Showing posts with label நினைவோடை. Show all posts
Showing posts with label நினைவோடை. Show all posts

Sunday, March 02, 2025

ஆசானுக்கு ஓர் அஞ்சலி: A Tribute To My Beloved Mentor Dr. Ajith Kumar

இன்றைய காலை இப்படி ஒரு செய்தியுடன் விடிந்திருக்க வேண்டாம். என்னுடைய இளமை காலத்தில் என்னிடம் மண்டிக்கிடந்த பல பொதுப்புத்தி கட்டமைப்புகளை தகர்க்க போதுமான இடமளித்து மனிதனாக வார்த்துக் கொள்ள தனது வீட்டுக் கதவை திறந்து விட்டவர்; இயற்கையோடு கலந்துவிட்டார். 

முனைவர் அஜித்குமார் என்னுடைய Ph.D ஆராய்ச்சி படிப்பிற்கான ஆலோசகர். அவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருத்து பெற்றவர். நான் ஒரு முறை ஏதோச்சையாக என்னுடைய முதுகலை பட்டப்படிப்பு ஆராய்ச்சி நாட்களில், டாப்சிலிப்ல் தங்கி பைசன் பற்றிய ஆய்வில் இருந்த போது, இவரை அவரோட டேராடூன் Wildlife Institute of India மாணவர்களோட வைத்து சந்தித்தேன். இவர் வனவுயிரின ஆராய்ச்சி, பேராசிரியர் என்று அவர்களுக்குள் உரையாடிக் கொண்டதை வைத்து அறிந்து கொண்டேன்.

பிறகு நானே என்னை அவரிடத்தில் அறிமுகப் படித்திக் கொண்டேன். என் ஆராய்ச்சி சார்ந்த என்னிடமுள்ள சில சந்தேககங்களை அவரிடத்தில் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டேன். அதுவே என்னை இவரிடத்தில் பிற்காலத்தில் கொண்டு சேர்க்கும் ஓர் சந்திப்பாக அமையுமென்று அன்று கனவிலும் நினைக்கவில்லை.

மறு ஆண்டு, கோவையில் அமைந்திருக்கும் சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி நிலையத்தில் (SACON) பல Junior Research Fellowsக்கான ஆட்கள் தேடிய நிலையில் முதுகலை முடித்திருந்த நான் அந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் கலந்து கொண்டேன். அதுவே என் வாழ்வெனும் வறண்ட பூமியில் விழுந்த முதல் மழை!

தேர்வாகி இருந்தவர்களின் பட்டியலில் என்னுடை பெயரை எப்படியோ நினைவில் வைத்திருந்த அஜித் சார், அவருடைய ஆராய்ச்சிக்கென அவருடைய முதல் இரண்டு மாணவர்களில் என்னையும் ஒருவனாக இணைத்துக் கொண்டு பயணிக்க தந்தியின் மூலமாக என்னை அழைந்திருந்தார்.

அன்று எனக்கு 23 வயதாக இருந்திருக்கலாம். அவருடனான உரையாடல்கள், பயணங்கள், கேளிக்கையான நேரங்கள், அடர்ந்த மழைக்காடுகளிக்கிடையே நட்சத்திரங்கள் கொத்தாக தொங்கி மினுமினுக்கும் நீண்ட இரவின் மடியில் முகாம் தீ எரிய ஓல்ட் மாங்குடன் உலகைப் பற்றியான பொது உரையாடல்கள் இன்றும் பசுமையாக என்னுள் உறைந்து கிடக்கிறது..

இது அத்தனையும் எனக்கு அறிமுகப் படுத்தி கொடுத்த எனது ஆசான் NO MORE. எனக்கே இது வரையிலும் வாழ்ந்த அத்தகைய வாழ்வின்பம் இத்தனை மன நிறைவை கொடுத்திருக்கிறது என்றால், அவருக்கு எத்தகைய நிறைவை கொடுத்திருக்கக் கூடும் என்று உணர முடிகிறது. I am sure he must have lived the fullest and given utmost of his best! Such a great human being ever I come across. Long live his scientific achievement in the academic arena.

An add on - I remember this day, after a long gap one day I called you and you took the call like I just spoken to you a half hour before without any void and allowed me to update, and we discussed about Indian political climate how rapidly it is plunging into abysmall darkness. Fondingly you pointed out that you still crack jokes about me in field trips that how I came up with "Menstrual Symptoms" theory in men and pointed out to me how hilariosly true it is! நன்றி! என்றென்றும் உங்கள் நினைவுடன் - அ. பிரபாகர்.

P.S: என்னுடன் தங்கி அஜித்குமார் சாருக்கு கீழ் மற்றுமொரு ஆராய்ச்சி மாணவராக இயங்கிய முனைவர் உமாபதி எழுதிய பதிவில் இரங்கல் பின்னூட்டமாக எழுதியது ...

I have no words to express my gratitude to my advisor - friend Dr Ajith Kumar, he was one of  my earliest times inspiration who helped me to shape myself up to be the person who I am today. I am so fortuanate and proud to call myself I was one of his first hatchlings of Ph.Ds.

I have so much to share about our fondings during those days! My Ph. D colleague Dr Govindhaswamy Umapathy has already elaboarated his academic achievements. He was a prominent and unavoidable icon in the field of Indian primatology and widlife biology; a rainforest conservation expert with profound knowledge of its ecology, with outstanding floral and faunal field identification skills. My deepest condolences to his family, friends, colleagues and I feel terribly sorry that I couldn't be there to bid final good bye! 😪🫡🙏🏽



Art Courtesy: Dr Gokula Varadharajan

Sunday, January 28, 2018

அப்பாவின் நினைவுச் சுவடுகள்!


என் அப்பாவின் வயது 78. எனக்கும் அவருக்குமான உறவு 1986க்கு பிறகு நண்பர் என்ற முறையிலேயே தொடர்ந்தது. அவர் என்னை ஒரு நண்பர் அளவிற்கு உயர்த்திக் கொண்ட பொழுது எனக்கு வயது 18. போன வருட இறுதியில் நான் வட அமெரிக்காவில் மகிழுந்தின் உதவியுடன் ஒரு சாலைப் பயணம் மேற்கொண்டேன். மொத்த தூரம் 4120 மைல்கள். ஒன்பது மாநிலங்களின் வழியாக அட்லாண்டாவில் இருந்து அரிசோனா மாகாணம் வரையிலுமாக அமைந்தது.

அந்த பயணத்தின் திரும்பலின் போது டெக்சஸ் மாநிலத்தில் ஒரு விடுதியில் இரவு பத்து மணிக்கு அவருடைய அலைபேசி அழைப்பு வந்தது. என்றைக்கும் இல்லாத அளவில் அன்று மிகத் தெளிவாக ஓர் ஒன்றரை மணி நேரம் என்னோடு உரையாடினார். எப்பொழுதும் போலவே அது ஊர் பற்றிய செய்தி பரிமாறல்களிலிருந்து சமகால அரசியல் நிலவரம் வரைக்கும் நீண்டது. அதுவே என் மனதில் கடைசியாக அவர் விட்டுச் சென்ற அழுத்தமான உரையாடலாக அமையுமென்று நான் கிஞ்சித்தும் எண்ணவே இல்லை.

அப்பொழுது என்னை கடிந்து கொள்ளும் விதமாக நீ ஊருக்கு வந்து என்னைப் பார்த்து விட்டு இந்த சாலைப் பயணத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறியிருந்தார். நானும் வரும் மார்ச் மாதம் போல் வருகிறேன் என்று உறுதி அளித்தேன். மீண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி என்னை அழைத்து "பிரபாகர், புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார். எனக்கு மனதுக்குள் என்னவோ பிசைந்தது. ஏனெனில் அம்மா அவரின் உடல் நிலை பொருட்டு சமீப காலமாக கூறி வரும் செய்திகள் கலக்கத்தையே ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில் அவருடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் கொஞ்சமே கரிசனத்துடன் இழுத்து, அப்பா, இந்த வருடமும் அனைத்து வருடங்களை போலவே நல்ல செய்திகளுடன் நகர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று கூறினேன். அதற்கு ஒரு சிரிப்பு மட்டுமே பதிலாக அளித்தார். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி திங்கள் கிழமை எந்த முன் அறிவிப்பும் அவருக்கு கொடுக்காமல் காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டான். 

அவரின் மரணம் எனக்கு ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பு. என்னை அலைபேசியில் துரத்தி இனிமேல் யார் அழைத்து பேசுவார் அப்பா! செய்தி எனக்கு கிடைக்கும் பொழுது இரவு மணி 1.30. அவர் இருக்குமிடத்தில் இருந்திருந்தால் இன்னுமொரு பத்து வருடங்கள் கூடுதலாக இருந்திருக்கக் கூடும். ஆனால், செய்தி கேட்ட மாத்திரத்தில், என்னால் எதுவுமே இயக்க முடியாத நிலை. அது ஒரு பெரிய அவஸ்தை! கரம்பக்குடி போன்ற ஊரில் இரவு மருத்துவர்களோ, 24 மணி நேர மருத்துவமனைகளோ இல்லாத ஓர் இடத்தில் எது போன்ற முதல் வைத்தியத்திற்கு பரிந்துரைக்க முடியும். கையறு நிலை! தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்பதைத் தவிர ஒன்றுமே ஓடவில்லை. 

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவரின் மரணம் நிச்சயப்படுத்தப்பட்டது. வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் நானும் எனது சகோதரரும் கிடைத்த ஃப்ளைட்டில் ஏறி ஊர் செல்வது என்று முடிவாயிற்று. இந்த ஊர் திரும்பல் மூன்று வருடங்களாக நான் அவருக்கு கொடுக்க வேண்டி நிலுவையில் இருந்த பயணம். இப்படியான ஒரு சூழலில் ஊர் திரும்புவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

எனது சகோதரர் என் கூடவே பயணித்ததால் ஒருவருக்கொருவர் சற்றே ஆறுதலாகவும், நிறைய நினைவோடைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஏதுவாக அமைந்தது.

அப்பாவைக் காத்திருக்க வைத்து புதன் கிழமை காலையில் ஐஸ் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் கோலத்தில் கண்டோம். அமர்ந்திருக்கும் மக்களுக்கிடையே ஏதேதோ சொல்ல வேண்டுமாய் தோன்றியது. ஹீ வாஸ் எ க்ரேட் மேன், லிவ்ட் வெல். மார்ச் மாதத்திற்கு முன்பாகவே முந்திக் கொண்டாரே என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வார்த்தைகள் தொண்டையில் சிக்கி முடிச்சாகி விட்டது.

மரணித்த காலை அவருக்கு எப்பொழுதும் போலவே ஒரு சுறுசுறுப்பான காலையாகத்தான் இருந்திருக்கிறது. அவருடைய மொபெட் ரைட், ஊருக்கு தரிசனம், தெருவிற்குள் சென்று சில பேருடனான சந்திப்பு என்று முடித்துக் கொண்டு, அம்மாவிற்கு இட்லி கரைத்துக் கொடுத்து விட்டு அடுத்த பத்து நிமிடத்திற்குள் ஓரிரு தொண்டை செருமல்களுடன் தன்னுடைய பூமியப் பயணத்தை நிறைவிற்கு கொண்டு வந்திருக்கிறார். அவர் ஆசை பட்டது போலவே யாருக்கும் சுமையாக இல்லாமல், நான் எப்பொழுதோ ஏதோ ஒரு சூழலில் எழுதிய இந்த கவிதையைப் போல அவருடைய விடை பெறுதலும் நடந்தேறி இருக்கிறது.

 ...பூப்பதும் காய்ப்பதும் உதிர்வதும்
முப்பருவமெனினும்
உதிர்வதை
கனமற்றதாக்கலாம்
பெரு மரத்து
பறவையொன்றின்
ஒற்றை இறகு
சப்தமற்று
தரையிறங்குவதைப் போல!

அப்பா எங்களை வா, போ என்று அழைக்குமளவிற்கு நண்பர்களாக இருக்க, நம்ப வைக்க எது போன்ற நடவடிக்கைகள் செய்தாய் அப்பா. முப்பது வயது பிள்ளைகளாக வளர்ந்து நின்றாலும் மிதி வண்டியில் வைத்து மருத்துவரிடம் அழைத்து சென்றாயே! அதெப்படி முடிந்தது உனக்கு. நீ அதிகம் பள்ளியில் படித்தவனில்லை. பெரிய வாசிப்பாளனுமில்லை. பின்பு எப்படி இத்தனை ஞான ஊற்று உன்னில் பிரவாகமெடுத்தது, அப்பா!

அப்பா உனக்கு நினைவிருக்கிறதா? நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த நிலையில் நீ கூறினாயே ”தம்பி, தோலுக்கு மேலே வளர்ந்திட்ட இனிமே உன்னய தட்டி வளர்க்க முடியாது, உன்னுடைய செயல்களுக்கு நீயே பொறுப்பு” என்று... கல்லூரியில் முதல் வருடம் முதல் நாள் கொண்டு போய் என்னை விட வந்த அன்று விளையாட்டுத் துறை கட்டட வாசலில் அமர்ந்து கட்டிக் கொண்டு சென்ற இட்லி பொட்டலத்தைப் பிரித்து எனக்கும் உனக்குமாக வைத்துக் கொண்டே கண்களில் கண்ணீர் துளிர்க்க சாப்பிட்டாயே ஞாபகமிருக்கிறதா? அப்பா.

முதுகலை முடித்து காடோடியாக நான் வாழ்ந்து ஒரு வெள்ளைக்காரியை மணம் முடிக்க எண்ணி அவளை நம்மூர் அழைத்து வந்து உன்னிடம் அறிமுகப் படுத்தும் பொழுது வீடே எதிர்த்துக் கிடக்கையில் நீ என்னை தனியாக அழைத்துச் சென்று தோள் மீது கை போட்டு, "பிரபாகர், நீ இனிமேல் சிறுவன் கிடையாது நன்கு படித்து, நாலும் யோசிக்கத் தெரிந்தவன், எடுக்கும் முடிவுகள் அனைத்திற்கும் நீயே பொறுப்பேற்று எடுத்து நடத்துவாய் என்பதும் எனக்குத் தெரியும். உன்னை நீயே பார்த்துக் கொள்" என்று விலகி நின்று அழகு பார்த்தாயே அப்பா! எப்படியய்யா அது!

