Sunday, February 26, 2023

கலைஞரின் சற்கர நாற்காலியும் கமலின் ஏகாடியமும்!

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.

பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.

இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத, வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான். 

சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.

கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.

கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Sunday, February 05, 2023

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல்!

 = கற்காலமாக்குதலியம்!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக்   கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு    கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு  கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.


அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது. 

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!


#மீள்

#AdmkFails _2018

ஜம்தாரா (Jamtara): கடன் அட்டை திருட்டு

இந்திய சினிமாவிற்கு நெட்ப்ளிக்ஸ் வந்ததிலே ஒரு சிறப்பான சம்பவம் நடந்திருக்கின்னா அது பரவலாக பேசப்படதா விசயங்களை பேச வைக்கிற படங்களை கொடுப்பதுதான். நமக்கு இது வரைக்கும் ஹிந்திப்படங்கள் என்றாலே பளபளப்பான பெரிய பெரிய அரண்மனை போன்ற வீடுகளில் ஐட்டம் பாடல்களை ஒத்தப் பின்னணியில் வண்ண வண்ண பெண்டீரையும், இசையையும் தவழ விட்டு நம்மை மயக்கி படம் காட்டுவார்கள்.



ஆனா, இதற்கு நேர்மாறாக இன்று நெட்ப்ளிக்ஸ் வேறு மாதிரியான ஒரு சினிமா அனுபவத்தை நமக்கு வழங்கி வருகிறது. இது வரைக்கும் நான் பார்த்த ஒரு சில படங்களையும், தொடர்களையும் வைத்து இணைத்துப் பார்த்தால், இந்தியா ஏன் மோடி, அமிச்சா, நிர்மலா போன்றவர்களுடன் மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கெனவே "தெ ஒயிட் டைகர்" என்ற படத்தைப் பற்றி பேசி ஒரு பகுப்பாய்வு செய்தோம்.

அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கிற "#ஜம்தாரா (Jamtara)" என்ற தொடரைப் பார்த்தேன். வேலையில்லா இளைஞர்கள் ஒரு சிறு கிராமத்திலிருந்து அலைபேசியைப் பயன்படுத்தி வங்கி அட்டைகளின் செய்திகளைப் வாடிக்கையாளர் களிடமிருந்து கறந்து (Phising) நூதன திருட்டு செய்கிறார்கள் என்பதே படத்தின் ஒன்லைனர். அந்த திருட்டில் ஈடுபடும் மனிதர்கள் வாழும் இடமும், சமூக கட்டமைப்பும் அவர்களுக்கிடையேயான உறவாடலும் எத்தகையது என்பதை கடத்துவதில் தான் இந்த தொடர் சிக்ஸர் அடித்திருக்கிறது எனலாம்.

அப்படியே இன்றைய வட இந்தியாவின் ஒரு மினி சிற்றூரும், சிறு நகரமும் அதிலுள்ள மக்களின் வாழ்வமைவையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. வட இந்தியா ஏன் தென் மாநிலங்களை விட மிகவும் பின் தங்கி இருக்கிறது? படை படையாக ஊரையே காலி செய்து கொண்டு புலம் பெயர என்ன காரணம்? ஏன் கொலை, கொள்ளை, திருட்டில் அதிகமாக ஈடுபடுகிறார்கள்? இவை அனைத்தையும் இந்தத் தொடரில் இணைக்கும் புள்ளி ஒன்று இருக்கிறது.

அந்தத் தொடரைப் பார்க்கும் போதே எனக்குத் தோன்றியது, இன்றையத் தமிழ்நாடு அவர்களின் பார்வைக்கு ஒரு மினி சிங்கப்பூராகத்தான் காணக் கிடைக்க வேண்டும். நாம் நிலச்சுவாந்தார்களை கடந்து விட்டோம். மகாபாரத சூழ்ச்சி வாய்ப்பாடுகளை தினசரி வாழ்வில் தொடர்பு படுத்தி செய்யப்போகும் படுபாதக செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு செய்யும் தனத்திற்கு என்றென்றைக்கும் தொடர்பற்று இருந்திருக்கிறோம். ஆனால், இவை அனைத்தும் வட மாநிலங்களில் இன்னமும் இருப்பதாகத் தெரிகிறது.


