருகி அவனை அடி, இவனை பிடி என்று ஏவும் வேலைகளை செய்து கொண்டிருப்பேன்.

எதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாதுதானே? அப்படி கிடைத்துப் போனால் அதற்கு பின்னான உழைப்பின் மகிமையை நாம் உணர்ந்திருக்க மாட்டோம் தானே?

அந்த இடத்தை நாம் அடைய நிறைய இழப்புகளை நமக்கு முன்னானவர்கள் அனுபவித்திருப்பார்கள். அதன் பலனை மட்டும் நாம் அனுபவிக்க அனுபவிக்க நம் பாதையின் அருமை மறப்போம்... அப்பொழுதான் இந்த குறளை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
**********************

வரலாறு வாசிக்கிற நேரம் வந்திருச்சு. மேலோட்டமான திரித்தலுக்கு மீண்டும் பலியாகிவிட்டால் மீண்டு எழ பல யுகங்கள் ஆகலாம். ஆழ சிந்திக்க வாசிப்பு அவசியம். இதுவே தூசி தட்ட சரியான தருணம்.

பிக் பாஸின் நட்ட நடு செண்டர் மய்யம் ஓஆர்ஜி: Maiam

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்னு ஒளி வெள்ளத்திற்கு கீழே நிற்கும் மாய நட்சத்திரங்களெல்லாம் இன்று ”ஒரு மாதிரி பேராசையில்” கிளம்பி வந்திருக்கிறது. அப்படி ஆசை வரவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும் என்றாகிவிட்டது.

காந்தி சென்னார் என்று தீவிர நடுநிலை வாதியான கமல் சார் மேற்கோள் காட்டியது, ”மனிதனின் தேவைகளுக்கு வேண்டுமானால் இந்த பூமி தன் வளங்களை வழங்கலாம் ஆனால் பேராசைக்கு வழங்க முடியாது.” இது கமலுக்கே பொருத்தமான ஒன்றுதானே! சரிதான். இவரின் சிறிய வயது ஆசையான நடிப்பு உலகில் தான் ஓர் இடத்தை அடைய வேண்டுமென்று உழைத்து அவராலான அளவில் புகழையும் ஈட்டி திருப்தி அடைந்து விட்டார்.

இப்பொழுது எந்த இசங்களையும் பின் பற்றி மக்களுக்கான பொதுச் சேவை ஆற்ற வேண்டிய நிலையில் இந்த நாடும், நாட்டு மக்களும் இல்லை, வெறும் ஊழலற்ற(?) அரசாட்சி மட்டுமே வழங்கினாலே போதுமானது என்று புதுப் படம் எடுப்பதனைப் போன்று ஒரு கட்சியையும், அதற்கான கொடியையும் ஏற்றி ஸ்ரீப்ரியா, ஸ்நேகன், பரணி, வையாபுரி போன்ற மொழி போராட்ட மற்றும் பொருளாதார மேதைகளை மேடையேற்றி இன்னொரு “பிக் பாஸ்” பாணியில் மக்களாட்சியில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் இஞ்ச் பை இஞ்சாக நகர்த்தி இன்று நாம் அடைந்திருக்கும் இந்த ஜனநாயக உரிமைகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளி மின்னும் ஒளி வெள்ளத்தின் கீழ் ஊழலாக சுருக்கி நீட், காவேரி நதி நீர் பங்கீடு, இயற்கை வளங்களை புரட்டி போட்டு சாமியார் வளம் பேணல், ந்யூட்ரினோ திட்டம் என்பனவற்றை புட்டியில் அடைத்து கடலில் வீசி விட்டு மூளைச் சலவை செய்ய எத்தனிக்கிறார்.

யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் தனக்கு நடிப்பு நன்றாக வரும் என்ற ஒற்றை காரணத்தை முன் வைத்து வரலாற்றை மறக்கடித்து கண்ணுக்கு முன்னால் அடைந்திருக்கும் வளர்ச்சிகளை குறுக்கி, மற்றுமொரு பீகாராகவும், உத்திர பிரதேசமாகவும் எல்லா துறைகளையும் பின்னுக்கு இழுத்துப் போக நினைப்பவர்களுக்கு துணை நின்று “மதுரை டயலக்” பேசி ஓட்டு அரசியல் பண்ணி விடலாம் என்று நினைப்பது எந்த விதத்தில் சேர்ப்பது?

மக்களை எந்த அளவிற்கு குறைத்து மதிப்பிட்டிருந்தால் இப்படியான ஒரு “மேனாமினிக்கி” அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு கட்சி தொடங்க ஆசை வந்திருக்கக் கூடும்?