நான் கடந்து வந்த பாதையில் உன் உள்ளத்தை சிதைக்கும் எத்தனையோ இடர்பாடுகளை வழங்கிய போதும் அத்தனை வாசிப்பற்ற நீ உன் வழியாக வந்தவன் நான் என்பதால் என் மேல் அத்தனை ஆதிக்கம் செலுத்தாமல் என் வளர்ச்சி அனுபவ சேகரிப்பின் வழித்தடங்களின் ஓர் ஓரத்தில் நண்பனாகவே மட்டுமே நின்று கவனித்துக் கொண்டிருந்தாய்.

உனது எட்டு வயதில் உனது தகப்பன் பொருளாதாரப் பொறுப்பிலிருந்து நழுவிய பொழுது, அந்த குடும்பத்தை உனது தோள்களில் சுமக்க எண்ணி உனது படிப்பை துறந்தாயே அன்றைய வாழ்க்கை கல்வி தானோ உனது பிள்ளைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று பிரிதொரு நாளில் அனைத்தையும் கொடுத்து தள்ளி நின்று பார்க்க கற்றுத் தந்தது. உனது சக்திக்கும் மேற்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பி கட்டணம் கட்ட தடுமாறிய நேரத்தில், ஒரு நாள் நீ எனக்காக பணம் எங்கோ கேட்டு வாங்கச் சென்ற இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிப் பணத்தைப் பெற்று வந்ததாக கேள்விப்பட்டேனே அப்பா! அத்தனை நெஞ்சுறுதியா அப்பா உனக்கு.

பிறகு வந்த காலங்களில் லட்சங்களில் நீ புரண்டாலும், பணத்தை வைத்து பணம் பண்ணும் பேராசையோ, சொத்துக்களைக் குவிக்கும் எண்ணமோ இல்லாமல், கொடுத்த இடத்தில் திரும்பக் கூட வாங்கத் தெரியாமலேயே வாழ்ந்து முடித்த பெருந்தன்மை எப்படி உனக்கு கைவரப் பெற்றது, அப்பா.

உனை நான் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதிலொன்று உனை வைத்துக் கொண்ட சமூகத்தில் அத்தனை எளிதாக பணம் பண்ணுவதற்காக குறுக்கு வழிகள் இருந்த போதும்,
நீ அந்த வழிகளை நம்பாமல் கடின உழைப்பின் மீது எப்படி இத்தனை பற்று வைத்து உழைத்தாய் என்பதுதான் இன்று வரைக்கும் எனக்கு இருக்கும் ஆச்சர்யம். நீ பழகாத தொழில்தான் என்ன அப்பா!


நீ உழைத்த உழைப்பு உனது குடும்பத்தை மட்டும் மாற்றியமைக்கவில்லை, உனது சுற்று காற்று பட்ட தூரங்களிலெல்லாம் அந்த “தூய விதை” விழுந்து பரிணமித்ததை நல்ல கண் கொண்டவர்கள் உணர்வார்கள். அதுவே உனது பிறப்பிற்கு நீ அளித்துக் கொண்ட கெளரவமென நான் எண்ணுகிறேன்.

நீ மரணித்த வாரத்திலேயே ஒரு நாள் என்னிடம் உன்னுடைய வாழ்க்கையைப் பற்றி யாராவது எழுதுபவர்களிடம் சொல்லி அதனை புத்தகமாக்க வேண்டுமென்று கூறினாயே, அதற்கு கூட நான் கடிந்து கொண்டேனே, அதனை நான் செய்ய மாட்டேனா என்று... அந்த புத்தகத்தை நீயே வாசிக்கும் வரைக்குமாவது வாழ்ந்திருக்கலாமே அப்பா.

உன்னுடைய அமெரிக்கா நாட்களில் உனது நீண்ட கால ஆங்கிலம் பேசி புழங்க வேண்டிய ஆசையும் நினைவுருவாக்கம் ஆனதே ஞாபகமிருக்கிறதா? உன்னுடன் ஒரு ஸ்பானிஷ் மங்கையொருத்தி கை கோர்த்து நடனமாடிய பொழுது வந்த அத்தனை வெக்கத்தையும் எங்கே அப்பா ஒளித்து வைத்திருந்தாய்! 

என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் நீ ஒரு பொறாமைக்கான அப்பா என்பது தெரியுமா உனக்கு? அனைத்து வயதினருடனும் மிக இயல்பாக எப்படி உன்னால் புழங்கித் திரிந்திருக்க முடிந்தது? உனது இறுதி விடை பிரிதலுக்கான நாளில் உன்னுடைய பல நண்பர்களை, பல பிரிவுகளிலிருந்தும் வந்திருந்தார்கள். அவர்கள் உனை அப்பாவாகவும், அத்தாவாகவும், மாமாவாகவும், செட்டியாராகவும், அண்ணாமலையாகவும் விளித்துக் கொண்டு அவரவர்களும் தங்களுக்கான தனித்துவமான கதைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். விக்கித்து நின்றேன். உன் நிழல் படாத எளிய மனிதர்களுக்கு குறைச்சலே இல்லை அப்பா. உன் வாழ்வுப் பயணத்தில் நீ நிறைய மனிதர்களை சேகரித்திருக்கிறாய்.

நீ மரணிக்க வில்லை அய்யா! உன் நினைவுச் சுவடுகள் எங்கள் மனங்களில் இருக்கும் வரையிலும் நீ உயிர்ப்புடனே உள்ளாய். 

எனக்கு எப்பொழுதுமே ஓர் எண்ணமுண்டு. மனித வாழ்வென்பது நன்றாக சுகித்து, சுவைத்து வாழ்ந்து முடிக்க வேண்டியதொரு மாபெரும் பயணச் சாலை என்றும் மரணிக்கும் நொடிகளில் கண் திறந்து “வாட் எ ரைட்” என்றழைத்து கண் மூடிட வேண்டுமென்று நினைப்பதுண்டு. அந்த எண்ணம் உன் வாழ்க்கைப் பயணத்தைப் பின்னோக்கி செலுத்திப் பார்க்கும் பொழுது எத்தனை உண்மையென்று எனக்கு இன்று புலப்படுகிறது. நீ நன்றாக அழுத்தமாக வாழ்ந்து சென்றிருக்கிறாய்.

அவரைப் பற்றி நினைவு கூறுவதென்றால் என்னுடைய அனைத்து நடவடிக்கைகளிலும் அவருடைய சாயல் படிந்திருப்பதனைக் கொண்டே என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

Friday, February 12, 2016

வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு: மரங்களடர்வு -2



மலையணில்களின் நீண்ட தூரிகையையொத்த அந்த மழைக்காடுகளினூடாக நின்றுநிதானித்துக் காட்டு பூனைகளின் பாதச் சுவடுகள், விட்டைகள், காட்டெருமைகளின் சாணம் மற்றும் அவைகளின் இருப்பு என்று அவதானித்தவாறே
வேலைகளை முடித்த கையோடு, கிடைக்கும் சிற்றோடைக்கு அருகில் பாறையென்றின்மீதாக சப்பணமிட்டவாரு பல மதியங்கள் கழிந்திருக்கிறது.

கண்ணாடிப்  படிகமென சன்னமாக உருண்டோடும் நீராக அத்தனை சுத்தமான தண்ணீர்.
அதன் மீதாக உந்தித் திரியும் ஸ்கிட்டர்ஸ். காய்ந்த சருகொன்றின் மீதாக தொத்தி டைட்டானிக் ஜாக்காக மிதந்து திரியும் எறும்பு. நீர் படிகத்தின் கீழாக என்னையும் கொஞ்சம் பார் என்றபடி ஊர்ந்து நடக்கும் நண்டு. தண்ணீரின் வண்ணத்துடன் இயைந்து போகும் மீன் குஞ்சுகள். ஒன்று மற்றொன்றை விஞ்சும் பேரழகுடன் அணி வகுத்து எனை சுவாசிக்க மறக்கடிக்கும் ஒருரம்மியமான சூழலில் கட்டி போட்டு வைத்திருந்தது அந்த மேற்கு மலை மழைக் காடுகள்.

திரும்பிய பக்கமெல்லாம் மழையில் நனைந்து அடர் கருப்பில் பருத்த அடிப்பகுதியை கொண்ட மரங்களின் அடர்த்தி. பெரும்பகுதியான நேரங்களில் என்னைச் சுற்றிலும் அது என்ன விதமான நேரம் என்று கூட அறிந்து கொள்ள முடியாத வாக்கில் சூரியக் கதிர்களும் கூட காட்டின் தரை தொட அஞ்சி நிற்கும் அடர்வு கொண்ட உச்சிகளையும், உயரங்களையும் கொண்ட மரங்கள். அந்த

மரங்களில் பலவும் என்னை விட பல மடங்கு அதிக வயது கொண்டவை.சற்றே உற்றுக்கேட்டால் நிறைந்த நிசப்தத்தில் பேரமைதியை கற்றுத் தந்தன.


சில் வண்டுகள் மட்டுமே அவ்வப்பொழுது யாரோ ஒருவர் சன்னமான சப்தத்தில் தொடங்க அங்கே இங்கேயென பேரிரைச்சலாக நூற்றுக்கணக்கில் ஒன்று சேர்ந்து ரீங்காரமிட்டு யாரோ ஒரு சிம்ஃபெனி இசைத் தொகுப்பாளர் கையசைத்து திடும்மென ஒரே நேரத்தில் நிறுத்துவதையொத்து நிறுத்திக் கொள்ளும். எங்கோ தூரத்து எதிரொலியாக ஒரு மலபார் விஸ்ஸிங் த்ரஸோ, காட்டுக் கோழியோ அல்லது மரகதப் புறாவோ சப்தமெழுப்பி அந்த அடர் வனமே அதிரச் செய்யும். மதிய உறக்கத்திலிருந்து அப்பொழுதே நெட்டி முறித்து, வாய் பிளந்து கொட்டாவி உதிர்த்து, உயரக் கிளைகளில் ராஜ மிடுக்குடன் ஒரு சிங்கத்தின் கம்பீரத்துடன் மரக் கிளைகளின் தண்டுகளில் நடந்து திரியும் சிங்கவால் குரங்குகள்.

திடும்மென எங்கிருந்தோ அடித்து விரட்டிக் கொண்டு வந்த ஒரு பெரும் கரு 
மேகத் திரள் சூரியக் கதிர்களை மறைத்த படி ஜமுக்காளம் விரிக்க, காடு மேலும் கரிய இருளுக்குள் விழுந்து, அத்தச் சூழலையும் மாற்றிக் காண்பித்து இருக்கிறாயா, அல்லது உன்னையும் சேர்த்து எங்களுடன் இணைத்து கொள்ளவா என்று உருமிக் கடந்து செல்லும்.

பல பொழுதுகள் அதன் மிரட்டலுக்கு அஞ்சாமல் உள்ளிருக்க, இடியுடன் தன் மடி அவிழ்த்து கொட்டிய மழையாக பொழிந்து கொட்டும். குளிர் மழையில் விசிறியாக பரந்து விரிந்த மரத் தண்டுகளின் ஓரமாக அந்தச் சூழலில் ஒதுங்கி கொள்வதும் உண்டு. இல்லையென்றால் தொப்பலாக நனைந்து மேடேறி, நாகரீகமடைந்தால் கடந்து போகும் பேருந்து ஓட்டுநர் பாதி தூரம் போயும் பக்கக் கண்ணாடியில் பார்த்து நிறுத்தி ஏற்றிக் கொள்ளும் பொழுது “சார், அட்டை பார்த்தீங்களா,” உள்ளே ஏத்திறப் போறீங்கன்னு கேட்டபடி வாகனம் நகர்த்துவார். 

இங்கு எங்குமே உணவு பற்றி பேசாததிற்கு காரணமிருக்கிறது. காலையில் கெட்டிச் சட்னி வைத்து வாங்கிய இரண்டு இட்லிகள் மதியம் மூன்று மணிக்கு பிரித்தால் என்ன வாசனையுடன் கிடைத்து விடக் கூடும். அத்தனை நடைக்குப் பிறகு பொட்டலத்தைப் பிரித்து கிள்ளிக் கிள்ளி சாப்பிடும் பொழுது அதன் சுவையே எந்த காண்டினெண்டல் உணவிலும் கிடைக்காத அளவில் உளத்தையும், வயிற்றையும் ஒரு சேர நிரைக்கும். 

வெளியில் வந்தால் மலைவாழ் தேயிலைத் தொழிலாளிகளின் தேநீர்க் கடையில் சில சமயம் ஈக்கள் முதல் போணி செய்யாத போண்டாவோ, வடையோ நல்ல சிவப்பேறிய தேநீருடன் உணவுக்குழாயை வருடியபடி இரைப்பையை நிரப்பும். அரவமற்ற வனப்பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் பசியால் கண்களில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகசைக்க சிவப்பேறிய கண்களுடன் கூடடைவோம்

Wednesday, February 10, 2016

வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு - 1: Memory Lane

கிடைக்கும் இந்த சின்னஞ் சிறிய வாழ்க்கைக்குள் எத்தனை பயணங்கள், இடங்கள், புது மாதிரியான வேலைகள், புதிய மனிதர்கள் என்று விரித்து கொண்டே சென்றால் நம்முடைய வாழ்வின் கடைசி கோப்பையில் மிஞ்சி இருப்பது பிடித்த ரொட்டியை, பிடித்த கட்டன் காஃப்பியில் நனைத்து எடுத்து சாப்பிட எத்தனித்து சிறிதே தாமதித்து வெளியில் இழுக்க உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்து வைத்ததை கடைசி உறிஞ்சலில் ரசித்து அப்படியே விழுங்க ஊத்திக் கொள்வது போல நம்முடைய அனைத்து கடந்து வந்த நினைவு பொதிகளும் தித்திக்கும் வண்ணம் அமைந்திருக்க கூடும்.

என்னுடைய வால்பாறை மற்றும் டாப்சிலிப் நாட்களை இப்பொழுது நினைத்து பார்த்தால் ஏதோ கனவில் வாழ்ந்தது போல இருக்கிறது. ஆனால், நான் அன்றே இதே கோழித் தனமாக அதே கிறுக்குத் தனங்களுடன் வாழ எத்தனித்திருந்ததால், என்னால் முழுமையாக மழையையிலும், வெயிலிலும், அட்டை கடியிலும், யானை விரட்டலிலும், தேவாங்கு பார்க்க சென்ற இரவுகளிலும், யானை, காட்டெருமை சாணங்களை பொரட்டி போட்டும், காட்டு பூனைகளின் விட்டைகளை உடைத்து  போட்டும் அவைகளின் உணவு பழக்க வழக்கங்களை கண்டறியவெனவும் செய்யும் அத்தனை விசயங்களையும் ரசனையுடனும் செய்யும் ஒரு பெரும் வரம் பெற்றிருந்தேன்.