இந்தத் தொடரில் ஜாதிய கட்டமைப்பு மிகப் பெரிய பூதமாக எழுந்து நிற்கிறது. ஒரு பிராமண நிலச்சுவாந்தார் அந்த ஊரையே ஆட்டி வைக்கிறார். அனைத்து அதிகாரமும் ஓரிடத்தில் ஒடுங்கிக் கிடக்கிறது. மக்களும், காவல்துறையும் அவரின் கடைக்கண் பார்வையில் கட்டுண்டுக் கிடக்கிறது. அந்த கதாபாத்திரம் வட இந்தியாவின் சமூக நோய்மைத் தன்மையின் மூல ஊற்றை பேசிச் செல்கிறது.

உழைக்கும் வயதில் உள்ள இத்தனை பெரிய மக்கட்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும், பேராசையும் ஒன்று சேர்ந்தால் என்னாகும் என்பதற்கு இந்த அலைபேசி வழி வாடிக்கையாளர்களிடம் நடத்தப்படும் கொள்ளையேச் சான்று. நைச்சியமாக ஆசை காட்டி வாடிக்கையாளர்களின் கார்டுகளில் இருக்கும் 16 இலக்க எண்ணைப் பெற்று எப்படியாக பணத்தை பரிமாற்றிக் கொள்கிறார்கள் அத்தனை சிறிய சிற்றூரிலிருந்து என்பது ஆச்சர்யமோ ஆச்சர்யம்.

அதுவும் அந்த வாழ்வுப் பின்னணியோடு லட்சக்கணக்கில் இப்படிச் சுருட்டும் போது பயமாக வருகிறது. தொடர்ந்து மன்மோகன் சிங் கூறிய "முறைப்படுத்தப்பட்ட சுருட்டல்" என்ற பதம், அவர்கள் யார் யாரையோ ஒவ்வொரு முறையும் வங்கிக்கு கூட்டிச் சென்று பணத்தை எடுக்கும் போதும், ஓ! இதற்காகத்தன் நாட்டு மக்களையே பாடாய் படுத்தி வங்கிக் கணக்கு தொடங்கச் சொன்னார்களோ என்பதை நினைவூட்டியதை மறக்க முடியாது.

அண்மைய காலத்திய பணச் சுருட்டலில் இது போல பல திட்டங்களில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய வங்கிக் கடன்கள் யார் யாருடைய இயக்கப்படாத வங்கிக் கணக்குகளிலெல்லாம் வரவு வைத்து பெரியளவில் ஸ்கேம் செய்திருப்பதையும் தினமும் தொலைக்காட்சி செய்திகளில் கேட்டு வருகிறோம். அதனுடைய இன்னொரு வடிவம் தான் இந்த phising.  இது ஓர் உறுபிணி போல வட மாநிலங்களில் பெருகி வருவதாகத் தெரிகிறது. 

வரும் காலங்களில் இடப்பெயர்வின் மூலமாக அடைந்து கொள்ளும் வேலை வாய்ப்புகளைத் தாண்டி, அந்தந்த மாநில அரசுகள் ஏதாவது வாழ்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுத்து வாழவைத்துப் பார்க்க வில்லை என்றால், மென்மேலும் கூட்டம் கூட்டமாக தெற்கு புறமாக வந்து அள்ளிக் கொண்டு ஓடி மறைந்து கொள்ளும் கூட்டம் பெருகக் கூடும்.

#ஜம்தாரா

#Jamtara_Netflix_Series

Friday, February 03, 2023

The White Tiger: வெள்ளை புலி!

நேற்று நெட்ப்ளிக்ஸ்ல "த ஒயிட் டைகர்"நு ஒரு படம் பார்த்தேன். இந்தப் படத்தோட கதை புத்தகமாக வெளி வந்திருக்கிறது. ஆனா, அந்தப் புத்தகம் பெரிய அளவில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. சுதந்திர இந்தியா ஏன் முற்று முழுதுமாக அனைத்து மக்களுக்குமான நாடாக இன்னும் தலையெடுக்க முடியவில்லை என்பதை இந்தப்படம் ஃப்ரேம் பை ஃப்ரேமாக சுழன்று மிக அழுத்தமான கதைக்களத்துடன் பேசுகிறது.