ரசினியும் சரி கமலும் சரி இரண்டும் வேறுவேறல்ல ஒரே குட்டை மட்டைதான். வரலாற்று ரீதியாக, சரியாக இந்தியாவில் தமிழகத்தின் நிலை எங்கிருந்து எங்கு நகர்ந்து வந்திருக்கிறது என்று பிடிபடாத அந்த அப்பாவி மக்களை ஒரு பிள்ளை பிடிப்பவனின் சாதுர்யத்துடன் இவர்களை பிஜேபி உள்ளே நுழைந்து கிடைச்ச வரையும் லாபம் என்ற நோக்கில் சுருட்ட நினைக்கிறது.

இது போன்ற ஒரு சூழல் வந்ததிற்கு இது வரையிலும் ஆட்சி செய்து வந்த கழகங்களே காரணம். தேசிய அளவில் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சி என்ன அது எப்படி சாத்தியமானது, எது போன்ற போராட்டங்களை முன்னெடுத்து நம்மால் இந்த நிலையை அடைய முடிந்தது போன்ற விடயங்களை கட்சி பாராபட்சமின்றி எடுத்து கொண்டு சேர்க்காததே முதன்மையான காரணம்.

கழக ஆட்சி மட்டும் 1969க்கு பிறகு தோன்றாமல் இருந்திருந்தால் நான் இன்று அடைந்து இருக்கும் இடத்தை இன்னும் இரண்டு பிறப்பு எடுத்தாலும் அடைந்திருக்க முடியாது. என்னை போன்றுதான் இங்குள்ள அரிதி பெரும்பாண்மையான தமிழக மக்களுக்கும் என்றே நினைக்கிறேன்.

இல்லையென்றால் பிகாரிகளும், ராஜாஸ்தானிகளும் உத்திரபிரதேசக்காரர்களும், ஹர்யானகாரர்களைப் போன்றும் நானும் தேடித் தேடி மாமிசம் உண்பவர்களையும், காதலர் தினத்தன்று ஜோடியாக நடந்து செல்பவர்களை சாலையோரத்திலும், உணவு விடுதிகளிலும் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அடித்துக் கொன்று போடுபவர்களில் ஒருவனாக ஒரு படிப்பறிவற்ற காட்டுமிராண்டியைப் போல வாழ்ந்து கொண்டிருப்பேன். இந்த வேலையில் என்னை நாகரீக மடைந்தவனாக மடைமாற்றம் செய்த பகுத்தறிவாத முன்னோடிகளுக்கு நன்றி செலுத்தாமல் வேறு எந்த சூழ்நிலையில் செய்வேன்.

இன்னமும் கமல் போன்றவர்களை இத்தனை உயரத்தில் வைத்து அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் இன்னமும் நாம் போக வேண்டிய தொலைவு மிச்சமிருக்கிறது என்றுதானே புரிந்து கொள்ள முடிகிறது.

இவர் மிகச்சரியாக அரசியல் செய்ய வேண்டிய இடம் பிகார். கேஜ்ரிவாலை அழைத்துக் கொண்டு அடுத்த பிரதம மந்திரியாக தயாராகிக் கொண்டிருக்கும் யோகி, இன்றைய வாய்ச்சவடால் மோடிக்கு எதிராக பிற மாநிலங்களில் சென்று குறைந்த பட்சம் நாகரீகமாக உலக அரங்கில் முன் நிறுத்தி செல்ல அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை கல்வியறிவு, வாழ்வாதரங்களை அமைத்து கொள்ள வகுப்பு எடுக்கட்டும்.

இது தமிழகத்திற்கு தேவையற்றது! இப்பொழுது என்னால் யூகிக்க முடிகிறது இது போன்ற ஓநாய் கூட்டங்களுக்கு இடையே இத்தனை ஆண்டுகள் ஓர் இயக்கத்தை வழி நடத்தி சென்றிருக்க வேண்டுமானால் எத்தனை சாதுர்யம் தேவைப்பட்டிருக்கும். விழித்தெழு!

Tuesday, February 13, 2018

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive Move!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.

அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!

Sunday, February 11, 2018

நடுநிலைவாதம் என்ற ஒன்று இருக்கிறதா?

ஒரு காலத்தில நான் நடுநிலைவாதி என்று கூறிக் கொள்வதில் ஒரு வசதி இருந்தது. காலம் போகப் போக காட்சிகள், தேவைகள், அனுபவங்கள், வாழும் சூழல் என்று நம்முடைய அறிதலின்றியே ஒர் சார்பு நிலை நம்மை இயக்கியே வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

இன்று எனக்கான சார்பு நிலையை எடுத்துக் கொண்டேன். அதற்கான வலுவான காரணங்களுடன். அது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உலக பொது நெறிக்கு பொருந்துமொரு தத்துவ நோக்கில் அமைந்த சார்பு நிலை.