பனி படர்ந்திருக்கும் விடியற் காலப் பொழுதில் கிடைக்கும் ஏதோ உணவை எடுத்துக் கொண்டு காட்டினுள் நடையைக் கட்டினால் மீண்டும் உலகம் இருளினுள் சுருளச் சுருள ஓட்டமும் நடையுமாக மலை உருட்ட வீடு வந்து சேர்க்கும் சரிவான மலைகளில் உருண்டு பொரண்ட நட்களென சென்றவை அவை. எல்லாவற்றிலுமே ரசனை இருந்தது! மைன்ட் ஃபுல் நாட்களவை!!

வண்டுகள், வண்ணத்து பூச்சிகள், தவளைகள், ஊர்வன,  பறவைகள் என எது கிடைத்தாலும் அதனை அடையாளம் காணவென குறிப்பெடுத்து பட்டியலில் இணைத்தாக வேண்டுமென வெறி பிடித்து நகர்ந்த நாட்களவை.

அதே நாட்களில் தான் இக்பால் ம்யூசிகல் கடையுமெனக்கு அறிமுகமாயிருந்தது. வரும் வழியில் வாரத்திற்கு ஒரு டிடிகே90 புது கெசட் வாங்கி அங்கயே இளையராஜவின் 70பது மற்றும் 90களின் பாடல்களை மிக்க சிரத்தையாக கேசட் பை கேசட்டாக பதிவிற்கு கொடுத்து, இரவின் இடுப்பை தாண்டியும் மிக மென்மையாக, சிறுத்தையின் நடமாட்டத்திற்கு அஞ்சிய ஒரு புள்ளிமானின் அச்ச குரலுக்கும், விட்டு விட்டு சிம்ஃபொனி நடத்தும் சில் வண்டுகளின் ரீங்காரத்திக்கிடையிலே விடிய விடிய பாடல்களை ரசித்து கொண்டு கிடந்த நாட்களவையும் கூட.

இத்தனைக்கும் அன்று எனக்கு எந்த காதலியும் கிடையாது. இப்படி ஒரு ரசனையுடன் லயித்துக் கிடக்க. வரும் போகும் வழியில் நான்  உடுத்தி இருக்கும் உடையையும், கழுத்தில் தொங்கும் பைனாகுலரையும் கண்டு விடலைப் பெண்கள் கண் வைத்து போவது மட்டுமே நடந்து வந்தது.

ஆனால், இரவின் மடியில் மேகம் நடைபாதை இறங்கி தேயிலை தோட்டத்தின் ஊடாக தூவலாக அள்ளி கன்னம் வருட வருட எதனைப் பற்றியும் லட்சியமற்று ஓஷோவுடனும், கிட்டுவுடனும் கேள்வி பதில் செஷன் நடத்தியபடியோ, போடா கடவுளுமில்லை, பிசாசுமில்லை என்று அந்த கும்மிருட்டிருக்கு சவால் விட்டபடியோ காட்டெருமையின் நடமாட்டம் கவனித்தபடி காட்டு வாசியாகி திரிந்த நாட்களவை.

ஆனால், அந்த பச்சைய மொசைக் காடு வரும் காலங்களில் எனக்கென வேறு விதமான திட்டத்தை வைத்திருந்திருக்கிறது. என்னுடைய அகந்தயை, மனிதனின் புறவயமான வண்ண தோலுரிப்புகளின் ஊடாக எது போன்ற மனிதனாக பரிணமித்து நிற்கிறேன் என்று டெஸ்ட் வைக்க காத்திருக்கிறது என்று அறியாமலயே!

இது போன்ற மற்றுமொரு இரவில் தொடர்ந்து பயணம் செய்யலாம். நிறைய இருக்கிறது... பேச... 

Sunday, January 24, 2016

பயத்தின் வழியாக எதிர்மறை எண்ணங்களை சென்றடைதல்!

சிகரெட்டை கட் செய்யும் பணியில் மனத்தை திசை திருப்ப கண் மூடி அமர்ந்த பொழுது மனம் தெரு சுத்தியதில் கிடைத்ததை இங்கே... :)

சில காலங்களுக்கு முன்பு யோகா செய்வதின் மூலமாக எது போன்ற பலன்களை ஈட்டிக் கொள்ள முடியும் என்பதனைச் சார்ந்து ஒரு பதிவு இட்டு அங்கயே யோகா மின் புத்தகம் வேண்டுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யுமாறும் கேட்டு கொண்டிருந்தேன். அது ஒரு ஐந்தாறு வருடமிருக்கும்.

அதனையொட்டி வாரத்திற்கு ஒரு இரண்டு மூன்று மின்னஞ்சல்களாவது யோகா புத்தகம் கேட்டு வந்து கொண்டிருக்கிறது. தவறாது நானும் அனுப்பிக் கொண்டுமிருக்கிறேன்.

சரி இப்பொழுது அது எதுக்கு இங்கே என்று கேக்கலாம். ஏதோ தேடி அடைய வேண்டுமென்பவர்களுக்கு ஒரு சிறு கல்லை எடுத்து அவர்கள் உள்ளே தங்களுக்கென கட்டிக் கொள்ள விருக்கும் மன கட்டுமானத்திற்கு என்னாலான ஒரு சிறு உதவியாக அது இருக்கக் கூடும் என்பதில் கிடைத்த ஒரு அல்ப மகிழ்ச்சி.

நேற்று ஒரு கட்டுரை வாசித்தேன். அதனில் தொடர்ந்து தனக்கென ஓர் ஐந்து நிமிடம் செலவு செய்து கொள்ளக் கூட நேரமில்லை என்பவர்கள் தான், மணிக்கணக்காக இணையத்திலும் தேவையற்ற மற்ற விடயங்களிலும் எத்தனையோ நேரத்தை தொலைத்துக் கொண்டுமிருக்கிறோம் என்று கூறியது. அந்த கட்டுரையில் பட்டியலிட்ட நம்முடைய தினசரி வாழ்வின் நேர தொலைப்பை மறுப்பதற்குமில்லை.

நம்முடைய தினசரி வாழ்வை, முடிவுகளை, போராட்டமாக கருதிக் கொண்டு மண்டை உடைத்து கொண்டிருப்பவைகள் அனைத்துக்குமே உட்கார்ந்து நன்றாக தீர்க்கமாக சிந்தித்து நமக்கென எடுக்கபடாத முடிவுகளே காரணமெனவும், தேவையற்ற, கண்ணுக்கு புலப்படாத பயங்களுமே காரணம் என்பதாக அந்த கட்டுரை சுட்டிச் செல்கிறது.

இந்த பயத்தினை வெல்லும் பொழுதே நமக்கு தேவையான வாழ்க்கைப் பயணம் நமக்கே சென்சிபிலாக இருக்க செய்கிறது. நம்மிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளை நாமே உள் நோக்கி ஆராயப்படாமலேயேதானே தொடர்ந்து நாற்பது வருடங்கள் ஆனாலும் பேசியதையே பேசி, நடந்து கொண்ட பாவனையிலேயே தொடர்ந்து சரியென்று மனம் தீர்மானிக்க அதுவே நமது குண இயல்பாக வெளிப்படுத்தி கொள்ள முடிகிறது.

தொடர்ந்து மிகுந்த இறை பக்தியில் தினசரி சடங்காக நான்கு புகைப்படங்களுக்கு முன்பாக அமர்ந்து எழும் ஒருவர் எப்படி எதிர்மறை எண்ணங்களில் சிக்கி, தன்னுடைய வழியில் குறுக்கிடும் மக்களிடமும் அத்தகைய அதிர்வுகளை செலுத்த முடியும். இவைகளை கொண்டு சற்றே அருகே அது போன்ற மனிதர்களை நெருங்கி சென்று படிக்கும் தருவாயில், அங்கே உள் முகமாக தன்னை அறிந்து கொள்ளும் முயற்சி எதுவுமே சாத்திய பட்டிருக்கவில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில் மதச் சடங்கின் வாயிலாக தொடர்ந்து என்ன வெளியே வழங்கப்படுகிறது என்பதிலேயே மனம் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. அந்த எண்ணங்களை உடைத்து கொண்டு தனக்கென யோசிக்கும் 'தியான' மனத்தை அடைய முடிவதே கிடையாது.

இங்கேதான், தனக்கென ஐந்து நிமிடங்கள் தன்னுடைய சுவாசத்தை கவனிப்பதிலேயே கூட 'மனத்தின் திண்மை' ஈட்டும் பக்குவம் கைவரப் பெறுவதாக நவீன என்டெப்ருனர்ஸ், தன்னம்பிக்கையூட்டு குருமார்கள் கண்டறிந்து கூறுகிறார்கள். இதுவே சரியென்றும் எனக்கும் படுகிறது.

வயதோடு நான் அறிந்து கொண்டே வருவது- தனக்குள் செல்லவே இங்கே நம்மில் பலருக்கும் பயமிருக்கிறது. அது அப்படி ஒரு இருட்டறையாக இருக்கிறது. பயம் மட்டுமே நம்மை செலுத்தும் மூலமாக இருக்கிறது. நேர்மறை எண்ணங்களை மட்டுமே தங்களுக்குள் கொண்டவர்களே தங்களுக்கான உலகத்தில் நறுமணங்களை பரப்பும் பூஞ்சோலைகளை உருவாக்கி கொள்கிறார்கள். 

Thursday, May 01, 2014

நிறமிழக்கும் கனவுகள்: ஒரு மயான அமர்வு!

நேற்று இரவு அந்த ஒரு சிறு கிராமத்தின் அடர்ந்த இருளில் விஞ்ஞானத்தில் ஊறித் திளைத்திட்ட உடல் சாம்பலாகிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டிருந்தேன்.

அந்த பொட்டலை சென்றடையும் வரையிலும் அந்த உடலை நகர்த்திச் சென்ற ஊர்தியின் பின்னால் அந்த இருளைக் காட்டிலும் பூசி அப்பிய கறுமையான எண்ணங்களுடன் ஊர்ந்து கொண்டிருந்தோம். அந்த கிராமத்து சாலையின் இரு மருங்கிலும் அமைந்திருந்த சின்னஞ்சிறு வீடுகளிலிருந்து நடுநிசி பன்னிரெண்டைத் தொட்டிருந்தாலும் ஊரே அவருக்காக விழித்திருந்தது. அதில் குறிப்பிடும் படியாக என் கண்களுக்கு தட்டுப்பட்டதெல்லாம் கூப்பிய கைகளுடன் நின்ற வயதான பாட்டிகளும், தாத்தாக்களுமே!

அந்த விஞ்ஞானிக்கு அது ஒன்றும் செத்துப் போகும் வயதல்ல. வெறும் ஐம்பத்திரண்டு வயதே! மிகவும் மென்மையாக பேசும், பழகும் குணத்திற்கு சொந்தக்காரர். எங்களுடைய காடு புகும் அனுபவத்தில் எத்தனையோ முறை தடுக்கி விழுந்திருக்கலாம் எழுந்திருக்கலாம். ஆனால், ஒரு போதும் இப்படி ஒரு கெடுநிகழ்வு நிகழக் கூடுமென்று நினைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இப்படி நாங்கள் அறிந்துக் கொள்ளக் கூடியதாக எங்களவு காடு புகும் அனுபவ ஓட்டத்தில் நிகழ்ந்திடவே இல்லாத ஒரு கெடு நிகழ்விது.

அப்படி ஓர் உடைந்த மூங்கில் சிறு குச்சு அங்கே கிடந்திருக்க வேண்டாம். இவர் விழுந்த வேகத்தில் கண்ணின் வழியாக பாய்ந்து மறுமுனையில் துருத்தி நின்றிருக்கிறது. அவர் அதே இடத்தில் தனது அத்தனை ஆசாபாசங்களையும் காலன் இடத்தில் ஓப்படைத்துவிடக் கூடிய அசுர வேகத்தில் நடந்து முடிந்தே விட்டது.

இரவு பதினோரு மணி வாக்கில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறங்கும் பொழுது ஊரே உறங்கிக் கிடந்தது. நண்பர் அருண் வழிக்காட்டலின் பெயரில் ஆட்டோ ஒன்றை அமர்த்திக் கொண்டேன். வழியெங்கும் அந்த ஆட்டோ, சாலை பல்லாங்குழியில் வாகனத்தின் ஒற்றைச் சிம்னி வெளிச்சத்தில் வான வீதியின் ஏதோ ஒரு முனையில் மிதந்து செல்வதைப் போன்ற மயக்கத்தில் வைத்தபடியே அந்தப் பயணம் நீண்ண்ண்டு கொண்டே சென்றது. மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில் எங்கும், சுற்றிலும் மற்ற விளக்கு ஒளிகள் அறவே இல்லை. ஏதேதோ எண்ணங்கள்!

ஒரு வழியாக அந்தச் சாலையை அடைத்த படி மக்கள் திரண்டிருக்கும் அந்த இடத்தை அடைந்தது. அங்கயே இறங்கிக் கொண்டேன். வாழ்விற்கும் பிசுபிசுத்து திணறி நிற்கப்போகும் அந்த அனைத்து நிகழ்வுகளையும் கண்ணுரும் பொருட்டு எங்கிருந்தோ எனை நகர்த்தி இங்கே கொண்டு வந்து சேர்த்துக் கொண்டதாகப் பட்டது.

அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பிரவேசிக்கும் பொழுது, விஞ்ஞானியின் விசித்திரமான சிரிப்பொலியை என்னால் என் காதருகில் பிரத்தியேகமாக கேட்க முடிந்தது. காலம் அவர் முகத்தில் சிறு ரேகைகளை விட்டுச் சென்றதைத் தவிர்த்து பெரிதாக ஒன்றும் அவருடைய முகத்தில் வித்தியாசங்களை காணமுடியவில்லை. சிலபல நிமிடங்கள் முகத்தை பார்த்தபடியே தரைக்கு கீழே பூமி நகர்வதை உணர்ந்து அங்கிருந்து என்னை பெயர்த்து எடுத்து வெளியில் வைத்துக் கொண்டேன்.

மீண்டும் அந்த உடல் எடுத்தும் செல்லும் ஊர்திக்கு பின்னால் செல்கிறேன். தனியனாக. சாலையை மூடியபடியே விதைத்துச் செல்லும் மலர்களின் மீதாக என்னுடைய அடிபட்டு விடாத படிக்கு மிககக கவனமாக...