வட இந்திய கிராமங்களை உங்கள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் சில காட்சிகளும் உண்டு. சைக்கிள் ரிக்ஷா இழுக்கும் கதாநாயகனின் அப்பா. வாழுமிடத்திற்கு கந்து வட்டியாய் பணம் வசூல் செய்யும் பண்ணையார் கூட்டம், கதாநாயகனின் அப்பாவை தெரு முனையில் நிற்க வைத்து கன்னத்தில் அறையப்படுவதை காண்கிறான்.

அப்பா, சைக்கிள் ரிக்‌ஷா இழுக்கும் ஒரு நாள் நுரையீரலை கரைத்து இரத்த வாந்தியாய் எடுத்து இறந்து போகிறார். கதாநாயகன் பள்ளிப்படிப்பு இடைநிற்றலாகி கூலி வேலைக்குச் செல்கிறான். நிலச்சுவான்தாரான ஊர்த்தலையின் பிள்ளைகளில் ஒன்று அமெரிக்கா ரிடர்ன்.

அமெரிக்காவில் நான் வாழ்ந்தாலும் என்னுடைய அகம் என்னவோ இந்தியப் புத்தியாய்த் தான் இருக்கிறது என்கிறான். அவன் பேசும் வசனங்கள் ரொம்ப முக்கியமானது. அவனுடைய மனைவி அமெரிக்காவில் படித்து மருத்துவராகப் பணியாற்றுகிறவர். அவளே கதாநாயகனை ஒரு விதத்தில் எம்பவர் செய்பவளாய் இருக்கிறாள். ஒவ்வொரு கேரக்டரும் அளவோடு இந்தியாவின் அவலத்தை பேசவோ, கோர முகத்தை எடுத்துக் காட்டவோ அமைக்கப்பட்டவை. அவனிடத்தில் வேலைக்குச் சேர கதாநாயகன் ஆசைப்பட்டு கிராமத்திலிருந்து கிளம்பிச் சென்று கார் ஓட்டுநராகச் ஆகிவிடுகிறான்.

அந்தக் கிராமும் கதாநாயகனோட குடும்பமும் இந்தியா இரண்டிலிருந்து வருபவர்கள் என்றால், பண்ணையார் தனக்குடும்பம் முதல் தர வாழ்வமைவு கொண்ட முதல் இந்தியாவைப் பற்றிப் பேசுகிறது. ஏன் நான் அடிமையாக இருக்கிறேன் என்று கதாநாயகன் தன்னுடைய லோயல் தனம் முழுமையும் காட்டி வேலை செய்யும் பொழுதும், நாயை விடக் கேவலமாக நடத்தப்படும் பொழுது அவனுக்குள்ளாகவே உரையாடிக் கொள்ளும் வசனங்கள் மிக முக்கியமானவை.

படத்தில் இரண்டே சீன் என்னை கவிழ்த்து விட்டது எனலாம். கதாநாயகன் தன்னுடைய பல்லின் கறையை எடுக்க முதன் முதலாக பிரஸ், டூத் பேஸ்ட் எடுத்து கண்ணாடிக்கு முன் நின்று ஒரே நாளில் விளக்கி விளக்கி பற்களின் வெள்ளைத் தன்மையை கொண்டு வர முயற்சிப்பது போல ஒரு காட்சி...


இரண்டாவது, வேலையை விட்டு விலக்கி வைப்பது போல ஒரு சூழல், அதே நேரத்தில் அமெரிக்கா ரிடர்ன் பண்ணையாரின் மகன் டில்லியில் தங்கி அரசியல் வாதிகளுக்கு தினம் தினம் பை பையாக லஞ்சப் பணம் கொண்டு சென்று கொடுப்பதுமாக பிசியாக இயங்கிக் கொண்டிருப்பான் அதனை ஓட்டுநராக கவனித்துக் கொண்டிருப்பான் கதாநாயகன். 