பிழைப்பு வாதத்திற்கென சில நேரங்களில் இந்த நடுநிலை அரிதாரம் மிக்க வசதியாக இருந்து போய்விடுவதுமுண்டு. இதனில் இன்னொரு வகையான மனிதர்களுடனான அதாவது "காலத்தை வாங்கிப் போட்டு திரிதலை கவனிப்பவர்களுடைய" அணுகு முறையுடன் இந்த சந்தர்ப்ப வாத நடுநிலையும் ஊடுருவ வசதியாக இருப்பதால் பிழைப்பு வாத பேச்சுக்களுக்கு இடம் அமைத்து கொடுத்து விடுகிறது.

எதன் பொருட்டும் கருத்து இல்லாத மனிதர்கள் இருக்கக் கூடுமா? இடம், பொருள் வைத்து பேசுவதையன்றி வேறு என்ன நம்மை தடுத்து விட முடியும்?

இல்லன்னா குறள் சொன்ன சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் நெறியை நடுநிலைவாதிகள் பின்பற்றி வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா? இல்லை கள்ள மெளனம் is being practiced for convenienceகாகன்னு எடுத்துக்கலாமா?

Thursday, February 08, 2018

பக்கோடா பட்டாதாரிகள்: Pakoda Politics!

துணை ஜனாதிபதி வெங்கட்டு நல்ல டாக்டரை பார்க்கச் சொல்லிருவாரோன்னு பக்குன்னு வருது.

ஒரு போஸ்ட் படிச்சேன். அம்பூட்டு மண்டைக்காரனும் அந்த முகாம்லதான்யா அடைஞ்சு கிடக்காய்ங்க.  ஒரு சில வரிகளை அந்த போஸ்ட்ல இருந்து இங்கே கட் அன்ட் பேஸ்ட் செஞ்சுருக்கேன், நமக்கு பேசு பொருளா இருக்கட்டும்னு.

// *மதுரை வீதிகளில் பானிபுரி விக்கிறவன் எல்லோரும் வடஇந்தியர்கள் தான். ஒரு நாளைக்கு குறையாமல் ₹ 2000 க்கு வருமானம் பார்க்கிறான். அவனுக்கு படிப்பறிவே கிடையாது. ஆனால் அவன் பிள்ளைகள் உயர்தர பள்ளிகளில் படிக்கின்றனர்.

மண்ணின் மைந்தன் BE.. BA.. Bsc படித்து விட்டு 5000 ஓவாவுக்கு வேலையை தேடி செய்றான். இல்லாமல் போனால் வேலை தேடி வெளியூருக்குப் போறான்.

ஏன் ? படித்தப் படிப்பை வைத்து இங்கேயே பிழைக்க முடியலே!* //

இதில இருக்கிற உள்பொருளில் இருக்கக் கூடிய முரண் கூட
தெரியாம இதனை ஒரு பேசு பொருளாக எப்படி முன் வைக்க முடியும்?

ஏற்கெனவே ஒரளவிற்கேனும் விழிப்புணர்வுற்று பள்ளிகளுக்கு அனுப்பி தங்களுடைய குழந்தைகளை தன்னை விட ஓர் உயர்ந்த நிலையில் வைத்து பார்க்க வைக்கத்தானே உயர் படிப்பு கடன உடன வாங்கி படிக்க வைக்கிறது.

B.Tech., B.E (ஆயிரத்தெட்டு உட்பிரிகளில் உள்ள துறைக் கல்விகள்), M.Scல (வைரலாஜி, மைக்ரோபயோலஜி, செல் பையாலஜி, வைல்ட்ஃலைப்) லொட்டு லொசுக்கின்னு படிச்சு திரும்பவும் தன்னோட அப்பன் சுட்டுக்கிட்டு இருக்கிற பக்கோடாவை திருப்பி போடவா 23 வருஷம் செலவு செஞ்சு திரும்பவும் அதே  இடத்திற்கு கொண்டு வருவாங்க.

சரி அந்த படிப்பை எட்ட வைக்க எத்தனை கடன் சுமை இருக்கும்? எத்தனை சிரமப் பட்டிருப்பாங்க படிச்சு முடிக்க. ஒரு படிப்பை படிச்சு அதுக்கு தகுந்த மாதிரி வேல வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியாதது யாரோட தவறு? படித்த துறையில் தன்னோட திறமையை வளர்த்தெடுத்து நாட்டிற்கும், தனது வீட்டிற்கும் கொடுக்கும் வயதில் தெண்டச் சோறு, தடிமாடு என்று திட்டு வாங்கிக் கொண்டு சுவாசித்து திரிவது அத்தனை எளிதா என்ன?