இன்னமும் நமது உடல் எரியூட்டும் நிகழ்வு பல ஆயிரம் வருடங்களைத் தாண்டியும் கடைபிடிக்கப் படும் வகையிலேயே அந்த ஏற்பாடுகள் நடத்தப்பெறுவதாக என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த ஏற்பாடுகள் நம் ஒவ்வொருவரின் அகங்காரத்தில் அடிக்கப்படும் கடைசி ஆணியாகவே படுகிறதெனக்கு. மேலே சாணத்தால் தயாரிக்கப்பட்ட வராட்டி அடுக்கப்பட்டது. அதன் மீது வைக்கோல் பரப்பப்பட்டு களி மண்ணால் சாத்தப்பட்டது. பிறகு அந்தத் தீ ஒரு முனையில் செருகப்பட்டது. பிறகு நான்கு முனைக்கும் பரப்பட்டது.

எரியும் சிதையை படமெடுக்க வேண்டுமென எண்ணம் அவ்வப்பொழுது எழுந்தாலும், மனதில் திராணி இல்லை. சற்றே கொச்சையாகப் பட்டது. எதனை சுருட்டிக் கொள்ள இந்த மனம் ஆசைப்படுகிறது என்று வெட்கித்து இரண்டு முறை வெளியில் இழுத்த புகைப்படக் கருவியை திரும்பவும் உள்ளயே போட்டுக் கொள்ளத் தூண்டியது எதார்த்தம்.

முதலில் புகையாகக் கிளம்பியத் தீ பிறகு சன்னமாக மஞ்சள் நிறத்தில் அடர்ந்தது. நான் பிற கிழவன் மார்களுடன் ஓர் இருட்டு பார்த்த தரையில் சப்பனமிட்டு வானத்தையும், தீயையையும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அந்த தீ பிறகு தலைமாட்டிருலிருந்து நீல நிறத்தில் யாரோ ஊதி ஒற்றை திரியில் அனுப்பவதைப் போல பிறீட்டு வந்தது. உடலின் இனிப்பு!

அவர் கரைந்து கொண்டிருந்தார். அதற்கு மேல் என்னால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. மீண்டும் நடை. இதோ அவ்வளவே நாம்! அவரின் வெற்றிடம் நிரப்பப்பட முடிவதற்கரிது! காலம் கண்ணாமூச்சியாடிபடியே சுழண்டு கொண்டிருக்கிறது.

Wednesday, March 20, 2013

கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - I

இந்த கேப்பங்கஞ்சிக்காக உழை உழைன்னு உழைத்த கவிதாவை எப்படியாவது கெளரவித்து காட்டிவிட வேண்டுமென்று அவரது தளத்தில் வெளியிடப்பட்ட எனது இந்த நேர்காணல் மறுபிரசுரிப்பு செய்ய பல முறை கேட்டும் எனக்கு அனுமதி வழங்காமலேயே கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

ஒரு வழியாக மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டு சரி எடுத்து போட்டுக் கொள்வதனால் போட்டு கொள்ளுங்கள் என்று அனுமதியும் கொடுத்தாகி விட்டது. அப்படி போராடி இதன் மறு பிரசுரிப்பு வாங்கியதற்கான காரணமாக சட்டென்று என் மனதில் படிவது என்ன வென்றால், பத்தி பத்தியாக நான் சிந்திச்சு எனது பார்வையை பகிர்ந்து கொண்டதை விட, இதற்கென பல மாதங்கள் என்னுடைய அத்தனை பதிவுகளையும் வாசித்து, அதனின்று கேள்விகளை உருவி மீண்டும் எங்கும் அடி பிராளமல் நான் சென்று கொண்டிருக்கிறேனா என்று என்னை மறு தோண்டுதல் செய்த கவிதாவிற்கு நன்றி கடனாகவாவது இருந்து விட்டு போகட்டுமே என்று மொத்த நேர்காணலையும் இரண்டு பகுதிகளாக பிரித்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இது எனது கடந்த வருடங்களுனுடைய முக்கிய பதிவுகளின் சாரம்சமாக அமையும் என்றால் மிகையாகது. நன்றி! Squirrel Kavitha, are you happy now! 

இதோ அந்த ஆறிப்போன கேப்பங்கஞ்சியை மைக்ரோவோவ் பண்ணி கவிதாவுடன் சேர்ந்து உங்களுக்காகவும்...

**************************************


2005ல் வலைப்பதிவு தொடங்கியுள்ள பிரபா என்ற தெகா'வின் முதல் பதிவிலே கண்டெடுத்த வார்த்தைகள் "தெக்கிக்காட்டானுக்கு முகமூடி கிடையாது, பெயரிலே தெரிந்திருக்கலாம்." முகமூடிகளோடு எழுதும் பலரின் மத்தியில், முகமூடி என்று ஒன்று இல்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், ஓரளவிற்கு தன்னை தானாக இருக்க வைத்துக்கொண்டு, எல்லாவிதமான பரிமாணங்களிலும், எல்லா பொருள்களிலும் எழுதக்கூடிய நண்பர் தெக்கிக்காட்டான் இன்று எங்களுடன்.

லிவிங்ஸ்மைல் வித்யா'விற்கு பிறகு கேள்விகள் கேட்க மிகவும் யோசித்த ஒரு நண்பர் இவராகத்தான் இருப்பார். இது வரை மிக எளிதாகவே எல்லோரிடமும் கேள்விகள் கேட்டு இருக்கிறேன். ஆனால் தெகாஜி ஐய் கேள்விக்கேட்க 2005-08 வரை அவருடைய எல்லா பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து கேட்க வேண்டியதாக இருந்தது. காரணம் எதுவுமே கான்ரோவா, அவரை துருவி கேட்கும்படியாக இல்லை. இப்பவும் இவரை என்ன கேட்பது என்ற தெளிவில்லாமலேயே...


இதோ தெகா...

அடக் கொடுமையே! 2005-'08வரைக்கும் ஒரே மூச்சில படிச்சீங்களா? ஏன் டாக்டர் ஏதும் அறிவுருத்தினாரா எப்படித் தூக்கம் வராதவங்களுக்கும் தூக்கம் இது போன்ற போரிங்கான பதிவுகளை படிப்பதின் மூலமாக தூங்க வைக்க முடியுங்கிறமாதிரி. எப்படியோ பொழச்சுப் கெடந்து வந்து கேள்வியும் கேட்டுறீக்கலே அதுவும் இன்னமும் அந்தத் தூக்கத்திலிருந்து "தெளியாமலயே..." :)). அதுக்காகவாவது இந்தப் பதில்களை தாரேன், திரும்பவும் தூங்கவாது பயன்படுத்திக்கோங்க.

நகைச்சுவை ஒரு பக்கம். பை த வே, கவிதா உங்கள் அனைத்துக் கேள்விகளும் ரொம்பவே ஆழமாக உணர்ந்து இங்கு கொணரப்-பட்டதாகவும் என்னய நானே உட்முகமாக மேலும் பார்த்துக் கொள்ள வேண்டி கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவும் எண்ணச் செய்தது, உங்களின் உழைப்பும் அது சார்ந்த இந்த கேப்பங்கஞ்சியும். வாழ்த்துக்கள்! நன்றி!!

இப்பக் உங்க கேப்பங்கஞ்சி குடிச்சிக்கிட்டே... பேசுவோமா...


கவிதா: வாங்க தெகாஜி..எப்படி இருக்கீங்க. .வீட்டில் அனைவரும் சுகமா..? அமெரிக்காவில் இருக்கீங்க.அங்கேயிருந்து ஆரம்பிக்கலாமே. பொழுது விடிந்து பொழுது போன.. அமெரிக்காவை நம்பியே உலகம் இருப்பது போன்ற பிரம்மை அதிகமாகிக்கிட்டே போகுது...அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் கண்டிப்பாக அடிப்படுகிறோம், அடிப்படுவோம் என்று தெரிகிறது. 1 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று சமீபத்திய சர்வே சொல்லுகிறது. அங்கே இருக்கும் நம் இந்தியர்களுக்கு வருங்காலத்தில் பாதுகாப்பு இருக்குமா? உங்களால் நிலைமையை ஏதாவது கணிக்க முடியுமா .?

தெகா:- சுகத்துக்கு என்னங்க குறைச்சல், மனசு நம்ம கையாண்ட இருக்கிறதுனாலே எதைதை எப்படி பண்ணிக்கோணுமோ அப்படிப்படிப் பண்ணிப் போட்டு சந்தோஷமா வைச்சிக்க வேண்டியதுதான். எனக்கு இந்த சந்தோஷம் கடையில எடை போட்டு காசு கொடுத்து வாங்கிட முடியுங்கிறதில நம்பிக்கையில்லைங்-கோவ்(அதாவது புறப் பொருட்களின் மூலமாக). இது போலவே வீட்டில இருக்கிறவங்களையும் மனச வைச்சிக்க சொல்லி கேட்டுக்கிறதுனாலே எல்லாரும் நல்லாத்தான் இருக்கணுங்கிற மாதிரி நான் நம்பிக்கிறேன்.

[வாசகர்கள்: கேட்ட கேள்வி ஒரு வரி, இதுக்கு இப்படி எழுதினா எவன் உட்கார்ந்து படிக்கிறதாம் :))]

அமெரிக்காவா, அதை ஏன் கேக்குறீங்க நான் இங்கன வந்த நேரம் அமெரிக்காவை இந்தியாவிற்கு மாத்திட்டாங்களாம். அதுனாலே இங்கிருக்கிற பொருளாதார, கலாச்சார, மற்ற ஏனைய அதிர்வுகளை-யெல்லாம் என்னால் அங்கிருக்கும் செய்தித்தாள்களின் மூலமாகவும், ஏனைய மீடியாக்களின் மூலமாகவும்தான் உணர்ந்து கொள்ள முடிகிறதுன்னா பார்த்துக் கொள்ளுங்களேன் எந்தளவிற்கு உலகம் இறுக்கி கட்டப்பட்டிருக்கிறதா எல்லாரும் உணர்ராங்கன்னு.


இந்தியர்களின் நிலையும், பாதுகாப்பும்: பார்க்கலாம் அது வரப் போகின்ற அமெரிக்கா அதிபர் தேர்தலை ஒட்டியே சந்திக்கவிருக்கும் நிகழ்வுகளவை. குடியரசுக் கட்சி ஆட்சியமைத்தால் நிலமை கொஞ்சம் மேலும் சிக்கலாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமிருப்பதாக எண்ணத் தோணுகிறது. நம்மூர்ல ஐம்பது பேர் மட்டுமே ஏறிப் போர பேருந்தில 110பேரு பேரோம் எனக்கும் ஒரு ஒத்தைக் கால வைச்சிக்க நீங்க தள்ளி நின்னு இடங் கொடுக்காமயா போயிடுவீங்க, அப்படியே என் உசிருக்கு இங்க கேடு வரும் பொழுது அங்கே வாரேன்னா... சொல்லுங்க. எதுக்கும் இரட்டைக் குடியுரிமை வாங்கி வைச்சிட்டோம்ல.

கவிதா: மனித அட்டைகள்? உங்களுடன் முற்றிலுமாக முரண்படுகிறேன். கூட்டுகுடும்ப நிலை மாறுவதால், நிறைய பிரச்சனைகள் நம்மிடையே வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் நம் இந்திய கலாசாரத்திற்கு எதிராக நம்மை அழைத்து செல்கின்றன. இருவரே இருக்கும் ஒரு வீட்டில், அவர்கள் தவறுகள் செய்யும் போது சொல்லிக்காட்டி திருத்தவோ, சண்டையிடும் போது நடுவில் சென்று சமாதானம் செய்யவோ ஆள் இல்லையென்றால் எல்லோருமே திருமணம் ஆன 2 வருடங்களுக்குள் விவாகரத்து பெறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுவார்கள். மட்டுமல்லாது குழந்தைகள் பெரியவர்களின் ஆசிர்வாதத்திலும், அறிவுரை, அன்பிலும் வளருவதே சிறந்தது.. மட்டுமல்லாது முதியோர் இல்லங்கள் உருவாகாது. முதிய வயதில் கண்டிப்பாக நம்மின் அன்பும் அனுசரணையும் அவர்களுக்கு தேவையல்லவா?

தெகா:- இந்த கூட்டுக் குடும்பத்தினால கிடைக்கிற நன்மை தீமைகளை நன்றாகவே அலசித்தான் அந்தப் பதிவில் பேசியிருப்பேன். அதாவது ஒரு காலத்தில இது போன்ற கூட்டமைவு தன்னலமற்ற நிலை சற்றே மேலோங்கி, பொதுநலம் சற்று தூக்கலாக அதாவது தேவைகள் மட்டுக்குள் இருக்கப்பெற்று ஒரு குடும்பத்திற்குள் இருக்கப் பெற்ற அணைவரும் ஏதோ ஒரு வழியில் தனது பங்களிப்பை முன் வைத்து மன முறிவுகளை தவிர்த்து வாழ்ந்திருந்த பட்சத்தில் நீங்கள் கூறியபடி பல விதத்தில் உபயோகமாக இருந்திருக்கலாம் (ஆனா, குடும்பமே அழகிழந்து நிம்மதியில்லாமல் பல ஓட்டைகளுடனுடம், அரசியல் பூசல்களுடனும் வாழ நேரும் பொழுது அங்கே என்ன குழந்தைகளுக்கு சென்றுகிடைக்க வழிவகை இருக்க முடியும்?).

இன்றைய நிலையோ வேறாக இருக்கிறது. தேவைகள் பெருகிவிட்டது, உழைக்காமல் உண்ண வேண்டுமென்றோ அல்லது சட்டை கசங்காமல் பொருளீட்டுவது [இது போன்ற ஒட்டுண்ணி வாழ்வும் இதில வருதாங்க ஒயிட் காலராம்:)] போன்ற எண்ணம் தலைத்தோங்கி பொத்தாம் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையும் வந்த நிலையில் இது போன்ற கூட்டமைவு தேவையற்ற மன உளைச்சல்களயே கொடுக்கிறது குடும்ப உறுப்பினரிடத்தே, அதுவும் குறிப்பாக வயதான பொற்றோர்களுக்கு. திருமணமான தம்பதிகளில் பிற மக்களின் பங்களீப்பு என்பது அத் திருமணம் உடைந்துவிடாமல் பாதுக்காக்கப்படவே என்று சொல்லும் நிலையே, இரு வயதுக்கு வராத சிறு பிள்ளைகளுக்கு எதற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் ஊர்? என்றுதான் மாற்றுக் கேள்வி கேக்க வைக்கிறது. அவர்களே இன்னமும் குழந்தைகளாக தங்களின் அன்றாட வாழ்வியல் முரண்களை உற்று நோக்கி, பேசித் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளும் மன நிலையில் கூட தங்களை வைத்துக்கொள்ளத் தெரியாத மன பக்குவத்தில் இருக்கும் பொழுது, பிறகு சம்பிரதாயத்திற்காக பிறர் கொடுக்கும் தீர்வுகளை அவர்களது என்று எண்ணி ஏமாற்றிக் கொண்டு வாழும், வாழ்வும் இனிக்கவா செய்யும்? இதிலிருந்து எனக்குத் தெரிய வருவதே, தம்பதிகளின் இடைவெளி எவ்வளவாக மனத்திலும், மணப் பொருத்தத்திலும் இருக்க முடியுமென தெரிகிறது.