இவை இரண்டையும் இணைத்து போகும் வழியில் திறந்த வெளியில், வானுயர எழுந்து நிற்கிற கட்டிடப் பின்னணியில் மலம் கழித்துக் கொண்டிருப்பவர் ஒருவருடன் தானும் பேன்ட்டை தளர்த்தி நேர் எதிராக அமர்ந்து அவனுடன் சேர்ந்து கதாநாயனும் ஒரு மேனியாக் தனமாக அலறிச் சிரிக்குமொரு காட்சி, ஒட்டு மொத்த இந்திய மனநிலை, அரசியல் போக்கு, பணம், அதிகாரம் படைத்தவர்களின் பொறுப்பற்றத் தனத்தை எள்ளலாகச் சுட்டிக்காட்டும் நுட்பத்தனமென அமைந்தது... 

படத்தில் அது போல பலப்பல காட்சி அமைப்புகள்... நிகழ்கால அரசியல் சூழலை போகிறப் போக்கில் எள்ளி நகையாடிச் செல்கிறது. A must watch movie! 


#Cinema 

#சினிமா

#TheWhiteTiger

Wednesday, February 01, 2023

ஏன் பேனா சினைவுச் சின்னம்

ஒரு பேனா இத்தனை பேரை அலற வைக்க முடியுமா? முடியுமென்றால் அந்தச் சமூகத்தில் ஏதோ பெரியளவில் சம்பவம் நிகழ்த்தப் பெற்றிருக்கிறது என்று தானே புரிந்து கொள்ள முடியும்?


பேனா என்ற ஓர் அடையாளம் எதனையெல்லாம் சுமந்து நிற்க முடியும்? பேனா - மனித குலத்தின் நாகரீக திசையறியும் திசைகாட்டி. ஒரு சமூகத்தின் மாண்பு! உண்மையை செதுக்கி வைக்கும் உளி. குரலற்றோருக்கு உரக்க குரல் கொடுக்கும் ஓர் ஒலி பெருக்கி. இருட்டின் அடர்வையொத்த பொய்களுக்குள் புதைந்திருக்கும் ஓர் பேரொளி.

பேனாவிற்கு ஏது வேலி, முகம்? ஒரு சமூகத்தில் ஒரு பேனா ஒரு தனி மனிதனின் முகத்தை உன் நெஞ்சிற்குள் ஈட்டியாக இறக்குகிறது என்றால் அந்த முகத்திற்கான சொந்தக்காரன் ஒரு சம்பவத்தை அந்தச் சமூகத்தில் செய்து இருக்கிறான் என்றல்லவா பொருளாகிறது.

எடுத்துக்காட்டாக நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். முதல் முறையாக வேறொரு நாட்டிலிருந்து விமான மார்க்கமாக அந்த பேனா எழுந்து நிற்கும் கடற்கரையோரமாக பறந்து தரை இறங்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது அந்தப் பேனா எனக்கு தரும் செய்தி என்னவாக இருக்கும்? எனக்கு அந்தச் சமூகத்தில் புழங்கிய எந்த ஒரு தனிப்பட்ட முகங்களும் பரிச்சயமில்லை எனும் போது, பொதுவான ஓர் ஐடியாவான பேனா - அதனையொட்டிய பெரும் மதிப்பு அந்தச் சமூகத்தின் பொருட்டு இயல்பாகவே ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியாது இல்லையா?

ஏனெனில், வரலாறு தோறும் பேனாவிற்கான இடமப்படி. பேனாவின் மதிப்பு என்பது ஒளவையின் "கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதற்கு ஒப்பான" ஓர் அண்டத்தின் குறியீடு!

இந்த தமிழ்நாட்டுப் பேனா உங்களுக்கு கலைஞரின் முகத்தை நினைவு படுத்துகிறது என்றால் அது மிகச் சரியாக அவரது விரலிடுக்களில் சுழன்று தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது என்று விளங்குகிறது. 

அது வரும் தலைமுறையினருக்கும் இடம் சுட்டி பொருள் விளக்கியபடியே நிற்கும். நீங்கள் இன்னும் பலமாக ஓலமிட்டு கதறிக் கொண்டே இருங்கள்!


#பேனா_கலைஞர்

#நினைவுச்சின்னம்

#மீள்

Sunday, April 25, 2021

குடும்பக் கட்டுப்பாடு: தமிழ்நாடு பெற்றதும் இழந்ததும்!