சரி இங்கே ஒரு லாஜிகல் கேள்வி, அந்த பானிபூரி, பக்கோடா விற்கும் படிப்பறிவற்ற வட இந்தியர்கள் தங்களுடைய மாநிலம், கிராமம், மக்கள், மொழி தான்டி ஏன் இத்தனை தொலைவு வந்து ஒரு நாளைக்கு 2000ரூபாய் சம்பாதித்து அந்த பணத்தை கொண்டு என்ன செய்யப் போகிறார்? ஏன் அவர்களின் மாநிலத்தில் வாழ்வாதார வளர்ச்சிப் பணிகள் எங்கே போனது? இதே தமிழர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு செய்ய ஆரம்பித்த வேலையைத் தானே அதே படிப்பறிவற்ற வட மாநிலத்துக் காரர் தன்னுடைய குடும்பத்திற்கு செய்ய எத்தனிப்பார்: ஒரு வீடு, பிள்ளைகளுக்கு படிப்பு இத்தியாதிகள்.

// *ஒரு காலத்தில் TVS. Madura coats,, Fenner, Sitalakshmi mills, Meenakshi mills,, Thiagarajar mills, Visalakshi milll, மற்றும் ஏராளமாக Powerloom,, Handloom .. சில்வர் பட்டறை தொழில்களென பெருந்தொழில் மற்றும் சிறுதொழில் என கொழித்த மதுரை இன்று எல்லா தொழிலையும் தொலைத்து விட்டு சிரம பூமியாக மாறியுள்ளது.

மதுரை க்காரனுக்கு பொறுப்புணர்ச்சியில்லாமல், தொழில் வளம் பெருக செய்யும் எண்ணம் இல்லாமல், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராடி திருப்தி அடைகிறான்.

விவசாயம் முன்னேற கட்டப்பட்ட வைகை அணை, இன்றைய தினம் குடிநீருக்கு மட்டும் திறக்கப் படுகிறது.
இதனால் விவசாயமும் காலி.
ஆனால் நம்ம தமிழன் தான் விவசாயிக்கு சப்போர்ட் செய்து பேஸ்புக், வாட்ஸ்அப் ல் பொங்குவான்* .//

ஏன் இந்த தொழில்கள் எல்லாம் நலிவடைஞ்சு மூடினார்கள்? குடிநீர் பிரச்சினைக்கான காரணம் என்ன, யார் இதனில் அரசியல் செய்வது? ஏன் மக்கள் சமூக வலைத்தளங்களில் வந்து பொங்க வேண்டும், இந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு எது காரணியாக இருந்திருக்கக் கூடும்? எதற்காக ஜல்லிக்கட்டு ஒரு பிரச்சினையாக மாற்றப்படணும்? எதற்காக மக்கள் தெருவிற்கு வந்து போராடணும்?

அப்போ தண்ணீர் பிரச்சினை, மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு, விவசாயத் துறையில் வளர்ச்சி குறித்த முன்னெடுப்புகள் எல்லாம் சிறு பிரச்சினைகள் ஆனால் ஜல்லிக்கட்டு விசயம் முதலில் கையாளப்பட வேண்டியது என்று ஒரு அரசாங்கமே அதனில் கை வைக்க எண்ணியதா?

எதற்காக பக்கோடா விற்ற ஒரு தலைமுறையின் பிள்ளைகள் மீண்டும் இருபது வருடங்கள் கழித்து பக்கோடா, பஜ்ஜி விற்க கடை விரிக்க வேண்டும்? சரி தெருவிற்கு எத்தனை பக்கோடா கடைகள் வேண்டும்?

ஏன்டா இதனையெல்லாம் ஒரு ஆர்க்யூமென்டாக எடுத்துட்டு வாரீங்களே உங்களுக்கெல்லாம் ஏதாவது அடிப்படை அறிவோ அல்லது குறைந்த பட்சம் இரக்கமோ கூட இல்லையா? ஒரு படித்தவன் தன்னுடைய படிப்பிற்கு பிறகு என்னவாக ஆக வேண்டுமென்பது அவனுடைய தேர்வாக இருக்க வேண்டுமே ஒழிய நீங்க சொல்வது போல, எப்படி வயிறு வளர்ப்பதுன்னு நீங்க சொல்லி அவன் செய்யும் நிலையில் இருந்தால் அரசாங்கத்தை இழுத்து மூடி விட்டு நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் முக்கு கடையில் டீ க்ளாஸ் கழுவி, பக்கோட வித்து காமிங்க ஏனைய குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளை B.E., டிகிரியுடன் டீ கடை வைக்க அனுப்புவார்கள்.

நீங்களும் உங்க வாதமும். கடுப்பு டாசா வருது!

Related Posts with Thumbnails