இப்பொழுது மேலை நாடுகளில் அவ்வாறு "தன் பொறுப்புணர்த்தி" வாழ வழிவகை செய்யும் குழந்தைகள் அனைத்துமே பெற்றோர்களை உதாசீனப் படுத்துகிறதென்றோ, யாருமே திருமணத்தில் முழுமையாக வாழாமல் இருக்கிறார்களொன்றோ பொருள் கொள்ள முடியுமா? நான் அருகாமையிலிருந்து கவனித்த வரையிலும், பொற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிருக்கிற உறவு நல்ல நண்பர்கள் நிலையிலிருப்பதால், தூரத்தே பிரிந்து இருந்தாலும், தேவையானதை நன்றாகவே பார்த்து பார்த்து செய்து கொடுப்பதனைப் போல் உள்ளது பொற்றோர்களுக்கு, அவர்களும் தங்களின் நிலையுணர்ந்து எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வதால் தேவையற்ற மனச் சங்கடங்கள் தவிர்க்கப்படுகிறது.இந்தப் பதிவிலும்... முதுமை ஒரு சாபக்கேடாஅந்தப் பதிவிலும நடை பெருவதினைப் போல நான் இங்கு கண்ணுற்றது கிடையாது.

ஆனால், இங்கு போன்று பொருளாதார, சமூக கட்டமைப்பு நம்மூரில் இன்னமும் அரசாங்கமோ அல்லது மங்களோ அமைத்துக் கொள்ளாத காரணத்தினால் இது போன்ற உதாசீனங்கள், முதுமையில் அப்யூஸ் எல்லாம் பார்க்க வேண்டிய நிலையில் அவர்களை பிடித்து தள்ளிவிடுகிறது.

கவிதா: கருக்கலைப்பு சட்டம் தேவையான்னு ஒரு பதிவு போட்டு இருக்கீங்க. கண்டிப்பா தேவையில்லை. நான் கருவுகிறேன் என்றால் அது என் உடம்பும் மனசும் சம்பந்தப்பட்ட என்னுடைய சொந்த விஷயம், குழந்தை சரியாக வளரவில்லை என்பது மட்டுமல்ல எந்த ஒரு என் சொந்த காரணங்களுக்காக நான் கருவை கலைக்கலாம் என்பதே சரி என்று நினைக்கிறேன். ஒரு பெண் தனக்கு தேவை தேவையில்லை என்று தானே முடிவெடுக்க உரிமை கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும் இல்லையா?

தெகா:- கருக்கலைப்புச் சட்டம் தேவையா என்ற பதிவில் என்னுடைய நிலையை தெளிவாக கூறிவிட்டேன். அதாவது கருவுற்றிருக்கும் பொழுது ஆரம்ப கால கட்டத்தில் நன்கு தேர்வுற்ற மருத்துவர்களால் கண்டறியப்பட்ட - குழந்தையின் இன்றியமையா உறுப்புகள் பாதிப்புற்று பிறப்பிற்குப் பிறகு தொன்று தொட்டு மருத்துவ தேவைகளையும், பிற மக்களின் அருகமையும், பொற்றோர்களின் ஈடுபாடு அவர்களின் பொருளாதார சூழ்நிலை இவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கே அந்த கருவை வளர்த்து ஈன்றெடுப்பதா வேண்டாமா என்ற இறுதிக் கட்ட முடிவை அவர்களின் பொருட்டே கொடுப்பதே சிறப்பு என்று கூறியிருக்கிறேன் தெளிவாக அந்தப் பதிவின் மூலமாக.

கருத்தடை சாதனம் கொண்டு குழந்தை கட்டுப்பாட்டை தவிர்த்து விடுவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னால் வைத்து பார்க்க முடியாத நிலையிலும் குழந்தை "கடவுள் கொடுத்தது" அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற காலாவதியான கருத்தோட்டத்தில் எந்தவிதமான பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றிகும் மேலாக குழந்தையின் பாலினத்தைப் கண்டறியும் பொருட்டு லக்சுரியில் வைத்துக் கொள்வதும், கலைத்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே ட்டூ மச். எ பிக் நோ, நோ.

கவிதா:- தீவிரவாதம், வன்முறை போன்ற செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ப்பு முறை, குடும்ப சூழல் காரணம் என்பது தவறான கருத்தாக இருக்கிறது. எனக்கு தெரிந்து நல்ல முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் தீயநட்பு, சமுதாய தாக்கம் போன்றவற்றால் வாழ்க்கையில் தடம் மாறி போனதை பார்த்து இருக்கிறேன். உங்களின் கருத்து.?!

தெகா:- குழந்தைகள் எது போன்ற சூழலில் வாழ்ந்து வருகிறது என்பதும், எது போன்ற பொற்றோர்களை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு இந்த சமூதாயத்தை முதலில் பருவத்தை எட்டுவதற்கு முன்னமே வீட்டின் வளர்ப்புச் சூழலைக் கொண்டே பார்த்து, கேட்டுத் தெரிந்து கொள்கிறது. அது போன்றே குழந்தைகளின் தனித்துவத்தன்மை பேணல் என்ற கட்டுரையின் மூலமாக எப்படி குழந்தைகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்பதனை விளக்கியிருப்பேன். என்னை பொருத்த மட்டில் பெரியவர்களின் வழிகாட்டுதல்கள் என்று கூறிக்கொண்டு எல்லாவற்றையுமே வலிய குழந்தைகளின் தலையில் வைத்து திணிப்பதனையே ஒரு வன்முறையாகத்தான் பார்க்க முடிகிறது.

மற்றபடி நீங்கள் கூறியபடியே பிரிதொரு சமயத்தில் தானும் ஒரு அடல்டாக எட்டும் நிலையில் கூடா நட்பு, தீய பழக்கம், சமூகத் தாக்கம் இன்ன பிற வன்முறையை நோக்கி அடியெடுத்துச் செல்ல வழிகோணலாமென்றாலும், அது நடைபெறும் காலமும் சூழலும் வேறு. ஆனால், முதல் அடி வளர்ப்புத் தளத்திலயே கோளாறுக்கி விடுவதுதான் மிக்க வருத்தத்துக்குரியது. உதாரணம்: பிடிக்காத ஒரு கல்வியில் கட்டாயப்படுத்தி புகுத்தி விடுவதோ, அல்லது தவறானா முறையில் பிற சமயங்களைப் பற்றியோ, அல்லது பிரிதொரு பாலினத்தின் மீது காழ்புணர்ச்சி வரும் வகையில் தனது புரியாத கருத்துக்களை தனது குழந்தைகளிடத்தே ஊட்டி வளர்த்து விடுவது, இப்படி. வித்தியாசம் புரிகிறதா??

கவிதா:- உங்களின் குட்டி கவிதைகள் படித்தேன்..:))-ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!! எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க தோன்றுகிறது..? உயிருடம் இருக்கும் நம்மை பிணங்கள் என்று சொல்லலாமா? உணர்வுகள் அற்றவர்களை, மனிதநேயம் இல்லாதவர்களை வேண்டுமானால் சொல்லலாம்.. ஆனால் எல்லோரையுமா? ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!!

தெகா: கவுஜா என்றால் வாழ்வின் முரண்பாடுகளின் மூட்டைகளை தோலுரித்து காட்டுவதற்கெனவே அமைந்தவை இல்லையா? அந்த ரீதியில் வைத்துப் பார்க்கும் பொழுது என்றோ ஒரு நாள் நாம் எல்லாம் மரணிக்கப் போகிறவர்கள்தான் இருந்தாலும், இன்று இறந்தவர் என்னமோ தேவையற்றுப் போனதாகவும், நமக்கு அவரை(பிணத்தை) பார்க்கக் கூட நேரமில்லா தொனியில் பரபரவென்று இருப்பதனைப் போலவும் கண்ணுற நேர்ந்ததால், அப்படி மரணத்தின் மடியில் நான் அமர்ந்து கொண்டு எள்ளி நகையாடுவதனைப் போல அமைத்திருக்கிறேன். பாதி பேரு இங்கே "இறந்த நிலையில்" தானேங்க இன்னமும் வாழ்ந்திட்டு இருக்கோம். எதுக்காகவாவது ஒன்றுக்கு தினமும் பயந்தவாறே.

கவிதா: நீங்கள் இயற்கை நேசி என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. இது இயற்கை குணமா அல்லது நீங்கள் வளர்த்துகொண்டதா?

தெகா:- நம் எல்லோருக்குள்ளுமே அந்த வேட்டையாடும், இயற்கையுடன் ஒட்டி உறவாடி மகிழும் பொழுது கிடைக்கும் ஆத்ம சுகம் என்றைக்குமே அழியாது இருக்கும், இது குழந்தை பருவத்தையொட்டி பீரிட்டு வெளிப்படுவதனை காண முடியும், ஆனால் மீண்டும் தான் வளரும் சூழலும், வாழ்க்கைத் தேவைகளும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் எதார்த்தம் மறந்து செயற்கைத் தனத்தில் ஒட்டிக் கொள்ள வழிவாகை செய்துவிடுகிறது. எனக்கு என்னமோ, அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி வானத்தை அன்னாந்து பார்த்து பேட்டரியை (எண்ண) ரீ-சார்ஜ் செய்து கொள்வது பழக்கமாகிப் போன ஒன்று, அதுவும் இரவு வானமென்றால் அலாதி பிரியம். அப்படியே அதற்கு கீழே இருக்கக் கூடிய மரம், மட்டை, பூச்சி அத்துனை ஜந்துக்களையும் பார்க்கும் பொழுது பூமிப் பந்தின் பரிணாமச் சுழற்சியில் நம்முடனே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தாம், அவைகளன்றி இங்கே நமக்கென்ன பூலோக சொர்க்கம் கிடைக்க வழி, என்றாகிப் பார்க்கத் தோன்றுகிறது.

அது அப்படியாக இருக்க ஏதோ குருட்டாம் போக்கில் நல்ல வேளையாக எனது பொற்றோர்கள் மெத்தப் படித்தவர்களாக இல்லாமல் போக, எனக்கு மூளைச் சலவை பண்ணப்படக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்ததும் ஒரு லக்கியான நிகழ்வுதான், ஏனெனில் அப்படியாக அமைந்திருந்தால் இன்னேரம் எங்கோ ஒரு கூண்டுக்குள் அமர்ந்து ஆணிப் புடுங்கியிருப்பேன், கண்ணீல் ரத்தம் சொட்டச் சொட்ட. என் கல்லூரி வாழ்க்கை முழுதுமாக பச்சைப் பசேல் மேற்கு மலைக் காடுகளில் அமைந்து போனதும் நேசியாகிப் போனதற்கு மற்றொரு காரணம்.


கவிதா:- எப்படி அடுத்தவர்களை புண்படுத்தாமல் பதிவெழுத நம் மனதை கட்டுப்படுத்த வேண்டும், எப்படி முகமூடிகளாக உலாவராமல் உணமையான பெயரில் பதிவுகளும் , மறுமொழிகளும் இட நம்மை கட்டுப்படுத்தவேண்டும் என்று பதிவுலக நண்பர்களுக்கு சொல்லுங்களேன்.

தெகா: பொதுத் தளத்தில் எது போன்ற புரட்சிக் கருத்துக்களையும், மாற்றுச் சிந்தனைகளையும் யாவரும் பகிர்ந்துகொள்ளல் எண்ணி(பொறுப்போடு) வைப்பதில் நமக்கு உள்ளார்ந்த திருப்தி கிடைக்கிறது என்றாலும், ஏனையோரின் பிரதி விவாதங்களும் அவர்களின் மாற்றுக் கருத்துக்களும் ஒருமித்த சிந்தனையுடனும், இசைபுடனும் இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பை சற்றே நம் கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே, பாதி இரத்த அழுத்தத்தை பங்களீப்பவர் தவிர்த்துக் கொள்ள முடியும். ஏனெனில், அது போன்ற மாற்றுச் சிந்தனைகளை முன் வைப்பவர் என்னுடைய வளர்ச்சி நிலையின் எல்லைக்குள் பிரவேசிக்காமலோ அல்லது அவருக்கு அவர் எடுத்திருக்கும் சார்பு நிலை சரியொன்றோ எண்ணிக் கொண்டிருக்கும் பட்சத்தில், எவரவர் சார்பு நிலையோ அல்லது கருத்துக்களோ தினப்படி பல மாறுதல்களை அவர்கள் எண்ணும் எண்ணமாகவே விட்டு பயணித்து செல்லும் பட்சத்தில் தானாகவே மனத்தினுள் மாற்றங்களை உணர்வர்.

இருந்தாலும், பங்களீப்பவர் அதனை முன்னமே உணர்ந்தவர் என்ற முறையில் நம்முடைய பார்வையை முன் வைக்காலமே தவிர "அடித்து பழுக்க வைத்துவிட முடியும்" என்ற அணுகு முறை ஒரு போதும் பலனளித்ததாக பொருள் கிடையாது என்று கருதி விலகி இருப்பது நலம் பயக்கலாம். பங்களீத்தவர் மனவோட்டம் எப்படியாக இருக்க வேண்டுமெனில் மாற்றுச் சிந்தனையை மனத்தினுள் விதைத்தாகிவிட்டது, காலப் போக்கில் அலசி, ஆராய்ந்து நன்மை தீமைகளை ஏற்றுக் கொள்வது வாசிப்பாளரின் கைவசமென்றெண்ணி அவர்களிடத்தேயே விட்டுவிடுவதாக இருக்க வேண்டும்.

இல்லையெனில், கோபத்தில் சொல்ல வந்த விசயத்தின் மையக் கருத்து சிதைபட்டு, எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை வாசிப்பாளனிள் விட்டுவிடாமல் இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவதும், சினமுறும் பொழுது அங்கே எண்ணவோட்டம் சீராக இருப்பதும் கிடையாது. ஒரு நல்ல விசயத்தை முன்னுறுத்தி எழுதப் படும் கருத்து குறைந்த பட்சம் மனத்தினுள் பல மணி நேரங்கள் தக்க வைக்கப்படும் பொருட்டு அங்கே தெளிவான சிந்தனை பிறக்க ஏதுவாகிறது, அப்படியாக முன் வைக்கப்படும் கருத்துக்களும் கண்டிப்பாக "திறந்த நிலை" (தன் முனைப்பில் தன்னை வளர்த்துக் கொள்ள விரும்புபவனை) வாசிப்பாளனை தொட்டுச் செல்லாமல் விட்டுப் போவதுமில்லை என்பது என் கருத்து.