ஒரு பிள்ளை போதும் என்ற மனதிற்கு தமிழகம் பெற்றதும் இழந்ததும் என்ன?

1965களில் குடும்பக் கட்டுப்பாடு இந்தியாவில் பெருமளவில் கொண்டு சேர்க்க
ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமே Family Planning in India. ஒரு கால கட்டத்தில சிகப்பு நிற முக்கோண வடிவ தலைகீழ் சின்னத்தை சுவர்களிலும், பேருந்துகளிலும் பார்த்திருப்போம். அதற்கான வாசகமாக நாமிருவர், நமக்கிருவர் என்றும் பின்னாளில் ஒருவர் என்றும் சுருங்கியது.

இந்த நாற்பது ஆண்டு கால நடையில் தென்னக மாநிலங்கள் மிகத் தீவிரமாக பின்பற்றி, வடக்கு மாநிலங்களோட ஒப்பீடும் பொழுது உண்மையாகவே ஒரு பெண்ணிற்கு சராசரியாக 2 குழந்தைகள் என்ற அளவிற்கு வந்து விட்டோம்.

ஆனால், வட மாநிலங்களில் அது இன்னமும் 4 குழந்தைகளை கொண்டதாகவே இருக்கிறது. அதனால், தென்மாநிலங்கள் இழந்து நிற்பது நிதி ஒதுக்கீட்டில் பெரும் ஓட்டை. அடைய வேண்டியதை அடைந்து கொள்வதில் சுணக்கம்.

இப்பொழுது எது என்னை இதனை எழுத வைத்தது? அன்மையில் நான் கண்ணுரும், கேள்வியுறும் விசயங்கள், எனக்கு தெரிந்தவர்களின் குடும்பங்களிலேயே ஒரு பிள்ளையோடு நிறுத்திக் கொண்டவர்களின் கடைசி காலங்களில், அந்த ஒரு பிள்ளையும் வெளி நாட்டிற்கு எங்காவது செல்ல நேர்ந்து சிக்கிக் கொண்டால், அந்த பெற்றோர்களுக்கு நிகழும் இன்னல்களை பார்த்ததாலே இதனை எழுதத் தூண்டியது.

ஒன்றே போதுமென்று நிறுத்திக் கொள்கிறார்களே அவர்களின் மன வலிமைக்கு நமது மத்திய அரசு கொடுக்கும் நற்சான்றிதழ் என்னத் தெரியுமா? நமக்கு இந்தக் குடும்ப கட்டுப்பாட்டிற்கென வரவேண்டிய உபரி நிதியை பிடித்து வைத்துக் கொண்டதுதான். அது எங்கே போகிறது என்றால் அரசாங்க கனவை எட்டி அனைவருக்கும் ஒரு டீசண்டான வாழ்வுச் சூழலை ஈட்டிக் கொடுப்பதிலிருந்து பின்தங்கி இருக்க நேரிடும் கேட்டில் நிறுத்தி வைக்கிறது.

சொன்ன பேச்சை கேட்டு வளர்ந்து நிற்கும் பிள்ளைக்கு கொடுத்த உறுதியை நிறைவேற்றி, ஊக்குவித்து அடுத்த பிள்ளையையும் ஆர்வத்துடன் அந்தப் பாதையில் வளர உதவுவீர்களா அல்லது சொல்லுப் பேச்சை கேட்டதால் தண்டீப்பீர்களா?

சரி, கீழே இணைத்துள்ள பதிவையும் வாசிங்க, ரொம்ப எளிமையா வடக்கத்தியர்களுக்கும், தென்னியந்திர்களுக்குமான அப்பம் பிச்சிக் கொடுப்பதில் எப்படி மத்திய அரசு கையாள்கிறது என்பதை, குடும்பக் கதை மாதிரி சொல்லி புரிய வைச்சிருப்பாங்க... 

••••••©©©•••••••

மகனே தென்னவா, என் பிள்ளைகள் உங்கள் இருவரையும் ஒன்று போலவே படிக்க வைத்தேன்.