...to be contd -2



Friday, February 19, 2010

பதின்ம கால மன டைரிப் பதிவுகள்...

பதின்ம வயது டைரிக் குறிப்பில இருந்து சில பக்கங்கள் அப்படிங்கிற தலைப்பின் கீழே ஒரு வீட்டுப் பாடம் கொடுத்தாக இங்கே சிறுமுயற்சி முத்துலெட்சுமி. சில தொடரழைப்புகளின் தலைப்பை பார்த்தாவே ஹ்ம்ம் நாமும் கலந்துகிடலாமேன்னு ஒரு ஆர்வம் தொத்திக்கும் அதில இதுவும் ஒண்ணு. எழுத கூப்பிட்டாளுக்கு இங்க வைச்சு ஒரு நன்றி சொல்லிக்கிறேன்.

இந்த தலைப்பில ஒரு முரண் இருக்கு என்னயப் பொருத்த மட்டிலும். நான் பதின்மத்தில இருக்கும் போதெல்லாம் ஏற்கெனவே பிரிண்ட் பண்ணி இருக்கிற சொந்தப் புத்தகப் பக்கங்களிலிருந்து மீண்டும் கை ஒடிய ஒடிய வண்டி வண்டியா நோட்டுப் புத்தகங்கள் வாங்கி எழுதித் தள்ளவே அம்மாவை சுரண்டணும். அம்மா, அப்பாகிட்ட போய் நின்னு ஏதாவது கொடுக்கிறத வாங்கிக் கட்டிகிட்டு உபரியா இந்த நோட்டுக்கள் வாங்கித் தர ஒத்துக்க வைக்கிற ஒரு சூழல்.

அப்படி இருக்கும் பொழுது, பள்ளி ஆறோ ஒரு அரசாங்கப் பள்ளி. அங்கே நீந்தி பேர் பட்டு வெளிக் கிளம்பும் காலம் வரையில் எவரும் 'டேய்! டைரின்னா என்னான்னு தெரியுமாடா, அத எப்படியெல்லாம் பயன்படுத்திக் கணுமின்னாவது தெரியுமாடான்னு' கேக்கிற அளவில இருந்த மாதிரி ஆசிரிய/சியைகளும் என் ஞாபக ரேடாருக்கு முன்னாடி துளாவிப் பார்த்தாலும் தெரியவில்லை. இது போன்ற ஒரு வளர்ப்புச் சூழலில், டைரிங்கிற ஒரு விசயமே 17 வயசு வரைக்கும் எட்டிப் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கவில்லைன்னு நான் சொல்லி இனிமே நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலையில் இருக்க மாட்டீங்கன்னு தெரியும்.

இருந்தாலும் மண்டைக்குள்ளர இருக்கிற அந்த அளவற்ற நோட்டுப் புத்தகங்களில் பொதிஞ்சு போன பச்சை தாள்களிலிருந்து சிலதை அப்படி விசிறிக் காமிப்பது சிலருக்கும் எனக்கும் தேவைப்படலாங்கிறதாலே... நாலு நாளா இப்படி ஒரு விசயத்தை ஏத்துக்கிட்டமே என்ன எழுதலாம்னு எண்ணியபடியே உள்ளரே தூக்கிப் போட்டுட்டு அப்படியே அப்பப்போ மிதந்து வார விசயங்களின் மீது கொஞ்சம் பார்வையை பட்டுப் படாமல் தடவ விட்டு திரும்பவும் காணாம அடிச்ச படியே நாட்கள் நகர்ந்துச்சு.

இதெல்லாம் எப்படின்னா மறு அசை போடுவது மாதிரிதானே! கிடைக்கும் போது வேக வேகமாக இந்த கால்நடைகள் எல்லாத்தையும் உள்ளே வைச்சு அடைச்சிட்டு பின்பு ஓய்வில் இருக்கும் பொழுது எடுத்து மறு அசை போடுவது போல. என்னுடைய பதின்மத்தின் வழியாக கிடைத்த அனுபவ சேகரிப்புகளை எடுத்து அசை போடுவதில் அப்படி ஒரு கடினம் இருந்து விட முடியாது. ஏனெனில் ஆழமாக உராய்ந்து போன விசயங்கள் அது எதன் பொருட்டு ஆனாலும் பசுமையாக ஓர் ஓரத்தில் படிந்தே கிடக்கும் என்ற நம்பிக்கையில் அமர்ந்தே விட்டேன் இன்று முங்கி எடுக்க.

இந்த பதின்ம வயதினூடாகத்தானே வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும், முரண்களையும், சமூக கட்டமைப்புகளையும் ஓரளவிற்கேனும் வயதிற்கு ஒன்றாக அறிந்திருக்கக் கூடும். வாழ்வின் எதிர்மறை செயல்களான சுயநலமும், பொறாமைக் குணமும் வார்த்தெடுக்க பயன்படுத்தப் போகும் பட்டறையெனவும், ஒரே குடும்பமாக ஒற்றை மின் விசிறிக்கி கீழே காலம் சுழற்றி அடித்து திசைக் கொருவராக பல்லாங்குழி ஆடப்படப் போகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் உண்டு களித்து ஓட்டுக் கூரையைப் பார்த்தபடி ஏதேதோ பேசிக்கொண்டு உறங்கிப் போன ஒரு அன்பால் பிணைந்த கூட்டம். ஒரே சிந்தனை, மன ஓட்டம் என அன்பைத் தவிர அங்கே பகிர்ந்து கொள்ள வேறு ஒன்றுமில்லை என்றமைந்த குடும்பமைப்பு. வாழ்வின் அருமை உணர்த்தவென அமைந்த பதின்ம படி நிலைகளவை. இவைகளை இன்னதென்று அறிந்து, அதனை முழுமையாக புரிந்து இது போல ஒரு நாள் தலைகீழாக நின்றாலும் அது போன்ற ஒரு காட்சி இன்று கிடைக்காதென நினைந்து வாழ்ந்திருக்கக் கூடிய அறியாப் பருவமும் அந்த பதின்மம் தானே.


ஊசித் தட்டானாக சிறகடித்து காணாங் கோழியாக நாள் முழுக்கவும் இங்குதான் செல்கிறோம், இதுதான் எங்களுடைய இன்றைய மிஷன் என்று சொல்லி தீர்மானித்துவிட முடியாதபடிக்கு அமைந்த தினப்படி நண்பர்களுடனான கேளிக்கை விளையாட்டுக்கள் தான் எத்தனை. பரிணாமத்தில் வேட்டையாடி பிழைத்து இன்று மனிதர்களாக காட்டிக் கொள்ள எத்தனிக்கும் மனிதர்களுக்கிடையே இருந்து அப்பவே விட்டு விலகி மணிக் கணக்காக வேலி ஓணான்களையும், சிறு வகை வேலிப் பறவைகளையும் தேடி திரிந்த காலமது. மண்டை உடைதல்களும், சிறு சிறு வீரத் தழும்புகளுமென உடலெங்கும் காயங்களால் எழுதிக் கொண்டதும் அதுவே சுவடுகளாக தன் பதின்மம் சுட்டும் கையேடு என்றறியாமல் எழுதி தீர்த்ததும் அதே பதின்மத்தில்தானே.

காதலுக்கென பள்ளி நண்பி ஒருத்தியின் வீட்டுப் பாட நோட்டை கெஞ்சி அடித்து வீட்டுக்கு வாங்கி வந்து அச்சு பிறழாமல், அவள் எழுத்துகளில் போடும் சுழிப்புகளின் அழகில் மயங்கிய நேரம் போக அந்த நோட்டு/புத்தகங்களுக்கு, எதிர்த்த வீட்டில் சினிமா கொட்டகையில் வேலை பார்க்கும் ஒருவரிடம் அழகான சினிமா போஸ்டர் வாங்கி அதில் எனது பதின்ம வயதுக் காதலை குறியீடாக காட்ட அட்டை போட்டு கொடுத்தனுப்பி எனது வேதிய உடற் செயற்பாடுகளை அறிந்து கொள்ள உதவியதும் இந்தப் பதின்மம்தான்.

பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பள்ளிகளின் மீதான வெறுப்பு அப்படியே இங்கும் தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது. பள்ளி சென்ற நேரத்தில் சக நண்பர்களுடன் புழங்கிய நேரம் போக பள்ளி கட்டடத்தின் வேலிகளுக்குள் ஒரு வேற்றுக் கிரக வாசியாக தடித்த தோல்களுடனும், வெம்பிய மனதுடனும் சிறைப் பறவையாக திரிந்திருக்கக் கூடுமென்று இப்பொழுதும் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. மாலை வேலையில் எனக்குப் பிடித்த நண்பர்களுடன் வரும் வழியில் செய்யும் அட்டகாசங்கள் அந்த எட்டு மணி நேர வாசனையை துடைந்தெறிந்து நாளைய நோக்கிய எதிர்பார்ப்பை விதைத்து அந்த மன நிலையை கடக்க வைத்திருக்கிறது. இப்பொழுது நிதானமாக நின்று யோசித்தால் அது யார் மீதான தவறு என்பது கொஞ்சமே விளங்குகிறது.

இதுவரையிலுமே கவனித்திருக்கக் கூடும் பள்ளிப் புத்தகங்களை தவிர்த்து பிற விசயங்களை படிப்பதற்கான ஒரு புறச் சூழல் அமையா வாழ்வமைப்பு என்பதனை. இருப்பினும் அப்பாம்மாவின் உறுத்தலற்ற வாழ்வியல் சூத்திரங்களான, தனித்துவம் பேணல், தனி மனித மனச் சுதந்திரத்தின் அவசியம், விரும்பிய அளவில் சுதந்திரமாக விட்டுத் திருப்புவது, எனக்கும் அப்பாவிற்குமான இயல்பான நட்பு முறை - கடைசியாக பள்ளி இறுதியாண்டில் "தம்பீ, தோலுக்கு மேலே வளர்ந்திட்டே, நண்பன் மாதிரிதான் இனிமே பாவிக்க முடியுமென்ற அந்த பண்பான வார்த்தைகளும்," யார் ஏதாவது என்னைப் பற்றி அப்படி இப்படிக் கூறினாலும் "அவன் அப்படி செய்திருக்க மாட்டானே"ங்கிற இன்றளவும் உள்ள அம்மாவின் அசாத்தியமான நம்பிக்கையும் கூடுதல் பொறுப்பை என்னிடமே வழங்கிவிட்டது. அன்று தொடங்கிய வாழ்வியல் பாடம் அந்தப் பட்டறையில் பயின்ற எனக்கு இன்றளவும் தோல்விக்கும்/வெற்றிக்குமான முழு பொறுப்புகளை நானே முகம் கொடுத்து யார் மீதும் விரல் நீட்டும் கெட்ட பழக்கத்தை பழகிக் கொள்ளாதவாறு பார்த்துப் பழகிக் கொண்டதும் அந்தப் பதின்மத்தில்தானே.

அப்பாவின் அந்தப் பண்பு நிலையும் அம்மாவின் பொறுப்புணர்வும் ஒரு கலவையாக என்னுள் இறங்க 15 வயதிற்குப் பிறகு பள்ளியில் கொஞ்சம் ஈடுபாடு கூடிக்கொண்டது. அதற்கு என்னைச் சுற்றி அமைந்த சமூக மக்களின் அழுத்தமும் ஒரு காரணமாக அமைந்து போனது. இருப்பினும் அங்கும் என் விருப்பப்படியே கணக்குப் பாடங்களுக்கு ஒளிந்து உயிரியல் பிரிவை தேர்ந்தெடுத்ததும் அதற்குத் துணையாக வீட்டில் உள்ளவர்களின் "கணக்குப் போட்டுப் பாடங்களை" தேர்ந்தெடுக்க வைக்கும் குறுக்கீடுகளும் இல்லாமல் போக படிப்பு விசயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த உதவியாக இருந்தது.

அதுவே பின்னாளில் காடுகண்டிக் கழுதையாக மேற்கு மலைத் தொடர்களில் சறுக்கித் திரியும் வாய்ப்பையும் பெற்று, இன்றும் பொருளாதார ரீதியில் பெரிய அளவில் சாதித்துக் காட்ட முடியாதெனினும் மனசிற்கு நெருக்கமாக எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை திருப்பிக் கொள்ளும் அந்த திசை திருப்பும் துடுப்பை என் கையிலேயே அமைத்துப் பார்க்கும் அளவிற்கு அந்தப் பதின்ம வாழ்வுப் பட்டறை சுதந்திரத்தை கொடுத்துப் பார்த்தது.

அதுவே பள்ளிகளில் இருந்த போதும் சரி, கல்லூரிகளின் தொடக்கத்தில் ஆரம்பித்த பதின்மத்தின் இறுதி நிலையிலும் சரி உடை அலங்காரங்களில் கொஞ்சம் வித்தியாசமாக தலைக்கு எண்ணெய் வைக்காமல் நீண்ட கேசத்துடன் போவதற்கும், குத்தூசி போன்ற ஒடிந்த தேகம் உடையவனாகினும் கை வைக்காத செய்தித் தாள்களை ஒத்த டி-ஷர்ட்கள் அணிந்து செல்வது என நீண்டது. அப்பொழுதெல்லாம் வகுப்பு ஆசிரியர்கள் மீண்டும் வீட்டுக்கு அனுப்பியோ அல்லது வார்னிங் கொடுத்து மீண்டும் மற்றவர்களுடன் சேர்த்து கொள்வது வரைக்குமான தனித்துவம் பேணலாக தொக்கி நிற்கிது ;-).

இன்றளவிலும் 'தெக்கிக்காட்டான்' பெயர் வைத்துக் கொள்வது வரைக்குமாக தொடர்கிறது. அதற்கும் இதற்குமான வயது வித்தியாசம் 21 வருடங்கள். எனினும், இன்னும் சில பேருக்கு நம்பிக்கை இருக்கிறது நான் ஒரு தண்ணியில் வெந்துவிடுவேன் என்று. பார்ப்போம். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்று;-) .

கூட்டிக் கழித்து எனது பதின்மத்தை திரும்பிப் பார்த்தால் வாழ்க்கை எனக்கு குறைவில்லாமல் அந்த கூர்மைத் தீட்டல்களுக்கான ஆயத்தங்களை வாழ்வுச் சாலையின் இரு மருங்கிலும் வஞ்சகமில்லாமல் காட்சியகப் படுத்தியே வந்திருப்பதாய் இன்று மெல்ல மறு அசை போடும் பொழுது என்னால் உணர முடிகிறது.


இத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது...

தருமி

காட்டாறு

மீன்துள்ளியான்

செல்வநாயகி

Wednesday, January 27, 2010

பெரிய கோவில் 1024வது சதயவிழா : Night Photographs

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 28ம் தேதி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் இராசராசசோழனுக்கு 1024வது சதய விழா நடந்தது. அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக திரிந்து கொண்டிருந்த நான், எனது மாலை பொழுதை அங்கு கழித்தேன். நிறைய ஒளி அலங்காரங்களுடன் ஜொலித்துக் கொண்டிருந்த கோவில் வலாகத்தையும், கோவில் கோபுரத்தையும் எனது கேமராவிற்குள் லபக்கியதை உங்களுக்காகவும் இங்கே...

வாசல் தட்டி...




வெளிப்புற அழகு, இதே படத்தை மறுநாள் தினமணியிலும் பயன் படுத்திக் கொண்டதாக அறிந்தேன்...




ஜொலிக்கும் நுழைவு வாயில்...




முதன்மை கோபுரம் கொஞ்சம் எனது கேமரா சொதப்புலுடன்...




கோபுரத்திற்கு அருகில் படுத்து உருண்டு கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில், நிலாவையும் பிடித்து பொட்டும் வைத்து...




அதே கோணத்தில் கோபுரத்தின் மற்றுமொரு பக்கமிருந்து...





பெரிய கோவிலுக்குள்ளர இருந்திட்டு நந்தியை விட்டுட்டா எப்படி...




மிதியடிகளை மீட்டெடுக்கும் இடத்தில் ஸ்டாலிலிருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்...


Tuesday, November 24, 2009

இந்தியப் பயணத் தொகுப்பு ஒரு முன்னோட்டம்: w/pictures...

மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, எங்கிருந்து தொடங்குவது என்ற எண்ணத்தினூடையே இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். காணாமல் போன நான்கு வாரங்களும் நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன். இந்தப் பயணத்தில் என்னுடைய இரண்டு வயது மகளும் இணைந்திருந்ததால் இம்முறை கொஞ்சம் தூக்கலாக இனிப்பும், கசப்புமாக அனுபவங்களை பெற நேர்ந்தது.

இந்த குறுகிய காலப் பயணத்தில் எனக்கு நான்கு நாட்கள் சுவாசம் சார்ந்த சுகவீனமும், நான்கைந்து நாட்கள் என்னுடைய மகளுக்குமாக மருத்துவமனை, மருத்துவ வாசற் காத்திருப்பு என்று நாட்களை கழித்திருந்தேன், இருப்பினும் என்னுடைய ஊர்ச் சுற்றலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

அப்பாடா என்று ஒரு நிமிசம் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது இங்கெல்லாம் நாம் சென்று வந்தோமா என்று மலைப்பாக இருக்கிறது. கோடியக்கரை, முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி (லகூன்), கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து வெள்ளியங்கிரி, சிறுவாணி வனத்தினூடாக மேல் அணைச் சென்று அங்கிருந்து மலம்புழா அணை சென்று பார்த்து விட்டு பாலக்காடு வழியாக மீண்டும் கோவை என எனது பயணம் அமைந்திருந்தது.

ஒவ்வொரு இடத்திற்கு சென்றிந்த பொழுதும் கஞ்சத்தனம், வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது; அந்தப் படங்களைக் கொண்டு பின்னாளில் எழுத நிறைய கிடைக்கக் கூடும் என்ற முன் யோசனையின் பேரில். எனவே, மக்களே கலந்து கட்டியாக என்னிடமிருந்து நிறைய அறிவியல், ஊர் சார்ந்த நினைவோடை மற்றும் அதனைச் சார்ந்த, எப்பொழுதும் நான் நிகழ்த்தும் புலம்பல்களும் அவ்வப் பொழுது வரலாம்.


உடனடியாக எழுத நினைப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு ஒரு முன்னோட்டமாக:

1) நமது சக வலைப்பதிவரும் தன்னார்வ தொண்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ராஜி அவர்களுடன் வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் ஒரு ட்டூர். ஒரு நாள் முழுதுமே அங்கு அமைந்திருந்த சர்வதேச பள்ளி மற்றும், ஈஷா வித்யா என்ற பெயரின் கீழ் பிற்படுத்தப் பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்குமான (ஈஷா அறக்கட்டளையின் வாயிலாக ஆலந்துரை அருகே அமைந்திருக்கும்) பள்ளிக்கும் சென்றிருந்தோம் அங்கு நிறைய ஆச்சர்யங்களும், வாயைக் கட்டிப் போடும் அளவிற்கு நமது தோழியின் உழைப்பும் ஒருங்கே காணக் கிடைத்தது. அதனை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் படங்களுடன் ஒரு பதிவு.



2) கோடியக்கரை சென்ற பொழு அது பறவைகள் நிரம்பி வழிய வேண்டிய அக்டோபர் மாதம், ஆனால் சில அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் ஏன் அது போன்ற பறவைகளின் வரவை குறைத்திருந்தது என்று தெரிந்து கொள்ள முடிந்ததை உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.



3) முத்துப் பேட்டை அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சதுப்பு நிலக் காட்டில் (லகூன்) ஒரு நாள் முழுக்கவும் படகில் மிதந்த அனுபவம், அந்தக் காட்டில் நான் கண்ட இயற்கையின் விந்தைகளை படங்களுடன் ஒரு நாள் விவரிக்கிறேன்.



4) மீண்டும் டாப்ஸ்லிப் சென்ற பொழுதினில், அங்கு செமையான மேக மூட்டம் அதனால் சென்ற வாகனத்திலேயே கோழிகாமுத்தி யானைகள் முகாம் வரையிலும் சென்று அங்கு பூவனின் குடும்பத்தாரை சந்தித்த நெகிழ்ச்சியூட்டும் ஒரு சந்திப்பும், என்னுடைய டாப்ஸ்லிப்னூடான நினைவோடையும் படங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.



அதுமட்டுமின்றி இன்னும் நினைவில் தைத்துப் போன விசயங்களையும் நினைவிலிருந்து வெகு தொலைவு செல்வதற்கு முன்பாக இங்கு பதிந்து வைத்து விட மேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ளேன், பார்க்கலாம்.

அன்புடன்,

தெகா.

Friday, July 10, 2009

தமிழ் பெரும் விழா - தாமரை - வைரமுத்து: Fetna 2009 - II

அடுத்த நாள் விழாவை ஓரளவிற்கு முழுமையா பார்த்த மாதிரி இருந்தாலும், காலையில 9.30 மணிக்கு முன்னால் வரைக்கும் நடந்த நிகழ்ச்சிகளை பார்க்க முடியல [எனது முதல் நாள் அனுபவம் இங்கே]. ஏன்னா வீட்டிலருந்து கிளம்பி வந்ததே தாமதம். நான் வந்து அமர்ந்த சிறிது நேரம் கழிச்சு ஐயா சிலம்பொலியார் அவர்கள் பேசக் கேட்டேன். அவர் நம் தமிழ்ப் பெயர்கள் என நம்பி வைக்கும் சில பெயர்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று தமிழிலாக்கி காமித்த விதம் அரங்கையே வெடிச் சிரிப்பு சிரிக்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து ஒரு அரட்டை அரங்கம் பாணி நிகழ்ச்சி ஒன்று. அது ஓடிட்டு இருக்கும் போது என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரை ஆவலுடன் கவிஞர். தாமரை வந்திருக்கிறாரா என்று கேட்டேன் அதற்கு அவர் வரவில்லையென்று நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டே நிகழ்ச்சி நிரல் அட்டையின் மீது தனது அலைபேசியின் வெளிச்சத்தை நிரப்பி தேடி இல்லையென்றார்.

இதென்ன புதுக் கதை! நான் இந்த விழாவிலே நண்பர்களன்றி தாமரைக்காகவும் தான் இத்தனை நெருக்கடியிலும் அங்கு சென்றேன். ஆனால், உட் கட்சி பூசலோ இல்லை வேறு என்ன காரணத்தாலோ தாமரை கழட்டி விடப்பட்டிருக்கிறார் போல. எனக்கு ஒரு ஆள் மேலதான் கண்ணா இருக்கு, பார்ப்போம்; பின்னால் என் கெஸ் சரியா என்று. உண்மை பேசுற எவனுக்கும் கிடைக்கும் மரியாதை இப்படியாகத்தான் இருக்க முடியுமென்று பக்கத்து இருக்கையாளரிடம் முனகிக் கொண்டே சீட்டில் நெளிந்தேன்.

அங்கயே பல விதப் பட்ட எண்ணங்களால் சிக்குண்டது மனது. என்ன உலகமிது? மனித மனம் எப்பொழுதும் உண்மைகளை மறுத்து, போலியாக நடித்துக் கொள்வதிலயே அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. போலி மனிதர்கள் தன் நிறம் உயர்த்தி காமிக்க முகச் சாயங்களுக்கு கீழ் ஒளிந்து, உதட்டில் இனிப்பு தடவிய வார்த்தைகளைக் கொண்டு பேசும் விற்பனை மனிதர்களை அப்படியே நம்பி தெரிந்தே வாங்க எத்தனிக்கும் நம் மனது, தெரிந்தே, உண்மை பேசுபவர்களை தவிர்க்க முனைகிறதே, இது எதனால்? பிரச்சினைகளிலிருந்து தன்னை விளக்கி வைத்து, ஒரு பாதுகாப்பான இலக்கிய, காலச்சார காவலன் அவதாரம் எடுக்கத்தானோ? இது எப்படி, தனியொருவனாக தன்னுள்ளே என்றேனும் ஒரு நாள் உண்மையான "அவனை" சந்திக்கும் பொழுது அவன் வாழ்வே அவனை பார்த்து நகைப்பதிலிருந்து விலகி நிற்பதாக அன்றும் தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியும்? இப்படியே எண்ணச் சுழிப்பில் சிக்குற எத்தனித்தது என் மனது...

பின்பு மதிய உணவு இடைவேளை, அதனின்று எனை மீட்டது. சாப்பாடு அசத்தல்! செட்டிநாடு போல, நல்லாவே பண்ணியிருந்தாங்க. அங்கே ஒரு ஜிகு, ஜிகு பிரபலம் கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில், மேஜைக்கு மேஜைக்கு "நீங்க, ரொம்ப அழகா இருக்குறீங்க" பாட்டு பாடியிருப்பாங்க போல சுளுக்காம சிரிச்சிட்டே எதிர்பாட்டு "நன்றிங்க" சொல்லியிருப்பார் போல, அதப் பார்த்திட்டே நான் அரை "நான்(bread)" சாப்பிடாம தட்டிலயே விட்டுட்டேன். பிரபலம்ங்கிற வேலை ரொம்ப கஷ்டம்தானோ!

சாப்பாட்டிற்கு பிறகு நான் ரொம்ப சிலாகிச்சு பார்த்த ஒரு பேச்சுன்னா அது மனித உரிமை குழுவிலிருந்து வந்து பேசிய ஒரு வெள்ளக்காரம்மா டாக்டர் Ellyn Shander. அரங்கத்தில் இருந்த சில மக்களை நெளிய வைச்சு, மனசை நெருடுகிற ஸ்லைடுகளை இது வரைக்கும் நம்மக்களில் சிலர் பார்க்கவே கூச்சப்பட்ட(பயந்த) படங்களையும் வழங்கி அந்தம்மா பாதிக்கப்பட்ட ஈழ மக்களோட தன்னை இணைச்சு பேசிய விதம் என்ன சொல்றது. ம்ம்ம்.

அந்தம்மா இந்த ஈழ அவலத்தை தன்னோட இனமான யூதர்கள் , நாசி காலத்தில் பட்ட அவஸ்தைகளுக்கும், வேதனைக்களுக்கும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல இந்த ஈழ நிகழ்வு என்று, ராஜபக்சாவையும், ஹிட்லரையும் ஒரே ஸ்லைடில் காமிக்கும் பொழுது ஏன் இதனை இந்த ஒட்டு மொத்த உலகமும் அவ்வாறு கண்ணுறவில்லை என்ற கேள்வியே தொக்கி நின்றது என் முன்னால்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த உணர்ச்சிகளோட பேசிக் கொண்டே சென்றார்கள். அப்பொழுதும் நினைச்சேன், இந்த சில்லூண்டி ஊர்க்கார சினிமாக் காரய்ங்க எல்லாரையும் கொண்டு வந்து முன்னாலே அமர வைச்சிருக்கலாம்னு. உண்மையான பாடத்தை ஒரு முறையாவது கேக்க வைக்க. தன் உரையை முடிப்பதற்கு முன்பாக பல முறை அரங்கம் உறங்குவதாக உசிப்பேத்தி மக்கள் அனைவரையும் "Next year in Eelam" என்று மூன்று முறைக்கும் அதிகமாக கூற வைத்து அரங்கத்தையே நடு நடுங்க வைத்துவிட்டார்.

உரையின் இறுதியில் அவரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கெளரவிக்கும் விதமாகவும் எல்லாரும் எழுந்து நின்று கை தட்டியது அரைகுறை மனதோடும், தர்மசங்கடத்தோட ஏண்டா வென்று நினைத்தவர்களையும் கூட எழுந்து நிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தியது என்றால் மிகையாக இருக்க முடியாது.

அப்படியாக ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார், எனக்கு அந்த டாக்டர் பேசப் பேச கண்டிப்பாக நம்மூர் கவிஞர் நெளிந்திருக்கக் கூடுமென்றே எண்ணச் செய்தது. அவர் வேறு யாருமல்ல நம்ம கவிப் பேரரசு வைரமுத்து அவர்களேதான். யார் அந்த நிகழ்ச்சி நிரலை அப்படி அமைத்தார்களோ தெரியவில்லை, ஆனால், கண்டிப்பாக கவிஞருக்கு ஒரு செம ச்சேலஞ்சாக அமைந்திருந்தது அந்த மேடை, டாக்டர் Ellyn Shanderக்குப் பிறகு. எனக்கு அப்பொழுதே தோன்றி விட்டது கவிஞர் கடுமையாக இன்னமும் சீரவேண்டும் டாக்டரின் இருப்பை அந்த அரங்கம் சிறிது நேரம் மறக்க வேண்டுமானலென்று.