நீ படிப்பில் சிறந்து விளங்கினாய்.பட்டங்கள் பெற்றாய்.பார்ப்போர் பொறாமைப்படும் பணி,பதவிகள் என்று உச்சம் தொட்டாய்.நல்ல வருமானம் திட்டமிட்ட வாழ்வு.அளவோடு இரு குழந்தைகள் அதனால் அளவில்லா மகிழ்ச்சி.


உன் அண்ணன் மூத்தவன் வடமாக்கானை நினைத்து பார்க்கிறேன்.அவனுக்கு படிப்பு துளியும் ஏறவில்லை.அதனால் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை.போதிய வருமானமின்றி வாய்க்கும் வயிற்றுக்கும் அல்லாடுகிறான். போதாக்குறைக்கு வெளியில் தான் வேலையில்லை என்று வீட்டில் வத வதவென்று ஒன்பது பிள்ளைகளை வேறு பெற்று போட்டுவிட்டான்.தரித்திரம் அவன் வீட்டில் தாண்டவமாடுகிறது.

என்ன இருந்தாலும் அவன் உன் உடன்பிறந்தான் இல்லையா?அவனும் அவன் பிள்ளைகளும் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் உறங்க உதவி செய்ய வேண்டியது உன் கடமையல்லவா? பண்டிகை காலங்களில் பரதேசி போல் அல்லாது குடும்பத்தோடு அவன் நல்ல துணி உடுத்துவதும் நீ செய்யும் உதவியில் அல்லவா இருக்கிறது?

ஆகையினால் நான் பெற்ற மகனே உன்னை உரிமையோடு இரண்டு விஷயங்கள் கேட்கிறேன்.

முதலாவது,உன் வருமானத்தில் முக்கால்வாசியை அவன் வசம் ஒப்படைத்து விடு.ஏனென்றால் அவன் உன்னை விட ஏழு பிள்ளைகள் அதிகம் பெற்ற உன் அண்ணன்.

இரண்டாவது நாம் வெளியே செல்லும்போது சப்பாத்தி சாப்பிட வேண்டுமா? இட்லி,தோசை சாப்பிட வேண்டுமா? என்பதையும்,சைவம் சாப்பிடலாமா அல்லது ஆட்டுக்கறி,மாட்டுக்கறி உள்ளிட்ட அசைவம் சாப்பிடலாமா என்பதையும், சினிமாவுக்கு சென்றால் தமிழ் சினிமாவா அல்லது ஹிந்தி சினிமாவா என்பதையும் உன் அண்ணன் வடமாக்கானே முடிவு செய்யட்டும்.எண்ணிக்கையில்   நாங்கள் அதிகம் அல்லவா? ஒன்பது பிள்ளைகள் தம்பதி இருவரோடு என்னையும் சேர்த்தால் பன்னிரண்டு பேராகிவிடுகிறோம்.ஆனால் நீங்களோ இரண்டு பிள்ளைகள் மனைவியோடு நால்வர் தானே? என்ன நான் சொல்வது?

என் அருமை மகனே தென்னவா, படித்தவன்,உலகம் முழுதும் சுற்றி பலவற்றையும் கற்று தேர்ந்தவன்,கை நிறைய சம்பாதிக்கறவன் என்ற இறுமாப்பில் என் வார்த்தையை மீறி உன் அண்ணனை,என்னை அவமதித்து விடாதே.அது நம் கூட்டு குடும்பத்திற்கு மிகப்பெரிய கேவலத்தை தேடித்தரும் என்பதை அறியாதவனா நீ?

கருப்பு வெள்ளை காலத்தில் கூட இப்படி ஒரு சென்டிமெண்ட் வசனத்தை அப்பா ரங்காராவ் பேசினால் மகன் சிவாஜியோ,ஜெமினியோ, ஏவிஎம் ராஜனோ கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

MR ராதா பாணியில் சுத்த நான்சென்ஸ் என்று உதறித்தள்ளிவிட்டு தனிக்குடித்தனம் போய் விடுவார்கள்.

தமிழ்நாட்டு விஷயத்தில் மத்திய ஒன்றிய அரசு இப்படித்தான் நடந்து கொள்கிறது.நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன் இரண்டையும் 

கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம் என்று 

நம் வளங்கள் எப்படி கொள்ளையடிக்கப்படுகிறது?