ஆனால், இம் முறை அவரின் சீற்றம் வயதானால் காடுகளில் வசிக்கக் கூடிய புலிகள் பற்களை, நகங்களை, உடல் வலிமையை இழந்து நிற்கும் பட்சத்தில் எளிமையான விலங்குகளை கொய்துதான் தனது இருப்பை நகர்த்த முடியும். அது போலவே, இவரும் ஏதோ வந்துட்டேன் எல்லாரும் பார்த்துக்கோங்க; நான் தான் அந்தக் கவிஞன் அப்படின்னு மேடையேறி காமிச்சிக்கிட்ட மாதிரியும், ஃபெட்னா மலர் போட்டவர்களை தமிழ் வளர்க்க வேண்டுமானல் இப்படி வரலாறு புறக்கணிக்கப்படக் கூடாதென்று கூறி அண்ணா நூற்றாண்டு விழா மலரில் பசும்பொன் முத்துராமலிங்கம் இடம்பெறவில்லையென்று சீறினார். மேலும் பல சில உள்குத்துக்கள்!

பின்பு திருவிளையாடல் கே.பி சுந்தரம்பாள் பாட்டியை ஞாபப் படுத்துவதைப் போல ஒன்று... இரண்டு... மூன்று... என்று வரிசைப் படுத்தி கூறியதெல்லாம் "நேரக் கொலை" செய்வதின் பொருட்டாகவே நினைக்கச் செய்தது. மொத்தத்தில் என் பணம் அதை நோக்கிச் செல்லவில்லை எனும் போது சற்றே ஆறுதலாகவும் இருந்தது.

அவரின் உரை முடிந்ததுமே நான் மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளிக் கிளம்பி மீண்டும் நுழைவு வாயிலுக்கு வந்த பொழுது பயங்கர "எஸ்கார்ட்களுடன்" கவிப் பேரரசு தன்னைச் சுற்றி நிற்பவர்களையெல்லாம் எறும்புகள் கணக்காக பார்க்காமலயே என்னமோ ஒரு இறுக்கம் ஆழ்ந்து எதனையோ கேட்டுக் கொண்டே நடப்பதனைப் போல நடந்து சென்றதை ஒரு சில விநாடிகள், நானும் நடந்து கொண்டே பார்த்து தொலைத்து விட்டு வீட்டிற்கு வந்தடைத்தேன்.

காரை ஓட்டிக்கொண்டே சிந்தனைக்குள் பயணிக்க வேண்டியாதாகிப் போனது. இந்த மனிதர் அன்று கிராமத்து மனிதனின் எளிமைக்குள் புகுந்து தனது வாழ்வு எனும் பெரும் சமுத்திரத்தில் நீந்தத் தொடங்கிய காலத்திற்கும் இன்று நிற்கும் புள்ளிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்ணுற்றால் விரிசல் இரு பெரும் கண்டங்கள் விலகிப் போன தொலைவாகப் படுகிறதெனக்கு. மனிதனின் உயரங்களின் நிலை மாற மாற, மனித நிலைகளும் பல விசயங்களை இழக்கத்தான் நேரிடுகிறதோ. சிலர் தனது தூக்கத்தை, சிரிப்பை, சந்தோஷத்தை, சிலர் நல்ல நண்பர்களை, நல்ல தன்னிடம் உள்ள வாழ்வு நெறிகளை இப்படி... இவரின் முகத்தில் நிலவிய இறுக்கத்தை கவனித்தால் பெரும் நிகழ்வுகள் இவரின் எளிமையை சிதைத்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது...

அதனைத் தொடர்ந்து இரவு உணவும், பாட்டுக் கச்சேரியும் போல. ஆனால், எனக்கு அதுக்கு மேல தாங்காது என்பதால் கிளம்ப வேண்டியதாப் போச்சு. இத் தருணத்தில் இத்தனை எண்ணங்களையும் எனக்கு வாய்க்க பேருதவிய நண்பர் பழமைபேசிக்கு ஒரு நன்றி.

விழா சிறப்பாக நடந்தேற உழைத்தவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்!

நிறைய தமிழ்பதிவர்கள் வந்திருப்பாங்க போல, ஆனா, என் கண்ணில எப்படியோ தட்டுப்படாம தப்பிச்சிட்டாங்க. அடுத்த முறை வைச்சிக்கிறேன். இத்தனைக்கும் பரவாயில்லாம ஒரு டி-ஷர்ட்தான் போட்டுருந்தேன் :-) .

தமிழ் பெரும் விழா: Fetna 2009_Atlanta - I

சமீபத்தில அட்லாண்டாவில நடந்த வட அமெரிக்கா தமிழ் பெரும் விழாவில (Fetna-2009) நானெல்லாம் கலந்துகிட்ட கதையே ஒரு ரெண்டு மூணு பதிவா போடலாமுங்க. எப்போதுமே நமக்கு கடைசி நேர ஜுரம் வந்து ஒட்டிக்கிட்டு அது மூலமா கிடைக்கிற காது மடலோரம் ஜிவ்க்கு அடிமையாகிப் போனதால அப்படியா இருக்குமோ.

ஏன்னு முழிக்கிறீங்களா? அந்த வெக்கக் கேட்டை நானே சொல்லிக்கிறேனுங்க. என் ஊர்லயே விழா நடந்ததாலும் சில காரணங்களுக்காக அட நமக்கு இல்லாத நுழைவுச் சீட்டா மெதுவா வாங்கிக்குவோம்னு இருந்தேனுங்க. அதோட மட்டுமில்ல இந்த கூட்டம்னாவே கொஞ்சம் என்னவோ தெரியல உள்ள இருக்கிறவனுக்கு ஒத்துக்க மாட்டீங்குது. அதுவும் ஜிகு, ஜிகு கூட்டம் உதட்டுச் சாயத்தோட (I like all natural ;-) , பெரீய மனுசயிங்க கூடுற இடமா இருந்தா உள்ள இருக்கவன் சண்டிமாட்டுக் கணக்கா உதருரான் உள்ளகிடந்து.

அதோட மட்டுமில்ல விழாவுக்கு வருவதாக இருந்த ஒரு சில ஆட்களின் படங்களை பார்த்ததும் எனக்குத் தோணியது; தமிழ் வளர்க்கணும் தான், கஷ்டப்பட்டு சம்பாரிச்சதை அதுக்கும் கொஞ்சம் கொடுக்கணும்தான். ஆனா, அழைப்பிதழில் இருந்த ஒரு சில மூஞ்சிகளுக்கும் சேர்த்து அழுதுதான் அத வளர்க்கணுமின்னா என்னாத்தை சொல்றதுன்னு கொஞ்சம் உடம்பெல்லாம் கூசுனதும் உண்மைதானுங்க.

இருந்தாலும் ஒரு சில நண்பர்களுக்காக எப்படியாவது கலந்துக்கணுமின்னு நினைச்சிட்டே இருந்தேங்க. அப்பன்னு பார்த்து நம்ம பழமைபேசி ஒரு பதிவு போட்டு சிலாகிச்சு எழுதியிருந்தார், எனக்கு இன்னமும் வெக்கமாப் போச்சு. என்னடாது உள்ளூர்குள்ளர இருந்துட்டு போக முடியாம செஞ்சிக்கிட்டோமேன்னு வருத்தமா இருந்துச்சு.

சரினுட்டு அவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டு முடிஞ்சா கூப்பிடுங்கய்யான்னு செய்தி கொடுத்தேன். உடனே பழமைபேசி கூப்பிட்டு அட வாருமய்யா நிறையா இடமிருக்கு உள்ளர அப்படின்னு ரொம்ப எளிமையா சொன்னாரு. சுய தொழில் ஆளு நான், சட சடன்னு என்னோட வேல இடத்தை நிரப்பிக்க ஒரு ஆளை பிடிச்சு அமர வைச்சுட்டு விரைந்தேன்.

நான் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட மாலை 4 மணிக்கு மேல நடைபெற்ற நிகழ்சிகளையே காண முடிஞ்சது. எனவே சில முக்கியமான தமிழ் பெரியவர்களின் பேச்சை கேக்க முடியாம போயிடுச்சுங்க. [என்னோட வயசோ அல்லது வளர்ச்சி நிலையோ தெரியல ஆனா என்னோட எதிர்பார்த்த ஆசையா இருந்தது என்னான்னா; நிறைய தமிழ் ஆர்வலர்களின் பேச்சை அதுவும் வெளி உலகத்திற்கு தெரியாம நிறைய கிராமங்களில் தங்களோட தமிழ் ஆர்வத்தால ஒரு கிராமத்தில ஆசிரியானகவோ அல்லது கோவில்களில் பாடிக்கொண்டோ திரியும் பண்டாரங்களைப் போன்றவர்களும் இந்தத் திருச் சபையால் அழைக்கப்பட்டு அவர்களும் வந்திருந்தா நல்லாந்திருக்குமே, அவர்களையும் பார்த்திருக்கலாம், கேட்டுருக்லாம் சந்தோஷப் படுத்தி பாத்திருக்கலமே...]

விழா நுழைவு வாயில் எல்லாம் அருமையா செஞ்சிருந்தாங்க வாழை மரம் எல்லாம் கட்டி, பூ, தேங்காய், சந்தனம், பன்னீர் தெளிப்பான், கல்கண்டுன்னு ரொம்ப நாளா மிஸ் பண்ணிட்டு இருக்கிற விசயத்தையெல்லாம் வைச்சு ஒரு விழாவிற்கான சூழ்நிலையை தவழ விட்டுருந்தாங்க. கொஞ்சம் ஆர்வம் தொத்திக்கிச்சு அதையெல்லாம் பார்த்தவுடன்.

இப்போ நுழைவுச் சீட்டு ஈசியா கிடைக்கிதுன்னாரா நம்ம பழமையார் நானும் பணத்தை எடுத்து நுழைவுக் கூண்டுக்குள்ளர இருக்கவங்கட்ட நீட்டிகிட்டே ஒரு சீட் அப்படின்னேன். உள்ளே இருந்தவங்க உங்க பேருன்னு கணினிகிட்ட போயி தட்டச்ச போனங்க, நான் என் கந்தர்வ கோலத்தை சொன்னேன். "ஓ! அப்படியா, அது முன்பதிவு இல்லாம கஷ்டமாச்சே, நீங்க "ந்தோ, அவரைக் கேட்டுப் பாருங்க..." அப்படின்னு சில விருமாண்டியண்ணே, முரளியண்ணே, மாதவண்ணாச்சி போன்ற பிரபலம் போல இருந்த விழா நடத்தும் பிரபலங்களை எடுத்து அடுக்கி விட்டாங்க.

எனக்கு உள்ளே இருக்கிறவன் இப்போ உதர ஆரம்பிச்சுட்டான். அப்போன்னு பார்த்து எனக்கு பரிச்சியமான முகம் ஒண்ணு டக்கின்னு என் முன்னே உதயமானுச்சு. "என்னங்கய்யா இங்கே..." விசயத்தை சொன்னேன். அவரு "அட வாங்க இது நம்ம விழாங்கன்னு..." எப்படியோ எனக்கு இரண்டு நாள் கலந்துகிற மாதிரி நுழைவுச் சீட்டுகள் வாங்கி கொடுத்தார்.

உஷ் யப்பாடான்னு கண்ணு கட்டி அடிச்சு பிடிச்சு உள்ளே போய் உட்கார்ந்தா... உட்கார்ந்தா... "என்னய எங்கப்பா, எப்படி சினிமாவில வளர்த்தாருன்னு" ஒருத்தரு தமிழ்ல பேசி, தமிழ் வளர்த்துட்டு இருந்தாரு. எனக்கு வீட்டில பொண்டாட்டி, புள்ளய விட்டுட்டு வந்து இப்படி தனியா உட்கார்ந்துருக்கிறனேன்னு தான் ஞாபகம் வந்துச்சு. அது ஏன்னு தெரியல!

இப்படியெல்லாம் முன்னமே கொஞ்சம் என் மனசில ஓடினதுனாலேதான் ஒரு சிறப்பு ஆர்வமில்லமா இருந்திருக்கேனோ என்னவோ... நம்ம கலாச்சார மரபுபடி - ஒரு காலத்தில எனக்கும் இந்த சினிமாக்காரய்ங்கள பக்கத்தில வைச்சு பார்க்கணுங்கிற ஆவல் மாதிரி ஏதாவது இருந்திருக்கலாமோங்கிறதை தோண்டி தூர் எடுத்து பார்க்கிறேன், அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக ஞாபமே இல்ல.

சரி அந்தக் கால கட்டமெல்லாம் அது மாதிரியான விசிலடிக்கும் வயசில வந்தாலும் சரி வெவரம் தெரியாத வயசு மனசில வந்துட்டுப் போச்சுன்னு சமாதானம் சொல்லிக்கலாம், ஆனா இப்போ என்னமோ ஆகிப்போச்சு எனக்கு. பிரபலமின்னாலே உடம்பெல்லாம் பச, பசன்னு அரிக்கிற மாதிரி ஒரு உணர்வு. வயசாகிப் போச்சோ!

கஷ்டப்பட்டு சம்பாரிக்கிற நம்ம காசை, இவ்வளவு கொடுமையும் சகிச்சிக்கிட்டு அந்த மொகரக்கட்டைகள பார்க்க போய் உட்கார்ந்தா எனக்குள்ளர இருக்கிறவன் என்னயப் பார்த்து நமட்டுத் தனமா சிரிப்பானா, இல்லையா? சோ, விழாவில இருந்தேன்... ஒட்டியும் ஒட்டாம...

நான் ரொம்ப எதிர்பார்த்துப் போன இன்னொரு ஆள் வேற வரலை! கொஞ்சம் ரோசமான ஆளு! டேய்! கொடுத்தக் காசுக்கு போதும்டான்னு சொல்லப்பிடாது... ரொம்ப கஷ்டப்பட்டு இந்த விழாவை முன்னெடுத்தி, எவ்வளவோ சகிப்புத்தன்மையோட இவிங்களோட எல்லாம் நாம கூடியாடி வேல செய்ய வேண்டியிருக்கேன்னு பல்லைக் கடிச்சிட்டுக் கூட இருந்து நடத்தி முடிச்சிருப்பீங்க. உங்களயெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகுமிங்க.

இதன் அடிப்படையில நானும் என்னோட அனுபவத்தை இந்த விழாவின் பொருட்டு பதிந்து வைச்சிக்கிறது அவசிமின்னு உணர்ந்ததாலே இரண்டு பகுதிகளாக எதிர்பார்ப்பு, சந்திப்பு, மகிழ்ச்சி, ஏமாற்றம் அப்படின்னு எழுதி வைச்சிக்கலாம்னுதான் இந்த முயற்சி. இது இல்லாம இன்னொன்னு வருது.

Related Posts with Thumbnails