நாசகார திட்டங்கள் ஏன் இங்கு வலிந்து திணிக்கப்படுகின்றன?

கல்வியிலும்,மருத்துவத்திலும் முன்னேறிய மாநிலம் இப்போது ஏன் திட்டமிட்டு காயடிக்கப்படுகிறது?

உணர்வோமா? தெளிவோமா?

~ FaceBook via  யவன குமாரன்

Wednesday, April 14, 2021

தமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா? Know Your Tamil New Year!

 தமிழ்ப்புத்தாண்டு தை மாதமா? சித்திரை மாதமா? 

ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். 

அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம்.

ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.

கிருஷ்ணர் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணருடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றாராம். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்களாம்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்களாம். இதுதான் சித்திரையை புத்தாண்டு என்று சொல்வதற்கு சொல்லப்படும் புராணக்கதை. 

அப்படியாகக் கிருஷ்ணர் நாரதரை 35 வது ஆண்டில் கூடிப் பெற்ற பிள்ளைதான்  இன்று பிறந்த பிலவ ஆண்டு. இந்தக் கதைக்கு ஆதாரம் எது?

சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றிய ஆ.சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்டு, இராமநாதபுரம் சேதுபதி பரம்பரையில் வந்த பாண்டித்துரை தேவர் உதவியால் 1910 வெளியிடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி.

அபிதான சிந்தாமணி நூலின் 1392 ம் பக்கத்தில் தான், வருடப்பிறப்பு குறித்த, மேற்கூறப்பட்ட இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. 

60 பெயர்களில் பிரபவ தொடங்கி அட்சய வரை எதுவும் தமிழ் பெயர் இல்லை.

1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய.


சித்திரையை ஆண்டின் தொடக்கமாக கருதுபவர்கள் இதைக் கொண்டாடிவிட்டுப் போவதில் பிரச்சனையில்லை. உலகில் பலபகுதிகளில் பலவிதமான ஆண்டு தொடக்கங்கள் கொண்டாடப்பட்டே வருகிறது. இதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதில் தான் பிரச்சனை எழுகிறது.

எனவே தான் தமிழறிஞர்கள் பலகாலங்களில் கூடி தொடர் விவாதங்கள் நடத்தி, ஆய்வு செய்து, தை மாதமே தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்தார்கள். தமிழறிஞர்கள் யார்?

01. மறைமலை அடிகளார் (1921)

02. தேவநேயப் பாவாணர்

03. பெருஞ்சித்திரனார்

04. பேராசிரியர் கா.நமசிவாயர்

05. இ.மு. சுப்பிரமணியனார்

06. மு.வரதராசனார்

07. இறைக்குருவனார்

08. வ. வேம்பையனார்

09. பேராசிரியர் தமிழண்ணல்

10. வெங்காலூர் குணா

11. கதிர். தமிழ்வாணனார்

12. சின்னப்பத்தமிழர்

13. கி.ஆ.பெ. விசுவநாதர்

14. திரு.வி.க

15. பாரதிதாசனார்

16. கா.சுப்பிரமணியனார்

17. ந.மு.வேங்கடசாமியார்

18. சோமசுந்தர் பாரதியார்

19. புலவர் குழுவினர் (1971)


மலையகத்தில்...

01. கோ.சாரங்கபாணியார்

02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்

03. அ.பு.திருமாலனார்

04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்

05. கம்பார் கனிமொழி குப்புசாமி

06. மணி. வெள்ளையனார்

07. திருமாறன்

08. இரெ.சு.முத்தையா

09. இரா. திருமாவளவனார்

10. இர. திருச்செல்வனார்

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து இதை ஆரிய திணிப்பு என முடிவு செய்தனர். எனவே சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் தொக்கம் என்றார்கள். தை தொடக்கம் என்பதற்கான ஆய்வு என்ன? 

உச்சபட்சக் குரலெடுத்து பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

என்றார்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாள் என்பதை ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். 

1.வைகறை

2.காலை

3.நண்பகல்

4.எற்பாடு

5.மாலை

6.யாமம்

ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்

60 நாழிகை - 1440 நிமிடங்கள்

இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்

1440 நிமிடங்கள்  என்பது

24 மணித்தியாலங்கள்

24 மணித்தியாலங்கள் -1 நாள்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ,  ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.

1. இளவேனில் - (தை---மாசி)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)

3. கார் - (வைகாசி - ஆனி)

4. கூதிர் - (ஆடி - ஆவணி)

5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)

6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். 

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகிறான். 

பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். சித்திரையை கொண்டாடுவதில் பிரச்சனையில்லை. ஆனால் அது தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாட இயலாது.

அபிதான சிந்தாணி கூறுவதன் படி,

நாரதரும், கிருஷ்ணரும் கூடிப்பெற்ற 60 பிள்ளைகளில், இன்று தொடங்கியிருக்கிற 35 வது ஆண்டுக்கு பிலவ என்று பெயர்.

பிலவ என்ற வடமொழிச் சொல்லுக்கு கீழறை என்று பொருள். கீழறை என்றால் பொந்து என்போமே அதுதான்.

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

by Surya Xavier

🔹️🔶️🔹️🔶️🔹️🔶️🔹️

தமிழ்ப் புத்தாண்டு என்றால்...

*தெலுங்கில் எப்படி விளம்பி இருக்கு?

*கன்னடத்தில் எப்படி விளம்பி இருக்கு?

*ஹிந்தியில் எப்படி விளம்பி இருக்கு?

*இதன் மூலக் களவாணி, Sanskrit-இல் ஏன் விளம்பி/ विलंबी இருக்கு?

இது विलंबी = தமிழா?

இதுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்கள் வேற ஒரு கேடா?

🔻 அடுத்த புத்தாண்டு கொண்டாடப் போகும் 12 ராசி அன்பர்களே...

இதோ, புத்தாண்டின் Sanskrit பொருள்!

#சார்வரி / शार्वरी = "பலாத்கார எழுச்சி" (இதை கணிச்சி தான் ரஜினி எழுச்சி உண்டாக்க சொன்னாரா)

பயப்படாதீங்க!:)

அடுத்த வருசம் நல்ல பேரு அமையும்!

👉🏿 பிலவ / प्लव = "கீழ் ஓட்டை"

காமுகர்கள் எழுதிய சாஸ்திரங்களை..

புனிதம் என பூஜித்துக் கொண்டே இருங்கள்🤦‍♂️

வருஷப் பிறப்பு!

60 ஹிந்து (Sanskrit) வருஷங்களில்..!

👉🏿 பிராமண வருஷங்கள்= 15

👉🏿 க்ஷத்ரிய வருஷங்கள்= 15

👉🏿 வைஸ்ய வருஷங்கள்= 15

👉🏿சூத்திர வருஷங்கள்= 15

இவற்றில், சூத்திர வருஷங்களுக்கு, இழி பெயர்களே!

🔹️விகாரி= அசிங்கமான

🔹️சார்வரி= பலாத்கார எழுச்சி

🔹️பிலவ= கீழ் ஓட்டை

🔹️குரோதி= வன்மம் பிடித்தவள்

🔹️சார்வரி/ शार्वरी = தமிழ்ப் புத்தாண்டு எனில்..

*எப்படிச் சிங்களத்தில் அதே பெயர்?

*எப்படித் தெலுங்கில் அதே பெயர்?

*எப்படி ராஜஸ்தானத்தில் அதே பெயர்?

இந்த ஒரு கேள்வியைக் கேளுங்கோ!

பிறகு தெரியும்...

சார்வரி= தமிழ்ப் புத்தாண்டா? சம்ஸ்கிருதப் புத்தாண்டா? என்று!

சம்ஸ்கிருதம் தெரியுமா?

இல்லையேல், வாய்மூடி இருங்கள்!

விகாரி/ विकारि = அசிங்கம்

'எழில் மாறல்' -ன்னு தூய தமிழில் எழுதினா

அழகு போயிருச்சி-ன்னு தான்யா பொருள்!

அசிங்கம் இல்லைன்னு ஆயிருமா?

சார்வரி/ शार्वरी = வீறி எழல்

என்னா எழல்? எது வீறி எழல்?

பலாத்கார எழுச்சி இல்லைன்னு ஆயிருமா??

by

 Sirpi Rajan

Related Posts with Thumbnails